Sunday, 6 May 2018

சரியான பாடல் தவறான தாளம்!





வானக, வையகத்திற்குத்
தங்கள் கருணை சொந்தமில்லை.
அவற்றுக்கு
அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

ஞானிக்கும்
தன் கருணை சொந்தமில்லை.
அவனுக்கு
மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்திற்கு இடைப்பட்ட வெளி
கொல்லர் துருத்தி மாதிரி இருக்கிறது.
காலியாகத் தோன்றினாலும் அந்த வெளியில்
இல்லாதது ஒன்றும் இல்லை.
இயக்கப்பட்டால் அது
இன்னும்கூட நிறைய உருவாக்கும்.

அதிகம் பேசுகிற மனிதன்
விரைவில் அயர்ந்து போகிறான்.

அவன்
தன்னிடம் இருப்பதைத்
தன்னிடமே வைத்துக்கொல்வது நல்லது.

                2500 ஆண்டுகளுக்கு முன்பு சீன ஞானி லாவோ ட்சு
                எழுதிய 'தாவோ தேஜிங்' நூலிலிருந்து தமிழில் சி.மணி.
                            •••

இக்கட்டுரை, தமிழ் இந்து நாளிதழ்-ன் வார இதழான காமதேனு (15-04-2018)
வில் கட்டுரையாளர் திரு ஆசை(த்தம்பி) அவர்கள் எழுதி வெளியான, "தாவோ
புதிய பாதை" என்கிற தலைப்பின் கீழ் இடம்பெற்ற கட்டுரையில் காணப்படும்
சில முக்கியமான கருத்தாம்சங்களின் மீதான சில பார்வைகளை முன்வைக்கும்
முகமாக எழுதப்பட்டதாகும்.

   "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மிகவும் விசேடமானவர்கள் என்று கருதிக்
   கொள்கிறோம். "பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான்
   நாம்" என்று கார்ல் சேகன் கூறியதைப்போல்தான் நாமும் நினைத்துக்
   கொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் அர்த்தத்தைக்கண்டுபிடிக்கிறோம்,   
   கொடுக்கிறோம்...."   (ஆசை)

மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிகள், "இப்பிரபஞ்சத்தில் மனிதனின் இடம்
எத்தகையது?" அதாவது, "இப்பிரபஞ்சத்தில் மனிதன் விசேடமானவனா அல்லது,
முக்கியத்துவம் ஏதுமற்றவனா? எனும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்
கான ஒரு பதிலை அல்லது விளக்கத்தை சீன ஞானி  லாவோ ட்சு அவர்களின்
ஒரு பாடலை முன்னிறுத்தி அளிக்க முயற்சிக்கிறது எனலாம்.

   "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மிகவும் விசேடமானவர்கள் என்று கருதிக்
   கொள்கிறோம்."      (ஆசை)

ஆசைத் தம்பியின் இக்கூற்று மனிதர்கள் தங்களை மிகவும் விசேடமானவர்கள்
என்று கருதிக்கொள்வதை எள்ளி நகையாடுகிறது! பொதுவாக மனித ஜீவிகள்
ஒவ்வொருவரும், தாம் முக்கியமானவர், விசேடமானவர், தனித்தன்மையானவர்
என்று கருதிக்கொள்ளும் உள்ளீடற்ற ஒரு மனப்போக்கு உள்ளது என்பதை நாம்
குறிப்பிட்டேயாக வேண்டும்! அகந்தை, தன்முனைப்பு, தன்னலம், ஆணவம்,
உள்ளீடற்ற சுய-முக்கியத்துவம் போன்றவை அந்த மனப்போக்கின் வெளிப்பாடு
களே! அதே நேரத்தில், மனித ஜீவிகள் ஒவ்வொருவரும் தம்மை முக்கியமான
வர், விசேடமானவர், என்று கருதிக்கொள்வது என்பது வெகு இயல்பானதொரு
எண்ணமே தவிர, அது எவ்வகையிலும் அடாத, முறையற்ற, பொருத்தமற்ற,
சாத்தியமற்ற நிலைப்பாடு அல்ல! அதிலுள்ள ஒரே பிரச்சினை என்னவெனில்,
அவ்வாறு தன்னுள் எழும் எண்ணத்தை இறுதிவரைப் பற்றிச் சென்று இப்
பிரபஞ்சத்தில் தனது உண்மையான முக்கியத்துவத்தை, விசேட தன்மையை
உணர்ந்தறியாமலேயே இருக்கிறோம் என்பதேயாகும்!

