Tuesday, 15 May 2018

குழம்பிய அரசியல் குட்டையில் ....





✦முன்னொரு காலத்தில் "தமிழகம்" "தமிழ் நாடு" எனும் ஒரு நாடு இருந்தது!

தமிழ்நாடு என்பது ஒரு புறம்போக்கு இடப்பரப்பாகத்தான் பிற மாநிலத்தவர்
களும், பிறமொழிக்காரர்களும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்!

✦தமிழ் நாட்டில் திடீரென அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று
  சொல்லப்படுவது உண்மையா?

இதற்கு பதில், "ஆம்", "இல்லை" இரண்டும்தான்! ஆம், தமிழக அரசியலில்
உண்மையிலேயே வெற்றிடம் ஏற்பட்டுள்ளது! ஆனால், அது இன்று, நேற்று
ஏற்பட்டதல்ல, மாறாக, அந்த வெற்றிடம், ஐம்பது, அறுபது ஆண்டுகாலமாக 
உண்மையான ஒரு மக்கள் நேசருக்காக, வாழ்க்கையை உள்ளும் புறமும்
அறிந்த உண்மையான அரசியல் ஞானமுள்ள ஒரு அசலான மனிதருக்காகக்
காத்திருக்கிறது!

"வந்தாரை வாழ்விக்கும் தமிழகம்" என்பது ஒரு வஞ்சப்புகழ்ச்சியணியே தவிர
மற்றபடி, தமிழர்கள் என்றால் ஏமாளிகள், இளிச்சவாயன்கள், தங்களுக்குள்
ஒற்றுமையில்லாதவர்கள் என்பதை பிற மாநிலத்தவர்கள் அனைவரும் நன்கு
அறிவர்!

தமிழர்களின் குருட்டு விசுவாசத்திற்கு எல்லைகளே கிடையாது! எவராவது
இங்கு வந்து நாமெல்லாம் 'திராவிடர்கள்' என்று சொன்னால் உடனே அவர்
பின்னால் அணி திரண்டுவிடுவர்! இன்னொருவர் வந்து, நாம் எல்லோரும்
'இந்துக்கள்' என்று சொன்னால் உடனே அவர் பின்னே சென்று விடுவர்!
வேறொருவர் வந்து "பிற்போக்கு திராவிடர் முன்னேற்றக்கழகம்" என்று
புதிதாக ஒரு கட்சியை அறிவித்தால் போதும் உடனே அக்கட்சியில் சேர்ந்து
கொள்வர்! ஆனால், நாமெல்லோரும் தமிழர்கள் என்று சொன்னால் உடனே
அவர்கள் ஏதோ தகாத சொல்லைச் சொல்லிவிட்டதுபோல மிரண்டு போவர்!

✦தமிழர்களிலிருந்து தலைமைப்பண்பு கொண்ட தரமான அரசியல்தலைவர்கள்
  ஏன் உருவாகிடவில்லை!

தமிழர்கள் என்றால் 'செம்மறியாட்டுக்கூட்டம்" என்பதே அதன் பொருள்! அவர்
கள், வழிநடத்தக்கூடியவர்களாக அல்லாமல் எளிய வாழ்க்கைத் தேவைகளால்
வழிநடத்தப்படக்கூடிய எளியவர்களாக வாழ்ந்து வந்த உழைப்பாளிகள்! சேர,
சோழ, பாண்டிய அரசர்கள் காலத்திற்குப்பிறகு, குடியரசு இந்தியாவில், தமிழர்
களை விட பிற மொழிகளைச் சேர்ந்தவர்களே அரசியலில் தலைவர்களாகத்
தம்மை முன்னிறுத்திக்கொண்டு வந்துள்ளனர்! இன்றளவும் தமிழ் நாட்டு
அரசியலில் பிரவேசம் செய்யும் புதியவர்களில், குறிப்பாக தமிழினமல்லாத
பிற மொழியினத்தவர் எவரும் தலைவராகத்தான் தம்மை முன்னிறுத்த
முனைகிறாரே தவிர; அதாவது, ஆட்சியதிகாரத்தை பிடிக்கவே விரும்புகிறாரே
தவிர மக்களுக்கு உண்மையாக சேவை செய்யவேண்டுமென்ற சீரிய நோக்கத்
தினால் அல்ல!

இத்தகைய பலருக்கு 'அரசியல்' என்றாலே, அது, "ஆட்சியதிகாரம்" என்பதாகவே
காதில் ஒலிக்கிறது! ஏதோ ஆட்சியதிகாரம் இருந்தால் மக்கள் நலன்களனைத்
தையும் பூர்த்தி செய்துவிட்டுத்தான் ஓயப் போவதைப்போல முழங்குகின்றனர்
தற்போது புதிதாக அரசியலுக்கு வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும்!

✦தமிழர்களை ஒருங்கிணைப்பது சாத்தியமா?

தமிழர்கள் இயல்பாகவே அகந்தையற்றவர்கள்; இதன் அர்த்தம் ஏதோ அவர்கள்
எல்லோரும் ஞானிகள், உயர்பேரறிவாளர்கள் என்பது அல்ல; மாறாக, சமீப
காலங்களில் தான் அவர்களுக்கு 'அகந்தை' துளிர்க்கத் தொடங்கியுள்ளது!
ஆகவே அவர்களால் யாதொரு கருத்தொற்றுமை யையும் எட்டவியலாது!
மிகவும், அடிப்படையான, யாவருக்கும் நலமளிக்கும் ஒரு பொதுவான முன்
வைப்பை, முடிவை, கருத்தாம்சத்தைச் சொன்னாலும், அதை உடனே
ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயத்தையும், கருத்தையும் சொல்லி எதிர்க்
கவும், மறுக்கவும் செய்வர்! எவ்வாறு அகந்தை துளிர்க்காத காலங்களில்
தமிழர்களை அடிமைப்படுத்துவது எளிதாக அமைந்ததோ, அவ்வாறே தற்போது
அகந்தை துளிர்த்தபிறகு அவர்கள் கருத்தொற்றுமை கொள்ளவியலாமல் பிரிந்து
நிற்கும் நிலையில் அவர்களை ஆள்வது எளிது!

தமிழனின் பிரச்சினை இதுதான், அதாவது தமிழன் என்பவன் தனது மொழியி
லிருந்து வேறானவனாக இல்லை; ஆகவே, அவனிடம் மொழிப்பற்றும்
இல்லை, மொழி வெறியும் இல்லை! ஆகவே, தமிழனை மொழிப்பற்று கொள்
ளச் செய்வது கடினம்! தமிழனைப்பொறுத்தவரை,

✦திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?

இக்கேள்வி ஒன்றும் 'பில்லியன் டாலர்' கேள்வியல்ல, என்றாலும், அரசியல்
என்பது பெரிதாக முதலீடு ஏதும் இன்றி பல கோடிகளைச் சுருட்டுவதற்கும்,
வருமானத்திற்கு மேலாகச் சொத்து சேர்ப்பதற்கும் மிகச்சுலபமானதொரு வழி
யாகும்! நடிகர்களைப் பொறுத்தவரை, "அரசியல்வாதி" அல்லது, "அரசியல்
தலைவர்" என்பது ஒருவகைக் "குணச்சித்திர வேடம்" தானே தவிர வேறல்ல!
மேலும் நம் மக்களுக்கு 'அரசியல்' என்பதும் 'சினிமா' என்பதும் ஒன்றுதான்!
இரண்டு இடங்களிலும் அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக, பார்வையாளர்
களாக மட்டுமே இருக்கப்போகிறார்கள்! ஒரு திரைப்படத்தை காசு கொடுத்து
சீட்டு வாங்கி இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் மட்டும் பார்க்கப்படு
கிறது! ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆட்சி எனும் அரசியல்
நாடகத்தை, (பணத்தை வாங்கிக்கொண்டு) வாக்குச் சீட்டை அளித்து தேர்ந்
தெடுத்த பிறகு ஐந்து வருடங்கள், என்ன நடந்தாலும்; இன்பமோ, துன்பமோ,
செயல்பாடற்றதோ, கொடுங்கோலோ, சகித்துக்கொண்டு வேடிக்கைபார்ப்பதைத்
தவிர மக்களால் ஒன்றுமே செய்யவியலாது!

'சினிமா' நடிகர்களைப்பொறுத்தவரையில், குறிப்பாக, திரைப்படங்களில் கதா
நாயகர்களாகவே நடித்துப் புகழும், பிரபல்யமும் பெற்றவர்களால், அரசியலில்
மக்களுக்குச் சேவை செய்பவர்களில் ஒருவராக இருக்க முடியாது; மாறாக,
அரசியலிலும் அவர்கள் கதா நாயகர்களாகத்தான், அதாவது தலைவர்களாக
மட்டுமே திகழ விரும்புவர்!

அடுத்து, எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது ஜனநாயகத்
தின் சாபக்கேடு ஆகும்! இங்கும் எங்கும் சரி, அரசியல்கட்சிகள் என்பவை
வியாபார நிறுவனங்களைப்போலவே ஸ்தாபிக்கப்பட்டு தமது வியாபாரத்தை

நடத்திக்கொண்டிருக்கின்றன! ஆகவே ஏற்கனவே ஸ்தாபிதமான பெரிய கட்சி
களே தொடரலாம் என்பது இன்னும் கேடானது! அரசியல் என்பது எவருக்கும்

குடும்பத்தொழிலாகவோ, நிரந்தரத்தொழிலாகவோ இருக்கமுடியாது; அது ஜன
நாயக விரோதமானது!

அடுத்து, புதிதாக அரசியலில் நுழைபவர்களை, அவர்கள் 'சினிமா' நடிகர்களா
யினும், வேறு எவராயினும் எல்லோருமே வரவேற்பதாகச் சொல்லுவார்கள்;
சிலர், குறிப்பாக, ஏற்கனவே ஸ்தாபிதமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
மறைமுகமாக எதிர்க்கவும், கடுமையாக விமர்சிக்கவும் செய்வார்கள்! இதற்குக்
காரணம் அவர்களுடைய வியாபாரத்திற்குப் போட்டியாக முளைத்தெழுபவர்கள்
பெரும் அச்சுறுத்தலாக அமைவது தான்! ஏனெனில், புதிதாக அரசியலுக்கு
வருபவர்கள் ஓட்டுக்களைப்பிரித்து தேர்தலை பலமுனைப்போட்டியாக மாற்றி
விடுவார்கள்! இது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்குமே ஆபத்தானதாகும்!
அதே வேளையில், இந்த இரண்டு கட்சிகளுமே மீண்டும் மீண்டும் மாறி மாறி
ஆட்சிக்கு வருவதென்பது மக்களுக்கு பேராபத்தானதாகும்! ஜனநாயகத்தையும்,
மக்களையும் காப்பாற்றவேண்டுமானால், எவ்வொரு அரசியல்கட்சியும் நிரந்தர
அமைப்பாக நீடிப்பதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!

✦கமலின் அரசியல் : கமலுடைய அரசியலில், நடிகரும் அவரே, இயக்குனரும்
அவரே! அவருடைய அரசியல் முறையை ஒருவகை "தொழில் நுட்ப முறை"
(Technocracy) எனலாம்! எவ்வாறு ஒரு திரைப்படம் எடுப்பதற்கு பல்வேறு
தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்களோ, அவ்வாறே, அவருடைய
அரசியலும் பல்துறை நிபுணர்கள், வல்லுநர்கள், அறிஞர்கள் ஆகியோரின்
ஆலோசனைகளைக் கேட்டு நிகழ்த்தப்படும் ஒன்றாக இருக்கும் எனக்கொள்ள
லாம்! இவ்வழியே அவர் மக்களுக்கான சில பல நலத்திட்டங்களை நிறை
வேற்றக்கூடும்! ஆயினும், சிறப்பான நிர்வாகம் என்பதே நல்லாட்சியாகிடாது!

எவ்வொரு அரசியல் தலைவரின் அல்லது அவரது கட்சியின் கொள்கை கோட்
பாடுகளையும், வாக்குறுதிகளையும் வைத்து அவரது ஆட்சியின் தன்மையை
கணித்திட முடியாது! ஏனெனில், நேர்முகமாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்
படும் 'காரிய நிரல் பட்டியல்'  (Agenda) ஒன்றாகவும், மறைமுகமான காரிய
நிரல் பட்டியல் வேறொன்றாகவும் இருக்கும் என்பது தவிர்க்கவியலாததாகும்!
ஏனெனில், அரசியல் மேடையைப் பொறுத்தவரையில், மேடையில் தோன்றும்
கதா பாத்திரங்களான, முதலமைச்சர், மற்றும் பிற அமைச்சர்களைக் கொண்டு
மட்டும் ஆட்சி நடைபெறுவதில்லை! மாறாக, அம்மேடைக்குப் பின் புலத்தில்
இருந்துகொண்டு மேடையிலுள்ள கதா பாத்திரங்களை இயக்கும் ஆதிக்க
சக்திகளையும் (பெருமுதலாளிகள், பெரும்பணக்காரர்கள், அதிகாரவர்க்கத்
தினர் ஆகியோரையும்) கணக்கில் கொள்ளவேண்டும்!

ஆகவே, ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆட்சி செயல்படாததாயுள்ளது, ஊழல்
மலிந்ததாக உள்ளது, வரிச்சுமை, விலைவாசி ஏற்றம் ஆகியவற்றால் மக்கள்
அல்லல் படுகிறார்கள் என்பதால் அக்குறிப்பிட்ட கட்சியையும், அதன் தலை
வரையும் மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்க முடியாது! ஒரு நாட்டில்
நல்லாட்சி நடக்கவேண்டுமென்றால், ஆட்சியாளர்கள், ஆதிக்கச் சக்திகள்,
மற்றும் மேட்டுக்குடிகளின் (Elites)அச்சுறுத்தல்களிடமிருந்து தொற்றுத்
தடுப்புச்சக்தி (Immunity) பெற்றிருக்கவேண்டும்! அதாவது, ஆதிக்கச் சக்தி
களின் தலையீட்டையும், குறுக்கீட்டையும் முற்றாகத் தவிர்க்கும் விதத்தில்
நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிப்பவர்களாயிருத்தல் வேண்டும்!

