Monday, 31 October 2016

இயற்கையின் இயற்கை என்ன? (What is the "Nature" of Nature?)


     
அடுத்தமுறை  எவராவது  உங்களிடம் வந்து,   "இருப்பது   யாவும்     இயற்கை   மட்டுமே","இயற்கையே பிரதானம்", "இயற்கை இயற்கையாகத்தோன்றியது", என இயற்கை,இயற்கை, என்று இயற்கையின் புகழ் பாடினால்,அவரிடம்; "நீங்கள்எந்த இயற்கையைப்பற்றிப்பேசுகிறீர்கள்?" என்று கேட்கத்தவ றாதீர்கள்!   மேலும்,   அவருடன்     சற்று                    எச்சரிக்கையுடன்பேசுங்கள், பழகுங்கள்! இல்லாவிடில், அவருடைய மட்டுப்பாட்டை உங்களிடம் தொற்றச்செய்திடுவார்!
                                                                           * * *

'இயற்கை' என்று எதுவுமில்லை! 
--------------------------------------------------
" இயற்கை" என்று ஏதோவொன்று மிகவும் திடமாகவும், மாறாததாகவும், நமக்குப்புறத்தே நிலையான பின்புலமாகவும் இருப்பதாக விஞ்ஞானிகளும், பொருண்மைவாதிகளும், 'இயற்கை வாதி'கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களும், இயற்கை மீறியதாகச் சொல்லப்படும் கடவுள், ஆவி, பேய், பிசாசு போன்றவற்றை மறுப்பதற்கான ஒரே ஆயுதமாக 'இயற்கை'யை மட்டுமே நம்பும் நாத்திகவாதிகளும் கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அத்தகையதொரு 'இயற்கை' அவர்களது மனங்களில், வெறும் கருத்தாக மட்டுமே இருக்கிறது! இன்னும் ஒரு மிக ஆழமானதும், முறையானதுமான ஆய்வின் இறுதியில் "இயற்கை" என்று எதுவுமில்லை என்பது புலனாகும்!

அப்படியானால், நமக்குப்புறத்தே, நம்மைச்சுற்றி ஒரு உலகம் உள்ளதே, அதற்குப்பெயர் என்ன என்று கேட்டால், அதை "உலகம்" அல்லது "பிரபஞ்சம்" என்றே அழைப்போமாக! அதேவேளையில், நம்மைச்சுற்றி ஒரு பிரபஞ்சம் மட்டுமல்லாமல், இரண்டு பிரபஞ்சம் உள்ளன! ஒன்று, பருப்பொருளாலான மாபெரும் அமைப்பான "பௌதீகப்பிரபஞ்சம்". இரண்டு, தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக்கொண்டமைந்த "உயிரியல் பிரபஞ்சம்",  என இரண்டு பிரபஞ்சங்கள், அல்லது உலகங்கள் உள்ளன. இவற்றின் மத்தியில், மூன்றாவதாக ஒரு பிரபஞ்சம் எழுந்துள்ளது, அதுதான், மனிதஜீவிகளைக்கொண்டமைந்த மனம் அல்லது உணர்வின் பிரபஞ்சம் ஆகும்!

ஆம், 'இயற்கை' என்று எதுவுமில்லை! மாறாக, தனது  அசலான இயற்கையை, இயல்பைத் தேடிச்செல்லும் ஒரு நெடிய இயக்கம் மட்டுமேயுள்ளது!உண்மையில், எல்லா காலத்திலும் ஒரே தன்மையிலமைந்ததான இயற்கை என்று எதுவும் இருக்கவில்லை. அதேநேரத்தில், அது நிலைகொள்ளாமல் எப்போதும் மாறிக்கொண்டேயும் இருப்பதில்லை! மாறாக, இயற்கை தனது அசலான இயற்கையை நாடிச் சென்று  கொண்டுள்ளது; அத்தகைய இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும்.  இயற்கை,  பிரபஞ்சம், உலகம், பருப்பொருள் என எவ்வாறு அதை அழைத்தாலும், அது ஒரு பரிணாம  இயக்கமே ஆகும். இயற்கை என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து ஒரு குறிப்பான இலக்கு- நிலையை நோக்கிச்செல்லும் ஒரு இயக்கமாகும். ஆம், இலக்கு என்பது இல்லாமல் யாதொரு இயக்கமும் இல்லை; ஏனெனில் அது முரண்பாடானது. எவ்வொரு இயக்கமும் இலக்கைக் கொண்டதே; இலக்கு  இல்லாவிடில் அதற்குப் பெயர் இயக்கமல்ல, அது தாறுமாறானதொரு போக்கு ஆகும். மேலும்,  வெறும் "மாற்றம்" என்பதற்கும், "பரிணாமம்" என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.  மாற்றத்திற்காக மாற்றம் என்பது முரண்பாடானது, அல்லது மேலோட்டமானது. பண்பினடிப்படையிலான மாற்றத்தைப்பின் பற்றிச்செல்லுகிற, அதாவது தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்து செல்லுகிற இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும். 

இயற்கை (எனப்படுவது) இயற்கையானதல்ல!
--------------------------------------------------------------------------
அகராதியின் படி இயற்கை என்பது,

   1. மனிதனால் படைக்கப்படாமல் தானாகத் தோன்றுவனவும், நிகழ்வனவும்
   2. ஒருவருடைய அல்லது ஒன்றனுடைய இயல்பான தன்மை அல்லது குணம்
   3. இயல்பாக நிகழும் ஒன்று

எனக்குறிப்பிடப்படுகிறது. அதாவது, மனிதனால் படைக்கப்படுபவை செயற்கையானவை என்பதால், அதற்குமாறாக, மனிதன் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றியவையனைத்தும் இயற்கை எனப்படுகிறது. அதாவது, மனிதன் தோன்றுவதற்கு முந்தைய இருப்பை 'இயற்கை' என்று சொல்வதில் பெரிதாகத்தவறில்லை. ஆனால், எவரேனும், இயற்கை தானாகத்தோன்றியது என்று சொல்வாரெனில், அது நம் புரிதலை மட்டுப்படுத்தும் பெரும் தடையும், பிரச்சினையும் ஆகும். ஏனெனில், விதிவிலக்கின்றி அனைத்து விஞ்ஞானிகளும், பொருண்மைவாதிகளும், இயற்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும்,  இயற்கையின் இயற்கையை 'சடப்பொருள்', அல்லது 'பருப்பொருள்' என்பதாகத்தான் குறிப்பிடுகிறார்கள்.ஒருவகையில், பரிணாமம் என்பது முதலில் சடப்பண்பைக் கொண்ட அணுத்துகள்களைக் கருவியாகவும், ஊடகமாகவும் கொண்டுதான் தொடங்கியது என்பதில் சந்தேகமில்லை!  ஆனால், அச்சடப் பண்புதான் இயற்கையின் முடிந்த முடிவான, இறுதி யான பண்பு என்று கொள்வது தான் பிரச்சினைக்குரியது ஆகும்! 

அதாவது, இயற்கை தானே தோன்றியது என்று சொல்வதன் பொருள், உயிரற்றதும், உணர்வற்றதுமான சடப்பொருள், தானே தோன்றியது என்பது தான்! ஆனால், எவ்வகையிலும், உயிரற்ற, உணர் வற்ற பௌதீகச்சடப்பொருள் தன்னில் தானே தோன்றுவதற்கான வாய்ப்பும் சாத்தியமும் சிறிதும் இல்லை! ஆகவே, பௌதீகச்சடப்பொருளை, அடிப்படை மெய்ம்மையாக, அல்லது, மூல-மெய்ம்மையாகக்கொள்வதற்கு இடமில்லை! அதே நேரத்தில், எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த ஒரு 'கடவுள்' தான் இயற்கையை, இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் என்ற முடிவிற்கு நாம் வந்துவிடமுடியாது. ஏனெனில், மிகைப்படுத்தப்பட்ட குணாதிசயங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட "கடவுள்" எனும் ஒரு ஒற்றைச்சொல்லை மூல-மெய்ம்மையாகக்கொள்ள முடியாது!

ஆக, 'இயற்கை' என்பது தானே தோன்றியதல்ல, எனும்பட்சத்தில், அது வேறு ஏதோவொன்றின் வெளிப்பாடாக, அல்லது, விளைபொருளாக மட்டுமே வெளிப்பட்டிருக்க வேண்டும்! அந்த ஏதோ ஒரு மெய்ம்மை "கடவுள்" என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை! மாறாக, அதை நாம் "பேரியற்கை" (Meta-Nature), என்று அழைக்கலாம்! அந்த பேரியற்கை தான் இயற்கை, உலகம், பிரபஞ்சம்  என அழைக்கப்படும் அனைத்திற்கும் காரணமாக அமைந்த "மூல-மெய்ம்மை" ஆகும்! அந்த "மூல-மெய்ம்மை" எத்தகைய மெய்ம்மை, அல்லது "பண்பு" என்பதைக் கண்டறிவதுதான் நம்முடைய தலையாய பணியாகும். அம்மூலமெய்ம்மையின் பண்பு எத்தகையது என்பதை நாம் துல்லியமாக அறிந்திடும் போது அதை நாம் "கடவுள்" என்றுகூட அழைக்கலாம்! அது வரை "கடவுள்" என்ற உள்ளீடு அற்ற அந்தச்சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாயிராது!

அப்படியானால், அதாவது, ஊமைச்சடமும் அல்ல, கடவுள் என்ற சொல்லும் அல்ல என்றால் பிறகு எது தான் மூலமெய்ம்மை, அது எத்தகைய பண்பைக்கொண்டது, அதை எவ்வாறு அறிவது? ஆம், கனியைக் கொண்டு தான் மரம் அறியப்படுகிறது! ஆனால், நம் பிரபஞ்சத்தைப்பொறுத்தவரை அது என்ன வகை மரம் என்று இதுவரை அறியப்படாமலேயே உள்ளது! அதாவது, பிரபஞ்சமானது என்னவகை கனியைத் தரும் என்பது குறித்த கேள்வியும், ஆராய்ச்சியும் விஞ்ஞானிகளிடமும், இயற்கைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தத்துவவாதிகளிடமும், பகுத்தறிவுவாதிகளிடமும் இல்லை! அதாவது, ஒரு பெரு-வெடிப்பில் தொடங்கிய பிரபஞ்சம் எனப்படும் பரிணாம வழிமுறை இறுதியாக எட்டக்கூடிய மெய்ம்மை யாது? அது இதுவரை எவற்றையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளது? அதாவது எத்தனை மைல்-கல் போன்ற வளர்ச்சி நிலைகளைத்தொட்டுள்ளது? என்பவை பற்றியும்; பரிணாமம் என்றால் என்ன? உண்மையில் பரிணாமத்தில் பரிணமிப்பது எது? என்பவை குறித்தும் ஆழமான புரிதல் எதுவும் இல்லை! அவர்களைப்பொறுத்தவரை, 'இயற்கை' (அது எத்தகைய மெய்ம்மை என்பது தெரியாவிட்டாலும்) இருக்கிறது; அதில் பிற உயிரினங்களும், நாமும் இருக்கிறோம், அவ்வளவுதான்! நாம் ஏன், எதற்காக இருக்கிறோம்? நம் வாழ்க்கையின் நோக்கம், குறிக்கோள், இலக்கு யாது? என்பது குறித்து எதுவும் தெரியாது! தெரிந்துகொள்ள வேண்டிய தேவையுமில்லை? ஏனெனில், மாபெரும் புரட்சிகர இயற்கை வாதியும், உயிரியலாளருமான டார்வின் அவர்கள், பரிணாமம் குறிக்கோளற்றது, திசையற்றது, அதாவது உயர்-வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்செல்லாதது; மற்றும் மிக முக்கியமாக, சடப் பொருள் தான் அனைத்து இருப்பின் அடித்தளம் என்பதாக போதித்துச்சென்றுள்ளாரே! 

உளவியல் பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும்  சின்மண்ட் ஃப்ராய்டு (Sigmund Freud) ஒருமுறை,  "அனைத்து மாபெரும் விஞ்ஞானப்புரட்சிகளின் பொதுவான அடிப்படைஅம்சம் என்னவெனில், அவை மனிதனை பிரபஞ்சத்தின் மையம் எனக்கருதப்பட்ட சிம்மாசனத்திலிருந்து கீழே தள்ளியது தான். கோப்பர் நிக்கஸின் புரட்சியானது புவி-மைய மாதிரியைப் புறந்தள்ளி சூரிய-மைய மாதிரியை முன்வைத்தது, அதன்படி பூமியானது பல அண்ட வெளிப்பொருட்களில் அதுவும் ஒன்று என்றாகியது. அடுத்து, சார்லஸ் டார்வினின் புரட்சியானது, 'கடவுளின் சாயலில்" படைக்கப்பட்டவனாகக் கருதப்பட்ட மனிதனை உயர் வளர்ச்சியடைந்த வானரம் என்பதாகச் சித்தரித்தது" எனக் குறிப்பிட்டார். ஆனால், இவை போன்ற 'சுய- தோல்விகரமான'  கூற்றுக்களை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. ஏனெனில், தத்துவசிந்தனையானது மீண்டும் மேலோங்கிடும் காலம் தொடங்கிவிட்டது. ஒரு முழுமையான "உலகப்பார்வை"யையும், "வாழ்க்கைப்பார்வை"யையும், அதாவது ஒரு முழுமையான மெய்யியலைத் தத்துவம் வழங்கிடும்போது, விஞ்ஞானம் என்பது தத்துவ சிந்தனையின் ஒரு அங்கமாகச் சுவீகரிக்கப்பட்டுவிடும். அதற்குள் விஞ்ஞானம் தனது அணுகுமுறையின் மட்டுப்பாடுகளையும், எல்லைகளையும்  உணர்ந்து தனக்கேயுரிய தனிச்சிறப்பான பணியை மட்டும் செய்யும்; தேவையில்லாமல் தத்துவத்தின் பிரதேசங்களுக்குள் மூக்கை நுழைக்காது! 

அதற்குமுன்னர், இயற்கையின் இயற்கை பற்றிய இக்கட்டுரையானது, அதனுடைய ஆழமான புரிதலைக்கொண்டு இயற்கைவாதம், விஞ்ஞானவாதம், பொருண்மைவாதம்,பகுத்தறிவுவாதம்,சுருக்கல்வாதம், இன்ன பிற வாதங்களின் மேலோட்டமான தன்மைகளையும், மட்டுப்பாடுகளையும் வெளிச்சத்திற்குக்கொண்டுவந்திட அவைகளின் ஆரவாரச் சலசலப்புகள் அடங்கிப்போகும்!

பொதுவாக இயற்கை என்றாலே அது தானே தோன்றியது என்பதாக நம்பப்படுகிறது, அடுத்து  இயற்கைக்கு யாதொரு குறிக்கோளும், இலக்கும், நோக்கமும் கிடையாது எனவும் நம்பப்படுகிறது. ஆனால், இவ்விரு நம்பிக்கைகளும் தவறானவை. ஏனெனில், இயற்கை தானேதோன்றியதல்ல. மேலும் இயற்கைக்கு குறிக்கோளும், இலக்கும், நோக்கமும் உள்ளன. இல்லாவிடில், அது ஒரு பரிணாம இயக்கமாக விளங்காது! அதாவது இயற்கை என்றாலே அது பரிணமிக்கும் இயற்கையே! இயற்கை என்பது எல்லாக்காலத்திலும் ஒரேவித தன்மையை, பண்பை, இயல்பைக் கொண்டதல்ல. ஆதி ஆரம்பக்கட்டத்தில், இயற்கையானது சடப்பொருளாக (அணுத்துகள்களாக) த்தான் தொடங்கியது. பிறகு பரிணாம மாற்றத்தின் விளைவாக சடப்பொருளானது உயிருள்ள ஜீவியாக எழுந்தது! 

இக்காலக்கட்டத்தில், இயற்கை என்பது "சடப்பண்பு + உயிர்ப்பண்பு" என்பதாக விளங்கியது. பிறகு, தொடர்ந்த  பரிணாமத்தின் விளைவாக உணர்வுள்ள மனிதஜீவியாக வெளிப்பட்டது. இக்காலக்கட்டத்தில் இயற்கை என்பது  "சடப்பண்பு + உயிர்ப்பண்பு +உணர்வுப்பண்பு"  என்பதாக ஆகியது. 

இப்போதைக்கு இயற்கை என்பது சடம், உயிர், உணர்வு எனும் மூன்று பண்புகளின் தொகுப்பாக உள்ளது எனக்காணலாம் என்றாலும், பண்பினடிப்படையில், மேலுயர்ந்து நிற்பது என்னவோ உணர்வு எனும் பண்புதான். ஆகவே, இயற்கையின் தற்போதைய பிரதான பண்பு உணர்வு என்பதே ஆகும். அதே நேரத்தில், மனிதனின் வழியே எட்டப்பட்ட உணர்வு என்பது எவ்வகையிலும் முழுமையானதோ, அல்லது, இறுதியானதோ அல்ல. இதன் அர்த்தம், மனிதஜீவியோ, அல்லது, மனித உணர்வோ, பரிணாமத்தின் இறுதியான இலக்கு நிலை அல்ல. அதாவது பரிணாமம் இன்னும் முடியவில்லை! பரிணாமம் எப்போது முழுமையடைகிறதோ அப்போதுதான் இயற்கை தனது அசலான இயற்கையை, இயல்பை அடைகிறது! அதுவரை, இயற்கை என்பது அவ்வக்காலக்கட்டங்களில் வெளிப்பட்ட பண்பினால் மட்டுப்படுத்தப்பட்டதொரு மெய்ம்மை மட்டுமேயாகும்.

அப்படியானால்,  பரிணாம இயற்கையின் முடிவான இறுதியான பண்பு எது? எவ்வொரு மெய்ம்மையானது காலமற்றதோ, வெளியுமற்றதோ அது நிச்சயமாக நித்தியமான தாகத் (Eternal) தான் இருக்கமுடியும்! அத்தகைய மெய்ம்மைக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது, ஆகவே அது தன்னில் தானே சுயம்புவாகத்தோன்றியதாகவும் நித்தியமாக இலங்குவதாகவும் (Self- Existent)இருக்கும். அத்தகைய மெய்ம்மையை நாம் "பேரியற்கை" அல்லது "அதி-இயற்கை" என்றழைக்கலாம்.  மேலும், அதை நாம் சாதாரண பொதுமக்களின் மொழியில் "கடவுள்" எனவும் அழைக்கலாம்! அதில், வெட்கப்படவோ, கூச்சப்படவோ, தவறாகத்தெரியுமோ  என்றெல்லாம் ஐயங்கொள்ளவோ தேவையில்லை! மாறாக, உயிரும், உணர்ச்சியும், உணர்வும் அற்ற ஊமைச்சடத்தை மூல-மெய்ம்மயாக, அதாவது பரம்பொருளாக, 'கடவுள்' என்பதாகச் சொல்வோமெனில்; அதிலும்  நாம் உணர்வின் ஜீவி எனும் உண்மையைத்துறந்துவிட்டுச் சொல்வோமெனில் அப்போது தான் நாம் உண்மையில் வெட்கப்படவும், கூனிக்குறுகவும், தலைகுனியவும் வேண்டும்! கணிதத்தில் நாம் "அனந்தம்" (infinity)என்கிற அம்சம் பற்றிப்பேசுகிறோம், ஆனால், அதை வெறுமனே நுட்பரீதியாக ஒரு குறியீடாக மட்டுமே கையாளுகிறோம். அதாவது, இணைகோடுகளின் பண்புகளைப் பற்றிப்பேசும்போது, "அவை அனந்தத்தில் சந்தித்துக்கொள்கின்றன!" என்பதாகக்குறிப்பிடுகிறோம். ஆனால், ஆழ்-உளவியல் பூர்வமாக, அசாதாரண- உணர்வு நிலையில், அனந்தத்தை நாம் நேரடியாக அனுபவம் கொள்ள முடியும்! அதாவது, "அனந்தம்" என்பது வெறும் குறியீடு அல்ல, அது நிஜத்திலும் நிஜமான, மிகத்திடமான ஒரு இறுதியான "உணர்வு நிலை"யாகும்.  

இயற்கையை நாம் அதனுடைய புதிரான அம்சத்தையும் அதனுடைய மறைபொருளான இயல்பையும் கழித்துக்கட்டிவிட்டு, அதை வெறும் சடத்தனமான அணுத்துகள்களின் சேர்க்கை என்பதாகக் காணவே விரும்புகிறோம்! ஆனால், 'இயற்கை' என்பது நாம் நினைப்பதுபோல் வெறுமனே 'இயற்கையானது' அல்ல! மாறாக, "பேரியற்கை"யானது தன்னைத்தானே சுருக்கிக்கொண்டதனால் விளைந்ததே இயற்கை! அதாவது, "காலாதீதம்" தம்மைத்தாமே நிராகரித்துக்கொண்டதால் (self-cancellation) விளைந்ததே "காலம்" என்பதாகும். அவ்வாறே, வெளி-கடந்த நிலை தம்மைத் தாமே விலக்கிக்கொண்டதால் விளைந்ததே வெளி (Space)என்பதாகும்! அதாவது "ஒருமை" வெடித்துச்சிதறியதனால்  தோன்றியதுதான் நாம் வாழும் இந்த பன்மையின் உலகம்! 

இங்கே, மேலே "காலாதீதம்" (காலம்-அற்ற நிலை,Timelessness), வெளி-அற்ற நிலை (Spacelessness); "அனந்தம்" (infinity),"பேரியற்கை" (Meta-Nature) போன்ற சொற்களைப் பயன்படுத்துவது கண்டு அஞ்சவோ, அல்லது, முகம்சுளிக்கவோ தேவையில்லை! ஏனெனில், இவை விஞ்ஞானிகள் கையாளுகின்ற சில தந்திரமான, கற்பனையான விஷயங்களைவிட நேர்மையானதும், நிஜத்திலும் நிஜமானதுமாகும். அதாவது, விஞ்ஞானிகள், எதிர்மறை-காலம் (Negative-Time),எதிர்-பொருள் (Anti-Matter),மற்றும் 'பல பிரபஞ்சங்கள்' (Multiple-Universes), 'கற்பனை-எண்கள்' (Imaginary Numbers)போன்ற இல்லாத பொல்லாத கற்பனையான விஷயங்களை இணைத்துக்கொண்டு தங்களது கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள். 

