Tuesday, 19 September 2017

மானுட-மையப்பார்வை




    மனிதன் என்பவன் தன்னை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவனல்ல;
    மாறாக,  தன் வழியே மெய்ம்மையை நிலை நாட்டுவதற்காகத்
    தோன்றியவனாவான்!

சில சிந்தனையாளர்களும், தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல்
நேசர்களும் அனைத்து உயிரினங்களும் சமமான மதிப்புடையவை என்று
முழங்குகின்றனர். அதாவது, ஒரு புழுவும், ஒரு மனிதக் குரங்கும் சமமான
மதிப்புடையவை என்கின்றனர்! இன்னும் ஒரு புழுவும் மனிதனும் சமமான
மதிப்புடையவையே என்கின்றனர்! அதாவது, மனிதனுக்கு அதிகம் முக்கியத்
துவம் அளிப்பதையும், பிரபஞ்சத்தின் மையமான அம்சமாக மனிதனைக்
காண்பதையும் இச்சிந்தனையாளர்கள் சாடுகிறார்கள்! இவ்வாறு, மனிதனை
மையமாகக்கொண்டு உலகையும், அனைத்தையும் காணும் பார்வை, "மானுட
மையப்பார்வை" (Anthropocentric View) எனப்படுகிறது!

உயிருள்ள ஜீவிகள் என்கிற அடிப்படையில் காணும்போது, புழு-பூச்சிகள்,
ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள், எலிகள், தவளைகள், ஆடு-மாடுகள், மனிதக்
குரங்குகள், மற்றும் மனிதர்கள் யாவரும் சமமே எனலாம். ஆனால், மனிதன்
என்பவன் வெறுமனே ஒரு உயிருள்ள ஜீவி மாத்திரமல்ல! பிரதானமாக
அவன் ஒரு "சுய-உணர்வு" கொண்ட ஜீவியாவான்! "சுய-உணர்வு" என்பது
வேறு எவ்வொரு உயிர்-ஜீவியிடமும் இல்லாத ஒரு பிரத்யேக அம்சம் ஆகும்!
அதாவது, "தாம் இருக்கிறோம்!" என்பதை மனிதனைப்போல வேறு எவ்வொரு
ஜீவியும் உணர்வதில்லை! இன்னும் சொல்லப்போனால், எல்லா மனிதர்களும்
தமது இருப்பை அவ்வளவு நேரடியாகவும், தெளிவாகவும் உணர்வதில்லை
எனலாம்!

உண்மையில், பார்வை, எண்ணம், சிந்தனை, நோக்கம், சித்தம், கருத்து,
அறிவு, தன்மதிப்பு ஆகியவை மனிதஜீவிகளுக்கு மட்டுமே உரிய பிரத்யேக
அம்சங்களாகும்! ஆக, "மானுட-மையப்பார்வை" என்பது தவறானதோ, 'தீட்டு"
(Taboo)போன்ற விஷயமோ அல்ல! மாறாக, மிகவும் அவசியமான, தேவை
யான, தவிர்க்க இயலாத ஒன்றாகும்!

எலிக்கு எலிதான் அனைத்தின் அளவீடு! மேலும், எலியே இப்பிரபஞ்சத்தின்
மையம் ஆகும்; அதை நாம் "எலி-மைய விதி" (The Ratropic Principle)
என்று குறிப்பிடலாம்! தவளைக்கு, தவளைதான் இப்பிரபஞ்சத்தின் மையம்
ஆகும்! எலியோ, தவளையோ, மனிதனோ, ஒவ்வொரு ஜீவியும் தனக்காகத்
தான் இருக்கிறது, வாழ்கிறது! எலியோ, தவளையோ, அல்லது மனிதனோ
எவ்வொரு ஜீவியும் இருவித வாழ்க்கையை, பாத்திரத்தைக் கொண்டுள்ளது!
அதாவது, எவ்வொரு ஜீவியும் தமக்காகவே வாழ்கிறது; அதே நேரத்தில்,
அவ்வாறு தமக்காக வாழும் நிலையிலேயே ஒவ்வொரு ஜீவியும் அதனுடைய
வளர்ச்சி நிலைக்குரிய பரிணாமக் கடமையையும் தம்மையறியாமலேயே
நிறைவேற்றுவதாய் செயல்படுகிறது!

முதல் உயிரி தோன்றும்வரை, இப்பிரபஞ்சம் பல நூறு கோடியாண்டுகளாக
மையமற்றதாகத்தான் சுழன்று வந்தது! பிறகு, முதல் உயிரியான அமீபா
தோன்றியபோதுதான் முதல்முதலாக இப்பிரபஞ்சத்திற்கு "மையம்" என்ற
ஒன்று உருவானது! ஆனால், அந்த அமீபாவானது அவ்வளவு பூரணமான,
பொருத்தமான மையமாக அமையவில்லை! ஆகவேதான், அமீபாவைக்கடந்த
வெவ்வேறு உயிர்-ஜீவிகள் அமீபாவிலிருந்து கிளைத்தெழுந்தன! ஆனால்,
எவ்வொரு ஜீவியும் இப்பிரபஞ்சத்தையும், அதன் உள்ளார்ந்த விழைவையும்
பூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான ஒரு மையமாக
உருவாகவில்லை! பிறகு, (உயிரியல் பரிணாமத்தின் இறுதியாக), மனிதன்
என்பவன் தோன்றினான்!

'அமீபா', அல்லது முதல் ஒரு-ஸெல் உயிரி என்பது உண்மையில் என்ன? இப்
பிரபஞ்சம் என்பது நுண்ணிய அணுத்துகள்களால் அமைந்த மாபெரும் ஒரு
அமைப்பாகும்! அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு அமைப்பே ஆகும்! ஒரு
கிரகம், அல்லது ஒரு நட்சத்திரம் (சூரியன்), ஒரு கேலக்ஸி (உடுமண்டலம்)
எனப்படும் ஒவ்வொன்றும் ஒரு அமைப்பு தான்! ஆனால், எல்லா அமைப்பு
களும் ஒரே தரத்திலானவையல்ல! ஒரு 'அமீபா' என்பதும் அணுத்துகள்களால்
ஆனதுதான்! ஆனால், 'அமீபா' என்பது, ஒரு கிரகம், அல்லது ஒரு சூரியனைப்
போன்ற வெறும் ஒரு பௌதீக-அமைப்பு அல்ல; மாறாக, ஒரு அமீபா என்பது
"உயிர்" பெற்ற ஒரு விசேட பௌதீக அமைப்பு ஆகும்! ஏனெனில், ஒரு அமீபா
வானது, பிற பௌதீக அமைப்புகளை (பொருட்களை)ப் போல புறத்தேயிருந்து
இயக்கப்படும், செலுத்தப்படும் ஒன்றல்ல! அமீபாவின் மீது சுற்றுச்சூழலின்,
புறவுலகின் தாக்கம் உள்ளது எனினும், ஒரு அமீபாவானது தனது உள்ளார்ந்த
சொந்தத் தேவைகளாலும் (இயல்பூக்கிகளாலும்), பரிணாம விதிகளாலும்
மட்டுமே இயக்கப்படுகிறது!

ஒரு அமீபாவிற்கு, பெரிதாக சுய-உணர்வு என்பது இல்லாவிட்டாலும், சுதந்திர
சித்தம் இல்லாவிட்டாலும் அதனளவில் அது ஒரு தனிஜீவி ஆகும்; அதாவது,
அது ஒரு தனி உலகம் (இப்பிரபஞ்சத்தினுள்ளே இயங்கும் இன்னொரு
பிரபஞ்சம் போன்றது) ஆகும்! அதாவது, ஒரு அமீபா என்பது தன்னை மைய
மாகக் கொண்டியங்கும் ஒரு உயிர்ஜீவி யாகும்! எவ்வொரு உயிர்ஜீவியும்
அத்தகையதே! ஆனால், ஒரு அமீபாவைப்போல ஒரு கூழாங்கல்லானது
தன்னில் ஒரு மையத்தைச் சுற்றி அமைந்த ஒன்றல்ல! அதாவது, கூழாங்கல்
லுக்கு உள்ளமைந்த மையம் என்பதில்லை! அதாவது, ஒரு கூழாங்கல்லை
வழிநடத்திச்செல்லக்கூடிய "அகம்" அல்லது "மனம்" என்பதில்லை! இவ்வாறே
எவ்வொரு சடப்பொருளுக்கும் மையம், அகம், மனம் என்பதில்லை!