ஏனெனில், அரசியல் என்பது எல்லாக்காலங்களிலும், மக்களின் நலன்களும்
மக்கள்-விரோத ஆதிக்க சக்திகளின் நலன்களும் மோதிக்கொள்ளும் ஒரு
களமாகத்தான் இருந்து வந்துள்ளது! அதில் மக்கள் நலன்கள் என்பவை
எப்போதும் பேரம்பேசப்பட்டு தியாகம் செய்யப்பட்டுவிடும்!

அதே நேரத்தில், ஒரு நாட்டை, அல்லது, ஒரு மாநிலத்தை எந்தக்கட்சி
ஆண்டாலும், ஆளும் தலைவர், அல்லது, முதல்வர் என்பவர்  மூடராகவே
இருந்தாலும்கூட, அல்லது ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும்கூட, மக்களின்
குறைந்த பட்ச நலன்கள் என்பவை, அதாவது அரை வயிற்று உணவுடன்
உயிர்-பிழைத்திருக்கும் அளவிற்கு எப்போதும் அருளப்படும்! ஏனெனில், ஆட்சி
யாளர்களைப் பொறுத்தவரை, மக்கள் என்போர் உயிர்-பிழைத்திருப்
பதற்காக உழைத்துத் தேயும் எந்திரங்கள், மேலும், 1 சதவிகித ஆதிக்கசக்திகள்,
மேட்டுக்குடிகளின் நலன்களானவை எப்போதும் 99 சதவிகித உழைக்கும்
மக்களின் உழைப்பையும், உற்பத்தியையுமே சார்ந்திருக்கின்றன!

தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரண்டு திராவிடக்கட்சிகளும் மாறி
மாறி ஆண்டு மக்களை அலைக்கழித்து வந்துள்ளன! "இந்த இரு திராவிடக்
கட்சிகளின் பிடிகளிலிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும்!" எனும்
தமிழருவி மணியன் அவர்களின் ஆவேசக்கூற்றில் நியாயம் இல்லாமல்
இல்லை! அதேநேரத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக அவசரஅவசரமாக
அவர் சிபாரிசு செய்யும், இன்னும் தன் கட்சியைக்கூடத் தொடங்காத நடிகர்
ரஜினியின் மீது அவர் வைக்கும் நம்பிக்கை அவரது அரசியல் பார்வையின்
ஆழத்தை, முதிர்ச்சியை கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது! அதாவது, ரஜினி
தனது அரசியல்பிரவேசத்தை அறிவித்த உடனேயே எடுக்கப்பட்ட ஒரு செய்தி
ஊடகத்தின் கருத்துக்கணிப்பு, ரஜினி 21% வாக்குகளைப் பெறுவார் என்று
சொல்லியது! திரு தமிழருவி மணியனும், ரஜினி 21% வாக்குகளைப் பெறுவார்
என்று கணிக்கிறார்! ஆனால், "தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெறுவது
எப்படி எனத்தெரிந்த எவரும் நாட்டை சிறப்பாக ஆளத்தெரிந்தவரே என்பதாக
எப்படி நாம் நம்புகிறோம்?" என 2400 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க தத்துவ
ஞானி பிளேட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்!

கமல் தனது அரசியல் நகர்வை மிக நுட்பமாகத் திட்டமிட்டுச் செய்கிறார்.
அவர் சாதாரண மக்களின் நலன்களைப்பற்றி அக்கறையுடன் பேசுகிறார்!
அவருடைய "கிராமம்", "விவசாயம்", "விவசாயி" ஆகியவற்றை மையப்படுத்திப்
பேசும் "கிராம-மைய அரசியல்", சரியான தொடக்கப்புள்ளியாகத் தெரிகிறது!

அதே நேரத்தில், கமலின் 'இந்தியன்' எனும் தேசியச் சார்பைவிட 'தமிழன்'
எனும் தமிழ்தேசியச் சார்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது! "தமிழன் என்பது
ஒரு விலாசம் (அடையாளம்) தானே தவிர அது ஒரு தகுதி அல்ல!" எனும்
கமல்ஹாசனின் கூற்றில் ஜனநாயகம் இருக்கிற அளவிற்கு காலம் கடந்து
முளைத்தெழும் தேவையான மாநில சுயாட்சிக்கான தடயம் சிறிதும் இல்லை!
ஆனால், அவர் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஓட்டு
வேட்டைக்காக தன்னை ஒரு தமிழன் எனக்காட்டிக்கொள்ளத் தயங்கவில்லை!

புதிதாக அரசியலில் இறங்கும் இரு பெரும் நடிகர்களான கமலும், ரஜினியும்
தங்களது திரைப்பட பிம்பத்தையும், பிரபல்யத்தையும் பிரதான முதலீடாகப்
பயன்படுத்திக்கொள்வர் என்பதில் சந்தேகமில்லை! தங்களது ரசிகர் படையை
அவர்கள் தொண்டர்படையாகக் கொண்டு சில சதவிகித ஓட்டுக்களைப் பெறு
வர் என்பதும் நிச்சயம்! இப்போதே அவ்விருவரும் ஒரு 'அரசியல்வாதி' க்கே,
குறிப்பாக, ஒரு அரசியல் தலைவருக்கே உரிய பாவனையை, சொல்லாடலை
பிரயோகிக்கத் தொடங்கிவிட்டனர்!

எனினும் இருவருக்குமே 'அரசியல்வாதி' எனும் வேடம் இன்னும் சரிவரப்
பொருந்தி வருவதாகத் தெரியவில்லை! ஆனால், ஊடகங்கள் இருவரையும்
அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும், நகர்வையும் பெரிதாகக்காட்டியும்,
பேசியும் வருகின்றன! ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைமை
ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தை இருவரில் எவர் நிரப்புவார், அடுத்து
வரும் தேர்தலில் இவர்களில் எவர் வெற்றி பெறுவார்? அல்லது எதிர்க்கட்சி
வெற்றி பெறுமா, அல்லது தற்போதைய ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியைப்
பிடிக்குமா? இக்கேள்விகளுக்கான விடைகள் 'மக்களின் தீர்ப்பு' எனும் தெளி
வில்லா மனங்களின் தேர்வில் அடங்கியுள்ளன! இவ்வகையில், ஜனநாயகம்
என்பது குருடர்களுக்காக, குருடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குருடர்களால்
நடத்தப்படும் ஆட்சியேயாகும்!

✦வாக்காளர்களின் அரசியலும் உளவியலும்!

ஆம், வாக்காளர்களாகிய மக்களும் அரசியல்வாதிகளைப்போல ஆகிவிடுவது
தேர்தல் காலத்தில் நிகழ்கிறது! வாக்குச்சீட்டை உடனடிப்பலனைப் பெறுவதற்
கான ஒரு வாய்ப்புச்சீட்டாக வாக்காளர்கள் கருதுவதாகத் தெரிகிறது! 

உண்மையில் வாக்காளர்களின் உளவியலைப் புரிந்துகொள்வது என்பது மிக
மிகக் கடினமானது! மக்கள் இன்னமும் தங்களது ஜனநாயக உரிமைகளையும்,
கடமைகளையும் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள் என்பதுதான் புலனாகிறது!
மக்கள் இன்னும் தங்களுக்கான அரசியலை அறியாமல், அரசியல்வாதிகளின்
அரசியலையே பேசிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் உள்ளனர்!
மக்களின் அரசியல் பங்கேற்பு என்பது ஓட்டுப்போடுவதுடன் முடிந்துவிடுகிறது!
அதாவது, எங்கு தொடங்க வேண்டுமோ அங்கேயே முடிந்து போகிறது! இது
அரசியல் வாதிகளுக்குச் சாதகமாகி விடுகிறது! கேட்டால், "மக்கள் தீர்ப்பு",
"மக்களின் முடிவு" என்று அரசியல்வாதிகள் பசப்புகிறார்கள்! இன்னும் நாம்
எவ்வளவு காலத்திற்கு  "பெரிய தீமை" க்குப் பதிலாக, "சிறிய தீமை" யை
தேர்ந்தெடுத்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்!

தமிழ் நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆண்டுவந்த இரு
பெரும் திராவிடக்கட்சிகளைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் தேர்தலில்
அவையிரண்டும் மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கான நியாயத்தை
யும், அடிப்படையையும் இழந்து நிற்கின்றன! தமிழ் நாட்டின் நகரங்களாயினும்,
கிராமங்களாயினும், சாலை, குடிநீர், வடிகால் ஆகிய அடிப்படைக் கட்டமைப்
புகள் சரியாக இல்லை! இங்கே பொறியியல் கல்லூரிகள் பெருகிய அளவிற்கு
தொழிற்சாலைகள் பெருகவில்லை! இதன் விளைவு ஆண்டு தோறும் லட்சக்
கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பின்றி

அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்! எங்கள் ஆட்சியில் நாங்கள் இதைச் செய்
தோம், அதைச்செய்தோம் என்று மாறி மாறி சாதனைப்பட்டியல் வாசிக்கும்
இரு திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்
களுடன் ஒப்பிட்டால், ஒரு சராசரி சாமான்ய மனிதனிடம் சொத்து என்று
சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமேயில்லை எனும் அவல நிலைதான் தொடர்
கதையாகத் தொடர்கிறது! தமிழக அரசாங்கம் பல லட்சம் கோடிகள் கடனில்
தத்தளிக்கிறது; ஆனால் தமிழக அமைச்சர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகளாக
விளங்குகிறார்கள் எனும் மாபெரும் முரண்பாடு மிக எளிதாக மறைக்கப்படு
கிறது, மறக்கப்படுகிறது!

மா.கணேசன்/ 12-02-2018
----------------------------------------------------------------------------

Sunday, 6 May 2018

சரியான பாடல் தவறான தாளம்!





வானக, வையகத்திற்குத்
தங்கள் கருணை சொந்தமில்லை.
அவற்றுக்கு
அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

ஞானிக்கும்
தன் கருணை சொந்தமில்லை.
அவனுக்கு
மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்திற்கு இடைப்பட்ட வெளி
கொல்லர் துருத்தி மாதிரி இருக்கிறது.
காலியாகத் தோன்றினாலும் அந்த வெளியில்
இல்லாதது ஒன்றும் இல்லை.
இயக்கப்பட்டால் அது
இன்னும்கூட நிறைய உருவாக்கும்.

அதிகம் பேசுகிற மனிதன்
விரைவில் அயர்ந்து போகிறான்.

அவன்
தன்னிடம் இருப்பதைத்
தன்னிடமே வைத்துக்கொல்வது நல்லது.

                2500 ஆண்டுகளுக்கு முன்பு சீன ஞானி லாவோ ட்சு
                எழுதிய 'தாவோ தேஜிங்' நூலிலிருந்து தமிழில் சி.மணி.
                            •••

இக்கட்டுரை, தமிழ் இந்து நாளிதழ்-ன் வார இதழான காமதேனு (15-04-2018)
வில் கட்டுரையாளர் திரு ஆசை(த்தம்பி) அவர்கள் எழுதி வெளியான, "தாவோ
புதிய பாதை" என்கிற தலைப்பின் கீழ் இடம்பெற்ற கட்டுரையில் காணப்படும்
சில முக்கியமான கருத்தாம்சங்களின் மீதான சில பார்வைகளை முன்வைக்கும்
முகமாக எழுதப்பட்டதாகும்.

   "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மிகவும் விசேடமானவர்கள் என்று கருதிக்
   கொள்கிறோம். "பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான்
   நாம்" என்று கார்ல் சேகன் கூறியதைப்போல்தான் நாமும் நினைத்துக்
   கொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் அர்த்தத்தைக்கண்டுபிடிக்கிறோம்,   
   கொடுக்கிறோம்...."   (ஆசை)

மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிகள், "இப்பிரபஞ்சத்தில் மனிதனின் இடம்
எத்தகையது?" அதாவது, "இப்பிரபஞ்சத்தில் மனிதன் விசேடமானவனா அல்லது,
முக்கியத்துவம் ஏதுமற்றவனா? எனும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்
கான ஒரு பதிலை அல்லது விளக்கத்தை சீன ஞானி  லாவோ ட்சு அவர்களின்
ஒரு பாடலை முன்னிறுத்தி அளிக்க முயற்சிக்கிறது எனலாம்.

   "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மிகவும் விசேடமானவர்கள் என்று கருதிக்
   கொள்கிறோம்."      (ஆசை)

ஆசைத் தம்பியின் இக்கூற்று மனிதர்கள் தங்களை மிகவும் விசேடமானவர்கள்
என்று கருதிக்கொள்வதை எள்ளி நகையாடுகிறது! பொதுவாக மனித ஜீவிகள்
ஒவ்வொருவரும், தாம் முக்கியமானவர், விசேடமானவர், தனித்தன்மையானவர்
என்று கருதிக்கொள்ளும் உள்ளீடற்ற ஒரு மனப்போக்கு உள்ளது என்பதை நாம்
குறிப்பிட்டேயாக வேண்டும்! அகந்தை, தன்முனைப்பு, தன்னலம், ஆணவம்,
உள்ளீடற்ற சுய-முக்கியத்துவம் போன்றவை அந்த மனப்போக்கின் வெளிப்பாடு
களே! அதே நேரத்தில், மனித ஜீவிகள் ஒவ்வொருவரும் தம்மை முக்கியமான
வர், விசேடமானவர், என்று கருதிக்கொள்வது என்பது வெகு இயல்பானதொரு
எண்ணமே தவிர, அது எவ்வகையிலும் அடாத, முறையற்ற, பொருத்தமற்ற,
சாத்தியமற்ற நிலைப்பாடு அல்ல! அதிலுள்ள ஒரே பிரச்சினை என்னவெனில்,
அவ்வாறு தன்னுள் எழும் எண்ணத்தை இறுதிவரைப் பற்றிச் சென்று இப்
பிரபஞ்சத்தில் தனது உண்மையான முக்கியத்துவத்தை, விசேட தன்மையை
உணர்ந்தறியாமலேயே இருக்கிறோம் என்பதேயாகும்!

