Wednesday, 24 January 2018

பெரும்பணக்காரர்கள் - மானிடகுலத்தின் புற்றுநோய்!





   தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை
   அழித்திடுவோம்!
                    - பாரதி

   பகட்டு நிறைந்த செல்வச்செழிப்பு என்பது அபத்தமான வகையில்
   அலங்கரிக்கப்பட்ட அன்றாடம், பிறழ்ச்சியாக மதிப்பேற்றப்பட்ட
   சாதாரணம், அதாவது வீண் ஆடம்பரமே தவிர வேறல்ல!

                    - அர்த்தமற்ற அரசியல்/மா.கணேசன்

பணக்காரர்களுடைய பொருளதார அந்தஸ்து என்பது வானளாவிய செல்வத்
திற்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பதன் -- அதாவது அவர்களுடைய கடின
உழைப்பு, புத்திசாலித்தனம், மற்றும், சீரிய முயற்சியின் பிரதிபலிப்பு என்பதாக
பரவலாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், அல்லது நம்பவைக்கப்
பட்டிருக்கிறார்கள்! ஆனால், இது சிறிதும் பொருந்தாதக் கூற்றாகும்! ஏனெனில்,
வெறும் ஒரு சதவிகிதத்தினர் (அமெரிக்காவில்), அல்லது வெறும் 10% பேர்கள்
மட்டுமே (இந்தியாவில்) வானளாவிய செல்வத்திற்குத் தகுதியானவர்கள்;
அவர்கள் மட்டுமே கடினமாக உழைக்கிறார்கள், புத்திசாலிகள், சீரிய முயற்சி
யாளர்கள் என்பது எவ்வகையிலும் உண்மையல்ல!

"நான் பணக்காரனாக ஆகப்போகிறேன் என்பதை நான் எப்போதும் அறிந்திருந்
தேன். அது குறித்து எப்போதாகிலும் ஒரு நிமிடம் கூட நான் சந்தேகித்தேன்
என நான் எண்ணவில்லை!" என அமெரிக்காவின் பணக்காரர்களில் இரண்டாம்
இடத்தில் இருக்கும் வாரண் பஃபெட் (Warren Buffett)கூறுகிறார். ஆனால்,
அதேநேரத்தில், அவர் எப்போதாவது தான் ஒரு மனிதனாக இருப்பது என்றால்
என்ன என்பது பற்றியும், என்றாவது ஒரு நாள் மனிதனாக ஆவது பற்றியும்
சந்தேகம் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே!

தற்போது 85 வயதாகும் வாரண் பஃபெட், தனது மொத்த சொத்துக்களில்
பாதியை தானமாகத் தருவதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகச்
சொல்லப்படுகிறது! இது தேவையற்ற வேலை; முதலிடத்தில் தனது உண்மை
யான தேவைகளை உணர்ந்து அதற்குரிய அளவிற்கு பணம் சம்பாதித்து
வாழாமல், எதற்காக அளவிற்கு மீறி பணம் சம்பாதிக்கவேண்டும், பிறகு அதி
லிருந்து தானமாக அளித்திடுகிறேன் பேர்வழி என்று விளம்பரப்படுத்த
வேண்டும்?

இக்கட்டுரை பணக்காரர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியினால் எழுதப்பட்டதல்ல;
மாறாக, அவர்களுடைய அதீதமான பிறழ்ச்சி மனப்பான்மை, குறிப்பாகச்சொன்
னால், அவர்களுடைய தகுதியற்ற உயர்வு மனப்பான்மையைச் சகிக்க முடியா
மையால் எழுதப்பட்டதாகும்! அதாவது, வானளாவிய பெரும் செல்வத்திற்கு
அவர்கள் மட்டுமல்ல, எவருமே தகுதியானவர்கள் அல்ல! செல்வம் என்பது
ஒருவருக்கோ, அல்லது, குறிப்பிட்ட ஒரு சிலருக்கோ சொந்தமானதல்ல!
செல்வம் என்பது ஒரு ஆற்றைப் போல, அல்லது சமுத்திரத்தைப் போல
யாவருக்கும் பொதுவானதாகும்! ஒரு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை
எவரும் தமக்குத் தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ளலாமே தவிர,
மொத்த ஆற்றையோ, சமுத்திரத்தையோ எவரும் சொந்தம் கொண்டாட முடி
யாது! செல்வம் என்பதும் ஆற்றையும், சமுத்திரத்தையும் போலத்தான்!

செல்வம் என்பது முற்றிலும் ஒரு சில பணக்காரர்களின் உருவாக்கமோ,
படைப்போ அல்ல!

செல்வம், அல்லது, பொருள்-வளங்களுக்கான அடிப்படை, பணம் படைத்தவர்
களின் முதலீடு மட்டுமே அல்ல! அதாவது செல்வத்தின் அடிப்படைகளில்
ஒரே ஒரு காரணி மட்டுமே பணம், அல்லது, முதலீடு என்பதாகும்! மிகவும்
அடிப்படையான காரணிகளானவை பூமி, பூமியின் இயற்கை வளங்கள், நிலம்,
நீர், காற்று, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளங்கள், முக்கியமாக சக மனிதர்கள்,
அதாவது, மக்கள் சமுதாயம், மற்றும் அவர்களது உழைப்பும், யாவற்றுக்கும்
மேலாக அனைவருக்கும் பொதுவான வாழ்க்கைத் தேவைகளும்தான் பொருள்
வளங்களின் (செல்வத்தின்) உருவாக்கத்திற்கும், உற்பத்திக்குமான அடிப்படை
களாகும்!

பொருளாதார நடவடிக்கைகள் என்ற போர்வையில், நாம் சுரண்டி கொள்ளை
யடிக்கும் இயற்கை வளங்களுக்கு, அதாவது, நாம் உருவாக்கும் பொருள்
வளங்கள், அல்லது, செல்வத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும், டாலருக்கும் நாம்
இப்பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும், உழப்பைத்தரும் ஒவ்வொரு மனிதருக்
கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு,
"நான்தான் முதலீடு செய்தேன், ஆகவே, ஒட்டுமொத்த செல்வத்தையும் நானே
எடுத்துக்கொள்வேன், எல்லாமே எனக்குத்தான் சொந்தம், என உரிமை கொண்
டாடுவதற்கு இப்பூமியில் எவருக்கும் உரிமை கிடையாது! அவ்வாறு உரிமை
கோருபவன் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும், முட்டாளாகவும்,
பேராசை பிடித்த மிருகமாகவும்தான் இருக்க முடியும்! அத்தகைய தொரு
முட்டாளின் பெயர் தான் "பெரும்பணக்காரன்" (மில்லியினர், பில்லியினர்)
என்றால், இனியும் அத்தகைய நடைமுறையை நாம் அனுமதிக்கலாகாது!

உலகின் ஒட்டுமொத்த 760,00,00,000 (760 கோடி) மக்கள்தொகையில்,  மிகவும்
வறுமையிலுள்ள பாதி மக்கள், அதாவது, 360,00,00,000 (360 கோடி) மக்களின்
சொத்துக்களுக்குச் சமமான சொத்துக்களை, வெறும் 62 பேர்கள் (உலகின்
பெரும் பணக்காரர்கள்) வைத்திருக்கிறார்கள்! அதாவது, 360,00,00,000 பேர்கள்
கூட்டாக பகிர்ந்து அனுபவிக்கும் மொத்த சொத்து சுகங்களை வெறும் 62 பேர்
கள் மட்டுமே உடமையாகக் கொண்டிருக்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்!
அதாவது, 62 = 360,00,00,000 (வெறும் 62 பேர்கள் 360,00,00,000 பேர்களுக்குச்சமம்!)
எனும் இச் சமன்பாட்டை அறிவார்ந்த எந்த ஒரு மனிதனும் ஏற்றுக்கொள்
வானா?

பணக்காரர்களிடமுள்ள செல்வம் அவர்களைப் போலவே பயனற்றதாகும்!
மண்ணிற்குள் புதைக்கப்பட்டு மறைந்துகிடக்கும் புதையலைப் போன்றதே
பணக்காரர்களிடம் சிக்கிய செல்வம்!

ஆகவே, செல்வம் சேர்ப்பதற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும்!
ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வளவு தான் நிலம், மனை, பிற ஏணைய
சொத்துக்கள் உடமையாக இருக்கவேண்டும்; ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல்
சொத்துக்களைச் சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்கான வாய்ப்புக்களைப்
பறிப்பதாகும் எனக் கருதப்படவேண்டும்! ஒருவர் எத்தனை தொழிற்சாலை
களை அமைக்கலாம், பராமரிக்கலாம் என்பதற்கும் ஓர் உச்சவரம்பு வேண்டும்!

ஒரு 'தொழிலதிபர்' என்பவர், எண்ணற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருந்
தாலும், சங்கிலித்தொடர் போன்ற வியாபார நிறுவனங்களைக் கொண்டிருந்
தாலும், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட படி, அவருடைய தொழிற்சாலைகளில்
பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த லாபத்திலிருந்து
ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படவேண்டும்;
அதே போல, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும்
(உயிரியல் மண்டலத்திற்கு ஏற்படும் பாதகங்களைச் சரிகட்டுவதற்கும்), இயற்
கையிடமிருந்து எடுக்கப்பட்ட வளங்களைச் சரிகட்டுவதற்கும், அல்லது புதுப்
பிப்பதற்குமான தொழில் நுட்பங்களுக்குச் செலவிடவேண்டும்! அனைத்து
லாபங்களையும் தொழிலதிபதிரே சுருட்டிக்கொண்டு போய்விடுவதை இனியும்
அனுமதிக்கலாகாது! அவர் போட்ட முதலீட்டிற்குரிய நியாயமான சதவிகிதம்
மட்டுமே அவருக்குச் செல்லவேண்டும்! அந்த சதவிகிதமும் ஒரு குறிப்பிட்ட
அளவைத் தாண்டுமானல், அதற்கும் அவர் வரி கட்டவேண்டும்!

இத்தகைய யோசனைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் சிலருக்கு
கிறுக்குத்தனமாகத் தோன்றினால், அவர்கள் முன்வந்து பொருளாதார ஏற்றத்
தாழ்வை சரி செய்வதற்கான சரியான யோசனைகளைக் கூறட்டும்! அல்லது
உலக மக்களின் கூட்டுழைப்பினால் உருவாக்கப்பட்ட செல்வம் மற்றும்
பொருள் வளங்களில் ஐந்தில் நான்கு பகுதியானது எவ்வாறு மொத்த உலக
மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவிகிதம் பேர்களின் உடமையாக ஆனது
என்பதற்கான நியாயத்தை சொல்லட்டும்!

பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையிலான இடைவெளியானது கடந்த
பத்தாண்டில் மலைக்கும் மடுவுக்குமான அளவு அதிகரித்துள்ளது. பணக்காரர்
கள் தொடர்ந்து மேன்மேலும் செல்வங்களையும், சொத்துக்களையும் அடையப்
பெறுகிறார்கள்! ஏழைகளோ ஏழைகளாகவே தங்கிவிடுகின்றனர். இருவருக்கு
மான இந்த இடைவெளியானது வருமானப்பங்கீட்டில் உள்ள சமமின்மையைச்
சுட்டுவதாயுள்ளது! இதற்கான காரணங்கள் யாவை! எவ்வாறு இந்த பெரும்
இடைவெளியைப் போக்குவது? கல்வி வாய்ப்புக்கள் பணம் படைத்தவர்களுக்கு
மட்டுமே கிடைப்பதாயுள்ளது; ஆகவே, அவர்கள் மட்டுமே குறிப்பிட்ட துறை
களில் முதலிடமும், தலைமையும் பெறுவதற்கான தளத்தை எட்டுகிறார்கள்!
சிலர், கல்வி எனும் ஆசிர்வாதம் ஏழைகளுக்கும் எளிதாக, அல்லது இலவச
மாகக் கிட்டும் வகையில் அரசு ஆவன செய்யவேண்டும், அவ்வழியே, ஏழைக்
கும், பணக்காரனுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முடியும்
என்கிறார்கள்!

ஒரு ஆய்வறிக்கையானது, இந்த இடைவெளிக்குக் காரணம், கலாச்சாரம்,
உள்ளார்ந்த திறன், உலகமயமாதல், கல்வி, தொழில் சந்தைகள், வரி விதிப்பு
திருத்தங்கள், அரசுக்கொள்கைகள், தொழில் நுட்ப மாற்றங்கள், பாலினம்,
இனவாதம், சம்பள வித்தியாசங்கள் போன்றவை பிரதானமானவை என்கிறது!

ஆனால், மேற்குறிப்பிட்ட காரணிகளில், "உள்ளார்ந்த திறன்" எனும் விஷயம்
உண்மையில் விஷமத்தனமானதாகும்! ஏனெனில், மனிதஜீவிகள் இப்பூமியில்
உயிர்-வாழ்வதற்கு, தனித்திறன், அல்லது விசேடத் திறன் ஏதும் வேண்டுமா?
திறன் குறைந்தவர்கள், அல்லது, விசேடத் திறமையற்றவர்கள் கௌரவமான
வகையில் வாழ்வதற்கான உரிமை இல்லையா? அல்லது, ஏழைகள், வறிய
வர்கள், எனப்படுவோர், புழு பூச்சிகளைப் போல் வெறுமனே உயிர்-பிழைப்
பதற்கு மட்டும்தான் தகுதியானவர்களா? அப்படித்தானே இப்பூமியின் மீது
360,00,00,000 (அதாவது,360 கோடி) மக்கள் உயிர்-பிழைத்துக்கொண்டிருக்கிறார்
கள்! இந்த ஈனப் பிழைப்பிற்காக அவர்கள் மிகக் கடுமையாக உழைக்கவும்
வேண்டும், அதனுடன், உயிர்- பிழைத்திருப்பதற்கு அரசுக்கு வரியும் கட்ட
வேண்டும்! ஆனால், வெறும் 62 பேர்கள், பெரும் பணக்காரர்கள், அவர்கள்
மட்டும்தான் அபரிமிதமான செல்வங்களோடு ஆடம்பரமாகவும், ஊதாரித்தன
மாகவும் வாழ்வதற்கான தகுதியுடையவர்களா? அவர்கள் வாழ்கிற விதத்தை
"ஆடம்பரம்" என்கிற சொல்லைக்கொண்டு குறிப்பிட முடியுமா என்று தெரிய
வில்லை! அதாவது, அளவுகடந்த ஆடம்பரத்தை "அபத்தம்" என்றுதான் கூற
முடியும்!

மனிதர்கள் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஏழைகளாகவும்
இருக்க மாட்டார்கள், பணக்காரர்களாகவும் இருக்க மாட்டார்கள்! ஏனெனில்,
'ஏழை', 'பணக்காரன்' எனும் பட்டங்கள் மனிதனை இழிவு படுத்துபவை! ஏழை
கள் என்போர் தங்களுடைய விருப்பத்தினால் ஏழைகளாக இருப்பதில்லை;
மாறாக, சமுதாயத்தால் கொண்டாடப்படும் தவறான, தலைகீழான மதிப்பீடு
களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவற்றை அடைவதற்காக சமுதாயத்தின்
"எலிப்பந்தயத்தில்" எல்லோரும் கலந்துகொள்வதன் தவிர்க்கவியலாத விளை
வாகவே ஏழைகள், 'இல்லாதவர்கள்' என்போர் உருவாகிறார்கள்! பணக்காரர்கள்
தங்கள் விருப்பத்தினால், பெரு முயற்சியினால், திறமைகளால், புத்திசாலித்
தனத்தினால் பணக்காரர்களாக ஆனவர்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்
ளலாம்! ஆனால், பணக்காரராக ஆவது, அல்லது, ஆகவிரும்புவது என்பது
மதிக்கத்தக்க, அல்லது, அர்த்தமுள்ள, வாழ்வின் இலக்கு நிலை அல்ல!

பலர், "பொருளாதார சமத்துவம்" பற்றிப் பேசுகிறார்கள். "பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லை!" என்று சொல்லப்பட்டது! ஆனால், இவ்வுலகிலேயே
நாம் எவரும் நிரந்தரமாக என்றென்றுமாய் தங்கி வாழப்போவதில்லை!
மேலும், இவ்வுலகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல; வருங்காலச் சந்ததி
யினருக்கும் சொந்தமானதாகும்; இன்னும் பிறவனைத்து உயிரினங்களுக்கும்
சொந்தமானதாகும்! உயிர்-வாழ்க்கைக்கு பொருள் மிகவும் அவசியமே! ஆனால்,
வாழ்க்கைக்கு பொருள் என்பது ஒரு ஆதாரம் மட்டுமே தவிர அதுவே வாழ்
வின் ஒட்டுமொத்தமும் அல்ல! இதன் அர்த்தம், வாழ்க்கை என்பது "உயிர் -
வாழ்தல்" என்பதுடன் முடிந்துவிடுவதோ முழுமையடைவதோ கிடையாது!
ஏனெனில் நாம் எலிகளோ, தவளைகளோ அல்ல, வெறுமனே உயிர்-வாழ்ந்து
செல்வதற்கு! நாம் மனித ஜீவிகள்! நம்முடைய வாழ்க்கை பிற விலங்குஜீவி
களுடையதைப் போன்றதல்ல! "மேன்மைபடுத்தப்பட்ட எலியின் வாழ்க்கை"
(A Glorified Rat Life)ஒருபோதும் மனித வாழ்க்கையாகிடாது!

செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கை என்பது என்ன? 'உயிர்-வாழ்தலை' மிகச்
சௌகரியமாகவும், அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும், பகட்டாகவும் மேற்
கொள்ளுதல் என்பதற்குமேல், அதாவது, "மேன்மைபடுத்தப்பட்ட ஒரு எலியின்
வாழ்க்கை" என்பதற்குமேலாக, அதில் வேறென்ன தனிச்சிறப்பு உள்ளது? 

உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது; ஏழைக்கும், பணக்காரனுக்
கும் உள்ள இடைவெளி விரிந்துகொண்டே போகிறது என்பதால், உடனே
"பொருளாதார சமத்துவம்" பற்றிப் பேசுவது பொருத்தமாகப் படலாம்! ஆனால்,
அவர்கள் எண்ணுகிற பொருளாதாரச் சமத்துவம் என்பது எத்தகையது?
அதாவது, எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயரிய "வாழ்க்கைத் தரத்தை"
சாத்தியப்படுத்துவது என்பதுதானே! ஆனால், வாழ்க்கைத்தரம் என்பது என்ன?
உண்மையில் அது எதைக்குறிக்கிறது, அல்லது எதைப் பற்றியது? வாழ்க்கைத்
தரம் என்பது "வாழ்க்கை" யைப் பற்றியதா என்றால் இல்லை என்பதுதான்
அதற்கான சரியான பதிலாகும்!

