Saturday, 18 November 2017

வாருங்கள், அர்த்தமுள்ள அரசியலை அறிவோம்!




 இன்றைய அரசியல் அர்த்தமுள்ளதாக இல்லை; ஏனெனில்,
 அரசியல்வாதிகள் மனிதர்களாக இல்லை. ஏனெனில்,
 மக்களாகிய நாம் மக்களாக இல்லை!
                 •••

நாம் ஏன் அரசியல் குறித்துப் பேச வேண்டும்?
-----------------------------------
"அரசியல்" என்பது, முற்றிலும் ஒரு தனி விஷயமோ, துறையோ, மிகவும்
விசேடமான, அல்லது வித்தியாசமான ஒரு சிலருக்கு மட்டுமே உரியதோ
அல்ல! அரசியலை வெறும் அதிகாரம் என்பதாகச் சுருக்கிக் காண்பவர்கள்
மிகவும் நயவஞ்சகமாக, வாழ்வின் எவ்வொரு விஷயமும், அம்சமும் அரசிய
லுக்கு உட்பட்டதே என்கிறார்கள்! எங்கும், எதிலும், எல்லாவற்றிலும் அரசியல்
உள்ளது என்கிறார்கள்! ஆனால், இப்பேச்சு தவறானது, தலைகீழானது! மாறாக,
மனிதனின் புற-வாழ்க்கையில், பலவித விஷயங்களுள் அரசியலுக்கும் ஓர்
இடமுள்ளதே தவிர, நம் வாழ்வனைத்தையும் ஆக்கிரமிக்கும் வகையில் அரசி
யலுக்கு மட்டுமல்ல, வேறு எவ்வொரு விஷயத்திற்கும் இடமில்லை! மேலும்,
மனித வாழ்க்கை என்பது வெறுமனே உணவு, உடை, உறையுள் என "புற-
வாழ்க்கை" யுடன் முடிந்து போகிற விஷயமல்ல; புற-வாழ்க்கையை அர்த்தம்
உள்ளதாகச் செய்யக்கூடிய "அக-வாழ்க்கை", எனும் "ஆன்மீக வாழ்க்கை" என்
பதும் உள்ளது!

இந்த அக-வாழ்க்கை, அல்லது ஆன்மீக வாழ்க்கை குறித்து அதற்குரிய இடத்
தில் பார்ப்போம். முதலில், உயிர்-வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்வோம்,
அதையடுத்து, "உயர்-வாழ்க்கைக்குச் செல்லுவோம்! இப்போதைக்கு, உடனடி
யாக மக்களை, நம் அனைவரையும் பாதிக்கின்ற அதாவது அடிப்படை உயிர்-
வாழ்க்கைக்குத் தடைகளாக விளங்கும் விவகாரங்களை, காரணிகளைப் பார்ப்
போம்! முதலில், நாம் ஏன் அரசியல் குறித்துப் பேச வேண்டும்? ஏனெனில்,
நாம் வாழ்ந்தாக வேண்டும்; அதில், நம் வாழ்க்கையில், குறுக்கிடுகின்ற, தடை
களாக நிற்கின்ற விஷயங்களை நாம் அகற்றியாக வேண்டும்! நம் வாழ்க்கைப்
பாதையில் கல், முள், போன்றவைகள் இல்லாமல் அவ்வப்போது பராமரிப்பது
நம்முடைய பணியாகும்! ஆகவே, நாம் அரசியலைப் பற்றியும் பேசியாக
வேண்டும்!

ஆனால், நம்மில் பெரும்பான்மையோர் அரசியல் பக்கம் திரும்பிப்பார்ப்பதுகூட
இல்லை! ஏனெனில், நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பது நகராட்சியின், துப்
புரவுப் பணியாளர்களின் பொறுப்பு எனவும்; குற்றங்களைத் தடுப்பது, திருடர்
களைப் பிடிப்பது என்பது காவல்துறையின் பொறுப்பு எனவும்; மாநிலத்தை
நிர்வகிப்பது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான அரசியல்வாதிகளின்
பொறுப்பு எனவும் எண்ணிக்கொண்டு, நாம் நம்முடைய அன்றாட அலுவல்
களில் மூழ்கிக் கிடக்கிறோம்! ஆனால், "வேலியே பயிரை மேய்வது போல",
காவலர்களே திருடர்களாக மாறிடும்போது, ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களே
ஊழல், லஞ்சம் என்று மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும்போது,
நாம் விழித்துக்கொண்டே தூங்கிக்கொண்டிருக்கிறோம்! அதாவது, நாம் நம்
முடைய அன்றாடத்தில் - வருமானத்திற்காக உத்தியோகம், தொழில், வியா
பாரம் என ஆழ்ந்திருக்கும் போது, அரசியல்வாதிகள் பாவம், அவர்கள் என்ன
செய்வார்கள்? அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரசியல் மட்டும் தானே!

ஒரு முறை அரசியலில் ஈடுபட்ட பிறகு, "அரசியல்வாதி" எனும் வேடத்தைத்
தரித்துக்கொண்டுவிட்ட பிறகு, அவர்களால் வேறு எந்த உத்தியோகத்தையும்,
தொழிலையும் செய்ய முடியாத, எண்ணிப்பார்க்க முடியாத நிலையில், ஒரு
வழிப்பாதையில் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பது பரிதாபகரமானதே!
ஆகவேதான், அரசியல்வாதிகள் தங்களது ஆட்சிக்காலத்திற்குள்ளேயே பல
தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்துக்கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்! "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!"
எனும் தருமத்தை மிகச் சரியாகப் பின்பற்றுபவர்கள் அரசியல்வாதிகள்தான்!

தங்களைத்தாங்களே தேர்வு செய்துகொள்ளும் அரசியல் தலைவர்கள்!
----------------------------------------------------
தேர்தலின் வழியாக வாக்குகளைச் செலுத்துவதன் மூலம் நம்முடைய பிரதி
நிதிகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது ஒரு கண்-துடைப்பு விஷயமாகும்!
உண்மையில், நம்முடைய அரசியல் பிரதிநிதிகளை நாம் தேந்தெடுப்பதில்லை!
தற்போது நடைமுறையிலிருக்கும் போலி-மக்களாட்சியில், உண்மையில்,
மக்களாகிய நாம் நம்முடைய அரசியல் பிரதிநிதிகளை (தலைவர்களை)தேர்வு
செய்வதில்லை! மாறாக, அரசியல்வாதிகள் ஏற்கனவே தாங்களே தங்களை,
மக்களின் தலைவர்களாவும், பாதுகாவலர்களாகவும், தவிர்க்கவியலாதவர்க
ளாகவும், முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் அறிவித்துக்கொண்டு, சிலந்தி
வலைபின்னுவது போல, தம்மைச்சுற்றி ஒரு கட்சியைக் கட்டிக்கொண்டு,
தொண்டர்படையைச் சேர்த்துக்கொண்டு நம்மிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள்!
இவ்வாறு வாக்கு வேட்டையாட வரும் பல கட்சியைச் சேர்ந்த தலைவர்களி
லிருந்து நாம் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்! இந்த
நிர்ப்பந்தத்திற்குப் பெயர்தான் தேர்தல் என்பதாகும்! இத்தகைய நிர்ப்பந்தம்,
அதாவது, 'தேர்தல்' நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதாக வேறு
சொல்கிறார்கள்!

ஆம்,  நமக்கான அரசியல் பிரதிநிதிகளை உண்மையில்,நாம் தேர்ந்தெடுப்ப
தில்லை! அதாவது, தங்களுக்குள் கடுமையாகப் போட்டி போடுகின்ற இரண்டு
பெரிய பிராந்திய கட்சிகளில், ஏதாவதொரு கட்சியைத் தேர்வுசெய்யும்படி
நாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோம்! வலுவான இரு பிராந்தியக்கட்சிகளைத் தாண்டி
வேறு கட்சிகள் இருந்தாலும், அவை சிறியனவாகவும், வலுவற்றதாகவும்
இருக்கும்பட்சத்தில் அவைகளை நாம் தேர்வு செய்வதில்லை! அப்படியே,
மூன்றாவதாக வளர்ந்துவரும் ஒரு சிறுகட்சி, சில தொகுதிகளில் தேர்ந்தெடுக்
கப்பட்டாலும், அதிக தொகுதிகளை வென்ற ஆனால், பெரும்பான்மை பெறாத
ஒரு பெரிய கட்சியானது தம்முடன் அச்சிறு கட்சியை இணைத்துக்கொண்டு

ஆட்சியைப்பிடித்துவிடக்கூடும்! கட்சிகள் சிறியதோ, பெரியதோ அவற்றிற்கு
எவ்வாறேனும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே நோக்கமாகும்!

'வலுவான' கட்சி, 'பெரிய' கட்சி என்பதெல்லாம் ஒரு கட்சி எவ்வாறு தனது
பிம்பத்தை, கவர்ச்சித்திற சொல்லாட்சி (Political Rhetoric) மற்றும்
விளம்பரம் மூலமாகவும் நிறுவிக்கொள்கிறது என்பதைப் பொறுத்ததாகும்!
"மக்கள் நலன்கள்", "சமூக நீதி", "பொருளாதாரச் சமத்துவம்", "சுதந்திரம்",
"நல்லாட்சி" போன்றவை வெறும் கவர்ச்சித் திற அரசியல் சொல்லாடல்களே
தவிர வேறல்ல!

அரசியல் கட்சி என்பது ஒரு விபரீத ஜந்து ஆகும்! குறிப்பிட்ட ஒரு கட்சி
தேர்தலில் தோற்றுப்போனாலும் அக்கட்சி உயிருடன் இருப்பதாகவே கருதப்
படுகிறது! 'எதிர்க்கட்சி' என்ற அந்தஸ்த்தில் அது தன் இருப்பைத் தொடர்ந்து
தக்கவைத்துக்கொள்கிறது; அவ்வப்போது ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை
விமர்சிப்பதன் வழியாக அது தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்கிறது!
எவ்வாறு ஒரு கால்பந்தாட்ட அணியானது ஒரு குறிப்பிட்ட போட்டியில்
தோற்றுப்போனாலும், தொடர்ந்து அந்த அணி பயிற்சியில் ஈடுபட்டு, அடுத்த 
போட்டிக்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறதோ அவ்வாறே தேர்தலில்
தோற்றுப்போன கட்சியும் தொடர்ந்து அரசியல் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது!
இத்தகைய நடைமுறை கால்பந்து அணிகளுக்கு வேண்டுமானால் பொருத்த
மாக இருக்கலாம்; அரசியல் கட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கமுடியுமா
என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்! அதாவது, தொடர்ந்து ஒரே
கட்சியோ, அல்லது தலைவரோ மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது
தவிர்க்கப்படவேண்டும்!

எவ்வொரு அரசியல் கட்சியும் தொடர்ந்து நீடித்து நிலைப்பதான ஒரு அமைப்
பாக, நிறுவனமாக நீடிக்க அனுமதிக்கலாகாது! மாறாக, அரசியல் கட்சி என்பது
ஒரு தற்காலிக அமைப்பாக மட்டுமே இருக்கவேண்டும்! அல்லது ஆட்சியாளர்
களைத் தேர்வுசெய்யும் வழிமுறை மாற்றப்படவேண்டும். அல்லது ஒருமுறை
ஆட்சியதிகாரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர், ஒரு தலைவர், மறுமுறை
யும் தேர்வுசெய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும்! ஏனெனில்,தொடர்ந்து ஒரு
அரசியல் கட்சியோ, ஒரு தலைவரோ மீண்டும் மீண்டும் ஆட்சியதிகாரத்தில்
அமர்வதன் மூலம் அவர் மிகச் சுலபமாக தமது சொந்த நலன்களையும், தன்
குடும்ப நலன்களையும் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள வழி வகுத்திடும்!
மேலும், அத்தலைவருக்குப் பின், அவரது புதல்வர் அல்லது உறவினர் என்று
வாரிசு அரசியலுக்கு வழிவகுத்திடும். வாரிசு அரசியல் என்பது மக்களாட்சிக்கு
விரோதமானதாகும்!

ஆடுகள் நனைவது குறித்து கண்ணீர் வடிக்கும் ஓநாய்கள்!
---------------------------------------------
அரசியல் வாதிகள் என்போர் வித்தியாசமானவர்கள் மட்டுமல்ல, விபரீதமான
வர்களும் கூட! அதாவது, மனிதத் திரளிலிருந்து எவ்வாறு, எதற்காக ஒரு
சிலர் மட்டும் தன்னலம் துறந்தவராக, பொதுநலவாதியாகத் தோன்றுகிறார்?
அவர்கள் என்ன வேற்றுக்கிரகத்திலிருந்து இங்கே பூமிக்கு வந்தவர்களா? ஏன்,
அல்லது, எவ்வாறு அவர்களிடம் ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூறும் சுயநலம்கொண்ட
மரபணுக்கள் இல்லாமல் போனது? அல்லது இருந்தும் அவை வேலை செய்ய
வில்லையா? இல்லை! நமது கணிப்பு முற்றிலும் தவறானது, ஏனெனில், சுய
நல மரபணுக்கள் மக்களாகிய நம்மிடம் வேலைசெய்வதைவிட அரசியல்வாதி
களிடம் தான் பன்மடங்கு வேலை செய்கிறது! ஆனால், அவர்கள் அதை
மறைத்து பொதுநலவாதிகளைப் போல வேடமணிந்து பசப்புகிறார்கள்! நமது
நாட்டில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்காத அரசியல்வாதிகள்,
தலைவர்கள் மிக மிக மிகக் குறைவே!

மக்களின் நலன்களை முன்னிறுத்தி மேடையில் முழங்கும் நம் தலைவர்கள்
உண்மையில் தமது சொந்த நலன்களையே பிரதானமாக மனதில் கொண்டுள்
ளனர்! அரசியலில் ஈடுபடுபவர்களும் நம்மைப்போலவே சாதாரண சராசரி
மனிதர்களே! ஆடுகள் நனைவது குறித்து கண்ணீர் வடித்துக் கவலைப்படும்
ஓநாய்கள் போன்றவர்கள் அவர்கள்! இந்த ஓநாய்த் தந்திரத்தைத்தான் அவர்
கள் "அரசியல் ஞானம்" என்றும், "ராஜ தந்திரம்" என்றும் பசப்புகிறார்கள்!
மக்களின் விருப்பங்களையும், அவர்களது அறியாமையையும், பலவீனங்களை
யும் தெரிந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள், மக்களுடைய பிரச்சினை
களையும், உரிமைகளையும் பற்றி மேடையில் உணர்ச்சி பொங்க முழங்கு
வதன் மூலமும், தமது பேச்சாற்றல் மூலமும் மக்களைத் தங்கள் பக்கம்
ஈர்த்துக் கொண்டுவிடுகிறார்கள்! மக்கள் கூட்டமும் புகழ்ச்சியின் போதையை
வெகுவாக விரும்புவதால், "மக்களின் பாதுகாவலன்" என்று அறிவித்துக்
கொள்ளும் ஒரு மகா பொய்யனை ஆட்சியதிகாரத்தில் ஏற்றிவிடுகிறார்கள்!
மக்களின் பிரச்சினைகளையும், விருப்பங்களையும் பற்றி பேசுவதன் வழியே
அரசியல்வாதியானவன் குரலற்ற மனிதர்களின் குரலாகவும், மக்களின் நலன்
களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகச்சொல்லி, தான் அணிந்து கொள்ளும்
முகமூடியைக்கொண்டு முகமற்ற மக்களின் முகமாகவும், அரசியல்வாதியான
வன் தன்னை நிறுவிக்கொண்டுவிடுகிறான்!

ஆனால், தேர்தலின்போது, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், "நான்", "நீ"
என்று மக்களுக்குச் சேவைசெய்வதற்காகப் போட்டிபோட்டுக்கொண்டு களத்தில்
இறங்குவதைப் பார்க்கும்போது அப்படியே நமக்குப் புல்லரித்துப்போகிறது!
ஆனால், அவர்கள் எவரும் மக்களுக்குச் சேவை செய்வதற்காகப் போட்டி
போடுவதில்லை! மாறாக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவே படாத பாடுபடு
கிறார்கள்!

அரசியல்வாதிகள் தனியொரு இனம் அல்ல!
---------------------------------
அரசியல் என்பது ஒரு தொழிலோ, வியாபாரமோ, ... அல்ல! குறிப்பாக, அது
பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பத் தொழிலும் அல்ல! இவ்வாறு
அமையுமானால், அது மக்களாட்சிக்கு நேர் எதிரானது! ஆதிக் காலத்து அரசர்
களாயினும், இன்றைய அரசியல்வாதிகளாயினும், அவர்கள் ஒரு தனி இனம்
அல்ல! அவர்களும் சாதாரண மக்கள் தான், சராசரி மனிதர்கள் தான்! இந்த
உண்மை அன்றைய புராதன காலத்து மக்களுக்குப் புரிந்திருக்காது. அன்றைய
நடப்புகள் யாவும் விபத்து போன்ற சூழ்நிலைகளில் நிகழ்ந்தேறின. அன்று
அரசனை தெய்வமாகக் கண்டனர்! அந்த ஆண்டான்-அடிமை காலங்கள் முற்றி
லும் மறைந்து போயின! இன்று நாம் நாகரிகத்திலும், பண்பாட்டிலும் வளர்ச்சி
யடைந்துள்ளோம். இன்று நாம் ஜனநாயக அமைப்பினுள் இருந்து கொண்டு
பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும்  இருக்கிறோம். இன்றும்கூட நாம் விழிப்
புடன் இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் தங்களைத் தனியொரு இனமாக,
அதிகாரத்துவ இனமாக, ஆளப்பிறந்தவர்களாக நிலைப்படுத்திக்கொண்டு
நம்மை மீண்டும் மன்னராட்சிக் காலத்திற்கு கொண்டு போய்விடலாம். நாம்
முக்கியமாகப் புரிந்து கொள்ளவேண்டியது யாதெனில், அரசியல்வாதிகள் தனி
யொரு இனமல்ல; அவர்களும் நம்மைப்போலவே சராசரி ஆசைகளையும்,
விருப்பு வெறுப்புகளையும், உணர்ச்சிகளையும்கொண்ட சாதாரண மனிதர்களே!

நாம் நன்கறிவோம் நமது அண்டைவீட்டுக்காரர் எவ்வாறு ஒரு அரசியல்வாதி
யாக உருவானார் என்பதை! நேற்றுவரை அவர் நம்மில் ஒருவராக, சாதாரண
மனிதராக, முகமற்ற ஒருவராக இருந்தார்! இன்று அவர் செய்தித்தாள்களில்
இடம் பெறுகிறார், தொலைக்காட்சியில் தோன்றிப் பேசுகிறார்! நேற்றுவரை
அவர் குரலற்ற மனிதராக இருந்தார், இன்று அவர் மக்களவையில் குரல்
கொடுக்கிறார், இன்று அவர் மக்களின் பிரதிநிதி! நேற்றுவரை அவர் மக்களில்
ஒருவர், நம்மில் ஒருவர், நமது அண்டைவீட்டுக்காரர், நேற்றுவரை யாரோ
ஒருவராக இருந்த அவர் இன்று தவிர்க்கவியலாத ஒருவராக, அரசியல்வாதி
யாக, அரசியல் தலவராக, மந்திரியாக மாறியுள்ளார்! இனி அவர் தம்மை எப்
போதும் தவிர்க்கவியலாத ஒருவராக தம்மை நிலை நிறுத்திக்கொள்வார்!
ஆனால், மக்களில் - நம்மில் - தவிர்க்கவியலாதவர் என்றும், முக்கியமானவர்
என்றும், எவரேனும் இருக்கிறார்களா? முக்கியத்துவம் வாய்ந்தவர், முக்கியத்
துவம் அற்றவர் என்று மக்களை வகைப்பிரிக்க இயலுமா?

ஆனால், மக்கள் எனும் செம்மறியாட்டுக் கூட்டத்திலிருந்து பிரிந்து நமது
அண்டைவீட்டுக்காரர் ஏன், என்ன காரணத்துக்காக அரசியல்வாதியாக, ஒரு
'கறுப்பாடாக' மாறுகிறார்? ஆம், அரசியல் என்பது முதலீடு தேவையில்லாத
ஒரு வியாபாரம்; அரசியல் என்பது அதிகார ஏணி; வாய்ப்புகளின் தலைவாசல்!
நமது அண்டைவீட்டுக்காரர் எவ்வளவு புத்திசாலி என்பது நமக்குத்தெரியும்!
நம்மைப்போலவே, அவரும் ஒரு பேராசைக்காரர், பொறாமைக்காரர், மற்றும்
ஒரு பகட்டு விரும்பி! ஆனால், இன்று அவர் ஒரு முதலமைச்சர், அரசியல்
தலைவர்! இந்த நபர் ஒரு போதும் நன்னெறியாளனாக மாற முடியாது! பிறகு
எவ்வாறு அவருக்குக் கீழேயுள்ள அமைச்சர்களும், அலுவலர்களும் நன்னெறி
யாளர்களாக விளங்க முடியும்? பிறகு எவ்வாறு தொழிலாளர்களும், சாதாரண
மனிதர்களும், நகரத்தாரும், கிராமத்தாரும் நன்னெறியாளர்களாக இருக்க முடி
யும்? அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடான அம்சங்களை, ஊழல்களை, வரு
மானத்திற்கு மேலாக சேர்த்துக்கொண்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை நாடே
அறியும்!

ஆனால், நாம் பொழுது போகாதபோது, அல்லது பொழுதைப் போக்குவதற்காக
சில வேளைகளில் அரசியல் பேசுகிறோம்! அப்போது நாம் கூறுகிறோம், "அந்த
அதிகார நிலைகளை நாம் அடையும் போது ஊழல் நிறைந்த அரசியல்வாதி
களைப் போலத்தான் நாமும் இருப்போம். இப்பொழுது நாமிருக்கும் சாதாரண
நிலையில் நியாயம், நேர்மை, ஒழுக்கம், தருமம் பற்றியெல்லாம் பேசிக்
கொண்டிருக்கலாம்!" என்கிறோம். இக்கூற்றில் உண்மையில்லாமல் இல்லை!
ஆம், சுய சிந்தனையும், பொறுப்புமற்ற இக்கூற்றினை கூறிடும் எவருமே ஒரு
அரசியல்வாதியாக ஆவதற்கான முழுத்தகுதியையும் உடையவரே. ஜனநாயக
அமைப்பில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம், மந்திரியாகலாம் என்ப
தால் அல்ல. உண்மையில் எல்லோருமே அரசியல்வாதிகளாகிவிடுவதில்லை!
ஏனெனில், மக்கள் அனைவருமே ஒழுக்கக் கேடானவர்களோ, தீயவர்களோ
அல்ல. சில சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகளில் நல்லவர்களும் அரசியலில்
ஈடுபட்டுவிடுவதுண்டு!

