Saturday, 13 October 2018

உலகம் எவ்வாறு தோன்றியது?


   

        பிரபஞ்சம் குறித்த நம்முடைய உண்மையான பிரச்சினை, அது எவ்வாறு தோன்றியது   
    என்பதைவிட, கடைசியில் அது எத்தகைய நிலையை அடையும் என்பதுதான்! மேலும்               
    இப்பிரச்சினை பிரபஞ்சத்தைப் பற்றியதுமட்டுமல்ல; மாறாக, நம்மைப்பற்றியதும்தான்;
    நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்காலத்திற்குள் கண்டடையவேண்டிய அர்த்தம் பற்றிய
    அவசரப் பிரச்சினையாகும்! 


"ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது"


கிரேக்கத் தத்துவஞானி பார்மினடீஸ், கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
"ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது" என்று கற்பித்தார். இவரது இந்தத் தத்துவக் கருத்தாம்சமானது பலமுறை பலராலும் எதிரொலிக்கப்பட்டது. மேலும், இது உலகின் பல மதங்களின் குறிப்பாக, யூதம், மற்றும் கிறித்துவத்தின் அடிப்படையாகவும் அமைந்தது என சொல்லப்படுகிறது.

பார்மினடீஸின் இக்கருத்தாம்சத்தை ஏற்றுக்கொண்ட அவரது அனுசாரிகளால் ஒருபோதும் உலகம் தானே தன்னியல்பாக தோன்றியது என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒன்று, உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கவேண்டும்; அல்லது, எல்லாம் வல்ல ஒரு மகா சக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே அவர்களின் துணிபு. 'கடவுள் தான் உலகைப் படைத்தார்' என்று விவிலியம் கூறுகிறது, மேலும், கிறித்துவ இறையிலாளர்கள் ஒன்றுமில்லாததிலிருந்து இந்த உலகம் படைக்கப்பட்டது எனும் கருத்தை முன்வைக்கிறார்கள். கடவுளுக்கு மட்டுமே இத்தகைய காரியத்தைச் சாதிக்கும் ஆற்றல் உள்ளது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்விடத்திலிருந்து தான் நாம் நமது ஆய்வைத்தொடங்குகிறோம். "ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் தோன்றவியலாது" எனும் பார்மினடீஸின் கூற்று சரியானதே. ஆயினும் அக்கூற்றைத் தழுவிய உப-கூற்றுக்களான 1. உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கவேண்டும்; அல்லது
2. எல்லாம் வல்ல ஒரு மகா சக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும். என்பவை சரியானவை யாகத் தெரியவில்லை; அவைகுறித்து இப்போது பார்ப்போம்.


ஆரம்பமும் முடிவுமில்லையேல் அர்த்தமுமில்லை!


முதலிடத்தில், உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், உலகம் எவ்வாறு தோன்றியது என்பதிலிருந்து இன்றுவரையிலான வரலாற்றை விஞ்ஞானிகள் ஓரளவிற்கு துல்லியமாகக் கண்டறிந்து சொல்லியுள்ளனர். அதாவது, பிரபஞ்சத்தின் வயது கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகள் (1500 கோடி ஆண்டுகள்) ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 1500 கோடி ஆண்டுகளில், பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து 1100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே முதல் உயிர் நம் பூமியில் தோன்றியதாகவும்; அதிலிருந்து கிட்டத்தட்ட 400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே (கிட்டத்தட்ட இன்றிலிருந்து இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) மனிதன் தோன்றினான் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், பிரபஞ்சம் தோன்றிய முதல் ஒரு நிமிடத்தில் அது ஒரு திராட்சைப் பழ அளவுதான் இருந்ததாகவும்; பிறகு ஏற்பட்ட திடீர் வீக்கத்தின் (Inflation) விளைவாக விரிவடைந்ததாகவும், இன்றளவும் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.

அதாவது, இன்று நாம் காணும் பிரபஞ்சமானது படிப்படியாக வளர்ச்சி பெற்று, பரிணாமம் கண்டு இந்த நிலையை எட்டியுள்ளது என்பதற்கான ஆராய்ச்சிபூர்வமான சான்றுகளைக் கொண்டு காணும்போதும், உலகம் என்றென்றைக்குமாக இருந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை! மாறாக, 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரு வெடிப்பு என்ற ஒரு நிகழ்வில் உலகம் தோன்றியது எனும் விஞ்ஞானிகளின் கூற்றை நாம் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை! ஏனெனில், விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வு என்கிற வரையறைக்கிணங்க உலகின் தோற்றம் குறித்த விடயத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரையில் நாம் விஞ்ஞானிகள் கண்டு கூறுவதைப் புறந்தள்ளிட முடியாது; அதேநேரத்தில், அவர்கள் காணாமல் கூறுகிறவற்றை, அதாவது திரட்டிய சொற்பத் தரவுகளைக்கொண்டு அனுமானத்தின் அடிப்படையில் கூறுபவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை!

முக்கியமாக, நம் பிரபஞ்சமானது அளவில் சிறிதாகத் தோன்றி, பிரும்மாண்டமாக வளர்ந்துள்ளது; மிக எளிய அமைப்பாகத் தொடங்கி மிகவும் சிக்கலான அமைப்புகளாக பரிணமித்துள்ளது. மேலும், உயிர், உணர்வு ஆகிய புதிய புதிய வெளிப்படு பண்புகளையும் (Emergent Properties)கொணர்ந்துள்ளது. ஆக, இத்தகைய அம்சங்களையெல்லாம் கொண்டு காணும்போது, நிச்சயமாக, உலகம்/பிரபஞ்சம் என்றென்றைக்குமாக இருந்திருக்க வாய்ப்பேயில்லை என்று திடமாகச் சொல்லலாம்.

மேலும், ஆரம்பம் என்பது இல்லாத ஒரு அம்சத்திற்கு முடிவென்பதும் இருக்கமுடியாது. ஆரம்பமும், முடிவும் இல்லாத ஒரு அம்சத்திற்கு வளர்ச்சி, பரிணாமம், குறிக்கோள், இலக்கு அர்த்தம் என்று எதுவுமே இருக்கவாய்ப்பிருக்காது!

உலகம் கடவுளால் படைக்கப்பட்டதா?


இரண்டாவதாக, "இவ்வுலகம் எல்லாம் வல்ல ஒரு மகாசக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும்!" எனும் கருத்து சற்று சிக்கலான ஒன்று. ஒரு பொருளுக்கு பிறப்பு, ஆரம்பம் இருக்கிறது என்றால், அதற்கு ஒரு மூலம் என்ற ஒன்று இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில், இவ்வுலகம் தோன்றுவதற்கும் ஒரு மூலம் இருந்தாக வேண்டும்; இவ்வாறு இவ்வுலகின் மூலம், அல்லது தோற்றுவாய் குறித்து மேற்குறிப்பிட்ட வாசகம் சுட்டுகிறது என்றால் அதில் சிக்கலில்லை. அதேவேளையில், அந்த மூலம் எத்தகைய மெய்ம்மை? அது தன்னளவில் முழுமையானதாக இருக்கும் ஒன்றா? மேலும், எவ்வாறேனும் அதை நாம் அறியக்கூடியதாக, உணரக்கூடியதாக, அணுகக் கூடிய வகையில் அமைந்த மெய்ம்மையா? அல்லது நமது கற்பனையின் உருவாக்கமா? என்பதுபோன்ற எல்லா கேள்விகளுக்குமான சரியான பதில்களைக் கொண்டுதான் நாம் ஒரு சரியான முடிவிற்கு வரமுடியும்.

அடுத்து, அனைத்துக்கும் மூலமாக விளங்கக்கூடிய ஒன்றை நாம் மூல-மெய்ம்மை எனக் கொள்வதில் யாதொரு சிக்கலும் இருக்கவாய்ப்பில்லை. அது எத்தகைய மெய்ம்மை என்பதை அறிவதுதான் நம்முடைய வாழ்வை அர்த்தப்படுத்தும் குறிக்கோளும், இலக்குமாகும்! இப்போது நாம் சில முன்வைப்புகோள் (Propositions) களைக் கொண்டு, "இவ்வுலகம் எல்லாம் வல்ல ஒரு மகாசக்தியினால் படைக்கப்பட்டிருக்கவேண்டும்!" எனும் கூற்றிலுள்ள முடிச்சுக்களை அவிழ்க்க முயல்வோம்:

1. உலகம் இயற்கையாக தன்னில் தானே தோன்றிடஇயலாது!
2. அது என்றென்றைக்குமாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை!
3. அது கடவுளாலும் படைக்கப்படவில்லை!
4. இன்னும் அது சூனியத்திலிருந்து கடவுளால் படைக்கப்படவும்,
  அல்லது இயற்கையாகத் தோன்றிடவும் இயலாது!

முதல் முன்வைப்புகோளை அதற்குரிய இடத்தில் அலசுவோம். இரண்டாவது முன்வைப்புகோளை ஏற்கனவே பார்த்துவிட்டோம். மூன்றாவது முன்வைப்புகோளான, "உலகம் கடவுளால் படைக்கப் படவில்லை!" என்பதைப் பார்ப்போம். ஒருவகையில், மூல-மெய்ம்மையை நாம் 'கடவுள்' என குறிப்பிடலாமெனில், அக்கடவுள் எல்லாம் வல்லவராகவே இருந்தாலும் அவரால் உலகைப் படைக்க இயலாது! ஏனென்றால், அவ்வாறு படைக்கும் செயலால், படைப்பவன், படைப்பு எனும் இருமை சம்பவித்திடும்; அது பெரும் சிக்கலைத் தோற்றுவித்திடுவதாய் அமைந்திடும்! ஆனால், கடவுளால் மிக எளிதாகவும், இருமைக்கு இடமளிக்காத வகையிலும் ஒன்று சாத்தியம்; அது என்னவெனில், கடவுள் உலகமாக உருமாறுவதுதான்!

வித்து வெடித்து விருட்சமாய் எழுந்தது!


ஆம், கடவுள் உலகைப் படைக்கவில்லை; மாறாக, கடவுளின் மறைவால் உலகம் தோன்றியது! அதாவது, வித்து வெடித்து விருட்சம் முளைத்தெழுவதுபோல மூலமெய்ம்மையாகிய கடவுள் மறைந்து இவ்வுலகம் வெடித்தெழுந்தது! கடவுள் இவ்வாறு தனக்குப்புறத்தே உலகைப் படைக்காமல், தன்னை மறைத்து உலகமாக உருமாறியதால், இத்தகைய உருமாற்றத்தை நாம் "எதிர்-படைப்பு" (Anti-Creation) எனவும் கொள்ளலாம்! அதாவது, மூலமெய்ம்மையாகிய கடவுள் தன்னைச் சுருக்கிக்கொண்டு (Involution) உலகமெய்ம்மையாக மாறியுள்ளார். மூலமெய்ம்மையின் சுருக்கம்தான் உலகமெய்ம்மை என்றால், உலகமெய்ம்மையின் விரிவாக்கமான பரிணாமம் தான் (Evolution) மீண்டும் மூலமெய்ம்மை தன்னை மீட்டெடுக்கும் வழிமுறையாகும்! கடவுள் அல்லது மூலமெய்ம்மையானது தனது படைப்புக்கு வெளியே இருக்க முடியாது; அதே நேரத்தில், படைப்புக்கு உள்ளும் இருக்கமுடியாது! மாறாக, படைப்பின் மலர்ச்சியில்தான் மீண்டும் மூலமெய்ம்மையாகிய கடவுள் வெளிப்படமுடியும்! இவ்வகையில், கடவுளை ஒரு கடப்பு-நிலை நிஜம் (Transcendent Reality) எனவும் கொள்ளலாம்.

