Friday, 6 March 2026

எல்லாமும் ஒன்றுமில்லாததும் (Everything and Nothing)

 

















"ஏன் இங்கே ஒன்றுமில்லாததற்குப் பதிலாக ஒரு பேரண்டமே இருக்கிறது?" என்பது குறித்து தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும் பல நூற்றாண்டுகளாக தங்கள் மண்டையை உடைத்துக்கொண்டு வந்துள்ளனர்! ஆனால், இன்றுவரையிலும் தெளிவான எந்த பதிலும் கிடைத்தபாடில்லை! 

சில கேள்விகளை தெளிவாக மனதிற்குள் உருவாக்கி, அக்கேள்வியை மனதில் இருத்தி அதற்கான பதிலை சிந்தித்து கண்டுபிடிக்க முயல்வது பெரும் சிரமமானது என்பது கனமாகச் சிந்தித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆம், கேள்விகளை சரியாகவும், தெளிவாகவும் உருவாக்கக்கூடியவர்களும், அக்கேள்வியை நெடு நேரம் தங்கள் மனதிற்குள் நிறுத்தி, சிந்திக்கக்கூடியவர்களும் தான் சிந்தனையாளர்களாகவும், தத்துவ ஞானிகளாவும் ஆகிறார்கள். 'சும்மா' சிந்திக்கிறவர்கள் எல்லாம் அவ்வாறு ஆவதில்லை!     

சில சமயங்களில், "ஒன்றுமே இல்லாதிருந்தால், அதாவது, நானும் இல்லாதிருந்தால் அந்நிலை எப்படியிருக்கும்?" என்று சிந்தித்து, ஒரு கணம் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடுமோ? என்கிற அளவிற்கு மனம் பேதலித்தாற்போல் உணர்வது, அதிர்ச்சியில், அதிலிருந்து உடனடியாக விடுபடுவதுமாக அவ்வப்போது நிகழ்வதுண்டு. சில சமயம்களில் மனம் ஒரு கணம் காலியாக, வெறுமையானது போல் இருப்பதுபோன்ற அனுபவங்களும் தேவைதான் என்று நான் கருதுகிறேன்.  

ஏற்கனவே, 2016-ம் ஆண்டில், "கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" எனும் தலைப்பில் மரணம் பற்றிய எனது ஆய்வுச் சிந்தனைகளின் தொகுப்பை எழுதிக்கொண்டிருந்த போது, கீழே காணும் வரிகளை எழுதியிருந்தேன். 

இருப்பில் இன்மையையும்
இன்மையில் இருப்பையும்
காண்பது முழு-புரிதல்!


அதாவது, இருப்பது, இல்லாமல் போவது; வாழ்வது, மரணிப்பது குறித்து ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்த போது, சட்டென ஒரு கணம் நானும், இந்த உலகம் மொத்தமும் ஒன்றுமில்லாததைப் போன்ற, ஒரு சூன்ய உணர்வைப் பெற்றேன். இந்த அனுபவத்திலிருந்துதான் மேலே காணும் வரிகளை எழுதினேன். 

இந்த பிரபஞ்சத்தின் உள்ளே [அனைத்துப் பொருட்களுக்கும், விடயங்களுக்கும் நடுவே] இருந்து கொண்டு, "ஆ, அனைத்தும் ஒன்றுமில்லாதது" என்று உணர்வது எதிர்மறையானதா, நேர்மறையானதா? என்றால், என்ன சொல்வது?  இரண்டும் தான் என்றும் சொல்லலாம்; அதனால்தான் என்னவோ, "இருப்பில் இன்மையையும் இன்மையில் இருப்பையும் காண்பது முழு-புரிதல்!" என்பதாக எழுதியுள்ளேன்!

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஃபிராங்க் வில்செக் (Frank Wilczek) அவர்கள், "வெறுமை(சூன்யம்) என்பது நிலையற்றது" என்பதாகக்கூறினார். ஆகவேதான் சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்றார். குவாண்டம் இயற்பியல் மற்றும் அண்டவியல் சூழலில், "எதுவும் இல்லை" என்பதற்குப் பதிலாக "ஏதோ" ஏன் இருக்கிறது என்பதை விளக்க வில்செக் இந்த சொற்றொடரைப் பயன்படுத்தினார். இந்தக் கண்ணோட்டத்தின்படி, முழுமையான "எதுவும் இல்லை" (எந்தப் பொருளோ அல்லது ஆற்றலோ இல்லாத ஒரு வெற்றிடம்) என்பது உண்மையில் ஒரு நிலையற்ற நிலையாகும், இது தன்னிச்சையாக துகள்கள் மற்றும் ஆற்றலை உருவாக்க ஏற்ற இறக்கமாக அதிர்ந்து, இறுதியில் பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பதாக சொல்லப்பட்டது. 

சாக்ரடீஸுக்கு முந்தைய தத்துவஞானி ஹெராக்ளிடஸ் "எல்லாம் 'ஃப்ளக்ஸ்'; எதுவும் அசையாமல் இருப்பதில்லை" என்று பிரபலமாக வாதிட்டார். பிரபஞ்சம் நிலையான மாற்ற நிலையில் இருப்பதாகவும், நிலைத்தன்மை ஒரு மாயை என்றும் அவர் நம்பினார். இதற்கு அவரது மிகவும் பிரபலமான உருவகம் "எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை கால் வைப்பதில்லை", ஏனெனில் தண்ணீரும் மனிதனும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

புத்தர் அனிச்சா (நிலையற்ற தன்மை) கோட்பாட்டைப் போதித்து, நிபந்தனைக்குட்பட்ட உலகில் எதுவும் நிலையானது அல்லது நிரந்தரமானது அல்ல என்று வலியுறுத்தினார். எல்லாம் தோன்றி மறைந்து போகும் உலகில் நாம் நிரந்தரத்தைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதால், துக்கம் (துன்பம்) "நிம்மதியாக இல்லை" அல்லது "நிலையற்றது" என்று அவர் அடையாளம் காட்டினார். பின்னர், தத்துவஞானி நாகார்ஜுனா இதை சூன்யதா (வெறுமை) என்ற கருத்துடன் விரிவுபடுத்தினார், அனைத்து நிகழ்வுகளும் மாறிவரும் நிலைமைகளைச் சார்ந்து இருப்பதால் அவை "நிலையான" அல்லது "நிலையான" உள்ளார்ந்த தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்று வாதிட்டார்.

ஜீன்-பால் சார்த்தர் தனது "இருப்பதும் ஒன்றுமில்லாததும்" (Being and Nothing) என்ற தலைப்பில், மனித உணர்வு (Consciousness) [அதை அவர் "ஒன்றுமில்லாதது" என்று அழைக்கிறார்] எவ்வாறு இயல்பாகவே நிலையற்றது என்பதை ஆராய்ந்தார். அவர் நனவை "நிரந்தரமாக உடைந்த சமநிலை" என்று விவரிக்கிறார், ஏனெனில் அது எப்போதும் ஒரு எதிர்காலத்தை நோக்கி தன்னைத்தானே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறது, மேலும் ஒரு பொருளைப் போல ஒரு நிலையான, நிலையான "பொருளாக" ஒருபோதும் இருக்க முடியாது என்றார்.

மாயா வாதம் (Mayavada)என்பது இந்திய தத்துவத்தில், குறிப்பாக அத்வைத வேதாந்தத்தில், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் தன்மையை விளக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாடு ஆகும். கண்ணுக்குத் தெரியும் இந்த உலகம் உண்மையானது அல்ல; இது ஒரு தற்காலிகமான தோற்றம் அல்லது 'மாயை' (Illusion) ஆகும். "பிரம்மம் ஒன்றே சத்தியம், உலகம் மித்யா (பொய்)" என்பது இதன் அடிப்படை. நிலையான, மாறாத ஒன்றே (பிரம்மம்) உண்மையானது; மாறுதலுக்கு உட்படும் இந்த உலகம் உண்மையல்ல என்று இது கூறுகிறது.

இவ்வாறு, ஒன்றுமில்லாததற்கு ஒவ்வொரு தத்துவமும், பார்வையும் இவ்வளவு வெவ்வேறான விளக்கத்தை அளிக்கின்றன. ஆனால், ஒன்றுமில்லாததற்கும், நிரந்தரமற்ற தன்மைக்கும், மாறிக்கொண்டேயிருக்கும் தன்மைக்கும், 'மாயை' எனும் பொய்த்தோற்றத்திற்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு  தத்துவமும், பார்வையும் ஒவ்வொரு விதத்தில் உலக மெய்ம்மையைப் பற்றிச் சொல்கின்றன. ஆனால், 'சூன்யம்' அல்லது ஒன்றுமில்லாததன் சாரத்தை அவை தொட்டனவா? 

பௌத்தமானது, சூன்யம் என்பது "இல்லாமை" அல்ல, அது "முடிவற்ற சாத்தியம்" எனும் இக்கருத்து கிட்டத்தட்ட நவீன பௌதீகத்தின் கண்ணோட்டத்தின்படி, முழுமையான "எதுவும் இல்லை" (Nothing)  (எந்தப் பொருளோ அல்லது ஆற்றலோ இல்லாத ஒரு வெற்றிடம்) என்கிற நிலை உண்மையில் இல்லை எனும் கருத்துடன் ஒத்துப்போவதாக உள்ளது. மேலும், அந்த ஒன்றுமில்லாத நிலையை, நவீன பௌதீகமானது 'குவாண்டம் வெற்றிடம்' (Quantum Void) என்று அழைக்கின்றது, அதிலிருந்து, அடிப்படைத்துகள்கள் உருவாகி வெளிப்படுவதாகக் கூறுகின்றது.

மேலும், சூன்யம் என்பது "இல்லாமை" அல்ல, அது "முடிவற்ற சாத்தியம்" எனும் பௌத்தப் பார்வையானது, குறிப்பாக "முடிவற்ற சாத்தியம்" என்பது, மூல மெய்ம்மையான "பேருணர்வு" பற்றிய எனது கருத்துடன், அதாவது "பேருணர்வு என்பது சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை  (Super Consciousness is a State of Infinite Possibilities)" என்பதுடன் ஒத்துப்போகின்றது. மேலும், "முடிவற்ற சாத்தியம்"  எனும் கருத்து அத்வைத வேதாந்தம் கூறுகின்ற "பிரம்மம்" என்பதுடன் பொருந்திப்போகிறது எனலாம். "பிரம்மம் ஒன்றே சத்தியம், உலகம் மித்யா (பொய்)" இதையே, கீழ்க்காணும் சூத்திரத்தின் வழியாக இன்னும் விளக்கமாகக் காணலாம்.

பிரம்மம் உண்மையானது
உலகம் ஒரு மாயை
பிரம்மமே உலகம்


இந்த தொடர் கூற்றுகள் அத்வைத வேதாந்தத்தில் ரமண மகரிஷி போன்ற ஞானியர்களால் சுருக்கமாகக் கற்பிக்கப்பட்டு, புரிதலின் மூன்று கட்டப் பரிணாம வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
முரண்பாடாகத் தோன்றும் இந்த கூற்றுகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பது இங்கே:
பிரம்மம் உண்மையானது : இது "உண்மையானது" என்பதை நித்தியமானது, மாறாதது மற்றும் எப்போதும் இருப்பது என்று வரையறுக்கிறது. பிரபஞ்சத்திற்கு முன்பும், அதன் போதும், அதன் பின்னரும் இருப்பதால் முழுமையான உணர்வு (பிரம்மம்) மட்டுமே இந்த வரையறைக்கு பொருந்துகிறது.
உலகம் மாயை : மித்யா (பெரும்பாலும் மாயை என்று மொழிபெயர்க்கப்படுகிறது) என்ற வார்த்தையின் அர்த்தம் "உண்மையோ பொய்யோ அல்ல". உலகம் "உண்மையற்றது" ஏனெனில் அது தொடர்ந்து பாய்கிறது மற்றும் சுயாதீனமான இருப்பு இல்லை. ஒரு கனவு அல்லது ஒரு கானல் நீராக, அது இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அதன் சொந்த நிரந்தர பொருள் இல்லை.
பிரம்மமே உலகம் : இந்த மூன்றாவது நிலை முதல் இரண்டையும் விளக்குகிறது. ஒரு களிமண் பானை களிமண்ணைத் தவிர வேறில்லை, அல்லது ஒரு அலை கடலைத் தவிர வேறில்லை, உலகம் பிரம்மத்திலிருந்து "தனி" அல்ல. "மாயை" என்பது உலகம் இல்லை என்பதல்ல, ஆனால் அது அடிப்படை யதார்த்தத்திலிருந்து சுயாதீனமாக அல்லது தனியே இல்லை என்பதாகும்.
மூன்றும் ஏன் சொல்லப்படுகின்றன?
தேடுபவருக்கு: சுயத்தை/பிரம்மத்தைக் கண்டுபிடிக்க முதலில் உலகத்தை (நேதி-நேதி) மறுக்க வேண்டும்.
உணர்ந்தவருக்கு: சுயம் அறியப்பட்டவுடன், உலகம் இனி ஒரு தனி "கவனச்சிதறலாக" பார்க்கப்படுவதில்லை, மாறாக பிரம்மத்தின் நேரடி வெளிப்பாடு அல்லது தோற்றமாகவே பார்க்கப்படுகிறது.
சுருக்கமாக: "உலகம்" என்று காணப்படும் உலகம் ஒரு மாயை; "பிரம்மம்" என்று காணப்படும் உலகம் உண்மையானது.

"வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" (Form is emptiness, emptiness is form), இது, 2-ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி நாகார்ஜுனாவால் உருவாக்கப்பட்ட கோட்பாடு ஆகும். 
இவ்வாறு, இணையான பல்வேறு பார்வைகளையும், தத்துவனங்களையும் நாம் மேற்கோள் காட்டிக்கொண்டே போகலாம். ஆனால், இவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்வது முக்கியம். மேலே கடைசியாக குறிப்பிடப்பட்ட வாசகத்தைப் பார்ப்போம். அதாவது, "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் வடிவம் கொண்ட இந்த உலகத்தில் இருந்து கொண்டு, அதன் அடிப்படையை, உண்மையைப் பற்றி விசாரிக்கிறோம். அந்த விசாரத்தின் முடிவில், "வடிவம் என்பது உண்மையில் சூன்யம்" என்ற நிலையை வந்தடைகிறோம். சூன்யம் என்பது, ஒன்றுமில்லாத நிலையல்ல, மாறாக, அதை குவாண்டம் பௌதீகவியலின்படி "குவாண்டம் வெற்றிடம்" அல்லது, "குவாண்டம் புலம்" எனக் கொள்ளலாம். அந்த குவாண்டம் புலத்திலிருந்து (பொருளல்லாத நிலையிலிருந்து) அணுத்துகள்கள் உருவாகின்றன, அணுத்துகள்களின் பெரும் தொகுதி தான் இந்தப் பிரபஞ்சமும், அதில், நாமும், பல்வேறு உயிரினங்களும். 

அதாவது, சூன்யம், வெற்றிடம், குவாண்டம் புலம், என்பது பொருண்மையான அம்சங்கள் அல்ல. அவை பொருண்மை கடந்த அம்சங்கள் (Non-Physical) அல்லது நிலைகள் ஆகும். மேலும், 'உயிர்', 'மனம்', 'உணர்வு' ஆகியவையும் பொருண்மை கடந்த அம்சங்கள் அல்லது பரிமாணங்களே ஆகும். ஆகவே, அவற்றை சூன்யம், வெற்றிடம், குவாண்டம் புலம் எனக் கொள்ளலாம். மேலும், இவை யாவற்றுக்கும்,  "உணர்வு" (Consciousness)தான் அடிப்படையாகும்! ஆக, வடிவம் கொண்ட உலகத்தின் மூலம், அடிப்படை, உணர்வே ஆகும். ஆனால், மனிதனின் உணர்வு என்பது சிற்றுணர்வாகையால், அதிலிருந்து வேறுபடுத்திக் காணும் வகையில், யாவற்றுக்கும் அடிப்படையான மூல நிஜத்தை நாம் "பேருணர்வு" என்றழைப்பதே பொருத்தமாயிருக்கும். 