ஆக, விதிவிலக்கான ஒரு சில 'நல்ல' அரசியல் தலைவர்களையும், அரசியல்
வாதிகளையும் தவிர, ஏனையோர் பொதுவான மக்கள் கூட்டத்திலிருந்து
பிரிந்து செல்லும்,  பொருளாசை கொண்ட, பேராசை மிக்க, சுயநலம் மிகுந்த,
பகட்டு விரும்பிகளான கறுப்பாடுகளே அரசியலில் ஈடுபடுகின்றன! இதன்
அர்த்தம் அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்பதல்ல! ஏனெ
னில், நாம் எந்த மண்ணில், நிலத்தில் விளைகிறோமோ அதே நிலத்திலிருந்து
தான் அரசியல்வாதிகளும், திருடர்களும், பொய்யர்களும், புரட்டர்களும், நல்ல
வர்களும், ஞானிகளும், வள்ளல்களும் விளைகிறார்கள்! அதாவது, மக்கள் எவ்
வாறோ அவ்வாறே மன்னன், அல்லது தலைவன் அமைகிறான்! மக்களின்
பொதுவான பண்பு நிலைகளில் எப்பண்பு, விழைவு, நாட்டம் மேலோங்கி
நிலவுகிறதோ, அதற்கேற்பவே அரசியலும், ஆட்சியும் அமைகின்றன! நாம் நம்
அண்டைவீட்டுக்காரரை மறந்து விட வேண்டாம்! அவரது பொறாமைக்குணத்
தையும், பேராசையையும், அவரது மனக்கோணல்களையும், தந்திர புத்தியை
யும் மறந்து விட வேண்டாம்! மேலும், இக்குணாதிசயங்கள் எந்தெந்த விகிதங்
களில் நம்மிடமும் உள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்வோமாக!

உண்மையான மக்களாட்சியை நோக்கி!
-----------------------------
தற்போது நம் நாட்டில் நடைமுறையிலிருக்கும் ஆட்சி முறை எத்தகையது?
நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல தற்போதைய ஆட்சிமுறை உண்மை
யான மக்களாட்சி முறை தானா? ஆனால், மக்களாகிய நாம் எவ்வகையிலும்
ஆட்சியில் அங்கம் வகிப்பதில்லை! நம்முடைய பிரதிநிதிகளாக, ஆட்சியாளர்
களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியதிகாரத்தை அவர்கள் கைகளில் ஒப்படைப்பது
டன் நம்முடைய பங்கும், பணியும் முடிந்து விடுகின்றன! ஆட்சியாளர்களைத்
தேர்ந்தெடுப்பது, தேர்தலின்போது வாக்களிப்பது என்பது மக்களுடைய "கடமை"
என்று புகழ்ந்து சொல்லப்படுகிறது! ஆனால், வாக்களிப்பது என்பது வெறும்
கடமை யல்ல! மாறாக, மக்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையைச் செயல்
படுத்துவதற்கான பொறுப்பையும், அதிகாரத்தையும் வாக்குச்சீட்டுகளின் வாயி
லாக அரசியல்வாதிகளின் கைகளில் வழங்குகிறோம்!  ஒவ்வொரு தேர்தலின்
போதும், இம்முறை நம் வாழ்வு வளம்பெறும் என நாம் தேர்ந்தெடுக்கும்
அரசியல் தலைவரை மலைபோல நம்புகிறோம்!  ஆனால், நம் அரசியல்வாதி
களும், தலைவர்களும் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்காக, நம் வீடுகளைத்
தேடி வந்து கெஞ்சிக் கும்பிட்டுக் கூத்தாடி வாக்குகளைச் சேகரிக்கின்றனர்!
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அவர்கள் நாம் அணுகவே முடியாத உயரத்
திற்குச் சென்று விடுகின்றனர்! இதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது!

ஆனால், வேறு ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சிமுறையை நாம் கண்டுபிடிக்கும்
வரை, பிரதிநிதித்துவ ஜனநாயக முறையை விட்டால் வேறு வழியில்லை!
இப்போதைக்கு நம்முன்னேயுள்ள பிரதான சவால் என்னவென்றால். நாம்
தேர்ந்தெடுக்கும் நம்முடைய பிரதிநிதிகளை எவ்வாறு நாம் ஆள்வது,அதாவது,
எவ்வாறு அவர்களை உண்மையாக மக்களுக்குச் சேவை புரியுமாறு செயல்பட
வைப்பது என்பதுதான்! இது குறித்தும், இன்னும் ஜனநாயகத்திற்கு பாதகமாக
விளங்கும் பல்வேறு காரணிகளை இனம் கண்டறிந்து எவ்வாறு ஜனநாயகத்
தைக் காப்பாற்றுவது என்பது குறித்தெல்லாம் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த
கட்டுரைகளில் காண்போம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 15-11-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 15 November 2017

எனது அரசியல் பிரவேசம்!




   "எது நம்மை ஆள வேண்டும், வழி நடத்திச்செல்லவேண்டும்?" என்பதே
    மிகவும் முக்கியமான அடிப்படையான அரசியல் கேள்வியாகும்! இக்
    கேள்வியுடன்தான் அசலான அரசியல் பார்வை அல்லது பிரக்ஞை
    தொடங்குகிறது! இக்கேள்வியின் முக்கியத்துவத்தை நாம் ஆழமாக
    உணர்வது அவசியமாகும்! ஏனெனில், இக்கேள்வியை இதற்கு முன்னர்
    நாம் கேட்டிருக்கவில்லை! கேட்டிருப்பின், அக்கேள்விக்குரிய பதிலை
    கண்டடைந்திருப்பின், நாம் வேறு வகையான அரசாங்க அமைப்பை,
    அரசியல் அமைப்பை உருவாக்கியிருப்போம்! தற்போதுள்ளது போன்ற
    ஒரு போலியான சனநாயக அமைப்பினுள் அடைபட்டிராமல், உண்மை
    யான சனநாயக அமைப்பை, மக்களாட்சியை நாம் ஏற்படுத்தியிருப்போம்!
               - மா.கணேசன்/ "அர்த்தமற்ற அரசியல்"/ சாத்தியமற்ற புரட்சி!

இந்த மேற்கோள், இன்னும் பிரசுரிக்கப்படாத "சாத்தியமற்ற புரட்சி" எனும்
நூலின் "அர்த்தமற்ற அரசியல்" என்ற தலைப்பிலமைந்த 5-வது அத்தியாயத்தி
லிருந்து எடுக்கப்பட்டது.
                          •••


"என்ன, நல்லாத்தானே இருந்தார் கணேசன்! திடீரென்று, அரசியல் பிரவேசம்,
அது இது என்று பேச ஆரம்பித்துவிட்டாரே!" என்று எனது நண்பர்கள், வாசகர்
கள் அதிர்ச்சியடைய வேண்டாம்! என்னைப் போன்ற ஒரு சாதாரண தனி நபர்,
"அரசியலில் குதிக்கப்போகிறேன், பேர்வழி!" என்று அறிவித்தால் கோமாளித்
தனமாகத் தான் அது இருக்கும். ஆனால், இன்று, சினிமா-பிரபலங்கள் சிலர்
தங்களது அரசியல் பிரவேசம் குறித்து தினமும் அறிவிப்புகளை வெளியிட்டுக்
கொண்டிருக்கின்றனர்! அதாவது, இத்தகைய அறிவிப்புகள் பொது மக்களாகிய
நம்மைக் கோமாளிகளாக ஆக்கிவிடக்கூடாதே என்பதற்காகத் தான் இப்பதிவு!

உண்மையில், யார், யாரெல்லாம் அரசியலுக்கு வரலாம், வரக்கூடாது என்று
வரைமுறைகள் ஏதும் இருக்கிறதா என்றால், உடனே, "இது சனநாயக நாடு,
எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!"  என்று சொல்வர். ஆனால்,
சனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், ஏதாவது
ஒரு கட்சியில் ஒரு தொண்டனாக ஒரு ஓரத்தில் ஈடுபடலாமே தவிர,
உண்மையிலேயே மக்களின் மீது அக்கறைகொண்ட, அரசியல் ஞானம் உள்ள
ஒருவர் ஒரு போதும் அரசியலில் தலையெடுக்க இயலாது என்பது தான்
எதார்த்தம்! அதே நேரத்தில், உண்மையிலேயே மக்களின் மீது அக்கறை
கொண்டவர், உண்மையிலேயே அரசியல் ஞானம் உள்ளவர் நாட்டில் சிலரா
வது இருக்கக்கூடும்! ஆனால், அவர்கள் அரசியலில் ஈடுபட முடியாத அராஜ
கச் சூழல் நாட்டில் நிலவுகிறது! 

நம்மில் பலருக்கு, அரசியல் என்றாலே, முதலாவது நினைவிற்கு வருவது
"அதிகாரம்" என்பதும், இரண்டாவது, "கட்சி" என்பதும் தான்! உண்மையில்,
"அரசியல் கட்சி" என்பது ஆட்சி-அதிகாரத்தை எட்டுவதற்கான ஒரு ஏணியே
தவிர வேறு எதுவுமல்ல! ஏனெனில், அதிகார-நாற்காலியை அடைய விரும்பும்
ஒருவர் தன்னந்தனியாக நேரடியாக அடைந்திடமுடியாது! அதற்காகத் தான்
தொண்டர்-படைகளைக் கொண்ட, 'கட்சி' எனும் அமைப்பும், கொடியும், சின்ன
மும்; "தேர்தல்" எனும் சடங்கும், பிற இத்யாதி விஷயங்களும் உருவாக்கப்
பட்டுள்ளன!

அரசியலில் ஈடுபடுவது என்றால், எல்லோருமே அரசியல்வாதிகளாகவோ,
தலைவர்களாகவோ ஆவது என்று அர்த்தமல்ல! பொதுவாக அரசியலில் இரு
வித நிலைகள் இருக்கின்றன! ஒன்று, ஏதாவதொரு கட்சியில் உறுப்பினராக,
தொண்டனாக மட்டுமே இருப்பது! இரண்டாவது, ஏதாவதொரு கட்சியின்
தலைவராக ஆவது! அடுத்து, ஒருவர் வெறும் உறுப்பினராக அரசியலில்
ஈடுபட இருவழிகள் உள்ளன!  ஒன்று ஏதாவதொரு கட்சியின் வழியாக, அதா
வது, கட்சியில் ஒரு உறுப்பினராக, அல்லது, தொண்டனாக இணைவதன்
வழியாக! இரண்டாவது, எவ்வொரு கட்சியிலும் இணையாமல் அரசியல்
விழிப்புணர்வுடன் தனித்துச் செயல்படுவது! பொதுவாக, இந்த இரண்டாவது
வகையினர் எந்தக்கட்சியிலும் உறுப்பினராக இல்லாமலிருப்பர், அதேநேரத்தில்,
முறையான அரசியல்-விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பர்; அதாவது, இவர்
களின் அரசியல் ஈடுபாடும், கடமையும் தேர்தலின் போது, வாக்களிப்பதுடன்
முடிந்து போகும்!

அடுத்து, அரசியல்வாதியாக, அல்லது தலைவராக ஆக விரும்புகிறவர்களது
அரசியல்! இவர்களும் ஏதாவதொரு கட்சியில் இணைந்து படிப்படியாக
தலைவர் பதவிக்கு உயர வேண்டும்; இதற்கு அதிக காலம் ஆகும்! ஆனால்,
குறைவான காலத்தில், உடனடியாகத் தலைவராவதற்கான ஒரு வழி, தாமே
ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பதாகும்! அதாவது, இன்றைய குழப்பமான
அரசியல் சூழலானது, உடனடித் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் மிகவும்
சாதகமானது என்பதாகக் கருதப்படுகிறது! அதிலும், ஏதாவதொரு துறையில்
பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு இன்னும் சாதகமானது எனலாம்! குறிப்பாக,
அதிக எண்ணிக்கையில் ரசிகர்களைக்கொண்ட சினிமா நட்சத்திரங்கள் புதிதாக
கட்சி தொடங்கினால், ரசிகர்கள் படையை தொண்டர் படையாக மாற்றிக்
கொள்ளலாம்!

ஒருவர் அரசியல் தலைவராக ஆவதற்கு சிறப்புத்தகுதிகள் எதுவும் தேவை
யில்லை! ஒருவர் பிரபலமாக இருத்தல் வேண்டும், பெரிய தொண்டர்-படை
வேண்டும், பணபலம் வேண்டும். ஏற்கனவே ஆளுகின்ற அரசியல் கட்சியின்
நடவடிக்கைகளில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டும், விமர்சிக்கும்
'திறமை' வேண்டும்! முக்கியமாக, மக்கள் பிரச்சினைகளைத் துருவித்தேடிக்
கண்டுபிடித்து மக்களைக் கவரும் வண்ணம் முழங்க வேண்டும்! பொதுவாக,
எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும்  தங்களது கட்சிக்கு தனிச்சிறப்பான
கொள்கைகள், கோட்பாடுகள் இருப்பதாகச் சொல்வதுண்டு! ஆனால், மக்களின்
மிகவும் அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், வாழ்வாதாரங்
களைப் பெருக்குவதையும் விட வேறு கொள்கைகோட்பாடுகள் என்ன இருக்க
முடியும்? பன்னெடுங்காலமாக நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லாத்
திண்டாட்டம், மோசமான வாழ் நிலைமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகிய
வையே இவர்களது கொள்கை கோட்பாடுகள் எனும் மோசடியை அம்பலப்
படுத்தும் சாட்சியங்கள் அல்லவா! ஆக, கட்சிகளின் கொள்கை கோட்பாடுகள்
என்பவை அர்த்தமற்ற வெற்று முழக்கங்களே என்பதை மக்கள் இனியாவது
புரிந்துகொள்ளவேண்டும்!

அரசியல் என்பது நெருப்பைக் கையாள்வது போன்று, கவனத்துடன் மேற்
கொள்ளப்பட வேண்டியதொரு விஷயமாகும்! 'அரசியல்' என்றாலே 'அதிகாரம்'
என்பதைக் குறிக்கும் ஒரு சொல்தான் என்பதை நாம் மறுக்கமுடியாதுதான்!
ஆனால், அதிகாரம் என்பது "எதற்கான அதிகாரம்?", "யாருக்கான அதிகாரம்?"
என்பதையெல்லாம் இனியும் நாம் அறியாமல் இருப்பது அறிவீனமாகும்!
நீங்களோ, அல்லது உங்கள் அண்டைவீட்டுக்காரரோ ஒரு அரசியல் தலைவ
ராக ஆகலாம்! முதலமைச்சராக ஆட்சியதிகாரம் உங்களுக்கு வழங்கப்படலாம்!
ஆனால், அந்த அதிகாரத்தை உங்களுக்கு வழங்குவது யார்? மக்கள்தானே!
மக்கள் எவ்வளவு பரிதாபமானவர்கள் பாருங்கள்! அதாவது, ஆட்சியதிகாரத்தை
ஒரு அரசியல்தலைவருக்கு வழங்கும்வரை மக்களுக்கு இருக்கும் அதிகாரம்,
வழங்கியவுடன் எங்கோ காணாமல் போய்விடுகிறது! இதுதான் ஜனநாயகத்தின்
பெரும் சாபக்கேடு ஆகும்! இந்நிலை தலை நேராக மாற வேண்டும்; அப்போது
தான் மக்களாட்சி என்பது உண்மையில் மக்களாட்சியாக விளங்க முடியும்!
ஏனெனில், அடுப்பில் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டு, பிறகு அதைக் கட்டுப்
படுத்தமுடியாவிட்டால், அதனால் நன்மைகளைவிட தீமைகளே விளையும்!

ஆட்சியதிகாரம், (ஆட்சி+அதிகாரம்) என்பது, ஆளுதல் என்பதையும், நிர்வாகம்,
செயல் பொறுப்பு, மற்றும், மேலாண்மை என்பவற்றையும் குறிக்கும் சொற்
றொடர் ஆகும்! ஆட்சியதிகாரத்தைப் பெற்ற ஒரு கட்சியின் தலைவர் எதை
ஆளுவார், மேலாண்மை செய்வார்? அவரது அதிகாரத்தின் எல்லை எது?
முதலில், ஆட்சியதிகாரத்தைப் பெற்று முதலமைச்சரான தலைவருக்கு என்ன
ஆளுமை உள்ளது? தன்னை முறையாக ஆளத்தெரிந்த ஒருவர் தான்
"ஆளுமை" கொண்டவர் ஆவார்! அவரால் தான் பிறரை ஆளமுடியும்! ஆனால்,
நாம் தேர்ந்தெடுத்த தலைவர் 'ஆளுமை" உள்ளவரா என்பது கேள்விக்குறியே!

அடுத்து, ஆட்சியதிகாரம் என்பது,  நிர்வாகம், மற்றும் செயல் பொறுப்பைக்
குறிக்கிறது! ஆனால், நம் தலைவர் தனது சொந்த குடும்ப நலன்களையும்,
பொருளாதாரத்தையும் மட்டுமே நிர்வகிப்பவராக இருக்கிறார்! அவருடைய
செயல் பொறுப்பு என்பது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதுட
னும், அடிக்கல் நாட்டுவதுடனும் முடிந்து விடுகிறது! தேர்தல்நேர வாக்குறுதி
கள் யாவும் காற்றுடன் கலந்து கரைந்து போகின்றன! தங்களது ஆட்சிக்கு
நெருக்கடி நேரும்போது, அல்லது அடுத்த தேர்தல் நெருங்கும் போது ஆளும்
கட்சியினர், நாங்கள் அங்கே ஒரு பாலம் கட்டினோம், இங்கே சாலைகள்
போட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக, சாதனைப்பட்டியலை வாசித்து
தங்களைத்தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர்! எதிர்க்கட்சியோ ஆளும் கட்சி
யின் குறைபாடுகளை விமர்சித்து, தாராளமாக வாக்குறுதிகளை வழங்கும்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேர்தல் களத்தில் இறங்கத் தன்னைத்
தாயார் செய்துகொள்கின்றது!

"எது, அல்லது, யார் நம்மை ஆட்சி செய்யவேண்டும், வழிநடத்திச்செல்ல
வேண்டும்?" என்ற கேள்வி அதிமுக்கியமானது என்று ஆரம்பத்திலேயே குறிப்
பிட்டோம்! நிச்சயமாக மனிதர்களே மனிதர்களை ஆட்சி செய்ய முடியாது.
மனிதனை உருவாக்கிய அல்லது, மனிதனை விஞ்சியதொரு சக்தி மட்டுமே
மனிதர்களை ஆட்சி செய்யவும், வழி நடத்திடவும் வேண்டும்! நிச்சயமாக,
எவ்வொரு அரசாங்கமோ, அரசியல் அமைப்போ, அல்லது சமூக அமைப்போ,
சமூக நிறுவனமோ எதுவும் மனிதர்களை உருவாக்கிடவில்லை! மாறாக,
இவை யாவும் மனிதர்கள் உருவாக்கிய கருவிகளைப் போன்றவையே!
உண்மையில், ஆளுதல், ஆட்சி செய்தல் போன்ற சொற்கள் அருவருக்கத்தக்க
வையாகும்! மனிதர்கள் சுய-உணர்வற்ற விலங்குகள் அல்ல, ஆட்சி செய்யப்
படுவதற்கும், மேய்க்கப்படுவதற்கும்! ஆனால், மனிதர்கள் முதலில் உண்மை
யில் மனிதர்களாக, அதாவது, உள்ளீடு பெற்றவர்களாக ஆகிடவேண்டும்! ஆம்,
வாழ்க்கையை ஒவ்வொருவரும் நேரடியாக வாழ்ந்துபெறும் அறிவும், புரிதலும்
தான் அந்த உள்ளீடு ஆகும்!

ஆம், மனிதர்கள் சிற்றுணர்வு, மற்றும் சிற்றறிவின் சொந்தக்காரகளாக இருப்ப
தால், உயர்-அறிவு, அல்லது உயர்-உணர்வு தான் மனிதர்களை ஆளவும் வழி-
நடத்தவும் முடியும்! அதாவது, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வழிமுறை
யில் மனிதர்கள் தங்களது அறிவையும், உணர்வையும் பெருக்கிக் கொள்ள
வேண்டும்!

மேலும், மனிதனை உருவாக்கிய சக்தி, அல்லது, மனிதனை விஞ்சிய சக்தி
எங்கிருக்கிறது? அது எத்தகையது?  மனிதனை உருவாக்கிய சக்தி, அல்லது,
மனிதனை விஞ்சிய சக்தி என்றதும், அது "கடவுள்" என்பதைக் குறிப்பதாக
நீங்கள் எண்ணலாம்! அதில் தவறில்லை; ஆனால், அக்கடவுளை ஒவ்வொரு
வரும், வாழ்க்கையை உணர்வு கொண்டு வாழ்வதன் வழியே நேரடியான
உணர்வார்ந்த அனுபவத்தில் கண்டடைந்தாக வேண்டும்! அதாவது, மனிதனும்,
வாழ்க்கையும் சந்திக்கும் உச்சப் புள்ளியே அக்கடவுள்!

அதாவது, "வாழ்தல்" என்பது மனிதத் தரத்திற்குரியதாக மேற்கொள்ளப்பட
வேண்டும்! வெறுமனே அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்வதையே பொது
வாக நாம் அனைவரும் வாழ்க்கை என வாழ்ந்து வருகிறோம்! இத்தேவை
களையே அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் பூர்த்தி செய்துகொள்வதையே
"உயர்-வாழ்க்கைத்தரம்" எனவும், உயரிய மதிப்பீடு, உயரிய வாழ்க்கை, மற்றும்
வாழ்வின் இலக்கு எனவும் கொண்டாடுகிறோம்! இவற்றைப் பெறுவதற்கான
வழிவகைகளை அடைவதிலேயே நம் வாழ்க்கை முழுவதும் செலவிடப்பட்டு
விடுகிறது!

நாம் அன்றாடம், அந்தந்த வேளைக்கு வயிற்றுக்கு உணவிடுகிறோம் என்பது,
ஒரு ஊர்திக்கு எரிபொருள் நிரப்புவதைப் போன்றதேயாகும்; அது அவசியமும்
கூட; ஆகவேதான் உணவை நாம் அடிப்படைத்தேவைகளில் மிகவும் அடிப்
படையானது எனக் காண்கிறோம்! ஆனால், எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு
ஊர்தியை நாம் பலவகைகளில், பலவிதமான அலுவல்களைச் செய்வதற்காகப்
பயன்படுத்துகிறோம்; அதாவது, ஊர்தியை நாம் நம் பணியிடத்திற்குச் செல்ல
வும், கடைத்தெருக்களுக்குச் சென்று பலவிதப்பொருட்களை வாங்குவதற்காக
வும், இவ்வாறு பலவகைகளில் பயன்படுத்துகிறோம்! ஒரு ஊர்தியைப்பொறுத்
தவரை, அவ்வப்போது எரிபொருள் நிரப்புவதற்காக அந்த ஊர்தியை நாம்
இயக்குவதில்லை! ஆனால், அவ்வப்போது, "உணவு" எனும் எரிபொருளை
நிரப்புவதற்காக மட்டுமே நாம் எண்ணற்ற வேலைகளை, அலுவல்களை,
காரியங்களைச் செய்கிறோம்! இது மிகவும் குறுகிய ஒரு விபரீதச் சுற்றாக,
இருக்கிறது, அதாவது, மனிதத்தரத்திற்குக் கீழாக இருக்கிறது என்பது எவ்வாறு
நமது அறிவுக்கு எட்டாமல் போனது?

ஆம், உணவில்லாமல் நாம் உயிர்-பிழைத்திருக்க முடியாது என்பது உண்மை
யே! ஆனால், நாம் (தொடர்ந்து) உயிர்-பிழைத்திருப்பதே உண்பதற்காகத்தான்
எனும்பட்சத்தில், நம் வாழ்வின் அர்த்தம், உண்மை, குறிக்கோள், இலக்குதான்
என்ன? இத்தகைய நம்வாழ்க்கையில், அரசியல் எவ்விடத்தில் பொருந்துகிறது
என்பதை நாம் அறிந்தாக வேண்டுமில்லையா?

