Friday, 27 April 2018

தமிழ்த்தேசியத்தின் அவசியம்





    தமிழ் என்றொரு மொழி இருந்தது,
    இன்றும் இருக்கிறது, அது என்றென்றும் இருக்கும்;
    அவ்வாறே தமிழினமும்!

மொழி என்பது பண்பாட்டின் கருவூலம்
------------------------------
மொழி என்பது வெறும் கருத்து, செய்தி அல்லது தகவல் பரிமாற்றத்துக்கான
கருவி மட்டுமல்ல. அது ஒரு மொழியைப் பேசுகின்ற, தாய்மொழியாகக்
கொண்ட மொழியினத்தின் தொன்மம், இலக்கியம், சமயம், தத்துவம்
(மெய்யியல்), பண்பாடு ஆகியவற்றின் கருவூலம் ஆகும்!

ஆகவே, ஒரு மொழியினத்தின் மீதான இன்னொரு மொழியின் திணிப்பு,
ஆக்கிரமிப்பு என்பது  மொழிகளுக்கிடையேயான வெறும் போட்டியோ,
சச்சரவோ அல்ல. மாறாக, அது பண்பாட்டின் மீதான போர் எனவும்,
இன அழிப்புக்கான முற்றுகை எனவும் காணப்படவேண்டும்! ஒரு மொழியின்
மீதான தாக்குதல் என்பது அம்மொழியினத்தின் மீது தொடுக்கப்படும் போர்
ஆகும்!

தமிழ் மொழி, அதன் இலக்கணம், தொன்மம், இலக்கியம், சமயம், தத்துவம்
(மெய்யியல்), பண்பாடு என்று  எல்லாவற்றிலுமே சமஸ்கிருதத்திலிருந்து
வேறுபட்டது. மேலும், அது சமஸ்கிருதத்தைவிட, சமஸ்கிருத கலாச்சாரத்தை
விட சீரியது. ஆகவே, தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் சமஸ்கிருதம்
அழிக்க முயல்கிறது! அதை நேரடியாக அல்லாமல், "ஒரே மொழி, ஒரே மதம்,
ஒரே நாடு' என்ற கோஷத்தின் வழியாகச் செயல்படுத்த எத்தனிக்கிறது. ஆகவே,
தமிழும், தமிழினமும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படவேண்டும் எனும் சீரிய
அக்கறையில்தான் தமிழ்த் தேசியத்தின் அவசியம் எழுகிறது.

மொழி என்பது அம்மொழியினத்தின் உயிர்
--------------------------------
சிலர், "தமிழ்த் தேசியம் என்பது மக்களைச் சாதி, மதங்களுக்கு அப்பால்
ஒன்றிணைக்கும் தேசியமாக அமையுமா? அல்லது, மக்களைச் சாதி, மத
அடிப்படையில் கூறு போடும் தமிழ்ப் பாசிசமாக அமையுமா?" என்று சந்தேகக்
கேள்வி எழுப்புகிறார்கள். இவர்களுடைய அச்சம் அடிப்படையற்றது. ஏனெனில்,
ஏற்கனவே நெடுங்காலமாக மக்கள் இங்கு சாதி, மத அடிப்படையில் கூறு
போடப் பட்டிருக்கிறார்கள்; புதிதாக தமிழ்த்தேசியம் வந்துதான் அதைச் செய்ய
வேண்டியதில்லை; மேலும், தமிழ் மொழி, அல்லது தமிழ்ப் பண்பாடு அவ்வாறு
மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடுவதற்கான சாய்வைக்
கொண்டிருக்கிறதா? அதாவது, தமிழ்மொழி தான் சாதி, மதக் கட்டமைப்புகளை
உருவாக்கியதா? இக்கேள்விகளையெல்லாம் கேட்காமல் தமிழ்த் தேசியத்தை

எதிர்ப்பது என்பது அபத்தமானதாகும்!

மேலும், தமிழரின் உண்மையான சமயம் எது என்பது எவரும் அறியாத ஒன்று;
ஆகவே அதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்! தமிழர் சமயத்தின் அடிப்படை
யான கொள்கைகளை திருமூலரின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனும்
மகா வாக்கியத்திலும்; கணியன் பூங்குன்றன் என்ற மெய்யியல் மேதையின்,
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் மகா வாக்கியத்திலும் நாம் கண்டடை
யலாம்! திருமூலர் கூறியது போன்ற கொள்கை விளக்கத்தை, உலகில்
வேறெங்கும் காணவியலாது.


தமிழரின் உலகளாவிய மாந்த நேயத்தை விளக்கும் பூங்குன்றனாரின் வரிகள்,
உலக சமயங்கள் கூறும் எல்லாக்கொள்கைகளையும் உள்ளடக்கிய வித்தாகும்.
தமிழர் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்பதற்கு,
பூங்குன்றனும், திருமூலரும் அளித்துள்ளனவைகளே விடைகளாகும். ஆக,
தமிழினம் அதனளவில் சாதி மதச் சழக்குகளால் துண்டாடப்பட்ட இனம் அல்ல

என்று துணிந்து கூறலாம்!

