Tuesday, 29 July 2025

'பெரு வெடிப்பு'க்கு முன் என்ன இருந்தது?

 



 

 

 

 

 

 

"பெரு வெடிப்பு" [Big Bang Theory] என்பது பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய ஒரு விஞ்ஞானக் கோட்பாடாகும். ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் பொருண்மையும் [Matter], கனபரிமாணமற்ற ஒரு புள்ளியில் அடர்ந்திருந்ததாகவும், அதன் உள்ளார்ந்த அழுத்தம் தாங்காமல் வெடித்து இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும், அவ்வெடிப்பில் தோன்றிய பிரபஞ்சம் இன்றளவும் பரந்து விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானம் கூறுகிறது.

இக்கோட்பாட்டின்படி, அவ்வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது எனப்படுகிறது. பெரு வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், அவ்வெடிப்பிற்கு முன் எந்த 'வெளி' [Space] யில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் யாவும் இருந்தன என்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

மேலும், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்டால், அப்படிக் கேட்பது அர்த்தமற்றது என பெரு வெடிப்புக் கோட்பாட்டாளர்கள் மிரட்டுகின்றனர்.  இந்த விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் திறந்த மனதுடன் மெய்ம்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக, பருப்பொருள் அதாவது சடப்பொருள்தான் முதன்மையான, சாசுவதமான, யாவற்றுக்குமான அடிப்படையான நிஜம் அல்லது மெய்ம்மை என அடித்துச் சொல்லும் கூச்சமில்லாத பொருள்முதல்வாதிகளாகத் திகழ்கின்றனர்.  

ஆனால், இந்தப் பொருள்முதல்வாதிகளின் கூச்சலைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. கேட்க வேண்டிய கேள்விகளை தர்க்கரீதியாக நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். ஆம், பெரு வெடிப்புக்கு முன் என்ன, எத்தகைய மெய்ம்மை இருந்தது? ஒரு வெடிப்பில் தான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், பெருவெடிப்புக்கு முன் ஒரு பொருளல்லாத [Non-Material]  மெய்ம்மை தான் இருந்திருக்க வேண்டும்! இனி அது எத்தகைய பண்பு கொண்ட மெய்ம்மை, என்பதைக் கண்டறிவதுதான் நம்முன் உள்ள சவாலாக இருக்கமுடியும்.

இதுவரை நாம் அறிந்த அம்சங்களுள் மனம் அல்லது உணர்வு [Consciousness] என்பது தான் பொருள் தன்மை கலவாத அம்சம் ஆகும். அதையும் கூட பொருள்முதல்வாதத்தினால் பீடிக்கப்பட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதில்லை. மனம் அல்லது உணர்வு என்றோரு விசயமே இல்லை என்று சாதிக்கிறார்கள். ஆம் விஞ்ஞானத்தின் அனைத்துத் துறைகளிலும் இந்த பொருள்முதல்வாத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளைப்போல் ஊடுருவி விட்டுள்ளனர்!

அதே நேரத்தில், எவ்வித சார்பு நிலையும் கொள்ளாத, திறந்த மனதுடைய சில விஞ்ஞானிகளும் இருக்கவே செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான்
மேக்ஸ் ப்ளாங்க் [Max Planck] எனும் விஞ்ஞானி; இவர் 1963-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர்தான் குவாண்டம் எந்திரவியலின் [quantum mechanics] தந்தை எனப்படுபவர். இவரது கூற்றுப்படி, "உணர்வு [Consciousness] தான் யாவற்றுக்கும் அடிப்படையான நிஜம். பொருள் என்பது உணர்விலிருந்து பெறப்பட்ட ஒன்று. உணர்வே ஒட்டு மொத்த பொருளாலான உலகிற்கும் அடியோட்டமான ஆழமான நிஜம்" என்றாகிறது.

அடுத்து, எர்வின் ஷ்ரோடிங்கர் [Erwin Schrödinger] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது பொருளின் ஒரு தயாரிப்போ/ விளை பொருளோ அல்ல; வெறுமனே மூளைச் செயல்பாட்டின் ஒரு துணை விளைவு,அல்லது இரண்டாம் பட்ச வெளிப்பாடோ அல்ல. மாறாக, உணர்வு தான் அடிப்படையான நிஜம் - பகுக்கவியலாத ஒற்றைத் தனி நிஜம் ஆகும்" என்றார்.

அடுத்து, யூஜின் விக்னர் [Eugene Wigner] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது ஒரு பொருளல்லாத [non-physical entity ] சுயாதீன இருப்பு கொண்ட அம்சம்; அது பௌதீக உலகுடன் வினைபுரியும் ஒன்று...." என்றார்.