ஏனெனில், இத்தகைய கற்பனையான அம்சங்களைச் சேர்க்காவிடில், அவர்களுடைய சமன்பாடுகளில் உள்ள ஓட்டைகளை, இடைவெளிகளை அடைத்து நிரப்பி சமன்செய்யமுடியாது. இதிலிருந்து தெளிவாகப் புலப்படும் அதிமுக்கியமானதொரு உண்மை என்னவெனில், இயற்கையை, பருப் பொருளின் உலகை, இயற்கையின் சொற்களையும், பருப்பொருளின் சொற்களையும் கொண்டு மட்டுமே விளக்கமுடிவதில்லை, புரிந்துகொள்ளமுடிவதில்லை என்பதுதான்! இவ்விஷயங்களை நாம்  இங்கே வெறும் விவாதத்திற்காக மட்டும் குறிப்பிடவில்லை, இவை மிகவும் சீரிய கவனத்திற்குரியவையாகும். ஏனெனில், 'இயற்கை' யைப் பிரதானப்படுத்தி பிரமாதப்படுத்திப்பேசுகிற 'இயற்கைவாதிகள்' பெரிதும் விஞ்ஞான அறிவையும் விஞ்ஞானத்தின் முடிவுகளையும் தான் சார்ந்திருக்கிறார்கள். ஆனால்,  விஞ்ஞான அறிவு பெரிதும் மட்டுப்பாடானதாயுள்ளது, குறிப்பாக பெரும் ஓட்டைகளையும், இடைவெளிகளையும் கொண்டதாயுள்ளது!

இயற்கையின் இயற்கை பற்றி இக்கட்டுரை வழங்கிடும் புதிய புரிதலை ஒருமுறை தொகுத்துப்பார்த்துக்கொள்வோம்.  இயற்கை  என்பது நிரந்தரமான  ஒரே  தன்மையை, அல்லது சாரத்தைக்கொண்ட ஒன்றல்ல! இயற்கையின்  இயற்கை எத்தகையது? இயற்கை என்பது  ஒரு இயக்கமாகும் -  அது  தனது  அசலான  இயற்கையை    நாடிச் செல்கிறது!    (Nature seeks its own true nature). அந்த  வழிமுறையைத்தான்  நாம்  பரிணாமம் என்கிறோம். இயற்கையின்-உலகில்    நிகழும்   விஷயங்களை,   நிகழ்வுகளை இயற்கையானது   என்று குறிப்பிடுவது வழக்கத்தின்பாற்பட்டது, புரிந்து கொள்ளப்படக்கூடியது, மேலோட்டமானது, ஆகவே அது பிழையானது! இன்னும்,   இயற்கையானது என்பது இறுதியானதல்ல!   முதலிடத்தில், இயற்கையின் தோற்றம் அல்லது தொடக்கம் என்பதும்  இயற்கையானதல்ல!மாறாக, அது இயற்கையல்லாத வேறொரு மெய்ம்மை யின், பேரியற்கையின் மாறியதொரு வடிவமே, விளைவே! ஆகவே  இயற்கையை, உலகம் அல்லது பிரபஞ்சத்தை, அல்லது பௌதீகச்  சடப்பொருளை(இவையனைத்தும் ஒன்றுதான்; ஆகவே இவை எதையும்) முதன்மைப்படுத்தவோ, அடிப்படை அம்சம் எனக்கொள்ளவோ முடியாது!

விஞ்ஞானிகளும், இயற்கைவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும், சடப்பொருளின் சடப்பண்பைத்தான் இயற்கை யின் "சாரம்" என்பதாகக்கருதுகிறார்கள்! அதாவது பிரபஞ்சத்தின் ஒருமை அதன் பொருண்மைப்பண்பில் அடங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்! ஆனால், இவை முற்றிலும் தவறான புரிதலின் முடிவுகளே. ஏனெனில், சடப்பொருள், அல்லது பருப்பொருள் என்பது பரிணாமத்தின் தொடக்க நிலை நிஜமும், மற்றும் பரிணாமத்தின் கருவியும், ஊடகமும் மட்டுமே. அதாவது சடப்பண்பைக்கொண்ட, பருப்பொருள் என்பது இயற்கையின், உலகம், அல்லது பிரபஞ்சத்தின் தொடக்க நிலை நிஜம் மட்டுமே; அதாவது அது வெறும் ஒரு கட்டுமானப்பொருள் (Building-Material) மட்டுமே! ஏனெனில், பருப்பொருள் அதனுடைய  அணுத்துகள்கள் எனும் அடிப்படை நிலை அல்லது வடிவத்திலேயே கால வெளியில் தாறு மாறாக இயங்கிக்கொண்டு ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொண்டு இருக்கவில்லை. மாறாக, அணுத்துகள்கள் ஒன்றோடொன்று இணந்து மூலக்கூறுகளாகி பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து     பல்வேறு  மூலகங்களாகி,  பல்வேறு அண்ட வெளிப்பொருட்களாகி (கேலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்களைக்கொண்ட) ஒரு மாபெரும் பௌதீகப் பிரபஞ்சமாக விரிந்தது! ஆனால், அவை அத்துடன் நிற்கவில்லை! பொருளியல் தளத்தின் அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தீர்த்துமுடித்ததும், அணுத்துகள்கள் பொருண்மைத்தன்மையைக் கடக்கும்விதத்தில் மேலும் சிக்கலான கட்டமைப்புகளில் தம்மை அமைத்துக்கொண்டு உயிர்த்தன்மையை எட்டும் உயிர்ஜீவியாக எழுந்தது! உயிர்த்தன்மையை எட்டியதுடன் நில்லாமல், அடுத்து பல்வேறு உயிரினங்களின் வழியாக புலன் -உணர்வை எட்டியது! ஆனால், உயிர்ஜீவிகளின் புலன் உணர்வு என்பது வெறுமனே புற(வுலக)த்தை உணரவும், அறியவும், ஆராயவும் உதவுகின்ற உணர்வு மாத்திரமே; அதாவது ஒரு உயிர்ஜீவியானது தனது சொந்த இருப்பை உணராமல் அறியாமல் புற(வுலக)த்தை அறிவதனால் என்ன பயன்? ஆகவே, தன்னை தனதிருப்பை உணரக்கூடியவகையிலான "சுய-உணர்வை" எட்டும் வகையிலான மிகவும் சிக்கல்வாய்ந்த பொறியமைப்பாக மனிதஜீவியினுள் மூளையாக அமைந்து அம்மூளையின் செயல்பாட்டின் மூலம் சுய-உணர்வை எட்டியது!

இவ்வாறு, மனிதஜீவியினுள் மிகவும் சிக்கல்வாய்ந்த பொறியமைப்பான மூளையாக அமைந்ததுடன், பெரு-வெடிப்பில் முதன்முதலில், அணுத்துகள்களாக எழுந்த ஆதி இயற்கை விடை பெற்றுக்கொள்கின்றது! அதாவது, சடப்பண்பைக்கொண்ட, பருப்பொருளானது அமைந்திடக்கூடிய ஆக இறுதியான கட்டமைப்பு மனித-மூளை தானாகும்! ஏனெனில், மனித மூளையின் செயல்பாட்டின் விளைவாக வெளிப்பட்ட "சுய-உணர்வு" இயற்கையின் முடிவையும், பேரியற்கையின் தொடக்கத்தையும் குறிப்பதாகிறது! அதாவது "உணர்வு"தான் பேரியற்கையின் அடிப்படைப்பண்பு ஆகும்! 

மனிதஜீவியைப்பொறுத்தவரை, அவன் இயற்கைக்கும், பேரியற்கைக்கும் இடையே தத்தளித்துக்கொண்டிருக்கிறான்! இயற்கையுடன் தங்கிவிடுவதா, அல்லது, பேரியற்கையுடன் சேர்வதா என்ற தேர்வுச்சங்கடத்தில் சிக்கித் தடுமாறுகிறான்.மிகப்பெரும்பாலான மனிதர்கள்தங்களைத்தங்களது உடலுடன் அடையாளப்படுத்திக்கொண்டுவிடுவதன் விளைவாக இயற்கையுடன் தங்கி விடுகின்றனர்! ஆனால், மனிதன் அவனது தோற்றுவாயின்படி, உணர்வை, அதாவது, பேரியற்கையைச் சேர்ந்தவனே! ஏனெனில், "உணர்வு" தான் மனிதன்! உண்மையில், மனிதன்   இயற்கையான
வனோ அல்லது இயற்கையின், பிரபஞ்சத்தின் பகுதியோ அல்ல! அதே நேரத்தில், மனிதன் தன்னை தனது உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வானெனில், அவன் இயற்கையைச் சேர்ந்தவனாகி விடுகிறான்! மாறாக, "தான் ஒரு உணர்வு தான்!" என்கிற உண்மையை உணர்ந்திட்ட ஒருவன் தனது உணர்வுப்பரிணாமத்தின் உச்சியில் பேரியற்கையை, அதாவது பேருணர்வைச் சேர்கிறான்! இந்த உண்மையை உணரும் வரை, அதாவது, தனது உணர்வில் முற்றிக்கனியும் வரை, அவன் இயற்கையைச் சார்ந்தவனாக இருக்கிறான்; எவ்வாறு, ஒரு மரத்தின் காயானது முற்றிக் கனியாகும் வரை அம்மரத்தைச் சார்ந்ததாக இருக்கிறதோ, அவ்வாறு! 

"தான் ஒரு உணர்வு தான்!" என்கிற உண்மையை உணர்ந்து, அவ்வுணர்வில் ஆழ்ந்து நிலைத்து, அவ்வழியே உணர்வில் பெருகி உயர்ந்து பேருணர்வைச் சேர்ந்திடும் போது, ஒருவன் இயற்கை மற்றும் பிரபஞ்சத்திலிருந்து விடுபட்டுவிடுகிறான்;  எவ்வாறு, ஒரு மரத்தின் காயானது  நன்கு கனிந்து கனியானதும் அம்மரத்திலிருந்து அகன்றுவிகிறதோ, அவ்வாறு! இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புறவு என்பது, ஒரு மரத்திற்கும் அதன் காய்களுக்கும் உள்ள அதே தொடர்புறவைப்போன்றதே! காய்கள் மரத்தின் பகுதியாகத் தோன்றினாலும், அவை ஒரு மரத்தின் பிற பகுதிகளான அடித்தண்டு, கிளைகள், சிம்புகள், இலைகள் ஆகியவற்றைப் போன்றதல்ல. மாறாக, காய்கள்,முற்றிக் கனிகளாகக்கூடியவையாதலால், அவை, மரத்தின் முழுமையைக்குறிக்கும் மகுடம் போன்ற பகுதியாகும். மனிதனும், அவ்வாறே இயற்கையிலிருந்து தோன்றினாலும், அவன் இயற்கையை, பிரபஞ்சத்தைச் சேர்ந்தவனோ, அல்லது, பெரும் விஞ்ஞானிகள் கூறுவதைப்போல பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற ஏதோவொரு பகுதியோ அல்ல! மாறாக, மனிதனே பிரபஞ்ச விருட்சத்தின் "கனி" ஆவான்! ஒரே ஒரு குறை, எல்லா மனிதர்களும் தம் உணர்வில் கனிவதில்லை என்பது மட்டும் தான்!

இக்கட்டுரை முன்வைக்கும் பிரதான கண்டுபிடிப்பு, உண்மை, செய்தி என்னவென்றால், மனிதனை இயற்கைப்படுத்த இயலாது, அதாவது, மனிதனது மனதையோ, உணர்வையோ, அல்லது அவனது இருப்பின் தன்மையையோ, அவனது செயல்பாடுகளையோ, நோக்கத்தையோ, இலக்கையோ, எதையும் இயற்கைப்படுத்த இயலாது! இன்னும் இயற்கையையும்கூட  இயற்கைப்படுத்த இயலாது! ஏனெனில், இயற்கையே இயற்கையானதல்ல; அதாவது, இயற்கை தன்னில்தானே தோன்றியதல்ல!மாறாக, ஒரு பேரியற்கை சுருங்கியதனால் ஏற்பட்டவிளைவுதான் இயற்கை!ஆம், இயற்கை என்பது இயற்கையை மீறியதொரு மெய்ம்மையின் வெறும் ஒரு குறியீடு மட்டுமே ஆகும்!இயற்கை என்பது  ஒரு பரிணாம இயக்கமாகும்! அது எவ்வொரு குறிப்பிட்ட இயற்கையுடனும் (அதாவது, இயல்பு அல்லது பண்புடனும்) தங்கி விடுவதில்லை! இயற்கை, அல்லது இயற்கையானது என்பது இறுதியானது அல்ல! இயற்கையின் அசலான இயற்கை (பண்பு) பரிணாமத்தின் இறுதியில்அது எத்தகைய பண்பை எட்டுகிறதோ அதில் தான் அடங்கியுள்ளது!

பரிணாமம் பருப்பொருளை ஒரு கருவியாக, ஊடகமாகக் கொண்டு தொடங்கியதால், சடப்பண்புதான் இயற்கையின் சாரம் என விஞ்ஞானிகளும், இயற்கைவாதிகளும் கூறுவது தவறு! இயற்கையை அதன் தொடக்க நிலைப் பண்பிற்குக் குறைப்பதன் வழியாக, அவர்கள் இயற்கையை மேன்மைப்படுத்தவில்லை, மாறாக, பெரிதும் கொச்சைப்படுத்திவிட்டார்கள். இயற்கைவாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் மட்டுப்படுத்தும் பிடியிலிருந்து இயற்கையை மீட்பதன் அவசியத்தை உணர்த்தவும்; முக்கியமாக, மனிதனை இயற்கைப்படுத்தி அவனை வெறும் சிந்திக்கும் விலங்காகச் சுருக்கிவிடும் போக்கைக் கண்டிக்கவும் தான் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது!

ஆக, நாம் மிகத்தெளிவாக 'இயற்கை'யின் அசலான இயற்கை என்னவென்று புரிந்துகொள்ளவில்லை யென்றால், ஒரு அர்த்தமுள்ளவகையில் இயற்கை பற்றிப் பேச இயலாது! ஆக, இந்நிலையில், இயற்கையை அடிப்படையாகக்கொண்டதொரு முறையான 'இயற்கைவாதம்' எதுவும் இருக்கமுடியாது! தற்போது மேற்குலகில் பேசப்படும் இயற்கைவாதம் என்பது பெரிதும் சிந்தாந்தரீதியான விஷயமேதவிர,அது உண்மையிலேயே தத்துவபூர்வமானது அல்ல எனலாம். "இயற்கையே எல்லாம்" "இயற்கை மட்டுமே போதுமானது" என்பனபோன்ற இயற்கைவாதிகளின்  முழக்கங்கள் அடிப்படையற்றவை. ஏனெனில், இயற்கை என்பது  எவ்வொரு குறிப்பிட்ட இயற்கையுடனும் (இயல்புடனும்) தங்கித்தேங்கி விடாமல், தொடர்ந்து தன்னைத்தானே கடந்து செல்லும் இயக்கமாக விளங்குகிறது. அதாவது, பௌதீகச் சடப்பொருளாகத் தொடங்கிய இயற்கையானது, உயிர் எனும் விசேட இருப்பு நிலையுடன் பொருந்தும் வகையில், உயிர்ஜீவியாக எழுந்து, அதையடுத்து, உணர்வு எனும் இருப்பு நிலையுடன் பொருந்தும்வகையில் மனிதஜீவியாக, மனிதனுள் உணர்வைத்தாங்கும் வகையிலான மூளை எனும் மிகச் சிக்கலான பொறியமைப்பாக மலர்ந்துள்ளது! அதாவது, இயற்கையானது மேன்மேலும் உணர்வுப்படுத்தப்படும் பாதையில் (Spiritualization) முன்னேறிச்சென்றுகொண்டு இருக்கையில்,  மனித-மனதை, அதாவது உணர்வை இயற்கைப்படுத்துவது என்கிற இயற்கைவாதிகளின் பேச்சு படு வியர்த்தமானதாகும். 

பரவலாக, மனிதஜீவிகள் விலங்குஜீவிகளைப்போலவே வாழ்ந்து செல்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலையாக இருக்கிறது  என்பதால், மனிதர்களை விலங்கினத்தில் சேர்த்துவிட முடியாது! மனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றியவன் என்பது அவனது பரிணாமக் கடந்தகாலம் ஆகும். எந்திரங்கள் தான் எந்திரங்கள்; விலங்குகள் எந்திரங்கள் அல்ல! மனிதர்கள் விலங்குகள் அல்ல! ஆனால், மனிதர்கள் மனிதர்களாக ஆகிட வேண்டும்! அதற்கு அவன் மிக ஆழமாக தனது இருப்பு குறித்தும், ஒட்டு மொத்த இருப்பு குறித்தும் உணர்வுக்கு வந்திடவேண்டும்! மனிதர்கள் இயற்கைப்பிராணிகள் அல்ல! ஏனெனில், "உணர்வு" இயற்கையானது அல்ல! மனிதன் ஒரு விலங்கு ஜீவியல்ல, அவன் ஒரு விலங்கு ஜீவியினுள் (அதாவது, உடலினுள்) ஜனித்த உணர்வு ஆவான்! அதாவது உணர்வாக மேலெழ வேண்டிய மனிதன், தன்னை உடலுடன் அடையாளப்படுத்திக்கொண்டு, உணர்வின் வாழ்க்கையை வாழ்வதற்கு மாறாக, ஒரு விலங்கைப்போல, உடலின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்; இது ஒரு தடுமாற்றமான நிலையும், அடையாள-மாறாட்டச் சிக்கலும் ஆகும்! இதைச் சாக்காக வைத்துக்கொண்டு, மனிதனை இயற்கைப்படுத்த முயற்சிப்பது, அதாவது மனிதனை ஒரு விலங்காகச் சித்தரிப்பது என்பது டார்வினிய- பாணி மடமையாகும்!

அடுத்து, இயற்கைவாதமானது, இயற்கையில் உள்ளார்ந்து இருப்பதாகவோ, அல்லது, இயற்கை மீறியதொரு சக்தியினால் சுமத்தப்பட்டதாகவோ யாதொரு குறிக்கோளும் கிடையாது என்கிறது!இவ்வாறு, 'இயற்கை (அல்லது, பரிணாமம்) குறிக்கோளற்றது, நோக்கமற்றது', 'பிரபஞ்சம் அர்த்தமற்றது', 'மனித வாழ்வும் அப்படியே', 'வெறுமனே உயிர்பிழைத்திருப்பது, அதாவது, மரபணுக்களை விருத்தி செய்வதற்காக சந்ததிகளைப் பெருக்குவது என்பதற்கு மேல் மனிதவாழ்க்கைக்கு வேறு குறிக்கோள், இலக்கு எதுவும் இல்லை!' என்றெல்லாம் சொல்வதற்கு 'இயற்கைவாதம்' எனும் தத்துவம் எதற்கு? தவளைகள் தத்துவம் பேசுவதில்லை, என்பதைவிட அவைகளுக்கு முதலிடத்தில் தத்துவம் தேவையே இல்லை! அவ்வாறே, இயற்கைவாதிகளுக்கும் தத்துவம் தேவையில்லை; ஆனால், அவர்கள் தத்துவம்பேசுகிறார்கள், அதற்குப்பெயர்தான் "இயற்கைவாதம்"(Naturalism) எனப்படும் "தவளைகளின் தத்துவம்!"

'அறிவு' குறித்த விஷயத்தில், இயற்கைவாத 'உலகப்பார்வை' யானது இயற்கை விஞ்ஞானங்களைச்சார்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது; இயற்கையில் உள்ள விஷயங்களைப்பற்றியும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதுபற்றியுமான அறிவை பிரதானமாக இயற்கை-விஞ்ஞானமே வெகுசிறப்பாகச்சாதிப்பதாகவும், தனிமனிதனின் அகவய வெளிப்பாடும், சமய மரபும் அல்ல என்பதாகச் சொல்கிறது! ஆனால், இயற்கைவாதம், விஞ்ஞானவாதம்  என்பவை மதங்கள் அல்லாமல் வேறென்ன? குருட்டுத்தனமாக, இயற்கையை வழிபட்டால் என்ன? அல்லது, இயற்கை மீறிய சக்தியாகச் சொல்லப்படும் கடவுளை வழிபட்டால் என்ன? 'இயற்கை'  என்றால்  என்னவென்று இயற்கைவாதிகளுக்குத் தெரியாது! அதுபோலவே, கடவுள் என்றால் என்னவென்று அதி-இயற்கை வாதிகளுக்குத் தெரியாது! 

நல்லது, "இயற்கை இயற்கையானதல்ல!" எனவும், "இறுதி ஆய்வில் இயற்கை என்று எதுவும் இல்லை" எனவும், "இயற்கை என்பது வெறும் பரிணாமக்கருவி அல்லது ஊடகம் மட்டுமே"எனவும் "இயற்கையின் உண்மையான இயற்கை(இயல்பு) உணர்வே" எனவும், "இயற்கை என்பது பேரியற்கையின் சுருங்கிய நிலையே" எனவும் இக்கட்டுரையாளர் முன்வைப்பதால், ஏதோ அவர் "கடவுளை" பின் கதவு வழியாக வீட்டிற்குள் கொண்டுவந்திட முயற்சிப்பதாக எவரும் எண்ணவேண்டாம்! ஏனெனில், நதியானது இறுதியாக சமுத்திரத்தைச் சென்று சேர்வதைப்போல இயற்கையானது இறுதியில் பேருணர்வைச் சேர்வது என்பது முன் தீர்மானிக்கப்பட்ட இலக்கு ஆகும்! பரிணாமப்பயணத்தின் ஒரு ஆர்வமூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், அது தன் இலக்கைச் சென்று அடைவதற்கான பாதை முன்-தீர்மானிக்கப்பட்டதல்ல என்பதுதான்! ஆம், நதியானது சென்று சேருமிடம் முன்-தீர்மானிக்கப்பட்டது போல அது செல்லக்கூடிய பாதை முன்-தீர்மானிக்கப்படுவதில்லை! அதாவது, சடமாகத்தொடங்கிய இயற்கை, ஒரு கட்டத்தில் உயிர் பெற்றது, தற்போது மனிதனுள் உணர்வு பெற்று எழுந்துள்ளது, இறுதியாக அது அடையக்கூடியதாக  மனித உணர்வைக்கடந்த "பேருணர்வு" நிலைதான் எஞ்சியுள்ளது! 