மேலும், எவ்வொரு வித்தும் தனக்குப் புறத்தே விருட்சத்தைப் படைப்பதில்லை; மாறாக, வித்துதான் விருட்சமாக உருமாறுகிறது! இது இயற்கைக்கு மட்டுமல்ல இயற்கையின் மூலகாரணமான கடவுள் எனும் மூலமெய்ம்மைக்கும் பொருந்தும்! மெய்ம்மையின் வெளிப்பாடுகள் எண்ணற்றவையாயினும், அடிப்படையில் மெய்ம்மை என்பது ஒன்றாக, ஒருமையாகத்தான் இருக்கமுடியும்; பலவாகப் பன்மையில் இருக்கமுடியாது! அடுத்து மூலமெய்ம்மை மறைந்து உலகமெய்ம்மையாக எழுந்தாலும், மீண்டும் மூலமெய்ம்மை தன்னை மீட்டெடுக்கும் வகையிலான உபாயத்தை அவ்வுலகமெய்ம்மையுள் பொதிந்திருப்பது தவிர்க்கவியலாததாகும்! பரிணாமம் என்பதே அந்த உபாயம் ஏனெனில், உலகம் உலகிற்காக இல்லை! மனிதனும் தனக்காக இல்லை! வித்து தன்னைப் பன்மடங்காகப் பெருக்கிக் காணும் வழிமுறையே விருட்சம்!

வித்தானது விருட்சமாகி, விருட்சத்தின் ஒவ்வொரு கனியின் வழியாகவும் தன்னை மீள்-கண்டுபிடிப்பு செய்கிறது! கடவுள் எனும் மூலவித்தும் அப்படித்தான்; கடவுள் உலக விருட்சமாகி, உலக விருட்சத்தின் கனியான மனிதஜீவி ஒவ்வொருவரின் உணர்வுப் பரிணாமத்தின் முழுமையிலும் (அக மலர்ச்சியிலும்) தன்னைக் கண்டடைகிறார்!

கடவுள் உலகைப் படைக்கவில்லை; மாறாக, உலகமாக மாறினார் என்ற உண்மை மிகவும் மையமானதும், முக்கியமானதும் ஆகும்! இவ்வுண்மை மெய்ஞானப்பூர்வமானதாகும்! மெய்ஞானம் என்பது, ஒரே நேரத்தில் விஞ்ஞானம், இறையியல், ஆன்மீகம், தத்துவம் என எல்லா அணுகுமுறை களையும் உள்ளடக்கிய முழுமையானதொரு அறிதல்முறையாகும்.

உலகம் தன்னைத்தானே படைத்துக்கொள்ளமுடியுமா?


இப்போது நாம் 'உலகம் இயற்கையாக தன்னில் தானே தோன்றிடஇயலாது!' எனும் முன்வைப்புகோள் பற்றிக் காண்போம். விஞ்ஞானிகள் தங்கள் மனங்களில் பௌதிக விதிகள் என்ற பெயரில் சில வரையறைகளை, கட்டுப்பாடுகளை, நிபந்தனைகளை கற்பனை செய்துகொண்டு அவற்றிற்கேற்ப இயற்கையும், உலகமும் பொருந்திவரவேண்டும் என்கிறவகையில் இயற்கையையும், உலகையும் பற்றிய கோட்பாடுகளைப் பின்னிக்கொண்டிருக்கிறார்கள்!  நிச்சயமாக, இவ்வுலகம் அடியோட்டமான சில விதிகளைக் கொண்டே இயங்குகிறது; உலகம் சில ஒழுங்குமுறைமைகளைப் பின்பற்றாமல் தினமும் சூரியன் காலையில் உதிப்பதும், மாலையில் மறைவதும் நியதி மாறாமல் நிகழ்வதென்பது சாத்தியமாகாது.

அதே நேரத்தில், இயற்கை/பௌதிக விதிகளைக்கண்டுபிடிப்பது என்பது வேறு, அவற்றைவிட அவை எதனுடைய விதிகள் என்பதைக் கண்டுபிடிப்பது என்பது வேறு! இதுவரை, விஞ்ஞானிகள் எண்ணற்ற பல இயற்கை விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்; ஆனால், அவை உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளதே தவிர, உலகம் ஏன் இருக்கிறது, எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது; வாழ்வின் அர்த்தமென்ன, இறுதி உண்மை எத்தகையது,.. என்பன போன்ற கேள்விகளுக்கு யாதொரு உருப்படியான பதிலையும் அவ்விதிகள் அளித்திடவில்லை!

நியூட்டனின் இயக்கவிதிகள் வெறுமனே பருப்பொருளின் இயக்கத்தை மட்டுமே விளக்குகின்றன; பருப்பொருளின் இயக்கம் என்பது உலகின் ஒரு பண்பு மட்டுமே தவிர, அதை அறிந்துகொண்டால், ஒட்டுமொத்த மெய்ம்மையையும் அறிந்துவிட்டதாக ஆகுமா? மேலும், உலகம் என்பது வெறுமனே இயக்கத்திலுள்ள பருப்பொருள் மட்டுமல்ல. அடுத்து, பௌதிக இயக்கம் மட்டுமே பருப்பொருளின் ஒரே பண்பும் அல்ல. மாறாக, அப்பருப்பொருள் பிரதானமாக பண்புரீதியாக மாற்றமடையும் பரிணாம இயக்கத்திற்கும் உட்பட்டுள்ளது என்பது பௌதிக இயக்கத்தைவிடவும் முக்கியமானதல்லவா? 

உள்ளதிலிருந்து உண்மை உய்த்தறியப்பட வேண்டுமே தவிர, உள்ளதையே உண்மை என கட்டித் தழுவிக்கொள்வது முறையாகாது! பருப்பொருள் என்பது உலகின் பிரதான அடிப்படைப் பொருளும், பண்பும் என்பது வெளிப்படையானது; ஆனால், அதுவே உலகின் சாராம்சமான இறுதிப் பண்பாக இருக்கமுடியாது! ஏனெனில், பருப்பொருளானது பண்புரீதியாக பௌதிக நிலையல்லாத வேறு நிலைகளை (உயிர், மற்றும் உணர்வு ஆகிய நிலைகளை) எட்டும்முகமாகத் தன்னைக் கட்டியெழுப்பி உயர்ந்திடும் சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் வழிமுறையில் முனைந்து ஈடுபட்டுள்ளது! 

பருப்பொருள் (அதன் அடிப்படை வடிவமான அணுத்துகள்கள்) என்பது வெறும் கட்டுமானப்பொருள் மட்டுமே தவிர, அதுவே பரம்பொருள் அல்ல! ஆனால், விஞ்ஞானிகள், குறிப்பாக, குவாண்டம் பௌதிக விஞ்ஞானிகள் முற்றிலும் புதுவிதமான ஒரு ஆதியாகமத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!
பௌதிகப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய பிரச்சினை விஞ்ஞானத்தின் எல்லையிலிருப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், பல விஞ்ஞானிகள் அது விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லைக்கு  (scope) அப்பால் உள்ளது என்கிறார்கள். ஆயினும், விஞ்ஞானிகள் சமீபகாலமாக மிகவும் தீவிரமாக பௌதிக விதிகளை மீறாமல் எவ்வாறு பிரபஞ்சமானது வெற்றிடத்திலிருந்து தோன்றியிருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்துவருகிறார்கள். ஆனால், எவ்வாறு எதுவும் யாதொரு செயற்படுகாரணமும்  இல்லாமல் தோன்றிடமுடியும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது!

இப்புதிரை தீர்ப்பதற்கான திறவுகோல் குவாண்டம் பௌதிகம் தான் என விஞ்ஞானிகள் தீவிரமாக நம்புகிறார்கள். ஆனால், குவாண்டம் நிகழ்வுமுறைகள் உள்ளார்ந்த வகையில் முன்னறிய இயலாத தாகவும், நிச்சயத்துவமற்றதாகவும் உள்ளன. குவாண்டம் நிகழ்வுகள் ஒரு கணத்திலிருந்து அடுத்த கணத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதை முன்னறிய முடியாது. குவாண்டம் உலகைப் பொறுத்தவரை, புறக்காரணமில்லாத தன்னியல்பான மாற்றம் என்பது அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல, அது தவிர்க்கவியலாததும் ஆகும் என்கிறார் பால் டேவிஸ் எனும் விஞ்ஞானி.

ஆக, குவாண்டம் பௌதிகவியல்தான் நவீனகால விஞ்ஞானத்தின் வேதப்புத்தகமாகத் திகழ்கிறது எனலாம்! குவாண்டம் பௌதிகவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் பலரும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு குவாண்டம் பௌதிகம் தான் என்பதாக திடமாக நம்புகிறார்கள்! இருட்டில் மறைந்திருக்கும் ஒன்றை மேலும் இருட்டான ஒன்றின் துணையுடன் கண்டறியும் முயற்சியில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது! அது அவர்களை பலவிதமான கற்பனைக் கோட்பாடு களுக்கும், முட்டுச்சந்துக் கோட்பாடுகளுக்குக் கொண்டுசென்று அலைக்கழிப்பதாய் உள்ளது! பாவம் பால் டேவிஸ், அவரால் விஞ்ஞானத்தையும் விடமுடியவில்லை, மெய்ஞ்ஞானத்தையும் முழுமையாகப் பற்ற இயலவில்லை!

ஆம், குவாண்டம் பௌதிகமானது, வெற்றிடத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றமுடியும் என்கிறது! அதாவது, வெற்றிடம் அல்லது வெறுமை என்ற சொல்லுக்கு முன்னொட்டாக 'குவாண்டம்' என்ற சொல்லைச் சேர்த்தால் மூலமெய்ம்மை குறித்த பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என விஞ்ஞானிகள் எண்ணுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்களுடைய பெருமுயற்சி யாவும் குவாண்டம்-வெற்றிடத்தை 'பருப்பொருள்-பிரபஞ்சத்தின்' கருப்பை (Womb) என நிறுவுவதாகவே இருக்கிறது! அதாவது, முடிவாக, "பருப்பொருள் தான் பரம்பொருள்" என்று அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை, அவ்வளவுதான்! இவ்வாறு, பருப்பொருளை மூலமெய்ம்மையாகக் கொள்வது என்பது கருத்தினரீதியான தவறு (Categorical Mistake)ஆகும்!

