Wednesday, 15 May 2019

முதலும் முடிவுமானது அறம்



   அறம் என்றால் என்னவென்று புரிந்துகொண்டால்,
   இல்லறமா? துறவறமா?
   எது நல்லறம் என்ற கேள்விக்கே இடமில்லை!
   ஏனெனில், அக்கேள்வி அர்த்தமற்றது!
   

   சமுத்திரத்தை அடைவது என்பதைத் தவிர நதிக்கு வேறு சொந்த
இலட்சியங்கள் எதுவும் இல்லை; இருக்கவும் முடியாது!
ஆகவே, நீங்களும் நதியைப்போல் வாழுங்கள்!


அறமெனப்படுவது யாதெனின்

முதலில் அறம் என்றால் என்ன என்று பார்ப்போம். அறம் என்பதும், நெறிமுறைகள் (Ethics) என்பவையும் ஒன்றல்ல!

மனித இனத்தின் முதல் தேவை ஒரு சமூகமாக கூடி வாழ்வதில் பூசல்கள், பிரச்சினைகள், வன்முறைகள் இல்லாமல் சுமுகமாக உயிர்-பிழைத்திருப்பது என்பதுதான்; இத்தேவையை ஒட்டி உருவாகியவைதான் நெறிமுறைகள்! இவை சமூகத்திற்குச் சமூகம், காலத்திற்குக் காலம் மாறுபடுபவை. இந்நெறிமுறைகள் மேலோட்டமானவை; இவை அறம் எனப்படுவதன் கருவையோ, மையத்தையோ நெருங்குவதில்லை, தொடுவதில்லை! நெறிமுறைகள் அறம் சார்ந்தவை எனப்படுகின்றன; ஆனால், அவை கண்ணுக்குத் தெரியாத, தெளிவாக அறியப்படாத ‘அறம்’ என்ற ஒன்றைச் சுட்ட மட்டுமே செய்கின்றன!

ஒரு சமூகமாக, சுமுகமாக, இணக்கத்தோடு, இசைவோடு இயங்குவதன் மூலம் உயிர்-பிழைத்தல் என்பதற்கு மேல், வாழ்வின் அர்த்தமோ, குறிக்கோளோ, இலக்கோ வேறெதுவும் சாதிக்கப்படுவது இல்லை! ஆகவே நெறிமுறைகள், அறநெறிகள், அறவியல் எனப்படுபவை எவ்வகையிலும் இறுதியானவை அல்ல! இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் போரில்லாத மனிதகுலமாக நாம் பக்குவம் பெறவில்லை!  நம்முடைய அறநெறிகள் யாவும் நூல்களில் மட்டுமே வாழ்கின்றன.
ஆகவேதான், ‘அறம்’ என்பது வேறு, வெறும் ‘நெறிமுறைகள்’ என்பது வேறு என்று இங்கு குறிப்பிடப்படுகிறது!

அதாவது, அறநெறிகள் என்பவை சமூகக் களத்தில் கூடி வாழும்போது தனிமனிதர்களுக்கிடையே தேவைப்படும் பண்புகளாகத் திகழ்கின்றன. அப்படியானால், தனிமனிதன் ஒருவன் காட்டில் தனியே வாழ நேர்ந்தால், அவனுக்கு அறநெறிகள் தேவையற்றவையா? ஆம், பொதுவாக ‘அறம்’ என்று பரவலாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதன்படிப் பார்த்தால், தனியே வாழும் ஒரு தனிமனிதனுக்குத் தேவையில்லை என்பதாகத் தான் கொள்ளப்படுகிறது. ஆனால், உண்மை(யில்) அறம் என்பது பிராணவாயு போல, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியமானதாகும்; அவன் தனியே காட்டில் வசித்தாலும், அல்லது சமூகத்தில் வசித்தாலும்!

அப்படியானால், ‘அறம்’ என்றால் என்ன? ‘அறம்’ என்பது விழிப்பைக் குறிக்கிறது. ஆம், “விழிப்பு” (Awakening) என்பதுதான் அறத்தின் சாரம்! விழிப்பின் வழியாகத் தோன்றும் உணர்வு, அதாவது “விழிப்புணர்வு” என்பதில்லாமல் மனிதன் மனிதனாக ஆகவோ, வாழவோ இயலாது!

பொதுவாகக் கருதப்படுவதுபோல விழிப்புணர்வு என்பது ஜாக்கிரதையுணர்வு அல்ல! இந்த இரண்டும் ஒன்றல்ல! மனிதன் நாட்டில் வாழ்ந்தாலும், காட்டில் வாழ்ந்தாலும் ஜாக்கிரதை - உணர்வுடன் இருப்பது அவசியம்!  ஜாக்கிரதையுணர்வு என்பது குறுகிய, உடனடித் தேவையை குறிக்கோளாகக் கொண்டது; ஆகவே மிகவும் மேலோட்டமானது, மட்டுப்பாடானது! ஆனால், விழிப்புணர்வு என்பது விசேட விழிப்பின் விளைவாக அமைவதாகும். விழிப்பு என்பது, இரவில் தூங்கி காலையில் விழித்தெழுவது  அல்ல; மாறாக, ஒருவன் தன்னை நோக்கியும்; தனது உணர்வுக்கும், ஒட்டுமொத்த இருப்பு, மற்றும் வாழ்க்கைக்கும் விழிப்பதாகும்! இத்தகைய விழிப்பு, “ஞான விழிப்பு”, “ஆன்மீக விழிப்பு” என அலங்காரமாக அழைக்கப்படுகிறது! ஆனால், இவ்விழிப்பு மிகவும் அடிப்படையானது; அதே நேரத்தில், இறுதியானதும் ஆகும்!