ஆனால்,பரிணாம வரலாற்றில்,  சிற்றுணர்வைத் தாங்கும் ஜீவியாக மனிதஜீவி தோன்றியதைப்போல, பேருணர்வைத் தாங்குவதற்காக, மனிதனையடுத்து வேறொரு ஜீவி தோன்றிடுமா என்றால் அதற்கான சாத்தியம் இல்லை! ஏனெனில், மனித மூளை-அமைப்பு தான் சடப்பொருளால் கட்டமையக்கூடிய இறுதியான சிக்கலான-அமைப்பு ஆகும்! வேண்டுமானால், மூளையின் "நியூரான்கள்" (neurons) எனப்படும் ஸெல்களின் பின்னலமைப்புகளிலும், நியூரான்களில் ஏற்படும் மாறுபாடு (Mutations)களிலும், அடுத்தக்கட்ட நிலைகள் வெளிப்படலாம். இதன் அர்த்தம், மனிதஜீவியின் உணர்வில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் வழியாகத்தான் பரிணாமம் தனது இறுதி முழுமையை அடையவிருக்கிறது. அதாவது, மனிதஜீவி தான் இறுதியான உயிரியல் ஜீவியாவான்! மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிந்துவிட, உணர்வியல் பரிணாமம் தொடங்கியது மட்டுமல்லாமல், மனிதனை (மனித-உணர்வைக்) கொண்டே,  உணர்வின் முழுமை எட்டப்படுகிறது! ஏற்கனவே, அந்த உணர்வின் உச்சமானது உணர்வுமிக்க பல தனிமனிதர்களால் எட்டப்பட்டுள்ளது! அவர்கள் ஏற்கனவே "பேருணர்வு" எனும் பேரியற்கையுடன் கலந்துவிட்டனர்!

ஆம், பேருணர்வு தான் "மூல-மெய்ம்மை" யும், முடிவான "இறுதி-மெய்ம்மை" யும் ஆகும்! இயற்கை உலகம், பிரபஞ்சம் என்பதன் "ஒருமை" அதன் பொருண்மையில் அடங்கியிருக்கவில்லை. மாறாக, பரிணாமத்தின் வழியாக அது அடையக்கூடிய இறுதிப் பேருணர்வில் தான் அடங்கியிருக்கிறது! The Unity of the Universe (Nature) lies not in its materiality but what it ultimately reaches through evolution, that is, in Cosmic Consciousness! 

இயற்கை (பௌதீகப்பிரபஞ்சம்), மனிதன் (சிற்றுணர்வு), கடவுள் (பேருணர்வு) இம்மூன்றும் இறுதியில் ஒன்றே!

மா.கணேசன்/14.10.2016
---------------------------------------------------------------

Friday, 21 October 2016

உயிர் எனும் புதிர்!



  நோக்கமின்றி, குறிக்கோளின்றி
  சுழன்று கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில்
  நோக்கத்துடனும் குறிக்கோளுடனும்
  இலைகளைத்தேடி ஊர்ந்து செல்லும்
  அற்புதத்திற்குப் பெயர் புழு!

உயிர் எவ்வாறு தோன்றியது? இக்கேள்வி மனிதகுலத்தை ஆதியிலிருந்தே கவர்ந்து வந்துள்ளது.ஒரு அம்சம் அல்லது ஒரு ஜீவி தன்னைப்பற்றிய உணர்வுக்கு வந்ததும், அது உடனே தன்னைச்சுற்றியுள்ள உலகைப்பற்றியும், தன்னைப்பற்றியும், தன்னுடைய ஆரம்பம் பற்றியும் கேள்விகளைக்கேட்கத்தொடங்கி விடுகிறது. ஆகவேதான், ஆதித்தொல்கதைகளும், புராணிகங்களும் உலகின்பிறப்பை மையமாகக் கொண்டவையாக உள்ளன. ஆனால், விஞ்ஞானம் பெருமளவு முன்னேற்றம்
அடைந்திருந்தாலும்,  இன்றளவும் 'உயிர்' எவ்வாறு தோன்றியது, 'உயிர்' என்றால் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை அதனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஒருவகையில், உயிர் எவ்வாறு தோன்றியது என்பதுபற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.ஆனால், "உயிர்" என்றால் என்ன என்பதற்கு தெளிவான யாதொரு பதிலும், விளக்கமும் இதுவரை இல்லை.

உயிரானது, தன்னியல்பாக, புறக்காரணமின்றி தானே(spontaneous generation)தோன்றியது; கடவுளால் படைக்கப்பட்டது ( creationism);விண்வெளி யிலிருந்து பூமிக்குவந்தநுண்ணுயிரிகள்அல்லது  மூலக்கூறுகளால் உருவானது (panspermia);அளவுரீதியான கூறுகளின் திரட்சியினால்
விளைந்த பண்பு; சடப்பொருளானது படிப்படியாக உயர் தரம் பெற்று உருவானது; சடப்பொருளின்இயல்மலர்ச்சியாகத்தோன்றியது(emergentism) என உயிர்த்தோற்றம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.

அதே நேரத்தில், உயிர் என்றால் என்ன என்பதை முற்றிலும் பொதுவிதிகளிலிருந்து தனிநிகழ்வைத்தீர்மானிக்கும் தருக்க முறையாலும், அல்லது, முற்றிலும்  பரிசோதனைபூர்வமான முறையாலும்புரிந்து  கொள்ள முடியாது. இத்தகைய மாபெரும் சவாலை விஞ்ஞான அணுகுமுறையுடன், தத்துவஅணுகுமுறை, ஆழ்-முக சிந்தனை மற்றும் அகத்திறஉணர்வையும் (intuition) சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்டதொரு அணுகுமுறையால் மட்டுமே சந்திக்க முடியும்.

உயிர் என்பது எத்தகைய பரிமாணம் என்பதை, தவிர்க்கவியலாமல் உயிரற்ற பொருட்கள் அல்லது சுற்றியுள்ள பௌதீகஉலகிற்கு எதிராக நிறுத்திப்பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், உயிர் என்பது சடப்பண்பை மீறியதொரு நிலை அல்லது பரிமாணம் ஆகும். முக்கியமாக உயிரை சடப்பொருளின்ஒரு வகை யாகவோ, மிக விசேடமானதொரு நிலையாகவோ சுருக்கிக்காண முடியாது. ஆனால், விதிவிலக்கின்றி விஞ்ஞானிகள் அனைவரும் பொருளின் சொற்களில்தான் உயிரை விளக்க முயற்சிக்கிறார்கள். இதற்குக்காரணம் அவர்கள் சடப்பொருளை ஒரு அடிப்படையாக, தரஅளவாக (Standard) கொள்வதே ஆகும். ஒருவகையில், சடப்பொருள் என்பது ஒரு அடிப்படை ஊடகமாக (Medium)அமைந்துள்ளது என்பதென்னவோ உண்மைதான்.ஆனால், அதன் அர்த்தம் அனைத்து உயர் வளர்ச்சி நிலைகளையும் பொருளின் பண்புகளுக்குச் சுருக்கி, பொருளின் சொற்களில் தான்காணவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்பதில்லை. இவ்வாறு சுருக்கித்தான் காண வேண்டும்என்றால் பரிணாமம் என்பது தேவையில்லாத, அர்த்தமற்ற ஆடம்பரம் என்றாகி விடும். பிறகு, விஞ்ஞானம், ஆராய்ச்சி யாவும் அர்த்தமற்றவையாகிவிடும்.

ஆக, 'உயிர்' என்பது வேறு, உலகம் என்பது வேறு எனவும்;  உயிர்ப்பண்பு வேறு, சடப்பண்பு வேறு எனவும் பிரித்துப் பார்க்காமல் 'உயிர்' என்பதை முறையாகப் புரிந்துகொள்ளமுடியாது. அதேபோல், உயிர்-ஜீவி என்பது வேறு, உயிர் என்பது வேறு எனப் பிரித்துப் புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

ஒரு உயிர்-ஜீவி என்பது உலகத்திற்கும் (சுற்றுப்புறம்), 'உயிர்' என்பதற்கும் இடையேயான பாலம்அல்லது ஒரு  இணைப்புக்கண்ணி (Interface) போன்ற தாகும். அந்த இணைப்புப் புள்ளியில்உலகமும் உயிரும் சந்தித்துக்கொள்ளவும் உறவாடவும் செய்கின்றன. அதே நேரத்தில், உயிரைப்
பொறுத்தவரை, உலகுடன் உறவாடவோ, வினைபுரியவோ  எதுவும் இல்லை! மேலும், உலகைப்பொறுத்தவரையிலும் தன்னுடன் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை; ஆகவேதான், உலகம் (பருப்பொருள்) பரிணமிப்பதாயுள்ளது. ஆக உலகம் அல்லது பருப்பொருள் என்பது பரிணமித்து உயிர்-ஜீவியாக எழுந்தபிறகு, அது மீண்டும் பழைய பருப்பொருள் அல்ல. அவ்வாறு அதை பருப்பொருளின் சொற்களில் விவரிப்பது என்பது 'உயிர்' என்றால் என்னவென்று முறையாகப்புரிந்து கொள்ளஉதவிடாது.  அவ்வாறு நாம் விவரிக்கும் போது நாம் உண்மையில் உயிர்-ஜீவியைத்தான் விவரிக்
கிறோமே தவிர 'உயிரை' விவரிப்பதில்லை

ஒருவகையில், லாஸ்கானோ (Lazcano 1994)சரியாகத்தான் சொல்லியுள்ளார். அதாவது, 'உயிர்என்பது  இசையைப்போன்றது, அதை விவரிக்கமுடியும் ஆனால் விளக்கமுடியாது.'

ஒரு உயிர்-ஜீவி என்பது பருப்பொருளின் உலகம் தன்னைத்தானே கடந்து செல்வதற்காக பயன்படுத்திக்கொள்ள உருவாக்கியதொரு ஊர்தி அல்லது பாலம் போன்றதாகும். தன்னைத்தானே கடந்து செல்வது என்பது பொருண்மையல்லாத வேறொரு இருப்பு நிலையைத் தொடர்புகொள்ளத்
தானாகும்! பருப்பொருளிலிருந்து உருவானது என்கிற வகையில், ஒரு உயிர்-ஜீவி என்பது பருப்பொருள்-உலகின் "பிரதிநிதி" யாக விளங்குகிறது எனலாம். அதே நேரத்தில், பருப்பொருளாலான உயிர்-ஜீவியானது, பருப்பொருளின் உலகில் இருந்தாலும், இயங்கினாலும், தனது இயக்கத்திற்கான(எரி)சக்தியை (Energy) பருப்பொருளின் உலகிலிருந்து எடுத்துக்கொண்டாலும், பெரிதும்
அது பருப்பொருளின் உலகைச் சேர்ந்ததாய் இருப்பதில்லை. எவ்வொரு உயிர்-ஜீவியும் அதன்பாதங்களை இவ்வுலகில் ஊன்றியிருந்தாலும், அதன் தலையை வேறொரு உலகினுள் நுழைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்! ஆகவேதான், ஒரு உயிர்-ஜீவி என்பதை இப்பிரபஞ்சத்தி னுள்ளே இயங்கும் இன்னொரு பிரபஞ்சம் என்று சொல்வது மிகப்பொருத்தமாயிருக்கும்!

ஆம், பருப்பொருளின் பிரபஞ்சம் தனது சடப்பண்பைக் கடந்து செல்லும்பரிணாம வழிமுறையில்,தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொண்டு எடுத்த புதியதொரு அவதாரம் தான் "உயிர்-ஜீவி"
என்பதாகும்!

இவ்விடத்தில், பருப்பொருளின் உலகிற்கும் உயிர்-ஜீவிக்கும் உள்ள தொடர்புறவு எத்தகையது என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியமாகும். உலகம், அல்லது சுற்றுப்புறம், அல்லது பருப்பொருள், அல்லது இயற்கை என்று அதை எவ்வாறு அழைத்தாலும், அது எவ்வொரு உயிர்-ஜீவிக்கும் எதிராக இருப்பதோ, செயல்படுவதோ இல்லை. பரந்த பிரபஞ்சத்தைப்பொறுத்தவரை அது பாராமுகமாக (Indifferent) இருப்பதாகத்தெரிவதென்னவோ உண்மைதான்! ஆனால்,
பூமிக்கிரகத்தைப்பொறுத்தவரை, அது உயிர்-ஜீவிகளுக்குப் பெரிதும் ஆதாரத்துணையாகத்தான்அமைந்துள்ளது.

ஒருவகையில், உயிர்-ஜீவிகள்தான் பருப்பொருள் உலகின் பண்புகளுக்கு மாறான வகையில், எதிர்த் திசையில் இயங்குவதாகச் சொல்லலாம்! ஒருமுறை  பருப்பொருள்- உலகின் ஒரு பகுதியானது மாற்றமடைந்து உயிர்-ஜீவியாக மாறிய பிறகு, அந்த உயிர்-ஜீவியானது தனது சுற்றுப்புற (உலக)த்திலிருந்து பிய்த்துக்கொண்டு தனியே பிரிந்து நிற்பதாகிறது! உயிர்-ஜீவி என்பது அது  தோன்றிய வகையின்படி, அது பருப்பொருள் உலகம் அல்லது இயற்கையின் (மிக வித்தியாசமானதொரு புனிதப்பணித்திட்டத்தை சிரமேற் கொண்டியங்கும்) ஒரு பிரதிநிதி போன்றதே. ஆம்,
உயிர்-ஜீவியானது இயற்கையின் பிரதிநிதியாக செயல்பட்டாலும், அது இயற்கையின் பருப்பொருளின் பண்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் இயற்கையின் உள்ளார்ந்த பரிணாம-விழைவின் இலக்கைப் பிரதிநிதித்து வம் செய்யும் கருவியாகவே விளங்குகிறது.

பருப்பொருளாலான தொடக்க-நிலை இயற்கையானது ஒரு உள்ளார்ந்த விழைவை, உந்துதலை, வேட்கையைக்கொண்டிருக்கிறது என்பது மிகத்தெளிவாக அது இன்றுவரை என்னென்னவாக பரிணாமம் பெற்றுள்ளது என்பதிலிருந்து சந்தேகத்திற்கிடமின்றி புலனாகியுள்ளது. அதேநேரத்தில்
இயற்கையின் உள்ளார்ந்த அந்த விழைவை, அதை ஒருவித 'ஏக்கம்' என்று சொல்வது இன்னும்அதிகப்பொருத்தமாக இருக்கும், அந்த ஏக்கம் எத்தகையது என்றால், எவ்வாறேனும் தனது பொருண்மைப்
பண்பினைக்கடந்து சென்றுவிடவேண்டும் என்பதே ஆகும். அதாவது சடப்பொருள்ஏன் தன் சடப்பண்பைக் கடந்திட வேண்டும் எனும் கேள்வியை நாம் இவ்விடத்தில் கேட்பது மிக அவசியம். ஏனெனில், சடப்பொருள் அல்லது பருப்பொருள் என்பது உண்மையில் வேறு ஏதோவொரு மெய்ம்மையின் சுருங்கிய நிலை அல்லது வடிவமாகத்தான் இருக்கவேண்டும்! ஆகவே
தான் அது தன் அசலான நிலையை அடையவேண்டி ஏக்கம்கொள்வதாகிறது!  அதேநேரத்தில்,சடப்பொருளின் இந்த ஏக்கம் எந்திர-வகைப்பட்டதாகும் (mechanical).ஒரு சுருள்வில் (spring)லானது சுருக்கப்பட்ட நிலையில் வைக்கப்படும்போது அது மீண்டும் தன் பழைய நிலைக்குத்
திரும்புவதற்கான அழுத்தத்தைக்கொண்டிருப்பது போன்றதாகும்

சுய-அமைப்பாக்கமுறையில் (Self- Organization) தன்னைக்கட்டமைத்துக்கொள்ளுதல் என்பது, பருப்பொருள் உலகின் மிக மையமான உள்ளார்ந்த விழைவு ஆகும். ஆம், பருப்பொருளானது
யாதொரு மாற்றத்திற்கும் உட்படாமல், பரிணமிக்காமல், அப்படியே எக்காலத்திற்கும் வெறும்சடமாக, சோம்பியவாறு, ஊமையாக, உணர்ச்சியற்ற, உணர்வற்ற ஒன்றாக; எந்திரத்தனமான இயக்கத்தில், அடிப்படை பௌதீக விசைகள் மற்றும் விதிகளால் ஆட்டுவிக்கப்படும் ஒன்றாகவே இருக்கமுடியாது.

ஸ்டீஃபென் ஜே. கௌல்டு  (Stephen Jay Gould) எனும் உயிரியல் பரிணாம விஞ்ஞானி, தனது "வியத்தகு உயிர்" (Wonderful Life)எனும் நூலின் கடைசிப்பகுதியில்,

   "மனிதப் பரிணாமம் என்பது  ஒழுங்குமுறையற்ற (random)தும்,      குறிக்கோளற்றதுமான
    ஒரு வழிமுறை எனப்புரிந்துகொள்வது அவசியம். அதாவது,  நம்முடைய தற்பெருமை தான்
    இயற்கை வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளதாகக் கற்பிக்கச்செய்கிறது. உயிரின் நாடாவை
    திரும்பவும் முதலிலிருந்து ஓடச்செய்தோமெனில், வரலாறு என்பது வேறாகவே வெளிப்
    படும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம். ஏனெனில், நாம்  ஒழுங்குமுறை
    யற்றதும், குறிக்கோளற்றதுமான  ஒரு வழிமுறையின் விளைபொருள் என்பதால், அவ்வழி
    முறையானது  மீண்டும் இதே நிகழ்கால நிலைமைக்குத் திரும்பாது. ஆகவே, ஒரு நிமிடம்
    கூட நாம் விசேடமானவர்கள் என எண்ணாமலிருப்போமாக..."

என எழுதியுள்ளார். ஆனால், ஸ்டீஃபென் ஜே. கௌல்டு - ன் கூற்றுக்கு மாறாக, மீண்டும் பரிணாம நாடாவை, முதலிலிருந்து ஓடச்செய்தோமெனில், அதே வரலாறானது அச்சுப் பிறழாமல் மீண்டும்அப்படியே நிகழ்ந்தேறும். மனிதஜீவிகளாகிய நாமும் அப்படியே இங்கிருப்போம் இப்போதிருப்பது
போலவே! யாதொரு மந்திர மாய சக்தியினால் அல்ல; மாறாக, ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்கள் பெரிதும் மதிக்கக்கூடிய அதே  ஒழுங்கு முறை யற்றதும், குறிக்கோளற்றதுமான வழிமுறையினால்மட்டுமே அது சாத்திய மாகும்! ஏனெனில்,  ஏற்கனவே மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்க
ளும் இப்போது இங்கிருப்பதும் அதே வழிமுறையின் விளைவாகத்தானே சாத்தியமாகியது!

கடவுளாலோ, அல்லது வேறு எவ்வொரு சக்தியாலோ வழிநடத்தப்படாத, ஒழுங்குமுறைப்படுத்தப்படாத ஒரு இயற்கை வழிமுறை ஏன், எதற்காக உயிருள்ள ஜீவிகளையும், சிந்திக்கும் திறனுள்ள சுய-உணர்வுள்ள மனிதஜீவி களையும் விளைவிக்கவேண்டும்? ஆக, எத்தனை முறை பரிணாம
நாடாவை, முதலிலிருந்து ஓடச்செய்தாலும், மீண்டும் மீண்டும், அதே விளைவுகள்தான் தோன்றும்! கடவுள் கூட தவறிழைத்திடக்கூடும், அல்லது மனம் மாறி வேறுவிதமாகப் படைப்பைச் செய்திடக்  கூடும்; ஆனால், இயற்கை வழிமுறை தவறிழைக்காது! அதே வேளையில், இயற்கையின் வழிமுறை உண்மையிலேயே தாறுமாறானதும், ஒழுங்குமுறையற்றதும், குறிக்கோளற்றதும், இலக்கற்றதும்தானா என்பது குறித்து பிறகு ஆய்ந்தறிவோம்.

ஆம், அடிப்படை அணுத்துகள்கள் அவற்றின் போக்கில் தனித்து விடப்பட்டால், அவை ஒன்றோடு ஒன்று இணைவதும்,  பிரிவதுமாக,  பல்வேறு சாத்தியப்பாடுகளைப் பரிட்சித்து, முதலில், நிலைப்பு கொண்ட மூலக்கூறு களாகவும், பிறகு பல்வேறு மூலகங்களாகவும், இவ்வாறு மேன்மேலும் சிக்க
லான அமைப்புகளாக எழும் பரிணாம வழிமுறையில், ஒரு கட்டத்தில் உயிர்ப்பண்பு பெற்ற மூலக்கூறுகளாக, அதாவது, நுண்ணுயிரிகளாக மாற்றமடைவதும், பிறகு, நுண்ணுயிரிகள் இணந்து பல்வேறு விலங்கு மற்றும் தாவர ஸெல்களாகி, பிறகு பல ஸெல்லுயிரிகளாகவும், முடிவில் மனிதஜீவிகளாகவும் வெளிப்படுவது என்பது தவிர்க்கவியலாது நிகழ்ந்துவிடுகிறது!

