Sunday, 2 December 2018

பிரபஞ்சத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம்! (The Fate of the Universe)



 பிரபஞ்சத்தின் எதிர்காலமானது கடுங்குளிரையோ, அல்லது கடும் வெப்பத்தையோ  உள்ளடக்கியதாய் அமையும்; இவ்விரு சூழல்களிலும் மனித இனம் வாழ  இயலாது.    
- பௌதிகவியல் விஞ்ஞானி ஸ்டீவென் வெய்ன்பெர்க்

  சிலர் சொல்கிறார்கள் உலகம் நெருப்பில் அழிந்துபோகும் என்று,
  சிலர் சொல்கிறார்கள் உறைபனியில் என்று …..
  நானோ, நெருப்பைத் தெரிவுசெய்வோருடன்  ஒத்துப்போகிறேன்.                         
                                 - ராபர்ட் ஃப்ராஸ்ட்


  இங்கே எனது அறையில் எழுது மேசையின் முன் அமர்ந்து கொண்டு என்ன செய்கிறேன் என்கிறீர்களா? பிரபஞ்சம் பற்றிய தவறான விஞ்ஞானப் பார்வையைத் திருத்தியமைத்து மானிடகுலத்தின் தலைவிதியை மாற்றியமைக்கும் உபாயத்தை   எழுதிக்கொண்டிருக்கிறேன்!      
- மா.கணேசன் / 14.11.2018
---------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : இக்கட்டுரையில் இடம்பெறும் சாய்வு எழுத்துக்களில் (Italics) அமைந்த வரிகள் யாவும்
பிறருடைய கருத்துக்கள் ஆகும். நேரெழுத்துக்களில் அமைந்த வரிகள் இக்கட்டுரையாசிரியரின் கருத்துக்கள் ஆகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------


பிரபஞ்சத்தின் தலைவிதி பற்றிய விஞ்ஞான விளக்கம்


பீதியடையாதீர்கள், நமது பூமிக்கிரகத்தின் கதை முடியப்போகிறது. அதற்கு சற்று காலம் ஆகக்கூடும், கிட்டத்தட்ட இன்றிலிருந்து 600 கோடியாண்டுகளில், நமது பூமி ஆவியாக்கப்படும்; அதாவது, சூரியனானது மடியும் தறுவாயில் விரிவடைந்து ஒரு செம்பூதமாக (Red Giant) மாறி நமது பூமியைச் சூழ்ந்து விழுங்கிவிடும்.


நமது பூமியானது சூரியமண்டலத்திலுள்ள கிரகங்களில் ஒரு கிரகம் மட்டுமே, நமது சூரியன் பால்வீதி  உடுமண்டலத்திலுள்ள கோடாணுகோடி நட்சத்திரங்களில் ஒன்றுதான், பால்வீதியைப் போல பிரபஞ்சத்தில் கோடாணுகோடி உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்) உள்ளன. அவை அனைத்துக்கும் எத்தகைய கதி காத்திருக்கிறது? ஒட்டுமொத்த பிரபஞ்சம் எவ்வாறு முடிவுக்கு வரும்? பிரபஞ்சத்தின் முடிவு குறித்து விஞ்ஞானமானது திட்டவட்டமான முடிவுக்கு வரவில்லை.


பிரபஞ்சத்தின் முடிவு குறித்த முதல் குறிப்பு வெப்பஆற்றல் பற்றிய ஆய்வான  (Thermodynamics) வெப்பச்சலனவியலிலிருந்து வருகிறது. அது, "வெப்பச் சாவு நெருங்கிக் கொண்டிருக்கிறது !" ("THE HEAT DEATH IS COMING")என எச்சரிக்கிறது. வெப்பச் சாவைப் பொறுத்தவரை, அது கரிக்கட்டையாக தீய்ந்துபோவதைவிட படுமோசமானதாகும். அதாவது பிரபஞ்சம் முழுவதற்கும் வெப்ப நிலையானது யாதொரு வித்தியாசமுமின்றி சம நிலைக்கு வந்துவிடும் - வெப்பம் முழுவதுமாக மறைந்து உறை நிலைக்கு வந்துவிடும்.  


பிரபஞ்சத்தின் முடிவுக்கு வெப்பச் சாவு மட்டுமே ஒரே சாத்தியமான வழியாக அமையக்கூடும் எனத் தெரிகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் மடிந்துவிடும், கிட்டத்தட்ட அனைத்துப் பருப் பொருளும் சிதைந்துபோகும், கடைசியாக மிஞ்சுவது அடிப்படைத்துகள் மற்றும் கதிரியக்கமும் சேர்ந்த சூப்பு மட்டுமே. இன்னும் அந்த சூப்பின் சக்தியும்  பிரபஞ்ச விரிவடைதலினால் வடிகட்டப்பட்டுவிடும் .


இந்த  "மகா உறை நிலை" யில்  ("Big Freeze"), பிரபஞ்சமானது  ஒரே சீராகக் குளிர்ந்து, செத்து, வெறுமையாகிவிடும்.


ஆனால், வெப்பச்சலனவியலை அடுத்து  நூறாண்டுகள் கழித்து வெளிவந்த ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டின் படி,  பிரபஞ்சத்தின் இறுதி முடிவானது பருப்பொருளினால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது.


பிரபஞ்சமானது மிகவும் அசாதாரணமான அளவிற்குச் சிறியதாகத் தொடங்கி , மிகவும் அசாதாரணமான வேகத்தில் விரிவடைந்ததாகவும் கருதப்படுகிறது. ஐன்ஸ்டீனின்  பொதுச் சார்பியல் கோட்பாடானது பிரபஞ்சமானது ஒன்று விரிவடைந்துகொண்டிருக்கவேண்டும் அல்லது சுருங்கிக்கொண்டிருக்கவேண்டும் என்ற முன் கணிப்பை முன்வைத்தது. ஐன்ஸ்டீன் அவர்கள் இதை 1917-ல்  உணர்ந்தார்.


பிறகு, 1929-ல், அமெரிக்க வானவியலாளர் எட்வின் ஹப்பிள் அவர்கள் பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதற்கான திடமான சான்றுகளைக் கண்டுபிடித்தார். ஆக, பிரபஞ்சமானது விரிவடைகிறதென்றால், அது  தற்போதைய அளவைவிட ஏற்கனவே மிகச் சிறியதாய் இருந்திருக்கவேண்டும். இந்தப் புரிதல்தான் பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு இட்டுச் சென்றது.


பிரபஞ்சம் விரிவடைகிறதென்றால், அதன் தலைவிதியானது, ஒரு எளிய கேள்வியில்  தொங்கிக்கொண்டிருக்கிறது : பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையுமா, எவ்வளவு துரிதமாக?


பிரபஞ்சத்தின் பொருள்-திணிவு அளவுக்கதிகமாய் இருக்குமானால், அதன் விரிவடைதல்  மெதுவாகி (ஒருகட்டத்தில் )நின்றுவிடும். அதிக பொருள்-திணிவு என்றால், அதிக ஈர்ப்புவிசை, அது யாவற்றையும் இழுத்து ஒன்றுசேர்ப்பதன் வழியாக விரிவடைதல் மெதுவாக்கப்படும்.
பொருள்-திணிவானது ஒரு உச்ச மதிப்பைத் தாண்டவில்லையெனில், பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்துகொண்டே போகும், இறுதியில் வெப்பச்சாவிற்கு உட்பட்டு உறைந்துபோகும்.


ஆனால்,பொருள்-திணிவானது அளவுக்கதிகமாய் இருந்தால், விரிவடைதல் மெதுவாகி நின்றுவிடும். அதன்பிறகு பிரபஞ்சமானது சுருங்கத்தொடங்கும். சுருங்கும் பிரபஞ்சம் சுருங்கச் சுருங்க  மேன்மேலும் சிறிதாகிக்கொண்டே போக, மேன்மேலும் அடர்ந்துகொண்டே போவதுடன் சூடும் கூடிக்கொண்டே போகும். இறுதியில் கச்சிதமான நெருப்பு -நரகமாக ஆகிவிடும். இது ஒருவகையான தலைகீழ் பெருவெடிப்பு நிகழ்வாக , பெரும்-உள்ளடர்தல்  (Big Crunch)என்று அறியப்படும் ஒன்றாக அமையும்.


இருபதாம் நூற்றாண்டின் பெரும்பாலான வானவியல் பௌதிகவியலாளர்களைப் பொறுத்தவரை, "கடும்-உறைவு " நிலையா அல்லது  “பெரும்-உள்ளடர்தலா”? பனியா அல்லது நெருப்பா? இந்த இரு காட்சிகளில் எது சம்பவிக்கும் என்பதை அவர்களால் நிச்சயிக்க இயலவில்லை


கரும்-சக்தி  பிரபஞ்சத்தைப் பிய்த்தெறிகிறது


1998-ல், இரு போட்டிக்குழுக்களைச்சேர்ந்த  வான்-பௌதிகவியலாளர்கள் ஒரு திகைப்பூட்டுகிற அறிவிப்பைச் செய்தனர் : பிரபஞ்சத்தின் விரிவடைதல் படுவேகத்தில் நிகழ்கிறது.


சாதாரண பருப்பொருளும் சக்தியும் பிரபஞ்சத்தின் இத்தகைய நடத்தையைச் செய்யவியலாது. இதுவே  அடிப்படையில் ஒரு புதுவகை சக்தி இருப்பதற்கான முதல் சான்று ஆகும். அதற்கு, கரும்-சக்தி ("Dark energy") எனப் பெயரிட்டுள்ளனர். அதன் நடத்தை பிரபஞ்சத்திலுள்ள வேறெதைப்போலவும்  இல்லை.


கரும்-சக்தி  பிரபஞ்சத்தைப் பிய்த்தெறிகிறது. அது எத்தகையது என்பதை இன்னும் நாம் அறியோம். ஆனால், குத்துமதிப்பாக பிரபஞ்சத்தின் 70% சக்தி கரும்-சக்தியே.


கரும்-சக்தி இருக்கிறது என்பதன் அர்த்தம் ஏற்கனவே பிரபஞ்சத்திலுள்ள பொருண்மையின் அளவானது பிரபஞ்சத்தின் இறுதி முடிவைத் தீர்மானிக்க இயலாது. உண்மையில் கரும்-சக்தியே பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துகிறது, விரிவடைதலின் வேகத்தை முடுக்கிவிடுகிறது.  இஃது பெரும்-உள்ளடர்தலின் (Big Crunch)சாத்தியத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. ஆனால் இதன் அர்த்தம் "கடும்-உறைவு " (Big Freeze) தவிர்க்கவியலாது என்பதல்ல. வேறு சாத்தியங்கள் உள்ளன.


[ ம்ம்ம்....  பிரபஞ்சத்தின் இறுதி முடிவு பற்றி இதுவரை  விவரிக்கப்பட்ட விஞ்ஞான விளக்கங்களில் பிரதானமாக இருவழிகளில்  பிரபஞ்சமானது தனது அழிவைச் சந்திக்கும் எனத் தெரிகின்றது. ஒன்று , "கடும்-உறைவு " (Big Freeze) அதாவது கடும்-பனி, இரண்டு, பெரும்-உள்ளடர்தல்  (Big Crunch) அதாவது, நெருப்பு -நரகம்! இவ்விரண்டு வழிகளையும் தாண்டி வேறு இரண்டு வழிகளும் முன்வைக்கப்படுகின்றன; ஆனால், அவை பெரிதும் கற்பனை கலந்தவையாக உள்ளதால்  கட்டுரையின் நீளம் கருதி இங்கு விவரிக்கப்படவில்லை . ஆர்வமுள்ளவர்கள் வேண்டுமானால் கீழேயுள்ள இணைப்பிற்குச் சென்று www.bbc.com/earth/story/20150602-how-will-the-universe-end
ஆங்கிலத்தில் வாசித்துக் கொள்ளலாம்.]

பிரபஞ்சத்தின் தலைவிதி பற்றிய மெய்யியல் விளக்கம்


வாசகர்கள் மேலே கொடுக்கப்பட்ட விஞ்ஞான விளக்கத்தை வாசித்து அதன் சாரத்தை கிரகித்திருப்பீர்கள். இப்போது நாம் அவ்விளக்கத்தின் பொருத்தப்பாடுகளையும், விஞ்ஞான விளக்கத்திற்கு மாற்றாக கட்டுரையாசிரியர் முன்வைக்கும் புதிய மெய்யியல் (Metaphysical) விளக்கத்தையும் இனி காண்போம்.


முதலிடத்தில், பிரபஞ்சத்தின் தலைவிதி, அதாவது அதன் இறுதி முடிவு எப்படிப்பட்டதாக அமையும் என்பது பற்றிய விஞ்ஞான அணுகுமுறையும், பார்வையும் முழுக்கமுழுக்க பருப் பொருளின் (Matter) சில பண்புகளை, குறிப்பாக பருப்பொருளின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டமைந்தவையாகவே உள்ளன. இந்த அணுகுமுறைதான் விஞ்ஞானத்தின் மாபெரும் குறைபாடாகும். ஏதோ, பிரபஞ்சத்தின் இருப்பையும்,அதன் வளர்ச்சிப் போக்கையும், அதன் குறிக்கோள், மற்றும் இலக்கு யாவற்றையும் பருப்பொருளும், அதன் பண்புகளும், ஒரு சில பௌதிகவிதிகளும் தான் தீர்மானித்தன என்பது போன்ற உள்ளமைந்த தர்க்கத்தைக் கொண்டு ஒட்டுமொத்த விஞ்ஞான அணுகுமுறையும் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது!


தோன்றிய ஒவ்வொன்றும் ஒருகட்டத்தில் மறைந்தேயாக வேண்டும் என்ற விதி ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திற்கும் பொருந்தும். அதே நேரத்தில், பிரபஞ்சம் போன்ற மிகவும் தனித்துவமான (வேறு எதனுடனும் ஒப்பிடவியலாத), மிகவும் புதிரான ஒன்று, ஏன், எதற்காகத் தோன்றியது, அதனுடைய குறிக்கோள், இலக்கு என்ன என்று எல்லாவற்றைப் பற்றியும் ஆராய்ந்தறியாமல், வெறுமனே பிரபஞ்சத்தின் அமைப்பையும், அது எதனால், எத்தகைய கட்டுமானப்பொருளால் ஆனது, என்பது போன்ற சில காரணிகளையும்; இயக்கவியல் விதிகள் (Laws of motion), மற்றும் வெப்பச்சலன விதிகள் (Laws of Thermodynamics) ஆகியவற்றையும் மட்டுமே கொண்டு அதன் இறுதி முடிவு எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை அறிய முடியாது. ஏனெனில், இவ்விதிகளும், ஏனைய பிற பௌதிகவிதிகளும் பொருளியல் தளத்திற்கு (Material Plane) மட்டுமே உரியவையாகும்; அவை ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்துபவை அல்ல! உதாரணத்திற்கு, எல்லா சடப் பொருட்களும் புவி ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டவை தான்; ஏன், மனிதனுக்கும் அது பொருந்தும். அதாவது, ஒரு மனிதன் வீட்டு மாடியிலிருந்து குதித்தால் கீழே தரையில்தான் வந்து வீழ்வான்; அப்படியே எழும்பி, வானத்தில் பறக்க மாட்டான். ஆம், மனிதனும் புவி-ஈர்ப்பு விசைக்குக் கட்டுப் பட்டவன் தான். புவி ஈர்ப்பு விசையைப்பொறுத்தவரை, மனிதனும் ஒரு சடப்பொருளைப் போலத்தான். ஆனால், ஈர்ப்பு விசையே எல்லாம் அல்ல; இன்னும் அது எவ்வகையிலும் இறுதியானதுமல்ல (There is nothing ultimate about Gravity)!


ஒருவகையில், மொத்தப் பிரபஞ்சமும் பருப்பொருளால் கட்டியெழுப்பப் பட்டிருப்பதால், பிரபஞ்சமளாவிய அளவில் ஈர்ப்புவிசையானது பருப்பொருள் தளத்தை கட்டுப்படுத்தக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. ஈர்ப்புவிசை குறித்த ஒரு விஞ்ஞான விளக்கக்குறிப்பைக் காண்போம்:


“பிரபஞ்சத்தின் பரிணாமமானது விரிவடைதலின் உந்தத்திற்கும் (momentum) ஈர்ப்புவிசையின் தள்ளுதல் (அல்லது இழுத்தல்) ஆகியவற்றுக்கும் இடையேயான போட்டியால் தீர்மானிக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் தற்போதைய விரிவடைவு விகிதமானது (rate of expansion) ஹப்பிள்-ன் மாறாமதிப்பைக் (Hubble Constant) கொண்டு அளவிடப்படுகிறது, அதேவேளையில் ஈர்ப்புவிசையின் வலிமையானது (strength of gravity) பிரபஞ்சதிலுள்ள பருப்பொருளின் அடர்த்தியையும் அழுத்தத்தையும் சார்ந்துள்ளது.“


இதோ இன்னொரு குறிப்பு:


“நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றான ஈர்ப்பு விசை (Gravity) யானது, அறியப்பட்ட அதன் மதிப்பில் கொஞ்சம் பெரிதாயிருந்தால்கூட,  அதன் ஒரு விளைவு என்னவாக இருக்கும்
என்றால், நட்சத்திரங்கள் மிகு கொதிப்பாகவும், விரைவாக தன் எரிபொருளை எரித்துத்
தீர்த்துவிடுவதாயும் அமைந்திருக்கும். ஈர்ப்பு விசையானது கொஞ்சம் சிறிதாயிருந்தால்கூட,
நட்சத்திரங்கள் ஆற்றலை உமிழும்வகையில் எரியாமல் போயிருக்கும்; அதனால் கனமான-
தனிமங்கள் உருவாக முடியாது. அதனால் உயிர்ஜீவிகள் தோன்ற முடியாமல் போயிருக்கும்...”


