Saturday, 27 April 2019

பாதை ஒன்றா? பலவா?



உங்களை எதுவாகவும்
அடையாளப்படுத்திக் கொள்ளாத போது
உங்கள் உண்மையான அடையாளத்தை நோக்கி
நீங்கள் நகர்வீர்!
ஒரு உணர்வுப் புள்ளியாக நீங்கள் உதிக்கிறீர்!
ஒரு மலரை அறியும்போது,
புள்ளியாக இருக்கும் நீங்கள் விரிந்து பரவி
அம்மலரைத் தழுவிக் கொள்கிறீர்;
அம்மலராகவே ஆகிவிடுகிறீர்!
நீங்கள் பிரபஞ்சத்தை அறியவிழையும்போது
பிரபஞ்சமாகவே நீங்கள் மாறிவிட வேண்டும்!
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்
இடைவெளியில்லாதவாறு!

* * *

“எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் செல்கின்றன!” ("All Roads Lead to Rome") எனும் பழமொழி ரோம் நகருக்கு வேண்டுமானால் பொருந்தலாம். எவ்வாறெனில், ரோம சாம்ராஜ்ஜியத்தின் சாலை அமைப்பானது அதன் தலை நகரை மையமெனக்கொண்டு எல்லா பக்கங்களையும், அல்லது திசைகளையும் நோக்கிச் செல்வதாக அமைக்கப்பட்டதாகும்.

ஆனால், நம்மில் பலர், இதே கணக்கில், ஆன்மீக இலக்கான ஞானத்தை அடைவதற்கு பல பாதைகள் உள்ளன என்பதாக நம்பிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறோம். இந்தக் கணக்கு தவறானது! உண்மையில், ஆன்மீகத்தில் பல பாதைகள் என்பதில்லை! இன்னும் “உண்மை என்பது பாதையற்ற பிரதேசம்!” (“Truth is a Pathless Land!”) எனும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வாக்குப்படி பார்த்தால், ஆன்மீகத்திற்கு பாதை என்பதே கிடையாது என்பதுதான் உண்மை!

மேலும், ஞானமடைய ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த (தனி) வழி எனவும், அல்லது, பலர் சேர்ந்து பயணிக்கும் வகையிலான பொதுவான ஒரு அகலவழி ( நெடுஞ்சாலை) எனவும் எதுவும் கிடையாது! அல்லது, வெவ்வேறு குருமார்களால் போடப்பட்ட காப்புரிமைக்குட்பட்ட தனித்தனிப் பாதைகளும் கிடையாது!

ஞானமடைதல்  (Enlightenment) என்பதற்கு அடியோட்டமாக அமைந்துள்ள விசேடமான விஞ்ஞானத்தின்படி, ஞானமடைதல் என்பது மனித மனம் அல்லது உணர்வின் மலர்ச்சியைக் குறிப்பதாகும். ஆம், ஞானமடைதல் என்பது உணர்வில் (Consciousness) தொடங்கி உணர்வில் முடிவடைகிறது. உணர்வின் தொடக்கமான அகந்தையில் தொடங்கி, அதில் நிகழும் மாபெரும் மாற்றமுறுதலினால் (Transformation in Human Consciousness) விளையும் முழு-உணர்வு அல்லது அகண்ட உணர்வில் (Cosmic Consciousness) முற்றுப் பெறுகிறது!

'அறிவு' என்பது கொடுக்கப்பட்ட தொடக்க நிலை உணர்வை, அதாவது அகந்தை உணர்வைக் கொண்டு சேகரிக்கப்படும் ஒன்றாகும். ஒன்றைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு ஒருவர் தன்னிலையில் (தனது உணர்வில்) மாற்றமடைய வேண்டியதில்லை. அறிவு என்பது ஒருவரது நேரடி அனுபவத்தில் விளைவதாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. இன்னொருவருடைய அனுபவத்தில் விளைந்த விபரங்களைக் கொண்டு நாம் நம்முடைய அறிவைக் கட்டமைக்க முடியும்.  ஆனால், 'ஞானம்' என்பது நேரடி அனுபவத்தில் மட்டுமே மலரக் கூடிய அரியவகை மலராகும். ஆம், உணர்வின் மலர்ச்சியே ஞானம்!

அறிவை ஒருவர் இன்னொருவருக்குப் புகட்ட முடியும்; ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெற்றுக்
கொள்ள முடியும். ஞானத்தை அவ்வாறு புகட்டவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ இயலாது!
அறிவைப் பகிர்ந்து கொள்ள முடியும்; ஞானத்தைப் பகிரவோ, கடன் கொள்ளவோ கொடுக்கவோ இயலாது!