மேலும், மீண்டும் பரிணாமத்தை முதலிலிருந்து தொடங்கச்செய்தால், வேறுவிதமாகத்தான் பரிணாம வரலாறு அமையும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம் என்பதாகவே அமைந்தாலும், அதனால், தற்போதுவரை வெளிப்பட்ட வரலாறும், மனிதஜீவிகளாகிய நாமும்
நிஜமில்லை என்றாகிவிடப்போவதில்லை! ஏனெனில், இப்போதுள்ள நிஜமும், நிலையும் தான் ஆகச்சிறந்த சாத்தியப்பாடு(The best possible state or world)ஆகும்! மேலும்,காலத்தின் அம்பு (The Arrow of Time) ஒருபொதும் பின்னோக்கிச் செல்வதில்லை!

அதாவது, பூமியின்மீது உயிரி(உயிர்-ஜீவி) களும், மனிதஜீவிகளும் தோன்றியது, தற்செயலானதோ அல்லது விபத்து போன்றதோ அல்ல; மாறாக, அவை தவிர்க்கவியலாதவகையில் தோன்றியுள்ளன!
ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்களின் கூற்று தவறானது. அதாவது, மீண்டும் பரிணாமத்தை முதலிலிருந்து தொடங்கச்செய்தால், வேறுவிதமாகத்தான் பரிணாம வரலாறு அமையும் என்பதும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்க மாட்டோம் என்பதும் முற்றிலும் தவறானதாகும்! ஏனெனில், நாம்
எதிர்கொள்ளவேண்டிய தவிர்க்கவியலாத நிஜம், நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பது மட்டுமே! இதற்கு மாறாக,  "மீண்டும் முதலிலிருந்து தொடங்கினால், நாம் இங்கிருக்க மாட்டோம்"
என்பது போன்ற பேச்சுகள் முட்டாள்தனமானவையாகும். இத்தகைய பேச்சுகள் யாவும் ஏற்கனவே நிகழ்ந்தேறியுள்ள இயற்கை மற்றும் பரிணாம தருக்கங்களுக்கும், வழிமுறை மற்றும் விளைவுகளுக்கும் புறம்பானவையும், எதிரானவையுமாகும்.

அடுத்து, ஸ்டீஃபென் ஜே. கௌல்டு அவர்களின் இன்னொரு கூற்றும், அதாவது, "நம்முடைய தற்பெருமை தான் இயற்கை - வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளதாகக் கற்பிக்கச்செய்கிறது" என்பதும் தவறானதாகும். இதே தொனியில், நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீவென்
வெய்ன்பெர்க் அவர்களும் சொல்லியுள்ளார். அதாவது, "எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப்புரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது." என்பதுதான் அக்கூற்று. உண்மையில்,  'இயற்கை-வரலாற்றுக்கு அர்த்தம் உள்ளது' , "பிரபஞ்சம் அர்த்தமுடையது"
"பரிணாமத்திற்கு குறிக்கோள் மற்றும் இலக்கு உண்டு", "மனிதனின் உயரிய பரிணாமப்பொறுப்பு மனிதனை முக்கியத்துவம் வாய்ந்தவனாக ஆக்குகிறது" என்றெல்லாம் கற்பிக்கச்செய்வது நம்முடைய கர்வமோ,  அகம்பாவமோ, தற்பெருமையோ, அல்லது, "நாம் விசேடமானவர்கள்" என்கிற கிறுக்குத்தனமான எண்ணமோ அல்ல! ஆனால், 'இயற்கை-வரலாற்றுக்கு அர்த்தம் எதுவும் இல்லை' ,"பிரபஞ்சம் அர்த்தமற்றது", "பரிணாமம் ஒழுங்குமுறையற்றதும், குறிக்கோளற்றதுமான  ஒரு வழி
முறை" என விஞ்ஞானி ஸ்டீஃபென் ஜே. கௌல்டு, மற்றும் விஞ்ஞானி ஸ்டீவென் வெய்ன்பெர்க் ஆகியோரைக் கூற வைப்பது அவர்களுடைய தாழ்வு-மனப்பான்மையும், அவர்களுடைய  தவறான (மிதமிஞ்சிய பொருண்மைவாத, எந்திரவாத, சுருக்கல்வாத) விஞ்ஞான அணுகுமுறையும் தானேதவிர வேறில்லை.

உண்மையில், பரிணாம வழிமுறை என்பது தாறுமாறானதும் (random), ஒழுங்குமுறையற்றதும்,குறிக்கோளற்றதும், இலக்கற்றதுமாகத்தான் தொடங்கியது என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று ஆகும். ஆனால், இயற்கையின் வழிமுறையில் அடங்கியுள்ள ஒரு முரண் என்னவெனில், அர்த்தமற்றதும், குறிக்கோளற்றதுமானதொரு வழிமுறை 'ஏன்' அர்த்தம் நாடுகிற, குறிக்கோள் நிறைந்த மனிதஜீவிகளை விளைவிக்கவேண்டும் என்பதுதான்! ஒருவேளை, அர்த்தம் நாடுகிற, குறிக்கோள் நிறைந்த மனிதஜீவிகளை விளைவிப்பது தான் குறிக்கோளற்றதும், இலக்கற்றதுமாகத்தொடங்கிய பரிணாம வழிமுறையின் குறிக்கோளாக இருக்கலாம்! எப்படியிருந்தாலும் இதில் யாதொரு முரண்பாடும் இல்லை என்பதே உண்மை.

எவ்வாறெனில், "பெரு-வெடிப்பு" எனும் பிறப்பு நிகழ்வின்போது, வெறும் அணுத்துகள்களாகத்தான் பிரபஞ்சம் தொடங்கியது. உயிரற்ற, உணர்ச்சியற்ற, உணர்வுமற்ற பௌதீகச் சடப்பொருளான அணுத்துகள்கள்தான் பரிணாமத்திற்கான மூலதனம், முதலீடு யாவுமாகும்! அணுத்துகள்களின் சேர்க்கையின், அவற்றின் சுய-அமைப்பாக்கமுறையின் (Self-Organization)விளைபொருட்கள்தான் இன்று நாம் காணும் பரந்து விரியும் பிரபஞ்சமும், அதிலுள்ள உயிர்-ஜீவிகளும், மனிதஜீவிகளும் யாவும் ஆகும். ஆம், யாதொரு வழிநடத்துதலும், ஒழுங்குமுறைப்படுத்துதலும், வரைவும்,
திட்டமும், குறிக்கோளும் இல்லாமல், உணர்வற்ற சடத்துகள்களைக்கொண்டு தொடங்கியதுதான் இயற்கைப்பரிணாம வழிமுறை என்பது. இவ்வழிமுறை யின் நெடிய வரலாற்றின் ஒரு கட்டத்தில் உயிருள்ள ஜீவிகளும், இன்னொரு கட்டத்தில் சிந்திக்கும் திறனும், சுய-உணர்வும் கொண்ட மனிதஜீவிகளும் விளைந்தன என்பது வினோதமே என்றாலும், அவை தவிர்க்கவியலாத விளைவுகளே. அதாவது, குருட்டாம்போக்கான வழிமுறை ஒரு கட்டத்தில் குருடு நீங்கி பார்வை பெறுவது என்பதுதான் அவ்வழிமுறையின் குறிக்கோள் ஆகும்! இதற்கு மாறாக, முடிவேயில்லாமல் குருட்டாம்போக்கிலேயே இருட்டில் தடுமாறிக்கொண்டு தொடர்ந்திடும் ஒரு வழிமுறை விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதுபோல குறிக்கோளற்றது என்கிற அதன் போக்கில் நிலைமாறாததாய் (Consistent) இருக்கலாம்; ஆனால், அத்தகைய வழிமுறை அர்த்தமற்றதாகும்.

தொடர்ந்து மேலே செல்வதற்கு முன் "இயற்கை" பற்றிய விஞ்ஞானிகளின் புரிதல் எத்தகையதாய் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. ஏனெனில், அவர்கள் இயற்கை என்பது இப்படித்தான் இருந்தாகவேண்டும் என வற்புறுத்துவதாகத்தெரிகிறது! இயற்கையின் அசலான இயற்கை (இயல்பு) எத்தகையது என்பதை அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டதற்கான தடயம்எதுவும்  தெரியவில்லை. உண்மையில், எல்லா காலத்திலும் ஒரே தன்மையிலமைந்ததாக இயற்கை இருக்கவில்லை. அதே நேரத்தில், அது எப்போதும் மாறிக் கொண்டேயும் இருக்கவில்லை! மாறாக,இயற்கை தனது அசலான இயற்கையை நாடிச்சென்று கொண்டுள்ளது; அத்தகைய இயக்கத்திற்குப் பெயர்தான் பரிணாமம் என்பதாகும். இயற்கை, பிரபஞ்சம், உலகம்,பருப்பொருள் என எவ்வாறு
அதை அழைத்தாலும், அது ஒரு பரிணாம இயக்கமே. இயற்கை என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து, ஒரு குறிப்பான இலக்கு- நிலையை நோக்கிச்செல்லும் ஒரு இயக்கமாகும். ஆம், இலக்கு இல்லாத யாதொரு இயக்கமும் இல்லை; இருக்கவும் முடியாது. ஏனெனில் அது முரண்பாடானது.  எவ்வொரு இயக்கமும் இலக்கைக் கொண்டதே; இலக்கு இல்லாவிடில் அதற்குப்பெயர் இயக்கமல்ல, அது தாறுமாறானதொரு போக்கு ஆகும். மேலும்,   "மாற்றம்" என்பதற்கும், "பரிணாமம்" என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. மாற்றத்திற்காக மாற்றம் என்பது முரண்பாடானது,
அல்லது மேலோட்டமானது. பண்பினடிப்படையிலான மாற்றத்தைப்பின் பற்றிச் செல்லும் போக்கிற்குப்பெயர்தான் பரிணாமம் என்பதாகும்.

எவ்வொரு இயக்கத்திற்கும் தொடக்கம், அல்லது ஒரு ஆரம்பம் உள்ளது; ஆகவே அதற்கு ஒரு முடிவும், அடைவிடமும் உண்டு. இயற்கை என்பது அத்தகையதொரு இயக்கமே. பருப்பொருள் (அணுத்துகள்கள்) தான் இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பதன் தொடக்க நிலையாகும். அதாவது,
சடத்தன்மை தான் இயற்கையின் தொடக்க நிலைப் பண்பு ஆகும். தொடர்ந்த பரிணாம வளர்ச்சியினால், பருப்பொருள் ஒரு கட்டத்தில் உயிரைத் தாங்கும் கட்டமைப்பாக மாறியது; அக்கட்டத்தில்,இயற்கை உயிர்பெற்று எழுந்தது என்று சொல்லலாம்! அதையடுத்துத் தொடர்ந்த உயிரியல் பரிணாமத்தின் உச்சமாக மனிதனுள் "சுய-உணர்வாக" இயற்கை உணர்வுபெற்று எழுந்தது என்று சொல்லலாம்!

அதாவது,  இயற்கை அல்லது பிரபஞ்சத்தின் தொடக்க நிலையில், பருப்பொருளை (அணுத்துகள்களை)க்கொண்டு நிகழ்ந்த பரிணாம வழிமுறை என்பது பெரிதும் எந்திரத்தனமாகவும், ஒழுங்கு முறையற்ற தாகவும், குறிக்கோளற்றதாகவும் தான் இருந்திருக்கமுடியும். ஏனெனில், ஒழுங்கு (Order), திட்டவரைவு (Planning), குறிக்கோள் (Purpose) யாவும் பரிணமிக்கும் அம்சங்களேயாகும். இதேபோல், அறிவுக்கூர்மை (Intelligence), அறிநிலை (Awareness), உணர்வு (Consciousness) போன்றவையும் பரிணமிக்கும் அம்சங்களே. இவ்வாறு புதிய புதிய அம்சங்களும், பண்புகளும் சேர்ந்து கொண்டே முன்னேறிச்செல்லும் ஒரு ஒப்பற்ற இயக்கமே பரிணாமம்
என்பதாகும்!

ஆரம்பக்கட்டத்தில், பரிணாமம் என்பது பொருண்மையின் அதாவது சடப்பண்பினைக்கொண்டு அமையக்கூடிய சாத்தியப்பாடுகளைத் தீர்த்து முடிப்பதில் ஈடுபட்டிருந்தது. இந்தப் பரிணாமக்கட்டத்தை நாம் பொருளியல் கட்டம் (Inorganic or Material Sector)என்று அழைக்கலாம். அதே நேரத்தில், பொருளியல் கட்டம் முடிவில்லாது நீண்டுகொண்டே செல்லவில்லை. மாறாக,
அணுத்துகள்களின் மிகச் சிக்கலான கட்டமைப்புகள் ஒரு எல்லையைத் தொட்டு உயிர்ப்புபெற்றதும் பரிணாமம் உயிரியல் கட்டத்திற்குள் பிரவேசித்தது. இப்பரிணாமக் கட்டத்தை நாம் உயிரியல் கட்டம் (Organic or Biological Sector)என்று அழைக்கலாம். இக்கட்டத்தினுள் உயிர்ப்பண்பி னைக்கொண்டு அமையக்கூடிய  சாத்தியப்பாடுகளைத் தீர்த்து முடிப்பதில் பரிணாமம் ஆழ்ந்தது. அதாவது பரிணாமம் பல்வேறு உயிரினங்களை விளைவித்தது. ஆனால்,இயற்கைப்பரிணாமத்தின் உள்ளார்ந்த விழைவு பல்வேறு உயிரினங்களை உருவாக்குவதல்ல; மாறாக, அவ்வுயிரிகளின் வழியாக இயற்கை தேடியது இயற்கையின் வேட்கையை முற்றாகத்தணிக்கும்,அதாவது அதன் வேட்கையை முடிவிற்குக்கொண்டு வரும் வகையிலான வேறொரு வகைப் பண்பு அல்லது இயல்பையே ஆகும். அத்தகையதொரு பண்பு அல்லது அம்சம் எதுவென்றால், அது "உணர்வு" என்பது தான்.

உண்மையில்,  ஒரு உயிர்-ஜீவியின் பிரத்யேக அடிப்படை அம்சங்களாக, தன்னைத்தானே பிரதியெடுத்துக்கொள்ளுதல் (இனப்பெருக்கம்), வளர்சிதை மாற்றம், சுற்றுப்புறத்துடன் தகவமைதல் போன்றவையே பொதுவாக உயிரியல்விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுபவையாகும். சிலர் உயிர்
என்பது பொருள், சக்தி, மற்றும் தகவல் (Information) ஆகியவற்றால் ஆனது எனவும்,  சிலர், உயிரை பொருளியல் அமைப்புமுறை எனவும், சிலர் அதை ரசாயண அமைப்புமுறை எனவும், சிலர், சிக்கலான அமைப்பு முறையின் விசேடப்பண்பு எனவும் குறிப்பிடுவர். ஆனால், ஒருவகையில் இவை யாவும் அடிப்படை அம்சங்களே எனினும் எவரும் "உணர்வு" (Consciousness) எனும்
அம்சம் பற்றிக் குறிப்பிடவேயில்லை.

ஆம், "உணர்வு" தோன்றுவதற்கான ஒரு முன்-தேவையாக, முன்- நிபந்தனை யாகத்தான் "உயிர்" என்பது உருவானது! உணர்வின் மிகச்சிறியஆரம்பம், முதல் உயிர்-ஜீவியுடன் தொடங்கிவிடுகிறது எனலாம். மிக அருகிலுள்ள பொருட்களை உணரக்கூடிய மெல்லிய 'உறுத்தல்-உணர்வில்' ஆரம்பித்து,  மிகத்தெளிவாகச் சுற்றுப்புறத்தை அறியக்கூடிய புலன்-வழி உணர்வாக வளர்ந்து, பிறகு புற-உலகை மட்டுமல்லாமல், தனது சொந்த இருப்பையும் உணரக்கூடிய "சுய-உணர்வாக" மனிதனுள் வெளிப்பட்டதுடன், பரிணாமம் உணர்வுப்பூர்வமான வழிமுறையாக மாறியுள்ளது. அதாவது,மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிந்துவிட்டது. ஏனெனில், (சுய)உணர்வை எட்டுவதற்கான மிகப்பொருத்தமான, நன்கு வளர்ச்சியடைந்த பொறியமைப்பான மனித மூளையை வந்தடைந்ததும், உயிரியல் பரிணாமத்தின் பணி முழுமையடைந்துவிடுகிறது. ஏனெனில், உயிரியல் பரிணாமத்தின் நோக்கம் வெறுமனே விதவிதமான உயிரிகளை உருவாக்குவதல்ல. உயிரியலாளர்களைப்பொறுத்தவரை, பரிணாமம் என்பது உயிரியலை மையமாகக்கொண்டது, அதாவது பரிணாமம்என்றாலே அது உயிரியல் பரிணாமம் தான்; ஆகவே, அது தங்களது ஆளுகைக்கு உட்பட்டது என்பதாகக் கருதுகிறார்கள். பௌதீக வியலாளர்களைப் பொறுத்தவரை, அனைத்தும் பருப்பொருளே,அதாவது அடிப்படை அணுத்துகள்களே; ஆகவே, பரிணாமம் என்பது பொருளியல் ( Material)
பரிணாமமே; ஆகவே, பிரபஞ்சம் மொத்தமும் தங்களது ஆளுகைக்கு உட்பட்டதே என்பதாகக்கருதுகிறார்கள்.

ஆனால், பிரபஞ்சம்  என்பது காலம், வெளி மற்றும் பருப்பொருளின் மாபெரும் அமைப்பும், இயக்கமும் மட்டுமல்ல! மாறாக, உயிரினங்களின் "உயிரியல் கோளம்" (The Biological Sphere)தான் பருப்பொருளாலான பிரபஞ்சத்தின் நீட்சியும் உயர்-வளர்ச்சி நிலையுமாகும்! இத்துடன் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி முற்றுப்பெற்றுவிடவில்லை. உயிரியல் கோளத்தினூடாக எழுந்த மனிதஜீவிகளின் "உணர்வியல் கோளம்" (Psychic Sphere) தான் பிரபஞ்சத்தின் தற்போதைய உயர்-வளர்ச்சி நிலையாகும்! இதுவும் இறுதியானதல்ல. ஏனெனில், மனித உணர்வு என்பது இறுதியான முழுமையான உணர்வு அல்ல!

மேலும், பரிணாமம் என்பது சூன்யத்தில் நடைபெறுவதியலாது, ஆகவே, பரிணாமம் பொருளை, சடப்பண்பை ஒரு அடிப்படையாக, ஊடகமாக, உபகரணமாகக்கொண்டு தொடங்கியது! ஆக, பரிணாமம் என்பது தொடக்க காலக்கட்டத்தில், பொருளியல் பரிணாமமாகத்திகழ்ந்தது. அதாவது,
பொருளின் சடப்பண்பில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக "உயிர்ப்பண்பு" வெளிப்பட்டது. உயிர் அல்லது உயிர்-ஜீவிகளைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் மனிதன்எனும் உயிர்-ஜீவியின் வழியாக "உணர்வு" எனும் பண்பு  வெளிப்பட்டது! ஆக, மனிதனுடன் உயிரியல் பரிணாமம் முடிவிற்கு வந்துவிட , "உணர்வியல் பரிணாமம்" (Psychic Sector)தொடங்கியுள்ளது! ஒரு உயிரினம் என்கிறவகையில், மனிதன்தான் கடைசி உயிரியல் ஜீவியாவான். மனிதனையடுத்து, அல்லது, மனிதனிலிருந்து கிளைத்து வேறொரு புது உயிரினம் தோன்றக்கூடும் என
எதிர்பார்த்தோமெனில், நாம் பரிணாமம் என்பதை சரியாகப்புரிந்து கொள்ளவில்லை என்றுதான்அர்த்தம்! ஏனெனில், பரிணாமம் என்பது அடிப்படையில் உணர்வுப்பரிணாமம் தான்; அதாவது,பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வு தான்.

ஆம், இனி மனிதனையடுத்து வேறொரு புதிய உயிரினமோ, உயிர்-ஜீவியோ தோன்றிட வாய்ப்பு ஏதுமில்லை. மாறாக, மனிதன்தான் (ஒவ்வொரு மனிதனும்தான்) தனது உணர்வின் வளர்ச்சி மூலம் புதியதொரு ஜீவியாக, அதாவது மனிதன் தற்போது பெற்றுள்ள உணர்வைக்கடந்து வளர்ந்து வேறு
ஒரு "உயர் உணர்வின்" ஜீவியாக எழுந்திடவேண்டும். முடிவாக, உணர்வின் முழுமையைஒவ்வொரு மனிதனும் எட்டும்போது பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்வான பெரு-வெடிப்பில் தொடங்கிய பரிணாமம் முழுமைபெறுகிறது.

நல்லது, நாம் மீண்டும் உயிர் பற்றிய புதிருக்கு வருவோம். உயிர் என்பது ஒரு புதிர் என சொல்வதன் வழியே, உயிர் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம் என அர்த்தம் அல்ல. மாறாக,  அதை அவ்வளவு எளிதாக விவரித்து விளக்கிவிடவும் முடியாது என்பதால்தான் 'புதிர்' என்கிறோம். விஞ்ஞானிகள், பரிணாமவாதிகள், உயிரியலாளர்கள் ஆகியோரது விளக்கங்கள் யாவும் உயிர்-ஜீவியைப்பற்றியதாய் உள்ளனவேதவிர, அவர்கள் "உயிர்" எனும் அம்சத்தை நெருங்கவும் இல்லை என்பது தான் உண்மை நிலையாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி, உயிர்-ஜீவிக்கும், 'உயிர்' என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது! ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்வரைதான் அவரை
பெயரிட்டு அழைக்கிறோம், மதிக்கிறோம், எல்லாம் செய்கிறோம். ஆனால், அம்மனிதன் இறந்து போனால், "பிணம்" என்கிறோம்! அவரது உடல் முழுமையாக இருந்தாலும், சலனமற்றுக்கிடப்பதாகிறது, சிறிது நேரத்தில் சில்லிட்டுப்போகிறது.அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. அவரது இதயம் நின்றுவிட்டது; நாடித்துடிப்புஅடங்கிவிட்டது; மூளைக்கு இரத்தம் செல்லாததால் அவரது  மூளை செத்துவிட்டது  என்கிறார்கள். அதாவது, அம்மனிதனின் உடல் முழுமையாக உள்ளது, ஆனால், உயிர் மட்டும் இல்லை என்பது எதைக்குறிக்
கிறது? அப்படியென்றால்,  "உயிர்" என்றால் என்ன? இதயத்தின் இயக்கம், நாடித்துடிப்பு, சுவாசம், மூளை-இயக்கம், இன்னும் பிற இயக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு தான் "உயிர்" என்பதா? அல்லது தன்னைத்தானே பிரதியெடுத்துக்கொள்ளுதல் (இனப்பெருக்கம்), வளர்சிதை மாற்றம்,
சுற்றுப்புறத்துடன் தகவமைதல் ஆகிய அடிப்படைகளும் சேர்ந்ததுதான் "உயிர்" என்பதா? ஆம், இவை யாவும்  "உயிர்" எனும் பரிமாணத்தை, அந்த விசேடமான "இருப்பு நிலை"யை தொடர்பு கொள்ளக்கூடிய உயிர்-ஜீவியின் அம்சங்கள் மட்டுமேயாகும்!