அதேநேரத்தில், ஒரு அமீபாவைவிட ஒரு மனிதனின் மையம், அல்லது அகம்,
அல்லது மனம் என்பது பெரிதும் வளர்ச்சியடைந்த நிலையை எட்டியுள்ளது;
அதாவது, ஒரு மனிதனின் மையம் என்பது உணர்வுள்ளதாக, தனிச்சிறப்பு
வாய்ந்த ஒன்றாக உள்ளது! ஆகவேதான் மனிதன் என்பவன் அமீபாவைவிட,
இன்னும் வேறு எவ்வொரு உயிர்ஜீவியையும் விடவும் மேலானவனாகவும்,
முக்கியத்துவம் வாய்ந்தவனாகவும் உள்ளான்! அதே நேரத்தில், பெரும்பாலான
மனிதர்கள் தம்மை, அதாவது, தம் மையத்தில் தாம் எத்தகைய மெய்ம்மை
யாக இருக்கிறோம் என்பதை உணராதிருப்பதால், அவர்கள் இன்னும் அமீபாக்
களைப்போல உணர்வற்றவர்களாக வாழ்ந்துசெல்பவர்களாகவே உள்ளனர்!

தொடர்ந்து நாம் மேலே செல்வதற்கு முன், பரிணாம வழிமுறை பற்றியும்,
பரிணாமத்திற்கும், "சுய-அமைப்பாக்கம்" (Self-Organization) என்பதற்கு
மான தொடர்பு பற்றியும் புரிந்துகொள்வது அவசியமாகும்! ஆம், இப்பிரபஞ்சம்
ஒரு பெரு-வெடிப்பில் (Big Bang)தொடங்கிய கணத்திலிருந்தே "சுய-அமைப்
பாக்கம்" எனும் வழிமுறையும் தொடங்கிவிட்டது! "சுய-அமைப்பாக்கம்" என்பது
பரிணாமத்தின் பிரதான கருவியும், வழிமுறையுமாகும்! அணுத்துகள்கள் தான்
இப்பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் ஆகும்!

அணுத்துகள்கள் தாமே ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு அமைப்புகளில்
அமைந்து, அவ்வமைப்புகளின் நுட்பச்செறிவுக்கேற்ப (Complexity)பல்வேறு
பண்புகளைக் கொண்ட பொருட்கள் உருவாகின்றன! அணுத்துகள்கள் சுயமாக,
தாமே ஒன்றோடொன்று இணைவதையே  "சுய-அமைப்பாக்கம்" என்கிறோம்.
இவ்வாறு இணைவது இயல்பானது, இயற்கையானது, எதேச்சையானது,
விபத்துபோன்றது, அல்லது சந்தர்ப்பவசமானது என்றெல்லாம் காண இடமுள்
ளது! ஆனால், இவ்வாறு தோற்றமளிக்கும் வழிமுறையின் பின்னால் விதி
களும் (Laws),நோக்கமும், திட்டமும், இலக்கும் உள்ளன! அதாவது, அணுத்
துகள்கள் எவ்வெவ்வாறெல்லாம் இணைந்தால், எவ்வெவ்வாறான விளைவு
கள், விளைபொருட்கள், அம்சங்கள், பண்புகள் எல்லாம் உருவாகும் என்பது
தொலை நோக்குடன் ஊகிக்கப்பட்டே நிகழ்கின்றன! அதே நேரத்தில், அவ்வழி
முறையில், பரீட்சார்த்தம் அல்லது, பரிசோதனை அணுகுமுறையும்; அதாவது
தொடர்ந்து தவறுகளை உணர்ந்து களைந்து திருத்தியமைத்து முன்னேறிச்
செல்லும் (Trial and Error)பாங்கும் அதில் இணைந்துள்ளது!

உதாரணத்திற்கு, ஹைட்ரஜன் அணுக்களும், ஆக்ஸிஜன் அணுக்களும் ஒரு
குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்தால் தண்ணீர் எனும் திரவப்பொருள் வெளிப்
படும் என்பதும், அந்த தண்ணீர் எவ்வாறெல்லாம், எதற்கெல்லாம் பயன்படக்
கூடும் என்பதும் முன்-ஊகிக்கப்படுகிறது! இவ்வாறெல்லாம் "யார்", அல்லது,
எந்த "சக்தி", அல்லது, எத்தகைய "உணர்வு" முன்-ஊகிக்கிறது, திட்டமிடுகிறது
என்பதைக் கண்டுபிடிப்பது தான் மனிதஜீவிகளுக்கான "வாழ்க்கைச் சவால்"
மற்றும் வாழ்க்கையின் இலக்கும் ஆகும்!

சில விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும், இயற்கைவாதிகளும், உள்ளது இந்த
இயற்கையுலகம் மட்டும்தான் என்பதாக மிகத்திடமாக நம்புகின்றனர்.குறிப்பாக,
தத்துவவாதி பால் டிரேப்பர் (Paul Draper),"இயற்கை என்பது ஒரு மூடிய
அமைப்பு, அதில்,இயற்கையுலகின் பகுதியாக இல்லாத எதுவும் இவ்வுலகைப்
பாதிக்கமுடியாது, (இவ்வுலகின் மீது செயல்படமுடியாது)" என்கிறார். அதாவது
இக்கூற்று,  இயற்கை நிகழ்வுகளுக்கு இயற்கையை மீறிய காரணங்கள் இருக்
கக்கூடும் என்பதை மறுக்கிறது! இத்தகைய 'பார்வையை' நாம் "உலக-மையப்
பார்வை" (World-centric)என்றழைக்கலாம்! அதாவது, இயற்கை, அல்லது
உலகமே பிரதானம்; பிரும்மாண்டமான இவ்வுலகில், மனிதன் என்பவன் ஒரு
தூசு, அவனது இருப்பு ஒரு விபத்து! ஆகவே, மனிதன் என்பவன் இப்பிரபஞ்சத்
தின் மையமுமல்ல, அவனுக்கு பெரிதாக யாதொரு முக்கியத்துவமும் கிடை
யாது என்பதே இப்பார்வையின் முடிவான புரிதல் ஆகும்!

ஆனால், உலகை மையமாகக் கொண்ட இப்பார்வையை ஒரு முறையான,
முழுமையான பார்வை என்று நாம் கொள்ளமுடியாது! பொதுவாக, சிந்தனை
உலகில் "உலகப்பார்வை" (World view)என்று ஒரு துல்லியமற்ற, குழப்பம்
மிகுந்த கோட்பாடு ஒன்று நிலவுகிறது! அதாவது, மனிதவாழ்வு, உலகம் என
அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பார்வையை, வாழ்க்கைத்
தத்துவத்தைக் குறிக்கும் வகையிலான் ஒரு கோட்பாட்டை "உலகப்பார்வை"
என்ற சொற்-சேர்க்கையைக்கொண்டு குறிப்பிடுவது சற்றும் பொருத்தமற்றது
ஆகும்! நாம் வாழும் இந்த உலகைப் புரிந்துகொள்வதும், உலகைப் பற்றிய
அறிவும் அவசியமே; ஏனெனில், மனிதனின் வாழ்வில் இவ்வுலகமும் இடம்
பெறுகிறது என்பது மட்டுமல்லாமல், பங்குபெறவும் செய்கிறது! இன்னும்
மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்தே இப்பிரபஞ்சமானது பல நூறு கோடி
ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளது! இன்னொரு வகையிலும் உலகைப்புரிந்து
கொள்வது மிகவும் முக்கியமாகும்! அதாவது, நாம் இவ்வுலகை, பிரபஞ்சத்தை
முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ளாவிடில் தேவையில்லாமல்,
அது துருத்திக்கொண்டும், நமது கவனத்தை சிதறடித்துக்கொண்டும் இருக்கும்!

ஆக, உலகைப் பற்றிய பார்வையை நாம் "உலகப்பார்வை" என்றழைப்பதில்
எவ்விதத் தடையும் இருக்கமுடியாது! ஆனால், அனைத்தையும் உள்ளடக்கிய
மனிதவாழ்க்கை பற்றிய பார்வையை நாம் ""உலகப்பார்வை" என்றழைப்பது
பொருத்தமற்றது, ஆகவே தவறானது! மாறாக, வாழ்க்கை பற்றிய பார்வையை
நாம் நேரடியாக "வாழ்க்கைப் பார்வை" (Life View)என்றே அழைக்கலாமே;
அதுதானே முறையாகவும் பொருத்தமாகவும் இருக்க முடியும்! அதாவது இவ்
வாறான குழப்பங்களுக்குக் காரணம் எதை மையமாகக்கொண்டு மனிதர்கள்
தம்முடைய பார்வையைக் கட்டமைப்பது என்பது குறித்த தெளிவின்மையே
ஆகும்! அப்படியானால், இக்குழப்பத்தை எவ்வாறு களைவது?