அடுத்து, டொனால்ட் ஹாப்மேன் [Donald Hoffman], இவர் ஒரு Cognitive Science விஞ்ஞானி ஆவார். இவரும் உணர்வுதான் பௌதீக உலகின் அடிப்படையான நிஜம் என்றார்.

அடுத்து, க்ரிஸ்டோஃப் கோச் [Christof Koch], Neuroscientist; ராபர்ட் லேன்ஸா [Robert Lanza], Stem cell and regenerative medicine ;  ரோஜர் பென்ரோஸ் [Roger Penrose], Mathematical physics, David Chalmers, [philosopher]; Philip Goff, [philosopher]; Annaka Harris, [science editor] என இத்தனை விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும் உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் எடுத்துச்சொல்லியும் பொருள்முதல்வாதக் குட்டையில் ஊறிய விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் விஞ்ஞானப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் மறுத்து வருகின்றனர். இந்த அடாவடிக் காரர்கள் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளைக் கூட மதிப்பதில்லை!

இந்த பொருள்முதல்வாதிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

இந்தக் குழப்பவாதிகளுக்கு மத்தியில் எவ்வாறு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் நிறுவுவது என்பது பெரும் சவாலான விசயமே!
நாம் மீண்டும் பிரதான விசயத்திற்கு வருவோம். ஆம், பொருளாலான பிரபஞ்சத்தின் பிறப்புக்கு முன்னர், அதாவது பெருவெடிப்புக்கு முன்னர் பொருளல்லாத ஒரு விசேட அம்சமான உணர்வே இருந்தது. இதை  நிறுவுவதற்கு நாம் பரிணாம வரலாற்றின் போக்கையும் அதன் அசலான இலக்கையும் புரிந்துகொள்வது அவசியமாகும். அதற்கு முன்னர் பொருள் என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பதையும் ஆராய்ந்தறிந்தாக வேண்டியது முக்கியமாகும்.

முதன்முதலில், பெரு வெடிப்பில் தோன்றியது பொருள், பருப்பொருள், சடப்பொருள் எனப்படும், உயிரற்ற, உணர்வுமற்ற பொருள்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை! ஆனால், அப்பொருள் எப்படி வந்தது? பொருள்முதல்வாதிகள் சொல்வது போல், "பொருள் சுயம்புவாக தன்னில் தானாகத் தோன்றியதாக, என்றென்றும் சாசுவதமாக இருக்கும் ஒரு பொருள்" என்பதை நம்மால் ஏற்கவியலாது. அது தர்க்கவியலின் படி தவறானதாகும். பண்பளவில் உயிரற்ற, உணர்வுமற்ற பொருள் [பொருளும், சக்தியும் ஒன்றே என்றாலும் கூட] எவ்வாறு தன்னில் தானாகத் தோன்றிட இயலும்? முக்கியமாக, பெருவெடிப்பில்தான் இப்பொருள் தோன்றியது எனும் பட்சத்தில், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வி மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் பெறுவதாகிறது.

"கடவுள்தான் உலகைப் படைத்தவர்!" என்று இறையியலாளர்களும், ஆத்திகவாதிகளும் சொல்லும் போது, "அந்தக் கடவுளைப் படைத்தது யார், எது?" என பொருள்முதல்வாதிகளும், நாத்திகவாதிகளும் கேட்டு கொக்கரிக்கின்றனரே; அதேபோல் "பொருள் எவ்வாறு எங்கிருந்து வந்தது, அதைப் படைத்தது எது, யார்?" என்று கேட்டால் பொருள்முதல்வாதிகள் என்ன சொல்வார்கள்; அவர்கள் முகங்களை எங்கே புதைத்துக் கொள்வார்கள்?!

சரி, இந்த இரண்டு அணிகளும், அவர்களுடைய கூச்சல்களும் ஒரு புறம் இருக்கட்டும். ஆம், எந்தவகையிலும் பொருள் என்பது சுயம்புவாக தானே தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை.  நிச்சயமாக, பெரு வெடிப்புக்கு முன் பொருளல்லாத ஒரு மெய்ம்மை இருந்திருக்க வேண்டும். அதை நாம் உணர்வு என்கிறோம்; ஆனால், அது மனித உணர்வோ, அல்லது கடவுளோ அல்ல! நாம் கூறும் உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது!

