ஆம், நான் வாசிக்க விரும்பிய புத்தகங்களை எப்படியாவது வாங்கி
வாசிக்காமல், எனது சொந்த நூலகத்தில் சேர்த்துக்கொள்ளாமல் இருந்ததே
யில்லை! இன்றளவும் என்னால் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும்,
அவ்வப்போது காண்கின்ற புத்தகக் கடைகளிலும், புத்தகங்களை வாங்காமல்
இருக்க முடிந்ததில்லை! அதே நேரத்தில் கண்ணில் படுகிற எல்லாப் புத்தகங்
களையும் நான் வாங்குவதுமில்லை, வாசிப்பதுமில்லை. மாறாக மிகக்கறாரான
வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே வாங்குகிறேன்,
வாசிக்கிறேன்!
புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு அலாதியானது! புத்தகக்
கண்காட்சித் திடலில் நுழைந்ததும் நான் வேறு ஒரு ஆளாக மாறிவிடுவது
தவிர்க்கவியலாது நிகழ்ந்து விடுகிறது! நான் புத்தகங்களைத் தீயாக இறங்கித்
தேடுகிறேன்; புத்தகங்களும் என்னைத் தேடுவதை நான் எண்ணற்ற முறை
உணர்ந்துள்ளேன்! பல சமயங்களில், புத்தகங்கள் என்னை அழைக்கவும்
செய்கின்றன!
தத்துவம், மெய்யியல் தொடர்பாக நான் எதிர்பார்க்கும் தரத்தில், அதாவது
சிந்தனைக்குச் சவாலாக அமையும் புத்தகங்கள் தற்போது கிட்டத்தட்ட இல்லை
என்றே சொல்லலாம்! எனினும் நான் தேடிக் கொண்டே தான் இருக்கிறேன்!
இதில் ஒரு ஆச்சரியகரமான விடயம் என்னவென்றால், சில பழைய காலத்
தத்துவஞானிகளிடமும் சிந்தனையாளர்களிடமும் நான் எதிர்பார்க்கும் ஆழமான
பார்வைகள், அதாவது மிகச் சாரமான உண்மைகளை உள்ளடக்கிய
உட்-பார்வைகள் எதிர்பாராதவிதத்தில் தேடலின் ஊடே அவ்வப்போது வெளிப்
படுவதுண்டு!
நம்மில் பலருக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வதில் கூட தெளிவு இல்லை!
இதற்கு நம்முடைய சொந்தத் தெரிவுகளும், சாய்வுகளும், துண்டுபட்ட பார்வை
களும் தான் காரணம்! ஒரு குறிப்பிட்ட தேவைக்காக, நோக்கத்திற்காக ஒரு
குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிப்பது அவசியமே.
ஆயினும், அனைத்தையும் தழுவிய ஒரு முழுமையான உலகப் பார்வை
மற்றும் வாழ்க்கைப் பார்வையை வெளிப்படுத்துகிற புத்தகங்களைத் தெரிவு
செய்வது மிகமிக முக்கியமாகும். வாழ்வின் பகுதிகள் எவ்வாறு எவ்விடத்தில்
முழுமையானதொரு சித்திரத்தில் பொருந்துகின்றன என்பது தெரியாமல்
பகுதிகளை மட்டும் கட்டித்தழுவிக்கொண்டிருப்பது வாழ்க்கையை முழுமையாக
வாழ்வதற்கு உதவிடாது!
எனக்குத் தெரிந்தவரை வெகு சிலரே புத்தகங்களை முழுமையாக வாசிக்கிற
வர்களாக இருக்கிறார்கள்! எண்ணற்ற பலர் இன்னும் வாசிக்கக் கற்றுக்கொள்ள
வேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்! பலர் புத்தகங்களை வாங்கு
வதோடு சரி, இப்படியும் அப்படியுமாக புரட்டிப்பார்ப்பது தவிர வாசிப்பதே
யில்லை! சிலர் புத்தகங்களை முன்னட்டையிலிருந்து பின்னட்டைவரை ஒரு
எழுத்துகூட விடாமல் வாசித்து முடித்து விடுவர்; ஆனால், எதையும் புரிந்து
கொள்வதில்லை. பலர் தாங்கள் வாசித்துத் தெரிந்து கொண்டவற்றை புரிந்து
கொண்டுவிட்டதாகவும், அவற்றைத் தங்களுடைய அறிவாகவும் பாவித்துக்
கொள்ளும் விபரீதத்தில் சிக்கிக்கொண்டுவிடுகின்றனர்!
வாசிப்பு என்பது ஒரு வேள்வியைப் போன்றிருக்க வேண்டும்! தன்னை
முழுமையாகத் திறக்கும் ஒருவனிடம் மட்டுமே வாசிப்பு நிகழும்! சிந்தனை
ரீதியாகத் தொடர்ந்து தன்னைக் கடந்து வளர்ந்து செல்லும் பெருவிருப்பம்
கொண்ட ஒருவனுக்கு புத்தகங்களைப் போன்ற சிறந்த சாதனமும் துணையும்
வேறில்லை! புத்தகங்கள் எண்ணற்ற சிந்தனைச் சாத்தியங்களைத் திறந்து
விடுகின்றன.
ஒருவன் வாசிக்கும் ஒரு புத்தகம் அவனை அடியோடு புரட்டிப்போட்டு
மாற்றிடும் வகையில் இல்லையென்றால் அந்தப் புத்தகம் வீணே! அல்லது
அவனது வாசிப்பு குறைபாடுடையதாக இருக்கிறது! முக்கியமாக, புத்தகங்கள்
ஒருவருடைய சிந்தனைக்கு மாற்று (பதிலீடு) அல்ல! சிந்திக்காத மனிதனுக்கு
புத்தகங்கள் வெறும் சுமையே; சிந்திப்பவனுக்கு அவை (மேலதிகப்படியான)
சிறகுகள்! புத்தகங்கள் ஒருவன் அடையவேண்டிய சிந்தனைச் சிகரங்களைச்
சுட்டுபவையும், சில சமயங்களில் ஒருவன் கடந்த மைல்கற்களைக்
குறிப்பவையும் ஆகும்!
உலகின் இறுதியான புத்தகம் இன்னும் எழுதப்படவில்லை! அப்படியான ஒரு
புத்தகம் ஒருபோதும் எழுதப்படவும் இயலாது! அதே சமயம் அப்படியான பல
புத்தகங்கள் எழுதப்பட்டு கடந்து செல்லப்பட்டுவிட்டன! எனினும் உலகின்
இறுதியான புத்தகத்தையே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்; அல்லது எழுதிக்
கொண்டிருக்கிறேன்!
மா.கணேசன். 22-06-2018
க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்