Wednesday, 30 July 2025

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1





 

 

 

 

 

 

 

கேள்வி - 1


நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், தந்தை போன்ற எந்த உறவுகளைச் சந்திக்க விரும்புவீர்கள்? 


மன்னிக்கவும், நான் எவரையும் சந்திக்க விரும்பமாட்டேன். ஏனென்றால், அப்படியொரு 'வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கை' என்றொன்று இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்பதாகவே எனது புரிதல் சொல்லுகிறது.  எனது தாய், தந்தை மீது  நான் அளவற்ற அன்பு கொண்டவன் என்றாலும், அவர்கள் அவர்களுடைய தொடரும் உணர்வியல் பரிணாமத் தேவைக்கேற்ப, அவர்கள் மீண்டும் எங்காவது பிறந்திருக்கலாம்! அல்லது அவர்கள் உணர்வியல் முழுமையடைந்தவர்களாக முழு-நிறைவடைந்திருக்கலாம்- அதாவது, இருப்பு, இன்மை கடந்த நிலையில் ஆழ்ந்திருக்கலாம்! ஆகவே , அவர்களை  வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில், தேடிச் சந்திக்கவோ, எவ்வகையிலும் அவர்களைத் தொந்திரவு செய்யவோ நான் விரும்பவில்லை!


அப்படி வாழ்க்கைக்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது எனில், நான் எனது விசார நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தொடர்ந்து விசாரப் பாதையில் செல்லுமாறு வலியுறுத்துவேன்! 


<>
வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
மறுப்பது தான் உயரிய ஞானம்!
ஏனெனில், எல்லா உலகங்களும்
இவ்வுலகம் போலவே உனது உணர்வைச்
சார்ந்திருப்பவையே!
உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
முழு-உணர்வே!

 
-- மா.கணேசன் / 


"கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" Sunday, 24 April 2016 வலைப்பதிவிலிருந்து
http://vicharamarg.blogspot.com/2016/04/blog-post_24.html
     <>
 ■
மா.கணேசன்/25.07.2025/நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø


கேள்வி - 2

மரணத்திற்குப் பிறகு ஆன்மா எங்கே செல்கிறது?  

 
ஒரு மனிதன் இறந்தபிறகு, அவனுடைய ஆன்மா எங்கேயும் செல்வதில்லை! அம்மனிதன் உயிரோடிருக்கும் போது அவனது ஆன்மா எங்கே இருந்ததோ, அங்கேயே தான் அது இருக்கிறது, இருக்கும்! ஏனென்றால், ஆன்மா என்பது உணர்வியல் ரீதியாக(ஒவ்வொரு மனிதனும் அடைந்திடக்கூடிய )மனம் எனும் சிற்றுணர்வைக் கடந்த, விசேடமான ஒரு உயர் உணர்வு நிலையே தவிர வேறில்லை! ஆக, உணர்வின் தளம் என்பது உடலோ, அல்லது மூளையோ அல்ல! உணர்வு, மனம் என்பவை பொருண்மையான எதையும் சார்ந்திருப்பதான அம்சங்கள் அல்ல! மூளைதான் மனதின் இருப்பிடம் என்பது (நதியை மலைதான் உற்பத்தி செய்கிறது என்பது போன்ற) ஒரு பொதுவான, தவறான  புரிதல்தானே தவிர, அது உண்மையல்ல! மூளையின் வழியாக மனமும், உணர்வும் அணுகப்படுகிறதே தவிர, மனம் என்பது மூளைச் செயல்பாட்டின் போது தோன்றும் ஒரு ஒளிப்புள்ளியே; அது ஏற்கனவே 'வெளி-காலம்-பொருண்மை' -யின் கட்டமைப்பை [அதாவது பிரபஞ்சத்தைக்] கடந்த ஒரு பரிமாணம் ஆகும். 