உணர்வுதான் ஆன்மீகத்திற்கான ஒரே கருவியும், ஊடகமும் ஆகும். மனிதனிடம் உணர்வு
துளிர்க்காவிடில் அவன் ஒரு விலங்காகவே விளங்குவான்! விலங்குகளுக்கு இருப்பு பற்றிய
யாதொரு உறுத்தலும், கேள்வியும் ஏற்படுவதில்லை! ஆன்மீகம் என்பது மிகவும் விசேடமான ஒரு
உறுத்தலினால் மட்டுமே பிறக்கிறது; சிப்பிக்குள் முத்து தோன்றுவதைப் போல! பொதுவாக
விலங்குகளுக்கு இருப்பு பற்றிய உறுத்தல் ஏற்படுவதில்லை என்பதன் அர்த்தம் அவை தமது
இருப்பை நேரடியாக உணர்வதில்லை; மாறாக, அவை பசி, தாகம், பாலுணர்வு ஆகியவற்றின்
வழியாக, மிகவும் மறைமுகமாக மட்டுமே தமது இருப்பை உணர்கின்றன. இருப்பை உணர்வு
கொள்ளும்போது தான் வாழ்க்கை, குறிப்பாக, ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது!

விலங்குகளுக்கு வாழ்க்கை என்பது தொடங்குவதேயில்லை. மாறாக, அவை ஒருவகை இருப்பு நிலையில் இருக்கின்றன; அதிலேயே இயங்குகின்றன,  குதூகலிக்கின்றன, துன்பப்படுகின்றன; இருக்கும்வரை இருந்து பிறகு ஒரு நாள் மாண்டுபோகின்றன! இருப்பானது உறுத்தலாக மாறாதவரை, வாழ்க்கை என்பது தொடங்குவதில்லை! உணர்வுதான் உறுத்தலின் கருவியாகும்; உணர்வு என்பதே ஒரு மாபெரும் உறுத்தல் தான்! உறுத்தலின் வெளிப்பாடுதான் கேள்விகள். கேள்விகள் தான் அறிதல், புரிதல், சிந்தனை, இன்னும் ஆன்மீகம் மற்றும் அனைத்துவகைப்பட்ட  விசாரத்திற்குமான அடிப்படையுமாகும்.

ஆம், நமது இருப்பை, அதாவது, நாம் ஏன் இருக்கிறோம்? எதற்காக இருக்கிறோம்? எத்தகைய இலக்கை நோக்கியது நமது இருப்பு? இந்த இருப்புக்கு அர்த்தம், குறிக்கோள் ஏதேனும் உள்ளதா? என்பவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை என்பதற்குள் நாம் பிரவேசிக்க இயலாது! ஆம், இருப்பை உணரத்தொடங்கும் ஒருவருக்கு இக்கேள்விகள், அதாவது இருப்பைச் சந்திக்கும் மனித உணர்வுக்கு ஏற்படும் இந்த உறுத்தல்கள் இல்லாமல்; அவ்வுறுத்தல்களுக்கான பதில்களை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கண்டுபிடிக்காமல், புரிந்துகொள்ளாமல் அவரால் மனிதனுக்கே உரிய தனிச்சிறப்பான வாழ்க்கையை வாழ இயலாது! மாறாக, எலிகளையும், தவளைகளையும் போலத்தான் இருப்பின் பொழுதுகளைக் கழித்துச் செல்ல முடியும்!   ஆம், இருப்பின் அனைத்து உணர்த்துகோள்களையும் (Implications) புரிந்துகொள்வதுதான் வாழ்க்கையாகும்!

‘இருப்பு’ (Existence) என்பதற்கும் ‘வாழ்க்கை’ (Life) என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டும் ஒன்றல்ல! இருப்பவை எல்லாம் இருப்பு தான்; அவை வெவ்வேறு நிலைகளில், தரங்களில் இருக்கின்றன. உயிரற்ற ‘சட’ இருப்பு; அடுத்து, உயிருள்ள இருப்பு, அதாவது  ‘உயிர்-இருப்பு’, அடுத்து, உணர்வுள்ள இருப்பு, ‘உணர்வு-இருப்பு’ என்பவையே அவை! இருப்பானது உணர்வு கொள்ளப்பட்டு புரிந்து கொள்ளப்படும் போது வாழ்க்கை மலர்கிறது முழு-உணர்வாக!