ஆம், இந்த இரு குறிப்புகளுடன் இன்னும் ஈர்ப்புவிசை குறித்த பல்வேறு குறிப்புகளிலிருந்தும் நாம் பெறக்கூடிய உணர்த்துகோள் (Implication) என்னவென்றால், விஞ்ஞான வகை விளக்கத்தின்படி, ஈர்ப்புவிசையானது பௌதிகப் பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான விசை அல்லது ஆற்றலாக அமைந்திருக்கிறது என்பதே! ஈர்ப்புவிசையை அடுத்து மிக அடிப்படையான இன்னொரு அம்சம் என்னவென்றால், அது பருப்பொருளின் அடர்த்தியே (Density of Matter) ஆகும்.


ஆனால், ஈர்ப்புவிசையும், பருப்பொருளின் அடர்த்தியும் (மற்றும் அதன் பிற பண்புகளும்) சேர்ந்து இப்பிரபஞ்சத்தையும், அதில் உயிர்-ஜீவிகளையும், இன்னும் அறிவுள்ள உணர்வு-ஜீவிகளான மனிதர்களையும் என்ன நோக்கத்திற்காக உருவாக்கின? அல்லது  அவை உருவாவதற்கு உகந்த அளவில், விகிதத்தில், துல்லிய-மதிப்பமைவில் (Fine-Tuning) அமைவதற்கான நோக்கம் தான் என்ன? விஞ்ஞான விளக்கத்தில் இதற்கு பதில் கிடையாது!  கேட்டால், நோக்கம், குறிக்கோள், இலக்கு, அர்த்தம்… போன்றவை விஞ்ஞான ஆய்விற்கு உரித்தானவையல்ல; விஞ்ஞானத்தில் அவற்றிற்கு இடமில்லை என்று உடனே விஞ்ஞானிகள் பதிலிறுப்பர். ஏனெனில், அவர்களது அணுமுறை எந்திரத்தனமானதும், பொருண்மை வாதம் சார்ந்ததுமாகும்.


அப்படியானால், விஞ்ஞானிகளின் எந்திரத்தனமான அணுகுமுறை என்பதென்ன? அது ஏன் மட்டுப்பாடானது? உதாரணத்திற்கு, விஞ்ஞானிகள் ஒரு மரத்தைப் பார்க்கும்போது, அதன் வேர்கள், அடிமரம், கிளைகள், இலைக்கொத்துகள்; மற்றும் மரத்தின் நீளம், அகலம், உயரம், எடை போன்ற வற்றை மட்டுமே ஒரு மரம் என்பதாகக் கணக்கில் கொள்கிறார்கள். அம்மரத்தின் பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் ஆகியவற்றை அவர்கள் மரத்தின் முக்கியத்துவமற்ற பகுதிகளாக மட்டுமே கணக்கில் கொள்கிறார்கள். ஏனெனில், அடிமரம், கிளைகள், இலைக்கொத்துகள்; நீளம், அகலம், உயரம், எடை போன்றவையே மரத்திற்கு அடிப்படையானவை. பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் ஆகியவை மரத்தின் பகுதிகளாகவே இருந்தாலும், அவை மிகைப்படியானவை என்பது விஞ்ஞானிகளின் கணக்காகும்! அவர்களைப் பொறுத்தவரை, ஒரு மரமானது பூத்தாலும், பூக்காவிட்டாலும், காய்த்தாலும், காய்க்காவிட்டாலும் மரம் என்பது மரம்தான். இது ஒருவகை அடிப்படைவாதப் பார்வை எனலாம். இவ்வகையில் விஞ்ஞானிகள் யாவரும் ஒருவகை அடிப்படைவாதிகளே (Fundamentalists) எனலாம்.


விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மேற்குறிப்பிட்ட அடிப்படைவாதப் பார்வையைக் கொண்டே ஒரு மரத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் காண்கிறார்கள். இத்தகைய பார்வை, அணுகுமுறை ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை மட்டுமல்லாது, அதிலுள்ள ஒவ்வொன்றைப் பற்றிய விடயத்திலும், தொடக்கத்திலிருந்து முடிவுவரை பிரதிபலிப்பதாகிறது! அவர்களுக்கு நன்றாகத் தெரியும், பூக்கள், காய்கள், கனிகளின் “பயன்” என்னவென்று! கனிகளும் அவற்றினுள்ளேயுள்ள விதைகளும் எவ்வளவு முக்கியமானவை என்பதும் அவர்களுக்குத் தெரியும்! விதைகளிலிருந்து தான் மரங்கள் முளைத்தெழுகின்றன என்பதும் தெரியும்! ஆனால், கனிகளையும், விதைகளையும் மரம்தான் உற்பத்தி செய்கிறது என்பதுதான் அவர்களுடைய கணக்கு! விதைகள் இல்லாவிட்டால் என்ன? கிளைகளை வெட்டிப் பதியன் போட்டே மரங்களை நாங்கள் உருவாக்கிடுவோமே! இன்னும், ஒரே ஒரு திசுவிலிருந்து உயிரி-நகலாக்கம் (Cloning) முறையில் ஒரு மரத்தையே நாங்கள் உருவாக்கிடுவோமே என்கிறார்கள் விஞ்ஞானிகள்! சாத்தியம்தான், பதியன்முறை, திசு-கலாச்சாரம், உயிரி-நகலாக்கம் போன்றவை பரிணாம இயற்கையிலேயே அமைந்திருக்கும் மாற்றுவழிகளாகும். அவை பிரதான முறைகள் அல்ல. அவ்வாறிருப்பின், கனிகளும், விதைகளும் தோன்றியிருக்காது!


அழிவு அல்ல உய்வு!


இப்போது நாம் ஒரு மரத்தின் தலைவிதி, அதாவது, அதன் இறுதி முடிவு எத்தகையது என்பதைப் பார்ப்போம். ஒரு மரமானது நன்கு வளர்ந்து முதிர்ந்த பிறகு, பூத்துக் காய்த்துக் கனிகளை விளைவிக்கிறது; பல ஈடுகள் கனிகளை ஈன்றபிறகு, ஒரு நாள் அம்மரம் பட்டுப்போகிறது; மண்ணில் வீழ்ந்து சிதைவுற்று மண்ணோடு மண்ணாகிப் போகிறது. இவ்வாறே இப்பிரபஞ்சமும் ஒரு நாள் மடிந்துபோகும் என்பதே விஞ்ஞானிகளின் பார்வையாகவும் அமைந்துள்ளது! ஆனால், இக்கட்டுரை முன்வைக்கும் மெய்யியல் பார்வையானது இத்தகைய விஞ்ஞானப் பார்வையை மறுக்கிறது! ஏனெனில், நன்கு முதிர்ந்த வயதாகிப்போன மரம் கடைசியில் பட்டுப்போகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதுவல்ல அம்மரத்தின் தலைவிதி!


விஞ்ஞானிகளின் மொன்னையான அடிப்படைவாதப் பார்வையில், மரம் என்பது அடிப்படையில் அடிமரம், கிளைகள், இலைகள் மட்டுமே என்பதாக உள்ளது! ஆனால், மெய்யியல் பார்வையில், அடிப்படையில் ஒரு மரம் என்பது விதை தான்! மரத்தின் சாராம்சத்தைக் குறிப்பது விதைதானே தவிர, அடிமரமோ, கிளைகளோ, இலைகளோ அல்ல! ஒரு மரமானது அதன் ஆயுட்காலத்தின் முடிவில் பட்டுப்போவது என்பது இயற்கையானது, தவிர்க்கமுடியாதது; அது அம்மரத்தின் பருப்பொருளின் பண்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும்.


ஆம், மரத்தின் தலைவிதி கடைசியில் அது பட்டுப்போகிறதா, நீண்ட நெடும்காலம் நிலைத்து நிற்கிறதா என்பதில் இல்லை! மரத்தின் நற்கதியானது அம்மரத்தின் வித்துக்களைக் கொண்ட நற்கனிகளை உருவாக்குவதில் அடங்கியுள்ளதே தவிர, எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறது என்பதில் இல்லை! காய்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, காய்த்துக்குலுங்கும் மரம் உடனடியாகப்  பட்டுப்போகாது! காய்கள் நன்கு முற்றிக் கனிகளாக விளைவதிலேயே அவற்றின் நற்கதியும் அடங்கியுள்ளன! ஆம், மரத்தின் தலைவிதி இறுதியாக அம்மரத்தின் கனிகளுடன் பிணைக்கப்பட்டதாகும். அவ்வாறே பிரபஞ்சத்தின் தலைவிதியும் அதன் நற்கனிகளான உணர்வுள்ள மானிடர்களின் (ஒவ்வொரு மானிடனின்) முழுமையுடனும்  பிணைக்கப் பட்டதாகும்!  Like the fate of the tree which is bound up with its fruits that contain its seeds…  the fate of the Universe is inextricably bound up with the conscious humans who are the fruits of the Universe.


அடுத்து, ஒரு மரத்தில் காய்த்துள்ள காய்களைப்பொறுத்தவரை, அம்மரம் எத்தனை கிளைகளைக் கொண்டிருக்கிறது என்பது பற்றியோ, இன்னும் அம்மரம் எத்தனை கிளைகளை விடக்கூடும் என்பது பற்றியோ, அல்லது அக்காய்கள் இருக்கின்ற கிளை எத்தனை காலம் நிலைத்திருக்கும் என்பது பற்றியோ, அல்லது அம்மரம் எத்தனை காலம் பசுமை மாறாது இருக்கும், கடைசியில் அது பட்டுப்போகுமா என்பது பற்றியோ கேள்வி எழுப்புவதில்லை, கவலைப்படுவதில்லை! இன்னும், ஒரே கிளையில் உள்ள காய்களும் தனது சக காய்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை! ஏனெனில், ஒவ்வொரு காய்க்கும் உள்ளார்ந்த ஒரு பொறுப்பு உள்ளது; அது என்னவெனில், காலத்தே கனிந்து அம்மரத்தின் வித்தை தன்னுள் கொள்வதேயாகும்! வித்துதான் அம்மரத்தின் முழுமையும் சாரமும் ஆகும்!


வித்தை தன்னுள் கொண்டிருக்கும் கனியைப்பொறுத்தவரை,  மரம் நீடித்து சாசுவதமாக இருக்கப் போகின்றதா, அல்லது பட்டுப்போய்விடுமா என்பது பற்றிக் கவலைகொள்வதில்லை! ஏனெனில், வித்திலிருந்து தோன்றிய மரம் முடிவில் வித்தினுள் அடங்குகிறது! வித்துதான் மரத்தின் உய்வு ஆகும்!  விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அது பிரபஞ்சத்தின் முடிவை, அதாவது அழிவைப் பற்றிப் பேசுகிறது. ‘முடிவு’ அல்லது ‘அழிவு’ என்பது, தவறான சொற்பிரயோகம் ஆகும்.ஏனெனில், அவை மரணம், சிதைவு, நாசம், இழப்பு, தோல்வி ஆகியவற்றைக் குறிக்கிறது. மொழியளவிலேயே நாம் இத்தகைய சொற்பிரயோகங்களைத் தவிர்க்கவேண்டும். ‘முடிவு’ அல்லது ‘அழிவு’ என்பவற்றுக்கு மாற்றாக நாம் உய்வு, முழுமை போன்ற சொற்களைப் பயன்படுத்தவேண்டும்! இவை வாழ்வு, நற்கதி, மீட்சி, விடுதலை, முக்தி, நிறைவு, பூரணம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இவ்வாறு மாற்றிப் பயன்படுத்துவது என்பது அழகியல் காரணத்திற்காகவோ, அல்லது மங்கலகரமாக இருக்கும் என்பதற்காகவோ அல்ல; மாறாக,  இது மட்டுமே விஞ்ஞானப்பூர்வ மாகவும், மெய்ஞ்ஞானப்பூர்வமாகவும் சரியானது ஆகும்! மேலும், தோன்றியவையெல்லாம் அழியக்கூடியவை என்பது அபத்தமானதாகும். அதற்கு எதுவுமே தோன்றி பிறகு மறைவதைவிட தோன்றாமலிருப்பதே அதிக அர்த்தமுடையதாயிருக்கும்!


மரத்தைப்பொறுத்தவரையில், அளவில் பிரும்மாண்டமாக ஓங்கி வளர்வதையோ, மேன்மேலும் கிளைகளைப் பரப்பி, பரந்து விரிவடைவதையோ குறிக்கோளாகக் கொண்டதல்ல. மாறாக, அது எந்த மூலத்திலிருந்து (Source) வெளிப்பட்டதோ அந்த மூலத்தை, அதாவது விதையை மறு-உருவாக்கம் செய்வதொன்றே அதன் ஒரே பிரதான குறிக்கோளும், இலக்கும் ஆகும். மரம் தனது குறிக்கோளை அடைவதற்காகவே பூக்கிறது, காய்க்கிறது, கனிகளாகிறது. கனிகளின் உள்ளேயிருக்கும் வித்துக்களின் மூலம் மரம் தன்னை மீண்டும் மீண்டும் படைத்துக்கொள்கிறது!


மரமானது
விண்ணைத் தொடவோ
பூமியின் ஆழத்தை அளக்கவோ
முயற்சிக்கவில்லை!
மாறாக, அது தன் மூலத்தை
தேடுகிறது!
மீண்டும் வித்திற்குள் அடங்குவதே
அதன் ஒரே லட்சியம்!
ஏனெனில், மீண்டும் மீண்டும் ‘
தன்னை தோன்றிடச் செய்யும்
சூத்திரம் வித்தில் உள்ளது!


இவ்வாறே, பிரபஞ்சமும் தன் மூலத்தைத் தேடியே இயங்குகிறது; அதன் இயக்கம் மேம்போக்காகப் பார்க்கும்போது எந்திரத்தனமான பௌதிக இயக்கமாகத் தெரிகிறது. ஆனால், அடியோட்டமாக, அது ஒரு ஒப்பற்ற இலக்கைக் குறிவைத்துச் செல்லும் பரிணாம இயக்கம் ஆகும். பொருள்முதல் வாதச் சார்பு கொண்ட விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ‘இயக்கத்திலுள்ள பருப்பொருள்’ (Matter in Motion) என்பதாகக் காண்கிறார்கள். ஆனால், பிரபஞ்சம் என்பது பரிணாமத்திற்குட்பட்ட பருப்பொருள் (Matter in Evolution) என்பதே அதைப்பற்றிய ஆழமான உண்மையாகும்.


பிரபஞ்சம் என்பது ஒரு பிரும்மாண்டமான எந்திரமும் அல்ல; அது பருப்பொருளால் ஆனது என்றாலும் அது வெறும் ‘பருப்பொருள் - அமைப்பு’ம் அல்ல! பருப்பொருள் என்பது அதனளவில் முதலானதும் இல்லை முடிவானதும் இல்லை; அதைக் கட்டுப்படுத்தி இயக்குகிற விதிகளும், அவ்விதிகளப் பணிக்கும் செயல்திட்டமும் இல்லாமல், பருப்பொருளை அப்படியே அதன் போக்கில் விட்டு விட்டால் இறுதியில் அது இற்றழிந்துபோகும்!


ஆனால், நல்லவேளையாக, எவ்வித கட்டுப்பாடும், முறைமையும் இல்லாத சுதந்திர பருப்பொருள் (Free Matter) என்பது இல்லை!  பருப்பொருள் என்பது அதனளவில் ஒன்றுமேயில்லை என்றுகூட சொல்லிவிடலாம்! அதைக்கொண்டு ஒரு பிரும்மாண்டமான பிரபஞ்சமே எழுப்பப் பட்டாலும்; அப்பிரபஞ்சமும் ஒன்றுமில்லாததுதான்! பருப்பொருள் என்பது எப்போதும் தன்னைக் கடந்த வேறு ஏதோவொன்றின் பொருளே ஆகும்! அதாவது, பருப்பொருளானது தன்னைக் கடந்த வேறொன்றினைச் சுட்டும் குறியீடே! தண்ணீரைப் போல அது நிறமற்றது, வடிவமுமற்றது; ஆனால், மிகுந்த நெகிழ்வுத் தன்மை  கொண்டது! அது பரிணாமத்தின் தேவைகளுக்கேற்ப எத்தகைய வடிமைப்புகளிலும் தன்னை அமைத்துக்கொள்ளும் அளவிற்கு மிகுந்த நெகிழ்வுத்தன்மை கொண்டதாகும்!, அவ்வடிவமைப்புகளின் வழியாக பரிணாமமானது தனது இலக்கு நிலையை அடையும் முயற்சியில் உயிர், உணர்வு (Consciousness) ஆகிய புதிய பண்புகள் அல்லது இருப்பு-நிலைகளை எட்டுவதற்கான பொருத்தமான ஊடகமாக, கருவியாக பருப்பொருள் அமைந்திருக்கிறது. பரிணாமத்தின் நோக்கம் பௌதிகச் சடப் பண்பைக் கடந்து செல்வதுதான்! ஏனெனில், சடப்பண்பு, அல்லது சட-இருப்பு என்பது பிரபஞ்சத்தின் அடித்தளம் போன்றதாகும்.  


