
இக்கட்டுரை விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல. மாறாக, விஞ்ஞானத்தின்
மட்டுப்பாடு பற்றியது. அம்மட்டுப்பாடு வெளிப்படையாகத் தெரிவதில்லை
என்பதும்கூட ஒருவகையில் விஞ்ஞானத்தின் வெற்றிக்குக் காரணமாக
அமைந்து விடுகிறது எனலாம்.
விஞ்ஞானமானது அனைத்துக்கேள்விகளுக்கும் தன்னகத்தே
பதில்களைக் கொண்டிருப்பதான ஒரு மாயையைத் தோற்று
விக்கிறது.
விஞ்ஞானம் என்பது உள்ள விஷயங்களைப்பற்றியது மட்டுமே,அவ்விஷயங்
களுக்கிடையேயுள்ள தொடர்புகளைக்கொண்டும்,ஒப்பிட்டுப்பார்த்தும், சில
விதிகளை(உ-ம். தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்குப்பாயும்என)க்கண்டு
பிடித்து, சில புரிதல்களையும், முடிவுகளையும் கொண்டு தனது அறிவைக்
கட்டமைக்கிறது. இத்தகைய அறிவினால், மனித குலத்திற்கு எண்ணற்ற
பயன்கள் விளைந்துள்ளன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆம்,
விஞ்ஞானம் மனிதகுலத்தின் உயிர்வாழ்தலை சுலபமாக்கியுள்ளது,சௌகரி
யமிக்கதாய் ஆக்கியுள்ளது.
ஆனால், உள்ள விஷயங்கள் எவ்வாறு தோன்றின? இப்பிரபஞ்சம் ஏன், எதற்
காகத்தோன்றியது? அதில் உயிர் ஏன் தோன்றியது? மனிதன் ஏன் தோன்றி
னான்? அவனது வாழ்க்கையின் நோக்கம், இலக்கு, அர்த்தம் என்ன என்பது
பற்றியெல்லாம் அது உருப்படியாக எதுவும் சொல்ல வில்லை! இதுதான்
விஞ்ஞானத்தின் மாபெரும் மட்டுப்பாடு ஆகும். விஞ்ஞானத்தின் மட்டுப்
பாடுகளை வெளிச்சத்திற்குக்கொண்டுவரும் அதேவேளையில், மிக அடிப்-
படையானதும் முக்கியமானதுமான கேள்விகளுக்கான பதில்களைப் பெறு
வதற்காக, நாம் நேரடியாக மதத்திற்குத் தாவிட முடியாது. மதத்திடம் சில
பதில்கள், அரிய உட்-பார்வைகள் உள்ளன என்றாலும் அவற்றை எல்லோ
ராலும் எளிதாகப்புரிந்து கொள்ள இயலாது!
உதாரணத்திற்கு, உயிர் எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கு விஞ்ஞான
மும், மதமும் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
"மிகவும் சக்திவாய்ந்த ரசாயணமானது , தன்னைத்தானே மறு-பதிப்பு
செய்து கொள்ளும் மூலக்கூறிணை, அதாவது முதல் உயிரை உருவாக்
கியதாக எண்ணப்படுகிறது"
என்று விஞ்ஞானம் ஊகமாகக்கூறுகிறது.
"கடவுள் தான் பிரபஞ்சத்தையும், அதில் உயிரையும் படைத்தார்"
என்று மதம் அறுதியிட்டுக்கூறுகிறது.
ஆனால், இந்த இரண்டு கூற்றுக்களுக்கும் பெரிதாக என்ன வித்தியாசம்
உள்ளது? ஒன்று இயற்கையை மூலமாகக் கருதுகிறது; இன்னொன்று
கடவுளை மூலமாகக் கருதுகிறது. இயற்கை எவ்வாறு தோன்றியது என்ப
தற்கு விஞ்ஞானத்திடம் பதிலில்லை; அவ்வாறே அனைத்துக்கும் மூலமான
கடவுள் எவ்வாறு தோன்றினார் என்பதற்கு மதத்திடம் பதிலில்லை!
நம்மைப்பொறுத்தவரை, இயற்கை இருக்கிறது, அதில் நாம் இருக்கிறோம்!
அவ்வளவு தானா? இருப்பவற்றின் நடுவே ஒரு இருப்பாக பிற பிராணி
களைப்போல எவ்வாறோ தகவமைந்து உயிர்வாழ்ந்து செல்வது தான் நமது
வாழ்க்கையா? விஞ்ஞானத்தையும், மதத்தையும் விட்டால், உண்மையைக்
கண்டறிய வேறு வழியேதும் இல்லையா?
'உள்ளது மட்டுமே,அதாவது இயற்கையுலகம் மட்டுமே உண்மை' என்று விஞ்
ஞானம் சொல்கிறது. 'இல்லை, உலகம் மாயை, உலகம் -கடந்த மெய்ம்மை
யான கடவுள் மட்டுமே நிஜம்' என்று மதம் சொல்கிறது. இந்த இரண்டில் எது
உண்மை? கடவுள் பற்றிய கருத்தை, கோட்பாட்டை விஞ்ஞானம் மூட-நம்
பிக்கை என்கிறது. ஆனால், உணர்வுப் பரிணாமத்தில் சிறிது உயர்ந்த தனி
மனிதர்களுக்குத் தெரியும், 'உள்ளது மட்டுமே உண்மை' என்பது இயற்கை
வாதம்; விஞ்ஞானம் இயற்கைவாதம் எனும் மூடநம்பிக்கையை ஊட்டுகிறது.
உண்மையில், விஞ்ஞானம், மதம் இவ்விரண்டையும் கடந்த மூன்றாவது வழி
ஒன்று உள்ளது. அந்த, மூன்றாவது-வழியைத் தான் இக்கட்டுரை அறிமுகம்
செய்கிறது! ஏனெனில், உள்ளதை, உலகைத் தழுவிக்கொண்டு அதனுடன்
தகவமைந்து வாழ்ந்து செல்வது என்பது எலிகளுக்கும், தவளைகளுக்கும்,
பிற விலங்கினங்களுக்கும் மட்டுமே உரியது, பொருத்தமானது! மாறாக,
உள்ளதிலிருந்து 'உண்மை' யை உய்த்துணர்வதே உண்மையில், சிந்திக்கும்
மனிதனுக்கான சவாலும், வாழ்க்கையும் ஆகும்! அவ்வாறு உள்ளதிலிருந்து
உய்த்துணரப்படும் உண்மை உலகைக்கடந்ததாக இருப்பினும் அது உலகை
மறுப்பதில்லை!