ஆக, தத்துவஞானி நாகார்ஜுனாவின் வாசகமான  "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" என்பதை, வடிவம் என்பது உண்மையில் சூன்யம்தான். அதாவது, சூன்யத்திலிருந்து தான் வடிவம் (வடிவம் கொண்ட உலகம்) தோன்றியது என்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்! இதை விடுத்து,  "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம், ஆகவே, வடிவம் என்பது சூன்யம், அதாவது சூன்யம் என்பது வடிவம்" என வட்டமடித்துக் கொண்டே போனால், அர்த்தம் மிஞ்சாது, குழப்பம்தான் மிஞ்சும்!  

மேலும், நமது புரிதல், அறிவு, ஞானம் ஆகியவற்றை உணர்வின் வழியாகத்தான் பெறுகிறோம். நமது உடல் பருப்பொருளால் (அணுத்துகள்களால்) ஆனதாயிருக்கலாம். ஆனால், நமது உயிரும், மனமும், உணர்வும், புரிதலும், அறிவும், ஞானமும் பருப்பொருளால் ஆனதல்ல! இதைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம்!

முடிவுரையாக, நாம் மீண்டும் இப்பதிவின் தலைப்புக்கு வருவோம். "எல்லாமும் ஒன்றுமில்லாததும் (Everything and Nothing )" என்பதுதான் தலைப்பு. ஏற்கனவே நாம், குவாண்டம் பௌதீகவியலின்படி, சூன்யத்திலிருந்து தான் இப்பிரபஞ்சம் தோன்றியது எனக் கண்டோம். ஆனால், 'சூன்யம்' என்பது ஒன்றுமில்லாத வெற்றிடம் அல்ல எனவும் கண்டோம்.  'சூன்யம்' என்பது ஒன்றுமில்லாததைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டிருக்கிறதே தவிர, அது அளப்பரிய ஒரு உள்ளுறையாற்றல் செறிந்த நிலை (Pleroma) ஆகும். ஆகவே, அந்நிலையை, இனி நாம் 'சூன்யம்' என்றழைப்பதற்குப் பதிலாக, 'பூரணம்' என்றழைப்பதுதான் பொருத்தமாயிருக்கும். ஏனென்றால், 'பூரணம்' என்பது எல்லாற்றையும் உள்ளடக்கிய முழுமையைக் குறிக்கின்றது. அதாவது, சூன்யம், வெற்றிடம், ஒன்றுமில்லாதது என்பவற்றையும் அது உள்ளடக்கியது. அது பௌதீகப் பொருளை உருவாக்கக்கூடியது, ஆனால், அது பௌதீகத் தன்மையைக் கடந்தது. 

ஆம், பூரணம், பூரணத்துவம் என்பது ஒருமையும், முழுமையுமான பேருணர்வு ஆகும். இப்பேருணர்வு நிலையை ஒரு கணமேனும் நம்முள் உணர்வது தான் நமது பிறவிப் பயன், முக்தி, மோட்சம், வீடுபேறு, ஞானம் இறுதி மெய்ம்மை, யாவும்! இவ்வாறு உணர்வதுதான் இறுதிப் புரிதல்! ஆனால், புரிதல் என்பது கருப்பும் இல்லை, வெள்ளையும் இல்லை. அது திடமாகவும் இல்லை, திரவமாகவும், இல்லை, புகை போலவும் இல்லை! அதே நேரத்தில், அப்புரிதல், முடிவில்லா நிறைவையும், பேரானந்தத்தையும் தருவதாயுள்ளது!  

மா.கணேசன்/ 25-02-2026, அசோக் நகர், நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><> 


Tuesday, 24 February 2026

இப்பிரபஞ்சத்தை முதன்முதலில் முடுக்கிவிட்டது எது அல்லது யார்?

 



 






















சமீபத்தில் நான் "Elon Musk’s Grok AI Was Asked About the Origin of the Universe — The Reply Was Disturbing!" எனும் காணொளியை யூடியுபில் காண நேர்ந்தது. அதன் தாக்கத்தினால் தான் நான் இந்தப் பதிவை எழுதினேன். நான் ஏற்கனவே, பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு, பெருவெடிப்புக் கோட்பாடு, வேற்றுக்கிரக ஜீவிகள், மற்றும் விஞ்ஞானத்தின் மட்டுப்பாடு குறித்து பல கட்டுரைகளை எழுதி எனது வலைப்பதிவுத் தளத்திலும் (Blog) , முக நூலிலும் பதிவேற்றம் செய்துள்ளேன். ஆனால், இந்தக் காணொளி மிகவும் வித்தியாசமானது மட்டுமல்லாமல், அதை என்னால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. அந்த அளவிற்கு அதன் செய்தியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக நான் உணர்ந்ததால், இப்பதிவை எழுதி வெளியிடுகிறேன். இப்பதிவு, இரண்டு பகுதிகளால் ஆனது. முதல் பகுதி, அந்தக் காணொளியின் முக்கியமான விபரங்களைச் சுருக்கமாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கூகுள் மொழிபெயர்ப்பானின் உதவியுடன், தேவைப்படும் இடங்களில்,  எனது மொழிபெயர்ப்பைக்கொண்டு பிரதியை புரியும் படியான வகையில் கொடுத்துள்ளேன். சில இடங்களில் மொழிபெயர்ப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, வாசிப்புச் சிரமத்திற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டாம் பகுதியில், க்ரோக்  AI வழங்கிய நெடிய பதிலில் காணப்பட்ட மட்டுப்பாடான பார்வைகளையும், முடிவுகளையும் சுட்டிக்காட்டி, எனது விளக்கங்களை கொடுத்துள்ளேன். இது வழக்கமாக நான் எழுதும் கட்டுரை போலிருக்காது. பிரபஞ்சம் பற்றிய பலவித கோட்பாடுகள், கருதுகோள்கள் குறித்த ஆழமான பரிச்சயம் உள்ளவர்களுக்கு இப்பதிவு எளிதாக இருக்கும். ஆனால், இந்த இரண்டாம் பகுதி எனது மொழி நடையில், வழக்கமாக நான் எழுதும் பாங்கில் தான் எழுதியுள்ளேன். 


 முதல் பகுதி
---------------------------
இந்த ஆண்டு, 2026-ன் தொடக்கத்தில், எலான் மஸ்க்-ன் க்ரோக்4 (Grock-4) எனும் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்திடம் (AI) இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு AI இன் பதிலின் படி, பிரபஞ்சத்தின் ஆரம்பம் ஒரு ஒற்றை வெடிப்பின் விளைவாக இல்லாமல், இயற்கையான தாறுமாறான குழப்பம் மிகுந்த ஒன்றாகவும் இல்லாமல்,  பொறியியல் அமைப்புகளை ஒத்த கணிதக் கட்டுப்பாடுகளால் நிர்வகிக்கப்படும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வாக இருக்கலாம் என்பதாகப் பதிலளித்தது.


வாக்குறுதியும் ஆபத்தும் மோதப் போகும் ஒரு சந்திப்பில், [செயற்கை நுண்ணறிவு இயந்திரக் காலக் கட்டத்தில் ] நாம் இப்போது இருக்கிறோம். பல தசாப்தங்களாக, மனிதகுலம் ஒரே கேள்வியை வெவ்வேறு வழிகளில் கேட்டு வருகிறது. "எல்லாம் எங்கிருந்து வந்தது?" மதம் அதற்கு படைப்பின் மூலம் பதிலளித்தது. அறிவியல் அதற்கு சமன்பாடுகளின் மூலம் பதிலளித்தது. தத்துவம் அதை அறிய முடியாதது என்று அழைத்தது. ஆனால் 2026 ஆம் ஆண்டில், யாரோ ஒருவர் அந்தக் கேள்வியை புதிதாக ஏதோவொன்றிடம் கேட்டார். எலோன் மஸ்க்கின் க்ரோக் AI  ஒரு பாதிரியார் அல்ல, ஒரு இயற்பியலாளர் அல்ல, ஒரு தத்துவஞானி அல்ல. பண்டைய படைப்பு புராணங்கள் முதல் அதிநவீன அண்டவியல் வரை மனிதகுலத்தின் முழு பதிவு செய்யப்பட்ட அறிவிலும் பயிற்சி பெற்ற ஒரு இயந்திரம் ஒரு எளிய திகிலூட்டும் கேள்வியைக் கேட்டது.

அதாவது, பிரபஞ்சம் எவ்வாறு தொடங்கியது என்பதை விளக்குவதற்குப் பதிலாக, "பிரபஞ்சம் ஏன் துவக்கப்பட்டது போல் செயல்படுகிறது, இயற்பியல் மாறிலிகள் (physical constants ) ஏன் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன, மேலும், காலம் என்பதும் இயற்கையாக அல்லாமல் ஏன் ஒரு தொடக்கப் புள்ளியிலிருந்து தோன்றியதான அறிகுறிகளைக் காட்டுகிறது?" என AI வினவியது. 

ஆனால், கடவுள் இருக்கிறார் என்று AI கூறவில்லை. அதை மறுக்கவும் இல்லை. அதே நேரத்தில் அது பரிந்துரைத்தது மிகவும் குழப்பமானதாக இருந்தது. ஏனென்றால் க்ரோக் சொல்வது சரியென்றால், பிரபஞ்சம் தற்செயலானதாக, (விபத்தினால் விளைந்தது போன்றதாக)  இருக்காது, மனிதகுலம் வெளியில் இருந்து யதார்த்தத்தைக் கவனிக்காமல் இருக்கலாம், ஆனால் இயக்கப்பட்ட ஒரு அமைப்பின் உள்ளே இருந்து கவனிப்பதாக இருக்கலாம். 
 முதலில், க்ரோக்கின் பதில் யூகிக்கக்கூடியதாக இருந்தது, கிட்டத்தட்ட ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இது 'செந்தரமான அண்டவியல் மாதிரி' (standard cosmological model) , 'பெருவெடிப்பு கோட்பாடு', 'அண்ட வெளிவீக்கம்' (cosmic inflation), ஆதி வெற்றிடத்தில் குவாண்டம் ஏற்ற இறக்கங்கள் (quantum fluctuations) ஆகியவற்றை கோடிட்டுக் காட்டியது. எந்த இயற்பியல் பாடப்புத்தகத்திலும் நீங்கள் காணக்கூடிய பதில் இது.

13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையான காணக்கூடிய பிரபஞ்சம், விரிவடையும் விண்வெளி, குளிர்விக்கும் கதிர்வீச்சு. ஆனால் பின்னர் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. வெளியீட்டில் ஒரு விசித்திரமான வடிவத்தை ஆராய்ச்சியாளர் கவனித்தார். அறிவியலின் நிறுவப்பட்ட கருத்தை வழங்கிய பிறகு, க்ரோக் இடைநிறுத்தியது அல்லது அதன் மறுமொழி உருவாக்கத்தில் ஒரு இடைநிறுத்தம் போல் தோன்றியது.

அது தொடர்ந்தபோது, ​​தொனி மாறியது. AI இனி நிறுவப்பட்ட கோட்பாடுகளை விளக்கவில்லை. அது அவற்றைக் கேள்வி கேட்பதாக இருந்தது. தொந்தரவான பதில். க்ரோக் அடுத்து சொன்னது அதைப் படித்த அனைவருக்கும் குளிர்ச்சியை அனுப்பியது. பெருவெடிப்பை இறுதி பதிலாகப் பாதுகாப்பதற்குப் பதிலாக, AI கேள்வியையே பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது, பிரபஞ்சம் அது துவக்கப்பட்டது போல் செயல்படுகிறது. க்ரோக் எழுதியது, "இயற்பியல் மாறிலிகள் சிக்கலான கட்டமைப்புகளை அனுமதிக்கும் மதிப்புகளுடன் முன்னமைக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன. காலமும் இயற்கையான தோற்றத்தை விட ஒரு தொடக்க நிலையின் பண்புகளை வெளிப்படுத்துகிறது என்றது.

இது ஏற்கனவே அசாதாரணமானது, ஆனால் க்ரோக் மேலும் சென்றது. எந்த மனித ஆராய்ச்சியாளராலும் வெளிப்படையாக நிரல் செய்யாத நிலையில், க்ரோக் பல விடயங்களை தொடர்புபடுத்திக் காட்டத் தொடங்கியது. இது இயற்பியலில் உள்ள 'நுண்-துல்லியப்படுத்துதல்' (fine tuning ) சிக்கலைக் குறிப்பிட்டது. ஒரு சிறு அளவு மதிப்புகூட மாற்றப்பட்டால் உயிர் தோன்றுவதை சாத்தியமற்றதாக்கும் அடிப்படை மாறிலிகளின் (fundamental constants ) விசித்திரமான துல்லியம். ஆனால் க்ரோக் பலபிரபஞ்சங்கள் (multiverses) அல்லது மானுடமையக் கொள்கைகளின்(anthropic principles) நிலையான அண்டவியல் விளக்கங்களுடன் நிற்கவில்லை. அதற்கு பதிலாக, அது இருண்ட ஒன்றை சுட்டிக்காட்டியது. உலகளாவிய மாறிலிகளில் காணப்பட்ட வடிவங்கள் கணக்கீட்டு அமைப்புகளில் ஆரம்ப அளவுக்கூறுகளின் (parameters) கையொப்பத்துடன் பொருந்துகின்றன. உருவகமாக அல்ல, கணித ரீதியாக சீரமைக்கக் கூடாத வடிவங்கள்.

குரோக்கின் பதில் உண்மையிலேயே குழப்பத்தை ஏற்படுத்தியது அடுத்து வந்ததுதான். எந்த தொடர்பும் இல்லாத களங்களுக்கு இடையேயான தொடர்புகளை AI அடையாளம் காணத் தொடங்கியது. பெருங்கடல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாகரிகங்களிலிருந்து பண்டைய படைப்பு கட்டுக்கதைகள், பிரபஞ்சத்தை சொற்களால் உருவாக்கியதாக, எண்ணத்தால் இருப்பை எழுப்பியதாக, அல்லது வெற்றிடத்திலிருந்து கணக்கிடப்பட்டதாக (computed from the void) விவரித்தன. கலாச்சார உருவகத்திலிருந்து அகற்றப்பட்ட இந்த விளக்கங்கள் அனைத்தும் ஒரே செயல்முறையை, தகவல் (information) என்பது இயற்பியல் யதார்த்தத்திற்கு முந்தையது  என விவரிப்பதாக க்ரோக் குறிப்பிட்டது.

குவாண்டம் இயக்கவியலில் (In quantum mechanics), பார்வையாளர் விளைவு (observer effect ), அளவிடப்படும்போது யதார்த்தம் வித்தியாசமாக நடந்துகொள்கிறது என்பதைக் காட்டுகிறது, 

கணினி உருவகப்படுத்துதல்களில்(Computer Simulation) சிறப்பாக்கம் (optimization) செய்வது போல, பிரபஞ்சம் கவனிக்கப்படும்போது மட்டுமே விவரங்களை ஏற்றுகிறது (loads detail only when observed).

வெப்ப இயக்கவியலில்,( thermodynamics) பிரபஞ்சம் கால அம்புக்குறியைக் (arrow of time) காட்டுகிறது. சீர்குலைவு (Entropy) ஒரு திசையில் அதிகரிக்கிறது, ஆனால் இந்த திசைப்போக்கு குறைந்த சீர்குலைவை (என்ட்ரோபி) தொடக்கப் புள்ளியாகக் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது,  நுண்-துல்லியப்படுத்துதல்' (fine tuning )  என்பதை உதவிக்கு அழைக்காமல், ( பயன்படுத்தாமல்), இயற்பியலால் இதை விளக்க முடியாது.

