Friday, 30 August 2024

"நான்" என்பது உங்களுக்குள்ளே எங்கேயிருக்கிறது?


 

 

 

 

 

 

 

எப்போதும் "நான்", "நான்", "நான்" என்கிறீர்களே, அந்த "நான்" உங்களுள் எங்கேயிருக்கிறது? நீங்கள் "நான்" என சொல்லும்போதும், எண்ணும் போதும், அச்சொல் உங்களில் எதைக்குறிக்கிறது? உங்கள் உடலைத்தான் "நான்" எனச் சொல்லுகிறீரா? அல்லது "நான்" எனச் சொல்வது உங்கள் மனமா? உண்மையில் மனம் என்பதுதான் நீங்களா? உங்கள் மனம் எங்கேயிருக்கிறது?  உங்கள் தலையினுள் உள்ள மூளையின் உள்ளேயிருந்து உதிக்கும் ஒரு அம்சம் தான் "நான்" என்று எண்ணுகிறதா, சொல்கிறதா?

அந்த மனிதன் ஒரு சாலை விபத்தில் சிக்கி தலையில் பலமாக அடிபட்டு நினைவிழந்து "கோமா" நிலையில் ஆழ்ந்துகிடக்கிறான். அவனால் பேச முடியவில்லை; உடலை, கை கால்களை அசைக்க முடியவில்லை. மருத்துவமனையில் உயர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறான். மருத்துவர்கள் சொல்கிறார்கள், "உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை; ஆனால் அந்த மனிதனுக்கு நினைவு எப்போது திரும்பும் என்று சொல்ல முடியாது!" என்கின்றனர். சிலரது விடயத்தில், மாதக்கணக்கில், அல்லது வருடக்கணக்கில் ஆகலாம் எனப்படுகிறது.

ஆம், நினைவு, அதாவது உணர்வு (Consciousness) திரும்பினால் தான் அந்த மனிதன் மனிதனாக எழுவான். அதுவரை, அவன் வெறும் ஒரு உடல், உயிருள்ள உடல் மட்டுமே! மனமற்ற, உணர்வற்ற, வெறும் உயிருள்ள உடல் மனிதனாகாது! ஆகவே, 'நீங்கள்' என்பது உங்கள் உடல் அல்ல! இன்னும் உங்கள் மூளையும் அல்ல! மாறாக, உங்கள் மூளையின் உள்ளே நடைபெறும் மிகவும் சிக்கல் வாய்ந்த நிகழ்வுமுறையின் விளைவாகத் தோன்றும் 'உணர்வு' என்பதுதான் உண்மையில் நீங்கள் ஆவீர்! அந்த உணர்வு தான் "நான்" என்கிறது!

அந்த உணர்வு தோன்றுவதற்கு, உதிப்பதற்கு ஒரு மூளை அமைப்பு வேண்டும், அந்த மூளை-அமைப்பைத் தாங்குவதற்கு ஒரு உடல் வேண்டும்! அந்த உடல் இருப்பதற்கு, இயங்குவதற்கு நீர், நிலம், காற்று மண்டலம் ஆகியவற்றைக்கொண்ட ஒரு பூமிக்கிரகம் வேண்டும். அந்த பூமிக்கிரகம் இயங்குவதற்கு, ஒரு சூரியனை மையமாகக் கொண்டு சுழலும் பல கிரகங்களைக்கொண்ட அமைப்பான ஒரு சூரியக்குடும்பம் வேண்டும்! அந்த சூரியக்குடும்பம் இருந்தியங்குவதற்கு, கோடானுகோடி கோடி சூரியக் குடும்பங்களால் ஆன ஒரு மாபெரும் 'கேலக்ஸி' (Galaxy) எனும் அமைப்பு வேண்டும்! நமது சூரியக் குடும்பம் அமைந்துள்ள கேலக்ஸியின் பெயர் "பால்வீதி மண்டலம்"  (Milky Way Galaxy). இந்த பால்வீதி மண்டலமானது கோடானுகோடி கோடி கேலக்ஸிகளில் ஒன்றுமட்டுமே! இந்த ஒட்டு மொத்த அமைப்பான பிரபஞ்சம் இயங்குவதற்கு எல்லையற்ற வெளி (Space) வேண்டும்! இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும், 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்,   "பெரு வெடிப்பு" (Big-Bang)எனும் ஒரு நிகழ்வில் தொடங்கியது என தற்கால விஞ்ஞானம் சொல்லுகிறது!

