Monday, 21 November 2016

உணர்வு எனும் மகாபுதிர்!




கண்ணாடி இல்லாமல்  உங்கள் முகத்தை நீங்கள் பார்க்கமுடியாது!
ஆனால், எதைக்கொண்டும் உங்கள் உணர்வை நீங்கள் புரிந்து
கொள்ளமுடியாது- யாதொரு விளக்கமுமுன்றி நேரடியாக உணர்வை
உணர மட்டுமே முடியும் - ஏனெனில், உணர்வு தான் நீங்கள்!

உணர்வைக்கொண்டு பௌதீகப்பிரபஞ்சம் மொத்தத்தையும் அதிலுள்ள
அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்-ஆனால், அப்பௌதீகப்
புரிதலைக்கொண்டு உணர்வைப்புரிந்து கொள்ள ஒருபோதும் இயலாது!
புதிர்களனைத்தையும் விடுவிக்கும் புரிந்தும் புரியா மகாபுதிர் உணர்வு!

ஏணியும் அதன் படிகளுமான இயற்கை இறுதியாக எட்டும் சூக்குமவெளி!
"நீங்கள் யார்?", "உணர்வு என்றால் என்ன?" எப்படிக்கேட்டாலும் ஒன்றே!
எப்படிக்கேட்டாலும் பதிலளிக்காத மௌனமே உணர்வும் பதிலும்!
யாவுமாகியதும் யாவற்றையும் கடந்து நிற்பதும் உணர்வே!

உணர்வே இயற்கையின் மூலகாரணமும் அதன் இரகசிய இலக்கும்!

                 * * * * *
"உணர்வு" (Consciousness) என்றால் என்ன? எனும் கேள்வி எளிமையான
தாகத் தோன்றலாம்;  ஆனால்  அது  அத்தகையதல்ல!  உணர்வு  என்பது மிக
நெருக்கமானதாகவும், பரிச்சயமானதாகவும் தெரியும் அதே நேரத்தில், அது
மிக அந்நியமானதும், தொலைவானதும் ஆகும்! உணர்வைப்புரிந்துகொள்ள
உணர்வைப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி.  ஆகவே,  அதிலிருந்து  பிரிந்து
நின்று நாம் அதை  ஆராய வியலாது. ஏனெனில், உணர்வு தான் நாம்! நம்மை
இயற்கையுலகின்     நீட்சியான   உடலாகப்  பாவித்துக்கொண்டு  உணர்வை
ஆராயப்புகுகிறோம்;   ஆனால்,   உடலாகத் தன்னைப் பாவிப்பதும்   உணர்வு
தான்,  அதாவது  மனித  உணர்வின் பிரமை,  அல்லது  தவறான அடையாளப்
படுத்துதல் தான்!

பல   நூற்றாண்டுகளாக    தத்துவவாதிகள்    உணர்வைப்     புரிந்து கொள்ள
முயன்று வந்துள்ளனர்;  விஞ்ஞானிகள் அப்பிரச்சினையை மறுத்துவந்தனர்,
பிறகு வேறுவழியின்றி, விஞ்ஞானதிற்குள்ளேயே எழுந்த  நிர்ப்பந்தங்களின்
காரணமாக,  இந்த 21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகளும் களத்
தில் இறங்கியுள்ளனர் என்பதை ஒரு நல்ல செய்தியாகக் கொள்வது  என்பது
அவர்களது  ஆய்வு முடிவுகளைக்கொண்டே தீர்மானிக்கப்படமுடியும்!  ஏனெ
னில்,  உணர்வு  என்பது   ஒரு சோதனைக்குழாயில்  இட்டு  ஆய்வு  செய்திடக்
கூடியதொரு பொருள் அல்ல!

அதாவது,  ஒரு  அழகிய  சிற்பம் எத்தகைய பொருளால், அதாவது,  கருங்கல்,
பளிங்கு,   அல்லது,  வெண்கலம்,  அல்லது   வேறு எத்தகைய   உலோகத்தால்
ஆனது       என்பதை     விஞ்ஞானத்தின் மூலம்   எளிதில்    கண்டறிந்திடலாம்.
ஆனால்,  அச் சிற்பத்தின் "அழகு"  பற்றிய எவ்வித புரிதலையும்  விஞ்ஞானத்
தின்  மூலம்  கண்டறியவியலாது!  ஏனெனில்,  "அழகு" என்பது அக-வயமான
தொரு   அனுபவம்   என்பதால் அல்ல.  மாறாக, ஒரு  சிற்பத்தின் அழகு,   அது
எத்தகைய கல்  அல்லது   உலோகத்தால்   ஆக்கப்பட்டிருந்தாலும்,     அக் கல்,
அல்லது      உலோகத்தினுடைய   பண்புகளின்   வெளிப்பாடு    அல்ல!     ஆம்,
"உணர்வு"    என்பது    சிற்பத்தின்    அழகு போன்றது, அது மனித மூளையின்
செயல்பாட்டினால் வெளிப்படும் ஒரு விளைவு அல்ல! மாறாக,  மனிதமூளை
யின் செயல்பாளைக்கொண்டு எட்டப்படும் ஒரு  விசேடமான இருப்பு-நிலை
அல்லது  பரிமாணம் ஆகும்!   அதாவது,   உணர்வு   என்பது    மூளையையோ,
அதன் செயல்பாட்டையோ சார்ந்திருக்கும் ஒன்றல்ல! மாறாக,  மூளையைக்
கொண்ட மனிதஜீவியும், மனிதஜீவியாக எழுந்த பருப்பொருள் பிரபஞ்சமும்
தான்  உணர்வைச்சார்ந்துள்ளன! இல்லாவிடில், பிரபஞ்சத்தின் பிறப்பு  நிகழ்
வாக     விஞ்ஞானிகளால்   குறிப்பிடப்படும்  பெரு-வெடிப்பிலிருந்து    சக்திப்
பொழிவாகவும்   அணுத்துகள்களாவும்  வெளிப்பட்ட  பிரபஞ்சம்,  1500 கோடி
ஆண்டுகளின்   பரிணாம   வழிமுறையின்   விளைவாக  இன்று உணர்வுள்ள
மனித ஜீவியாக   ஏன்  உருப்பெற்றிடவேண்டும்?   ஏனெனில்,   உணர்வு தான்
பரிணாம இயற்கையின் ஒரே இலக்கு ஆகும். அதாவது முழுமையானதொரு
உணர்வில்தான் பிரபஞ்சத்தின் உய்வு அல்லது முழுமை அடங்கியுள்ளது.

உண்மையில், உணர்வு என்பது பிரபஞ்சத்தின் மையத்துவமான (Central)
அம்சம் ஆகும்.   அதுவே பிரபஞ்சத்திற்கு அர்த்தம் அளிக்கும் அம்சமுமாகும்!
ஆனால், உணர்வாகத் தம்மை உணர்ந்திடவேண்டிய மனிதஜீவிகள், தம்மை
உடலாகவும்,   தாம்,   உலகை,  இயற்கையைச் சார்ந்திருப்பதாகவும்  கருதிக்
கொண்டிருக்கிறார்கள்  என்பது  மிகவும்  துரதிருஷ்டவசமானதாகும்!   இந்த
தவறான  புரிதலிலிருந்து  மனிதஜீவிகளை விடுவிக்கும் நோக்கில்தான் இக்
கட்டுரை எழுதப்படுகிறது!  உணர்வில்லையெனில்  மனிதர்களும் தவளைக
ளைப்போலவே யாதொரு புரிதலுமின்றி வெறுமனே உயிர்வாழ்ந்துசெல்வர்.
ஆம்,  மனிதஜீவிகள் தம்மை உணர்வாக உணரவில்லையேல்,  அவர்களுக்கு
உய்வில்லை!

ஆனால்,  நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும், அதிகம் சிந்திக்கும் தத்துவ
சிந்தனையாளர்களும்,       மெத்தப்படித்தவர்களும்,    அறிவுஜீவிகள்    என்று
சொல்லிக்கொள்பவர்களும்   மனிதஜீவிகளை   இன்னும்  விலங்குகளாகவே
காண்கின்றனர். மேலும், சில விஞ்ஞானிகள் உணர்வை மறுக்கவும்,அல்லது
அதை ஒரு முக்கியத்துவமற்ற உபரி விளைவு அல்லது உப-விளைவு எனவும்,
சொல்லிவருகிறார்கள்.   இன்னும்,  இயற்கைவாதிகளும், பொருண்மைவாதி
களும்,  சுருக்கல்வாதிகளும் உணர்வை இயற்கைப்படுத்திட (Naturaliza
tion),பல விஷயங்களில் அதுவும் ஒன்று என காண்பிக்க முயல்கின்றனர்.
நரம்பியல்துறை விஞ்ஞானிகள் உணர்வை மூளை நரம்புகளின் (Neurons)
அதாவது மூளையின் செயல்பாடுகளின் சொற்களில் விளக்கிவிடலாம் என்
கின்றனர்.  ஆனால்,  இப்பிரபஞ்சத்திலுள்ள எதைக்கொண்டும்  உணர்வைப்
புரிந்துகொள்ளவோ,  விளக்கிடவோ  முடியாது!  ஏனெனில், உணர்வு என்பது
ஒரு  அபௌதீக  மெய்ம்மை ஆகும்!   உலகம்,  இயற்கை  என்பது   பௌதீகப்
பண்பைக்கொண்டதாயிருப்பதால்,  இறுதி  உண்மை   அல்லது    மெய்ம்மை
என்பதும்  பௌதீகப் பண்பாகத்தான் அமையவேண்டும் என எதிர்பார்ப்பது
சிறுபிள்ளைத்தனமான தர்க்கமாகும்!