ஒருவகையில், உலகம் எனும் மாபெரும் வீட்டினுள்தான் நாம் வாழ்கிறோம்!
அதாவது, உலகம் என்பது மிகவும் அடிப்படையான ஒரு அம்சமே! ஆனால்,
வீடு என்பது மனிதனுக்காக இருக்கிறதேதவிர, வீட்டிற்காக மனிதன் இல்லை
என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியம்! ஒரு அழகிய சிற்பத்தை வைக்க
பொருத்தமானதொரு பீடம், அல்லது மேடை அவசியமே; அதற்காக, பீடத்தை
பிரதானப்படுத்தி சிற்பத்தை சிறுமைப்படுத்தமுடியாதல்லவா? ஆக, நாம் நமது
வாழ்க்கைப் பார்வையைக் கட்டமைக்க உலகை மையமாகக் கொள்ளலாகாது!
பிறகு எதை மையமாகக் கொள்வது? மிக எளிய தர்க்கம் என்னவென்றால்,
வாழ்க்கைப்பார்வைக்கு "வாழ்க்கை" தான் மையமாக இருக்கமுடியும்! ஆனால்,
வாழ்க்கையை வாழ்வது யார்? அதாவது, வாழ்க்கையின் மையம் எது,அல்லது
யார் என்ற கேள்விக்கான பதில் மனிதன் என்பதேயாதலால், மனிதன் தான்
வாழ்க்கைப் பார்வையின் மையமாக அமையவேண்டும்! உலகம், பிரபஞ்சம்
என்பது வாழ்க்கையை செயல்படுத்துவதற்கான ஒரு களம் மாத்திரமே!

ஆனால், 'மனிதன்' என்றால் என்ன? அவன் எத்தகைய மெய்ம்மை? அதாவது
மனிதனின் மையம் எது? ஆம், உணர்வு (Consciousness)தான் மனிதனின்
மையம் மற்றும் சாரம் ஆகும்! மேலும் துல்லியமாகச் சொன்னால், உணர்வு
தான் மனிதன்! உண்மையில், மனிதனுக்கு உணர்வு என்பது இல்லையேல்,
அவனும் ஒரு எலி, அல்லது தவளையைப் போலவே இருப்பான்; யாதொரு
பார்வையும், அறிதலும், புரிதலும் இருக்காது! ஆகவே, அனைத்துவகைப்பட்ட
பார்வைகளும், அவை சரியாக இருந்தாலும், அல்லது, தவறாக இருந்தாலும்
உணர்வு-மையப் பார்வைகளே எனலாம்!

தத்துவவாதிகள், சிந்தனையாளர்களைப்பொறுத்தவரை, எது இறுதி மெய்ம்மை
என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னேயே, முன் முடிவாக, சிலர் இயற்கை,
அல்லது, உலகையும்; சிலர் இறையையும் பிரதானப்படுத்தும் போக்கைத்
தேர்வு செய்துகொண்டுவிடுகின்றனர்! இத்தகைய தவறுக்குக்காரணம் அவர்கள்
எது முதல் (மூலம்) என்பதை ஊகித்து அதிலிருந்து தங்களது சிந்தனையை,
பார்வையை கட்டமைப்பதே ஆகும்! இதற்குக்காரணம், அவர்கள் உலகை ஒரு
மாபெரும் அமைப்பாக மட்டுமே காண்கின்றனர் என்பதுதான்! ஆனால், உலகம்
என்பது ஒரு மாபெரும் அமைப்பு மட்டுமல்ல; அது ஓர் மாபெரும் இயக்கமும்
கூட என்பதை அவர்களால் காண இயலவில்லை! உலகை ஒரு அமைப்பாகக்
காண்பதால், "உலகம் எவ்வாறு தோன்றியது?" என்ற கேள்வி முதலும் முடிவு
மான கேள்வியாகி விடுகின்றது! அதாவது, மூலத்தை முடிவு செய்துவிட்டால்
எல்லாம் முடிந்து விடுகிறது! ஏனென்றால், "படைப்பு" எனும் அமைப்பு, இவ்
வுலகம் நம் கண் முன்னே இருக்கிறது; அதன் ஏதோவொரு பகுதியாக நாம்
இருக்கிறோம் என்பதுடன் நம் ஆய்வு முடிவிற்கு வந்துவிடுகிறது!

ஒரு சாரார், அதாவது, இயற்கைவாதிகள். பகுத்தறிவுவாதிகள், பொருள்-முதல்
வாதிகள், மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர், இவ்வுலகம் எப்போதும் இருந்து
வந்துள்ளது, இன்றும் இருக்கிறது, நாளையும், என்றென்றைக்கும் இருக்கும்;
அது இயற்கையாகத் தோன்றியது; இயற்கையைத்தவிர, இயற்கையை மீறிய
வேறு சக்தி எதுவும், எவரும் இல்லை என்பதாகக் கருதுகின்றனர்! இவர்களது
பார்வையை நாம், "இயற்கை அல்லது உலக-மையப்பார்வை" என்று அழைக்
கலாம்! இவர்களைப்பொறுத்தவரை, இயற்கை, அல்லது உலகமே பிரதானம்!

இன்னொரு சாரார், அதாவது, சமயவாதிகள், கருத்து-முதல்வாதிகள், மற்றும்
பாமரர்கள் இவ்வுலகம் ஒரு படைப்பு, அது இறைவனால் படைக்கப்பட்டது;
கடவுள் உலகைப்படைத்து அதில் உயிரினங்களையும் மனிதஜீவிகளையும்
படைத்து காத்துவருகிறார் என்பதாக இவர்கள் கருதுகின்றனர்! இவர்களது
பார்வையை நாம், "இறை- மையப்பார்வை" என்றழைக்கலாம்! இவர்களைப்
பொறுத்தவரை, இறை அல்லது கடவுளே பிரதானம்!

பொதுவாக, சாதாரணர்கள், பாமரர்கள், பண்டிதர்கள், படித்தவர்கள், படிக்காத
வர்கள் என்ற வித்தியாசமின்றி, பெரும்பாலானவர்களுக்கு யாதொரு உலகப்
பார்வையும் கிடையாது, குறிப்பாக, யாதொரு "வாழ்க்கைப்பார்வை" யும் கிடை
யாது! இவர்களில் பலருக்கு சுயமான சிந்தனை, பார்வை ஏதுமில்லை என்றா
லும், ஏதாவதொரு தத்துவப்பள்ளி, அல்லது, சிந்தனைப்பள்ளியின் அரைகுறை
யான பார்வையைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போக்கை கொண்டு
விடுகின்றனர்!

இத்தகைய 'உலகப்பார்வைகள்', அதாவது, மூலத்தை ஊகித்து, முடிவு செய்து
கொண்டு, அதை மையமாகக்கொண்டு கட்டமைக்கப்படும் அரைப் - பார்வை
களுக்கு மாறாக, அதாவது, உலகை ஒரு அமைப்பாக மட்டும் கொள்ளாமல்,
அது ஒரு இயக்கம் என்பதையும் கணக்கில் கொண்டு, அவ்வியக்கம் எங்கு
முடிகிறது, அதன் நோக்கம், குறிக்கோள், இலக்கு ஆகியவற்றையெல்லாம்
அறிவதன் வழியாக ஒரு முழுமையான பார்வையை நாம் பெற முடியும்!

ஏற்கனவே நாம் இங்கு குறிப்பிட்டபடி, உணர்வு இல்லையேல் எவ்வொரு
சிந்தனையும், பார்வையும் சாத்தியமில்லை! இவ்வகையில், எல்லாவகைப்
பார்வைகளுமே உணர்வு-மையப்பார்வைகள் தான் எனலாம்! அதே நேரத்தில்,
உணர்வு-மையப் பார்வைகளும் பிரதானமாக இருவகைப்பட்டவைகளாக
அமைகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியது முக்கியம்!
ஏனெனில், மனித-உணர்வு என்பது உணர்வின் இறுதிச்சொல் அல்ல; மேலும்
மனிதர்களின் உணர்வும் ஒரேபடித்தானதல்ல, அதாவது, உணர்வு வளர்ச்சிக்கு
ஏற்ப மனிதர்கள் வெவ்வேறு உணர்வு நிலைகளில் உள்ளனர்! மனிதர்களின்
உணர்வு வளர்ச்சிக்கேற்ப அவர்களுடைய சிந்தனையும், பார்வையும் வேறுபடு
கின்றன! அவையாவன :

1. சிற்றுணர்வு (அல்லது அகந்தை) - மையப்பார்வை = அகந்தையே பிரதானம்.
   (உ-ம்) : சராசரி மனிதர்கள், உணர்வு-வளர்ச்சி குன்றியவர்கள், அதாவது
   'அகந்தை' எனும் தொடக்க நிலை உணர்வில் தேங்கிப்போனவர்கள், "தாம்
   கண்டதே காட்சி, தாம் கருதியதே தத்துவம்" எனக்கொள்பவர்கள். அதாவது,
   விஞ்ஞானவாதம், பொருள்முதல்வாதம், பகுத்தறிவுவாதம், இயற்கைவாதம்;
   அதாவது, மனிதனை இயற்கை, அல்லது, உலகின் முக்கியத்துவமற்ற ஒரு
   பகுதியாகக்கருதும் அனைத்துப்பார்வைகளும், தத்துவங்களும் இந்த        

   "சிற்றுணர்வு-மையப்பார்வை" யைச் சேர்ந்தவையே!