அதாவது, பரிணாமமானது சட-இருப்புக்குள்ளேயே, அதாவது சடப்பண்பின் தளத்திற்குள்ளேயே  அடைபட்டிருக்கவோ, வளைய வந்துகொண்டிருக்கவோ முடியாது. சடம், பருப்பொருள், இயற்கை, பிரபஞ்சம் என்று அதை எப்படிக் குறிப்பிட்டாலும் அதுவே தொடக்கமும், முடிவாகவும் இருக்க முடியாது! பருப்பொருள் என்பது தனக்குத்தானே ஒரு சிறையாக அமைந்ததாகும். அதிலிருந்து அது தன்னைத்தானே கடந்து செல்வதன் வழியாக தனது விடுதலையை, உய்வை  நாடி அடைந்தாக வேண்டியது கட்டாயமாகும்! பருப்பொருள் ஒரு குறிப்பிட்ட மிகு-சிக்கல் அமைப்பில் (Complexity) அமையும் போது அது உயிர்பெற்றதாகிறது, அதாவது உயிர்-ஜீவியாக பரிணமிக்கிறது; அவ்வழியே அது உயிர்-இருப்புடன் தொடர்பு கொள்வதாகிறது! இன்னும், மேன்மேலும் மிகு-சிக்கல் வாய்ந்த மனித மூளை எனும் அமைப்பின் வழியாக  பருப்பொருளானது உணர்வு பெற்றதாகிறது; அவ்வழியே அது உணர்வு-இருப்புடன் தொடர்பில் அமைகிறது!


இறுதியாக, அது மனிதமூளையில் உள்ள நியூரான்களின் அமைப்பிலும், அவற்றின் மிகு-சிக்கலான வலைப்பின்னல்கள் வழியாக ஏற்படக்கூடிய மாற்றங்களால் (Mutations) எட்டப்படும் இறுதி-நிலை உணர்வில் (Ultimate Consciousness) தனது முழுமையை அடைந்து விடுதலை பெறுகிறது! இந்த இறுதி-நிலை உணர்வே, சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் பரிணாம வழிமுறையின் வாயிலாக பருப்பொருளானது எட்டக்கூடிய உச்சபட்ச நிலையாகும்! பருப்பொருளின் (பிரபஞ்சத்தின்) உணர்வுப்பூர்வமான பிரதிநிதியாக பரிணாம முழுமையைச் சாத்தியமாக்கிடுபவன் மனிதஜீவியே ஆவான்! விதை என்பது எவ்வாறு ஒரு மரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்வதாக அமைகிறதோ, அவ்வாறு, மனிதனே பிரபஞ்சத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்பவனாக பிரபஞ்சத்தின் கனியாக அமைகிறான்! மனிதன் தான் அடையக்கூடிய உணர்வுப் பரிணாமத்தின் உச்சமான முழு-உணர்வில் (அதுவே பிரபஞ்சத்தின் வித்து, அதாவது “மூலம்”) தன்னைத்தானே கடந்தவனாகிறான்!


விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தின் தலைவிதியை முடிவு, அழிவு ஆகிய சொற்களின் வழியே காண்கின்றனர். ஆனால், மெய்ஞ்ஞானிகளோ உய்வு, முழுமை ஆகிய சொற்களின் வழியே காண்கின்றனர். இவ்விரு பார்வைகளுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் உள்ளது! இவை வெறுமனே சொற்களின் அளவிலான வித்தியாசம் அல்ல. மாறாக, மேம்போக்கான புரிதலுக்கும் ஆழமான புரிதலுக்கும் உள்ள மகா வித்தியாசம் ஆகும்!


அடுத்து, மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மிக முக்கியமான அம்சம் ‘சாசுவதம்’ பற்றியதாகும். அதாவது,  சாசுவதம் என்பது காலத்தில் நிலைத்திருப்பது, முடிவேயில்லாமல் நீடிப்பது என்பதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால், சாசுவதம் என்பது நீண்ட நெடிய காலமோ, அல்லது காலத் தொடர்ச்சியோ அல்ல. அது காலத்தின் மலர்ச்சி ஆகும்! அது காலத்தை விட்டு நீங்கிய, காலத்தைக் கடந்த ‘முழுமை’ நிலையாகும்; அதை, காலத்தைக் கொண்டு அளக்க முடியாது. ஏனெனில் சாசுவதம் என்பது காலத்தில் இல்லை. ஏனெனில்,


எது தொடர்கிறதோ அது முழுமையற்றது!
எது முழுமையானதோ அது தொடர்ச்சியற்றது!
அதுவே இறுதியானது, ஆகவே காலமற்றது!
ஆகவே அது எப்போதுமுள்ளது, இப்போதுமுள்ளது!
எது காலமற்றதோ அது நித்தியமானது!
எது காலத்தில் தொடர்கிறதோ அது அநித்தியமானது!


இவை கவிதை வரிகளல்ல. மாறாக, மெய்ஞ்ஞானச் சமன்பாடு ஆகும்! ஆம், சாசுவதம் என்பது முற்றிலும் வேறு வகை பரிமாணம் ஆகும்.


அழிவதற்காக அல்ல, அழியா மெய்ம்மையைப் பற்றுவதற்காகத் தோன்றிய தற்காலிக நிஜம் பிரபஞ்சம்! தோன்றியவையனைத்தும் மறைந்து போகும் என்பது மிகவும் மேலோட்டமானதொரு புரிதல் ஆகும். இப்புரிதல், உள்ளதை மட்டுமே, அதாவது பருப்பொருளை, அல்லது அதனால் கட்டியெழுப்பப்பட்ட பௌதிகப் பிரபஞ்சத்தை மட்டுமே பிரதான நிஜம், அல்லது மொத்த நிஜமும் என்பதாகக் கொண்டு அடையப்பட்டதாகும்.  பிரபஞ்சமாயினும், அல்லது எதுவாயினும் அது தோன்றியதற்கான காரணமும், நோக்கமும் முக்கியமானவையாகும். இவை பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகும். அடுத்து, தோன்றுகிற பொருளனைத்தும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஏனென்றால், நீடித்து நிலைத்திருப்பது என்பதே அதனளவில் குறிக்கோளாகவோ, இலக்காகவோ இருக்கமுடியாது; அவ்வாறு நீடித்து நிலைத்து இருப்பதன் மூலம் அடையப்படும் அல்லது சாதிக்கப்படும் இலக்குதான் என்ன? அடுத்து, நீடித்து நிலைத்திருப்பதை நாம் நிரந்தரத்துவம் என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது! ஆகவே தான், தோன்றியவையனைத்தும் அழியக்கூடியவையே என்று சொல்லப்படுகிறது.


இத்தகைய தவறான புரிதலுக்குக் காரணம், ‘காலம்’ என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை என்பதேயாகும்.  ‘காலம்’ என்பது முழுமைக் குறைவையும், ஆகவே வளர்ச்சியின் அவசியத்தையும்; மட்டுப்பாட்டையும், ஆகவே அதன் நிவர்த்தியையும் சுட்டுகிறது. ஆக, குறைவை நிறைவுசெய்து, மட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, முழுமை-நிலை எட்டப்படும்போது அம்முழுமை-நிலை கால-வெளி உலகைக் கடந்துவிடுகிறது! ஏனெனில், முழுமை என்பது காலத்தின் உலகில் தரிப்பதில்லை! முழுமை என்பது முற்றிலும் வேறொரு பரிமாணம், அல்லது உலகமாகும்! பிரபஞ்சத்தின் முழுமை எட்டப்பட்ட பிறகு, அதாவது எந்த இலக்கிற்காக பிரபஞ்சம் தோன்றியதோ, அந்த இலக்கைத் தொட்டபிறகு, அழிவதாகத்தெரிவது பிரபஞ்சத்தின் வெறும் சக்கை போன்ற பகுதியே தவிர சாரம் அல்ல! பிரபஞ்சத்தின் நோக்கம் தனது சாரத்தை உணர்வதே!


ஆனால் சடப் பண்புகொண்ட பருப்பொருளாலான பிரபஞ்சம் நேரடியாக தனது மூலத்தையோ, சாரத்தையோ அறியவோ, உணரவோ இயலாது. ஆகவேதான் அது உயிர்-ஜீவியாக அவதாரம் எடுத்தது. உயிர்-ஜீவி என்பது அதன் சாரத்தில் புலனுணர்வின் மூலமாகப் பெறும் புலனறிவே ஆகும். ஆனால், அப்புலனுணர்வு அல்லது புலனறிவு மூலம் உயிர்-ஜீவிகளாலும் பிரபஞ்சத்தின் நோக்கத்தை அறியப்போதுமானதாக அமையவில்லை! மேலும், உயிர்-ஜீவிகளுக்கு உயிர்-பிழைத்திருப்பதற்கான தேவைகளை அடைவது என்கிற குறுகிய இலக்கிலேயே அவற்றின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது!


ஆகவேதான், பிரபஞ்சமானது உயிரியல் பரிணாமத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்று. சுய-உணர்வு உள்ள, பகுத்தறிவு கொண்ட ஜீவிகளாகிய மானிடர்களாக அவதாரம் எடுத்தது! ஆனால், பகுத்தறிவு பெற்றிருந்தும், எல்லா மானிடர்களாலும், பிரபஞ்சத்தின் நோக்கத்தை அறியும் அளவிற்கு உணர்வு பெற இயலவில்லை! மிகவும் அரிதாக அவ்வப்போது இங்கொருவர் அங்கொருவராக மிகச்சிலர் மட்டுமே பிரபஞ்சத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் அளவிற்கு உணர்வு பெறுகிறார்கள்! மிகப் பெரும்பாலான மானிடர்கள் தம் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதிலும், பரிணாம வாழ்க்கைக்குப் புறம்பான லட்சியங்களைத் துரத்திச்செல்வதிலும் மூழ்கி, இலக்கற்ற ஜீவிகளாக வாழ்ந்து மடிந்து போகின்றனர்! அதாவது, மானிடஜீவிகள் தமது இருப்பை உணரக்கூடிய சுய-உணர்விலும், அதைக்கொண்டு தமது குறுகிய தேவைகளை அடையும் பொருட்டு உலகை மேம்போக்காக அறிய உதவும் பகுத்தறிவிலும் தங்கித் தேங்கிப் போயினர். இதன் விளைவாக, சுய-உணர்வைத் தாண்டிய உயர்-உணர்வும், பகுத்தறிவைத் தாண்டிய உயர் அறிவும் உள்ளன என்பதை எண்ணிப்பார்க்கக்கூட இயலாத மட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டனர். இதில் விஞ்ஞானிகளும் விதிவிலக்கல்ல!


மனிதஜீவிகளின் இந்தத் தேக்க நிலையால், பிரபஞ்சம் தனது நோக்கத்தை, இலக்கை அடைய இயலாமல் பரிணாம ரீதியாகத் தேக்கமுற்று (ஸ்)தம்பித்து நிற்கிறது! ஏனெனில், பிரபஞ்சத்தின் ஒரே நோக்கம் முழு-உணர்வை, அதாவது முழு-அறிவை எட்டுவதேயாகும்! அப்படி முழு-அறிவில் முழு-உணர்வில் என்ன விசேடம் உள்ளது? ஏற்கனவே குறிப்பிட்டபடி, (வித்திலிருந்து தோன்றிய மரம்) மீண்டும் வித்திற்குள் அடங்குவதே அதன் ஒரே லட்சியம்! ஏனெனில், மீண்டும் மீண்டும் தன்னை தோன்றிடச் செய்யும் சூத்திரம் வித்தில் உள்ளது! ஆம், அதுபோலவே, இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கான முழு சூத்திரமும் முழு-அறிவில், அதாவது முழு-உணர்வில் உள்ளது.


மேலும், பரிணாமத்தில் பரிணமிப்பது எதுவென்றால், அது உணர்வே (Consciousness) ஆகும். ஆம், உணர்விலிருந்து பெறப்படுவது (Derivative)தான் அறிவு ஆகும்! பாமரர்களும், விஞ்ஞானிகளும் உயிர்ஜீவி என்பதை வெறும் உண்டு, உறங்கி, இனம்பெருக்கி உயிர்-பிழைத்திருக்கும் ஜந்து, அல்லது ஒரு எந்திரம் போன்றது என்பதாக மேலோட்டமாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், உண்மை என்னவெனில், உணர்வுக்கும் அறிவுக்குமான அடிப்படைகளை உயிர்-ஜீவிகளை ஊடகமாகக் கொண்டே பரிணாமம் படைக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, உயிர்ஜீவிகள் உணர்வு, மற்றும் அறிவை வெளிப்படுத்தும் ஊடகங்களே ஆகும்! இவ்வரிசையில் உணர்விலும் அறிவிலும் குறிப்பிடத்தக்க உயர் வளர்ச்சி நிலையை வெளிப்படுத்தும் வகையில் எழுந்த ஜீவியே மனிதன்! உண்மையில், பரிணாமத்தில் விளையும் உயிர்-ஜீவிகளோ, அல்லது மனித-ஜீவிகளோ முக்கியமல்ல; அவை பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கை அடைவதற்கான கருவிகளேயாகும். மாறாக, மனித ஜீவியின் வழியாக அடையப்படும் உணர்வு நிலையும், அதிலிருந்து பெறப்படும் (Derivative) அறிவு நிலையும் மட்டுமே முக்கியமானவையாகும்! ஏனெனில், பருப்பொருளோ, விசைப் புலமோ (Field of force), அல்லது கால-வெளி ஊடகமோ (Spacetime continuum), இவை எதுவும் பிரபஞ்சத்தின் அடிப்படையான மெய்ம்மை அல்ல; அறிவு தான் அடியும் முடியுமான மெய்ம்மையாகும்; அறிவுக்கும் அடிப்படை,  உணர்வு (Consciousness) தானாகும்!


ஆனால், பிரபஞ்சத்தின் தலைவிதியை யார் எழுதுவது? யாரும் எழுதவேண்டியதில்லை; அது ஏற்கனவே முழு பரிணாமத் திட்டத்தின்படி எழுதப்பட்டுவிட்டது. அவ்விதியைச் சரியாகப் புரிந்துகொண்டு நிறைவேற்றுவது மட்டுமே பரிணாமத்தின் உணர்வுப்பூர்வமான பிரதிநிதிகளான மனிதஜீவிளாகிய நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்! விஞ்ஞானிகள் பரிணாமத் திட்டத்தையும், பரிணாமத்தில் பரிணமிப்பது எது என்பதையும்  புரிந்துகொள்ளாததால், அவர்கள் அதன் (தலை)விதியைத் தவறாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!


பிரபஞ்சம் என்பது ஒரு பரிணாம இயக்கம்; பரிணாம இயக்கத்திற்கு வெளியே அதற்கு யாதொரு   அர்த்தமுமில்லை! பிரபஞ்சத்தின் தலைவிதியானது, பரிணாமரீதியாக எழும் இறுதி நிலையுடன் பிணைக்கப்பட்டதாகும். பரிணாமத்தில் கடைசியாக விளைந்தவன் மனிதஜீவியே ஆவான். ஆயினும், அவனே பரிணாமத்தின் கடைசிச் சொல் அல்ல; அவன் கடைசிசொல்லுக்கும் முந்தைய சொல் ஆவான்! அதாவது, அவன் இறுதியானதொரு பரிணாம மாற்றத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டாக வேண்டும்!  ஆம், அவனது மலர்ச்சியே அந்த இறுதிச் சொல்லும், ஒப்பற்ற இலக்கு நிலையும் ஆகும்! அதாவது, மனிதன் என்பவன் உணர்வே ஆவான்; உணர்வின் மலர்ச்சியைத்தான் நாம் மனிதனின் மலர்ச்சி, ஒருமை, முழுமை, பூரணம் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். மனிதன் தன்னையும், தன் வாழ்வையும் பரிணாமத்துடன் தொடர்புபடுத்தாமல், பரிணாமரீதியாகப் புரிந்து கொண்டு வாழாமல் தன் சொந்த விருப்பம், மற்றும் தெரிவுகளின்படி வாழ்வானேயானால், அவன் இன்னுமொரு விலங்குஜீவியாக மட்டுமே உழன்று, இறுதியில் மாண்டு போவான்!


ஆக, பரிணாம ரீதியாகக் காண்கையில், பிரபஞ்சத்தின் இலக்கும், தலைவிதியும்; மனிதனின் இலக்கும் தலைவிதியும் ஒரே புள்ளியில்தான் குவிகின்றன! இன்னும் சொல்லப்போனால், பிரபஞ்சத்தின் முடிவான நிறைவேற்றம் (consummation)என்பது வருங்காலத்தில் நிகழ்வதில்லை! மாறாக, அது ஒவ்வொரு மனிதனின் பரிணாம முழுமையில் இப்போதே நிகழக்கூடிய ஒன்றாகும். ஆம், மனிதஜீவிகள் மட்டும் தமது பரிணாமக் கடமையை உணர்ந்திருப்பார்களேயானால்!