அடுத்து, "பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான் நாம்" என்று
கார்ல் சேகன் கூறியதாகச் சொல்லப்படுவதைக் கேட்பதற்கே இனிமையாகவும்,
மனதிற்கு இதமாகவும் இருக்கிறது. ஏனெனில், கார்ல் சேகன் (Carl Edward
Sagan, 1934-1996), ஒரு வானவியல் விஞ்ஞானியான அவர் மனிதஜீவி
களாகிய நம்மையும் பிரபஞ்சத்தையும் இணைத்து இவ்வாறான ஒரு கருத்தைச்
சொல்வது என்பது கொண்டாடப்படவேண்டியதொரு விடயம் ஆகும்! ஏனெனில்
இது வெறும் ஒரு கருத்து அல்ல, இது ஒரு ஆழமான உண்மையாகும்! அதே
நேரத்தில், அவர் அறியாத, கண்டு சொல்லாத உண்மைகள் அநேகம்!

கார்ல் சேகன் சொல்லிய அந்த முழு வாசகம் இதோ : "நாம் நட்சத்திரப் பொரு
ளால் ஆனவர்கள். பிரபஞ்சம் தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி நாம்"
இக்கூற்று மிக ஆழமான அர்த்தங்களைக் கொண்டதாகும்; அதை வெறுமனே
ஒரு மேலோட்டமான வாசிப்பின் மூலம் புரிந்துகொண்டுவிட இயலாது! மேலும்,
நூற்றுக்கணக்கான வானவியல், பிரபஞ்சவியல் சம்பந்தமான நூல்களைப்
படித்துத் திரட்டப்பட்ட பெரும் தரவுகளைக் கொண்டும் புரிந்துகொள்ளமுடியாது!

அதாவது, "பிரபஞ்சமானது தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி அல்லது
கருவியே நாம்" என்பதன் அர்த்தம் என்ன? மேலும், பிரபஞ்சம் தன்னை அறிந்து
கொள்வதற்கான வெறும் கருவி மட்டும் அல்ல நாம். அதாவது, மனிதனை
பிரபஞ்சத்தின் ஒரு கருவியாகச் சுருக்கிவிடலாகாது; இவ்வாறு பொருள்
கொள்வது தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றுவிடும். ஏனெனில், பிரபஞ்சம்
வெறும் ஒரு எந்திரம் போன்றதல்ல, நாம் அதன் ஒரு பாகம் மட்டுமே அல்ல!

"பிரபஞ்சம் தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி நாம்" எனும் இக்கூற்றை,
வாசகத்தை கீழ்க்காணும் வகையில் நாம் விரித்துக் காண வேண்டும்!

• பிரபஞ்சத்திற்கு தன்னைத் தானே அறிந்துகொள்ள வேண்டிய அவசியம்
  அல்லது கட்டாய விழைவு உள்ளது.

• அதே நேரத்தில், பௌதீகச் சடப்பொருளால் ஆன, உயிரற்ற, உணர்வற்ற
   பிரபஞ்சம் எவ்வாறு தன்னைத் தானே அறிந்துகொள்ள இயலும்? என்ற
   கேள்வியையும் அவ்வாசகம் உள்ளடக்கியுள்ளது.

• இக்கேள்விக்கான பதிலாக, பிரபஞ்சமானது தன்னை அறிந்துகொள்வதற்காக
   மனிதனை ஒரு வழியாகக் கொள்கிறது, அல்லது கருவியாகப் பயன்படுத்து
   கிறது என்பதையும் அவ்வாசகமே சொல்லுகிறது!

• அப்படியானால், பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு, உறவு
   எத்தகையது? அதாவது, மனிதன் இப்பிரபஞ்சத்திற்குள் எவ்வாறு எங்கிருந்து
   வந்து சேர்ந்தான்?