உலகம் மறுக்கவும், தவிர்க்கவும் முடியாததாயத் தெரிந்தாலும் அது கடந்து
செல்லப்பட வேண்டிய தற்காலிக நிஜமாகும். உலகமும் அதிலுள்ளபொருட்
களும் திடமாய்த் தெரிவதால், ஸ்தூலத்தின் சொற்களிலேயே சிந்திப்பது
என்பது மட்டுப்படுத்தும் பெருந்தடையாகும். ஒருமரத்தின் பூக்கள் சிலமணி
நேரமோ,அல்லது ஒரு நாளோதான் நீடிக்கிறது. ஒப்பீட்டுரீதியில் மனிதனின்
வாழ்காலத்தைவிட பிரபஞ்சத்தின் வாழ்காலம் நெடியது என்பது பெரிதல்ல.
எதுமுக்கியமெனில்,மனிதனின் குறுகியவாழ்காலம் தெரிவிக்கும் உண்மை
என்ன என்பதைப்புரிந்துகொண்டு, அதற்கேற்ப வாழ்க்கையில் எது முக்கிய
மானது என்பதைக்கண்டறிந்து நிறைவேற்றம் காண்பது மட்டுமே முக்கியம்.
உலகம், பிரபஞ்சம் என்பது எதைக்குறிக்கிறது எனும் உண்மையைப்புரிந்து
கொள்வது மிகவும் அவசியமே. இல்லாவிடில், தேவையைத்தாண்டி அது நம்
கவனத்தைச் சிதறடித்துக்கொண்டேயிருக்கும். அதே நேரத்தில், பிரபஞ்சம்
என்பதும் உண்மையும் ஒன்றல்ல! மேலும், முடிவிலாது பிரபஞ்சத்தை ஆராய்
வது; அதன் ஒவ்வொரு நுணுக்கமான விபரத்தையும் ஒன்று விடாமல் அறிய
முற்படுவது பயனற்றது; ஏனெனில், அதற்குரிய போதிய காலஅவகாசம் நம்
வசம் இல்லை. எல்லையற்று பரந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்தில், மொத்
தம் எத்தனை உடு-மண்டலங்கள்(கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள்,கிரகங்கள்;
எத்தனை அணுத்துகள்கள் உள்ளன என எல்லாவற்றையும் எண்ணிக்கணக்
கிட்டு, பட்டியலிடுவது மூலமாக ஒருபோதும் பிரபஞ்சத்தைப் புரிந்து
கொள்ளஇயலாது! மாறாக,பிரபஞ்சத்தை அதன்சாரத்தில் புரிந்துகொள்ளும்
அணுகு முறையை ஒருவர் பிரயோகிக்கவேண்டும்!
பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்துகொள்வது என்பதன் அர்த்தம், அதன்
அடிப்படையில் அது எதனால் ஆனது என்பதைப்பற்றியதல்ல! மாறாக, அது
முடிவாக என்னவாகஆகக்கூடும் என்பதை, அதன் பரிணாமப்போக்கில் என்
னென்னவாக இதுவரை ஆகியுள்ளது என்பதன் தர்க்கரீதியான தொடர்ச்சி
எதைச்சுட்டுகிறது என்பதை உய்த்துணர்ந்து புரிந்துகொள்ளவேண்டும். ஒரு
(வளர்ந்த) மனிதனைப் புரிந்து கொள்வதற்கு அம்மனிதனின் குழந்தைப்
பருவம் சிறிதளவு மட்டுமே உதவக்கூடும். ஆனால், பிரபஞ்சத்தைப் புரிந்து
கொள்ள முயலும் விஞ்ஞானிகள், வெறும் சடப்பொருளாலான பிரபஞ்சப்
பகுதியை மட்டுமே ஆராய்ந்து கொண்டுள்ளனர். உண்மையில், சடப்பொரு
ளாலான பிரபஞ்சம் என்பது பிரபஞ்சத்தின் குழந்தைப்பருவம் போன்றதே!
மேலும், ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் "உண்மை" என்பது அணுத்துகளின்
ஆழத்திலோ, அல்லது, பேரண்ட வெளியில் தொலைதூரத்திலோ ஒளிந்து
கொண்டிருக்கவில்லை! இன்னும் உயிரியல் மண்டலத்திலோ, அல்லது,
அனைத்து உயிரினங்களையும்விட ஆக உயரிய வளர்ச்சிபெற்ற தலைமை
விலங்கான மனிதனின் விஞ்ஞான மூளைக்குள்ளோ ஒளிந்திருக்கவில்லை!
உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு, பெரிய பெரிய தொலை நோக்கிகளும்,
மின்னணு நுண்ணோக்கிகளும், துகள்-உடைப்பான்களும்(Particle Acce
lerators),யாதொரு சோதனைக்குழாயும், எதுவும் தேவையில்லை!
மாறாக, பிரபஞ்சப்பரிணாம இயக்கம் தற்போது எங்கு மையம் கொண்டுள்-
ளதோ அங்கே தான் உண்மையைத் தேடவேண்டும். பண்பினடிப்படையில்,
ஒரு 'பெரு-வெடிப்பு' நிகழ்வில் சடப்பொருளாக(அணுத்துகள்கள்)தோன்றிய
பிரபஞ்சம், உயிர்ப்பண்பாக எழுந்து, தற்போது மனிதனுள் உணர்வாக உதய
மாகியுள்ளது. ஆம், பரிணாம ரீதியாக பிரபஞ்சமானது தற்போது ஒவ்வொரு
மனிதனின் உணர்விலும் மையம் கொண்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு
மனிதனின் உணர்வின் உள்ளேயும் ஊடேயுமாகச் சென்று, உணர்வின்
உச்சத்தை, முழுமையை அடையும் எத்தனத்தில் காத்திருக்கின்றது.!