மேலும், மனிதனே பிரபஞ்ச முழுமைக்குச் செல்லும் வாயில் ஆவான்! ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும் தான் பிரபஞ்சத்தின் முழுமை அடையப்படவேண்டும்;ஒவ்வொரு கனியினுள்ளேயும் மரம் தனது சாரத்தை, மூலத்தைக் கண்டடைவதுபோல! இவ்வகையில் பிரபஞ்சத்தின் தலைவிதி, அதாவது, உய்வு, நற்கதி, விடுதலை என்பது ஒவ்வொரு மனிதனும் அடைந்தாக வேண்டிய முழுமையைச் சார்ந்திருக்கிறதே தவிர, மனிதனின் தலைவிதியானது  பிரபஞ்சத்தைச் சார்ந்து இருக்கவில்லை! பல ஈடுகள் கனிகளைக் கண்ட மரம் இறுதியில் அழிந்து போனாலும், பட்டுப்போனாலும் அதனால் மரத்திற்கும் பாதிப்பில்லை, அதன் கனிகளுக்கும் யாதொரு பாதிப்புமில்லை! பிரபஞ்சம் என்பது அழிவற்றதிலிருந்து அழிவற்றதிற்குச் செல்லும் ஒரு தற்காலிகப் பாலம் போன்றதே!


முக்கியமாக, இப்பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பில் (Big-Bang) பிறந்த போது, அப்பிறப்புக் கணத்தைக் கொண்டாட நாம் அழைக்கப்படவில்லை! ஏன், பிரபஞ்சம் தோன்றி 1500 கோடி ஆண்டுகள் வரை நாம் தோன்றிடவில்லை. அவ்வாறே, பிரபஞ்சத்தின் முடிவுக் காலத்தின்போதும் நாம் அழைக்கப்படமாட்டோம்! ஏனெனில், அதற்குள் நாமும், ஒட்டுமொத்த மனிதகுலமும்; நம் வழியே இப்பிரபஞ்சமும் முக்தியடைந்துவிடுவோம், அதாவது, பரிணாம முழுமையை அடைந்துவிடுவோம்! அழிவதாக, முடிவிற்கு வருவதாகத் தெரிவது வெறும் சக்கையே தவிர சாரம் அல்ல! பறவை கூட்டைவிட்டுப் பறந்துபோன பிறகு, கூட்டைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை!


உண்மையிலேயே நாம் அக்கறையுள்ளவர்களாயிருந்தால், நாம் கேட்க வேண்டிய கேள்வி, பிரபஞ்சம் இறுதியில் எத்தகைய முடிவைத் தழுவிடக்கூடும் என்பது பற்றியல்லாமல், நாம் நம் வாழ்-காலத்தின் முடிவில் எத்தகைய முடிவைத் தழுவிக் கொள்ளப்போகிறோம் என்பதைப் பற்றியதாக இருக்கவேண்டும். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறந்துதான் போகவேண்டும் என்று நாம் கூறுவோமானால், நாம் நம்மையும் புரிந்து கொள்ளவில்லை; பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளவில்லை; அதாவது, உடலாகிய கூட்டை நாமாகவும், சடப் பொருளாலான காலி அரங்கத்தை பிரபஞ்சமாகவும் அடையாளப்படுத்திக்கொண்டுள்ளோம்! இவ்வழியே உன்னதமான ஒட்டுமொத்தப் புதிரையும் நாம் கொச்சைப் படுத்திவிட்டோம் என்பதாகத்தான் அர்த்தம்!




குறிப்பு: இக்கட்டுரையுடன் தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையாசிரியரின் பிற கட்டுரைகளையும் வாசிப்பது வாசகர்களுக்கு முழுமையான புரிதலைக் கொடுக்கும்.


*  தன் மையத்தைத் தேடும் பிரபஞ்சம்! [The Extreme Anthropic Principle]
*  உலகம் எவ்வாறு தோன்றியது?
*  முழு-அறிவும் விஞ்ஞான அறிவும்

மா.கணேசன் / நெய்வேலி/ 07-11-2018
ŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒŒ

Wednesday, 14 November 2018

தன் மையத்தைத் தேடும் பிரபஞ்சம்! [The Extreme Anthropic Principle]




       பிரபஞ்சவியல் என்பது பரந்த வெற்றுவெளியில் பரவிக்கிடக்கும் உயிரில்லாத நட்சத்திரப்
       புழுதியைப் பற்றிய விஞ்ஞானம் அல்ல.    
                                           - மார்க்கோ ஊர்சாக் (Marko Uršič)
                             தத்துவஞானி, உளவியல் மேதை/யூகோஸ்லாவியா


மானிட-மைய விதி  [The Anthropic Principle]

"நமது மனங்கள் நாம் வாழ்கின்ற நமது பிரபஞ்சத்தையடுத்து இரண்டாவது அல்லது மூன்றாவது ஒரு பிரபஞ்சம் பற்றிச் சிந்திக்கவிரும்புவதில்லை. சில மொழிகளில், பிரபஞ்சம் என்ற சொல்லுக்கு பன்மை கிடையாது. இது ஏனென்றால் நமது பிரபஞ்சத்திற்கு இணையாக, நம்மால் அறியமுடியாத பிற பிரபஞ்சங்களைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. ... வேண்டுமானால், நாம் பிற கிரகங்கள் பற்றிப்பேசலாம், ஏனென்றால், நாம் அவற்றை இங்கிருந்தவாறே கண்டு கவனிக்க முடியும்; நம்மால் பிற சூரியன்கள், சூரிய மண்டலங்கள் இன்னும் நமக்குப் பரிச்சயமற்ற பிற உயிர் வடிவங்களையும் பற்றியும் பேசலாம்..."  என்பதாக ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி ரூடால்ப் கிப்பென்ஹான் (Rudolf Kippenhahn), "The Anthropic Principle -Man as the Focal Point of Nature" (1991) by Reinhard Breuer எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆம், கிப்பென்ஹான் அவர்களின் கூற்றில் நியாயம் உள்ளது. மேலும், உண்மை நிலவரம் என்னவென்றால், நம்முடைய பிரபஞ்சத்தையே நம்மால் முழுமையாகக் காணவும் அறியவும் வழியில்லாத அளவிற்கு அது பிரும்மாண்டமாய் எல்லையற்றதாக பரந்து விரிந்துகொண்டே போகிறது; இதில் இரண்டாவது பிரபஞ்சம் பற்றிப் பேசுவது என்பது அர்த்தமற்றது. இன்னும், சொல்லப்போனால், நம்முடைய பிரபஞ்சமும் கூட தேவையில்லாமல் அளவுகடந்து பெரிதாக உள்ளது! (அதற்கான காரணம் இல்லாமல் இல்லை!) அடுத்து, நமது பூமிக்கிரகத்தைச் சுற்றிலும், நமது சூரிய மண்டலத்தில் என்னென்ன அண்டவெளிப் பொருட்கள் உள்ளன என்பதை அறிவதென்பதுகூட ஒருவகையில் அவசியமானதே எனலாம். ஆனால், நமக்குச் பரிச்சயமில்லாத, நாம் அறிந்த உயிர்-ஜீவியைப் போலல்லாமல் அடிப்படையிலேயே வேறு வகைப்பட்ட, அல்லது வேற்றுலக ஜீவிகளைப் பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்றுதான் நான் சொல்வேன். ஏனெனில், அத்தகைய உயிர்-ஜீவிகளுடன் ஒப்பிட்டுத்தான் நம்மை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.

மேலும், மானிட-மைய விதியைப் (Anthropic Principle) பொறுத்தவரையில், அதை ஒவ்வொரு தனிமனிதனையும் மையப்படுத்திடும் வகையிலும் நீட்டிக்க முடியும்; அதாவது, என்னைச் சுற்றிலும் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள்; இருந்தாலும், என்னை இன்னொருவருக்கு பரிமாற்றம் செய்துகொள்ள இயலாது! நான் குறிப்பிடும் இந்த நீட்டிப்பு சிலருக்கு அதீதமான விடயமாகப் படலாம். இதையே நான் "அதீத மானிட-மைய விதி" (Extreme Anthropic Principle) என அறிவிக்கவும் விரும்புகிறேன்! யாருக்குத் தெரியும், இவ்விதி நாளை எனது பெயரைக்கொண்டே அழைக்கப்படலாம்! இக்கட்டுரையாசிரியரின் “அதீத மானிட-மைய விதி” இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் "மானிட மைய விதி" (Anthropic Principle) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
"மானிட-மைய விதி" முதன்முதலில் கோட்பாட்டியல் வானவியல் பௌதிகவிஞ்ஞானி, ப்ராண்டன் கார்ட்டெர் (Brandon Carter) அவர்களால், 1973-ல் கோப்பர்னிக்கஸ்-ன் 500-வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் ஒரு மாநாட்டில் அளித்த பங்களிப்பில் இடம்பெற்றது. கார்ட்டெர் தனது மானிட-மைய விதியை, கோப்பர்நிக்கஸ்-ன் விதியான ' மானிடஜீவிகள் இப்பிரபஞ்சத்தில் சிறப்புச் சலுகை கொண்ட இடத்தில் இல்லை' என்பதற்கு எதிர்வினையாக முன்வைத்தார். கார்ட்டெரின் முன்வைப்புக்கூற்று யாதெனில், "பிரபஞ்சத்தில் மானிடஜீவிகளின் இட-அமைவு மையத்துவ மானதாக இல்லையெனினும், ஓரளவிற்கு சிறப்புச் சலுகை பெற்றது" என்பதே ஆகும்.

அதாவது, இப்பிரபஞ்சத்தின் அடியோட்டமாகச் செயல்படும் இயற்கைவிதிகளானவை உயிர் தோன்றுவதற்கு ஏதுவான வகையில் அமைந்திருக்கவேண்டும்; அவ்வாறில்லையெனில், இங்கு நாம் தோன்றியிருக்க முடியாது! இதுதான் மானிட-மையத்துவ விதி பற்றிய சுருக்கமான பொருள் விளக்கம் ஆகும்.
இனி நாம் இந்த "மானிட மைய விதி" கிளப்பிய குழப்ப மேகங்களுக்குள் செல்வோம். இவ்விதியானது மிகவும் வெளிப்படையாகத்தெரியும் ஒரு உண்மை நிலை பற்றிய ஒரு கூற்றே ஆகும். ஆனால், மேற்குலக விஞ்ஞானிகள், எவ்வொரு விடயத்தையும் விதிகளின் சொற்களுக்கு மாற்றியும், கோட்பாடுகளின் வழியாகவும் தான் புரிந்துகொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள்!

ஆனால், இங்கே ஒரு பிரபஞ்சம் இருக்கிறது. அது கறாரான விதிகளைக்கொண்டு இயங்குகிறது. அதன் வளர்ச்சிப்போக்கில் ஒரு கட்டத்தில் பூமிக்கிரகத்தில் உயிர்ஜீவிகள் தோன்றின. அதன் தொடர்ச்சியாக, பிறகொரு கட்டத்தில் சுய-உணர்வுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மானிட ஜீவிகளாகிய நாம் தோன்றி, இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு இயங்குகிறது; அதனுடைய விதிகள் என்ன, அதனுடைய முடிவு எத்தகையதாயிருக்கும்; அதில் நம்முடைய இடம் எது?..என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். ஆக, பிரபஞ்சமும் இருக்கிறது, அதில் நாமும் இருக்கிறோம்! பிறகு அதிலென்ன பிரச்சினை? அதில்தான் பிரச்சினை இருக்கிறது என்கிறார்கள் பல விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும்!

அதாவது, "உயிர் தோன்றியே ஆகவேண்டும் என்பதுபோல் இயற்கையின் விதிகள் அமைந்திருப்பதாக தோற்றமளிக்கிறது; ஆனால், பிரபஞ்சத்தின் அடிப்படையான, பொருண்மையான மாறாத-மதிப்புகளின் (universal constants) எண்ணில் சிறிது மாற்றம் இருப்பின், பிரபஞ்சமானது வேறுவகைப் பட்டதாக அமைந்திருக்கும்; அந்த வேறுவகைப்பட்ட பிரபஞ்சம் உயிர்த் தோற்றத்திற்கு ஏதுவாக அமையாது. மேலும், பெரும் எண்ணிக்கையிலான விபத்துக்கள் எல்லாம் கூட்டாகச்சேர்ந்து நாம் தோன்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதாகத் தோற்றம் தருகிறது" என்றெல்லாம் சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த விஞ்ஞானிகளின் தர்க்கம் ஏன் இவ்வாறு தலைகீழாக உள்ளது என்பதுதான் எனக்குப் புரியவில்லை! இப்பிரபஞ்சத்தில், உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் ஏற்கனவே தோன்றி வெற்றிகரமாக நிலைபெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பிரபஞ்சத்தின் பௌதிகவிதிகளும், மாறாத மதிப்புகளும் வேறுவிதமாக இருந்தால், இப்பிரபஞ்சமே நிலைத்திருக்காது, நட்சத்திரங்கள் தோன்றியிருக்காது, ஒரு புழு பூச்சியும் தோன்றியிருக்காது; அறிவுக்கூர்மையுள்ள மனிதஜீவியும் தோன்றியிருக்கமாட்டான், ..... என்பதுபோன்ற வாதங்களுக்களுக்கான அவசியம்தான் என்ன?

ஜெர்மானிய வானவியல் பௌதிகவியல் விஞ்ஞானி ரெய்ன்ஹார்ட் ப்ரூயர் (Reinhard Breuer) அவர்கள், உயிர் தோன்றுவதற்கு சாதகமாக அமைந்த பௌதிக காரணிகளைப் பட்டியலிட்டுள்ளார்; அப்பட்டியல் கவனத்திற்குரியவகையில் எண்ணிக்கையில் கணிசமானதாகும்; அத்தனை எண்ணிக்கையிலான விபத்துக்கள் விபத்துபூர்வமாக நிகழ்ந்திருக்கவியலாது என்ற உணர்வை நாம் பெறுகிறோம். கிட்டத்தட்ட நம்மை மனதில் கொண்டே இயற்கைவிதிகளானவை அமைந்தது போல் உள்ளது என்கிறார். பாவம், ரெய்ன்ஹார்ட் ப்ரூயர், அவர் மானிட-மைய விதிக்கு ஆதரவாகப் பேசுபவராக இருக்கிறார்; தனது பார்வையை எடுத்துச்சொல்ல அவர் ஒரு முழு நீளப் புத்தகத்தையே எழுதியுள்ளார்! (இக்கட்டுரையின் முதல் பத்தியில் அதன் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது).

மனிதனே பிரபஞ்சத்தின் மையம்

என்னைப்பொறுத்தவரையில், நானும் "மானிட-மைய விதி"யை ஆதரிப்பவனாகவே இருக்கிறேன். ஏனெனில், இப்போதைக்கு மனிதன்தான், ஒவ்வொரு தனிமனிதனும்தான், இப்பிரபஞ்சத்தின் மையம் ஆவான். ஆனால், இம்மையத்துவம் ஒருவகையில் முக்கியமானது; இன்னொரு வகையில், சற்று தற்காலிகமானது! எவ்வாறெனில், மனிதன் தோன்றுவதற்கும் நெடுங்காலத்திற்கு முன்னே, அதாவது, முதல் உயிர் தோன்றியபோது, அதை நாம் "அமீபா" என்று வைத்துக்கொள்வோம்; அந்த அமீபாதான் இப்பிரபஞ்சத்தின் மையமாகத்திகழ்ந்தது; அதாவது ஒட்டுமொத்தப் பிரபஞ்சப் பரிணாம இயக்கமும் அந்த அமீபாவை உருவாக்குவதில் தான் முனைப்பாகக் குவிந்திருந்தது எனலாம். அவ்வாறே, அமீபாவையடுத்து பரிணாமத்தில் வெளிப்பட்ட ஒவ்வொரு மேம்பட்ட உயிர்ஜீவியும் பிரபஞ்சத்தின் புதிய மேம்பட்ட மையமாக மாறிமாறி அமைந்தன.

பரிணாமத்தைப் பொறுத்தவரை, எவ்வொரு குறிப்பிட்ட உயிர்ஜீவியும், அது அறிவுக்கூர்மை கொண்ட ஜீவியாயினும், அல்லது மனிதனே ஆயினும், சிறப்புரிமை பெற்றதல்ல! மனிதன் உள்பட எல்லா ஜீவிகளுமே பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கை அடைவதற்கான கருவிகளே! ஆனால், மனிதஜீவியின் சிறப்பும், முக்கியத்துவமும், அவன் வழியாகத்தான், அவனைக்கொண்டுதான், அவனுள்ளேயும் ஊடேயுமாகத்தான் அந்த இறுதியான மையம், அல்லது அந்த ஒப்பற்ற இலக்கு அடையப்பட இருக்கிறது! ஏனெனில், மனிதனே உணர்வுப் பரிணாமத்தின் (Evolution of Consciousness) ஏகபோகக் களமாகத் திகழ்பவனாக அமைந்துள்ளான்! அதாவது, உணர்வுப் பரிணாமத்தின் உதயம் அவனுடன் அவனுள் தொடங்கி அவனுள்ளேயே முழுமையடைகிறது!