• மனிதன் இப்பிரபஞ்சத்திற்கு வெளியே எங்கிருந்தும் கொண்டுவரப்பட்டவன்
  அல்ல! மாறாக, இப்பிரபஞ்சமானது தன்னை அறிவதற்குரிய பொருத்தமான
  அம்சங்களைப் பெறும் வகையில் பரிணாமத்தின் வாயிலாக தன்னிலிருந்தே
  வெளிக்கொண்டுவரப்பட்டவனே மனிதன்! 

• இதன் அர்த்தம் பிரபஞ்சமும் மனிதனும் வேறு வேறு அல்ல! அதாவது,
   பிரபஞ்சத்தின் ஒரு விசேடமான நிலைமாற்றமே மனிதன்!

• அதே நேரத்தில், தன்னை அறிவதற்காக (பரிணாமத்தின் வழியாக) பிரபஞ்சம்
   மனிதனாக மாறியது என்பதுடன் பிரபஞ்சத்தின் தன்னை அறியும் நோக்கம்
   முழுமையாக நிறைவேறிவிடுவதில்லை!

• ஏனென்றால், பிரபஞ்சத்தை அறிய மனிதன் வந்தான்; ஆனால் மனிதனை
   அறிய யார், அல்லது எது வரும்?

• உண்மையில் பிரபஞ்சம் தன்னை அறிவதும், மனிதன் தன்னை அறிவதும்,
   இவ்விரண்டுமே ஒன்றுதான்! ஆயின், மனிதன் தன்னை அறியாதவரை
   தன்னை அறியும் பிரபஞ்சத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறுவது
   இல்லை!

• ஆக, இவ்வாறு நாம் விரித்துக்கொண்டே போகலாம் -- முடிவேயில்லாமல்
   அல்ல -- மாறாக, முடிவான முழுமையான பதிலை, புரிதலை அடையும்
   வரை!

சரி, இனி நாம் ஆசைத்தம்பி அவர்களின் பிற கருத்தாம்சங்களையும் சேர்த்துக்
கொண்டு நம்முடைய புரிதலில் முன்னேறிச்செல்வோமாக.

   "கடவுளை நம் உருவத்தில் படைத்திருப்பதுபோல் பிரபஞ்சத்தையும் நம்
   உருவத்தில் படைக்கும் செயல்தான் இது. ஆனால், பிரபஞ்சம் நாம்
   கொடுக்கும் அர்த்தமாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை.
   அது வெறுமனே இருக்கிறது!     (ஆசை)

உண்மையில், கடவுளை நம் உருவத்தில் நாம் படைக்கவில்லை; மாறாக,
கடவுள் (அனைத்துக்கும் மூலமாகிய மெய்ம்மை) தான் நம் உருவத்தில்
வெளிப்பட்டிருக்கிறார். அடுத்து, இப்பிரபஞ்சத்தையும் நாம் நம் உருவத்தில்
படைக்க முயற்சிக்கவில்லை; மாறாக, பிரபஞ்சம் தான் நம் உருவத்தை
எடுத்திருக்கிறது! ஏனெனில், மனிதன் என்பவன் உண்மையில், பிரபஞ்சத்தின்
நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையுமே தவிர வேறல்ல! மேலும், ஒருவகையில்,
திரு. ஆசை அவர்கள் சொல்வது போல, "பிரபஞ்சம் நாம் கொடுக்கும் அர்த்த
மாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை." என்பது உண்மையே!
எவ்வாறெனில், நாம்தான், அதாவது பிரபஞ்சத்தின் உள்ள்ளார்ந்த விழைவைப்
புரிந்து நிறைவேற்றும் உணர்வார்ந்த ஒவ்வொரு மனிதனும்தான், பிரபஞ்சத்
தின் அர்த்தமாக மலர்கிறோம்; மலர வேண்டும்! இறுதியாக, "இப்பிரபஞ்சம்
வெறுமனே இருக்கிறது" என்பது ஒரு தோற்றப்பிழையே தவிர அது உண்மை
யல்ல!