வெறும் உயிர்-பிழைத்தலையே வாழ்வின் இலக்காகக்கொண்ட நம்முடைய 
குறுகிய மதிப்பீடுகள் எதுவும் அசலான வாழ்க்கை மதிப்புகளுடன் எவ்வகை
யிலும் தொடர்பற்றதாக, வெறுமனே பொருள்வகைப்பட்டவையாகவே
உள்ளதால் தான், "பொருளாதாரம்" என்பது நம் வாழ்வில் பிரதான இடத்தைப்
பெற்றுள்ளது! பொருளாதாரம் என்று வரும்போது, பங்கீட்டுப் பிரச்சினையும்,
பொருளாதார சமத்துவமின்மை என்பதும் வருகிறது! இவற்றை அடியொற்றி
அரசியல் உள்ளே வருகிறது! அதாவது, அரசியல்ரீதியான சமத்துவத்தின்
வழியாக, அதாவது, பெரும்பான்மையினரின் சட்டத்தின் மூலமாக அரசியல்
பலத்தைப் பெறுவதன் மூலமாக, பொருளாதார சமத்துவத்தை அடையலாம்
என்கிற சமன்பாடு, ஏழைகளான பெரும்பான்மை மக்களின் உள்ளார்ந்த விழை
வின் வெளிப்பாடாக, அதாவது, ஜனநாயகம் அல்லது, மக்களாட்சி எனும்
ஆட்சிமுறையைக் கொண்டுவந்தது! ஆனால், இச்சமன்பாடு இன்றுவரையிலும்
மக்களாட்சி முறையிலும் பெரிதாகப் பலனளிக்கவில்லை!

பூனைக்குட்டிகளுக்கு அப்பத்தை சமமாகப் பங்கிட்டுத் தருவதாகச் சொல்லி
முன்வந்த குரங்கு அப்பத்தை முழுவதுமாகத் தின்றுவிட, ஏமாந்துபோன
பூனைக்குட்டிகளின் கதையைப் போலாகிவிட்டது மக்களாட்சியின் பரிதாபமான
உறுப்பினர்களான நம் கதையும்! நம்முடைய நலன்களைப் பிரதிநிதித்துவம்
செய்வதற்காக நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஆட்சியதிகாரத்
தில் அமர்ந்ததும் அவர்கள் கோடி கோடியாகச் சொத்துக்களைச்சேர்த்து தங்கள்
சொந்த நலன்களை பொறுப்பாகக் கவனித்துக்கொள்வதில் இறங்கிவிடுகிறார்
கள்! இதற்காகத்தான் பலர் அரசியலில் ஈடுபடுகிறார்கள், அதாவது, அதிகார-
நிலைகளை எட்டிப்பிடிப்பதற்காகவும், அவற்றைக்கொண்டு தங்களுடைய
சொந்த நலன்களை சாதித்துக்கொள்வதற்காகவும்! இவைதான் அவர்களுடைய
உள்ளார்ந்த அரசியல் கொள்கையும், மறைவான நோக்கமும் ஆகும்!

ஆக, வெறும் உயிர்-பிழைத்தலையே வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் வரை,
பொருளாதாரம் (உடமைகள், சொத்து-சுகம்) என்பது பிரதானமாக இருக்கும்;
ஆகவே, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கும்! குரங்குப் பஞ்சாயத்து
செய்யும் அரசியல்வாதிகளும், 'மக்களாட்சி' என்ற பெயரில் மக்களை ஏய்த்துச் 
சுரண்டி அரசியல் செய்து கொண்டிருப்பர்!

உண்மையில், "பொருளாதாரம்" என்பதற்கு மனித வாழ்வில் இடமுள்ளது;
ஆனால், அது நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமிக்கும் அளவிற்கு
முக்கியத்துவம் கொண்டதல்ல! இதன் உப-தேற்றம் என்னவென்றால், பொரு
ளாதாரத்தைப்போலவே, அரசியலும்  நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிர
மிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டதல்ல! உண்மையில், வாழ்க்கை
யின் அர்த்தம், உண்மை, குறிக்கோள், மற்றும், இலக்கு பற்றியெல்லாம் ஆழ
மாகச் சிந்திக்கும் நேரத்தில் மட்டும் தான் நாம் உண்மையில் வாழ்கிறோம்!
மற்ற நேரங்களில், நாம் எலிகளைப்போல உணவுத்தேடலிலும், பிறதேவை
களைப் பூர்த்தி செய்யும் விவகாரங்களிலும், அலுவல்களிலும் தான் ஈடுபட்
டிருக்கிறோம்! "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!" என்று சொல்லப்
பட்டதன் அர்த்தம், பொருள் இல்லாமல் உயிர்-வாழ்க்கை சாத்தியமில்லை
என்பதே! அதேபோல, "அருள் இல்லாமல் அவ்வுலகம் இல்லை!" என்பதன்
அர்த்தம், அருள், அதாவது, அருள் எனும் ஆசீர்வாதத்தை உணர்வதற்குரிய
பக்குவம் இல்லாமல் உயர்-வாழ்க்கை சாத்தியமில்லை! இந்த உயர்-வாழ்க்கை
யை நாம் வீடுபேறு அல்லது மரணம் கடந்த பெருவாழ்வு என்றும் கொள்ள
லாம்! ஆனால், மிகவும் துரதிருஷ்டவசமாக பொருள் மீதிருந்த அதீதப் பற்றி
னால், அருளை அவ்வுலகத்திற்குரிய ஒன்றாக விலக்கிவிட்டோம்!

அதே வேளையில், உயர்-வாழ்க்கைக்கு நாம் உயர்ந்து செல்லவேண்டுமானால்,
உயிர்-வாழ்க்கையின் விவகாரங்களிலேயே எப்போதும் நாம் மூழ்கியிருக்கும்
வகையில், உயிர்-வாழ்க்கையானது போராட்டம் மிகுந்ததாக இல்லாமலிருக்க
வேண்டும்! அப்படியானால், ஆடம்பரமும், வீணடிப்புத்தரமும் கொண்ட தொரு
பொருளாதார நிலையை இலக்காகக்கொண்ட அபத்தமான 'பொருளாதாரச்
சமத்துவம்' குறித்து பிரயாசைப்படுவதை விடுத்து; கூடவும் இல்லாத, குறைய
வும் இல்லாத அர்த்தமுள்ள, நடுத்தரமானதொரு பொருளாதார நிலையை நாம்
எல்லோருக்கும் சாத்தியமாக்கிட வேண்டும்! இதன் அர்த்தம் நாம் நம் தேவை
களைச் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்பதல்ல! மாறாக, நம் தேவைகளை
அர்த்தமுள்ள வகையில் நிறைவேற்றிக் கொள்வதையும்; அடிப்படையற்றதும்,
அர்த்தமற்றதுமான தேவைகளை முற்றாகக் கைவிடுவதையும் பொறுப்புமிக்க
சமூகப் பிரஜைகளாக நாம் கடைப்பிடிக்க வேண்டும்!

ஆக, தொடர்ந்து நாம் பழைய இலட்சியங்களான, "பொருளாதார சமத்துவம்",
போலியானதும் உள்ளீடற்றதுமான "சமூக சமத்துவம்" போன்றவைகளை உரு
வாக்கிட முயற்சிக்கும்வரையில், மக்களாட்சி என்ற போர்வையில், சுய-ஆதாய
ஆர்வம் கொண்ட  ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் மட்டுமே தொடரும்!
"ஊழல்" என்பது அரசியல் வாதிகளின் தனிப்பண்பு மட்டுமல்ல! மாறாக, ஊழல்
என்பது நம்மையறியாமல் நம்முள் ஊடுருவியிருக்கும் நம் அனைவரின்
பொதுப்பண்பு ஆகும்! ஏனெனில், ஊழல் என்பது முழுக்கமுழுக்க பொருளியல்
ரீதியான நம் மதிப்பீட்டு-அமைப்பின் தவிர்க்கவியலாத தீமையாகும்! மேலும்,
மக்களும், தனிமனிதர்களுமான நாம் நமது அன்றாட உயிர்-பிழைத்தலின்
விவகாரங்களிலேயே மூழ்கியிருக்கும்வரை, அதாவது, ஐந்தாண்டுகளுக்கு ஒரு
முறை வாக்களிப்பதுடன் நமது ஜனநாயக அரசியல் கடமை முடிந்துவிடுகிறது
என்பதாக எதையும் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருக்கும்வரை அரசியல்
அமைப்பைச் சீரமைக்கவோ, மாற்றியமைக்கவோ இயலாது! நாம் மாறாவிடில்,
அரசியல்வாதிகளும் மாறமாட்டார்கள்! வெறுமனே ஐந்தாண்டுகளுக்கு ஒரு
முறை அரசியல் தலைவரையும், கட்சியையும் மாற்றுவதன் மூலம் உருப்படி
யான எந்த மாற்றமும் ஏற்படாது!

அதாவது, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என வாழ்க்கை முழுவதும்
அரசியலாக்கப்பட்டிருக்கும் அபத்தமான நிலையிலிருந்து வாழ்க்கையை நாம்
அரசியலில் இருந்து பிரித்து மீட்டெடுத்தாக வேண்டும்! அதற்காகவே நாம்
அனைவரும், ஒவ்வொருவரும் செயலூக்கத்துடன் அரசியலில் ஈடுபடுவது
அவசியமாகும்! இவ்வாறு நாம் பேசுவது கூட ஒருவகை அரசியல்தான் என்று
சிலர் சொல்லக்கூடும்; பரவாயில்லை! ஆனால், "இதுவும் ஒருவகை அரசியல்"
என்று அவர்கள் சொல்வதுதான் தவறு! ஏனெனில், இதுதான் உண்மையான
அரசியல்; "வாழ்க்கையின் அரசியல்" ஆகும்! அர்த்தமறிந்து வாழப்படும் மனித
வாழ்க்கையையும், மனிதஜீவிகளையும் விட வேறெதுவும் முக்கியமானதல்ல!
அரசியல், பொருளாதாரம், சட்டம், ... ஆகிய அனைத்தும் வாழ்க்கையை
முழுமையாக வாழ்வதற்கு நமக்குச் சேவை புரிவதற்கான கருவிகள் மட்டுமே!

ஆனால், செயலூக்கத்துடன் அரசியலில் ஈடுபடுவது என்றால் என்ன? ஒரு
தொடக்கமாக, இதுநாள்வரை நாம் தூங்கிக்கொண்டிருந்தது போல் இல்லாமல்
முதலில் விழித்துக்கொள்ளவேண்டும்! அரசியல் என்பது வாழ்க்கையில் எந்த
இடத்தில் பொருந்துகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்! "எது, அல்லது,
யார் நம்மை ஆட்சி செய்யவேண்டும், வழிநடத்திச்செல்ல வேண்டும்?" என்ற
கேள்விக்குரிய பதிலைக் கண்டுபிடித்தாக வேண்டும்! குறிப்பாக, மக்களாட்சித்
தத்துவத்தின் மாண்பினையும், மகத்துவத்தையும் நாம் நன்கு உணர்ந்திருக்க
வேண்டும்! ஏனெனில், அரசியல் என்பது அரசியல்வாதிகளின் களம் அல்ல;
அது நம் அனைவரது அடிப்படை வாழ்வாதாரத்தையும், அதன் மீது எழுப்பப்பட
வேண்டிய உயர்-வாழ்வின் தன்மையையும் தீர்மானிக்கும் களம் ஆகும்!

ஆகவே, இனியும் நாம், "ராமன் ஆண்டால் என்ன. இராவணன் ஆண்டால்
என்ன?" என்கிற மெத்தனப்போக்கில் செல்வது தகாது! நம்மால் தேர்ந்தெடுக்கப்
பட்ட நம்முடைய பிரதிநிதிகள் நம்முடைய வாக்குகளால் பெற்ற ஆட்சியதி
காரத்தை முறையாக, மக்களாகிய நமக்குப் பயனளிக்கும் வகையில் செயல்
படுத்துகிறார்களா, கடமையாற்றுகிறார்களா, என்பதை நாம் விழிப்புடன்
கவனித்து அவர்களைச் செயல்பட வைக்கவேண்டும்! அவ்வாறு அரசியல்வாதி
களைச் செயல்பட வைக்கும் வழிமுறைகளை நாம் நாளும் கண்டுபிடித்துச்
செயல் படுத்திடவேண்டும்! முறையான அரசியலில், அதாவது, மக்களாட்சி
முறையில் மக்கள் தான் தலைவர்களாக இருக்கவேண்டும்; அரசியல்வாதிகள்
யாவரும் தொண்டர்களாக இருக்கவேண்டும்! ஆனால், நடப்பு அரசியலில்
யாவும் தலைகீழாக உள்ளன!

தற்போது நடைமுறையிலிருக்கும் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல்முறை
யில், ஒவ்வொரு தொகுதியிலும் நாம் ஒரு நல்லவரை தேர்ந்தெடுக்க வேண்
டும் என்கிறார்கள்! நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து
ஒரு நல்லவரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்களாம்! ஆனால், தற்போது
உள்ள ஆட்சிமுறையில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், தேர்தலில்
போட்டியிடும் பிரதிநிதிகளில் எவர் நல்லவர், எவர் கெட்டவர் என்று அறிவது
சாத்தியமில்லை! ஏனெனில், அவ்வாறு அறிவதற்கான அளவுகோல்கள் ஏதும்
நம்மிடம் கிடையாது! மேலும், இவ்வாறு, அரசாள்பவரின், அதாவது, அரசியல்
தலைவரின் நற்குணத்தை, அல்லது தீய குணத்தைப் பொறுத்துதான் நாட்டு
மக்களின் வாழ்வு தீர்மானிக்கப்படும் என்றால், நம் வாழ்க்கை சூதாட்டம்
போலாகிவிடும்! ஆகவே, வாழ்க்கையானது எவ்வொரு அரசரையோ, அரசியல்
தலைவரையோ, முதலமைச்சரையோ, பிரதம மந்திரியையோ சார்ந்ததாக
இருக்க முடியாது, கூடாது! உண்மையில், வாழ்க்கையைப் பொறுத்தவரை,
அரசரோ, அரசியல் தலைவரோ, எவருமே முக்கியமானவர்களும் அல்ல;
தவிர்க்கவியலாதவர்களும் அல்ல! ஆகவே, எவ்வொரு அரசரையோ, அரசியல்
தலைவரையோ பொறுத்து மக்களும், அவர்களுடைய வாழ்க்கையும் அமைவ
தாக இருக்க வியலாது!

ஏனெனில், மக்கள், மனிதர்கள், அதாவது தனிமனிதர் ஒவ்வொருவரும் தான்
முக்கியமானவர்! இவ்வகையில், அதாவது, மக்களில், மனிதஇனத்தில் ஒருவர்
என்றவகையில், நம்முடைய அரசரும், முதலமைச்சரும், பிரதம மந்திரியும்
முக்கியமானவரே! ஆகவேதான், அரசியல்வாதிகள் என்போர் ஒரு தனி இனம்
அல்ல என்று நாம் கூறுகிறோம்! மேலும், மக்கள் இன்று, இப்போதே தங்களது
வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்! நிறைவேற்றப்படாத வெறும் தேர்தல்
அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு மக்கள்
வாழமுடியாது! மேலும், தவறான பிரதிநிதியை, அரசியல் தலைவரை தேர்ந்
தெடுத்துவிட்ட குற்றத்திற்காக, மக்கள் தம்மையே நொந்துகொண்டு அடுத்த
தேர்தலை எதிர் நோக்கியவாறு வாழ்க்கையை வாழ முடியாது! ஏனெனில்,
அடுத்த தேர்தல், இன்னொரு அரசியல் கட்சி, இன்னொரு தலைவர் வந்தாலும்,
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஓரிரவிற்குள்ளோ, அல்லது, முதல்
ஓராண்டுக்குள்ளோ மாறிவிடப்போவதில்லை!
.. . .. .......

இவ்வாறு, நடப்பிலுள்ள "அர்த்தமற்ற அரசியல்" பற்றிய விவரிப்புக்களையும்,
"அர்த்தமுள்ள அரசியல்" என்பது எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது
பற்றிய எனது புரிதல்களையும், பார்வைகளையும் தொடர்ந்து நான் பேசிக்
கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்க முடியும். ஆனால், ஒரே கட்டுரையில்
அனைத்து விஷயங்களையும் கொட்டித் தீர்த்துவிட இயலாது! ஆயினும்,
இது தான் என்னுடைய அரசியல் பிரவேசத்தின் முன்னுரை, அல்லது அறிமுக
உரை ஆகும்! "வாழ்க்கை" என்பது பிரபஞ்சம் தழுவியதாக இருப்பதால்,
வாழ்க்கையை பிரதானப்படுத்தும் "வாழ்க்கையின் அரசியல்" என்பதும் அகில
உலகையும், அனைத்து மக்களையும் தழுவியதாகத்தான் இருக்க முடியும்!
ஆகவே, நான் முன்வைக்கும் எனது கட்சிக்கு, அனைத்து மக்களின் கட்சிக்கு
ஒரு பெயர் வேண்டுமல்லவா! ஆம், "மானிட ஒருமைக்கழகம்" என்பதுதான்
நமது கட்சியின் பெயர்! நமது கட்சிக்கு ஒரு கொடி வேண்டாமா? ஆம், நமது
ஒவ்வொருவருடைய கைக்குட்டை தான் கொடி! நமது கட்சியின் சின்னம் 
"  ", ஆம், கேள்விக்குறி தான் நம்முடைய கட்சியின் சின்னம் ஆகும்!

முதலில் நாம் செய்ய வேண்டியது, நம்மைச் சுற்றிலும், குறிப்பாக அரசியல்
களத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, என்பதை விழிப்புடன் கவனிப்பது
தான்! ஏனெனில், மக்களாகிய நாம் இல்லாமல், அரசியலும் இல்லை, அரசியல்
வாதிகளும் இல்லை! அரசியல் என்பது, வாழ்க்கை எனும் பெரும் களத்தின்
ஒரு பகுதியாக, ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியும்! இதற்கு மாறாக,
தற்போதுள்ளது போல, தலை கீழாக, அரசியலின் பகுதியாக நமது வாழ்க்கை
அமைதல் கூடாது!

மக்களாட்சி உண்மையில் மக்களாட்சியாக அமைய வேண்டுமானால், ஆட்சி -
அதிகாரத்தை முழுவதுமாக அரசியல்வாதிகளிடம் அளித்துவிடல் கூடாது!
ஆட்சியதிகாரத்தின் "கடிவாளம்" மக்களாகிய நம் கைகளில் இருக்கவேண்டும்!
கடிவாளத்தை விட்டுவிட்ட்டால், மாடுகள் வண்டியை அதன் இஷ்டத்துக்கு
எங்கேயாவது இழுத்துக்கொண்டு போய்ச் சேர்த்துவிடும்; நாம் சேரவேண்டிய
இடத்திற்குச் செல்ல முடியாது!

ஆக, நான் எனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டேன்; அது போல
மக்களே, நண்பர்களே, வாசகர்களே நீங்களும் தாமதியாமல் உங்களுடைய
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிடுங்கள்! தொடர்ந்து அரசியல் பற்றிய
கட்டுரைகள் முக நூலிலும், எனது  vicharamarg.blogspot.in எனும்
எனது வலைத்தளத்திலும் வெளியாகும். நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர்
அரசியல் விழிப்புணர்வை ஊட்டிப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நிச்சயம்
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்! நினைவில் கொள்ளுங்கள் நாம்
பேசிக்கொண்டிருப்பது வெறும் அரசியல் அல்ல; நம் வாழ்க்கையையும், நமது
சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கான ஆயத்தங்கள் ஆகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 29-10-2017
---------------------------------------------------------------------------

Friday, 27 October 2017

எட்டாக்கனி (சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்)!



         "இருக்கிற வாழ்க்கையை விட்டுவிட்டு அறியாத, புரியாத,
          ஆகவே இல்லாத, வாழ்க்கையைத் தேடி, இருப்பதையும்
          இழந்துவிட நான் விரும்பவில்லை!"
                                               - (ஒரு தோழர்)

குளம், குட்டை, ஏரி போன்றவை தாமாகவே இயற்கையாக உருவாவதுண்டு!
ஆனால், நமது தோட்டத்தில், வீட்டைஒட்டி ஒரு கிணறு தாமாகவே உருவா
வதில்லை! மாறாக, நாம் தான் கிணற்றைத் தோண்டியாக வேண்டும்!
அவ்வாறே, ஞானத்தின் ஊற்றாக, கிணறாக விளங்கும் ஞானியர்கள் என்போர்
விபத்துக்களின் விளைவாகத் தோன்றியவர்களல்ல! மாறாக, அவர்கள் ஒவ்
வொருவரும் தம்மைத்தாமே தோண்டி ஞானத்தின் ஊற்றுக்களாக, கிணறு
களாகப் பரிணமித்தவர்கள் ஆவர்! தம்முடன் தாம் புரிந்த வினையாண்மை
யால் மலர்ந்தவர்கள் ஆவர்!

மனிதன் என்பவன் இயற்கையாகப் பிறப்பதில்லை! இயற்கையாகப் பிறப்பவன்
மனிதனுக்கான ஒரு அடிப்படை மாத்திரமே! அந்த அடிப்படையின் மீது உணர்
வைக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் அசல் மனிதனாக தன்னைத்தானே
எழுப்பிக்கொள்ளவேண்டும்!

உணர்வு கொள்வது என்பது அவ்வளவு கடினமான விஷயமா? இல்லை! அது
கடினமான விஷயம் அல்ல! பிரச்சினை என்னவென்றால், நம்மைச்சுற்றியுள்ள
பல்வேறு விஷயங்களுடனும், பொருட்களுடனும், மதிப்பீடுகளுடனும் நாம்
மிக எளிதாக பழக்கப்பட்டுவிடுகிறோம்; பிறகு அவற்றைவிட்டு அகலாமல்
அவற்றுடனேயே தங்கித் தேங்கிவிடுகிறோம்! அதாவது, எளிதான, சுலபமான
விஷயங்களை வாழ்க்கையென வரித்துக்கொண்ட பிறகு, உணர்வு கொள்வது
என்பது மட்டுமல்ல, ஆழமாகச் சிந்திப்பது போன்ற எதுவுமே கடினமாகிவிடு
கிறது!

உணர்வு கொள்வது என்பது, சும்மா இருப்பது என்பதைக்குறிக்கிறது! அதாவது,
யாதொரு உணர்ச்சிக்கும், எண்ணத்திற்கும், உந்துதலுக்கும், தூண்டுதலுக்கும்,
ஆசைக்கும், விருப்பத்திற்கும் ஆட்படாமல், வசப்படாமல் இவற்றையெல்லாம்
கடந்து அறிநிலையில் இருப்பது, அல்லது நிலைப்பதுதான் உணர்வு கொள்வது
என்பதாகும்!

உணர்வு, கவனம், அறிநிலை, விழிப்பு எனப்படும் யாவும் உணர்வின் பண்புகள்
அல்லது செயல்பாடுகளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்களே ஆகும்!


மேலும், உணர்வோடிருப்பது, அல்லது, உணர்வுக்கு வருவது என்பது கடின
மான விஷயம் அல்ல! ஏனெனில், உணர்வு என்பது ஏற்கனவே இருக்கிறது;
அதை ஒவ்வொரு மனிதனும் தன்னுள் உணரவேண்டும் என்பதைத்தான்
"உணர்வுக்கு வருதல்" என்றும், "உணர்வை உணர்வுகொள்வது" என்றும் குறிப்
பிடப்படுகிறது! முக்கியமாக, உணர்வு என்பது மிகவும் நுண்மையானது, நுட்ப
மானது; அது தன்னை பெரிதாக முன்-துருத்திக்கொள்வதுமில்லை, ஆரவார
மாகத் தன்னை அறிவித்துக் கொள்வதுமில்லை!

