Tuesday, 3 December 2024

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .





 

 

 

 

 

அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான பேருணர்வைத் தேடிச் செல்கிறது. பயணம் இன்னும் முடியவில்லை. அணுவின் இந்த சுய அறிவுத் தேடலின் வரலாற்றைத்தான் பரிணாம வரலாறு என்கிறோம்.

சுய-அறிவு (Self-Knowledge) அல்லது தன்னையறிதல் (Self-Realisation) என்பது சாக்ரட்டீஸ் போன்ற விதி விலக்கான தத்துவ ஞானிகள் அல்லது பைத்தியக்காரர்களது ஆர்வக்கோளாறின் மிகுதியால் விளைந்த பிதற்றலோ அல்லது செயல் துறந்த சோம்பேறிகளின் சொர்க்கமோஅல்ல. மாறாக, சுய-அறிவுத் தேட்டம் என்பது அணுக் கருவினுள்ளும் அமைந்தியங்கும் அடிப்படையான படைப்புச் சக்தியாகும்.

அண்டத்துப் புதிரை விடுவிக்க விழைந்திட்ட விஞ்ஞானிகள் அப்புதிர் அணுக்கருவினுள் ஆழ்ந்து கிடப்பதாக எண்ணி அணுவைத் துளைத்து இறுதியான அந்த (ஒற்றை) அடிப்படைத் துகளைத் தேடிட, இதுதான் இறுதியானது என முடிவு செய்ய இயலாதபடிக்கு எண்ணற்ற பல துகள்கள் அணுக்கருவின் நுண் உலகில் அலைமோதிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ந்து போயினர்.

அணு என்றால் என்ன? புரோட்டான் எனும் துகளை கருவாகக்கொண்டு அதனைச் சுற்றி வலம் வரும் எலக்ட்ரான் (எனப்படும்) துகள்களும் சேர்ந்த அமைப்புதான் அணு என்பது. சில தனிமங்களின் அணுக்கருவில் புரோட்டான் துகள்களோடு நியூட்ரான் (எனப்படும்) துகள்களும் இடம் பெறுகின்றன. புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் ஆகியவைகள் விஞ்ஞானிகளால் பொதுவாக  ஃபெர்மியான்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த ஃபெர்மியான்களே பொருளின், அதாவது பொருளின் ஆகச்சிறிய அணுவின் உட்கூறுகள். ஆக ஆதியாகமத்தை இவ்வாறு நாம் மாற்றி எழுதிடலாம். அதாவது, "ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன" என்று!

ஆனால், ஃபெர்மியான்கள் உண்மையிலேயே நம் விஞ்ஞானிகளை விடவும் கூரறிவு கொண்டவை. அவை தம்மையறியும் ஆன்மீகத் தேட்டத்தின் பயணத்தில் வெகு தொலைவு முன்னேறிச் சென்றுவிட்டன. புரோட்டான்களும். எலக்ட்ரான்களும், நியூட்ரான்கள்களும் பல்வித அமைப்பில் இணைந்து பிரிந்து மீண்டும் பொருந்தி யுகம் யுகமாக வினைபுரிந்து நியூட்டனாகவும், ஐன்ஸ்டீனாகவும், என்றிக்கோ ஃபெர்மியாகவும், ஹெய்சன் பெர்க்காகவும், ஷ்ரோடிங்கராகவும் ஆகிவிட்டிருந்தன! ஆம், ஃபெர்மியான்கள் பரிணமித்து வேதியியல், பௌதீகவியல் விஞ்ஞானிகளாக நிலைமாறி, தற்போது அவை ஃபெர்மியான்களைப்பற்றி (அதாவது தம்மைப்பற்றி)யே ஆராய்ந்துகொண்டுள்ளன என்பது வினோதம் தான்! ஆனால், இது ஃபெர்மியான்களின் தவறு அல்ல! மாறாக, தாங்கள் ஃபெர்மியான்களே என்பதையும், அவற்றின் ஆன்மீகத் தேட்டத்தையும் மறந்துபோன விஞ்ஞானிகளின் தவறே இது!

அடிப்படை அணுத்துகள்கள் விஞ்ஞானிகளாகப் பரிணமித்து அவ்விஞ்ஞானிகளின் வழியாக, மீண்டும்  அடிப்படை அணுத்துகள்களை ஆராய்ந்து கொண்டிருப்பது என்பது ஒருவகை விபரீத வட்டத்தில் சிக்குண்டுவிட்டது போன்றதுதான். ஏனெனில், ஆதி ஃபெர்மியான்கள் தம்மை அறியும் பொருட்டு தம்மைப் பிளந்து காணும் வீண் செயலில் ஈடுபடவில்லை. மாறாக, அதற்கு எதிர்த்திசையில், தம்மை விரித்துக்காணும் நெடும் பயணத்தை தேர்ந்திட்டன! விளைவு : இம்மாபெரும் உயிர் ததும்பும் உணர்வு பொங்கும் பிரபஞ்சம்!

தமது நெடும்பயணத்தின் முடிவில் அவை தம்மை அறிந்து கொண்டனவா? ஆம், அறிந்து கொண்டன; தாம் வெறும் ஃபெர்மியான் துகள்கள் அல்ல, தாம் ஒரு பிரபஞ்சம், வெறும் பிரபஞ்சம் மட்டுமல்ல; பிரபஞ்சத்தினுள் உலவும் உயிர்கள்; வெறும் உயிர்கள் மட்டுமல்ல, யாவற்றுக்கும் மேலாக தாம் உணர்வுள்ள (Conscious Beings) மானிட ஜீவிகள்; இன்னும் மேலுயர்ந்து தாம் ஒரு மகா உணர்வு (Super Consciousness)
என்ற பேருண்மையை அவை அறிந்துகொண்டன! இப்பேருண்மையை உணர, அவை, விஞ்ஞானிகளைக் கடந்து, புத்தனாகவும், ரமணராகவும் எழ வேண்டியிருந்தது!

*

மா.கணேசன்/நெய்வேலி / கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன் எழுதியது.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

 

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...