Tuesday, 15 May 2018

குழம்பிய அரசியல் குட்டையில் ....





✦முன்னொரு காலத்தில் "தமிழகம்" "தமிழ் நாடு" எனும் ஒரு நாடு இருந்தது!

தமிழ்நாடு என்பது ஒரு புறம்போக்கு இடப்பரப்பாகத்தான் பிற மாநிலத்தவர்
களும், பிறமொழிக்காரர்களும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்!

✦தமிழ் நாட்டில் திடீரென அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று
  சொல்லப்படுவது உண்மையா?

இதற்கு பதில், "ஆம்", "இல்லை" இரண்டும்தான்! ஆம், தமிழக அரசியலில்
உண்மையிலேயே வெற்றிடம் ஏற்பட்டுள்ளது! ஆனால், அது இன்று, நேற்று
ஏற்பட்டதல்ல, மாறாக, அந்த வெற்றிடம், ஐம்பது, அறுபது ஆண்டுகாலமாக 
உண்மையான ஒரு மக்கள் நேசருக்காக, வாழ்க்கையை உள்ளும் புறமும்
அறிந்த உண்மையான அரசியல் ஞானமுள்ள ஒரு அசலான மனிதருக்காகக்
காத்திருக்கிறது!

"வந்தாரை வாழ்விக்கும் தமிழகம்" என்பது ஒரு வஞ்சப்புகழ்ச்சியணியே தவிர
மற்றபடி, தமிழர்கள் என்றால் ஏமாளிகள், இளிச்சவாயன்கள், தங்களுக்குள்
ஒற்றுமையில்லாதவர்கள் என்பதை பிற மாநிலத்தவர்கள் அனைவரும் நன்கு
அறிவர்!

தமிழர்களின் குருட்டு விசுவாசத்திற்கு எல்லைகளே கிடையாது! எவராவது
இங்கு வந்து நாமெல்லாம் 'திராவிடர்கள்' என்று சொன்னால் உடனே அவர்
பின்னால் அணி திரண்டுவிடுவர்! இன்னொருவர் வந்து, நாம் எல்லோரும்
'இந்துக்கள்' என்று சொன்னால் உடனே அவர் பின்னே சென்று விடுவர்!
வேறொருவர் வந்து "பிற்போக்கு திராவிடர் முன்னேற்றக்கழகம்" என்று
புதிதாக ஒரு கட்சியை அறிவித்தால் போதும் உடனே அக்கட்சியில் சேர்ந்து
கொள்வர்! ஆனால், நாமெல்லோரும் தமிழர்கள் என்று சொன்னால் உடனே
அவர்கள் ஏதோ தகாத சொல்லைச் சொல்லிவிட்டதுபோல மிரண்டு போவர்!

✦தமிழர்களிலிருந்து தலைமைப்பண்பு கொண்ட தரமான அரசியல்தலைவர்கள்
  ஏன் உருவாகிடவில்லை!

தமிழர்கள் என்றால் 'செம்மறியாட்டுக்கூட்டம்" என்பதே அதன் பொருள்! அவர்
கள், வழிநடத்தக்கூடியவர்களாக அல்லாமல் எளிய வாழ்க்கைத் தேவைகளால்
வழிநடத்தப்படக்கூடிய எளியவர்களாக வாழ்ந்து வந்த உழைப்பாளிகள்! சேர,
சோழ, பாண்டிய அரசர்கள் காலத்திற்குப்பிறகு, குடியரசு இந்தியாவில், தமிழர்
களை விட பிற மொழிகளைச் சேர்ந்தவர்களே அரசியலில் தலைவர்களாகத்
தம்மை முன்னிறுத்திக்கொண்டு வந்துள்ளனர்! இன்றளவும் தமிழ் நாட்டு
அரசியலில் பிரவேசம் செய்யும் புதியவர்களில், குறிப்பாக தமிழினமல்லாத
பிற மொழியினத்தவர் எவரும் தலைவராகத்தான் தம்மை முன்னிறுத்த
முனைகிறாரே தவிர; அதாவது, ஆட்சியதிகாரத்தை பிடிக்கவே விரும்புகிறாரே
தவிர மக்களுக்கு உண்மையாக சேவை செய்யவேண்டுமென்ற சீரிய நோக்கத்
தினால் அல்ல!

இத்தகைய பலருக்கு 'அரசியல்' என்றாலே, அது, "ஆட்சியதிகாரம்" என்பதாகவே
காதில் ஒலிக்கிறது! ஏதோ ஆட்சியதிகாரம் இருந்தால் மக்கள் நலன்களனைத்
தையும் பூர்த்தி செய்துவிட்டுத்தான் ஓயப் போவதைப்போல முழங்குகின்றனர்
தற்போது புதிதாக அரசியலுக்கு வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும்!

✦தமிழர்களை ஒருங்கிணைப்பது சாத்தியமா?

தமிழர்கள் இயல்பாகவே அகந்தையற்றவர்கள்; இதன் அர்த்தம் ஏதோ அவர்கள்
எல்லோரும் ஞானிகள், உயர்பேரறிவாளர்கள் என்பது அல்ல; மாறாக, சமீப
காலங்களில் தான் அவர்களுக்கு 'அகந்தை' துளிர்க்கத் தொடங்கியுள்ளது!
ஆகவே அவர்களால் யாதொரு கருத்தொற்றுமை யையும் எட்டவியலாது!
மிகவும், அடிப்படையான, யாவருக்கும் நலமளிக்கும் ஒரு பொதுவான முன்
வைப்பை, முடிவை, கருத்தாம்சத்தைச் சொன்னாலும், அதை உடனே
ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயத்தையும், கருத்தையும் சொல்லி எதிர்க்
கவும், மறுக்கவும் செய்வர்! எவ்வாறு அகந்தை துளிர்க்காத காலங்களில்
தமிழர்களை அடிமைப்படுத்துவது எளிதாக அமைந்ததோ, அவ்வாறே தற்போது
அகந்தை துளிர்த்தபிறகு அவர்கள் கருத்தொற்றுமை கொள்ளவியலாமல் பிரிந்து
நிற்கும் நிலையில் அவர்களை ஆள்வது எளிது!