ஆம், இப்பிரபஞ்சம் வெறுமனே நம்மிடமிருந்து தொடர்பற்று தனித்திருக்க
வில்லை! அது சும்மா வெறுமனே இருப்பதாகத்தோற்றம் தருவதற்குக்காரணம்
நாம் அதன் நீட்சியாக, அதன் கண்களாக, செவிகளாக, இதயமாக வெளிப்பட்
டிருக்கிறோம் என்பதாலேயே யாகும்! நாம் இப்பிரபஞ்சத்தின் உயர்-வளர்ச்சி
நிலையாக வெளிப்பட்ட பிறகு, பிரபஞ்சமானது நம்முடைய பகுதியாக மாறி
விடுகிறது! ஆகவே, இனி செயல்பட வேண்டியவர்கள் மனித ஜீவிகளாகிய
நாம் ஒவ்வொருவரும் தானே தவிர பிரபஞ்சம் அல்ல; ஏனெனில் நாம்தான்
இப்பிரபஞ்ச இயக்கத்தின் அம்புத்தலை! ......

   "பிரபஞ்சத்தின் மீதும் இயற்கையின் மீதும் நம் உணர்வுகளை ஏற்றிவிடு
   கிறோம். மழையின் கருணை, மழையின் கோபம், இயற்கையின் சீற்றம்
   என்றெல்லாம் கூறுகிறோம். ....

   உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது.
   அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ ஏதும்
   கிடையாது. ....
   இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும்
   ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும்
   ஒன்றுதான். .... "     (ஆசை)

ஆம், முதல் கோணல் முற்றும் கோணல் என்பதால், இக்கட்டுரையில் நாம்
அந்த முதல் கோணலை சரி செய்திடும் பட்சத்தில், அதைத் தொடர்ந்து
அமைந்திடும் அடுத்தடுத்த கோணல்களும் சரி செய்யப்பட்டுவிடுவது சர்வ
நிச்சயம்!

உண்மையில், "பிரபஞ்சத்தின் மீதும் இயற்கையின் மீதும் நம் உணர்வுகளை"
நாம் ஏற்றிவிடுவதில்லை; மாறாக, பிரபஞ்சம் தான் அனைத்து வித உணர்வு
களையும் தன் மீது ஏற்றிக்கொள்கிறது! இல்லாவிடில் பிரபஞ்சம் என்பது
உயிரற்ற, உணர்ச்சியற்ற, உணர்வற்ற வெறும் பௌதீகச் சடப்பொருளின்
எந்திர இயக்கமாக மட்டுமே தொடர்ந்துகொண்டிருக்கும் -- எதையும், எதுவும்
அறிய, ஆராய, உணர நாதியற்ற நிலையில்!

முக்கியமாக, பிரபஞ்சம் என்பதும், அதிலுள்ள ஒவ்வொரு அணுத்துகளும், புழு
பூச்சியும், புல்லும் பூண்டும், விலங்கும், மனிதனும் இப்பிரபஞ்சத்திலிருந்து
வேறானதல்ல! ஒவ்வொன்றும் பிற ஒவ்வொன்றுடனும் ஓர் மாபெரும்
வலைப்பின்னலில் இணைந்துள்ளதால், மழையின் கருணை, கோபம், சீற்றம்
யாவும் பொருத்தப்பாடுடையவையே! இப்பிரபஞ்சத்தில் எதுவும் இடம் தவறி
யதாய் இருக்கவில்லை! புல், பூண்டுகளாகிய பிரபஞ்சத்திற்கு மழையாகிய
பிரபஞ்சம் உயிர் போன்றதாகும், ஆகவே மழை எனும் கருணை மிக அவசிய
மாகும்! புல்லை மேய்ந்து வாழும் கால்நடைகளாகிய பிரபஞ்சத்திற்கு மழை
யாகிய பிரபஞ்சம் அமிர்தமாகும்; கால்நடைகளைச் சார்ந்து வாழும் மனிதர்
களாகிய பிரபஞ்சத்திற்கு மழையாகிய பிரபஞ்சம் இன்றியமையாததாகும்!