அடிப்படையில் பருப்பொருள் என்று அறியப்படும் உலகம், பிரபஞ்சம், அல்லது இயற்கையானது தன்னைத்தானே ஒரு உயிர்-ஜீவியாக (ஏணியாக) கட்டமைத்துக்கொண்டு எட்டக்கூடியதொரு விசேடமான இருப்பு-நிலைக்குப்பெயர்தான் "உயிர்" என்பதாகும்! ஆம், மிகச்சரியாகவும், துல்லிய
மாகவும் சொன்னால் "உயிர்" என்பது பருப்பொருள் எனப்படும் இருப்பு-நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு விசேடவகை "இருப்பு-நிலை"யே (A Non-Material state of existence) ஆகும்!

அதாவது, பருப்பொருள் அல்லது சடப்பொருள் என்பது ஒருவித இருப்பு நிலையாகும் - அது அமைப்பாக்கப்படாத அணுத்துகள்களின் உணர்வற்ற நிலையின் இருப்பாகும். இதை நாம் "சட-இருப்பு" (Material Existence) என்றழைக்கலாம். சடப்பொருளானது பௌதீகவிதிகளால் இயக்கப்படுவதும், அதே நேரத்தில், உயிரியல் மற்றும்  உணர்வியல் விதிகளுக்கு உட்பட்டதுமாகும்.

உயிர் என்பது மிகச்சிக்கலான சுய-அமைப்பாக்கமுறையில் (self-organization) அமைந்ததும், தனி-மையப்படுத்தப்பட்ட (individualized)துமான உயிர்-ஜீவி என்றழைக்கப்படும் பொருளியல் அமைப்பினால்  தொடர்புகொள்ளப்படும் ஒரு வித இருப்பு நிலையாகும். இதை நாம் "உயிர்-இருப்பு"  (Organic Existence) என்றழைக்கலாம். ஒரு உயிர்-ஜீவி என்பது பௌதீக விதிகளுக்கு உட்பட்டதும், பெரிதும் உயிரியல் விதிகளால் ஆளப்படுகிற ஒன்றாகும்.

உணர்வு அல்லது மனம் என்பது உணர்வுகொள்ளும் திறனைப்பெற்ற உயர்-வளர்ச்சியடைந்த உயிர்-ஜீவியினால், குறிப்பாக, மனித-ஜீவியினால் தொடர்புகொள்ளக்கூடியதொரு  விசேடவகை இருப்பு நிலையாகும். இதை நாம் "உணர்வு-இருப்பு" (Conscious Existence)என்றழைக்கலாம்.

பொருள்,உயிர், உணர்வு ஆகிய அம்சங்களை ஓரளவிற்குத் துல்லியமாக, "இருப்பு-நிலை" என்பதன்சொற்களில் புரிந்துகொண்டோம்; ஆனால், பல்வேறு இருப்பு-நிலைகளை நாம் "உணர்வு" என்பதன்சொற்களைக்கொண்டு  தான் புரிந்துகொள்ளமுடியும். அதாவது "சட-இருப்பு" நிலை என்பது கிட்டத்தட்ட உணர்வற்ற நிலையே ஆகும். "உயிர்-இருப்பு"  நிலை என்பது புலன்வழி உணர்வைக்கொண்ட இருப்பு நிலை ஆகும். "உணர்வு-இருப்பு" என்பது மனிதஜீவிகள் எட்டியுள்ள "சுய-உணர்வின்" இருப்புநிலையாகும். ஒரு மனிதஜீவியைப்பொறுத்தவரை, அவனுள் சட-இருப்பு, உயிர்-இருப்பு, உணர்வு-இருப்பு ஆகிய இம்மூன்று இருப்பு நிலைகளும் சங்கமிக்கும் மையமாக விளங்குகிறான் எனலாம்.

அதே நேரத்தில், மனிதஜீவிகளால்  தற்போது எட்டப்பட்டுள்ள உணர்வு என்பது, உணர்வு நிலையின்முழுமையோ, அல்லது இறுதியோ அல்ல. அதாவது மனிதனுடன் உயிரியல் பரிணாமம் தான்முடிவிற்கு வந்துள்ளது; உணர்வியல் பரிணாமமோ இப்போதுதான் அவனுள் தொடங்கியுள்ளது.

மனிதனின் சுய-உணர்வு என்பது உணர்வின் தொடக்கம் மாத்திரமே. ஆம், ஒவ்வொரு மனிதஜீவியும் தனது சுய-உணர்விலேயே தங்கித்தேங்கிவிடாமல், தனக்குப்புறத்தேயுள்ள யாதொரு விஷயத்துடனும், பொருளுடனும், உறவுடனும் அடையாளப்படுத்திக்கொள்ளாமல், தனது உணர்வை உணர்வு கொண்டு உணர்வில் பெருகி பூரண முழு-உணர்வை அடைந்திடுவது அவசியமாகும். ஏனெனில், உணர்வின் முழுமை அல்லது "முழு-உணர்வு" என்பதுதான் முழுமையானதும், இறுதியானதுமான இருப்பு நிலை ஆகும்.

ஒருவகையில், 'உயிர்' என்பதும்  'உயிர்-ஜீவி' என்பதும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பதாகக் காணமுடியும் என்றாலும், அதாவது, உயிர் என்பது உயிர்-ஜீவிகளுக்கு வெளியே இருக்கமுடியாது! அதே போல், உயிர்-ஜீவிகளும் உயிர் இல்லாமல் இருக்கமுடியாது என்பதாகத் தெரிந்தாலும்; அதாவது, உயிர் என்பது உயிர்-ஜீவி எனப்படும் விசேடக்கட்டமைப்பின் வெளிப்படு- பண்பு (Emergent Property)என்பதாகக்கொண்டாலும்;  "உயிர்" என்பது ஒரு சுற்றுப்பாதை (orbit) போன்றதாகும்; அச்சுற்றுப்பாதையில் தன்னை ஏவிக்கொள்வது, அல்லது நிலைநிறுத்திக்கொள்வது என்பது உயிர்-ஜீவிகளின் பிரச்சினையேதவிர "உயிர்" என்பதன் பிரச்சினையல்ல! அதாவது, தொடர்ந்து உயிர்-பிழைத்திருப்பதும்  (survive), பிற உயிர்ஜீவிகளுடன்  போட்டியிடுவதும், இனப்பெருக்கத்தின் வழியே தன் வகையினத்தை தக்கவைத்துக்கொள்வதும்,மாறுகின்ற சுற்றுச்
சூழலுக்கேற்றாற்போல தகவமைவதும்உயிர்ஜீவிகளின் பிரச்சினையே தவிர உயிரின் பிரச்சினையல்ல!

உயிரியலாளர்கள் சிலர், உயிர்ஜீவிகளை,பருப்பொருளின்-அமைப்பு (Material System)எனவும்,சிலர்,  ரசாயண-அமைப்பு(Chemical System)எனவும், சிலர், மூலக்கூறுகளின் -அமைப்பு எனவும், இன்னும் எப்படிச்சொன்னாலும் அவையெதுவும், உயிர்ஜீவிகளையோ, அல்லது, உயிரையோ முழுமையாக விளக்குவதில்லை. இவை யாவும் மேலோட்டமான விவரிப்புகளே, அதாவது, மேற்புறவிவர-உண்மைகளே; இவைகளைக்கொண்டு அர்த்தமுள்ள புரிதலைப்பெறவியலாது!

உயிர்ஜீவி என்பது, பௌதீகச்சடப்பொருளைப் பயன்படுத்திக்கொண்டு வெளிப்பட்ட  அபௌதீகப்(Non-Material) பரிமாணம் ஆகும். மேலும், உயிர்ஜீவி என்பது அணுத்துகள்களின் சிக்கலான ஒருங்கிணைப்பு அல்லது கட்டமைப்பின் உச்சியில்  எழுந்த, தனி-மையப்பட்ட ஒரு  தனிப்பண்பு
(Life is discrete particles of matter unified and individualized.)ஆகும்!

அதாவது, யாதொரு மையமும்   இல்லாமல்   இயங்கும்   பிரபஞ்சத்தினுள், தனி-மையம் கொண்ட ஒரு ஜீவியாக எழுந்த புதிர்தான் 'உயிர்ஜீவி' ஆகும்!  உயிர்ஜீவி, அது ஒரு சிறு புழுவாக  இருந்தாலும், என்ன தான்  அது    சுற்றியுள்ள  உலகைச் சார்ந்திருந்தாலும், அது இவ்வுலகினுள்  தன்னளவில்
இன்னொரு உலகமாக, பண்பினடிப்படையில்  இவ்வுலகின் சட-இருப்பி லிருந்து  முற்றிலும் வேறான "உயிர்" எனும் இருப்பு நிலையுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு அற்புதம் ஆகும்!  மனிதஜீவிஎன்பவன், சடஇருப்பையும், உயிர்-இருப்பையும் பயன்படுத்திக்கொண்டு "உணர்வு" எனும் இருப்பு
நிலையுடன்  தொடர்பு கொண்டிருக்கும் ஒரு விசேட மெய்ம்மையாவான்!

'பரந்த பிரபஞ்சத்தின் அளவுடன்  ஒப்பிடுகையில், உயிர்-ஜீவி என்பது மிகமிகச் சிறிய அல்லது அற்பமானதொரு பங்கேற்பாளர் (player)' எனவும், 'உயிர்த்தோற்றம் என்பது பிரபஞ்சத்தின்மிகக்கட்டாயமான தவிர்க்க வியலாத அவசியம்' என்பதாகக் காணும் உயிர்-மைய தரிசனங்கள்யாவும் மிகைக்கூற்றுக்களே' எனவும், 'இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பர சம்பந்தம் கொண்டதல்ல' எனவும்,  'உயிர்-ஜீவிகள், செயல்படும் இயற்பியல் விதிகளின் இயற்கையான வரையறைகளுக்குள் மட்டுமே இருப்பு பெறமுடியும், அதே நேரத்தில் இயற்கை விதிகள்
இருக்கின்றன என்பதால் உயிர் தோன்றியாகவேண்டும் என்கிற உத்திரவாதத்தை அது அளிப்பதில்லை.' எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இக்கூற்றுக்கள் யாவும் முட்டாள்தனமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!  முதலில், 'அளவு' அல்ல முக்கியம், மாறாக, 'தரம்' அல்லது, 'பண்பு' தான் முக்கியமாகும். அடுத்தது, 'உயிர்த்தோற்றம்' என்பது பிரபஞ்சத்தின் மிகக்கட்டாயமான தவிர்க்க வியலாத அவசியம்' என்பதால்தான் 80,00,000 க்கும் மேற்பட்ட பல்வேறுவகை
உயிரினங்களும், மனிதஜீவிகளாகிய நாமும் இங்கிருக்கிறோம்! குறிப்பாக யாதொரு புறச்சக்தியின் குறுக்கீடும், வழி-நடத்துதலும் இல்லாமலேயே உயிருள்ள ஜீவிகளும், சுய-உணர்வுள்ள மனிதஜீவிகளும் உருவாகி யிருக்கிறோம் என்பது இம்முடிவிற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகிறது!

ஆக, 'உயிர்-ஜீவிகள், செயல்படும் இயற்பியல் விதிகளின் இயற்கையான வரையறைகளுக்குள் மட்டுமே இருப்பு பெறமுடியும், அதே நேரத்தில் இயற்கை விதிகள் இருக்கின்றன என்பதால் உயிர் தோன்றியாகவேண்டும் என்கிற உத்திரவாதத்தை அது அளிப்பதில்லை.' எனும் கூற்றின் அர்த்தம்
என்ன? அப்படியானால், இயற்கை விதிகள் என்பவை எதற்காக இருக்கின்றன, அல்லது இயற்கை விதிகள் என்பவை யாவை? உண்மையில், அனைத்து இயற்கை விதிகளும் "பரிணாம விதிகளே"யாகும்;  செயல்படுகின்ற அல்லது செயல்பாட்டிலிருக்கின்ற இயற்பியல் விதிகள் (laws of Physics) யாவும் "உயிரியல் - விதிகளுக்கு"ச் சேவை செய்வதற்காகவே இருக்கின்றன! அனைத்து உயிரியல்-விதிகளும்,  "உணர்வியல்விதிகளுக்கு"ச்  சேவை செய்வதற்காகவே இருக்கின்றன! முதலிடத்தில், பருப்பொருளாலான இயற்கை அல்லது பிரபஞ்சம் என்பது அதன் அடிப்படையில்ஒரு பரிணாம இயக்கமே என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். விஞ்ஞானிகள் இயற்கையை பரிணாமவழிமுறைக்கு வெளியே இருப்பதாகவும், இயற்பியல் அல்லது பௌதீகவிதிகள் என்பவை பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான சாசுவதமான விதிகள் என்பதாகவும் கருதுவது தவறானது!
ஆம்,   பரிணாமவழிமுறைக்கு வெளியே யாதொரு இயற்கையும் இல்லை! மாறாக,  'இயற்கை' என்பதும் பரிணாமத்திற்கு உட்பட்டதேயாகும்!  அதாவது, பரிணாம வழிமுறையின் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு விதிகள் தோன்றி பரிணாமத்தை மேற்கொண்டு வழி நடத்திச்செல்கின்றன என்பதுதான் சரியான பார்வையாகும்.

உதாரணத்திற்கு, ஆக்ஸிஜன் மூலக்கூறுகளும், ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் இணையும் போது தண்ணீர் எனும் திரவப்பொருள் உருவாகிறது. ஆனால், தனியே ஆக்ஸிஜன் மூலக்கூறுகளிலும், ஹைட்ரஜன் மூலக்கூறுகளிலும், தண்ணீரின் பண்புகள் இருப்பதில்லை! மாறாக, இவ்விரு வித மூலக்கூறு களும் இணையும்போது தண்ணீர் உருவாகும் என்பதை எந்த விதி தீர்மானிக்கிறது? தண்ணீர் என்பது பௌதீகப்பண்புகளைக்கொண்டது என்றாலும், நிச்சயமாக, பௌதீக விதிகள் அதைத்தீர்மானிப்பதில்லை! தண்ணீர் என்பது ஒரு வெளிப்படு-பண்பு (Emergent Property) ஆகும்.  அதை வேறுவகை விதிகளே தீர்மானிப்பதாகத்தெரிகிறது! இவ்வாறே, வெவ்வேறு மூலக்கூறுகள் சிக்கலான அமைப்பிலும், படிமுறையிலும் இணந்து பாக்டீரியா எனப்படும் உயிர்-ஜீவியும்பல்வேறு பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள் இணைந்து பல-ஸெல் உயிரிகளும், அதாவது தாவர இனங்களும், விலங்கினங்களும், பிறகு மனிதஇனமும் தோன்றியதற்குப் பின்னனியில்புதிதாக அவ்வப்போது தோன்றிச் செயல்பட்ட பரிணாம விதிகளே காரணமாகும். அதாவது "விதிகள்" என்பவையும் புதிதுபுதிதாகத் தோன்றுகின்றன, அல்லது பரிணமிக்கின்றன!

அடுத்து,  'இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பர சம்பந்தம் கொண்டதல்ல' எனும் கூற்றைப்பார்ப்போம். அதாவது, இயற்கை வேறு அதிலிருந்து முளைத்தெழுகின்றவை வேறு எனும் தவறான புரிதலிலிருந்து வெளிப்படும் கூற்றுக்களே இவை! உண்மையில், இயற்கை தான் (அதன் ஒரு சிறு பகுதி தான்) பரிணமித்து உயிர்-ஜீவியாகியுள்ளது! அதாவது, "உள்", "வெளி"; "அகம்" "புறம்" எனும்பிரிவினையைத் தோற்றுவித்தது இயற்கையே, தனது தொடக்கநிலை இயற்கையான,
சடப்பண்பைக்கடந்து செல்லும் பரிணாம-மாற்றத்தின் விளைவே! அதாவது, இயற்கைதான் உயிர்-ஜீவியாக எழுந்தது என்றாலும் இரண்டும் வெவ்வேறு இயற்கையாகும்! ஏற்கனவே குறிப்பிட்டபடி, பருப்பொருளின் பிரபஞ்சம் தனது சடப்பண்பைக் கடந்து செல்லும்பரிணாம வழிமுறையில்,
தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொண்டு எடுத்த புதியதொரு அவதாரம் தான் "உயிர்-ஜீவி" என்பதாகும்! ஆனால், இதன் அர்த்தம், 'இயற்கைக்கும், உயிர்-ஜீவிகளுக்குமான தொடர்பு பரஸ்பரசம்பந்தம் கொண்டதல்ல' என்பதாக ஆகிவிடாது.

ஒருவகையில், இயற்கையானது உயிர்ஜீவியாக அவதாரம் எடுத்தபிறகு, உயிர்ஜீவிதான் தற்போதைய இயற்கை, உலகம், பிரபஞ்சம் யாவும் ஆகும்! இது முற்றிலும் வழக்கத்திற்கு மாறான பார்வை எனத்தெரிந்தாலும், இதுதான் உண்மையாகும். அதே நேரத்தில், உயிர்-ஜீவிகளும், உயிர் எனும்
இருப்பு நிலையும் இறுதியானவையல்ல! ஆகையால்தான், உயிர்ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து  உணர்வுள்ள மனிதஜீவி எனும் இனம் உதித்தது! மனிதஜீவியின் கட்டத்தை, அதாவது மனிதனுள் சுய-உணர்வு எனும் நிலையை அடைந்த பிறகு, மனித-உணர்வுதான் புதிய இயற்கையாகும்! அதாவது நம் பிரபஞ்சத்தை ஒரு பெரிய விருட்சமாகக்கொண்டால், அந்த விருட்சத்தின்பிஞ்சுகள், அல்லது காய்கள் தான் மனிதஜீவிகள்! ஆக, ஒரு மரத்திற்கும் அதன் காய்களுக்குமான தொடர்பும், உறவும் எத்தகையதோ அத்தகையதே இயற்கைக்கும் உயிர்-ஜீவிகளுக்குமான உறவும்தொடர்பும் ஆகும். அது  பரஸ்பர சம்பந்தம் கொண்டதும், அதே நேரத்தில், அனைத்துவித சம்பந்தங்களையும் கடந்துசெல்வதுமானதாகும்! அதாவது, காய்கள் கனியாகும் வரை மட்டுமே அவை மரத்தின் பகுதியாகும்; ஒரு காய் நன்கு முற்றிக்கனியானதும் அது மரத்தைவிட்டு அகன்றுவிடுகின்றது! குறிப்பாக மனித ஜீவிகளுக்கும், இயற்கைக்கும் உள்ள தொடர்பு இத்தகையதே. ஏனெனில், மற்ற உயிரினங்களைவிட மனிதஇனம் மட்டுமே நன்கு முற்றிய பக்குவத்தில் உள்ள இனமாகும்! உண்மையில், மரம்தான் ஒரு கட்டத்தில் பூக்களாக மாறுகிறது, பிறகு, பிஞ்சுகளாகவும், காய்களாகவும் மாறுகின்றது. பிறகு, ஒவ்வொரு காயும் கனிந்ததும் மரத்தைவிட்டு வெளியேறுவதும் மரமேயாகும்! மரமானது, (தனது) ஒவ்வொரு கனியின் வழியாக தன்னைக்கடந்து செல்கிறது; அதாவது தனது முழுமையை  அடைகிறது! இன்னும் துல்லியமாகச் சொன்னால், அதாவது, மரத்திற்குக்காரணமான
வித்தின் கோணத்திலிருந்து காணும்போது, வித்துதான, மரமாக மாறுகிறது; பூக்களாக மாறுவதும், பிறகு பிஞ்சுகளாகாவும், காய்களாகவும்மாறுவதும்; பிறகு ஒவ்வொரு காயும்கனிந்து கனியானதும்ஒவ்வொரு கனியின் வழியாகவும் மரத்தைவிட்டு வெளியேறுவதும் அதே வித்துதான்!

ஒரு மேற்புறப்பார்வையில், உயிர்ஜீவிகள் தமக்குரிய (எரி)சக்தியை (உணவைப்) பெறுவதற்காக இயற்கையை, சுற்றுப்புறத்தைச் சார்ந்திருப்பது வெளிப்படையாகும். ஆனால், பெரிதும்,மறைமுகமாக, இயற்கையும், பிரபஞ்சமும் தான் உயிர்ஜீவி களைச்சார்ந்துள்ளன என்பதுதான் உண்மை!
இவ்விடத்தில், உயிர்ஜீவிகள் என்றுகுறிப்பிடப்படுவதுமனிதஜீவிகளைத்தான். உண்மையில், ஒரு உயிர்ஜீவி என்ற வகையில், புழு, பூச்சி, ஈ, எறும்பு, எலி, மனிதன் எல்லாம் ஒன்றுதான். அதாவது மனிதன் விசேடமானவனாக, தனிச்சிறப்புபெற்றவனாக விளங்குகிறான் என்பது முற்றிலும்
எதேச்சை யானதாகும். அதற்குக்காரணம் அவனல்ல, அவனிடம் உதயமாகியுள்ள "சுய-உணர்வு" என்கிற அம்சமே ஆகும்! ஒரு கரப்பான்பூச்சியிடம் "சுய-உணர்வு" தோன்றியிருக்குமானால்,
"தனிச்சிறப்பானது" என்கிற பட்டத்தை அது பெற்றுவிட்டிருக்கும், மேலும், கரப்பான்பூச்சியுடன்உயிரியல் பரிணாமமும் நிறைவு பெற்றிருக்கும்!