அடுத்து, அணுக்கருத்துகள்களின் மட்டத்தில் செயல்படக் கூடியதாகத் தோன்றிய குவாண்டம் பௌதிகவியலை அண்டம் மொத்தத்திற்கும் பொருத்திக் காணவும் முடியும் என்பதாக "குவாண்டம் பிரபஞ்சவியல் (Quantum Cosmology) எனும் புதிய துறையையும் அவர்கள் தொடங்கியுள்ளனர். ஏனெனில், இம்மாபெரும் பிரபஞ்சமானது அணுக்கரு மட்டத்திலிருந்துதான் தொடங்கியது. ஆக, அவர்கள் குவாண்டம் பௌதிகத்தைக் கொண்டு பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்வாகக் கருதப்படும் 'பெரு வெடிப்பை' விளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடத்தில், 'பெரு வெடிப்பு' கோட்பாடு பற்றி மிகச் சுருக்கமாகக் காண்போம். நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமானது, கிட்டத்தட்ட 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 'பெருவெடிப்பு' என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வில் தோன்றியது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது, இன்று நாம் காண்கின்ற இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பருப்பொருளும் - உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), அதிலுள்ள நட்சத்திரங்கள், நட்சத்திரங்களைச் சுற்றிச் சுழலும் கிரகங்கள், என எல்லாப் பொருளும் ஆதியில் ஒரு புள்ளியில் அடர்ந்திருந்ததாகவும், அது அழுத்தம் காரணமாக வெடித்ததாகவும், அவ்வெடிப்பின் விளைவாக பிரபஞ்சம் தோன்றியதோடல்லாமல், இன்றளவும் விரிவடைந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அப்பொருள் திணிவு எவ்வாறு, எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து அக்கோட்பாடு தெளிவாக எதையும் விளக்கவில்லை! பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்று நாம் விஞ்ஞானிகளைக் கேட்டால், 'பெரு வெடிப்பு எனும் நிகழ்வில் தோன்றியது!' என்பார்கள்! அப்பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்று கேட்டால், 'பெருவெடிப்பிலிருந்துதான், காலம், வெளி, பருப் பொருள், யாவும் தோன்றின; ஆகவே அதற்கு முன்னர் காலம் என்பதில்லை' என்பார்கள்!

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், பெருவெடிப்புக்குப் பிறகான நிகழ்வுகளை, நிலைமைகளை உருவான அம்சங்களைப் பற்றி அவர்கள் அதிகமாக விளக்கிச் சொல்லமுடியும், அதிலும் குறிப்பாக, பொருண்மையான நிகழ்வுகள் மற்றும் அம்சங்களைப்பற்றி மிகத் துல்லியமாக அவர்களால் ஆராய்ந்து சொல்லமுடியும். அதே நேரத்தில், பொருண்மைப் பண்பிலிருந்து விலகிச் செல்லும் நிகழ்வுகளையும், அம்சங்களையும் பற்றி, அதாவது, உயிர்த் தோற்றம், மனித மனம், அல்லது உணர்வு போன்ற பண்புகளைப் பற்றி அவர்களால் அவ்வளவு சரியாகச் சொல்லமுடிவதில்லை! மேலும், விஞ்ஞானத்தின் தற்போதைய சட்டகத்தைக் (Paradigm) கொண்டு முப்பெரும் புதிர்களான உலகம், உயிர், உணர்வு இம்மூன்றும் எவ்வாறு தோன்றின என்பதைச் சரியாக விளக்குவது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை!

உலகம்/பிரபஞ்சம் என்பது அடிப்படையில் பருப்பொருள் தான்; அதாவது, அணுத்துகள்கள் தான்! உலகம் எவ்வாறு தோன்றியது என்ற கேள்வியும், பருப்பொருள் எவ்வாறு தோன்றியது என்ற கேள்வியும் ஒன்றுதான்! குவாண்டம் பௌதிகவியலானது அணுத்துகள்கள் வெறுமை, அல்லது வெற்றிடம், அதாவது ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றமுடியும் என்கிறது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில், பருப்பொருளின் வேர்களைத் தேடிப்போன விஞ்ஞானிகள் முடிவில் வெற்றிடத்தை சென்றடைந்துள்ளனர்! இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும், சூரியன், சந்திரன், கிரகங்கள், பூமி, பூமியிலுள்ள உயிரினங்கள், மனிதன், மற்றும் உணர்வு உள்பட அனைத்தையும் பருப்பொருளின் சொற்களில் விளக்கிச்சொன்ன விஞ்ஞானிகள் இனி வெற்றிடத்தின் சொற்களில் விளக்குவார்களா என்பது தெரியவில்லை!

உலகின், அதாவது, பருப்பொருளின் வேர்கள் வெற்றிடத்தின் இதயத்திற்குள் தொலைந்துவிட, அதனுடன் சேர்ந்து அனைத்து பௌதிகவிதிகளும் அர்த்தமிழந்துவிடுகின்றன! அதாவது உலகின் பிறப்புக்கணத்தில் அனைத்தும் - காலம், வெளி, பொருள் என அனைத்தும் பூஜ்ஜியம் என்ற தனி-நிலைப்பாட்டுப் புள்ளி (Singularity) யிலிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு மரமானது எவ்வாறு தோன்றியது என்பதை அறிய அதன் வேர்கள் வரை கீழே சென்று பார்த்துவிட்டு, மரமானது வேர்களிலிருந்துதான் தோன்றியது என்று சொல்வதுபோல, பருப்பொருள்தான் உலகின் மூலப்பொருளும் முடிவான பொருளும் என்று இதுவரை சொல்லிக்கொண்டிருந்தார்கள்! தற்போது, குவாண்டம் பௌதிகவியலைக் கொண்டு மரத்தின் வேர்களைத் தாண்டி இன்னும் கீழே சென்று பார்த்துவிட்டு, ஆகா! மண்ணிலிருந்துதான் மரம் தோன்றியது என்று சொல்வதுபோல, வெற்றிடத்தில், அதாவது ஒன்றுமில்லாததிலிருந்தே உலகம் தோன்றியது என்கிறார்கள் விஞ்ஞானிகள்! அவர்கள் கண்டுபிடிக்கத்தவறியது மரத்தின் உண்மையான மூலமான வித்தைத்தான்! வித்து பற்றிய உணர்வே இல்லாமால் அவர்கள் எதையெதையோ எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்! மரத்தின் மூலமான வித்தை அதன் கனிகளில்தான் தேடவேண்டும்!

மேலும், பருப்பொருளாயினும், வெற்றிடமாயினும் எதுவாயினும் யாவும் ஒரு மூலத்திலிருந்துதான் தோன்றியாகவேண்டும்! உண்மையில் வெற்றிடம் என்பதும் பருப்பொருளுடன் இணைந்த ஒரு பண்பு தானாகும்! அதாவது, கடவுள்தான் உலகைப் படைத்தார் என்று வைத்துக்கொண்டோமேயானால், வெற்றிடத்தையும் அவரேதான் படைத்திருக்கவேண்டும்! மூலமெய்ம்மைக்கு வெளியே யாதொரு பண்பும், நிஜமும் இருக்க முடியாது; அது ஒன்றுமில்லாத வெற்றிடமாயினும் சரி!

அடுத்து, பருப்பொருள், வெற்றிடம் என்பவற்றின் உள்ளார்ந்த பண்பு எத்தகையது என்று காணும்போது, அவை பொருண்மையானவை, சடத்தன்மையைச் சேர்ந்தவை என்பதால், அவை தம்மில் தாமே தோன்றுவதற்கான அடிப்படையையோ, காரணத்தையோ, ஆற்றலையோ கொண்டவையல்ல! அதாவது, பருப்பொருளோ, வெற்றிடமோ தாமே தோன்றுவதற்கான வாய்ப்பற்றவை; ஆகவே, பருப்பொருளாலான உலகமும் தானே தோன்றிட இயலாது! அப்படியானால், தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கான அடிப்படையை, காரணத்தை, ஆற்றலைக் கொண்ட பண்பு, அல்லது அம்சம் எதுவாக இருக்க முடியும் என்பதை நாம் கண்டறிந்தாக வேண்டும்! நாம் அறியும் வகையில் இவ்வுலகம்/பிரபஞ்சம் சடப் பண்பு (பருப்பொருள்), உயிர்ப்பண்பு (உயிர்ஜீவிகள்), உணர்வுப் பண்பு (மனிதஜீவி) ஆகிய மூன்று பண்புகள் உள்ளன. பண்பளவில், பருப்பொருளின் சடப்பண்பைவிட உயிர்ஜீவிகளின் உயிர்ப்பண்பு மேலானது ஆகும்; அடுத்து உயிர்ப்பண்பைவிடவும் மனிதஜீவிகளின் உணர்வுப்பண்பு மேலானது ஆகும். ஆனால், பரிணாம ரீதியாக மனித உணர்வானது, மனிதன் எனும் உயிர்ஜீவியைச் சார்ந்ததாகவும், பொதுவாக உயிர்ஜீவிகள் அனைத்தும் பருப்பொருளாலான உலகைச் சார்ந்ததாகவும் உள்ளதைக் காண்கையில், பருப்பொருளின் சடப்பண்பைப் போலவே, உயிர்ப்பண்பும், உணர்வுப் பண்பும் தன்னில் தானே தோன்றுவதற்கான அடிப்படையையும், காரணத்தையும், ஆற்றலையும் கொண்டவையல்ல என்ற முடிவுக்கு வரமுடியும்!

ஆனால், பருப்பொருளின் பரிணாமம் ஏன் உயிர்ப்பண்பை நாடியும், அதைக்கடந்து உணர்வுப்பண்பை நாடியும் செல்லவேண்டும்? என்ற கேள்வி முக்கியமானதாகும். மேலும், மனிதஜீவியின் வழியாக எட்டப்பட்ட உணர்வுப் பண்பை அடுத்து வெளிப்படவிருக்கும் பண்பு எத்தகையதாயிருக்கும் என்ற கேள்வி அதிமுக்கியமானதாகும்! ஏனெனில், பரிணாமத்தில் இறுதியாக வெளிப்படும் பண்பைச் சார்ந்துதான் ஒட்டுமொத்த உலகமும் இயங்குகிறது! வித்தின் மறைவால் முளைத்துத் தோன்றிய விருட்சத்தின் ஒட்டுமொத்த இயக்கமும், அவ்வித்தினை மீள்-உருவாக்கம் செய்வதை நோக்கியே  அமைந்துள்ளது!

வித்து → விருட்சம் → வித்து


நாம் இந்தப் பிரபஞ்ச விருட்சத்தின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு அதன் மூலத்தைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இந்த விருட்சத்தின் இலைகள், கிளைகள், அடிமரம், ஏன் வேர்கள்வரை சென்று ஆராய்ந்து அவற்றின் விதிகளையும் கண்டறிந்துள்ளோம். அதே நேரத்தில், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் போன்ற பகுதிகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தவறி விட்டோம்! ஏனெனில், உண்மையில் நாம் இவ்விருட்சத்தின் எந்தப்பகுதியாக இருக்கிறோம் என்பதை அறியத் தவறிவிட்டோம்! ஆம், நாம் இன்னும் நம்மை அறியவில்லை! நாமே அதன் பிஞ்சுகளாகவும், காய்களாவும், கனிகளாகவும் இருக்கிறோம் என்பதையும், நாம் முற்றிக்கனியும்போது நாம் தேடிக்கொண்டிருக்கும் மூலத்தை, அதாவது, வித்தை நம்முள் கண்டடைவோம் என்பதையும் நாம் இன்னும் அறியவில்லை!