தமிழனின் பிரச்சினை இதுதான், அதாவது தமிழன் என்பவன் தனது மொழியி
லிருந்து வேறானவனாக இல்லை; ஆகவே, அவனிடம் மொழிப்பற்றும்
இல்லை, மொழி வெறியும் இல்லை! ஆகவே, தமிழனை மொழிப்பற்று கொள்
ளச் செய்வது கடினம்! தமிழனைப்பொறுத்தவரை,

✦திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?

இக்கேள்வி ஒன்றும் 'பில்லியன் டாலர்' கேள்வியல்ல, என்றாலும், அரசியல்
என்பது பெரிதாக முதலீடு ஏதும் இன்றி பல கோடிகளைச் சுருட்டுவதற்கும்,
வருமானத்திற்கு மேலாகச் சொத்து சேர்ப்பதற்கும் மிகச்சுலபமானதொரு வழி
யாகும்! நடிகர்களைப் பொறுத்தவரை, "அரசியல்வாதி" அல்லது, "அரசியல்
தலைவர்" என்பது ஒருவகைக் "குணச்சித்திர வேடம்" தானே தவிர வேறல்ல!
மேலும் நம் மக்களுக்கு 'அரசியல்' என்பதும் 'சினிமா' என்பதும் ஒன்றுதான்!
இரண்டு இடங்களிலும் அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக, பார்வையாளர்
களாக மட்டுமே இருக்கப்போகிறார்கள்! ஒரு திரைப்படத்தை காசு கொடுத்து
சீட்டு வாங்கி இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் மட்டும் பார்க்கப்படு
கிறது! ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆட்சி எனும் அரசியல்
நாடகத்தை, (பணத்தை வாங்கிக்கொண்டு) வாக்குச் சீட்டை அளித்து தேர்ந்
தெடுத்த பிறகு ஐந்து வருடங்கள், என்ன நடந்தாலும்; இன்பமோ, துன்பமோ,
செயல்பாடற்றதோ, கொடுங்கோலோ, சகித்துக்கொண்டு வேடிக்கைபார்ப்பதைத்
தவிர மக்களால் ஒன்றுமே செய்யவியலாது!

'சினிமா' நடிகர்களைப்பொறுத்தவரையில், குறிப்பாக, திரைப்படங்களில் கதா
நாயகர்களாகவே நடித்துப் புகழும், பிரபல்யமும் பெற்றவர்களால், அரசியலில்
மக்களுக்குச் சேவை செய்பவர்களில் ஒருவராக இருக்க முடியாது; மாறாக,
அரசியலிலும் அவர்கள் கதா நாயகர்களாகத்தான், அதாவது தலைவர்களாக
மட்டுமே திகழ விரும்புவர்!

அடுத்து, எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது ஜனநாயகத்
தின் சாபக்கேடு ஆகும்! இங்கும் எங்கும் சரி, அரசியல்கட்சிகள் என்பவை
வியாபார நிறுவனங்களைப்போலவே ஸ்தாபிக்கப்பட்டு தமது வியாபாரத்தை

நடத்திக்கொண்டிருக்கின்றன! ஆகவே ஏற்கனவே ஸ்தாபிதமான பெரிய கட்சி
களே தொடரலாம் என்பது இன்னும் கேடானது! அரசியல் என்பது எவருக்கும்

குடும்பத்தொழிலாகவோ, நிரந்தரத்தொழிலாகவோ இருக்கமுடியாது; அது ஜன
நாயக விரோதமானது!

அடுத்து, புதிதாக அரசியலில் நுழைபவர்களை, அவர்கள் 'சினிமா' நடிகர்களா
யினும், வேறு எவராயினும் எல்லோருமே வரவேற்பதாகச் சொல்லுவார்கள்;
சிலர், குறிப்பாக, ஏற்கனவே ஸ்தாபிதமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
மறைமுகமாக எதிர்க்கவும், கடுமையாக விமர்சிக்கவும் செய்வார்கள்! இதற்குக்
காரணம் அவர்களுடைய வியாபாரத்திற்குப் போட்டியாக முளைத்தெழுபவர்கள்
பெரும் அச்சுறுத்தலாக அமைவது தான்! ஏனெனில், புதிதாக அரசியலுக்கு
வருபவர்கள் ஓட்டுக்களைப்பிரித்து தேர்தலை பலமுனைப்போட்டியாக மாற்றி
விடுவார்கள்! இது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்குமே ஆபத்தானதாகும்!
அதே வேளையில், இந்த இரண்டு கட்சிகளுமே மீண்டும் மீண்டும் மாறி மாறி
ஆட்சிக்கு வருவதென்பது மக்களுக்கு பேராபத்தானதாகும்! ஜனநாயகத்தையும்,
மக்களையும் காப்பாற்றவேண்டுமானால், எவ்வொரு அரசியல்கட்சியும் நிரந்தர
அமைப்பாக நீடிப்பதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!

✦கமலின் அரசியல் : கமலுடைய அரசியலில், நடிகரும் அவரே, இயக்குனரும்
அவரே! அவருடைய அரசியல் முறையை ஒருவகை "தொழில் நுட்ப முறை"
(Technocracy) எனலாம்! எவ்வாறு ஒரு திரைப்படம் எடுப்பதற்கு பல்வேறு
தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்களோ, அவ்வாறே, அவருடைய
அரசியலும் பல்துறை நிபுணர்கள், வல்லுநர்கள், அறிஞர்கள் ஆகியோரின்
ஆலோசனைகளைக் கேட்டு நிகழ்த்தப்படும் ஒன்றாக இருக்கும் எனக்கொள்ள
லாம்! இவ்வழியே அவர் மக்களுக்கான சில பல நலத்திட்டங்களை நிறை
வேற்றக்கூடும்! ஆயினும், சிறப்பான நிர்வாகம் என்பதே நல்லாட்சியாகிடாது!