மேலும், பருப்பொருள் அல்லது  சடப்பொருள் என்பது,  உண்மையில்  என்ன?
அதன் மூலம், அல்லது அடிப்படை எது? பருப்பொருள் இருப்பதற்கான உரிய
நியாயம் அல்லது காரணம் என்ன? என்று எவ்விதக்கேள்வியும் ஆய்வுமின்றி
அதை அப்படியே அடிப்படையான நிஜமாகவும்,  முடிந்த முடிவான  நிஜமாக
வும்  ஏற்றுக்கொள்வது என்பது எவ்வகையில் விஞ்ஞானப்பூர்வமானதாகும்?
அப்படியே   சடப்பொருள்தான்   அடியும்   முடியுமான நிஜம் என்றே எடுத்துக்
கொள்வோம்!   ஆனால்,    அச்சடப்பொருள்   ஏன்,  எதற்காக  பரிணமிக்கவும்
உயிர் எனும் பண்பை நோக்கி உயர்ந்தெழவும்,அதையடுத்து, உணர்வு எனும்
பண்பை எட்டிப்பிடிக்கவும் வேண்டும்?

முக்கியமாக,   ஆரம்பம்   எதுவுமின்றி  சடப்பொருளால் நித்தியமாக இலங்க
முடியுமெனில், நிச்சயம் அதுவே மூல-மெய்ம்மையாக, "கடவுள்" எனச் சொல்
லப்படும் 'எல்லாம்வல்ல', எங்கும்நிறைந்த', எல்லாம்அறிந்த' மாய நிஜமாகத்
தான் இருக்கவேண்டும்!   இல்லாவிடில், எவ்வாறு,  உயிரற்ற,  உணர்ச்சியற்ற,
உணர்வுமற்ற சடப்பொருள்  ஒரு கட்டத்தில் உயிராகவும், இன்னொரு கட்டத்
தில்  (மனிதனுள்)  உணர்வாகவும்   உயர்ந்தெழ முடியும்?    இவ்வாறு   மாறிக்
கொண்டேயிருக்கும்  ஒரு பொருளை எவ்வாறு நாம்  "சடம்" எனும் பண்புடன்
பிணைத்து முடக்க முடியும்?   மேலும்,   உயிராகவும்,    மனித உணர்வாகவும்
எழுந்த  சடம்,  மனித  உணர்வைக்கடந்து   அடுத்தது என்னவாக எழக்கூடும்,
இன்னும்  இறுதியாக  அது   தன் பரிணாமப் பயணத்தில்,  எத்தகைய  பண்பு
நிலையை   எட்டக்கூடும்  என்பதைக்  கருதாமல்   எவ்வாறு பருப்பொருளின்
உண்மையான பண்பை, தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும்?   ஆக, பருப்
பொருள்     என்பது   இன்னதென்று   அறுதியிட்டுப்  புரிந்து கொள்ளாதவரை
பருப்பொருளும் ஒரு மாயப்பொருளே, புரியாப்புதிரே!

உண்மையில்  "பொருள்"   என்றால்  என்ன  என்று புரிந்துகொள்ளவேண்டும்
எனில்,   இறுதியாக  அது எத்தகைய பண்பாக,  அம்சமாக மாற்றமடைகிறது
என்பதைக்கொண்டே  முடிவு செய்திட முடியும்!  உண்மையில்  பொருள் என்
றால்   என்ன என்று புரிந்து கொள்வதும்,  "உயிர்"  மற்றும் "உணர்வு" என்றால்
என்ன  என்று   புரிந்து  கொள்வதும்   ஒன்று தான்!    ஏனெனில்,     மெய்ம்மை
என்பது ஒற்றைப்பண்பு கொண்ட ஏகமாகத்தான் இருக்க முடியும்;   பல்வேறு
பண்புகள்,   தன்மைகளின்  கலவையாக  விளங்க வியலாது!  ஆனால்,  அந்த
ஒற்றைப் பண்பு  எது,     அதை    எவ்வாறு    முடிவு செய்வது    என்பது குறித்த
விஷயத்தில்தான் தத்துவவாதிகள் பிரிந்து வேறுபட்டுப்போகிறார்கள்!

பரிணாமத்தில்  இதுவரை  வெளிப்பட்ட பண்புகளான  சடம், உயிர், உணர்வு
ஆகிய பண்புகளில் மேலானது, தலைமையானது எது என்று பார்த்தால், அது
நிச்சயம் உணர்வாகத்தான் இருக்கமுடியும்! மேலும் அந்த உணர்வைத்தான்
பரிணாமம் தன் இலக்காகக்கொண்டு 1500 கோடிஆண்டுகள் நெடிய பிரயத்
தனங்களின்    பலனாக   தற்போது   மனிதஜீவியினுள்   கண்டடைந்துள்ளது!

பரிணாமத்தில்   உணர்வு   என்பது   வெளிப்படாதிருந்தால்,  "பொருள்  தான்
முதல்",  இல்லை,  "கருத்துதான் முதல்" என்பன போன்ற தத்துவ சர்ச்சைகள்
எதுவும் எழாதிருந்திருக்கும்!  நாமும்  தவளைகளைப்போல வாழ்ந்துகொண்
டிருப்போம்!   இன்னும்,   உயிர்ஜீவிகளும்   தோன்றாதிருந்தால், வெறும் சடப்
பொருள் மட்டும் அநாமதேயமாக   தம் எந்திரத்தனமான பௌதீக  இயக்கத்
தில் ஈடுபட்டிருந்திருக்கும்!  

இல்லை, இக்கூற்றுகள்  யாவும் கற்பனை பூர்வமானவை! ஏனெனில், இப்பிர
பஞ்சத்தில்,   உயிர்   உள்ளது,   உணர்வுள்ள  மனித ஜீவியும்  உள்ளான்!   சடப்
பொருளும்     வெறும்   சடப்பொருளாக   அநாமதேயமாக    இருக்கவில்லை!
ஏனெனில்,   பொருண்மைவாதிகள்    எண்ணுவது  போல   பொருள்   என்பது
சுதந்திரமான தனிப்பொருள் அல்ல;  மாறாக, பொருளானது  பெரிதும்  நிர்ப்
பந்தத்திற்குட்பட்ட (Constrained)பொருளே யாகும்!   மேலும்,  பரிணாமம்
என்பதும்  ஏற்கனவே   தீர்மானிக்கப்பட்டதொரு   இலக்கு   நோக்கி  முடுக்கி
விடப்பட்டதொரு   வழிமுறையே யாகும்!   எவ்வாறு,    சமுத்திரமே    நதியின்
இலக்கு   என   முன்-குறிக்கப்பட்டதாக  உள்ளதோ,   அவ்வாறே,     உணர்வே
பரிணாமத்தின்   இலக்கு   என   முன்-குறிக்கப்பட்டதாகும்!  அதே நேரத்தில்,
எவ்வாறு, சமுத்திரத்தைச் சென்றடையும் நதியின் பாதையானது முன்குறிக்
கப்படாதிருக்கிறதோ அவ்வாறே பரிணாமம் முன்னேறிச் செல்லவேண்டிய
பாதையும் முன்குறிக்கப்படவில்லை!   இந்த  அம்சம் தான் பரிணாமத்திற்கு
சுவைகூட்டுவதாக, எதிர்பார்க்கவியலாத , முன்னறியமுடியாத தன்மையை
தருவதாயுள்ளது!   எப்படி   எந்தப்பாதையில்  சுற்றிவளைத்துச் சென்றாலும்,
நதி இறுதியில் சமுத்திரத்தைச் சென்றடைந்தேயாக வேண்டும்!  அவ்வாறே,
பரிணாமத்திற்கு  உட்பட்ட  சடப்பொருளானது சென்றடையக்கூடிய, சென்ற
டைந்தேயாகவேண்டிய ஒரே இலக்கு உணர்வு என்பது மட்டுமேயாகும்!

ஒருவகையில், பரிணாம நிகழ்வுமுறையானது தற்போது கிட்டத்தட்ட தனது
இலக்கு நிலையை நெருங்கிவிட்டது எனலாம்.  அதாவது  சடப்பொருளானது
தனது   நெடிய   பரிணாமப் பயணத்தின்   தற்போதைய   கட்டத்தில்,  மனித
உணர்வை மட்டுமே எட்டியுள்ளது. அதாவது, மனிதஉணர்வு என்பது உணர்வு
நிலையின் ஒரு தொடக்கமே தவிர, அதுவே உணர்வின் முழுமை அல்ல! நதி
யானது முகத்துவாரத்தை மட்டுமே தொட்டுள்ளது, இன்னும் அது சமுத்திரத்
தைச்சேரவில்லை!

இப்போது,  சடப்பொருளை  ஒரு கருவியாக,  ஊடகமாகக் கொண்டு இயங்கி
வருகின்ற இயற்கை அல்லது பிரபஞ்சம் எனப்படும் பரிணாமநிகழ்வுமுறை
யின்  முழுமையும்,  அதாவது,   சடப்பொருளின் உய்வும்,  யாவும்   ஒவ்வொரு
மனித ஜீவியினுடைய உணர்வுப்பரிணாமத்தையே சார்ந்துள்ளன! இன்னும்,
ஒவ்வொரு   மனிதனின் உய்வும்,   முழுமையும்   ஒவ்வொருவரும்   அடையக்
கூடிய உணர்வின் முழுமையையே, "முழு-உணர்வை"யே சார்ந்துள்ளன! இது,
எதற்கு ஒப்பாக இருக்கிறது என்றால்,  ஒரு மரத்தில் நிறைய காய்கள் காய்த்
துள்ளன. அதில், ஒவ்வொருகாயும் நன்கு முற்றிக்கனியாக மாறுவதில் தான்
ஒவ்வொரு காயின் நிறைவும், முழுமையும் அடங்கியுள்ளன! அதேநேரத்தில்,
அம்மரத்தின்  முழுமையும்   ஒவ்வொரு காயும்  கனியாவதில் தான்  உள்ளது.
ஏனெனில்,  கனிகள் தான்   ஒரு மரத்தின்   முழுமையைப்   பிரதிநிதித்துவம்
செய்யும் அம்சங்களாகும்!   அதாவது,   மரமானது  தன்  ஒவ்வொரு கனியின்
வழியாகவும்தான் தன்னைக் கடந்து செல்வதாயுள்ளது!