ஏனெனில், நீண்ட நெடுங்காலமாக நாம் விருட்சத்தை பிரதானப்படுத்திடும், மையப்படுத்திடும் பார்வைக்கு நம்மைப் பழக்கப்படுத்தி வந்துள்ளோம்! மூலத்தைத் தேடும் நமது பார்வை, சிந்தனை யாவும் பின்னோக்கியதாக, பிரபஞ்ச விருட்சத்தின் கடந்தகால வரலாற்றை அகழ்ந்து ஆராய்வதாக மட்டுமே அமைந்துள்ளதே தவிர, அதன் வருங்கால வளர்ச்சி நிலைகளைப்பற்றிய முன்னோக்கிய பார்வையும் சிந்தனையும் அற்றவர்களாயுள்ளோம்!

ஒரு புறம், விஞ்ஞானிகளாகிய நாம் இப்பிரபஞ்ச விருட்சத்தின் வேர்களைத் துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்; இன்னொரு புறம், அதன் எட்டவியலாத கிளைகளை எட்டியவரை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்! கீழே வேர்களைப் பற்றிச் சென்றால் அவை சூன்யத்துள் மறைந்துவிடுவதாயும், மேலே கிளைகளைப் பற்றிச்சென்றால் அவை எல்லையில்லாத அனந்தத்தில் விரிவடைவதாயும் நம்மைக் குழப்புகின்றன! ஆயினும் நாம் இவ்விருட்சத்தின் விதிகளை - அதாவது அடிமரத்தின் விதிகள், கிளைகள், மற்றும் இலைகளின் விதிகள் என பகுதிபகுதியாக, விருட்சத்தின் பகுதிகளைப் பற்றிய விதிகளை விலாவாரியாக தொகுத்துக்கொண்டு, அவ்விதிகளை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்திக்காணும் வகையறியாமல், மிகவும் மேலோட்டமான புரிதலைத் தழுவிக் கொண்டு தத்தளிக்கிறோம்! உண்மையில் விருட்சத்தின் விதிகள் யாவும் வித்தினை மீள் உருவாக்கம் செய்யும் வழிமுறைக்குச் சேவைபுரியும் விதத்திலமைந்த, வித்தின் கருவிபூர்வமான விதிகளே என்பதை அறியாதவரை நம்மால் இப்பிரபஞ்ச விருட்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது!

விஞ்ஞானிகள் தங்கள் மனங்களில் பௌதிகவிதிகளை முன்னிறுத்தி, சில வரையறைகளை, கட்டுப்பாடுகளை, நிபந்தனைகளை விதித்துக்கொண்டு அவற்றிற்கேற்ப இயற்கையும், பிரபஞ்சமும் பொருந்திவரவேண்டும் என்கிறவகையில் இயற்கையையும், பிரபஞ்சத்தையும் பற்றிய கொள்கைகளை கோட்பாடுகளைப் பின்னிக்கொண்டிருக்கிறார்கள்! பௌதிகவிதிகள் என்பவை சில குறிப்பிட்ட பரிணாமப் பணிகளை அல்லது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகள் மாத்திரமே. மேலும், விதிகள் படிநிலைகளில் அமைந்தவை. பௌதிக விதிகள் என்பவை எந்த மூலவிதிகளின் உப-விதிகள் என்பதை அறியாமல் அவைகளை வழிபடமுடியாது! நிச்சயமாக பௌதிக விதிகள் என்பவை மூலவிதிகளோ, தலைமை விதிகளோ அல்ல!

'கடவுள்' எனும் மூலமெய்ம்மை!


முதலிடத்தில், அனைத்திற்கும் மூலமாக ஒரு மெய்ம்மை இருந்தாக வேண்டும் என்ற எளிய தர்க்கரீதியான முன்வைப்புகோளை ஏற்றுக்கொள்கிறோமெனில், அடுத்ததாக, அது எத்தகைய மெய்ம்மை என்பதை உய்த்தறிந்து கொண்டோமெனில், அதன்பிறகு அம்மெய்ம்மையை 'கடவுள்' என்றழைத்தாலும், அல்லது வேறு எப்பெயர், அல்லது குறியீடு கொண்டு குறிப்பிட்டாலும் ஒன்றுதான்!

மூலமெய்ம்மையின் ஒரு மூலப்பண்பு என்னவெனில், அது தன்னில் தானே முழுமையானதாக, தனக்கொரு மூலம் தேவையற்றதாக சுயம்புவாக இருத்தல் வேண்டும்! இத்தகைய பண்பு இப்பிரபஞ்சத்தில் இடம்பெற்றுள்ள நாமறிந்த சடம், உயிர், உணர்வு எனும் இம்மோன்று அம்சங்களில் எதற்கு உள்ளது என ஒப்பு நோக்கும்போது, மிகத் திடமாகத் தோற்றமளிக்கும் சடபொருளைவிடவும், இன்னும் உயிர்ஜீவிகளின் உயிர்ப்பண்பைவிடவும், கண்ணுக்குப் புலப்படாத உணர்வுக்குத்தான் இருக்கமுடியும். ஏனெனில், உணர்வுதான் அறிநிலைக்கும் (Awareness),அறிவுக்கும் அடிப்படையாக அமைந்ததாகும்! அதே நேரத்தில், உணர்வு என்றதும் நாம் மனித-உணர்வைக் குறிப்பிடவில்லை!

மனித-உணர்வு என்பது உணர்வின் தொடக்கச்சொல், அல்லது ஒரு ஆரம்ப நிலைதானே தவிர, அதுவே உணர்வின் இறுதிச் சொல்லோ, முழுமையோ அல்ல! ஆம், முழுமையானதொரு பேருணர்வு மட்டுமே படைப்பாற்றல் கொண்டதாயும், எண்ணற்ற சாத்தியப்பாடுகளின் உறைவிடமாயும் திகழக்கூடிய மெய்ம்மையாகும். ஆக, அத்தகைய உணர்வே மூலமெய்ம்மையாக அமையக்கூடிய, அதாவது தன்னில்தானே சுயம்பாகத்தோன்றக்கூடிய தகுதிபடைத்ததாகும்! நிச்சயமாக, அத்தகுதி பருப்பொருளுக்குக் கிடையாது! பருப்பொருளின் ஒரு சிறப்பு என்னவெனில், அது எல்லாவகையிலும் வளைந்துகொடுக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு பொருளாகும்; ஆகவேதான் அது பிரபஞ்சத்தின் கட்டுமானப்பொருளாக அமைந்துள்ளது. உயிர் என்பது பருப்பொருளின் சடப்பண்புக்கும், மனித உணர்வுக்கும் நடுவே அமைந்த இடைமுகம் (Interface) ஆகும்! உயிர்ப்பண்பின் சிறப்பு புலனுணர்வும், புலனறிவுமே ஆகும்! மனித உணர்வின் சிறப்பு அது மூலமெய்ம்மையின் சாயலில் எழுந்த மெய்ம்மை என்பதே!

ஒருவகையில், மூலமெய்ம்மையை கடவுள் என்ற சொல்லைக்கொண்டு குறிப்பிடுவதில் சிக்கல் இல்லாமலில்லை! ஏனெனில், 'கடவுள்' எனும் சொல் பெரிதும் தவறான புரிதலுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்ட ஒன்றாகும். கடவுளைப் பற்றிச் சொல்லப்படும், 'எல்லாம் வல்லவர்', 'எல்லாம் அறிந்தவர்', என்பது போன்ற அதீத குணாதிசயங்கள் உண்மையில் மிகவும் பொதுப்படையான பண்புகளே தவிர, மூலமெய்ம்மையைக் குறிக்கும் துல்லியமான பண்புகள் அல்ல. ஆனால், இப்போது நாம் கடவுள் எனும் மூலமெய்ம்மையினை நுட்பம் மிகுந்த துல்லியமான சொற்களின் வழியாக இனம்காணும் முதிர்ச்சியைப் பெற்றுள்ளோம் எனலாம். அச்சொற்கள் எவையெனில், உணர்வு (Consciousness), அறிவு (Knowledge), தகவல் (Information) ஆகியவையே. இவை மூன்றும் உண்மையில் தனித்தனியானவையல்ல. இந்த ஒன்றில்-மூன்றாய் அமைந்த மெய்ம்மையின் வெளிப்பாடுகளே இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்துமாகும். அடுத்து, மூலமெய்ம்மையை 'கடவுள்' என்ற சொல்லைக் கொண்டு குறிப்பிடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால், நீங்கள் "ஒருமை" என்ற சொல்லைக் கொண்டு அழைத்துக் கொள்ளலாம்!

அடுத்து, 'படைப்பு' எனும் சொல்லும் பெரிதும் தவறான புரிதலுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்ட ஒன்றாகும்! ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி, 'கடவுள்' எவ்வளவு வல்லவராயிருந்தாலும், அவரால் எதுவாகவும் ஆகமுடியுமே தவிர, எதையும் (தனக்குப்புறத்தே இருமை தோன்றும்வகையில்) படைக்க இயலாது! ஆம் ஒருமையும் முழுமையுமான மூலமெய்ம்மை உடைந்ததன் விளைவாகவே இந்த பன்மையின் உலகமான பிரபஞ்சம் தோன்றியது! ஆனால், பௌதிகவியல் விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தின் நான்கு அடிப்படை விசைகளையும், பன்னிரண்டு அடிப்படைத்துகள்களையும், அவற்றுக்கிடையேயான  இடைவினைகளையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் விளக்கும்வகையிலான ஒரு மாபெரும் ஒற்றைக்கோட்பாட்டை உருவாக்கிக் காண படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தன் வாழ்காலத்தின் 30ஆண்டுகளை அம்முயற்சியில் செலவிட்டு முடிவில் தோல்வியைத் தழுவியதுதான் மிச்சம்!