ஆம், வாழ்க்கைத்தரம் என்பது பிரதானமாக பொருட்களின் (பல்வேறுபட்ட
கருவிகள், பயன்பாட்டுச் சாதனங்களின்) தரத்தையும், எண்ணிக்கையையும்
பற்றியதாகும்! இப்பொருட்களும், அவற்றின் தரமும், எண்ணிக்கையும்
இவற்றைப் பெறுவதற்கான அடையாளச் சீட்டான பணமும் சேர்ந்து தான்
செல்வமாகவும், சொத்தாகவும் கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது! ஆனால்,
இந்த பொருட்களின் தரம் ( பணம், சொத்து, செல்வம்) எதுவும், எவ்வகை
யிலும் வாழ்க்கையை, வாழ்க்கையின் தரத்தை அளப்பதற்கான பொருத்தமான
அளவுகோல் அல்ல! ஆகவேதான், இத்தகைய செல்வச்செழிப்பால் அலங்கரிக்
கப்பட்ட, சௌகரியம் மிக்க, உயிர்- பிழைத்தல் எனும் விவகாரத்தை நாம்
"மேன்மைபடுத்தப்பட்ட எலியின் வாழ்க்கை" என்று இங்கு குறிப்பிடுகிறோம்!

ஆனால், இந்த உயர் வாழ்க்கைத்தரம் என்று சொல்லப்படுகின்ற, மேன்மை
படுத்தப்பட்ட எலியின் வாழ்க்கையை, உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்
கும்படிச் செய்யவியலாது! இதன் அர்த்தம், வெறும் ஒரு சதவிகித பெரும்
பணக்காரர்களுக்கு மட்டுமே இத்தகைய வாழ்க்கை கிடைக்கமுடியும், அவர்கள்
மட்டுமே அதற்குரிய தகுதிபடைத்தவர்கள் என்பது அல்ல!

ஏனெனில், அளவில்லா மக்கள் தொகைப் பெருக்கம், அதற்கிணையான பொரு
ளாதார நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்கிறது! பெருகிடும் நுகர்வுத்தேவை
களுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில், இயற்கை வளங்கள்
குன்றுதல், நீர் வளம் குறைவுபடுதல், நிலவளம் குன்றுதல் உடன்விளைவாக
நிகழ்கிறது; இவற்றினால் பூமியின் சுற்றுச்சூழல் மாசடைந்து  புவிக்கோளம்
சூடேறுதலில் முடிவடைகிறது! மனித இனம் தொடர்ந்து இப்பூமியில் வாழ்
வதற்குரிய அனைத்து ஆதார வளங்களையும் பெருநிறுவன முதலாளிகள்
தங்களது லாப வெறிக்கு இலக்காக்கிடும்வகையில், அதாவது, சுரண்டிக்
கொள்ளையடிப்பதனால் மனித இனத்தின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறி
யாகிக் கொண்டிருக்கிறது! முதலில், இம்மாபெரும் சுரண்டலையும், பொருளா
தாரச் செயல்பாடுகளினூடே மக்களிடமிருந்து உறிஞ்சப்படும் மாபெரும்
உழைப்புச் சுரண்டலையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

முடிவில்லாத வளர்ச்சி, முன்னேற்றம், வாழ்க்கைத்தரம் என்பவை வெறும்
மாயையே தவிர வேறல்ல!

வறுமை (ஏழ்மை) என்பது நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டியதே என்பதில்
துளியும் சந்தேகம் இல்லை! அதேபோல, வளமை (செல்வம்) என்பதும் ஒழிக்
கப்பட வேண்டியதே! ஏனெனில், வளமை, அதாவது, செல்வச்செழிப்பு மிக்க
வாழ்க்கை பற்றிய கற்பனைகளும், கற்பிதங்களும், கனவுகளும்தான் வறுமை
யைத் தோற்றுவித்தன!

'வறுமை' ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்றால், அது உயிர்-வாழ்தல் எனும்
அடிப்படையையே குலைப்பதாகிறது; மனித ஜீவிகள் உயிர்-பிழைப்பதற்காக
பிற சகமனிதர்களுடன் போட்டியிடவும் போரடவும் வேண்டும் என்பது மிகவும்

அவமானகரமானதாகும்! அது மனித குலத்திற்கே பெரும் இழுக்கு ஆகும்!
அடுத்து, 'வளமை' ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்றால், வளமை என்பது
மனித வாழ்க்கைக்கு போலியான இலக்கையும், பொய்யான அர்த்தத்தையும்
அளிப்பதாகிறது! ஆக, வளமை, வறுமை இவ்விரண்டும் அசலான மானிட
வாழ்க்கைக்கு எதிராகச் செயல்படும் இரட்டைத் தீமைகள் ஆகும்!

ஏழைக்கும், பணக்காரனுக்கும் இடையேயுள்ள பெரும் இடைவெளிக்கு ஒரு
பிரதான காரணமாக இருப்பது வருமான ஏற்றத்தாழ்வே ஆகும்! அதாவது,
ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய சேவை அல்லது உழைப்புக்குப் பெறக்கூடிய
சம்பளம் மற்றும் கூலிகளில் உள்ள பெரும் வித்தியாசம் தான் பொருளாதார
ஏற்றத்தாழ்வுக்கான பிரதான காரணமாக உள்ளது! அதாவது, ஒருவருடைய 
உழைப்புக்கான (அதாவது சேவை, பணி, உத்தியோகத்திற்கான) கூலி, சம்பளம்
எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? இக்கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது!
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, கூலி அல்லது சம்பள நிர்ணயம்
என்பது யாதொரு முறைமையும், நியதியும், அடிப்படையும் இல்லாமல் குத்து
மதிப்பாகத்தான் செய்யப்படுகிறது! இவ்வாறு செய்வதுதான் சம்பிரதாயமாக
உள்ளது; அதையே தான் நாம் அனைவரும் "பொன்விதி" யாக கடைப்பிடித்து
வருகிறோம்!

ஒரு குழாய் பொருத்துபவருக்கும், ஒரு மென்பொருள் பொறியாளருக்கும்
உள்ள சம்பள வித்தியாசத்தை எவ்வாறு சமன்செய்வது என்று கேட்டால், நம்
எவரிடமும் எந்தப்பதிலும், தீர்வும் கிடையாது - 'சமன் செய்யப்பட முடியாதது!'
என்பதைத்தவிர! "இல்லை, இந்த வித்தியாசத்தைச் சமன் செய்யமுடியும்
என்று எவராவது சொன்னால், நாம் அனைவரும் திகைத்துப் போவோம்!
ஆனால், சமன் செய்யமுடியும்! முடியும் என்று சொல்வதைவிட செய்து
முடித்தாகவேண்டும்! உண்மையிலேயே நாமனைவரும் சிந்திக்கிறவர்களாக,
சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்றால், நிச்சயம் ஒரு
குழாய் பொருத்துபவருக்கும், ஒரு மென்பொருள் பொறியாளருக்கும் உள்ள
சம்பள வித்தியாசத்தை, ஏற்றத்தாழ்வைச் சமன் படுத்திட முனைவோம்!

இப்போது, நாம் இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வருவோம்! அதாவது, "குறைந்த
பட்ச ஊதியம்" என்ற ஒன்றை நாம் அனைவரும் அறிவோம்; இந்த குறைந்த
பட்ச ஊதியத்தைக்கொண்டே சிறப்பாக வாழமுடியும் என்பதை எவ்வாறோ
அறிந்ததன் காரணத்தினால் தானே அரசாங்கம் "குறைந்தபட்ச ஊதியம்" என்ற
ஒன்றை நிர்ணயித்துள்ளது? மேலும், நாட்டில் ஏராளமானோர் இந்த குறைந்த
பட்ச ஊதியத்தைக்கொண்டுதான் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
எனும் பட்சத்தில், தேவையில்லாமல் சிலருக்கு மட்டும் எதற்கு அதிகபட்ச
ஊதியம் வழங்கிட வேண்டும்? பாரபட்சமின்றி எல்லோருக்கும் குறைந்த பட்ச
ஊதியத்தையே வழங்கிடலாமல்லவா? இவ்வழியே எல்லோருமே சுபிட்சமாக
வாழலாமே!

சந்தை மயமாகிப்போன நம்முடைய இன்றைய உலகில், ஒவ்வொரு பொரு
ளுக்கும் ஒரு விலை குறிக்கப்பட்டுள்ளது; அப்பொருட்கள் அத்தியாவசியத்

தேவைகளுக்குரியவையாயினும், அல்லது அத்தியாவசியமற்ற ஆடம்பரத்

தேவைகளுக்குரியவையாயினும்; அவற்றுக்கான விலை நிர்ணயம் எவரால்,
எங்கு, எவ்வாறு செய்யப்படுகிறது என்பது ஒருபுறமிருக்கட்டும்! அடிப்படை
வாழ்க்கைத் தேவைகளுக்குரிய பொருட்கள் எல்லா மக்களுக்கும் வேண்டு
மில்லையா? ஆனால், பொருட்களின் விலை ஒவ்வொருவருடைய ஊதியம்
அல்லது கூலிக்கு ஏற்றாற்போலில்லாமல், யாவருக்கும் பொதுவாக கறாராக
ஒரே மாதிரியாக இருக்கையில் ஒவ்வொருவருக்குமான சம்பளம், அல்லது
கூலியானது சமமாக இருப்பதில்லை என்றால் எல்லா மக்களும் எவ்வாறு
உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத்த்தேவைகளைப் பெற்று
கௌரவமான வகையில் மனித வாழ்க்கையை வாழமுடியும்?

கீரைக்கட்டுகளை வாங்கி காலை முதல் மதியம் வரை பனியில் நனைந்து,
வெயிலில் காய்ந்து விற்றுப் பிழைப்பு நடத்துகிறாள் ஒரு கீரைக்காரி! அவள்
படிக்காதவள், பட்டம் பெறாதவள், விசேடத்திறன் அற்றவள் என்பதால்
அவளுடைய வாழ்க்கைத் தேவைகள் சுருங்கிவிடுகின்றனவா? அல்லது
இன்னொரு பெண், அவள் படித்துப்பட்டம்பெற்று ஒரு மருத்துவராக பணி
செய்கிறாள் என்பதால் அவளுடைய வாழ்க்கைத் தேவைகள் திடீரென பெருகி
விடுகின்றனவா? அதாவது, ஒரு மருத்துவர் என்பதால், அதிகபட்ச சம்பளம்
பெறுவதற்கும், அதைக்கொண்டு அடிப்படைத்தேவைகள் மட்டுமின்றி, ஆடம்
பரத் தேவைகளையும் பூர்த்தி செய்து பகட்டாக வாழ்வதற்கான உரிமத்தை
அவளது உயர்-படிப்பு பெற்றுத்தந்துள்ளதா? அதிகச் சம்பளம் பெறுவதற்கான
வழிதான் உயர்கல்வியா?

வாழ்க்கைத்தேவைகள் என்பவை மனிதனுக்கு மனிதன் வேறுபடக்கூடிய
வையா? கட்டுமானத் தொழிலில், ஆண் சித்தாளுக்கு அதிகக் கூலியும், பெண்
சித்தாளுக்கு குறைந்த கூலியும் கொடுக்கப்பட வேண்டும் என்று, எந்த சட்டப்
புத்தகத்தில், அல்லது புனித நூலில் எழுதப்பட்டுள்ளது? இன்னும், பழைய
காகிதங்களையும், 'பிளாஸ்டிக்' பொருட்கள், 'பாட்டில்'களையும் பொறுக்கி
சீவனம் நடத்தும் மனிதர்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்? அவர்
கள் மனித ஜீவிகள் இல்லையா?

"அரிது, அரிது மானிடனாய்ப்பிறப்பது அரிது" என்று சொல்லப்பட்டது! ஆனால்,
பணம், செல்வம், என பொருளாதார நிலையை, தர அளவீடாகக்கொண்டு
மனிதர்களை அளப்பதன் வழியே அவர்களை ஏழைகள், வறியவர்கள், இல்லா
தவர்கள், பிச்சைக்காரர்கள் என்பதாகக் காண்கிறோமே தவிர, அவர்களை நாம்
மனிதர்களாக  காணமுடிவதில்லை என்பதற்குக் காரணம் நாம் பொருளாதார
ஏணியில் மேன்மேலும் உயர்-நிலைக்குச் செல்லவிரும்புகிறோம் என்பதைவிட
நாம் மனிதர்களாக இல்லை என்பதே ஆகும்!

இந்தியாவின், பத்து சதவிகித பணக்காரர்கள் 2000 மாம் வருடத்திலிருந்து
தொடர்ந்து மேன்மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கின்றனர், தற்போது
நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில், நான்கில் மூன்று பகுதி அவர்களுடை
யதாய் உள்ளது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நாட்டின் பத்து சதவிகித
பணக்காரர்களில் வெறும் 8 பேர்கள் முதல் எட்டு இடங்களில் உள்ளனர்!
அவர்களுடைய சொத்து மதிப்பு இதோ:

1. முகேஷ் அம்பானி (Chairman and MD of RIL)
     $19.3 billion அதாவது, 12335595000000 ரூபாய்.
2. திலீப் ஷங்க்வி (Founder of Sun Pharmaceuticals)
     $16.7 billion. அதாவது, 1233559500000 ரூபாய்.
3. அஸிம் பிரேம்ஜி (Chairman of Wipro Ltd.)
     $15 billion.அதாவது,   958875000000 ரூபாய்.
4. ஷிவ் நடார்  (Founder and Chairman of HCL)
     $11.1billion.அதாவது,  709567500000 ரூபாய்.
5.  ஸைரஸ் பூனாவாலா (who set up Serum Institute
     of India, a biotec company)
     $8.5billion. அதாவது,  543362500000 ரூபாய்.
6. லக்ஷ்மி மிட்டல் (Chairman and CEO of Arcelor Mittal)
     $8.4billion. அதாவது,  536970000000 ரூபாய்.
7. உதய் கோட்டக் (Executive vice Chairman and MD of
     Kotak Mahindra Bank)
     $6.3billion. அதாவது,  402727500000 ரூபாய்.
8. குமார் மங்களம் பிர்லா (Chairman of Aditya Birla Group)
     $6.1billion. அதாவது,  389942500000 ரூபாய்.

பணக்காரர்கள் என்றவுடன் அவர்களிடம் உள்ள பணத்தை மட்டுமே பார்த்து
வாய் பிளக்கக்கூடாது; மாறாக, அவ்வளவு பணத்தால் அவர்கள் எவ்வளவு
கேட்டை அடைகிறார்கள், பெரும் பணத்தைச் சம்பாதிக்கும் அவர்களுடைய
பேராசையால் எவ்வாறு ஏராளமான மக்களின் சோற்றில் மண்ணை அள்ளிப்
போடுகிறார்கள் என்பதையும், முக்கியமாக, "பணம்" குறித்து நாம் ஒவ்வொரு
வரும் கொண்டிருக்கும் தவறான தலைகீழான மதிப்பீடுகளையும் பார்க்க
வேண்டும்! ஒவ்வொருவரும் பணத்திலிருந்து வாழ்க்கையைப் பார்க்காமல்,
வாழ்க்கையிலிருந்து பணத்தையும், யாவற்றையும் பார்க்கமுடியுமானால்,
உலகிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்! 

நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில், நான்கில் மூன்று பகுதியானது பத்து
சதவிகித பணக்காரர்களின் வசம் உள்ளது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
நாட்டின் பத்து சதவிகித பணக்காரர்களில் வெறும் 8 பேர்கள் முதல் எட்டு
இடங்களில் உள்ளனர்! இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 134, 00,00,000
பேர்கள்! இந்த 134 கோடி மக்களில் 10 % என்பது 134,00,00,00 பேர்கள், அதாவது,
வெறும் பதிமூன்று கோடியே நாற்பது லட்சம் பேர்கள்; அதில் வெறும் 8 நபர்
களின் வசம் நாட்டின் உச்ச பட்ச சொத்துக்கள் உள்ளன!

ஆனால், "நம்நாடு பல லட்சம் கோடி கடனில் இருக்கிறது என்று சொல்லப்
படுகிறது! ஒரு சதவிகிதம் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் கோடீஸ்
வரர்களாக உள்ளனர்! மக்களோ வரிச்சுமைகளையும், பல்வேறு கடன்சுமை
களையும் சுமந்து கொண்டுள்ளனர்! யாருக்காக இவ்வளவு கடன்கள் வாங்கப்
பட்டன? நாட்டிலுள்ள பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் பல லட்சம்
கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கையில், நம் நாடு கடனில் இருக்கிறது
என்பதன் அர்த்தம் என்ன? இதில் எந்த முரண்பாடும் இல்லையா? இவர்கள்
இங்கே நம் நாட்டின் பிரஜைகள் தானா? அல்லது, வேறு அயல் நாடுகளைச்
சேர்ந்தவர்களா?

இந்தியாவின் பணக்காரர்களது சொத்துக்குவிப்பு குறித்து ஏற்றத்தாழ்வுகளுக்கு
எதிரான செயலார்வலர்கள், மற்றும், வளர்ச்சி மீது அக்கறை கொண்ட பொரு
ளாதாரவியலாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டு, நாட்டின்
58% வருமானமானது இந்தியாவின் 1%  பணக்காரர்களிடம் சென்று சேர்ந்தன
என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது! சென்ற ஆண்டு, 2017-ல், 73% சொத்துகள்
அதே 1% பணக்காரர்களின் வசமே சேர்ந்துள்ளது என சர்வதேச நிறுவனமான
ஆக்ஸ்ஃபாம் (Oxfam),22.01.2018 அன்று தனது ஆய்வறிக்கையை வெளி
யிட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் வருமான ஏற்றத்தாழ்வு மிக
மோசமாக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இத்தகைய நிலை "99% க்கு எதிரான 1%" எனும் போக்கை குறிக்கிறது! இது
எவ்வகையிலும் பகல் கொள்ளைக்கு குறைந்ததல்ல. இதனால் தான் பட்டினிச்
சாவுகளை நீங்கள் இந்தியாவில் காண்கிறீர்கள்" என உரிமைகளுக்காகப்
போராடும் செயலார்வலரும்  MKSS எனும் தொழிலாளர் சமூகத்தின் நிறுவன
ருமான நிகில் டெய் என்பவர் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்
துள்ளார்.

"இந்தியாவின் பணக்காரர்களுக்கு எவ்வெவ்வழிகளிலெல்லாம் முடியுமோ அந்த
எல்லாவழிகளிலும் சலுகைகளும், மானிய உதவிகளும் அளிக்கப்படுகின்றன.
ஏழைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நிலங்கள் எடுத்துக்
கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் அறவே இல்ல. பள்ளிகள் தனியார்
மயமாக்கப்படுகின்றன."