எவ்வொரு அரசியல் தலைவரின் அல்லது அவரது கட்சியின் கொள்கை கோட்
பாடுகளையும், வாக்குறுதிகளையும் வைத்து அவரது ஆட்சியின் தன்மையை
கணித்திட முடியாது! ஏனெனில், நேர்முகமாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்
படும் 'காரிய நிரல் பட்டியல்'  (Agenda) ஒன்றாகவும், மறைமுகமான காரிய
நிரல் பட்டியல் வேறொன்றாகவும் இருக்கும் என்பது தவிர்க்கவியலாததாகும்!
ஏனெனில், அரசியல் மேடையைப் பொறுத்தவரையில், மேடையில் தோன்றும்
கதா பாத்திரங்களான, முதலமைச்சர், மற்றும் பிற அமைச்சர்களைக் கொண்டு
மட்டும் ஆட்சி நடைபெறுவதில்லை! மாறாக, அம்மேடைக்குப் பின் புலத்தில்
இருந்துகொண்டு மேடையிலுள்ள கதா பாத்திரங்களை இயக்கும் ஆதிக்க
சக்திகளையும் (பெருமுதலாளிகள், பெரும்பணக்காரர்கள், அதிகாரவர்க்கத்
தினர் ஆகியோரையும்) கணக்கில் கொள்ளவேண்டும்!

ஆகவே, ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆட்சி செயல்படாததாயுள்ளது, ஊழல்
மலிந்ததாக உள்ளது, வரிச்சுமை, விலைவாசி ஏற்றம் ஆகியவற்றால் மக்கள்
அல்லல் படுகிறார்கள் என்பதால் அக்குறிப்பிட்ட கட்சியையும், அதன் தலை
வரையும் மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்க முடியாது! ஒரு நாட்டில்
நல்லாட்சி நடக்கவேண்டுமென்றால், ஆட்சியாளர்கள், ஆதிக்கச் சக்திகள்,
மற்றும் மேட்டுக்குடிகளின் (Elites)அச்சுறுத்தல்களிடமிருந்து தொற்றுத்
தடுப்புச்சக்தி (Immunity) பெற்றிருக்கவேண்டும்! அதாவது, ஆதிக்கச் சக்தி
களின் தலையீட்டையும், குறுக்கீட்டையும் முற்றாகத் தவிர்க்கும் விதத்தில்
நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிப்பவர்களாயிருத்தல் வேண்டும்!

ஏனெனில், அரசியல் என்பது எல்லாக்காலங்களிலும், மக்களின் நலன்களும்
மக்கள்-விரோத ஆதிக்க சக்திகளின் நலன்களும் மோதிக்கொள்ளும் ஒரு
களமாகத்தான் இருந்து வந்துள்ளது! அதில் மக்கள் நலன்கள் என்பவை
எப்போதும் பேரம்பேசப்பட்டு தியாகம் செய்யப்பட்டுவிடும்!

அதே நேரத்தில், ஒரு நாட்டை, அல்லது, ஒரு மாநிலத்தை எந்தக்கட்சி
ஆண்டாலும், ஆளும் தலைவர், அல்லது, முதல்வர் என்பவர்  மூடராகவே
இருந்தாலும்கூட, அல்லது ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும்கூட, மக்களின்
குறைந்த பட்ச நலன்கள் என்பவை, அதாவது அரை வயிற்று உணவுடன்
உயிர்-பிழைத்திருக்கும் அளவிற்கு எப்போதும் அருளப்படும்! ஏனெனில், ஆட்சி
யாளர்களைப் பொறுத்தவரை, மக்கள் என்போர் உயிர்-பிழைத்திருப்
பதற்காக உழைத்துத் தேயும் எந்திரங்கள், மேலும், 1 சதவிகித ஆதிக்கசக்திகள்,
மேட்டுக்குடிகளின் நலன்களானவை எப்போதும் 99 சதவிகித உழைக்கும்
மக்களின் உழைப்பையும், உற்பத்தியையுமே சார்ந்திருக்கின்றன!

தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரண்டு திராவிடக்கட்சிகளும் மாறி
மாறி ஆண்டு மக்களை அலைக்கழித்து வந்துள்ளன! "இந்த இரு திராவிடக்
கட்சிகளின் பிடிகளிலிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும்!" எனும்
தமிழருவி மணியன் அவர்களின் ஆவேசக்கூற்றில் நியாயம் இல்லாமல்
இல்லை! அதேநேரத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக அவசரஅவசரமாக
அவர் சிபாரிசு செய்யும், இன்னும் தன் கட்சியைக்கூடத் தொடங்காத நடிகர்
ரஜினியின் மீது அவர் வைக்கும் நம்பிக்கை அவரது அரசியல் பார்வையின்
ஆழத்தை, முதிர்ச்சியை கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது! அதாவது, ரஜினி
தனது அரசியல்பிரவேசத்தை அறிவித்த உடனேயே எடுக்கப்பட்ட ஒரு செய்தி
ஊடகத்தின் கருத்துக்கணிப்பு, ரஜினி 21% வாக்குகளைப் பெறுவார் என்று
சொல்லியது! திரு தமிழருவி மணியனும், ரஜினி 21% வாக்குகளைப் பெறுவார்
என்று கணிக்கிறார்! ஆனால், "தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெறுவது
எப்படி எனத்தெரிந்த எவரும் நாட்டை சிறப்பாக ஆளத்தெரிந்தவரே என்பதாக
எப்படி நாம் நம்புகிறோம்?" என 2400 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க தத்துவ
ஞானி பிளேட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்!

கமல் தனது அரசியல் நகர்வை மிக நுட்பமாகத் திட்டமிட்டுச் செய்கிறார்.
அவர் சாதாரண மக்களின் நலன்களைப்பற்றி அக்கறையுடன் பேசுகிறார்!
அவருடைய "கிராமம்", "விவசாயம்", "விவசாயி" ஆகியவற்றை மையப்படுத்திப்
பேசும் "கிராம-மைய அரசியல்", சரியான தொடக்கப்புள்ளியாகத் தெரிகிறது!