இந்த பெரு வெடிப்பு நிகழ்வு பிரபஞ்சத்தின் ஒரு (தொடக்க) முனை என்றால். உணர்வாகிய நீங்கள் தான் இப்பிரபஞ்சத்தின் மறுமுனையாகத் திகழ்கிறீர்கள்! இந்த மறுமுனை ஒரு முற்றுப்புள்ளி அல்ல, மாறாக, அது ஒரு அம்புக்குறியே எனலாம்! அந்த அம்புக்குறி பரிணாமம் முடிந்துவிட வில்லை மேற்கொண்டு தொடரவேண்டியுள்ளது என்பதையே குறிக்கின்றது!

உணர்வாகிய நீங்கள், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பது உங்கள் குழந்தைப் பருவத்தில் தொற்றிக்கொண்ட ஒரு தவறான பழக்கமே, பார்வையே! அதே வேளையில்,  உணர்வாகிய நீங்கள் இருந்தியங்குவதற்கு அவசியம் ஒரு உடல் வேண்டும் என்பதால், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றம் அல்ல என்றாலும், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பதுடன் மட்டும் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும்! பரிணாம ரீதியாக (Evolutionary Process), நீங்கள் உங்கள் உடலையும் தாண்டி, இப்பூமிக்கிரகம், சூரியக் குடும்பம், பால்வீதி மண்டலம், மற்ற அனைத்து கேலக்ஸிகள் என ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும் இடமுள்ளது! பிரபஞ்சத்தை ஒரு விருட்சம் (மரம்) எனக்கொண்டால், மனிதர்களை அவ்விருட்சத்தின் பிஞ்சுகள் எனக்கொள்ளலாம்!

மூளையின் உள்ளே நடைபெறும் மிகவும் சிக்கல் வாய்ந்த நிகழ்வுமுறையின் விளைவாகத் தோன்றும் 'உணர்வு' தான் உண்மையில் நீங்கள் என்றோம்! அந்த உணர்வு தான் மனம் என்பதை ஒரு கருவியாகக்கொண்டு,  "நான்" என்று சொல்கிறது! ஆனால், இந்த "நான்" உணர்வு, மனத்தின் பலவித மயக்கங்களின் விளைவாக, தன்னை தனது உடலுடனும், தன்னைச்சுற்றியுள்ள பல்வேறு உறவுகள், பொருட்கள், செல்வங்கள், பட்டங்கள், பதவிகள், சொத்துக்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் ஆகியவற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், அதனால், தனது அசலான இலக்கான, பரிணாம முழுமையை, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றையடுத்த வீடுபேற்றை அடைவதிலிருந்து தடுக்கப்பட்டு பரிணாமத் தேக்கத்திற்கு உள்ளாகி, தனது பிறவிப்பயனை அடையாமல் வீழ்ச்சியடைகிறது! இந்த வீழ்ச்சியானது அந்த உணர்வை (அதாவது உங்களை) மறுசுழற்ச்சிக்கு உள்ளாக்கி, மீண்டும் மீண்டும் பிறவி யெடுக்கும் அவலத்திற்கு உள்ளாக்குகின்றது!

ஆக, ஒவ்வொரு மனிதனும், முதலில் தான் ஒரு "உணர்வு" தான் என்ற உண்மைக்கு விழித்தாக வேண்டும்! அந்த விழிப்பு தான் முழுமையின் வாசல் ஆகும்! முதலில் விழிப்படையுங்கள், பிறகு அந்த வாசல் வழியாக உள்ளே பிரவேசித்து, அது எத்தகைய புரிதலை, பயனை, அனுபவத்தைத் தருகின்றது என்பதை நேரடியாக அறிந்து கொள்ளுங்கள்!