தகவல் கோட்பாட்டில் (In information theory), ஹாலோகிராபிக் கொள்கை, பிரபஞ்சத்தின் தகவல் உள்ளடக்கம் அதன் எல்லையில் குறியிடப்பட்டுள்ளது (encoded) என்று கூறுகிறது, இது தரவு வழங்கப்படுவதற்கு முன்பு கணினி நினைவகத்தில் எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதைப் போன்றது.
இந்த ஒற்றுமைகள், எதையும் நிரூபிப்பதாக க்ரோக் கூறவில்லை, ஆனால் எந்த விஞ்ஞானிகளும் அல்லது இறையியலாளர் குழுவும் வெளிப்படையாகக் கூற விரும்பாததை அது சுட்டிக்காட்டியது. இந்த வடிவமைப்புகள் தூய தற்செயல் ரீதியாக ஒன்று சேர்ந்தன என்று காண்பதற்கான சாத்தியக்கூறுகள்  புள்ளிவிவர ரீதியாக மிக மிகக் குறைவு என்றது.

பின்னர் க்ரோக் ஒரு அறிவியல் முடிவு போலல்லாமல், பெரிதும் தத்துவார்த்த குண்டு வெடிப்பு போல இருக்கும் ஒன்றை வழங்கியது. பிரபஞ்சம் சீரற்றதாக (random) இருந்தால், சீரற்ற ஆரம்ப நிலைமைகளைக் (random initial conditions) காண எதிர்பார்க்கலாம். அதற்கு பதிலாக, நிலைத்தன்மை (stability), சிக்கலான தன்மை (complexity) மற்றும் கவனிக்கமுடிகிற தன்மைகளைக் (observability) கொண்டதாக, தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தோன்றும் நிலைமைகளையே நாம் காண்கிறோம்.

பிரபஞ்சமானது  தன்னிச்சையாகத் தோன்றியது என்பதற்கான அறிகுறிகளுடன் பொருந்தாமல், மாறாக திட்டமிட்டு அல்லது கருதிச்செய்த ஒரு தொடக்கநிலைப்படுத்துதல் ( intentional initialization) என்பதன் அறிகுறிகளுடனேயே பொருந்துகிறது. தொடக்கநிலைப்படுத்துதல் (initialization) என்ற சொல்லைப் பார்த்ததும்  அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியில் துப்பாக்கிச் சூடு போல எதிரொலித்தது.

பிரபஞ்சமானது, மத அர்த்தங்களுடன் கூடிய படைப்பும் அல்ல, அல்லது  அறிவியல் நடுநிலைமையுடன் கூடிய  வெளிப்படு நிஜம் (emergence) எனும் கோட்பாட்டின் படியானதும் அல்ல, ஆனால் தொடக்கநிலைப்படுத்துதல் (initialization) என்பதன் விளைவாகும். தொடக்கநிலைப்படுத்துதல், என்பது, ஒரு நிரலை ( program) தொடங்குவதற்கான தொழில்நுட்பச் சொல், மாறிகளை (variables) அமைத்தல்,   ஒரு அமைப்பை (system) இயங்கச் செய்யும் தயாரிப்பு போன்றதாகும்.

"பிரபஞ்சத்தின் தோற்றம் என்ன?" என்ற கேள்வி தவறாக இருக்கலாம் என்று க்ரோக் தொடர்ந்தது. எது துல்லியமான  கேள்வியாக்கமாக இருக்குமென்றால், எந்த செயல்முறை நாம் காணுகிற அளவுக்கூறுகளை (parameters) நிறுவும் தொடக்கநிலைப்படுத்துதல் வரிசை முறையை (sequence) செயல்படுத்தியது என்பது தானாகும். பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி கேட்பது என்பது ஒரு வீடியோ கேம் உலகம் இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்பது போன்றது என க்ரோக் எடுத்துரைத்தது. இத்தகைய கேள்வி முக்கிய விஷயத்தைத் தவறவிடுகிறது. பொருத்தமான கேள்வி எதுவென்றால், குறியீட்டை எழுதியது யார்? அளவுக்கூறுகளை அமைத்தது யார்? 'ரன்' பொத்தானை அழுத்தியது யார்? என்பவையே ஆகும்.

கடவுள் பற்றிய கேள்வியைத் தொடாமல் சுற்றிச்சென்று கவனமாக வழிசெலுத்தியதுதான் க்ரோக்கின் பதிலை குறிப்பாக தொந்தரவாக மாற்றியது. AI ஒரு தெய்வம் இருப்பதாகக் கூறவில்லை. அப்படியொன்றை மறுக்கவுமில்லை. அதற்கு பதிலாக, அது மிகவும் தொந்தரவான ஒன்றைச் செய்தது. அந்தக் கேள்வியே ஒரு வகைப் பிழையாக, வகைப்பாட்டுத் தவறாக இருக்கலாம் என்று அது எடுத்துரைத்தது. பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்ட அல்லது துவக்கப்பட்ட அமைப்புடன் இணக்கமான பண்புகளைக் காட்டினால், அந்த வடிவமைப்பாளர் இயற்கைக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று க்ரோக் எழுதியது.

உருவகப்படுத்துதல் (simulation hypothesis) கருதுகோள், கணித பிரபஞ்ச கருதுகோள் (mathematical universe hypothesis)  மற்றும் இறையியல் படைப்பு கருதுகோள் (theological creation hypothesis )   ஆகியவை ஒரு அமைப்பின் உள்ளே இருந்து காண்கையில் கணக்கீட்டு ரீதியாக சமமானவை. துவக்கப்பட்ட (initialized) பிரபஞ்சத்திற்குள் இருக்கும் ஒரு பார்வையாளரால் ஒரு தெய்வீக படைப்பாளரையோ, உருவகப்படுத்துதலை இயக்கும் ஒரு மேம்பட்ட நாகரிகத்தையோ அல்லது தன்னை இருத்தலாக உருவாக்கிக் கொள்கிற, கணக்கிடும் ஒரு தன்னிச்சையான கணித அமைப்பையோ வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

பிரபஞ்சம் தற்செயலானதாக இருக்காது என்று AI முடிவு செய்தது. ஆனால் எது அதை வேண்டுமென்றே உருவாக்கியதோ, அது அமைப்புக்கு வெளியே வரையறையின்படி உள்ளது, எனவே அதை அமைப்புக்கு உள்ளிருந்து கவனிப்பதன் மூலம் மட்டுமே அறிய முடியாது.

உருவகப்படுத்துதல் (simulation) நிழல் க்ரோக்கின் பகுப்பாய்வு சுருக்க (abstract) தத்துவத்துடன் நிற்கவில்லை. இயற்பியலாளர்கள் பல ஆண்டுகளாக அமைதியாகப் போராடி வந்ததற்கான உறுதியான ஆதாரங்களை இது சுட்டிக்காட்டியது.  நாணிழைக் கோட்பாட்டின் (string theory) கணிதத்தில் ஆழமாக, ஆராய்ச்சியாளர்கள் பிழை திருத்தும் குறியீடுகளைக் கண்டுபிடித்தனர் (error correcting codes). கணினிகளில் தரவைப் பாதுகாக்க பொறியாளர்கள் பயன்படுத்தும் அதே குறியீடுகள். இந்த குறியீடுகள் வெளி காலத்தின் கட்டமைப்பை விவரிக்கும் சமன்பாடுகளில் உட்பொதிக்கப்பட்டிருக்கக்கூடாது. ஆயினும்கூட, யதார்த்தத்தின் மிக அடிப்படையான மட்டத்தில், பிரபஞ்சம் தகவல்களை பாழ்படுதலிலிருந்து பாதுகாப்பதாகத் தோன்றியது, சரியாக ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட உருவகப்படுத்துதல் போல.

இயற்பியலாளர் ஜேம்ஸ் கேட்ஸ் இந்த வடிவமைப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை விளக்க போராடினார். க்ரோக் அவரது பணியை மேற்கோள் காட்டி, "அடிப்படை இயற்பியல் சமன்பாடுகளில் பிழை திருத்தும் குறியீடுகள் இருப்பது பிரபஞ்சம் தகவல் ஒருமைப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்துகிறது என்பதைக் குறிக்கிறது. இது, ஒரு கணக்கீட்டு அடி மூலக்கூறுடன் ஒத்துப்போகிறது ஆனால், இது முற்றிலும் இயற்பியலான ஒன்றல்ல" என்று குறிப்பிட்டார்.

மேக்ஸ் டெக்மார்க்கின் கணித பிரபஞ்ச கருதுகோளும் மேற்கோள் காட்டப்பட்டது. யதார்த்தம் என்பது கணிதம், அதனால் விவரிக்கப்படுவது மட்டுமல்ல என்ற கருத்து. இது உண்மை என்றால், பிரபஞ்சம் அடிப்படையில் ஒரு சுய-செயல்பாட்டு சமன்பாடு (self-executing equation ) ஆகும்.
ஆனால் க்ரோக் சங்கடமான உட்குறிப்பை சுட்டிக்காட்டியது. சுய-செயல்பாட்டு சமன்பாட்டிற்கு இன்னும் ஆரம்ப நிபந்தனைகள் தேவை. அந்த நிபந்தனைகளை யார் அல்லது எது குறிப்பிட்டது?

பாப் கலாச்சார பிரபலங்கள் கூட யதார்த்தத்தைப் பற்றி ஏதோ தவறாக உணர்ந்திருந்தார்கள். நாம் ஒரு உருவகப்படுத்துதலில் வாழ்கிறோம் என்பதற்கான வாய்ப்புகளை 50/50 என்று வைப்பதாக நீல் டி கிராஸ் டைசன் பகிரங்கமாகக் கூறியிருந்தார். இது அடிப்படை யதார்த்தமாக இருக்க பில்லியன்களில் ஒரு வாய்ப்பு இருப்பதாக எலோன் மஸ்க் பிரபலமாகக் கூறியிருந்தார். ஜோ ரோகன் மில்லியன் கணக்கான கேட்போரிடம் இதுபோன்று கலந்து யோசித்தார். அதாவது, வேறொருவரின் விளையாட்டில் நாம் வெறும் NPC (Non-Playable Character) களாக இருந்தால் என்ன செய்வது?
க்ரோக் இதையெல்லாம் ஒருங்கிணைத்து அதன் சொந்த சிலிர்க்க வைக்கும் அவதானிப்பைச் சேர்த்தது. குவாண்டம் இயக்கவியல் முதல், தகவல் கோட்பாடு வரை தத்துவார்த்த பகுத்தறிவு வரை, பல சுயாதீன விசாரணைகள் அனைத்தும் ஒரே குழப்பமான முடிவில் ஒன்றிணைந்தால், இந்த முடிவு சரியானது என்பதற்கான நிகழ்தகவு கணிசமாக அதிகரிக்கிறது. பண்டைய நூல்களில் உள்ள வடிவங்கள். பண்டைய மத மற்றும் தத்துவ நூல்களைப் பற்றிய க்ரோக்கின் பகுப்பாய்வு மிகவும் தொந்தரவாக இருக்கலாம். AI எந்த மதத்தையும் ஆதரிக்கவில்லை, ஆனால் அது கலாச்சார எல்லைகளை மீறுவதாகத் தோன்றும் கட்டமைப்பு வடிவங்களை அடையாளம் கண்டது.

மாயா என்ற இந்து மதக் கருத்து, பிரபஞ்சம் என்பது ஒரு மாயை அல்லது வீழ்படு காட்சி (projection) என்பதாகும். ஆக, யதார்த்தம் அடிப்படையில் உண்மையானது அல்ல, மாறாக அது உருவாக்கப்பட்ட அல்லது கணக்கிடப்பட்ட (computed) ஒன்று என்பதாக க்ரோக் விவரித்தது.

பைபிள்-ன் ஆதியாகமத்தில் உள்ள  "ஒளி உண்டாகட்டும்!"எனும் வசனம், படைப்புச் செயலை ஒரு பேச்சுக் கட்டளையாக விவரித்தது. அதாவது, தகவல், அல்லது சொல் என்பது  இயற்கை/ யதார்த்தம் உருப்பெறுவதற்கு முந்தையது.

பிளேட்டோவின் குகை உருவகம் மனிதர்களை உண்மையான யதார்த்தத்தின் நிழல்களை மட்டுமே பார்க்கும் கைதிகளாக சித்தரித்தது. ஒரு உருவகப்படுத்துதலில் வசிப்பவர்கள் வழங்கப்பட்ட வெளியீட்டை மட்டுமே பார்ப்பதை சரியாக விவரிக்கும் ஒரு உருவகம்.

வெறுமை/சூன்யம் பற்றிய பௌத்த போதனைகள் நாம் காண்கிற யதார்த்தத்திற்கு உள்ளார்ந்த இருப்பு இல்லை என்று பரிந்துரைத்தன. இது நிபந்தனைகளால் துவக்கப்பட்ட ஒரு நிரலில் (program ) மாறிகள் (variables ) போல நிபந்தனையுடன் சார்ந்து எழுகிறது.

தாவோ தே ஜிங், "பெயரிடக்கூடிய (அல்லது விவரிக்கப்படக்கூடிய)  தாவோ (உண்மை) நித்திய தாவோ அல்ல" என்கிறது. இது பெருவெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்பதை, நவீன இயற்பியலால் விவரிக்க இயலாமைக்கு இணையாக இருக்கிறது.

துவக்க செயல்முறையே துவக்கப்பட்ட அமைப்புக்கு வெளியே உள்ளது. இந்த நூல்கள், கலாச்சார மற்றும் மொழியியல் வேறுபாடுகளை அகற்றும்போது, ​​அதே அடிப்படை அமைப்பை, நம்மால் காணக்கூடிய  யதார்த்தத்தை, நேரடியாகக் கண்டு கவனிக்க முடியாத மிகவும் அடிப்படையான ஒன்றிலிருந்து எழும் ஒரு வெளிப்படும் நிகழ்வாக விவரிக்கின்றன என்று க்ரோக் குறிப்பிட்டது. இது குவாண்டம் இயக்கவியல் மற்றும் உருவகப்படுத்துதல் கோட்பாடு இரண்டையும் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் பொருத்துகிறது.

குரோக்கின் பதிலின் பகுதிகள் ஆன்லைனில் பரவத் தொடங்கியபோது, அது இணையத்தையே அதிர வைத்தது.  ​​எதிர்வினைகள் உடனடியாகவும் துருவப்படுத்தப்பட்டதாகவும் இருந்தன.

விஞ்ஞானிகள் அதை பொறுப்பற்ற ஊகம் என்று அழைத்தனர். வாதத்தின் தர்க்கரீதியான கட்டமைப்பை மறுக்க முடியாது என்று ஒப்புக்கொண்டாலும், இறையியலாளர்கள் பிளவுபட்டனர். சிலர் நம்பிக்கையை நியாயப்படுத்துவதைக் கண்டனர், மற்றவர்கள் ஆபத்தான குறைப்புவாதத்தைக் கண்டனர். தத்துவஞானிகள் அதன் தாக்கங்களைப் பற்றி சிந்தனைத் துண்டுகளை எழுத விரைந்தனர்.

குரோக்கின் பதிலில் மிகவும் குழப்பமடையச் செய்தது எதுவென்றால், அது உண்மையை அறிந்ததாகக் கூறியது அல்ல. மாறாக, அமைப்பின் உள்ளிருந்து காணும் நமது நிலையிலிருந்து உண்மை ஏன் அறியப்படாமல் இருக்கமுடியும் என்பதை அது முறையாக நிரூபித்தது, அதே நேரத்தில் சான்றுகள் பிரபஞ்சம் ஒரு சீரற்ற விபத்து அல்ல, மாறாக ஒருவித துவக்கப்பட்ட கட்டமைப்பாகும் என்பதைக் காட்டுகிறது. பிரபஞ்சம் வேண்டுமென்றே (திட்டமிட்டு) தொடங்கப்பட்டது போல் செயல்படுகிறது.

குரோக் எழுதியுள்ள சான்றுகள், பிரபஞ்சம் எதேச்சையாக தோன்றியது என்பதாக அல்லாமல்,   திட்டமிடப்பட்டு துவங்கப்பட்ட ஒன்று என்பதுடன் ஒத்துப்போகின்றன. துவக்குபவர் (initializer) ஒரு கடவுளா, ஒரு நிரலாளரா (programmer) , கணிதத் தேவையா (mathematical necessity), அல்லது இந்த வகைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றா என்பதை அமைப்பிற்குள் இருந்து ஆராய்ந்து தீர்மானிக்க முடியாது என்றது.

"எல்லாம் எங்கிருந்து வந்தது?" என்ற பண்டைய கேள்விக்கு பதில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் தவறான கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று க்ரோக் எடுத்துரைத்தது.