‘இருப்பு’ என்பது இருப்பவை அனைத்தையும் குறிக்கிறது; அதில் மனிதஜீவிகளாகிய நாமும் அடங்குவோம். இருப்பை உணர்தல் என்பது ஒட்டுமொத்தத்தையும் உணர்ந்தறிதலே. அதாவது, நம்மைச்சுற்றியுள்ள இயற்கை, உலகம், அல்லது பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் மட்டுமல்லாமல், அதில் உள்ளடங்கியுள்ள நம்மையும் உணர்ந்தறிதலாகும். நம்மை அறியும் கட்டத்தை எட்டும் போதுதான் “நான் யார்?” என்ற உறுத்தல், அதாவது கேள்வி முக்கியத்துவம் பெறும்! உண்மையில், நம்மைச்சுற்றியுள்ள இருப்பான இயற்கையை, உலகை, பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது என்பது, அனைத்தையும் அறிபவனாக எழும் மனிதன் (அதாவது உணர்வு) தன்னைப் புரிந்துகொள்ளும் வழியில், இடையில் அமைந்த விஷயமே தவிர, யாவற்றையும் விட அதி முக்கியமானது மனிதன் தன்னையறிதலே ஆகும். அதாவது, உணர்வு தன்னைத் தானே உணர்வு கொள்வதே, அறிவதே! ஆகவேதான், உணர்வு என்பதே ஒரு மாபெரும் உறுத்தல்தான் என்று மேலே குறிப்பிடப்பட்டது. மனிதன் என்பவன் அவனது சாரத்தில் உணர்வே தவிர வேறல்ல!

உண்மையில், “நான் யார்?” என்பது ஒரு குறிப்பிட்ட மனிதனை, அதாவது ஒரு நபரை, அதாவது உங்களைப் பற்றிய விசாரம் அல்ல! மாறாக, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் (பிரபஞ்சத்துடனான தொடர்பில்) மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை என்பதைப் பற்றியதாகும்.

ஆன்மீகம் என்பது ஆன்மீகம் தொடர்பாகப் புழங்கும் பிரத்தியேக துறைச் சொற்களுடன், அதாவது, தியானம், சமாதி, யோகம், துவைதம், அத்வைதம்,  ஆன்மா, பிரம்மம், ஞானமடைதல்...…போன்ற எண்ணற்ற பிற சொற்களுடன் பரிச்சயம் பெறுவதும் அச்சொற்களைக் கொண்டு கதைப்பதும், வாத விவாதங்களில் ஈடுபடுவதும் அல்ல! அல்லது ஏதாவது ஒரு மார்க்கத்தில், ஆசிரமத்தில் சேர்ந்துகொள்வதோ, அல்லது ஒவ்வொரு ஆசிரமமாக, ஏறி இறங்குவதோ, வெவ்வேறு குருமார்களிடம் தீட்சை பெறுவதோ அல்ல! இருப்பை  ஒருவர் நேரடியாகத் தம்முள் ஒரு பெரும் உறுத்தலாக உணராதவரை, அவ்வுறுத்தலைத் தொடர்ந்து, இருப்பு குறித்த ஆழமான, இடையறாத விசாரத்தில் இறங்காதவரை, மேலே குறிப்பிடப்பட்ட பிரத்தியேக ஆன்மீகத்துறைச் சொற்கள் யாவும் அர்த்தமற்றவையே!

ஞானம் என்பது ஒவ்வொருவரும் தன்னைத்தோண்டிக் கண்டடைய வேண்டிய பொக்கிஷமாகும்! ஞானிகளின் உபதேசக் களஞ்சியத்திலிருந்து நாம் சில குறிப்புக்களையும், ஆன்மீக விசாரத்தில் தொய்வடையும் போது ஊக்கத்தையும், மேன்மேலும் முன்னேறிச் செல்வதற்கான உந்துதலையும் மட்டுமே பெறவியலும். தன்னைத்தோண்டுவது என்பது ஒவ்வொருவரும் தன்னுடன் தான்    மேற்கொள்ளவேண்டிய பணியாகும். பிறர் அதில் பெரிதாக உதவிட இயலாது. அதே வேளையில், உண்மையான ஒரு குரு, அல்லது ஞானி என்பவர் செய்யக்கூடிய பேருதவி ஒன்று உள்ளது என்றால், அது சாதகர்களிடமிருந்து பலவகைப்பட்ட பிரமைகளைப் பிடுங்கிக் களைவது என்பது மட்டுமே!