முக்கியமாக,    ஒரு மரத்திற்கும்  அதன் காய்கள் அல்லது கனிகளுக்குமான
தொடர்புறவைச் சரியாகப்புரிந்து  கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெ
னில்,    இதைப் போன்றதே,  உலகம்  அல்லது  பிரபஞ்சத்திற்கும்,  மனிதஜீவி
களாகிய நமக்குமான தொடர்புறவும் ஆகும்!  மனிதன் என்பவன் பிரபஞ்சத்
தின்   முக்கியத்துவமற்ற   ஏதோவொரு  ஓரத்திலுள்ள பகுதி அல்ல! மாறாக,
ஒரு மரத்தின்  காய்கள்,  கனிகள்  வகிக்கும்  மிக   மையமான  இடத்தையும்,
பாத்திரத்தையும்   கொண்டவனாவான்!    ஆம்,  பிரபஞ்சவிருட்சத்தின்  காய்
களையும்,  கனிகளையும்  போன்றவன்  மனிதன்!   ஆனால்,  துரதிருஷ்டவச
மாக,  மனிதர்கள் எல்லோரும் தாங்கள் உண்மையில் "உணர்வு" தான் எனும்
உண்மையை உணர்ந்தவர்களாக இல்லை!  தாங்கள் உண்மையில் பிரபஞ்ச
மளாவியவர்கள் என்பதை உணராதவர்களாக,   அதாவது,  பரந்த பிரபஞ்சப்
பரிணாமத்திட்டத்தில் தமது இடம், பங்கு, பணி,பாத்திரம்,பொறுப்பு,மற்றும்
முக்கியத்துவம் ஆகியவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாக இல்லை!

மாறாக,  மனிதர்கள் இன்னும் தங்களைத் தங்களது  உடலுடன் அடையாளப்
படுத்திக்கொண்டு,   பெரிதும்    உடல்-ஜீவிகளாகவே  உணவு,   உடை,  உறை
விடம், உறவுகள் என உயிர்வாழ்ந்து செல்கின்றனர்!  உணர்வின்  ஜீவிகளாக
இன்னும் எழவில்லை! மனிதர்கள் இன்னும்  தங்களைப்பற்றிய  உணர்வுக்கு
வரவில்லை!  மனிதர்களுக்கு   "சுய-உணர்வு"   இருக்கிறது   என்பது  வெறும்
பெயரளவுக்கு மட்டுமேயுள்ளது. மனிதர்களது சுய-உணர்வு என்பது, சிறிதும்
ஆழமான வகையில்   சுயத்தைப் பற்றியதாகவும்   இல்லாமல்,   உணர்வைப்
பற்றியதாகவும்  இல்லாமல்,  மிகவும்  மேலோட்டமானதாகவே உள்ளது!

விலங்கினத்திலிருந்து  தோன்றிய  மனிதஜீவியானவன் உணர்வு பெறுவதற்
கான அடிப்படை அம்சமான நன்கு வளர்ச்சிபெற்ற மூளையுடன்  வந்தாலும்,
உணர்வை உணர்வு கொள்வதும்,  உணர்வில் ஆழ்ந்து  நிலைப்பதும்,  மேலும்
மேலும்  உணர்வில் பெருகி உயர்வதும், அவன்  எந்த அளவிற்கு  உணர்வுக்கு
வருகிறான் என்பதைப்பொறுத்த விஷயமாகும்! பொதுவாக மனிதர்களுக்கு
"தாம் இருக்கிறோம்!" என்பது தெரியும்;  ஆனால், தாம் ஏன், எதற்காக   இருக்
கிறோம்? உண்மையில் தாம் யார்? வாழ்க்கை என்பது வெறும் உயிர்பிழைத்
தல் மாத்திரம்தானா?   வாழ்க்கையின்  உண்மையான  குறிக்கோள், இலக்கு
என்ன? என்பதெதுவும் தெரியாது! இக்கேள்விகளை அவர்கள் கேள்விப்பட்டு
இருப்பார்களா  என்பதுகூட சந்தேகமே!   இவை   வெறும்  கேள்விகள் அல்ல!
இவை  சாதாரண மனித உணர்வைப்   பேருணர்வாக  மாற்றமுறச் செய்யும்
இரசவாத மந்திரங்கள் ஆகும்!

உண்மையில்,   "உணர்வு"    என்றவுடன்   விஞ்ஞானிகளும்,   உணர்வு பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நரம்பியல்துறை வல்லுனர்களும், தத்துவவாதி
களும்;  எண்ணங்கள், உணர்ச்சிகள், மனக்காட்சிகள், அறிநிலை, அனுபவம்,
மூளை  செயல்படும் முறை  ஆகியவற்றின் சொற்களில் உணர்வை விவரிக்
கும் நெடும்பணியில் இறங்கிவிடுகின்றனர்!  உண்மையில்  இவ்வம்சங்கள் :
எண்ணங்கள், உணர்ச்சிகள், மனக்காட்சிகள், அறிநிலை, அனுபவம்,  இன்ன
பிற  யாவும்    உணர்வின்  வெளிப்பாடுகளே,   உணர்விலிருந்து   பெறப்படும்
அம்சங்களே தவிர, இவை வேறு, மிகத்துல்லியமாக  உணர்வு  என்பது வேறு!

பரவலாக,   விஞ்ஞானிகள்  மற்றும்    தத்துவ சிந்தனையாளர்கள்  மத்தியில்
நிலவும்   ஒரு   கருத்து  என்னவென்றால்,   "உணர்வைப்பற்றிய விஞ்ஞானம்"
(The science of consciousness)என்பது  முரண்பாடானது,  பொருத்த
மற்றது என்பதேயாகும்!   இக்கூற்றில் உண்மையில்லாமலும்  இல்லை. அதே
வேளையில், இக்கூற்று முழுமையான உண்மையும் இல்லை! அதாவது  விஞ்
ஞானம்  தொடர்ந்து  தனது  பழைய,  எந்திரத் தனமானதும், சுருக்கல் வாதத்
தனமானதும், பொருண்மையானதுமான அணுகுமுறையில் தொடரும்வரை
அதனால் ஒருபோதும் உணர்வைப்புரிந்துகொள்ள இயலாது! அதேநேரத்தில்
உணர்வைப் புரிந்துகொள்ளாவிடில் விஞ்ஞானம் முழுமையடையாது!

மேலும், விஞ்ஞானத்திற்கும், தத்துவத்திற்கும் இடையே நிலவிவரும்  எதிர்ப்
புணர்வும், பகைமையும் ஆரோக்கியமானதல்ல!  இரண்டும்  தம்தம் அணுகு
முறையில் வேறுபடுகின்றனவேதவிர, இரண்டிற்கும் உண்மையை அறிவது
ஒன்றே இலக்குஆகும்! கலை, கவிதை, இசை, இலக்கியம், சமயம், ஆன்மீகம்
இவையும்  அறிதல் முறைகளே;   இவை  இயங்கும் தளங்கள் மட்டுமே வேறு
வேறு ஆகும்.  அறிதல்முறைகள் வெவ்வேறாயினும், அவை பரஸ்பரம் தமது
கனிகளைப்  பரிமாற்றம்  செய்து கொள்ளும் வகையில்,   திறந்த   அமைப்பு
களாகத் திகழ்வது அவசியமாகும்!

விஞ்ஞானம்   என்பது   புறவயமானது (objective), பொதுப்படையானது
(public) எனப்படுகிறது!   அதே வேளையில்,    உணர்வுப்பூர்வ  அனுபவம்
என்பது அகவயமானது (subjective)மற்றும் தனியொருவருக்குச்சொந்த
மானது   அதாவது,   அந்தரங்கமானது (private) எனப்படுகிறது!   ஆகவே,
"உணர்வைப்பற்றிய விஞ்ஞானம்" (science of consciousness)என்பது
முரண்பாடானது,  பொருத்தமற்றது  என்பதாக முழங்கப்படுகிறது!  ஆனால்,
இக்கூற்று  தன்  தர்க்கத்தைத் தொலைத்துவிட்ட குருட்டுவாதமாகும்!  ஏனெ
னில்,     "உணர்வு"   என்பது அதன் அடிப்படையிலும், அதன் சாரத்திலும் அக
வயமானது  என்பதுதான்  உணர்வைப்பற்றிய  மையமான  உண்மையாகும்!
மேலும், அகவயமான அம்சங்கள், மனம், உணர்வு, அனுபவங்கள் ஆகியவை
புறவயமான,   பொருண்மையான   உலகின்    வெளிப்பாடுகள்   மாத்திரமே;
ஆகவே, அவை பொருண்மையான அம்சங்களைப்போன்ற நிஜங்கள் அல்ல
எனும் கருத்து தவறானது. உண்மையில்,புறவயமானதும்,பொருண்மையான
துமான அம்சங்களையும், பொருட்களையும் விட அதிக  நிஜத்தன்மையுடை
யது (objective)மனம், அல்லது உணர்வு எனப்படும் அம்சமேயாகும்!   எவ்
வாறெனில்,  உணர்வும்,   அதன் கருவியுமான மனமும்   இல்லாமல்  நம்மால்
எதையும் அறிந்துகொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இயலாது!