இந்தியாவின் முன்னனி ஆடை நிறுவனத்தின் உயர் அதிகாரி 17.5 நாட்களில்
பெறுகிற சம்பளத்தை குறைந்தபட்ச கூலி பெறும் ஒரு சாதாரண தொழிலாளி
எட்டுவதற்கு அவரது வாழ்நாட்கள் மொத்தமும் பிடிக்கும் (50 ஆண்டுகள் அவர்
வேலை செய்கிறார் எனக்கொண்டால்) என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒரு சில கோடீஸ்வரர்கள்
மட்டுமே அனுபவிப்பதாக ஆக்ஸ்ஃபாம் முதன்மைச் செயல் அதிகாரி (சிஇஓ)
நிஷா அகர்வால் தெரிவிக்கிறார். கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் காரணி அல்ல என குறிப்பிட்ட அவர்,
இது பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் தவறான போக்கை உணர்த்துவ
தாக உள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தியில் பாடுபடும் விவசாயி, கட்ட
மைப்பு வசதிக்காக உழைக்கும் உழைப்பாளி, தொழிற்சாலை பணியாளர்கள்
தங்கள் குழந்தைகளின் கல்விவளர்ச்சிக்கு பெரிதும் போராடுகின்றனர். குடும்ப
முதியவர்களின் மருத்துவ செலவுகளை ஈடுகட்டமுடியாமல் திணறுகின்றனர்.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு சம்பாதிப்பதே
பெரும் போராட்டமாக உள்ளது. இத்தகைய ஏற்றத்தாழ்வு அதிகரித்தால்
நாட்டில் லஞ்சம் அதிகரிக்கவும், குரோனி முதலாளித்துவம் உருவாக வழி
ஏற்படுத்தும் என்றும் நிஷா அகர்வால் எச்சரித்துள்ளார். [ குறிப்பு: 'குரோனியி
ஸம்' (Cronyism) என்பது, தனக்கு வேண்டியவர்களையும், உறவினர்களை
யும் வேலைவாய்ப்பு, மற்றும், அதிகார நிலைகளில் அமர்த்துதல் என்பதைக்
குறிக்கிறது. அதாவது, அதிகாரிகள் அதிகாரிகளுக்கும், முதலாளிகள் முதலாளி
களுக்கும் மட்டுமே உதவிக்கொண்டு முன்னேறிச் செல்லுதலைக் குறிக்கிறது!]

"பொருளாதாரச் சமநிலை இல்லாமையைக் குறைப்பதற்கான இந்திய அரசாங்
கத்தின் முயற்சிகள் வருத்தமளிக்கக்கூடிய அளவில் மிகவும் போதாமையாக
உள்ளது. பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் தொடர்ந்து இந்திய
நாட்டின் சொத்துகளை, வளங்களைக் கொள்ளையடிப்பதை அரசாங்கம் தடுத்து
நிறுத்திடவேண்டும்" எனவும் நிஷா அகர்வால் கூறியுள்ளார்.

நமக்காக ஆடைகளை உருவாக்கும், நமக்காக கைப்பேசிகளை ஒன்று சேர்க்கும்,
நமக்கான உணவு தானியங்களை விளைவிக்கும் மக்கள் - அதாவது, மலிவான
பொருட்களை தொடர்ந்து சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும்வகையில்
பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், மற்றும், கோடீஸ்வர முதலீட்டாளர்கள்
தங்களுடைய லாபங்களைப் பெருகச் செய்வதற்காக - பெருமளவில் ஏய்க்கப்
படுகிறார்கள் என ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் விண்ணி
பையானிமா (Winnie Byanyima) கூறுகிறார்.

தி கார்டியன் பத்திரிகை, ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள
இடைவெளியை, பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு முக்கியமானவை
எனக் கருதப்படுகின்ற ஏழு நடவடிக்கைகளில் (கீழே கொடுக்கப்பட்டுள்ளன)
எது அதிமுக்கியமானது என்று கருத்து கேட்டுள்ளது.

1.இலவசமாகவும் உயர்தரக்கல்வியையும் அரசாங்கம் வழங்கவேண்டும்.
2.குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
3.பணக்காரர்களுக்கு வரிகளை உயர்த்தவேண்டும்.
4.ஊழலை ஒழிக்கவேண்டும்.
5.ஏழைகளுக்கு அதிக சமூகப்பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
6.அரசியலில் பணக்காரர்களின் தாக்கத்தை நிறுத்தவேண்டும்.
7.வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவேண்டும்.

ஆனால், 99% மக்களின் வாழ்க்கை மூழ்கிக்கொண்டிருக்கையில், கருத்துகளை
கேட்டு, திட்டங்களைத்தீட்டி சாவகாசமாக செயல்படுவதற்கான நேரம் அல்ல
இது; உடனடியாகச் செயல்படவேண்டிய தருணம் இது! ஆயினும், இந்த 7
அம்சங்களின் பொருத்தப்பாடுகளைப் பார்ப்போம்!  இந்த ஏழில், அதிமுக்கிய
மானது என்றால், "வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவேண்டும்"
என்பதைச் சொல்லலாம், ஏனெனில், 2 வது அம்சமான "குறைந்த பட்ச
ஊதியத்தை உயர்த்த வேண்டும்" என்பதைவிட அவசர அவசியம் வேலையற்
றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதாகத்தான் இருக்கமுடியும்; ஏனெனில்,
ஏதாவதொரு தொழிலில், உத்தியோகத்தில் குறைந்த பட்ச ஊதியம் பெறுபவர்
களைவிட மிக அவலமான நிலையில் இருப்பவர்கள் வேலையற்றோர்களே
ஆவர்! ஆக, வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதுடன்சேர்த்து
குறைந்த பட்ச ஊதியத்தையும் உயர்த்திட வேண்டும்.

அடுத்தபடியாக, உடனடியாகச் செய்யமுடியக் கூடியவைகளில், முதலாவதாக
இரண்டு அம்சங்களைச் சொல்லலாம். ஒன்று, பணக்காரர்களுக்கு வரிகளை
உயர்த்துவது, இரண்டாவது, அரசியலில் பணக்காரர்களின் தாக்கத்தை நிறுத்து
வது. இவ்விரண்டு அம்சங்களும் அவசியமானது, ஏழைகளின் மீது அக்கறை
கொண்ட அரசாங்கமாயிருந்தால், இவற்றை உடனடியாக அமல்படுத்தமுடியும்.

அடுத்து, "இலவசமாகவும் உயர்தரக்கல்வியையும் அரசாங்கம் வழங்கவேண்
டும்" என்பது முக்கியமான அம்சமே எனினும், இதன் பலன்களை அறுவடை
செய்ய அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனடி நடவடிக்கைகள்
பட்டியலில் விடுபட்டுவிடாமல் இரண்டாவது கட்டத்தில் முதலாவது அம்ச
மாக இதை அமல்படுத்திடவேண்டும்.

இவையெல்லாவற்றையும் செயல்படுத்துவதுடன் இணைந்ததாக ஊழலை
ஒழிப்பது என்பதை, அரசாங்கமும்,மக்களனைவரும் கடைப்பிடித்தாகவேண்டும்.

தி கார்டியன் பத்திரிகை முன்வைத்த 7 அம்சங்களில் இடம்பெறாத எட்டாவது
அம்சம், மிக மையமான அம்சம் ஒன்று உள்ளது! அது என்னவென்றால்,
மானிடவாழ்வு முழுவதும் சந்தைமயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அமைப்பு
சாராத எண்ணற்ற தொழிலாளர்கள், எடுபிடிகள், சிறுவியாபாரிகள் (கீரைக்காரி
கள்), விவசாய தினக்கூலிகள், மூட்டைத்தூக்குபவர்கள், வீட்டுவேலை செய்ப
வர்கள், .... இன்னும் எண்ணற்ற வகைகளில் உழைப்பவர்கள் அனைவருக்கும்
தங்களுடைய உழைப்புக்கும், சேவைக்கும் உரிய, கௌரவமான வகையில்
தங்களது அன்றாடத்தேவைகளை நிறைவுசெய்து கொள்வதற்குப் போதிய
அளவிலான கூலியை, சம்பளத்தை, விலையை நிர்ணயம் செய்து கொள்ளும்
உரிமையை அவர்களே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த மைய
மான அம்சம் ஆகும்!

ஆம், நாளையிலிருந்து ஒரு கட்டு கீரையின் விலை 50 ரூபாய் + 10 ரூபாய்
வரி ( இது உழைப்பவருக்குச் சேரவேண்டிய கௌரவ வாழ்விற்கான நியாய
மான வரியாகும்) என்றால், நிரந்தர வருவாய் பெறும் வர்க்கத்தைச்சேர்ந்தவர்
கள் அதிர்ச்சியடையக்கூடாது! இல்லை, " இது அநியாயம், பகல் கொள்ளை!"
நாங்கள் அதிர்ச்சியடையத்தான் செய்வோம் என்றால், அதே அதிர்ச்சி இந்தியா
வின் 73 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீதம் வசதிபடைத்தவர்கள் வசம் ஏன்
இருக்கிறது? எவ்வாறு அவர்களிடம் போய்க் குவிந்தது? என்பது குறித்து ஏன்
ஏற்படவில்லை என்று யோசிக்கட்டும்! இது குறித்து காங்கிரஸ் தலைவர்
ராகுல்காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு 23-01-2018 அன்று கேள்வி எழுப்பி
யுள்ளார்.

பிரதமர் மோடி அவர்கள், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும்
சர்வதேச பொருளாதார மாநாட்டின் தொடக்க விழாவில் 23-01-2018 அன்று
பங்கேற்று பேசினார். (அதாவது, அந்நிய பெரு முதலீட்டாளர்களுக்கு சிவப்புக்
கம்பளம் விரித்துவிட்டு அப்படியே உள்ளூர் சிறுமுதலீட்டாளர்களுக்கு கோடித்
துணி வாங்கிவருவதற்காக டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளாரா? - இது இக்
கட்டுரையாளரின் தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு!) டாவோஸ் மாநாட்டில்
திரு மோடி பேசியது (காண்க: தி இந்து/ 24-01-2018) :

"இந்தியாவில் முன்பிருந்த சிவப்பு நாடா முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு
முதலீட்டாளர்களுக்கு சிவப்புக்கம்பளம் போட்டு வரவேற்கும் நிலை உருவாகி
யுள்ளது என்று டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்...."

அந்நிய முதலீட்டாளர்கள் எவ்வித அனுமதிக்காகவும் காத்திருக்கத் தேவை
யில்லை. தனது தலைமையிலான மூன்றரை ஆண்டுக் கால ஆட்சியின்
வர்த்தக, முதலீட்டு ஏற்புடைமை சாதக சூழ்நிலைகளைப் பட்டியலிட்ட மோடி,
ஏறக்குறைய நடைமுறைக்கு ஏற்பில்லாத 1,400 விதிமுறைகள் முற்றிலுமாக
நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்......"

அந்நிய முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சாத்தியமான வகையில் வளர்ச்சிக்கான வழிமுறைகள் இந்தியாவில் வகுக்கப்
பட்டுள்ளன. இந்தியாவில் பல துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் 90 சத
வீதம் வரை அனுமதிக்கப்படுகின்றன......"

சர்வதேச அளவில் தீவிரவாதம், புவி வெப்பமடைதல், உள்நாட்டு தொழில்
மற்றும் வர்த்தகத்தை பாதுகாக்க அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு
வாத கொள்கைகள் மிகுந்த அச்சுறுத்தலாக உருவாகி வருகின்றன என்று
பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்."

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சின் கடைசியில் அவர் சொல்லிய ஒரு
கருத்தாம்சம், அதாவது, "உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை பாதுகாக்க
அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் பாதுகாப்புவாத (Protectionism) கொள்
கைகள் மிகுந்த அச்சுறுத்தலாக உருவாகி வருகின்றன" என்பது குறித்து நாம்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! அவரது அக்கறை உலகமயமாக்கலைப்
பற்றியதாக இருக்கிறதே தவிர நாட்டுமக்களைப்பற்றியதாக இருக்கவில்லை!

மக்களாகிய நாம் 99% என்பதை நாம் மறந்துவிடவேண்டாம்! வெறும்1% பணக்
காரர்களுடைய பணபலம், மற்றும், செல்வாக்கின் முன் 99% மக்களின் சக்தியும்,
உழைப்பும் கௌரவமும் கைகட்டி நிற்கின்றன!

உண்மையில், அரசு, அரசாங்கம் யாருக்காக, யாருடைய நலன்களைப் பாது
காப்பதற்காக இருக்கிறது? என்கிற கேள்வி இன்னும் பதில் கண்டடையப்படாத
தால் மீண்டும் மீண்டும் மேற்புறத்திற்கு எழுந்து வருகிறது! உண்மையில்
அரசுக்கு மக்கள் தேவைப்படுகிறார்களா? எனும் கேள்வியும் முக்கியமானதே!
உண்மையில் பார்த்தால் (அரசுக்கு மக்கள்) தேவையில்லை தான்!  ஆனால்,
வேறு பல காரணங்களுக்காக அரசுக்கு மக்கள் தேவைப்படவே செய்கிறார்கள்!

அதாவது, அரசு, அரசாங்கம் என்பதன் பின்புலத்தில் உள்ள தனிநபர்கள், குழுக்
கள், மேட்டுக்குடிகள், ஆதிக்க சக்திகள், செல்வந்தர்கள், பெருமுதலாளிகள் . . .
ஆகியோரது சொந்த நலன்களைக் காப்பதற்கு, ஒரு நிலையான இராணுவமும்,
அவர்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் உரிய பொருட்களை உற்பத்தி
செய்துதருவதற்குரிய பலவகைப்பட்ட தொழிலாளர்களும், வினைஞர்களும்,
கலைஞர்களும், நிபுணர்களும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும்,
உணவுப்பொருட்களை விளைவித்துத் தரும் விவசாயிகளும், பணிவிடை
செய்வதற்கான வேலையாட்களும் தேவைப்படுகின்றனர்!

இவர்களின், அதாவது, இந்த ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின்
பார்வையில், "மக்கள்" என்போர் கூலிக்காரர்கள், வேலைக்காரர்கள், காவல்
காரர்கள், உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பணிவிடை செய்
பவர்கள், அவ்வளவு தான்!

இந்த 1% பணக்காரர்கள் 99% மக்களின் நலன்களுக்கு எதிராகச்செயல்படுகிறார்
கள் என்பதை எப்போது 99% உணரப்போகிறது? இவ்வளவிற்கும், அவர்கள்
சப்தமின்றி, போரின்றி, ஆரவாரமின்றி, அமைதியாக தங்களுடைய கயமைத்
தனம், பேராசை, சுயநலம், நரித்தந்திரம், பொய், ஏமாற்று, ஆகியவற்றைக்
கொண்டு 99% மக்களை ஏய்த்து மேய்த்து வருகின்றனர்!

இந்நிலை, இந்தியாவில் மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் முறையே,
1 % பணக்காரர்கள் தான்  உலக மக்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட
பொருள் வளங்களையும், அனைவருக்கும் சொந்தமான சொத்துக்களையும்,
செல்வங்களையும், நயவஞ்சகமாகக் கொள்ளையடித்து வைத்துக்கொண்டு
பொருளாதாரத்தின் உச்சியில் இருந்துகொண்டிருக்கிறார்கள்! இந்த 1% பணக்
காரர்களை மானிட குலத்தைப் பீடித்துள்ள உள்ளிருந்தே அழிக்கும் புற்றுநோய்
என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

குறிப்பு : இக்கட்டுரையானது பெரிதும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் புள்ளி
விபரங்களையும் செய்தித்தாட்களில் வெளியான செய்திகளையும் தரவுகளாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

மா.கணேசன் / 10-01-2018
----------------------------------------------------------------------------

Monday, 15 January 2018

அநீதித்துறையில் அமளி!




    "தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல!"
          -- நான்கு மூத்த நீதிபதிகள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டி எத்தகையது?
'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் கூட்டாக பேட்டியளித்திருப்பதும், தலைமை
நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதும்..

1. நீதித்துறையின் உள்விவகாரமா?
2. கவனிக்கத்தக்க பிரச்சினையா?
3. தேசிய மாண்புக்கு பின்னடைவா?
4 .ஜனநாயக அக்கறையா?
5. அதிகாரப் போட்டியா?

நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள்; அரசு தமது அதிகாரத்தை
மிகத் தவறாக பயன்படுத்துவது குறித்தும், அதற்கு நீதித்துறைத் தலைமை
அரசுக்குத் துணை போவது குறித்தும் கண்டித்து; பத்திரிக்கை நிருபர்களை
அழைத்து கூட்டாக பேட்டியளித்தது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை
எனவும், இது ஒரு உலக அதிசயம் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது!

ஒரு வகையில், இவ்வாறு பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி
அளித்தது என்னவோ முதல்முறையாக இருக்கலாம்! ஆனால், இதற்குமுன்
நீதித்துறையில் எவ்வொரு குழப்பமும், குளறுபடியும், பிரச்சினையும், பூசலும்
இருந்ததில்லை என்று அர்த்தமாகாது!

இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டதன் விளைவாக மக்கள் நீதித்துறையின் மீது
நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று சொல்லி நீலிக்கண்ணீர் வடிப்பது அபத்
தத்தின் உச்சம் ஆகும்! ஏனெனில், மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல;
மக்கள் பொதுவாக சட்டத்தையும், அரசையும், அரசியல் அமைப்பையும் மதிப்
பவர்களே! அதேநேரத்தில், தாங்கள் சுரண்டப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம்,
வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல! கப்பலைச்
செலுத்துபவர்கள் ஒழுங்காக நம்மைக்கொண்டு கரை சேர்ப்பார்கள் என்று
மக்கள் இந்த ஜனநாயகத்தை நம்புகிறார்கள்!

ஆம், உண்மையான ஜனநாயகம் எதை, யாரைக் குறிக்கிறது என்பவற்றையும்,
அதில் தங்களுக்குள்ள உண்மையான அதிகாரத்தையும், மக்கள் அனைவரும்
தெளிவாக உணரும்வரை மக்கள் ஏமாற்றப்படுவது தொடரும்!