அடுத்து, "உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது.
அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ ஏதும் கிடையாது..."
என்பதும் சரியானதல்ல! ஏனெனில், இயற்கையானது மனிதனுடனும், பிறவற்
றுடனும் யாதொரு தொடர்புமற்ற வகையில் தன் போக்கில் இருக்கவில்லை,
இயங்கவில்லை! உண்மையில் இயற்கைக்கு ஒரு போக்கு, வழிமுறை இருக்
கத்தான் செய்கிறது; அந்த வழிமுறைக்குப் பெயர் "பரிணாமம்" என்பதாகும்!
அவ்வழிமுறையின் மூலமாகத்தான் பிரபஞ்சமானது அண்டத்து பொருள்
களாகவும், பல்வேறு விசித்திர நிகழ்வுகளாகவும், உயிர்-ஜீவிகளாகவும், உணர்
வுள்ள, சிந்திக்கின்ற மனித ஜீவிகளாகவும்.... யாவுமாகியது!

பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளாக, அவற்றிலும் குறிப்பாக, மனித ஜீவிகளாக
எழும்வரை மட்டுமே அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ
ஏதும் கிடையாது என்று சொல்லலாம். ஒரு கட்டத்தில் உயிர்-ஜீவிகளின்
நிலையை எட்டிய பிறகு, அவ்வுணர்வுகள் இல்லாமல் உயிரினங்கள் வாழ
வியலாது!

அடுத்து, "இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும்
ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும் ஒன்றுதான்."
என்ற கூற்று முற்றிலும் தவறானது; ஏனெனில், இக்கூற்று பரிணாமத்தின்
அடிப்படை அம்சம் அல்லது வளர்ச்சி எனும் விதியையே மறுக்கிறது! வேண்டு
மானால், ஞானியும் இயற்கைதான், அஞ்ஞானியும் இயற்கைதான் என்று ஒரு
பார்வையில் கொள்ளலாமே தவிர, ஞானியும், அஞ்ஞானியும் ஒன்றுதான்
என்று சொல்வதற்கு இடமில்லை! அவ்வாறே புலியும் மானும் ஒன்றுதான்
என்று சொல்வதற்கும் இடமில்லை!

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை, ஞானி, அல்லது ஞான நிலையே அதன்
ஒப்பற்ற இலக்காக இருக்கிறது என்று கொள்ளலாம். சீன ஞானி லாவோ ட்சு
அவர்களும் இதைத்தான் சொல்கிறார்! - இப்போது, நாம் ஞானி லாவோ ட்சு -
வின் பாடலுக்கு வருவோம். லாவோ ட்சு சொல்கிறார் :

   வானக, வையகத்திற்குத்
   தங்கள் கருணை சொந்தமில்லை.
   அவற்றுக்கு
   அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

   ஞானிக்கும்
   தன் கருணை சொந்தமில்லை.
   அவனுக்கு
   மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்தை, அதாவது இயற்கை, அல்லது பிரபஞ்சத்தைப் பொறுத்த
வரை அனைத்தும் வைக்கோல் நாய்தான் என்கிறார்! அடுத்து, ஞானியைப்
பொறுத்தவரையில் மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான் என்கிறார்!
இப்பாடலில் லாவோ ட்சு அவர்கள் பிரபஞ்சத்தையும், ஞானியையும் சமநிலை
யில் வைக்கிறார்! எனினும், பிரபஞ்சத்திற்கும் சரி, ஞானிக்கும் சரி தத்தம்
கருணை சொந்தமில்லை என்று சொல்வதன் வழியே, கருணை, அன்பு
என்பதை அவர் ஞானியையும், பிரபஞ்சத்தையும் கடந்த ஒப்பற்ற இறுதியான,
கடப்பு நிலை மெய்ம்மை எனச் சுட்டுகிறார்! ஆம், அன்பு, அல்லது, கருணை
என்பதுதான் இப்பிரபஞ்சத்தின் மூலப்பண்பு, அல்லது சாரமான மெய்ம்மை
ஆகும்! அதை நாம் ஒருமையும் முழுமையுமானதொரு பேருணர்வு எனலாம்!