உண்மையில், உணர்வைப் பயன்படுத்தாமல், உணர்வின் உதவியில்லாமல்
எவ்வொரு எண்ணமும், சிந்தனையும், விருப்பும், வெறுப்பும், சொல்லும்,
செயலும், எதுவும் நிகழ்வதில்லை! ஆனால், அவை உணர்வு கொண்டு
பரிசீலிக்கப்படாமல் தானியங்கித்தனமாக நிகழ்கிறது! ஆக, உணர்வைப் பிற
எதற்கும் பயன்படுத்தாமல் இருக்கும்போது "உணர்வை உணர்வுகொள்வது"
என்பது தாமே நிகழ்வதாகிறது! ஆம், அர்த்தமற்ற விஷயங்களில், செயல்பாடு
களில் உணர்வைச் செலவழிக்காமல் இருப்பது உணர்வோடிருப்பதற்கு உதவும்
வழிகளில் ஒன்று எனலாம்! ஆனால்,உணர்வோடிருப்பதற்கு இட்டுச்செல்வதா
கக் கருதப்படும் சுற்றுவழிகள் எதுவும் பெரிதாக உதவுவதில்லை என்பதுதான்
உண்மை! ஏனெனில், "உணர்வை உணர்வுகொள்வது", "உணர்வுக்கு வருதல்",
"விழிப்படைதல்" ஆகியவை ஒவ்வொருவராலும் நேரடியாகச் செய்யப்பட
(உணரப்பட) வேண்டியவையாகும்! அவற்றை எவரும் கற்றுத்தரவோ, எவரிட
மிருந்தும் கற்றுக்கொள்ளவோ கூடிய அம்சங்கள் அல்ல!

ஒவ்வொரு மனிதனும், எவ்வெவ்விஷயங்கள் தம்மை எவ்வெவ்வாறெல்லாம்
செலுத்துகின்றன என்பதை அறிவது அதிமுக்கியமானது! அவ்வாறு அறிவதற்கு
அதீத கவனம் வேண்டும்! கவனநிலையால் பரிசீலிக்கப்படாத வாழ்க்கை உணர்
வற்ற விலங்கினத்திற்கு உரியதாகும்!

"இருக்கிற வாழ்க்கை", "இயற்கையான வாழ்க்கை", "கொடுக்கப்பட்ட வாழ்க்கை"
என்று அதை எப்படி அழைத்தாலும், அது வாழ்க்கைக்கான வெறும் ஒரு அடிப்
படை மாத்திரமே! மனிதன் என்பவன் ஒரு விலங்கைப்போல, உயிருள்ள ஒரு
எந்திரம் அல்ல! வெறுமனே உயிர்-வாழ்வதற்குப் பெரிதாக உணர்வு எதுவும்
தேவையில்லை! ஒரு விலங்குஜீவி என்பது  விசேடமான ஒரு உயிருள்ள
பொறியமைப்பு (அல்லது எந்திரம்) போன்றதாகும்! அதற்கு சில உள்ளமைந்த
இயல்பூக்கிகள் போதுமானது; அவற்றின் தூண்டுதல்களால் ஒரு விலங்குஜீவி
உயிர்-வாழ்ந்திடும்! பசி தோன்றும் போது அது உணவைத் தேடும், தாகம் ஏற்
பட்டால் அது தண்ணீரைத்தேடும்; பாலுணர்வு தோன்றினால் அது ஒரு
இணையைத்தேடும்; அவ்வளவு தான், அதன் ஒட்டுமொத்த ஜீவிதமும்,
வாழ்க்கையும், யாவும்! அவ்வாறு உணர்வுள்ள மனிதன் வாழமுடியாது!

எவ்வொரு குழந்தையும் வயிற்றுப் பிழைப்பின் வாழ்க்கையை எதிர் நோக்கிப்
பிறப்பதில்லை! மாறாக, அத்தகைய வாழ்க்கையுடன் அடையாளப்படுத்திக்
கொள்ளும் வகையில் பழக்கப்படுத்தப்படுகிறது! குழந்தை பசியினால், பாலுக்
காக அழுகிறது என்கிறோம்; ஆனால், குழந்தைக்குத் தாம் எதற்காக அழுகி
றோம் என்பது தெரியாது! இடை-விடாது கிடைத்துக்கொண்டிருந்த ஊட்டம்
திடீரென தடைப்பட்டுவிடும் போது அது உடலை வருத்துகிறது; ஆகவே
குழந்தை அழுகிறது! அதாவது, குழந்தை தாயின் வயிற்றிலிருந்த போதிருந்த
தனது இயல்பான நிலை குலைக்கப்பட்ட புதிய சூழலினால் விளைவதே பசி
என்பதாகும்! குழந்தைக்கு பசியும் தெரியாது, உணவின் தேவையும் தெரியாது,
விலைவாசி விபரமும் தெரியாது! மாறாக, ஏதோவொன்று தன்னை வருத்து
கின்றது என்பதை மட்டுமே அது உணர்கிறது! பிறகு அது வளரும்போது, பசி,
தாகம், வலி, துன்பம், இழப்பு, கஷ்டம், நஷ்டம் போன்ற அனைத்துடனும்
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளச் சுற்றியுள்ள நம்மால், சமூகத்தால்
கற்றுத்தரப்படுகிறது! அதன்பிறகு, எவ்வொரு குழந்தையும் தாம் உண்மையில்
எதற்காகப்பிறந்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பை முற்றாக இழந்து
விடுகிறது! கோடியில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே 'வாழ்க்கை'யின் அசலான
குறிக்கோளை அறிந்து அசலான மனிதவாழ்க்கையை வாழ்கிறது!  பிறக்கும்
ஒவ்வொரு குழந்தையும், திசைகளற்ற முனைப்புடனும், வகைப்படுத்தவிய
லாத ஊக்கத்துடனும் தான் பிறக்கிறது! ஆனால், எல்லாக் குழந்தைகளும்
விரைவாகவோ, அல்லது தாமதமாகவோ, நமது கல்வி, மதிப்பீட்டு-அமைப்பு,
மற்றும், வாழ்முறைகளினால் தவறான இலக்குகளை நோக்கி திசைப்படுத்தப்
பட்டு விடுகிறது!

அந்த நரிக்கு அது எட்டாக்கனியாக இருந்தாலும், அது கனிதான் என்பதை
எவ்வாறோ அறிந்திருக்கிறது! ஆகவே தான் அது தாவித்தாவிக் குதித்துப்பார்த்
தது! மேலும், அது வேறு சில தந்திரங்களையும் கையாண்டு பார்த்திருக்கலாம்!
ஆனாலும், அந்தக்கனி அதற்கு எட்டவில்லை! ஆகவே, அது ஒரு தவறான
முடிவிற்கு வந்தது; அதாவது, "சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்!" என்று தனக்குத்
தானே சொல்லிக்கொண்டு ஏமாற்றத்துடன் காட்டிற்குள் சென்றுவிட்டது! அது
தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும் விதத்தில், "அட, அந்தக்கனி
கிடைக்காவிட்டால் என்ன? தனக்கு எளிதாகக் கிடைக்கும் வேறு பல கனிகள்
உள்ளனவே!" என்று எண்ணிக்கொள்ளலாம்!

"ஞானம்" என்பதும் ஒரு கனிதான்! ஆனால், ஞானக்கனியை அடைவதற்கு
எவ்வொரு தந்திரமும், உபாயமும் இல்லை! மேலும், "பத்தோடு இன்னொன்று,
பதினொன்று!" என ஆசைப்படுவதன் மூலமும் அதை அடையமுடியாது!
மேலும், "ஆஹா, எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது; நான் அடைந்துவிட்டேன்!"
என்ற பிரமையில் ஆழ்ந்துவிடுவது இன்னும் ஆபத்தானதாகும்! அதேநேரத்தில்,
"நான் என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்தேன், ஆனால், ஞானம்
கிடைக்கவில்லை!" என்கிற பேச்சு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளுதலாகும்!
ஏனெனில், ஒருவர் தன்னால் முடிந்தவரை முயற்சிப்பது என்பது போதாது;
எடுத்த காரியம் முடியும்வரை, பூரணமடையும்வரை முயற்சிக்க வேண்டும்!
மேலும், 'முயற்சி' என்ற சொல் இவ்விஷயத்தில் பொருத்தமற்றதாகப்படுகிறது;
வேறு பொருத்தமான சொல் கிடைக்கும்வரை, "முழு-முயற்சி" எனும் சொற்
றொடரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்! மேலே குறிப்பிடப்பட்ட எல்லா
மட்டுப்பாடுகளையும் விட மோசமானது எதுவென்றால், "ஞானம்" கிடைக்கா
விட்டால் என்ன, "ஜீவனம்" கிடைத்தால் போதும்!" என்ற நிலையைத் தேர்ந்து
கொள்ளும் அவலம் தானாகும்!

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!" என்பது நூற்றுக்கு நூறு
உண்மையே! ஆனால், பெரும்பாலும் இந்த ஞானமொழியைப் பலரும் தலை
கீழாய்ப் புரிந்து கொள்கிறார்கள்! ஒருவன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த மட்டுப்பாடான, அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்தவரை போதும் என்ற
பக்குவத்திற்கு உயர்ந்து, "அர்த்தம்" பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து செல்வதற்
குப்பதிலாக, உயர்-பேரறிவு நிலையை எட்டமுடியாவிட்டாலென்ன? தன்னிடம்
இருக்கிற அறிவே போதும் என்ற முடிவிற்கு வருவது, தான் மனிதப்பிறவி
பெற்றதைக் கொச்சைப்படுத்துகிற சுய-அவமதிப்பு ஆகும்! ஒருவன் தன்னிடம்
அதிகம் பணம் இல்லை, பொருள் இல்லை, சொத்து சுகம் இல்லை என்கிற
நிலையில் வாழ்ந்திட முடியும்! இம்மனிதன் பொருளியல்தளத்தில் தன்னிடம்
இருப்பதைக்கொண்டு திருப்தியடைவது என்பது அருமையான விஷயமாகும்!
ஆனால், எம்மனிதனும் அர்த்தமில்லாமல், அதாவது, வாழ்வின் அர்த்தம்
அறியாமல் வாழ்வது கூடாது!

ஒரு மிகப்பெரிய விஷயம், அதாவது, கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்
களுடைய கிட்டத்தட்ட எல்லா மட்டுப்பாடுகளும் தமக்குத்தாமே தேர்ந்து
கொள்ளும் சுய-மட்டுப்பாடுகளே என்பதுதான்!

உண்மையில், ஞானம் என்பது புறத்தே எங்கோ இருந்து அதிர்ஷ்டவசமாக

ஒருவனுக்குக்கிடைக்கக்கூடிய கனி அல்ல! மாறாக, ஒவ்வொரு மனிதனும்
உண்மையில் ஞானப்பிஞ்சாகத்தான் அதாவது, சிற்றுணர்வுடன் தான் பிறக்கி
றான்; தன்னில், தனது உணர்வில் ஒவ்வொருவனும் முற்றிக் கனிவது
மட்டுமே வேண்டும்!

மனிதன் என்பவன் தனக்குத்தானே ஒரு பரிசுப்பொதியாக அமைந்தவனாவான்!
அரிதாக ஒரு சிலரே தமது பொதியைப் பிரித்து உள்ளே என்ன உள்ளது என்று
காண்பதற்கான பிரயாசத்தை மேற்கொள்கிறார்கள்; அவர்கள் மட்டுமே ஞானப்
பொக்கிஷங்களை அடைகிறார்கள்! பலர் தம்மைப் பிரித்துப்பார்ப்பதே இல்லை!
சிலர் அரைகுறையாகப் பார்த்துவிட்டு, மேலடுக்கிலுள்ள சில திறமைகளைக்
கண்டு, கொண்டு, அவற்றுடன் திருப்தியடைந்து விடுகின்றனர்!

ஆனால், வீடுபேறு வேண்டும் என்று விரும்புபவன் தனக்கான வீட்டை, தான்
உயிர்-வாழும் காலத்திற்குள்ளேயே தானே கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும்!
அந்த வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை!

தமிழ்ச்சித்தர்கள் மனித வாழ்வை அறம், பொருள், இன்பம், வீடு என்று பகுத்
துப்பிரித்துப் புரிந்துகொண்டவர்களாவர்! பகுத்துப்பார்த்துப் புரிந்துகொண்டதால்
அவர்களைப் பகுத்தறிவாளர்கள் எனச் சுருக்கிவிடமுடியாது! மாறாக, பகுத்துப்
பார்த்ததுடன் நில்லாமல் யாவற்றையும் அவர்கள் மிகச்சிறப்பாகத் தொகுத்தும்
புரிந்துகொண்ட பேரறிவாளர்களாவர்! ஆனால்,நாமோ, அறம், பொருள், இன்பம்,
வீடு எனப்படும் நான்கில் முதலாவதான "அறம்" எனும் அம்சத்தையும், முடி
வான "வீடு" எனும் அம்சத்தையும் தவிர்த்துவிட்டு, பொருளையும், இன்பத்தை
யும் மட்டுமே அடைய விழைகிறோம்; அவற்றை அடைந்தும் நிறைவுறாமல்
அல்லலுறுகிறோம்! காரணம், நாம் அறத்தைக் கடைபிடிக்கத் தவறிவிட்டோம்!
அறம் என்பது வெறும் ஒழுக்க நெறிமுறைகள் மட்டுமல்ல! அறம் எனப்படு
வது விழிப்பையும், ஞானத்தையும், வாழ்க்கைக்குத் தன்னைத்தகுதியாக்கிக்
கொள்ளுதலையும் குறிப்பதாகும்!

"அறம், பொருள், இன்பம், வீடு" என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்படாதவன்,
வாசித்தறியாதவன் வாழும்வழி தேடாத சாமானியன்! தனது சொந்த சிந்தனை
யின் மூலம் அவற்றை நேரே கண்டறியாதவன் தன் நோக்கத்தை இழந்து
விட்ட சிந்தனைச்சோம்பேறி! "அறம், பொருள், இன்பம், வீடு" என்று சொல்லப்
பட்டதைக் கேள்விப்பட்டும், வாசித்தறிந்தும், அவற்றைத் தம் வாழ்வில் கடை
பிடிக்காதவன் மூடன்! கண்களிருந்தும் குருடன்! உணர்விருந்தும் உணர்வற்ற
பிராணியே அவன்!

"ஞானம் எனக்குச் சாத்தியமில்லை!" ஆகவே, "சீவனம்" எனக்குப்போதும்!" என
ஒருவன் தெரிவு செய்வானெனில், அவன் தான் பெற்ற மனிதப்பிறப்பை தனது
மதியீனத்தினால் துறந்துவிடும், தன்னைத்தானே அவமதிப்பு செய்துகொள்ளும்
செயலைச் செய்பவனாகிறான்! "ஞானம்" என்பது எட்டாக்கனியான விஷயமாக
இருக்குமானால், மனித இனம் முதலிடத்தில் தோன்றியிருக்காது!


மா.கணேசன் / நெய்வேலி / 25-10-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 19 September 2017

மானுட-மையப்பார்வை




    மனிதன் என்பவன் தன்னை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவனல்ல;
    மாறாக,  தன் வழியே மெய்ம்மையை நிலை நாட்டுவதற்காகத்
    தோன்றியவனாவான்!

சில சிந்தனையாளர்களும், தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல்
நேசர்களும் அனைத்து உயிரினங்களும் சமமான மதிப்புடையவை என்று
முழங்குகின்றனர். அதாவது, ஒரு புழுவும், ஒரு மனிதக் குரங்கும் சமமான
மதிப்புடையவை என்கின்றனர்! இன்னும் ஒரு புழுவும் மனிதனும் சமமான
மதிப்புடையவையே என்கின்றனர்! அதாவது, மனிதனுக்கு அதிகம் முக்கியத்
துவம் அளிப்பதையும், பிரபஞ்சத்தின் மையமான அம்சமாக மனிதனைக்
காண்பதையும் இச்சிந்தனையாளர்கள் சாடுகிறார்கள்! இவ்வாறு, மனிதனை
மையமாகக்கொண்டு உலகையும், அனைத்தையும் காணும் பார்வை, "மானுட
மையப்பார்வை" (Anthropocentric View) எனப்படுகிறது!

உயிருள்ள ஜீவிகள் என்கிற அடிப்படையில் காணும்போது, புழு-பூச்சிகள்,
ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள், எலிகள், தவளைகள், ஆடு-மாடுகள், மனிதக்
குரங்குகள், மற்றும் மனிதர்கள் யாவரும் சமமே எனலாம். ஆனால், மனிதன்
என்பவன் வெறுமனே ஒரு உயிருள்ள ஜீவி மாத்திரமல்ல! பிரதானமாக
அவன் ஒரு "சுய-உணர்வு" கொண்ட ஜீவியாவான்! "சுய-உணர்வு" என்பது
வேறு எவ்வொரு உயிர்-ஜீவியிடமும் இல்லாத ஒரு பிரத்யேக அம்சம் ஆகும்!
அதாவது, "தாம் இருக்கிறோம்!" என்பதை மனிதனைப்போல வேறு எவ்வொரு
ஜீவியும் உணர்வதில்லை! இன்னும் சொல்லப்போனால், எல்லா மனிதர்களும்
தமது இருப்பை அவ்வளவு நேரடியாகவும், தெளிவாகவும் உணர்வதில்லை
எனலாம்!

உண்மையில், பார்வை, எண்ணம், சிந்தனை, நோக்கம், சித்தம், கருத்து,
அறிவு, தன்மதிப்பு ஆகியவை மனிதஜீவிகளுக்கு மட்டுமே உரிய பிரத்யேக
அம்சங்களாகும்! ஆக, "மானுட-மையப்பார்வை" என்பது தவறானதோ, 'தீட்டு"
(Taboo)போன்ற விஷயமோ அல்ல! மாறாக, மிகவும் அவசியமான, தேவை
யான, தவிர்க்க இயலாத ஒன்றாகும்!

எலிக்கு எலிதான் அனைத்தின் அளவீடு! மேலும், எலியே இப்பிரபஞ்சத்தின்
மையம் ஆகும்; அதை நாம் "எலி-மைய விதி" (The Ratropic Principle)
என்று குறிப்பிடலாம்! தவளைக்கு, தவளைதான் இப்பிரபஞ்சத்தின் மையம்
ஆகும்! எலியோ, தவளையோ, மனிதனோ, ஒவ்வொரு ஜீவியும் தனக்காகத்
தான் இருக்கிறது, வாழ்கிறது! எலியோ, தவளையோ, அல்லது மனிதனோ
எவ்வொரு ஜீவியும் இருவித வாழ்க்கையை, பாத்திரத்தைக் கொண்டுள்ளது!
அதாவது, எவ்வொரு ஜீவியும் தமக்காகவே வாழ்கிறது; அதே நேரத்தில்,
அவ்வாறு தமக்காக வாழும் நிலையிலேயே ஒவ்வொரு ஜீவியும் அதனுடைய
வளர்ச்சி நிலைக்குரிய பரிணாமக் கடமையையும் தம்மையறியாமலேயே
நிறைவேற்றுவதாய் செயல்படுகிறது!

முதல் உயிரி தோன்றும்வரை, இப்பிரபஞ்சம் பல நூறு கோடியாண்டுகளாக
மையமற்றதாகத்தான் சுழன்று வந்தது! பிறகு, முதல் உயிரியான அமீபா
தோன்றியபோதுதான் முதல்முதலாக இப்பிரபஞ்சத்திற்கு "மையம்" என்ற
ஒன்று உருவானது! ஆனால், அந்த அமீபாவானது அவ்வளவு பூரணமான,
பொருத்தமான மையமாக அமையவில்லை! ஆகவேதான், அமீபாவைக்கடந்த
வெவ்வேறு உயிர்-ஜீவிகள் அமீபாவிலிருந்து கிளைத்தெழுந்தன! ஆனால்,
எவ்வொரு ஜீவியும் இப்பிரபஞ்சத்தையும், அதன் உள்ளார்ந்த விழைவையும்
பூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான ஒரு மையமாக
உருவாகவில்லை! பிறகு, (உயிரியல் பரிணாமத்தின் இறுதியாக), மனிதன்
என்பவன் தோன்றினான்!

'அமீபா', அல்லது முதல் ஒரு-ஸெல் உயிரி என்பது உண்மையில் என்ன? இப்
பிரபஞ்சம் என்பது நுண்ணிய அணுத்துகள்களால் அமைந்த மாபெரும் ஒரு
அமைப்பாகும்! அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு அமைப்பே ஆகும்! ஒரு
கிரகம், அல்லது ஒரு நட்சத்திரம் (சூரியன்), ஒரு கேலக்ஸி (உடுமண்டலம்)
எனப்படும் ஒவ்வொன்றும் ஒரு அமைப்பு தான்! ஆனால், எல்லா அமைப்பு
களும் ஒரே தரத்திலானவையல்ல! ஒரு 'அமீபா' என்பதும் அணுத்துகள்களால்
ஆனதுதான்! ஆனால், 'அமீபா' என்பது, ஒரு கிரகம், அல்லது ஒரு சூரியனைப்
போன்ற வெறும் ஒரு பௌதீக-அமைப்பு அல்ல; மாறாக, ஒரு அமீபா என்பது
"உயிர்" பெற்ற ஒரு விசேட பௌதீக அமைப்பு ஆகும்! ஏனெனில், ஒரு அமீபா
வானது, பிற பௌதீக அமைப்புகளை (பொருட்களை)ப் போல புறத்தேயிருந்து
இயக்கப்படும், செலுத்தப்படும் ஒன்றல்ல! அமீபாவின் மீது சுற்றுச்சூழலின்,
புறவுலகின் தாக்கம் உள்ளது எனினும், ஒரு அமீபாவானது தனது உள்ளார்ந்த
சொந்தத் தேவைகளாலும் (இயல்பூக்கிகளாலும்), பரிணாம விதிகளாலும்
மட்டுமே இயக்கப்படுகிறது!

ஒரு அமீபாவிற்கு, பெரிதாக சுய-உணர்வு என்பது இல்லாவிட்டாலும், சுதந்திர
சித்தம் இல்லாவிட்டாலும் அதனளவில் அது ஒரு தனிஜீவி ஆகும்; அதாவது,
அது ஒரு தனி உலகம் (இப்பிரபஞ்சத்தினுள்ளே இயங்கும் இன்னொரு
பிரபஞ்சம் போன்றது) ஆகும்! அதாவது, ஒரு அமீபா என்பது தன்னை மைய
மாகக் கொண்டியங்கும் ஒரு உயிர்ஜீவி யாகும்! எவ்வொரு உயிர்ஜீவியும்
அத்தகையதே! ஆனால், ஒரு அமீபாவைப்போல ஒரு கூழாங்கல்லானது
தன்னில் ஒரு மையத்தைச் சுற்றி அமைந்த ஒன்றல்ல! அதாவது, கூழாங்கல்
லுக்கு உள்ளமைந்த மையம் என்பதில்லை! அதாவது, ஒரு கூழாங்கல்லை
வழிநடத்திச்செல்லக்கூடிய "அகம்" அல்லது "மனம்" என்பதில்லை! இவ்வாறே
எவ்வொரு சடப்பொருளுக்கும் மையம், அகம், மனம் என்பதில்லை!