*

விளக்கக் குறிப்புகள்:

1) சிலர், "நான்" என்ற உணர்வு நிலை சுயநலம் கொண்டது, அது அகந்தை, ஆணவம் ஆகியவற்றுக்கு இடமளிப்பது. ஆகவே, அது நசிப்பிக்கப்பட வேண்டியது என்கின்றனர். ஆனால், இப்போக்கு தவறானது! ஏனென்றால், விழிப்படையாத "நான்" உணர்வு தான் மட்டுப்பாடானது; அகந்தை, ஆணவம் ஆகியவற்றுக்கு இரையாவது! ஆகவே, நான் என்ற உணர்வு நசிப்பிக்கப்படவேண்டியதோ, அழிக்கப்படவேண்டியதோ அல்ல! அப்படி அழிக்கப்பட்டால், மனிதன் ஒரு தவளையைப்போலத்தான் இருப்பான்! மாறாக, "நான்" உணர்வு மலர வேண்டும்! விழிப்படைய வேண்டும்!

2) சிலர், "நான்" என்ற உணர்வு சுயநலம் மிக்கதாகையால், அது எல்லோரையும் அரவணைக்கும் விதமாக "நாம்" என்ற சமூக உணர்வு கொண்டு பொது நலம் கொண்டு இயங்கவேண்டும் என்பர்! இதுவும் மிகவும் மட்டுப்பாடனதொரு நிலையே! ஏனென்றால், விழிப்படையாத "நான்" களின் கூட்டு என்பது பூச்சியங்களின் கூட்டுத்தொகையைப் போன்றே, பூச்சிய மதிப்பையே தரும்! மனிதர்கள் யாவரும் சேர்ந்து ஒரு சமூகமாக இணக்கமாக வாழ்தல் அவசியம், முக்கியம் தான்! ஆனால், விழிப்படையா மனிதர்கள் தனியே தீவு போல வாழ்ந்தாலென்ன? அல்லது சேர்ந்து சமூகமாக வாழ்ந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான்!

3) "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை !" என்று சொல்லப்பட்டது. ஆனால், வரலாற்றில் இன்றுவரை நாம் சமூகமாக கூடி இயங்கி வந்துள்ளோமே தவிர, நாம் "வாழ்தல்" என்பதன் உண்மையான அர்த்தத்தில் இதுவரை வாழவேயில்லை! இதுவரை நாம் உயிர் "பிழைத்தல்" (Survival), என்பதைத்தான் "வாழ்தல்" (Living) என்பதாகச் செய்துவந்துள்ளோம்! அதிலும் அந்த உயிர் "பிழைத்தல்" என்பதையும் கூட எல்லோரும் ஒரு கௌரவமான வகையில் மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் கூட நாம் வகுக்கத் தவறியுள்ளோம்! எங்கும், எதிலும் போட்டி, பொறாமை, வெறுப்பு, வன்மம், வன்முறை நிறைந்த  உணர்வற்ற மிகவும் வினோதமான ஜந்துக்களைப்போலவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இதற்கு, நம்முடைய பொருளாயத மதிப்பீடுகளே காரணம்.

4) ஏனென்றால், நம்முடைய சுயம் குறித்த பார்வை (Self-View) நம் உடலை மையமாகக் கொண்டமைந்த காரணத்தால், உயிர்-பிழைத்தல் என்பது நமது உடலின் நச்சரிப்பு மிக்க தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே என்றாகிவிட, உணவு, உடை, உறையுள், சௌகரிய சம்பத்துக்கள் ஆகிய தேவைகளைப் பெற்றிட பணம், பணம் மட்டுமே பிரதானம் என்றாகிவிட, சமூகம், அல்லது நாடு என்பது ஒரு மாபெரும் போட்டிக் களமாக, பந்தயக்களமாக மாறிவிட, 'இருப்பவன்', 'இல்லாதவன்'; ஏழை, 'பணக்காரன்' என ஏற்றத்தாழ்வு நிலைகள்உருவாகி நிலைத்துவிட்டன! பணம் அல்லது பொருளாதார அளவீட்டிலான இந்த அவலம் (ஏற்றத்தாழ்வு நிலைகள்) ஒருபுறமிருக்க; சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இன்னொரு புறம் மனிதர்களைக் கொடூரமாக அலைக்கழித்து வருகின்றது!