"உண்மை" என்பது யாதொரு பௌதீகவியல் அல்லது கணிதவியல் சமன்-
பாட்டு வடிவிலோ, அல்லது, வேறு எவ்வகை புனிதமிக்க ஒற்றை, அல்லது,
இரட்டை எழுத்துக்குறியீட்டு வடிவிலோ அமைந்திருக்கும்ஒன்றல்ல! மாறாக
உணர்வின் உச்ச நிலையே உண்மையாகும். அதை "முழு-உணர்வு" அல்லது
"பேருணர்வு" எனவும் குறிப்பிடலாம். இது உண்மை பற்றிய தகவல் மட்டுமே,
"முழு-உணர்வு" அல்லது "பேருணர்வு" தான் உண்மை என்று சொல்லிக்
கொண்டிருப்பதால் ஒரு பயனும் விளையாது!
மாறாக, ஒவ்வொரு மனிதனும் தனது உணர்வில் பெருகி உயர்ந்து ஒப்பற்ற
அந்த உச்சத்தை நேரடியாக அடையப்பெற்றாக வேண்டும். அதற்கு முதலில்
ஒவ்வொருவரும் உணர்வுக்கு வந்தாக வேண்டும் - உண்மையில், தான் ஒரு
உணர்வுதான் என்ற உணர்வுக்கு வந்தாக வேண்டும்.
இப்போது, நாம் மீண்டும் விஞ்ஞானம் பற்றிய பிரச்சினைக்கு வருவோம்.
விஞ்ஞானம் பற்றி விஞ்ஞானிகளிடமும், பரவலாக பொது மக்களிடமும்
வழங்கிவரும் ஒரு தவறான கருத்து அல்லது நம்பிக்கை என்னவென்றால்,
'விஞ்ஞானமானது அனைத்துக்கேள்விகளுக்கும் தன்னகத்தே பதில்களைக்
கொண்டிருக்கிறது' என்பதுதான். இது ஒரு அப்பட்டமான பிரமையே தவிர
வேறில்லை. இது ஒரு நேர்மறையான நம்பிக்கை, அல்லது அறிவுப்பூர்வமான
ஒரே அணுகுமுறை என சிலர் கருதலாம். ஆனால், இது ஒரு ஆபத்தான மூட-
நம்பிக்கையாகும். அதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம். மிக
அடிப்படையானதும்,அதி முக்கியமானதுமான கீழ்க்காணும் கேள்விகளுக்கு
விஞ்ஞானம் இதுவரை என்ன பதில்களை அளித்துள்ளது என்பதைப் பார்ப்
போம்.
1. உலகம் அல்லது பிரபஞ்சம் பற்றி விஞ்ஞானம் என்னசொல்கிறது?
(விஞ்ஞானத்தின் உலகப்பார்வை)
2. மனிதனைப்பற்றி விஞ்ஞானம் என்னசொல்கிறது?
(மனிதனைப்பற்றிய விஞ்ஞானப் பார்வை)
3. வாழ்க்கையைப்பற்றி விஞ்ஞானம் என்னசொல்கிறது?
(வாழ்க்கைப்பற்றிய விஞ்ஞானப் பார்வை)
4 .உண்மை அல்லது மெய்ம்மை பற்றி விஞ்ஞானம் என்னசொல்கிறது?
( உண்மை அல்லது மெய்ம்மை பற்றிய விஞ்ஞானப் பார்வை)
முதலாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்கான விளக்கங்களை,
அதாவது விஞ்ஞானப்பார்வையின் மட்டுப்பாடுகளை போதுமானஅளவிற்கு,
இக்கட்டுரையிலும், இதற்கு முந்தைய கட்டுரையிலும் அலசிவிட்டோம்.
தேவைப்படுமெனில் ஆங்காங்கே காண்போம்.
இப்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது கேள்வியை எடுத்துக்கொள்
வோம். ஏனெனில், மனித ஜீவியைப்பற்றிப் பேசும்போது அவனது வாழ்க்கை
யைக் கணக்கில் கொள்ளாமல் பேச முடியாது. இதற்கு முக்கியக் காரணம்,
மனிதனாவன் விலங்குஜீவிகளின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்
டதொரு வாழ்க்கைக்காக உருவானவன் ஆவான்!
பிரபஞ்சவியல் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு மனிதனை
விட பிரபஞ்சத்தைப்பற்றி மிக அதிகமாகத்தெரியும். (இவ்விடத்தில், உலகம்
அல்லது பிரபஞ்சம் என்பதும், உண்மை அல்லது மெய்ம்மை என்பதும் ஒன்
றல்ல என்பதை நினைவில் கொள்வோம்!). உயிரியல் விஞ்ஞானிகளைப்
பொறுத்தவரை அவர்களுக்கு மனிதனைவிட விலங்கினங்களைப் பற்றியே
அதிகம் தெரியும்! ஆக, பாமர மக்களுக்கும், இன்னும் விஞ்ஞானிகளுக்கும்
அதிகம் தெரியாத ஒரு அம்சம் எதுவென்றால் அது 'மனிதன்' தான்!
'விலங்கினங்களில் ஆக உயர்ந்த வளர்ச்சியடைந்த விலங்குதான் மனிதன்'
என்பதற்கு மேல் விஞ்ஞானமானது மனிதனைப்பற்றி உருப்படியாக வேறு
எதையும் வெளிப்படுத்தவில்லை! இன்னும், இன்றைய நவீன உயிரியலாளர்
களைப்பொறுத்தவரை, மனிதன் என்பவன் உயர்வளர்ச்சியடைந்த விலங்கு
கூட அல்ல; மாறாக, பிற விலங்குகளுக்கு மத்தியில் மனிதனும் ஒரு விலங்கு
மட்டுமே என்கின்றனர்! அதாவது, மனிதனுக்கு யாதொரு தனிச்சிறப்பான
மதிப்பும், அந்தஸ்தும் இல்லை என்கின்றனர்!
டார்வினிய (சார்லஸ் ராபெர்ட் டார்வின்-1809-1882)பரிணாமக்கோட்பாட்டின்
படி, உயிரின் தோற்றத்திற்கு யாதொரு குறிக்கோள்-சார்ந்த விளக்கத்தை
யும் தேடுவதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. நாம் இங்கிருக்கிறோம்,
ஏனெனில் நாம் பரிணமித்துள்ளோம் - அதாவது, பரிணாமத்தின் விளை-
பொருளாக நாம் இங்கிருக்கிறோம். மேலும், யாதொரு குறிப்பிட்ட காரணத்
திற்காகவும் பரிணாமம் நிகழ்ந்திடவில்லை. ஆக, டார்வினிய பார்வையின்
படி, எவ்வகையிலும் நம் மனித இனம் தனிச்சிறப்பானதுமல்ல, அதோடு நம்
வாழ்க்கையும் இறுதியாக குறிக்கோளற்றது, அர்த்தமற்றது ஆகும்.