அடுத்து, "பிரபஞ்சம் தன்னை அறிந்துகொள்வதற்கான கருவிதான் நாம்" என்று
கார்ல் சேகன் கூறியதாகச் சொல்லப்படுவதைக் கேட்பதற்கே இனிமையாகவும்,
மனதிற்கு இதமாகவும் இருக்கிறது. ஏனெனில், கார்ல் சேகன் (Carl Edward
Sagan, 1934-1996), ஒரு வானவியல் விஞ்ஞானியான அவர் மனிதஜீவி
களாகிய நம்மையும் பிரபஞ்சத்தையும் இணைத்து இவ்வாறான ஒரு கருத்தைச்
சொல்வது என்பது கொண்டாடப்படவேண்டியதொரு விடயம் ஆகும்! ஏனெனில்
இது வெறும் ஒரு கருத்து அல்ல, இது ஒரு ஆழமான உண்மையாகும்! அதே
நேரத்தில், அவர் அறியாத, கண்டு சொல்லாத உண்மைகள் அநேகம்!

கார்ல் சேகன் சொல்லிய அந்த முழு வாசகம் இதோ : "நாம் நட்சத்திரப் பொரு
ளால் ஆனவர்கள். பிரபஞ்சம் தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி நாம்"
இக்கூற்று மிக ஆழமான அர்த்தங்களைக் கொண்டதாகும்; அதை வெறுமனே
ஒரு மேலோட்டமான வாசிப்பின் மூலம் புரிந்துகொண்டுவிட இயலாது! மேலும்,
நூற்றுக்கணக்கான வானவியல், பிரபஞ்சவியல் சம்பந்தமான நூல்களைப்
படித்துத் திரட்டப்பட்ட பெரும் தரவுகளைக் கொண்டும் புரிந்துகொள்ளமுடியாது!

அதாவது, "பிரபஞ்சமானது தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி அல்லது
கருவியே நாம்" என்பதன் அர்த்தம் என்ன? மேலும், பிரபஞ்சம் தன்னை அறிந்து
கொள்வதற்கான வெறும் கருவி மட்டும் அல்ல நாம். அதாவது, மனிதனை
பிரபஞ்சத்தின் ஒரு கருவியாகச் சுருக்கிவிடலாகாது; இவ்வாறு பொருள்
கொள்வது தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றுவிடும். ஏனெனில், பிரபஞ்சம்
வெறும் ஒரு எந்திரம் போன்றதல்ல, நாம் அதன் ஒரு பாகம் மட்டுமே அல்ல!

"பிரபஞ்சம் தன்னைத் தானே அறிவதற்கான ஒரு வழி நாம்" எனும் இக்கூற்றை,
வாசகத்தை கீழ்க்காணும் வகையில் நாம் விரித்துக் காண வேண்டும்!

• பிரபஞ்சத்திற்கு தன்னைத் தானே அறிந்துகொள்ள வேண்டிய அவசியம்
  அல்லது கட்டாய விழைவு உள்ளது.

• அதே நேரத்தில், பௌதீகச் சடப்பொருளால் ஆன, உயிரற்ற, உணர்வற்ற
   பிரபஞ்சம் எவ்வாறு தன்னைத் தானே அறிந்துகொள்ள இயலும்? என்ற
   கேள்வியையும் அவ்வாசகம் உள்ளடக்கியுள்ளது.

• இக்கேள்விக்கான பதிலாக, பிரபஞ்சமானது தன்னை அறிந்துகொள்வதற்காக
   மனிதனை ஒரு வழியாகக் கொள்கிறது, அல்லது கருவியாகப் பயன்படுத்து
   கிறது என்பதையும் அவ்வாசகமே சொல்லுகிறது!

• அப்படியானால், பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு, உறவு
   எத்தகையது? அதாவது, மனிதன் இப்பிரபஞ்சத்திற்குள் எவ்வாறு எங்கிருந்து
   வந்து சேர்ந்தான்?

• மனிதன் இப்பிரபஞ்சத்திற்கு வெளியே எங்கிருந்தும் கொண்டுவரப்பட்டவன்
  அல்ல! மாறாக, இப்பிரபஞ்சமானது தன்னை அறிவதற்குரிய பொருத்தமான
  அம்சங்களைப் பெறும் வகையில் பரிணாமத்தின் வாயிலாக தன்னிலிருந்தே
  வெளிக்கொண்டுவரப்பட்டவனே மனிதன்! 

• இதன் அர்த்தம் பிரபஞ்சமும் மனிதனும் வேறு வேறு அல்ல! அதாவது,
   பிரபஞ்சத்தின் ஒரு விசேடமான நிலைமாற்றமே மனிதன்!

• அதே நேரத்தில், தன்னை அறிவதற்காக (பரிணாமத்தின் வழியாக) பிரபஞ்சம்
   மனிதனாக மாறியது என்பதுடன் பிரபஞ்சத்தின் தன்னை அறியும் நோக்கம்
   முழுமையாக நிறைவேறிவிடுவதில்லை!

• ஏனென்றால், பிரபஞ்சத்தை அறிய மனிதன் வந்தான்; ஆனால் மனிதனை
   அறிய யார், அல்லது எது வரும்?

• உண்மையில் பிரபஞ்சம் தன்னை அறிவதும், மனிதன் தன்னை அறிவதும்,
   இவ்விரண்டுமே ஒன்றுதான்! ஆயின், மனிதன் தன்னை அறியாதவரை
   தன்னை அறியும் பிரபஞ்சத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறுவது
   இல்லை!

• ஆக, இவ்வாறு நாம் விரித்துக்கொண்டே போகலாம் -- முடிவேயில்லாமல்
   அல்ல -- மாறாக, முடிவான முழுமையான பதிலை, புரிதலை அடையும்
   வரை!

சரி, இனி நாம் ஆசைத்தம்பி அவர்களின் பிற கருத்தாம்சங்களையும் சேர்த்துக்
கொண்டு நம்முடைய புரிதலில் முன்னேறிச்செல்வோமாக.

   "கடவுளை நம் உருவத்தில் படைத்திருப்பதுபோல் பிரபஞ்சத்தையும் நம்
   உருவத்தில் படைக்கும் செயல்தான் இது. ஆனால், பிரபஞ்சம் நாம்
   கொடுக்கும் அர்த்தமாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை.
   அது வெறுமனே இருக்கிறது!     (ஆசை)

உண்மையில், கடவுளை நம் உருவத்தில் நாம் படைக்கவில்லை; மாறாக,
கடவுள் (அனைத்துக்கும் மூலமாகிய மெய்ம்மை) தான் நம் உருவத்தில்
வெளிப்பட்டிருக்கிறார். அடுத்து, இப்பிரபஞ்சத்தையும் நாம் நம் உருவத்தில்
படைக்க முயற்சிக்கவில்லை; மாறாக, பிரபஞ்சம் தான் நம் உருவத்தை
எடுத்திருக்கிறது! ஏனெனில், மனிதன் என்பவன் உண்மையில், பிரபஞ்சத்தின்
நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையுமே தவிர வேறல்ல! மேலும், ஒருவகையில்,
திரு. ஆசை அவர்கள் சொல்வது போல, "பிரபஞ்சம் நாம் கொடுக்கும் அர்த்த
மாகவோ, நாம் அர்த்தம் கொடுப்பதற்காகவோ இல்லை." என்பது உண்மையே!
எவ்வாறெனில், நாம்தான், அதாவது பிரபஞ்சத்தின் உள்ள்ளார்ந்த விழைவைப்
புரிந்து நிறைவேற்றும் உணர்வார்ந்த ஒவ்வொரு மனிதனும்தான், பிரபஞ்சத்
தின் அர்த்தமாக மலர்கிறோம்; மலர வேண்டும்! இறுதியாக, "இப்பிரபஞ்சம்
வெறுமனே இருக்கிறது" என்பது ஒரு தோற்றப்பிழையே தவிர அது உண்மை
யல்ல!

ஆம், இப்பிரபஞ்சம் வெறுமனே நம்மிடமிருந்து தொடர்பற்று தனித்திருக்க
வில்லை! அது சும்மா வெறுமனே இருப்பதாகத்தோற்றம் தருவதற்குக்காரணம்
நாம் அதன் நீட்சியாக, அதன் கண்களாக, செவிகளாக, இதயமாக வெளிப்பட்
டிருக்கிறோம் என்பதாலேயே யாகும்! நாம் இப்பிரபஞ்சத்தின் உயர்-வளர்ச்சி
நிலையாக வெளிப்பட்ட பிறகு, பிரபஞ்சமானது நம்முடைய பகுதியாக மாறி
விடுகிறது! ஆகவே, இனி செயல்பட வேண்டியவர்கள் மனித ஜீவிகளாகிய
நாம் ஒவ்வொருவரும் தானே தவிர பிரபஞ்சம் அல்ல; ஏனெனில் நாம்தான்
இப்பிரபஞ்ச இயக்கத்தின் அம்புத்தலை! ......

   "பிரபஞ்சத்தின் மீதும் இயற்கையின் மீதும் நம் உணர்வுகளை ஏற்றிவிடு
   கிறோம். மழையின் கருணை, மழையின் கோபம், இயற்கையின் சீற்றம்
   என்றெல்லாம் கூறுகிறோம். ....

   உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது.
   அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ ஏதும்
   கிடையாது. ....
   இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும்
   ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும்
   ஒன்றுதான். .... "     (ஆசை)

ஆம், முதல் கோணல் முற்றும் கோணல் என்பதால், இக்கட்டுரையில் நாம்
அந்த முதல் கோணலை சரி செய்திடும் பட்சத்தில், அதைத் தொடர்ந்து
அமைந்திடும் அடுத்தடுத்த கோணல்களும் சரி செய்யப்பட்டுவிடுவது சர்வ
நிச்சயம்!

உண்மையில், "பிரபஞ்சத்தின் மீதும் இயற்கையின் மீதும் நம் உணர்வுகளை"
நாம் ஏற்றிவிடுவதில்லை; மாறாக, பிரபஞ்சம் தான் அனைத்து வித உணர்வு
களையும் தன் மீது ஏற்றிக்கொள்கிறது! இல்லாவிடில் பிரபஞ்சம் என்பது
உயிரற்ற, உணர்ச்சியற்ற, உணர்வற்ற வெறும் பௌதீகச் சடப்பொருளின்
எந்திர இயக்கமாக மட்டுமே தொடர்ந்துகொண்டிருக்கும் -- எதையும், எதுவும்
அறிய, ஆராய, உணர நாதியற்ற நிலையில்!

முக்கியமாக, பிரபஞ்சம் என்பதும், அதிலுள்ள ஒவ்வொரு அணுத்துகளும், புழு
பூச்சியும், புல்லும் பூண்டும், விலங்கும், மனிதனும் இப்பிரபஞ்சத்திலிருந்து
வேறானதல்ல! ஒவ்வொன்றும் பிற ஒவ்வொன்றுடனும் ஓர் மாபெரும்
வலைப்பின்னலில் இணைந்துள்ளதால், மழையின் கருணை, கோபம், சீற்றம்
யாவும் பொருத்தப்பாடுடையவையே! இப்பிரபஞ்சத்தில் எதுவும் இடம் தவறி
யதாய் இருக்கவில்லை! புல், பூண்டுகளாகிய பிரபஞ்சத்திற்கு மழையாகிய
பிரபஞ்சம் உயிர் போன்றதாகும், ஆகவே மழை எனும் கருணை மிக அவசிய
மாகும்! புல்லை மேய்ந்து வாழும் கால்நடைகளாகிய பிரபஞ்சத்திற்கு மழை
யாகிய பிரபஞ்சம் அமிர்தமாகும்; கால்நடைகளைச் சார்ந்து வாழும் மனிதர்
களாகிய பிரபஞ்சத்திற்கு மழையாகிய பிரபஞ்சம் இன்றியமையாததாகும்!

அடுத்து, "உண்மையில், இயற்கை அதன் போக்கில் இருக்கிறது, இயங்குகிறது.
அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ ஏதும் கிடையாது..."
என்பதும் சரியானதல்ல! ஏனெனில், இயற்கையானது மனிதனுடனும், பிறவற்
றுடனும் யாதொரு தொடர்புமற்ற வகையில் தன் போக்கில் இருக்கவில்லை,
இயங்கவில்லை! உண்மையில் இயற்கைக்கு ஒரு போக்கு, வழிமுறை இருக்
கத்தான் செய்கிறது; அந்த வழிமுறைக்குப் பெயர் "பரிணாமம்" என்பதாகும்!
அவ்வழிமுறையின் மூலமாகத்தான் பிரபஞ்சமானது அண்டத்து பொருள்
களாகவும், பல்வேறு விசித்திர நிகழ்வுகளாகவும், உயிர்-ஜீவிகளாகவும், உணர்
வுள்ள, சிந்திக்கின்ற மனித ஜீவிகளாகவும்.... யாவுமாகியது!

பிரபஞ்சமானது உயிர்-ஜீவிகளாக, அவற்றிலும் குறிப்பாக, மனித ஜீவிகளாக
எழும்வரை மட்டுமே அதற்குக் காதலோ, கருணையோ, கோபமோ வருத்தமோ
ஏதும் கிடையாது என்று சொல்லலாம். ஒரு கட்டத்தில் உயிர்-ஜீவிகளின்
நிலையை எட்டிய பிறகு, அவ்வுணர்வுகள் இல்லாமல் உயிரினங்கள் வாழ
வியலாது!

அடுத்து, "இயற்கையைப் பொறுத்தவரை ஞானியும் ஒன்றுதான் அஞ்ஞானியும்
ஒன்றுதான். புலியும் மானும் ஒன்றுதான். சூரியனும் மின்மினியும் ஒன்றுதான்."
என்ற கூற்று முற்றிலும் தவறானது; ஏனெனில், இக்கூற்று பரிணாமத்தின்
அடிப்படை அம்சம் அல்லது வளர்ச்சி எனும் விதியையே மறுக்கிறது! வேண்டு
மானால், ஞானியும் இயற்கைதான், அஞ்ஞானியும் இயற்கைதான் என்று ஒரு
பார்வையில் கொள்ளலாமே தவிர, ஞானியும், அஞ்ஞானியும் ஒன்றுதான்
என்று சொல்வதற்கு இடமில்லை! அவ்வாறே புலியும் மானும் ஒன்றுதான்
என்று சொல்வதற்கும் இடமில்லை!