5) நம்முடைய சுயம் குறித்த பார்வை (Self-View) நம் உடலை மையமாகக் கொண்டு அமையாமல் (ஏனென்றால், மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல!) உணர்வை மையமாகக் கொண்டதாக மாற்றமடையாத வரை, சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய வழியேயில்லை! ஆம், மனிதர்கள் தங்களது உடல்-மைய அடையாளத்தை விட்டொழித்து,  உணர்வு-மைய அடையாளத்திற்கு உயரவேண்டும்! உடல்-மைய அடையாளத்திற்கும், உணர்வு-மைய அடையாளத்திற்கும் இடையே ஒரு பெருந்தடையாக இருப்பது, ஒருவருடைய மனம் என்பதாகும். மனம் என்பது எல்லாவித மயக்கங்களுக்கும், கற்பனைகள் மற்றும் கட்டுக்கதைகளுக்கும் ஆட்படக்கூடிய ஒரு தளம் ஆகும். இந்த மன-மைய அடையாளமே உடல்-மைய அடையாளத்தை விட ஆபத்தானதாகும்!(ஏனென்றால், மனிதன் என்பவன் அவனது மனம் அல்ல!) விதிவிலக்கின்றி எல்லா மனிதர்களும் இந்த மன-மைய அடையாளத்திற்கு பலியாகின்றனர். மனிதர்களின் அனைத்துவித மட்டுப்பாடுகளுக்கும், குறைபாடுகள், தீமைகளுக்கும் காரணம்; சுருக்கமாக, மனிதர்கள் மனிதர்களாக இல்லாததற்குக் காரணம் இந்த உடல், மற்றும் "மன-மைய" அடையாளங்களில் சிக்கியிருப்பதேயாகும்.

6) உண்மையில், எந்த மனித உடலும் "நான்" என்று சொல்வதில்லை! மாறாக, மனிதனின் மனம் தான் "நான்" என்று சொல்கிறது. மேலும், ஒவ்வொரு மனிதனின் மனமும், அது சார்ந்திருக்கும் உடலை பரிதியாக, கூடாகக் கொண்டு, தன்னை மையப்படுத்திக்கொண்டு, தான் 'இப்படிப்பட்டவன்', அல்லது 'அப்படிப்பட்டவன்' என தன்னைப் பற்றிய ஒரு கட்டுக்கதையை, பிம்பத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டு புறத்தே சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மனம் இல்லையென்றால், எவ்வொரு மனிதனும் தன்னைப்பற்றிய யாதொரு அடையாளத்தையும், பிம்பத்தையும் கொண்டிருக்க மாட்டான். வெறுமனெ ஒரு தவளையைப்போலவே இரையையும், இணையையும் தேடித் திரிந்து வாழ்ந்து செல்வான். பெரும்பாலான மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து செல்கின்றனர். " எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தானே!" என்ற பரவலான கூற்றே அதற்குச் சான்றாகும். பெரும்பாலான மனிதர்களின் மனமானது உடலையும், அதனுடைய நச்சரிப்பான தேவைகளையும் பிரதிநிதித்துவம்  செய்வதிலேயே வாழ்க்கையைக் கழித்துவிடுகிறது. ஆனால், மனமானது அதன் ஆதாரமான, சாரமான உணர்வைத்தான் பிரதிநிதித்துவம் செய்வதாய் இருக்கவேண்டும். அதாவது உணர்வின் பிரதிநிதியாகத்தான் மனம் செயல்படவேண்டும். ஒவ்வொரு மனிதனும், தான் ஒரு உடல் அல்ல; மனமும் அல்ல; மாறாக "தான் ஒரு சுதந்திர உணர்வு" (A Free Spirit) என்ற புரிதலுக்கு வரவேண்டும். இதுவே விழிப்புக்கான முதல் படி ஆகும்!