ஒரு குதர்க்கமான பார்வையில், “உயிர்-ஜீவிகள் எவ்வகைப்பட்ட பிரபஞ்சத்திற்கும் ஏற்றவகையில் தகவமைய முடியாதா என்ன, அதாவது, எவ்வாறு நாம் மாறி மாறி அமையும் இரவுக்கும் பகலுக்கும் தகவமைந்துள்ளோமோ அவ்வாறு? ஆக, இப்பார்வையின்படி நமது இருப்பு குறித்து ஆச்சரியப்பட ஒரு காரணமும், அடிப்படையும் இல்லை எனலாமா? ஒருவேளை  எவ்வகைப்பட்ட பிரபஞ்சமாயினும் - மிகவும் தாறுமாறான விதிகள் மற்றும், மாறாத மதிப்புகளைக் கொண்டதொரு பிரபஞ்சத்திலும் - அதில் நமது இருப்பைப் பெற்றிருப்போமல்லவா!”  இது வெறும் குதர்க்கமான பார்வை மட்டுமல்ல; மாறாக, படு அபத்தமானதாகும்; எவ்வகையிலென்றால், இது உயிர்-ஜீவி மற்றும் அதன் தோற்றம் பற்றிய மிகவும் மேலோட்டமான புரிதலை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது, உயிர்த்தோற்றம் என்பது வெறுமனே தகவமைதல் (Adaptation), மற்றும் உயிர்-பிழைத்திருத்தல்  (Survival) ஆகியவற்றைச் சார்ந்தது என்பதாகக் காணும் மிகவும் மேம்போக்கான புரிதல்!

மானிட-மைய விதியை மறுப்பவர்களின் கூற்றின்படி, மானிட-மைய விதியின் வெவ்வேறுபட்ட எல்லாவகைப் பதிப்புகளும் (Versions) பௌதிகப் பிரபஞ்சத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும் தேடலை ஊக்கம் கெடுப்பதாய் உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகின்றது. மானிட-மைய விதியானது, பொய்ப்பிக்கத் தகுமையற்றதாக (Un-Falsifiable) உள்ளதென்றும், ஆதலால், அவ்விதி விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்லவென்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், பௌதிகப் பிரபஞ்சத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன? இத்தகைய ஆக்கம்கெட்ட முனைப்புக்குச் சரியான பதிலடியாக, யூகோஸ்லாவிய தத்துவஞானியும், உளவியல் மேதையுமான மார்க்கோ ஊர்சாக் (Marko Uršič) அவர்கள், "பிரபஞ்சவியல் என்பது பரந்த வெற்றுவெளியில் பரவிக்கிடக்கும் உயிரில்லாத நட்சத்திரப் புழுதியைப் பற்றிய விஞ்ஞானம் அல்ல." ("Cosmology cannot be a science of dead stardust spread in the vast empty space") என்று கூறியுள்ளார்.

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, 'பிரபஞ்சமே பிரதானம்' எனும் கொடிய வாதத்தால் பீடிக்கப்பட்டவர்களாவர். பிரபஞ்சத்தை பிரதானப்படுத்தி, மனிதனை தேவையற்ற ஓரத்து நிகழ்வாகச் சுருக்கிக் காண்பதில் அவர்களுக்கு அப்படியொரு அலாதி ஆனந்தம்! இத்தகைய பார்வை பெரிதும் எந்திரத்தனமான, பொருண்மைவாதம் சார்ந்த மட்டுப்பாட்டின் வெளிப்பாடே ஆகும்! இம்மட்டுப்பாட்டை உதறிக்கடந்து முன்னோக்கிச்செல்லும்வரை விஞ்ஞானம் முழுமையாக விஞ்ஞானபூர்வமாக இருக்கப்போவதில்லை!

மானிட-மைய விதியின் ஒரு பதிப்பானது, "வலுவான மானிட-மைய விதி" (Strong Anthropic Principle, SAP) என வழங்கப்படுகிறது; அவ்விதி, "பிரபஞ்சமானது ஏதோவொருவகையில் அதன் வளர்ச்சிப் போக்கில் இறுதியாக உணர்வுள்ள, அறிவார்ந்த ஜீவிகளைக் கொணர்ந்திட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உட்பட்டதாயுள்ளது." என்று கூறுகிறது. மானிட-மைய விதியின் இன்னொரு பதிப்பு, "வலுவற்ற மானிட-மைய விதி" (Weak Anthropic Principle, WAP) என வழங்கப்படுகிறது; இவ்விதி, "இறுதியாக உயிர்த்தோற்றத்திற்கு உறுதுணையாக அமைகிற பிரபஞ்சத்தில் மட்டும்தான் பிரபஞ்சத்தை அறியும் திறன்கொண்ட உயிர்கள் தோன்றக்கூடும்." என்கிறது. ஆனால், இவ்விதிகள் யாவும் மிகைக்கூற்றுகள், அல்லது வெள்ளிடைமெய் என கருதப்படுகின்றன; இக்கூற்றுகள் வெளிப்படையான உண்மைகளையே பேசுகின்றன, அவை புதிதாக எதையும் சொல்வதில்லை; மேலும், அவற்றைப் பொய்ப்பிக்கவும் வழியில்லாததால், அவை விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகள் அல்லவென்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இவ்வாறான மிகைக்கூற்றுக்களும், வெள்ளிடைமலை போன்ற ஒன்றை விவரிக்கும் கோட்பாடுகளும் ஏன் முன்வைக்கப்படுகின்றன?

ஏனென்றால், நம் விஞ்ஞானிகள் எதையுமே சுற்றிவளைத்துத்தான் புரிந்துகொள்வோம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பருப்பொருள் மாத்திரமே; ஆகவே அவர்கள்  எல்லாவற்றையும் பருப்பொருள் மற்றும் பௌதிகவிதிகளின் சொற்களிலேயே புரிந்துகொள்வோம் என அடம் பிடிக்கிறார்கள்! ஆகவேதான் நாம் மானிட-மைய விதி போன்ற மிகைக்கூற்றுக் கோட்பாடுகளை முன்வைப்பதும், அவற்றைக்கொண்டு எந்திரவாத விஞ்ஞானத்தின் மட்டுப்பாடுகளை உடைத்தெறிய முயற்சிப்பதும் அவசியமாகிறது!

விஞ்ஞானிகள் எவ்வளவு குதர்க்கமாகச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.  "வலுவான மானிட-மைய விதி" (SAP)யின் கூற்றான, "பிரபஞ்சமானது உயிர்த் தோற்றத்திற்கு உறுதுணையாக இருந்தாக வேண்டும்" என்பதைச் சோதித்துக் காணவேண்டும் எனில், அதற்குச் சான்றாக நம்முடைய பிரபஞ்சமல்லாத வேறு பிரபஞ்சங்களில் உயிர் தோன்றியிருக்கவேண்டும் என்கிறார்கள்! ஆனால், பெரும்பான்மையான விளக்கத்தின்படி வேறு பிரபஞ்சங்களை நம்மால் கண்டுகவனிக்க இயலாது. ஆக, "வலுவான மானிட-மைய விதி" (SAP)யின் கூற்றைப் பொய்ப்பிக்க இயலாததால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது" என்கிறார்கள்!

அடுத்து, "நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் வேறு வகைப்பட்டதாயிருந்தால், நாம் இப்போது  இங்கிருக்கமுடியாது. ஆனால், நமது பிரபஞ்சம் வேறு வகைப்பட்டதாக இல்லையாதலால், நாம் இங்கிருக்கிறோம்!" என்பது போன்ற தர்க்கங்களும் பயனற்றவையாகும்! ஏனென்றால், இங்கு ஒரு முழும்பிரபஞ்சமே இருப்பதால், அதன் பகுதியாக இருந்துகொண்டுதான் நாம் வேறுவகைப்பட்ட பிரபஞ்சங்களைப் பற்றியும்; இன்னும் சில சமயங்களில் ஒன்றுமில்லாத நிலை பற்றியும் பேசுகிறோம்! மேலும், நம்மையும் பிரபஞ்சத்தையும் பிரிக்கஇயலாது! இதன் அர்த்தம் நாம் இப்பிரபஞ்சத்தின் நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையாகவும் இருக்கிறோம்; மேலும், நாம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையின், விதிமுறைகளின் பகுதியாகவும், தொடர்ச்சியாகவும் இருந்து கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழிமுறைகளையும், விதிமுறைகளையும் கற்பனைசெய்வது பயனற்றது! அனந்த கோடி பிரபஞ்சங்களை நம் கற்பனைகளில் விரித்துக் காணலாம்; அதனால், நமது எதார்த்த நிலை ஒரு சிறு இம்மியளவும் மாறப்போவதில்லை!

ஒரு பார்வையில், பிரபஞ்சத்திற்கு உயிருள்ள ஜீவிகளையும், உணர்வுள்ள மனிதஜீவிகளையும் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயமோ, அல்லது அவை தோன்றுவதற்கு உறுதுணையாக அமைந்தாக வேண்டிய அவசியமோ இல்லை எனக்காண இடமுண்டு எனலாம். ஆனால், ஒரு கட்டத்தில், பிரபஞ்சமானது தன்னைத்தானே அறியும்வகையில் உணர்வு பெறவில்லை எனில், அதன் இருப்பிற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஆக, பிரபஞ்சமானது பரிணாமம் எனும் சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையில் உணர்வுபெறும் வகையில், முதலில் உயிர்-ஜீவியின் வடிவமைப்பை, அதாவது, புலன் உணர்வு நிலையை எட்டியது, அதையடுத்து மேற்கொண்ட பரிணாம முயற்சியின் விளைவாக, அது மனித-ஜீவியின் வடிவமைப்பை, அதாவது, சுய-உணர்வு நிலையை வந்தடைந்தது! இவ்வாறு வந்தடைவது என்பது தவிர்க்கவியலாததாகும்.

அதேவேளையில், உயிர்-ஜீவி, மற்றும், மனிதஜீவியை அடைவது பிரபஞ்சத்தின் பிரதான நோக்கமோ, இறுதி இலக்கோ அல்ல! மாறாக, அதன் ஒரே பிரதான இலக்கு முழுமையான உணர்வுநிலையை அடைவதே! மேலும், மனிதனின் வழியாக தற்போது எட்டப்பட்டுள்ள உணர்வு நிலை இறுதியானதோ, முழுமையானதோ அல்ல! ஆயினும், உணர்வின் உச்ச நிலையான முழு-உணர்வுநிலையும் மனிதனைக்கொண்டே, மனிதனின் வழியாகவே சாதிக்கப்பட இருக்கிறது! இதுவே பிரபஞ்சப் பரிணாம வழிமுறையின் அடியோட்டமான திட்டம் ஆகும். இவ்வகையில், மானிட-மைய விதி மட்டுமல்ல, டார்வினின் 'இயற்கைத்தேர்வுக்கு' மாற்றாகக் கொள்ளப்பட வேண்டிய "இலக்கு நிலைத் தேர்வு" (Teleological Selection) முறையும் பொருத்தமானதே ஆகும்.

மானிட-மைய விதியின் வலுவான பதிப்போ(SAP), வலுவற்ற பதிப்போ(WAP), இன்னும் அதன் பல்வேறுபட்ட பதிப்புக்களின் அடிப்படை அம்சம் என்னவென்றால், அவை பிரபஞ்சத்தில் மனிதனின் மையத்துவத்தையும், அவனது முக்கியத்துவத்தையும் சுட்டுகிறது என்பதொன்றே ஆகும்!  ஆனால், சிலர், "மானிட இருப்பு என்பது விளக்கம் அளிக்கப்படவேண்டிய பலவகைப்பட்ட அம்சங்களின். பொருட்களின், பண்புகளின் இருப்பைப்போன்ற ஒன்றுதான்!" என்கிறார்கள்.

ஆனால், மானிட இருப்பு என்பது பிற பலவகைப்பட்ட அம்சங்களின், பொருட்களின், பண்புகளின் இருப்பைப்போன்றதல்ல. மேலும், மானிட இருப்பு என்பது எத்தகையது என்பதைக் கொண்டே மானிடனின் முக்கியத்துவம் கணிக்கப்படவேண்டும்; ஆக, மானிட இருப்பானது பலவகைப்பட்ட அம்சங்களில் அதுவும் ஒன்று என்பதாக இருக்கமுடியாது! ஏனெனில், இருப்பு (Existence) என்பது ஒருபடித்தானதல்ல. இருப்பு என்பதை இருக்கின்ற பொருட்களின், பண்புகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்திக் காண முடியும். இருப்பதெல்லாம் இருப்புதான் என பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது! அனைத்துப் பொருட்களையும், அம்சங்களையும் அவற்றின் பண்புகளுக்கு ஏற்ப கிட்டத்தட்ட மூன்று  வகையினங்களில் அடக்கிவிடலாம். ஒன்று, சட-இருப்பு  (Inorganic Existence); இரண்டாவது, உயிர்-இருப்பு (Organic Existence); மூன்றாவது, உணர்வு-இருப்பு (Psychic Existence). இம்மூன்று வகைகளும் வெறும் இருப்பு நிலைகள் மட்டும் அல்ல; மாறாக, இவை பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளும், வெவ்வேறு தளங்களும் ஆகும். ஒன்றிலிருந்து மற்றொன்று பண்பிலும், தரத்திலும் உயர்வானது, மேலானது.

ஒரு கட்டம்வரை இம்மூன்று இருப்புநிலைகளும், தளங்களும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவையே எனக்காண இடமுண்டு என்றாலும், ஒவ்வொரு உயர்-வளர்ச்சி நிலைக்குள்ளும் அதற்கு முந்தைய நிலைகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும். அதாவது உள்ளடக்கப்பட்டதாகவும்; முந்தைய நிலைகளை அடுத்தடுத்த உயர்-நிலைகள் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அமைந்ததாகும். இதன் அர்த்தம் பரிணாமத் தொடரில் இறுதியாக எட்டப்படும் நிலையில் முந்தைய நிலைகள் யாவும் உள்ளடக்கப்பட்டு பிரபஞ்சத்தின் ஒருமையும் முழுமையும் அந்த ஒற்றை இறுதி நிலையில், அந்த ஒற்றைப் புள்ளியில் எட்டப்படும்! எந்தப் புள்ளியிலிருந்து இப்பிரபஞ்சம் வெடித்துத் தோன்றியதோ அந்தப்புள்ளி!

அப்புள்ளியைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் வெறும் குறியீடு (Symbol) மாத்திரமே! பிரபஞ்சத்தின் சாரமான (விதை போன்ற) அந்தப்புள்ளியில், நாம் காணும் பிரபஞ்சம் இடம்பெறாது! இப்புரிதலிலிருந்து காணும்போது, இறுதியில் அப்புள்ளி மட்டுமே முக்கியமானது; அப்புள்ளியை நோக்கிய நிகழ்வுமுறையே பிரபஞ்சம் என்பது. நாம் அந்த வழிமுறையின் உணர்வுப் பூர்வமான பிரதிநிதிகள் ஆவோம்.

முதலிடத்தில் நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்? அதற்கான அடிப்படை அவசியம் என்ன?  நாம் இருக்கிறோம்! ஆகவேதான் பிரபஞ்சத்தைப்பற்றி நாம் ஆராய்ந்து அறிந்திட விழைகிறோம்! நாம் இல்லாத நிலையில் பிரபஞ்சத்தைப்பற்றி நமக்குக் கவலையில்லை! அதேவேளையில், நாம் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. இரண்டையும் வேறுவேறாகப் பார்ப்பது என்பது, ஒரே நிகழ்வுமுறையின் வெவ்வேறு கட்டங்களை, வளர்ச்சி நிலைகளைத் தனித்தனியே காண்பதன் வழியாக மட்டுமே எழுகிறது.

பரிணாமம் என்றால் என்ன, பரிணாமத்தில் பரிணமிப்பது எது என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாதவரை, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில், உயிர்-ஜீவிகளைப் பற்றியும், இன்னும் அறிவுக்கூர்மையுள்ள ஜீவிகளான நம்மைப்பற்றியும், இன்னும் எதைப்பற்றியுமே நாம் உருப்படியாகப் புரிந்துகொள்ள இயலாது! பிரபஞ்சம் என்பது ஒரு பொதுவான சொல் ஆகும். பிரபஞ்சம் என்றாலே உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள், கிரகங்கள்; இன்னும் பலவகைப்பட்ட பருப்பொருளாலான பொருட்கள், மற்றும் நிகழ்வுகள்தான் என்பதாகப் பார்க்கும் பார்வை பழமையானதாகும். இப்பார்வை, பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரமாகவும், பருப்பொருளின் பிரும்மாண்டமான அமைப்பாகவும் காண்கிற மட்டுப்பாட்டினால் விளைந்ததாகும்! இவ்வாறு காண்பதற்கான ஒரு பக்கத்தையும், தேவையையும் பிரபஞ்சம் கொண்டிருக்கிறது என்ற போதிலும், பிரபஞ்சம் என்பது பிரதானமாக ஒரு பரிணாம இயக்கமே, நிகழ்வுமுறையே ஆகும்.  

பிரபஞ்சத்தைப்பற்றி ஆராயும் விஞ்ஞானிகள், வெளி-காலம் (Space-Time), முப்பரிமாணம், நாற்பரிமாணம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், புறத்தே  வியாபித்திருக்கும்
பிரபஞ்சத்தின் வெளி-காலமானது, உணர்வுள்ள மனிதஜீவிகள் தோன்றியபிறகு, உணர்வார்ந்த மனிதனின் உணர்வில் (Consciousness) குவிந்து, மேன்மேலும் குறுகி, வெளியும், காலமும் அற்ற தனி நிலைப்பாடு (Singularity) எனும் புள்ளியில் அடர்ந்து ஐக்கியமாகிவிடுகிறது! இதை நாம் பிரபஞ்சத்தின் செறிவடைவுக் கட்டம் (Conflationary Stage) என்றழைக்கலாம்.