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை, ஞானி, அல்லது ஞான நிலையே அதன்
ஒப்பற்ற இலக்காக இருக்கிறது என்று கொள்ளலாம். சீன ஞானி லாவோ ட்சு
அவர்களும் இதைத்தான் சொல்கிறார்! - இப்போது, நாம் ஞானி லாவோ ட்சு -
வின் பாடலுக்கு வருவோம். லாவோ ட்சு சொல்கிறார் :

   வானக, வையகத்திற்குத்
   தங்கள் கருணை சொந்தமில்லை.
   அவற்றுக்கு
   அனைத்தும் வைக்கோல் நாய்தான்.

   ஞானிக்கும்
   தன் கருணை சொந்தமில்லை.
   அவனுக்கு
   மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.

வானக, வையகத்தை, அதாவது இயற்கை, அல்லது பிரபஞ்சத்தைப் பொறுத்த
வரை அனைத்தும் வைக்கோல் நாய்தான் என்கிறார்! அடுத்து, ஞானியைப்
பொறுத்தவரையில் மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான் என்கிறார்!
இப்பாடலில் லாவோ ட்சு அவர்கள் பிரபஞ்சத்தையும், ஞானியையும் சமநிலை
யில் வைக்கிறார்! எனினும், பிரபஞ்சத்திற்கும் சரி, ஞானிக்கும் சரி தத்தம்
கருணை சொந்தமில்லை என்று சொல்வதன் வழியே, கருணை, அன்பு
என்பதை அவர் ஞானியையும், பிரபஞ்சத்தையும் கடந்த ஒப்பற்ற இறுதியான,
கடப்பு நிலை மெய்ம்மை எனச் சுட்டுகிறார்! ஆம், அன்பு, அல்லது, கருணை
என்பதுதான் இப்பிரபஞ்சத்தின் மூலப்பண்பு, அல்லது சாரமான மெய்ம்மை
ஆகும்! அதை நாம் ஒருமையும் முழுமையுமானதொரு பேருணர்வு எனலாம்!

அடுத்து, ஆசைத்தம்பி அவர்களின் கட்டுரையில், நம் உடலின் அணுக்கள்
பற்றிய ஒரு குறிப்பு ஒன்று வருகிறது :

   மரணத்துக்குப் பிறகு நம் உடல் அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப்
   பிரிந்து மறுசுழற்சியடைகின்றன. ஷேக்ஸ்பியர் உடலில் இருந்த அணுக்
   களில் சுமார் நூறு கோடி அணுக்களாவது, இயற்கையின் மறுசுழற்சி
   முறையில் நம் ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக்கூடும்
   என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். ஷேக்ஸ்பியரின் உடல்
   என்பதால் இயற்கை அதற்குத் தனிமதிப்புக் கொடுத்துப் பத்திரப்படுத்தி
   வைக்கவில்லை. அவர் உடலின் அணுக்களும் ஆதியில் ஏதாவதொரு   
   விண்மீன் வெடிப்பிலிருந்து வந்துசேர்ந்தவைதான். மரணம் நம்மை
   மட்டுமல்ல, ஷேக்ஸ்பியர்களையும், விண்மீன்களையும் கூட
   மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் பொருட்கள்போல் ஆக்கிவிடுகிறது..."
             (ஆசை) 

திரு.ஆசை அவர்கள் ஞானி லாவோ ட்சு அவர்களின் ஒரு பாடலுக்கு
விளக்கம் தருவதற்காக இறங்கி இயற்கை, பிரபஞ்சம் பற்றியும், இவற்றிற்கும்
மனிதனுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து
கொள்ளும் ஆர்வத்தில், லாவோ ட்சு பாடலுக்கு சம்பந்தம் இல்லா பல கருத்து
களையும் போகிற போக்கில் அடுக்கிச் சென்று விடுகிறார். அவை கிட்டத்தட்ட
பொருண்மை வாதப் பார்வையில் அமைந்தவையாக, ஆகவே, தவறானவை
யாக உள்ளன. அதாவது, மனித உடலின் அணுக்களும், மனிதனும் ஒன்று
என்பது போல் திரு.ஆசை அவர்கள் கூறியுள்ளது தவறானது, பொருத்தமற்றது
ஆகும். இப்பிரபஞ்சத்திலுள்ள அணுக்கள் யாவும் ஒரே மாதிரியானவை, பொது
வானவை! அதாவது, வீடு கட்டுவதற்கான அடிப்படைக்கட்டுமானப் பொருளான
செங்கற்கள் போன்றவையே அணுத்துகள்கள் எனலாம்! ஆக, ஒரு வீட்டின்
செங்கற்களைப் பிரித்தெடுத்து வேறொரு வீடு கட்டுவதற்குப் பயன் படுத்திக்
கொள்ள இயலும் என்பதைப் போல 'ஷேக்ஸ்பியரின் மரணத்துக்குப் பிறகு
அவரது உடலின் அணுக்கள் இயற்கையின் மறுசுழற்சி முறையில் நம்
ஒவ்வொருவர் உடலிலும் வந்து சேர்ந்திருக்கக்கூடும்' என அறிவியலாளர்கள்
நம்பலாம்; ஆனால், இச்சிறு விடயம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல!
ஏனெனில், ஷேக்ஸ்பியரின் உடலணுக்கள் அவருடைய உடலின் அணுக்கள்
மட்டுமே தவிர அவை ஷேக்ஸ்பியர் அல்ல!

ஆக, "மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல, உடலின் அணுக்களும் அல்ல
என்றால், பின் எது தான் மனிதன்?" என்று வாசகர்கள் கேட்கலாம்! ஆனால்,
அதி முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குள்
கேட்டு அதற்கான பதிலை அடைவதில் தான் மனித வாழ்வின் அர்த்தம்,
முழுமை, சாகாநிலை யாவும் அடங்கியுள்ளன!

  "நான் யார் தெரியுமா?" என்று ஒருவன் அடுத்தவரிடம் கேட்பதில்
  அர்த்தமில்லை; அவன் வெறும் வைக்கோல் நாய்தான்!
  மாறாக, "தான் உண்மையில் யார்?" என்று தன்னிடமே
  கேட்பவனே தன்னைக் கண்டடைபவனாகிறான்!

மா.கணேசன் • 01-05-2018
----------------------------------------------------------------------------

Friday, 27 April 2018

தமிழ்த்தேசியத்தின் அவசியம்





    தமிழ் என்றொரு மொழி இருந்தது,
    இன்றும் இருக்கிறது, அது என்றென்றும் இருக்கும்;
    அவ்வாறே தமிழினமும்!

மொழி என்பது பண்பாட்டின் கருவூலம்
------------------------------
மொழி என்பது வெறும் கருத்து, செய்தி அல்லது தகவல் பரிமாற்றத்துக்கான
கருவி மட்டுமல்ல. அது ஒரு மொழியைப் பேசுகின்ற, தாய்மொழியாகக்
கொண்ட மொழியினத்தின் தொன்மம், இலக்கியம், சமயம், தத்துவம்
(மெய்யியல்), பண்பாடு ஆகியவற்றின் கருவூலம் ஆகும்!

ஆகவே, ஒரு மொழியினத்தின் மீதான இன்னொரு மொழியின் திணிப்பு,
ஆக்கிரமிப்பு என்பது  மொழிகளுக்கிடையேயான வெறும் போட்டியோ,
சச்சரவோ அல்ல. மாறாக, அது பண்பாட்டின் மீதான போர் எனவும்,
இன அழிப்புக்கான முற்றுகை எனவும் காணப்படவேண்டும்! ஒரு மொழியின்
மீதான தாக்குதல் என்பது அம்மொழியினத்தின் மீது தொடுக்கப்படும் போர்
ஆகும்!

தமிழ் மொழி, அதன் இலக்கணம், தொன்மம், இலக்கியம், சமயம், தத்துவம்
(மெய்யியல்), பண்பாடு என்று  எல்லாவற்றிலுமே சமஸ்கிருதத்திலிருந்து
வேறுபட்டது. மேலும், அது சமஸ்கிருதத்தைவிட, சமஸ்கிருத கலாச்சாரத்தை
விட சீரியது. ஆகவே, தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் சமஸ்கிருதம்
அழிக்க முயல்கிறது! அதை நேரடியாக அல்லாமல், "ஒரே மொழி, ஒரே மதம்,
ஒரே நாடு' என்ற கோஷத்தின் வழியாகச் செயல்படுத்த எத்தனிக்கிறது. ஆகவே,
தமிழும், தமிழினமும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படவேண்டும் எனும் சீரிய
அக்கறையில்தான் தமிழ்த் தேசியத்தின் அவசியம் எழுகிறது.

மொழி என்பது அம்மொழியினத்தின் உயிர்
--------------------------------
சிலர், "தமிழ்த் தேசியம் என்பது மக்களைச் சாதி, மதங்களுக்கு அப்பால்
ஒன்றிணைக்கும் தேசியமாக அமையுமா? அல்லது, மக்களைச் சாதி, மத
அடிப்படையில் கூறு போடும் தமிழ்ப் பாசிசமாக அமையுமா?" என்று சந்தேகக்
கேள்வி எழுப்புகிறார்கள். இவர்களுடைய அச்சம் அடிப்படையற்றது. ஏனெனில்,
ஏற்கனவே நெடுங்காலமாக மக்கள் இங்கு சாதி, மத அடிப்படையில் கூறு
போடப் பட்டிருக்கிறார்கள்; புதிதாக தமிழ்த்தேசியம் வந்துதான் அதைச் செய்ய
வேண்டியதில்லை; மேலும், தமிழ் மொழி, அல்லது தமிழ்ப் பண்பாடு அவ்வாறு
மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடுவதற்கான சாய்வைக்
கொண்டிருக்கிறதா? அதாவது, தமிழ்மொழி தான் சாதி, மதக் கட்டமைப்புகளை
உருவாக்கியதா? இக்கேள்விகளையெல்லாம் கேட்காமல் தமிழ்த் தேசியத்தை

எதிர்ப்பது என்பது அபத்தமானதாகும்!

மேலும், தமிழரின் உண்மையான சமயம் எது என்பது எவரும் அறியாத ஒன்று;
ஆகவே அதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்! தமிழர் சமயத்தின் அடிப்படை
யான கொள்கைகளை திருமூலரின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனும்
மகா வாக்கியத்திலும்; கணியன் பூங்குன்றன் என்ற மெய்யியல் மேதையின்,
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் மகா வாக்கியத்திலும் நாம் கண்டடை
யலாம்! திருமூலர் கூறியது போன்ற கொள்கை விளக்கத்தை, உலகில்
வேறெங்கும் காணவியலாது.


தமிழரின் உலகளாவிய மாந்த நேயத்தை விளக்கும் பூங்குன்றனாரின் வரிகள்,
உலக சமயங்கள் கூறும் எல்லாக்கொள்கைகளையும் உள்ளடக்கிய வித்தாகும்.
தமிழர் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்பதற்கு,
பூங்குன்றனும், திருமூலரும் அளித்துள்ளனவைகளே விடைகளாகும். ஆக,
தமிழினம் அதனளவில் சாதி மதச் சழக்குகளால் துண்டாடப்பட்ட இனம் அல்ல

என்று துணிந்து கூறலாம்!

மேலும், ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட, அரை நூற்றாண்டுகாலம் வரலாறு
படைத்த சமூக நீதி இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், 'தேசியங்கள்'
மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடுவதைத் தடுத்தனவா, சமூக
நீதியை நிறுவிற்றா, இல்லையெனில், ஏன் அவை தோற்றுப் போயின என்ற
கேள்வியை தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் கேட்கத் தவறினர்
என்பதற்கும் அவர்கள்தான் பதில் கண்டுபிடித்தாக வேண்டும்!

மேலும், "சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?" என்று சிலர்
கேட்கிறார்கள்! சாதியைப் போலவே, இன்னொரு முக்கிய பிரச்சினை பரந்து
விரியும் வறுமை! வறுமை, ஏழ்மையையும் ஏற்கனவே கோலோச்சி வந்த
'தேசியம்' ஏன் தீர்க்கவில்லை என்ற கேள்வியை யார் எவரிடம்

போய்க்கேட்பது?

அடுத்து, எப்போதெல்லாம் தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ
அப்போதெல்லாம் தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு
காலகட்டங்களில் நடந்துவந்திருக்கிறது.  தற்போது, காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டங்களின் 

தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்து வருகின்றன. உரிமைகள்
குறித்த இந்த விடயத்திலும் ஏற்கனவே ஆண்ட கட்சிகள், 'தேசியங்கள்'
தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதில் ஏன் தோற்றுப்போயின? அல்லது,
எக்காரணங்களுக்காக அவற்றை இழக்கும்வகையிலான சமரசங்களுக்கு
உடன்பட்டன? இவ்வாறு எவ்வொரு விடயத்திலும் ஏற்கனவே வரலாறு
படைத்த கட்சிகள், 'தேசியங்கள்' படுதோல்வியடைந்து போயின என்பதால்
அவை தொடர்ந்து நீடிப்பதில் யாதொரு அர்த்தமும், நியாயமும் இல்லை!

ஆக, காவிரி நீர் உள்பட தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும்
பொருட்டும்; தமிழகத்தின் வாழ்வாதாரங்களை, வளங்களைப் பாதுகாக்கும்
பொருட்டும் தமிழ்த் தேசியத்தின் அவசியம் முன்னெப்போதையும்விட தற்போது 
மிக அவசரமான தேவையாக உணரப்படுகிறது.