மனம், ஆன்மா என்பவற்றை உணர்வின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளவேண்டும். மனம் என்பது சிற்றுணர்வு, அல்லது தொடக்க நிலை உணர்வு என்றால், ஆன்மா என்பது இறுதி நிலை உணர்வு அல்லது முழு உணர்வு எனலாம். ஆம், விழிப்படைந்த மனமே ஆன்மா என்பதாகும்.

மா.கணேசன்/25.07.2025/நெய்வேலி
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø


கேள்வி - 3


மறுபிறவி என்பது இருக்கிறதா?  

     
ஒருவன் இந்த பிறவியை முழுமையாக வாழ்ந்து முடிப்பானேயானால், அதாவது தனது வாழ்காலத்திற்குள்ளேயே தனது பிறவிப் பயனை அடைந்துவிட்டானெனில், அவனுக்கு ஏன் இன்னொரு பிறவி?
ஆனால், ஒருவன் தனது பிறவிப்பயனை அடையவில்லை, தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடிக்க வில்லை என்றால், அவன் மீண்டும் பிறப்பது உறுதி.  


தொடர்ந்து இக்கேள்விக்கான பதிலுக்குள் செல்வதற்கு முன், சில விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம் ஆகும்.
நாம் எலிகளைப் போலவோ, தவளைகளைப் போலவோ இருந்தால் மறுபிறவி பற்றிய கேள்வி எழுந்திருக்காது! ஏனென்றால், எலிகளும், தவளைகளும் பிறக்கின்றன, இரை தேடுகின்றன, இணைதேடி இனம் பெருக்குகின்றன, பெரு விலங்குகளுக்கு இரையாகிவிடாமல் தப்பி உயிர் பிழைக்கின்றன. பிறகு ஒரு கட்டத்தில் இறந்துவிடுகின்றன. இவ்வாறு இறந்துபோன எலிகளும், தவளைகளும் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை! ஒருவேளை பிறந்தாலும், அவை என்ன செய்யப்போகின்றன? மேலே சொன்ன அதே சுற்றுதான் -- இரை தேடுதல், இணை தேடுதல், கொன்றுண்ணி (Predators)களுக்கு இரையாகாமல் தப்பிப்பிழைத்தல் என்பதுதானே! இத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கு மறுபிறவி தேவையில்லையே; வெறும் இனப்பெருக்க முறையே போதுமே! முக்கியமாக, ஒரு எலி, அல்லது ஒரு தவளை என்பது ஒரு உருப்படி தானே தவிர அவற்றிற்கு யாதொரு மனமோ, தனித்துவமோ (Individuality) கிடையாது!
மறுபிறவி ஏற்படவேண்டுமானால், அதற்குரிய அடிப்படை இருக்கவேண்டுமல்லவா!


தனியொரு தவளைக்கு மேற்கொண்டு பரிணமிக்கும் காரணமோ, அடிப்படையோ இல்லை. ஏனென்றால், தவளைக்கு மனம் என்பதில்லை, ஆன்மாவும் இல்லை! ஆனால் மனிதனின் பிரச்சினையே வேறு. மனிதனுக்கு 'மனம்' எனும் சிற்றுணர்வு இருக்கிறது; அச்சிற்றுணர்வு மேன்மேலும் பரிணமித்து 'ஆன்மா' எனும் பேருணர்வு அல்லது முழு-உணர்வு நிலையை அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆன்மாவை அடைவதுதான் அவனது பிறவிப்பயன்!

மனிதனுக்குப் பிறகு என்ன?


மனிதனின் மனம் தான் அவனது தனித்துவத்திற்கான அடிப்படை. ஒரு மனிதன் என்பவன் வெறும் ஒரு உருப்படி(எண்ணிக்கை)அல்ல, ஒவ்வொரு தனிதனைப் பொறுத்தவரையிலும் ஒவ்வொருவருக்கும் மேன்மேலும் பரிணமித்தாக வேண்டிய கடமை உள்ளது. ஒரு மனிதனின் மனமானது முழுமையடையும் வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறவியெடுத்தாக வேண்டும்.