'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களுக்குப்
பேட்டி அளித்ததில் தவறு இல்லை! ஆனால், பலர், ஓய்வுபெற்ற நீதிபதிகள்
உள்பட, இப்பிரச்சினையை "நீதித்துறையின் உள்விவகாரம்" என்று குறிப்பிடு
வதுதான் பொருத்தமற்றது! ஏனெனில், நீதித்துறை என்பது எவருடைய சொந்த
விவகாரத்தையும் பற்றியது அல்ல; மாறாக, அது பொதுமக்களின் விவகாரங்
களுக்கான ஒரு அமைப்பு ஆகும்! அதில் வெளிப்படைத்தன்மை இதுகாறும்
இல்லை என்பதால் தொடர்ந்து இருட்டிலேயேதான் பராமரிக்கப்பட வேண்டும்
என்பது சரியல்ல! நீதி தவறும் நீதியரசர் மீதான புகார் நீதித்துறையின் உள்
விவகாரம் அல்ல; நாட்டு மக்களை அநீதியிலிருந்து காத்திடுவதற்கான
அபாயச் சங்கொலியாகும்! இந்த எச்சரிக்கை ஒலி உள் நோக்கத்துடன் எழுப்பப்
பட்டிருந்தாலும்கூட அது குறித்தும் நாம் சீரிய கவனம் கொள்வது அவசியம்!

அப்படியெனில், இது "கவனிக்கத்தக்க பிரச்சினையா" என்றால், ஆம், சந்தேகம்
இன்றி நிச்சயம் கவனிக்கத்தக்க பிரச்சினை தான் இது!

அடுத்தது, இத்தகைய பகிரங்கப் பேட்டி, "தேசிய மாண்புக்கு பின்னடைவு" என்
றாகுமா? என்றால், இல்லாதவொன்று பின்னடைவு காண்பதற்குச் சிறிதும்
வாய்ப்பில்லை என்றுதான் சொல்லவேண்டும்! மாண்பு என்பது, பெருமை,
சிறப்பு, மேன்மை என்பவற்றைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்! ஆக, "தேசிய
மாண்பு' பற்றிப் பேசுவதற்கு முன்பு 'தேசியம்', 'தேசம்' என்பவை எதைக்குறிக்
கிறது என்பதைப் பார்ப்பது அவசியம்!

'தேசியம்' என்பது, ஒட்டு மொத்த நாட்டின் நலன் மற்றும் ஒற்றுமை சார்ந்த
எண்ணமும், செயலும் என்பதைக்குறிக்கிறது! ஆனால், ஒட்டுமொத்த நாட்டின்
நலன் மற்றும் ஒற்றுமையை நம்தேசம் சாதித்துள்ளதா? அல்லது, இனியாவது
சாதிக்குமா? இந்த தேசத்தில் இரவு பட்டினியுடன் நடை பாதைகளில் படுத்து
உறங்குபவர்கள் எத்தனை லட்சம்? பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையில்
தாழ்வுக்கும் தாழ்வாக வாடும் 10% மக்களுக்கு (ஒட்டுமொத்த மக்கள் தொகை
யில்) எப்போது நீதி கிடைக்கும்? தொடரும் தீண்டாமைக் கொடுமையை ஜன
நாயகத்தின் மூன்று பெரும் தூண்களான சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்
துறை களைந்தனவா? சமூக நீதியில் அக்கறையில்லாத ஒரு நீதித்துறையின்
குளறுபடிகள் பகிரங்கப்படுத்தப்பட்டதால் இல்லாத தேசிய மாண்புக்கு பின்ன
டைவு ஏற்பட்டுவிடுமா?

'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி
யளித்திருப்பது அவர்களது ஜனநாயக அக்கறையைக் காட்டுகிறதா? அல்லது,
"தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல!" எனும் அவர்
களுடைய கூற்றுக்கு அதிகாரப்போட்டி தான் உள்ளமைந்த காரணமா? இருக்
கலாம்! ஆம், அதிகாரம், எத்துறையாயினும் ஓரிடத்தில், அல்லது ஒருவரிடத்
தில் மையப்படுத்தப்படுமெனில் இவ்வாறுதான் நிகழும்! இச்செய்தி இன்னும்
ஓரிரு நாட்களுக்குப் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பிறகு மறக்கப்பட்டுவிடும்!
அதற்குள் எவ்வாறோ, இப்பிரச்சினை பூசிமெழுகப்பட்டு தீர்க்கப்பட்டுவிட்ட
தாகச் சொல்லப்படும்! ஏனெனில், எவ்வாறேனும் தேசியமாண்பு காப்பாற்றப்பட வேண்டுமல்லவா! 'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை' என புகார் கூறும் மூத்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே ஜனநாயகம் நிலவுகிறதா என்பதை உணர்ந்துள்ளனரா என்பது கேள்விக்குறியே!

ஆக, காரணம் எதுவாயினும், ஜனநாயக அமைப்பில் எல்லாத் துறைகளிலும்,
எல்லாவிஷயங்களிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை வெடித்து
வெளியே வந்திடும் இத்தகைய விவகாரங்கள் உணர்த்துகின்றன எனலாம்!
ஆக, மக்களாகிய நாம் இனியாவது விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்!
ஜனநாயகத்தில் எந்தத்துறையும் மூடிய அறையாக இருப்பதாகாது; எல்லாவற்
றிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும்! ரகசியம் ஆபத்தானது!


மா.கணேசன் / 14-01-2018
----------------------------------------------------------------------------

Tuesday, 9 January 2018

அரசு காலாவதியாகிவிட்டதா?





   முதலிடத்தில், அரசு, அரசாங்கம், அரசியல்கட்சிகள் போன்ற
   அமைப்புக்களை எதிர்நோக்கி மனித இனம் இப்பூமியில்
   தோற்றுவிக்கப்படவில்லை!

அரசு, அரசாங்கம், தேர்தல், வாக்களித்தல், அரசியல் தலைவர்கள், பிரதம
மந்திரி, ஜனாதிபதி, முதலமைச்சர்கள், பிற அமைச்சர்கள், நாடாளுமன்றம்,
சட்ட மன்றங்கள், பெரு நிறுவனங்கள், முதலாளிகள்,.... இத்யாதி, இத்யாதிகள்
எதுவும் இல்லாமல் மக்களாகிய நம்மால் நம் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ
முடியாதா?

இத்தகையதொரு நிலைமையை நம்மில் பெரும்பாலானோர் யோசித்துப்பார்த்
திருக்கவே மாட்டோம்! பொதுவான எந்தப்பிரச்சினையைப் பற்றியும் நாம்
யோசிக்கமாட்டோம் என்பது வேறு விஷயம்! வயிற்று வலியும், தலைவலியும்
தமக்கு வந்தால் மட்டுமே தெரியும்!

அரசு இல்லையேல், அவசரகாலச் சேவைகளை யார் செய்வார்? தீப்பிடித்துக்
கொண்டால் யார் வந்து அணைப்பார்கள்? வீட்டை உடைத்து திருடிச் சென்ற
பிறகு அத்திருடனை யார் வலைவீசித் தேடிப்பிடிப்பார்கள்? வருடக்கணக்கில்
தேங்கி வழியும் வழக்குகளுக்கு யார் தீர்ப்பு வழங்குவார்? போக்குவரத்துச்
சாலைகளை யார் அமைப்பார்கள்? இல்லாத ஆறுகளின் குறுக்கே யார் பாலங்
களைக் கட்டுவார்கள்? தண்ணீரே இல்லாத ஆறு, ஏரி, குளங்களை யார் தூர்
வாருவார்?...என்றெல்லாம் நாம் கவலைப்படலாம்! ஆனால், அரசு, அரசாங்கம்,
பாரம்பரியமிக்க அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள்......இத்யாதிகள்
எல்லாம் இருந்தும் இங்கு எதுவும் உருப்படியாக நடக்கவில்லை, இயங்க
வில்லை, செயல்படவில்லை! ஏராளமான மக்கள் வறுமையில்வாடுகின்றனர்,

வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது, விலைவாசி விண்ணைத்
தொடுகிறது, விவசாயிகள் தற்கொலையில் தீர்வு தேடுகின்றனர், இவ்வாறு
எத்தனையெத்தனை பிரச்சினைகள்! பிரச்சினைகளைத் தீர்க்க எத்தனை வாரி
யங்கள்! ஆம், பிரச்சினைகள் இங்கு நிறுவனப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படு
கின்றன!

அதே நேரத்தில், எண்ணற்ற பல விஷயங்கள், தினமும் நாம் சாப்பிடுவது, நம்
வீடுகளை புழங்குவதற்கான பொருட்களைக் கொண்டு பயன்கொள்வது, நண்பர்
களுடனும் சகமனிதர்களுடன் பரஸ்பரம் உரையாடுவது, இலக்கியம் வாசிப்பது,
இசையை உருவாகுவது, அல்லது கேட்டு ரசிப்பது, விளையாடுவது, தொழில்
புரிவது, விருந்து, கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற
வாழ்க்கையுடன் இணைத்துச் செயல்படுத்தும் விஷயங்கள் யாவும் யாதொரு
அரசின், அரசாங்கத்தின் ஐந்து, அல்லது, பத்தாண்டுத் திட்டங்களால், அல்லது
நிர்வாகத்தினால் விளைபவையல்ல! மாறாக, அவையனைத்தும் சுதந்திர
சமூகத்தின், மக்களின் பரஸ்பர உதவிகளாலும், தேவைகளாலும், குறிப்பாக
அவை மக்களாகிய நம்முடைய இயற்கையான சுய அரசாங்கத்தினால்
( நிர்வாகத்தினால்) விளைபவை, நிறைவேற்றப்படுபவையாகும்!

மானுடகுல வரலாற்றில், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாதொரு
அரசும் இல்லை, அரசாங்கமும் இல்லை, அரசியல்வாதிகளும் இல்லை,
தலைவர்களும் இல்லை! கற்காலத்திற்கு முன்பிருந்தே பல்லாயிரம் ஆண்டு
களாக இப்பூமியில் மனித இனம் வாழ்ந்து வந்துள்ளது!

உண்மையில், அரசு, அரசாங்கம், அரசியல்கட்சிகள் போன்ற அமைப்புக்களை
எதிர்நோக்கி மனித இனம் இப்பூமியில் தோற்றுவிக்கப்படவில்லை! இந்த
அமைப்புகள் யாவும் நமக்கு நாமே பூட்டிக்கொண்ட தளைகள், ஏற்படுத்திக்
கொண்ட சிறைகள் ஆகும்! அதே நேரத்தில், நாம் மீண்டும் அந்த பழங்காலத்
திற்குச் செல்லமுடியாது! இப்போது நாம் செய்யக்கூடியதும், செய்யவேண்டி
யதும் மேன்மேலும் இத்தளைகளில் சிக்கிக்கொள்ளாமலும், இச்சிறைகளில்
அடைபடாமலும் நமது சுதந்திரத்தையும், வாழ்வையும் பாதுகாத்துக்கொள்வது
ஒன்றே ஆகும்!

நம்மை நாமே காவல் காத்துக்கொண்டால், நமக்குத் தனியே காவல் நிலை
யங்கள் தேவைப்படாது! அதற்கு, நாம் நமக்குள் சண்டை சச்சரவுகளின்றி,
பூசல்களின்றி பரஸ்பரம் இணக்கமாக வாழ்வதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும்!
அப்படியே நமக்கிடையே பூசல்கள் தோன்றினாலும், அவற்றை நாமே சுமுக
மாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்! பிரச்சினைகளை, பூசல்களை நாமே தீர்த்துக்
கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், நமக்குப் பிரத்யேகமாக
நீதி மன்றங்கள் தேவைப்படாது!

இன்னும், எவ்வெவற்றிற்கு அரசு, அரசாங்கம், பிற நிறுவனங்கள் தேவைப்படு
வதாயுள்ளனவோ முடிந்தவரை அவற்றையெல்லாம் நமக்குநாமே நிறைவேற்
றிக்கொள்ள முயற்சிக்கலாம்! அப்படியானால், அதாவது, கிட்டத்தட்ட நமக்கு
நாமே யாவற்றையும் செய்து கொள்ளும்பட்சத்தில், நாம் ஏன் அரசாங்கத்திற்கு
வரி செலுத்தவேண்டும் என்று கேட்கலாம் ஆம், மக்களாகிய நம்முடைய
வாழ்வில் தேவையில்லாமல், அநாவசியமாகத் தலையிடாமல், குறுக்கிடாமல்,
மூக்கை நுழைக்காமல் இருப்பதற்காக அரசாங்கத்திற்கு நாம் வரி செலுத்து
வதாக வைத்துக்கொள்ளலாம்!

ஆம், அரசையோ, அரசாங்கத்தையோ நாம் எதிர்ப்பதோ, போராடுவதோ கூடத்
தேவையில்லை! ஏனென்றால், தோல்விகரமான சண்டை எனத்தெரிந்தபிறகும்
அதில் ஈடுபடுவது பயனற்றது!

"முதலும், மிக முக்கியமானதுமான படி (அடிவைப்பு) என்னவென்றால், அரசை முதன்மைப்படுத்திடாமல் நம் வாழ்க்கையை வாழ்வதும், அரசின் சிதைவைக்
கடந்து வாழ்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கிடுவதும்தான்!"
என கிரிகோரி ஸாம்ஸ் சொல்வதற்கிணங்க, அரசு என்பது இருந்தாலும், அது
ஏதோ இல்லாததைப்போலவே எண்ணிக்கொண்டு  நாம் நம்முடைய வாழ்க்
கையை நம் சகமனிதர்களுடன் இணைந்து வாழ்ந்து செல்லவேண்டியதுதான்!

அதாவது, அரசின் ஒழுங்கு படுத்துதல், தடைசெய்தல், மற்றும் வரிவிதித்தல்
போன்ற வலுக்காட்டாய முறைமைகளின்றி உண்மையில் நம்மால் சிறப்பான
சுய-நிர்வாக எந்திரங்களை உருவாக்க முடியும்; மனிதர்கள் பிறவியிலேயே
கொடூரமானவர்களோ, கொலைகாரர்களோ அல்ல; தேவையற்ற காரணங்
களுக்காக ஒருவரை ஒருவர் நாம் கொல்லுவதோ, துன்புறுத்துவதோ அவசிய
மில்லை. உண்மையில், பரஸ்பரம் ஒருவக்கொருவர் இணக்கமாக இப்பூமியின்
மீது வாழ்வதுதான் மிக எளிதான இயற்கையான நிலைமையாகும்!

நாம் எண்ணுகிறோம், நாம் சுதந்திர மனிதர்கள் என்று! ஆனால், வரலாறு
மெய்ப்பிப்பது என்னவென்றால், அரசானது வேறு மாதிரியாகச் சிந்திக்கிறது,
எப்போதும் அது மனிதர்கள்மீது மொத்த அதிகாரத்தையும் பிரயோகித்து நம்மை
அடக்கவும், ஒடுக்கவும்; பல சமயங்களில் நியாயமான கோரிக்கையை கலகக்
குரலாகக் கொண்டு நம்மை அழிக்கவும் தயங்குவதில்லை! உண்மையில்,
அரசுக்கான அசலான சவால் மக்களாகிய நம்மை பிற அரசுகளிடமிருந்து பாது
காத்தலே! தேவையேற்படின், நம்முடைய அரசுக்குள்ளேயே எழுகின்ற குற்றக்
காரணிகளிடமிருந்தும் நம்மைப் பாதுக்காப்பதும் தான்!

மக்களாகிய நாம் சிந்தனையின்றி ஏற்றுக்கொள்கிறோம், அதாவது, அரசு
என்பது ஒரு அவசியமான தீமை என்று! அதாவது அதிகாரம் கொண்ட ஒரு
மத்திய கட்டுப்பாடு இல்லாமல் நாம் வாழமுடியாது என்று! போர்கள், வரிகள்,
ஊழல் அரசியல்வாதிகள் யாவும் மனிதத்திரளின் இயற்கையான ஒரு பகுதி
எனவும், அவை நாகரிகத்தின் தவிர்க்கமுடியாத துணைக்காரணிகள் எனவும்
நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்! பூமி உருண்டை மீது எல்லைக்கோடுகளை
கிழித்து இது எதிரி அரசு என்று நம் சொந்த அரசு கூறுகிறது; பிறகு, நம்மைப்
பாதுகாப்பதற்காக, நிலையான ராணுவம், விமானப்படை, நவீன போர்த்தள
வாடங்கள், அணு ஆயுதங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன! இரு உலகப்
போர்களுக்கு மக்களோ, வாழ்க்கையோ காரணமல்ல!

நாம் இன்று நம்பிக்கையுடன் அனுபவிக்கும் அனைத்துப் பொருட்களும்,
வளங்களும், யாவும் நம்முடைய உழைப்பால், வாழ்க்கைத்தேவைகளின்
உந்துதல்களினால் விளைந்த கண்டுபிடிப்புகளே ஆகும்! சக்கரம், ஆகாய
விமானம், நீராவி எந்திரம், மிதிவண்டி, குண்டூசி, துணி மணிகள், பல்வேறு
எந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள், வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற
அனைத்துவித சாதனங்கள் யாவும் எந்தவொரு அரசின் மேற்பார்வையிலும்,
உதவியிலும், அதிகாரத்தைக்கொண்டும் வடிவமைக்கப் பட்டவையோ, உரு
வாக்கப்பட்டவையோ அல்ல! ஒரு சிறு குண்டூசியைக் கூட எந்த நாட்டிலும்,
எந்த ஒரு அரசியல்வாதியும் உருவாக்கிடவில்லை!

நம்முடைய வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பேற்று வாழ்ந்தாக வேண்டும்!
நம்முடைய வாழ்க்கைக்கான பொறுப்பை அரசிடமோ, அரசியல்வாதியிடமோ,
ஏதோவொரு கட்சித்தலைவரிடமோ கொடுத்துவிடும் பட்சத்தில் நம்முடைய
வாழ்க்கையும், சுதந்திரமும் நம்முடையதல்ல என்றாகிவிடும்! இறுதியாக,
நாம் பிறந்த இடத்தில், மண்ணில், நிலத்தின் மீதிருந்து, நிலத்தைச் சார்ந்து
உழைப்பதற்கும், வாழ்வதற்குமான உரிமையையும், சுதந்திரத்தையும் நாம்
ஒருபோதும் இழந்துவிடலாகாது!

சரியானதைச் செய்வதற்கான நேரம் எல்லாநேரங்களிலும் சரியாகவேயுள்ளது!
                        ✦
   குறிப்பு : இக்கட்டுரையானது கிரிகோரி ஸாம்ஸ் - ன்
       The State is Out of Date/ We Can Do It Better
           எனும் நூலின் சாராம்சத்தைத் தழுவி எழுதப்பட்டதாகும்.
                        ✦
மா.கணேசன்/13:40 08-01-2018
----------------------------------------------------------------------------

Saturday, 30 December 2017

2018 புத்தாண்டுச் செய்தி!




அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இவை போன்ற இன்சொற்கள் , பாராட்டுக்கள், புகழுரைகள், உணர் ச்சிப் பெருக்கின் உதட்டளவு வாழ்த்துக்கள் .... இவை மட்டுமே இந்த ஆண்டு முழுவதையும் இனிமை நிறைந்ததாகவும், சந்தோஷம் பொங்கச்செய்வதாகவும், வளம் பெருகவும், சகமனிதர்களுக்கு இடையேயான துவேஷங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் களைந்துவிடுவதாகவும்  செய்துவிடுமா என்ன?

நாம் சற்று தொலைநோக்கோடு சிந்தித்துச் செயல்படுவது மட்டுமே இந்த ஆண்டு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் இனிமையையும், சந்தோஷத்தையும், வளங்களையும் பெற்றுத்தருவதாக அமையும்!

குறிப்பாக, அடுத்த ஆண்டு, 2019 என்பது, அதைத் தொடர்ந்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளின் நம்முடைய வாழ்-நிலையை யும், சந்தோஷத்தையும் தீர்மானிக்கும்  'சோதனை-ஆண்டு'
ஆகும்!  ஆகவே, அதற்குள் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய அரசியல்  விழிப்புணர்வின் முக்கியத்துவம் மகத்தானதாகும்!

இதுவரை தத்துவ ஆன்மீக விஷயங்களைப் பேசிக்கொண்டு இருந்தவன் தற்போது திடீரென அரசியல் பேசுவதாக நம் நண்பர்கள் சிலர் அதிர்ச்சியடையக்கூடும் ! ஆனால், விஷயம் என்னவெனில், கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது! இப்போது தத்துவம் பேசிக்கொண்டிருப்பது தவறல்ல; மாறாக,  கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதற்கான காரணிகளை அறிந்து அவற்றைக் களைந்து கப்பலைக் காப்பாற்றுவதற்குரிய  தத்துவத்தைப் பேசுவதே இப்போதைய அவசர அவசியமாகும்!

உண்மையில், நாம் 'அரசியல் ' பேசிக்கொண்டிருக்கவில்லை; மாறாக, நம்முடைய வாழ்வின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிப்பேசிக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய வாழ்வுரிமைகளையும், வாழ்வாதரங்களையும் காப்பாற்றிக்கொள்வது பற்றிப்பேசிக்கொண்டிருக்கிறோம்! நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்; நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமானால் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பலைக்  காப்பாற்றிட வேண்டும்; ஆம், "ஜன நாயகம்" என்பதுதான் அந்தக்கப்பல்! நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் நம்மைக் காப்பாற்றப்போவதில்லை; அவர்களுக்குத் தம் சொந்த நலன்களைப் பெருக்கிக்கொள்ளவும், தம் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவுமே நேரம் போதவில்லை!

உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன, அதில், மொத்தம் 167 நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை நடைமுறையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது! ஆனால், வெறும் 20 நாடுகளில் மட்டுமே முழு ஜனநாயகம் நடைமுறையில் உள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைபாடுடைய ஜனநாயகம் (flawed democracy) நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.  குறைபாடுடைய ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது!

குறைபாடுடைய ஜனநாயகம் என்பது வளர்ச்சி குன்றிய அரசியல் கலாச்சாரம் கொண்டதாகவும், குறைந்த அளவிலான அரசியல் பங்கேற்பு  கொண்டதாகவும், ஆட்சிமுறையில் கோளாறுகள் நிறைந்ததாகவும் இருப்பதைக் குறிக்கிறது! பெரும்பாலான ஜனநாயக நாடுகளின் பிரச்சினை என்பது அவற்றின் பிரதிநிதித்துவக் குறைபாடுகளிலேயே அடங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசியல் ஆய்வறி ஞர்களும், தத்துவச் சிந்தனையாளர்களும் 'பிரதிநிதித்துவ ஜனநாயக' முறையை விட்டால்,  ஜனநாயகத்திற்கு  வேறு வழியே இல்லை  என்கிறார்கள்! 

மக்களால், மக்களுக்காக, மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் உண்மையில் மக்களை, மக்களின் நலன்களை, ஆர்வங்களை, அடிப்படை வாழ்வாதாரங்களை பிரதிபலிப்பதில்லை, பிரதிநிதித்துவம் செய்வதில்லை எனும் போது, 'பிரதிநிதித்துவ ஜனநாயக' முறையில் இருந்துகொண்டு அரசியலில் எவ்வாறு, எத்தகைய மாற்றத்தை மக்களால் செய்விக்க  முடியும் என்பது தான் இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பிரதான அரசியல் கேள்வியாகும்! தேர்தல் மூலம் ஒரு 'நல்ல' அரசியல் தலைவரை தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை! தேர்தல் என்பதே ஒரு "சூதாட்டம்" போலுள்ளது! அதில் எப்போதும் மக்களே தோற்பவர்களாக இருக்கிறார்கள்!
வேறு என்ன செய்வது? வாக்களிக்காமல் இருக்கலாமா? ஒரு வகையில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் ஒன்றாக -பயனற்றதாக- த்தான் இருக்கிறது! ஆனால், வாக்களிக்காமலிருப்பதன் வழியாக நாம் நம்முடைய ஒரே அரசியல் செயல்பாட்டிலிருந்தும் ஒதுங்கிவிடுவதாக உள்ளது!

அப்படியானால்,  புரட்சி செய்யலாமா?  செய்யலாம், ஆனால், அது முற்றிலும் புதுவகையான புரட்சியாக இருக்கவேண்டும்!
 அதாவது, புறத்தே சாலையில் நம்முடைய எழுச்சியையும், கிளர்ச்சியையும், கோபத்தையும் காட்டுவதற்குப்பதிலாக, நம்முடைய அகத்தே செய்யப்படும் புரட்சியாக இருக்க  வேண்டும்! அப்புரட்சி  'அரசியல் ' பற்றிய தெளிவான, தீர்க்கமான பார்வையாக, அறிவாக நம்முள் உருவாகி நம்மைச்  செலுத்துவதாக இருக்கவேண்டும்! இத்தகைய புதுமையான ஆயுதத்தைக்கொண்டு நாம் நம்முடைய அரசியல் பிரதிநிதி களைச் செலுத்தவேண்டும்! ஆம், நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவேண்டும்! ஆனால், வாக்களித்து விட்டு வழக்கம் போல வெறுங்கையோடு வீடு திரும்பி விதியே என்று வாளாதிருக்கலாகாது!

மாறாக,  நம்முடைய பிரதிநிதிகளை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்யவேண்டும்! அதை எவ்வாறு செய்வது, எவ்வெவ்வாறெல்லாம் செய்யலாம் என்பதை ஆராய்ந்து கண்டு பிடிப்பதில் தான் நம் ஒவ்வொருவருடைய அரசியல் பங்களிப்பும், உண்மையான அரசியல் ஞானமும் (தந்திரமும்) அடங்கியுள்ளது!

இதுதான் உண்மையான அரசியல், மக்களின் அரசியல்! ஆனால், இதுவரை  'அரசியல் ' என  அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதும், பொதுவாக மக்கள் பேசிவந்ததும் அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் பயனற்ற அரசியலாகும்! "இந்த தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெறும்; எந்தக்கட்சி தோல்வியடையும்?" என்பது போன்ற பேச்சுகளும், கூட்டணி பேரம் பற்றியும், உள்கட்சி விவகாரங்கள் பற்றியுமான பேச்சுகளும் மக்களுக்குப் பயன்படாதவை, ஆகவே தேவை யில்லாதவையாகும்!

இவ்வாறு நம்முடைய பிரதிநிதிகளை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்வதற்கான அடிப்படைகள், நியாயங்கள், முகாந்தரங்கள் உள்ளனவா? உள்ளன! உள்ளன! உள்ளன! நிச்சயமாக உள்ளன!  முதலிடத்தில், ஜனநாயக ஆட்சிமுறையில் 'பிரதிநிதிகள்' என்போர் மக்களின், மக்களுக்கான பிரதிநிதிகள் என்பதாயில்லாமல் வேறு யாருக்கான பிரதிநிதிகள் அவர்கள்?வேறு யாருக்கு அவர்கள் கடமைப்பட்டவர்கள்? நாம் அளிக்கும் நம் ஒவ்வொருவருடைய 'வாக்கு' எனும் அதிகாரத்தின் ஒட்டுமொத்தம் தானே அரசியல்வாதிகளை அமைச்சர்களாக, முதலமைச்சராக ஆட்சியதிகாரத்தில் அமர்த்துகிறது? ஆகவே, அவர்களை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்வதற்கான அதிகாரமும் நம்முடைய உரிமைகளில் ஒன்றாக அடங்கியுள்ளது! ஆக, வாக்களிப்பதுடன் நம்முடைய ஜனநாயகக் கடமை முடிந்து போவதில்லை; மாறாக, அதனுடன் தான் தொடங்குகிறது!
  ✦
மா.கணேசன்/31.12.2017
-------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 27 December 2017

இங்கேயும் எங்கேயும் இனி அரசியல் பேசுங்கள்!





"இங்கே அரசியல் பேசாதீர்கள்!" என்று பல உணவு விடுதிகளிலும், முடிதிருத்
தகங்களிலும் எழுதிப்போடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால்,
இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன என்று நாம் எப்போதாவது யோசித்துப்
பார்த்ததுண்டா? அதாவது அரசியல் பேசினால், வீண் விவாதங்களும், சண்டை
களும், கைகலப்புகளும், சில வேளைகளில், வெட்டு, குத்தும் நிகழலாம் என்ப
தாலேயே அவ்வாறு எழுதிப்போடப்பட்டுள்ளது என நாம் மிகச் சுலபமாகப்
புரிந்துகொள்கிறோம்! இதன் காரணமாகவே, நம்மில் பெரும்பாலானோர் பொது
இடங்களில் எவ்வகை அரசியலையும் பேசுவதில்லை! ஆனால், அரசியல்
பேசினாலேயே ஏன் வீண்வாதங்களும், சண்டை சச்சரவுகளும், அடி தடிகளும்
ஏற்படவேண்டும்?

ஆனால், உண்மையில், அரசியல் பேசுவதால், அதாவது, உண்மையான அர்த்த
முள்ள அரசியலைப் பேசுவதால் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பில்லை!
மாறாக, "கட்சி அரசியல்" பேசுவதால் தான் ஏற்படுகின்றன! மேலும், அரசியல்
பேசவேண்டுமென்றாலேயே மக்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று எதிர்க்கும்
வகையிலான அணிகளாகவும், கட்சிகளாகவும் தான் பிரிந்து நிற்கவேண்டுமா
என்ன?

அப்படியானால், இது எத்தகைய அரசியல்? பெரும்பாலான மக்கள் ஏன் அரசி
யல் பேசுவதில்லை, அரசியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவ
தில்லை, தீவிரமாக ஈடுபடுவதில்லை? பெரும்பாலான மக்கள் அரசியலில்
ஆர்வம் கொள்ளாதிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அரசியல் என்பது
மக்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவு விலகியிருக்கிறது; அதாவது,
மக்களின் உண்மையான வாழ்க்கையுடன் (மக்களின் நலன்களுடன்) அரசியல்
தொடர்பற்றதாக உள்ளது என்பதுதானாகும்!

இதுவரை 'அரசியல்' என்று மக்களுக்குக் கற்பிக்கப்பட்டிருப்பது, மக்களுக்கான
அரசியல் அல்ல; மாறாக, அரசியல்வாதிகளின் அரசியலே ஆகும்! அதாவது,
அரசியல் என்றாலே அது கட்சி கட்டுவது, தேர்தலில் நிற்பது, ஆட்சியதிகாரத்
தைப் பிடிப்பது; ஆட்சியைப் பிடித்தபிறகு அதைத் தக்கவைத்துக் கொள்வதற்
கான விவகாரங்களில் ஈடுபடுவது; எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது; அல்லது
இருக்கவே இருக்கிறது, உள்கட்சி விவகாரங்கள் அவற்றைச் சமாளிப்பது ....
போன்ற இவை யாவும் அரசியல்வாதிகளின் அதிகார மோகத்தின் அரசியல்
ஆகும்!

ஆண்டு முழுவதும் ஆளும் கட்சியின் உள்கட்சிப் பிரச்சினைகளை, அல்லது
எதிர்க்கட்சியின் விமர்சனங்களை பரபரப்புச் செய்திகளாக்கி ஊடகங்கள்
தம்முடைய வியாபாரத்தை நடத்திச்செல்கின்றன! அவ்விவகாரங்களில் மக்கள்
ஈடுபாடு கொள்வதற்கு எதுவுமில்லை! அரசியல் கட்சிகளின் விசுவாசத்
தொண்டர்களுக்கு வேண்டுமானால் அவை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்
நிகழ்வுகளாகத் தெரியலாம்! ஏனெனில், கட்சித்தொண்டர்கள் தங்களுக்கு
எப்போதாவது ஏதேனும் ஆதாயம் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
முதலீடுசெய்துவிட்டு, தம் கடன் கட்சிப்பணியாற்றிக்கிடப்பதே என்று

தங்களதுசுய-முக்கியத்துவத்தைத் தொலைத்துவிட்டவர்களாவர்!

ஜனநாயகத்தின் சாபக்கேடு என்னவென்றால், அரசியல் கட்சிகள், அதாவது,
கட்சிகளின் பிரதானத் தலைவர்கள் அரசியலை, குறிப்பாக, தேர்தலில் வெற்றி
பெறுவதைத் தங்களது சொந்த விவகாரமாகக் கொண்டுவிடுவதேயாகும்!
இதன்விளைவாக, ஒரு கட்சியானது, தனது ஒட்டுமொத்த சக்தியையும் இன்
னொருகட்சி ஆட்சிபுரிவதற்கு தகுதியற்றது என நிரூபிப்பதிலேயே அர்ப்பணம்
செய்கிறது! பரஸ்பரம் ஒவ்வொரு கட்சியும் இதையே செய்வதன் மூலம்
எந்தக் கட்சியும் ஆட்சிபுரிவதற்கு தகுதியற்றது என்பதை மெய்ப்பித்துவிடுகின்
றன! ஆட்சியதிகாரத்தை மட்டுமே இலக்காகக்கொண்ட இந்த அர்த்தமற்ற
போட்டா போட்டியில், அரசியல் கட்சிகள் மக்களை, மக்களின் நலன்களை
மறந்து விடுகின்றன! மக்களும் தங்களது மையமான பிரச்சினைகளை மறந்து
கட்சி அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்துவிடுகின்றனர்! பெரும்பாலான மக்கள்

கட்சிகளுக்கிடையேயான போட்டியை, இரு அணிகளுக்கிடையேயான கால்
பந்தாட்டப் போட்டியை ரசிப்பதுபோல வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்
றனர்! இவ்வழியே மக்களும் அரசியல்வாதிகளின் கட்சி அரசியல் எனும் கால்
பந்தாட்டத்தில் சேர்ந்துகொண்டு தங்களுக்கு எதிராக "கோல்" போட்டு ஒவ்
வொரு முறையும் தோற்றுப் போகின்றனர்!

மக்கள் தம் விருப்பத்தேர்வின்படி இந்தக்கட்சி அல்லது அந்தக்கட்சியுடன்
இணைந்துகொள்வதன் மூலம் பிளவுண்டு போவதை அரசானது தனக்குச்
சாதகமாகக் கொண்டுவிடுகிறது

ஆனால், உண்மையான, அர்த்தமுள்ள அரசியல் என்பது, குறிப்பாக ஜனநாயக
அமைப்பைப்பொறுத்தவரை, மக்கள் தங்கள் ஆர்வங்கள், அடிப்படை நலன்கள்,
ஆகியவை தங்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளால் முறை
யாக நிறைவேற்றப்படுகின்றனவா, இல்லையா என்பதை கண்ணும் கருத்து
மாகக் கவனிப்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கமுடியாது! பிரதிநிதித்
துவ ஜனநாயக அமைப்புமுறையில், அரசியல் கட்சிகள் தவிர்க்கமுடியாதவை
எனக் கொண்டாலும், கட்சிகளுக்கிடையேயான பூசல்கள், பிரச்சினைகள்;
மற்றும், ஒரு கட்சியின் உள்-கட்சி விவகாரங்கள் போன்ற எதுவும் மக்களின்
கவனிப்பிற்கும், அக்கறைக்கும் உரியவை அல்ல!

நாடகக் கலைஞர்கள் மேடையேறிய பிறகு, தங்களுக்கிடையே, "நான்தான்
தலைமை வேடத்தில் நடிப்பேன்!" " இல்லை, நான்தான் அந்த வேடத்தில்
நடிப்பேன்!" என்று தங்களுக்குள் அணி பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு
நேரத்தைக் கடத்திக்கொண்டிருப்பதையே நாடகம் என நிகழ்த்துவார்களேயா
னால், பார்வையாளர்கள் எவ்வாறு அதைச் சகித்துக் கொள்வார்கள்? ஆனால்,
நிஜ வாழ்வில் இத்தகைய அபத்தம் தான் அரசியல் மேடையில், 'உள்கட்சிப்
பூசல்', 'கூட்டணி பேரம்' என்றெல்லாம் நிகழ்த்தப்பட்டுவருகிறது, அதையும்
மக்களாகிய நாம் அரசியல் என எடுத்துக்கொண்டு சகித்துக்கொண்டுதான்
செல்கிறோம்! இத்தகைய அவலத்தில் இனியும் நாம் பங்குகொள்ளாமல்
இருப்போமாக! ஏனெனில், கிஞ்சித்தும் இவை எதுவும் நேர்முகமாகவோ,
அல்லது மறைமுகமாகவோ மக்களாகிய நம்முடைய அடிப்படை நலன்களைப்
பற்றியவையோ, தொடர்புடையவையோ அல்ல! இதன் அர்த்தம், அரசியல்
வாதிகள் எப்போதும் மக்கள் நலன்களைப்பற்றியே சிந்தித்துக்கொண்டும்,
பேசிக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும்தான் இருக்கவேண்டும் என்பதல்ல!
மாறாக, முதலிடத்தில் இருக்க வேண்டிய மையமான இவ்வம்சம் ( மக்கள்
நலன்கள்) அரசியல்வாதிகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் கடைசி இடத்தில்கூட
இல்லை என்பதையே நாம் இவ்வாறு இங்கு சுட்டிக்காட்டுகிறோம்!