அடுத்து,  விஞ்ஞானம்  என்பது என்னவாயிருந்தாலும்,  "எது"  இப்புறவுலகை,
பிரபஞ்சத்தைப் பார்க்கிறது, அறிகிறது, ஆராய்கிறது, அதைப்பற்றிய கோட்
பாடுகளை உருவாக்குகிறது என்றால், அது அகவயமான,  தன் சொந்த அனு
வத்தை வேராகக்(Root)கொண்டதொரு மனித-உணர்வே ஆகும்! அதாவது,
"உணர்வு"  என்பது  என்னவாயிருந்தாலும்,  விவரித்து  விளக்கமுடியாததாய்
இருந்தாலும், விஞ்ஞானம் என்பது மனித - உணர்வின் ஒரு வெளிப்பாடல்லா
மல் வேறென்ன? விஞ்ஞானம் என்பது நேரே சொர்க்கத்திலிருந்து  இறங்கிய
ஒன்று அல்ல! அதாவது, மனித-உணர்வு இல்லாமல் விஞ்ஞானம் இருக்கமுடி
யாது!  அதாவது புறவயமானதும், கறாரான முறைமைகளைக்கொண்ட ஒரு
அறிதல் முறை எனப்படும் விஞ்ஞானம் உண்மையில் அகவயமான பார்வை
யின்  மிகவும் வித்தியாசமானதும், விபரீதமானதுமான  ஒருவகைப் பார்வை
ஆகும்!   எவ்வகையில்  விபரீதமானது என்றால்,  அகவயமானது   எனப்படும்
பரிமாணத்தை மையமாகக்கொண்ட உணர்வு என்பதையே அது அடியோடு
மறுக்கக்கூடியதாக,  'கிணறு வெட்ட கிளம்பியது பூதம்'   என்கிற வகையில்!

உண்மையில்,   எல்லாவித  அறிதலும்,  புரிதலும்,  பார்வையும்  அகவயமான
வையே! விஞ்ஞான அறிதல் முறையானது அது பிரதானமாக ஆராயக்கூடிய
பருப்பொருளின்பண்புகளாலும்,அதன் விதிகளாலும் பெரிதும் கட்டுப்படுத்
தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. ஆனால், உயிருள்ளஜீவியானது,அது என்ன
தான்  பருப்பொருளால்  ஆனதாயிருந்தாலும்,   அதன்  பண்புகள் முற்றிலும்
வேறானது என்பதால், பருப்பொருளின் பௌதீக விதிகளைக்கொண்டு ஒரு
உயிர்ஜீவியை புரிந்துகொள்ளவியலாது! அதாவது,  பௌதீக விதிகள்  வேறு,
உயிரியல் விதிகள் வேறு; அதைவிட, உணர்வியல் விதிகள் முற்றிலும் வேறு!

உயிரற்ற சடப்பொருட்களுக்கும்,  உயிருள்ள ஜீவிகளுக்கும் உள்ள வித்தியா
சத்தை, இடைவெளியை எவ்வித அறிதலைக் கொண்டும் விளக்கிப்போக்கி
விடமுடியாது!  அடுத்து,   சடப்பொருட்களுக்கும்,  உணர்வுள்ள  ஜீவிக்குமான
வித்தியாசம்  முன்னதைவிட  அனந்த-அளவு  பெரியது!  அதாவது,   உணர்வு
(ஒரு முழுமையான உணர்வு) சடப்பொருளாலான ஒட்டுமொத்த  உலகையே
முடிவிற்குக்கொண்டு வந்துவிடக்கூடியதாகும்!

உண்மையில்,  "நமக்குப்புறத்தே வெளியே ஒரு உலகம் உள்ளது!"   என்பதும்,
"அது நம்மைவிடப்பெரியது!",    "நாம் அதன் முக்கியத்துவம் ஏதுமற்ற பகுதி",
"ஆரம்பமும் முடிவுமின்றி   இருப்பது  இந்தப் பௌதீகப்பிரபஞ்சம் மட்டுமே",
"உயிர்த்தோற்றம் விபத்துரீதியானது!",     " உணர்வு  என்பது   மூளைச்செயல்
பாட்டின் ஒரு விளைவு!", "மனிதஜீவி என்பவன் அடிப்படையில் அணுத்துகள்
களே!","மனிதனுக்கு யாதொரு நிரந்தரசுயமோ,சுதந்திரசித்தமோ இல்லை!"
"பரிணாமம்  குறிக்கோளற்றது; பிரபஞ்சம் அர்த்தமற்றது!"  என்பன போன்ற
கூற்றுக்களும், அர்த்தமற்றவை மட்டுமல்ல ஆபத்தானவையாகும்.

உண்மையில், அகம் xபுறம்,  அகவயம் xபுறவயம், உடல் xமனம், ஆகிய பிரச்
சினைகள்  மிகவும் நுட்பமானவையாகும்.  அவற்றை  நாம்  மிக நுட்பமாகப்
புரிந்துகொள்ளவேண்டும்.    முதலிடத்தில்,  அகம் xபுறம்  எனும்  பிரச்சினை
யைத் தோற்றுவித்தது மனிதனல்ல! மாறாக,  இயற்கையே, உலகமே ஆகும்.
முதன்முதலாகத்  தோன்றிய உயிர்ஜீவியுடன் தான் அகம் xபுறம்  எனும்  இப்
பிரச்சினை தொடங்கியது! அதாவது, இயற்கையுலகம் தான் தனது சடத்தன்
மையைக்கடந்துசெல்லும் பொருட்டு உயிர்ஜீவியாக அவதாரம் எடுத்தது!

இயற்கை மட்டும் உயிர்ஜீவியாக பரிணமிக்கவில்லையெனில், அகம்xபுறம்
எனும்    இந்தப் பிரச்சினை, பிளவு, பிரிவினை, முரண்பாடு  எழுந்திருக்காது!
ஆனால், இயற்கை அல்லது, பருப்பொருளால் பரிணமிக்காமல், மாற்றமடை
யாமல்  இருக்க முடியவில்லை!   உண்மையில்,   இயற்கையால்    தொடர்ந்து
இயற்கையாக   இருக்கமுடியாதபோது,  அதை  'இயற்கை'  என்று  சொல்வது
எவ்வகையில்  பொருத்தமானதாயிருக்கமுடியும்?  (காண்க :  "இயற்கையின்
இயற்கை என்ன?' 31.10.2016 @ vicharamarg.blogspot.in) மேலும்,   அது
எத்தகைய இயற்கையாக இருக்கும்?  அடிப்படையில், பிரச்சினை  உலகத்தி
னுடையதே;பருப்பொருளாலான உலகம் பரிணமிக்காமல் இருக்கமுடியாது!
அதற்கு  பருப்பொருளினுள்  உள்ளமைந்த  படைப்புப்பூர்வமான சுய-முரண்
பாடுதான் காரணமாகும்!

அதாவது, ஒரு மையமின்றி அநாமதேயமாக எந்திரத்தனமாக இயங்கிவந்த
அணுத்துகள்களான பிரபஞ்சமானது சுய-அமைப்பாக்க  (Self-Organiza
tion)வழிமுறையில்,   தனி-மையப்பட்டு (Individualization) எழுந்த
நிலை அல்லது அவதாரம் தான் உயிர்ஜீவி என்பதாகும்! உண்மையில்,  புறத்
திற்கும்,  அகத்திற்கும்;   உலகம்(சுற்றுப்புறம்) என்பதற்கும்,   உயிர்ஜீவிக்கும்
இடையே யாதொரு பகையோ, முரண்பாடோ, எதிர்ப்போ எதுவும்கிடையாது.
இத்தகைய நிலையை,   நாம்  "காரியவாத-முரண்பாடு"   என்றழைக்கலாம்!
இவ்வகையில் காணும்போது,   டார்வினின்   'உயிர்-பிழைப்புப் போராட்டம்',
'வலியதே வாழும்',   'இயற்கைத்தேர்வு'   ஆகியவை  தவறாகப் புரிந்துகொள்
ளப்பட்ட கோட்பாடுகளே எனலாம். 'இயற்கையே'  பரிணாமத்திற்கு  உட்படு
கிற,   மாறுகின்ற  இயல்பைக் கொண்ட பொருளாக, கருவியாக,  ஊடகமாக
இருக்கும் பட்சத்தில்,  அங்கே  எந்த இயற்கை,  எந்த இயற்கையைத் "தேர்வு"
செய்யும்??

முதல்  உயிரியான அமீபா (அல்லது ஏதோவொரு பாக்டீரியா) வின்  வருகை
தான் உலகை புறம் எனவும், அகம் எனவும் இரண்டாகப்பிரித்தது.   எனினும்,
தான் ஒரு "அக-ஜீவி" (அகத்தை,உணர்வை மையமாகக் கொண்ட ஜீவி) என்
பதை உணரும் அளவிற்கு அது தன் அகத்தில் (உணர்வில்) ஆழப்படவில்லை.
அதற்கு "சுய உணர்வு" எனும் அவ்வரிய அம்சம் இல்லை. ஆகவேதான், அந்த
அமீபா தான், நெடிய பரிணாமப் பயணத்தின் வழியாக தற்போது சுயவுணர்
வையுடைய மனித ஜீவியாக எழுந்துள்ளது.  ஆம்,   அகம் என்பது  அதற்குரிய
உணர்வுப்பரிமாணத்துடன் முதன்முதலில் மனிதனுடன் மட்டுமே தொடங்கு
கிறது.

உணர்வைப்பற்றிப்பேசும்போது, மனிதஜீவியின் அகவயப் பரிமாணத்தைக்
கணக்கில் கொள்ளாமல்,  ஆகவே   மனிதனையும்  கணக்கில் கொள்ளாமல்
உணர்வின் சமன்பாட்டைச் சமன்செய்ய இயலாது! ஏனெனில், உணர்வுதான்
மனிதன்!  மனிதன் என்பவன் உணர்வேதவிர அவனது மூளையோ, உடலோ
அல்ல! சாதாரண பேச்சுவழக்கில்,  நாம் "உணர்வுள்ள-மனிதன்", மனிதனின்
உணர்வு" என்றெல்லாம் சொல்கிறோம்! ஆனால், உண்மையில்,மனிதனுக்கு
கைகள்,கால்கள்உள்ளன என்பதைப்போல,அவனுக்கொரு உணர்வு உள்ளது
என்று சொல்வது தவறானபுரிதல் ஆகும். மாறாக, மனிதன் உணர்வேயன்றி
வேறெதுவுமல்ல!    " உணர்வுதான் தான்!"   என்பதை   உணரும்  போது தான்
மனிதன் உண்மையில் மனிதனாகிறான்; அதுவரை அவனும் ஒரு விலங்கே!