அதே நேரத்தில், கமலின் 'இந்தியன்' எனும் தேசியச் சார்பைவிட 'தமிழன்'
எனும் தமிழ்தேசியச் சார்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது! "தமிழன் என்பது
ஒரு விலாசம் (அடையாளம்) தானே தவிர அது ஒரு தகுதி அல்ல!" எனும்
கமல்ஹாசனின் கூற்றில் ஜனநாயகம் இருக்கிற அளவிற்கு காலம் கடந்து
முளைத்தெழும் தேவையான மாநில சுயாட்சிக்கான தடயம் சிறிதும் இல்லை!
ஆனால், அவர் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஓட்டு
வேட்டைக்காக தன்னை ஒரு தமிழன் எனக்காட்டிக்கொள்ளத் தயங்கவில்லை!

புதிதாக அரசியலில் இறங்கும் இரு பெரும் நடிகர்களான கமலும், ரஜினியும்
தங்களது திரைப்பட பிம்பத்தையும், பிரபல்யத்தையும் பிரதான முதலீடாகப்
பயன்படுத்திக்கொள்வர் என்பதில் சந்தேகமில்லை! தங்களது ரசிகர் படையை
அவர்கள் தொண்டர்படையாகக் கொண்டு சில சதவிகித ஓட்டுக்களைப் பெறு
வர் என்பதும் நிச்சயம்! இப்போதே அவ்விருவரும் ஒரு 'அரசியல்வாதி' க்கே,
குறிப்பாக, ஒரு அரசியல் தலைவருக்கே உரிய பாவனையை, சொல்லாடலை
பிரயோகிக்கத் தொடங்கிவிட்டனர்!

எனினும் இருவருக்குமே 'அரசியல்வாதி' எனும் வேடம் இன்னும் சரிவரப்
பொருந்தி வருவதாகத் தெரியவில்லை! ஆனால், ஊடகங்கள் இருவரையும்
அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும், நகர்வையும் பெரிதாகக்காட்டியும்,
பேசியும் வருகின்றன! ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைமை
ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தை இருவரில் எவர் நிரப்புவார், அடுத்து
வரும் தேர்தலில் இவர்களில் எவர் வெற்றி பெறுவார்? அல்லது எதிர்க்கட்சி
வெற்றி பெறுமா, அல்லது தற்போதைய ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியைப்
பிடிக்குமா? இக்கேள்விகளுக்கான விடைகள் 'மக்களின் தீர்ப்பு' எனும் தெளி
வில்லா மனங்களின் தேர்வில் அடங்கியுள்ளன! இவ்வகையில், ஜனநாயகம்
என்பது குருடர்களுக்காக, குருடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குருடர்களால்
நடத்தப்படும் ஆட்சியேயாகும்!

✦வாக்காளர்களின் அரசியலும் உளவியலும்!

ஆம், வாக்காளர்களாகிய மக்களும் அரசியல்வாதிகளைப்போல ஆகிவிடுவது
தேர்தல் காலத்தில் நிகழ்கிறது! வாக்குச்சீட்டை உடனடிப்பலனைப் பெறுவதற்
கான ஒரு வாய்ப்புச்சீட்டாக வாக்காளர்கள் கருதுவதாகத் தெரிகிறது! 

உண்மையில் வாக்காளர்களின் உளவியலைப் புரிந்துகொள்வது என்பது மிக
மிகக் கடினமானது! மக்கள் இன்னமும் தங்களது ஜனநாயக உரிமைகளையும்,
கடமைகளையும் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள் என்பதுதான் புலனாகிறது!
மக்கள் இன்னும் தங்களுக்கான அரசியலை அறியாமல், அரசியல்வாதிகளின்
அரசியலையே பேசிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் உள்ளனர்!
மக்களின் அரசியல் பங்கேற்பு என்பது ஓட்டுப்போடுவதுடன் முடிந்துவிடுகிறது!
அதாவது, எங்கு தொடங்க வேண்டுமோ அங்கேயே முடிந்து போகிறது! இது
அரசியல் வாதிகளுக்குச் சாதகமாகி விடுகிறது! கேட்டால், "மக்கள் தீர்ப்பு",
"மக்களின் முடிவு" என்று அரசியல்வாதிகள் பசப்புகிறார்கள்! இன்னும் நாம்
எவ்வளவு காலத்திற்கு  "பெரிய தீமை" க்குப் பதிலாக, "சிறிய தீமை" யை
தேர்ந்தெடுத்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்!

தமிழ் நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆண்டுவந்த இரு
பெரும் திராவிடக்கட்சிகளைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் தேர்தலில்
அவையிரண்டும் மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கான நியாயத்தை
யும், அடிப்படையையும் இழந்து நிற்கின்றன! தமிழ் நாட்டின் நகரங்களாயினும்,
கிராமங்களாயினும், சாலை, குடிநீர், வடிகால் ஆகிய அடிப்படைக் கட்டமைப்
புகள் சரியாக இல்லை! இங்கே பொறியியல் கல்லூரிகள் பெருகிய அளவிற்கு
தொழிற்சாலைகள் பெருகவில்லை! இதன் விளைவு ஆண்டு தோறும் லட்சக்
கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பின்றி

அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்! எங்கள் ஆட்சியில் நாங்கள் இதைச் செய்
தோம், அதைச்செய்தோம் என்று மாறி மாறி சாதனைப்பட்டியல் வாசிக்கும்
இரு திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்
களுடன் ஒப்பிட்டால், ஒரு சராசரி சாமான்ய மனிதனிடம் சொத்து என்று
சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமேயில்லை எனும் அவல நிலைதான் தொடர்
கதையாகத் தொடர்கிறது! தமிழக அரசாங்கம் பல லட்சம் கோடிகள் கடனில்
தத்தளிக்கிறது; ஆனால் தமிழக அமைச்சர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகளாக
விளங்குகிறார்கள் எனும் மாபெரும் முரண்பாடு மிக எளிதாக மறைக்கப்படு
கிறது, மறக்கப்படுகிறது!

மா.கணேசன்/ 12-02-2018
----------------------------------------------------------------------------

Sunday, 6 May 2018

சரியான பாடல் தவறான தாளம்!