மனிதன் விசேடமானவன், தனிச்சிறப்பானவன் என்பது பொதுப்படை யாகவும், சகட்டுமேனிக்கு எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும் விஷயம் அல்ல! அதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தகுதியுள்ளவனாக, பாத்திரனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதனும் உடல்மைய ஜீவி எனும் நிலையிலிருந்து உயர்ந்து உணர்வு-மைய ஜீவியாக எழ வேண்டும்! பொதுவாக, மனிதஜீவிகள் தாம் உயிரோடிருக்கிறோம் என்பதை மட்டுமே உணர்கிறார்கள்; தொடர்ந்து உயிரோடிருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை மட்டுமே சிரமேற்கொண்டு செய்
கிறார்கள்! மாறாக, "தாம் உணர்வோடிருக்கிறோம்!" அல்லது "தாம் ஒரு உணர்வுதான்!" என்பதை கோடியில் ஓரிருவர் மட்டுமே உணர்கிறார்கள்!

உண்மையில்,மனிதன் என்பவன் வெறும் ஒரு உயிர்ஜீவி மட்டுமல்ல; அவ்வாறிருப்பின் அவனுக்கும்பி ற விலங்குஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏதுமிராது! மாறாக, மனிதன் என்பவன் பிரதானமாக ஒரு உணர்வுஜீவியே ஆவான்! மனிதன் என்பவன்,உயிர் இருப்பையும்,  அணுத்துகள்களின் ஒன்றிணப்பு மற்றும் தனி-மையப்பட்ட தன்மையையும்  உணர்ந்த உணர்வு ஆவான்! (A human being is a living entity became conscious of matter's unification and individualization in his consciousness).


மா.கணேசன்/4.10.2016
----------------------------------------------------------------------------

Tuesday, 4 October 2016

"சுயநலங்கொண்ட மரபணு"


அல்லது டாக்கின்ஸின் 'குருட்டுக் கடவுள்'
(The Selfish Gene Or Dawkins' Blind God))

      "நம்முடைய மரபணுக்கள் (genes)நம்மை உருவாக்கின. நாம்
       விலங்குகள், நாம்  இருப்பது  அம்மரபணுக்களைப் பாதுகாப்பதற்
       குத்தான்.   பயன்கொள்ளப் பட்டதும்   வீசியெறியப்படும்   உயிர்-
       பிழைப்பு  எந்திரங்கள்  என்பதற்கு மேல் நாம் வேறொன்றுமில்லை.
       சுயநலங்கொண்ட மரபணுக்களின் உலகம் என்பது குரூரமிக்க
       போட்டியும்,கருணையற்ற ஏய்ப்பும், ஏமாற்றும்  நிறைந்த ஒன்றாகும்.  
       ஆனால்,   இயற்கையில்   காணப்படும்   பொது- நலங்கொண்ட
       செய்கைகள்  - அதாவது, தேன் -கூட்டைக் காப்பாற்றுவதற்காக
       எதிரியினங்களைக்கொட்டி தன் கொடுக்குகளையிழந்து தன்னை
       மாய்த்துக்கொள்ளும் தேனீக்கள், அல்லது பருந்தின் வரவைக்கண்டு
       குரலெழுப்பி அறிவித்து பிற பறவைகளை எச்சரிக்கை செய்வதன்
       விளைவாக பருந்தை தன் பக்கம் ஈர்த்து வலிய ஆபத்தில் சிக்கிக்
       கொள்ளும் பறவைகள் மரபணுவின் சுயநலம்  எனும் மரபை மீறுகின்
       றனவா? எவ்வகையிலும் இல்லை: மாறாக,  சுயநலங்கொண்ட மரபணு
       தந்திரமானதும்கூட  என்பதை டாக்கின்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.
       அதே வேளையில், பூமியில் நம் (மனித)இனம் மட்டும்தான்,
       'சுயநலங்கொண்ட மரபணுக்களின்' சதித்திட்டத்தை எதிர்த்து கலகம்
       செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது என நம்பிக்கையூட்டுகிறார்
       டாக்கின்ஸ் .அவரது  'சுயநலங்கொண்ட மரபணு' எனும் நூல், நம்மை
       போருக்கு ஆயத்தமாகச் சொல்லும் அழைப்பு ஆகும். அந்நூல் ஒரு
       விதிஏடும், கொள்கைவிளக்க அறிக்கையும் ஆகும். அது ஒரு துப்பறியும்
       நாவலைப்போல நம்மைப் பற்றுகிறது. ...."

இவ்வாறெல்லாம்,  1976-ல்   வெளியான,   ரிச்சர்ட்  டாக்கின்ஸ்-ன்,   'சுயநலங்
கொண்ட மரபணு'   நூலைப்பற்றி  நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் உயிரியல்
விஞ்ஞானி  சர் பீட்டர் மெடாவர் (Sir Peter Medawar) குறிப்புரை  எழுதி
யுள்ளார்.

ஆனால்,   யார்  அந்த  ரிச்சர்ட்  டாக்கின்ஸ்?  அவரது முழு பெயர், கிளிண்டன்
ரிச்சர்ட்  டாக்கின்ஸ்  ( Clinton Richard Dawkins)  பிறந்தது   கென்யா,
மார்ச் 26, ஆண்டு 1941.  அவர் ஒரு சிறந்த விலங்கியலாளர்,  பரிணாம-உயிரி
யல் விஞ்ஞானி; இவை மட்டுமல்ல, டாக்கின்ஸ் ஒரு டார்வினியவாதி,  நாத்தி
கவாதி,   பொருள்முதல்வாதி,    இயற்கைவாதி   மற்றும்  ஒரு  சுருக்கல்வாதி
(Reductionist)யும் ஆவார். எல்லாவற்றுக்கும்மேலாக, அவரது துறைக்குச்
சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கும்  சர்ச்சைக்குரிய விவா
தங்களில் ஈடுபடும் ஒருவர்.

திரு டாக்கின்ஸ்  அவர்கள்  பரிணாமக் கோட்பாட்டை   சிறப்பாக  விளக்கிச்
சொல்வதுடன் நிறுத்திக்கொண்டிருந்தால், இந்தக்கட்டுரையை எழுதவேண்
டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அவர், பரிணாமக்கோட்பாட்டை, குறிப்பாக
டார்வினிய  பரிணாமக்  கோட்பாட்டை  விளக்கிச்சொல்ல  வந்துவிட்டு, அக்
கோட்பாட்டின்   உணர்த்துகோல்களை  வாழ்வின்  எல்லா  அம்சங்களுக்கும்
நீட்டித்து,   ஏதோ  டார்வினியம் என்பது  வெறும்  ஒரு விஞ்ஞானக்கோட்பாடு
மட்டுமல்ல,  அது ஒரு பிரபஞ்சமாளாவிய மகா தத்துவம்  என முன்வைத்தது
தான் பிரச்சினையாகும்.

திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் தமது 'சுயநலங்கொண்ட மரபணு' நூலில்
பரிணாமம்   குறித்து  அப்படி  என்ன புரட்சிகரமான,  அரிய விஞ்ஞான உண்
மையை, அல்லது, தனது உலகமகா கண்டுபிடிப்பை, வாழ்வின் அடிப்படைத்
தத்துவத்தை   எழுதியுள்ளார்?   இதோ, டாக்கின்ஸ்  அவர்கள்  தனது  1976 -ல்
வந்த முதல் பதிப்பில் தனது நூல் குறித்து எழுதிய முன்னுரையின் தொடக்க
வரிகள் :
 
   " இந்நூலை கிட்டத்தட்ட  ஒரு விஞ்ஞானப் புதினத்தை வாசிப்பது போல
     வாசிக்கவேண்டும்.  இந்நூல் கற்பனையைக் கவரும் வகையில் வடிவ
     மைக்கப்பட்டதாகும். ஆனல், இது  விஞ்ஞானப் புதினம் அல்ல : இது
     விஞ்ஞானம்.  வெறும் வழக்குச்சொல்லோ, அல்லது இல்லையோ,
     'புனைவைவிட வினோதமானது' என்பதாகவே நான் இதன் உண்மையை
      உணர்கிறேன்.  நாம் உயிர்-பிழைப்பு எந்திரங்கள்- ரோபோ ஊர்திகள்,
      மரபணுக்கள் என்றறியப்பட்ட  சுயநலங்கொண்ட மூலக்கூறுகளைப்
      குருட்டுத்தனமாக பாதுகாக்குமாறு நிரலமைப்பு செய்யப்பட்டுள்ளோம்.
      இது ஒரு உண்மை, இது என்னை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரு
      கிறது. பல வருடங்களாக நான் இவ்வுண்மையை அறிந்தவனாக இருந்
      தாலும் இன்னும் நான் அதற்கு முழுமையாகப் பழக்கப்படவில்லை.
      எனது நம்பிக்கைகளில் ஒன்று என்னவெனில், மற்றவர்களையும் ஆச்சரி
      யத்தில் ஆழ்த்துவதில் நான் ஓரளவு வெற்றி பெறுவேன் என்பதுதான்...."

ஆனால்,  பொதுவாக  நாம்  படித்தறிந்த உண்மை யாதெனில்,  மரபணுக்கள்
என்பவை நம்உடலின் ஒவ்வொரு ஸெல்லிலும் அடங்கியுள்ள மூலக்கூறுகள்,
அவைதான்  நம்முடைய உடலியல் அம்சங்களை - கண்களின் நிறம் உள்பட
பிற  பல குணாம்சங்களைத்  தீர்மானிக்கின்ற  காரணிகள் என்பதாக அறிந்
துள்ளோம்.  ஆனால், டாக்கின்ஸ் சொல்லுகிற 'புது' உண்மையோ முற்றிலும்
தலைகீழாக உள்ளது. அதாவது, "மனித ஜீவியோ, அல்லது, விலங்கு ஜீவியோ
எதுவாயினும்,   அது   'DNA'  எனப்படும்   மரபணுக்களின்  கருவியே தவிர
இதற்கு மாறான வழியில் அமைவதில்லை" என்பதாக டாக்கின்ஸ் அடித்துக்
கூறுகிறார்.

டாக்கின்ஸ்    அவர்களின் கூற்றின்படி,  மரபணுக்கள்  ( DNA மூலக்கூறுகள்)
மட்டுமே  பிரதானமானவை,  அவை தான் "உயிர்க்கரு" . மரபணுக்கள் இருக்
கின்றன; அவைதம்மைத்தாமே பிரதியெடுத்துக்கொண்டு, தம்மைப்பெருக்
கிக்கொள்வதற்காக,   எத்தனையெத்தனை  அவதாரங்கள் (உடல்கள்) எடுத்
தாலும், அவை எலியின் வடிவத்திலிருந்தாலும், அல்லது மனிதனின் வடிவத்
திலிருந்தாலும், இன்னும் கோடாணுகோடி வடிவங்களை எடுத்தாலும், அடிப்
படையில்,  அவற்றின் சாரத்தில்  எல்லா உயிரினங்களும்  ஒன்றுதான் எனும்
பட்சத்தில்;  அதாவது,  மரபணுக்கள்  தம்மைத்தாமே பிரதியெடுப்பதற்கான
வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்கள்தான் உயிரினங்கள்(species)என்-
றால்,  இவ்வாறு  வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்களை,  அல்லது ஊர்தி
களை, அதாவது வெவ்வேறு  இட-அமைவுகளுக்கும், சூழலுக்கும்  ஏற்றவாறு
தகவமைந்து   உயிர்-பிழைப்பதற்கான   கருவிகளைக் கட்டமைப்பதற்கான
ஒரு வழிமுறைதான் 'பரிணாமம்' என்றால்; அதிலும், மரபணுக்கள் தம்மைத்
தாமே பிரதியெடுத்துப் பெருகி நிலைப்பதைத் தாண்டி, அம்மரபணுக்களுக்
கும்,  பரிணாமத்திற்கும் வேறு குறிக்கோளும்,  இலக்கும்   இல்லை எனும் பட்
சத்தில்,  பரிணாமம் பற்றிய ஆய்வுகளும், கோட்பாடுகளும் எதற்கு,  அவற்றி
னால் என்ன பயன்?

டாக்கின்ஸ் அவர்களைப்பொறுத்தவரை,அவர் ஒன்றேஒன்றை மட்டும்தான்        
சொல்லவில்லை,  அதாவது,   DNA எனப்படும்  மரபணுக்கூறு தான்  'கடவுள்'
என்று அவர் சொல்லவில்லை! அவர் அதை வெளிப்படையாகச்சொல்லாவிட்
டாலும்,அவரது கூற்றுகள்யாவும் அதைத்தான்குறிக்கின்றன!எவ்வாறெனில்
முதல் உயிர்  அல்லது முதல் மரபணு  எவ்வாறு தோன்றியது என்பது அவருக்
கும்  தெரியாது;  அவரது  ஆசான்,  டார்வினுக்கும்  தெரியாது!  முதல் மரபணு
எவ்வாறோ  தோன்றிவிட்டது எனும்  முன்-நிகழ்வின் தொடர்ச்சியான தொரு
வழிமுறையைத்தான் 'பரிணாமம்' எனும் சொல்லைக்கொண்டும், 'இயற்கை
தேர்வு'(Natural Selection)எனும் நுட்பமுறையைக்கொண்டும்  டார்வின்
தனது பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கினார்.

உண்மையில்,  டார்வினின் பரிணாமக் கோட்பாடு என்பது  பெரிதும் மட்டுப்
பாடானதாகும்;  வெறும்  மட்டுப்பாடு  மட்டுமின்றி பெரிதும் குறைபாடானது
மாகும்!

டார்வினின்  பரிணாமக்  கோட்பாடு  என்பது  என்ன?   மூல-முதல்   உயிரின்
தோற்றத்தைப்பற்றி எதுவும் சொல்லாமல்,அம்முதல் உயிரியிலிருந்து வெவ்
வேறு  உயிரினங்கள்  எவ்வாறு   பரிணமித்தன என்பது  பற்றிய டார்வினின்
பயனற்ற விளக்கங்களைத் தவிர அடிப்படைப்புரிதலுக்குரிய வேறு அம்சங்
கள் எதுவும் அவருடையகோட்பாட்டில் இடம்பெறவில்லை! மாறாக, டார்வின்
எடுத்தியம்பிய மாபெரும் 'விஞ்ஞான' உண்மைகள் இவைதான்:
   
    * பரிணாமம் குறிக்கோளற்றது.
    * பரிணாமம் திசையற்றது,அதாவது உயர்-வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்
      செல்லாது.
    * சடப்பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்.

இம்மூன்று விஷயங்களும் தவறானவை, ஏனெனில்,  அவை  பரிணாமத்தை
மறுப்பவை,    பரிணாமத்திற்கு    விரோதமானவையாகும்!      இந்நிலையில்,
டார்வின் கூறிய, 'இயற்கைத்தேர்வு' எனும் விஷயம் இன்னும் அபத்தமானது!
அதாவது, உலகையும், அதில் உயிரையும் வடிவமைத்துப் படைப்பதற்கு ஒரு
கடவுளும்  இல்லை  எனும்பட்சத்தில்,  அந்த   இடத்தை   'இயற்கை'  எடுத்துக்
கொள்ள இயலாது!  இயற்கை என்பது உள்ளது;  ஆனால்,  அதனால் எதையும்
தேர்வு   செய்ய  இயலாது   என்பதுதான்  உண்மை  நிலையாகும்.  ஏனெனில்,  
இயற்கையும்,  உயிர்-ஜீவிகளும்  வெவ்வேறு அல்ல!  இயற்கையானது உயிர்-
ஜீவிகளுக்கு  முந்தையதுதான் என்பதால், அதனால்  'தேர்வு' செய்யவியலும்
என்பது  தவறான கணிப்பு, அல்லது கருத்து ஆகும்! உயிர்-ஜீவிகள் உண்மை
யில்  இயற்கையின்  கிளைப்பு  போன்ற  வளர்ச்சி நிலையே (out-growth)
ஆகும்.  மேலும்,  இயற்கையும்,  உயிர்-ஜீவிகளும்   வேறு  வேறானவை அல்ல
என்பதாலும், அதிமுக்கியமாக,பரிணாமத்திற்கு நோக்கமும்,குறிக்கோளும்
உள்ளது என்பதாலும்; "வலியதே(அல்லது பொருத்தமானதே)வாழும்","உயிர்-
பிழைப்புக்கான போராட்டம்"    போன்ற     மேலோட்டமான    விஷயங்களை
பரிணாமப்-பேருண்மைகளாகச் சித்தரிப்பது பிழையானதாகும்.

டார்வினிய  பரிணாமம்    உயிரியல்  கோளத்திற்கு  மட்டுமே  பொருந்துவது,
அதிலும்,  அதனால்  உயிரியல் கோளத்தையும்கூட  முழுமையாக  விளக்கிச்
சொல்லிவிட முடியாது! டார்வினிய பரிணாமம் உயிரினங்களின் மேலோட்ட
மான மாற்றத்தையும், மாறுபாட்டையும் (Variation)பற்றியது மட்டுமே!

ஆனால், டார்வினிய பரிணாமக்கோட்பாடு எவ்வளவு மட்டுப்பாடானது,  தவ
றானது,   பரிணாம விரோதமானது    என்பதை      விலாவாரியாக   விளக்கிச்
சொல்லி   நிரூபிப்பதல்ல    இக்கட்டுரையின்   நோக்கம் ,  அதை இன்னொரு
கட்டுரையில் நிச்சயம் செய்திடுவோம்.

இப்போதைக்கு,    டார்வினின்  பெயரைப்  பயன்படுத்திக்கொண்டு,  அவரது
மொண்ணையான   பரிணாமக்கோட்பாட்டைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு,
அதாவது, டார்வினிய கோட்பாட்டை முன்னிறுத்தி அதற்குப்பின்னால் பதுங்
கிக்கொண்டு, 'புதிய டார்வினியம்', 'சமூக டார்வினியம்', என்ற பெயர்களில்,
விஞ்ஞானத்திற்கு  விரோதமானவகையில்,       பொருள்முதல்வாதத்தையும்,
நாத்திகத்தையும்   பேசி வருகிறவர்களில் முன்னனியில் விளங்கும் ரிச்சர்ட்
டாக்கின்ஸ்-ன் சுருக்கல்வாதப்பிதற்றல்களை, குறிப்பாக, அவரது  'சுயநலங்
கொண்ட மரபணு' எனும் வெற்றுக்கருத்தின், பயனற்ற தன்மையை வெளிப்
படுத்துவது தான் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

முதலிடத்தில்,  "மரபணு"  (gene) என்பதையும், அதைத்தாங்கியுள்ளதாகக்
கூறப்படும்  உயிர்-ஜீவியையும்  பிரித்துப்பேச வியலுமா  என்பது  மிக மைய
மான கேள்வியாகும்.  உண்மைதான்,  மரபணுக்கள் இல்லாமல்,  எந்த உயிர்-
ஜீவியும்  இருக்க  முடியாது!   அதே நேரத்தில்,   'சாகா நிலை பெற்றவை'  என
டாக்கின்ஸ்    அவர்களால்   குறிப்பிடப்படும்  மரபணுக்கள்    மரிப்பதில்லை,
அதாவது அவை ஒரு உயிர்-ஜீவியின் சந்ததிகளின் வழியாக தொடர்ந்து
உயிர்-பிழைத்துச் செல்கின்றன. அதாவது தனி ஜீவிகள் தான் சாகின்றன
அவற்றின் மரபணுக்கள் அந்த தனி ஜீவியின் சந்ததிகள், சந்ததிகளின் சந்த
திகள்  மூலம்  தொடர்ந்து  சிரஞ்சீவியாக  உயிர்  வாழ்ந்து  செல்கின்றன!
ஆனால்,  ஒரு உயிர்-ஜீவிக்கு வெளியே(அதாவது ஒரு உயிர்-ஜீவி இல்லாமல்)
மரபணுக்கள் தனியே உயிர் வாழ்வதில்லை. அதாவது மரபணுக்கள் இல்லா
மல்   எந்த உயிர்-ஜீவியும் இல்லை; ஒரு உயிர்-ஜீவியும்  இல்லாமல் மரபணுக்
கள் என்பதும் இல்லை.

ஆக,    மரபணுக்களும்,   உயிர்-ஜீவிகளும் பிரிக்கவியலாதவை எனும் நிலை
யில்  மரபணுக்கள் சுய நலங்கொண்டவையாக உள்ளனவா,  அல்லது உயிர்-
ஜீவிகள்  சுயநலங்கொண்டவையாக விளங்குகின்றனவா என்றகேள்விக்கே
இடமில்லையல்லவா?   பொதுவாக  எல்லா உயிரிகளும்,   குறிப்பாக மனிதர்
களும் சுயநலமுள்ளவர்களாக இருப்பதற்குக்காரணம் மரபணுக்கள்தானா?
அப்படியானால்  தாங்கள்  சுய நலமிகளாயிருப்பதற்குக் காரணம்  தாங்கள்
அல்ல, மாறாக, மரபணுக்கள்தான் என பழியை மரபணுக்களின்மீது சுமத்தி
விடமுடியுமா?