இறுதி மானிட-மைய விதி

மானிட-மைய விதியின் மற்றுமொரு பதிப்பு,  இறுதி மானிட-மைய விதி (Final Anthropic Principle) என வழங்கப்படுகிறது. பேர்ரோ & டிப்லர் (Barrow & Tipler) அவர்கள் முன்வைத்த மிகவும் அதீதமான இவ்விதியானது, அறிவுள்ள உயிர்கள்  பிரபஞ்சத்தின் மிக அவசியமான ஒரு பண்புக்கூறு என்கிறது. மேலும் ஒருமுறை அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் பிறகு ஒருபோதும் இற்றழியாது என்கிறது. மேலும், மானிட-மைய விதியின் இப்பதிப்பானது, பிரபஞ்சத்தின் ஒரே குறிக்கோள் அறிவுள்ள உயிர்களை உருவாக்குவதும், அவற்றைப் பேணிக்காப்பதும் தான் எனச் சொல்லாமல் சொல்கிறது.

"அறிவுள்ள உயிர்கள் எதிர்காலத்தில் ஒரு நாள் அண்டவெளி முழுவதும் பரவிச் சென்று பிரபஞ்சத்தையே மாற்றியமைத்திடும்; அவ்வழியே, மானிடகுல மதிப்புகளை மிகத்தொலைவான எதிர்காலத்திற்கு ........ஓமேகா புள்ளி (Omega Point) எனப்படும் இறுதி ஒருமை நிலைக்குக் கடத்திச்செல்லும்.... .......அந்நிலையில், அறிவுள்ள உயிர்கள் அனைத்து பருப்பொருளையும், ஆற்றல்களையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்திடும்..." என்றெல்லாம் 'இறுதி மானிட-மைய விதி' விரிகிறது.

ஆனால், நாம் 'பிரபஞ்சம்' எனும் ஒரு பிரும்மாண்டமான மரத்தின் பகுதியாக - துல்லியமாகச் சொன்னால், அம்மரத்தின் பிஞ்சுகளாகவும், காய்களாகவும் - இருந்துகொண்டு, அம்மரத்தின் மூலத்தை அறியும் நோக்கில் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நம்மில் சிலர், அம்மரத்தின் வேர்களைத் தேடிச்சென்று, வேர்களிலிருந்துதான் அம்மரம் தோன்றியது என்கிறோம்! இன்னும் சிலர், இல்லை, இல்லை, 'கடவுள்'தான் அம்மரத்தைத் தோற்றுவித்தவர் என்கிறோம்! ஆனால், இந்த இரண்டு பார்வைகளும் தவறானவை; மாறாக, அம்மரமானது ஒரு வித்திலிருந்துதான் தோன்றியது; அந்த வித்தை - பிஞ்சுகளாகவும், காய்களாகவும் விளங்கும் நாம் ஒவ்வொருவரும் முற்றிக் கனியாவதன் வழியாக, நம்முள்ளேதான் கண்டடைய முடியும் என்கிறோம்! இந்த உவமையில் இடம்பெறும் பிஞ்சு, காய், கனி, வித்து என்பவை உணர்வின் வளர்-முகமான உயர் நிலைகளைக் குறிக்கின்றன!

ஒருவகையில், இந்த ‘இறுதி மானிட-மைய விதி’ யானது மானிடர்களின் மையத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகிறது என்றாலும், அதன் கூற்றுக்கள் அதீதக் கற்பனை சார்ந்ததாக உள்ளன. மேலும், அவை பெரிதும், பிரபஞ்சத்தின் பொருண்மையான பண்புகளையும், பௌதிக விதிகளையும் அடிப்படையாகக் கொண்டமைந்தவையாக உள்ளதாலேயே மிகவும் தவறான கருதுகோள்களுக்கும், கற்பனையான முடிவுகளுக்கும் இட்டுச்சென்றுள்ளன. குறிப்பாக, ஒருமுறை தோன்றிய அறிவுள்ள உயிர்கள், அதாவது அவற்றின் சந்ததிகள் பிறகு எல்லாக் காலத்திற்கும், பிரபஞ்சம் முடியும் வரையிலும் நீடித்து நிலைத்திருக்கும் எனப்படுகிறது! இத்தகைய கூற்று, அறிவுள்ள உயிர்களின், குறிப்பாக மனிதஜீவிகளின் தனித்துவமிக்க தன்மையை அறியாததன் விளைவாகவும்; முக்கியமாக, பரிணாமம் பற்றிய ஆழமான புரிதலின்மையின் விளைவாகவும் எழுந்த கற்பனைக் கோளாறு ஆகும். ஒரு தனிமனிதனை எடுத்துக் கொண்டால், அவன் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள், அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே இப்பூமியில் உயிர்வாழ்பவனாக இருக்கிறான்; ஆயினும், அவன் அக்குறுகிய வாழ்காலத்திற்குள்ளாகவே தனது பரிணாம முழுமையை அடைவதற்கான உட்பொதிவை, உள்ளுறையாற்றலைக் கொண்டவனாகத் திகழ்கிறான்!

பிரபஞ்சம் என்பது அடிப்படையில் ஒரு பரிணாம இயக்கம் என்று நாம் குறிப்பிட்டுள்ளோம். அதில் மனிதன் என்பவன் அப்பரிணாம வழிமுறையின் உணர்வுப்பூர்வ பிரதிநிதியாவான்! துல்லியமாகச் சொன்னால், மனிதனின் வழியாக, இன்னும் ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகத்தான் பிரபஞ்சமானது  தனது ஒப்பற்ற பரிணாம முழுமையை எட்டுகிறது. அதாவது, பருப்பொருளாலான பிரபஞ்சத்தின் இறுதி முடிவு, எவ்வாறு அமையும் - ஒரு மாபெரும் உள்ளடர்தலில் (Big Crunch) முடிவடையுமா, அல்லது முற்றிலும் தனது வெப்ப ஆற்றலை இழந்து வெப்பச்சாவில் (Heat Death) முடிவடையுமா என்பது போன்ற அனுமானங்கள் தேவையற்றவையாகும்! ஏனெனில், இத்தகைய அனுமானங்கள் பருப்பொருளின் அடர்த்தி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுபவையாகும். அதாவது, பிரபஞ்சத்தை முழுக்க முழுக்க பருப்பொருளின் பண்புகள் மற்றும் பௌதிக விதிகளுக்குச் சுருக்கிக் காணும் மாபெரும் மட்டுப்பாட்டின் மயக்கத்திலிருந்து இன்னமும் விஞ்ஞானம் விடுதலையாகவில்லை!

பருப்பொருள் என்பது பிரபஞ்சத்தின் ஒரேயொரு பண்பு மட்டும்தானே தவிர அதுவே ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அல்ல! இன்னும் சொல்லப்போனால், பருப்பொருளை ஒரு பண்பாகவே கணக்கில் கொள்ள இயலாது. சரியாகச் சொன்னால், அது வெறும் ஒரு கட்டுமானப் பொருள் மாத்திரமே; அதைக்கொண்டு அமையும் கட்டுமானங்களின் மூலம் வெளிப்படக் கூடியவற்றையே (Emergent properties) -உயிர், உணர்வு (Consciousness) ஆகியவற்றையே-  முறையான பண்புகளாகக் கொள்ளவேண்டும். இவ்வழிமுறையின் மூலமாக இறுதியாக எட்டப்படும் ‘வெளிப்படு-பண்பு’ தான் “இறுதி மெய்ம்மை” (Ultimate Reality) ஆகும்! அதுவே “மூல மெய்ம்மை”யும் (Source Reality) ஆகும்!

'பிரபஞ்சம்' என்பது பரிணாம வழிமுறையில் ஏற்கனவே உருப்பெற்றவை அனைத்தையும், இன்னும் உருப்பெறாத அம்சங்களையும், பண்புகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தத்தையும் குறிக்கும் பொதுவான ஒரு ஒற்றைச் சொல் ஆகும். பிரபஞ்சம் என்பது பல்வேறுவகைப்பட்ட அண்டவெளிப் பொருட்களும், நிகழ்வுகளும் மட்டுமே அல்ல. மாறாக, அத்தனை அண்ட வெளிப்பொருட்களும், நிகழ்வுகளும் சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் வழிமுறையின் வாயிலாக உருவானவையே என்பதால், அடிப்படையில் பிரபஞ்சம் என்பதை ஒரு பரிணாம இயக்கமாகக் காண்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி, நெடிய இடைப்பட்ட நிலைகளின் வழியாக வளர்ந்து, ஒரு முடிவான இலக்கு அல்லது முழுமை நிலையை அடையும் நிகழ்வுமுறை தான் பிரபஞ்சம் ஆகும்! ஒரு நெடிய சங்கிலித்தொடர் போன்ற நிகழ்வுமுறையில் குறிப்பிட்ட எவ்வொரு கண்ணியை, அல்லது, நிலையை; அல்லது எவ்வொரு பண்பையும், இதுதான் பிரபஞ்சம் என அடையாளப்படுத்திட முடியாது - அந்நிகழ்வுமுறையின் இறுதியான இலக்கு நிலையைத் தவிர! மரமானது அதன் கனியைக்கொண்டே அறியப்படும் என்பதுபோலத்தான் பிரபஞ்சமும். சிலர் காய்க்காத மரங்களும் உள்ளனவே என வாதம் செய்யலாம். ஆனால், காய்க்காத மரங்களைப் பற்றி அதன் காய்கள் எவ்வாறு பேசமுடியும்?  

பிரபஞ்சத்தின் பிறப்பைப்போலவே, அதன் இறப்பும் பூடகமானதாகும்! அவ்வாறானதே மனிதனின் பிறப்பும், இறப்பும்! மனிதன் பிறக்கும்போது தனது உண்மையான (தன்னை உணரக்கூடிய முழுமையான) நிலையில் இருப்பதில்லை! அவ்வாறே மனிதன் இறக்கும்போதும் உணர்வுடன் இரு(ற)ப்பதில்லை! உண்மையான முழு-உணர்வுகொண்ட மனிதன் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு உச்சக்கட்டத்தில்தான் தோன்றுகிறான்; அல்லது பலரது விடயத்தில் அத்தகைய உச்சக்கட்டம் தோன்றுவதேயில்லை! இவ்வாறே, பிரபஞ்சத்தின் உச்சக்கட்டமும் அதனுடைய பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே முறையே தனது உச்சக்கட்டத்தை எட்டுகின்ற ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும்தான் நிகழ்கிறது! ஆக, பிரபஞ்சமானது இறுதியில் எவ்வாறு அழியும், அல்லது முடிவுக்கு வரும் என்பது குறித்த பருப்பொருள்சார்ந்த விஞ்ஞானக் கற்பனைகளில் நேரத்தை விரயமாக்குவது பயனற்றதாகும்!

பிரபஞ்சத்திற்கும், அறிவுள்ள ஜீவிகளுக்கும் (மனிதஜீவிகளுக்கும்) உள்ள தொடர்புகுறித்த விடயத்தில், அறிவுள்ள ஜீவிகள் பரந்த இப்பிரபஞ்சத்தின் மீது எவ்விதமான தாக்கத்தையும் செலுத்துவதான தடயம் எதுவும் இல்லை என விஞ்ஞானிகள்  பேர்ரோ & டிப்ளர் இருவரும் தங்கள் நூலில் போகிறபோக்கில் ஒரு கருத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். ஆனால், இக்கூற்று மேலோட்டமான  ஒன்றாகும். ஒரு மரத்தில் விளையும் ஒவ்வொரு கனியும் மறைமுகமாக பெரும் தாக்கத்தை அம்மரத்திற்குச் செய்கின்றது; அதாவது ஒவ்வொரு கனியும் அம்மரத்தின் முழுமையைச் சாத்தியமாக்குகின்றது! அவ்வாறே, பிரபஞ்சத்தின் மீதான அறிவுள்ள ஜீவிகளாகிய மனிதர்களின் தாக்கமும் மறைமுகமானதாகும்! மனிதஜீவிகள் தங்கள் தாக்கத்தை நேரடியாக பருண்மையாக பரந்த பிரபஞ்சத்தின் மீது செய்யத்தேவையில்லை. ஏற்கனவே இங்கு பூமிக்கிரகத்தின்மீது விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பங்களின் துணைகொண்டு நாம் செலுத்தியுள்ள பெரும்தாக்கங்கள் நமக்கும் பிறஜீவிகளுக்கும் மிகக்கேடான சுற்றுச்சூழல்சார்ந்த விளைவுகளை உருவாக்கியுள்ளன. கிட்டத்தட்ட நாமும், பிற உயிர்ஜீவிகளும் இற்றழியும் நிலைக்கு நாம் காரணமாகியுள்ளோம்!  இந்நிலையில் நாம் பிற கேலக்ஸிகளையும் காலனியாக்குவது என்பதும் பிரபஞ்சம் முழுவதும் பரவி பருப்பொருளையும் பிற இயற்கை ஆற்றல்களையும் நம்முடைய முழுக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவது என்பதும் கற்பனைக் கோளாறாகும்! இது அறிவுள்ள ஜீவிகளுக்கு அழகல்ல!

ஆக, மேற்காணும் விளக்கங்களின்படி, ‘இறுதி மானிட-மைய விதி’யின் பிரதான கருதுகோளான 'அறிவுள்ள தகவல்-முறைப்படுத்தும் (Intelligent information-processing) ஜீவிகள் பிரபஞ்சத்தில் தோன்றுவது கட்டாயம்; அவ்வாறு அவை ஒருமுறை தோன்றிடும் பட்சத்தில், அவை ஒருபோதும் மரிப்பதில்லை' என்பது மிகவும் அதீதமானதொரு நிலையாகும்; ஆகவே, அதற்கு அவசியமில்லை என்றாகிறது. ஏனெனில், முடிவேயில்லாமல், தகவல்-முறைப்படுத்துதல் என்பது தேவையற்றதாகும். அதாவது, தகவல்-முறைப்படுத்துதலுக்காக தகவல்- முறைப் படுத்துதல் (Information-processing for the sake of itself) என்பது அபத்தமானதாகும். தகவல்-முறைப்படுத்துதலின் நோக்கம் அறிவைப் பெறுவதற்காகத்தான். எதைப்பற்றிய அறிவு என்றால், இறுதி மெய்ம்மை பற்றிய அறிவுதான் - பிரபஞ்சம், மனிதன், வாழ்க்கை என ஒட்டுமொத்தத்தின் அர்த்தம், குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை அறிவதுதான்! அதற்காக ஒருவன் அனந்த காலம் வாழ்ந்துகொண்டிருப்பது என்பது சாபக்கேடான நிலையாகும்! ஆம், இறுதி மெய்ம்மையை, அர்த்தத்தை ஒவ்வொருவனும் தன் வாழ்-காலத்திற்குள்ளாகவே உணர்ந்தறிந்து தன் பரிணாம முழுமையை அடைந்திட முடியும்!  
துல்லிய-மதிப்பமைவு (Fine-Tuning)

மானிட-மைய விதி மனிதனை பிரபஞ்சப் (பரிணாம)  இயக்கத்தின் பிரதான இலக்காகக் காண்கின்றது என்றால், மனிதஜீவியை உருவாக்கிடும் வகையில், பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளும் (Initial conditions), சில மாறாத பொருளியல் மதிப்புகளும் (Physical Constants) துல்லியமாக அமைக்கப்பட்டதாக "துல்லிய-மதிப்பமைவுக் கோட்பாடு" (Fine-Tuning) சொல்கிறது! இவ்விரு கோட்பாடுகளின் ஊடாக, இறையிலாளர்கள் கடவுளை உள்ளே கொண்டு வந்துவிடுகின்றனர்; அதாவது, கடவுள்தான் இப்பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் துல்லியமாக அமைத்தவர் என்கின்றனர்! ஆகவே, நாத்திகர்களும், பொருள்முதல்வாதிகள், இயற்கைவாதிகள், மற்றும் சில விஞ்ஞானிகளும் இவ்விரு கோட்பாடுகளையும் எதிர்த்து வருகின்றனர். இவர்களின் கேள்வி என்னவென்றால், கடவுள் ஏன் பெருவெடிப்பை உருவாக்கவேண்டும், பிறகு மனிதனின் வரவுக்காக பல நூறு கோடியாண்டுகள் காத்திருக்கவேண்டும்?" என்கின்றனர். மேலும், பிரபஞ்சமானது நமக்காக துல்லியமாக மதிப்பமைவு செய்யப்படவில்லை, நாம்தான் அதற்கேற்றவாறு தகவமைந்து இருக்கிறோம் என்று விக்டர் ஸ்டெஞ்செர் (Victor Stenger) போன்ற விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

ஆனால், இந்த தர்க்கம் பிரபஞ்சம் பற்றிய மிகவும் மேலோட்டமான, ஆகவே தவறான புரிதலின் வெளிப்பாடே ஆகும்!  மானிட-மைய விதி பற்றிய விவாதத்தில், மனிதன் உருவாகும்வகையில் பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் துல்லியமாக அமையச்செய்தது யார் அல்லது எது ; அதாவது கடவுளா, அல்லது இயற்கையா என்பது இப்போதைக்கு முக்கியமல்ல! ஏனெனில், தெளிவான நோக்கத்துடன் முன்-யோசித்து, திட்டமிட்டு,  கடவுள், அல்லது வேறு சக்தியினால் மதிப்பமைவு செய்யப்பட்டதோ, அல்லது, விபத்துபூர்வமாக எல்லா நிலைமைகளும், மதிப்புகளும் கூடி அமைந்ததோ; உயிர்-ஜீவிகளும், உணர்வுள்ள மானிடஜீவிகளும் உருவாகும் வகையில் பிரபஞ்சமானது துல்லிய மதிப்பமைவு (fine-tuning) செய்யப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்!  