அதேநேரத்தில், ஒரு அமீபாவைவிட ஒரு மனிதனின் மையம், அல்லது அகம்,
அல்லது மனம் என்பது பெரிதும் வளர்ச்சியடைந்த நிலையை எட்டியுள்ளது;
அதாவது, ஒரு மனிதனின் மையம் என்பது உணர்வுள்ளதாக, தனிச்சிறப்பு
வாய்ந்த ஒன்றாக உள்ளது! ஆகவேதான் மனிதன் என்பவன் அமீபாவைவிட,
இன்னும் வேறு எவ்வொரு உயிர்ஜீவியையும் விடவும் மேலானவனாகவும்,
முக்கியத்துவம் வாய்ந்தவனாகவும் உள்ளான்! அதே நேரத்தில், பெரும்பாலான
மனிதர்கள் தம்மை, அதாவது, தம் மையத்தில் தாம் எத்தகைய மெய்ம்மை
யாக இருக்கிறோம் என்பதை உணராதிருப்பதால், அவர்கள் இன்னும் அமீபாக்
களைப்போல உணர்வற்றவர்களாக வாழ்ந்துசெல்பவர்களாகவே உள்ளனர்!

தொடர்ந்து நாம் மேலே செல்வதற்கு முன், பரிணாம வழிமுறை பற்றியும்,
பரிணாமத்திற்கும், "சுய-அமைப்பாக்கம்" (Self-Organization) என்பதற்கு
மான தொடர்பு பற்றியும் புரிந்துகொள்வது அவசியமாகும்! ஆம், இப்பிரபஞ்சம்
ஒரு பெரு-வெடிப்பில் (Big Bang)தொடங்கிய கணத்திலிருந்தே "சுய-அமைப்
பாக்கம்" எனும் வழிமுறையும் தொடங்கிவிட்டது! "சுய-அமைப்பாக்கம்" என்பது
பரிணாமத்தின் பிரதான கருவியும், வழிமுறையுமாகும்! அணுத்துகள்கள் தான்
இப்பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் ஆகும்!

அணுத்துகள்கள் தாமே ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு அமைப்புகளில்
அமைந்து, அவ்வமைப்புகளின் நுட்பச்செறிவுக்கேற்ப (Complexity)பல்வேறு
பண்புகளைக் கொண்ட பொருட்கள் உருவாகின்றன! அணுத்துகள்கள் சுயமாக,
தாமே ஒன்றோடொன்று இணைவதையே  "சுய-அமைப்பாக்கம்" என்கிறோம்.
இவ்வாறு இணைவது இயல்பானது, இயற்கையானது, எதேச்சையானது,
விபத்துபோன்றது, அல்லது சந்தர்ப்பவசமானது என்றெல்லாம் காண இடமுள்
ளது! ஆனால், இவ்வாறு தோற்றமளிக்கும் வழிமுறையின் பின்னால் விதி
களும் (Laws),நோக்கமும், திட்டமும், இலக்கும் உள்ளன! அதாவது, அணுத்
துகள்கள் எவ்வெவ்வாறெல்லாம் இணைந்தால், எவ்வெவ்வாறான விளைவு
கள், விளைபொருட்கள், அம்சங்கள், பண்புகள் எல்லாம் உருவாகும் என்பது
தொலை நோக்குடன் ஊகிக்கப்பட்டே நிகழ்கின்றன! அதே நேரத்தில், அவ்வழி
முறையில், பரீட்சார்த்தம் அல்லது, பரிசோதனை அணுகுமுறையும்; அதாவது
தொடர்ந்து தவறுகளை உணர்ந்து களைந்து திருத்தியமைத்து முன்னேறிச்
செல்லும் (Trial and Error)பாங்கும் அதில் இணைந்துள்ளது!

உதாரணத்திற்கு, ஹைட்ரஜன் அணுக்களும், ஆக்ஸிஜன் அணுக்களும் ஒரு
குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்தால் தண்ணீர் எனும் திரவப்பொருள் வெளிப்
படும் என்பதும், அந்த தண்ணீர் எவ்வாறெல்லாம், எதற்கெல்லாம் பயன்படக்
கூடும் என்பதும் முன்-ஊகிக்கப்படுகிறது! இவ்வாறெல்லாம் "யார்", அல்லது,
எந்த "சக்தி", அல்லது, எத்தகைய "உணர்வு" முன்-ஊகிக்கிறது, திட்டமிடுகிறது
என்பதைக் கண்டுபிடிப்பது தான் மனிதஜீவிகளுக்கான "வாழ்க்கைச் சவால்"
மற்றும் வாழ்க்கையின் இலக்கும் ஆகும்!

சில விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும், இயற்கைவாதிகளும், உள்ளது இந்த
இயற்கையுலகம் மட்டும்தான் என்பதாக மிகத்திடமாக நம்புகின்றனர்.குறிப்பாக,
தத்துவவாதி பால் டிரேப்பர் (Paul Draper),"இயற்கை என்பது ஒரு மூடிய
அமைப்பு, அதில்,இயற்கையுலகின் பகுதியாக இல்லாத எதுவும் இவ்வுலகைப்
பாதிக்கமுடியாது, (இவ்வுலகின் மீது செயல்படமுடியாது)" என்கிறார். அதாவது
இக்கூற்று,  இயற்கை நிகழ்வுகளுக்கு இயற்கையை மீறிய காரணங்கள் இருக்
கக்கூடும் என்பதை மறுக்கிறது! இத்தகைய 'பார்வையை' நாம் "உலக-மையப்
பார்வை" (World-centric)என்றழைக்கலாம்! அதாவது, இயற்கை, அல்லது
உலகமே பிரதானம்; பிரும்மாண்டமான இவ்வுலகில், மனிதன் என்பவன் ஒரு
தூசு, அவனது இருப்பு ஒரு விபத்து! ஆகவே, மனிதன் என்பவன் இப்பிரபஞ்சத்
தின் மையமுமல்ல, அவனுக்கு பெரிதாக யாதொரு முக்கியத்துவமும் கிடை
யாது என்பதே இப்பார்வையின் முடிவான புரிதல் ஆகும்!

ஆனால், உலகை மையமாகக் கொண்ட இப்பார்வையை ஒரு முறையான,
முழுமையான பார்வை என்று நாம் கொள்ளமுடியாது! பொதுவாக, சிந்தனை
உலகில் "உலகப்பார்வை" (World view)என்று ஒரு துல்லியமற்ற, குழப்பம்
மிகுந்த கோட்பாடு ஒன்று நிலவுகிறது! அதாவது, மனிதவாழ்வு, உலகம் என
அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பார்வையை, வாழ்க்கைத்
தத்துவத்தைக் குறிக்கும் வகையிலான் ஒரு கோட்பாட்டை "உலகப்பார்வை"
என்ற சொற்-சேர்க்கையைக்கொண்டு குறிப்பிடுவது சற்றும் பொருத்தமற்றது
ஆகும்! நாம் வாழும் இந்த உலகைப் புரிந்துகொள்வதும், உலகைப் பற்றிய
அறிவும் அவசியமே; ஏனெனில், மனிதனின் வாழ்வில் இவ்வுலகமும் இடம்
பெறுகிறது என்பது மட்டுமல்லாமல், பங்குபெறவும் செய்கிறது! இன்னும்
மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்தே இப்பிரபஞ்சமானது பல நூறு கோடி
ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளது! இன்னொரு வகையிலும் உலகைப்புரிந்து
கொள்வது மிகவும் முக்கியமாகும்! அதாவது, நாம் இவ்வுலகை, பிரபஞ்சத்தை
முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ளாவிடில் தேவையில்லாமல்,
அது துருத்திக்கொண்டும், நமது கவனத்தை சிதறடித்துக்கொண்டும் இருக்கும்!

ஆக, உலகைப் பற்றிய பார்வையை நாம் "உலகப்பார்வை" என்றழைப்பதில்
எவ்விதத் தடையும் இருக்கமுடியாது! ஆனால், அனைத்தையும் உள்ளடக்கிய
மனிதவாழ்க்கை பற்றிய பார்வையை நாம் ""உலகப்பார்வை" என்றழைப்பது
பொருத்தமற்றது, ஆகவே தவறானது! மாறாக, வாழ்க்கை பற்றிய பார்வையை
நாம் நேரடியாக "வாழ்க்கைப் பார்வை" (Life View)என்றே அழைக்கலாமே;
அதுதானே முறையாகவும் பொருத்தமாகவும் இருக்க முடியும்! அதாவது இவ்
வாறான குழப்பங்களுக்குக் காரணம் எதை மையமாகக்கொண்டு மனிதர்கள்
தம்முடைய பார்வையைக் கட்டமைப்பது என்பது குறித்த தெளிவின்மையே
ஆகும்! அப்படியானால், இக்குழப்பத்தை எவ்வாறு களைவது?

ஒருவகையில், உலகம் எனும் மாபெரும் வீட்டினுள்தான் நாம் வாழ்கிறோம்!
அதாவது, உலகம் என்பது மிகவும் அடிப்படையான ஒரு அம்சமே! ஆனால்,
வீடு என்பது மனிதனுக்காக இருக்கிறதேதவிர, வீட்டிற்காக மனிதன் இல்லை
என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியம்! ஒரு அழகிய சிற்பத்தை வைக்க
பொருத்தமானதொரு பீடம், அல்லது மேடை அவசியமே; அதற்காக, பீடத்தை
பிரதானப்படுத்தி சிற்பத்தை சிறுமைப்படுத்தமுடியாதல்லவா? ஆக, நாம் நமது
வாழ்க்கைப் பார்வையைக் கட்டமைக்க உலகை மையமாகக் கொள்ளலாகாது!
பிறகு எதை மையமாகக் கொள்வது? மிக எளிய தர்க்கம் என்னவென்றால்,
வாழ்க்கைப்பார்வைக்கு "வாழ்க்கை" தான் மையமாக இருக்கமுடியும்! ஆனால்,
வாழ்க்கையை வாழ்வது யார்? அதாவது, வாழ்க்கையின் மையம் எது,அல்லது
யார் என்ற கேள்விக்கான பதில் மனிதன் என்பதேயாதலால், மனிதன் தான்
வாழ்க்கைப் பார்வையின் மையமாக அமையவேண்டும்! உலகம், பிரபஞ்சம்
என்பது வாழ்க்கையை செயல்படுத்துவதற்கான ஒரு களம் மாத்திரமே!

ஆனால், 'மனிதன்' என்றால் என்ன? அவன் எத்தகைய மெய்ம்மை? அதாவது
மனிதனின் மையம் எது? ஆம், உணர்வு (Consciousness)தான் மனிதனின்
மையம் மற்றும் சாரம் ஆகும்! மேலும் துல்லியமாகச் சொன்னால், உணர்வு
தான் மனிதன்! உண்மையில், மனிதனுக்கு உணர்வு என்பது இல்லையேல்,
அவனும் ஒரு எலி, அல்லது தவளையைப் போலவே இருப்பான்; யாதொரு
பார்வையும், அறிதலும், புரிதலும் இருக்காது! ஆகவே, அனைத்துவகைப்பட்ட
பார்வைகளும், அவை சரியாக இருந்தாலும், அல்லது, தவறாக இருந்தாலும்
உணர்வு-மையப் பார்வைகளே எனலாம்!

தத்துவவாதிகள், சிந்தனையாளர்களைப்பொறுத்தவரை, எது இறுதி மெய்ம்மை
என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னேயே, முன் முடிவாக, சிலர் இயற்கை,
அல்லது, உலகையும்; சிலர் இறையையும் பிரதானப்படுத்தும் போக்கைத்
தேர்வு செய்துகொண்டுவிடுகின்றனர்! இத்தகைய தவறுக்குக்காரணம் அவர்கள்
எது முதல் (மூலம்) என்பதை ஊகித்து அதிலிருந்து தங்களது சிந்தனையை,
பார்வையை கட்டமைப்பதே ஆகும்! இதற்குக்காரணம், அவர்கள் உலகை ஒரு
மாபெரும் அமைப்பாக மட்டுமே காண்கின்றனர் என்பதுதான்! ஆனால், உலகம்
என்பது ஒரு மாபெரும் அமைப்பு மட்டுமல்ல; அது ஓர் மாபெரும் இயக்கமும்
கூட என்பதை அவர்களால் காண இயலவில்லை! உலகை ஒரு அமைப்பாகக்
காண்பதால், "உலகம் எவ்வாறு தோன்றியது?" என்ற கேள்வி முதலும் முடிவு
மான கேள்வியாகி விடுகின்றது! அதாவது, மூலத்தை முடிவு செய்துவிட்டால்
எல்லாம் முடிந்து விடுகிறது! ஏனென்றால், "படைப்பு" எனும் அமைப்பு, இவ்
வுலகம் நம் கண் முன்னே இருக்கிறது; அதன் ஏதோவொரு பகுதியாக நாம்
இருக்கிறோம் என்பதுடன் நம் ஆய்வு முடிவிற்கு வந்துவிடுகிறது!

ஒரு சாரார், அதாவது, இயற்கைவாதிகள். பகுத்தறிவுவாதிகள், பொருள்-முதல்
வாதிகள், மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர், இவ்வுலகம் எப்போதும் இருந்து
வந்துள்ளது, இன்றும் இருக்கிறது, நாளையும், என்றென்றைக்கும் இருக்கும்;
அது இயற்கையாகத் தோன்றியது; இயற்கையைத்தவிர, இயற்கையை மீறிய
வேறு சக்தி எதுவும், எவரும் இல்லை என்பதாகக் கருதுகின்றனர்! இவர்களது
பார்வையை நாம், "இயற்கை அல்லது உலக-மையப்பார்வை" என்று அழைக்
கலாம்! இவர்களைப்பொறுத்தவரை, இயற்கை, அல்லது உலகமே பிரதானம்!

இன்னொரு சாரார், அதாவது, சமயவாதிகள், கருத்து-முதல்வாதிகள், மற்றும்
பாமரர்கள் இவ்வுலகம் ஒரு படைப்பு, அது இறைவனால் படைக்கப்பட்டது;
கடவுள் உலகைப்படைத்து அதில் உயிரினங்களையும் மனிதஜீவிகளையும்
படைத்து காத்துவருகிறார் என்பதாக இவர்கள் கருதுகின்றனர்! இவர்களது
பார்வையை நாம், "இறை- மையப்பார்வை" என்றழைக்கலாம்! இவர்களைப்
பொறுத்தவரை, இறை அல்லது கடவுளே பிரதானம்!

பொதுவாக, சாதாரணர்கள், பாமரர்கள், பண்டிதர்கள், படித்தவர்கள், படிக்காத
வர்கள் என்ற வித்தியாசமின்றி, பெரும்பாலானவர்களுக்கு யாதொரு உலகப்
பார்வையும் கிடையாது, குறிப்பாக, யாதொரு "வாழ்க்கைப்பார்வை" யும் கிடை
யாது! இவர்களில் பலருக்கு சுயமான சிந்தனை, பார்வை ஏதுமில்லை என்றா
லும், ஏதாவதொரு தத்துவப்பள்ளி, அல்லது, சிந்தனைப்பள்ளியின் அரைகுறை
யான பார்வையைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போக்கை கொண்டு
விடுகின்றனர்!

இத்தகைய 'உலகப்பார்வைகள்', அதாவது, மூலத்தை ஊகித்து, முடிவு செய்து
கொண்டு, அதை மையமாகக்கொண்டு கட்டமைக்கப்படும் அரைப் - பார்வை
களுக்கு மாறாக, அதாவது, உலகை ஒரு அமைப்பாக மட்டும் கொள்ளாமல்,
அது ஒரு இயக்கம் என்பதையும் கணக்கில் கொண்டு, அவ்வியக்கம் எங்கு
முடிகிறது, அதன் நோக்கம், குறிக்கோள், இலக்கு ஆகியவற்றையெல்லாம்
அறிவதன் வழியாக ஒரு முழுமையான பார்வையை நாம் பெற முடியும்!

ஏற்கனவே நாம் இங்கு குறிப்பிட்டபடி, உணர்வு இல்லையேல் எவ்வொரு
சிந்தனையும், பார்வையும் சாத்தியமில்லை! இவ்வகையில், எல்லாவகைப்
பார்வைகளுமே உணர்வு-மையப்பார்வைகள் தான் எனலாம்! அதே நேரத்தில்,
உணர்வு-மையப் பார்வைகளும் பிரதானமாக இருவகைப்பட்டவைகளாக
அமைகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியது முக்கியம்!
ஏனெனில், மனித-உணர்வு என்பது உணர்வின் இறுதிச்சொல் அல்ல; மேலும்
மனிதர்களின் உணர்வும் ஒரேபடித்தானதல்ல, அதாவது, உணர்வு வளர்ச்சிக்கு
ஏற்ப மனிதர்கள் வெவ்வேறு உணர்வு நிலைகளில் உள்ளனர்! மனிதர்களின்
உணர்வு வளர்ச்சிக்கேற்ப அவர்களுடைய சிந்தனையும், பார்வையும் வேறுபடு
கின்றன! அவையாவன :

1. சிற்றுணர்வு (அல்லது அகந்தை) - மையப்பார்வை = அகந்தையே பிரதானம்.
   (உ-ம்) : சராசரி மனிதர்கள், உணர்வு-வளர்ச்சி குன்றியவர்கள், அதாவது
   'அகந்தை' எனும் தொடக்க நிலை உணர்வில் தேங்கிப்போனவர்கள், "தாம்
   கண்டதே காட்சி, தாம் கருதியதே தத்துவம்" எனக்கொள்பவர்கள். அதாவது,
   விஞ்ஞானவாதம், பொருள்முதல்வாதம், பகுத்தறிவுவாதம், இயற்கைவாதம்;
   அதாவது, மனிதனை இயற்கை, அல்லது, உலகின் முக்கியத்துவமற்ற ஒரு
   பகுதியாகக்கருதும் அனைத்துப்பார்வைகளும், தத்துவங்களும் இந்த        

   "சிற்றுணர்வு-மையப்பார்வை" யைச் சேர்ந்தவையே!

2. பேருணர்வு, அல்லது மெய்ம்மை-மையப்பார்வை = இறுதி - உணர்வே
   பிரதானம்! அதாவது, பேருணர்வே ஆதியும், அந்தமும்!
   (உ-ம்) : புத்தர்கள், சித்தர்கள், ஞானிகள், ஆகியோர்.

இவ்விரு நிலைகளுக்கும் இடையே சில இடைநிலைகளும், பார்வைகளும்
உள்ளனவென்றாலும், அவையும் வளர்ந்து கடக்கப்பட வேண்டியவையே என்
பதால் அவை இங்கு விவரிக்கப்படவில்லை! அதாவது, மனிதஉணர்வு என்பது
மேன்மேலும் பரிணமிக்கக்கூடியதொரு அம்சமாகும்! மனிதர்கள் ஒரு இறுதி
யான உயர்-உணர்வு நிலையை அடையும் வரை அவர்களது பார்வையும்,
புரிதலும் மட்டுப்பாடானதாகவே இருக்கும்! ஆனால், வெகுசொற்பமான சிலரே
தமது அகந்தை உணர்வையைக் கடந்து வளர்ந்து உணர்வின் உச்சத்தை எட்டு
கின்றனர்! இந்நிலையில்,எது முழுமையான சரியான பார்வை என்பது குறித்து
கருத்தொற்றுமை ஏற்படுவது சாத்தியமில்லை! ஒருவகையில் அத்தகைய
கருத்தொற்றுமை தேவையுமில்லை! ஏனெனில், உணர்வின் உச்சத்தைத்
தொடும் ஒவ்வொரு மனிதனும், எது உண்மை என்பதை தனக்குத் தானே சுய-
சாட்சியாக நேரடியாக அறிந்துகொள்வான்!

முடிவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனிதஜீவி
களாகிய நமக்கு அணுகுவதற்கு எளிதாகவும், முறையாகவும் கிடைத்துள்ள
ஒரே பார்வை "மானுட-மையப்பார்வை" (Anthropocentric View)மட்டுமே
யாகும்! அதிலும், ஒவ்வொரு மனிதனும் தன்னில் ஒரு பார்வை மையமாக
(Center of Perception) எழ வேண்டியது அவசியமாகும்! ஏனெனில்,
ஒருவன் இன்னொருவனின் கண்கள் வழியாகப் பார்ப்பது இயலாது! இயற்கை,
உலகம், பிரபஞ்சம் என்பது பார்வையற்றது; அது மனிதனின் கண்களைக்
கொண்டுதான் தன்னைப்பார்க்கிறது, அறிகிறது! இவ்வகையில், மனிதன் இப்
பிரபஞ்சத்திலிருந்து வேறானவனல்ல! ஆனால், இத்தகைய புரிதலைப் பெற
வேண்டின் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்திற்கு (உணர்வுக்கு) விழித்தாக
வேண்டும்!

முடிவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனிதஜீவி
களாகிய நமக்கு அணுகுவதற்கு எளிதாகவும், முறையாகவும் கிடைத்துள்ள
ஒரே பார்வை "மானுட-மையப்பார்வை" (Anthropocentric View)மட்டுமே
யாகும்! அதிலும், ஒவ்வொரு மனிதனும் தன்னில் ஒரு பார்வை மையமாக
(Center of Perception) எழ வேண்டியது அவசியமாகும்! ஏனெனில்,
ஒருவன் இன்னொருவனின் கண்கள் வழியாகப் பார்ப்பது இயலாது! இயற்கை,
உலகம், பிரபஞ்சம் என்பது பார்வையற்றது; அது மனிதனின் கண்களைக்
கொண்டுதான் தன்னைப்பார்க்கிறது, அறிகிறது! இவ்வகையில், மனிதன் இப்
பிரபஞ்சத்திலிருந்து வேறானவனல்ல! ஆனால், இத்தகைய புரிதலைப் பெற
வேண்டின் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்திற்கு (உணர்வுக்கு) விழித்தாக
வேண்டும்!

கோப்பர் நிக்கஸின் புரட்சியானது, உண்மையில் டாலமியின் பூமி-மையப்
பார்வையைத்தான் அகற்றியது; அகற்றி அவ்விடத்தில் சூரிய-மையப்பார்வை
யை இட்டுநிரப்பியது! ஆனால் அதனால், மானுட-மையப்பார்வையை ஒன்றும்
செய்ய இயலவில்லை! கோப்பர் நிக்கஸ் மட்டுமல்ல, அவருக்குப் பிறகு வந்த
கலிலியோ, நியூட்டன், இன்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்- உடைய சார்பியல்
புரட்சியினாலும் மானுட- மையப்பார்வையை ஒன்றும் செய்ய இயலவில்லை!
ஐன்ஸ்டீன் மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகியும் இன்னும் உலகம் ஆல்பர்ட்
ஐன்ஸ்டீனின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது! ஐன்ஸ்டீனிய சார்பியல்புரட்சியை
வேறு எவரேனும் வந்து முறியடிக்கும் பட்சத்தில் அவருடைய புகழை இவ்
வுலகம் பாடிக்கொண்டிருக்கும்! டாலமியாகட்டும், அல்லது, கோப்பர் நிக்கஸ்,
கலிலியோ, நியூட்டன், இன்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகட்டும், பார்வைகள்
மாறலாம், கோட்பாடுகள் மாறலாம்; ஆனால், "பார்வை" என்பது எப்போதும்
"மானுட-மையப்பார்வை" யாக மட்டுமே தொடரும்!