மேலும், தமிழர்களின் ஒற்றுமையில்லாத மொழிப்பற்றில்லாத (மொழிப்பற்று
என்பது மெய்ம்மை நாட்டம், மெய்யியல் தேட்டம் ஆகிய விழைவினால்
ஏற்படுவது) தன்மையினால் திறந்த விசால மனம் கொண்டிருந்தபோதிலும்
பிறரால் ஏய்க்கப்பட்டு மேய்க்கப்பட்டு அடிமையாக்கப்பட்டிருக்கும் நிலையி
லிருந்து மீள்வதற்கும்; தாம் இழந்த பண்பாட்டுப் பெருமைகளை மீட்டெடுப்
பதற்கும், தமது மெய்யியல் பொக்கிஷங்களை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கும்
தமிழ்த்தேசியம் தற்போது மிகமிக அவசியமாகிறது!

மொழி என்பது அன்றாட உயிர்-வாழ்க்கைக்கான ஒரு கருவி மாத்திரமல்ல!
அதுவே ஆன்மீக உயர்-வாழ்க்கைக்கான கருவியும் ஆகும்! ஒருவர் தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டிருப்பதனால் மட்டுமே தமிழராகிவிடுவதல்ல;
ஏனெனில், அர்த்தமில்லாத மொழி என்று எதுவும் இருக்கவியலாது!

அவ்வாறிருக்க முடியுமெனில், அர்த்தமறியப்படாத வாழ்வின் கருவியாக
மட்டுமே அம்மொழி பிழைத்திருக்கும்! ஆக, வாழ்வின் உயர் அர்த்தத்
தளங்களை எட்டுவதற்கான ஊடகமாக மொழியானது கொள்ளப்படவேண்டும்!
அதாவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவனும் பாமரத்

தமிழனாகத் தொடங்கி முடிவில் ஞானத்தமிழனாக முழுமையடைதல்
வேண்டும்!

ஆகவே, தமிழ்த் தேசியம் என்பது வெறும் சமூகப் பொருளாதார அரசியல்
கோட்பாடோ, சித்தாந்தமோ மட்டுமேயல்ல! இவ்வகையில், தமிழ்த் தேசியம்
என்பது தனித்தன்மையானது மட்டுமல்ல, வரலாற்றில் அதைத்தவிர அதற்கு
யாதொரு முன்னுதாரணமும் கிடையாது! தமிழினத்தின் உயர் வளர்ச்சியில்,
முதிர்ச்சியில் அமைக்கப்படுவதே உண்மை தமிழ்த் தேசியம்; அதற்குக்
குறைவான எதுவும் வெறும் ஒத்திகை முயற்சிகளே!

            “எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
                 அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”

மா.கணேசன் • 28-04-2018
----------------------------------------------------------------------------

Thursday, 22 March 2018

கடவுள் பிஞ்சுகள்!





மனிதன் எதன் மீது அதீத ஆர்வமும், தீவிர பற்றும் கொள்கிறானோ அதுவே அவனது மதம் ஆகிறது,

அது கிரிக்கெட், மது, காதல், பணம், சொத்து, கடவுள் இருக்கிறார் என நம்புவது, கடவுள் இல்லை என மறுப்பது, ஒரு கொள்கை, கோட்பாடு.....என எதுவாயினும், அதுவே ஒருவனது மதம்!

ஆகவே ஒருவனது மதம் இன்னொருவனுக்கு வெறித்தனமாகவும்; ஒருவனது கடவுள் இன்னொருவனுக்கு சாத்தானாகவும் தெரிகிறது!

ஆனால், புதிரான இப்பிரபஞ்சத்தில், தன்னையும், வெறும் உயிர்-பிழைத்தலைத் தாண்டிய தனது வாழ்வையும் அர்த்தப்படுத்தும் வகையில் மனிதனுக்கு புதிரான வேறொன்று தேவைப்பட்டது!

அந்த வேறொன்றினைச் சுட்டும் குறியீடு தான் "கடவுள்" என்பது! புதிரான அந்த வேறொன்றின் தேவையை நேரடியாக தன் அகத்தே உணர்வது தான் உணர்வார்ந்த மதத்தின் முதல்படி!

அவ்வுணர்வை கடனாகக் கொடுக்கவோ, வாங்கவோ முடியாது; அதை ஒரு நிறுவனமாகவும் கட்டியெழுப்ப முடியாது! அவ்வுணர்வு ஒவ்வொருரிடமும் தாமே துளிர்த்திட வேண்டும்!

அவ்வுணர்வில் மேன்மேலும் உயர்ந்து அதன் உச்சியைத் தழுவிக்கொள்வதே இறுதிப்படியான கடவுள் அனுபவம்!

ஆகவே தான் தத்துவ விசாரத்தில் சிறந்து விளங்கிய அந்த அரசன் சொன்னான், "மூடர்களே, இது என்ன சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு! கடவுளைக் கேட்டால், இந்த பொம்மைகளைக் கொண்டுவருவதென்ன? உங்கள் தலைகளைக் கொய்வதற்குள் கொண்டு போய்விடுங்கள் அவற்றை
உடனே; போய் இனியாவது சிந்திக்கத் தொடங்குங்கள்!" என்றான்.

ஏனெனில், கடவுள் என்பது அன்றாடத் தேவைகளுக்கு உதவும் தட்டுமுட்டுச் சாமான்களைப் போன்றதல்ல! அது அன்றாட வாழ்வைக்கடந்த உயர்-வாழ்க்கைக்கான அகத்தேவை யாகும்!

ஆக, நேரடி அனுபவத்தைத்தராத எவ்வொரு பொருளும், குறியீடும், நம்பிக்கையும், பக்தியும், ஈடுபாடும், சடங்கு, சாத்திரங்கள்..... யாவும் வெறும் தட்டுமுட்டுச் சாமான்களே தவிர வேறல்ல! புதிரான அந்த
மெய்ம்மையைக் குறிக்கும் எதுவொன்றும் இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் கிடையாது!

ஆயிரம் சிலைகளை, பொம்மைகளைச் செய்து கோயில்களில் பிரதிஷ்டை செய்யலாம்; ஆனால், ஒவ்வொருவரும் தம் அகத்தின் உச்சியில் கண்டடையும் கடவுளைப் போல் எதுவும் ஆகாது!

மேலும், ஒருவனது பசிக்கு இன்னொருவன் உண்ணமுடியாது! ஆகவே, எல்லோருக்கும் பொதுவான கடவுள் என்று எதுவும் இல்லை! உணர்ந்தறிபவனுக்கு மட்டுமே கடவுள் உண்டு! அறியப்படாத கடவுள்
இல்லாத நிஜம்!

ஒட்டுமொத்த விருட்சத்திற்கும் ஒரு விதை மூலமானது என்பதென்னவோ உண்மைதான்! ஆனால், அவ்விருட்சத்தின் எல்லாக் காய்களுக்கும் பொதுவான ஒரு வித்து எங்கேயுமில்லை! ஏனெனில், அவ்வித்துதானே தற்போது விருட்சமாக எழுந்துள்ளது! ஆம், ஒவ்வொரு காய்க்குமான வித்து
அதனுள்ளேயேதான் உள்ளது! ஆம், ஒவ்வொரு காயும் நன்றாக முற்றிக் கனியாகும் போது, தானும், மூலமும் ஒன்றாகிவிட்டிருப்பதை அறிந்துகொள்ளும்!

ஆக, உலகில் எத்தனை கோடி தனிமனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி மதங்கள் தேவை!
ஏனெனில், அத்தனை கோடி தனிமனிதர்களும் அத்தனை கோடி கடவுள்களாக கனிய வேண்டிய கடவுள் பிஞ்சுகள், காய்கள்!

மா.கணேசன் • 22-03-2018
............................................................................

Monday, 19 March 2018

நியூட்ரினோ திட்டம் (ஆர்வக்கோளாறின் விஞ்ஞானம்!)




[சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் ஆபத்தானது!]


          "பூமிக்கோளத்தின் மீது நம்மால் முறையாக
          வாழ இயலாத போது சந்திரனில் மனிதனை
          இறக்குவதனால் என்ன பயன்?"
                            --  அந்தோனி டி மெல்லோ

இக்கட்டுரை விஞ்ஞானத்திற்கு எதிரானதல்ல; மாறாக, தவறான விஞ்ஞானத்
திற்கு எதிரானது. இன்னும், முதிர்ச்சி பெறாத, எந்திரத்தனமான, தட்டையான,
மேலோட்டமான அணுகுமுறைகளில் சிக்குண்ட விஞ்ஞானத்திற்கு எதிரானது.

இக்கடுரையின் பிரதான முக்கியச் செய்தி என்னவெனில், தேனி மாவட்டத்தில்
இந்திய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளவிருக்கும் பெருஞ்செலவு பிடிக்கும்
"நியூட்ரினோ" ஆய்வுத்திட்டம் பயனற்றது, தேவையில்லாதது. அதாவது,
மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கி 'விஞ்ஞான ஆராய்ச்சி" என்ற பெயரில்
விஞ்ஞானிகள் தங்களது கோளாறான ஆர்வத்தை (Curiosity) திருப்தி
செய்து கொள்ளும் ஒரு (வீண்) முயற்சியே தவிர வேறில்லை என்பதே!

இக்கட்டுரையின் இரண்டாவது முக்கியச் செய்தி என்னவெனில், அணுவின்
கருவைப் பிளந்து "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ் போஸான் (Higgs-
Boson) துகளைக் (அதாவது பருப்பொருளின் ஆகச் சிறிய பகுதியான அணுத்
துகளின் உள்ளடக்கமாக இருக்கும் இருநூற்றுக்கும் மேற்பட்ட அணுக் கருத்
துகள்களில் ஒன்றிற்குப்பெயர் தான் 'ஹிக்ஸ் போஸான்' என்பது) கண்டுபிடித்
ததன் வழியாகவும், அல்லது "பிசாசுத் துகள்" என்றழைக்கப்படும் நியூட்ரினோ
துகளை சிறைப்படுத்தி ஆராய்ச்சி செய்வதன் வழியாகவும், அல்லது, கோட்பாடு
ரீதியாக அனுமானிக்கப்பட்ட வேறொரு துகளைக் கண்டுபிடித்து ஆராய்வதன்
வழியாகவும், அல்லது, செவ்வாய்க் கிரகத்திற்கோ, வியாழன் கிரகத்திற்கோ,
அல்லது அதையும் தாண்டி புளூட்டோ கிரகத்திற்கோ 'கியூரியாசிட்டி' போன்ற
விண்கலங்களையோ அல்லது மனிதர்களையோ அனுப்பி ஆராய்வதன்
வழியாகவும், அல்லது அண்ட வெளியிலுள்ள கணக்கற்ற நட்சத்திரங்களையும்,
கேலக்ஸிகளையும் துல்லியமாக எண்ணிக் கணக்கிடுவதன் வழியாகவும்;
அல்லது, பல்ஸார், குவாஸார், கருந்துளை (Black Holes)போன்ற விநோ
தமான அண்டவெளிப்பொருட்களையும், நிகழ்வுகளையும் ஆராய்ந்தறிவதன்
வழியாகவும், ஒருபோதும் நாம் வாழும் இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவானது
என்ற ரகசியத்தைக் கண்டுபிடிக்கவோ, இப்பிரபஞ்சத்தை முறையாக, முழுமை
யாகப் புரிந்துகொள்ளவோ முடியாது என்பது தான்!

மூன்றாவது முக்கியச்செய்தி என்னவெனில், நவீனவிஞ்ஞானத்தின் உள்ளார்ந்த
குறைபாடுகளினால் இம்மாதிரியான மேலோட்டமான ஆராய்ச்சிகள் பிரபஞ்சம்
பற்றிய உருப்படியான புரிதலையோ, எவ்வாறு நாம் இப்பிரபஞ்சத்தில் வாழ்வது
என்பது பற்றியோ; மனித வாழ்வின் அர்த்தம், குறிக்கோள், மற்றும் இலக்கு
குறித்த புரிதலையோ அளித்திடாது என்பதுதான்!

ஆகவே, வெறும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமின்றி மேற்சொன்ன
தவறான விஞ்ஞான ஆராய்ச்சி அணுகுமுறைகளை பிரதானமாகக் கொண்டே 
நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், மற்றும் செவ்வாய்க்கிரக ஆய்வுத்திட்டம் . . . .
போன்றவற்றை ஊக்குவிப்பதும், அனுமதிப்பதும் கூடாது என்கிற வாதத்தை
இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும், பொறுப்புமிக்க, குறைபாடற்ற விஞ்ஞான தத்துவ ஆன்மீகப் பார்வை
யும் கொண்ட ஒவ்வொரு இந்திய/உலகப் பிரஜையும் இம்மாதிரியான ஆர்வக்
கோளாறான, தவறான விஞ்ஞான ஆராய்ச்சிகளை, திட்டங்களை எதிர்ப்பது
மிகவும் அவசியமாகும். அதே வேளையில், இக்கட்டுரை வெறும் எதிர்ப்புக்
குரல் அல்ல; மாறாக, உண்மையின் குரலாகும்.

                               ■ ■ ■

விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு எதிராக வழக்கமாக முன்வைக்கப்படும் ஒரு
வாதம் என்னவென்றால், "ஏற்கனவே நாட்டில் ஏராளமான பிரச்சினைகள்
இருக்கும்போது, அதிகச் செலவு பிடிக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் தேவை
தானா?" என்பதேயாகும். அதேவேளையில், ஒரு நாட்டில், எவ்வளவுதான் உள்
நாட்டுப் பிரச்சினைகளும், அயல் நாடுகளுடன் பிரச்சினைகளும் இருந்தாலும்
அவற்றையெல்லாம் கடந்து பிற விண்வெளி ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக்
கொண்டுதான் உள்ளன.

இதற்குக் காரணம், நம்மைச்சுற்றியுள்ள உலகை, பிரபஞ்சத்தை அறிந்துகொள்ள
வேண்டும் என்கிற மனிதனின் அடங்காப் பேரார்வம் தான் என்று சொல்லப்படு
கிறது.

நல்லது, மனித ஜீவிகளாகிய நாம் எத்தகைய அமைப்பினுள், உலகினுள்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் ஒரு முழுமையான மனித
வாழ்க்கையை வாழ முடியாது என்பது உண்மையே. இவ்வகையில், பிரபஞ்
சத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்கிற பேரார்வம் மதிக்கப்படவும், முக்கியத்
துவமும், முன்னுரிமையும் அளிக்கப்படவும் வேண்டும்.