7) மனிதனின் சுயம் என்பது, உடல், மனம், மற்றும் உணர்வு (Consciousness)என மூன்று பகுதிகளைக்  கொண்டது. உடல் என்பது மனிதனின் மேலோடு போன்றதாகும். மனம் என்பதைத் தாங்கும் ஒரு பாத்திரம் போன்றது. அடுத்து, மனம் (Mind) என்பதை மனிதனின் மிக முக்கியமான இடை நிலைச் சுயம் எனலாம். உணர்வு (Consciousness)என்பது மனம் என்பதற்கும்  ஆதாரமாக அமைந்துள்ள மனிதனின் உண்மையான, சாரமான சுயம் ஆகும். உடலின் முக்கியத்துவமானது மனதைத் தாங்குவதற்கான பாத்திரமாக அமைந்திருப்பது தான். மனம் என்பதன் முக்கியத்துவமானது உணர்வை எட்டக்கூடிய ஒரு பாலமாக அமைவதால் மட்டுமே. உடல், மனம், உணர்வு ஆகிய இம்மூன்றில், உணர்வு மட்டுமே அனைத்திலும் முக்கியமான அம்சம் ஆகும். "நான்" என்பதன் பிறப்பிடம் உணர்வு தான். ஆகவேதான், உணர்வுதான் மனிதன் என்கிறோம். ஆனால், மனிதர்களோ தங்களை உடலாகவும், மனமாகவும் அடையாளப்படுத்திக்கொண்டு முடக்க நிலையில், தேக்க நிலையில் ஆழ்ந்துகிடப்பதால், அவர்களால், தாம் உணர்வு என்பதை உணர இயலாத நிலையில் உள்ளனர்.  இதற்குக் காரணம், மனிதர்கள் தங்களை உடலாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டதால், கைகள், கால்கள், மனம் ஆகியவற்றைப்போல உணர்வும் அவர்களின் ஒரு பாகம் என்பது போல பாவித்துவருகிறார்கள் என்பதுதான். ஆனால் உடல், மனம் ஆகியவைதான் உணர்வின் பகுதிகளாகப் பாவிக்கப்பட வேண்டும். உண்மையில் உணர்வுக்கு பரிணாமச் சேவை செய்வதற்காகவே உடலும், மனமும் அமைந்துள்ளன.

8) உண்மையில், அரிதிலும் அரிதாக வெகு சிலரே உணர்வுக்கு வருகிறார்கள். அதாவது தாங்கள் ஒரு உணர்வு என்பதை உணர்கிறார்கள்;  உணர்வுக்கு விழிக்கிறார்கள். உணர்வாகிய மனிதன் தன்னை நோக்கி விழிப்பது என்பது அவ்வளவு இயல்பான, எளிதான ஒரு விடயமாக இல்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே! இவ்வாறு தன்னைத் தானே விழிப்புக்கு உட்படுத்திக்கொள்ளாதவரை, மனிதன் ஒருபோதும் உண்மையான, முழுமையான மனிதனாக ஆக முடியாது! ஏனெனில், விழிப்பு தான் மனிதத்தின் சாரம். விழிப்பு என்பது முதலும் இறுதியானது; ஆகவே அதுவே மனிதனின் முழுமையுமாகும்.  மனிதம் என்பது, நாம் சாதாரணமாகக் குறிப்பிடும் மனிதத் தன்மை என்பதல்ல! மனிதத் தன்மை என்பது மனிதம் என்பதன் மிகவும் மங்கலான  ஒரு பிரதிபலிப்பு (சந்திர ஒளி போன்றது) மட்டுமே. மனிதம் என்பது சூரியன் போன்றது, பிரகாசமான சுய- ஒளியைக் கொண்டது!