முதலிடத்தில், 'அரசியல்' என்பது எதற்காக? 'அரசியல்வாதிகள்' எதற்காக?
தேர்தல்கள் எதற்காக? மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்? 'அரசாங்கம்'
'அரசு' எதற்காக? இவையெல்லாம், மனிதவாழ்வில் எந்த இடத்தில் எவ்வகை
யில் பொருந்துகின்றன? மனித வாழ்வில் இவற்றின் பங்கு, பணி, பாத்திரம்
என்ன? இந்த ஒவ்வொன்றையும் நாம் மறு பரிசீலனை செய்தாக வேண்டும்!
இனி மக்களாகிய நாம் கூடுகின்ற எல்லாஇடங்களிலும், எப்போதும் நமக்கான
அரசியலைப் பேசியாக வேண்டும்! நமக்கான அரசியல் எது என்பதை முதலில்
நாம் ஒவ்வொருவரும் இனம்கண்டாக வேண்டும். இதற்காகவே நாம் அரசியல்
பேசியாக வேண்டும்! இதுவரை, அர்த்தமற்ற 'கட்சி அரசியலின்' வெறும்
பார்வையாளர்களாக நாம் இருந்தது போதும்; இனி அர்த்தமுள்ள மக்களின்
அரசியலில் ஆர்வத்துடன் பங்கு கொள்வோமாக!

மா.கணேசன்/  22-12-2017
----------------------------------------------------------------------------

Sunday, 10 December 2017

பொதுவாக மக்கள் ஏன் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை?




   பொதுமக்களுக்கு, 'அரசியல்' என்பது ஒரு அசுத்தமான சொல்லாகும்.
   எனினும், 'ஜனநாயகம்' என்பது ஒரு நேர்மறையான கருத்தியலாக
   உள்ளது. சமகாலத்திய பிரச்சினை என்னவாகத் தெரிகின்றதென்றால்,
   பெருமளவிலான பொதுமக்கள் அரசியல் இல்லாத ஜனநாயகத்தையே
   விரும்புகிறார்கள்.     - மேத்யூ ஃப்ளிண்டெர்ஸ் 
                                                (Matthew Flinders, director of the
                                                          Bernard Crick Centre)
                                                                      • • •

பொதுவாக மக்களும், இன்னும் இளைஞர்களும் ஏன் அரசியலை விரும்புவ
தில்லை; அரசியலில் ஈடுபடுவதில்லை? ஏனெனில், தமது தலைவிதியை,
வாழ்-நிலையைத் தீர்மானிக்கும் இடம் "அரசியல் களம்" தான் என்பதை அவர்
கள் இன்னும் அறியாதிருப்பது தான் காரணமாகும்! மேலும், அரசியல் என்பது
விசேடமான சிலருக்கு மட்டுமே உரிய துறை என்பதான ஒரு பிம்பத்தை
தொடக்கத்திலிருந்தே அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டுள்ளனர். முக்கியமாக,
அரசு, அரசாங்கம் என்பது அதிகார மையமாகத் திகழ்வதால், மிகத் தந்திரமாக
மக்களை அரசியல் பக்கம் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டனர்! மேலும், நய
வஞ்சகமாக, "அரசியல் என்பது ஒரு சாக்கடை!" என்று சொல்லி அரசியலை
அருவருக்கத்தக்க ஒரு விஷயமென அச்சுறுத்தி மக்களை அருகே நெருங்கவி
டாமல் செய்த அரசியல்வாதிகள் அரசியலை தங்களுக்கான ஏகபோக சரணா
லயமாகக் கொண்டுவிட்டனர்!

"அரசியல்" என்றாலே தந்திரம், நயவஞ்சகம், சூழ்ச்சி, சதி, மோசடி, ஏமாற்று,
துரோகம், பொய்ம்மை, சூது . . .ஆகிய அர்த்தங்கள் தொனிக்கின்ற வகையில்
ஒருவகை ஒவ்வாமை தோன்றும்படி செய்துள்ளனர்!

மேலும், தேர்தல் எனும் ஒற்றைச் சடங்கைத் தவிர, அரசியல் நிகழ்வுகள்,
செயல்பாடுகள் ஆகிய எதிலும் மக்கள் பங்கெடுக்கும் வகையில் அரசியல்
அமைந்திருக்கவில்லை! சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு அவைகளுக்
கும் தங்களுக்கான உறுப்பினர்களை, அதாவது, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்
பதுடன் மக்களின் அரசியல் செயல்பாடும், பங்கெடுப்பும் முடிந்து விடுகிறது!
இவ்வுறுப்பினர்கள் பெயரளவிற்குத்தான் மக்களின் பிரதிநிதிகள்; மற்றபடி
எதார்த்தத்தில் அவர்கள் மக்களை ஏய்த்து மேய்த்து சர்வாதிகாரம் செய்யும்
எசமானர்களைப் போலவே நடந்து கொள்கின்றனர்!

அடுத்து, தேர்தலில் அதிக வாக்குகளைப்பெற்று ஆட்சியதிகாரத்திற்கு தேர்வான
ஒரு கட்சியானது ஆட்சியமைத்ததிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை
அக்கட்சியின் ஒரே செயல்பாடு என்பது உள்-கட்சி விவகாரங்களை, பூசல்களை

அலசிக்கொண்டிருப்பதும், பஞ்சாயத்து பண்ணுவதும் மட்டுமே யாகும்! ஆக,
உள்-கட்சிப்பூசல்களிலும், விவகாரங்களிலும் - பத்திரிகைகள் மற்றும் ஊடகங்
களைத்தவிர - மக்களுக்கும், இளைஞர்களுக்கும் என்ன பங்கு, பணி, பாத்திரம்
இருக்க முடியும்?

அடுத்து, ஆளுகின்ற கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுறும் கட்டத்தில், அடுத்த
தேர்தலுக்குத் தயாராவதற்குரிய பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு, கூட்ட
ணிப் பேரங்கள், போன்ற சடங்குகள் மட்டுமே பிரதான அரசியல் விஷயங்கள்
ஆகும்! இத்தகைய சடங்குகளில் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் மட்டுமே
பங்குபெறுகிறார்கள்; ஏனெனில், கட்சித் தொண்டர்கள் தங்களுக்கு ஏதேனும்
ஆதாயம் கசியக்கூடும் என்ற நம்பிக்கையில், கட்சி எனும் படிமுறை அமைப்
பில் கீழ்ப்படியாயிருந்தாலும் கட்சியில் தங்களுக்கு ஒரு இடமும், உரிமையும்
உள்ளதாக, கட்சியில் உறுப்பினரல்லாத பொதுமக்களைவிட முன்னுரிமை
பெற்றவர்களாகத் தங்களை எண்ணிக்கொள்கிறார்கள்!

அதாவது, "அரசியல்", குறிப்பாக "ஜனநாயக அரசியல்" என்பது மக்களையும்,
மக்களின் நலன்களையும் மையமாக, (முதலீடாகக்) கொண்டு எழுப்பப்பட்ட
ஸ்தாபனம் ஆகும். ஆனால், அரசியல்வாதிகளோ முதலுக்கே மோசம் விளை
யும்படியாக அனைத்து அரசு வருமானத்தையும் தாங்களே சுருட்டிக்கொண்டு
போய்விடுகின்றனர்! அதாவது, மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தி
லிருந்துகூட மக்களுக்கு கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், மின்சார
இணைப்புகள் போன்ற அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளைக்கூட நிறைவேற்று
வதில்லை!

மிக முக்கியமாக, பொதுமக்களும், இளைஞர்களும், சமூக நோக்கும், அக்கறை
யும் கொண்ட அறிவு-ஜீவிகளும் அரசியலில் ஈடுபடவேமுடியாத அளவிற்கான
இரும்புக்கோட்டையாக அரசியல் களமானது, ஏற்கனவே கட்சி-அரசியலில்
தங்களை ஸ்தாபித்துக்கொண்ட தனிநபர்களாலும், கும்பல்களாலும்; பணபலம்,
ஆள்பலம், மற்றும் செல்வாக்கு கொண்டவர்களாலும்; குறிப்பாக, அதிகார
மோகம்கொண்ட சில விபரீத புத்திக்காரர்களாலும் மேலாதிக்கம் செய்யப்பட்டு
வருகிறது! இத்தகைய மேலாதிக்கம், மேலாண்மை, ஜனநாயக விரோதமானது
என்பதில் சந்தேகமில்லை!

நம்முடைய பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பில், மக்களாகிய நாம், நமக்கான
பிரதிநிதிகளை தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுத்து ஆட்சியதிகாரத்தை அவர்கள்
கைகளில் கொடுத்துவிட்டாலே போதும், மற்றவைகளை அவர்கள் பார்த்துக்
கொள்வார்கள்! அதாவது, அரசியல் செய்வது அரசியல்வாதிகளின் வேலை;
அதைப்பற்றி மக்கள் கண்டுகொள்ள வேண்டாம்; மக்களுக்கு அரசியல் என்பது
வேண்டாத வேலை என்பதாக நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம், அதாவது,
ஓரம் கட்டப்பட்டுள்ளோம்!

உண்மையில், அரசியல் என்பது அல்ஜீப்ரா, அல்லது, உயர்-கணிதம் போலக்
கடினமானதல்ல! உண்மையான, மக்களுக்கான, அர்த்தமுள்ள அரசியல்
என்பது எளிய மக்களைப்போலவே எளிமையானது! அரசியலில் ஈடுபட
யாதொரு ராஜ-தந்திரமும், விசேட அரசியல் ஞானமும், தருக்க சாஸ்திரமும்,
எதுவும் வேண்டியதில்லை! சாதாரண மக்களுக்கு அரசியலில் ஆர்வம்
இல்லை என்பதாக, பலமுறை பலராலும், சொல்லப்பட்டு வந்துள்ளது;
ஆனால், போலியான அரசியலில்தான் மக்களுக்கு ஆர்வம் இல்லை என்பது
தான் உண்மையாகும்!

மேலும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அரசியலில், கோணல் புத்திக்
காரர்களும், அதிகாரமோகம் கொண்ட சோம்பேறிகளும், ஒரு மனிதஜீவியாக
வாழ்வது என்றால் என்னவென்பதை சிறிதும் அறியாத மனிதத்தன்மையற்ற
சிலர் மட்டுமே தீவிரமாக அரசியலில் ஈடுபடவிரும்புவர்!

பொதுமக்கள் அரசியலில் பங்குபெறுவது குறித்து பல ஆட்சேபங்கள் தெரிவிக்
கப்படுகின்றன; ஆனால், அந்த ஆட்சேபங்கள் அனைத்தும் அடிப்படையற்ற
வையும், அபத்தமானவையுமாகும்! சாதாரண மக்கள் பொதுவாக புத்திசாலித்
தனத்தில் குறைந்தவர்கள், திறம் குறைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது;
அதனால், அவர்களால் அரசியலில் திறம்படச் செயல்படமுடியாது என்று சிலர்
ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த ஆட்சேபம் அடிப்படையற்றது.
ஏனெனில், அரசியலாகட்டும், பொருளாதாரமாகட்டும், வேறு எவ்வொரு அம்ச
மாகட்டும், யாவும் எதற்காக இருக்கின்றன? யாவும் வாழ்க்கைக்குச் சேவை
செய்வதற்காகத்தானே? மனிதர்கள் தம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வ
தற்கு உதவி புரிவதற்கான கருவிகள் தானே அவை? இவ்வுலகின் அதிமேதா
விகள், அறிவுஜீவிகள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் எனப்படுபவர்களில்
எத்தனை பேர், அடிப்படை உயிர்-வாழ்க்கையைக் கடந்த உயர்-வாழ்க்கையின்
அசலான அர்த்தத்தையும், குறிக்கோளையும், இலக்கையும் புரிந்துகொண்டவர்
களாக இருக்கின்றனர்?

அதி புத்திசாலிகள் என்று தங்களைக் கருதிக்கொள்பவர்களும், பெரும் பணக்
காரர்களும், 'சாதாரண' மனிதர்கள் வாழும் அதே வாழ்க்கையை, மிகவும்
பிறழ்ச்சியான வகையில் அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் வாழ்கிறார்கள்,
அவ்வளவு தானே? அதிகப் பணத்தையும், பொருட்களையும் கொண்டு எவரும்
எவரைவிடவும் அதிகமாகவோ, மேலான வகையிலோ வாழ்ந்துவிடமுடியாது!
அதாவது, கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதும், தேவைக்கு மேலாக பெரும்
செல்வம் சேர்ப்பதும் வாழ்க்கையின் குறிக்கோளாகவோ, இலக்காகவோ
இருக்கமுடியாது!

மக்கள், சாதாரண மக்கள் கௌரவமான வகையில் உயிர்-வாழ்வதற்கு எல்லா
உரிமையும் உள்ளது! யாவற்றுக்கும் மேல் அவர்களிடம் "உழைப்பு" உள்ளது!
ஆம், 'சாதாரண' மக்கள் உண்மையில் சாதாரண மக்கள் அல்ல; அவர்கள்
உழைப்பாளிகள், அவர்கள் பிச்சைக்காரர்களோ, அல்லது அடுத்தவர்களின்
உழைப்பில் வாழும் சோம்பேறிகளோ அல்ல! உண்மையான அறிவும், புத்தி
சாலித்தனமும் பணத்தையும், செல்வத்தையும் சம்பாதிப்பதை உயரிய மதிப்
பீடாக ஒரு போதும் கொள்ளாது! மாறாக, "எல்லோரும் இன்புற்று வாழ
வேண்டும்!" என விரும்புவதுதான் உண்மையான புத்திசாலித்தனமும்,மேலான
அறிவும் ஆகும்!

ஆகவே, அன்றாடம் தங்கள் உழைப்பில் ஆழ்ந்து சமூகத்தின் அனைத்துப்
பொருட்களையும் வளங்களையும் உருவாக்கித் தந்திடும் உழைக்கும் மக்களை
புத்திசாலித்தனத்தில் குறைந்தவர்கள், திறம் குறைந்தவர்கள் என்று சொல்வது
அபத்தமானதாகும். மேலும், அவர்கள் நேரடியாக அரசியலில் பங்குபெற்றுத்
தான் அவர்களுக்குரிய நியாயமான அடிப்படைக் கட்டமைப்புகளை, வசதிகளை
அடைந்தாகவேண்டும் என்பது தேவையற்றது! ஏனெனில் மக்களின் பெயரால்
அமைக்கப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்பில், 'சாதாரண' மக்களால் தேர்ந்
தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளுக்கு மக்களின் தேவைகளையும், நலன்
களையும் குறிப்பால் அறிந்து தங்களது அரசியல் பணியை முறையாக நிறை
வேற்றுவதை விட வேறு வேலை என்ன இருக்கமுடியும்?

இன்னொரு பொதுவான ஆட்சேபம் என்னவென்றால், பெரும்பாலான மக்கள்
அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை! இன்னும் அவர்கள் வாக்களிப்பதுபற்றிக்
கூட பொருட்படுத்துவதில்லை எனப்படுகிறது! உண்மைதான், ஏனெனில், அம்
மக்களின் நலன்களையும், ஆர்வங்களையும் எவரும் கண்டு கொள்வதில்லை;
அவை பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை எனும் பட்சத்தில், வாக்குச்
சாவடிக்குச் செல்வது என்பது கூட நேர-வீணடிப்பு என்பதாக அவர்கள் கருது
கின்றனர்! அதேநேரத்தில், ஸ்விட்சர்லாந்து போன்ற பல ஜனநாயக நாடுகளில்
பொதுமக்களின் அரசியல் ஆர்வமும், ஈடுபாடும் அதிக அளவில் உள்ளது!

ஆனால், உண்மையான பிரச்சினை பொதுமக்கள் அரசியலில் ஆர்வம் காட்டு
வதில்லை என்பது அல்ல! மாறாக, மக்களின் நலன்களை, ஆர்வங்களை,
மக்கள் பிரதிநிதிகள் கவனியாமல் இருப்பதுதான்! அதற்குக்காரணம், அரசியல்
பிரதிநிதிகளின் சொந்த நலன்களும், அரசியல்வாதிகளைப் பின்னால் இருந்து
இயக்குகின்ற பிற ஆதிக்கசக்திகளின் நலன்களும், ஆர்வங்களும் முதன்மை
பெறுவதே யாகும்!

இன்று பெரும்பாலான வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடும் அரசியல்
கட்சிகளில் இந்தக்கட்சியா, அல்லது அந்தக்கட்சியா என ஒன்றைத் தேர்ந்
தெடுப்பது தான் ஜனநாயகம் என்பதாக கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால்,
இப்பிரமை கடந்த பல நூற்றாண்டுகளாக முடியாட்சி, மற்றும் பிரபுத்துவ
ஆட்சிமுறைகளிலிருந்து மாறி வருவதற்கு வழியமைத்துக்கொடுத்தது. ஆனால்,
இன்று அது புதிய ஆதிக்க எந்திரத்தையும், ஒரு புதிய மேட்டுக்குடியையும்
உருவாக்கியுள்ளது; அது எவ்வகையைச் சேர்ந்ததோ, ஆனால், அது ஜனநாயக
பூர்வமானதல்ல! அரசியல்வாதிகள் பெயரளவிற்கு மட்டுமே மக்களின் பிரதி
நிதிகள்; உண்மையில் அவர்கள் ரகசிய ஆதிக்க அமைப்புக்களின் சார்பாக
மக்களிடம் பேரம் பேசும் முகவர்களே யாவர்! ஏனெனில், அந்த ஆதிக்கச்
சக்திகள்தான் அரசியல்வாதிகளை பின்புலத்திலிருந்து ஆதரிப்பவையும், அவர்
களது பதவிகளைப் பாதுகாப்பவையும் ஆகும்!

மேலும், பொதுமக்கள் அதிக அளவில் அரசியலில் ஆர்வம் கொள்வதையும்,
ஈடுபடுவதையும் பதவி வெறியும், அதிகார வெறியும் கொண்ட அரசியல்வாதி
கள் விரும்பவோ, ஊக்குவிக்கவோ  செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது
அர்த்தமற்றது; அது ஒருபோதும் நிகழாது! ஏனெனில், பொதுமக்களின் தீவிர
அரசியல் பங்கேற்பு என்பது கடைசியில் அரசியல் வாதிகளின் போலியான
முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்துவிடும்!

உண்மையில் இன்று நாம் இருக்கும் ஜனநாயக அமைப்புமுறை எவ்வாறு
நம்மை வந்தடைந்தது என்பதை மக்களாகிய நாம் அறிந்தோமில்லை!
ஜனநாயக அமைப்பை ஸ்தாபிப்பது என்பது ஒரு விஷயம் என்றால், அதைப்
பாதுகாப்பது என்பது இன்னொரு விஷயம் ஆகும்! குறிப்பிட்ட ஒரு இடத்தில்,
காலத்தில், அதிக ஜனநாயகம் இருக்கலாம்; ஆனால், எக்காலத்திலும் சிலர்
அல்லது சில ஸ்தாபன சக்திகள் ஜனநாயகத்தை மட்டுப்படுத்தி தமக்கு அதிக
அதிகாரத்தைப் பெற முயல்வது நிகழும். வேறு சொற்களில் சொன்னால்,
சுதந்திரத்தைப்போலவே ஜனநாயகமும் தொடர்ந்து பாதுகாக்கப்படவும்,
பராமரிக்கப்படவும் வேண்டும்! தொடர்ந்து பராமரிக்கப்படாது விடப்படும்
வீடானது நாளடைவில் சிறிது சிறிதாக வலுவிழந்து, ஒரு நாள் இடிந்து விழக்
கூடும்! அந்த ஒரு நாள் எந்த நாள் என்பது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளும்
போது நிச்சயம் தெரியவரும்!