துல்லியமாக மதிப்பமைவு பெற்ற சில காரணிகள் என இதுவரை அறியப்பட்ட நான்கு அடிப்படை விசைகளைக் கூறலாம். அவற்றில் ஒன்றான வலுவான அணுக்கருவியல் விசையானது (Strong nuclear force) கொஞ்சம் அதிக ஆற்றல் கொண்டதாயிருந்தால், உயிர்த் தோன்றுவதற்கு மிகவும் இன்றியமையாத ‘ஹைட்ரஜன்’ தோன்றியிருக்காது போயிருக்கும். அது கொஞ்சம் வலுக்குறைவாக இருந்திருந்தால், ஹைட்ரஜன் மட்டுமே பிரபஞ்சத்தின் ஒரே தனிமமாக அமைந்திருக்கும்.

நான்கு அடிப்படைவிசைகளுள் இன்னொன்றான வலுக்குறைவான அணுக்கருவியல் விசையானது (Weak nuclear force), அதன் மதிப்பில் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும், நட்சத்திரங்களில் கனமான தனிமங்களை உருவாக்குவதற்குத் தேவையான "ஹீலியம்" எனும் தனிமம் போதுமான அளவிற்கு அமைந்திருக்காது போயிருக்கும். அல்லது, நட்சத்திரங்கள் வெகு சீக்கிரமாக எரிந்து தீர்ந்துவிடும்; அதனால், கனமான தனிமங்களை அண்டவெளியெங்கும் பரவச்செய்யும் சூப்பர் நோவா' (Supernova)  என்று குறிப்பிடப்படும் "நட்சத்திர வெடிப்பு" நிகழ்வுகள் நிகழாமல் போயிருக்கும். அதாவது, உயிர் தோன்றுவதற்கு மிகவும் அடிப்படையான கனமான தனிமங்கள் ஆற்றல் உலைகளான நட்சத்திரங்களின் மையங்களில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நான்கு அடிப்படை விசைகள் என அறியப்பட்டவைகளுள் ஒன்றான, மின்காந்த விசையானது
(Electromagnetic force), அறியப்பட்ட அதன் மதிப்பைவிட சிறிது வலுவாகவோ, அல்லது  சிறிது வலுக்குறைந்தோ இருக்குமானால், அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளும், சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகியிருக்காது.

அதேபோல், நான்கு அடிப்படை விசைகளில் மற்றொன்றான ஈர்ப்பு விசை (Gravity) யானது , அதன் மதிப்பில் கொஞ்சம் பெரிதாயிருந்தால்கூட,  அதன் ஒரு விளைவு என்னவாக இருக்கும் என்றால், நட்சத்திரங்கள் மிகு கொதிப்பாகவும், விரைவாக தன் எரிபொருளை எரித்துத் தீர்த்துவிடுவதாயும் அமைந்திருக்கும். ஈர்ப்பு விசையானது கொஞ்சம் சிறிதாயிருந்தால்கூட, நட்சத்திரங்கள் ஆற்றலை உமிழும்வகையில் எரியாமல் போயிருக்கும்; அதனால் கனமான- தனிமங்கள் உருவாக முடியாது. இவ்வாறு உயிர் தோன்றுவதற்கு இயைபாக அமைந்தவையாக, 25 -க்கும் மேற்பட்ட காரணிகள் துல்லியமாக மதிப்பமைவு பெற்று அமைந்துள்ளதாக  இனம் கண்டறியப்பட்டுள்ளன. …..

தொடர்ந்து பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பின் தன்மை குறித்துக் காண்பதற்கு முன், முதலிடத்தில், பிரபஞ்சம் என்று எதை நாம் குறிப்பிடுகிறோம் என்பதைத் தெளிவாக வரையறுப்பது மிகவும் முக்கியமாகும். விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, உடுமண்டலங்கள் (Galaxies), நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகிய அண்டவெளிப் பொருட்கள் மற்றும் கருந்துளைகள் (Black holes), ‘சூப்பர் நோவா’ (Super nova) போன்ற வினோத நிகழ்வுகளையும்; காலம், வெளி, நிறை, அணுத்துகள்கள்; ஈர்ப்பு (Gravity), மின்காந்த விசை ஆகிய விசைகளையும் உள்ளடக்கிய, பரந்துவிரியும் பிரும்மாண்டமான  பருப்பொருள் தொகுதியைத்தான் பிரபஞ்சம் எனக் காண்கின்றனர். ஆனால், இவ்வாறு அவர்கள் காண்பது மூன்றில் ஒரு பகுதி பிரபஞ்சத்தை மட்டுமே ஆகும்! அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளத்தையே அவர்கள் ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் என்பதாகக் கண்டு மயங்கித் தடுமாறிக் கொண்டுள்ளனர்.

ஆனால், பருப்பொருளின் தளத்தையடுத்து பருப்பொருள் தன்மையை மீறிய பரிணாம வளர்ச்சி நிலையாகத் திகழும் உயிர்ஜீவிகளின் தொகுதியும் இப்பிரபஞ்சத்தின் சட்ட முறைப் படியான (Legitimate Part) பகுதிதான். இதை நாம் பிரபஞ்சத்தின் இடைத்தளம் அல்லது உயிரியல் தளம் என்றழைக்கலாம்; அல்லது இரண்டாம் பிரபஞ்சம் எனவும் இதை அழைக்கலாம். இந்த தளத்தையடுத்து, பிரபஞ்சத்திற்கு அடுத்த மூன்றாவது ஒரு தளமும் உள்ளது. அதுதான் சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் திறன்பெற்ற மானிட ஜீவிகளின் தொகுதியாகும். இத்தளத்தை நாம் உணர்வியல் தளம் அல்லது மூன்றாம் பிரபஞ்சம் என்றும் அழைக்கலாம்.

இப்போது நாம் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பின் தன்மை குறித்துக் காண்போம். வலுவற்ற மானிடமைய விதியின் உட்கோள் என்னசொல்கிறது என்றால், மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறான் என்கிறது. அதாவது,  பிரபஞ்சத்தையும், மனிதனையும் தனித்தனி அம்சங்களாகப் பார்க்கும்போது தவறான புரிதலுக்கு அது இட்டுச் செல்வதாய் அமைந்திடும். ஒருவகையில், அதாவது, பிரபஞ்சத்தின் பருப்பொருளாலான அடித்தளத்திlல் இருந்துதான் உயிரியல்தளம் எழமுடியும்; இவ்வகையில், உயிரியல்தளம் பருப்பொருள் தளத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்வது நியாயமானதே. அடுத்து, உணர்வுள்ள மனிதஜீவிகளைக்கொண்ட உணர்வியல்தளமானது அதற்கு முந்தைய இடைத்தளமான உயிரியல் தளத்தையும், அடித்தளமான பருப்பொருள் தளத்தையும் சாந்திருக்கிறது என்பதும் சரியானதே. அதே நேரத்தில், ஒரே பரிணாம வழிமுறையின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களான இம்மூன்று தளங்களையும் பண்பினடிப்படையில் நாம் வேறுவேறாக பிறித்தறிவது தவிர்க்கமுடியாதது என்றாலும், பரஸ்பரம் ஒன்றுக்கெதிராக மற்றொன்றை நிறுத்துவது முறையாகாது.

மேலும், வலுவான மானிடமைய விதியின் உட்கோளானது, பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறது என்கிறது. இப்பார்வையிலும் தவறில்லை! பரிணாம வழிமுறையானது படிப்படியாக அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளை எட்டும்வகையில் முன்னேறிச் சென்று அதன் ஒப்பற்ற இலக்கு நிலையை அடைந்தாகவேண்டும் என்றவகையில் பிரபஞ்சம் எனும் பரிணாம இயக்கமானது அடுத்தடுத்த உயர்-வளர்ச்சி நிலைகளை சார்ந்திருக்கிறது என்று சொல்வது பொருத்தமானதே! ஆக இவ்விரு உட்கோள்களின்படி, பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ளது இருவழிப் பிணைப்பு என்பது உறுதியாகிறது.  ஆக, பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறதா? அல்லது மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறானா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை, இறுதியாக, பிரபஞ்சமும் நாமும் இணைந்து பரிணாம நிகழ்வுமுறையின் முடிவான இலக்கு நிலையைச் சார்ந்திருக்கிறோம் என்பதுதான் அறுதி உண்மையாகும்!  

முடிவாக, நாம் வாழும் இந்த பூமிக்கிரகம் பரந்த விண்வெளியில் (Spatially) பிரபஞ்சத்தின் மையத்தில் இருக்கிறதோ, இல்லையோ; மனிதஜீவிகளாகிய நாம் இப்பிரபஞ்சத்திற்கு முக்கியமானவர்களோ, இல்லையோ; பூமியில் உயிர் தோன்றியது விபத்தோ, அல்லது திட்டமிடப்பட்ட உருவாக்கமோ; உயிரியல் பரிணாமத்தின் உச்சக்கட்டமாக சுய-உணர்வு கொண்ட, சிந்திக்கும் திறன்பெற்ற மானிட இனம் தோன்றியது என்பதும் விபத்து பூர்வமானதோ, இல்லையோ; நாம் இங்கு இருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத நிஜமாகும்! அந்த நிஜத்தின் உணர்த்துகோள்களை (Implications) நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும். ஆக, மானிட-மைய விதியானது, மனிதனையும், பிரபஞ்சத்தையும், அதன் பௌதிக விதிகளையும்; அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் மறுபரிசீலனை செய்யுமாறும்; அவ்வழியே பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவை உணர்வுப்பூர்வமாகப் புதுப்பித்துக்கொண்டு, பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் பொதுவான பரிணாம இலக்கை அடையும்வகையில் முன்னேறிச்செல்ல அழைப்பு விடுக்கிறது!



மானிட-மைய விதி தொடர்பான சில கேள்விகளும் பதில்களும் :
1. மானிட-மைய விதி மற்றும் துல்லிய-மதிப்பமைவு (Fine-Tuning) கோட்பாட்டின் மீது தொற்றிக்கொண்டு கடவுளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாகச் சொல்வது சரியா?

ஒருவகையில் சரிதான்; ஆனால், கடவுள் என்பது எத்தகைய மெய்ம்மை என்பதை அவர்கள் (இறையியல்வாதிகள்) விளக்கியாக வேண்டும்! மேலும், பிரபஞ்சத்தின் மூலகாரணமாக அமைந்த கடவுளைவிட பிரபஞ்சத்தின் முடிவான (பரிணாம) விளைவாக எழும் கடவுள்தான் முக்கியம்! ஏனெனில், கடவுளை நாம் பரிணாமத்தின் முழுமையில் மட்டுமே கண்டறிய முடியும்!

2. பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டதா?

இது சற்று சிக்கலான கேள்வியாகும்! பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்படவில்லை என்றால், வேறு எதற்காகப் படைக்கப்பட்டது? மனிதன் இல்லாத பிரபஞ்சத்தைப்பற்றி யார் அல்லது எது ஆராயவும், அறியவும் கூடும்? உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள், கிரகங்கள்… போன்ற இவை மட்டும்தான் பிரபஞ்சமா? கல், மண், புல், பூண்டு, மரம், புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள், மனித ஜீவிகள்… இவையெல்லாம் பிரபஞ்சம் இல்லையா? ஒருவகையில், மனிதனைப்போல் வேறெதுவும் இப்பிரபஞ்சத்தில் இல்லை என்பதால், மனிதனுக்குத் தனிச்சிறப்பான ஒரு இடம் உள்ளது எனலாம்! அதே நேரத்தில், அவனுக்கு தனித்துவமான பெரும் பொறுப்பும், பரிணாமப் பணியும் உள்ளன! உண்மையில், இப்பிரபஞ்சம் தனக்காக இல்லை; மனிதனும் தனக்காக இல்லை! பிரபஞ்சம் என்பது பல கண்ணிகளைக்கொண்ட ஒரு நெடிய சங்கிலி போன்றதாகும்; அதில் ஒவ்வொரு கண்ணியும் வித்தியாசமானதாகும்; அவற்றுள் மனிதனும் ஒரு கண்ணி ஆவான், ஆனால், மிகவும் முக்கியமான ஒரு கண்ணியாவான். அது அவனது விசேடமான பரிணாமப் பாத்திரத்தினால் (Evolutionary Role) அமைந்ததாகும்.

பிரபஞ்சம் என்பது காலம்,வெளி, பருப்பொருளாலான ஒரு ஊடகம் (Medium) ஆகும். பருப்பொருள் என்பது சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையிலமைந்த பரிணாமத்தின் கட்டுமானப்பொருள் ஆகும். பிரபஞ்சம் என்பது ஒரு பிரும்மாண்டமான அமைப்பு மட்டுமல்ல. அது ஒப்பற்றதொரு இலக்கை நோக்கிச் செல்லும் மாபெரும் இயக்கமும் ஆகும். ……  
பிரபஞ்சம் என்பது ஒரு நெடிய நிகழ்வுமுறையானால், அதை அடிப்படை அணுத்துகள்களுடன் இவ்வளவுதான் பிரபஞ்சம் என்று நிறுத்திக்கொள்ளமுடியாது! அல்லது,உடுமண்டலங்களுடனோ, நட்சத்திரங்களுடனோ, கிரகங்களுடனோ, அல்லது முதல் உயிரியுடனோ, அல்லது டார்வினின் வானரத்துடனோ, அல்லது, அந்த வானரத்தின் வழித்தோன்றிய மனிதனுடனோ, ‘இவ்வளவு தான் பிரபஞ்சம்’ என்று முடித்துக்கொள்ள முடியுமா? பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில், மனிதன் எதற்காகப்படைக்கப்பட்டிருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்காமல் சாத்தியமில்லை! அதாவது, மனிதனின் வழியாக, மனிதனைக்கடந்த இறுதிப் பரிணாம இலக்கு ஒன்று இருப்பதால்; மேலும், அந்த இலக்கானது உணர்வார்ந்த ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும் அடையப்பட இருப்பதால், இப்பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது என்று கொள்வதிலும் தவறில்லை!

மேலும், மானிட-மைய விதியானது, ஒரு மனிதனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பொருந்துவதுபோல், மனித இனத்தை ஒத்த, உணர்வில் வளர்ந்த அனைத்து இனங்களுக்கும், வேற்றுக்கிரக ஜீவிகளுக்கும்  பொருந்தும்!


3.பிரபஞ்சம் ஒன்றா, பலவா?

பௌதிகவியல் விஞ்ஞானி விக்டர் ஸ்டெஞ்செர் (Victor Stenger) அவர்களின் வாதத்தின்படி, நவீன பிரபஞ்சவியல் கோட்பாடுகள் கூறுவதுபோல வெவ்வேறு மாறா-மதிப்புகளையும், பௌதிகவிதிகளையும் கொண்ட பல பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும். ஆக, அதில் நமக்குப் பொருத்தமான ஒரு பிரபஞ்சத்தில் நாம் தோன்றியிருக்கிறோம் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளுக்காக துல்லிய- மதிப்பமைவு செய்யப்பட வில்லை; மாறாக, உயிர்ஜீவிகள்தான் பிரபஞ்சத்திற்கேற்ப தகவமைவமைந்துள்ளன என்கிறார். நமது பிரபஞ்சம் உயிர்ஜீவிகளுக்கு இயைபாக இருக்கிறது என்பதற்கு நிரூபணம் தேவையா என்ன? அதற்காக நாம் வெவ்வேறு மாறா-மதிப்புகளும், வேறுபட்ட பௌதிக விதிகளையும் கொண்ட எண்ணற்ற பல பிரபஞ்சங்களைக் கற்பனையில் உருவாக்கி அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமா? அவ்வாறு பல பிரபஞ்சங்கள் இருப்பதற்கான யாதொரு சான்றும், தடயமும் இல்லை; அப்படியே இருந்தாலும் அவற்றை கண்டுகவனிப்பதற்கான வழியும் இல்லை.

ஒருவகையில், பல்வேறு தொடக்க நிலைமைகளையும், மாறா-மதிப்புக்களையும் கொண்ட எண்ணற்ற பல பிரபஞ்சங்கள் நிஜத்தில் இருக்கமுடியாது என்பதற்கு, இத்தகைய பல்வேறு பிரபஞ்சங்களின் சாத்தியப்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து பொருத்தமான ஒரு பிரபஞ்சமாக, நாம் வாழ்கின்ற இப்பிரபஞ்சமானது தொடக்கத்திலேயே தெரிவு செய்யப்பட்டு விட்டதே காரணம் எனலாம்!

சொல்லப்போனால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இப்பிரபஞ்சத்தையே ஒரு எல்லைக்கு மேல் நம்மால் காணவும், ஆராயவும் வழியில்லை. மேலும், நம் பிரபஞ்சத்தை முழுமையாக கண்டுகவனிக்கும் சாத்தியம் ஒருபோதும் ஏற்படப்போவதுமில்லை! நாம் வாழ்ந்துவரும் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சம் உயிர்பெற்று, உணர்வும் பெற்றெழுந்தால் எப்படியிருக்கும்? சந்தேகமில்லாமல், அவ்வாறு உயிர்பெற்று, உணர்வும் பெற்றெழுந்த பிரபஞ்சம்தான் மனிதன்! ஒருவகையில் ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறும்-பிரபஞ்சம் (Miniature Universe)  எனவும் கொள்ளலாம். எவ்வாறெனில், இப்பிரபஞ்சத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பிரதான அம்சங்கள் அல்லது பண்புகளான பருப்பொருள் (Matter), உயிர் (Life), உணர்வு (Consciousness) ஆகிய இம்மூன்றும் ஒருங்கே மனிதனுள்ளும் இடம்பெற்றுள்ளன!