இதை எவ்வாறு நாம் சொல்கிறோம் என்றால், பெருவெடிப்பின் போது பொருள் மட்டும்தான் தோன்றியது. காலம், வெளி என்பவையும் கூட பொருண்மையான அம்சங்களே என்பதால், இவற்றையும் நாம் பொருண்மை [Material] என்பதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், பெருவெடிப்பில் தோன்றிய இப்பொருளானது சும்மா இருக்கவில்லை. மாறாக அது ஒரு நீண்ட நெடிய பரிணாம நிகழ்வு முறைக்கு உட்படுவதாகிறது. அதாவது பொருளானது பரிணமித்து ஒரு கட்டத்தில் உயிராக(உயிரியாக)எழுகிறது! அந்த உயிரியானது மேன்மேலும் பரிணமித்து ஒரு கட்டத்தில் உணர்வுள்ள ஜீவியாக [அதாவது மனித ஜீவியாக] எழுகிறது! இப்போது மனித ஜீவிகளாகிய நாம் நம் மனதின் உணர்வைக் கொண்டு சிந்திக்கிறோம், நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுமுள்ள பரந்த பிரபஞ்சத்தையும் ஆராய்கிறோம். அப்படியானால், இந்த உணர்வு எங்கிருந்து வந்தது? பெருவெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்பது தெரியவில்லை என்று வைத்துக்கொள்வேம்; ஆனால், பெருவெடிப்புக்குப் பின் மாபெரும் பிரபஞ்சம் எழுந்தது மட்டுமல்ல, அதில் ஒரு கட்டத்தில் உயிர்ப் பண்பு அதாவது உயிருள்ள ஜீவிகள் தோன்றின; பிறகு ஒரு கட்டத்தில் உணர்வுப் பண்பு அதாவது உணர்வுள்ள ஜீவிகளான நாமும் தோன்றினோம்! இந்த உயிர்ப்பண்பும், உணர்வுப்பண்பும் சடப் பிரபஞ்சத்தில், எவ்வாறு, ஏன் தோன்றியது? பொருள், உயிர், உணர்வு இம்மூன்றும் துல்லியமாக தனித்த பண்புகளைக் கொண்டவையாகும். பண்பளவில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட அம்சங்களாகும். இம்மூன்று பண்புகளும் இப்பிரபஞ்சத்தில் ஒத்திசைவுடன் இணைந்திருக்கின்றன.

மனித ஜீவிகளாகிய நாம் தவளைகளைப் போல சிந்திக்கும் மனமோ, உய்த்துணரும் உணர்வோ இல்லாதவர்களாய் இருந்தால், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியே எழுந்திருக்காதல்லவா? ஆகவேதான், இவ்வாதங்களையும் தர்க்கங்களையும் வைத்துத் தான் சொல்கிறோம், "உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது! ஆகவே, பெரு வெடிப்புக்கு முன் ஒரு விசேட பெரும் உணர்வு தான் இருந்தது. அந்த பேருணர்வு தான் உருமாறி பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆனது. பிறகு அப்பொருளானது பரந்து விரியும் பிரபஞ்சமுமானது!" என்கிறோம்.

அறிவு குழம்பிய பொருள்முதல்வாத விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் சொல்கிறார்கள், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்பது அர்த்தமற்றது என்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், 'பெருவெடிப்பு' என்பது ஒரு 'நிகழ்வு' மட்டுமல்ல, அதையே அவர்கள் 'கடவுள்' என்பதாக வழிபட்டு வருகிறார்கள் போல!

பொருளை முதன்மையானதாகவும், யாவற்றுக்கும் அடிப்படையானதாகவும், சாசுவத பரம்பொருளாகவும்  கருதும் பொருள்முதல் வாதிகள் எவரும் "பொருள் என்றால் என்ன?" என்பதைப்பற்றி உருப்படியாக இதுவரையிலும் எதையும், எந்த முறையான தெளிவான விளக்கத்தையும்  தரவில்லை.

ஆனால், நம்மால் சொல்ல முடியும், 'பொருள்' என்பது உயிரற்ற, உணர்வுமற்ற ஒன்று; ஆனால், அப்பொருள் தன்னகத்தே அளப்பரிய உள்ளுறையாற்றலைக் கொண்ட ஒரு பரிணமிக்கும் பொருளாகும். பொருள் என்பது தன்னில் எவ்வகையிலும் முடிவானதோ, இறுதியானதோ அல்ல. அது ஒரு பரிணாமக் கருவி, ஒரு பரிணாம் ஊடகம், அல்லது கட்டுமானப் பொருள் என்கிறவகையில் பொருளானது முதன்மையானதாக இல்லாவிட்டாலும் முக்கியத்துவமான மெய்ம்மையாகும்.