டார்வினின் பரிணாமக்கோட்பாடு சொல்வது என்னவென்றால், பரிணாமம்
குறிக்கோளற்றது, இலக்கற்றது! அது போலவே, வாழ்க்கைக்கும் யாதொரு
குறிக்கோளும் இல்லை, இலக்கும் இல்லை, அர்த்தமும் இல்லை. வெறுமனே
உயிர்-பிழைத்திருப்பது, அதற்காக சந்ததிகளைப் பெருக்கிச் செல்வது என்-
பதற்கு மேல் ஒன்றுமில்லை என்கிறது!
டார்வினின் கோட்பாட்டைத் தழுவி, பின்னாட்களில் உருவான 'புதிய டார்வி
னியம்' (Neo-Darwinism) என்ன சொல்கிறது என்றால், அதாவது உயிரி
யலாளர், ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்களின் " சுயநலங்கொண்ட மரபணு ",
(1976) எனும் தனது நூலில்,
"நாம் 'உயிர்-பிழைப்பு எந்திரங்கள்', ஆனால், 'நாம்' என்பது
மனித இனம் மட்டுமல்ல. அனைத்து விலங்கினங்கள், தாவரங்கள்,
நுண்ணியிரிகள், வைரஸ்கள் எல்லாம் சேர்ந்தவைதான். பூமியின்
மீதுள்ள ஒட்டு மொத்த 'உயிர்-பிழைப்பு' எந்திரங்களை'க் கணக்கிடு
வது இயலாததாகும். அவ்வாறே மொத்த உயிரினங்கள் எத்தனை
என்பதும் தெரியாது."
டார்வினைப் பொறுத்தவரை அவர் நம்மை ஒரு விலங்காகவாவது கணக்-
கில் சேர்த்துக்கொண்டார்! ஆனால், டாக்கின்ஸ் அவர்கள் நம்மை ஒரு உயிர்-
பிழைப்பு " எந்திரமாக"ச்சுருக்கிவிட்டார்! அதிலும், உயிர்பிழைப்பது என்பது
உண்மையில் நாமல்ல! மாறாக, நம்மை ஒரு ஊர்தியாக, ஒரு கருவியாகப்
பயன்படுத்திக்கொண்டு பிழைப்பது DNA என்று குறிப்பிடப்படும் "மரபணு"
தானாகும்! மேலும் டாக்கின்ஸ் சொல்கிறார்:
"பல்வேறு வகைப்பட்ட உயிர்-பிழைப்பு எந்திரங்கள் புறத்தேயும் அவற்
றின் உள்ளுறுப்புகளிலும் மாறுபட்டுத்தெரிகின்றன. ஒரு ஆக்டபஸ்
என்பது ஒரு சுண்டெலி போன்றிருப்பதில்லை, இவ்விரண்டும் ஒரு ஓக்
மரத்திடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் அவை அவற்
றின் அடிப்படை ரசாயண அமைப்பில் ஒரே தன்மையிலானதாகவே
உள்ளன, குறிப்பாக, அவ்வுயிரிகள் தாங்கியுள்ள 'பிரதியெடுப்பான்கள்'
(Replicators), அதாவது மரபணுக்கள், நம் அனைவருள்ளும், ஒரு
நுண்ணுயிரியிலிருந்து யானைகள் வரை யாவும் அடிப்படையில் ஒரே
வகைப்பட்ட மூலக்கூறுகளேயாகும். நாம் அனைவரும் DNAஎனப்படும்
'பிரதியெடுப்பான்-மூலக்கூறுகளின்' உயிர்-பிழைப்பு எந்திரங்களே.
ஆனால், இவ்வுலகில் உயிர்-பிழைப்பதற்கு பல்வேறுவகைப்பட்ட
வழிகள் உள்ளன. அப்பிரதியெடுப்பான்கள் தம் நோக்கத்தை ஏய்த்து
நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு பரந்தகன்ற வகைகளிலான
எந்திரங்களை (உடல்களை) உருவாக்கியுள்ளன. ஒரு குரங்கு என்பது
மரங்கள் மீதிருந்தவாறு மரபணுக்களைப் பாதுகாத்திடும் எந்திரம்
ஆகும். ஒரு மீன் என்பது நீரிலிருந்தவாறு மரபணுக்களைப் பாதுகாத்
திடும் எந்திரம் ஆகும். ..... DNA மூலக்கூறுகள் புதிரான வழிகளில்
செயல்படுகின்றன..."
(ரிச்சர்ட் டாக்கின்ஸ், " சுயநலங்கொண்ட மரபணு " பக்.25 )
டாக்கின்ஸ் அவர்களின் கூற்றின்படி, மரபணுக்கள் ( DNA மூலக்கூறுகள்)
மட்டுமே பிரதானமானவை, அவை தான் "உயிர்க்கரு" . மரபணுக்கள் இருக்
கின்றன; அவைதம்மைத்தாமே பிரதியெடுத்துக்கொண்டு, தம்மைப்பெருக்
கிக்கொள்வதற்காக, எத்தனையெத்தனை அவதாரங்கள் (உடல்கள்) எடுத்
தாலும், அவை எலியின் வடிவத்திலிருந்தாலும், அல்லது மனிதனின் வடிவத்
திலிருந்தாலும், இன்னும் கோடாணுகோடி வடிவங்களை எடுத்தாலும், அடிப்
படையில், அவற்றின் சாரத்தில் எல்லா உயிரினங்களும் ஒன்றுதான் எனும்
பட்சத்தில், அதாவது, மரபணுக்கள் தம்மைத்தாமே பிரதியெடுப்பதற்கான
வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்கள்தான் உயிரினங்கள்(species)என்-
றால், இவ்வாறு வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்களை, அல்லது ஊர்தி
களை, அதாவது வெவ்வேறு இட-அமைவுகளுக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு
தகவமைந்து உயிர்-பிழைப்பதற்கான கருவிகளைக் கட்டமைப்பதற்கான
ஒரு வழிமுறைதான் 'பரிணாமம்' என்றால்; அதிலும், மரபணுக்கள் தம்மைத்
தாமே பிரதியெடுத்துப் பெருகி நிலைப்பதைத் தாண்டி, அம்மரபணுக்களுக்
கும், பரிணாமத்திற்கும் வேறு குறிக்கோளும், இலக்கும் இல்லை எனும் பட்
சத்தில், பரிணாமம் பற்றிய ஆய்வுகளும், கோட்பாடுகளும் எதற்கு, அவற்றி
னால் என்ன பயன்?