2. பேருணர்வு, அல்லது மெய்ம்மை-மையப்பார்வை = இறுதி - உணர்வே
   பிரதானம்! அதாவது, பேருணர்வே ஆதியும், அந்தமும்!
   (உ-ம்) : புத்தர்கள், சித்தர்கள், ஞானிகள், ஆகியோர்.

இவ்விரு நிலைகளுக்கும் இடையே சில இடைநிலைகளும், பார்வைகளும்
உள்ளனவென்றாலும், அவையும் வளர்ந்து கடக்கப்பட வேண்டியவையே என்
பதால் அவை இங்கு விவரிக்கப்படவில்லை! அதாவது, மனிதஉணர்வு என்பது
மேன்மேலும் பரிணமிக்கக்கூடியதொரு அம்சமாகும்! மனிதர்கள் ஒரு இறுதி
யான உயர்-உணர்வு நிலையை அடையும் வரை அவர்களது பார்வையும்,
புரிதலும் மட்டுப்பாடானதாகவே இருக்கும்! ஆனால், வெகுசொற்பமான சிலரே
தமது அகந்தை உணர்வையைக் கடந்து வளர்ந்து உணர்வின் உச்சத்தை எட்டு
கின்றனர்! இந்நிலையில்,எது முழுமையான சரியான பார்வை என்பது குறித்து
கருத்தொற்றுமை ஏற்படுவது சாத்தியமில்லை! ஒருவகையில் அத்தகைய
கருத்தொற்றுமை தேவையுமில்லை! ஏனெனில், உணர்வின் உச்சத்தைத்
தொடும் ஒவ்வொரு மனிதனும், எது உண்மை என்பதை தனக்குத் தானே சுய-
சாட்சியாக நேரடியாக அறிந்துகொள்வான்!

முடிவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனிதஜீவி
களாகிய நமக்கு அணுகுவதற்கு எளிதாகவும், முறையாகவும் கிடைத்துள்ள
ஒரே பார்வை "மானுட-மையப்பார்வை" (Anthropocentric View)மட்டுமே
யாகும்! அதிலும், ஒவ்வொரு மனிதனும் தன்னில் ஒரு பார்வை மையமாக
(Center of Perception) எழ வேண்டியது அவசியமாகும்! ஏனெனில்,
ஒருவன் இன்னொருவனின் கண்கள் வழியாகப் பார்ப்பது இயலாது! இயற்கை,
உலகம், பிரபஞ்சம் என்பது பார்வையற்றது; அது மனிதனின் கண்களைக்
கொண்டுதான் தன்னைப்பார்க்கிறது, அறிகிறது! இவ்வகையில், மனிதன் இப்
பிரபஞ்சத்திலிருந்து வேறானவனல்ல! ஆனால், இத்தகைய புரிதலைப் பெற
வேண்டின் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்திற்கு (உணர்வுக்கு) விழித்தாக
வேண்டும்!

முடிவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனிதஜீவி
களாகிய நமக்கு அணுகுவதற்கு எளிதாகவும், முறையாகவும் கிடைத்துள்ள
ஒரே பார்வை "மானுட-மையப்பார்வை" (Anthropocentric View)மட்டுமே
யாகும்! அதிலும், ஒவ்வொரு மனிதனும் தன்னில் ஒரு பார்வை மையமாக
(Center of Perception) எழ வேண்டியது அவசியமாகும்! ஏனெனில்,
ஒருவன் இன்னொருவனின் கண்கள் வழியாகப் பார்ப்பது இயலாது! இயற்கை,
உலகம், பிரபஞ்சம் என்பது பார்வையற்றது; அது மனிதனின் கண்களைக்
கொண்டுதான் தன்னைப்பார்க்கிறது, அறிகிறது! இவ்வகையில், மனிதன் இப்
பிரபஞ்சத்திலிருந்து வேறானவனல்ல! ஆனால், இத்தகைய புரிதலைப் பெற
வேண்டின் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்திற்கு (உணர்வுக்கு) விழித்தாக
வேண்டும்!

கோப்பர் நிக்கஸின் புரட்சியானது, உண்மையில் டாலமியின் பூமி-மையப்
பார்வையைத்தான் அகற்றியது; அகற்றி அவ்விடத்தில் சூரிய-மையப்பார்வை
யை இட்டுநிரப்பியது! ஆனால் அதனால், மானுட-மையப்பார்வையை ஒன்றும்
செய்ய இயலவில்லை! கோப்பர் நிக்கஸ் மட்டுமல்ல, அவருக்குப் பிறகு வந்த
கலிலியோ, நியூட்டன், இன்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்- உடைய சார்பியல்
புரட்சியினாலும் மானுட- மையப்பார்வையை ஒன்றும் செய்ய இயலவில்லை!
ஐன்ஸ்டீன் மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகியும் இன்னும் உலகம் ஆல்பர்ட்
ஐன்ஸ்டீனின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது! ஐன்ஸ்டீனிய சார்பியல்புரட்சியை
வேறு எவரேனும் வந்து முறியடிக்கும் பட்சத்தில் அவருடைய புகழை இவ்
வுலகம் பாடிக்கொண்டிருக்கும்! டாலமியாகட்டும், அல்லது, கோப்பர் நிக்கஸ்,
கலிலியோ, நியூட்டன், இன்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகட்டும், பார்வைகள்
மாறலாம், கோட்பாடுகள் மாறலாம்; ஆனால், "பார்வை" என்பது எப்போதும்
"மானுட-மையப்பார்வை" யாக மட்டுமே தொடரும்!

பூமி இப்பிரபஞ்சத்தின் மையமாக இல்லாவிட்டால் என்ன, அது மனிதனின்
மையத்துவத்தை ஒருபோதும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது! ஏனெனில்,
ஒரு மரத்தில் பிஞ்சுகள், காய்கள் எந்தக்கிளையில் காய்த்தால் என்ன? அவை
மரத்தின் மையத்தில் தான் காய்க்கவேண்டும் என்பதில்லையே! அவை ஒரு
மரத்தின் நுனிக்கிளையில் காய்த்தாலும், ஒவ்வொரு பிஞ்சும், காயும் தான்
அம்மரத்தின் மையமும், இலக்கும், முழுமையும் ஆகும்! அதே வேளையில்,
ஒவ்வொரு பிஞ்சின், காயின் முக்கியத்துவம்,முழுமை என்பது, அது மரத்தின்
மையத்தில் தோன்றுகிறதா, அல்லது ஓரத்தில் தோன்றுகிறதா என்பதில்
அடங்கியிருக்கவில்லை; மாறாக, அது நன்கு முற்றிக் "கனி" யாக ஆகிறதா,
இல்லையா என்பதிலேயே அடங்கியிருக்கிறது! இவ்வாறே, பிரபஞ்ச விருட்சத்
தின் பிஞ்சுகளும், காய்களுமான மனிதஜீவிகள் ஒவ்வொருவரும் தம் உணர்
வில் முற்றிக் கனிவதிலேயே (அதாவது, உணர்வின் உச்ச நிலையை அடைவ
திலேயே) ஒவ்வொரு மனிதனின் முழுமையும், உய்வும் அடங்கியுள்ளது!
ஒவ்வொரு மனிதனும் அடையக்கூடிய முழுமையில் தான் இப்பிரபஞ்சத்தின்
முழுமையும், உய்வும் அடங்கியுள்ளது!

இப்பிரபஞ்சம் ஒரு மாபெரும் அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும்
பரிணாம இயக்கம் என்றோம்! "சுய-அமைப்பாக்கம்" என்பதே அதன் பிரதான
வழிமுறை யாகும்! "சுய-அமைப்பாக்கம்" என்பது வெறுமனே அணுத்துகள்கள்
ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு அமைப்புகளாக உருவாவது மட்டும்
அல்ல! மாறாக, பண்புரீதியான மாற்றங்களைப் பெற்று மேன்மேலும் உயர்
நிலைகளை எட்டுவதும், முடிவில் பூரணமான தொரு மெய்ம்மையாக உரு
வெடுப்பதே அதன் இலக்கு ஆகும்! அதாவது, உயிரற்ற பௌதீகச் சடப்பொரு
ளான அணுத்துகள்கள் ஒரு கட்டத்தில் உயிர்பெற்றெழுவதும் (உயிர்-ஜீவிகள்);
பிறகொரு கட்டத்தில் உணர்வு பெற்றெழுவதும் (மனிதஜீவிகள்); முடிவாக,
ஒவ்வொரு மனிதனின் உணர்வுப்பரிணாமத்தின் மூலம் இறுதிப்பேருணர்வாக
எழுவதும்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சப்பரிணாம இயக்கத்தின் இலக்கு ஆகும்!