பெருவெடிப்பில் தோன்றிய பொருளானது ஏன் அப்படியே பொருளாக, வெறும் அணுத் துகள்களாகவே இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு தனிமங்களாகவும், மூலகங்களாகவும் ஆயின. ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து பெரும் வாயுக்கூட்டமாக சுற்றிச் சுழன்று 'நெபுலா' வாகவும், அதிலிருந்து கேலக்ஸிகளாகவும், பிறகு எண்ணற்ற நட்சத்திரங்களாகவும், பிறகு கிரகங்களாகவும் ஆயின. பிறகு ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சூரியனைச் சுற்றிச் சுழலும் எட்டு கிரகங்களில் ஒன்றான பூமிக் கிரகத்தின் மீது ஏன் உயிருள்ள ஒரு 'ஸெல்'லாக எழ வேண்டும்?  பிறகு ஒரு ஸெல் உயிரியானது பரிணமித்து பல ஸெல் உயிரிகளாகவும், அடுத்து ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் எனவும் உருவாக வேண்டும். அப்பாலூட்டிகளில் ஒரு இனமாக சிந்திக்கும் திறனுள்ள, உணர்வு கொண்ட மனித ஜீவிகள் ஏன் உருவாக வேண்டும்? மொத்தத்தில், பொருள் ஏன் பொருளாகவே நில்லாமல் பல்வேறு பண்புகளில் அமைந்த ஜீவிகளாக ஆக வேண்டும்? அதாவது, பொருள் ஏன் பரிணமிக்கும் பொருளாக ஆனது?

ஏனென்றால், பொருளின் பொருண்மைப் பண்பு [Materiality] என்பது அதன் அசலான பண்பு அல்ல! ஆகவேதான் அது தனது அசலான முகத்தை, பண்பைத் தேடிச் செல்லும் நெடிய பரிணாமப் பயணத்திற்கு உட்படுவதாயிற்று! அதாவது, பரிணமிக்கும் பொருளாக, பரிணாமக் கருவியாக, ஊடகமாக, கட்டுமானப் பொருளாக ஆகியது. பொருளானது அதனுடைய பொருண்மைபண்பிலேயே நிலைகொண்டு நிற்க முடியாது! பரிணமிக்கும் பொருள் என்றவகையில் பொருளையும், பரிணாமத்தையும் பிரிக்கவியலாது. பரிணாமத்திற்கு வெளியே பொருளுக்கு யாதொரு அர்த்தமும் கிடையாது!

உண்மையில், உணர்வு தான் பொருளின் அசலான முகமும், பண்பும் ஆகும். அந்த அசலான உணர்வு நிலையை நோக்கியதாகத்தான் அதன் முழு விழைவும் உள்ளது. உணர்வின் ஆகச் சுருங்கிய நிலை தான் பருப்பொருள் என்பதாகும். தன்னைத்தானே மறைத்துக்கொண்ட, சுருக்கிக்கொண்ட உணர்வின் ஒரு வடிவம் தான் பொருள் என்பதாகும்!

இப்போது நாம் விஞ்ஞான ஆதியாகமத்தை மாற்றி எழுதிடுவோம். "இருள் என்பது மிகக் குறைந்த ஒளி!" என்று குறிப்பிடுவது போல, "பொருள் என்பது மிக மிகக் குறைந்த உணர்வு!" என்று சொல்லலாம். ஆம், ஆதியில் உணர்வு, ஒரு 'பேருணர்வு' இருந்தது! அது 'வெடித்து' உருமாறி பருப்பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆகியது! அந்த ஆதிப் பேருணர்வு தற்போது பரந்துவிரியும் இந்த பிரபஞ்சமாகவும், அதில் எண்ணற்ற உயிரினங்களாகவும், முக்கியமாக உணர்வில் பெருகி வளரும் மானுட ஜீவிகளாகவும் இருக்கிறது! ஆனால் மானுட ஜீவிகள் பரிணாம நிகழ்வுமுறையின் இறுதிச் சொல் அல்ல. ஏனென்றால், அவர்களுடைய உணர்வு இன்னும் சிற்றுணர்வாகவே உள்ளது. மானுடர்களில் 99.9% இன்னும் விழிப்படையாமலேயே தங்களது அன்றாடத்திலேயே அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றனர்! நீண்ட நெடிய ஒப்பற்ற பரிணாமத்தின் இறுதி இலக்கு, மனிதனின் உணர்வின் உள்ளேயும், ஊடேயுமாகச் சென்றுயர்ந்து மீண்டும் பேருணர்வை எட்டுவதே ஆகும். தன்னையிழந்து பிரபஞ்சமாக மாறிய பேருணர்வு தன்னை மீள் கண்டுபிடிப்பு செய்வதொன்றே ஆகும். பரிணாமமானது இந்த ஒப்பற்ற இலக்கை ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் அடையவிருப்பதுதான் பரிணாமம் மனிதனுக்கு அளித்துள்ள முக்கியத்துவமாகும்!
 
இந்த பரிணாமப் பொறுப்பைத் தாண்டி மனிதனுக்கு வேறு யாதொரு பெருமையும், தனியொரு வாழ்க்கையும் கிடையாது. மனிதன் என்பவன் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பரிணாமக் கருவியாவான்!

மா.கணேசன்/ 28.07.2025/ நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

No comments:

Post a Comment

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...