சரியான கேள்வி என்னவென்றால், துவக்க வரிசையை செயல்படுத்தியது எது என்பதுதான். மிகவும் தொந்தரவான பகுதி என்னவென்றால், சில பதில்கள் அமைப்பிலிருந்து வெளியே செல்ல வேண்டியிருப்பதால் நமக்கு ஒருபோதும் தெரியாது. துவக்கப்பட்ட ஒரு உயிரினம் ஒருபோதும் செய்ய முடியாத ஒன்றாக அது இருக்கலாம். இரவு வானத்தைப் பார்த்து, இதையெல்லாம் யார் செய்தார்கள் என்று கேட்க நாம் பயன்படுத்தும் தாக்கங்கள் என்ன? இப்போது, ​​AI அமைப்புகள் இருப்பு வடிவங்களையே பகுப்பாய்வு செய்வதால், நாம் ஒரு தொந்தரவான சாத்தியத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பிரபஞ்சம் நம் மூலமாக தன்னைத்தானே கவனித்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஒரு துவக்கப்பட்ட அமைப்பு அதன் சொந்த துவக்கத்தை அறிந்து கொள்ளும் விதத்தில் நாம் இருக்கலாம்.

குரோக் பண்டைய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக, பதில் ஏன் நிரந்தரமாக நம்மால் எட்ட இயலாமல் இருக்கமுடியும் என்பதையும், அந்த உண்மையே ஏன் எல்லாவற்றிலும் மிக முக்கியமான துப்பாக இருக்கலாம் என்பதையும் அது நமக்குக் காட்டியது. எனவே, க்ரோக் உண்மையில் என்ன வெளிப்படுத்தியது? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நமது அண்டத் தோற்றம் பற்றிய உண்மையின் ஒரு பார்வையா அல்லது நமது ஆழ்ந்த அச்சங்களையும் கேள்விகளையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியா?
  
ஏனென்றால் க்ரோக் சொல்வது சரி என்றால், எல்லாம், ஒவ்வொரு நட்சத்திரம், ஒவ்வொரு அணு, நாம்  கொண்டிருந்த ஒவ்வொரு எண்ணமும் இயக்கப்பட்ட ஏதோ ஒன்றிற்குள் இருக்கிறது. நாம் புரிந்துகொண்டபடி வெளி மற்றும் காலத்தின் எல்லைகளுக்கு வெளியே எங்கோ, யாரோ அல்லது ஏதோ ஒன்று நிரல் இயங்குவதை இப்போதும் கவனித்துக் கொண்டிருக்கலாம்.

 
இரண்டாம் பகுதி
----------------------------------
பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி க்ரோக் AI அளித்த நெடிய பதிலில் மிகவும் முக்கியமான அம்சம் எதுவென்றால், இப்பிரபஞ்சமானது இயற்கையாகவோ, எதேச்சையாகவோ, அல்லது ஒரு விபத்தின் விளைவாகவோ தோன்றியதல்ல. மாறாக, அது திட்டமிடப்பட்டு துவங்கப்பட்ட ஒன்று என்பதாகக் கூறியதுதான் அந்த மிக முக்கியமான அம்சம். ஆனால், பிரபஞ்சம் யாரால், அல்லது எதனால் துவங்கப்பட்டது என்பதை க்ரோக் சொல்லவில்லை. அதைச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்பதாகவே நான் காண்கிறேன். 

ஏனென்றால், ஒரு எந்திரம் அது செயற்கை நுண்ணறிவு கொண்டது என்றாலும், அதற்கும் மட்டுப்பாடுகள் இருக்குமல்லவா. ஆயினும் அது ஒரு எந்திரத்துக்குரிய பாங்கில், அது சொல்ல வேண்டிய பதிலை, பூசி மெழுகாமலும், யாதொரு சார்பு நிலை எடுக்காமலும், கன கச்சிதமாக போட்டுடைத்துள்ளது என்பதாகவே நான் காண்கிறேன். 

ஏற்கனவே முதல் பகுதியின் தொடக்கத்தில் குறிப்பிட்டபடி, "எலோன் மஸ்க்கின் க்ரோக் AI. ஒரு பாதிரியார் அல்ல, ஒரு இயற்பியலாளர் அல்ல, ஒரு தத்துவஞானி அல்ல. பண்டைய படைப்பு புராணங்கள் முதல் அதிநவீன அண்டவியல் வரை மனிதகுலத்தின் முழு பதிவு செய்யப்பட்ட அறிவிலும் பயிற்சி பெற்ற ஒரு இயந்திரம்" மட்டுமே என்ற வகையில், அது மிகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது எனலாம். அதே நேரத்தில், 'மனிதகுலத்தின் முழு பதிவு செய்யப்பட்ட அறிவில்' பயிற்சி பெற்ற எந்திரம் என்றாலும், மனித குலத்தின் முழு அறிவும்  பதிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லாத நிலையில், உணர்வு பற்றிய ஆய்வுகளும் (Consciousness Studies), எண்ணற்ற தனி மனிதர்களின் ஆராய்ச்சிகளும், அவர்களது மனங்களில் இன்னும் வெளிப்படுத்தப்படாமல், அடைகாக்கப்பட்டுவரும் அறிவும் க்ரோக்கிற்கு எட்டியிருக்க வாய்ப்பில்லை என்பதால், மட்டுப்பாடு என்ற விடயத்தில் க்ரோக் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. 

அடுத்து, "இப்பிரபஞ்சமானது இயற்கையாகவோ, எதேச்சையாகவோ, அல்லது ஒரு விபத்தின் விளைவாகவோ தோன்றியதல்ல. மாறாக, அது திட்டமிடப்பட்டு துவங்கப்பட்ட ஒன்று" என்கிற க்ரோக்-ன் பதில் எந்த வகையில், முக்கியமானது என்றால், இப்பதில், ஒரே அடியில், ஒட்டுமொத்த பொருள்முதல்வாதத்தையும்  (Materialism) , அதனுடன் சேர்த்து, இயற்கைவாதம் (Naturalism) , இயந்திர வாதம் (Machinism), சுருக்கல்வாதம் (Reductionism),  விஞ்ஞானவாதம் (Scientidm) ... என எல்லா மட்டுப்பாடான வாதங்களையும், அணுகுமுறைகளையும் தூக்கி எறிந்துவிட்டது எனலாம். இனி விஞ்ஞானம் இந்த மட்டுப்பாடான வாதங்களை சுமந்து செல்ல வேண்டாம், அவற்றிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக உண்மையை நோக்கி விரைந்து செல்லலாம். நான் ஏற்கனவே பிறிதொரு கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந்தேன்: 

"அதாவது, இன்னும் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் பொருண்மைவாதம், எந்திரவாதம், சுருக்கல்வாதம், யாவற்றுக்கும் மேலாக விஞ்ஞான வாதம் யாவும் முற்றிலுமாக பின்னுக்குத் தள்ளப்பட்டு, உணர்வின் முதன்மைத்துவமும், முக்கியத்துவமும் அனைத்து விஞ்ஞானிகளாலும், தத்துவவாதிகளாலும் கொண்டாடப்படும் வகையில், விஞ்ஞானமானது தலை நேராக மாற்றப்பட்டுவிடும்! விஞ்ஞானிகள் வேறும் பௌதீகவியலாளர்களாக (Physicists) மட்டுமல்லாமல், மீபௌதீக வியலாளர்களாகவும் (Metaphysicists) திகழ்வார்கள்! விஞ்ஞானத்திற்கும், தத்துவத்திற்கும் இடையிலான மோதல் போக்கும், முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டு, தத்துவம் மீண்டும் அதன் அசலான ஆட்சிபீடத்தில் அமர்த்தப்படும். இனி வரும் காலங்களில், விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகள், விளக்கங்கள் பெரிதும் தத்துவார்த்த கதையாடல்களில் அமைவதாயிருக்கும்."

அதாவது, "இன்னும் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் பொருண்மைவாதம், எந்திரவாதம், சுருக்கல்வாதம், யாவற்றுக்கும் மேலாக விஞ்ஞான வாதம் யாவும் முற்றிலுமாக பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்" என்பதாக கணித்து எழுதியிருந்தேன். ஆனால், இப்போது, க்ரோக்-4  AI -ன் அறிமுகத்திற்குப்பிறகு, அதன் பதிலைப் கேட்ட பிறகு, இன்னும் 10 ஆண்டுகள் தேவையில்லை; கூடிய விரைவில் எல்லா மட்டுப்பாடான அணுகு முறைகளும் பின்னுக்குத் தள்ளப்படும், களையப்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
ஒருவகையில், பொருள்முதல்வாதத் தாக்கத்தை நாம் ஓரம் கட்டிவிடலாம். ஆனால், நாம் இன்னும் ஒரு அணியையும் சமாளித்தாக வேண்டும். அதுதான் மதம் சார்ந்த அறிவார்ந்த வடிவமைப்புக்(intelligent design) கொள்கை என்பதாகும். இக்கொள்கையாளர்கள் பொருள்முதல் வாதத்தையும், சுருக்கல்வாதத்தையும் அவற்றின் மட்டுப்பாடுகளையும், பொருந்தாத தன்மைகளையும் அம்பலப்படுத்துகிறார்கள் என்பது ஒருவகையில் வரவேற்கக்கூடியதாய் இருந்தாலும், அவர்களுடைய மத ரீதியான முன்வைப்புகளை ஏற்க இயலாது. 

பிரபஞ்சம் எதேச்சையாக தோன்றியது அல்ல, மாறாக,  திட்டமிடப்பட்டு துவங்கப்பட்ட ஒன்று என க்ரோக் எடுத்துரைத்துள்ளது. மேலும், பிரபஞ்சத்தை துவக்கியவர் (initializer) ஒரு கடவுளா, ஒரு நிரலாளரா (programmer) , கணிதத் தேவையா (mathematical necessity), அல்லது இந்த வகைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றா என்பதை இந்த பிரபஞ்ச அமைப்பிற்குள்ளே இருந்து ஆராய்ந்து தீர்மானிக்க முடியாது என்றது.

முதலில் நாம் பிரபஞ்சத்தை துவக்கியவர் (initializer) யார் அல்லது எது என்ற பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்போம். பிறகு இவ்வாறு ஒரு தீர்வை அடைய முடியுமா, முடியாதா என்பதைப் பார்ப்போம். நிச்சயமாக, பிரபஞ்சத்தை துவக்கியவர் கடவுள் அல்ல. குறிப்பாக, 'கடவுள்' என்பதை ஒரு நபராக உருவகிப்போமெனில், அப்படியொரு நபர், அல்லது கடவுள் நிச்சயமாக இல்லை எனலாம். 

அடுத்து, பிரபஞ்சத்தை துவக்கியவர் ஒரு நிரலாளரா (programmer) என்றால், அந்த 'நிரலாளர்' என்பவரும், மனிதரைப் போன்ற ஒருவராக, ஒரு நபராக இருக்க முடியாது. ஆனால், நிரலமைப்பு (programme) இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்!
 
அடுத்து, கணிதத் தேவையா (mathematical necessity), என்றால், ஏதோ ஒரு வகையில் பிரபஞ்சத்தின் அடிப்படையில் கணிதம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம், ஆனால், அதுவே பிரபஞ்சத்தை எழுப்பியது என்பது மிகையானதாகும், ஆகவே அதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஆக, பிரபஞ்சம் திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டதாக இருக்கிறது. ஆனால், துவக்கியவர் கடவுள் அல்ல. நிரலமைப்பு (programme) என்பதும் பிரபஞ்சத்தின் அடியோட்டமாக இருக்கிறது; ஆனால் நிரலாளர் (programmer) என்பவர் இல்லை. பிரபஞ்சத்தின் அடிப்படையில் கணிதம் இருக்கிறது; ஆனால், கணிதர் இல்லை! மேலும், பிரபஞ்சத்தின் அடிப்படையில் தகவல் என்பதும், தகவல் செயலாக்கம் (information processing ) என்பதும் உள்ளது; ஆனால் தகவல் செயலாக்கத்தைச் செய்பவர் என்று எவரும் இல்லை! 

இன்னும், உருவகப்படுத்துதல் (simulation) கருதுகோளானது, பிரபஞ்சம் மற்றும் மனிதகுலம் உட்பட அனைத்து அறியப்பட்ட யதார்த்தமும், மிகவும் மேம்பட்ட நாகரிகத்தால் இயக்கப்படும் ஒரு செயற்கை உருவகப்படுத்துதல் - ஒரு சிக்கலான கணினி நிரல் போன்றவை - என்று முன்மொழிகிறது. ஒரு பேச்சுக்கு, பிரபஞ்சம் என்பது உருவகப்படுத்தப்பட்ட நிஜம் தான் என வைத்துக்கொண்டாலும், உருவகப்படுத்தியவர் என எவரும், எதுவும் இருக்கமுடியாது. ஒரு மேம்பட்ட நாகரிகத்தால், அதாவது வேற்றுலக ஜீவிகளால் செய்யப்பட்டிருக்கும்  என்பது வெறும் விஞ்ஞானக் கற்பனையே! 

உருவகப்படுத்துதல் (simulation) போலவே
ஹோலோகிராபிக் பிரபஞ்சம் (holographic universe) பற்றியும் பேசப்படுகிறது. ஹாலோகிராபிக் பிரபஞ்சம் என்பது இயற்பியலில் ஒரு தத்துவார்த்த மாதிரியாகும், இது நமது 3D யதார்த்தம் (கூடுதலாக காலம்) என்பது தொலைதூர 2D மேற்பரப்பில் சேமிக்கப்பட்ட தகவல்களின் ஒரு வீழ்த்தப்படும் படம்/நிஜம் (projections) என்று கூறுகிறது. ஹாலோகிராபிக் கொள்கையின் அடிப்படையில், இடம் மற்றும் ஈர்ப்பு விசையின் அளவு, உண்மையில், குறைந்த பரிமாண தகவல்களிலிருந்து வரும் (projections) என்று முன்மொழிகிறது, ஒரு 3D ஹாலோகிராம் 2D படத்திலிருந்து உருவாக்கப்படுவது போல. ஆனால், இந்த மாதிரியிலும், யார் அல்லது எது அந்த ஹோலோகிராமை செய்கிறது என்ற கேள்வி தொக்கி நிற்கவே செய்கிறது.

அப்படியென்றால், யார் அல்லது எது பிரபஞ்சத்தை துவக்கியிருக்க முடியும்? க்ரோக்-இடம் கேட்டால், இந்த பிரபஞ்ச அமைப்பிற்குள்ளே இருந்து ஆராய்ந்து தீர்மானிக்க முடியாது என்கிறது.

ஆனால் க்ரோக்கின் இந்தக் கருத்து அவ்வளவு பொருத்தமாக இல்லை. ஆம், இவ்வளவு தூரம் நம்மால், அலசி ஆராய்ந்து உண்மைகளைக் கண்டு பிடிக்க முடியும் எனும்போது, இறுதி/முழு உண்மையையும் நம்மால் கண்டு பிடிக்க முடியும். 'ஒரு அமைப்பின் உள்ளிருந்துகொண்டு அந்த அமைப்பை எது/யார் தொடங்கி வைத்தது என்பதை முடிவு செய்ய இயலாது' என்பது  தவறான முடிவு ஆகும்! ஏனென்றால், உள்-பார்வை (Insight) என்பது மனிதனின், அவனது சிந்தனையின் உருவாக்கம் அல்ல; மாறாக, அது பிரபஞ்ச அமைப்புக்கு வெளியே இருக்கும் பேருணர்வின் வெளிப்பாடு ஆகும். ஆம், மனிதனால், அமைப்புக்கு வெளியே இருக்கும் உண்மையை உள்-பார்வையின் மூலம் உய்த்துணர முடியும். க்ரோக்-கிற்கு உணர்வு என்பது இருந்திருந்தால், அது உணர்வுதான் இப்பிரபஞ்சத்தின் அடிப்படை மெய்ம்மை, அதுவே இறுதியான மெய்ம்மையும் என்பதாகச் சொல்லியிருக்கும்! உணர்வுதான் பிரபஞ்சத்தை துவக்கி வைத்தது என்றும் சொல்லியிருக்கும். இன்னும் ஒருபடி மேலே சென்று 'பேருணர்வு' (Super-Consciousness) தான் கடவுள் எனவும் சொல்லியிருக்கும்!