பூமி இப்பிரபஞ்சத்தின் மையமாக இல்லாவிட்டால் என்ன, அது மனிதனின்
மையத்துவத்தை ஒருபோதும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது! ஏனெனில்,
ஒரு மரத்தில் பிஞ்சுகள், காய்கள் எந்தக்கிளையில் காய்த்தால் என்ன? அவை
மரத்தின் மையத்தில் தான் காய்க்கவேண்டும் என்பதில்லையே! அவை ஒரு
மரத்தின் நுனிக்கிளையில் காய்த்தாலும், ஒவ்வொரு பிஞ்சும், காயும் தான்
அம்மரத்தின் மையமும், இலக்கும், முழுமையும் ஆகும்! அதே வேளையில்,
ஒவ்வொரு பிஞ்சின், காயின் முக்கியத்துவம்,முழுமை என்பது, அது மரத்தின்
மையத்தில் தோன்றுகிறதா, அல்லது ஓரத்தில் தோன்றுகிறதா என்பதில்
அடங்கியிருக்கவில்லை; மாறாக, அது நன்கு முற்றிக் "கனி" யாக ஆகிறதா,
இல்லையா என்பதிலேயே அடங்கியிருக்கிறது! இவ்வாறே, பிரபஞ்ச விருட்சத்
தின் பிஞ்சுகளும், காய்களுமான மனிதஜீவிகள் ஒவ்வொருவரும் தம் உணர்
வில் முற்றிக் கனிவதிலேயே (அதாவது, உணர்வின் உச்ச நிலையை அடைவ
திலேயே) ஒவ்வொரு மனிதனின் முழுமையும், உய்வும் அடங்கியுள்ளது!
ஒவ்வொரு மனிதனும் அடையக்கூடிய முழுமையில் தான் இப்பிரபஞ்சத்தின்
முழுமையும், உய்வும் அடங்கியுள்ளது!

இப்பிரபஞ்சம் ஒரு மாபெரும் அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும்
பரிணாம இயக்கம் என்றோம்! "சுய-அமைப்பாக்கம்" என்பதே அதன் பிரதான
வழிமுறை யாகும்! "சுய-அமைப்பாக்கம்" என்பது வெறுமனே அணுத்துகள்கள்
ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு அமைப்புகளாக உருவாவது மட்டும்
அல்ல! மாறாக, பண்புரீதியான மாற்றங்களைப் பெற்று மேன்மேலும் உயர்
நிலைகளை எட்டுவதும், முடிவில் பூரணமான தொரு மெய்ம்மையாக உரு
வெடுப்பதே அதன் இலக்கு ஆகும்! அதாவது, உயிரற்ற பௌதீகச் சடப்பொரு
ளான அணுத்துகள்கள் ஒரு கட்டத்தில் உயிர்பெற்றெழுவதும் (உயிர்-ஜீவிகள்);
பிறகொரு கட்டத்தில் உணர்வு பெற்றெழுவதும் (மனிதஜீவிகள்); முடிவாக,
ஒவ்வொரு மனிதனின் உணர்வுப்பரிணாமத்தின் மூலம் இறுதிப்பேருணர்வாக
எழுவதும்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சப்பரிணாம இயக்கத்தின் இலக்கு ஆகும்!

சுய-அமைப்பாக்க வழிமுறையில் அணுத்துகள்கள் ஒன்றோடொன்றிணைந்து
முதலில் அணுக்களாகவும், மூலக்கூறுகளாகவும், மூலகங்களாகவும், சிக்கல்
அற்ற அமைப்புக்களாகவும்,பிறகு சிக்கலான (நுட்பமிக்க),அதாவது, தனி-மையப்
படுதல் (Individualization),மற்றும் ஒருமைப்படுதல் (Unification)
ஆகியவற்றின் மூலம் பிரபஞ்சம் தனது ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்வதா
யுள்ளது! இவ்வழிமுறையில், முதன்முதலாக இப்பிரபஞ்சத்தின் மையமாக
உயிர்-ஜீவிகள் தோன்றின! அடுத்த உயர்-நிலையாக மனிதஜீவியானவன் இப்
பிரபஞ்சத்தின் உணர்வுள்ள மையமாக உருப்பெற்றான்!

பிரபஞ்சத்தை ஒரு அமைப்பாகக் காண்கையில், பரந்த இப்பிரபஞ்ச வெளியில்
பூமிக்கிரகமானது எங்கோ ஒரு மூலையில் இருக்குமிடம் தெரியாதவகையில்
சுழன்றுகொண்டுள்ளது; அதில் மனிதன் ஒரு தூசு போல ஒட்டிக்கொண்டிருக்
கிறான் என்பதாகவே தெரியும்! ஆனால், பிரபஞ்சத்தை ஒரு (பரிணாம) இயக்க
மாகக் காண்கையில், அவனே பிரபஞ்சத்தின் உச்சியில் உள்ளான் என்பது
தெரிய வரும்! ஆம், உணர்வுக்கு விழிக்கும் ஒவ்வொரு மனிதனும் இப்பிரபஞ்
சத்தின் மையமே ஆவான்! மனிதன் பிரபஞ்சத்தின் மையமாக இருக்கிறான்
என்பது பிரபஞ்சத்தின் பெருமை ஆகும்! அதற்காக அவன் தற்பெருமை கொள்
வது அழகல்ல! ஏனென்றால், பிரபஞ்சத்தின் உண்மையான, இறுதியான அந்த
ஒப்பற்ற மையத்தை அறிந்தடைவதற்கான ஒரு மையமாக மட்டுமே மனிதன்
விளங்குகிறான்! அவன் தன் முழுமையை அடைவதற்கு  அவன் எடுத்து
வைக்க வேண்டிய இன்னும் ஒரு அடி (one more step) மீதமுள்ளது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 14-09-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 13 September 2017

பன்மையின் உலகமா? அல்லது உலகம் கடந்த ஒருமையா?





         நான் இவ்வுலகைவிட ஐந்தரை அடி உயரமானவன்!
         ஏனெனில், நான் இவ்வுலகின் உச்சியில் நிற்கிறேன்!

இவ்வுலகில். பெரும்பான்மையானோர் பன்மையின் உலகில் விழுந்து புரண்டு
உழல்வதை வாழ்க்கையென வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! மிகச்சிறுபான்மை
யானோர் இவ்வுலகைக் கடந்த ஒருமையை அடைவதையே தமது வாழ்வின்
இலக்காகக்கொண்டு வாழ்கின்றனர்! முதல் வகையினர் படைப்பைத் தழுவிக்
கொண்டு, படைத்தவனை, அதாவது மெய்ம்மையைக் கண்டுகொள்வதில்லை!
இரண்டாவது வகையினர், படைப்பைக் கைவிட்டு படைத்தவனைக்கைப்பற்று
வதையே இலக்காகக் கொண்டுள்ளனர்!  இவ்விரு வழிகளில் எது சரியானது?
அல்லது, இரண்டையும் ஒன்றிணைக்க அடிப்படையேதும் உள்ளதா?

'இவ்விரு பார்வைகளுமே ஒருபக்கச் சாய்வானவை, ஏனெனில், முறையான
ஒரு புரிதலானது இரண்டையும் "ஒரு, தொடர்ந்து செல்லும், என்றென்றைக்கு
மான, உயிர்த்துடிப்புமிக்க ஆனந்தமான தழுவலில் இணைக்கிறது!" என்பதாக
உளவியலாளர் கென் வில்பர் (Ken Wilber)கூறுகிறார்.' சில ஆன்மீக மார்க்
கங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ மனிதனுக்கு லௌகீகம், ஆன்மீகம்
என இரண்டு இறக்கைகள் அவசியம் என்கின்றன!

ஆனால், லௌகீகத்தை ஒரு இறக்கையாகவும், ஆன்மீகத்தை இன்னொரு
இறக்கையாகவும் கொண்டு வாழும் ஒருவன் எந்த இலக்கை நோக்கிப் பறந்து
செல்வான்? லௌகீகம் ஒரு திசையில் கொண்டு செல்லும், ஆன்மீகம் அதற்கு
எதிர் திசையில் கொண்டு செல்லும்! எதிரெதிர் திசைகளை நோக்கி இழுக்கும்
காளைகளைப் பூட்டிய வண்டியில் பயணித்து ஒருவன் தனது இலக்கை
அடைவது எவ்வாறு சாத்தியம்? லௌகீகமும், ஆன்மீகமும் சேர்ந்துசெல்லாது!
ஆன்மீகம் என்பது நாம் வாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒரு போதும்
அமையமுடியாது; ஏனெனில், ஆன்மீகம் தான் நம் வாழ்வின் இலக்கு ஆகும்!
இலக்கு ஒரு போதும் வழியின் ஒரு பகுதியாக அமையமுடியாது; மாறாக,
இலக்கு என்பது அனைத்து வழிகளின் முடிவிடம் ஆகும்!

லௌகீகமும், ஆன்மீகமும் சேர்ந்து செல்லாது என்பது மட்டுமல்ல; கென்
வில்பர் அவர்களின் கூற்றுக்கு மாறாக, லௌகீகமும், ஆன்மீகமும் ஒன்றை
யொன்று தழுவிக்கொள்ளவும் செய்யாது! பரந்து விரிந்து அனைத்தையும்
தழுவிக்கொள்ள வேண்டும், அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் எனும்
ஆர்வக்கோளாறின் விளைவாக கென் வில்பரின் புரிதல் தனது நங்கூரத்தை
தொலைத்துவிட்டு ஆழ்கடலில் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறது!
அவருடைய மேற்கத்திய கட்டுப்படுத்துதலின் (Western Conditioning)
விளைவாக அவர் லௌகீகத்திற்கு நியாயம் வழங்குவதற்காக ஆன்மீகத்தைக்

கொச்சைப்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்!

கென் வில்பரின் பார்வை ஆன்மீகப் பரிணாமத்திற்கு விரோதமானது ஆகும்!
எவ்வாறேனும் லௌகீகத்தை ஆன்மீகத்துடன் இணைக்கவேண்டும் எனும்
ஆதங்கத்தினால், அதாவது, லௌகீகத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக
ஆன்மீகத்தை அவர் லௌகீகத்தின் உயரத்திற்கேற்ப குறைத்துவிட்டார்! சில
ஆன்மீக மார்க்கங்கள், பரவலாக மனிதர்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தும்
முகமாக, "ஆன்மீகம் லௌகீகத்திற்கு எதிரானதல்ல!" எனவும்; "ஆன்மீகத்தில்
ஈடுபடுவதற்காக ஒருவர் லௌகீகத்தைத் தியாகம் செய்யத்தேவையில்லை!"
எனவும் சொல்கின்றன! ஆனால், இவ்வழிகளிலெல்லாம் ஆன்மீகத்தை ஊக்கு
விக்கவோ,வளர்க்கவோ இயலாது! ஏனெனில், ஆன்மீகம் என்பது தூங்குமூஞ்சி
களுக்கும், சுகபோகிகளுக்கும் உரியதல்ல! ஆன்மீகம் எதற்கும் எதிரானதல்ல!
ஆனால், பிரத்யேக அக்கறையும், சிதறாத முழுகவனமும் செலுத்தாமல்
ஒருவனுள் ஆன்மீகம் துளிர்க்கவோ, வளரவோ செய்யாது! ஆன்மீகம் என்பது
இப்பன்மை உலகில் காணப்படும் பலவகைப்பட்ட பொருட்களுள், விஷயங்
களுள் அதுவும் ஒன்றல்ல, அதையும் ஒருவர் தம்முடன் வரித்துக்கொள்ள!

ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் கடந்தது, ஏனெனில், அதுவே அனைத்
திலும் இறுதியானது, அனைத்தின் சாரமானது! ஆகவே, அதற்கு நிகராக வேறு
எதுவும் இல்லை! அது ஒரு தனித்தீவு போன்றதாகும்! ஆக, ஆன்மீகத்தை
ஒருவர் நாடுகிறார் என்பதன் அர்த்தம் அவர் வாழ்வின் மிக முக்கியமானதும்,
இறுதியானதுமான அம்சத்திற்கு தயாராகிவிட்டார் என்பதையே குறிக்கிறது!
மனிதவாழ்வின் முக்கியமான, இறுதியான அம்சம் என்பது கடைசியில் இடம்
பெறும் அம்சம் என்று அர்த்தமல்ல; நம்மில் பலர், மிகவும் தவறாக,ஆன்மீகம்
என்பது வயதானவர்களுக்கானது எனவும், வாழ்வின் கடைசிக்காலக்கட்டத்திற்
குரியது எனவும் கருதுகின்றனர்! மாறாக, அனைத்திலும் முதலாவதாக
கவனிக்கப்படவேண்டியது வாழ்வின் மிகவும் மையமான, முக்கியமான,
இறுதியான அம்சமான ஆன்மீக உண்மையைத்தான்! ஏனெனில்,அது மட்டுமே
நம்மையும், நம் வாழ்வையும் முழுமைப்படுத்தும் அம்சமாகும்!

லௌகீகம் என்பது உயிர்-வாழ்தலின் (அர்த்தத்தை அறியத்தவறியதால் மேற்
கொள்ளப்படும்) அர்த்தமற்ற வீண் விரிவாக்கம் ஆகும்! ஏனெனில், உயிர்-வாழ்
தல் என்பதே உயிர்-வாழ்தலின் இலக்காக ஆகவியலாது! அவ்வாறு ஆகவிய
லுமெனில், மனிதவாழ்வு என்பது, உணவு, உடை, உறைவிடம், உறவுகள்
ஆகியவற்றைச் சுற்றிச்சுழலும் விவகாரமாகச் சுருங்கிப்போகும்! மேலும்,உயிர்
வாழ்தலை எவ்வளவு அலங்காரமாகவும், பகட்டாகவும், ஆடம்பரமாகவும்
மேற்கொண்டாலும் அது அர்த்தமற்ற வெறும் உயிர்-வாழ்தல் மட்டுமேயாகும்!

நாம் இப்பன்மையின் உலகை, அதாவது, படைப்பைத் தழுவிக்கொண்டு, அதே
நேரத்தில் ஆன்மீகச் சிகரத்தையும் தழுவிக்கொள்ள இயலாது! முதலில் இவ்
வுலகம், அல்லது பிரபஞ்சம் என்பது பரந்து விரிந்த ஒரு இடம் மட்டுமன்று;
அது ஒரு மாபெரும் இயக்கமும் என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும்
முக்கியம் ஆகும்! அதைவிட முக்கியம் அவ்வியக்கம் எந்த இலக்கை நோக்கிச்
செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வதேயாகும்!

"பன்மையின் உலகம்" என்பது ஒரு பரிசோதனைக்களம் ஆகும்! இன்னும்
"உலகம்" என்பதும் ஒரு பரிசோதனைப்பொருளே ஆகும்! அதில் விளையும்
ஒவ்வொரு அம்சமும் உலகின் ஒரு அவதாரம் ஆகும்! உலகின் பலவகை
அவதாரங்களில் மனிதன் ஒரு விசேட அவதாரம் ஆவான்! அதாவது, அவனே
மாற்றங்களுக்குட்பட்ட இவ்வுலகை முழுமைப்படுத்தி மாற்றங்கள் அனைத்
தையும் முடிவிற்குக்கொண்டுவரும் இறுதி அவதாரம் ஆவான்! ஆம், மனிதன்
தன்னுள் கொணர்ந்திடும் ஒரு முடிவான மாற்றத்திலேயே உலகின் முழுமை
அடங்கியுள்ளது! பரிணாமத்தின் அடியோட்டமான நோக்கம் பலவகைப்பட்ட
பொருட்களை, உயிர்ஜீவிகளை உருவாக்கிக் கொண்டே செல்வதல்ல; மாறாக,
தமது உள்ளார்ந்த நோக்கத்தையுணர்ந்து நிறைவேற்றும் ஒரு பரிபூரணமான
பிரதிநிதியை உருவாக்குவதே (அதாவது, ஒரு பரிபூரணமான அவதாரமாக
உருவெடுப்பதே) ஆகும்! அத்தகையதொரு பரிபூரணமான பிரதிநிதி, அவதாரம்
மனிதனே யாவான்! மனிதன் வெறுமனே உண்டு களிப்பதற்காகப் பிறந்தவன்
அல்ல!

"பன்மைத்தன்மை" என்பதே ஒரு முரண்பாடு ஆகும்! உலகம் பலவகைப்பட்ட
பொருட்களையும், அம்சங்களையும் கொண்டுள்ள காரணத்தினாலேயே
அவற்றையெல்லாம் நாம் தழுவிக்கொள்ளவேண்டுமென்பதில்லை! அதனால்
ஒரு பயனும் இல்லை! நாம் தழுவிக்கொள்ளவேண்டியது முழுமைக்குறை
வான இந்தப் பன்முகத்தன்மை கொண்ட உலகையல்ல; மாறாக, இவ்வுலகம்
எனும் பரிணாம இயக்கத்தின் முடிவும், முழுமையுமான ஒருமைநிலையைத்
தான்! ஏனெனில், அவ்வொருமைநிலை உடைந்து சிதறியதனால் உருவானதே
இப் பன்மையின் உலகம்! ஒருமை நிலையே இவ்வுலகின் மூலம் ஆகும்!
மீண்டும் அவ்வொருமை நிலையைக் கட்டமைப்பதே உலகின், ஒட்டுமொத்த
பரிணாம இயக்கத்தின் ஒரே விழைவும், இலக்கும் ஆகும்! மலையின்
அடிவாரத்தைத் தழுவிக்கொண்டிருந்தால் சிகரத்தை எவ்வாறு நாம் அடைய
இயலும்! சிகரம் தான் நம்முடைய இலக்கு எனும்பட்சத்தில் அடிவாரத்தை
விட்டு நாம் அகன்றுதானே ஆகவேண்டும்!

"சமுசாரம் (உலக வாழ்க்கை) தான் நிர்வாணம், அதாவது, விழிப்படைந்த
மனதைக்கொண்டு காணும்பட்சத்தில், துன்பமிகு இவ்வுலகம்தான் பூரணமான
உலகம்" எனும் மஹாயானா பௌத்தக் கூற்றை கென் வில்பர் உறுதிப்படுத்து
வதாகக் கூறப்படுகிறது. ஆனால், இக்கூற்று மிகவும் தவறாகப் புரிந்துகொள்
ளப்பட்ட ஒன்றாகத்தான் தெரிகிறது! எவ்வளவு உயரிய, அற்புத ஆன்மீக
அனுபவங்களைப் பெற்றாலும், கென் வில்பர் போன்றவர்களால் இவ்வுலகை
விட்டுக்கொடுக்க இயலவில்லை என்பதாகவே தெரிகிறது! ஆனால், அதே
நேரத்தில், எவரும் இவ்வுலகை விட்டுக்கொடுக்கவோ, தவிர்க்கவோ தேவை
யில்லை! அதாவது ஒருவர் ஞானமடைந்த பிறகும் இவ்வுலகில் தான் வாழ்ந்
தாகவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், உலகிற்கு ஏற்கனவே
ஒருவர் கொடுத்து வந்த பழைய முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிடும்!
அதாவது, ஞானமடைந்தவர், (அவரது உடல் இறப்பில் முடிவுறும் வரை) இவ்
வுலகில் தொடர்ந்து இருக்கவே செய்வார்; ஆனால், அவர் தனது ஞானம்
எனும் வீட்டில் தான் பிரதானமாகத் தங்கி வாழ்வார்!

ஏனெனில், இவ்வுலகம் எவ்வகையிலும் பூரணமானதல்ல! அதேநேரத்தில்,
நாம் வைக்கப்பட்டிருப்பது இவ்வுலகில்தான், இவ்வுலகிலிருந்து தான் நாம்
நம் வாழ்க்கையை வாழ்ந்தாகவேண்டும், புரிந்து கொண்டாகவேண்டும், நமது
மீட்சியை செயல்படுத்தியாக வேண்டும்! மேலும், சமுசாரமும், நிர்வாணமும்
ஒன்றல்ல; ஒரு போதும், ஒன்றாகிடுவதற்கான வாய்ப்பும் இல்லை!

அதாவது, விழிப்படைந்த மனத்தைக்கொண்டு காணும் போது, 'துன்பமிகு இவ்
வுலகம்தான் பூரணமான உலகம்' என்பதாகத் தெரிகிறது என்பதன் அர்த்தம்
என்ன? விழிப்படையாத மனத்தைக்கொண்டு காணும் போது இவ்வுலகமும்,
இவ்வாழ்க்கையும் துன்பமயமாக, நரகமாகத் தெரிவதன் அர்த்தம் என்ன? ஆம்,
"விழிப்படைந்த மனம்" தான் அனைத்து வித்தியாசத்தையும் செய்கிறது!
அதாவது, எது முக்கியமானது எனில், இவ்வுலகம் துன்பமயமானதா? அல்லது
பூரணமானதா? என்பது அல்ல! மாறாக, மனம் (மனிதன்) விழிப்படைவது
மட்டுமே முக்கியம்!

ஏனெனில், "விழிப்பு" தான் இவ்வுலகின் மலர்ச்சியும், முழுமையும் ஆகும்!
மனிதனே தன் விழிப்பினால் இவ்வுலகை முழுமைப்படுத்தும் இறுதி அம்சம்
ஆவான்!

         வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
         பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
         சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
         அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
         மறுப்பது தான் உயரிய ஞானம்!
         ஏனெனில், எல்லா உலகங்களும்
         இவ்வுலகம் போலவே மனிதனது உணர்வைச்
         சார்ந்திருப்பவையே!
         உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
         உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
         முழு-உணர்வே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 07-09-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 6 September 2017

மனிதன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்?




ஒருமுறை விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் மிகவும் நோய்வாய்ப்
பட்டிருந்த போது, "மரணம் குறித்து நீங்கள் அஞ்சுகிறீர்களா?" என அவரிடம்
கேட்கப்பட்டதற்கு, "உயிருள்ள அனைத்து பொருட்களுடனும் நான் மிகவும்
நெருக்கமான ஒருமைப்பாட்டை உணர்வதால், தனிமனிதன் எங்கே தொடங்கி
எங்கே முடிவடைகிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல!" என்று
சொன்னதாக,  லேர்ரி டோஸ்ஸே (Larry Dossey) எனும் மருத்துவர்
தனது "ஆன்மாவைத் திரும்ப அடைதல்" (Recovering the Soul)எனும்
நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆம், "மனிதன் என்பவன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்? எனும் இந்தக்
கேள்வி மிகவும் அற்புதமான ஒன்றாகும்! விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மதிநுட்பம்
அவரது விஞ்ஞானக் கோட்பாடுகளில்  வெளிப்பட்டதைவிட இவ்வாறு
எப்போதாவது எவராவது கேட்கும் விஞ்ஞானத்துறைக்குத் தொடர்பில்லாத
கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலேயே அதிகம் வெளிப்பட்டுள்ளன
எனலாம்!

"மனிதன் என்பவன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்? எனும் இக்கேள்வி
மிகவும் முக்கியமானதாகும்! ஏனெனில், இக்கேள்வி மனிதனுக்கும் ஒட்டு
மொத்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை உணர்வுபூர்வமாக அறியச் செய்
வதற்கான ஒரு தூண்டுகோல் போன்றதாகும்! ஏனெனில், மனிதன் என்பவன்
பிரபஞ்சத்திலிருந்து வேறான, தனித்த ஒரு அம்சம் அல்ல! அதே நேரத்தில்,
அவன் பிரபஞ்சத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் முக்கியத்துவமற்ற
ஏதோ ஒரு பகுதியும் அல்ல! மாறாக, அவனே பிரபஞ்சத்தின் மிகமுக்கியமான
தலைப்பகுதி போன்றவன்! ஆனால், மனிதன் தன் முக்கியத்துவத்தை உணர்வு
கொண்டு நேரடியாகக் கண்டடையவில்லை, உணரவில்லையென்றால்,அவன்
வெறுமனே இப்பிரபஞ்சத்திலுள்ள பலவகைப்பட்ட பொருட்களுள் ஒன்றாக;
தாம் ஏன் தோன்றினோம், எதற்காக இருக்கிறோம் என்பதெதையும் அறியாத
வனாய், ஒரு பிராணியைப் போல வாழ்ந்து மாண்டுபோவான்!