உணர்வை  அகவயமானதொரு  அம்சம்  என்றுசொல்லி  அதை புறவயமான
உலகிற்குக் குறைச்சலான   விஷயமாகக் கருதுவது  தலைகீழான புரிதலின்
வெளிப்பாடே!   மனிதனுடைய  அறிதலுக்கும்   அனுபவத்திற்கும்   வெளியே
உலகம் இருந்தாலும்,   இல்லாவிட்டாலும்    ஒன்றுதான்!   உலகம் அர்த்தப்பட
வேண்டுமானால்,  உணர்வு  வேண்டும்!   ஆகவேதான்,   பருப்பொருளாலான
உலகம் மனிதனாக(மனித-உணர்வாக)ப் பரிணமித்தது! உயிரும்,உணர்வும்
பிரபஞ்சத்தின்  கட்டாய   விழைவும்   (Cosmic Imperative)  தேவையும்
ஆகும்!   உணர்வு  என்பது,  சடப்பிரபஞ்சத்திற்குள்  எழுந்த உயிர்ப்பிரபஞ்சத்
தின் வழியாக எட்டப்பட்ட மூன்றாவது பிரபஞ்சம் ஆகும்!   இந்த மூன்றாவது
பிரபஞ்சம்  என்பது ஒரு தாழ்-நிலை உணர்வின் சுற்றுப்பாதை (Orbit)என
லாம்!   இதுவரை நிகழ்ந்தேறிய பரிணாம வழிமுறையானது மனிதஜீவியை
இந்தத்   தாழ்-நிலை   உணர்வின்  சுற்றுப்பாதை   (The Lowest Orbit of
Consciousness)யில் ஏவியுள்ளது!  இச்சுற்றுப்பாதையிலிருந்து உணர்வின்
உச்சிப் புள்ளியை (The Summit of Consciousness) எட்டுவது  என்பது
ஒவ்வொரு        தனி மனித ஜீவியினுடைய     உணர்வார்ந்த      விழைவையும்
பொறுத்ததாகும்! அந்த உணர்வின் உச்சியே இறுதி-மெய்ம்மை (Ultimate
Reality)ஆகும்!   அதுவே   அனைத்திற்கும் ஆதியான மூல- மெய்ம்மையும்
ஆகும்!

ஆனால், உணர்வின்ஜீவிகளாக உயர்ந்தெழ வேண்டிய மனிதர்களில்  அறிவு
ஜீவிகளும்,விஞ்ஞானிகளும்,தத்துவவாதிகளும் உணர்வை  உடலியலுடனும்
பொருளியலுடனும் தொடர்புபடுத்தி தாங்களும் குழம்பி,பிறரையும் குழப்பி
வருகின்றனர்; சாமானியர்களோ அன்றாடஉயிர்வாழ்தலின் தேவைகளைக்
கடந்து  சிந்திக்கத் தொடங்கவில்லை இன்னும்!  விஞ்ஞானிகளின்  குழப்பத்
திற்குக்காரணம் அவர்கள் மனிதனை பிரதானமாக ஒரு  உடலியல்ஜீவியாக
காண்பதும், அதைவிட முக்கியமாக, அவர்கள் உணர்வை நேரடியாக முதல்-
நபர்  கண்ணோட்டத்தில்  காணாமல்,   ஒரு  மேசையைக்  காண்பதுபோலக்
காண முயற்சிக்கிறார்கள்;   இந்த முதல்-கோணல், முற்றிலும் கோணல் என
ஆகிவிடுகிறது!  அதாவது,  மூளையும்,  அதன் செயல்பாடுகளும்  உணர்வை
உருவாக்குவதாக அவர்கள் எண்ணுகிறார்கள்; ஆகவே மூளையை அவர்கள்
மிக  விரிவாக ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்!   ஆனால்,    சந்தேகமின்றி,
மூளையும்,அதன்செயல்பாடுகளும் உணர்வை எட்டுவதற்காகப்பயன்படுத்
தப்படுகின்றன!    மேலும்,    மனித-மூளை  மட்டுமல்லாமல்,  மனித உடலும்,
இன்னும்  ஒட்டு  மொத்த   உயிரியல்  தளமும்,   ஒட்டுமொத்த     பிரபஞ்சமும்
உணர்வை எட்டுவதற்கான நெடிய ஏணியாகப் பயன்படுத்தப்படுகிறது!

உணர்வைப்பற்றிய அதிமுக்கியமான ஒருஉண்மை என்னவெனில்,உணர்வு
என்பது  அனைத்திலும் இறுதியானது!  ஆம், உணர்வு  என்பது பிரபஞ்சத்தில்
உள்ள பல்வேறு பொருட்களில்,  பண்புகளில்,  அம்சங்களில், அதுவும் ஒன்று
அல்ல! உணர்வே அனைத்திலும் இறுதியானது என்று இங்கு நாம்  குறிப்பிடு
வது, மனித-உணர்வை அல்ல; மாறாக,ஒவ்வொரு மனிதனாலும் எட்டப்படக்
கூடியதும், எட்டப்படவேண்டியதுமான,  அதேநேரத்தில்,  மனித-உணர்வைக்
கடந்த தொரு, பேருணர்வு,  அல்லது   முழு-உணர்வையே குறிப்பிடுகிறோம்!

உணர்வுதான் யாவற்றுக்கும் அடிப்படையான மூலமெய்ம்மையும்,முடிவான
இறுதிமெய்ம்மையும் என இக்கட்டுரையாளர் முன்வைத்திடும் வேளையில்,
உணர்வை முற்றிலுமாக மறுத்திடும் போக்கு ஏற்கனவே வேர்பிடித்து  வெகு
காலமாக தழைத்துக்கொண்டிருக்கவே செய்கிறது!   பிரெஞ்சு தத்துவவாதி,
ரெனே தெகார்த்  (René Descartes (1596–1650)  தொடங்கி    வைத்த
"மனம்-உடல்"  பிரச்சினை  இருமை வாதத்தை (dualism)தத்துவத்திற்குள்
கொண்டுவந்துவிட்டது  பொருண்மைவாதிகளுக்கு  பெரும் தலைவலியாகி
விட,   அவர்களில்  பலரும்  பலவழிகளிலும் இருமைவாதத்தைப்போக்கிவிட
முயன்றனர்,   இன்றளவும்  முயன்றுவருகின்றனர்.  ஆனால், இவர்களுடைய
நோக்கம்,    இருமையை நீக்கி   ஒருமையை   நிலை நாட்டுவதல்ல.   மாறாக,
'பொருண்மையே  அந்த மாபெரும்  ஒருமையும், மூலமெய்ம்மையும்'   என்று
நிரூபிக்கத்தான்!

ரெனே தெகார்த்   தொடங்கி வைத்த   அந்த   "மனம்-உடல்"  பிரச்சினையை
இவ்வாறு எளிமையாகவிளக்கிடலாம்.அதாவது, எனது உடலும், மனமும் மிக
நெருக்கமான   தொடர்பில்    பிணைக்கப்பட்டுள்ளதால்,   அவை   இரண்டும்
"நானே"  என  நான் எண்ணுகிறேன்.  ஆயினும்  உடலும், மனமும்   முற்றிலும்
வெவ்வேறான  தன்மை கொண்டவை  என நான்  கருதும்  பட்சத்தில்,    நான்
என்பது என் மனமா? அல்லது, நான் என்பது என் உடலா? அல்லது,   நான் என்
பது இரண்டுமா?  அப்படியானால்,   இரண்டுக்குமான தொடர்பு தான் என்ன?  
இதுதான் "மனம்-உடல்"  பிரச்சினை!

நிஜத்தில்,  மனத்துக்கும்,  உடலுக்கும்  இடையே பிரச்சினை ஏதும் உள்ளதா?
அல்லது தத்துவவாதிகளின் குழம்பிய சிந்தனை  பிரச்சினை  இருப்பதாகக்
கற்பிக்கின்றதா?   விஷயம்  என்னவெனில்,  முதலிடத்தில், உடலும் மனமும்
என்னுடையவை எனும் பட்சத்தில், அவை நானாக முடியாது. அதாவது  எனது
உடமைகள் என்னுடையவையே; ஆனால், அவையும் நானும் ஒன்றல்ல!எனது
வீடும் நானும் ஒன்றல்ல. எனது வீடு எனக்குப்பாதுகாப்பு தருகிறது; நான் என்
வீட்டை முறையாக பராமரிப்பு செய்கிறேன்.  இவ்வகையில் எனக்கும் எனது
வீட்டிற்கும் நெருக்கமான பிணைப்பு உள்ளது.இவ்வாறே, உணர்வாகிய நான்
என் உடலையும், என் மனத்தையும் சார்ந்திருக்கிறேன்! இவ்விடத்தில், உடல்,
மனம்   இவ்விரண்டையும்  கடந்து  மூன்றாவதாக  உணர்வு என்பது  தொக்கி
நிற்கிறது என்பதை, தத்துவவாதிகள் பலர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
அதாவது,   எனது  உடலையும்,  எண்ணங்களையும்  (மனதையும்)    என்னால்
அனுபவம் கொள்ள முடிகிறதென்றால், அவை வேறாக, நான் வேறாகத்தான்
இருக்கமுடியும்!  உண்மையில்,  எண்ணங்கள்,  மனம்   என்பவை உணர்வின்
கருவிகளே. நம்மில்,பலர் உணர்வாகத் தங்களை உணரவியலாத நிலையில்
( இன்னும் உணர்வுக்கு வராத நிலையில்), மனதுடனும், எண்ணங்களுடனும்,
அல்லது அதற்கும் கீழமைந்த உடலுடனும், பலவித இச்சைகளுடனும் தவறா
கத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுவிடுகின்றனர்!  இந்தத் தவறு
தான் இல்லாத தத்துவப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அடிப்படையாகும்!