ஆனால், அந்த "மாபெரும் ஒருங்கிணைப்புக்கோட்பாட்டை" (Grand Unification Theory)யும், "அனைத்தையும் விளக்கும் கோட்பாட்டை" (Theory of Everything)யும் வெறுமனே பௌதிகத் தளத்தின் விதிகளைக்கொண்டு மட்டுமே உருவாக்கிடமுடியாது! அப்படியே உருவாக்கினாலும், அவற்றிலிருந்து, வேதியியல், உயிரியல், மற்றும் உணர்வு போன்ற வெளிப்படு பண்புகளை (Emergent properties) தருவிக்கவோ, புரிந்துகொள்ளவோ இயலாது! ஏனெனில், "பெருவெடிப்பு" என்பது பிரபஞ்சத்தின் பிறப்பைக் குறிக்கிற அதேநேரத்தில், அது ஒருமையும் முழுமையுமான மூலமெய்ம்மை உடைபடுதலைக் குறிக்கும் நிகழ்வும் ஆகும்! "பெரு வெடிப்புக்கு" முன் எதுவுமில்லை எனும் விஞ்ஞானிகளின் கூற்று மாபெரும் மோசடியாகும். மாறாக, பெருவெடிப்புக்கு முன்னிருந்த நிலையின் (மெய்ம்மையின்) சமச்சீர்- உடைவின் (Symmetry Breaking) விளைவாகவே வெளி-கால-பொருண்மைப் பிரபஞ்சம் தோன்றியது! ஆக, பெருவெடிப்பில் உடைந்த ஒருமை நிலையை மீண்டும் கட்டமைக்கும் பிரபஞ்ச இயக்கத்தைத்தான் நாம் பரிணாமம் என்கிறோம்! பௌதிக விதிகள் உள்பட பிரபஞ்சத்தின் அனைத்துவிதிகளும் ஆதியில் இழந்த அந்த ஒருமையை எட்டும்முகமாகவே ஆரவாரமின்றி செயல்பட்டுவருகின்றன!

பருப்பொருள், அல்லது, அணுத்துகள்கள் என்றால் என்ன என்பதை அவற்றை உடைத்துப் பகுத்துப் பார்த்து அறிந்துகொள்ள இயலாது! மாறாக, அவற்றை  அவற்றின் நெடிய பரிணாமப் போக்கில், அதாவது, சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையில் இயங்க விட்டு இறுதியில் அவை எத்தகைய நிலையை, பண்பை எட்டுகின்றன என்பதைக்கொண்டே அறியமுடியும்!

உலகம் ஏற்கனவே அவ்வழிமுறையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது; சொல்லப்போனால், உயிரற்ற, உணர்வற்ற துகள்களாகத் தொடங்கிய உலகம், ஒரு கட்டத்தில் உயிர்பெற்று, அதாவது உயிர்ஜீவிகளாகி - புலனுணர்வு கொண்டு, புலனறிவைப் பெற்று, அடுத்து ஒரு மாபெரும் பரிணாமத் தாவலில், மனிதஜீவியினுள் சுய-உணர்வாக எழுந்து, பகுத்தறிவால் தனது ஆதித் தொடக்கத்தையும், தான் அடையவிருக்கும் முழுமையையும் அறிந்து, முடிவாக தொகுத்தறிவால் முழு-அறிவைப் பெற்றிடும் வகையில் முழு-உணர்வாக மலர்ந்திடும் இறுதிக் கட்டத்தின் அருகாமையை வந்தடைந்துள்ளது. 

இறையியலளார்க்கு கடவுளை முதன்மைப்படுத்துவது முக்கியமாக    இருக்கிறது! விஞ்ஞானிகளுக்கு பருப்பொருளையும், பௌதிக      விதிகளையும் முதன்மைப்படுத்துவது முக்கியமாக விளங்குகிறது. நாத்திகர்க்கு இயற்கையை முதன்மைப்படுத்துவது முக்கியமாக இருக்கிறது! ஆனால், மெய்யியலாளர்க்கு உலகம், இயற்கை, பருப்பொருள், உணர்வு (மனிதன்), பேருணர்வு (கடவுள்), ....என எல்லா மெய்ம்மைகளுக்கும் அதனதன் பண்புக்குரிய இடத்தை அளித்து, அவற்றுள்   எப்பண்பு    மேலோங்கியதாக    விளங்குகிறதோ அதை மூலமெய்ம்மையாகக் கொள்வது முக்கியமாக இருக்கிறது!

முடிவுரையாக, "உலகம் எவ்வாறு தோன்றியது? எனும் கேள்விக்கான இந்த நெடிய விளக்கத்தைச் சுருக்கி தெளிவான பதில்களாக இங்கே தொகுத்துக் காண்போம்:

• உலகம், பிரபஞ்சம், இயற்கை, பருப்பொருள், என்று அதை எவ்வாறு அழைத்தாலும், அது          தன்னில் தானாகத் தோன்றிட முடியாது. அதற்கான அடிப்படையை, காரணத்தை, ஆற்றலை அது     கொண்டிருக்கவில்லை.

• உலகமானது என்றென்றைக்குமாக இருந்துவரும் ஒரு சாசுவதமான மெய்ம்மை அல்ல. அதற்கு ஒரு ஆரம்பமும், தனது உள்ளார்ந்த விழைவை அடைவதற்கான மிக நெடிய இடைப்பகுதியும், ஒரு ஒப்பற்ற முடிவும் உள்ளன.

• உலகை 'கடவுள்' படைக்கவில்லை; மாறாக, கடவுளேதான் உலகமாக மாறியுள்ளார். இங்கு 'கடவுள்' என்பது மூலமெய்ம்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாகக் கொள்ளப்பட்டுள்ளது.

• உலகம் சூன்யத்திலிருந்து இயற்கையாகத் தோன்றியதல்ல. இன்னும் கடவுளும் சூன்யத்திலிருந்து உலகைப் படைக்கவில்லை. ஏனெனில், சூன்யம், வெறுமை, வெற்றிடம், ஒன்றுமில்லாத நிலை என அதை எவ்வாறு அழைத்தாலும் அது பருப்பொருளுடன் இணைந்த ஒரு பண்பே ஆகும்.

• இறுதியாக, "ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றும் தோன்றிடாது!" எனும் பார்மினடீஸ்-ன் கூற்று முற்றிலும் சரியானதே! 'கடவுள்' எனும் மூலமெய்ம்மைக்கு வெளியே வெற்றிடம் உள்பட எதுவும் இருக்க முடியாது! இன்னும் மூலமெய்ம்மைக்கு உள்ளேயும் வெற்றிடம் உள்பட எதற்கும் இடமில்லை! ஏனெனில், மூலமெய்ம்மை என்பது மூலமெய்ம்மைதான்; அதற்குப் பகுதிகள் கிடையாது! இறுதியாக, உலகம்/பிரபஞ்சம் என்பது ஒரு தற்காலிக நிஜம் மாத்திரமே; அது நிஜத்திலும் நிஜமான மூலமெய்ம்மையை நோக்கியதொரு இயக்கம் ஆகும்! உலகம் என்பது கடவுளைச் சுட்டும் ஒரு குறியீடு, அவ்வளவே!


மா.கணேசன் / நெய்வேலி / 02-10-2018
----------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, 2 October 2018

நிலையாமை அல்லது இரண்டாம் வெப்பச்சலன விதி



      இங்கிருந்து தப்ப எங்காவதொரு மூலையில் வழியிருந்தாக வேண்டும்
      என்று கோமாளி சொன்னான் திருடனிடம்!
           - பாப் டிலன் (Bob Dylan/ All Along the Watchtower)

பிரபஞ்சம் எனும் விருட்சம்


ஒரு மரம் போன்றதுதான் இப்பிரபஞ்சமும்! விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களுமாகிய நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்? ஏனென்றால், நாம் இந்தப் பிரபஞ்சத்தினுள் வாழ்கிறோம்; நமது வாழ்க்கை இப்பிரபஞ்சத்தைச் சார்ந்திருக்கிறது, அடுத்து. நாம் இப்பிரபஞ்சத்துள் இருக்கிறோம், வாழ்கிறோம் என்பதாலேயே, இப்பிரபஞ்சம் நன்மையானதாகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணுவதிலும் தவறிருக்கமுடியாது! 

ஆனால், சில விஞ்ஞானிகள், "அப்படியொன்றும் நாம் விசேடமானவர்களோ, பிரத்யேகமானவர்களோ அல்ல!" என்கிறார்கள். ஆம், நம்மில் சில விஞ்ஞானிகளும், அறிவுஜீவிகளும், தத்துவவாதிகளும், பகுத்தறிவாளர்களும் நம்மைவிட பருப்பொருளாலான பிரபஞ்சத்திற்கும், அதனுடைய பௌதிகவியல் விதிகளுக்கும் தான் முதன்மையிடமும், முன்னுரிமையும் தருபவர்களாக இருக்கிறார்கள்! இது மிகவும் துரதிட்டவசமானதாகும். ஏனெனில், பிரபஞ்சத்தை முதன்மையாகக் கொண்டு மனிதன் உள்பட பிற யாவற்றையும் இரண்டாம்பட்ச அம்சங்களாகக் காணும் இத்தகைய பார்வை அடிப்படையிலேயே தவறானதாகும்! அதாவது, நாம் இருக்கிறோம்; ஆகவே நாம் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயவும் அறியவும் விழைகிறோம்! இதன் மறுதலை உண்மை அல்ல (the converse is not true). நாம் இல்லாத நிலையில், பிரபஞ்சம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன?

அடுத்து, சிலர், "நாம் இந்த பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை, இன்னும் சொல்லப்போனால், இப்பிரபஞ்சத்திற்கு மையம் என்றும் ஏதும் இல்லை!" என்கிறார்கள். இக்கூற்றும் தவறானதே! அதாவது, வெகு காலமாக 'பூமியே பிரபஞ்சத்தின் மையம்' எனவும்; மேலும், 'சூரியனும், எல்லாக் கிரகங்களும், பூமியைச் சுற்றிவருகின்றன' எனவும் கருதப்பட்டுவந்தது. ஆனால், பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற இந்த புவி-மையக் கொள்கையை மாற்றி, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன (சூரிய-மையக் கொள்கை) என உலகிற்குக் காட்டியவர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்ற வானியல் அறிஞர். இது இவரது பெயரைக்கொண்டு, "கோப்பர்னிக்கஸின் புரட்சி" என்று வழங்கப்படுகிறது. ஆனால், நடைமுறை வானவியலுக்கு இவரது கொள்கை ஆற்றிய பங்களிப்பைத் தாண்டி வேறு மகத்தான புரட்சி எதையும் அது செய்திடவில்லை!

அதாவது, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு பற்றியும், வாழ்வியலுக்குரிய யாதொரு பெரிய புரிதலையும் அது அளித்திடவில்லை! பரந்து எல்லையில்லாமல் விரியும் இப்பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு ஓரத்திலுள்ள சூரியனைச் சுற்றிச் சுழலும் ஒன்பது கிரகங்களில் ஒன்றான பூமியில் நாம் இருக்கிறோம் என பரந்த-வெளியில் பூமிக்கிரகத்தின் அமைவை இட அளவில் (Spatially) குறித்துக்காட்டியது மட்டுமே "கோப்பர்னிக்கஸின் புரட்சி" செய்த சாதனையாகும். 

பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனையே சுற்றிவருகின்றன என்பது ஒரு வானியல் விபர உண்மை மட்டுமேயாகும். ஆனால், 'பூமியானது பிரபஞ்சத்தின் மையம் அல்ல' என்கிற விபர உண்மை எவ்வகையிலும் மனிதனின் மையத்துவத்தை (Centrality) அகற்றிடவில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னும் விஞ்ஞானச் சமூகத்திற்கு வாய்க்கவில்லை! 