முதலிடத்தில்,   "சுய நலம்"   என்றால்  என்ன?  அது எதைக்குறிக்கிறது?  "சுய
நலம்"  என்ற சொல்லைக்கொண்டு  டாக்கின்ஸ் அவர்கள்   நம்முள்   ஒருவித
குற்ற உணர்வை விதைத்து,  பிறகு மரபணுக்கள் தான் நம்முடைய சுய நலத்
திற்குக்  காரணம்  என்று  சொல்வதுடன்,  மரபணுக்கள்  அடிப்படையிலேயே
சுயநலமானவை என்று சொல்வதுடன், மனிதஜீவிகளை அல்லது பொதுவாக
உயிர்-ஜீவிகளைவிட மரபணுக்கள் தான் பிரதானமானவை, மையமானவை
என்று நிலை நாட்டுவதன் பொருள் என்ன?  தனது  நூல் நெடுகிலும்  மரபணு
வின் புகழைப் பாடிவிட்டு,   நூலின்  இறுதியில்   'சுயநலங்கொண்ட மரபணு'
வுக்கு எதிராக  நம்மை போருக்கு ஆயத்தமாகச் சொல்வது,அதாவது நம்மை
பொது நலம் கொள்ளச்சொல்வது ஏன்?

இயற்கையில்,பொதுவாக பல்வேறு உயிரினங்களிடம், தனிஜீவிகளுக்கிடை
யேயும்,   குழுக்களுக்கிடையேயும்  பொது நலம்  கருதுவதும்,      ஒத்துழைப்பு
நிலவுவதும், இசைவு காண்பதும் ஆதியிலிருந்தே, உயிர் தோன்றிய காலத்தி
லிருந்தே  இருந்துவருகின்ற அம்சங்களாகும்.  ஆனால், டாக்கின்ஸ் அவர்கள்
ஏற்கனவே   இருந்துவருகின்ற  ஒரு அம்சத்தை, அதாவது பொது நலம் எனும்
அம்சத்தை,  இல்லாத ஒன்றாகச் சித்தரித்துவிட்டு, அதற்கான பழியை மரப
ணுக்களின் மீது சுமத்திவிட்டு, திடீரென புதிதாக நம்மை பொது நலம் கருது
மாறு போதிப்பது என்பது நம் அனைவரையும் முட்டாளாக்கும் விஷயமல்லா
மல் வேறென்ன?

திரு டாக்கின்ஸ் அவர்கள்,  கிட்டத்தட்ட  நாற்பது ஆண்டுகளாக,  நம்மைவிட
தனது      சக-உயிரியலாளர்களையும்,      விஞ்ஞானிகளையும் தான்  அதிகம்
முட்டாள்களாக ஆக்கியுள்ளார் என்பதுதான் உண்மை. ஏனெனில், மேலோட்
டமானதும், வெளிப்படையானதுமான விபர-உண்மைகளைக்கண்டு ஆச்சரி
யப்படுவதும்,  அவ்விபர  உண்மைகளைக்கொண்டு  பயனற்ற நெடிய கோட்
பாடுகளை    உருவாக்கி   முடிவிலாது   அவை குறித்து   விவாதித்துக்கொண்
டிருப்பதும் பெரும்பாலும் விஞ்ஞானிகள் மட்டும்தான்!

மரபணுக்கள்  இல்லாமல்  மனிதன் இல்லை; மனிதன்  இல்லாமல் மரபணுக்
களும் இருக்கமுடியாது.   இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.  ஆக,
மரபணுக்களும் உயிர்-ஜீவிகளும் பிரிக்கமுடியாதவை எனும் பட்சத்தில், மர
பணுக்கள் சுயநலமானவை என்றாலும், உயிர்-ஜீவிகள் சுயநலமானவை என்
றாலும் ஒன்றுதான்.  உயிர்-ஜீவிகளைச் சுருக்கினால், முடிவில் மரபணுக்கள்
தான்  மிஞ்சும்;  மரபணுக்களையும்  சுருக்கினால்,  அடிப்படை  அணுத்துகள்
கள்தான் மிஞ்சும்.  ஆனால்,  நாம் அவ்வளவு தூரம் செல்லத்தேவையில்லை!
ஏனெனில்  சுருக்கிக்காண்பதன்  வழியாக  நாம் மேலதிகப்புரிதலை பெறப்
போவதில்லை. ஆம், விரிந்து வளர்ந்து பரிணமித்துச்செல்லும்  இயற்கைக்கு
மாறாக, மனிதன் எதையும் சுருக்கிக்காணாதிருப்பானாக!

மரபணுக்கள் சுய நலமிக்கவை,   ஆகவே நாம் சுயநலமிக்கவர்களாக இருக்
கிறோம்    என்பதாக  ரிச்சர்ட் டாக்கின்ஸ்  கூறியது  ஒன்றும்   பெரிய கண்டு
பிடிப்போ,  அல்லது,   அது    ஒரு    மாபெரும்   பிரபஞ்ச உண்மையோ   அல்ல.
'வெண்மை வெண்மையாக உள்ளது' என்று சொல்வது பெரும் கண்டுபிடிப்பு
அல்ல; அது வெளிப்படையானதொரு விபர உண்மையாகும்.   அதுபோலவே,
மரபணுக்கள் சுய நலமிக்கவை என்பதும் பெரும் கண்டுபிடிப்பு அல்ல.

ஆனால்,   மரபணுக்கள்  'ஏன்'  சுயநலமிக்கவையாக  உள்ளன என்பதற்கான
பதிலைக்  கண்டுபிடிப்போமெனில்,  அது  குறிப்பிடத்தக்க ஒரு  கண்டுபிடிப்
பாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை!  மரபணுக்கள் சுய நலங்கொண்ட
வையாக  விளங்குகின்றன என்று சொன்ன  ரிச்சர்ட் டாக்கின்ஸ், அவை ஏன்
சுய நலங்கொண்டவையாக   விளங்குகின்றன  என்பதை அவர் கண்டறிந்து
சொல்லவில்லை!

அதற்கான பதிலை நாம் கண்டுபிடிப்போம். ஆம், மரபணுக்கள் சுயநலமான
வையாகும், ஏனெனில் அவை அப்படித்தான் இருந்தாகவேண்டும், அவ்வாறு
இல்லாவிடில், பூமியின் மீது யாதொரு உயிரும் தோன்றி நிலைத்திருக்க முடி
யாது!அப்பட்டமாக சுயநலங்கொண்டிருப்பதற்கு, வெறுமனே உயிர்-பிழைத்
திருப்பது  என்கிற உடனடி குறிக்கோளையும்தாண்டிய  மிகத்தொலைவான
தொரு உயர்- நோக்கமும் உள்ளது!   சுயநலம்  என்பது  உயிர்-ஜீவிகள் யாவற்
றுக்கும் மையமாக அமைந்த  சுய-பாதுகாப்பு எனும் இயல்பூக்கியின் (self
-preservation instinct)சாரம் ஆகும்!

மேலும்,  உயிர்த்தோற்றம் (Origin of Life)என்பது  ஒரு-முறை மட்டுமே
சம்பவிக்கும்   நிகழ்வாகும் என்பதால், முதன் முதலாகத்தோன்றுகிற உயிர்-
ஜீவியானது தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் வகையில் அமை
வது   உயிர்-ஜீவியின்  அடிப்படை  விதிகளில்   ஒன்றாகும்.   ஆம்,   தன்னைத்
தானே பிரதியெடுத்துக்கொள்ளும்   'உள்-அமைந்த'  அம்சம்  இல்லாமல் எவ்
வொரு   உயிர்-ஜீவியும்  இருக்க முடியாது.   எவ்வொரு   உயிரற்ற சடப்பொரு
ளும்,   உதாரணமாக,   ஒரு   கூழாங்கல்   தன்னைத்தானே   பிரதியெடுத்துக்
கொள்வது  முடியாது.    இவ்விடத்தில்,   இப்படியுமில்லாத,  அப்படியுமில்லாத
விளிம்பு- நிலை   விஷயங்களான   படிகங்கள்,   தாதுக்கள்   போன்றவற்றை
நாம் கணக்கில் கொள்ளவில்லை.

ரிச்சர்ட் டாக்கின்ஸ்-ன்    'சுயநலங்கொண்ட மரபணு'   எவ்வகையிலும்   ஒரு
மாபெரும் கண்டுபிடிப்போ,  புரட்சிகரமான புதுமையோ அல்ல. அவர் அந்த
நூலை எழுதியதன் நோக்கம் உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்ன
என்பதைக்  கண்டுபிடிக்கும்   வகையிலான  ஆய்வுகளில்   ஈடுபட்டிருக்கும்
தனது   சக-உயிரியல்  விஞ்ஞானிகளின்  கவனத்தை  சிதறடித்துக் குழப்பிக்
கெடுப்பதும்,   பொதுமக்களின் கவனத்தை  தம் பக்கம் ஈர்த்துக் கவருவதும்
தானாகும்!  ஆயினும், டெனிஸ் நோபில்(Denis Noble)போன்ற உயிரியலா
ளர்கள்  டாக்கின்ஸ்-ன்   கோட்பாட்டில்  உள்ள  மட்டுப்பாடுகளையும்,  குறை
பாடுகளையும் பட்டியலிட்டு சுட்டிக்காட்டாமலில்லை!

டாக்கின்ஸ்-ன்    "மரபணுவின்-கண் பார்வை" யிலமைந்த  பரிணாமம் ஓரள
விற்கு  முறையாகத்  தொடங்குகிறது  என்றபோதிலும்,  அது   பெரிதும் குறு-
நோக்குடையதாகத்(too short-sighted) தேங்கிவிடுகிறது என்பதுதான்
உண்மை நிலை.   உயிரியல்  பரிணாமத்திற்கான  ஒரு   அடிப்படை  என்கிற
வகையில்,  'சுயநலங்கொண்ட மரபணு' என்பது மிகவும் இன்றியமையாதது
என்றபோதிலும்,  மரபணுவின் 'சுய நலம்' எவ்வகையிலும்,அம்மரபணுவுக்கு
இறுதியான முக்கியத்துவம் எதையும் வழங்கிடுவதில்லை! ஆனால், ரிச்சர்ட்
டாக்கின்ஸ் அவர்கள், மரபணுவின் சுயநலத்தை அமளிப்படுத்தியதுமட்டும்
தான் மிச்சம்,  சுயநலத்தின்  உண்மையான  செயல்பாடு (function)என்ன
என்பதை அவர் கண்டுபிடிக்கத்தவறிவிட்டார்.

நல்லது,   நாம்  இப்போது  மரபணுக்கள் 'ஏன்'  சுயநலமிக்கவையாக உள்ளன
என்பதற்கான பதிலின் கருவான பகுதிக்குச்செல்வோம். அதாவது 'சுயநலங்
கொண்டிருப்பதற்கு, வெறுமனே  உயிர்-பிழைத்திருப்பது  என்கிற உடனடிக்
குறிக்கோளையும்  தாண்டிய  மிகத்தொலைவானதொரு  உயர் -நோக்கமும்
உள்ளது'  என்று  ஏற்கனவே  குறிப்பிட்டிருந்தோம்.  அது எத்தகைய நோக்கம்
அல்லது குறிக்கோள்- அதை அடைவதற்காக  சுய நலம்  என்பது  கடைபிடிக்
கப்படுகிறது?   எவ்வொரு  உயிர்-ஜீவியும்   உள்ளார்ந்த வகையில்  சுய நலங்
கொண்டதாக   இல்லையெனில்,   உயிர்-பிழைப்பது  பற்றி  அது     பெரிதாக
அக்கறை கொள்ளாது! ஆம், சுயநலம் உயிர்-பிழைத்திருத்தலை(survival)
ஊக்குவிக்கிறது! உயிர்-பிழைத்திருத்தலை தக்கவைக்காமல்,பல்வேறுபட்ட
உயிரினங்களின் தோற்றம் (speciation)சாத்தியமில்லை!

ஆம், உடனடித்தேவையும்,  இலக்குமான உயிர்-பிழைத்திருத்தலைச் சாதிக்
காமல்,  பல்வேறுபட்ட உயிரினங்களின் தோற்றம் (speciation) சாத்திய
மில்லை!  பல்வேறுபட்ட உயிரினங்கள் தோன்றாமல், பரிணாமத்தின் மிகத்
தொலைவான  இலக்கு அடையப்படவியலாது.  பல்வேறுபட்ட உயிரினங்கள்
தோன்றுவதற்கான நோக்கம் தான் என்ன?  நிச்சயமாக, மனித இனம் அல்ல
பரிணாமத்தின்  அந்த தொலைவான இலக்கு!   ஒருவேளை,  பரிணாமத்தை
நாம்   உயிரியல்   கோளத்திற்குரியதாகச்  சுருக்கிக்   காண்போமேயானால்,
பைபிள்-சார்ந்த படைப்புவாதிகள்  கருதுவது போல மனிதனை  பரிணாமத்
தின் உச்சமாகவும், பரிணாமத்தின் முடிவாகவும் கொள்ளலாம்.

பெரும்பாலான   பரிணாம-உயிரியலாளர்கள்,   பரிணாமம்  'பெரு-வெடிப்பு'
எனும்    பிரபஞ்சத்தின்  பிறப்புக் கணத்திலிருந்து   தொடங்குவதாகக் காண
விரும்புகிறார்கள் எனலாம்; ஏனெனில், அவர்கள் உயிரியலை, பௌதீகவிய
லுக்குச்  சுருக்கிக் காண்பதை    தங்கள்   பாக்கியம்   எனக்  கருதுகிறார்கள்!
ஆனால், எவ்வொரு உயிரியலாளரிடமும், பரிணாமவாதியிடமும், குறிப்பாக
டார்வினிய பரிணாமவாதியிடம்,   பரிணாமம் என்பது  உண்மையில் உயிரி
யல் தளத்தைக்கடந்துசெல்வதாயுள்ளது, அல்லது செல்லக்கூடும் என்பதான
ஒரு சிறு கருத்தும், கற்பனையும்கூட கிடையாது! டார்வினிலிருந்து, (ரிச்சர்ட்)
டாக்கின்ஸ் வரை   அனைத்து    உயிரியலாளர்களும்,   பரிணாமவாதிகளும்
"உயிர்-விருட்சம்"  ('Tree of Life') படிப்படியாக   பல்வேறு  உயிரினங்
களாக,    கிளைவிட்டு    ஓங்கி    வளர்ந்த  அந்த  மகத்தான  கண்கொள்ளாக்
காட்சியினால்  ('The Greatest Show on Earth')முட்டாள்களாக  ஆக்
கப்பட்டார்கள்!   ஆனால்,   அவர்களில்  எவருமே  உயிர்-விருட்சத்தின்  "கனி"
குறித்து  யோசிக்கவும் இல்லை!  உயிர்-விருட்சத்தின் "கனி" பற்றிய பதிலை
யும்,  விளக்கங்களையும் இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் காண்போம்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடும்,  அவரது  கோட்பாட்டை ஒட்டி எழுப்பப்
பட்ட பிற உயிரியல்விஞ்ஞானிகளின்,அதாவது,பொதுவான விஞ்ஞானவகை
பரிணாமக்கோட்பாடுகளும் சரி,  யாவும்,   மனிதன் எவ்வாறு தோன்றினான்
எனும் ஒற்றைக்கேள்விக்கான பதிலளிப்புகளேதவிர,அவை எவ்வகையிலும்
"பரிணாமம்"  என்றால் என்ன?   பரிணாமத்தில் பரிணமிப்பது எது?   பரிணா
மத்தின்  உண்மையான குறிக்கோள், இலக்கு தான் என்ன? என்பன போன்ற
அடிப்படையான,ஆழமான, அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான
பதில்களைக் கண்டறியும் முயற்சியாக இதுவரை இருந்ததில்லை!

உயிரியல் பரிணாமம் என்பது பூமியின் மீது நிகழ்ந்துள்ளது.  சந்தேகமின்றி,
மனிதன் உயிரியல் பரிணாமத்தின் விளைபொருள்தான்.  மேலும்,  மனிதன்
உள்பட அனைத்து உயிரினங்களும் ஒரே மூதாதை-இனத்திலிருந்து கிளைத்
துத் தோன்றியவைதான் என்பதிலும் சந்தேகம் இல்லை.  ஆனால், அடுத்தது
என்ன?  80,00,000 க்கும் மேற்பட்ட  பல்வேறு உயிரினங்களில் மனித இனமும்
ஒன்று என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை!  ஆனால், அடுத்தது என்ன?

டாக்கின்ஸைப்  பொறுத்தவரை,    உயிரினங்கள்  வெவ்வேறாயினும்  அவற்
றின்    DNA   எனப்படும்   மரபணுக்கூறுகளானவை  அடிப்படை   ரசாயண
அமைப்பில்    ஒரே  தன்மையிலானதாகவே  உள்ளன  என்பதால்;   ஈ,  கொசு,
எறும்பு, யானை,பூனை, மனிதன் எல்லாமே ஒன்றுதான் என்கிறார்! அதாவது
எல்லாக்  கட்டடங்களும்    செங்கற்களால்    கட்டப்பட்டவை  என்பதால்,  ஒரு
கோதுமைக்கிடங்கும், ஒற்றை அறை வீடும், பல அறைகளைக்கொண்ட ஒரு
பங்களாவும்,   பல மாடிகளைக்கொண்ட  ஒரு  மாளிகையும்,   யாவும்  ஒன்று
தான்   என்கிறார்!    

ஆனால்,    கட்டடங்கள்    யாவும்    செங்கற்களால்     கட்டப்பட்டவை  என்பது
கட்டடங்களைப்பற்றிய ஒரு பொதுவான அடிப்படை விபர-உண்மை (Fact)
தான்  என்பதை  எவரும்  மறுக்க இயலாது.  அதே நேரத்தில்,  கட்டடங்களும்,  
செங்கற்குவியலும்  ஒன்றல்ல!    நாம்    ஒரு   கட்டடத்தைப்   பார்க்கும் போது  
அதன்    செங்கற்களை   எண்ணிக் கொண்டிருப்பது   என்பது    முட்டாள்தன
மானதாகும்.  செங்கற்கள்  எவ்வாறு,  எத்தகைய  வடிவமைப்பில் அடுக்ககப்
படுகின்றன       என்பதிலிருந்து     எழுகின்ற    பண்பு    அல்லது    பரிமாணம்
(Emergent Property) தான்   கட்டடம் ஆகும்.    இத்தகைய   பண்பினடிப்
படையிலான மாற்றத்தைத்தான் "நாம்" பரிணாமம் என்கிறோம்.

ஆனால்,   டார்வினும்,   அவரது  சீடர்  டாக்கின்ஸும் கிடைமட்டத்திலமைந்த
பரிணாமத்தின்     ஒரு   போக்கினை  மட்டுமே  'பரிணாமம்'   என்கிறார்கள்;
செங்குத்தாக   உயர்ந்து  செல்லும்  பரிணாமத்தின்   அதி முக்கியமான இன்
னொரு   போக்கினை   முற்றிலுமாக  மறுதலித்து  விடுகிறார்கள்.    இரண்டு
போக்குகளையும்     சேர்த்துப் பார்க்காமல்,  பரிணாமத்தை  முழுமையாகப்
புரிந்துகொள்ள முடியாது.

கிடைமட்டத்திலமைந்த பரிணாமத்தின்  போக்கு என்பது வெறும் மேலோட்
டமான மாறுபாடுகளால் அமைவதாகும்.

செங்குத்தாக  உயர்ந்து செல்லும்பரிணாமத்தின்  போக்கு என்பது பண்பின்
அடிப்படையில் பெரும் மாற்றங்களால் அமைவதாகும்.

பரிணாமத்தின்,  கிடைமட்டப்  போக்கும்  செங்குத்தான போக்கும்,  இரண்டு
போக்குகளுமே      தெளிவாகவும்,    வெளிப்படையாகவும்     தெரிகிற போது
ஒன்றை  கணக்கில் கொண்டு  மற்றொன்றைத் தவிர்ப்பது  என்பது கண்கள்
இருந்தும்    குருட்டுப் போக்கில்    செல்வதற்குச்  சமமாகும்.      உண்மையில்,
டார்வின்   முதல்  டாக்கின்ஸ்,  ஸ்டீபன் ஜெ. கௌல்ட்  வரை பரிணாமம் குரு
டானது,    குறிக்கோளற்றது,    திசையற்றது,   மற்றும்   உயர்-வளர்ச்சியற்றது
என்று    காண்பதற்கு   அவர்கள் பரிணாமத்தின்  கிடைமட்டப்  போக்கினை
மட்டுமே கணக்கில் கொண்டதுதான் காரணம்,  உண்மையில் இக்கிடை மட்
டப்போக்கு   கிட்டத்தட்ட  குருட்டுப் போக்கானதுதான்;    இன்னும்    மனிதன்
தொடர்ந்து   குருடாகவே,  அதாவது,  உணர்வுக்கு வராமலே தொடரும்வரை,
பரிணாமத்தின்    செங்குத்தான  போக்கும்கூட  குருட்டுப்  போக்காகத்தான்
தெரியும்!    ஏனெனில்,   அடியோட்டமாக  பரிணாமம்  என்பது  உணர்வுப்பரி
ணாமம்  தான்;     ஆம்,   பரிணாமத்தில்   பரிணமிப்பது   உணர்வு தானாகும்.
புறத்தே,   மேலோட்டமாக  பல்வேறு   உயிரினங்களின்  வடிவில் பரிணாமம்
வெளிப்படு வதாகத்  தெரிந்தாலும்,   உயிரி களின்    உயிரியல் - அடிப்படை
என்பது   மரபணுக்களே  என்றாலும்,     எல்லா   உயிரினங்களும்   ஒன்றல்ல;
மாறாக, அவை  உணர்வின் வெவ்வேறு வளர்ச்சி- நிலைகளைப் பிரதிநிதித்
துவம்  செய்யும்  பரிணாமக் கட்டங்களும் (Stages), பிரதிநிதி (Agents)
களுமேயாகும்.