டாக்கின்ஸ் அவர்களைப்பொறுத்தவரை,அவர் ஒன்றேஒன்றை மட்டும்தான்
சொல்லவில்லை, அதாவது, DNA எனப்படும் மரபணுக்கூறு தான் 'கடவுள்'
என்று அவர் சொல்லவில்லை! அவர் அதை வெளிப்படையாகச்சொல்லாவிட்
டாலும்,அவரது கூற்றுகள்யாவும் அதைத்தான்குறிக்கின்றன!எவ்வாறெனில்
முதல் உயிர் அல்லது முதல் மரபணு எவ்வாறு தோன்றியது என்பது அவருக்
கும் தெரியாது; அவரது ஆசான், டார்வினுக்கும் தெரியாது! முதல் மரபணு
எவ்வாறோ தோன்றிவிட்டது எனும் முன்-நிகழ்வின் தொடர்ச்சியான தொரு
வழிமுறையைத்தான் 'பரிணாமம்' எனும் சொல்லைக்கொண்டும், 'இயற்கை
தேர்வு'(Natural Selection)எனும் நுட்பமுறையைக்கொண்டும் டார்வின்
தனது பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கினார்.
அதே நேரத்தில், பரிணாமம் பற்றிய கருத்துகளும், உலகப்பார்வையும் மிக
நெடுங்காலமாக நிலவிவந்துள்ளன. கிரேக்கத் தத்துவஞானி சாக்கரடீசுக்கு
முந்தைய தத்துவ ஞானியான அனாக்ஸிமேண்டர் (610-546,கி.மு),பரிணாமம்
பற்றிய பார்வையைக்கொண்டிருந்தார். அதாவது, உயிரானது உயிரற்றதிலி
ருந்து தோன்றியது எனவும், மனிதன் விலங்கினத்திலிருந்து உருவானவன்
எனவும் அனாக்ஸிமேண்டர் சொன்னதாகக்கூறப்படுகிறது. ஆக,பரிணாமம்
என்பது டார்வினுடைய புதியகண்டுபிடிப்பு அல்ல. டார்வினுடைய கோட்பாட்
டில் உள்ள புதுமை என்னவென்றால், எவ்வாறு உயிரினங்கள் ஒன்றிலிருந்து
இன்னொன்று தோன்றின என்பதற்கான 'இயற்கைத்தேர்வு' எனும் நுட்ப-
முறையை (mechanism)க் கொண்டு விளக்கியதுதான்.
ஆனால், டார்வினுடைய "உயிரினங்களின் தோற்றம்"(1859) நூலானது, உயிரி
னங்களின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத்தவிர பிற எல்லாவற்
றையும் விளக்கியது என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஹார்வர்டு பல்-
கலைக்கழகப் பேராசிரியர், எர்னஸ்ட் மேயர் (Ernst Mayr), புதிய-டார்
வினியத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர், தனது 91-வது வயதில்,
2001-ல், "டார்வின், உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்கிற பிரச்சினை
யைத் தீர்க்கத் தவறிவிட்டார்" என்பதாக எழுதினார்.
ஆனால், நம்முடையபிரச்சினை உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது
அல்ல! மாறாக, உயிரினங்கள் ஏன் தோன்றின, இன்னும் துல்லியமாகச்
சொன்னால், "உயிர்" ஏன் தோன்றியது என்பதுதான். உயிர் ஏன் தோன்றியது
என்பதை முதலில் அறிந்துகொள்ளாமல், உயிர் எவ்வாறு தோன்றியது என்-
பதை அறிந்துகொள்வதால் அதிகம் பயனில்லை!
நிச்சயம் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கும், அதைத்தழுவிய பிற
'புதிய-டார்வினியம்' போன்ற விஞ்ஞானவகைப்பட்ட பரிணாமக்கோட்பாடு
களுக்கும் உரியதொரு இடமுள்ளது. அவ்விடத்தைக்கடந்து அவற்றிற்கு அள
வில்லா முக்கியத்துவமும், மையத்துவமும் அளிக்கஇடமில்லை. மேலும்,ஒரு
வகையில், டார்வினின் பரிணாமக்கோட்பாட்டை விஞ்ஞானப்பூர்வமானது
தான் என எடுத்துக்கொண்டாலும், அதுவே பரிணாமத்தின் இறுதிச்சொல்
அல்ல! இன்னும், பழைய-டார்வினியத்துடன் மரபணுவியலையும் சேர்த்து
உருவாக்கப்பட்ட 'புதிய-டார்வினிய' மாகட்டும்; இன்னும் உயிரியலாளர்
களான, எட்வர்டு ஓ. வில்சன் (Edward O.Wilson),ஸ்டீஃபன் ஜே கௌல்ட்
(Stephen Jay Gould),மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ்( Richard Dawkins)
போன்றவர்களின் பெரும்பங்களிப்புகளாகட்டும், பரிணாமத்தின் அனைத்-
துப் பரிமாணங்களையும் அவை தொட்டுவிடவில்லை! முக்கியமாக பரிணா
மம் என்பது வெறும் 'உயிரியல்' கோளத்திற்குரியது மட்டுமல்ல என்பதை
நாம் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
அடுத்து, டார்வினியக்கோட்பாடாகட்டும், இன்னும் அதைத் தழுவியமைந்த
அனைத்து விஞ்ஞான வகைப் பரிணாமக் கோட்பாடுகளாட்டும் அவை
அனைத்தும் மிக மேலோட்டமானவையே. ஏனெனில், அவை அனைத்தும்
உயிரியல் தளத்தை மையப்படுத்துபவை, அல்லது, உயிரியல் தளத்துடன்
நின்றுவிடுபவை. எட்வர்டு ஓ. வில்சன் அவர்கள் சமுதாயம், மதம், ஆகியவற்
றையும் உயிரியல் தளத்தின் நீட்சியாகக்காட்ட முனையும் புனிதக் காரியத்
தைச் செய்தார்; அல்லது, யாவற்றையும் உயிரியலுக்குச் சுருக்கிவிடத் துடித்
தார் எனலாம்! மேலும், பரிணாமம் என்பது உயிரியல் தளத்திற்கு மட்டுமே
உரியது அல்ல, அல்லது பரிணாமம் என்பது உயிரியல் தளத்தின் தத்துப்
பிள்ளையல்ல. மாறாக, உயிரியல் தான் பரிணாமத்தின் தத்துப்பிள்ளை
யாகும். ஏனெனில், பரிணாமம் எனும் குடையின் கீழ்தான் பொருளியல்,
உயிரியல், மற்றும் உணர்வியல் யாவும் இடம்பெறுகின்றன. ஆகவே பரிணா
மத்தை தங்களது ஏகபோக உடமையாகச் சொந்தம் கொண்டாடுவதற்கு
உயிரியலாளர்களுக்கு யாதொரு உரிமையும் இல்லை! பரிணாமம் குறித்-
தும், டார்வினிய பரிணாமக் கோட்பாடு, மற்றும் பிற விஞ்ஞான வகைப்பட்ட
பரிணாமக் கோட்பாடுகளின் மட்டுப்பாடுகள் குறித்தும் இன்னொரு தனிக்
கட்டுரையில் காண்போம்.