ஆன்மீகம் என்பது இருப்பிலேயே உள்ளடங்கிய பரிணாம உந்துதலாகும்; எனினும், இருப்பானது தன்னைத்தானே உணர்வதற்குரிய வளர்ச்சியைப் பெறாமல்; அதாவது, தன்னைத்தானே அறிவதற்குரிய கருவியைப் பெற்றெடுக்காமல், அக்கருவியாக மாற்றமடையாமல்  தன்னையறிதல் என்பது சாத்தியமில்லை! ஆகவே தான், சட இருப்பாக, இயற்கை, பிரபஞ்சம் எனத் தோன்றிய இருப்பானது உயிர் பெற்றெழுந்தது; அதாவது, உயிருள்ள ஜீவியாய்ப் பரிணமித்தது! பிறகு ஒரு கட்டத்தில், உணர்வுள்ள மனித ஜீவியாக, மனிதனுள் மனம் அல்லது உணர்வாக எழுந்தது! ஆம், உணர்வு என்பது இருப்பின் உயர் வளர்ச்சி நிலையாகும். இருப்பு என்பது என்றென்றும் ஒரே இருப்பாக இருக்கும் ஒன்றல்ல. மாறாக, வளர்ச்சிக்குட்பட்ட ஒரு நிகழ்வுமுறை ஆகும்; அதையே நாம் பரிணாம நிகழ்வுமுறை என்கிறோம்.

நம்மைச் சுற்றியுள்ள இருப்பை, இயற்கை, உலகம், பிரபஞ்சம் என்று பல பெயர்களைக் கொண்டு நாம் அழைக்கிறோம். அது மிகத் திண்மையானதும், நிரந்தரமானதுமான ஒரு அமைப்பு  என்பது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது! ஆனால், உண்மையில், இயற்கை, உலகம் என்பது வளர்ச்சிக்குட்பட்ட தொரு நிகழ்வுப் போக்கே ஆகும். அது சலனமற்று மிக அமைதியாக ஓடும் ஒரு நதியைப் போல ஆரவாரமின்றி தனது இலக்கு நோக்கி மெதுவாக முன்னேறிச் செல்கிறது! பல சமயங்களில், அது தேக்கமுற்று ஸ்தம்பித்து நிற்கிறது. இதற்குக் காரணம், பரிணாம வளர்ச்சியின் அம்புத்தலையாக விளங்கும் மனிதஜீவிகள், உணர்வு இருந்தும் உணர்வற்ற ஜீவிகளைப் போல வாழ்ந்து செல்வதால், உணர்வுப் பரிணாமம் தேக்கமுற்று நிற்கிறது!

மேலும், முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது ஏராளமானவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு பல்வேறு மார்க்கங்களையும், ஆசிரமங்களையும், குருமார்களையும் தேடிச் செல்கின்றனர்; எனினும், அகந்தையின் எல்லைகளுக்குள்ளாகவே அவர்களின் ஆன்மீகம் சுழன்று கொண்டுள்ளதே தவிர, உணர்வின் உள்ளார்ந்த உறுத்தலின் தேடலாக அமையாமல், செயற்கையாகத் தூண்டப்பட்ட தேடலாக; ஒருவகை புதுமைப்பாணியாக (Fashion or Fad), பலவகைப்பட்ட தியானம், பயிற்சிகள்; சத்சங்கங்கள் எனும் சடங்குகளாக மட்டுமே உள்ளன! இவர்களது ஆன்மீகம் வெறும் பேச்சாக மட்டுமே உள்ளது; அவர்களது நடையாக இன்னும் தவழத்தொடங்கவில்லை!

அகமுகமான ஆன்மீகப் பயணம் என்பது மூட்டை முடிச்சுக்களுடன் இன்பச் சுற்றுலா செல்வது  போன்றதல்ல. அகப்பயணத்தின்போது யாதொரு மூட்டை முடிச்சுக்களையும் - புத்தக அறிவு, அனுபவம், கொள்கை கோட்பாடுகள், முன்முடிவுகள், வரைபடங்கள்… போன்ற எதையும் உடன் கொண்டு செல்ல இயலாது. மாறாக, ஒவ்வொருவரும் தனியே நிராயுதனாகத்தான் செல்ல முடியும், செல்ல வேண்டும். நீங்கள் எதையேனும் எடுத்துச் சென்றால், அங்கே அகப்பயணம் என்பதே  தொடங்காது; மாறாக, ஒருவகைக் கற்பனைப் பயணமாகவே அது அமையும்; அதுதான் நம்மில் பலரது விஷயத்திலும் நிகழ்கிறது!

