Saturday, 28 March 2020

மனித வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டதா கொரோனா?





மனித வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டதா கொரோனா?

ஆம், மற்றும் இல்லை என்பதே இக்கேள்விக்கான பதிலாகும். இது நாள் வரை நாம் நம் விருப்பங்களைத் தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக கணக்கில் கொள்ளாமல் நம் மனம் போன போக்கில் வாழ்ந்துவந்துள்ளோம். இனியும் நாம் அவ்வாறு தொடரமுடியாது என்பது கொரோனா சுட்டும் முக்கிய பாடங்களில் ஒன்று எனலாம். உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளையும், மக்களையும், அவர்களது வாழ்க்கையையும் முற்றாக முடக்கிப்போட்டுவிட்டது கொரோனா. வரலாறு என்பது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று தெளிவாகப் பிரித்துக் காண வேண்டிய அளவிற்கு பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கொரோனா ஏன், எவ்வாறு வந்தது போன்ற கேள்விகள் குறுகிய எல்லைகளைக்கொண்டவை. கொரோனா ஏற்பட்டது ஒரு விபத்தாக இருக்கலாம். அல்லது மனிதத் தவற்றின் விளைவாக இருக்கலாம். எப்படியாயினும் அது ஏற்பட்டுவிட்டது; அது இங்கே இருக்கிறது; எவ்வாறேனும் அதை இங்கே தங்கவிடாமல் விரட்டுவது தற்போதைய தலையாய பணியாகும். ஆனால், கொரோனாவை விரட்டியடித்த பிறகு மீண்டும் நாம் நம் பழைய வாழ்-முறைகளுக்கும், அதே பழைய உள்ளீடற்ற வாழ்க்கைப்  பார்வைக்கும் திரும்பப் போவதென்பது பெருந்தவறாகவே முடியக்கூடும். கொரோனாவானது இதுவரை நாம் வாழ்ந்துவந்த நமது வாழ்க்கை முறைகளை, நாம் கொண்டிருந்த வாழ்க்கைப் பார்வைகளை (அவ்வாறான பார்வை ஏதும் நம்மிடம் இருக்குமென்றால்) மறு பரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தைச் சுட்டி நிற்கிறது எனலாம்.

எவ்வாறெல்லாம் கொரோனா தற்போது நம் வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது என்பதை மறந்துவிடாமல் ஞாபகத்தில் கொள்வது அறிவுடைமை ஆகும். முதலிடத்தில் அது நமது இயக்கத்தை, குறிப்பாக பிற மனிதர்களுடன் கூடிச் செயல்படுவதை, கூட்டியக்கத்தை முடக்கியது. ஏனென்றால், உயிர் பிழைத்திருப்பது முக்கியம் என்பதால்,  கொரோனா தொற்றிலிருந்து தப்ப வேண்டுமானால் நாம் கூட்டமாகக் கூடுதல், கூடிச் செயல்படுதல்  கூடாது. இது ஒரு அருமையான பாடம். அதாவது, உயிர் பிழைத்திருத்தலின் முக்கியத்துவத்தை நாம் அநேக நேரங்களில் மறந்துவிடுகிறோம். அதன் விளைவாக, நாம் உயிர் பிழைத்திருத்தலின் நோக்கம், குறிக்கோள், அல்லது  இலக்கு என்ன என்பவைகளையும் வாழ்வின் அர்த்தம் பற்றியும் அறிவதையும் சேர்த்தே மறந்து விடுகிறோம்.  உயிர் பிழைத்திருத்தல் எனும் அடித்தளத்தின், அல்லது அடிப்படை யின் மீதுதான் நாம் நமது அறிவார்ந்த அம்சங்களை அல்லது நமது படு முட்டாள்தனமான விஷயங்களை அரங்கேற்றி வாழ்க்கை என்ற பெயரில் வாழ்ந்து செல்கிறோம்.


கொரோனா சுட்டும் பாடங்கள்

கொரோனா நம்மை வீட்டுச் சிறையில் தனிமைப்படுத்தி வைத்துவிட்டது. அது நம்மை சமூகத்திரளிடமிருந்து தனிமைப்படுத்தியதோடு, ஒரு வகையில் அது நம்மை நம் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் தனிமைப்படுத்த வைக்கிறது. சமூகத் திரளுடன் சேர்ந்து செயல்படக்கூடாத நிலைமையில் யாதொரு பொருளாதாரச் செயல்பாடும் நிகழவியலாததால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால், இந்த நேரத்தில் சமூக விலகலைக் கட்டாயம் கடைப்பிடித்தாக வேண்டும் என்பதால் பொருளாதாரச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தாக வேண்டும். அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புக்களை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். வழக்கத்துக்கு மாறான இந்த நிகழ்வை நாம் கணக்கில் கொண்டோமெனில், பொருளாதாரம் பற்றிய நமது பழைய பார்வையின் அடித்தளத்தையே நாம் மாற்றியமைத்தாக வேண்டும் என்பது முக்கியமானதாகும். இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு துறையையும், அம்சத்தையும் நாம் மறு சிந்தனைக்கு உட்படுத்தி மாற்றியமைப்பது அவசியமாகும். அதாவது பொருளாதார அடித்தளத்தை   மாற்றியமைப்பதன் தொடர்ச்சியாக நமது மதிப்பீடுகள் அனைத்தையும், ஒவ்வொரு நடைமுறையையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அவற்றில் அவசியமான மாற்றத்தைச் செய்தாக வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாக கடைப்பிடித்தாக வேண்டிய சமூக விலகலானது நமது அனைத்து வழக்கங்களையும்,  திருமணம்,, மற்றும் பிற கொண்டாட்ட நிகழ்வுகளையும்,  சாவுச் சடங்குமுறைகளையும், நடைமுறைகளையும் பெரிதும் பாதித்துள்ளது. சமூக விலகலானது நான்கு அல்லது எட்டு நெருங்கிய உறவினர்களைக்  கொண்டு மட்டுமே ஒரு திருமண நிகழ்வை நடத்த நிர்ப்பந்திக்கிறது. திருமணங்கள் முக்கியமெனில், அவை மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சம்பந்தப்பட்ட சொந்த பந்தங்களைக் கொண்டு நிகழ்த்தப்படலாம் எனும் பட்சத்தில் ஊரைக்கூட்டி பெரும் செலவில் ஆரவாரமாகவும், ஆடம்பரமாகவும் திருமணங்களை நடத்துவது என்பது அவசியம்தானா என்பது பற்றி நாம் பொறுப்புணர்வுடன் சிந்தித்து முடிவெடுக்கவேண்டியது அவசியமாகும். திருமணத்தைப்போலவே சாவுச் சடங்கும் நெருங்கிய சம்பந்தப்பட்ட சிலரைக் கொண்டு மட்டுமே நடைபெற முடியுமெனில், இவ்வாறே பிறவனைத்து நடைமுறைகளையும் நாம் அத்தியாவசியம் என்ற எல்லைக்குள் அடக்குவது என்பது நன்மை பயப்பதாய் அமையும். அதாவது கொரோனா விளைவித்த முடக்கமானது மிகவும் அவசியமான, அத்தியாவசியமான அம்சங்களையும், நிகழ்வுகளையும் மட்டுமே அனுமதிக்கிறது. அத்தியாவசியம் என்ற எல்லையை மீறுவது, அதாவது, சமூக விலகலை மீறுவது என்பது தற்கொலைக்குச் சமமானதாகும். 