இருமைப்பிரச்சினை  மனத்திற்கும்,  உடலுக்கும்  இடையே  மாத்திரம் தான்
உள்ளதா? உயிர்-ஜீவிக்கும், உயிரற்ற சட-உலகிற்கும் இடையே  இல்லையா?
உயிரற்ற சடப்பொருள் எவ்வாறு உயிர்-ஜீவியாக எழுந்தது?  சட-உலகிற்கும்,
உயிர் ஜீவிக்கும் இடையேயான "இடைவெளி"யை எந்தவிஞ்ஞானம் அல்லது
தத்துவம் இதுவரை விளக்கித் தீர்வுகண்டுள்ளது?   இடைவெளிகள், இருமை
கள்,  முரண்பாடுகள்   நீக்கமுடியாதவை,    தீர்க்கமுடியாதவை!    ஏனெனில்,
இருமை தான் மாற்றத்திற்குட்பட்ட இருப்பின் அடிப்படையாகும்!

ஏனெனில்,   தொடர்ந்து  வளர்ந்து செல்வதான பரிணாம நிகழ்வுமுறையில்,
முந்தைய ஒருகட்டத்திற்கும், அதற்குப்பிந்தைய கட்டத்திற்கும் வேறுபாடும்,
இடைவெளியும்,   முரண்பாடும்  தோன்றுவது  தவிர்க்கவியலாதவையாகும்!
இன்னும், மாறிக்கொண்டேசெல்லும் ஒரு நிகழ்வுப்போக்கிற்கும் அதன் முடி
வான  அடைவிடம் போன்ற  இலக்கு நிலைக்கும்  இடையே   பண்பு ரீதியான
பெரும் இடைவெளி இருக்கவேசெய்யும்! பண்புரீதியாக வளர்ந்துகொண்டே
செல்லும் பரிணாம நிகழ்வுப்போக்கு என்பது வெறும் ஆற்றோட்டம்போன்ற
தல்ல! ஆறு கடலில் கலந்த பிறகு அது தனது அடையாளத்தை இழந்து, 'கடல்'
எனும் புதிய அடையாளத்தைப்பெற்றுவிடுகிறது!     அதுவரை,    "ஆறு-கடல்"
எனும் இருமை நிலை நீடிக்கவேசெய்யும்! ஆறு கடலில் கலப்பதை,  அது உட்
படக்கூடிய  இறுதி மாற்றம் என நாம் கொள்ளலாம். அதுபோலவே,பரிணாம
நிகழ்வுப்போக்கும்  தனது  இலக்கு  நிலையான  "முழு-உணர்வு"   நிலையை
அடைந்தபிறகு;   அங்கு  இயற்கை,  உலகம்,  பருப்பொருளாலான பிரபஞ்சம்,
இன்னும்  மனிதனும்  (சிற்றுணர்வு)  எதுவும்  இருக்காது!  அனைத்தும்  "முழு-
உணர்வு" அல்லது "பேருணர்வு" எனும் மகா "ஒருமை"யுள் இணைந்துவிடும்!

நதியின் அடைவிடம் சமுத்திரம்.    ஏணியின்   பயன்பாடு ஏறிக் கடந்து மேற்
தளம் அடைதல். மரத்தின் முழுமை கனிகளாக மாறுவது. இயற்கை அல்லது
உலகின் உண்மை பேருணர்வே. ஆம், இயக்கத்தின் அர்த்தம் அது  அடையக்
கூடிய    இலக்கு  நிலையில்  உள்ளது.    இவ்வாறே,   பரிணாம   இயக்கத்தின்
அர்த்தமும், முழுமையும் அது இறுதியாக அடையக்கூடிய இலக்குநிலையில்
தான் உள்ளது.  இயற்கை,   உலகம்,   பிரபஞ்சம்  என்பது ஒரு பரிணாம இயக்
கமே.  இவ்வியக்கம்  பல நூறு கோடியாண்டுகளின் பரிணாம வளர்ச்சியின்
முடிவில், சிற்றுணர்வைத் தாங்கும் மனிதஜீவியை அடைந்துள்ளது. ஆனால்,
இது இறுதி முடிவு அல்ல! மனிதன் என்பவன் பரிணாமத்தின் இறுதிச்சொல்
அல்ல! மாறாக, அவன் பேருணர்வு நிலையை அடைவதற்கான ஒரு  முக்கிய
கருவியே!  பரிணாமம்   முழுமையடைவதற்கு   இன்னும்   ஒரு  படி   உள்ளது.
சிற்றுணர்வாக   எழுந்த   மனிதனின்  உணர்வார்ந்த  முயற்சியால் மட்டுமே
அப் "பேருணர்வு" எனும் இறுதி மெய்ம்மை அடையப்படமுடியும்!

மேலும்,  இறுதிமெய்ம்மையை அடைவது என்பது ஒரே நேரத்தில் ஒவ்வொரு
மனிதனுடைய வாழ்க்கையின் இலக்காகவும்,  ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின்
பரிணாம இலக்காகவும் அமைந்ததோடல்லாமல்,   அதிமுக்கியமாக,  இறுதி
மெய்ம்மையும் அதில் களிப்பெய்துகிறது!    ஏனெனில்,  இந்த   ஒட்டுமொத்த
பிரபஞ்சம்  என்பது   அந்த   இறுதிமெய்ம்மை   தம்னைத்தாமே முதலீடாக்கி,
முடக்கியதன், அதாவது வித்தாக மாற்றி விதைத்துக்கொண்டதன் விளைவு
தானே!   ஆகவே,  இப்பிரபஞ்சத்திலிருந்து  தம்மை மீட்டெடுத்துக்கொள்வது
என்பது "ஆனந்தக்களிப்பு"  தரும் விஷயமாகத்தானே இருக்க முடியும்! மூல
மெய்ம்மை தம்மைத்தாம்   மீட்டெடுத்துக்கொள்ளும் வழிமுறைக்குப்பெயர்
தான்பரிணாமம்.அதாவது,பரிணாமத்தில் இறுதியாக வெளிப்படும் அம்சம்
அல்லது   மெய்ம்மை  எதுவோ,   அதுவே  பரிணாமத்திற்கு மூல  காரணமாக
அமைந்த அம்சமும், மெய்ம்மையும் ஆகும்.

"உணர்வு என்றால் என்ன?"   எனும் கேள்வியுடன் இக்கட்டுரையைத் தொடங்
கினோம்,  ஆனால், அதற்குரிய நேரடிப்பதிலைத்தவிர, பிற உலக விஷயங்க
ளை, அதாவது,  உணர்வுக்கும், உலகம் மற்றும் உலகிலுள்ள பிற அம்சங்கள்,
பண்புகளுக்கும்    உள்ள    தொடர்புறவுகளைப் பற்றிய   உண்மைகளையும்
உணர்த்துகோள்களையெல்லாம்   ஆழ்ந்தாராய்ந்து   அறிந்து கொண்டோம்!
ஆனால்,  தனியே,  உணர்வு என்றால் என்ன?  என்ற கேள்விக்கான பதிலைப்
பார்ப்போம் :

* உணர்வு,  அதன்  முழுமையான  தனித்த  பேருணர்வு நிலையில்  அது  ஒரு
மகா புதிர் ஆகும்!  அது  சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை (A State of
Infinite Possibilities)யாகும். அது காலம்-வெளி கடந்த மெய்ம்மை.

* அதாவது, ஆற்றல், சக்தி, பொருண்மை, காலம், வெளி, சடப்பொருள், உயிர்,
உலகம்,  இயற்கை, பிரபஞ்சம், மனிதன்,  என அனைத்தும் உணர்வின் வெவ்
வேறு நிலைகளும், வடிவங்களும், வெளிப்பாடுகளுமே ஆகும்.

* உணர்வு என்பது, அதன் ஆகச் சுருங்கிய  அடி மட்டத்தில் உணர்வற்ற சடப்
பொருளே ஆகும். ஆனால்,  'பெரு-வெடிப்பு'  நிகழ்ந்த   அக்கணத்திலிருந்தே
உணர்வுப் பரிணாமம் தொடங்கிவிடுகிறது. அதாவது, மிக நுண்ணிய அடிப்
படை அணுத்துகள்கூட அதனால் கிரகிக்கக்கூடிய அளவிலான உணர்வைப்
பெற்றுள்ளது எனலாம்.  தகவலியல் (Information Theory) சொற்களில்
சொன்னால், உணர்வு என்பது அடிப்படையில், வெறும் "தகவல்-பரிசீலனை"
(Information Processing)என்று சொல்லலாம்.ஆனால், உச்சநிலையில்
உணர்வென்பது "தகவல்களின் அனந்தநிலை" (Infinite Data)எனலாம்.
ஆனால், அந்நிலை அனைத்துத் தகவல்களையும்,தகவல்களைப் பரிசீலிக்க
வேண்டிய தேவையையும் கடந்த பரிமாணம் ஆகும்!   இதன் அர்த்தம் என்ன
வெனில்,   தகவலியல் -சொற்களில்  உணர்வைப் புரிந்து கொள்ள  இயலாது
என்பதுதான்.

* சிலர்,  அதில் குறிப்பாக,   டேவிட் ஜெ, சால்மர்ஸ்,  (David J. Chalmers)
உணர்வின்  "கடினப் பிரச்சினை" எனவும், "சுலபப் பிரச்சினை" எனவும் பேசு
கிறார்.   அதாவது, எவ்வாறு மூளையின் பௌதீகச் செயல்முறைகளானவை
அகவய   அனுபவங்களை உருவாக்குகின்றன   என்பதைப்  புரிந்து கொள்ள
இயலாது என்பதுதான் உணர்வின் "கடினப்பிரச்சினை" எனப்படுகிறது. ஆம்,
சால்மர்ஸின்   இக்கூற்று   மிகச்சரியானதே!   அதே வேளையில்,  உணர்வின்
விஞ்ஞானத்தை (science of consciousness)கட்டியெழுப்பும் விஷயம்
குறித்துப்  பேசுகையில்,   "இறுதியில்   நாம்   மூளையின்   பௌதீகச் செயல்
முறைகளையும், உணர்வுப்பூர்வ அனுபவத்தையும் இணைக்கும் அடிப்படை
விதிகளைப்பற்றிய  கோட்பாட்டினை  அடைந்திடுவோம்!"   என    சால்மர்ஸ்
நம்பிக்கைமிகுந்த   தொனியில்  கூறுவது,  அவர்   முன்வைத்த    உணர்வின்
"கடினப் பிரச்சினை" யுடன் முரண்படுவதாக ஒலிக்கிறது!    ஏனெனில்,  சால்
மர்ஸ் எதிர்பார்க்கின்ற  கோட்பாட்டினை நாம்   அடைந்திட்டாலும், "உணர்வு
என்றால் என்ன?"   "உணர்வு ஏன் எதற்காக எழுந்தது?"   என்பன போன்ற பல
கேள்விகளுக்கான பதில்களை நாம் பெற முடியாது!