சுய-அமைப்பாக்க வழிமுறையில் அணுத்துகள்கள் ஒன்றோடொன்றிணைந்து
முதலில் அணுக்களாகவும், மூலக்கூறுகளாகவும், மூலகங்களாகவும், சிக்கல்
அற்ற அமைப்புக்களாகவும்,பிறகு சிக்கலான (நுட்பமிக்க),அதாவது, தனி-மையப்
படுதல் (Individualization),மற்றும் ஒருமைப்படுதல் (Unification)
ஆகியவற்றின் மூலம் பிரபஞ்சம் தனது ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்வதா
யுள்ளது! இவ்வழிமுறையில், முதன்முதலாக இப்பிரபஞ்சத்தின் மையமாக
உயிர்-ஜீவிகள் தோன்றின! அடுத்த உயர்-நிலையாக மனிதஜீவியானவன் இப்
பிரபஞ்சத்தின் உணர்வுள்ள மையமாக உருப்பெற்றான்!

பிரபஞ்சத்தை ஒரு அமைப்பாகக் காண்கையில், பரந்த இப்பிரபஞ்ச வெளியில்
பூமிக்கிரகமானது எங்கோ ஒரு மூலையில் இருக்குமிடம் தெரியாதவகையில்
சுழன்றுகொண்டுள்ளது; அதில் மனிதன் ஒரு தூசு போல ஒட்டிக்கொண்டிருக்
கிறான் என்பதாகவே தெரியும்! ஆனால், பிரபஞ்சத்தை ஒரு (பரிணாம) இயக்க
மாகக் காண்கையில், அவனே பிரபஞ்சத்தின் உச்சியில் உள்ளான் என்பது
தெரிய வரும்! ஆம், உணர்வுக்கு விழிக்கும் ஒவ்வொரு மனிதனும் இப்பிரபஞ்
சத்தின் மையமே ஆவான்! மனிதன் பிரபஞ்சத்தின் மையமாக இருக்கிறான்
என்பது பிரபஞ்சத்தின் பெருமை ஆகும்! அதற்காக அவன் தற்பெருமை கொள்
வது அழகல்ல! ஏனென்றால், பிரபஞ்சத்தின் உண்மையான, இறுதியான அந்த
ஒப்பற்ற மையத்தை அறிந்தடைவதற்கான ஒரு மையமாக மட்டுமே மனிதன்
விளங்குகிறான்! அவன் தன் முழுமையை அடைவதற்கு  அவன் எடுத்து
வைக்க வேண்டிய இன்னும் ஒரு அடி (one more step) மீதமுள்ளது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 14-09-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 13 September 2017

பன்மையின் உலகமா? அல்லது உலகம் கடந்த ஒருமையா?





         நான் இவ்வுலகைவிட ஐந்தரை அடி உயரமானவன்!
         ஏனெனில், நான் இவ்வுலகின் உச்சியில் நிற்கிறேன்!

இவ்வுலகில். பெரும்பான்மையானோர் பன்மையின் உலகில் விழுந்து புரண்டு
உழல்வதை வாழ்க்கையென வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! மிகச்சிறுபான்மை
யானோர் இவ்வுலகைக் கடந்த ஒருமையை அடைவதையே தமது வாழ்வின்
இலக்காகக்கொண்டு வாழ்கின்றனர்! முதல் வகையினர் படைப்பைத் தழுவிக்
கொண்டு, படைத்தவனை, அதாவது மெய்ம்மையைக் கண்டுகொள்வதில்லை!
இரண்டாவது வகையினர், படைப்பைக் கைவிட்டு படைத்தவனைக்கைப்பற்று
வதையே இலக்காகக் கொண்டுள்ளனர்!  இவ்விரு வழிகளில் எது சரியானது?
அல்லது, இரண்டையும் ஒன்றிணைக்க அடிப்படையேதும் உள்ளதா?

'இவ்விரு பார்வைகளுமே ஒருபக்கச் சாய்வானவை, ஏனெனில், முறையான
ஒரு புரிதலானது இரண்டையும் "ஒரு, தொடர்ந்து செல்லும், என்றென்றைக்கு
மான, உயிர்த்துடிப்புமிக்க ஆனந்தமான தழுவலில் இணைக்கிறது!" என்பதாக
உளவியலாளர் கென் வில்பர் (Ken Wilber)கூறுகிறார்.' சில ஆன்மீக மார்க்
கங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ மனிதனுக்கு லௌகீகம், ஆன்மீகம்
என இரண்டு இறக்கைகள் அவசியம் என்கின்றன!

ஆனால், லௌகீகத்தை ஒரு இறக்கையாகவும், ஆன்மீகத்தை இன்னொரு
இறக்கையாகவும் கொண்டு வாழும் ஒருவன் எந்த இலக்கை நோக்கிப் பறந்து
செல்வான்? லௌகீகம் ஒரு திசையில் கொண்டு செல்லும், ஆன்மீகம் அதற்கு
எதிர் திசையில் கொண்டு செல்லும்! எதிரெதிர் திசைகளை நோக்கி இழுக்கும்
காளைகளைப் பூட்டிய வண்டியில் பயணித்து ஒருவன் தனது இலக்கை
அடைவது எவ்வாறு சாத்தியம்? லௌகீகமும், ஆன்மீகமும் சேர்ந்துசெல்லாது!
ஆன்மீகம் என்பது நாம் வாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒரு போதும்
அமையமுடியாது; ஏனெனில், ஆன்மீகம் தான் நம் வாழ்வின் இலக்கு ஆகும்!
இலக்கு ஒரு போதும் வழியின் ஒரு பகுதியாக அமையமுடியாது; மாறாக,
இலக்கு என்பது அனைத்து வழிகளின் முடிவிடம் ஆகும்!

லௌகீகமும், ஆன்மீகமும் சேர்ந்து செல்லாது என்பது மட்டுமல்ல; கென்
வில்பர் அவர்களின் கூற்றுக்கு மாறாக, லௌகீகமும், ஆன்மீகமும் ஒன்றை
யொன்று தழுவிக்கொள்ளவும் செய்யாது! பரந்து விரிந்து அனைத்தையும்
தழுவிக்கொள்ள வேண்டும், அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் எனும்
ஆர்வக்கோளாறின் விளைவாக கென் வில்பரின் புரிதல் தனது நங்கூரத்தை
தொலைத்துவிட்டு ஆழ்கடலில் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறது!
அவருடைய மேற்கத்திய கட்டுப்படுத்துதலின் (Western Conditioning)
விளைவாக அவர் லௌகீகத்திற்கு நியாயம் வழங்குவதற்காக ஆன்மீகத்தைக்

கொச்சைப்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்!

கென் வில்பரின் பார்வை ஆன்மீகப் பரிணாமத்திற்கு விரோதமானது ஆகும்!
எவ்வாறேனும் லௌகீகத்தை ஆன்மீகத்துடன் இணைக்கவேண்டும் எனும்
ஆதங்கத்தினால், அதாவது, லௌகீகத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக
ஆன்மீகத்தை அவர் லௌகீகத்தின் உயரத்திற்கேற்ப குறைத்துவிட்டார்! சில
ஆன்மீக மார்க்கங்கள், பரவலாக மனிதர்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தும்
முகமாக, "ஆன்மீகம் லௌகீகத்திற்கு எதிரானதல்ல!" எனவும்; "ஆன்மீகத்தில்
ஈடுபடுவதற்காக ஒருவர் லௌகீகத்தைத் தியாகம் செய்யத்தேவையில்லை!"
எனவும் சொல்கின்றன! ஆனால், இவ்வழிகளிலெல்லாம் ஆன்மீகத்தை ஊக்கு
விக்கவோ,வளர்க்கவோ இயலாது! ஏனெனில், ஆன்மீகம் என்பது தூங்குமூஞ்சி
களுக்கும், சுகபோகிகளுக்கும் உரியதல்ல! ஆன்மீகம் எதற்கும் எதிரானதல்ல!
ஆனால், பிரத்யேக அக்கறையும், சிதறாத முழுகவனமும் செலுத்தாமல்
ஒருவனுள் ஆன்மீகம் துளிர்க்கவோ, வளரவோ செய்யாது! ஆன்மீகம் என்பது
இப்பன்மை உலகில் காணப்படும் பலவகைப்பட்ட பொருட்களுள், விஷயங்
களுள் அதுவும் ஒன்றல்ல, அதையும் ஒருவர் தம்முடன் வரித்துக்கொள்ள!

ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் கடந்தது, ஏனெனில், அதுவே அனைத்
திலும் இறுதியானது, அனைத்தின் சாரமானது! ஆகவே, அதற்கு நிகராக வேறு
எதுவும் இல்லை! அது ஒரு தனித்தீவு போன்றதாகும்! ஆக, ஆன்மீகத்தை
ஒருவர் நாடுகிறார் என்பதன் அர்த்தம் அவர் வாழ்வின் மிக முக்கியமானதும்,
இறுதியானதுமான அம்சத்திற்கு தயாராகிவிட்டார் என்பதையே குறிக்கிறது!
மனிதவாழ்வின் முக்கியமான, இறுதியான அம்சம் என்பது கடைசியில் இடம்
பெறும் அம்சம் என்று அர்த்தமல்ல; நம்மில் பலர், மிகவும் தவறாக,ஆன்மீகம்
என்பது வயதானவர்களுக்கானது எனவும், வாழ்வின் கடைசிக்காலக்கட்டத்திற்
குரியது எனவும் கருதுகின்றனர்! மாறாக, அனைத்திலும் முதலாவதாக
கவனிக்கப்படவேண்டியது வாழ்வின் மிகவும் மையமான, முக்கியமான,
இறுதியான அம்சமான ஆன்மீக உண்மையைத்தான்! ஏனெனில்,அது மட்டுமே
நம்மையும், நம் வாழ்வையும் முழுமைப்படுத்தும் அம்சமாகும்!

லௌகீகம் என்பது உயிர்-வாழ்தலின் (அர்த்தத்தை அறியத்தவறியதால் மேற்
கொள்ளப்படும்) அர்த்தமற்ற வீண் விரிவாக்கம் ஆகும்! ஏனெனில், உயிர்-வாழ்
தல் என்பதே உயிர்-வாழ்தலின் இலக்காக ஆகவியலாது! அவ்வாறு ஆகவிய
லுமெனில், மனிதவாழ்வு என்பது, உணவு, உடை, உறைவிடம், உறவுகள்
ஆகியவற்றைச் சுற்றிச்சுழலும் விவகாரமாகச் சுருங்கிப்போகும்! மேலும்,உயிர்
வாழ்தலை எவ்வளவு அலங்காரமாகவும், பகட்டாகவும், ஆடம்பரமாகவும்
மேற்கொண்டாலும் அது அர்த்தமற்ற வெறும் உயிர்-வாழ்தல் மட்டுமேயாகும்!

நாம் இப்பன்மையின் உலகை, அதாவது, படைப்பைத் தழுவிக்கொண்டு, அதே
நேரத்தில் ஆன்மீகச் சிகரத்தையும் தழுவிக்கொள்ள இயலாது! முதலில் இவ்
வுலகம், அல்லது பிரபஞ்சம் என்பது பரந்து விரிந்த ஒரு இடம் மட்டுமன்று;
அது ஒரு மாபெரும் இயக்கமும் என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும்
முக்கியம் ஆகும்! அதைவிட முக்கியம் அவ்வியக்கம் எந்த இலக்கை நோக்கிச்
செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வதேயாகும்!

"பன்மையின் உலகம்" என்பது ஒரு பரிசோதனைக்களம் ஆகும்! இன்னும்
"உலகம்" என்பதும் ஒரு பரிசோதனைப்பொருளே ஆகும்! அதில் விளையும்
ஒவ்வொரு அம்சமும் உலகின் ஒரு அவதாரம் ஆகும்! உலகின் பலவகை
அவதாரங்களில் மனிதன் ஒரு விசேட அவதாரம் ஆவான்! அதாவது, அவனே
மாற்றங்களுக்குட்பட்ட இவ்வுலகை முழுமைப்படுத்தி மாற்றங்கள் அனைத்
தையும் முடிவிற்குக்கொண்டுவரும் இறுதி அவதாரம் ஆவான்! ஆம், மனிதன்
தன்னுள் கொணர்ந்திடும் ஒரு முடிவான மாற்றத்திலேயே உலகின் முழுமை
அடங்கியுள்ளது! பரிணாமத்தின் அடியோட்டமான நோக்கம் பலவகைப்பட்ட
பொருட்களை, உயிர்ஜீவிகளை உருவாக்கிக் கொண்டே செல்வதல்ல; மாறாக,
தமது உள்ளார்ந்த நோக்கத்தையுணர்ந்து நிறைவேற்றும் ஒரு பரிபூரணமான
பிரதிநிதியை உருவாக்குவதே (அதாவது, ஒரு பரிபூரணமான அவதாரமாக
உருவெடுப்பதே) ஆகும்! அத்தகையதொரு பரிபூரணமான பிரதிநிதி, அவதாரம்
மனிதனே யாவான்! மனிதன் வெறுமனே உண்டு களிப்பதற்காகப் பிறந்தவன்
அல்ல!

"பன்மைத்தன்மை" என்பதே ஒரு முரண்பாடு ஆகும்! உலகம் பலவகைப்பட்ட
பொருட்களையும், அம்சங்களையும் கொண்டுள்ள காரணத்தினாலேயே
அவற்றையெல்லாம் நாம் தழுவிக்கொள்ளவேண்டுமென்பதில்லை! அதனால்
ஒரு பயனும் இல்லை! நாம் தழுவிக்கொள்ளவேண்டியது முழுமைக்குறை
வான இந்தப் பன்முகத்தன்மை கொண்ட உலகையல்ல; மாறாக, இவ்வுலகம்
எனும் பரிணாம இயக்கத்தின் முடிவும், முழுமையுமான ஒருமைநிலையைத்
தான்! ஏனெனில், அவ்வொருமைநிலை உடைந்து சிதறியதனால் உருவானதே
இப் பன்மையின் உலகம்! ஒருமை நிலையே இவ்வுலகின் மூலம் ஆகும்!
மீண்டும் அவ்வொருமை நிலையைக் கட்டமைப்பதே உலகின், ஒட்டுமொத்த
பரிணாம இயக்கத்தின் ஒரே விழைவும், இலக்கும் ஆகும்! மலையின்
அடிவாரத்தைத் தழுவிக்கொண்டிருந்தால் சிகரத்தை எவ்வாறு நாம் அடைய
இயலும்! சிகரம் தான் நம்முடைய இலக்கு எனும்பட்சத்தில் அடிவாரத்தை
விட்டு நாம் அகன்றுதானே ஆகவேண்டும்!

"சமுசாரம் (உலக வாழ்க்கை) தான் நிர்வாணம், அதாவது, விழிப்படைந்த
மனதைக்கொண்டு காணும்பட்சத்தில், துன்பமிகு இவ்வுலகம்தான் பூரணமான
உலகம்" எனும் மஹாயானா பௌத்தக் கூற்றை கென் வில்பர் உறுதிப்படுத்து
வதாகக் கூறப்படுகிறது. ஆனால், இக்கூற்று மிகவும் தவறாகப் புரிந்துகொள்
ளப்பட்ட ஒன்றாகத்தான் தெரிகிறது! எவ்வளவு உயரிய, அற்புத ஆன்மீக
அனுபவங்களைப் பெற்றாலும், கென் வில்பர் போன்றவர்களால் இவ்வுலகை
விட்டுக்கொடுக்க இயலவில்லை என்பதாகவே தெரிகிறது! ஆனால், அதே
நேரத்தில், எவரும் இவ்வுலகை விட்டுக்கொடுக்கவோ, தவிர்க்கவோ தேவை
யில்லை! அதாவது ஒருவர் ஞானமடைந்த பிறகும் இவ்வுலகில் தான் வாழ்ந்
தாகவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், உலகிற்கு ஏற்கனவே
ஒருவர் கொடுத்து வந்த பழைய முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிடும்!
அதாவது, ஞானமடைந்தவர், (அவரது உடல் இறப்பில் முடிவுறும் வரை) இவ்
வுலகில் தொடர்ந்து இருக்கவே செய்வார்; ஆனால், அவர் தனது ஞானம்
எனும் வீட்டில் தான் பிரதானமாகத் தங்கி வாழ்வார்!