வானக, வையகத்திற்குத்
தங்கள் கருணை சொந்தமில்லை.
அவற்றுக்கு
அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

ஞானிக்கும்
தன் கருணை சொந்தமில்லை.
அவனுக்கு
மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்திற்கு இடைப்பட்ட வெளி
கொல்லர் துருத்தி மாதிரி இருக்கிறது.
காலியாகத் தோன்றினாலும் அந்த வெளியில்
இல்லாதது ஒன்றும் இல்லை.
இயக்கப்பட்டால் அது
இன்னும்கூட நிறைய உருவாக்கும்.

அதிகம் பேசுகிற மனிதன்
விரைவில் அயர்ந்து போகிறான்.

அவன்
தன்னிடம் இருப்பதைத்
தன்னிடமே வைத்துக்கொல்வது நல்லது.

                2500 ஆண்டுகளுக்கு முன்பு சீன ஞானி லாவோ ட்சு
                எழுதிய 'தாவோ தேஜிங்' நூலிலிருந்து தமிழில் சி.மணி.
                            •••

இக்கட்டுரை, தமிழ் இந்து நாளிதழ்-ன் வார இதழான காமதேனு (15-04-2018)
வில் கட்டுரையாளர் திரு ஆசை(த்தம்பி) அவர்கள் எழுதி வெளியான, "தாவோ
புதிய பாதை" என்கிற தலைப்பின் கீழ் இடம்பெற்ற கட்டுரையில் காணப்படும்
சில முக்கியமான கருத்தாம்சங்களின் மீதான சில பார்வைகளை முன்வைக்கும்
முகமாக எழுதப்பட்டதாகும்.

   "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மிகவும் விசேடமானவர்கள் என்று கருதிக்
   கொள்கிறோம். "பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான்
   நாம்" என்று கார்ல் சேகன் கூறியதைப்போல்தான் நாமும் நினைத்துக்
   கொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் அர்த்தத்தைக்கண்டுபிடிக்கிறோம்,   
   கொடுக்கிறோம்...."   (ஆசை)

மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிகள், "இப்பிரபஞ்சத்தில் மனிதனின் இடம்
எத்தகையது?" அதாவது, "இப்பிரபஞ்சத்தில் மனிதன் விசேடமானவனா அல்லது,
முக்கியத்துவம் ஏதுமற்றவனா? எனும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்
கான ஒரு பதிலை அல்லது விளக்கத்தை சீன ஞானி  லாவோ ட்சு அவர்களின்
ஒரு பாடலை முன்னிறுத்தி அளிக்க முயற்சிக்கிறது எனலாம்.

   "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மிகவும் விசேடமானவர்கள் என்று கருதிக்
   கொள்கிறோம்."      (ஆசை)

ஆசைத் தம்பியின் இக்கூற்று மனிதர்கள் தங்களை மிகவும் விசேடமானவர்கள்
என்று கருதிக்கொள்வதை எள்ளி நகையாடுகிறது! பொதுவாக மனித ஜீவிகள்
ஒவ்வொருவரும், தாம் முக்கியமானவர், விசேடமானவர், தனித்தன்மையானவர்
என்று கருதிக்கொள்ளும் உள்ளீடற்ற ஒரு மனப்போக்கு உள்ளது என்பதை நாம்
குறிப்பிட்டேயாக வேண்டும்! அகந்தை, தன்முனைப்பு, தன்னலம், ஆணவம்,
உள்ளீடற்ற சுய-முக்கியத்துவம் போன்றவை அந்த மனப்போக்கின் வெளிப்பாடு
களே! அதே நேரத்தில், மனித ஜீவிகள் ஒவ்வொருவரும் தம்மை முக்கியமான
வர், விசேடமானவர், என்று கருதிக்கொள்வது என்பது வெகு இயல்பானதொரு
எண்ணமே தவிர, அது எவ்வகையிலும் அடாத, முறையற்ற, பொருத்தமற்ற,
சாத்தியமற்ற நிலைப்பாடு அல்ல! அதிலுள்ள ஒரே பிரச்சினை என்னவெனில்,
அவ்வாறு தன்னுள் எழும் எண்ணத்தை இறுதிவரைப் பற்றிச் சென்று இப்
பிரபஞ்சத்தில் தனது உண்மையான முக்கியத்துவத்தை, விசேட தன்மையை
உணர்ந்தறியாமலேயே இருக்கிறோம் என்பதேயாகும்!

அடுத்து, "பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான் நாம்" என்று
கார்ல் சேகன் கூறியதாகச் சொல்லப்படுவதைக் கேட்பதற்கே இனிமையாகவும்,
மனதிற்கு இதமாகவும் இருக்கிறது. ஏனெனில், கார்ல் சேகன் (Carl Edward
Sagan, 1934-1996), ஒரு வானவியல் விஞ்ஞானியான அவர் மனிதஜீவி
களாகிய நம்மையும் பிரபஞ்சத்தையும் இணைத்து இவ்வாறான ஒரு கருத்தைச்
சொல்வது என்பது கொண்டாடப்படவேண்டியதொரு விடயம் ஆகும்! ஏனெனில்
இது வெறும் ஒரு கருத்து அல்ல, இது ஒரு ஆழமான உண்மையாகும்! அதே
நேரத்தில், அவர் அறியாத, கண்டு சொல்லாத உண்மைகள் அநேகம்!

கார்ல் சேகன் சொல்லிய அந்த முழு வாசகம் இதோ : "நாம் நட்சத்திரப் பொரு
ளால் ஆனவர்கள். பிரபஞ்சம் தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி நாம்"
இக்கூற்று மிக ஆழமான அர்த்தங்களைக் கொண்டதாகும்; அதை வெறுமனே
ஒரு மேலோட்டமான வாசிப்பின் மூலம் புரிந்துகொண்டுவிட இயலாது! மேலும்,
நூற்றுக்கணக்கான வானவியல், பிரபஞ்சவியல் சம்பந்தமான நூல்களைப்
படித்துத் திரட்டப்பட்ட பெரும் தரவுகளைக் கொண்டும் புரிந்துகொள்ளமுடியாது!