"ஜனநாயக அமைப்பின் பிரஜைகளாகிய மக்கள் அரசியலில் பங்கெடுப்பதன்
மூலம் மட்டுமே அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருக்கமுடியும். பலருக்கு
(எல்லோருக்கும் அல்ல) அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருப்பது என்பது
சுவாசிக்க முடிவதற்குச் சமமானது." என்பதாக நூலாசிரியர் இவோ மோஸ்லே
குறிப்பிடுகிறார்! ஆனால், அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருப்பதைவிட
முதலில் மனிதர்கள் உயிர்-பிழைத்திருக்க வேண்டுமல்லவா? மேலும் மனிதர்
கள் உருவாக்கிய கருவிகளே மனிதர்களை அடிமைப்படுத்துவதாக, அழிப்பதாக
மாறுவதற்கு இடம் தரலாமா? ஆம், எத்தகைய சமூகத்தை நமக்கு நாமே உரு
வாக்கிக்கொள்ள விரும்புகிறோம் என்பதே இப்போதைய அதிமுக்கியத்துவம்
வாய்ந்த கேள்வியாகும்! உண்மையான ஜனநாயக சமூகங்களில், அரசியல்
பங்கெடுப்பு என்பது ஒரு உத்தியோகம் அல்ல; மாறாக, அது ஒரு உரிமையும்,
கடமையும் ஆகும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 04-12-2017
----------------------------------------------------------------------------

Monday, 4 December 2017

அரசியல் கட்சிகள் - அவசியத் தீமையா, அல்லது தீமையா ?



   அவசியத்தீமை என்பது அவ்வளவாக சாதகமல்லாத ஆனால்
   அப்போதைக்குத் தேவைப்படும் ஒரு விஷயம், அல்லது அம்சத்தைக்
   குறிப்பதாகும். அவ்விஷயம் இல்லாவிடில் அதிக பாதகம் விளைவதா
   யிருக்கும்! மேலும், அவ்விஷயத்திற்கு மாற்றாக வேறு எதுவும்
   தற்போதைக்கு இல்லாததினால் அவ்விஷயம் அவசியமான தீமை
   எனப்படுகிறது!


பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடித்தளம் என்று கருதப்படும் அரசியல் கட்சி
களின் மீதான பொது மக்களின் நம்பிக்கையின்மை சமீபகாலமாக பரவலாக
எல்லா நாடுகளிலும் நிலவுகிறது! இன்று மிகக் குறைவான பிரஜைகள் தான்
அரசியல் கட்சிகளை நம்புகிறார்கள்! இந்நிலைமையானது ஜனநாயக அரசிய
லின் தன்மையையே மறுவடிவாக்கம் செய்துகொண்டிருக்கிறது என்பதாக
அரசியல் ஆய்வறிஞர்கள், ரஸ்ஸல் ஜெ. டால்டன் (RUSSELL J. DALTON),
மற்றும் ஸ்டீவென் எ. வெல்டான் (STEVEN A. WELDON)ஆகியோரது ஆய்வு
முடிவுகள் தெரிவிக்கின்றன!

அரசியல் கட்சிகளைப்போல வேறு எந்நிறுவனமும் பிரதிநிதித்துவ ஜனநாயக
வழிமுறையுடன் மிக நெருக்கமாக அடையாளப்படுத்தப்படவில்லை! மிகவும்
புகழ் வாய்ந்த அரசியல் விஞ்ஞானி  E.E. Schattschneider அவர்களின்
அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் முடிவு என்னவெனில், "அரசியல் கட்சிகள்
இன்றி வேறு எதைக்கொண்டும் நவீன ஜனநாயகத்தை எண்ணிப்பார்க்க இய
லாது!" அடுத்து, James Bryce அவர்களின் கூற்று என்னவெனில், "அரசியல்
கட்சிகள் தவிர்க்கவியலாதவை. ஏனெனில், அவையின்றி எவ்வாறு பிரதிநிதித்
துவ அரசாங்கத்தை நடத்துவது என்பது பற்றி எவரும் எடுத்துச் சொல்ல
வில்லை"

மேலும் பல அரசியல் விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும், மேற்குறிப்பிட்ட
பார்வைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக அமெரிக்க அரசியல் விஞ்
ஞானக் கழகமானது, "அதிக பொறுப்புகொண்ட அரசியல் கட்சியின் அரசாங்கம்
வேண்டும்" என 1999,Economist இதழின் ஒரு கட்டுரையில் அழைப்பு
விடுத்தது! அக்கட்டுரையானது, ஜனநாயகத்தின் அடித்தளமாகக் கருதப்படும்
அரசியல் கட்சிகளின் பணி, பாத்திரம் குறித்து பரிசீலித்தது.

ஜனநாயகத்திற்கு அரசியல் கட்சிகள் மிகவும் அடிப்படையானவை என்று
பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு குறித்து
கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருபுறம், கட்சி அரசாங்க ஏடுகள்,
கட்சிகள் ஆற்றுகின்ற நேர்மறையான பாத்திரம் குறித்து வலியுறுத்திக் கூறு
கின்றன! மறுபுறம், அரசியல் கட்சிக்கு எதிரான நெடிய வரலாற்றைக் கொண்ட
அபிப்பிராயம், ரூஸோ (Rousseau) முதல் மேடிஸன் (Madison) வரை,
இருக்கிறது. அவ்வபிப்பிராயம், அரசியல் கட்சிகள் புரியும் தீங்கு குறித்தும்,
எவ்வெவ்வழிகளில் அவை ஜனநாயக வழிமுறைகளைத் தடுக்கின்றன என்பது
குறித்தும் விமர்சிப்பதாயுள்ளன! பிரெஞ்சு நாட்டு சமூகவியலாளரும், அரசியல்
கோட்பாட்டாளருமான அலெக்ஸி டி டாக்குவில் (Alexis de Tocqueville)
என்பவர், "அரசியல் கட்சிகள் சுதந்திர அரசாங்கங்களின் உள்ளார்ந்த தீமையாக
விளங்குகின்றன!" என்றார்.

இவ்வபிப்பிராயங்களே, பேல் (Bale), மற்றும் ராபர்ட்ஸ் (Roberts) அவர்
களின், நியூஸிலாந்து நாட்டின் சமீபத்திய தேர்தல்முறை சீர்திருத்தம் குறித்த
சர்ச்சைகள் மீதான மதிப்பாய்வுரையில் எதிரொலித்தன: "வாக்காளர்களைப்
பொறுத்தவரை அரசியல் கட்சிகள் குறித்த விஷயம் குறிப்பிடத்தக்க வகையில்

போற்றுதலுக்குரியதாயில்லை; மாறாக, அவர்கள் தயக்கத்துடன் இனம் கண்டு
ணர்வது என்னவெனில், அரசியல் கட்சிகள் என்பவை அவசியமான தீமை
என்பதே"

அரசியல் கட்சிகளின் அரசியல் பாத்திரம் குறித்த கோட்பாட்டுரீதியான விவாத
மானது நெடுங்காலமாக இருந்து வரும் ஒன்றாகும். ஆனால், சமீப காலத்தில்
இவ்விவாதங்கள் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன;
அதாவது, அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் அதிகரிக்கும் ஆர்வமிழந்த
நிலை மேற்கத்திய ஜனநாயகங்கள் இடையே பரவியுள்ளது இதற்கு சான்றாக
வுள்ளது (Dalton and Wattenberg 2000). பெரும்பாலான ஸ்தாபிதமான
கட்சிகளில் உறுப்பினர்களின் பதிவுகள் குறைந்துள்ளன (Scarrow 2000;
Mair and van Biezen 2001). தேர்தல்களில் வாக்குகள் பதிவும் சரிவு
கண்டுள்ளன. அரசியல் கட்சிகளின் மீதான உளவியல் ரீதியான பிடிப்புகளும்,
கட்சியுடன்  அடையாளப்படுத்திக்கொள்வதும் கூட தளர்வு கண்டுள்ளன. முடி
வாக, இடது, மற்றும் வலது சாய்ந்த ஸ்தாபன-விரோத எதிர்ப்புக் கட்சிகளின்
எழுச்சியும் இவ்விடர்பாட்டின் மேலுமொரு அடையாளமாக உள்ளது!

கூடுதலாக, அரசியல்கட்சிகள் குறித்த இவ்வபிப்பிராயங்கள் நிறுவன ரீதியான
மாற்றத்திற்கான கோரிக்கைகளைத் தூண்டுகின்றன. அரசியல் கட்சிகள்மீதான
பொதுமக்களின் பரவிப்பெருகும் அதிருப்தியின் காரணமாக இத்தாலி, ஜப்பான்,
மற்றும், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தேர்தல் அமைப்புமுறை
களை மாற்றியமைத்தன (Shugart and Wattenberg 2001). மேலும்,
தற்போது  இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளிலும்
தேர்தல் அமைப்புமுறையில் சீர்திருத்தம்வேண்டும் என கோரிக்கைகள் எழுந்
துள்ளன (Norris 1995).

தற்போது, புதிய மதிப்பாய்வு முறைகள், பொது மக்கள் எவ்வாறு அரசியல்
கட்சிகளைப் பார்க்கிறார்கள் என்பது குறித்து  நேரடியாகவும், மிக ஆழமாகவும்
பரிசீலிக்க உதவுகின்றன. முதலில், Comparative Study of Electoral
Systems (CSES, module I) மேற்கொண்ட மதிப்பாய்வின் படி, இரண்டு
அடிப்படையான கேள்விகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன: ஒன்று, ஜன
நாயகத்திற்கு அரசியல் கட்சிகள் அவசியமா? இரண்டு, உண்மையிலேயே
மக்களின் எண்ணங்கள் ( நலன்கள்) குறித்து அரசியல் கட்சிகள் அக்கறைப்படு
கின்றனவா?

இக்கேள்விகள், நடப்பு அபிப்பிராயங்களின் புதிரான தன்மையை பிரதிபலிப்பதா
யுள்ளன! அதாவது, 'அரசியல் கட்சிகள் அவசியமா?' என்ற கேள்விக்கு, 13 ஜன
நாயக நாடுகளின் நான்கில் மூன்று பங்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள்
அவசியமே என்று பதிலளித்துள்ளனர்! இக்கருத்தானது, அமெரிக்க அரசியல்
விஞ்ஞானி, ஷாட்ஸ்னெய்டர் (Schattschneider)அவர்களின் பார்வையான,
"பெரும்பாலான பிரஜைகளைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் இல்லாத
ஜனநாயகம் என்பது எண்ணிப்பார்க்க முடியாதது!" என்பதை ஆதரிப்பதாக
உள்ளது. ஆயினும், அதேநேரத்தில், 'அரசியல் கட்சிகள் பொதுமக்களின் நலன்
கள் குறித்து அக்கறைப் படுகின்றனவா?' என்பது குறித்து சமகாலப் பொது
மக்கள் பெரும் ஐயப்பாடு கொண்டுள்ளனர்.

இக்கேள்வியைப் பொறுத்தவரை, சராசரியாக மூன்றில் ஒரு பங்குக்கும் குறை
வான பொதுமக்கள் மட்டுமே நேர்மறையாகக் காண்கின்றனர்! இத்தகைய
வேறுபாடுகள் கவனத்தைக் கோருவதாகும். 80% ஸ்வீடன் மக்கள், அரசியல்
அமைப்பு செயல்படுவதற்கு கட்சிகள் அவசியமானவை என்கின்றனர்; ஆனால்,
வெறும் 23% பேர்கள் மட்டுமே  கட்சிகள் சாதாரண மக்கள் குறித்து அக்கறைப்
படுகின்றன என நம்புகின்றனர்.

அதே போல், 80% ஜெர்மனியர்கள், அரசியல் கட்சிகள் அவசியமே என எண்ணு
கின்றனர், ஆனால், 18% பொதுமக்கள் மட்டுமே கட்சிகள் மக்கள் நலன் மீது
அக்கறை கொண்டுள்ளன என்கின்றனர்.

ஆயினும், நெடிய காலப்பகுதியை உள்ளடக்கிய ஆய்வின் புள்ளிவிவரங்கள்
அரசியல் கட்சிகள் மீதான நம்புக்கையிழப்பையே சுட்டுகின்றன! கனடாவில்,
1979-ல் 30% இருந்த நம்பிக்கை, 1999-ல் 11% மாகக் குறைந்து போனது! ஜெர்ம
னியில், 1979-ல் 43% இருந்தது, 1993-ல் வெறும் 26% மாகக் குறைந்து போனது!
சுவீடனில், 1968-ல், 'ஓட்டுக்களுக்காக மட்டுமே கட்சிகள் மக்கள் மீது அக்கறை
காட்டுகின்றன' என்ற கருத்தை மறுத்துச் சொன்ன  முழு 68% மக்கள், 1998-ல் 
வெறும் 23% மாகக் குறைந்து போயினர்! அதேபோல், பிரிட்டிஷ் பொதுமக்க
ளும் கடந்த இருபதாண்டுகளில், அரசியல் கட்சிகளை மிகக் குறைவாகவே
நம்புகின்றனர்! 1960-ல் 40% அமெரிக்கர்கள், அரசியல்கட்சிகள் பொதுமக்களின்
ஆர்வங்களுக்குச் செவி சாய்ப்பதாக எண்ணினர். ஆனால், 1970 களில், 30%
மாகக் குறைந்து போயினர்; 1980 களில், 20% மாக மேலும் குறைந்துபோயினர்.
இதற்கிணையாக, நார்வேஜிய நாட்டிலும் அரசியல் கட்சிகள் மீது பொதுமக்கள்
விரிவான அதிருப்தி கொண்டுள்ளதற்கான சான்று உள்ளது.

இவ்வாறே புள்ளிவிவரங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக,
சுருக்கமாகச் சொன்னால், சமகாலத்திய பொதுமக்கள் அரசியல் கட்சிகளை
ஜனநாயகத்தின் அவசியத்தீமை எனக் காண்பதாகவே தெரிகிறது -- அதாவது,
தேர்தல்களை நடத்துவதற்கும், அரசாங்கம் அமைப்பதற்கும் அரசியல் கட்சிகள்
தேவைப்படுகின்றன, ஆனால், இவ்வழிமுறைக்குள் எவ்வாறு அரசியல் கட்சி
கள் பொதுமக்களின் ஆர்வங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பது
குறித்து சந்தேகத்துடன் பார்க்கின்றனர். மேலும், அரசியல் கட்சிகள் குறித்த
எதிர்மறை உணர்வுகள் சென்ற தலைமுறைக்கும் பரவியுள்ளது. ஒரு காலத்
தில், கல்வியாளர்களும், பிரஜைகளும், ஒரே மாதிரியாக, அரசியல் கட்சிகள்
ஜனநாயகத்தின் தூண்கள் எனக்கண்டனர். ஆனால், இப்போது, சமகாலத்திய
பொதுமக்கள், அரசியல் கட்சிகளை அசட்டைமிக்கவையாக, நம்பிக்கைக்குப்
பாத்திரமில்லாதவையாக, பிரதிநிதித்துவம் பாராட்டாதவையாகக் காண்கின்ற
னர்! அரசியல் கட்சிகள் இல்லாத ஜனநாயகம் எண்ணிப்பார்க்கவியலாதது
என்றால், பல பிரஜைகள், கட்சிகள் எவ்வளவு சிறப்பாக தமது பாத்திரத்தைச்
செயல் படுத்துகின்றன என்பது குறித்து சந்தேகிக்கின்றனர்!

அரசியல் கட்சிகள் மீதான பரவிப்பெருகும் அவநம்பிக்கையின் ஓர் உள்ளார்ந்த
விளைவு என்னவெனில், தேர்தல்களிலும், கட்சி அரசியலின் பிற அம்சங்களி
லும் மக்களின் ஈடுபாடு வெகுவாகக் குறைந்து போகிறது என்பதேயாகும்!

மேலும், வாக்களிப்பு குறைந்து போதலும், கட்சிப்பிரச்சார நடவடிக்கை, கட்சிப்
பணியாற்றுதல், ஊர்வலம் போன்றவற்றில் பங்கெடுத்தல் ஆகியவைகளும்
குறைந்து போயின!

அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பு தனிநபர்களை வேறு வகைகளில்
அரசியலில் ஈடுபடுவதற்கான வழிகளை, அதாவது மரபல்லாத, மற்றும் கட்சி-
சாராத வழிகளை, அதாவது நேரடியாக அரசியல்வாதிகளைத் தொடர்பு கொள்
வது, மற்றும், வேறு வடிவங்களில் நேரடிச்செயல்பாட்டில் ஈடுபடுவது போன்ற
வழிகளைத் தேடும்படித் தூண்டுகிறது! இவ்வாறு, கட்சிகளின் மீதான சந்தேகம்
அரசியல் பங்கெடுப்பின் வடிவங்களை மறுவடிவமைப்பு செய்வதுடன், பிரஜை
களின் தாக்கம், மற்றும், ஜனநாயக வழிமுறையின் செயல்படும் தன்மையில்
மாற்றம் ஏற்படுத்தும் முகமாக புதிய வழி வகைகளைக் கண்டுபிடிக்கும்படி
கொண்டு செல்கிறது!

பிரஜைகள் ஓட்டுப்போடுகிறார்கள் எனும் பட்சத்தில், எவ்வாறு கட்சியின்
பிம்பமானது வாக்காளர் தெரிவுகளை பாதிக்கும்? இது முக்கியமானது, ஏனெ
னில், பலருக்கு, தேர்தல்கள் தான் நவீன ஜனநாயக நிகழ்வுமுறையை வரை
யறை செய்வதாயுள்ளது. தேர்தல்கள்தான் மிகவும் முக்கியமான தருணங்கள்,
அப்போது  தனி நபர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும், மனச்சார்பை
யும் ஒரு ஒற்றை ஓட்டுத் தேர்வாக ஒருங்கிணைத்து முடிவெடுக்கிறார்கள்.
இவ்வாறான ஓட்டுக்களின் மொத்தம்தான் அரசாங்கம் அமைப்பதை தீர்மானிப்
பதாகிறது!

அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பானது வாக்காளர்களின் தெரிவை
பெரிதும் பாதிக்கிறது! அதாவது, கட்சிகளின்மீது அவநம்பிக்கை கொண்டவர்கள்
ஓட்டுப்போடுவதை தவிர்க்குமாறு செய்கிறது! எனினும், ஓட்டுப்போடாதிருப்பது
மட்டுமே ஒரே தெரிவு என்பதில்லை! அவர்கள் தங்கள் ஓட்டுக்களை, புது
மாதிரியாக அரசியல் நடத்தப்போவதாகச் சொல்லுகிற ஒரு கட்சிக்குப் போடக்
கூடும்! அல்லது, அவர்கள் தங்கள் ஓட்டுக்களை பிரதான எதிர்க்கட்சிக்கும் --
அக்கட்சி தனது நடத்தையை மாற்றிக்கொள்ளுமென்ற நம்பிக்கையில்-- போடக்
கூடும்!

சமீபத்திய பத்தாண்டுகள், முன்னேறிய தொழில்துறை ஜனநாயக நாடுகளில்
"கட்சிக்கு-எதிரான கட்சி"களின் எழுச்சியைக் கண்டுள்ளன. கட்சிக்கு-எதிரான
இந்தக் கட்சிகள் மாறுபட்ட சித்தாந்தங்களையும், கொள்கை இலக்குகளையும்
கொண்டுள்ள அதேநேரத்தில், அவை ஒரு பொதுவான செய்தியை எதிரொலித்
தன : "ஸ்தாபிதமான கட்சிகள் யாவும் சுய-சேவை நோக்கம் கொண்டவை,
ஊழல் நிறைந்தவை, மக்கள் நலன்களைக் கண்டு கொள்ளாதவை!" என்பதே
அந்தச்செய்தி!

ஆம், அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட பிரஜைகள்,
பொதுமக்களின் முன்னே மூன்று தெரிவுகள் உள்ளன; ஒன்'று, ஓட்டுப்போடு
வதைத் தவிர்த்தல், இரண்டாவது, கட்சிக்கு-எதிரான கட்சிக்கு ஓட்டுக்களைப்
போடுதல், இறுதியாக, ஏற்கனவே தாபிதமான ஒரு கட்சிக்கு ஓட்டுக்களைப்
போடுதல் ஆகியன! ஜனநாயக அமைப்பு முறையில், தேர்தலை விட்டால்
பொதுமக்களுக்கு வேறு ஒரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆனால்,
தேர்தலின்போது ஓட்டுக்களைச் செலுத்தாமல் இருப்பதால் எவ்வித பயனும்,
மாற்றமும், விளையப் போவதில்லை! அதேபோல, ஓட்டுக்களைச் செலுத்து
வதாலும், பொதுமக்களின் வாழ்வில் பெரிதாக யாதொரு மாற்றமும், பயனும்
விளையப் போவதில்லை! இதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புமுறை
யின் சாபக்கேடான நிலையாகும்!

பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மீது அவநம்பிக்கை கொள்வதற்கும், அரசியல்
கட்சிகளை வெறுப்பதற்கும், அவை ஊழல், அவதூறான நடத்தைகள், முறை
கேடுகள் போன்ற பல காரணங்களையும் புகார்களையும் கொண்டிருக்கின்றன
என்பதையும் தாண்டி, பிரதானமாக மக்கள் நலன்களை அவை கண்டுகொள்வ
தில்லை! ஆனால், வெறுமனே அரசியல் கட்சிகளை வெறுப்பதாலும், விமர்சிப்
பதாலும் எதுவும் நிகழாது!

அதேநேரத்தில், பொதுமக்களாகிய நாம், அவ்வளவு சீக்கிரமாக அரசியல் கட்சி
களின் மரண-அறிவிப்பை எழுதிவிடமுடியாது! ஏனெனில், அரசியல்வாதிகளுக்
கும், பெருமுதலாளிகளுக்கும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் போன்ற பொன்
முட்டை இடும் வாத்து வேறெங்கு கிடைக்கும்! ஆகவே,அவர்கள் தங்களுக்குச்
சாதகமான ஒன்றை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்திடுவார்களா என்ன? 
ஜனநாயக நிகழ்வுமுறையில் மாற்றம், சீர்திருத்தம், புதுமை, என்கிற பெயர்
களில் சில மேலோட்டமான திருத்தங்களைச் செய்துவிட்டு ஜனநாயகத்தை
நாங்கள் தழைத்தோங்கச் செய்துவிட்டோம் என அரசியல்வாதிகள் சொல்லக்
கூடும்!

மேலும், அரசியல் கட்சிகள் ஜனநாயக முறையின் மிகவும் அவசியமான,
முக்கியமான அம்சம் என்பதாக அரசியல் கோட்பாடும், பரவலாக பொதுமக்க
ளும் ஏற்றுக்கொள்கின்ற நிலைமை தொடர்கிறது என்பதால், அரசியல் கட்சி
களை விட்டால் வேறுவழியே இல்லை என்று அர்த்தமில்லை; மாறாக, வேறு
வழிமுறைகள் இன்னும் நம்மால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது எனவும்
அர்த்தம் கொள்ளப்படவேண்டும்! சிலர், அரசியல் கட்சிகளின் நேர்மறையான
பங்களிப்புகளை மறுக்கமுடியாது என்று சொல்வதன்வழியே அரசியல் கட்சி
கள் இன்றி ஜனநாயகத்தை எண்ணிப்பார்க்கவும் இயலாது என்ற முடிவிற்கு
வருகிறார்கள். இக்கூற்று  பார்வைக்கோளாறு கொண்டதாகும்! ஏனென்றால்,
நேர்மறையான பங்களிப்புகளைச் செய்வதற்காகத்தானே அரசியல் கட்சிகளை
தேர்தல் மூலம் நாம் தேர்வுசெய்கிறோம்? அரசியல் கட்சிகளாகட்டும், அரசியல்
வாதிகளாகட்டும் அவர்கள் எங்கிருந்து, எதற்காக, யாருக்காக வருகிறார்கள்?
அவர்கள் என்ன வானத்திலிருந்து இறங்கி வந்த தேவர்களா? அவர்களும்
மக்களைச் சேர்ந்தவர்கள் தானே? ஆக, அரசியல்வாதிகளும், அரசியல் கட்சி
களும் இல்லாமல் பொதுமக்களாகிய நாம் வாழவே இயலாது என்று சொல்வ
தன் அர்த்தம் என்ன?

ஆனால், முதலிடத்தில், அரசியல் கட்சிகள் எதற்காக நமக்குத் தேவைப்படு
கின்றன என்பது பற்றி நாம் தெளிவுபடச் சிந்திக்க வேண்டாமா? ஆம், பொது
மக்களாகிய நம்மை, நமது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக
அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தேவைப்படுகின்றன! அதாவது,
கட்சிகள் இல்லாமல் அரசியல்வாதிகள் இல்லை! அரசியல்வாதிகள் இல்லை
யேல், நம்மைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள்!
என்பதுதானே நம் தலைவிதியை நிர்ணயிக்கும் மரணகரமான (Fatal)அந்த
எளிய சமன்பாடு? ஆனால், மக்களின் நலன்கள் அரசியல் கட்சிகளாலும், அரசி
யல்வாதிகளாலும் காற்றில் பறக்க விட்டுவிடும்போதும் ஜனநாயகம் என்பதை
நாம் எண்ணிப்பார்க்கவியலாது என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டாமா?

தொடக்கத்தில், கட்சி அரசியல் எனும் தீங்கானது ஒவ்வொரு நாட்டின் தனிப்
பட்ட வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கருதப்பட்டது! அமெரிக்க
மக்கள் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழந்து போனதற்கு
அரசியல்வாதிகளின் இழி-நடத்தைகளும், அரசாங்கத்தின் கொள்கைத் தோல்வி
களும் காரணங்களாக அமைந்தன! இத்தாலிய மக்கள் அந்நியப்பட்டுப்போன
தற்கு, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புக்களில் மலிந்திருந்த ஊழல்
கள் பகிரங்கப்படுத்தப்பட்டதே காரணம் எனப்படுகிறது! கனடா நாட்டு மக்களின்
நம்பிக்கையிழப்பிற்கு பிராந்திய பூசல்கள் கட்சி அமைப்பில் பிரதிபலித்தது
தான் எனப்படுகிறது! ஜெர்மானிய மக்களின் விரக்திக்கு ஒருங்கிணைப்பு தான்
காரணம் எனக் கருதப்பட்டது! சந்தேகமில்லாமல் அந்தந்த நாட்டிற்குரிய தனிப்
பட்ட இத்தகைய நிலைமைகளும் உள்ளன. ஆனால், அரசியல் கட்சிகள்,
மற்றும் பிற பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புகளின் மீது பொதுமக்களின்
பரவிப்பெருகும் அதிருப்திக்கு மேற்கத்திய ஜன நாயகங்கள் அனைத்துக்கும்
பொதுவான வடிவமைப்பு  உள்ளதென ஆய்வு முடிவுகளும், புள்ளிவிவரங்க
ளும் காட்டுகின்றன என்று அரசியல் ஆய்வறிஞர்கள் காண்கின்றனர்.

இத்தகைய எதார்த்தங்கள் உணர்த்துவது என்னவென்றால், அரசியல் கட்சிகள்
மீதான மக்களின் நம்பிக்கையிழப்பானது தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே!
இதன் விளைவாக வாக்களிப்பு குறைந்து போதலும், கட்சிச் செயல்பாடுகளில்
மக்களின் பங்கெடுப்பு குறைந்து போதலும் நிகழ்ந்துள்ளன! அதாவது, மக்கள்
நலன்களில் அரசியல் கட்சிகள் அக்கறை காட்டாதபோது, மக்கள் ஏன் வாக்க
ளிப்பது பற்றி கவலைப்படவேண்டும் என்பதே பிரதிவினையாக உள்ளது!
கட்சிகள் மீதான அவநம்பிக்கை, கட்சி-சாராத அரசியல் செயல்பாடுகளை
தோன்றச் செய்கின்றன -- அதாவது, நேரடியாக அரசியல்வாதிகளைத் தொடர்பு
கொள்வது, மரபல்லாத வழிகளில் பங்கேற்றல், பிரஜை நலக்குழுக்கள், ஆகிய
பிற வடிவங்களில் நேரடிச் செயல்பாடுகளில் ஈடுபடுதல் தோன்றியுள்ளன!

அடுத்து, அதிருப்தியடைந்த பொதுமக்கள், முற்றிலுமாக அரசியல் கட்சிகளை
புறக்கணிக்காத நிலையில் வாக்களிக்க முன் வருகிறார்கள் எனும் பட்சத்தில்,
அவர்கள் இருவகை கட்சிகளைத் தேர்வு செய்வதாகத் தெரிகிறது! அதாவது,
தாபிதமான கட்சிகளில் எதிக்கட்சியையும், இல்லாவிடில், தீவிர வலதுசாரிக்
கட்சியையும் தேர்வு செய்கிறார்கள்! இவ்விரண்டில், முதல் வகைத் தேர்வு,
தாபிதமான பெருங்கட்சிகளை மக்கள்நலன்களில் அதிக அக்கறை கொள்ளும்
படித் தூண்டும் வகையில் அமைகிறது! இரண்டாவது வகைத் தேர்வு, மரபான
கட்சி-அரசியலை முற்றாகப் புறம்தள்ளி, புறத்தேயிருந்து பிரதிநிதித்துவ ஜன
நாயக முறையை மாற்றியமைத்து பெருமாற்றம் கொணர விரும்பும் கட்சி
களை வரவேற்பதாய் அமைகிறது!

தாபிதமான, ஊழல் பாரம்பரியத்தில் துறைபோன, அரசியல் கட்சிகளை
நிராகரிப்பதையும், தாபிதமான எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, ஆளும் கட்சி,
எதிர்க்கட்சி ஆகிய இரு துறைபோன கட்சிகளுக்கும் புத்தி புகட்டுவதையும்
கடந்து, கட்சி-சாராத அம்சங்களை விரிவுபடுத்துவது இன்னொரு வகை
சீர்திருத்த முயற்சியாகும். அதாவது, அரசின் கொள்கை முடிவுகள் மீதான
பொதுமக்களின் கருத்தை நேரடியாக அறிவதற்கான  பொதுவாக்கெடுப்புகள்
(Referendums),பிரஜைகள் தங்கள் பிரச்சினைகளை தெரியப்படுத்துவதற்கு
வாய்ப்பளிப்பது, மற்றும் பிற நேரடிச்செயல்பாடுகளை அதிகரிப்பது! இவ்வழி
கள், வாக்காளர்கள் ஓரளவிற்கு கட்சி அரசியலை தவிர்த்துக் கடந்து செல்ல
உதவக்கூடும்! மேலும், கொள்கை நிர்வாகத்திலும் மாற்றங்களைச் செய்தல்
என்பதும் இவற்றைப் பின்தொடர்ந்து நிகழக்கூடும்! ஏனெனில், பொதுமக்கள்
அரசியல் கட்சிகள் மீது மிகுந்த அவநம்பிக்கை அடைந்துள்ளபடியால், அரசிய
லில் நேரடியாகத் தங்கள் குரல் இடம்பெற வேண்டும் எனக் கோருகிறார்கள்!

முடிவாக, அரசியல் கட்சிகளின் மீதான அவநம்பிக்கை என்பது, உலகில்
மேற்கு, கிழக்கு என வித்தியாசமின்றி, பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை
யைக்கொண்ட அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுமக்களின் பொதுவான
அம்சமாக விளங்குகிறது! அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் தொடர்ந்து தமது
மையமான பாத்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு அனைத்து வழி
களிலும் முனைப்பாகச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை! ஆனால், ஜன
நாயக அரசியல் அமைப்புமுறையில், கட்சிகளின் பரந்த பாத்திரம் என்பது

சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது!

ஆக, எவ்வாறு பார்த்தாலும், அரசியல் கட்சிகள் என்பவை அவசியத் தீமை
என்ற நிலையிலிருந்து கீழிறங்கி பெரும் தீமையாக மாறி ஜனநாயகத்தை
உள்ளேயிருந்து அரித்து அழித்துவருகிறது என்பது மட்டும் நிச்சயமாகும்!
"பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புமுறை"யில் உள்ள ஒரே பிரச்சினை "பிரதி
நிதித்துவம்" என்பது தான்! அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி
களாகிய அரசியல்வாதிகள்தான்! அவர்கள் புரிகின்ற மக்களுக்கெதிரான, மக்கள்
நலன்களுக்குப் புறம்பான அரசியல்தான்! அதாவது,அரசியல்வாதிகள் நமக்கான,
நம்முடைய பிரதிநிதிகளாகச் செயல்படுவதில்லை என்பதுதான்! ஆனால்,
அரசியல் வாதிகள் இவ்வாறு தங்களுடைய ஜனநாயகக் கடமைகளிலிருந்தும்,
பொறுப்புகளிலிருந்தும் வழுவிப்போவதற்கான காரணம், மக்களாகிய நாம்
அவர்களை நம்முடைய பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து அவர்களின் கைகளில்
நாம் வழங்கிய "ஆட்சியதிகாரம்" தான்! இந்த ஆட்சியதிகாரம் தான் அரசியல்
வாதிகளை மிகவும் பிறழ்வான வழிகளில் செல்லுமாறு செய்கிறது!

இப்போது நாம், அரசியல்வாதிகளின் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும்
நம்பிக்கையிழந்து அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் முற்றாகப்
புறக்கணிப்பு செய்கிறோம் எனும்பட்சத்தில், நம்மைப் பிரதிநிதித்துவம் செய்வ
தற்கு எதுவும், எவரும் இல்லை என்றாகிவிடும்! பிறகு பொதுவான அராஜக
நிலை, அதாவது, அரசு இல்லாத குழப்பமான நிலையும், அமைதிக்கேடும்,
சட்ட விதிமுறைகளுக்கு மாறான செய்கையும் ஏற்பட ஏதுவாகிடும் வாய்ப்பு
உள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது தான்! ஆனால், அரசு என்பது இங்கே
இருக்கும்போதே அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்
படும் குழப்ப நிலையையும், அமைதிக்கேட்டையும், சட்ட விதிமுறைகளை
மீறிய செய்கைகளையும் எங்கே, எவரிடம் போய் முறையிடுவது?

ஆனால், "அரசு". "அரசாங்கம்" என்பது என்ன? மக்களாகிய நம்மால், தேர்தல்
மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அமைப்பல்லாமல் வேறென்ன?
அதாவது, நம்முடைய பிரதிநிதிகளும் அரசியல்வாதிகள் தான்; அரசு, அரசாங்
கம் என்பதும் அரசியல்வாதிகளே தான்! உண்மையில், மக்களாகிய நாம் நமக்
கான பிரதிநிதிகள் என்ற பெயரில்,  நம்மை ஏய்த்து மேய்க்கும் ஆட்சியாளர்
களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம்! நம்முடைய பிரதிநிதிகளும், நம்மை ஆள்ப
வர்களும் ஒன்றாக, அதே அரசியல்வாதிகளாக இருப்பது தான் அனைத்துத்
தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்! அரசியல் கட்சிகள் எனும்
தீமையை மக்களாகிய நம்மால் அவசியமற்றதாக ஆக்கிடவும், அகற்றிடவும்
முடியும்! அதற்கு மக்களாகிய நாம் பிளவுகள் இன்றி, பிரிவினை இன்றி ஒரே
கட்சியாக இருக்கவேண்டும்! அதாவது, நமக்கிடையேயுள்ள அனைத்து வேறு
பாடுகளையும், வித்தியாசங்களையும் விட முக்கியமானது, மேன்மையானது
நம்முடைய "மனிதம்" தான்!

நாம் நமக்குள் பிளவுண்டு, பிரிந்து கிடக்கும்வரை, அரசியல்வாதிகளுக்குத்
தான் சாதகமாயிருக்கும்! ஆகவே, நமக்கிடையேயுள்ள அனைத்து வேறுபாடு
களையும், வித்தியாசங்களையும் கடந்து, அனைத்து மக்களின் பொதுவான
அடிப்படையான நலன் களையும், வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டு
மெனில், ஜனநாயத்தை நாம் அரசியல் கட்சிகளிடமிருந்தும், அரசியல்வாதி
களிடமிருந்தும் காப்பாற்றியாக வேண்டும்!

   •( இக்கட்டுரை, அரசியல் ஆய்வறிஞர்கள் RUSSELL J. DALTON and
   STEVEN A. WELDON ஆகியோரது "Public Images of Political
   Parties: A Necessary Evil?" எனும் தலைப்பிலான அறிக்கையின்
    புள்ளிவிவரங்களையும், சில தரவுகளையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்
    பட்டதாகும் )•

மா.கணேசன்/ நெய்வேலி/ 29-11-2017
----------------------------------------------------------------------------


வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...