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைவிட நம்மில் பலருக்கு சமூக விலகலைக்கடைப்பிடிப்பதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது என்பது பெரும் நெருக்கடியாக உள்ளதாகத் தெரிகிறது. வழக்கம் போல் நம்மால் வெளியே தெருக்களில், பொது இடங்களில் உலவ இயலவில்லை. தேநீர்க் கடைகள், பூங்காக்கள் என்று நண்பர்களைச் சந்தித்து உரையாட அரட்டையடிக்க இயலவில்லை என்பது நம்மில் பலருக்கு பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளது. ஆனால், இந்த முற்றும் முழுதான முடக்கம் நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே செல்வதற்கான, தன்னையறியும் ஆன்மீகச் செயல்பாட்டிற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை ஒவ்வொருவரும் முறையாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

கொரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறினால் அது பெரும் எண்ணிக்கையில் மனிதர்களைக் காவு கொண்டுவிடும். இப்போதைக்கு கொரோனா அபாயம் நீங்கி மீண்டும் நாம் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிட ஏங்குகிறோம். அதாவது, கொரோனா தொற்று நீங்கியவுடன் பழைய சமூக நடைமுறைகள், சடங்குகள், மதிப்பீடுகள், வாழ்முறைகள் எனும் சமூகத் தொற்றுக்காக; அவற்றுக்குத் திரும்பிட நாம் ஏங்குகிறோம்.

கொரோனா அபாயத்தினால், உலகம் முழுவதுமே முடக்கப்பட்ட நிலைமையில், நாடுகளுக்கிடையேயான விமானப்போக்குவரத்து, மற்றும் உள் நாட்டு விமானப்போக்குவரத்தும், பிற அனைத்து வகையான வாகனப்போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதனால் காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறே, பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டதனால் நிலம் நீர் மாசடைவதும் குறைந்திருக்கக் கூடும். இது சுற்றுச்சூழலுக்கும், புவி வெப்படைதல் சற்று தணிவதற்கும் நல்லதாகும்.

உயிர் பிழைத்திருப்பதற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நம்மைச் சுருக்கிக்கொள்ளத் தயாரெனில், அதையே நாம்  ஏன் யாதொரு நெருக்கடியும் இல்லாத எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கக் கூடாது? உயிர் பிழைத்திருப்பது என்பது அவ்வளவு முக்கியமெனில், அதைவிட முக்கியமான அம்சம் என்று வேறு எதுவும் இருக்கிறதா? உயிர் பிழைத்திருப்பதற்கு பெரும் நெருக்கடி ஏதும் ஏற்படுமெனில், நாம் எல்லாவற்றையும் அப்படியே போட்டதை போட்டபடியே விட்டுவிட்டு உயிர் தப்ப ஓடுகிறோம் எனில் அவற்றிற்கு என்ன பெரிதாக முக்கியத்துவம் இருக்க முடியும்? வழக்கமான காலங்களில் மனித ஜீவிகளாகிய நாம் எண்ணற்ற பல காரியங்களிலும், அலுவல்களிலும் ஈடுபடுகிறோம்; அவற்றில் எதுவும் உயிர் பிழைத்திருப்பதற்கான நோக்கத்தை, இலக்கை, அர்த்தத்தை எட்ட உதவுகிறதா என்பது பெரும் கேள்விக்குறியே! அப்படியானால், வெறுமனே உயிர் பிழைத்திருப்பதே நோக்கமாகவும், இலக்காகவும், அர்த்தமாகவும் அமைய முடியுமா? அதாவது, உயிர் பிழைத்திருப்பதைவிட வேறு ஒரு முக்கியமான அம்சம் எதுவும் இருக்க முடியுமெனில், அது   உயிர் பிழைத்திருத்தலின் நோக்கத்தை, இலக்கை, அர்த்தத்தை அறிவது,  அடைவது என்பதாக மட்டுமே இருக்க முடியும். 

மா.கணேசன்/ நெய்வேலி / 12:02 PM 29-03-2020

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...