அதாவது,  சால்மர்ஸின்  அணுகுமுறையில்  உள்ள கோளாறு என்னவெனில்,
பிற விஷயங்களை அணுகுவதுபோல்,  உணர்வையும் ஒரு பிரச்சினையாகப்
பார்ப்பதுதான்!  ஆனால்,  "உணர்வு"  என்பது ஒரு பிரச்சினை அல்ல! மாறாக,
உணர்வுதான் அனைத்துப்பிரச்சினைகளுக்குமான தீர்வு ஆகும்.

* ஆதியும் அந்தமும்,  மூலமும் முடிவும்,  ஆல்ஃபாவும்  ஒமேகாவும் உணர்வே!
அதுமட்டும்   அல்ல,    இடையிலுள்ளவையும்  உணர்வின்   வெவ்வேறு நிலை
களும், வடிவங்களும், வெளிப்பாடுகளுமே ஆகும். ஆம், உணர்வுதான் இறுதி
யானது,   அதாவது,   எல்லா விளக்க பூர்வமான  அம்புகள் யாவும் எப்போதும்
மேல்   நோக்கியதாக  உணர்வையே  குறிக்கின்றன."     இவ்வுண்மையானது
நோபல் பரிசு   பெற்ற    அமெரிக்க  பௌதீகவியல்   விஞ்ஞானி    ஸ்டீவென்
வெய்ன்பெர்க்   (Steven Weinberg) அவர்களின் புகழ் பெற்ற வாக்கியங்
களில்   ஒன்றான,   "எல்லா  விளக்க பூர்வமான அம்புகள் யாவும்  எப்போதும்
கீழ்  நோக்கி  பௌதீகவியலையே  குறிக்கின்றன."    என்பதற்கு    முற்றிலும்
மாறானாது, எதிரானது. ஏனெனில், அவரது இக்கூற்று தவறானது மட்டுமல்ல,
படு அபத்தமானது!

முக்கியமாக,    அவரது   கூற்று  பரிணாம-விரோதமானது.   எந்தப் பரிணாம
நிகழ்வுமுறையானது   உயிரும்,  உணர்வும் அற்ற  அடிப்படை( அணு)த்துகள்
களை,   1,500 கோடி ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களினூடாகச்
செலுத்தி,   தற்போது  உணர்வுள்ள  சிந்திக்கும்  திறனுள்ள    ஒரு  விஞ்ஞானி
யாக, அவரை உருவாக்கியதோ அந்தப்பரிணாமநிகழ்வுமுறையை முற்றிலு
மாக  மறுப்பவராக  ஸ்டீவென் வெய்ன்பெர்க்  விளங்குகிறார்.   மேலும்,   இப்
பிரபஞ்சத்தையும், அதிலுள்ள அனைத்தையும்  -  கல், மண், புழு, பூச்சி, செடி
கொடிகள்,  மரங்கள்,  எலி,  தவளை,  பூனை,  யாணை,  புலி, சிங்கம், குரங்கு,
மனிதன் ஆகியவற்றையும்; உயிர், மனம், உணர்வு என எல்லாப்பண்புகளை
யும்  அடிப்படை  அணுத்துகள்களுக்குச்  சுருக்கிக்காண முடியும்!    ஆனால்,
அணுத்துகள் என்பதென்ன? பருப்பொருள் என்றால் என்ன?அனைத்தையும்
அணுத்  துகள்களுக்குச்  சுருக்கிடும்   பட்சத்தில்,    அணுத்துகளை   எதற்குச்
சுருக்குவது?   பருப்பொருள்   எத்தகைய  பொருளால்   ஆனது?   புகழ் பெற்ற
குவாண்டம் பௌதீகவியல் விஞ்ஞானி,ஹேன்ஸ்-பீட்டர் டோர் (Hans-Peter
Dürr) அவர்களின் சொற்களில்,   "பருப்பொருள்  என்பது  பருப்பொருளால்
ஆனதல்ல"   (Matter is not made out of matter)  என்பது       தான்
உண்மை!   இன்னும்,   "உள்ளது  பருப்பொருள்  மட்டுமே,  பருப்பொருள் தான்
பிரதானமானது,   அனைத்துக்கும்   அடிப்படையானது!"   என்று  தவறாகவும்,
தலைகீழாகவும்  சொல்வதற்குக்கூட  உணர்வின் உதவியில்லாமல் சொல்ல
முடியாது!

* அடுத்து,  "உணர்வு   என்றாலே  அது ஏதாவதொன்றைப்பற்றிய  உணர்வே!"
எனச் சொல்லப்படுவதும்   பிழையானதே.  புலன்வழி-உணர்வு       கொண்ட,
ஆனால்,   சுய-உணர்வற்ற  விலங்குஜீவிகளும், புலன்வழி-உணர்வுடன், சுய-
உணர்வும்    கொண்ட    மனிதஜீவிகளும்    தம்தம்    உணர்வைக் கொண்டே
தம்மைச் சுற்றியுள்ள உலகைப்புரிந்து கொள்கின்றனர்.  புலன்வழி உணர்வு
மற்றும் சுய-உணர்வு ஏதுமற்ற ஒருகூழாங்கல்லினால் அதனுடைய மிகமிகச்
சன்னமான   பௌதீகத்தனமான   உணர்வைக்கொண்டு  எதையும்   புரிந்து
கொள்ளவியலாது! அதே வேளையில், தம் புலனுணர்வைக்கொண்டு புறவுல
கினை  ஓரளவிற்கு அறிந்து  செயல்படும்  விலங்குஜீவிகளால்,    தம் சொந்த
இருப்பினை,   "தாம்  இருக்கிறோம்!"    என்கிற  உண்மையை அறிவதில்லை!
இத்தகைய  பிரத்யேக  சுய-உணர்வு மனிதஜீவிக்கு மட்டுமே வாய்த்துள்ளது
என்பது பெரும் பேறாகும்.

அதாவது,  உணர்வு என்றாலே அது ஏதாவதொன்றைப்பற்றிய உணர்வே என்
பது உணர்வின் ஒரு தொடக்கநிலைப்பண்புதானேதவிர அதுவே உணர்வின்
இறுதியான  பூரணமான பண்பு அல்ல.  ஒரு கூழாங்கல்லினால் தன்னையும்
உணரமுடியாது,    தனக்குப் புறத்தே  உள்ளவற்றையும் அறியமுடியாது.  ஒரு
தவளையால், தனக்குப்புறத்தேயுள்ளவற்றை உணரவும், அறியவும் முடியும்.
ஆனால்,  அதனால்,  தன்னையோ   தன்சொந்த   இருப்பையோ     உணரவழி
யில்லை!   அதேவேளையில்,   ஒரு  மனிதஜீவியால்,  தனக்குப் புறத்தேயுள்ள
அருகிலுள்ள சுற்றுப்புறத்தை மட்டுமல்லாமல் இப்பிரபஞ்சம் முழுவதையும்
ஆராய்ந்தறிந்திடவும்; அனைத்திற்கும் மேலாக மனிதனால், தன் சுய-உணர்
வைக்கொண்டு  தம்  சொந்த இருப்பையும், சுயத்தையும்   உணரவும், அறிய
வும் முடியும்!   ஆனால்,   மனிதனுடைய   பிரத்யேகப் பேறான சுய-உணர்வும்
கூட  உணர்வின்  இறுதிச்சொல்லோ,  பண்போ அல்ல!   ஆம்,  ஒரு மனிதஜீவி
யால் தனது சுய-உணர்வையும் கடந்துவளர்ந்து உணர்வின் உச்சநிலையான
பூரண "முழு-உணர்வு" எனும் இறுதி மெய்ம்மையையும் அடையமுடியும்!

ஆக,  'உணர்வு என்றாலே அது ஏதாவதொன்றைப்பற்றிய உணர்வே' என்பது
உணர்வின் ஒரு தொடக்கநிலைப்பண்பு மாத்திரமே; அந்நிலையுடன் உணர்
வைக்குறுக்கிவிட முடியாது! உணர்வு தொடக்கத்தில் புறம் நோக்கிப்பாய்கி
றது.  அதன்  அடுத்தகட்ட வளர்ச்சியாக,  தன் அகம் நோக்கித் திரும்புகிறது!
அதாவது  அது தன்னைப்பற்றிய உணர்வுக்கு வருகிறது.   இறுதியாக, உணர்
வானது  தனது மையத்துவமான முக்கியத்துவத்தை உணர்ந்து, தன்னுள்ளே
ஆழ்ந்து முழு-உணர்வாகஆகிறது! இயற்கை, உலகம்,பிரபஞ்சம் என்பது தன்
உட்பொதிவின் சாரத்தில் உணர்வுதான் என்பதை பரிணாம வழிமுறையின்
இறுதியில் மனித  உணர்வின் மூலமாக உணர்ந்துகொள்கிறது!