அதாவது, ஒருவர் இமாலயத்திற்குச் சென்று வந்து ஒரு நெடிய பயணக்கட்டுரை அல்லது ஒரு புத்தகமே எழுதுகிறார். ஆனால், எவரும் அப்பயணக்கட்டுரையை, அல்லது புத்தகத்தை வாசித்துவிட்டு, அது தமக்கு நன்றாகப் புரிகின்றது என்பதால், தாமும் இமாலயம் சென்றுவந்துவிட்டதாக பிரமை கொள்வதில்லை! மாறாக, தாமும் இமாலயம் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்; பிறகு அதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறார்; பிறகு ஒரு நாள் தம் வீட்டை விட்டு இறங்கி இமாலயம் நோக்கி பயணம் மேற்கொள்கிறார். ஆனால், ஞானமடைதல் பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு தாம் ஞானமடைந்துவிட்டதாக நம்மில் பலர் மிகச் சுலபமாக எண்ணிக்கொள்கிறோம்!    

ஆன்மீக சம்பந்தமான நூல்கள் யாவும் இனிப்பு செய்வது எப்படி என்பதைக் கூறும் செய்முறைக் குறிப்புக்கள் (Recipe) போன்றவையே தவிர வேறல்ல. ஆனால், நம்மில் பலர், அச்செய்முறைக் குறிப்புக்களையே தின்று மகிழ்கிறவர்களாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்! ஞானமடைதல் (Enlightenment) பற்றியும், விழிப்படைதல் (Awakening) பற்றியும் சில புத்தகங்களை வாசித்துவிட்டு; அவற்றில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தங்களுக்கு நன்றாகப் புரிகிறது என்பதாலேயே தாங்கள் ஞானமடைந்துவிட்டாற்போலவும், விழிப்படைந்துவிட்டாற் போலவும், நெடிய பிரமையில் ஆழ்ந்து போகின்றனர்! இந்நிலை அஞ்ஞானத்தைவிட ஆபத்தானது! எவ்வாறென்றால், ஒருவர் தனது அஞ்ஞானத்தை என்றாவதொரு நாள் கடந்துசென்றுவிடக் கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளார். ஆனால், போலி ஞானத்தை, ஞானமடைந்துவிட்டதான பிரமையைக் கடப்பது என்பது சாத்தியமேயில்லை!

ஆக, “எல்லா (ஆன்மீகப்) பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன!” என்கிற கூற்று ஆபத்தானது; ஏனென்றால், அது பொய்யான வாக்குறுதியைக் கொண்டதாகும்! அடுத்து, எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கு நோக்கித்தான் செல்கின்றன என்றால், ஒருவர் எந்தப் பாதையில் போவது? அல்லது எல்லாப் பாதைகளிலும் சிறந்தது எது? அடுத்து, பாதைகள் பலவாயினும் ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு பாதையில் மட்டும்தானே செல்லவியலும்; இடையில் பாதை மாற இயலுமா? மாற முடியுமானால் ஒருவர் பயணித்துவந்த பாதை அந்த இலக்கிற்குச் செல்லாதா? புதிதாக மாறிச்சென்ற பாதை அந்த இலக்கிற்குக் கொண்டு செல்லும் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? ஆக, இவ்வாறு எப்படிப் பார்த்தாலும், “எல்லா (ஆன்மீகப்) பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன!” என்கிற கூற்று தோல்விகரமானதாகவே தெரிகின்றது!
சொல்லப்பட்ட பாதைகள் பலப் பல!
ஆனால், உணரப்படும் பாதை ஒன்றே!
பசியுள்ளவன் தன் உணவை
அடைந்தே தீர்வான்!
பாதையல்ல முக்கியம்
பயணத்தின் அவசியம் உணர்பவனுக்கு!
வழியறிந்தபின்னே பயணிப்பதில்லை நதி!
உள்ளிருந்து எழும் உத்வேகம்
உன்னை உந்திச் செலுத்தட்டும்!
வழியும், இலக்கும், உண்மையுமான
மையத்தை உன்னுள் கண்டுபிடித்திடு!

* * *

மா.கணேசன்/ நெய்வேலி/ 19-04-2019

*****************************************************************************

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...