உயிரானது உயிரற்ற சடப்பொருளிலிருந்துதான் தோன்றியது என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை, கடவுளை மையமாகக்கொண்ட
படைப்புக் கொள்கையாளர்களுக்கு இவ்வுண்மை கசப்பாக இருக்கலாம்.
ஆனால், விஞ்ஞானிகளைப்பொறுத்தவரை இவ்வுண்மை இனிப்பாகத்தான்
இருக்கும். ஏனெனில், ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள, உயிர்,
உணர்வு (மனிதன்) என அனைத்தையும் அடிப்படை அணுத்துகள்களாகச்
சுருக்கிக் காண்பதை பெரும் சாதனையாகவல்லவா அவர்கள் கருதுகிறார்
கள்!ஆனால், அடிப்படைக்கேள்விகளைப்பொறுத்தவரை, "எல்லாம் பொருள்
மயம்!" எனும் விஞ்ஞான அடிப்படைவாதத்திற்கும், " எல்லாம் கடவுள் மயம்!"
எனும் மத அடிப்படைவாதத்திற்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை
எனலாம்!
உயிரற்ற சடப்பொருளிலிருந்து உயிர் பரிணமித்தது என்பதை வேறு வழி-
யில்லாமல்தான் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில், இயற்-
கையைத்தவிர்த்து கடவுளுக்கோ,வேறு இயற்கைமீறிய சக்திக்கோ உயிரை
உருவாக்கும் ஆற்றலை விஞ்ஞானிகள் விட்டுத்தர விரும்புவதில்லை! அதே
வேளையில், சடப்பொருளிலிருந்து 'உயிர்' ஏன் பரிணமிக்க வேண்டும், இன்
னும், உயிருள்ள ஜீவியிலிருந்து 'மனம்' அல்லது 'உணர்வு' ஏன் பரிணமிக்க
வேண்டும்; அதற்கான நோக்கம், காரணம் என்ன என்பதையெல்லாம் விஞ்
ஞானிகள் ஆராய்ந்தறியத் தயாராயில்லை. ஆகவேதான் சொல்கிறோம்,
'பரிணாமம்' என்பது ஒரு சொல், அதைக்கொண்டு நிகழ்ந்தேறிய பரிணா
மத்தின் மிகமேலோட்டமானதொரு வழிமுறையை அல்லது அதன்போக்கை
விளக்க முற்படுகிறார்களே தவிர, உயிரியல் விஞ்ஞானிகள் பரிணாமம் என்
றால் என்ன என்பதை இதுவரை விளக்கவேயில்லை! ஏனெனில், அவர்களுக்
கும் அது என்னவென்று தெரியாது!
டார்வினின் "உயிரினங்களின் தோற்றம்" நூலைப்பொறுத்தவரை, அது இரு
பிரதான நோக்கத்தைக்கொண்டிருந்தது எனலாம். முதலாவது, பரிணாமம்
என்பது நிகழ்ந்துள்ளது என்ற வாதத்தை முன்வைப்பது (அதாவது படைப்புக்
கொள்கைக்கு மாற்றாக). இரண்டாவது, எவ்வாறு பரிணாமம் நிகழ்ந்தது என
'இயற்கைத் தேர்வு' எனும் நுட்ப-முறை(mechanism)யைக்கொண்டு விளக்கு
குவது. அதே நேரத்தில், 'இயற்கைத்தேர்வு' எனும் நுட்ப-முறை, இயற்கை
யாளர், ஆல்ஃபிரட் வாலஸ் (Alfred Wallace) என்பவராலும் தனித்துக்
கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இன்னும் வேறு பலராலும் குறிப்பு காட்டப்பட்ட
தாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும், டார்வினின் 'இயற்கைத்
தேர்வு' மாபெரும் கண்டுபிடிப்பு என தத்துவவாதியான டேனியல் டென்னட்
(Daniel Dennett) போன்றோர் கூறுகிறார்கள்.
ஆனால், இதிலுள்ள பெரும்பிரச்சினை என்னவென்றால், உலகையும், அதில்
உயிரையும் வடிவமைத்துப் படைப்பதற்கு ஒரு கடவுளும் இல்லை எனும்பட்
சத்தில், அந்த இடத்தை 'இயற்கை' எடுத்துக்கொள்ள இயலாது என்பதுதான்
அப்பிரச்சினை! அதாவது, இயற்கை என்பது உள்ளது; ஆனால், அதனால்
எதையும் தேர்வு செய்ய இயலாது என்பதுதான் உண்மை நிலையாகும். ஏனெ
னில், இயற்கையும், உயிர்-ஜீவிகளும் வெவ்வேறு அல்ல! இயற்கையானது
உயிர்-ஜீவிகளுக்கு முந்தையதுதான் என்பதால், அதனால் 'தேர்வு' செய்யவி
யலும் என்பது தவறான கணிப்பு, அல்லது கருத்து ஆகும்! உயிர்-ஜீவிகள்
உண்மையில் இயற்கையின் கிளைப்பு போன்ற வளர்ச்சி நிலையே (out-
growth)ஆகும்.