ஒருவகையில், விஞ்ஞானிகள் தற்போது மிகு-சிக்கல் (Complexity) நிகழ்வுமுறையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றாலும், மிகு-சிக்கல் நிகழ்வுமுறையானது எதை நோக்கிச் செல்கிறது என்பதை துல்லியமாக அறிந்தாரில்லை! ஒரு பரிணாம இயக்கம் என்றவகையில் பிரபஞ்சமானது மேன்மேலும் ஒருமைப்படுவதிலும் (Unification), தனி-மையப்படுவதிலும்  (Individualization) ஈடுபட்டுள்ளது! ஒரு உயிர்-ஜீவி என்பது யாதொரு பருப்பொருள் அமைப்பைவிடவும் மிகு-சிக்கல் வாய்ந்தது மட்டுமல்ல; அது மிகவும் ஒருமைப்படுத்தப்பட்டதும், தனி-மையப்படுத்தப்பட்டதுமான (Highly Unified and Individualized structure) ஒரு அமைப்பாகும்! அடுத்து ஒரு மனிதஜீவி என்பவன் ஒரு உயிர்-ஜீவியைவிடவும் மேலதிகமாக ஒருமைப்படுத்தப்பட்டவனும், தனி-மையப்படுத்தப்பட்டவனும்; யாவற்றுக்கும் மேலாக சுய-உணர்வு கொண்ட ஒரு விசேட அமைப்புமாவான்! அதாவது, ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒவ்வொரு மனிதஜீவியையும் மையமெனக் கொண்டு குவிகின்றது எனலாம்! அதாவது, ஒரு விருட்சமானது தனது ஒவ்வொரு கனியையும் மையமாகக் கொள்வதைப்போல! ஒவ்வொரு மனிதனும் தனது முக்கியத்துவத்தை உணர்ந்தறியும் போது, அவன் பிரபஞ்சமளாவியவனாகிறான் (Universalized); அதே வேளையில், இவ்வழிமுறையில் பிரபஞ்சமானது தனி-மையப்படுகின்றது (Individualized)! இவ்வகையில், உண்மையில் பூமியானது தனது மையத்துவத்தை இழக்கவில்லையென்றே கொள்ளப்படவேண்டும்!

அதாவது, ஒரு மரத்தின் காய்கள் அம்மரத்தின் மையத்தில்தான் காய்க்கவேண்டும் என்பதில்லை, அம்மரத்தின் எந்தப்பகுதியிலும் காய்க்கலாம்; அவ்வாறு எந்தப்பகுதியில் காய்த்தாலும் அக்காய்களின் மையத்துவமும், முக்கியத்துவமும் சிறிதும் மாறிவிடுவதில்லை. எவ்வொரு மரத்திற்கும் அதனுடைய காய்கள்/கனிகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், மரத்தின் ஒருமையும், முழுமையும் அதன் வித்துக்களைக் கொண்டிருக்கும் கனிகளில் தான் அடங்கியுள்ளன. அவ்வாறே, பிரபஞ்சத்தின் வித்துக்கள் மனிதர்கள் எனும் கனிகளில் தான் அடங்கியுள்ளன! ஆனால், மனிதர்கள் இன்னும் கனியாதவர்களாகவும், பெரும்பாலானவர்கள் கடைசிவரை (தம் வாழ்-காலம் முடியும் வரையிலும்) படும் பிஞ்சுகளாகவே தேக்கமுற்று மரணத்தில் உதிர்ந்துபோகின்றனர்!

அழிவதற்காகத் தோன்றியதல்ல பிரபஞ்சம்!


இப்போது நாம் வெப்பவியக்கவிசையியல் விதிகளைப் (Laws of Thermodynamics) பற்றிப் பார்ப்போம். இவ்விதிகளை நாம் எளிமையாக "வெப்பச்சலன விதிகள்" என்றும் அழைக்கலாம். முதலாம் வெப்பவியக்கவிசையியல் விதி, அல்லது வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது; மாறாக, சக்தியானது 
   ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றப்பட மட்டுமே முடியும். 
   ஆக, புதிதாக சக்தியானது உருவாக்கப்பட முடியாது என்பதால், பிரபஞ்சத்தின் 
   சக்தி எப்போதும் மாறாத அளவைக் கொண்டதாகவே இருக்கும்." 

சக்தி என்பது மிகவும் அடிப்படையானது என்பதில் ஐயமில்லை; ஏனெனில் சக்திதான் பருப் பொருளாக மாறுகிறது. பிரபஞ்சமாகவும், அதிலுள்ள அனைத்துமாகவும் ஆகிறது. சக்தி, பருப்பொருள் ஆகியவை குறித்து நாம் தொடக்கத்திலிருந்தே புரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், இவை அடிப்படையான அம்சங்களே தவிர, எவ்வகையிலும் இறுதியானவையல்ல என்பதுதான். சக்தி என்பது காரியமாற்றுவதற்கான சக்தி மட்டுமே தவிர, அதற்கு யாதொரு திசையும், குறிக்கோளும், நோக்கமும் கிடையாது. பருப்பொருள் (Matter) என்பது சக்தியின் ஒரு மாறிய வடிவமே; மேலும் அது இப்பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருளே தவிர, 'பரம்பொருள்' அல்ல! ஆம், சக்தி, பருப்பொருள் ஆகியவை கருவி போன்றவை, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு, நோக்கத்திற்கு வடிவம் கொடுத்து நிறைவேற்றுவதற்கான ஊடகம் (Medium) போன்றவை. இவ்வாறே, இவற்றுக்கு அடிப்படையாக அமைந்த பௌதீகவியல் விதிகளும் பரிணாம விதிகளின் கருவிகளேயாகும்! ஆம், பரிணாம விதிகளே சக்தி, அல்லது பருப்பொருளானது என்ன செய்யவேண்டும், எவ்வாறு செய்யவேண்டும் எனும் திசையையும், வழிமுறைகளையும் காட்டுகிறது!

அடுத்தது, இரண்டாம் வெப்பச்சலன விதி என்ன சொல்கிறதென்றால்:

   "சக்தியானது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றமடையும் 
   போது, அல்லது பருப்பொருளானது ஒரு மூடிய அமைப்பினுள் சுதந்திரமாக 
   இயங்கும்போது, (நாளடைவில்) அதனுடைய சீர்குலைவு (entropy)
   அதிகரிக்கிறது."

அதாவது, கணிதமேதையும், தத்துவவாதியுமான நார்பெர்ட் வீய்னர் (Norbert Wiener)அவர்கள்,  "(ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டால்,) அதில் தோன்றிய எவ்வொரு பொருளும், நிகழ்வுமுறையும், (ஒட்டுமொத்த பிரபஞ்சமும்) இறுதியில் (நெடுங் காலப்போக்கில்) அழிந்துபோகும். அதில், ஒரு மனிதன் எவற்றையெல்லாம் மதிப்பு மிக்கதாகக் கருதுகிறானோ, வாழ்க்கை, செல்வம், சந்தோஷம், கலைப்பொருட்கள்; நாடுகள், நகரங்கள், சமூகங்கள், நாகரிகங்கள் - இன்னும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என யாவும் அழிந்துபோகும்! யாவும் கடைசிச் சிதைவுக்கும் அழிவுக்கும் உட்பட்டவையே, ஏனெனில், பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருளும் இந்த இரண்டாம் வெப்பச்சலன விதிக்கு உட்பட்டவையே!" எனக் கூறியுள்ளார்.

பிரபஞ்சத்தின் தலைவிதி கடைசியில் வெப்பச்சாவில் (heat death) முடிவதுதான் என்பதாக இந்த இரண்டாம் வெப்பச்சலன விதி சுட்டுகிறது. காலப்போக்கில், அனைத்து நட்சத்திரங்களும், உடுமண்டலங்களும் தமது எரிபொருளை எரித்துத் தீர்ந்த பிறகு, பிரபஞ்சம் மொத்தமும் தன் வெப்பத்தையிழந்து ஒரே சீரான வெப்ப நிலையை எட்டிவிடும்; அவ்வேளையில், யாதொரு உயிரும் பிரபஞ்சத்தில் வாழமுடியாது போகும்! 

ஆக, நமது வாழ்க்கை என்பது பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைக்கும், அதன் முடிவு நிலைக்கும் நடுவே இடைப்பட்ட காலப் பகுதியில் நிகழும் ஒன்றாக அமைந்துள்ளது! அதாவது பிரபஞ்சம் தோன்றி கிட்டத்தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாம் அவதரித்தோம்! அதேபோல, பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிவதற்கு பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்பாகவே நாமும், பிற உயிரினங்களும் இப்பிரபஞ்சத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிடுவோம் எனலாம்!

நாம் நாடகக் கலைஞர்களையும், பார்வையாளர்களையும் போல, நாடகம் தொடங்கும் போது மட்டுமே முறையே மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் தோன்றுகிறோம்! நாடக அரங்கம் (பிரபஞ்சம்) அமைக்கப்படும் போதும், நாடகம் முடிந்து அரங்கம் பிரிக்கப்படும் போதும் நாம் இருப்பதில்லை! எது முக்கியமெனில், நாடகம் நிகழ்கிறது என்பதும், நாடக-விதிகளை அறிந்து, அவற்றை முழுமையாக நிறைவேற்றி, நமது (பரிணாமப்) பாத்திரத்தை முறையாக உணர்ந்துசெயல்படுதல் மட்டுமே! 

இவ்வளவு ஏன்? மனிதனின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள்தான்! அதற்குள்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் 50 ஆண்டுகளோ, 60, அல்லது 70 ஆண்டுகளோ,    எவ்வளவு ஆண்டுகள் வாழ்வோம் என்பதை முன்னறிய முடியாத நிலையில், நாம் ஒவ்வொருவரும் விரைவாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை மரணத்துக்கு முன்னேயே முறையாக முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும்! 

மனித வாழ்-காலம்  வரையறைக்குட்பட்டதுதான். ஆனால், அது பொதுவாகப் பலரும் எண்ணுவது போல,  மிகவும் குறுகியதல்ல! மாறாக, போதுமானதற்கும் மிக அதிகமாகவே மனிதர்க்கு வாழ்-காலம் வழங்கப்பட்டிருக்கிறது! இந்த வரையறைக்குள்ளாகவே நம்மால் முழுமையாக வாழவும், வாழ்வின் ஒப்பற்ற இலக்கை முயன்றடையவும் முடியும் என்பதால்தான் நமது வாழ்-காலம் இவ்வாறு மிகவும் கச்சிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது

மேலும், மனித-உடலானது ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும்வகையில் உருவாக்கப்படவில்லை! ஏனெனில், "வாழ்க்கை" என்பது நீடித்து உயிர்-பிழைத்திருப்பது அல்ல! அவ்வாறு நீடித்து உயிர்-வாழ்வதுதான் வாழ்க்கை என்பதாயிருந்தால், இயற்கையாகவே ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கும் வகையில் நமது உடலானது வடிவமைக்கப்பட்டிருக்கும்! மேலும் ஆயிரம் ஆண்டுகள் நாம் நீடித்திருக்க முடியுமென்றாலும், நாம் என்ன செய்வோம்? வெறுமனே உண்டு, உறங்கி, இனம்பெருக்கி சகமனிதர்களோடு சண்டை சச்சரவிடும் கலக மானிடப்பூச்சிகளாக உழன்று கொண்டிருப்போம்!