அதாவது, "பிரபஞ்சமானது தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி அல்லது
கருவியே நாம்" என்பதன் அர்த்தம் என்ன? மேலும், பிரபஞ்சம் தன்னை அறிந்து
கொள்வதற்கான வெறும் கருவி மட்டும் அல்ல நாம். அதாவது, மனிதனை
பிரபஞ்சத்தின் ஒரு கருவியாகச் சுருக்கிவிடலாகாது; இவ்வாறு பொருள்
கொள்வது தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றுவிடும். ஏனெனில், பிரபஞ்சம்
வெறும் ஒரு எந்திரம் போன்றதல்ல, நாம் அதன் ஒரு பாகம் மட்டுமே அல்ல!

"பிரபஞ்சம் தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி நாம்" எனும் இக்கூற்றை,
வாசகத்தை கீழ்க்காணும் வகையில் நாம் விரித்துக் காண வேண்டும்!

• பிரபஞ்சத்திற்கு தன்னைத் தானே அறிந்துகொள்ள வேண்டிய அவசியம்
  அல்லது கட்டாய விழைவு உள்ளது.

• அதே நேரத்தில், பௌதீகச் சடப்பொருளால் ஆன, உயிரற்ற, உணர்வற்ற
   பிரபஞ்சம் எவ்வாறு தன்னைத் தானே அறிந்துகொள்ள இயலும்? என்ற
   கேள்வியையும் அவ்வாசகம் உள்ளடக்கியுள்ளது.

• இக்கேள்விக்கான பதிலாக, பிரபஞ்சமானது தன்னை அறிந்துகொள்வதற்காக
   மனிதனை ஒரு வழியாகக் கொள்கிறது, அல்லது கருவியாகப் பயன்படுத்து
   கிறது என்பதையும் அவ்வாசகமே சொல்லுகிறது!

• அப்படியானால், பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு, உறவு
   எத்தகையது? அதாவது, மனிதன் இப்பிரபஞ்சத்திற்குள் எவ்வாறு எங்கிருந்து
   வந்து சேர்ந்தான்?

• மனிதன் இப்பிரபஞ்சத்திற்கு வெளியே எங்கிருந்தும் கொண்டுவரப்பட்டவன்
  அல்ல! மாறாக, இப்பிரபஞ்சமானது தன்னை அறிவதற்குரிய பொருத்தமான
  அம்சங்களைப் பெறும் வகையில் பரிணாமத்தின் வாயிலாக தன்னிலிருந்தே
  வெளிக்கொண்டுவரப்பட்டவனே மனிதன்! 

• இதன் அர்த்தம் பிரபஞ்சமும் மனிதனும் வேறு வேறு அல்ல! அதாவது,
   பிரபஞ்சத்தின் ஒரு விசேடமான நிலைமாற்றமே மனிதன்!

• அதே நேரத்தில், தன்னை அறிவதற்காக (பரிணாமத்தின் வழியாக) பிரபஞ்சம்
   மனிதனாக மாறியது என்பதுடன் பிரபஞ்சத்தின் தன்னை அறியும் நோக்கம்
   முழுமையாக நிறைவேறிவிடுவதில்லை!

• ஏனென்றால், பிரபஞ்சத்தை அறிய மனிதன் வந்தான்; ஆனால் மனிதனை
   அறிய யார், அல்லது எது வரும்?

• உண்மையில் பிரபஞ்சம் தன்னை அறிவதும், மனிதன் தன்னை அறிவதும்,
   இவ்விரண்டுமே ஒன்றுதான்! ஆயின், மனிதன் தன்னை அறியாதவரை
   தன்னை அறியும் பிரபஞ்சத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறுவது
   இல்லை!

• ஆக, இவ்வாறு நாம் விரித்துக்கொண்டே போகலாம் -- முடிவேயில்லாமல்
   அல்ல -- மாறாக, முடிவான முழுமையான பதிலை, புரிதலை அடையும்
   வரை!

சரி, இனி நாம் ஆசைத்தம்பி அவர்களின் பிற கருத்தாம்சங்களையும் சேர்த்துக்
கொண்டு நம்முடைய புரிதலில் முன்னேறிச்செல்வோமாக.

   "கடவுளை நம் உருவத்தில் படைத்திருப்பதுபோல் பிரபஞ்சத்தையும் நம்
   உருவத்தில் படைக்கும் செயல்தான் இது. ஆனால், பிரபஞ்சம் நாம்
   கொடுக்கும் அர்த்தமாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை.
   அது வெறுமனே இருக்கிறது!     (ஆசை)

உண்மையில், கடவுளை நம் உருவத்தில் நாம் படைக்கவில்லை; மாறாக,
கடவுள் (அனைத்துக்கும் மூலமாகிய மெய்ம்மை) தான் நம் உருவத்தில்
வெளிப்பட்டிருக்கிறார். அடுத்து, இப்பிரபஞ்சத்தையும் நாம் நம் உருவத்தில்
படைக்க முயற்சிக்கவில்லை; மாறாக, பிரபஞ்சம் தான் நம் உருவத்தை
எடுத்திருக்கிறது! ஏனெனில், மனிதன் என்பவன் உண்மையில், பிரபஞ்சத்தின்
நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையுமே தவிர வேறல்ல! மேலும், ஒருவகையில்,
திரு. ஆசை அவர்கள் சொல்வது போல, "பிரபஞ்சம் நாம் கொடுக்கும் அர்த்த
மாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை." என்பது உண்மையே!
எவ்வாறெனில், நாம்தான், அதாவது பிரபஞ்சத்தின் உள்ள்ளார்ந்த விழைவைப்
புரிந்து நிறைவேற்றும் உணர்வார்ந்த ஒவ்வொரு மனிதனும்தான், பிரபஞ்சத்
தின் அர்த்தமாக மலர்கிறோம்; மலர வேண்டும்! இறுதியாக, "இப்பிரபஞ்சம்
வெறுமனே இருக்கிறது" என்பது ஒரு தோற்றப்பிழையே தவிர அது உண்மை
யல்ல!