மனிதனின் முக்கியத்துவம் என்பது அவனுடைய இயற்கையான பிறப்பால்
கொடுக்கப்பட்ட ஒன்றல்ல; மாறாக, ஒவ்வொரு மனிதனும் தனது விழிப்பால்
ஈட்டப்படவேண்டிய ஒன்றாகும்! மனிதனின் இயற்கையான பிறப்பு என்பது
பிறவிலங்குகளை ஒத்ததேயாகும்! ஆனால், மனிதனுக்கும், விலங்குகளுக்கும்
உள்ள ஒரு வித்தியாசம், அவனுள் அடங்கியிருக்கும் உள்ளுறையாற்றல்
அல்லது உட்பொதிவே ஆகும்! அதாவது, அவன் தன் உணர்வில் மேன்மேலும்
வளர்ந்து உயர்வதற்கான உட்பொதிவு!

ஐன்ஸ்டீனைப்பொறுத்தவரை, "உயிருள்ள அனைத்து பொருட்களுடனும் நான்
மிகவும் நெருக்கமான ஒருமைப்பாட்டை உணர்வதால், தனிமனிதன் எங்கே
தொடங்கி எங்கே முடிவடைகிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல!"
என்றார். அது அவருடைய உணர்வுப்பூர்வ அனுபவம். அவரைப்பொறுத்தவரை
தனிமனிதனின் எல்லைகள் மிகப் பரந்ததாக இருப்பதாக அவர் உணர்ந்தார்!
ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை நம் உடலைப்
போர்த்தியுள்ள தோல்தான் நமது எல்லைகளாயுள்ளன! அதுவும் உடலின் மீது
நாம் கொண்ட ஒரு விபரீதப் பிணைப்பினால், அதாவது, உடலை நாமாகப்
பாவிக்கும் தவறான அடையாளப்படுத்துதலினால் விளைந்ததாகும்! மற்றபடி
"நாம்" என்பது நம் ஒவ்வொருவரின் "நான்" எனும் அகந்தை உணர்வேயாகும்!

ஆனால், 'நான்' எனும் உணர்வு, அல்லது, அகந்தையுணர்வு என்பது என்ன?
அது எதைப்பற்றிய உணர்வு? அகந்தைக்கு தன்னையும், தனது உடமைகளை
யும்  (அதில் ஒருவனுடைய நெருங்கிய உறவுகளும் அடங்கும்) தவிர, வேறு
எதனுடனும் (சகமனிதர்கள், பிற உயிரினங்கள், இயற்கை, பிரபஞ்சம் ஆகிய
எதனுடனும், எவ்வித ஒருமைப்பாடும், அக்கறையும், பொறுப்பும், எதுவும்
கிடையாது! உண்மையில், 'நான்' எனும் உணர்வுக்கு தனித் தன்மையான
யாதொரு உள்ளீடும் கிடையாது! அது 'தான்' எனவும், 'தனது' எனவும்
வரித்துக்கொண்ட அம்சங்களை, பொருட்களை சார்ந்திருக்கும் ஒரு கட்டுக்
கதையே ஆகும்! அகந்தையின் இத்தகைய புனைதிறனும், கற்பனைச்சக்தியும்
தான் எலிகளுக்கும், தவளைகளுக்கும், பிற விலங்குகளுக்கும் இல்லாத
தனிச்சிறப்பு (?) ஆகும்! அகந்தையானது தன்னைப்பற்றியும், தன்னைச்சுற்றியும்
வரித்துகொண்ட அம்சங்களை விலக்கிவிடும் பட்சத்தில் அது ஒன்றுமில்லாத
வெறும் ஒரு சூன்யப்புள்ளியே!

தன்னை நோக்கி விழிக்காத, தனது உண்மையை அறிய விழையாத அகந்தை
யானது தன்னில் தானே தோன்றியதாக எண்ணிக்கொள்கிறது! தானே
வட்டத்தின் பரிதியும், மையமும் என்பதான பிரமையில் ஆழ்ந்து தேக்கமுற்று
உடலுடன் சேர்ந்து அழுகிப்போகிறது! ஆம், நோய்க்கூறு கொண்ட அகந்தை
யானது தொடக்கமும் முடிவும் இல்லாத மூலமும் முடிவுமான மெய்ம்மை
யாகத் தன்னைப் பாவித்துக்கொள்கிறது!

நதியானது மலையில் தோன்றி கடலில் கலக்கிறது; மலைக்கும், கடலுக்கும்
இடைவழி நெடுகிலுமுள்ள எதனுடனும் நதி தன்னைப் பிணைத்துக்கொள்
வதோ, அடையாளப்படுத்திக்கொள்வதோ கூடாது! ஏனெனில், நதியின்
அசலான அடையாளம் முடிவில் அது சென்று சேரும் கடலே ஆகும்!

அவ்வாறே மனிதனின் அகந்தை உணர்வும் இந்த உலகில், (பிரபஞ்சத்தில்)
தோன்றினாலும், இவ்வுலகைக்கடந்த முழு-உணர்வே அதனுடைய அசலான
அடையாளம் ஆகும்! ஆக, ஐன்ஸ்டீனின் அனுபவமான, அதாவது, "உயிருள்ள
அனைத்து பொருட்களுடனும் கொள்ளும் நெருக்கமான ஒருமைப்பாட்டுணர்வு
(Solidarity)" என்பதும் கூட இறுதியானதல்ல! ஏனெனில், இவ்வுலகம்
என்பது முற்றிலுமாகவும் முழுமையாகவும் கடக்கப்படவேண்டியதொரு
குறைவுபட்ட, தற்காலிக நிஜமே! பலர் எண்ணுவதுபோல பிரபஞ்சம் என்பது
ஒரு முழுமையல்ல; மாறாக, முழுமையை நோக்கிய ஒரு இயக்கமாகும்,
அந்த இயக்கத்தின் அம்புத்தலையே (Arrowhead) மனிதன்! அவன் ஒட்டு
மொத்த பிரபஞ்சத்துடன் ஒருமைப்பாடு கொள்வது அவசியமே;எவ்வாறெனில்,
பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விழைவினைச் செயல்படுத்தத் தோன்றிய ஒப்பற்ற
கருவியே, பிரதிநிதியே மனிதன்! ஆகவே, ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடன்
ஒருமைப்பாட்டுணர்வு கொள்வது அவசியமாகும்; இவ்வாறு ஒருமைப்பாடு
கொள்ளாமல் மனிதனால் இப்பிரபஞ்சத்தைக் கடக்க முடியாது! எவ்வொரு
பொருளுடனும், விஷயத்துடனும் எவ்விதத் தொடர்பும், பிணைப்பும் இல்லாத
நிலையில், ஒருபொருளை, அல்லது விஷயத்தை கடப்பது என்பது அடிப்படை
யற்றதாகும்!

ஆனால், உலகெங்கிலும் மனிதர்கள் உலகம், பிரபஞ்சம் பற்றிய யாதொரு
விசேட உணர்வும், உறவும், பிணைப்பும் இன்றி வாழ்ந்து செல்கிறார்கள்! பூமி
என்பது மனிதர்களுக்கு, அவர்களுடைய நுகர்வுத்தேவைகளுக்குரிய பொருட்
களைக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பொருட்கிடங்கு என்பதற்குமேல்
வேறெதுவுமல்ல! சிலர் இயற்கை, ஆன்மீக சூழலியம் என்றெல்லாம் பேசியும்
இயக்கம் நடத்தியும் வருகிறார்கள்! ஆனால், இத்தகைய இயற்கை தழுவிய
இயக்கங்கள், இஸங்கள் இயற்கையைப்பற்றியும், பூமியின் புனிதத்தன்மை
யைப்பற்றியும் பெரிதாகப் பேசினாலும், அவை மனிதனின் ஆன்மீக முக்கியத்
துவத்தை உணர்ந்தறியத் தவறிவிட்ட, உணர்ச்சிப்பெருக்கின் வயப்பட்ட,
முதிர்ச்சியற்ற மட்டுப்பாடுகளேயாகும்!

புனிதம், இறைமை பற்றிய உணர்வு முக்கியமே; ஆனால், அவை புறத்தே
எங்கேயுமில்லை! அப்படி எதுவும் இருக்கமுடியுமெனில், அவை அவற்றைச்
சுட்டும் வெறும் குறியீடுகளாக மட்டுமே விளங்கமுடியும்! மேலும்,மனிதனின்
ஆன்மீக முக்கியத்துவம் என்று இங்கு சொல்லப்படுவது மனிதனின் சொந்த
முக்கியத்துவம் அன்று! அப்படி எதுவும் இருக்கவில்லை! மனிதன் முக்கியத்
துவம் பெறுவது என்பது, அவனே இறுதியான ஆன்மீக மெய்ம்மையை
நோக்கிய பிரதான வாயிலாகவும்,அதன் வழியாகக்கடந்து செல்பவனுமாகவும்
இருக்கிறான் என்பதாலேயே ஆகும்!

நதியானது மலையில் உற்பத்தியாவது போலத் தெரிகிறதே தவிர அது
கடலில் தோன்றி மீண்டும் கடலிலேயே முடிவடைகிறது! அதுபோலவே,
மனிதனும் இவ்வுலகில் தோன்றுவதாகத் தெரிகிறானே தவிர உண்மையில்
அவன் மூலமெய்ம்மையிலிருந்து தொடங்கி மீண்டும் அம்மெய்ம்மையிலேயே
முடிவடைகிறான்!

உண்மையில், "தன்னையறிதல்" என்பது ஒருவன் தன்னைப்பற்றி அறிவதோ,
அல்லது, சமூகம் எனும் களத்தில் பிறருடன் ஒப்பிட்டு  தனது நிலையை
அறிவதோ அல்ல; மாறாக, பிரபஞ்சம் எனும் களத்துடன் தன்னை தொடர்பு
படுத்தி, பிரபஞ்ச விழைவை உணர்ந்து அந்த ஒப்பற்ற இலக்கை நிறைவேற்று
வதே "தன்னையறிதல்" என்பதாகும்! ஏனெனில், மனிதன் என்பவன் பிரபஞ்ச
இயக்கத்தின் நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையும் ஆவான்! முதலில் மனிதன்
தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை (தனது பிரபஞ்சமளாவிய
தன்மையை) அறிந்திடவேண்டும், அடுத்ததாக, பிரபஞ்சத்தின் உண்மையான
மையம் எது என்பதை உணர்ந்தறிந்திடவேண்டும்!

உண்மையில், உணர்வுக்கு விழித்த (அதாவது உணர்வாகத் தன்னை உணர்ந்த)
ஒவ்வொரு மனிதனுமே இப்பிரபஞ்சத்தின் மையமே ஆவான்! எவ்வாறு ஒரு
மரத்தின் ஒவ்வொரு கனியும் அம்மரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவம்
செய்கிறதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனுமே இப்பிரபஞ்சத்தின் மையம்
ஆவான்! ஆனால், பிரபஞ்சத்துடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதும்,
பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னை உணர்வதும், இறுதியானதல்ல! அதாவது
பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னை உணரும் ஒருவன், அடுத்து தனது
மையத்தை உணர்ந்தாக வேண்டும்! ஏனெனில், பிரபஞ்சத்தின் உண்மையான
மையத்தை அறிவதற்கான ஒரு தற்காலிக மையமே மனிதன்! அதாவது
மனிதனின் மையம் மனிதனிடம் இல்லை! அது மனிதனின் (அகந்தை) உணர்
வைக் கடந்த ஒரு பேருணர்வு ஆகும்! தன் மையத்தைக் கண்டடைந்தவனே
மனிதன்! மற்றெல்லோரும் மையமறியாத விலங்குகளே!

விலங்கு ஜீவிகளைப்பொறுத்தவரை, அடிப்படைத்தேவைகளைச் சுட்டுகின்ற
உடலின் இயல்பூக்கிகள் தான் அவற்றுக்கான மையம் ஆகும்! அவற்றின்
அடிப்படைத் தேவைகளுக்குரிய பொருட்களைக்கொண்ட உலகை அவை
சார்ந்துள்ளன. உணர்வுக்கு விழித்த மனிதஜீவியைப் பொறுத்தவரை, உடலின்

அடிப்படைத்தேவைகளைக் கடந்த உயர்-தேவைகளான அர்த்தம், உண்மை,
மெய்ம்மை ஆகியவற்றைக்கோரும் ஆன்மாவே மையமும், அவன் சார்ந்திருக்
கும் ஒரே மெய்ம்மையும் ஆகும்!


மா.கணேசன்/நெய்வேலி/ 25-08-2017
----------------------------------------------------------------------------

Monday, 28 August 2017

இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?




ஒரு சமயம் மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அவர்களிடம், "மனிதன் பதில் கண்டுபிடித்தாகவேண்டிய மிக முக்கியமான
கேள்வி எது?" என்று கேட்கப்பட்டபோது அவர் முன் வைத்த கேள்வி,
"இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்பது தான்.

"சூரியன் காலையில் கிழக்கே உதிக்கிறது, மாலையில் மேற்கே மறைகிறது,
இடையில் ஆயிரத்தெட்டு அலுவல்கள், பிரச்சினைகள், விவகாரங்கள்; அதில்
உலகைப்பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் ஏது இடம், நேரம்?" என்பதாக நாம்
வாழ்ந்துசெல்கிறோம்! ஆனால், அன்றாடத்தைக் கடந்து சிந்திக்கும் ஒரு சிலர்
நம்மிடையே இருக்கக்கூடும் அவர்களுக்கு இக்கட்டுரை நிச்சயம் பயன்படும்!

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முன்வைத்த அவரது கேள்விக்கு அவரே சொன்ன
பதில் :

  "இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடமில்லை என நாம் தீர்மானித்தோமெனில்,
  பிறகு நாம் நமது தொழில் நுட்பத்தையும், நமது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு
  களையும், மற்றும் நமது இயற்கை வளங்களையும் பயன்படுத்தி
  அப்பகைமையை வெளித்தள்ளும் வகையில் பெரிய சுவர்களை எழுப்பி
  நம்முடைய பாதுகாப்பு, மற்றும் வலிமையைச் சாதிப்போம். பகைமையான
  எல்லாவற்றையும் அழிக்கும் வகையில் பெரும் ஆயுதங்களை
  உருவாக்குவோம். தொழில் நுட்பத்தைப்பொறுத்தவரை நாம் அத்தகைய
  ஒரு வலிமைமிக்க நிலையை நோக்கிச் செல்கிறோம் என்பதாகவே நான்
  நம்புகிறேன். அந்த வழிமுறையில், ஒன்று நாம் நம்மை முற்றாகத்
  தனிமைப்படுத்திக்கொள்வோம் அல்லது முற்றாக நம்மை நாமே அழித்துக்
  கொண்டுவிடுவோம்!

  "அதே வேளையில், இப்பிரபஞ்சம் நட்பார்ந்ததுமில்லை, பகைமையானது
  மில்லை, அதாவது கடவுள் அடிப்படையில் 'பிரபஞ்சத்துடன் தாயக்கட்டை  
  உருட்டிக் கொண்டிருக்கிறார்' என்பதாக நாம் தீர்மானித்தோமெனில், பிறகு
  நாம் வெறும் அந்த தாயக்கட்டை உருட்டலின் குருட்டாம் போக்கான
  விளைவுகளின் பலிகடாக்களே; மேலும் நமது வாழ்க்கைக்கு உண்மையான
  யாதொரு குறிக்கோளும் அர்த்தமும் இருக்காது"

  "ஆனால், இப்பிரபஞ்சமானது ஒரு நட்பார்ந்த இடம் என்பதாகத் தீர்மானித்
  தோமெனில், பிறகு நாம் நமது தொழில் நுட்பத்தையும், நமது விஞ்ஞானக்
  கண்டுபிடிப்புகளையும், மற்றும் நமது இயற்கை வளங்களையும்
  இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதற்குரிய கருவிகளையும், மாதிரிகளையும்
  உருவாக்கிடப் பயன்படுத்துவோம். ஏனெனில், பிரபஞ்சம் எவ்வாறு
  செயல்படுகிறது என்பதையும் அதனுடைய நோக்கங்களையும் புரிந்து
  கொள்வதன் வாயிலாகவே  வலிமையும், பாதுகாப்பும் வந்து சேரும்."

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன இந்த பதில் அவ்வளவு திருப்திகரமாகவும்
இல்லை, பொருத்தமாகவும் இல்லை என்பதை சிரத்தையுடன் சிந்திக்கும்
எவரும் சொல்லிவிடக்கூடும்!

முதலிடத்தில், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முன்வைத்த அக்கேள்வி உண்மை
யிலேயே அதிமுக்கியமானது தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
ஆனால், அக்கேள்வி பெரிதும் இருத்தலியல் மற்றும் தத்துவபூர்வமானதே
தவிர, விஞ்ஞானபூர்வமானதல்ல!

அடுத்து, ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியே
என்பதிலும் நமக்கு எவ்வித சந்தேகமுமில்லை!  மேலும் பிரபஞ்சவியலைப்
பொறுத்த விஷயத்தில் அவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானி
யாவார். அதே நேரத்தில் அவர் வெறும் ஒரு வறட்டுத்தனமான இயற்பியல்
விஞ்ஞானியாக மட்டும் இருக்கவில்லை; தத்துவச் சிந்தனையிலும் பரிச்சய
முள்ள ஒருவராக இருந்தவராவார்.

எனினும், பெரிதும் அவரது சிந்தனைகள் விஞ்ஞான ரீதியான தர்க்கத்திலேயே

வேர்கொண்டிருந்தமையால் இயற்பியலுக்கு வெளியேயமைந்த கேள்விகளைப்
பொறுத்தவரை அவரது பதில்கள் முழுமையானவையாக அமையவில்லை!
குறிப்பாக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?"
என்கிற கேள்வியை அவர் ஊகத்தின் அடிப்படையிலேயே அணுகியுள்ளார்.

அதாவது, "இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடமில்லை", "இப்பிரபஞ்சம் நட்பார்ந்
ததுமில்லை, பகைமையானதுமில்லை", "இப்பிரபஞ்சமானது ஒரு நட்பார்ந்த
இடம்" என்பதான மூன்று வகைப்பட்ட ஊகங்கள், அல்லது 'தீர்மானங்களை'
அடிப்படையாகக்கொண்டு அவர் தனது பதிலை உருவாக்குகிறார்!

ஆனால், இத்தகைய அணுகுமுறை அடிப்படையிலேயே குறைபாடுடையது
ஆகும்! அதாவது, இப்பிரபஞ்சம் எத்தகையது என்பதை நமது ஊகங்களைக்
கொண்டு புரிந்து கொள்வது சரியான அணுகுமுறையாகாது! அது நமது ஊகங்
களையும், தீர்மானங்களையும் பிரபஞ்சத்தின் மீது சுமத்துவது போன்றதாகும்!
உண்மையிலேயே இப்பிரபஞ்சம் எத்தகையது என்பதற்கான தரவுகளைத்
திரட்டி, அவற்றை அடிப்படையாகக்கொண்டே நமது புரிதலை கட்டியெழுப்பிட
வேண்டும்! அதாவது, ஒரு குறிப்பிட்ட முடிவு, ஊகம், அல்லது தீர்மானத்தை

தொடங்குபுள்ளியாகக்கொண்டு அதற்கேற்ப தரவுகளைத் திரட்டுவது முறை
யாகாது!

முதலிடத்தில், மனிதஜீவிகளாகிய நாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு வளர்ச்சிநிலை,
அல்லது பகுதியே என்பது ஐன்ஸ்டீனுக்குத் தெரியாத உண்மையா என்ன!
ஒரு மரத்தின் பகுதியான கிளைகளுக்கு, பூக்கள் அல்லது பிஞ்சுகளுக்கு
அம்மரமானது பகைமையாக இருக்கமுடியுமா

ஒருவகையில், முழுமைக்கும், பகுதிகளுக்குமான உறவை நட்பு, பகைமை
எனும் சொற்களைக்கொண்டு புரிந்து கொள்வது பொருத்தமற்றதாகும்!
அப்படியானால், "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?"
எனும் கேள்வி பொருத்தமற்றதாகிறது! பிறகு எவ்வாறு இக்கேள்வி
அதிமுக்கியமானது என்று சொல்லமுடியும் எனக்கேட்கலாம். அடிப்படையில்,
"இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" எனும் கேள்வி
பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்குமான தொடர்பு பற்றிய கேள்வியே என்பதால்
அத்தொடர்பு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானதே
என்பதை மனதிற்கொண்டு எவ்விதத் தடையுமின்றி நாம் தொடர்ந்து நமது
இந்த ஆய்வை மேலெடுத்துச் செல்லலாம்!

அதே நேரத்தில் நமது ஆய்வை, இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம் எனவோ
அல்லது பகைமையான இடம் எனவோ யாதொரு முன்முடிவுமின்றி கொண்டு
செல்வது அவசியம். விஞ்ஞானிகளின் கணக்குப்படியே இப்பூமியில் உயிர்
தோன்றி வெற்றிகரமாக 400 கோடி ஆண்டுகள் தாண்டிவிட்டன! மனிதஜீவிகள்
தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன! இனி திடீரென
இப்பிரபஞ்சம் பகைமையானதாக மாறிவிடக்கூடும் என்பதற்கு எவ்விதச்
சான்றும், காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை!

உண்மையில், இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா இல்லையா என்பதை
விட, மனித இனம்தான் தனக்குத்தானே எதிராக நடந்து கொள்கிறது. நாடுகள்
பரஸ்பரம் ஒன்றையொன்று முற்றாக அழித்துக்கொள்ளும் வகையிலான
அபாயகரமான அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. உலக
நாடுகள் அனைத்துமே பொருளாதார நடவடிக்கைகள் என்ற பெயரில் பூமியின்
இயற்கை வளங்களைச் சுரண்டி நுகர்ந்து வருகின்றன! அளவு கடந்த மக்கள்
தொகைப் பெருக்கம் ஒருபுறம், அவர்களனைவரின் தேவைகளையும் நிறைவு
செய்வதற்கான தொழிற்சாலைகளின் பெருக்கம் இன்னொருபுறம் என பூமியின்
சுற்றுச்சூழல் பெரிதும் மாசடைந்ததோடு, புவிக்கோளம் சூடேறுதலும் சேர்ந்து
பூமியில் மனித இனம் தொடர்ந்து உயிர்வாழ்வதே பெரும் கேள்விக்குறியாகி
விட்ட ஒரு காலத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம்! மேலும், மனிதர்
களுக்கு எதிரிகள் வேற்றுக்கிரகத்திலிருந்து வரவேண்டியதில்லை; இன்னும்,
இயற்கையுலகமும் எதிரியல்ல! அதாவது, மனிதர்களுக்கு எதிரிகள் மனிதர்
களே யாவர்! மனிதர்களுக்கிடையே பெரிதாக யாதொரு இணக்கமும்,
நட்பார்ந்த உறவும் கிடையாது! பகைமை பாராட்டுவது என்பது நாடுகளுக்
கிடையே மட்டுமல்லாது தனி நபர்களுக்கிடையேயும் நிலவுகிறது!

ஆக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்று
கவலைப்படுவதற்கு முன்னர், நம்முடைய இதயங்களில் நட்புக்கான ஒரு சிறு
இடமாவது உள்ளதா என்பது பற்றியே முதலில் நாம் அக்கறைப்படவேண்டும்!