மேலும், ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட, அரை நூற்றாண்டுகாலம் வரலாறு
படைத்த சமூக நீதி இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், 'தேசியங்கள்'
மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடுவதைத் தடுத்தனவா, சமூக
நீதியை நிறுவிற்றா, இல்லையெனில், ஏன் அவை தோற்றுப் போயின என்ற
கேள்வியை தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் கேட்கத் தவறினர்
என்பதற்கும் அவர்கள்தான் பதில் கண்டுபிடித்தாக வேண்டும்!

மேலும், "சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?" என்று சிலர்
கேட்கிறார்கள்! சாதியைப் போலவே, இன்னொரு முக்கிய பிரச்சினை பரந்து
விரியும் வறுமை! வறுமை, ஏழ்மையையும் ஏற்கனவே கோலோச்சி வந்த
'தேசியம்' ஏன் தீர்க்கவில்லை என்ற கேள்வியை யார் எவரிடம்

போய்க்கேட்பது?

அடுத்து, எப்போதெல்லாம் தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ
அப்போதெல்லாம் தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு
காலகட்டங்களில் நடந்துவந்திருக்கிறது.  தற்போது, காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டங்களின் 

தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்து வருகின்றன. உரிமைகள்
குறித்த இந்த விடயத்திலும் ஏற்கனவே ஆண்ட கட்சிகள், 'தேசியங்கள்'
தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதில் ஏன் தோற்றுப்போயின? அல்லது,
எக்காரணங்களுக்காக அவற்றை இழக்கும்வகையிலான சமரசங்களுக்கு
உடன்பட்டன? இவ்வாறு எவ்வொரு விடயத்திலும் ஏற்கனவே வரலாறு
படைத்த கட்சிகள், 'தேசியங்கள்' படுதோல்வியடைந்து போயின என்பதால்
அவை தொடர்ந்து நீடிப்பதில் யாதொரு அர்த்தமும், நியாயமும் இல்லை!

ஆக, காவிரி நீர் உள்பட தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும்
பொருட்டும்; தமிழகத்தின் வாழ்வாதாரங்களை, வளங்களைப் பாதுகாக்கும்
பொருட்டும் தமிழ்த் தேசியத்தின் அவசியம் முன்னெப்போதையும்விட தற்போது 
மிக அவசரமான தேவையாக உணரப்படுகிறது.

மேலும், தமிழர்களின் ஒற்றுமையில்லாத மொழிப்பற்றில்லாத (மொழிப்பற்று
என்பது மெய்ம்மை நாட்டம், மெய்யியல் தேட்டம் ஆகிய விழைவினால்
ஏற்படுவது) தன்மையினால் திறந்த விசால மனம் கொண்டிருந்தபோதிலும்
பிறரால் ஏய்க்கப்பட்டு மேய்க்கப்பட்டு அடிமையாக்கப்பட்டிருக்கும் நிலையி
லிருந்து மீள்வதற்கும்; தாம் இழந்த பண்பாட்டுப் பெருமைகளை மீட்டெடுப்
பதற்கும், தமது மெய்யியல் பொக்கிஷங்களை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கும்
தமிழ்த்தேசியம் தற்போது மிகமிக அவசியமாகிறது!

மொழி என்பது அன்றாட உயிர்-வாழ்க்கைக்கான ஒரு கருவி மாத்திரமல்ல!
அதுவே ஆன்மீக உயர்-வாழ்க்கைக்கான கருவியும் ஆகும்! ஒருவர் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டிருப்பதனால் மட்டுமே தமிழராகிவிடுவதல்ல;
ஏனெனில், அர்த்தமில்லாத மொழி என்று எதுவும் இருக்கவியலாது!

அவ்வாறிருக்க முடியுமெனில், அர்த்தமறியப்படாத வாழ்வின் கருவியாக
மட்டுமே அம்மொழி பிழைத்திருக்கும்! ஆக, வாழ்வின் உயர் அர்த்தத்
தளங்களை எட்டுவதற்கான ஊடகமாக மொழியானது கொள்ளப்படவேண்டும்!
அதாவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவனும் பாமரத்

தமிழனாகத் தொடங்கி முடிவில் ஞானத்தமிழனாக முழுமையடைதல்
வேண்டும்!

ஆகவே, தமிழ்த் தேசியம் என்பது வெறும் சமூகப் பொருளாதார அரசியல்
கோட்பாடோ, சித்தாந்தமோ மட்டுமேயல்ல! இவ்வகையில், தமிழ்த் தேசியம்
என்பது தனித்தன்மையானது மட்டுமல்ல, வரலாற்றில் அதைத்தவிர அதற்கு
யாதொரு முன்னுதாரணமும் கிடையாது! தமிழினத்தின் உயர் வளர்ச்சியில்,
முதிர்ச்சியில் அமைக்கப்படுவதே உண்மை தமிழ்த் தேசியம்; அதற்குக்
குறைவான எதுவும் வெறும் ஒத்திகை முயற்சிகளே!

            “எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
                 அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”

மா.கணேசன் • 28-04-2018
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...