ஆம், இப்பிரபஞ்சம் வெறுமனே நம்மிடமிருந்து தொடர்பற்று தனித்திருக்க
வில்லை! அது சும்மா வெறுமனே இருப்பதாகத்தோற்றம் தருவதற்குக்காரணம்
நாம் அதன் நீட்சியாக, அதன் கண்களாக, செவிகளாக, இதயமாக வெளிப்பட்
டிருக்கிறோம் என்பதாலேயே யாகும்! நாம் இப்பிரபஞ்சத்தின் உயர்-வளர்ச்சி
நிலையாக வெளிப்பட்ட பிறகு, பிரபஞ்சமானது நம்முடைய பகுதியாக மாறி
விடுகிறது! ஆகவே, இனி செயல்பட வேண்டியவர்கள் மனித ஜீவிகளாகிய
நாம் ஒவ்வொருவரும் தானே தவிர பிரபஞ்சம் அல்ல; ஏனெனில் நாம்தான்
இப்பிரபஞ்ச இயக்கத்தின் அம்புத்தலை! ......

   "பிரபஞ்சத்தின் மீதும் இயற்கையின் மீதும் நம் உணர்வுகளை ஏற்றிவிடு
   கிறோம். மழையின் கருணை, மழையின் கோபம், இயற்கையின் சீற்றம்
   என்றெல்லாம் கூறுகிறோம். ....

   உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது.
   அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ ஏதும்
   கிடையாது. ....
   இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும்
   ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும்
   ஒன்றுதான். .... "     (ஆசை)

ஆம், முதல் கோணல் முற்றும் கோணல் என்பதால், இக்கட்டுரையில் நாம்
அந்த முதல் கோணலை சரி செய்திடும் பட்சத்தில், அதைத் தொடர்ந்து
அமைந்திடும் அடுத்தடுத்த கோணல்களும் சரி செய்யப்பட்டுவிடுவது சர்வ
நிச்சயம்!

உண்மையில், "பிரபஞ்சத்தின் மீதும் இயற்கையின் மீதும் நம் உணர்வுகளை"
நாம் ஏற்றிவிடுவதில்லை; மாறாக, பிரபஞ்சம் தான் அனைத்து வித உணர்வு
களையும் தன் மீது ஏற்றிக்கொள்கிறது! இல்லாவிடில் பிரபஞ்சம் என்பது
உயிரற்ற, உணர்ச்சியற்ற, உணர்வற்ற வெறும் பௌதீகச் சடப்பொருளின்
எந்திர இயக்கமாக மட்டுமே தொடர்ந்துகொண்டிருக்கும் -- எதையும், எதுவும்
அறிய, ஆராய, உணர நாதியற்ற நிலையில்!

முக்கியமாக, பிரபஞ்சம் என்பதும், அதிலுள்ள ஒவ்வொரு அணுத்துகளும், புழு
பூச்சியும், புல்லும் பூண்டும், விலங்கும், மனிதனும் இப்பிரபஞ்சத்திலிருந்து
வேறானதல்ல! ஒவ்வொன்றும் பிற ஒவ்வொன்றுடனும் ஓர் மாபெரும்
வலைப்பின்னலில் இணைந்துள்ளதால், மழையின் கருணை, கோபம், சீற்றம்
யாவும் பொருத்தப்பாடுடையவையே! இப்பிரபஞ்சத்தில் எதுவும் இடம் தவறி
யதாய் இருக்கவில்லை! புல், பூண்டுகளாகிய பிரபஞ்சத்திற்கு மழையாகிய
பிரபஞ்சம் உயிர் போன்றதாகும், ஆகவே மழை எனும் கருணை மிக அவசிய
மாகும்! புல்லை மேய்ந்து வாழும் கால்நடைகளாகிய பிரபஞ்சத்திற்கு மழை
யாகிய பிரபஞ்சம் அமிர்தமாகும்; கால்நடைகளைச் சார்ந்து வாழும் மனிதர்
களாகிய பிரபஞ்சத்திற்கு மழையாகிய பிரபஞ்சம் இன்றியமையாததாகும்!

அடுத்து, "உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது.
அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ ஏதும் கிடையாது..."
என்பதும் சரியானதல்ல! ஏனெனில், இயற்கையானது மனிதனுடனும், பிறவற்
றுடனும் யாதொரு தொடர்புமற்ற வகையில் தன் போக்கில் இருக்கவில்லை,
இயங்கவில்லை! உண்மையில் இயற்கைக்கு ஒரு போக்கு, வழிமுறை இருக்
கத்தான் செய்கிறது; அந்த வழிமுறைக்குப் பெயர் "பரிணாமம்" என்பதாகும்!
அவ்வழிமுறையின் மூலமாகத்தான் பிரபஞ்சமானது அண்டத்து பொருள்
களாகவும், பல்வேறு விசித்திர நிகழ்வுகளாகவும், உயிர்-ஜீவிகளாகவும், உணர்
வுள்ள, சிந்திக்கின்ற மனித ஜீவிகளாகவும்.... யாவுமாகியது!

பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளாக, அவற்றிலும் குறிப்பாக, மனித ஜீவிகளாக
எழும்வரை மட்டுமே அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ
ஏதும் கிடையாது என்று சொல்லலாம். ஒரு கட்டத்தில் உயிர்-ஜீவிகளின்
நிலையை எட்டிய பிறகு, அவ்வுணர்வுகள் இல்லாமல் உயிரினங்கள் வாழ
வியலாது!

அடுத்து, "இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும்
ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும் ஒன்றுதான்."
என்ற கூற்று முற்றிலும் தவறானது; ஏனெனில், இக்கூற்று பரிணாமத்தின்
அடிப்படை அம்சம் அல்லது வளர்ச்சி எனும் விதியையே மறுக்கிறது! வேண்டு
மானால், ஞானியும் இயற்கைதான், அஞ்ஞானியும் இயற்கைதான் என்று ஒரு
பார்வையில் கொள்ளலாமே தவிர, ஞானியும், அஞ்ஞானியும் ஒன்றுதான்
என்று சொல்வதற்கு இடமில்லை! அவ்வாறே புலியும் மானும் ஒன்றுதான்
என்று சொல்வதற்கும் இடமில்லை!