ஆனால், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பேரார்வம் -- குறிப்பாக,
விண்வெளி, மற்றும் அணுக்கரு இயற்பியல் துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சி
யாளர்களின் ஆர்வமானது, சற்று விநோதமானதாகவும், சில வேளைகளில்,
விபரீதமானதாகவும் உள்ளதென்பது அவ்விஞ்ஞானிகளின் விஞ்ஞான அணுகு
முறையையும், பார்வையையும் சந்தேகிக்கச் செய்கிறது. இவர்களுடைய
ஆராய்ச்சி வழிமுறைகளும், அவற்றிற்குரிய ஆய்வுக்கூடங்களும், பூதாகரமான
எந்திரங்களும், கருவிகளும்; அவற்றை உருவாக்குவதற்காகச் செலவழிக்கப்
படுகின்ற பெருந்தொகையும், மனித சக்தியும், நேரமும், உழைப்பும்; சில
வேளைகளில், இவர்களுடைய பரிசோதனைகள் வெற்றிகரமான முடிவுகளை
தந்திடும் போது -- உதாரணத்திற்கு, அணுகுண்டு போன்ற பேரழிவை விளை
விக்கக் கூடிய ஆயுதங் களையும்; சில வேளைகளில், இவர்களுடைய
பரிசோதனைகள் தவறாகிப் போய்விடும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பேராபத்துக்
களையும் கருத்தில் கொள்வோமெனில், கண்களை மூடிக்கொண்டு, அறிவு,
வளர்ச்சி, முன்னேற்றம், விஞ்ஞான சாதனை என்கிற பெயர்களில் எல்லாவித
விஞ்ஞான ஆராய்ச்சி களையும் ஊக்குவிக்கவும் அனுமதிக்கவும் முடியாது,
கூடாது!

உண்மையில், பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் தவறேதுமில்லை!
மாறாக, எந்த திசையில் மனிதன் தன் ஆர்வத்தைச் செலுத்துகிறான்; எந்த
திசையில் அவனது ஆராய்ச்சிகள் செல்கின்றன, அதற்கான வழிமுறைகள்,
(உள்) நோக்கங்கள் யாவை என்பதில்தான் கோளாறுகள் உள்ளன.

மேலும், உலகை, பிரபஞ்சத்தை முழுமையாக அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள
மிகவும் சிக்கலான, பெருஞ்செலவு பிடிக்கும் ஆராய்ச்சி வழிமுறைகளின்
வழியேதான் செல்லவேண்டும் என்பதில்லை.

மாபெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யாதொரு புகழ்பெற்ற
பல்கலைக்கழகத்திலும் பயின்றவரல்ல, அவர் தனது மாபெரும் கண்டுபிடிப்
புக்களை யாதொரு பெரிய ஆய்வுக்கூடத்திலும் நிகழ்த்திடவில்லை. தெளிவாக,
தீர்க்கமாகச் சிந்திக்கும் அவரது மனம்தான் ஆய்வுக்கூடம். காகிதமும்,
பென்சிலும்தான் அவரது கருவியும், உபகரணமும். இவற்றைக்கொண்டு தன்
கூரிய மதியால் காகிதத்தில் அவர் எழுதிய எவ்வித பயங்கர தோற்றத்தையும்
கொண்டிராத "E=mc2"(அதாவது, சக்தியானது பொருள்/நிறையாகவும்;
பொருளானது சக்தியாக மாற்றப்படக்கூடியது; சக்தியும், பொருளும் சமம்)
எனும் சமன்பாடானது, அன்றைய இரண்டாம் உலகப் போர் அரசியல் சூழ்நிலை
களுக்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க விஞ்ஞானிகளின் முயற்சிகளால்
பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுகுண்டாக அவதாரம் எடுத்தது என்பது
ஒருவகையில் விதிவசமானதுதான்.

ஆக, அணுவையும் அணுவின் விரிவாக்கமான அண்டத்தையும் அதாவது
பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ள மிகவும் சிக்கலான வழிமுறைகளும், பெரிய
ஆய்வுக்கூடங்களும், பிரும்மாண்டமான எந்திரங்களும், கருவிகளும் தேவை
யில்லை. ஏனெனில், பூரணமானதொரு விஞ்ஞான அணுகுமுறை என்பது
மிகவும் நேரடியானதும், எளிமையானதும், செலவற்றதும் ஆகும்.

சமீபத்தில், 2012 ஜூலை, 4-ம் தேதி, "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ்
போஸான் துகளை கண்டுபிடித்துவிட்டதாக சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய
அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரால், 50 ஆண்டுகளுக்கு முன்னர் பலவித

அணுக்கருத்துகள்களுக்கும் நிறையை (Mass)அளிக்கும் விதமாக ஒரு அடிப்
படைத்துகள் இருக்கவேண்டும் என முன்மொழியப்பட்ட அந்தத் துகளைத்தான்
தற்போது தங்களது ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்
ளனர்.

பல லட்சம் கோடிகள் செலவில் உருவாக்கப்பட்ட விசேடமான எந்திரங்களை
யும், கருவிகளையும் கொண்டு பல நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான
விஞ்ஞானிகளின் சீரிய முயற்சிகளின் விளைவாக கிட்டத்தட்ட "ஹிக்ஸ்
போஸான்" போன்றதொரு துகளை கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சரி, "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ் போஸான் துகளைக் கண்டுபிடித்தாகி
விட்டது! அடுத்தது என்ன?

பெரும்பாலான இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இத்துகளைக் கண்டு
பிடித்தது என்பது ஒரு சாதனை தான், ஆனால், சற்று உற்சாகக் குறைவுடன்
அவர்கள் உணர்வது என்னவென்றால், இதில் புதிதாக ஒன்றும் இல்லை
என்பது தான். இக்கண்டுபிடிப்பின் விளைவாக அணுவைப்பற்றியோ, அல்லது
அண்டத்தைப்பற்றியோ யாதொரு புதிய புரிதலும், பார்வையும் வெளிப்பட
வில்லை. இவை பற்றி ஏற்கனவே நாம் புரிந்துகொண்டுள்ள நிலையிலேயே
தான் இருக்கிறோம் என்கிறார்கள்.

இந்த லட்சணத்தில், "கடவுள் துகள்" போய், "பிசாசுத் துகள்" என்றழைக்கப்படும்
நியூட்ரினோ துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தற்போது இந்திய
விஞ்ஞானிகள் குழு இறங்கவுள்ளது.

1930 - ல், அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்
களைத்தவிர வேறு சில துகள்களும் இருக்கக்கூடும் என்று உல்ஃப் கேங் பாலி
என்ற விஞ்ஞானி யூகித்தார். அதில் ஒரு துகளுக்கு அவர் வைத்த பெயர் தான்
"நியூட்ரினோ". பிறகு நெடிய ஆராய்ச்சிகளின் விளைவாக அணு உலையில்
நியூட்ரினோவைக் கண்டறிந்ததற்காக ரைனஸ், கோவான் ஆகிய விஞ்ஞானி
களுக்கு 1955-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அணுவுக்குள் மட்டுமல்லாமல், சூரியன், நட்சத்திரங்களில் இருந்தும் கோடாணு
கோடி நியூட்ரினோக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதாகவும்,
ஆனால், காஸ்மிக் கதிர்களோடு சேர்ந்துவரும் இத்துகளை தனியே பிடிப்பது
என்பது சாதாரண காரியமல்ல என்பதாகவும், ஆகவேதான் அத்துகளை "பிசாசுத்
துகள்" (The Ghost Particle)என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆக, எளிதில் அகப்படாத, எல்லாப் பொருட்களையும் எளிதில் ஊடுருவிச்
செல்கிற இந்த துகளை தனியே சிறைப்பிடித்து ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழ்
நாட்டில், தேனி மாவட்டம், பொட்டிபுரம் ஊராட்சி புதுக்கோட்டைக்கு அருகே
யுள்ள பொட்டிதட்டி மலையை இந்திய விஞ்ஞானிகள் தேர்வுசெய்து ஆரம்பக்
கட்ட வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த பொட்டிதட்டி மலையைக்
குடைந்து சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில், சுரங்கம் அமைத்து ஆய்வுக்
கூடத்தை நிறுவப் போகிறார்கள். அதற்காக இந்திய அரசாங்கம் ரூ.1356 கோடி
களை ஒதுக்கியுள்ளது.

இந்த நியூட்ரினோ ஆய்வு மூலம் சூரியனின் சூட்சுமத்தையும், பிரபஞ்சத்தின்
பிறப்பு ரகசியத்தையும் அறிந்துகொள்ளலாம் என்பது இந்த ஆய்வில் ஈடுபட்
டுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஏதோ பிரபஞ்சத்தின் சூட்சுமம்
நியூட்ரினோ துகளிலும், ஹிக்ஸ் போஸான் போன்ற துகள்களிலும் அடங்கி
யிருப்பதாகக் கருதுவது ஒரு விஞ்ஞானவகை மூட நம்பிக்கை தானே தவிர
முதிர்ச்சியடைந்த விஞ்ஞான அணுகுமுறையாக இருக்கவில்லை. ஏனென்றால்,
அணு என்றால் என்னவென்று அணுவைப் பிளந்து பார்த்து அறிந்துகொள்ள
முடியாது! அது தேவையற்ற வேலையும் கூட!

மேலும், பிரபஞ்சத்தில் தனியே ஒரு "அணு" என்பதாகவோ, எல்லாத் துகள்
களுக்கும் அடிப்படையான ஒரு ஒற்றைத்துகள் என்பதாகவோ ஏதுமில்லை!
அவ்வாறு ஒரு இறுதியான அடிப்படைத் துகளைத் தேடிச் சென்றால் முடிவே
யில்லாமல் நாம் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு புதிய துகளையும் பிளந்து கொண்டே

செல்லவேண்டியிருக்கும்.

ஆனால், இவ்வாறு முடிவேயில்லாமல் துகள்களைப் பிளந்து கொண்டே
செல்லமுடியாது. கொள்கைப்படி எதுவும் சாத்தியமே என்றாலும் நடைமுறை
யில் எல்லாமும் சாத்தியமாவதில்லை! அப்படியே முயன்றாலும் மேன்மேலும்
பெரிய பூதாகரமான எந்திரங்களும், கருவிகளும் தேவைப்படும். அதற்கு கோடி
கோடியாக மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்திட வேண்டும். அதோடு
அத்தகைய ஆராய்ச்சிகள் தறிகெட்டுப்போகுமெனில், மிகவும் விபரீதமான
விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். ஏனெனில், நாம் வெறுமனே துகள்
களோடு மட்டும் செயல்படவில்லை; மாறாக, அளப்பரிய ஆற்றல்களுடன்,
அல்லது சக்தியின் ஊற்றுக்கண்ணுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்
என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

ஏற்கனவே ஜெனிவாவில், பூமிக்கடியில் 27 கி.மீ. சுற்றளவில் அமைக்கப்பட்ட
வட்டவடிவ குகைப்பாதையில் தான் புரோட்டான் துகளை வேகமாகச் செலுத்தி,
இன்னொரு புரோட்டான் துகளுடன் மோதச் செய்து ஹிக்ஸ் போஸான்
துகளைக் கண்டுபிடித்தனர். அடுத்ததாக, 2025 -க்குள் 80 கி.மீ. சுற்றளவுள்ள
குகைப்பாதையை அதே இடத்தில் அமைத்து ஈர்ப்பு விசையின் புதிரை
விடுவிப்பதற்கான திட்டத்தை அவ்விஞ்ஞானிகள் தீட்டியுள்ளனர். ஆனால்,
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகாதிருந்தால் சரிதான்.

நாம் ஒரு பொருளை, உதாரணத்திற்கு, ஒரு பாறைத் துண்டை உடைத்துக்
கொண்டே சென்றால், சிறு சிறு கற்களையும், அடுத்து மிகச் சிறிய மணல்
போன்ற துகள்களையும், அதையும் உடைத்தால், அணு எனப்படும் நுண்ணிய
துகளையும் அடைவோம். அணுவையும் உடைத்தால் அதன் கருவினுள்ளே
புரோட்டான், நியூட்ரான் எனும் துகள்களும் வெளிப்படும். இவ்வாறு நாம்
உடைத்துக் கொண்டே செல்லலாம் என்பது கோட்பாட்டளவில் சாத்தியமே.

ஆனால், அணுவை உடைப்பது என்பது ஒரு பாறையை உடைப்பது போல
அவ்வளவு எளிதான காரியமல்ல. அதாவது, ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு
அடிப்படைத்துகளை வெளிக்கொண்டு வருவதற்கு புரோட்டான் துகள்களை
கிட்டத்தட்ட ஒளியின் வேகத்திற்கு ( வினாடிக்கு 300,000 கி.மீ.) செலுத்தி
எதிர்ப்புறமாக அதே வேகத்தில் செலுத்தப்பட்டு பாய்ந்துவரும் புரோட்டான்
துகள்களுடன் மோதச் செய்யும் போது அம்மோதலின் விளைவாக புரோட்டான்
துகளானது உடைந்து பல்வேறு வகைப்பட்ட நுண் துகள்களாகப் பிரிந்து சிதறும்.
அப்போது சூரியனின் மையப்பகுதியில் உள்ளதைப் போல லட்சம் மடங்கு
வெப்பம் உண்டாகும்.

இத்தகைய பரிசோதனைகளைச் செய்வதற்கு பல்லாயிரம் கோடிகளைச் செலவு
செய்து பூதாகரமான எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த ஆராய்ச்சிகளில்
ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை இத்தகைய பரிசோதனைகள்
பாதுகாப்பானவை என்பதாகவே சொல்கிறார்கள். ஆனால், சில விஞ்ஞானிகள்
இவை ஆபத்துகள் நிறைந்தவை என்கிறார்கள்.