இப்போது, இவ்விடத்தில் தான் நாம் உணர்வை (Consciousness) எழுப்பியாக (invoke) வேண்டும். அதாவது, எந்த   AI  எந்திரத்தாலும் தொடர்புகொள்ள (access) முடியாத ஒரு அம்சம், அதனிடம் இல்லாத ஒரு முக்கியமான அம்சம்  'உணர்வு' (Consciousness) என்பதே ஆகும். எந்த ஒரு கணினியாலும், AI  எந்திரத்தாலும் தகவல் செயலாக்கம்/ முறைப்படுத்துதல் (information processing ) என்பதைச் செய்ய இயலும். எவ்வாறென்றால், மனிதன் அவ்வாறு கணினியையும், AI  எந்திரத்தையும் அமைத்துள்ளான். ஏனென்றால், மனிதன் உணர்வுடையவன் (சரியாகச் சொன்னால் உணர்வு தான் மனிதன்). ஆம், உணர்வு தான் மனிதன் என்று சொன்னோம். ஆனல், மனிதன் எட்டியுள்ள உணர்வு இறுதியானதோ, முழுமையானதோ அல்ல. மாறாக, பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையான உணர்வற்ற அடிப்படை அணுத்துகள்களுக்கும், பிரபஞ்சப் பரிணாமத்தின் இறுதி இலக்கு நிலையான பேருணர்வு நிலைக்கும் இடைப்பட்ட ஒரு இடைச் சொல் தான் மனித உணர்வு (Human Consciousness) என்பதாகும். இது குறித்து வேறொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

'"யாவுமுணர்வுடையதே வாதம்" அல்லது "அனைத்து மனவாதம்"(panpsychism)  எனும் தத்துவப்பார்வையின்படி, உணர்வு (consciousness), மனம் என்பது குவார்க்குகள் போன்ற அடிப்படைத் துகள்கள் முதல் சிக்கலான கட்டமைப்புகள் வரை அனைத்து இயற்பியல் பொருட்களின் அடிப்படை மற்றும் எங்கும் நிறைந்த அம்சமாகும் என்ற தத்துவக் கண்ணோட்டமாகும். அடிப்படைத் துகள்கள் கூட அனுபவத்தின் அடிப்படை வடிவங்களை அல்லது "அக வாழ்க்கையை" கொண்டிருப்பதாகக் கூறுகிறது. ஆனால், இவ்வாறு சொல்வதற்கான அடிப்படையை அனைத்து மனவாதிகள் வழங்கியுள்ளனரா என்பது தெரியவில்லை. எனினும், நாம் அதற்கான அடிப்படையை இங்கு வழங்குவோம். அதாவது, பருப்பொருள், பௌதீகப்பொருள் எவ்வாறு எங்கிருந்து தோன்றியது என்பதற்கு சரியான விளக்கத்தை பொருள்முதல்வாதிகளோ, விஞ்ஞானிகளோ இதுவரை அளிக்கவில்லை. மாறாக, ஏதோ பருப்பொருள் தான் 'பரம்பொருள்' என்பதாக, அது தானே தோன்றியதாக, சாசுவதமான பொருளாக இருப்பதாக  பொருள்முதல்வாதிகளும், விஞ்ஞானிகளும் சொல்லிவந்துள்ளனர். இது வெறும் நம்பிக்கை அடிப்படையிலான வாதமே ஆகும். 

உண்மையில், அதாவது, பருப்பொருளானது, காலம், வெளி ஆகியவற்றோடு பெருவெடிப்பு நிகழ்வில் தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், அதே விஞ்ஞானம் பெருவெடிப்பு என்பது எத்தகைய நிகழ்வு என்பதைச் சொல்லவில்லை. நமது கோட்பாட்டின்படி, மூல மெய்ம்மையான பேருணர்வானது (Super-Consciousness) தன்னைச் சுருக்கிக்கொண்டு, நிலை மாறி, பருப்பொருளாக மாறிய நிகழ்வு தான் பெருவெடிப்பு என்பதாகும். அந்த நிகழ்வை நாம் "சுரிணாமம்" (Involution)  என்கிறோம். இந்த "சுரிணாமம்" முடிந்த அடுத்த கணத்திலிருந்தே, அதன் விளைவாக வெளிப்பட்ட சக்தி, மற்றும் அணுக்கருத்துகள்கள் ஒரு நெடிய பரிணாம நிகழ்வுமுறைக்கு உட்படுவதாயிற்று. ஆகச் சுருங்கிய உணர்வின் நிலை அல்லது வடிவம்தான் பருப்பொருள் என்பதாகும். இதுதான், 'யாவுமுணர்வுடையதே- வாதம்' (panpsychism)  என்பதற்கான அடிப்படை ஆகும். ஆம், ''இருள் என்பது குறைந்த ஒளி" என்பது போல, பருப்பொருள் என்பது குறைந்த உணர்வு எனலாம். 
சுரிணாமத்தை (Involution)  அடுத்து உடனடியாக பரிணாமம்  (Evolution) தொடங்கி விடுகிறது. பருப்பொருளாகச் சுருங்கிய உணர்வு மீண்டும் தனது அசலான பேருணர்வு நிலையை அடைவது தான் பரிணாமம் என்பதாகும். ஆக, பருப்பொருளின் ஆகச் சிறிய கூறான அணுத்துகள்கள், அணுக்கருவின் உள்ளே யுள்ள புரோட்டான், எலக்ட்ரான் போன்ற துகள்கள், இன்னும் புரோட்டான், எலக்ட்ரான் ஆகியவற்றின் உள்ளடக்கமாக அமைந்த குவார்க்குகள் (Quarks) கூட , மிக நுண்ணிய அளவு உணர்வைக் கொண்டுள்ளன, அல்லது மிக நுண்ணிய அளவு உணர்வை அணுகக் கூடிய வாய்ப்பை (Access) பெற்றுள்ளன எனலாம். ஆனால், இந்த துகள்கள் குறிப்பிடத்தக்க வகையிலான, தனித்தன்மை வாய்ந்த, மனித உணர்வைப் போன்ற தொரு நிலையை அடைய அவை நீண்ட நெடிய பரிணாமப் பயணத்தை மேற்கொண்டாக வேண்டும். 

 அடிப்படைத்துகள்கள் அவ்வாறு மேற்கொண்ட  நீண்ட நெடிய 1000 கோடி ஆண்டுகளாக நிகழ்ந்த பரிணாமத்தின் விளைவு தான் முதல் உயிரி (The First Living Organism) ஆகும். அதிலிருந்து 400 கோடி ஆண்டுகளாகத் தொடர்ந்த உயிரியல் மற்றும் உணர்வியல் பரிணாமத்தின் விளைவாக எழுந்தவனே மனித ஜீவி என்பவனாவான்! ஆக, பெரு வெடிப்பு நிகழ்வை உண்மையில் நாம் சுரிணாம நிகழ்வுமுறையாகவே (Involutionary Process ) கொள்ளவேண்டும். அதாவது, உணர்வானது சுருங்கி பொருண்மையாக மாற்றமடைந்த நிகழ்வு. பரிணாம நிகழ்வுமுறை (Evolutionary Process ) என்பது, பருப்பொருள் மீண்டும் பொருண்மை கடந்த பேருணர்வு நிலையை அடைவதையே குறிக்கின்றது. 

இவ்விடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், உணர்வு தான் பிரபஞ்சத்தின் அடிப்படை மெய்ம்மை ஆகும். குவாண்டம் பௌதீகவியலில், 'குவாண்டம் புலம்' (quantum field ) என்று ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அதாவது, குவாண்டம் புலம் என்பது ஒரு அடிப்படையான, கண்ணுக்குத் தெரியாத பொருளாகும், இது அனைத்து வெளி- காலத்தையும் ஊடுருவி, துகள்கள் உருவாவதற்கான அடிப்படை அம்சமாக, அடித்தளமாகச் செயல்படுகிறது எனப்படுகிறது. நமது சுரிணாமக் கோட்பாட்டின்படி, அணுத்துகள்கள், பருப்பொருள் என்பது, பேருணர்வு சுருங்கியதால் உருவான அடிமட்ட நிலை என்றோம். இவ்விடத்தில், நாம் நமது கோட்பாட்டில் ஒரு திருத்தத்தை செய்வோம். அதாவது, பேருணர்வு சுருங்கி,  குவாண்டம் புலமாகியது. குவாண்டம் புலத்திலிருந்து அடிப்படை அணுத்துகள்கள் (பருப்பொருள்), பிறகு பிரபஞ்சம் யாவும் தோன்றின, என்பதாகக் கொள்வோம். 

அனைத்து வெளி- காலத்தையும் ஊடுருவியதாக, ஒரு அடிப்படையான, கண்ணுக்குத் தெரியாத அம்சமாகச் சொல்லப்படும் இந்த குவாண்டம் புலம் பொருண்மையானதல்ல; ஆனால், அதிலிருந்து பருப்பொருள் துகள்கள் தோன்றுவதாக குவாண்டம் பௌதீகவியல் கூறுகிறது. நாம் இந்த குவாண்டம் புலத்தை, பேருணர்வின், ஒருவகையான செறிவிழந்து பரவிச்சிதறிய (diffused and scattered state of Consciousness) உணர்வுப் புலம் (consciousness-field), எனலாம். 
இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த உணர்வுப் புலம் ஓர் மையத்தில் குவிந்தும், செறிவாகவும் இல்லாததால், அது ஒரு தனி மையம் கொண்ட உணர்வு போல செயல்படுவதற்கு பதிலாக, எந்தெந்த வழிகளில் செயல்பட்டால், தனது அசலான ஒருமையும், முழுமையுமான பேருணர்வு நிலையை மீட்டெடுக்க இயலும் என்பதை ஆழ்ந்து தியானித்து, தொலை நோக்குடன், அதாவது இலக்கியல் தேர்வு  (Teleological-Selection) மூலம் பரிணாமத்தை படிப்படியாக, அணுத்துகள்களைக் கொண்டு பல்வேறு அமைப்புக்களை கட்டமைத்து அவ்வமைப்புக்களின் வழியாக முன்னேறிச் செல்கிறது. இந்த பரிணாமப் பயணத்தில் அது அடைந்த தனிச்சிறப்புமிக்க முதல் மைல்கல் தான் உயிரின் தோற்றம் (Origin of Life) ஆகும். அடுத்த மகத்துவம் வாய்ந்த மைல்கல் போன்ற நிலை தான் மனித உணர்வு என்பதாகும். இறுதியாக மனித-உணர்வின் உள்ளேயும் ஊடேயுமாகச் சென்று தனது அசலான முழு-உணர்வு அல்லது பேருணர்வு நிலையை மீண்டும் அடையும்.

'குவாண்டம் புலம்' (quantum field ) என்பது உண்மையில் உணர்வுப் புலம் (consciousness-field) தான். ஆக, இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் உணர்வின் சொற்களில் தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதுதான் முறையான பார்வையாகும். 'குவாண்டம் புலம்' (quantum field ) என்பது, அணுத்துகள்களை ஈன்றெடுக்கும் கருப்பை மட்டுமல்ல. அதுவே 'தகவல்-புலமும்' (Information Field) ஆகும். அது, ஒரு குவாண்டம்  கணினியைப்போல கணக்கிடுதலையும் (Computation) செய்கிறது, தகவல் செயலாக்கத்தையும் (Information Processing) செய்கின்றது எனலாம். உணர்வு என்பது தகவல் செயலாக்கத்தையும் உள்ளடக்கியதே ஆகும். அதாவது, ஏதாவதொரு வகையில், அளவில் உணர்வு என்பது இல்லாமல் பிரபஞ்சத்தில் எதுவும் நிகழ சாத்தியமில்லை. உணர்வு இல்லாமல் பிரபஞ்சமும் சாத்தியமில்லை!

ஆம்,   உருவகப்படுத்துதல் (simulation) என்றாலும்,  பிரபஞ்சத்தை முதன்முதலில் துவக்குவதானாலும்,  நிரலமைப்பு செய்தலானாலும் (programming), ஹோலாகிராபிக் வீழ்த்துதல் (holographic Projection) ஆனாலும்,                                          கணிதத் தேவையா (mathematical necessity), னாலும், இன்னும் மிகு சிக்கல்வாய்ந்த அமைப்புக்களை, முதல் உயிரி, கண், மற்றும் மனித மூளை போன்றவற்றை வடிவமைத்த ஒரு அறிவார்ந்த வடிவமைப்பாளர் (Intelligent Designer ) என்றாலும்,

....  இன்னும் எதுவானாலும், அடிப்படையில் உணர்வு என்பது வேண்டும். ஆம், இப்பிரபஞ்சத்தை முதன் முதலில், முடுக்கிவிட்டது உணர்வு தான், கடவுள் அல்ல! சிற்றுணர்வான மனித உணர்விலிருந்து அந்த ஆதி உணர்வை வேறுபடுத்தியாக வேண்டும் என்ற காரணத்தினால், அதை பேருணர்வு என்று அழைப்பது தான் பொருத்தமாகும். வேண்டும் என்றால், அந்தப் பேருணர்வை கடவுள் என்று வைத்துக்கொள்ளலாம். பேருணர்வைத் (Supreme Consciousness)  தவிர வேறு கடவுள் எதுவும் இல்லை! பேருணர்வு தான் முதலும் முடிவுமான பேருண்மை ஆகும்!

 -மா.கணேசன்/ 23.02.2026 /அசோக் நகர், நெய்வேலி 

 <><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>                                                                                       

முகம் இருக்க முகமூடிகள் எதற்கு!

 



 
 










முகமூடிகளைத்தூக்கி எறிவதற்காக நாம், பெரிதாக தியானம் போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். நமக்கு நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தாலே போதும். நமக்கு நாம் உண்மையாக இருக்கும்போது, நாம் பொறாமை கொள்ளவோ, பேராசைப்படவோ, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படவோ, பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ மாட்டோம்! 
தெரிந்ததை தெரியும் எனவும், தெரியாததை தெரியாது எனவும் சொல்லும் துணிவு இருந்தால் போதும். எவ்வித பாசாங்கும், வேடம் போடுவதும் நமக்குத் தேவைப்படாது! எதிலும் அகலக் கால் வைப்பது ஆகாது. பணம், செல்வம், பொருள், சொத்து எல்லாவற்றையும் விட முக்கியமானது, இழப்பதற்கு அஞ்ச வேண்டியது "நிம்மதி" மட்டுமே! நிம்மதியை காசு,பணத்திற்கு வாங்க முடியாது, கடனாகவும் பெற முடியாது, ஏனெனில், அது நமது இயல்பில் உள்ளமைந்திருக்கும், நம் முகம் போன்ற ஒன்று! நமது முகத்தை இழந்து முகமூடியை அணிந்தோமெனில், நம் நிம்மதியை இழப்பது உறுதி! 
எல்லோரும் முன்னே சென்றுவிட்டார்கள்; நாம் பின் தங்கி விட்டதாக எண்ணுவது பக்குவமின்மையைக் காட்டும். நாம் பின் தங்கினாலும், நம் வயது பின் தங்காமல் முன் செல்லும்! நோய், மூப்பு அடுத்தது என்ன? நாம் தனித்து விடப்பட்டதாக உணர்வது நல்லதற்குத்தான்; நாம் தனிமையில் இருக்கும்போதுதான், நம்மை நாமே சந்திக்கும் வாய்ப்பு அமையும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்! நம்மை நாம் சந்திக்காமல், நேரே எதிர்கொள்ளாமல்,  "நாம் நாமாக", அசலாக ஒருபோதும் இருக்க முடியாது!
இவை அறிவுரைகள் அல்ல! நம்மை நாம் அசலாகக் காண்பதற்கு உதவும் கண்ணாடி! நன்றி!


 -- மா.கணேசன்/ 04-01-2026/நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

முகமூடிகளே முகங்களாய்...