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை, ஞானி, அல்லது ஞான நிலையே அதன்
ஒப்பற்ற இலக்காக இருக்கிறது என்று கொள்ளலாம். சீன ஞானி லாவோ ட்சு
அவர்களும் இதைத்தான் சொல்கிறார்! - இப்போது, நாம் ஞானி லாவோ ட்சு -
வின் பாடலுக்கு வருவோம். லாவோ ட்சு சொல்கிறார் :

   வானக, வையகத்திற்குத்
   தங்கள் கருணை சொந்தமில்லை.
   அவற்றுக்கு
   அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

   ஞானிக்கும்
   தன் கருணை சொந்தமில்லை.
   அவனுக்கு
   மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்தை, அதாவது இயற்கை, அல்லது பிரபஞ்சத்தைப் பொறுத்த
வரை அனைத்தும் வைக்கோல் நாய்தான் என்கிறார்! அடுத்து, ஞானியைப்
பொறுத்தவரையில் மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான் என்கிறார்!
இப்பாடலில் லாவோ ட்சு அவர்கள் பிரபஞ்சத்தையும், ஞானியையும் சமநிலை
யில் வைக்கிறார்! எனினும், பிரபஞ்சத்திற்கும் சரி, ஞானிக்கும் சரி தத்தம்
கருணை சொந்தமில்லை என்று சொல்வதன் வழியே, கருணை, அன்பு
என்பதை அவர் ஞானியையும், பிரபஞ்சத்தையும் கடந்த ஒப்பற்ற இறுதியான,
கடப்பு நிலை மெய்ம்மை எனச் சுட்டுகிறார்! ஆம், அன்பு, அல்லது, கருணை
என்பதுதான் இப்பிரபஞ்சத்தின் மூலப்பண்பு, அல்லது சாரமான மெய்ம்மை
ஆகும்! அதை நாம் ஒருமையும் முழுமையுமானதொரு பேருணர்வு எனலாம்!

அடுத்து, ஆசைத்தம்பி அவர்களின் கட்டுரையில், நம் உடலின் அணுக்கள்
பற்றிய ஒரு குறிப்பு ஒன்று வருகிறது :

   மரணத்துக்குப் பிறகு நம் உடல் அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப்
   பிரிந்து மறுசுழற்சியடைகின்றன. ஷேக்ஸ்பியர் உடலில் இருந்த அணுக்
   களில் சுமார் நூறு கோடி அணுக்களாவது, இயற்கையின் மறுசுழற்சி
   முறையில் நம் ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக்கூடும்
   என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். ஷேக்ஸ்பியரின் உடல்
   என்பதால் இயற்கை அதற்குத் தனிமதிப்புக் கொடுத்துப் பத்திரப்படுத்தி
   வைக்கவில்லை. அவர் உடலின் அணுக்களும் ஆதியில் ஏதாவதொரு   
   விண்மீன் வெடிப்பிலிருந்து வந்துசேர்ந்தவைதான். மரணம் நம்மை
   மட்டுமல்ல, ஷேக்ஸ்பியர்களையும், விண்மீன்களையும் கூட
   மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் பொருட்கள்போல் ஆக்கிவிடுகிறது..."
             (ஆசை) 

திரு.ஆசை அவர்கள் ஞானி லாவோ ட்சு அவர்களின் ஒரு பாடலுக்கு
விளக்கம் தருவதற்காக இறங்கி இயற்கை, பிரபஞ்சம் பற்றியும், இவற்றிற்கும்
மனிதனுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து
கொள்ளும் ஆர்வத்தில், லாவோ ட்சு பாடலுக்கு சம்பந்தம் இல்லா பல கருத்து
களையும் போகிற போக்கில் அடுக்கிச் சென்று விடுகிறார். அவை கிட்டத்தட்ட
பொருண்மை வாதப் பார்வையில் அமைந்தவையாக, ஆகவே, தவறானவை
யாக உள்ளன. அதாவது, மனித உடலின் அணுக்களும், மனிதனும் ஒன்று
என்பது போல் திரு.ஆசை அவர்கள் கூறியுள்ளது தவறானது, பொருத்தமற்றது
ஆகும். இப்பிரபஞ்சத்திலுள்ள அணுக்கள் யாவும் ஒரே மாதிரியானவை, பொது
வானவை! அதாவது, வீடு கட்டுவதற்கான அடிப்படைக்கட்டுமானப் பொருளான
செங்கற்கள் போன்றவையே அணுத்துகள்கள் எனலாம்! ஆக, ஒரு வீட்டின்
செங்கற்களைப் பிரித்தெடுத்து வேறொரு வீடு கட்டுவதற்குப் பயன் படுத்திக்
கொள்ள இயலும் என்பதைப் போல 'ஷேக்ஸ்பியரின் மரணத்துக்குப் பிறகு
அவரது உடலின் அணுக்கள் இயற்கையின் மறுசுழற்சி முறையில் நம்
ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக்கூடும்' என அறிவியலாளர்கள்
நம்பலாம்; ஆனால், இச்சிறு விடயம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல!
ஏனெனில், ஷேக்ஸ்பியரின் உடலணுக்கள் அவருடைய உடலின் அணுக்கள்
மட்டுமே தவிர அவை ஷேக்ஸ்பியர் அல்ல!

ஆக, "மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல, உடலின் அணுக்களும் அல்ல
என்றால், பின் எது தான் மனிதன்?" என்று வாசகர்கள் கேட்கலாம்! ஆனால்,
அதி முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குள்
கேட்டு அதற்கான பதிலை அடைவதில் தான் மனித வாழ்வின் அர்த்தம்,
முழுமை, சாகாநிலை யாவும் அடங்கியுள்ளன!

  "நான் யார் தெரியுமா?" என்று ஒருவன் அடுத்தவரிடம் கேட்பதில்
  அர்த்தமில்லை; அவன் வெறும் வைக்கோல் நாய்தான்!
  மாறாக, "தான் உண்மையில் யார்?" என்று தன்னிடமே
  கேட்பவனே தன்னைக் கண்டடைபவனாகிறான்!

மா.கணேசன் • 01-05-2018
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...