அதே வேளையில், ஆபத்துகளும் பெருஞ்செலவுகளும் ஒருபுறமிருக்கட்டும்;
இந்த நவீன துகள்கள் பற்றிய கோட்பாடுகளும், ஆராய்ச்சிகளும் எவ்வகையில்
நமக்குப் பயன் படுகிறது என்பதைப்பார்க்கும் போது, " எந்த ஒரு குறிப்பிட்ட
காலத்திலும் ஒரு சில ஆயிரம் பேர்களுக்கு மேலாக துகள்கள் பற்றிய கோட்
பாட்டை முழுவதுமாகப் புரிந்து கொள்ளவும், செரித்துக்கொள்ளவும்
இயலாது. மேலும் இந்தக் கோட்பாடானது நம் காலத்தின் மகத்தான அறிவு
ஜீவிய சாதனைதான் என்றாலும் 40 ஆண்டுகளாக அதனால் விளைந்த நடை
முறைப்பயன்கள் என்பது மிகச் சொற்பமே" என்பதாகவும், "இது ஒரு மிக அதிகச்
செலவு பிடிக்கும் பொழுதுபோக்கு" என்பதாகவும் விஞ்ஞானி பிரையன்
எல்.ஸில்வர் தனது "Ascent of Science"(1998)நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஒரு இயற்பியல் விஞ்ஞானியைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தின்
ஆழமான ரகசியங்களை இத்துகள்கள் தான் தங்களகத்தே கொண்டிருக்கின்றன
என்பதாகச் சொல்லக்கூடும். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால்,
அன்றாட உலகின் இயக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு இத்துகள்கள் தேவை
யற்றவையாகும்" என்பதாகவும் விஞ்ஞானி பிரையன் எல்.ஸில்வர் கூறியுள்ளார்.

ஆனால், நாம் இன்னும் ஆழமாகச் சென்று காணும் போது, நமது (கட்டுரை
யாளரின்) புதிய பரிணாமப் பார்வையில், பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்து
கொள்வதற்கு துகள்களைப்பற்றிய ஆராய்ச்சிகள் உதவிடாது. என்பதோடல்
லாமல் அவை தேவையற்றவை எனவும் கூறிவிடலாம்.

ஏனென்றால், இதுவரை (கடவுள் துகள் உட்பட) கண்டுபிடிக்கப்பட்ட 400 வகை
அடிப்படைத்துகள்கள் யாவும் ஒரு வினாடியில் பத்து லட்சத்தில் ஒரு பகுதி
நேரம் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டவை. அதாவது, முழுமையாக ஒரு
வினாடிகூட நிலைத்திராத, அணுவின் கருவினுள்ளே அடங்கியிருக்கும்
இத்துகள்களை ஆராய்வது வேலையற்ற வேலையாகும்.

பிரபஞ்சவியல் விஞ்ஞானிகள் கூறியதைப்போல நமது பிரபஞ்சமானது 1500
கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு "பெரு வெடிப்பு" நிகழ்வில் இத் துகள்
களுடன் தொடங்கியிருக்கலாம். ஆனால், ஒரு சில விநாடிகள் அல்லது
நிமிடங்களிலேயே பிரபஞ்சமானது இந்த அடிப்படைத்துகள்களின் நிலையைக்
கடந்து சென்றுவிட்டது. அதாவது, நீடித்த நிலைப்புத்தன்மை கொண்ட மூலகங்
களின் (Elements) அணுக்களின் கருவினுள் அத்துகள்களை உள்ளடக்கி
அடுத்தடுத்த உயர் நிலைப் பொருட்களாக பிரபஞ்சமானது உருமாறிச் சென்று
விட்டதோடு பொருளின் தளத்திலேயே தங்கிவிடாமல் "உயிரியல் தளம்",
பிறகு "உணர்வியல் தளம்" என பரிணமித்து உணர்வின் (Consciousness)
உச்ச நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

பிரபஞ்சமானது அடிபப்டைத் துகள்களையும், பலவித மூலகங்களையும்,
நட்சத்திரங்களையும், மாபெரும் கேலக்ஸிகளையும், .... கொண்டிருந்தாலும்
அது பிரதானமாக இவைகளுடன் வினையாற்றுவதாக, சம்பந்தப்பட்டிருப்பதாக
இருக்கவில்லை. மாறாக, பிரபஞ்சமானது தொடர்ந்து முன்னேறி முன்னோக்கிச்
செல்லும் தனது பரிணாம நிகழ்வு முறையில் அவ்வப்போது வெளிப்படுகிற
அம்சங்களையே (Emerging Properties)பற்றிச் செல்வதாயுள்ளது.

அணுக்கள், மற்றும் அடிப்படைத்துகள்கள் பற்றிய ஒரு உண்மை என்னவெனில்,
இவை யாவும் பொருளின் உட்கூறுகளாக உள்ளமைந்த அம்சங்கள் என்பதுதான்.
மிக அரிதாக, நியூட்ரினோ போன்ற துகள்கள் மட்டுமே நட்சத்திரங்களின்
(சூரியன்களின்) வெப்பம் மிகுந்த மையப்பகுதியில் உருவாகி அண்டவெளியில்
தனித் துகள்களாக திரிந்துகொண்டுள்ளன.

அணு, என்றும், அடிப்படைத்துகள் என்றும் நாம் நுட்பரீதியாக (Technically)
பேசினாலும், அணு என்பது ஒரு தனிப்பொருள் அல்ல. அணுவும், அண்டமும்
பிரிக்கமுடியாதவை. ஒரு அணு என்பது உடனடியாக பிற அணுக்களுடனும்,
ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடனும், இன்னும் தொலைதூர வருங்காலத்தில்
அடையக்கூடிய அதனுடைய இறுதியான இலக்கு நிலையுடனும் பிணைக்கப்
பட்ட தாகும்.

அதாவது, ஒரு அணுவின் அல்லது அதன் உட்கூறான ஒரு அடிப்படைத்து
களின் அசலான பண்பு என்பது பரிணாம ரீதியாக, பரிணாம நிகழ்வுமுறையின்
முடிவில், முழுமையில் மட்டுமே வெளிப்படு வதாயுள்ளது. ஏனெனில், அணு
என்பது ஒரு பரிணமிக்கும் பொருளாகும். அணுவும் அண்டமும் வேறானதல்ல.
அணுவின் விரிவாக்கமே அண்டம் அதாவது பிரபஞ்சம் ஆகும். ஆக, அணுவின்
முடிவான முழுமையான பண்பை அறிய பிரபஞ்சமானது இறுதியில்
எந்நிலையை எட்டுகிறது, என்னவாக பரிணமிக்கிறது என்பதைக்கொண்டே
அறிய இயலும்.

இதற்கு மாறாக, ஒரு அணுவை பிரபஞ்சத்திலிருந்து உருவியெடுத்து அதை
உடைத்துப்பார்த்தால் அதனுடைய (அதாவது பிரபஞ்சத்தினுடைய) அரைகுறை
யான தொடக்க நிலைப்பண்பினை மட்டுமே அறிய முடியும். ஒரு விதையை
உடைத்து அது என்னவென்று அறிவது முறையான விஞ்ஞான அறிதல்முறை
யாகாது. மாறாக, அவ்விதையை மண்ணில் ஊன்றி அது முளைத்து செடியாக
வளர்ந்து பிறகு பெரும் விருட்சமாக எழுந்தபிறகு பூத்து, காய்த்து என்ன
கனியைக் கொடுக்கிறது என்பதைக்கொண்டே அவ்விதை ஆலவிதையா,
அல்லது என்ன விதை என்று அறிய முடியும். இதற்கு மாறாக, அவ்விதயை
உடைத்துப் பார்த்தால் அது பலவித அணுக்கருத்துகள்களின் தொகுப்பாக
உள்ளதென்றும், இறுதியில் ஒரு முடிவிற்கும் வர இயலாமல் குழம்பிப்
போகலாம். அல்லது முடிவில், "ஒன்றுமில்லை" என்ற என்ற மாபெரும் கண்டு
பிடிப்பை அறிவித்திடலாம். இத்தகைய தலைகீழ் அணுகுமுறையில் தான்
தற்போதைய விஞ்ஞானம் சென்று கொண்டுள்ளது.

                               ■ ■ ■

மனித ஜீவிகளின் பிரதான அக்கறையும், தேடலும், ஆராய்ச்சியும் தனது
உணர்வுப் பரிணாமத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர,
அணுக்களைப்பற்றியோ, அடிப்படைத்துகள்களைப் பற்றியோ; அண்டவெளியில்
திரியும் நட்சத்திரங்கள், கிரகங்கள்,,, பிற நிகழ்வுகளைப்பற்றியோ இருக்க
முடியாது!

மனித ஜீவி என்பவன் அடிப்படையில் அணுத்துகள்களால் ஆனவன் தான்!
அதாவது, அடிப்படைத்துகள் தான் அண்டத்திலுள்ள அனைத்துப் பொருட்களு
மாகி, புழுவாகி, பூச்சியாகி, பிறகு மனிதஜீவியுமாகி மனித ஜீவிகளுள் இயற்
பியல் விஞ்ஞானியுமாக ஆகியுள்ளன. ஆனால், இயற்பியல் விஞ்ஞானியாக
ஆகிய ஆதி அடிப்படை அணுத்துகள்கள் மீண்டும் தம்மையே (அடிப்படைத்
துகள் களையே) ஆராய்ந்துகொண்டிருப்பது என்பது மாபெரும் முரண் அல்லவா?
இது ஒரு விபரீத வட்டமாகத் தெரியவில்லையா?

ஆகவே, விஞ்ஞானிகளே விழித்துக்கொள்ளுங்கள்! புத்தம் புதிதாகச் சிந்தி
யுங்கள்! நீங்கள் வெறும் அடிப்படைத்துகள்களின் தொகுப்பு அல்ல! பிரதானமாக
நீங்கள் ஒரு "உணர்வு" தான்! உங்களுடைய உணர்வுப் பரிணாமத்தின் இறுதி
யில் நீங்கள் முழு-உணர்வே! அணுவாக, அடிப்படைத்துகளாகச் சுருங்கியது
அந்த முழு-உணர்வே!


மா.கணேசன் • • 18-03-2018
----------------------------------------------------------------------------


Friday, 9 March 2018

வெட்கக்கேடான சாதனை!





   இக்கட்டுரையின் நோக்கம் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே
   நிலவும் இடைவெளியை, மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தைக்
   களைவதற்கான கலகத்தையோ, புரட்சியையோ தூண்டுவதற்கான
   விதைகளைத் தூவுவது அல்ல! மாறாக, உலக மக்கள், உழைக்கும்
   மக்கள் யாவரும் கௌரவமாக வாழ்வதற்கான நியாயமான
   உரிமையை நினைவூட்டுவது மட்டுமே.



                         •••

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2018-ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்
வரர்கள் பட்டியலில் அமேஸான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரி
யுமான ஜெஃப் பிஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு
சுமார் 11,200 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2,208 பேர் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் இந்தியாவிலிருந்து 119 பேர் இடம்
பிடித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைவிட 18 பேர் அதிகம்
என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு
அடுத்தபடியாக அதிக கோடீஸ்வரர்களைக்கொண்ட நாடாக இந்தியா இருக்
கிறது. அமெரிக்காவில் 585 கோடீஸ்வரர்களும், சீனாவில் 373 கோடீஸ்வரர்
களும் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. .....
                    நன்றி : தி இந்து, வியாழன், 08.03.2018

                         •••

இதுதான் வெட்கக்கேடான சாதனை என்பது. அதாவது, உலகின் ஒட்டுமொத்த
மக்கள்தொகை 760,00,00,000 (760 கோடி) ஆகும். இதில் சரிபாதி மக்கள் கிட்டத்
தட்ட  360,00,00,000 (360 கோடி) பேர்கள் கொடுமையான வறுமையில் வாடிக்
கொண்டிருக்கின்றனர். இத்தகைய அவலநிலை அவர்களது தலையெழுத்து
என்று சொல்லி கடந்து சென்றுவிட முடியாது. ஒட்டுமொத்த மக்கள்தொகை
யான 760 கோடி பேர்களில் வெறும் 2,208 பேர்கள் கோடீஸ்வரர்களாக விளங்கு
கிறார்கள் என்பது எந்த விதத்திலும், விகிதத்திலும் பொருந்துவதாகத் தெரிய
வில்லை! 

அடுத்து இந்தியாவின் மக்கள்தொகை 134, 00,00,000. இதில் வெறும் 119 பேர்கள்
கோடீஸ்வரர்கள் என்பது எந்த விகிதத்திலும் பொருந்துவதாயில்லை! அடுத்து, 
வெறும் 8 நபர்களின் வசம் இந்திய நாட்டின் உச்ச பட்ச சொத்துக்கள் உள்ளன
என்பதில் யாதொரு முரண்பாடும் இல்லையா!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவி
லிருந்து 119 பேர் இடம் பிடித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை
விட 18 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது என்று அப்பத்திரிகை குறிப்பிடு
கிறது.

உலகில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக கோடீஸ்வரர்
களைக்கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் 585 கோடீஸ்
வரர்களும், சீனாவில் 373 கோடீஸ்வரர்களும் இருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்
துள்ளது.

ஆனால், அதே நேரத்தில், கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா உலகிலேயே
மூன்றாவது இடத்தில் உள்ளது; அதாவது, நம் நாட்டிலும் 119 கோடீஸ்வரர்கள்
இருக்கிறார்கள் என்று மகிழ்ந்து கொண்டாடுவதா? அல்லது, இங்கே இந்தியா
வில், நாள்தோறும் இரவு உணவின்றி உறங்கச்செல்பவர்கள் 56% பேர்களும்,
இரண்டு வேளை உணவில்லாமல் இருப்பவர்கள் 30% பேர்களும் இருக்கிறார்
கள் என்பது குறித்து துயரப்படுவதா?

இந்திய அரசின் கடன் சுமை ரூ. 47 லட்சம் கோடி எனப்படுகிறது. (உலக வங்
கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.) அதே
நேரத்தில், இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து
மதிப்பு 31 இலட்சம் கோடிக்கும் ($479 பில்லியன்) அதிகமாக இருக்கிறது.
அதாவது, நாடு கடன் பொறியில் சிக்கியிருக்கிறது எனும் நிலையில், வெறும்
100 பணக்காரர்களிடம் மட்டும் 31 இலட்சம் கோடிகள் உள்ளது என்பதன்
அர்த்தம், நியாயம் என்ன? அதாவது, இந்தியா கடனில் தத்தளிக்கிறது; ஆனால்,
இந்த 100 பணக்காரர்கள் செல்வத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்
களுக்கு நாட்டின் கடனில் எவ்வித பங்கும், பொறுப்பும், எதுவும் இல்லையா?