இப்பூமியிலேயே நட்பார்ந்த, அதாவது உயிரினங்களும், மனிதர்களும் வாழ்
வதற்கு உகந்த இடங்களும் உள்ளன! இதற்கு மாறான, பகைமை நிறைந்த
இடங்களும், அதாவது  உயிரினங்களும், மனிதர்களும் வாழ்வதற்குத் தகாத
இடங்களான பாலைவனங்களும், கடும்பனியால் போர்த்தப்பட்ட துருவப்
பிரதேசங்களும் உள்ளன! அவ்வாறே, இப்பிரபஞ்சத்தில், நம் பூமிக்கிரகத்திற்கு
அப்பால் செல்லச்செல்ல உயிரினங்கள் வாழ்வதற்கு சற்றும் இடம் தராத
ஆபத்தான இடங்களே அதிகம்! கிட்டத்தட்ட நம்  பூமிக்கிரகத்தைத் தவிர,
இப்பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உயிரினங்கள் வாழவே இயலாது என்று
முடிவாகச் சொல்லிவிடலாம்! ஆனால், இதன் அர்த்தம் பிரபஞ்சம் நட்பார்ந்த
இடமல்ல என்பதல்ல! மாறாக, நாம் தோன்றிய, நம்முடைய பிறந்த வீடான
பூமிக்கிரகத்தில் மட்டுமே பாதுகாப்பாக வாழமுடியும் என்பதே அர்த்தமாகும்!

மேலும், நம்முடைய சூரியமண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கையில்,
சூரியனிலிருந்து மூன்றாவது கிரகமான பூமியில் மட்டும் ஏன் உயிர் தோன்றிட
வேண்டும்? ஆம்,உயிர் தோன்றுவதற்குரிய அனைத்து உகந்த சூழல்களும்
ஒருங்கே இங்கே அமைந்திருப்பதுதான் காரணம் எனலாம்!

அடுத்து, உயிரற்ற சடப்பொருளாலான பௌதீகப்பிரபஞ்சத்தில் உயிர் ஏன்,
எதற்காகத் தோன்றிடவேண்டும்? மேலும், உயிர் தோன்றுவதற்கான அவசியம்,
நோக்கம், குறிக்கோள் என்ன? அத்துடன், அதாவது உயிர்ஜீவி தோன்றியதுடன்
நில்லாமல், உணர்வுடைய மனிதஜீவி ஏன் தோன்றிடவேண்டும்? இவ்வாறு
இப்பிரபஞ்சத்தைப் பற்றியெல்லாம் எதற்காக ஆய்வு செய்திடவேண்டும்?

அடிப்படையில் பிரபஞ்சமானது உயிர்ஜீவிகளுக்கு எதிரானதாயிருந்திருந்தால்
முதலிடத்தில் இப்பிரபஞ்சத்தில் உயிர்ஜீவி எதுவும் தோன்றியிருக்காது! உயிர்
தோன்றிட இப்பிரபஞ்சம் இடமளித்திருக்காது அல்லவா? ஆனால், இத்தகைய
விளக்கத்தைக்கொண்டு உடனே இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம் தான்
என்ற முடிவிற்கு நாம் வந்திடுவது எளிது! பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம்
என்பதைவிட, இப்பிரபஞ்சம் என்பது எத்தகைய மெய்ம்மை? அது எதற்காகத்
தோன்றியது? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? நமது வாழ்வின்
அசலான குறிக்கோள் என்ன? மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை?
சடப்பொருளாலான பிரபஞ்சத்தில் (மனித) உணர்வுக்கான பணி என்ன?
என்பவற்றையெல்லாம் புரிந்து கொள்வதே அதிமுக்கியத்துவம் வாய்ந்த
அம்சங்கள் ஆகும்!

இப்பிரபஞ்சம் பல தளங்களைக் கொண்டதாகும்; துல்லியமாகச்சொன்னால்,
பௌதீகத்தளம், உயிரியல்தளம், உணர்வியல்தளம் என மூன்று தளங்களைக்
கொண்டதாகும். இப்பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள இரு-மட்டப் பார்வை
அவசியமாகும். ஒன்று வழக்கமான "கிடைமட்டப் பார்வை", இரண்டாவது
"செங்குத்துப்பார்வை" யாகும்! "கிடைமட்டப் பார்வை" என்பது முழுக்கமுழுக்க
பொருள்வயமானது, எந்திரத்தனமானது, அதனுடைய அதீதமான பார்வையில்
அது சுருக்கல்வாதமாகச் சுருங்கிவிடுகிறது! இப்பார்வையே விஞ்ஞானத்தின்
பிரதான பார்வையும் ஆகும்! இதை நாம் "உலக-மையப்பார்வை" எனவும்
குறிப்பிடலாம்! இதுவே ஐன்ஸ்டீனின் பார்வையுமாகும்! விஞ்ஞானிகளையும்,

பொருள்முதல்வாதிகளையும், இயற்கைவாதிகளையும், பகுத்தறிவுவாதிகள்
என்று தம்மை அறிவித்துக் கொள்பவர்களையும் பொறுத்தவரை உலகமே
பிரதானம் ஆகும்! இவர்களைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் என்பது பொருளால்
ஆன பௌதீகப் பிரபஞ்சம் மட்டுமே!

ஆனால், செங்குத்துப்பார்வையைப் பொறுத்தவரை பௌதீகப்பிரபஞ்சம் என்பது
ஒரு அடிப்படையே, அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளமே தவிர அதுவே
மொத்தப் பிரபஞ்சமும் அல்ல! ஏனெனில், பிரபஞ்சமானது தனது பௌதீகத்
தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்தை எட்டியதுடன், அதையும்
கடந்து மனிதனுள் உணர்வாக உணர்வியல் தளத்தையும் எட்டி வெகு காலம்
ஆகிறது! தற்போது பிரபஞ்சம் எனும் பரிணாம இயக்கமானது பிரதானமாக
உணர்வுத்துடிப்புள்ள தனிமனிதர்களின் உணர்வில் மையம் கொண்டுள்ளது!

கிடைமட்டப் பார்வைக்கும், செங்குத்துப்பார்வைக்கும் உள்ள வித்தியாசம்
என்னவெனில், கிடைமட்டப்பார்வையானது, ஒரு மரத்தின் அடிப்பகுதியையும்,
அதன் பிரதானக்கிளைகளையும் மட்டுமே மரம் எனக் கணக்கில் கொள்கிறது!
அம்மரத்தின் பூக்களையும், பிஞ்சுகளையும், காய்களையும், கனிகளையும்
மரமாகக் கணக்கில் கொள்வதில்லை! ஆனால், செங்குத்துப்பார்வையானது,
வேர்கள், அடிமரம், கிளைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் என
அனைத்தையும் மரமாகக் கணக்கில் கொள்வதுடன், பிரதானமாக அம்மரத்தின்
கனிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஏனெனில், மரத்தின்
கனியினுள் இருக்கும் வித்தில் தான் ஒட்டுமொத்த மரமும் அடங்கியுள்ளது!
அதாவது, கனி, அல்லது வித்து தான் எவ்வொரு மரத்தின் முழுமையும்,
இலக்கும் ஆகும்! ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! வித்து தான்
விருட்சத்தின் மூலமும், முழுமையும் ஆகும்!

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் உள்பட அனைத்து விஞ்ஞானிகளின் பார்வையும்
கிடைமட்டப்பார்வையைச் சேர்ந்தவையே! அவர்களுக்கு, பிரபஞ்சத்தின்
பௌதீகத்தளம் ( மரத்தின் அடித்தண்டும் கிளைகளும் மட்டும்) தான் ஒட்டு
மொத்த பிரபஞ்சம் ஆகும்! உயிர்ஜீவிகள் மற்றும் மனிதஜீவிகள் (பிஞ்சுகள்,
காய்கள் கனிகள்) யாவும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற
மேற்சேர்க்கையான விஷயங்களே!

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டுச் சாதனைகள் இயற்பியல்
துறையின் எல்லைக்குள் மட்டுமே பிரமாதமானவை! ஏனெனில், அவை சடப்
பொருளாலான பிரபஞ்சத்தை, அதாவது பிரபஞ்சத்தின் ஒரு குறிப்பிட்ட
பகுதியை மட்டுமே ஆராய்பவை! அவை பிரபஞ்சத்தின் உயிரியல், மற்றும்  
அதைக்கடந்த உணர்வியல் தளங்களையும் தொடுவதில்லை, விளக்குவது
இல்லை! ஐன்ஸ்டீனின் விஞ்ஞான மேதைமை தான் அவருடைய ஆன்மீக
பேதைமையின் ஆரம்பம் ஆகும்! இல்லாவிடில், பிரபஞ்சம் எவ்வாறு செயல்
படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன் வாயிலாக பிரபஞ்சத்தைப் புரிந்து
கொண்டுவிடமுடியும் என அவர் எவ்வாறு எண்ணமுடியும்? இதிலிருந்து,
ஐன்ஸ்டீன் அவர்கள் பிரபஞ்சத்தை ஒரு எந்திரம் போல கருதி வந்திருப்பது
புலனாகிறது!

மேலும், அவருடைய இயற்பியல் துறையிலேயும் அவர் சில தவறான
முடிவுகளைக் கொண்டிருந்தார் என்பதையும் விஞ்ஞான உலகம் நன்கறியும்!
குறிப்பாக, அவரது காலத்திய பிற விஞ்ஞானிகளைப்போலவே அவருக்கும்
பிரபஞ்சம் விரிவடையும் தன்மை கொண்டது என்பது தெரியாது! ஆகவே
அவர் ஒரு நிலைத்த பிரபஞ்சத்தையே (Static Universe) உருவகித்துக்
கொண்டிருந்தார்! அந்நிலையில்,  அவர் தனது புதிய சார்பியல் கோட்பாடு
கொண்டு பிரபஞ்சத்தை விளக்கமுற்படும் வேளையில், அவருடைய
சமன்பாடுகள் நிலைத்த பிரபஞ்சத்திற்கேற்றவாறு அமையவில்லை என்பதால்
தனது சமன்பாட்டில் சமாளிப்புக்காக ஒரு மதிப்பைச் சேர்த்து(fudge factor)
சமன்பாட்டைச் சமன்படுத்தி சரி செய்துவிட்டார்! ஆனால், 1920-களில்
வானவியலாளர் எட்வின் ஹப்புள் (Edwin Hubble) அவர்களின் ஆராய்ச்சி
முடிவுகள் பிரபஞ்சம் விரிவடைகிறது எனும் உண்மையை தெளிவாக
எடுத்துக்காட்டியதை அறிந்த ஐன்ஸ்டீன், தனது சமன்பாட்டிலிருந்து சமாளிப்பு
காரணத்திற்காகத் தான் சேர்த்த அந்த மாறாத மதிப்பை ("cosmological
constant") நீக்கிவிட்டார்! பிறகு ஒருசமயம் அவர் அது குறித்துச்சொல்லும்
போது, "இதுவே தன் வாழ்க்கையில் தான் இழைத்த பெரும் தவறு!" என்றார்.
ஆனால், பிரபஞ்சவியலின் வேறொரு சிக்கலைத்தீர்க்கும் முயற்சியில்
ஈடுபட்டிருந்த சில விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன் நீக்கிய அதே "மாறாத மதிப்பை"
மீண்டும் சமன்பாட்டில் சேர்க்கவேண்டிய அவசியத்தைச் சந்தித்ததாகச்
சொல்லப் படுகிறது!

இவ்வாறு விஞ்ஞானப் பிரபஞ்சவியலானது பலவித சமாளிப்புகளையும்,
பூசிமெழுகுதல்களையும், தவறான முடிவுகளையும், அரை-உண்மைகளையும்
கொண்டதாக விளங்குகிறது!

ஐன்ஸ்டீன் அவர்கள் இயற்கையின் கணிதவியல் விதிகளில் நம்பிக்கை
கொண்டவராக இருந்தார். இயற்கை விதிகளின் துல்லியமான தன்மையை
அவர் கடவுளின் கையாகக் கண்டார்! இதன் காரணமாகவே அவர் குவாண்டம்-
எந்திரவியலின் அடிப்படைக் கோட்பாடான ஹெய்ஸன்பெர்க்கின் "நிச்சயமற்ற
விதி" யை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதாவது, அணுக்கருவின் மட்டத்தில்,
இயற்கையும், பிரபஞ்சமும் குருட்டாம் போக்கில் இயங்குகிறது, அதாவது,
நிகழ்வுகள் தற்செயலாக, விதியற்ற முறையில் நிகழ்கின்றன என்பதை
ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இவ்வகையில், அவர் தனது
கொள்கைகளில் ஒரு பழமைப்பேணியாக (Conservative)இருந்தார். இதன்
காரணமாகவே அவர், "கடவுள் பிரபஞ்சத்துடன் தாயக்கட்டை உருட்டி விளை
யாடிக் கொண்டிருக்கவில்லை!"  என்று குறிப்பிட்டார்!

ஆனால், நிறை, சக்தி, ஈர்ப்பு, (ஒளியின்) வேகம், அணுத்துகள்கள், மின்காந்த
விசை, வடிவவியல் ஆகியவை பௌதீகச் சடப் பிரபஞ்சத்தின் பொருண்மை
யான அம்சங்களே எனும் பட்சத்தில், இக்காரணிகளை, அல்லது பௌதீகப்
பண்புகளைக் கொண்டு எவ்வாறு ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும், அது ஏன்,
எதற்காகத் தோன்றியது, அதன் குறிக்கோள், இலக்கு என்னவென்றும்; மேலும்,
பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும்(உணர்வுக்கும்) உள்ள தொடர்பு என்ன? மனித
வாழ்வின் அர்த்தம், மற்றும் குறிக்கோள் என்ன? என்பவை பற்றியும் எவ்வாறு
புரிந்து கொள்ளமுடியும்? முடியாது! பௌதீகப் பிரபஞ்சத்தின் அமைப்பையும்,
அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக்கொண்டும் பிரபஞ்சத்தின் நோக்கம்
என்ன என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது! நாம் வசிக்கும் வீட்டை
(கட்டடத்தை)ப் புரிந்துகொள்வதன் மூலம் நம் வாழ்வின் அர்த்தத்தையும்,
குறிக்கோளையும் புரிந்து கொள்ள இயலாது! நாம் வசிக்கும் வீடு நம்மால்
கட்டப்பட்டது, ஆனால் பிரபஞ்சம் எனும் வீடு தானே அமைந்தது (அதாவது
ஆமையும், அதன் ஓடும் போல) என்பதுதான் இரண்டிற்குமுள்ள வித்தியாசம்!

ஆம், ஆமையும், அதன் மேலோடும் பிரிக்கவியலாதவையாகும்! ஆமைக்கு
அதன் மேலோடு பகைமையானதல்ல; மாறாக, அதுவே அதன் பாதுகாப்புக்
கவசம் ஆகும்!அவ்வாறே பிரபஞ்சம் என்பது மனிதனின் மேலோடு போன்றதே
ஆகும்! ஆனால், ஆமையின் மேலோட்டைப் பொறுத்தமட்டில்,  ஆமை
ஏன், எதற்காக இருக்கிறது, வாழ்கிறது; ஆமையினுடைய வாழ்வின் இலக்கு,
குறிக்கோள் என்ன என்பது தெரியாது! துரதிருஷ்டவசமாக ஆமைக்கும் கூட
தன் வாழ்வின் குறிக்கோள், இலக்கு என்ன என்பது தெரியாது! அதேநேரத்தில்,
ஆமையினுடைய வாழ்வின் குறிக்கோள் எதுவாயினும், அக்குறிக்கோளை
அடைவதற்கு உதவும் ஒரு கருவியாகச் செயல்படுவதே மேலோட்டின் பணி
ஆகும்!

அதேபோல், மனிதனின் மேலோடான பிரபஞ்சத்திற்கும் மனிதனுடைய
வாழ்வின் நோக்கம், குறிக்கோள், இலக்கு என்னவென்று எதுவும் தெரியாது!
ஆனால், ஆமையைப்போல் மனிதன் தனது வாழ்வின் அசலான குறிக்கோள்
என்ன, இலக்கு என்ன என்று தெரியாமல் வாழ இயலாது! மனிதன் தனது
வாழ்வின் குறிக்கோளை அறிவதற்காக முடிவேயில்லாமல் தன் மேலோடான
பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டு இருக்க வியலாது! மாறாக, மனிதன் தன்
உள்ளீடுகளை ஆராய்வது அவசியம்; ஏனெனில், ஒரு ஆரஞ்சுப்பழம் என்பது
அதன் மேல் தோல் மட்டுமல்ல; அதனுடைய சுளைகளும், முக்கியமாக அச்
சுளைகளில் அடங்கியுள்ள சாறும் ஆகும்! மனிதனே (ஒவ்வொரு மனிதனும்)
பிரபஞ்சத்தின் இதயம் போன்றவன் ஆவான்! ஆகவே, மனிதன் தன் சாரத்தை
அறிவது அவசியமாகும்!

இவ்விடத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்வது
நமது புரிதலை மேலும் ஆழப்படுத்துவதாக அமையும்! அதாவது, ஆமை
முக்கியமா? அல்லது அதன் ஓடு முக்கியமா? ஆமைக்காக அதன் மேலோடு
இருக்கிறதா? அல்லது ஓட்டிற்காக ஆமை இருக்கிறதா? அதாவது, பிரபஞ்சம்
மனிதனுக்காக இருக்கிறதா? அல்லது மனிதன் பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு
மூலையில் விபத்துபோலத் தோன்றிய வெறும் ஒரு வேடிக்கைப்பொருளா?
உண்மையில், ஆமையும், அதன் மேலோடும் வேறு வேறு அல்ல என்பதைப்
போல மனிதனும், பிரபஞ்சமும் வேறு வேறு அல்ல! ... .

முடிவாக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்ற
கேள்விக்கு நாம் இருவித பதில்கள் இணைந்த ஒரு முழுமையை வந்தடை
கிறோம் எனலாம்! அதாவது, இப்பிரபஞ்சத்தை ஒரு சாசுவதமான வசிப்பிடம்
என்பதாகக் கருதுவோமெனில், அது ஒரு பாதுகாப்பான, நட்பார்ந்த இடமல்ல!
ஏனெனில், இப்பிரபஞ்சமானது அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல்
மனிதனை உயிரோடு வைத்துக்காப்பதில்லை! மாறாக,அதை ஒரு தற்காலிகத்
தங்குமிடம் என்பதாகக் கருதுவோமெனில், அது ஒரு நட்பார்ந்த இடமே
எனலாம்!

உண்மையில், ஒரு மேலோட்டமான பார்வைக்குத்தெரிவது போல், பிரபஞ்சம்
என்பது ஒரு "இடம்" அல்ல; அது ஒரு இயக்கம் அல்லது நிகழ்வுமுறையே
ஆகும். அதை நாம் மிகப்பொருத்தமாக ஒரு பரிணாம நிகழ்வுமுறை எனலாம்!
அது தன்னைத்தானே கடந்து வளர்ந்து செல்லும் ஒரு விசித்திரமான நிகழ்வு
முறை யாகும்! பிரபஞ்ச இயக்கத்தின் அம்புத்தலை பௌதீகத்தளத்தை விட்டு
வளர்ந்து வெளியேறி வெகு காலமாகிறது! ஆனால், விஞ்ஞானிகளோ
இன்னும் பௌதீகத்தளத்தையே ஒட்டுமொத்த பிரபஞ்சம் என்பதாகக் கருதி
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்! ஒரு அமீபா என்பது உண்மையில்
பிரபஞ்சத்தின் ஒரு உயர்-வளர்ச்சி நிலையே என்பதை இயற்பியல் விஞ்ஞானி
களால் இனம் காண முடியவில்லை! இன்னும் உயிரியல் விஞ்ஞானிகளாலும்
ஒரு அமீபாவை வெறும் ஒரு ஒரு-ஸெல் உயிரியாகத்தான் பார்க்கமுடிகிறதே
தவிர அதைப் பிரபஞ்சத்தின் வித்தியாசமான ஒரு வளர்ச்சிநிலையாக, உயிர்
பெற்ற பிரபஞ்சமாகப் பார்க்க முடிவதில்லை! இந்நிலையில் எவ்வாறு
இவ்விஞ்ஞானிகளால், மனிதனே பிரபஞ்சம் எனும் நிகழ்வுமுறையின் இறுதிக்
கண்ணி, அதாவது பிரபஞ்ச விருட்சத்தின் ஒப்பற்ற கனி, அதாவது, உணர்வு
பெற்ற பிரபஞ்சம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள இயலும்?

ஒரு மரத்தில் காய்த்திருக்கும் காய்களுக்கும் அம்மரத்திற்கும் என்ன தொடர்பு
உள்ளதோ அதே தொடார்புதான் பிரபஞ்சத்திற்கும், மனிதர்களுக்கும் உள்ள
தொடர்பும் ஆகும்! காய்களைப்பொறுத்தவரை அவை அம்மரத்தில் காய்த்திருக்
கின்றன என்பதைத் தாண்டி அம்மரம் பாதுகாப்பானதா, நட்பார்ந்த இடமா
என்பது போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை! காய்களின் குறிக்கோளும்
இலக்கும் அம்மரத்திலேயே தங்கி வாழ்ந்துகொண்டிருப்பதல்ல; மாறாக,
எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முற்றிக்கனிகளாவது
ஒன்றே காய்களின் ஒரே குறிக்கோளும், இலக்கும் ஆகும்! ஏனெனில், காய்கள்
கனிகளாக ஆவதே அக்காய்களுடையது மட்டுமல்லாமல் அம்மரத்தினுடைய
அர்த்தமும், முழுமையும் ஆகும்! இவ்வாறே, மனிதர்களும் எவ்வளவு
விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தம் உணர்வில் முற்றிக்கனிந்து
முழு-உணர்வு நிலையை அடைவதொன்றே மனிதர்களை முழுமைப்படுத்தும்!
மனிதன் அடையக்கூடிய அம்முழுமையில்,வித்தினுள் அடங்கிய விருட்சமாக
இப்பிரபஞ்சம் மனிதனுள் அடங்கிவிடும்! அம்முழுமை மட்டுமே உண்மையில்
பாதுகாப்பான, நட்பார்ந்த ஒரே இடமாகும்!

                           ••

            மனிதா, உன்னைத்தவிர்த்து விட்டு
            உலகை நீ புரிந்து கொள்ள முடியாது!
            உலகைப் புரிந்து கொள்ளும் உணர்வாளன்
            உலகிடமிருந்து வேறானவனாக
            இருக்க முடியுமா?
            உலகைத்தவிர்த்து விட்டும் உன்னை நீ
            புரிந்து கொள்ள முடியாது!
            உலகின் நீட்சியும் உயர் வளர்ச்சி நிலையும்
            நீ தானே!
            மனிதா நீ உலகைச் சார்ந்திருப்பதை விட
            பெரிதும் உலகம் தான் உன்னைச்
            சார்ந்திருக்கிறது!
            உன் வழியாக உலகம் அடைய வேண்டிய
            உய்விற்காக!
            உலகின்  உயர் வளர்ச்சி நிலையே நீ எனில்
            உனது வளர்ச்சியின் உச்சப்புள்ளியே
            உலகையும் உன்னையும் கடவுளையும்
            ஒன்றிணைக்கும் ஒப்பற்ற
            ஒருமையும் முழுமையுமான உண்மை!
                          ••

மா.கணேசன்/ நெய்வேலி/ 24-08-2017
-----------------------------------/----------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...