4. வேற்று கிரகங்களில் அறிவுள்ள உயிர்ஜீவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், "மானிட-மைய விதி"யின் கதி என்னவாகும்?

ஒன்றும் ஆகாது! வேற்று கிரகங்களில் உயிர்ஜீவிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும்; கண்டுபிடிக்கப்பட்டாலும், கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும், மனிதனின் மையத்துவம் சிறிதும் மாறாது! இன்னும், நமது பூமிக்கிரகத்திலேயே எண்ணற்ற உயிரினங்கள், அதாவது கிட்டதட்ட 87,00,000 உயிரினங்கள் உள்ளன. மனித இனத்திலும் 7,70,00,00,000 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் மானிட-மைய விதி பொதுவானதே என்றாலும், பிரபஞ்சப் பரிணாம இயக்கத்தில் தனது இடம், பங்கு, பாத்திரம், தனது பரிணாம இலக்கு ஆகியவற்றை உணர்ந்த தனிமனிதர்களுக்கு மட்டுமே அவ்விதி முழுமையாகப் பொருந்தும். மனிதனின் மையத்துவமும், முக்கியத்துவமும் விசேடமான அவனது பரிணாமப் பாத்திரத்தினால் அடையப்பட்டதாகும். வேற்றுக்கிரகங்களில் உயிர்ஜீவிகளும், மனிதனை ஒத்த அறிவுள்ள ஜீவிகளும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், எவ்வகையிலும் அது மனிதனின் மையத்துவத்தைக் குறைத்துவிடவோ, விலக்கிவிடவோ செய்யாது! உங்களுக்கு ஒரு அண்டை வீட்டுக்காரர் இருக்கிறார் என்பதால், மானிட-மைய விதி உங்களுக்குப் பொருந்தாமல் போய்விடாது! உயிர்ஜீவிகளும், அறிவார்ந்த ஜீவிகளும் பிரபஞ்சம் முழுவதிலும் அவற்றுக்கு இயைபாக அமைந்த எல்லா இடங்களிலும் இருந்தாலும்; பிரபஞ்சத்திற்கும், அறிவார்ந்த ஜீவிகளுக்கும் இடையிலான ஒரு பொதுவிதி என்னவென்றால், முறையே அந்தந்த ஜீவிகள் பெற்றுள்ள உணர்வின் தன்மை, மற்றும் வீச்சுக்கு ( The Degrees of Consciousness) ஏற்ப அவை தம்மையும் பிரபஞ்சத்தையும் உணர்வுகொள்வதாக, ஆராய்ந்தறிவதாக இருக்கும்!

5. மானிட-மைய விதி என்பது ஒரு விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்ல என்று சொல்லப்படுகிறதே, அவ்விதியின் தற்போதைய நிலை என்ன?

மானிட-மைய விதி என்பது ஒரு விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்ல என்றால், எத்தனையோ  விஞ்ஞானிகள் அதைப் பொய்ப்பிக்க முயற்சித்தும் இதுவரை யாதொரு தெளிவான முடிவையும்  எட்ட இயலாதிருப்பதன் அர்த்தம் என்ன? மாபெரும் விஞ்ஞானிகள் எனப் போற்றப்படும் ஜான் எ.வீலர்( John A. Wheeler), ஸ்டீஃபென் ஹாக்கிங் (Stephen Hawking), ஸ்டீவென் வெயின்பெர்க் (Steven Weinberg ) போன்ற பலர் அதன் ஈர்ப்புக்கு இணங்காதிருக்க இயலாமல் போனது ஏன்? மானிட-மைய விதியின் மீதான விவாதம் இன்றளவும் தொடர்ந்துகொண்டே உள்ளது. முதலிடத்தில், மானிட-மைய விதி என்பது ஒரு கோட்பாடு அல்ல; அது வெளிப்படையாகத் தெரிகின்ற, இன்னும் அதன் ஆழம் அறியப்படாத ஒரு உண்மையைப் பற்றிய குறிப்பு ஆகும்.

அடுத்து, எல்லாவற்றையும் நாம் விஞ்ஞானப்பூர்வமான கோட்பாடுகளைக் கொண்டுதான் அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு வாழ்கிறோம் என்பதில்லை! முக்கியமாக, விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வுமட்டுமே என்பதை நாம் மறந்துவிடலாகாது.
மேலும் எல்லா அம்சங்களும் விஞ்ஞான அணுகுமுறைக்கு உட்படுபவையாகவும் இல்லை. ஆக, “மானிட-மைய விதி” என்பது அடிப்படையில், ஒரு விஞ்ஞானப் பிரச்சினையல்ல; அவ்வாறு  அதை ஒரு விஞ்ஞானப் பிரச்சினையாகக் காண்பதற்கான பக்குவம் பொருண்மைவாதத்தினால் (Materialism) பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட விஞ்ஞானத்திடம் இல்லை! அடிப்படையில் அதை ஒரு தத்துவப் பிரச்சினை எனக்கொள்ளலாம்; அதைவிட, அதை ஒரு ஆன்மீகப் பிரச்சினையாகக் காண்பதுதான் பொருத்தமாக இருக்கும். வேண்டுமானால், மானிட-மைய விதியை விஞ்ஞானப் பூர்வமான கோட்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்; அதற்குமுன், விஞ்ஞான அணுகுமுறையின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை  விரிவுபடுத்தியாக வேண்டும்!

6. விஞ்ஞானி கோப்பர்நிக்கஸ்-ன் கூற்றுப்படியும், நவீன பிரபஞ்சவியலின் புரிதலின்படியும்
பிரபஞ்சத்திற்கு மையம் என்பது கிடையாது என்ற நிலையில், பிரபஞ்சத்தின் மையம் பற்றிப் பேசும் 'மானிட-மைய விதி' யின் பொருத்தப்பாடு என்ன?

ஆம், 'பிரபஞ்சத்திற்கு யாதொரு மையமும் கிடையாது!' எனும் விஞ்ஞானிகளின் கூற்று சரியானதே! ஆனால், அவர்கள் பிரபஞ்சத்தை பருப்பொருளின் ஒரு மாபெரும் அமைப்பாக (Structure) மட்டுமே காண்கிறார்கள். ஆனால், நானோ பிரபஞ்சத்தை ஒரு பரிணாம இயக்கமாகக் (Evolutionary Movement) காண்பதன் அவசியத்தை முன்வைக்கிறேன், வலியுறுத்துகிறேன். இந்த அடிப்படை வித்தியாசத்தை நாம் புரிந்துகொண்டால் இரண்டு பார்வைக்கும் இடையே முரண்பாடு எழாது!

மேலும், நான் குறிப்பிடும் பரிணாமம் என்பது வெறும் உயிரியல் பரிணாமம் மட்டும் அல்ல; மாறாக, பரிணாமம் என்பது பிரபஞ்சத்தின் தொடக்கப்புள்ளியான பெரு-வெடிப்பு நிகழ்வுடனேயே தொடங்கி அறுபடாமல் பொருளியல், உயிரியல், உணர்வியல் என பண்புரீதியாக வெவ்வேறு தளங்களின் வழியாக இன்றளவும் தொடர்ந்து முன்னேறி தனது ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்வதாயுள்ளது.

ஒரு மரமானது விதையிலிருந்து முளைத்து சிறு செடியாக உயர்ந்து கிளைகள் விட்டு, படிப்படியாக உயர்ந்து வளர்ந்து மேன்மேலும் கிளைகள் பரப்பி விரிந்து வளர்ந்து பெரிய மரமாக எழுகிறது. ஆனால், ஒரு மரம் என்பது அதன் வேர்கள், அடிமரம், கிளைகள், இலைகள் மட்டுமேயல்ல! மாறாக, அம்மரமானது ஒரு கட்டத்தில், பூக்கின்றது, பூக்கள் பிஞ்சுகளாக மாறுகின்றன, பிஞ்சுகள் காய்களாகி, பிறகு காய்கள் முற்றிக் கனிகளாகின்றன.

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, வேர்கள், அடிமரம், கிளைகள், இலைகள் ஆகியவை உள்ளடங்கிய அமைப்பை மட்டுமே மரம் எனக் கணக்கில் கொள்கிறார்கள். இத்தொகுதியும் மரம் தான்; அதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இவ்வமைப்பின் நீட்சியாகவும், உயர் வளர்ச்ச்சி நிலைகளாகவும் தோன்றுபவைதான் பூக்கள், பிஞ்சுகள், காய்கள் மற்றும் கனிகள். இவையே ஒரு மரத்தின் மிக முக்கியமான பகுதிகள் ஆகும். ஆக, விதையிலிருந்து  முளைத்து, சிறு செடியாக எழுந்து, தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து பல கிளைகள் பரப்பி, ஓங்கி உயர்ந்து எழும் மரமானது ஒருகட்டத்தில் பூக்கள்விட்டு, பிஞ்சுகளாகி, காய்களாகி, கடைசியாகக் கனிகளாகும் வரையிலான இந்த வழிமுறையைத்தான் நான் பரிணாம இயக்கம் என்றழைக்கிறேன்.

ஒரு மரத்தைப்பொறுத்தவரை, அதன் பூக்கள் தான் அம்மரத்தின் முதல் கட்ட மையம் ஆகும்! அடுத்து, பூக்கள் பிஞ்சுகளாக மாறியதும் அப்பிஞ்சுகள்தான் அம்மரத்தின் இரண்டாம் கட்ட மையம் ஆகும்! அடுத்து, பிஞ்சுகள் காய்களாகி நன்கு முற்றிக்கனிந்து கனிகளானதும் அக்கனிகள்தான் அம்மரத்தின் மூன்றாம் கட்ட மையம் ஆகும். இறுதி மையம் என்பது அக்கனிகளுக்குள் தோன்றும் விதைகளே ஆகும். வித்திலிருந்து எழும் மரம் மீண்டும் வித்தினுள் அடங்குகிறது. ஆக, வித்துக்களைக் கொண்டிருக்கும் கனிகளே மரத்தின் மையமும், இலக்கும் ஆகும்.

ஒரு மரத்தைப்போன்றதே பிரபஞ்சமும். ஒரே நேரத்தில், பிரபஞ்சமானது ஒரு மாபெரும் அமைப்பாகவும், ஒரு தனித்துவமான இயக்கமாகவும் விளங்குகிறது. பிரபஞ்சத்தை அதனுடைய பல்வேறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு அமைப்புரீதியாக மட்டுமே ஆராய்ந்து  அதை முறையாகப் புரிந்துகொள்ள முடியாது. மாறாக, அது எத்தகைய இயக்கம் என்பதையும், அதன் இலக்கையும் புரிந்துகொள்வதன்மூலம் மட்டுமே முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள முடியும்.

மேலும்,  மரமானது அதன் இலக்கு நிலையால் கட்டுப்படுத்தப்பட்டதாகும்; அதாவது அதனுடைய வளர்ச்சி நிலைகளின் ஒவ்வொரு கட்டமும், விதை எனும் இலக்கு நிலையை அடைவதற்கு ஏதுவாக, “இலக்கு நிலைத் தேர்வு” (Teleological Selection) மூலம் தீர்மானிக்கப் படுவதாகும். ஆக, இதே விதி பிரபஞ்சத்துக்கும் பொருந்தும். ஒரு மரமானது ஒருகட்டத்தில், பூக்களை உருவாக்குவதைப்போல, பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளைத் தோற்றுவித்துள்ளது. மனிதஜீவி என்பவனே பிரபஞ்ச விருட்சத்தின் பிஞ்சுகளும், காய்களும், கனிகளும் ஆவான்! ஆனால், பிரபஞ்சத்தின் ஒப்பற்ற இலக்கு நிலையை எட்டும் விடயத்தில், எல்லா மனிதர்களும் தங்களை இன்னும் ஆயத்தப்படுத்திக் கொள்ளவில்லை! இதற்குக் காரணம் மனிதர்கள் தங்களுக்கென சொந்த இலக்குகளையும், இலட்சியங்களையும், ஆசைகளையும் கொண்ட மிகவும் மட்டுப்பாடான ஜீவிகளாக உழன்றுகொண்டுள்ளனர்! பரந்த உலகு பற்றியும், வாழ்வின் இலக்கு பற்றியும் சிந்திக்கும் அளவிற்கு மனிதர்கள் இன்னமும் உணர்வு பெறவில்லை!

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தை அவர்கள் விந்தையான பல பொருட்களையும், நிகழ்வுகளையும் உள்ளடக்கிய உயிரற்ற, உணர்வற்ற, யாதொரு குறிக்கோளும், இலக்கும் அற்ற ஒரு மாபெரும் பௌதிக அமைப்பாகவும், வினோதமான ஒரு எந்திரமாகவும் பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்! பிரபஞ்சம் பற்றி அறியவேண்டுமென்ற உணர்வில் ஒரு சதவிகிதம் கூட பிரபஞ்சத்தின் அதிமுக்கியமான பகுதியும், பரிணாம இயக்கத்தின் உணர்வுபூர்வ பிரதிநிதியுமான  மனிதனை(அதாவது,தங்களைப்பற்றி) ஆராய்ந்தறிய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணராதவர்களாக இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்!

அதீத மானிட-மைய விதி (The Extreme Anthropic Principle)

(இது இக்கட்டுரையாளரால் முன்வைக்கப்படும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட மானிட-மைய விதி)

1. பருப்பொருளாலான பிரபஞ்சமானது தன் வளர்ச்சிப்போக்கில் ஒரு கட்டத்தில் உணர்வுபெற்றதாக மாறியாக வேண்டியது கட்டாயத்தேவையாகும்; இல்லாவிடில், அதன் இருப்பிற்கு யாதொரு அர்த்தமும்  இருக்கமுடியாது. நல்ல வேளையாக, அதாவது தவிர்க்க இயலாத வகையிம் நாம் இங்கு இருக்கிறோம், நமது இருப்பே இந்த விதியின் நிரூபணம் ஆகும்.

2. பிரபஞ்சத்தின் பௌதிகவிதிகள் என்பவை அடிப்படையானவையோ, பிரதானமானவையோ அல்ல. உயிர்ஜீவிகளையும், அறிவுள்ள மானிட ஜீவிகளையும் அவை தோற்றுவிக்கவில்லை. மாறாக, பிரபஞ்சமானது உணர்வுபெற்றாக வேண்டுமென்ற உள்ளார்ந்த தேவையினை நிறைவேற்றும் பொருட்டு அமைந்த பரிணாமக் கருவிகளே பௌதிகவிதிகள்.

3. அதீத மானிட-மைய விதி யின் சிறப்பு என்னவென்றால்,  ‘பிரபஞ்சமே பிரதானம்’ எனும் தவறான விஞ்ஞானப் பார்வையை மாற்றி, மனிதனைப் பிரபஞ்சத்தின் மையமாகக் கொள்வதோடு, மனிதனின் வழியாக அடையப்படவேண்டிய இறுதி இலக்கு நிலையைப் பிரதானப்படுத்துகிறது என்பதேயாகும். ஆம், மனிதனே பிரபஞ்சத்தின் மையம் ஆவான்; ஆனால், மனிதனின் மையம் பிரபஞ்சத்தைக் கடந்த பரிமாணத்தில் உள்ளது! பிரபஞ்சத்தின் பரிணாம இலக்கு உயிர்ஜீவிகளை உருவாக்குவதோ, அல்லது, அறிவுள்ள ஜீவிகளை, அதாவது மனிதஜீவிகளை உருவாக்குவதோ அல்ல; மாறாக, தனது அசலான இயல்பை, தனது  உண்மையான மெய்ம்மை நிலையைச் சென்றடைவது மட்டுமேயாகும். ஆக, பிரபஞ்சத்தின் இந்த இலக்கை அடைவதற்கான விசேட ஊடகங்கள் அல்லது பிரதிநிதிகள்தான் உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் ஆவர்!

4. "மனிதன் பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறானா?" அல்லது "பிரபஞ்சம் மனிதனைச் சார்ந்திருக்கிறதா?" என்று கேட்டால், இறுதியாக, பிரபஞ்சமும் நாமும் இணைந்து பரிணாம நிகழ்வுமுறையின் முடிவான இலக்கு நிலையைச் சார்ந்திருக்கிறோம் என்பதுதான் அறுதியான உண்மையாகும்!

[ குறிப்பு : இந்த “அதீத மானிட-மைய விதி” யானது மேலும் விரிவாக்கத்திற்குட்பட்டதாகும்.
 - கட்டுரையாசிரியர் ]
-----------------------------------------------------------------------------------------
ஆராய்ச்சிக்கு உதவிய நூல்கள்

The Anthropic Principle -Man as the Focal Point of Nature (1991) by Reinhard Breuer

Anthropic Cosmological Principle   by John D. Barrow and Frank J. Tipler, 1986

ஆராய்ச்சித் தாள்கள்

Marko Uršič /University of Ljubljana/Slovenia
"Cogito ergo mundus talis est" On some metaphysical and epistemological aspects
of the Anthropic Cosmological Principle
-----------------------------------------------------------------------------------------

மா.கணேசன் / நெய்வேலி /  16-10-2018 - 14.11.2018
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE



ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...