ஆக, இரண்டாம் வெப்பச்சலன விதியை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமெனில், நாம் வாழும் இப்பிரபஞ்சம் அழிவதற்காகத்தோன்றியதல்ல என்ற உண்மையைப் புரிந்துகொள்வோம்! அதாவது, பல நூறு கோடியாண்டுகளுக்குப் பிறகு, நமது பிரபஞ்சம் வெப்பச்சாவில் மடிந்துவிடும் என்பதை நாம் இயல்பானதாக, அதாவது, நன்றாக, முழுமையாக அர்த்தபூர்வமாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதன் மரணத்தில் முடிவதைப் போன்றே இயல்பானதாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ஏன், எந்த குறிக்கோளுக்காக இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதை முறையாகப் புரிந்துகொள்ளும்பட்சத்தில் முடிவு, இறப்பு என்பவை அழிவைக் குறிக்கும் சொற்களல்ல என்பதை நாம் புரிந்துகொள்வோம்!

அதாவது, பிரபஞ்சத்தின் பிறப்பு (ஆரம்பம்) என்பது ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வு என்றால், அதன் முடிவு என்பதும் ஒரு படைப்புப்பூர்வ நிகழ்வாகத்தான் அமைய முடியும்! மேலும், பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு குறிக்கோள், நோக்கம், அல்லது இலக்கு என்பது இருக்குமானால், அந்தக் குறிக்கோளை, இலக்கை அடைந்ததும் பிரபஞ்சம் முடிவிற்கு வந்துவிடுவது என்பது அழிவுகரமான விடயம் அல்ல! ஆனால், விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரம் என்பதாகப் பார்ப்பதால், அவர்கள் பருப்பொருளையும், அதனை இயக்கும் பௌதீக விதிகளையுமே பிரதானமாகக் கொள்கின்றனர். உண்மையில், பிரபஞ்சத்தின் முடிவை, அதனுடைய பௌதிகத் தளத்தில் பௌதிக விதிகளின் சொற்களில் காண்பது, எதிர்பார்ப்பது தவறான புரிதலுக்குத்தான் இட்டுச் செல்வதாய் அமையும்! உண்மையில், பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றி, வெப்பச்சாவிலோ, அல்லது பெரும் உள்ளடர்தலிலோ (Big Crunch) முடிவடைவது கிடையாது! 

ஒரு விருட்சமானது ஒரு வித்திலிருந்து பிறந்து, வளர்ந்து, ஒரு கட்டத்தில் பூத்து, பிஞ்சுகள் விட்டு, பிஞ்சுகள் காய்களாகி, காய்கள் முற்றிக் கனிகளாகி, கனிகளுக்குள் இருக்கும் வித்துகளுக்குள் அடங்கி விடுகிறது! அதாவது, எவ்வொரு விருட்சமும் வித்தில் தொடங்கி வித்தில் (முழுமையடைந்து) முடிகிறது என்பதைப்போலவே, பிரபஞ்சம் எனும் விருட்சம் எத்தகைய வித்திலிருந்து தொடங்கியது (தோன்றியது) என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்! நாம் ஒரு விருட்சத்தின் வித்தைக் கணக்கிலேயே கொள்ளாமல், அவ்விருட்சத்தின் வேர்கள், அடிப்பகுதி, கிளைகள், இலைகள்; நீளம், அகலம், உயரம் ஆகியவற்றையும், அவற்றுக்கு அடியோட்டமான சில விதிகளையும் கொண்டு மட்டுமே புரிந்துகொள்வது அவ்விருட்சத்தை முழுமையாக, அதன் சாரத்தில் புரிந்து கொண்டதாக ஆகாது! ஏனெனில், ஒரு விருட்சத்தின் எல்லா பண்புகளையும், விதிகளையும் அறிந்தாலும், அதன் வித்தையும், வித்தின் பண்புகளையும், விதிகளையும் அறியாதிருப்பது அறிவீனமாகும்! அது சாரத்தை விலக்கி சக்கையைக் கொள்வதற்குச் சமமாகும்! 

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் உயிரியல் தளத்தையும், மனிதனை உள்ளடக்கிய அதிமுக்கியமான உணர்வியல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, பௌதிகத்தளத்தை மட்டுமே ஒட்டு மொத்தப் பிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்; இது, ஒரு மரத்தின் பூக்களையும், காய்கள் மற்றும் கனிகளையும் விலக்கி வெறும் அடிமரத்தையும், கிளைகள், மற்றும் இலைகளையும் மட்டுமே மரம் எனக் காண்பதற்கு ஒப்பான மேலோட்டமான அணுகுமுறையாகும்! ஏனெனில், மரத்தின் அதிமுக்கியமான அம்சம் வித்து மட்டுமேயாகும். ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! விருட்சம் என்பது வித்தினைச் சுட்டும் ஒரு குறியீடு மாத்திரமே! மூல காரணமான வித்திற்கும், முடிவான விளைவாகக் கனியினுள் தோன்றும் வித்திற்கும் இடையேயான நிகழ்வுமுறையே (Phenomenon) விருட்சமாகும்! 

ஆம், பிரபஞ்சம் என்பது ஒரு விருட்சமானால் நாமே அதன் காய்களும், கனிகளும் போன்றவர்கள் ஆவோம்! ஒரு மரத்திற்கும், அதன் காய்களுக்கும் உள்ள உறவைப்போன்றதே பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் உள்ள உறவும் ஆகும்! ஒரு மரத்திற்கு காய்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானவர்கள் பிரபஞ்சத்திற்கு மனிதஜீவிகள்! விஞ்ஞானிகள் கருதுவதுபோல, உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற, கிட்டத்தட்ட தேவையற்ற பக்கவாட்டு கிளைப்புகள் அல்ல! 

நாம் இப்பிரபஞ்சத்தில் தோன்றியிருக்கிறோம் என்பது ஒரு விபத்து அல்ல! மேலும், பிரபஞ்சத்தின் வரலாற்றை மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்தால், திரும்பவும் நாம் தோன்றமாட்டோம் (ஸ்டீஃபென் ஜே. கௌல்டு, Stephen Jay Gould)என்பது போன்ற கூற்றுகள் அபத்தமானவை. ஏனெனில், விபத்தோ, இல்லையோ, நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை! இனி பிரபஞ்சமல்ல, நாம் இங்கிருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியமானது; நம்மை இங்கு கொண்டுசேர்த்ததுடன் பிரபஞ்சத்தின் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது எனலாம். இனி நாம் தான் உணர்வுப்பூர்வமாக பிரபஞ்சம் விட்ட இடத்திலிருந்து பரிணாமத்தை அதன் இறுதியான இலக்கு நோக்கிக் கொண்டுசென்றாக வேண்டும்! 

பிரபஞ்சத்தின் எதிர்காலத்து விளைவுகளை, வளர்ச்சி நிலைகளை அதன் பௌதிகப் பரப்பில், விண்வெளியில் தொலைதூரத்தில் எங்கேயோ தேடிக்கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானதும், முறையற்றதுமாகும். ஏனென்றால், பிரபஞ்சம் என்பது வெறும் எந்திரத்தனமான பௌதிக (பொருளியல்) இயக்கம் அல்ல; பிரதானமாக அது ஒரு பரிணாம இயக்கம் ஆகும். பரிணாமரீதியாக, பிரபஞ்சமானது வெகு காலத்திற்கு முன்பே பௌதிகத் தளத்தை, அதாவது பொருளியல் தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்திற்குள் பிரவேசித்து, உயிரியல் தளத்தின் சாத்தியப்பாடுகள் அனைத்தையும் சோதித்து முடித்து, கடைசியாக, தற்போது உணர்வியல்-தளத்திற்குள் நுழைந்துள்ளது. இது, ஒரு மரம் பூத்துக் காய்த்துக் குலுங்கும் நிலையை ஒத்ததாகும்!  

ஆனால், விஞ்ஞானிகள் அனைவரும் ஏகோபித்த பார்வையில், பருப்பொருளாலான தளத்தை -- உடுமண்டலங்கள் (Galaxies), நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றையும்; அவற்றிற்கு அடிப்படையான கட்டுமானக் கூறுகளான அணுத்துகள்களையும்; மேலும்,  காலம், வெளி, நிறை, மற்றும் அடிப்படை விசைகளான ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை, அணுக்கருவின் வலுமிக்க விசை, வலுக்குறைந்த விசை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பைத்தான் மொத்தபிரபஞ்சம் என்பதாகக் காண்கிறார்கள்! ஆகவேதான் இவையனைத்தையும் நிர்வகிக்கும் அடியோட்டமான பௌதிகவியல் விதிகளை (The Laws of Physics) பிரதானமாகக் கொள்கிறார்கள்; கிட்டத்தட்ட அவர்கள் இவ்விதிகளை வழிபடுகிறார்கள் என்றே சொல்லலாம்!  

இல்லையென்றால், பருப்பொருளின் தளத்துக்குரிய இரண்டாம் வெப்பச்சலன விதி போன்ற ஒரு விதியைக் கொண்டு அவர்கள் பிரபஞ்சத்தின் தலைவிதியை மட்டுமல்லாமல் நம்முடைய தலைவிதியையும் சேர்த்தே எழுத எத்தனிப்பார்களா என்ன? இது எவ்வாறு உள்ளதென்றால், நாம் வசிக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டு நம்மையும், நமது வாழ்க்கையையும் வரையறுப்பது போலுள்ளது! 

முக்கியமாக, இரண்டாம் வெப்பச்சலன விதி என்பது பிரபஞ்சத்தின் பௌதிகத்தளத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விதி மாத்திரமே! இவ்விதியாயினும், பிற எவ்வொரு பௌதிக விதியாயினும், எதுவும் பரிணாம வழிமுறையை தீர்மானிக்க இயலாது! பௌதிகவிதிகள் யாவும் பருப்பொருள் தளத்தைக் கட்டுப்படுத்துவதற்கானவை மட்டுமே. பருப்பொருளானது ஒரு உயிர்-ஜீவியாக மாற்றமடையும் வழிமுறையில் இரண்டாம் வெப்பச் சலன விதி எத்தகைய பங்கு ஆற்றியுள்ளது? இறுதியில், இப்பிரபஞ்சத்தில் உயிர்-ஜீவிகள் உயிர்-பிழைத்திருக்க முடியாத நிலையை இந்த இரண்டாம் விதி தோற்றுவிக்கும் என்றால், முதலிடத்தில் உயிர் தோன்றுவதை ஏன் அந்த விதி தடுக்காமல் அனுமதித்தது?