ஏனெனில், இவ்வுலகம் எவ்வகையிலும் பூரணமானதல்ல! அதேநேரத்தில்,
நாம் வைக்கப்பட்டிருப்பது இவ்வுலகில்தான், இவ்வுலகிலிருந்து தான் நாம்
நம் வாழ்க்கையை வாழ்ந்தாகவேண்டும், புரிந்து கொண்டாகவேண்டும், நமது
மீட்சியை செயல்படுத்தியாக வேண்டும்! மேலும், சமுசாரமும், நிர்வாணமும்
ஒன்றல்ல; ஒரு போதும், ஒன்றாகிடுவதற்கான வாய்ப்பும் இல்லை!

அதாவது, விழிப்படைந்த மனத்தைக்கொண்டு காணும் போது, 'துன்பமிகு இவ்
வுலகம்தான் பூரணமான உலகம்' என்பதாகத் தெரிகிறது என்பதன் அர்த்தம்
என்ன? விழிப்படையாத மனத்தைக்கொண்டு காணும் போது இவ்வுலகமும்,
இவ்வாழ்க்கையும் துன்பமயமாக, நரகமாகத் தெரிவதன் அர்த்தம் என்ன? ஆம்,
"விழிப்படைந்த மனம்" தான் அனைத்து வித்தியாசத்தையும் செய்கிறது!
அதாவது, எது முக்கியமானது எனில், இவ்வுலகம் துன்பமயமானதா? அல்லது
பூரணமானதா? என்பது அல்ல! மாறாக, மனம் (மனிதன்) விழிப்படைவது
மட்டுமே முக்கியம்!

ஏனெனில், "விழிப்பு" தான் இவ்வுலகின் மலர்ச்சியும், முழுமையும் ஆகும்!
மனிதனே தன் விழிப்பினால் இவ்வுலகை முழுமைப்படுத்தும் இறுதி அம்சம்
ஆவான்!

         வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
         பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
         சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
         அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
         மறுப்பது தான் உயரிய ஞானம்!
         ஏனெனில், எல்லா உலகங்களும்
         இவ்வுலகம் போலவே மனிதனது உணர்வைச்
         சார்ந்திருப்பவையே!
         உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
         உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
         முழு-உணர்வே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 07-09-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 6 September 2017

மனிதன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்?




ஒருமுறை விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் மிகவும் நோய்வாய்ப்
பட்டிருந்த போது, "மரணம் குறித்து நீங்கள் அஞ்சுகிறீர்களா?" என அவரிடம்
கேட்கப்பட்டதற்கு, "உயிருள்ள அனைத்து பொருட்களுடனும் நான் மிகவும்
நெருக்கமான ஒருமைப்பாட்டை உணர்வதால், தனிமனிதன் எங்கே தொடங்கி
எங்கே முடிவடைகிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல!" என்று
சொன்னதாக,  லேர்ரி டோஸ்ஸே (Larry Dossey) எனும் மருத்துவர்
தனது "ஆன்மாவைத் திரும்ப அடைதல்" (Recovering the Soul)எனும்
நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆம், "மனிதன் என்பவன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்? எனும் இந்தக்
கேள்வி மிகவும் அற்புதமான ஒன்றாகும்! விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மதிநுட்பம்
அவரது விஞ்ஞானக் கோட்பாடுகளில்  வெளிப்பட்டதைவிட இவ்வாறு
எப்போதாவது எவராவது கேட்கும் விஞ்ஞானத்துறைக்குத் தொடர்பில்லாத
கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலேயே அதிகம் வெளிப்பட்டுள்ளன
எனலாம்!

"மனிதன் என்பவன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்? எனும் இக்கேள்வி
மிகவும் முக்கியமானதாகும்! ஏனெனில், இக்கேள்வி மனிதனுக்கும் ஒட்டு
மொத்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை உணர்வுபூர்வமாக அறியச் செய்
வதற்கான ஒரு தூண்டுகோல் போன்றதாகும்! ஏனெனில், மனிதன் என்பவன்
பிரபஞ்சத்திலிருந்து வேறான, தனித்த ஒரு அம்சம் அல்ல! அதே நேரத்தில்,
அவன் பிரபஞ்சத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் முக்கியத்துவமற்ற
ஏதோ ஒரு பகுதியும் அல்ல! மாறாக, அவனே பிரபஞ்சத்தின் மிகமுக்கியமான
தலைப்பகுதி போன்றவன்! ஆனால், மனிதன் தன் முக்கியத்துவத்தை உணர்வு
கொண்டு நேரடியாகக் கண்டடையவில்லை, உணரவில்லையென்றால்,அவன்
வெறுமனே இப்பிரபஞ்சத்திலுள்ள பலவகைப்பட்ட பொருட்களுள் ஒன்றாக;
தாம் ஏன் தோன்றினோம், எதற்காக இருக்கிறோம் என்பதெதையும் அறியாத
வனாய், ஒரு பிராணியைப் போல வாழ்ந்து மாண்டுபோவான்!

மனிதனின் முக்கியத்துவம் என்பது அவனுடைய இயற்கையான பிறப்பால்
கொடுக்கப்பட்ட ஒன்றல்ல; மாறாக, ஒவ்வொரு மனிதனும் தனது விழிப்பால்
ஈட்டப்படவேண்டிய ஒன்றாகும்! மனிதனின் இயற்கையான பிறப்பு என்பது
பிறவிலங்குகளை ஒத்ததேயாகும்! ஆனால், மனிதனுக்கும், விலங்குகளுக்கும்
உள்ள ஒரு வித்தியாசம், அவனுள் அடங்கியிருக்கும் உள்ளுறையாற்றல்
அல்லது உட்பொதிவே ஆகும்! அதாவது, அவன் தன் உணர்வில் மேன்மேலும்
வளர்ந்து உயர்வதற்கான உட்பொதிவு!

ஐன்ஸ்டீனைப்பொறுத்தவரை, "உயிருள்ள அனைத்து பொருட்களுடனும் நான்
மிகவும் நெருக்கமான ஒருமைப்பாட்டை உணர்வதால், தனிமனிதன் எங்கே
தொடங்கி எங்கே முடிவடைகிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல!"
என்றார். அது அவருடைய உணர்வுப்பூர்வ அனுபவம். அவரைப்பொறுத்தவரை
தனிமனிதனின் எல்லைகள் மிகப் பரந்ததாக இருப்பதாக அவர் உணர்ந்தார்!
ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை நம் உடலைப்
போர்த்தியுள்ள தோல்தான் நமது எல்லைகளாயுள்ளன! அதுவும் உடலின் மீது
நாம் கொண்ட ஒரு விபரீதப் பிணைப்பினால், அதாவது, உடலை நாமாகப்
பாவிக்கும் தவறான அடையாளப்படுத்துதலினால் விளைந்ததாகும்! மற்றபடி
"நாம்" என்பது நம் ஒவ்வொருவரின் "நான்" எனும் அகந்தை உணர்வேயாகும்!

ஆனால், 'நான்' எனும் உணர்வு, அல்லது, அகந்தையுணர்வு என்பது என்ன?
அது எதைப்பற்றிய உணர்வு? அகந்தைக்கு தன்னையும், தனது உடமைகளை
யும்  (அதில் ஒருவனுடைய நெருங்கிய உறவுகளும் அடங்கும்) தவிர, வேறு
எதனுடனும் (சகமனிதர்கள், பிற உயிரினங்கள், இயற்கை, பிரபஞ்சம் ஆகிய
எதனுடனும், எவ்வித ஒருமைப்பாடும், அக்கறையும், பொறுப்பும், எதுவும்
கிடையாது! உண்மையில், 'நான்' எனும் உணர்வுக்கு தனித் தன்மையான
யாதொரு உள்ளீடும் கிடையாது! அது 'தான்' எனவும், 'தனது' எனவும்
வரித்துக்கொண்ட அம்சங்களை, பொருட்களை சார்ந்திருக்கும் ஒரு கட்டுக்
கதையே ஆகும்! அகந்தையின் இத்தகைய புனைதிறனும், கற்பனைச்சக்தியும்
தான் எலிகளுக்கும், தவளைகளுக்கும், பிற விலங்குகளுக்கும் இல்லாத
தனிச்சிறப்பு (?) ஆகும்! அகந்தையானது தன்னைப்பற்றியும், தன்னைச்சுற்றியும்
வரித்துகொண்ட அம்சங்களை விலக்கிவிடும் பட்சத்தில் அது ஒன்றுமில்லாத
வெறும் ஒரு சூன்யப்புள்ளியே!

தன்னை நோக்கி விழிக்காத, தனது உண்மையை அறிய விழையாத அகந்தை
யானது தன்னில் தானே தோன்றியதாக எண்ணிக்கொள்கிறது! தானே
வட்டத்தின் பரிதியும், மையமும் என்பதான பிரமையில் ஆழ்ந்து தேக்கமுற்று
உடலுடன் சேர்ந்து அழுகிப்போகிறது! ஆம், நோய்க்கூறு கொண்ட அகந்தை
யானது தொடக்கமும் முடிவும் இல்லாத மூலமும் முடிவுமான மெய்ம்மை
யாகத் தன்னைப் பாவித்துக்கொள்கிறது!