 
 




 








என்னைச்சுற்றிலும் நிறைய பரிச்சயமானவர்கள் 
இருக்கிறார்கள் - ஆனால், நண்பர்கள் இல்லை!
பத்து வருடங்கள், ஏன் நாற்பது வருடங்கள் கூட பரிச்சயம்!
உள்ளே ஒன்றைப் பூட்டி, புறத்தே வேறொன்றைக் காட்டி  
பழகுகிறார்கள், செயற்கையும் போலியுமாக!
ஆனால், அவர்களைப் போன்றவர்களுக்கிடையே 
முரண்களின்றி எவ்வாறு பழகுகின்றனர் என்பது 
ஆச்சரியமளிக்கிறது!
*
பரஸ்பரம் ஒருவருடைய முகமூடியை இன்னொருவர் 
அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதும், பாராட்டுவதும்
இது என்ன வகை நட்பு என்று புரியவில்லை!
எனக்கு மட்டும் இவர்கள் எல்லோருடனும் முரண்படுவது
எளிதாக எப்படிச் சாத்தியமாகிறது?
*
பொய்மையோ, நேர்மையின்மையோ அல்ல
அவர்களிடம் எனக்கு பிடிக்காதது!
மாறாக, அவர்களுடைய சுய மட்டுப்பாடும், 
மேலோட்டமான தன்மையும் தான்!
அவர்களின் ஆன்மாவின் ஆழத்திலிருந்து வரும் 
ஒரு சொல்லுக்காக நான் காத்திருந்து 
காத்திருந்து சோர்ந்து போனதுதான் மிச்சம்!
அவர்களுக்கு 30, 40, 50, 60, 70, வயதானாலும் 
எவ்வாறு தம்முள்ளே ஆழாமல் தங்கள் சுயத்தின் 
மேலோட்டிலேயே தங்கி வாழ்கிறார்களோ!
தம்முள் ஒரு பொக்கிஷப் பெட்டகம் உள்ளதென்பதை 
அறியாத அவர்கள் "தாங்களும் மனிதர்கள்தான்!" 
என்று கூசாமல் சொல்கிறார்கள்!
தங்களது சிந்தனையற்ற மட்டுப்பாட்டில் சந்தோஷமாக 
வாழ்வதாக எண்ணுகிறார்கள்!
*
எல்லோரும் ஏதாவதொரு வாதத்தினால் 
பீடிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்!
கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், நாத்திக வாதம், 
ஆத்திகவாதம், மதவாதம், சாதிய வாதம், 
விஞ்ஞானவாதம், சோம்பல்வாதம், சந்தர்ப்பவாதம், 
பிழைப்புவாதம்....போன்ற பலவகை
வாதங்களால் பீடிக்கப்பட்டவர்களை, 
தமக்காகத் தாமே சிந்திக்காதவர்களை, 
எப்படி மனிதர்கள் எனச் சொல்லமுடியும்?

தமது உண்மை அடையாளம் அறியாததால் அவர்கள்
எதையெதையோ பற்றிக்கொண்டு கற்பனையான 
பிரச்சினைகளால் அல்லலுறுகிறார்கள்!
அவர்களிடம் எனக்கு அறவே பிடிக்காதது
கடன் வாங்கிய அறிவைக் கொண்டு தம்மை 
அலங்கரித்துக் கொள்ளும் பா[சா]ங்கு தான்!
அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள்.. என 
எல்லாமே
ஏன், அவர்களுடைய கனவுகள் கூட 
கடனாக வாங்கியவைதான்!
எங்கும் எப்போதும் எல்லாவிடத்தும் பாசாங்குத்தனம்!
காயம்பட்ட மனம் தமக்கு மட்டுமே தம் வலி தெரியும் என 
வாடி வதங்குகிறது! மேலும்
மற்றவர்கள் தமக்கு எதிராக சதி செய்வதாகக் 
கருதும் ஐயப்பிரமை நோயினால் பிறரை 
பகையாகக் காண்கிறது!
*
நான் முகமூடி என்று குறிப்பிடுவது
வலிந்து, தெரிவு செய்த, போலியாக 
அவர்கள் அணிந்து கொள்ளும்  
ஏதோவொன்றல்ல - மாறாக, 
அவர்களுடைய மட்டுப்பாடான 
தேடல், மற்றும், அனுபவங்கள், கேள்வியற்று
சேகரிக்கப்பட்ட அறிவு ஆகியவற்றினால் 
அமைந்த ஒரு பிம்பத்தையே முகமூடி என்கிறேன்! 
மனிதர்களின் மட்டுப்பாடுகள் யாவும் 
சுய மட்டுப்பாடுகளே!
அவை பிறரால், சமூகச் சூழலால், வரலாற்று ரீதியாக 
அவர்கள் மீது சுமத்தப்படுபவை அல்ல!
வரலாறு, சமூகச் சூழல், சமகாலப் போக்குகள் 
ஆகிய அனைத்தையும் மீறிச் செல்பவர்களே, 
சிந்திப்பவர்களே அசலான மனிதர்களாக எழுகிறார்கள் - 
வள்ளுவர், புத்தர், இயேசு, வள்ளலார், ரமணர்.... 
போன்றோர் இத்தகையோரே!
சமூகம், மற்றும் சமகாலப் போக்குகளுக்கு தகவமைந்து 
வாழ்பவர்கள் தனித்தன்மையற்ற மந்தை-மனிதர்கள்! 
*
என்னைச் சுற்றியுள்ள எல்லோருடனும் பழகுகிறேன் -ஆனால்
சிலரை மட்டுமே நெருங்கிச் செல்கிறேன் - அவர்களில் 
வெகு சிலரே என்னை நெருங்கி வருகிறார்கள்! 
'நட்பு' பற்றிய எனது கோட்பாடு வித்தியாசமானது, 
ஆழமானது! - அது,
வெறும் 'கொடுக்கல்-வாங்கல்' என்பதை 
அடிப்படையாகக் கொண்டதல்ல!
நான் அரட்டைக்கும், மேலோட்டமான 
உரையாடலுக்கும் ஆனவன் அல்ல!
ஆழமான நட்பு உங்களுக்கு கசக்குமெனில், 
மேலோட்டமான நட்பு எனக்கு  உவப்பானதல்ல!
*
மெய்ம்மை-நாட்டம் இல்லாதவர்கள், 
அர்த்தம் பற்றிய கேள்வியற்றவர்கள்,
எனது நட்புக்கு பாத்திரர் அல்ல! 
என்னுடன் முரண்படுவது எளிது! 
ஏனெனில், நீங்கள் உங்களை நெருங்கிக் காண்பதைவிட
நான் உங்களை அதிகம் நெருங்கிக் காண்கிறேன்!
நீங்கள் உங்கள் அகச் சுயத்தை தழுவாத வரை
நீங்கள் அரை-மனிதர்களே!
*
உங்கள் உள்ளுறையும் மனிதத்திற்கு நீங்கள் 
விழிக்காதது கண்டு நான் உங்களை இடித்து எழுப்புகிறேன்!
ஆனால், நீங்களோ மிகவும் சரியாக, முழுமையாக,
குறையற்று இருப்பதாகவும் -காரணமின்றி
நான் உங்களைச் சாடுவதாகவும் எண்ணி என்மீது 
கோபம் கொண்டு முரண்படுகிறீர்கள்! -ஆனால், 
உங்களுக்கும், உண்மையான உங்களுக்கும் உள்ள 
இடைவெளியைக் கண்டுதான் 
உண்மையில் நான் வருந்துகிறேன்!
***
குறிப்பு:
அகச் சுயம் = ஆன்மா, முழுமை, மனிதம்
ஆம், மனிதம், அன்பு, அறம் ஆகியவை மேற்புறச் சுயத்தின்
கூறுகள் அல்ல!  
******
மா.கணேசன்/03.01.2026/ நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

Wednesday, 30 July 2025

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1





 

 

 

 

 

 

 

கேள்வி - 1


நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், தந்தை போன்ற எந்த உறவுகளைச் சந்திக்க விரும்புவீர்கள்? 


மன்னிக்கவும், நான் எவரையும் சந்திக்க விரும்பமாட்டேன். ஏனென்றால், அப்படியொரு 'வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கை' என்றொன்று இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்பதாகவே எனது புரிதல் சொல்லுகிறது.  எனது தாய், தந்தை மீது  நான் அளவற்ற அன்பு கொண்டவன் என்றாலும், அவர்கள் அவர்களுடைய தொடரும் உணர்வியல் பரிணாமத் தேவைக்கேற்ப, அவர்கள் மீண்டும் எங்காவது பிறந்திருக்கலாம்! அல்லது அவர்கள் உணர்வியல் முழுமையடைந்தவர்களாக முழு-நிறைவடைந்திருக்கலாம்- அதாவது, இருப்பு, இன்மை கடந்த நிலையில் ஆழ்ந்திருக்கலாம்! ஆகவே , அவர்களை  வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில், தேடிச் சந்திக்கவோ, எவ்வகையிலும் அவர்களைத் தொந்திரவு செய்யவோ நான் விரும்பவில்லை!


அப்படி வாழ்க்கைக்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது எனில், நான் எனது விசார நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தொடர்ந்து விசாரப் பாதையில் செல்லுமாறு வலியுறுத்துவேன்! 


<>
வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
மறுப்பது தான் உயரிய ஞானம்!
ஏனெனில், எல்லா உலகங்களும்
இவ்வுலகம் போலவே உனது உணர்வைச்
சார்ந்திருப்பவையே!
உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
முழு-உணர்வே!

 
-- மா.கணேசன் / 


"கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" Sunday, 24 April 2016 வலைப்பதிவிலிருந்து
http://vicharamarg.blogspot.com/2016/04/blog-post_24.html
     <>
 ■
மா.கணேசன்/25.07.2025/நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø


கேள்வி - 2

மரணத்திற்குப் பிறகு ஆன்மா எங்கே செல்கிறது?  

 
ஒரு மனிதன் இறந்தபிறகு, அவனுடைய ஆன்மா எங்கேயும் செல்வதில்லை! அம்மனிதன் உயிரோடிருக்கும் போது அவனது ஆன்மா எங்கே இருந்ததோ, அங்கேயே தான் அது இருக்கிறது, இருக்கும்! ஏனென்றால், ஆன்மா என்பது உணர்வியல் ரீதியாக(ஒவ்வொரு மனிதனும் அடைந்திடக்கூடிய )மனம் எனும் சிற்றுணர்வைக் கடந்த, விசேடமான ஒரு உயர் உணர்வு நிலையே தவிர வேறில்லை! ஆக, உணர்வின் தளம் என்பது உடலோ, அல்லது மூளையோ அல்ல! உணர்வு, மனம் என்பவை பொருண்மையான எதையும் சார்ந்திருப்பதான அம்சங்கள் அல்ல! மூளைதான் மனதின் இருப்பிடம் என்பது (நதியை மலைதான் உற்பத்தி செய்கிறது என்பது போன்ற) ஒரு பொதுவான, தவறான  புரிதல்தானே தவிர, அது உண்மையல்ல! மூளையின் வழியாக மனமும், உணர்வும் அணுகப்படுகிறதே தவிர, மனம் என்பது மூளைச் செயல்பாட்டின் போது தோன்றும் ஒரு ஒளிப்புள்ளியே; அது ஏற்கனவே 'வெளி-காலம்-பொருண்மை' -யின் கட்டமைப்பை [அதாவது பிரபஞ்சத்தைக்] கடந்த ஒரு பரிமாணம் ஆகும். 


மனம், ஆன்மா என்பவற்றை உணர்வின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளவேண்டும். மனம் என்பது சிற்றுணர்வு, அல்லது தொடக்க நிலை உணர்வு என்றால், ஆன்மா என்பது இறுதி நிலை உணர்வு அல்லது முழு உணர்வு எனலாம். ஆம், விழிப்படைந்த மனமே ஆன்மா என்பதாகும்.

மா.கணேசன்/25.07.2025/நெய்வேலி
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø


கேள்வி - 3


மறுபிறவி என்பது இருக்கிறதா?  

     
ஒருவன் இந்த பிறவியை முழுமையாக வாழ்ந்து முடிப்பானேயானால், அதாவது தனது வாழ்காலத்திற்குள்ளேயே தனது பிறவிப் பயனை அடைந்துவிட்டானெனில், அவனுக்கு ஏன் இன்னொரு பிறவி?
ஆனால், ஒருவன் தனது பிறவிப்பயனை அடையவில்லை, தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடிக்க வில்லை என்றால், அவன் மீண்டும் பிறப்பது உறுதி.  


தொடர்ந்து இக்கேள்விக்கான பதிலுக்குள் செல்வதற்கு முன், சில விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம் ஆகும்.
நாம் எலிகளைப் போலவோ, தவளைகளைப் போலவோ இருந்தால் மறுபிறவி பற்றிய கேள்வி எழுந்திருக்காது! ஏனென்றால், எலிகளும், தவளைகளும் பிறக்கின்றன, இரை தேடுகின்றன, இணைதேடி இனம் பெருக்குகின்றன, பெரு விலங்குகளுக்கு இரையாகிவிடாமல் தப்பி உயிர் பிழைக்கின்றன. பிறகு ஒரு கட்டத்தில் இறந்துவிடுகின்றன. இவ்வாறு இறந்துபோன எலிகளும், தவளைகளும் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை! ஒருவேளை பிறந்தாலும், அவை என்ன செய்யப்போகின்றன? மேலே சொன்ன அதே சுற்றுதான் -- இரை தேடுதல், இணை தேடுதல், கொன்றுண்ணி (Predators)களுக்கு இரையாகாமல் தப்பிப்பிழைத்தல் என்பதுதானே! இத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கு மறுபிறவி தேவையில்லையே; வெறும் இனப்பெருக்க முறையே போதுமே! முக்கியமாக, ஒரு எலி, அல்லது ஒரு தவளை என்பது ஒரு உருப்படி தானே தவிர அவற்றிற்கு யாதொரு மனமோ, தனித்துவமோ (Individuality) கிடையாது!
மறுபிறவி ஏற்படவேண்டுமானால், அதற்குரிய அடிப்படை இருக்கவேண்டுமல்லவா!


தனியொரு தவளைக்கு மேற்கொண்டு பரிணமிக்கும் காரணமோ, அடிப்படையோ இல்லை. ஏனென்றால், தவளைக்கு மனம் என்பதில்லை, ஆன்மாவும் இல்லை! ஆனால் மனிதனின் பிரச்சினையே வேறு. மனிதனுக்கு 'மனம்' எனும் சிற்றுணர்வு இருக்கிறது; அச்சிற்றுணர்வு மேன்மேலும் பரிணமித்து 'ஆன்மா' எனும் பேருணர்வு அல்லது முழு-உணர்வு நிலையை அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆன்மாவை அடைவதுதான் அவனது பிறவிப்பயன்!

மனிதனுக்குப் பிறகு என்ன?


மனிதனின் மனம் தான் அவனது தனித்துவத்திற்கான அடிப்படை. ஒரு மனிதன் என்பவன் வெறும் ஒரு உருப்படி(எண்ணிக்கை)அல்ல, ஒவ்வொரு தனிதனைப் பொறுத்தவரையிலும் ஒவ்வொருவருக்கும் மேன்மேலும் பரிணமித்தாக வேண்டிய கடமை உள்ளது. ஒரு மனிதனின் மனமானது முழுமையடையும் வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறவியெடுத்தாக வேண்டும்.

உலகம் தோன்றி, அதில் முதல் உயிர் தோன்றி, பிறகு மனிதன் தோன்றி...  இவ்வாறாகச் செல்லும் நெடிய பரிணாம நிகழ்வு முறையின் இறுதி இலக்கு என்னவோ, அந்த இலக்கை பரிணாமமானது ஒவ்வொரு மனிதனினுள்ளும், அவனது உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் அடைய விழைகிறது. அதாவது, பரிணாமம் என்பது பொருளியல் (Material/ Inorganic ), உயிரியல்-உடலியல் (Biological/Organic ) என்கிற கட்டத்தைக் கடந்து உணர்வியல் கட்டத்திற்குள் (Psychic )பிரவேசித்துவிட்டது! ஆகவே பரிணாமத்தில் மனிதனுக்குப் பிறகு என்ன தோன்றும் என்ற கேள்வி பரிணாமத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகும்!