டார்வினிய பரிணாமக் கோட்பாடு சுட்டுவது போல, 'சுற்றுச்சூழல் மனிதர்
களுக்காக உருவாக்கப்பட்டதல்ல, மாறாக, மனிதர்கள் சுற்றுச்சூழலுக்குப்
பொருந்தும் வகையில் பரிணமித்தனர்' என்பது தவறாகும். உண்மைஎன்ன
வெனில், சுற்றுச்சூழலும் (உயிரியல் மண்டலம்) உயிர்-ஜீவிகளும் ஒரு சேரத்
தான் பரிணமித்தன! ஆக, உண்மை இதுவானால், "உயிர்-பிழைத்தலுக்கான
போரட்டம்" (struggle for survival) என்பதும், " வலியது பிழைக்கும்"
என தவறாகத் திரிக்கப்பட்ட, "பொருத்தமானதே பிழைக்கும்" (survival
of the fittest) எனும் கூற்றுக்களும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பா
னவை ஆகும். ஏனெனில், தற்போது பூமியில், 80,00,000 க்கும் மேற்பட்ட உயிரி
னங்கள் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர். பூச்சி இனங்களைப் பொறுத்த
மட்டில், 30,00,000 வகைகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது! அவற்றில் ஒவ்-
வொரு வகையிலும் தனிப்பூச்சிகள் மில்லியன் மில்லியன் மில்லியன் எனப்
படுகிறது! மனிதஜீவிகள் மட்டும் 700 கோடிக்கும் மேலாக உள்ளனர்! ஆக,
எவ்வாறு இத்தனை லட்சோபலட்சம் உயிரினங்களும், கோடாணுகோடி தனி
உயிரிகளும் டார்வின் கூறிய "உயிர்-பிழைத்தலுக்கானபோரட்டம்" என்பதி
லிருந்தும்", " வலியது மட்டுமே பிழைக்கும்" எனும் நிலைமையிலிருந்தும்
தப்பின?
உண்மைதான், இயற்கைச் சூழலில் உயிரினங்களுக்கிடையேயும், தனி ஜீவி
களுக்கிடையேயும், உயிர்-பிழைத்தலுக்கான போட்டியையும், போராட்டத்
தையும், பரஸ்பர அழிவையும் கடந்து பரஸ்பர ஒத்துழைப்பும்(symbiosis)
உடன்-இணைந்து பரிணமிப்பதும் (co-evolution) இல்லாவிடில், இன்று
இத்தனை லட்சோபலட்சம் உயிரினங்களும், கோடாணுகோடி தனி உயிரி
களும் இருக்கமுடியாது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், டார்வின்
தனது கோட்பாட்டை பெரிதும் ஊகத்தின் அடிப்படையிலும்,மேலோட்டமான
ஆய்வு விபரங்களைக்கொண்டும் அமைத்துள்ளார் என்பது தான். அதாவது,
பரிணாமம் என்பது நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மையைத்தவிர,அவரது
முடிவுகள்பலவும் தவறானவை! அவரது முடிவுகளில் சரியானவை என்பவை
யும் மேலோட்டமானவை, அல்லது வெளிப்படையானவை. ஆக, டார்வினின்
பரிணாமக் கோட்பாட்டைக்கொண்டு நம்மால் பரிணாமத்தை சரியாகவும்,
முழுமையாகவும் புரிந்துகொள்ளமுடியாது!
டார்வினின் தவறானமுடிவுகளில் பிரதானமானவை எவையெனில், பரிணா
மத்திற்கு குறிக்கோள் கிடையாது என்பதும், பரிணாமத்திற்கு யாதொரு
திசைப்போக்கும்(direction)கிடையாது என்பதும், அதாவது வளர்ச்சி,முன்
னேற்றம் என்பதுமில்லை என்பதுமேயாகும். இயற்கைத் தேர்வைப் பற்றி
பிரமாதமாகப் பேசும் டார்வின், அதே நேரத்தில், இயற்கையின் தேர்வானது
குருட்டுத்தனமானது, உணர்வற்றதுமானது என்கிறார். 'உயிர்-பிழைப்புப்
போராட்டத்தில்' ஈடுகொடுத்து வெற்றிகரமாகத் தகவமையும் ஜீவிகளை
இயற்கை தேர்வு செய்கிறது என்பதாக டார்வின் கூறியுள்ளார். காலப்போக்
கில் மாற்றங்களைத் திரட்டிக்கொண்டு அந்த ஜீவிகளிலிருந்து புதிய இனங்
கள் தோன்றுவதாகக் கூறியுள்ளார்.
இது ஒரு மாபெரும் முரண்பாடாகும், அதாவது, குறிக்கோளற்றதும், எவ்வித
திசைப்போக்கற்றதும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாததுமான ஒரு
பரிணாம வழிமுறையில் புதிய உயிரினங்கள் தோன்றுகின்றன என்பது
முரண்பாடல்லாமல் வேறென்ன? புதிது புதிதாக உயிரினங்கள் தோன்றி
'உயிர்-பிழைப்புப்போராட்டத்தில்' ஈடுகொடுத்து வெற்றிகரமாகத் தக-
வமைந்து, தமது சந்ததிகளைப் பெருக்கி, தொடர்ந்து வெறுமனே உயிர்-
பிழைத்திருப்பதன் வழியாக உயிரினங்கள் என்ன சாதிக்கின்றன? இந்த
"அர்த்தமற்ற பிழைப்பு" பரிணாமத்தினால் விளைந்தாலென்ன, அல்லது
கடவுளின் படைப்பால் விளைந்தாலென்ன? இந்த அர்த்தமற்ற நிலைமை
விலங்குகளுக்கு மட்டுமானதல்ல; மனிதஜீவிகளுக்கும் இதே கதிதான் என
டார்வினிய தத்துவம் போதிக்கிறது!
மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் தம்தம் சந்ததிகளைப்
பெருக்கிச் செல்வதைக்கடந்து 'வாழ்க்கை' என்பதற்கு வேறு குறிக்கோள்,
இலக்கு ஏதுமில்லை என டார்வினிய பரிணாமக் கோட்பாடு போதிக்கிறது!