பிரபஞ்சமானது அணுத்துகள் போன்ற மிக எளிய அமைப்பிலிருந்து ஒரு அமீபா போன்ற மிகு-சிக்கல் அமைப்பாகவும், மனித மூளை போன்ற அதி-சிக்கல் வாய்ந்த அமைப்பாகவும் தவிர்க்கவியலாத வகையில் வளர்ந்தெழும் வழிமுறையில் தனித்துவமான மிகு-சிக்கல் விதிகள் (laws of complexity)தோன்றி பரிணாமத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்கின்றன. இவ்வாறு, பரிணாமப் போக்கில், பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் தோன்றினாலும், அவ்விதிகள் பௌதிக விதிகளை மீறுவதில்லை; மாறாக அவற்றை நிறைவு செய்வதாகவே உள்ளன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறுவதிலிருந்து, அவர்கள் பௌதிக விதிகளல்லாத வேறு வகை விதிகள் இருந்தாலும் அவற்றை மதிப்பதில்லை, பெரிதாகக் கணக்கில் கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்து பௌதிக விதிகளுக்கு விசுவாசமாக இருப்பதே விஞ்ஞான பூர்வமானது என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பதும், இவ்வழியே ஒருவகை விஞ்ஞானவாதம் (Scientism) விஞ்ஞானத்தைப் பீடித்து மட்டுப் படுத்துவதில் முடிகிறது என்பதையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் உணர்வதேயில்லை!

உண்மையில், உயிர்-தோன்றுவதற்குரிய அனைத்துச் சாதகமான நிலைமைகளுக்கும் பௌதிக விதிகள் வழியமைத்துக் கொடுத்தே அமைந்துள்ளன! இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? சிந்திகும் திறனுள்ள சுய-உணர்வுள்ள மனிதஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? ஒருவேளை, இப்பிரபஞ்சத்தில் உயிரும், மனித ஜீவியும் தோன்றவில்லை என்றால், அதாவது, பிரபஞ்சம் தரிசாகவே பல்லாயிரம் கோடி ஆண்டுகள் யாதொரு குறிக்கோளும், இலக்கும் இன்றி இயங்கி கடைசியில் இரண்டாம் வெப்பச் சலன விதியின்படி வெப்பச்சாவில் மாண்டு மறைந்துபோகும் என்றால், அந்த இரண்டாம் வெப்பச்சலன விதியின் முக்கியத்துவம் தான் என்ன? எது, அல்லது யார் அவ்விதியைப் பற்றி ஆராய்ந்துகொண்டும், போற்றிப் பாடிக்கொண்டும் இருப்பர்? 

நிலையாமை நிலையானதல்ல!


வித்தில் தொடங்கி வித்தில் முழுமைபெறும் நிகழ்வுமுறையின் சூட்சுமம் அறிந்தால், "நிலையாமை" என்ற பேச்சுக்கு இடமேது! தோன்றியவையனைத்தும் அழிந்துபோகும் என்பது தவறு! 

பிரபஞ்சம் முடிவிற்கு வரவேண்டுமானால், முழுமையடைய வேண்டும்! அது எக்குறிக்கோளுக்காத் தோன்றியதோ அக்குறிக்கோளை முழுமையாக எட்டியிருக்கவேண்டும்! அது எந்த மூலத்திலிருந்து வெடித்துத் தோன்றியதோ அந்த மூலத்தை எட்டும் வகையிலான நுட்பம் மிகுந்த ஒரு அமைப்பை கட்டமைத்தாக வேண்டும்! எவ்வாறு ஒரு விருட்சமானது எந்த வித்திலிருந்து தோன்றியதோ அதே போன்ற வித்துக்களை தனது கனிகளுக்குள் கட்டமைக்கிறதோ அவ்வாறு! பிரபஞ்சம் எதற்காகத் தோன்றியது என்பது தெரியாமல், வெறுமனே பருப்பொருளின் அடர்த்தி மதிப்பையும், ஒரு பௌதிக விதியையும் (இரண்டாம் வெப்பச்சலன விதியையும்) கொண்டு இப்படித்தான் பிரபஞ்சம் முடிவிற்கு வரும் என்று கணிப்பது பொருத்தமற்றது!

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, கடைசியில் எவ்வாறு முடிவடையும் என்பதை அறிவதைவிட ஏன், எந்தக் குறிக்கோளுக்காகத் தோன்றியது என்பதை அறிவது அதிமுக்கியமானதாகும்! காலம், மற்றும் உலகம் பற்றிய உணர்வு தோன்றிய தொன்மைக் காலங்களில், "ஏன்", "எவ்வாறு", "எதிலிருந்து" உலகம் தோன்றியது என்ற கேள்விகளைப் பின்பற்றி இவ்வுலகில் தன்னையும், தனது வாழ்வையும் அர்த்தப்படுத்திடும்வகையில் எழுந்த உந்துதலில் புராணிகம் தோன்றியது! புராணிகங்களிலிருந்து ஒரு கிளை பிரிந்து மதங்கள் உருவாயின. மதங்கள் கடவுளை அனைத்துக்கும் காரண கர்த்தாவாகக் கொண்டதால் அனைத்துக் கேள்விகளும் தேடலும் முடிவிற்கு வந்துவிட்டன! இன்னொரு கிளை பிரிந்து தத்துவச் சிந்தனை பிறந்தது. அடுத்து மூன்றாவது கிளையாக, 'எவ்வாறு' என்ற கேள்வி முதன்மைபெற்றதன் வழியாக  விஞ்ஞானம் துளிர்த்தது; துளிர்த்ததோடு துரித வளர்ச்சி பெற்று, வெறும் 500 ஆண்டுகளில் கிட்டத்தட்ட தனது எல்லைகளைத் தொட்டும்விட்டன, ஆனால், அது தன் முடிவைத் தழுவிக்கொள்ள மனமில்லாமல் தத்தளித்துக்கொண்டு பற்பல கற்பனைக்கோட்பாடுகளைப் புனைந்துகொண்டுள்ளது! ஆம், விஞ்ஞானம் என்பது பருப்பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வு என்ற வகையில் முடிவிற்கு வந்தே ஆகவேண்டும்! அதற்கு அது துணிவுடன் சில முடிவுகளை, உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்!

பிரபஞ்சமானது ஒரு பூடகமான "பெரு-வெடிப்பில்" (Big-Bang) தோன்றி, மேலும் பூடகமான தொரு "பெரும்-உள்ளடர்தலில்" (Big-Implosion) முடிவடைந்து போகும் அர்த்தமற்ற நிகழ்வுமுறை அல்ல! அதற்கு அது தோன்றாமலேயே இருந்திருக்கும்! மாறாக, அது நிரந்தரமற்ற நிலையிலிருந்து நிரந்தரத்துவம் நோக்கிச் செல்லும் அரிய நிகழ்வுமுறை ஆகும்! மிகவும் எளிமையான அணுத்துகள் என்ற நிலையில் தொடங்கிய பிரபஞ்சம், சுய-அமைப்பாக்கம் (Self-Organization)எனும் வழிமுறையின் வாயிலாக தன்னைத்தானே கட்டியெழுப்பிக்கொண்டு பருப்பொருள் நிலையிலிருந்து உயர் மாற்றம் பெற்று தனி-மையப்பட்ட (Individualized) மிகு-சிக்கல் (Complexity) அமைப்பான உயிர்ஜீவியாக எழுந்தது. பிறகு, வெறும் உயிர்-ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து, மேலும் மிகு-சிக்கலான அமைப்பான மூளையைக்கொண்ட,  சுய-உணர்வு பெற்ற, சிந்திக்கும் திறன்கொண்ட மனிதஜீவியாக அவதாரம் எடுத்தது! அடுத்து, சுய-உணர்விலிருந்து முழு-உணர்வு நிலையை அடைய இன்னும் ஒரு படிதான் உள்ளது! அதாவது, காய்கள் முற்றிக் கனிகளாக மாறுவது மட்டுமே இன்னும் நிகழவேண்டியுள்ளது! எல்லாக் காய்களும் முற்றிக் கனிகளாக ஆன பிறகு, மரம் பட்டுப்போனாலும் அதனால் பாதகம் ஒன்றுமில்லை!

இறுதியில் எல்லாம் அழிந்துபோகும் என்றால், முதலிடத்தில் இப்பிரபஞ்சம் எதற்கு? அதில் உயிர்ஜீவிகள் ஏன் தோன்றிட வேண்டும்? பிறகு மனித ஜீவிகள் எதற்கு? வெறுமனே சிறிது காலம் உயிர்-பிழைத்திருந்து பிறகு மரணத்தில் முடிந்துபோவதற்காக உருவானதா வாழ்க்கை? இல்லை, வெறும் உயிர்-வாழ்தலைக் கடந்த உன்னத நோக்கம் கொண்டது வாழ்க்கை! 

மனித வாழ்-காலம் வரையறைக்குட்பட்டதுதான் என்றாலும், அதற்குள்ளாகவே அடையப்படவேண்டிய பிரத்யேகமான, மகத்தான இலக்கு ஒன்று இருந்தாகவேண்டும்! அந்த இலக்கைக் கண்டடைவதில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது! நெடிய ஆயுளுடன் குந்தித் தின்பதற்கும், உடுத்தி மகிழ்வதற்கும், உல்லாசமாக அவரவர் விருப்பப்படி இருப்பதற்குமான வாய்ப்பு அல்ல வாழ்க்கை! 
நிலையாமை என்பது உலக மெய்ம்மை பற்றிய உண்மையாகும். மனித ஆயுளுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சத்தின் ஆயுள் நெடியது என்றாலும் அது நிரந்தரமானதல்ல. அவ்வாறு நிரந்தரமாக நீடித்திருக்கும் வகையிலும் அது கட்டமைக்கப்படவில்லை! ஒரு வகையில், இச்செய்தியைத்தான் இரண்டாம் வெப்பச்சலன விதி உணர்த்தி நிற்கிறது எனலாம்!  

நிரந்தரத்துவம் என்பது தோற்றம், மறைவு; ஆரம்பம், முடிவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது! நாம் இந்த உலகில் முளைத்திருக்கலாம்; ஆனால், நாம் ஒவ்வொருவரும் சென்று சேர வேண்டிய உலகம் காலாதீதம்! அது ஒரு ஒப்பற்ற உணர்வு நிலையாகும்! ஒரு கணம் அதை உணர்ந்து அனுபவம் கொள்வதென்பது அனந்த காலத்திற்கு வாழ்ந்ததற்குச் சமமானது மட்டுமல்ல, அது, முக்தி, மோட்சம், வீடுபேறு எனும் இறவா நிலையை, அதாவது, நிரந்தரத்துவத்தைச் சேர்வதுமாகும்!

இந்த உலகம் (பிரபஞ்சம்) நிரந்தரமற்றது என்பதன் அர்த்தம் 'நிரந்தரமானது' என்று எதுவும் இல்லை என்பதல்ல! நிரந்தரமற்ற மெய்ம்மையாகிய இந்த உலகம் இங்கிருக்க முடியுமெனில், நிச்சயம் நிரந்தர மெய்ம்மை என்ற ஒன்றும் இருந்தாகவேண்டும்! அவ்வாறில்லாவிடில், யாதொரு அடிப்படையும், மூலமும் இன்றி, நிரந்தரமற்ற இந்த உலக-மெய்ம்மை எவ்வாறு எதிலிருந்து தோன்றியிருக்கமுடியும்? 

■ 

மா.கணேசன் / நெய்வேலி / 25-09-2018
--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...