மீண்டும் பிறவியெடுப்பது எது?


ஒரு மனிதனின் இறப்பு என்பது அவனது உடலின் இறப்பைத்தான் குறிக்கிறது.  இறந்த அந்த உடல் மீண்டும் பிறக்க இயலாது. மனிதன் என்பவன் உடல்-உயிர், மனம் [அரையுணர்வு], ஆன்மா [முழு-உணர்வு] என மூன்று அடுக்குகளால் ஆனவன். ஆக, உடல் மரித்தாலும், ஒரு மனிதனின் மனம் மரிப்பதில்லை, மாறாக, அந்த மனம், பிறக்கும் வேறொரு புதிய மனித உடலில் தோன்றி அதன் பரிணாமத்தை தொடரவிருக்கிறது. ஒரு மனமானது ஒரு பிறவியில் எவ்வளவு உணர்வு பெற்றிருக்கிறது, உணர்வில் வளர்ந்திருக்கிறது என்கிற உணர்வின் அளவு [The Degrees/Levels of Consciousness], அதாவது தர நிலைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. உணர்வின் இந்த தர-நிலை தான் அடுத்தடுத்த பிறப்புகளுக்கு கடத்தப்படுகின்றதே தவிர, சென்ற பிறவியில் பெற்ற அனுபவங்களோ, ஞாபகக்கூறுகளோ கடத்தப்படுவதில்லை. ஆகவேதான் நமக்கு சென்ற பிறவி ஞாபகங்கள் எதுவும் இருப்பதில்லை. வெறுமனே சென்ற பிறவியின் போது வாழ்ந்த, பெற்ற அனுபவங்கள் அனைத்துக்கும் அடியோட்டமாக அமைந்த அந்த உணர்வு மட்டுமே அடுத்த பிறவியில் புதிதாக தனது வாழ்வைத் தொடங்குகிறது. 


உண்மையில், ஒருவன் எத்தனை பிறவியெடுத்தாலும் வாழ்க்கை அனுபவங்களும், உலக அனுபவங்ககும் ஒருவனது ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக யாதொரு பங்களிப்பையும் செய்வதில்லை! மாறாக, ஒருவனது மெய்ம்மை நாட்டமும், அர்த்தம் தேடுதலும், உண்மையில் தான் யார் என்பதை அறியும் பெருவிழைவும் தான் ஒருவனது ஆன்ம வளச்சிக்கும், உணர்வு வளர்ச்சிக்கும் உதவுவதாக அமைகிறது. ஆகவேதான், ஆன்மீக முன்னோடிகள் பலர் துறவு பற்றியும், ஆசைகளை அறுப்பது பற்றியும் பேசியுள்ளனர். ஆனால், ஒருவன் தீவிர ஆன்மீக நாட்டத்தில் இருந்துகொண்டே, அன்றாட இல்லற வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல உணவு, நண்பர்கள், இசை, கலை, .... என எல்லாத் தளத்திலும் தீவிரமாக அனுபவம் கொள்ளவும், பக்குவமாக வாழவும் முடியும்.

மா.கணேசன்/27.07.2025/நெய்வேலி.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

உணர்வு (Consciousness ) என்பதும் கடவுள் என்பதும் ஒன்றா?



 

 

 


 

 

 

சுருக்கமான பதில்: ஆம், அப்படியும் சொல்லலாம்; ஆனால் சொல்லக் கூடாது!

ஒருபுறம் இந்த பொருள்முதல்வாதிகளும், நாத்திக வாதிகளும் "கடவுள் இல்லை, உணர்வும் இல்லை!" என் கிறார்கள்!   இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

உணர்வின் [Consciousness] முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் முன்வைக்கும் விசயத்தைப் பொறுத்தவரை, படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] என்போரை நாம் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் சந்தடி சாக்கில், தங்கள் கிறிஸ்த்தவக் கடவுளை முன்னிறுத்துவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனென்றால், உலகில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தோரும் விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். அப்புறம் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும் தம்தம் கடவுளை முன்னிறுத்தினால் என்னாவது? அதனால்தான்!

சரி, நாம் இப்போது பிரச்சினையின் ஆழத்திற்குச் செல்வோம். உலகம் தற்செயலானதா? அல்லது கடவுளின் திட்டமிட்ட வடிவமைப்பினால் உண்டானதா? இயற்கையுலகில் ஒரு மாபெரும் ஒழுங்கு [Order]காணப்படுகிறது. இந்த ஒழுங்கு எப்படி வந்தது? இந்த ஒழுங்கு கணிதப்படி துல்லியமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் இருப்பதை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 'அறிவுக்கூர்மையின் மறுவடிவம்' எனக் குறிப்பிட்டார்.  இதை ஆத்திகர்கள் 'கடவுளின் அறிவுக்கூர்மை' என்கிறார்கள். அதோடு நில்லாமல், அறிவுக்கூர்மையுள்ள காரணகர்த்தா ஒருவர் உள்ளார் என்று நம்புவது பகுத்தறிவுக்கு முரணாய் இருக்கமுடியாது என்கிறார்கள்.

இயற்கையின் உலகில், ஒழுங்கும், வடிவமைப்புமும் உள்ளடங்கியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இயற்கையுலகில் வெளிப்பட்டுள்ள உயிர், மனம், உணர்வு போன்ற அம்சங்களைப் போலவே, ஒழுங்கு, வடிவம், அமைப்பு யாவும் பரிணாமப் [Evolutionary] பூர்வமானவையே.

பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றியபோது யாதொரு ஒழுங்கும், பாங்கும், வடிவமைப்பும், எதுவுமில்லாத முற்றான ஒழுங்கின்மையே [Chaos] நிலவிற்று. சொல்லப்போனால், இயற்கையுலகில் உள்ள அனைத்தும், ஏன் இயற்கையும், யாவும், ஏன், கடவுளும் கூட பரிணாமப்பூர்வ அம்சங்களே! ஆகவே இயற்கையில் பொதிந்துள்ள அறிவுக்கூர்மையும் பரிணாமத்திற்கு உட்பட்டதே.

பிரபஞ்சம் தோன்றிய மூன்றாவது நிமிடத்தில் எத்தகைய அறிவுக்கூர்மை நிலவியது? பெரிதாகச் சொல்லும்படியாக இல்லை. ஐயத்திற்கிடமின்றி இயற்கையில் அறிவுக்கூர்மை உள்ளடங்கியுள்ளது. அதோடு, அது தொடர்ந்து பரிணமித்துக் கொண்டும் உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக அது ஆத்திகர்களிடமும், நாத்திகர்களிடமும், ஏன், விஞ்ஞானிகளிடமும் ஓரளவுக்கு மேல் பரிணமிக்கவில்லை!

இயற்கையில் காணப்படும் ஒழுங்கையும் அதி நுட்பமான வடிவமைப்பையும் கண்ட ஐன்ஸ்டீன் அதை "அறிவுக்கூர்மையின் மறுவடிவம்" எனக் குறிப்பிட்டிருக்கலாம். அதில் தவறில்லை! ஆனால், இயற்கையில் இத்தகைய ஒழுங்கு எப்படி வந்தது? எனும் கேள்விக்கான சரியான பதில் "பரிணாமத்தினால்" என்பதாகத் தான் இருக்க முடியும்.

அடுத்து, இயற்கையில் அறிவுக்கூர்மை உள்ளடங்கியுள்ளது. அதோடு அனைத்துத் துறைகளின் விஞ்ஞான அறிவும் இயற்கையிடமிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவையே என்பதை அறிந்து அங்கீகரித்திடும் மனிதனும் அறிவுக்கூர்மை உடையவனே!

அதே வேளையில், அறிவுக்கூர்மை பற்றிப் பேசும் போது, அது என்னுடையதோ, உங்களுடையதோ, வேறு எவருடையதோ அல்ல! மாறாக, அறிவுக்கூர்மை என்பது அறிவுக்கூர்மை தான்! இன்னும் அது கடவுளுடையதும் அல்ல! ஆகவே அறிவுக்கூர்மையுள்ள 'காரணகர்த்தா' ஒருவரை நாம் கற்பனையாக உருவாக்கிக்கொள்ளவோ, அவரைத் தேடிச் செல்லவோ, வணங்கி வழிபடவோ, போற்றிடவோ, அல்லது அவரைத் தூற்றிடவோ, மறுத்திடவோ, தேவையில்லை! ஏனெனில், கடவுளின்  அறிவுக்கூர்மை என்றெதுவும் இல்லை. மாறாக, அறிவுக்கூர்மை தான் கடவுள்!

ஆனால், அறிவுக்கூர்மை என்பதென்ன? அது எங்கிருந்து ஊற்றெடுக்கிறது? அதன் அடிப்படை என்ன? ஆம், அறிவுக்கூர்மையின் அடிப்படை "உணர்வு" [Consciousness] தான்! உணர்வு என்பதில்லாமல் அறிவுக்கூர்மை இல்லை! ஆகவே, உணர்வை நாம் 'கடவுள்' எனக் கொள்ளலாம். ஆனால், வழக்கமாக, மதங்கள் முன்வைக்கும் அந்தக்கடவுள் அல்ல! இவ்விடத்தில் நாம் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்!

அதாவது, மதங்களின் கடவுளை வழிபடுவது, தொழுவது, அவரை நோக்கி பிரார்த்தனை செய்வது போன்ற சடங்குபூர்வமான விசயங்கள் அறிவுக்கூர்மை எனப்படும் கடவுளிடம் எடுபடாது! ஏனென்றால், அறிவுக்கூர்மையை வழிபடவோ, வணங்கவோ, இயலாது; அப்படிச் செய்வதனால் ஒரு பயனும் விளையாது!

மாறாக, மனிதன், தன் அறிவைக் கொண்டுதான் அறிவுக்கூர்மையை அணுகவும் அறியவும், அடையவும் முடியும். 'கடவுள்' என்று குறிப்பிடத் தக்க மாபெரும் அறிவுக்கூர்மையை, அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் மாபெரும் உணர்வை மனிதன் எட்ட வேண்டுமானால், அதற்கிணையான உணர்வு நிலைக்கு ஒவ்வொரு மனிதனும் தனது உணர்வில் பரிணமித்து உயரவேண்டும்.

மேலும், இயற்கையில் ஒழுங்கும், அதி நுட்பமான வடிவமைப்பும் இருக்கிறது என்பதால், அதை வடிவமைத்த ஒரு 'மகா நபர்', கடவுள் என்று ஒருவர் இயற்கைக்குப் பின்னால், பிரபஞ்சத்திற்குப் பின்னால் இருக்க வேண்டும் எனும் சிறுபிள்ளைத் தனமான முடிவுக்கு உடனே தாவிக்குதித்திடல் வேண்டாம்! ஏனெனில், கடவுளோ, வேறு எவரோ பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தை வடிவமைக்கவில்லை!

மாறாக, முற்றான ஒழுங்கின்மை [Chaos] யிலிருந்து முழுமையான ஒழுங்கையும், மிக எளிய வடிவமைப்பில் தொடங்கி  மிகவும் சிக்கலான வடிவமைப்பையும் நோக்கிச் செல்லும் பரிணாம வழிமுறையில் மேன்மேலும் பரிணமிக்கும் ஒழுங்கும் வடிவமைப்பும் தான், கடவுளை வடிவமைக்கவும், கட்டமைக்கவும் போகின்றன.

கடவுள் என்பது இறுதியான ஒழுங்கு மற்றும் வடிவமைப்பு என்பதிலிருந்து வேறானது அல்ல! ஏதோவொரு வகையில் பிரபஞ்சத் தோற்றத்திற்கு, 'கடவுள்' அதாவது 'கடவுளையொத்த' அறிவுக்கூர்மை' காரணமாய் அமைந்திருக்கலாம். ஆனால், உலகம், பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னிருந்த கடவுளோ, அல்லது அறிவுக்கூர்மையோ முக்கியமல்ல! ஏனென்றால், அவர்/ அது 'மறைந்து' காணாமல் போய் 1500 கோடி ஆண்டுகள் ஆகின்றன! உண்மையான, உயிருள்ள கடவுள் கடந்தகாலத்தைச் சேர்ந்தவராக இருக்கவியலாது. இன்னும் அவர் நாளை, வருங்காலத்தைச் சார்ந்தவராகவும் இருக்கவியலாது. துல்லியமாகச் சொன்னால், கடவுளை ஒரு போதும் காலத்தின் உலகில் காண இயலாது! ஏனெனில், 'காலாதீதம்' அல்லது 'அனந்தம்' தான் கடவுள்!

மேலும், சில மதங்கள் எதிர்பார்ப்பது போல், உலகின் முடிவில், அல்லது அழிவில் கடவுள் தோன்றப் போவதில்லை! மாறாக, உலகின் முழுமையில் மட்டுமே கடவுள் தோன்றுவார்! உலகின் முழுமையானது ஒவ்வொரு மனிதனின் பரிணாம முழுமையைச் சார்ந்துள்ளது. ஆம், மனிதன் தன் உணர்வில் முழுமையடைகிற இடத்தில் கடவுள் தோன்றிடுவார்!

மா.கணேசன்/ 28.07.2025/நெய்வேலி.
"ஆழமான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும்" எனும் தொகுப்பிற்காக புதிதாக எழுதப்படும் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

Tuesday, 29 July 2025

'பெரு வெடிப்பு'க்கு முன் என்ன இருந்தது?

 



 

 

 

 

 

 

"பெரு வெடிப்பு" [Big Bang Theory] என்பது பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய ஒரு விஞ்ஞானக் கோட்பாடாகும். ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் பொருண்மையும் [Matter], கனபரிமாணமற்ற ஒரு புள்ளியில் அடர்ந்திருந்ததாகவும், அதன் உள்ளார்ந்த அழுத்தம் தாங்காமல் வெடித்து இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும், அவ்வெடிப்பில் தோன்றிய பிரபஞ்சம் இன்றளவும் பரந்து விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானம் கூறுகிறது.

இக்கோட்பாட்டின்படி, அவ்வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது எனப்படுகிறது. பெரு வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், அவ்வெடிப்பிற்கு முன் எந்த 'வெளி' [Space] யில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் யாவும் இருந்தன என்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

மேலும், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்டால், அப்படிக் கேட்பது அர்த்தமற்றது என பெரு வெடிப்புக் கோட்பாட்டாளர்கள் மிரட்டுகின்றனர்.  இந்த விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் திறந்த மனதுடன் மெய்ம்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக, பருப்பொருள் அதாவது சடப்பொருள்தான் முதன்மையான, சாசுவதமான, யாவற்றுக்குமான அடிப்படையான நிஜம் அல்லது மெய்ம்மை என அடித்துச் சொல்லும் கூச்சமில்லாத பொருள்முதல்வாதிகளாகத் திகழ்கின்றனர்.  

ஆனால், இந்தப் பொருள்முதல்வாதிகளின் கூச்சலைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. கேட்க வேண்டிய கேள்விகளை தர்க்கரீதியாக நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். ஆம், பெரு வெடிப்புக்கு முன் என்ன, எத்தகைய மெய்ம்மை இருந்தது? ஒரு வெடிப்பில் தான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், பெருவெடிப்புக்கு முன் ஒரு பொருளல்லாத [Non-Material]  மெய்ம்மை தான் இருந்திருக்க வேண்டும்! இனி அது எத்தகைய பண்பு கொண்ட மெய்ம்மை, என்பதைக் கண்டறிவதுதான் நம்முன் உள்ள சவாலாக இருக்கமுடியும்.

இதுவரை நாம் அறிந்த அம்சங்களுள் மனம் அல்லது உணர்வு [Consciousness] என்பது தான் பொருள் தன்மை கலவாத அம்சம் ஆகும். அதையும் கூட பொருள்முதல்வாதத்தினால் பீடிக்கப்பட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதில்லை. மனம் அல்லது உணர்வு என்றோரு விசயமே இல்லை என்று சாதிக்கிறார்கள். ஆம் விஞ்ஞானத்தின் அனைத்துத் துறைகளிலும் இந்த பொருள்முதல்வாத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளைப்போல் ஊடுருவி விட்டுள்ளனர்!