அடுத்து, ஆசைத்தம்பி அவர்களின் கட்டுரையில், நம் உடலின் அணுக்கள்
பற்றிய ஒரு குறிப்பு ஒன்று வருகிறது :

   மரணத்துக்குப் பிறகு நம் உடல் அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப்
   பிரிந்து மறுசுழற்சியடைகின்றன. ஷேக்ஸ்பியர் உடலில் இருந்த அணுக்
   களில் சுமார் நூறு கோடி அணுக்களாவது, இயற்கையின் மறுசுழற்சி
   முறையில் நம் ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக்கூடும்
   என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். ஷேக்ஸ்பியரின் உடல்
   என்பதால் இயற்கை அதற்குத் தனிமதிப்புக் கொடுத்துப் பத்திரப்படுத்தி
   வைக்கவில்லை. அவர் உடலின் அணுக்களும் ஆதியில் ஏதாவதொரு   
   விண்மீன் வெடிப்பிலிருந்து வந்துசேர்ந்தவைதான். மரணம் நம்மை
   மட்டுமல்ல, ஷேக்ஸ்பியர்களையும், விண்மீன்களையும் கூட
   மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் பொருட்கள்போல் ஆக்கிவிடுகிறது..."
             (ஆசை) 

திரு.ஆசை அவர்கள் ஞானி லாவோ ட்சு அவர்களின் ஒரு பாடலுக்கு
விளக்கம் தருவதற்காக இறங்கி இயற்கை, பிரபஞ்சம் பற்றியும், இவற்றிற்கும்
மனிதனுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து
கொள்ளும் ஆர்வத்தில், லாவோ ட்சு பாடலுக்கு சம்பந்தம் இல்லா பல கருத்து
களையும் போகிற போக்கில் அடுக்கிச் சென்று விடுகிறார். அவை கிட்டத்தட்ட
பொருண்மை வாதப் பார்வையில் அமைந்தவையாக, ஆகவே, தவறானவை
யாக உள்ளன. அதாவது, மனித உடலின் அணுக்களும், மனிதனும் ஒன்று
என்பது போல் திரு.ஆசை அவர்கள் கூறியுள்ளது தவறானது, பொருத்தமற்றது
ஆகும். இப்பிரபஞ்சத்திலுள்ள அணுக்கள் யாவும் ஒரே மாதிரியானவை, பொது
வானவை! அதாவது, வீடு கட்டுவதற்கான அடிப்படைக்கட்டுமானப் பொருளான
செங்கற்கள் போன்றவையே அணுத்துகள்கள் எனலாம்! ஆக, ஒரு வீட்டின்
செங்கற்களைப் பிரித்தெடுத்து வேறொரு வீடு கட்டுவதற்குப் பயன் படுத்திக்
கொள்ள இயலும் என்பதைப் போல 'ஷேக்ஸ்பியரின் மரணத்துக்குப் பிறகு
அவரது உடலின் அணுக்கள் இயற்கையின் மறுசுழற்சி முறையில் நம்
ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக்கூடும்' என அறிவியலாளர்கள்
நம்பலாம்; ஆனால், இச்சிறு விடயம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல!
ஏனெனில், ஷேக்ஸ்பியரின் உடலணுக்கள் அவருடைய உடலின் அணுக்கள்
மட்டுமே தவிர அவை ஷேக்ஸ்பியர் அல்ல!

ஆக, "மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல, உடலின் அணுக்களும் அல்ல
என்றால், பின் எது தான் மனிதன்?" என்று வாசகர்கள் கேட்கலாம்! ஆனால்,
அதி முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குள்
கேட்டு அதற்கான பதிலை அடைவதில் தான் மனித வாழ்வின் அர்த்தம்,
முழுமை, சாகாநிலை யாவும் அடங்கியுள்ளன!

  "நான் யார் தெரியுமா?" என்று ஒருவன் அடுத்தவரிடம் கேட்பதில்
  அர்த்தமில்லை; அவன் வெறும் வைக்கோல் நாய்தான்!
  மாறாக, "தான் உண்மையில் யார்?" என்று தன்னிடமே
  கேட்பவனே தன்னைக் கண்டடைபவனாகிறான்!

மா.கணேசன் • 01-05-2018
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...