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக
வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி
நிறுவனம் தெரிவிக்கிறது. அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு
பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம்
என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.ஆனால் இந்திய மக்கள்
தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில்
வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

ஒருபுறம் நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் சம்பாதிக்கும்
(இது சம்பாத்தியமா அல்லது பகல் கொள்ளையா?) அம்பானி உள்ளிட்ட பெரும்
பணக்காரர்கள்; மறுபுறம் வெறும் 124 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல்
தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய ஏழை மக்கள். இந்த பஞ்சபராரிகள்
மீது பண மதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட அஸ்திரங்களை ஏவி
எஞ்சியதையும் பறிக்கிறது கார்ப்பரேட்டுகளுக்கு சேவைபுரியும் தற்போதைய
இந்திய அரசு.

ஆனால், ஒரு பணக்காரர் அல்லது, பெருமுதலாளியால் மட்டும் நாள்ஒன்றிற்கு
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் எவ்வாறு, எவ்வழிமுறையில் சம்பாதிக்க
முடிகிறது?

உண்மையில், செல்வம் (பணம், சொத்து) என்பது முற்றிலும் ஒரு சில பெரு
முதலாளிகளின் அல்லது பணக்காரர்களின் உருவாக்கமோ, படைப்போ அல்ல!
செல்வம், அல்லது, பொருள்-வளங்களுக்கான அடிப்படை, பணம் படைத்தவர்
களின் முதலீடு மட்டுமே அல்ல! அதாவது செல்வத்தின் அடிப்படைகளில்
ஒரே ஒரு காரணி மட்டுமே பணம், அல்லது, முதலீடு என்பதாகும்! மிகவும்
அடிப்படையான காரணிகளானவை பூமி, பூமியின் இயற்கை வளங்கள்
(அனைத்துவித கச்சாப்பொருள்கள்), நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழல், பல்லுயிர்
வளங்கள், முக்கியமாக சக மனிதர்கள், அதாவது, மக்கள் சமுதாயம், மற்றும்
அவர்களது பெரும் உழைப்பும், யாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் பொது
வான வாழ்க்கைத் தேவைகளும்தான் பொருள் வளங்களின் (செல்வத்தின்)
உருவாக்கத்திற்கும், உற்பத்திக்குமான அடிப்படைகளாகும்!

பொருளாதார நடவடிக்கைகள் என்ற போர்வையில், நாம் சுரண்டி கொள்ளை
யடிக்கும் இயற்கை வளங்களுக்கு, அதாவது, நாம் உருவாக்கும் பொருள்
வளங்கள், அல்லது, செல்வத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும், டாலருக்கும் நாம்
இப்பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும், உழப்பைத்தரும் ஒவ்வொரு மனிதருக்
கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு,
"நான்தான் முதலீடு செய்தேன், ஆகவே, ஒட்டுமொத்த செல்வத்தையும் நானே
எடுத்துக்கொள்வேன், எல்லாமே எனக்குத்தான் சொந்தம், என உரிமை கொண்
டாடுவதற்கு இப்பூமியில் எவருக்கும் உரிமை கிடையாது! அவ்வாறு உரிமை
கோருபவன் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும், முட்டாளாகவும்,
பேராசை பிடித்த மிருகமாகவும்தான் இருக்க முடியும்! அத்தகைய தொரு
முட்டாளின் பெயர் தான் "பெரும்பணக்காரன்" (மில்லியினர், பில்லியினர்)
என்றால், இனியும் அத்தகைய நடைமுறையை நாம் அனுமதிக்கலாமா?

கட்டாயம், செல்வம் சேர்ப்பதற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும்!
ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வளவு தான் நிலம், மனை, பிற ஏணைய
சொத்துக்கள் உடமையாக இருக்கவேண்டும்; ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல்
சொத்துக்களைச் சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்கான வாய்ப்புக்களைப்
பறிப்பதாகும் எனக் கருதப்படவேண்டும்! ஒருவர் எத்தனை தொழிற்சாலை
களை அமைக்கலாம், பராமரிக்கலாம் என்பதற்கும் ஓர் உச்சவரம்பு வேண்டும்!

ஒரு 'தொழிலதிபர்' என்பவர், எண்ணற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருந்
தாலும், சங்கிலித்தொடர் போன்ற வியாபார நிறுவனங்களைக் கொண்டிருந்
தாலும், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட படி, அவருடைய தொழிற்சாலைகளில்
பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த லாபத்திலிருந்து
ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படவேண்டும்;
அதே போல, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும்
(உயிரியல் மண்டலத்திற்கு ஏற்படும் பாதகங்களைச் சரிகட்டுவதற்கும்), இயற்
கையிடமிருந்து எடுக்கப்பட்ட வளங்களைச் சரிகட்டுவதற்கும், அல்லது புதுப்
பிப்பதற்குமான தொழில் நுட்பங்களுக்குச் செலவிடவேண்டும்! அனைத்து
லாபங்களையும் தொழிலதிபதிரே சுருட்டிக்கொண்டு போய்விடுவதை இனியும்
அனுமதிக்கலாகாது! அவர் போட்ட முதலீட்டிற்குரிய நியாயமான சதவிகிதம்
மட்டுமே அவருக்குச் செல்லவேண்டும்! அந்த சதவிகிதமும் ஒரு குறிப்பிட்ட
அளவைத் தாண்டுமானல், அதற்கும் அவர் வரி கட்டவேண்டும்!

எவ்வொரு நாட்டிலும் பணக்காரர்கள் என்போர் 1% மட்டுமே. இந்த ஒரு
சதவீதத்தினர் ஏணைய 99% மக்களின் நலன்களுக்கு எதிராகச்செயல்படுகிறார்
கள் என்பதை எப்போது 99% உணரப்போகிறார்கள்?  இவ்வளவிற்கும், அவர்கள்
சப்தமின்றி, போரின்றி, ஆரவாரமின்றி, அமைதியாக தங்களுடைய கயமைத்
தனம், பேராசை, சுயநலம், நரித்தந்திரம், பொய், ஏமாற்று, ஆகியவற்றுடன்
அரசின் ஆசீர்வாதங்களையும் கொண்டு 99% மக்களை ஏழ்மையிலாழ்த்தி
ஏய்த்து மேய்த்து வருகின்றனர்!

பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரு எல்லையைத் தாண்டும் போது, இந்திய
அரசாயினும், அல்லது வேறு எந்த நாட்டு அரசாயினும், அப்பணக்காரர்களுக்கு
அடிமையாக மாறுவது என்பதைத் தவிர்க்க முடியாது!  மேலும், அவர்களது
விருப்பத்திற்கேற்பத்தான் ஆட்சிசெய்யவும் முடியும்!

மா.கணேசன் • 08-03-2018
----------------------------------------------------------------------------

Sunday, 11 February 2018

தமிழ்நாடு திறந்துகிடக்கும் வீடல்ல!



(கமல ஹாசனின் உண்மையான நிறம்!)


   "தமிழ் என்பது உங்கள் விலாசம், அது உங்கள் தகுதியல்ல! .....
   நான் தமிழன் அதன்னால எனக்கு இதக் கொடுங்கன்னு கேட்க
   முடியாது! நான் இந்த வீட்ல குடியிருக்கறன் என்பது உங்க விலாசம்;
   அது இருக்கட்டும் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு அடுத்தது 
   உடனே கேட்பாங்க!...."             
                                         -- கமல ஹாசன்
                           ✦
                   

இனியும் தமிழ் நாட்டு மக்களை அடுக்கு மொழியில் பேசிக்கொண்டு, கவிதை
கலந்த பூடகமான தமிழில் பேசிக்கொண்டு ஏமாற்றமுடியாது எனும் கட்டத்தை
நாம் அடைந்துள்ளோம்! தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய மிகவும்
சோதனையான காலம் இது! இப்போதும்கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை
யென்றால் நமக்கு விடிவுகாலம் என்பதே இல்லாமல் போய்விடும்! நம் வீட்டை
கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள் அந்நியர்கள்!

என்னை அறிந்தவர்களுக்கு என்னை நன்றாகத்தெரியும், நான் ஒரு குறுங்குழு
வாதியல்ல என்பது! நான் பிரபஞ்சமளாவிய பார்வை கொண்டவன்! நான்
காலம், இடம், தேசம், வர்த்தமானம், இனம், மொழி, மதம், கலாச்சாரம், கடந்த
வனாகத்தான் நேற்றுவரை வாழ்ந்துவந்திருக்கிறேன்!

   இந்தியாவில் பிறந்ததால் நான் ஒரு இந்தியன்; ஆப்பிரிக்காவில்
   பிறந்திருந்தால் நான் ஒரு ஆப்பிரிக்கன்! எங்கே பிறந்தாலும் நான்
   நான் தான்! என்று பேசி வந்தேன்.

"மனிதன்" என்பதுதான் எனது முதல் அடையாளம்!  நேற்றுவரை நான் ஊமை
யாக இருந்துவிட்டேன்; இப்போது நான் பேசவேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டுள்ளேன்! அப்படியானால் ஒரு மனிதன் எந்த மொழியில் பேசுவான்?
எனது தாய்மொழி தமிழ், நான் தமிழில் தானே பேசவேண்டும்? இது நாள்வரை
ஒரு மனிதனாகத் தமிழில் பேசிவந்த என்னை இன்று ஒரு தமிழனாகப் பேச
வைத்து விட்டார் கமலஹாசன்!

இது கெட்ட நேரத்திலும், ஒரு நல்ல நேரம்! இல்லையென்றால், கமலஹாசன்
இப்படிச் சொல்லி யிருப்பாரா? அதுவும் அவர் புதிதாக அரசியல்கட்சி ஆரம்பிக்
கப்போகும் இந்த தொடக்கக் கட்டத் திலேயே அவர் இப்படிப்பேசியிருப்பது
அவரது உண்மையான நிறத்தை நமக்குக் காட்டியிருக்கிறது என்றுதான்
சொல்லவேண்டும்! அதற்காக நான் அவருக்கு என் நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறேன்!

நான் தமிழன் அதனால, எனக்கு இதக்குடுங்க, அதக்குடுங்கன்னு நான் பிச்சை
கேட்கவில்லை! எந்தத் தமிழனும் அவ்வாறு கேட்கமாட்டான்! நான் இந்த
வீட்டுல வெறுமனே குடியிருக்கவில்லை; நான் இந்த வீட்டுல பிறந்தவன்,
இது என் வீடு, இது என் நாடு, என் தமிழ்த்திருநாடு! ஆக, நான் கேட்பது
ஒன்றே ஒன்று தான் : தமிழர்களாகிய எங்களுக்குத்தகுதி இருக்கிறதோ,
இல்லையோ; எங்களை இனி நாங்களே ஆண்டு கொள்கிறோம்! தமிழர்களல்
லாத பிறருக்கு வேறு எல்லா தகுதிகளும் இருந்தாலும், தமிழன் எனும் தகுதி
இல்லாத எவரும் எங்களை ஆளத்தகுதியற்றவரே!

தமிழனுக்கு தமிழன் எனும் தகுதியைத்தாண்டி அவனிடம் வேறு என்ன தகுதி
இல்லை? எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் தகுதி தமிழனுக்கு உண்டு!

தமிழ் கற்றுக்கொண்டவர்கள், தமிழ் பேசுபவர்கள், தமிழில் கவிதை எழுதுப
வர்கள், பிழைப்புத் தேடி தமிழ் நாட்டிற்கு வந்தவர்கள், வியாபாரம் செய்ய
வந்தவர்கள், இங்கேயே தங்கிவிட்டவர்கள், இங்கே  பிறந்தவர்கள், வளர்ந்த
வர்கள், ..... என எல்லோரும் தமிழர்களாக ஆகிவிடமுடியாது! 

தமிழ் என்பது எனது தாய் மொழி மட்டுமல்ல, அது எனது அடையாளம் மட்டு
மல்ல; தமிழ் எனது தகுதியும் தான்! தமிழனல்லாதவனுக்கு அது புரியாது!
தமிழ் என்றால் இனிமை மட்டுமல்ல; அறம், மறம், திறம் யாவுமாகும்!

"வந்தாரை வாழ்விக்கும் தமிழகம்!" என்பதற்கிணங்க தமிழை, தமிழ் நாட்டை
புகலிடமெனத் தேடிவருபவர்கள் வாருங்கள், வந்து வாழுங்கள்! ஆனால்,
எங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை, கூடாரத்திற்குள் கொஞ்சம் இடம் கேட்ட
ஒட்டகம் போல, உள்ளே புகுந்த பிறகு எங்களை எங்கள் வீட்டிலிருந்து
வெளியே தள்ளிவிடும் எண்ணத்தை மறந்துவிடுங்கள்! இனி எவ்வகை சூழ்ச்
சிக்கும் தமிழன் பலியாகமாட்டான்!

எவ்விடத்தில் புல் முளைக்கிறதோ அவ்விடத்திலேயே வாழ்வதற்குரிய முழு
சுதந்திரமும் அதற்கு உள்ளது! இதற்குப் பெயர்தான் "இயற்கைச் சுதந்திரம்".
இதுதான் "மண்ணின் மைந்தன்" என்பதற்கும், "தமிழ்த்தேசியம்" என்பதற்குமான
அடிப்படையும் ஆகும்! இவ்வாறு மொழி அடிப்படையிலான பல தேசியங்களின்
கூட்டமைப்பு தான் இந்திய தேசியம் என்பது!

நான் சொல்கிறது கமலஹாசனுக்கு எட்டுகிறதோ இல்லையோ, என் தமிழ்ச்
சொந்தங்களுக்கு எட்டினால் சரி!

(தொடரும்)
மா.கணேசன்/15:55 11-02-2018
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...