நதியானது மலையில் தோன்றி கடலில் கலக்கிறது; மலைக்கும், கடலுக்கும்
இடைவழி நெடுகிலுமுள்ள எதனுடனும் நதி தன்னைப் பிணைத்துக்கொள்
வதோ, அடையாளப்படுத்திக்கொள்வதோ கூடாது! ஏனெனில், நதியின்
அசலான அடையாளம் முடிவில் அது சென்று சேரும் கடலே ஆகும்!

அவ்வாறே மனிதனின் அகந்தை உணர்வும் இந்த உலகில், (பிரபஞ்சத்தில்)
தோன்றினாலும், இவ்வுலகைக்கடந்த முழு-உணர்வே அதனுடைய அசலான
அடையாளம் ஆகும்! ஆக, ஐன்ஸ்டீனின் அனுபவமான, அதாவது, "உயிருள்ள
அனைத்து பொருட்களுடனும் கொள்ளும் நெருக்கமான ஒருமைப்பாட்டுணர்வு
(Solidarity)" என்பதும் கூட இறுதியானதல்ல! ஏனெனில், இவ்வுலகம்
என்பது முற்றிலுமாகவும் முழுமையாகவும் கடக்கப்படவேண்டியதொரு
குறைவுபட்ட, தற்காலிக நிஜமே! பலர் எண்ணுவதுபோல பிரபஞ்சம் என்பது
ஒரு முழுமையல்ல; மாறாக, முழுமையை நோக்கிய ஒரு இயக்கமாகும்,
அந்த இயக்கத்தின் அம்புத்தலையே (Arrowhead) மனிதன்! அவன் ஒட்டு
மொத்த பிரபஞ்சத்துடன் ஒருமைப்பாடு கொள்வது அவசியமே;எவ்வாறெனில்,
பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விழைவினைச் செயல்படுத்தத் தோன்றிய ஒப்பற்ற
கருவியே, பிரதிநிதியே மனிதன்! ஆகவே, ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடன்
ஒருமைப்பாட்டுணர்வு கொள்வது அவசியமாகும்; இவ்வாறு ஒருமைப்பாடு
கொள்ளாமல் மனிதனால் இப்பிரபஞ்சத்தைக் கடக்க முடியாது! எவ்வொரு
பொருளுடனும், விஷயத்துடனும் எவ்விதத் தொடர்பும், பிணைப்பும் இல்லாத
நிலையில், ஒருபொருளை, அல்லது விஷயத்தை கடப்பது என்பது அடிப்படை
யற்றதாகும்!

ஆனால், உலகெங்கிலும் மனிதர்கள் உலகம், பிரபஞ்சம் பற்றிய யாதொரு
விசேட உணர்வும், உறவும், பிணைப்பும் இன்றி வாழ்ந்து செல்கிறார்கள்! பூமி
என்பது மனிதர்களுக்கு, அவர்களுடைய நுகர்வுத்தேவைகளுக்குரிய பொருட்
களைக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பொருட்கிடங்கு என்பதற்குமேல்
வேறெதுவுமல்ல! சிலர் இயற்கை, ஆன்மீக சூழலியம் என்றெல்லாம் பேசியும்
இயக்கம் நடத்தியும் வருகிறார்கள்! ஆனால், இத்தகைய இயற்கை தழுவிய
இயக்கங்கள், இஸங்கள் இயற்கையைப்பற்றியும், பூமியின் புனிதத்தன்மை
யைப்பற்றியும் பெரிதாகப் பேசினாலும், அவை மனிதனின் ஆன்மீக முக்கியத்
துவத்தை உணர்ந்தறியத் தவறிவிட்ட, உணர்ச்சிப்பெருக்கின் வயப்பட்ட,
முதிர்ச்சியற்ற மட்டுப்பாடுகளேயாகும்!

புனிதம், இறைமை பற்றிய உணர்வு முக்கியமே; ஆனால், அவை புறத்தே
எங்கேயுமில்லை! அப்படி எதுவும் இருக்கமுடியுமெனில், அவை அவற்றைச்
சுட்டும் வெறும் குறியீடுகளாக மட்டுமே விளங்கமுடியும்! மேலும்,மனிதனின்
ஆன்மீக முக்கியத்துவம் என்று இங்கு சொல்லப்படுவது மனிதனின் சொந்த
முக்கியத்துவம் அன்று! அப்படி எதுவும் இருக்கவில்லை! மனிதன் முக்கியத்
துவம் பெறுவது என்பது, அவனே இறுதியான ஆன்மீக மெய்ம்மையை
நோக்கிய பிரதான வாயிலாகவும்,அதன் வழியாகக்கடந்து செல்பவனுமாகவும்
இருக்கிறான் என்பதாலேயே ஆகும்!

நதியானது மலையில் உற்பத்தியாவது போலத் தெரிகிறதே தவிர அது
கடலில் தோன்றி மீண்டும் கடலிலேயே முடிவடைகிறது! அதுபோலவே,
மனிதனும் இவ்வுலகில் தோன்றுவதாகத் தெரிகிறானே தவிர உண்மையில்
அவன் மூலமெய்ம்மையிலிருந்து தொடங்கி மீண்டும் அம்மெய்ம்மையிலேயே
முடிவடைகிறான்!

உண்மையில், "தன்னையறிதல்" என்பது ஒருவன் தன்னைப்பற்றி அறிவதோ,
அல்லது, சமூகம் எனும் களத்தில் பிறருடன் ஒப்பிட்டு  தனது நிலையை
அறிவதோ அல்ல; மாறாக, பிரபஞ்சம் எனும் களத்துடன் தன்னை தொடர்பு
படுத்தி, பிரபஞ்ச விழைவை உணர்ந்து அந்த ஒப்பற்ற இலக்கை நிறைவேற்று
வதே "தன்னையறிதல்" என்பதாகும்! ஏனெனில், மனிதன் என்பவன் பிரபஞ்ச
இயக்கத்தின் நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையும் ஆவான்! முதலில் மனிதன்
தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை (தனது பிரபஞ்சமளாவிய
தன்மையை) அறிந்திடவேண்டும், அடுத்ததாக, பிரபஞ்சத்தின் உண்மையான
மையம் எது என்பதை உணர்ந்தறிந்திடவேண்டும்!

உண்மையில், உணர்வுக்கு விழித்த (அதாவது உணர்வாகத் தன்னை உணர்ந்த)
ஒவ்வொரு மனிதனுமே இப்பிரபஞ்சத்தின் மையமே ஆவான்! எவ்வாறு ஒரு
மரத்தின் ஒவ்வொரு கனியும் அம்மரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவம்
செய்கிறதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனுமே இப்பிரபஞ்சத்தின் மையம்
ஆவான்! ஆனால், பிரபஞ்சத்துடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதும்,
பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னை உணர்வதும், இறுதியானதல்ல! அதாவது
பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னை உணரும் ஒருவன், அடுத்து தனது
மையத்தை உணர்ந்தாக வேண்டும்! ஏனெனில், பிரபஞ்சத்தின் உண்மையான
மையத்தை அறிவதற்கான ஒரு தற்காலிக மையமே மனிதன்! அதாவது
மனிதனின் மையம் மனிதனிடம் இல்லை! அது மனிதனின் (அகந்தை) உணர்
வைக் கடந்த ஒரு பேருணர்வு ஆகும்! தன் மையத்தைக் கண்டடைந்தவனே
மனிதன்! மற்றெல்லோரும் மையமறியாத விலங்குகளே!

விலங்கு ஜீவிகளைப்பொறுத்தவரை, அடிப்படைத்தேவைகளைச் சுட்டுகின்ற
உடலின் இயல்பூக்கிகள் தான் அவற்றுக்கான மையம் ஆகும்! அவற்றின்
அடிப்படைத் தேவைகளுக்குரிய பொருட்களைக்கொண்ட உலகை அவை
சார்ந்துள்ளன. உணர்வுக்கு விழித்த மனிதஜீவியைப் பொறுத்தவரை, உடலின்

அடிப்படைத்தேவைகளைக் கடந்த உயர்-தேவைகளான அர்த்தம், உண்மை,
மெய்ம்மை ஆகியவற்றைக்கோரும் ஆன்மாவே மையமும், அவன் சார்ந்திருக்
கும் ஒரே மெய்ம்மையும் ஆகும்!


மா.கணேசன்/நெய்வேலி/ 25-08-2017
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...