உலகம் தோன்றி, அதில் முதல் உயிர் தோன்றி, பிறகு மனிதன் தோன்றி...  இவ்வாறாகச் செல்லும் நெடிய பரிணாம நிகழ்வு முறையின் இறுதி இலக்கு என்னவோ, அந்த இலக்கை பரிணாமமானது ஒவ்வொரு மனிதனினுள்ளும், அவனது உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் அடைய விழைகிறது. அதாவது, பரிணாமம் என்பது பொருளியல் (Material/ Inorganic ), உயிரியல்-உடலியல் (Biological/Organic ) என்கிற கட்டத்தைக் கடந்து உணர்வியல் கட்டத்திற்குள் (Psychic )பிரவேசித்துவிட்டது! ஆகவே பரிணாமத்தில் மனிதனுக்குப் பிறகு என்ன தோன்றும் என்ற கேள்வி பரிணாமத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகும்!

மீண்டும் பிறவியெடுப்பது எது?


ஒரு மனிதனின் இறப்பு என்பது அவனது உடலின் இறப்பைத்தான் குறிக்கிறது.  இறந்த அந்த உடல் மீண்டும் பிறக்க இயலாது. மனிதன் என்பவன் உடல்-உயிர், மனம் [அரையுணர்வு], ஆன்மா [முழு-உணர்வு] என மூன்று அடுக்குகளால் ஆனவன். ஆக, உடல் மரித்தாலும், ஒரு மனிதனின் மனம் மரிப்பதில்லை, மாறாக, அந்த மனம், பிறக்கும் வேறொரு புதிய மனித உடலில் தோன்றி அதன் பரிணாமத்தை தொடரவிருக்கிறது. ஒரு மனமானது ஒரு பிறவியில் எவ்வளவு உணர்வு பெற்றிருக்கிறது, உணர்வில் வளர்ந்திருக்கிறது என்கிற உணர்வின் அளவு [The Degrees/Levels of Consciousness], அதாவது தர நிலைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. உணர்வின் இந்த தர-நிலை தான் அடுத்தடுத்த பிறப்புகளுக்கு கடத்தப்படுகின்றதே தவிர, சென்ற பிறவியில் பெற்ற அனுபவங்களோ, ஞாபகக்கூறுகளோ கடத்தப்படுவதில்லை. ஆகவேதான் நமக்கு சென்ற பிறவி ஞாபகங்கள் எதுவும் இருப்பதில்லை. வெறுமனே சென்ற பிறவியின் போது வாழ்ந்த, பெற்ற அனுபவங்கள் அனைத்துக்கும் அடியோட்டமாக அமைந்த அந்த உணர்வு மட்டுமே அடுத்த பிறவியில் புதிதாக தனது வாழ்வைத் தொடங்குகிறது. 


உண்மையில், ஒருவன் எத்தனை பிறவியெடுத்தாலும் வாழ்க்கை அனுபவங்களும், உலக அனுபவங்ககும் ஒருவனது ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக யாதொரு பங்களிப்பையும் செய்வதில்லை! மாறாக, ஒருவனது மெய்ம்மை நாட்டமும், அர்த்தம் தேடுதலும், உண்மையில் தான் யார் என்பதை அறியும் பெருவிழைவும் தான் ஒருவனது ஆன்ம வளச்சிக்கும், உணர்வு வளர்ச்சிக்கும் உதவுவதாக அமைகிறது. ஆகவேதான், ஆன்மீக முன்னோடிகள் பலர் துறவு பற்றியும், ஆசைகளை அறுப்பது பற்றியும் பேசியுள்ளனர். ஆனால், ஒருவன் தீவிர ஆன்மீக நாட்டத்தில் இருந்துகொண்டே, அன்றாட இல்லற வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல உணவு, நண்பர்கள், இசை, கலை, .... என எல்லாத் தளத்திலும் தீவிரமாக அனுபவம் கொள்ளவும், பக்குவமாக வாழவும் முடியும்.

மா.கணேசன்/27.07.2025/நெய்வேலி.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

No comments:

Post a Comment

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...