அதே நேரத்தில், எவ்வித சார்பு நிலையும் கொள்ளாத, திறந்த மனதுடைய சில விஞ்ஞானிகளும் இருக்கவே செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான்
மேக்ஸ் ப்ளாங்க் [Max Planck] எனும் விஞ்ஞானி; இவர் 1963-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர்தான் குவாண்டம் எந்திரவியலின் [quantum mechanics] தந்தை எனப்படுபவர். இவரது கூற்றுப்படி, "உணர்வு [Consciousness] தான் யாவற்றுக்கும் அடிப்படையான நிஜம். பொருள் என்பது உணர்விலிருந்து பெறப்பட்ட ஒன்று. உணர்வே ஒட்டு மொத்த பொருளாலான உலகிற்கும் அடியோட்டமான ஆழமான நிஜம்" என்றாகிறது.

அடுத்து, எர்வின் ஷ்ரோடிங்கர் [Erwin Schrödinger] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது பொருளின் ஒரு தயாரிப்போ/ விளை பொருளோ அல்ல; வெறுமனே மூளைச் செயல்பாட்டின் ஒரு துணை விளைவு,அல்லது இரண்டாம் பட்ச வெளிப்பாடோ அல்ல. மாறாக, உணர்வு தான் அடிப்படையான நிஜம் - பகுக்கவியலாத ஒற்றைத் தனி நிஜம் ஆகும்" என்றார்.

அடுத்து, யூஜின் விக்னர் [Eugene Wigner] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது ஒரு பொருளல்லாத [non-physical entity ] சுயாதீன இருப்பு கொண்ட அம்சம்; அது பௌதீக உலகுடன் வினைபுரியும் ஒன்று...." என்றார்.

அடுத்து, டொனால்ட் ஹாப்மேன் [Donald Hoffman], இவர் ஒரு Cognitive Science விஞ்ஞானி ஆவார். இவரும் உணர்வுதான் பௌதீக உலகின் அடிப்படையான நிஜம் என்றார்.

அடுத்து, க்ரிஸ்டோஃப் கோச் [Christof Koch], Neuroscientist; ராபர்ட் லேன்ஸா [Robert Lanza], Stem cell and regenerative medicine ;  ரோஜர் பென்ரோஸ் [Roger Penrose], Mathematical physics, David Chalmers, [philosopher]; Philip Goff, [philosopher]; Annaka Harris, [science editor] என இத்தனை விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும் உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் எடுத்துச்சொல்லியும் பொருள்முதல்வாதக் குட்டையில் ஊறிய விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் விஞ்ஞானப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் மறுத்து வருகின்றனர். இந்த அடாவடிக் காரர்கள் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளைக் கூட மதிப்பதில்லை!

இந்த பொருள்முதல்வாதிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

இந்தக் குழப்பவாதிகளுக்கு மத்தியில் எவ்வாறு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் நிறுவுவது என்பது பெரும் சவாலான விசயமே!
நாம் மீண்டும் பிரதான விசயத்திற்கு வருவோம். ஆம், பொருளாலான பிரபஞ்சத்தின் பிறப்புக்கு முன்னர், அதாவது பெருவெடிப்புக்கு முன்னர் பொருளல்லாத ஒரு விசேட அம்சமான உணர்வே இருந்தது. இதை  நிறுவுவதற்கு நாம் பரிணாம வரலாற்றின் போக்கையும் அதன் அசலான இலக்கையும் புரிந்துகொள்வது அவசியமாகும். அதற்கு முன்னர் பொருள் என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பதையும் ஆராய்ந்தறிந்தாக வேண்டியது முக்கியமாகும்.

முதன்முதலில், பெரு வெடிப்பில் தோன்றியது பொருள், பருப்பொருள், சடப்பொருள் எனப்படும், உயிரற்ற, உணர்வுமற்ற பொருள்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை! ஆனால், அப்பொருள் எப்படி வந்தது? பொருள்முதல்வாதிகள் சொல்வது போல், "பொருள் சுயம்புவாக தன்னில் தானாகத் தோன்றியதாக, என்றென்றும் சாசுவதமாக இருக்கும் ஒரு பொருள்" என்பதை நம்மால் ஏற்கவியலாது. அது தர்க்கவியலின் படி தவறானதாகும். பண்பளவில் உயிரற்ற, உணர்வுமற்ற பொருள் [பொருளும், சக்தியும் ஒன்றே என்றாலும் கூட] எவ்வாறு தன்னில் தானாகத் தோன்றிட இயலும்? முக்கியமாக, பெருவெடிப்பில்தான் இப்பொருள் தோன்றியது எனும் பட்சத்தில், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வி மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் பெறுவதாகிறது.

"கடவுள்தான் உலகைப் படைத்தவர்!" என்று இறையியலாளர்களும், ஆத்திகவாதிகளும் சொல்லும் போது, "அந்தக் கடவுளைப் படைத்தது யார், எது?" என பொருள்முதல்வாதிகளும், நாத்திகவாதிகளும் கேட்டு கொக்கரிக்கின்றனரே; அதேபோல் "பொருள் எவ்வாறு எங்கிருந்து வந்தது, அதைப் படைத்தது எது, யார்?" என்று கேட்டால் பொருள்முதல்வாதிகள் என்ன சொல்வார்கள்; அவர்கள் முகங்களை எங்கே புதைத்துக் கொள்வார்கள்?!

சரி, இந்த இரண்டு அணிகளும், அவர்களுடைய கூச்சல்களும் ஒரு புறம் இருக்கட்டும். ஆம், எந்தவகையிலும் பொருள் என்பது சுயம்புவாக தானே தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை.  நிச்சயமாக, பெரு வெடிப்புக்கு முன் பொருளல்லாத ஒரு மெய்ம்மை இருந்திருக்க வேண்டும். அதை நாம் உணர்வு என்கிறோம்; ஆனால், அது மனித உணர்வோ, அல்லது கடவுளோ அல்ல! நாம் கூறும் உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது!

இதை எவ்வாறு நாம் சொல்கிறோம் என்றால், பெருவெடிப்பின் போது பொருள் மட்டும்தான் தோன்றியது. காலம், வெளி என்பவையும் கூட பொருண்மையான அம்சங்களே என்பதால், இவற்றையும் நாம் பொருண்மை [Material] என்பதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், பெருவெடிப்பில் தோன்றிய இப்பொருளானது சும்மா இருக்கவில்லை. மாறாக அது ஒரு நீண்ட நெடிய பரிணாம நிகழ்வு முறைக்கு உட்படுவதாகிறது. அதாவது பொருளானது பரிணமித்து ஒரு கட்டத்தில் உயிராக(உயிரியாக)எழுகிறது! அந்த உயிரியானது மேன்மேலும் பரிணமித்து ஒரு கட்டத்தில் உணர்வுள்ள ஜீவியாக [அதாவது மனித ஜீவியாக] எழுகிறது! இப்போது மனித ஜீவிகளாகிய நாம் நம் மனதின் உணர்வைக் கொண்டு சிந்திக்கிறோம், நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுமுள்ள பரந்த பிரபஞ்சத்தையும் ஆராய்கிறோம். அப்படியானால், இந்த உணர்வு எங்கிருந்து வந்தது? பெருவெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்பது தெரியவில்லை என்று வைத்துக்கொள்வேம்; ஆனால், பெருவெடிப்புக்குப் பின் மாபெரும் பிரபஞ்சம் எழுந்தது மட்டுமல்ல, அதில் ஒரு கட்டத்தில் உயிர்ப் பண்பு அதாவது உயிருள்ள ஜீவிகள் தோன்றின; பிறகு ஒரு கட்டத்தில் உணர்வுப் பண்பு அதாவது உணர்வுள்ள ஜீவிகளான நாமும் தோன்றினோம்! இந்த உயிர்ப்பண்பும், உணர்வுப்பண்பும் சடப் பிரபஞ்சத்தில், எவ்வாறு, ஏன் தோன்றியது? பொருள், உயிர், உணர்வு இம்மூன்றும் துல்லியமாக தனித்த பண்புகளைக் கொண்டவையாகும். பண்பளவில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட அம்சங்களாகும். இம்மூன்று பண்புகளும் இப்பிரபஞ்சத்தில் ஒத்திசைவுடன் இணைந்திருக்கின்றன.

மனித ஜீவிகளாகிய நாம் தவளைகளைப் போல சிந்திக்கும் மனமோ, உய்த்துணரும் உணர்வோ இல்லாதவர்களாய் இருந்தால், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியே எழுந்திருக்காதல்லவா? ஆகவேதான், இவ்வாதங்களையும் தர்க்கங்களையும் வைத்துத் தான் சொல்கிறோம், "உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது! ஆகவே, பெரு வெடிப்புக்கு முன் ஒரு விசேட பெரும் உணர்வு தான் இருந்தது. அந்த பேருணர்வு தான் உருமாறி பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆனது. பிறகு அப்பொருளானது பரந்து விரியும் பிரபஞ்சமுமானது!" என்கிறோம்.

அறிவு குழம்பிய பொருள்முதல்வாத விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் சொல்கிறார்கள், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்பது அர்த்தமற்றது என்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், 'பெருவெடிப்பு' என்பது ஒரு 'நிகழ்வு' மட்டுமல்ல, அதையே அவர்கள் 'கடவுள்' என்பதாக வழிபட்டு வருகிறார்கள் போல!

பொருளை முதன்மையானதாகவும், யாவற்றுக்கும் அடிப்படையானதாகவும், சாசுவத பரம்பொருளாகவும்  கருதும் பொருள்முதல் வாதிகள் எவரும் "பொருள் என்றால் என்ன?" என்பதைப்பற்றி உருப்படியாக இதுவரையிலும் எதையும், எந்த முறையான தெளிவான விளக்கத்தையும்  தரவில்லை.

ஆனால், நம்மால் சொல்ல முடியும், 'பொருள்' என்பது உயிரற்ற, உணர்வுமற்ற ஒன்று; ஆனால், அப்பொருள் தன்னகத்தே அளப்பரிய உள்ளுறையாற்றலைக் கொண்ட ஒரு பரிணமிக்கும் பொருளாகும். பொருள் என்பது தன்னில் எவ்வகையிலும் முடிவானதோ, இறுதியானதோ அல்ல. அது ஒரு பரிணாமக் கருவி, ஒரு பரிணாம் ஊடகம், அல்லது கட்டுமானப் பொருள் என்கிறவகையில் பொருளானது முதன்மையானதாக இல்லாவிட்டாலும் முக்கியத்துவமான மெய்ம்மையாகும்.

பெருவெடிப்பில் தோன்றிய பொருளானது ஏன் அப்படியே பொருளாக, வெறும் அணுத் துகள்களாகவே இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு தனிமங்களாகவும், மூலகங்களாகவும் ஆயின. ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து பெரும் வாயுக்கூட்டமாக சுற்றிச் சுழன்று 'நெபுலா' வாகவும், அதிலிருந்து கேலக்ஸிகளாகவும், பிறகு எண்ணற்ற நட்சத்திரங்களாகவும், பிறகு கிரகங்களாகவும் ஆயின. பிறகு ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சூரியனைச் சுற்றிச் சுழலும் எட்டு கிரகங்களில் ஒன்றான பூமிக் கிரகத்தின் மீது ஏன் உயிருள்ள ஒரு 'ஸெல்'லாக எழ வேண்டும்?  பிறகு ஒரு ஸெல் உயிரியானது பரிணமித்து பல ஸெல் உயிரிகளாகவும், அடுத்து ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் எனவும் உருவாக வேண்டும். அப்பாலூட்டிகளில் ஒரு இனமாக சிந்திக்கும் திறனுள்ள, உணர்வு கொண்ட மனித ஜீவிகள் ஏன் உருவாக வேண்டும்? மொத்தத்தில், பொருள் ஏன் பொருளாகவே நில்லாமல் பல்வேறு பண்புகளில் அமைந்த ஜீவிகளாக ஆக வேண்டும்? அதாவது, பொருள் ஏன் பரிணமிக்கும் பொருளாக ஆனது?

ஏனென்றால், பொருளின் பொருண்மைப் பண்பு [Materiality] என்பது அதன் அசலான பண்பு அல்ல! ஆகவேதான் அது தனது அசலான முகத்தை, பண்பைத் தேடிச் செல்லும் நெடிய பரிணாமப் பயணத்திற்கு உட்படுவதாயிற்று! அதாவது, பரிணமிக்கும் பொருளாக, பரிணாமக் கருவியாக, ஊடகமாக, கட்டுமானப் பொருளாக ஆகியது. பொருளானது அதனுடைய பொருண்மைபண்பிலேயே நிலைகொண்டு நிற்க முடியாது! பரிணமிக்கும் பொருள் என்றவகையில் பொருளையும், பரிணாமத்தையும் பிரிக்கவியலாது. பரிணாமத்திற்கு வெளியே பொருளுக்கு யாதொரு அர்த்தமும் கிடையாது!

உண்மையில், உணர்வு தான் பொருளின் அசலான முகமும், பண்பும் ஆகும். அந்த அசலான உணர்வு நிலையை நோக்கியதாகத்தான் அதன் முழு விழைவும் உள்ளது. உணர்வின் ஆகச் சுருங்கிய நிலை தான் பருப்பொருள் என்பதாகும். தன்னைத்தானே மறைத்துக்கொண்ட, சுருக்கிக்கொண்ட உணர்வின் ஒரு வடிவம் தான் பொருள் என்பதாகும்!

இப்போது நாம் விஞ்ஞான ஆதியாகமத்தை மாற்றி எழுதிடுவோம். "இருள் என்பது மிகக் குறைந்த ஒளி!" என்று குறிப்பிடுவது போல, "பொருள் என்பது மிக மிகக் குறைந்த உணர்வு!" என்று சொல்லலாம். ஆம், ஆதியில் உணர்வு, ஒரு 'பேருணர்வு' இருந்தது! அது 'வெடித்து' உருமாறி பருப்பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆகியது! அந்த ஆதிப் பேருணர்வு தற்போது பரந்துவிரியும் இந்த பிரபஞ்சமாகவும், அதில் எண்ணற்ற உயிரினங்களாகவும், முக்கியமாக உணர்வில் பெருகி வளரும் மானுட ஜீவிகளாகவும் இருக்கிறது! ஆனால் மானுட ஜீவிகள் பரிணாம நிகழ்வுமுறையின் இறுதிச் சொல் அல்ல. ஏனென்றால், அவர்களுடைய உணர்வு இன்னும் சிற்றுணர்வாகவே உள்ளது. மானுடர்களில் 99.9% இன்னும் விழிப்படையாமலேயே தங்களது அன்றாடத்திலேயே அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றனர்! நீண்ட நெடிய ஒப்பற்ற பரிணாமத்தின் இறுதி இலக்கு, மனிதனின் உணர்வின் உள்ளேயும், ஊடேயுமாகச் சென்றுயர்ந்து மீண்டும் பேருணர்வை எட்டுவதே ஆகும். தன்னையிழந்து பிரபஞ்சமாக மாறிய பேருணர்வு தன்னை மீள் கண்டுபிடிப்பு செய்வதொன்றே ஆகும். பரிணாமமானது இந்த ஒப்பற்ற இலக்கை ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் அடையவிருப்பதுதான் பரிணாமம் மனிதனுக்கு அளித்துள்ள முக்கியத்துவமாகும்!
 
இந்த பரிணாமப் பொறுப்பைத் தாண்டி மனிதனுக்கு வேறு யாதொரு பெருமையும், தனியொரு வாழ்க்கையும் கிடையாது. மனிதன் என்பவன் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பரிணாமக் கருவியாவான்!

மா.கணேசன்/ 28.07.2025/ நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

எல்லாமும் ஒன்றுமில்லாததும் (Everything and Nothing)

  "ஏன் இங்கே ஒன்றுமில்லாததற்குப் பதிலாக ஒரு பேரண்டமே இருக்கிறது?" என்பது குறித்து தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும் பல நூற்றாண்டுகளாக...