* ஆம்,  மனித- உணர்வு  என்பது பரிணாமவழிமுறையின் மிகமுக்கியமான,
திருப்பு முனையான தொரு  வளர்ச்சிக்கட்டமாக விளங்குகிறது!   நதி எனும்
இயக்கமானது பெரிதாக பண்பு நிலையில் எவ்வித மாற்றமும் அடையாமல்
இறுதியாக   தன்   இலக்கு நிலையான   சமுத்திரத்தைச்  சென்றடைந்திடும்.
ஆனால்,  பரிணாம இயக்கமானது, பொருண்மைவாதிகள் சொல்வது போல
வெறும்  "இயக்கத்திலுள்ள பருப்பொருள்" அல்ல.  மாறாக, பரிணாமமானது
பருப்பொருளை  ஒரு ஆரம்ப நிலைப்பண்பாகக்கொண்டு தொடங்குகிறதே
தவிர, இடையில் அது "உயிர்"எனும் பெரும்பண்புநிலை மாற்றத்தைத்தழுவி,
அதையடுத்து,  பல்வேறு  உயிர்ஜீவிகளின் வழியாக புலன்-வழி உணர்வைப்
பெற்று, தற்போது,   மனித ஜீவியின்  வழியாக   "சுய-உணர்வு"   எனும்  அரிய
அம்சத்தை எட்டியுள்ளது. அடுத்து இறுதிக்கட்டமாக, மனிதனின், ஒவ்வொரு
மனிதனின்,   உணர்வார்ந்த   விழைவின்   மூலமாக   உணர்வின்  உச்சமான,
"முழு-உணர்வு" அல்லது "பேருணர்வு" நிலையை அடைகிறது. இதுவரையில்
கணிசமான   எண்ணிக்கையிலான   தனிமனிதர்கள்   முழு-உணர்வு  எனும்
அந்நிலையை அடைந்து பிரபஞ்சம் எனும் பரிணாமஇயக்கத்தை முழுமைப்
படுத்தியுள்ளனர்!

* உணர்வு  என்பது   இயற்கையையோ,  பருப்பொருளாலான   இம்மாபெரும்
பிரபஞ்சத்தையோ; அல்லது, வேறு எவ்வொரு பண்பையோ, அம்சத்தையோ
எதனையும்  சார்ந்த  ஒன்றல்ல!   மேலும்,   உணர்வை  ஒருபோதும் வேறு எவ்
வொரு அம்சம், பண்பு, எதற்கும் குறைத்தும், வேறு எதனுடைய சொற்களின்
வழியாக விளக்கியும் புரிந்து கொள்ளமுடியாது!   மாறாக,  உணர்வை  நேரடி
யாக    ஒவ்வொருவரும்   உணர்வு கொள்வதன்   வழியாக  மட்டுமே  உணர்ந்
தறியவும், புரிந்து கொள்ளவும் முடியும்!  இதன் அர்த்தம் அது அகவயமானது
(Subjective) என்பது மட்டுமல்ல. மேலும், அகவயமானது என்பது புறவய
மான  (Objective) நிஜத்தைவிடக்  கீழானதோ,   குறைவானதோ   அல்ல.
மாறாக,புறவயமான நிஜமாகக்கருதப்படும் பருப்பொருளானது பரிணாமம்
எனும்   ஒரு  விசேட  மாற்றத்திற்கு   உட்பட்டு    அகவயபட்டதன் விளைவாக
எழுந்த  நிஜம் தான் மனித-உணர்வு ஆகும்.  ஆக, மேன்மேலும்  அகவயப்படு
வதும், சூக்குமமடைவதும்தான் நிஜத்திலும் அதி-நிஜமாகும் வழியாகும்!ஆக,
புறவயமான நிஜம் என்பது   உண்மையில்  நிஜத்தின் மேலோடு போன்றதே!
ஆக,  விஞ்ஞானிகள்  எதிர்பார்ப்பது போல,  மூளையின் செயல்பாடுகளைக்
கொண்டும்,  மூளையிலுள்ள நியூரான்கள் எனப்படும் நரம்புகளின்  வலைப்
பின்னல்களுக்கும்,   அகவயமான   முதல்-நபர்  அனுபவங்களுக்கும்    உள்ள
தொடர்புடைமைகளைக்  (Neural  Network Correlates) கொண்டும்
உணர்வைப்   புரிந்துகொள்ள  ஒருபோதும்  இயலாது.  அதாவது,   முதல்-நபர்
அணுகுமுறையைக்கொண்டு  மட்டுமே  புரிந்துகொள்ளப்படக்கூடிய   அம்ச
மான     உணர்வை   விஞ்ஞானத்தின்    மூன்றாம்-நபர்    அணுகுமுறையைக்
கொண்டு புரிந்துகொள்ள முடியாது. இவ்வுண்மையை பல விஞ்ஞானிகளும்,
தத்துவ சிந்தனையாளர்களும்  ஏற்றுக்கொள்கின்றனர்  என்பது  பாராட்டுக்
குரிய விஷயமாகும்!

* உணர்வை பருப்பொருளின் ஒரு விசேடப்பண்பாகக் குறைத்திட முயற்சிப்
பதற்கும்,  உணர்வை  இயற்கைப்படுத்திடத்  துடிப்பதற்கும்,  இன்னும் அதீத
மாகச் சென்று உணர்வை முற்றாக மறுப்பதற்கும், விஞ்ஞானபூர்வமானதும்,
தத்துவ பூர்வமானதுமான       காரணங்களையும்,       தர்க்கங்களையும்  விட
சித்தாந்த ரீதியான காரணங்களே அடிப்படையாக விளங்குகின்றன!  ஏனெ
னில்,  உணர்வை முறையாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ளும் பட்சத்
தில், அதாவது மூலமும், முடிவும் உணர்வே எனும் அப்புரிதல் இயற்கையின்,
பருப்பொருள்- உலகத்தின்  மேலாண்மையை  செல்லாக்காசாக  ஆக்கிடும்!
அதோடு, விஞ்ஞானம், பொருண்மைவாதம்,சுருக்கல்வாதம், நாத்திகவாதம்,
எந்திரவாதம்,  டார்வினிய பரிணாமவாதம் ஆகியவற்றின் முடிவை அறிவிப்
பதாக அமைந்துவிடும்!  ஆக,  உணர்வின் மையத்துவம் பிறவனைத்தையும்
ஓரங்கட்டிவிடும்! ஆக இத்தகைய அச்சுறுத்துதல்களை உணர்வின் உணர்த்
துகோல்கள்  (Implications) தன்னகத்தே   கொண்டிருக்கிறது!  மேலும்,
உணர்வின் மையத்துவத்தையும்,பிரதானத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும்
பட்சத்தில், கருத்து முதல் வாதத்தையும், ஒருசில சமயபூர்வ-உண்மைகளை
(Religious Truths)யும்,  ஆன்மீக உண்மைகளையும் மறுக்கமுடியாமல்
போகும்  நிலை   உருவாகிவிடும்!    ஆக,   இத்தகைய    காரணங்களாலேயே
உணர்வை     உணர்வின்     சொற்களிலேயே      புரிந்து  கொள்வது     என்பது
தொடர்ந்து  தவிர்க்கப்பட்டும், தொடர்ந்து உணர்வுக்குக்  கீழேயுள்ள அம்சங்
கள், பண்புகளைக்கொண்டு உணர்வை விளக்கும்போக்கு நீட்டிக்கப்பட்டும்
வருகிறது.
இத்தகைய    மாய்மாலக்காரர் களுக்கு  மத்தியில்,  தத்துவ சிந்தனையாளர்
கோலின் மேக்கின் (Colin McGinn), தாமஸ் நாஜெல் (Thomas Nagel),
ஜெர்ரி ஃபோடோர் (Jerry Fodor),நோம் சோம்ஸ்க்கி (Noam Chomsky),
மார்ட்டின் கார்டுனர்   (Martin Gardner),  அமெரிக்க      உளவியலாளர்
ஸ்டீவென் பிங்க்கர் (Steven Pinker),  ஆங்கிலேய பௌதீக விஞ்ஞானி
யும், கணிதவியலாளரும், விஞ்ஞானத்தத்துவ சிந்தனையாளருமான ரோஜர்
பென்ரோஸ் (Roger Penrose), அமெரிக்க   நரம்பியல்துறை  விஞ்ஞானி
ஸாம் ஹாரிஸ் (Sam Harris)போன்றோர் உணர்வின் புரியாத்தன்மையை
ஏற்று   அங்கீகரிப்பவர்களாக  விளங்குகின்றனர்.   இவர்கள்    புதிர்வாதிகள்
(The Mysterians)என்று  அழைக்கப்படுகிறார்கள்!  இவர்கள் பிற தத்துவ
வாதிகளைப்போல 'உணர்வு-மறுப்புவாதிகள்' அல்லர்.  இவர்கள் உணர்வை
உணர்வாக  மதித்து  ஏற்றுக்கொள்கின்றனர்.  உணர்வை  உணர்வின் சொற்
களிலல்லாமல்  வேறு பண்புகளின்  சொற்களில்   புரிந்து கொள்ளவியலாது
என்கின்றனர்!

* உணர்வைப்பொறுத்த  ஒரு விசேடத்தன்மை  என்னவெனில், அது அனைத்
தையும் தன்வயமாகவும், தன்மயமாகவும் மாற்றிவிடக்கூடிய தனிமுதலான
(Absolute)ஒரு மெய்ம்மையாகும்! இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள எல்லா
 வுமாகவும்   ஆகியது  உணர்வே!   உணர்வே   பிரபஞ்சத்தின்  சாரம் அல்லது
ஆன்மா ஆகும்!  அது பருப்பொருள் தன்மை கொண்டதுமல்ல!  அது உயிரும்
அல்ல!  இன்னும்,  அது  காலையில்  மலர்ந்து இரவில் உதிர்ந்து போகக்கூடிய
சாதாரண மனித-உணர்வும் அல்ல!  அது  ஒரு மகா புதிர் ஆகும்!   உணர்வின்
புதிர்த்தன்மையைத் தரிசித்தவர்கள் வெகு சிலரே!

புதிரைப்  புதிராக இனம் கண்டுகொண்டவர்களே அப்புதிரை உண்மையில்
புரிந்து கொண்டவர்களாவர்!     அவர்களே ஞானிகள்!    உணர்வு  எனும் மகா
புதிருக்கு இன்னொரு பெயர் : கடவுள்!!

மா.கணேசன்/ 16.9.2016
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...