பிரபஞ்சத்தில் மனிதஜீவிகளின் 'தனிச்சிறப்பான' இடத்தைப்பற்றிச் சொல்-
லும் போது, பேராசிரியர் லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss)சொன்னது :
"நாம் வெறும் ஒரு துளி மாசு (pollution)தான். ...நாம் துடைத்து
நீக்கப்பட்டாலும், இப்பிரபஞ்சம் அப்படியே எப்போதும் போலத்
தான் இருக்கும். நாம் முற்றிலும் பொருத்தமற்றவர்கள்."
ஆனால், இப்பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கூற்றுகள் (அவர்க
ளுடைய சொந்த தனித்துறைகளைத்தாண்டிய அம்சங்களைப்பற்றிய கூற்-
றுகள்) யாவும் தவறானவை மட்டுமல்ல, பெரிதும் அபத்தமானவையாகும்!
ஏனெனில், பரிணாமம் குறிக்கோளுடையது, இலக்குடையது, வளர்ச்சி, முன்
னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மனித வாழ்க்கை அர்த்தம் உள்ளது,
இலக்குடையது. பிரபஞ்சத்தில், மனிதனுக்கென பரிணாமரீதியிலான ஒரு
மையத்துவமான இடமும், பணியும், பாத்திரமும் உள்ளது.
டார்வினிலிருந்து டாக்கின்ஸ் வரை, உயிரியல் விஞ்ஞானிகள் விளக்கிக்
கூறிய 'பரிணாமம்' மேலோட்டமானது, பிழையானது, மற்றும் கொச்சையா
னது. அவர்கள் பரிணாமத்தை தங்கள் 'விலங்கின-உயிரியலுக்குள்' அடக்கி
விட எண்ணுகிறார்கள். அவர்கள் இன்னும் பரிணாமத்தின் வால் நுனியைக்
கூடத் தொட்டதாகத் தெரியவில்லை! ஒருவேளை, அவர்கள் கூறும் 'பரிணா
மம்' வேறு வகைப்பட்டதாக இருக்கலாம்! ஏனெனில், வளர்ச்சி,முன்னேற்றம்
ஆகியவையற்ற, குறிக்கோளற்ற, இலக்கற்ற ஒரு இயக்கத்தை 'பரிணாமம்'
எனும் சொல்லைக்கொண்டு குறிப்பிட முடியாது!
இப்போது நாம், இக்கட்டுரை எழுப்பிய மையப்பிரச்சினைக்கு வருவோம்.
ஆம்,மனிதனைப்பற்றியும், மனிதவாழ்க்கையைப்பற்றியுமான விஞ்ஞானப்
பார்வை என்ன? மனிதனைப்பற்றியும்,மனிதவாழ்க்கையைப்பற்றியும் அது
என்ன சொல்கிறது? டார்வின் தொடங்கி, எட்வர்டு ஓ. வில்சன் (Edward O.
Wilson),ஸ்டீஃபன் ஜே கௌல்ட்(Stephen Jay Gould),மற்றும் ரிச்சர்ட்
டாக்கின்ஸ்( Richard Dawkins) ஆகியோரின் கோட்பாடுகளின் மூலமாக
விஞ்ஞானம் சொல்வ தென்னவென்றால்,
மனிதன் ஒரு விலங்கு, இன்னும் சொல்லப்போனால், 'சுய நலம்
கொண்ட' மரபணு ( DNA) மூலக் கூறுகளால் ஏய்த்து மேய்க்கப்
படும் ஒரு விலங்கு. ( DNA) மூலக்கூறுகளைப் பெருக்குவதற்கு
உதவுவதைத்தாண்டி அவனது வாழ்க்கைக்கு வேறு குறிக்கோளோ,
இலக்கோ, அர்த்தமோ எதுவும் கிடையாது!
இவைதான் மனிதனைப்பற்றியும், மனிதவாழ்க்கையைப்பற்றியும் விஞ்ஞா
னம் கூறுகிற அரிய உண்மைகள் ஆகும்! டார்வினின் பரிணாமக்கோட்பாடு
பெரிதும் மட்டுப்பாடானது மற்றும் அதனுடைய உணர்த்துகோள்கள் யாவும்
பிழையானவை அல்லது தலைகீழானவை என்றபோதிலும், தத்துவச் சிந்த-
னையாளர்களிடம் மட்டுமே புழங்கி வந்த 'பரிணாமம்' எனும் கருத்தை அது
சர்ச்சைகளின் மூலமாக பரவலாக பொது மக்களிடமும் கொண்டு சேர்த்த
காரியத்திற்காக அதை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்! டார்வினின்
பரிணாமக்கோட்பாட்டைப்பொறுத்தவரை, அது, மனிதன் எவ்வாறு அல்லது
எதிலிருந்து தோன்றினான் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு
பதிலளிக்க முயன்று தோற்றுப்போனது என்று தான் சொல்லவேண்டும்.
ஏனெனில், அதன் விளக்கங்கள் பெரிதும் இயற்கைவாதம் மற்றும் பொருள்
முதல் வாதம் சார்ந்தவையாகத் தேங்கிப்போயின! .....
ஆனால், பரிணாமம் என்பது மனிதன் குரங்கிலிருந்து அல்லது வேறு எதிலி
ருந்து வந்தான் என்பதைப்பற்றியது மட்டுமல்ல - அது அவனது பரிணாமக்
கடந்தகாலம் பற்றியது மட்டுமே! மாறாக, பிரதானமாக மனிதன் இனி எது-
வாக,எத்தகைய மெய்ம்மையாகப் பரிணமிக்க இருக்கிறான்,அல்லதுபரிண
மிக்கவேண்டும் என்பதிலேயே அவனது பரிணாம வருங்காலமும், இலக்கும்,
இன்றைய அர்த்தபூர்வமான வாழ்வும், யாவும் பின்னிப்பிணைந்துள்ளன.
மனிதனின் பிறப்பும், தொடக்கநிலையும் விலங்கையொத்ததாக இருப்
பினும், அவன் கொண்டுள்ள தனிச் சிறப்பான "உணர்வு" எனும் அம்சத்தில்
அவன் தொடர்ந்து பரிணமிப்பானெனில், மேன்மேலும் உணர்வில் வளர்ந்து
எழுவானெனில் அவன் அடையக்கூடிய உச்சம் மட்டுமே அவனது முழுமை
யையும் அவன் உண்மையில் யார் என்கிற உண்மையையும் அவனுக்கு
உணர்த்துவதாயிருக்கும்!
மா.கணேசன்/16.8.2016
-------------------------------------------------
No comments:
Post a Comment