9) "நான்" என்ற உணர்வை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். "நான்" என்ற உணர்வு தான் மனிதன். மனிதனுக்கு, அதாவது உங்களுக்கு ஒரு உணர்வு உள்ளது என்பது தவறான புரிதல் ஆகும். ஏனென்றால், உணர்வு தான் நீங்கள்! உங்களுக்கு ஒரு உணர்வு உள்ளது எனில். நீங்கள் வேறு, உணர்வு வேறு என்றாகிவிடும். அப்போது தேவையில்லாமல் நீங்கள் யார் என்ற கேள்வி எழும். பொதுவாக, "நான்" என்பதை ஒரு ஆளாக, அல்லது ஒரு நபராக பாவிக்கிறோம். அதாவது நம்மை நாமே ஒரு ஆளாக, நபராக நாம் கருதிக் கொள்கிறோம். ஆனால், "நான்" என்பது ஒரு நபரை, ஆளைக் குறிப்பதற்கானதல்ல; அவ்வாறு குறிக்கப் பயன்படுவது துரதிருஷ்டவசமாக நிகழ்ந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. "நான்" என்பது அதன் சாரத்தில்  அவதானிப்பிற்கான ஒரு மையம் (Center of Observation) ஆகும். அது ஒரு  படைப்பாக்க விசை (Creative Force) ஆகும். "நான்" என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்ததோ, சேர்ந்ததோ; அல்லது ஒரு குறிப்பிட்ட ஆளை, நபரைக் குறித்ததோ அல்ல; மாறாக, அது பிரபஞ்சமளாவிய அம்சம், அல்லது மெய்ம்மை  ஆகும். "நான்" உணர்வு அதன் குழந்தைப்பருவத்தில் 'அகந்தை' யாகவும், அதன் முதிர்ந்த, நன்கு கனிந்த நிலையில் 'அகன்ற பேருணர்வாக' வும் திகழ்கிறது. நன்கு கனிந்த ஒரு கனியானது, மரத்திலிருந்து விடுபட்டுவிடுவதைப்போல, உணர்வானது அதன் கனிந்த நிலையில், பிரபஞ்சப்பரிணாமத்தின் முழுமையாக கால-வெளிப் பிரபஞ்சத்தைக் கடந்த மெய்ம்மையாகிறது!

10) "நான்" என்பது ஒரு நபரை, ஆளைக் குறிப்பதற்கானதல்ல; அவ்வாறு குறிக்கப் பயன்படுவது துரதிருஷ்டவசமாக நிகழ்ந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை என மேலே குறிப்பிட்டோம். பொதுவாக, சாதாரணமாக, ஒரு மனிதன் "நான்"  உணர்வு கொண்டு, மையமென தன்னைச் சுற்றி, ஒரு கற்பிதத்தை, ஒரு கட்டுக்கதையை, "தான் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன்!",  "தனது பராக்கிரமங்கள் இப்படியானது, அப்படியானது!" என்றெல்லாம் பின்னிக்கொண்டு லௌகீக, நடைமுறை  உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறான். ஆனால், ஒரு மனிதன் தன்னையறியும் பாதையில் இறங்குவானெனில், அவன் தன்னைப்பற்றிய கற்பிதங்களை கடந்து செல்வது அவசியமாகும். அக்கற்பிதங்கள் அவனுக்கு லௌகீக, நடைமுறை  உலகில் உதவக்கூடியதாகவும், தேவையானவையாகவும் இருக்கலாம்; ஆனால், அவை ஆன்மீகத்திற்கு பெரும் தடையாகவும், பாரமாகவும் மட்டுமே அமையும். மட்டுப்பாடான நான் என்பது ஒரு அடைவிடமோ, முடிவிடமோ அல்ல; அது கடக்கப்படவேண்டிய தற்காலிக நிலையே! சமூகக் களத்தில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபராக, ஆளுமையாக இருப்பது தேவைப்படலாம். ஆனால், உங்கள் உள்ளார்ந்த தன்மையில், நீங்கள் உலகம் கடந்த பெரு நிஜம் ஆவீர்! அ ந் நிலையை அடைவதில் தான் உங்கள் பிறவிப்பயன், முழுமை , முக்தி, மோட்சம், வீடுபேறு யாவும் அடங்கியுள்ளது!

மா.கணேசன்/ 03-08-2024

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...