ஏனெனில்,     சடப் பொருளாக    வெளிப்பட்ட   (ஆதி) இயற்கை,   தொடர்ந்து,
கடைசிவரை உயிரற்றதாக, உணர்வுமற்றதாகத் தொடரமுடியாது!அவ்வாறு
தொடர்ந்திருந்தால்,   நாம் இவ்வாறு பரிணாமம் குறித்து  ஆராய்ந்துகொண்
டும், விவாதித்துகொண்டும் இருக்கமுடியாது! மிகக்குறைந்த உணர்வுநிலை
யிலிருந்து   (  கிட்டத்தட்ட   உணர்வற்ற   சடப்பொருளின்   நிலையிலிருந்து  )
மேலுயர்ந்து   முழு-நிறைவான தொரு  உணர்வு நிலையை   அடையும்    வழி
முறைக்குப்பெயர்தான் பரிணாமம் ஆகும்!

இயற்கை   "உயிர்"   பெற்று  எழுந்த நிலைதான்  உயிரினங்கள்! அடுத்தகட்ட
மாக "உயிர்" பெற்று எழுந்த இயற்கை "உணர்வு"  பெற்று எழுந்த நிலைதான்
மனிதன்!   ஆனால்,   பரிணாமத்தின்  இறுதியான நிறைவு நிலை   'மனிதன்'
அல்ல! ஆயினும், 'உயிர்-விருட்சத்தின்' "கனி" போன்ற அந்த முழுமை-நிலை
மனிதனின்   உணர்வுப் பூர்வமான   ஒத்துழைப்புடன்,  மனிதனின் வழியாக,
மனிதனால்   மட்டுமே அடையப்பட ஒன்றாகும். ஒருவகையில் மனிதன்  என்
பவன்  எல்லாம் வல்ல  'கடவுளால்' விசேடமாகப் படைக்கப்பட்டவனல்ல என்
றாலும்,  பரிணாமத்தினால் அவனுக்கு விதிக்கப்பட்ட  பரிணாமக் கடமையி
னால்   விசேடமானவனாக  ஆகிறான்!   மனிதனின்  பரிணமிக்கும்  உணர்வு
தான்  அவனுக்கு   அந்த  விசேடத் தகுதியைப்   பெற்றுத்தருகிறது.   மனிதன்
உணர்வற்றவனாய் இருந்தால், அவனும் ஒரு விலங்குஜீவியைப்போலத்தான்
இருப்பான்.

டார்வினைப் பொறுத்தவரை,   "பரிணாமம்  முன்னோக்கிய  உயர்-வளர்ச்சி
குறித்தது அல்ல" என்பதே அவரது முடிவு! டார்வின் மனிதனை இன்னுமொரு
விலங்கினமாகத்தான் கண்டார்! டாக்கின்ஸைப்பொறுத்தவரை, மனிதஜீவி
யாயினும்,   விலங்கு   ஜீவியாயினும்,    DNA  எனப்படும்   மரபணுக்கூறுகள்
மட்டுமே முக்கியமானவை என்பதே அவரது முடிவு!

DNA எனப்படும்   மரபணுக்கள்  உயிர்-பிழைப்பதற்காகவே  பல்வேறு உடல்
களை,   அதாவது   உயிரினங்களை உருவாக்கி அவ்வுடல்களை  (உயிரினங்
களை) ப் பயன்படுத்திக்  கொண்டு தம்மைத்தாமே துல்லியமாகப்பிழையே
துமின்றி  பிரதியெடுத்துக் கொண்டு,  அவ்வுயிரினங்களின்     சந்ததிகளின்
மூலமாகத்   தொடர்ந்து   உயிர்-பிழைத்துச்  செல்கின்றன.  ஆம்,    மரபணுக்
களுக்கு    இன்னொரு    பெயர்   "பிரதியெடுப்பான்கள்".      மரபணுக்களைப்
பொறுத்தவரை  தொடர்ந்து  உயிர்-பிழைத்திருப்பதற்கு  சிறுபிழையுமின்றி
துல்லியமாகத் தங்களைப் பிரதியெடுப்பது மிகவும் முக்கியமாகும். மேலும்,
துல்லியமாகப்   பிரதியெடுப்பதையே   'இயற்கைத்தேர்வு'ம்     ஆதரிக்கிறது.
ஆனால்,     பரிணாமத்தைப்    பொறுத்தவரை   பிரதியெடுப்பு - பிழைகளை
(copying errors) அடிப்படையாகக் கொண்டுதான்  புதிய புதிய   உயிரி
னங்களை உருவாக்குகிறது.

ஆனால்,   டாக்கின்ஸைப் பொறுத்தவரை,   அவர்  பரிணாமத்திற்கு எதிராக
இருப்பதாகவே   தெரிகிறார்!   அதாவது   அவரது    கூற்றுப்படி,   "பரிணாமம்
( புதிய  புதிய   உயிரினங்கள்   தோன்றுவது )  என்பது,    துல்லிய மற்றதொரு
வகையில்.  'நல்ல விஷயமாக'  தோற்றம்தருகிறது, முக்கியமாக நாம் அதன்
ஒரு விளை-பொருளாக அமைந்துள்ளோம் என்பதால். ஆனால்,உண்மையில்
எதுவும்  'பரிணமிக்க' விரும்புவதில்லை. மாறாக, பரிணாமமானது பிரதியெ
டுப்பான்களின்    (மரபணுக்களின்)    அனைத்து   தடுப்பு   முயற்சிகளையும்
தாண்டி, எவ்வாறோ,விரும்பியோ,விரும்பாமலோ நிகழும்ஒன்றாக உள்ளது."
என்கிறார். அதாவது, மூலமுதல் மரபணு எவ்வாறு, ஏன், எதற்காகத் தோன்றி
யது   என்பது  டாக்கின்ஸுக்கும்  தெரியாது,  அவரது  ஆசான் டார்வினுக்கும்
தெரியாது,   எனும்  நிலையில்,  டாக்கின்ஸ்-ன்  மிதமிஞ்சிய மரபணு-மையப்
பார்வையின்    தாக்கத்தினால்   அவர்   மரபணுவை   பிரதானமானதாகவும்,
அதையே   இறுதியான  (சிரஞ்சீவித்தன்மை  கொண்ட)  நிரந்தர  மெய்ம்மை
யாகவும் காண்பவராக உள்ளார்!

டாக்கின்ஸுக்கு,   "மரபணு"   தான்  கடவுள்,  மற்றும்,  எல்லாமும்!    அவரைப்
பொறுத்தவரையில்,   மரபணுவுடன்  பரிணாமம்  முடிந்துவிட்டது.  அதாவது,
'பிரதியெடுப்பான்கள்'  (replicators) எனும்  மரபணுக்கள் பிழையின்றி
வெற்றிகரமாக தங்களைப் பிரதியெடுத்துக்கொண்டுதங்களது நிலையைத்
தக்கவைத்துக் கொள்ளும்வரை,  பரிணாமம்,  அதாவது  புதிய புதிய  உயிரி
னங்கள்  தோன்றுவதற்கான  வாய்ப்பே  இல்லை  என்கிறார்!   ஆனால், மரப
ணுக்களின்  அனைத்து முயற்சிகளையும் தாண்டி பிரதியெடுப்பதில்  பிழை
நேர்ந்துவிடுவதன்  விளைவாகத்தான்,   இன்று  நாம்  பல்வேறு  வகைப்பட்ட
உயிரினங்களைக் காண்கிறோம். மற்றபடி,

அப்படியே   புதிய  உயிரினங்கள்  தோன்றினாலும், டார்வினின் கூற்றுப்படி,
உயிரினங்களுக்கிடையேயான  வித்தியாசம் என்பது வெறும் அளவு  ரீதியா
னதே தவிர, வகை ரீதியாக வேறானதல்ல ( much of the species diffe
rence is a difference “of degree and not of kind”).அதாவது,
உயிரினங்களுக்கிடையே     பெரிய    வித்தியாசம்    என்பதில்லை     என்பது
பரிணாமத்தை  மறுக்கும்  பார்வையும்  போக்கும்  அல்லாமல் வேறென்ன?

முதலில்,   முதல் உயிர்  (உயிர்-ஜீவி)  தோன்றிட வேண்டும்.   அடுத்தது  அந்த
உயிர்-ஜீவி    நிலைத்து    வாழவேண்டும்,      அதையடுத்து      அவ்வுயிர்-ஜீவி
கிளைத்து பண்பளவில் வெவ்வேறு உயர் உயிர்-ஜீவிகளாக, அதாவது உயிரி
னங்களாக  வெளிப்பட வேண்டும்.  இதுதான்   முழுமையான பரிணாம வழி
முறையாகும்.   பண்பளவிலான  உயர் வளர்ச்சியை  மறுக்கும்   பார்வையும்
போக்கும்   அசலான  பரிணாமத்திற்கு  விரோதமானதாகும்.  இவ்வகையில்,
டார்வினும், அவரது சீடர் டாக்கின்ஸும் பரிணாம விரோதிகளே யாவர்.

டாக்கின்ஸைப்பொறுத்தவரை, அனைத்து உயிரி(னங்)களும்  மரபணுத் தக
வல்களைத் தாங்கிச் செல்லும்  வெறும்  தற்காலிகக் கலன்(பாத்திரம்) களே;
மரபணுக்களை  மறுஉற்பத்தி செய்ய உதவும்  கருவிகளே  என்கிறார்.  அதா
வது,    ஒரு உயிரி,   அது   எலியோ,  மனிதனோ,  அல்லது  வேறு எதுவாயினும்
அது   மரபணுக்களின் கருவியே;   அதாவது,  டாக்கின்ஸைப் பொறுத்தவரை
மரபணுக்களைத்தாண்டி உயிரிகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை!
அதாவது,மனிதஜீவிகள் உள்பட அனைத்து விலங்குஜீவிகளின் ஒரே இலக்கு
தம்தம்   மரபணுக்களை  மறுஉற்பத்தி செய்வது மட்டுமே;  அதற்காகத்தான்
அவை உயிர் வாழ்கின்றன!

ஆனால்,    DNA  எனப்படும்  மரபணுக்கள்  என்பவை  உண்மையில்  என்ன?
உயிரியல்  விஞ்ஞானிகளும்,  டார்வினிய  பரிணாமவாதிகளும்  மரபணுக்க
ளைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்!  அவர்களுடைய விளக்
கங்கள்   நம்மையும்,  நம் வாழ்க்கையையும்  புரிந்துகொள்ள உதவாது!  DNA
என்பது ஒரு உயிரி உருவாவதற்கான அடிப்படை, அதாவது "உயிர்க்கரு" என
நாம்  கொள்ளலாம்.  இக்கட்டுரையின்  தொடக்கத்தில்  குறிப்பிட்ட படி  DNA
எனப்படும்  மரபணுக்கள்  இல்லாமல்  எவ்வொரு  உயிரியும்  இல்லை;  அதே
நேரத்தில்,   ஒரு  உயிரி,  அல்லது  ஜீவி  இல்லாமல்  மரபணுக்களும்  இல்லை;
அதாவது   ஒரு  உயிரிக்கு,   அல்லது   ஒரு  ஜீவிக்கு   வெளியே   மரபணுக்கள்
உயிர்வாழ்வதில்லை!  இதையே வேறு வகையில் சொன்னால்,  முட்டை  இல்
லாமல்  கோழி  இல்லை;   கோழி  இல்லாமல் முட்டை இல்லை! அதே வேளை
யில்,  இது   ஒரு விபரீத வட்டமும் அல்ல.   ஏனெனில்,  ஆதியில்,   முதல் உயிர்
தோன்றியபோது,   "உயிர்க்கரு"    என்கிற   அளவில்   முட்டைதான்   முதலில்
தோன்றியிருக்க  முடியும்!   மனிதன்  என்பவன்  உண்மையில்  விந்தணுவும்
கருமுட்டையும்   இணைந்து  தாயின்  கருப்பையில்  ஒரு  முழு  'ஸெல்'  லாக
ஆகி,  அந்த ஒரு 'ஸெல்' இரண்டாகி, இரண்டு நாலாகி, .... இப்படியே வளர்ந்து
கைகள்,  கால்கள்,   உள் உறுப்புகள்,  கண்,  காது,  மூக்கு,   என முழு உடலாக
உருவாகியதும்  பிறக்கிறான்.

ஒரு  உயிர்-ஜீவிக்கு  மரபணுக்கள் தான்  அடிப்படை  என்பதை நாம்  மறுக்க
வில்லை; மறுக்கவும் முடியாது. ஆனால், டாக்கின்ஸ் போன்ற உயிரியல் விஞ்
ஞானிகள்,  மரபணுக்களை  மட்டும்    கணக்கில்  கொண்டு    உயிர்-ஜீவியை
கணக்கில்  கொள்ளாமல் மறுக்கும்  சுருக்கல்வாதப் போக்கைத்தான் மறுக்
கிறோம்,  தீவிரமாக  எதிர்க்கிறோம். சுருக்கிக்காணவேண்டும் என்று முடிவு
எடுத்துவிட்டால்,   உயிர்-ஜீவிகளை   DNA மூலக்கூறுகளுக்குத்தான்  சுருக்க
முடியும் என்பதில்லை;   DNA மூலக்கூறுகளுக்கும்  அடிப்படையாக விளங்கு
வதாகக்கூறப்படும்    RNA எனப்படும்   ஒற்றை  இழை   மரபணு   மூலக்கூறு
களுக்கும்; அதையும் இன்னும் சுருக்கி எல்லாம் அடிப்படை அணுத்துகள்கள்
தான் என்ற நிலைக்கும் கீழிறங்கலாம்!

"சுயநலங்கொண்ட மரபணு" எனும் தலைப்பில், ஒரு முழுநீள நூலை எழுதிய
ரிச்சர்ட் டாக்கின்ஸ்,     அந்நூலின் பதினொன்றாம் அத்தியாயத்தின் கடைசி
யில், சாத்தான் வேதம் ஓதுவதைப்போல, திடீரென,
   
      "தேவைப்படுமெனில், சுயநலங்கொண்ட மரபணுவினை எதிர்த்துப்
       போராடக்கூடிய ஆற்றல் நமக்கு உள்ளது. இன்னும், நாம் திட்டநோக்
       குடன், தூய பொது நலத்தை வளர்த்தெடுப்பது குறித்தும் ஆலோசிக்
       கலாம்; அப்படியொரு பொது நலம் எனும் அம்சம் இவ்வுலகின் ஒட்டு
       மொத்த வரலாற்றில் இருந்தது கிடையாது. ஏனெனில், நாம் மரபணு
       எந்திரங்களாக . . . .கட்டமைக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால், நம்மைப்
       படைத்த அந்த மரபணுக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ஆற்றல்
       நம்மிடம் உள்ளது.   பூமியில் நாம்  மட்டும்தான்,   'சுயநலங்கொண்ட
       பிரதியெடுப்பான்களின் (மரபணுக்களின்)' கொடுங்கோன்மையை
       எதிர்த்து கலகம் செய்ய இயலும்."

என்பதாக   அறிவித்து  அறிவியலாளரான டாக்கின்ஸ்  அறவியல் போதனை
யாளராக அவதாரம் எடுத்து விடுகிறார்! ஆனால்,  பொதுநலம் எனும் அம்சம்
இப்பூவுலகின் ஒட்டுமொத்த வரலாற்றில் இருந்தது கிடையாது என்ற அவரது
கூற்று அப்பட்டமானதொரு உயிரியல் வரலாற்றுப்புரட்டு என்றுதான் சொல்
லவேண்டும். ஏனெனில்,  அலெக்ஸாண்டர் மெய்னெஸ்  (Alexandre Mein
esz)எனும் எனும் உயிரியல்  விஞ்ஞானி,

         "பல ஸெல்களால் ஆன விலங்குகள், பூஞ்சைக்காளான்கள், கடற்
          பாசிகள் ஆகியவற்றின் தோற்றமானது, ஒரு பிரபஞ்சமளாவிய
          தருக்கத்தின்படி,  அதாவது, "ஒற்றுமையே வலிமை" எனும் பழைய
          மொழிக்கிணங்க விளைந்ததாகத் தெரிகிறது. இத்தகைய
          கூட்டொருமைதான் நம் கண்களுக்குப்புலப்படக்கூடிய அளவிலான
          பல ஸெல்லுயிரிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. முதல் விலங்கு
          மற்றும் தாவர ஸெல்கள் 'பாக்டீரியா' ( bacteria)எனப்படும் நுண்
          ணுயிரிகளின் இணைவினால் உருவானவையே. ஒன்றுக்குள் ஒன்றாக
          உள்-இணைந்த (Endosymbiosis)ஒத்தியை வாழ்வுப்பண்பு எனும்
          கூட்டிணைவில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் அமைந்ததே விலங்கு
          மற்றும் தாவர உயிரிகளுக்கு வலிமை சேர்த்தது ."

என்பதாக,   "உயிர்  எவ்வாறு  தோன்றியது?"   ("How Life Began") எனும்
தனது  நூலில்  மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்,  ஆக, சுய நலம்  என்பது
மரபணுக்களின் ஒரு அடிப்படைப்பண்பு தானே தவிர முடிவான இறுதியான
பண்பு  அல்ல.  "உயிர்"   என்பது   அடிப்படையில்   உயிரற்ற   சடப்பொருளின்
உலகில் உதித்த, சடப்பண்பிற்கு எதிரான ஒரு எழுச்சியும் இயக்கமும் ஆகும்.
ஆகவே,சுயநலம் என்பது, சடத்தனமான ஒரு அந்நிய உலகில் எவ்வாறேனும்
தகவமைந்து உயிர்-பிழைத்தாக வேண்டும் எனும் முனைப்பைக் குறிப்பதே
தவிர, அது ஒரு மோசமான பண்பு அல்ல.

மரபணுவின் 'சுய நலம்' என்பது அகவயமானதுமல்ல,   நடத்தைபூர்வமானது
மல்ல. மாறாக, மரபணுவின் "சுயநலம்" என்பது உயிரின் மிகவும் அடிப்படை
யான   விதி (Law-like) போன்றதொரு  அம்சமாகும். அதாவது, தன்னைத்
தானே பிரதி எடுத்துக்கொள்ளும் (Replication)அம்சம் போல. தன்னைத்
தானே   மறுபடைப்பு  செய்துகொள்ளும்  அம்சமே  உயிரற்ற  பொருளுக்கும்
ஒரு    உயிர்-ஜீவிக்கும்   உள்ள  பிரதான  ஒற்றை  வித்தியாசமாகும்.  மேலும்,
"சுயநலம்"  தான் உயிர்-ஜீவிகளின்  "சுய-பாதுகாப்பு"(self preservation)
எனும்  இயல்பூக்கி (instinct)யின் வேர் ஆகும். மேலும், மரபணுவின்  சுய
நலம்   தான்   உயிர்-ஜீவிகளின்  சுயநல   நடத்தையாக  எழுகிறது.   மனிதன்
உள்பட எல்லா உயிரினங்களும் சுயநலமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

வழக்கமாக, பிற உயிரினங்கள் பறவைகள், விலங்குகள் சுயநலம் கொண்ட
வைகளாக   இருப்பதாக  நாம்  குற்றம் சொல்வதில்லை.  மேலும்,  எவ்வொரு
மனிதஜீவியும் தமக்குத் தெரிந்தோ,அல்லது விரும்பியோ சுயநலமாக இருப்
பதில்லை!   ஏனெனில்,  சுயநலம்  என்பது  உள்-அமைந்த ஒரு இயல்பு ஆகும்.
அதே நேரத்தில், போதியஅளவு உணர்வுக்கு வந்த எவ்வொரு மனிதனும் தம்
இயல்பான   சுயநலத்தை  கட்டுப்படுத்த,  அல்லது   ஒழுங்கமைக்க இயலும்.
அதாவது, கார்லாஸ் காஸ்டனிடா(Carlos Castaneda)வின், டான் ஜுவான்
(Don Juan)போதித்த "கட்டுப்படுத்தப்பட்ட முட்டாள்தனம் "(Controlled
Folly)என்பதை ஒத்தவகையில்!

அதாவது, அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவர்களாகத்தான் தொடங்
குகிறோம் என்பதில்  தவறேதுமில்லை! ஆனால், அந்த சுயநலத்தினால் நாம்
சாதிப்பது  வெறும் 'உயிர்-வாழ்தல்' என்பது மட்டுமே.  அதாவது  உயிர்-வாழ்
தல்  என்பது  உண்மையான ( உயர்)-வாழ்தலுக்கான அடிப்படை மாத்திரமே
என்பதால்,  மேலும்,    நாம்  உணர்வுடைய  ஜீவிகள்  என்பதால்   இவ்வெல்லா
விஷயங்களையும்  நாம்  உணர்ந்து  புரிந்து   கொள்ளமுடியும் ;  இந்த  உணர்
தலும் புரிதலும்தான் மனிதனை மனிதனாக்குகிறது. ஆகவே, நம்மால் நமது
சுய நலத்தைப்புரிந்து கொண்டு அதைக்கடந்து சென்றிட முடியும்.

ஆகவே,  டாக்கின்ஸ் அவர்களின் போதனையான,   'சுயநலங்கொண்ட மரப
ணுக்களுக்கு  எதிராகக் கலகம்  செய்வது'   என்பது தேவையற்றது.  மாறாக,
"சுய நலம்"    என்பதன்   உண்மையான  ஆழமான    தன்மையைச்  சரியாகப்
புரிந்து கொள்வது ஒன்றே போதுமானது. இயற்கையுலகின் அனைத்து தடை
கள்   மற்றும்  மட்டுப்பாடுகளிலிருந்து  நம்மை  விடுவித்துக்கொள்ளும் ஒரே
வழி  பரந்து  விரிந்த  இப்பிரபஞ்சத்திட்டத்தில்,  நம்மைப்பற்றியும், நம் இடம்,
மற்றும் பரிணாமப் பாத்திரம் ஆகியவற்றை உணர்வதொன்றே ஆகும்.

இதன் அர்த்தம்,   உயிரின்   ஜீவியாகத்தோன்றிய  மனிதன்,  உணர்வின் ஜீவி
யாக எழுவதும் முடிவாக ஒருமையும் முழுமையான உணர்வாக மாற்றமடை
வதும் தான் பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கு ஆகும்.


மா.கணேசன்/13.9.2016
----------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...