ஆம், விழிப்புதான் அறத்தின் சாரம் ஆகும். தனிமனிதனின் விழிப்பின் வழியாகத்தான் அறம் என்பது சமூகத்தில் வெளிப்படவியலும்! விழிப்பு இல்லாமல் அறம் இல்லை! வெறும் நெறிமுறைகளோ, அவற்றைப் பின்பற்றுவதோ அறமாகாது!

எது நல்லறம்?

இல்லறம், துறவறம், எது நல்லறம் என்று கேட்டால், எதுவுமல்ல என்பதுதான் சரியான பதிலாகும். முதலில், அடிப்படையில் அறம் வேண்டும், அதாவது விழிப்பு வேண்டும். விழிப்புள்ள மனிதன் இல்லறத்தில் இருந்தாலும், துறவறத்தில் இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான்! இல்லறமோ, துறவறமோ, அவை எதுவும் அறத்துக்கான அச்சாரம் அல்ல!

இல்லறம் இயற்கையானது; ஆகவே அடிப்படையானது. துறவறம் செயற்கையானது. இல்லறம் இல்லையேல், மனித இனம் இல்லை; எனவே எந்த அறமும் இருக்காது! ஆக, இல்லறம் என்பது தவிர்க்க இயலாத, கொடுக்கப்பட்ட நிலையாகும். ஆனால், துறவறம் என்பது தேர்வுக்குட்பட்ட நிலையாகும். சிலர், இல்லறத்தைவிட துறவறத்தை தேர்வு செய்திடலாம்; ஆனல் அதில் எவ்வித பெரிய ஆன்மீக அனுகூலமோ, தனிச்சிறப்போ கிடையாது! இல்லறமும் அத்தகையதே, அது கொடுக்கப்பட்ட நிலை என்பதைத் தவிர அதில் தனிச்சிறப்பு ஏதும் இல்லை! விழிப்பை அடிப்படையாகக்கொண்ட அறம், “இல்லறமா? துறவறமா? எது நல்லறம்?” என்ற பிரச்சினையை அடியோடு மாற்றியமைத்துவிடுவதோடு, அதை முடித்தும் வைத்துவிடுகிறது!

''எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும்!” என்று சொல்வது மடமையாகும். எல்லாவற்றையும் துறந்தால் வறுமையும் துன்பமும் தான் வரும். எல்லாவற்றையும் துறந்தாலும், அல்லது எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டாலும் ஞானம் வராது! மாறாக, ஞானத்தின் மீது அலாதியான பற்றுகொள்வதன் வழியே மட்டுமே ஞானம் வரும்! அத்தகைய பற்று பிறவனைத்தின் மீதான பற்றுக்களையும் பின்னே தள்ளிவிடும்! சிலர் சகல சம்பத்துக்களையும், சொத்து சுகங்களையும் அடைந்துள்ள நிலையில் ஒருவகை உடமை மனோபாவத்தினால் அவற்றுடன் ஞானத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என விரும்புவது பேராசை மட்டுமல்ல, அது ஞானத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்! அத்தனைக்கும் ஆசைப்படும் விபரீதத்தின் வழியே இது!

அறநெறிகள் என்பவை தறிகெட்ட தனி நபர்களை ஒருங்கிணைத்து சமூகமாக ஆக்குவதற்காக உருவானவை. அவை தனி நபர்களை சமூக மனிதர்களாக மாற்றியதே தவிர சுயமாகச் சிந்திக்கும் தனிமனிதர்களை அவை உருவாக்கவில்லை! ஆனால், விழிப்பின் வழி பிறக்கும் உண்மை அறமானது சமூக மனிதர்களை விழிப்புணர்வுகொண்ட தனிமனிதர்களாகவும், இறுதியில் அவர்களை முழு-மனிதர்களாகவும் ஆக்கவல்லதாகும்!

அறநெறிகள் மறைமுகமாக அறத்தைச் சுட்டுவதோடு நின்றுவிடுகின்றன! அவை அறத்தின் தேவையை, முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன; ஆனால், அறம் என்றால் என்ன என்பதை அவை விளக்குவதில்லை! எச்சமூகத்தில் அறநெறி போதனைகள் மேலோங்கி ஒலிக்கின்றனவோ, அச்சமூகம் அறங்கெட்டதாக உள்ளது என்பதையே குறிக்கின்றது! அறநெறிகளுக்கு ஒரு சமூகப் பயன்பாடு இருந்தது, இன்றும் இருக்கிறது, கணிசமான மனிதர்கள் விழிப்படையும் காலம்வரை  அறநெறிகளுக்கான தேவை எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்! நெறிமுறைகள் போதிக்கக் கூடியவை; ஆனால், அறத்தை போதிக்கமுடியாது! ஏனெனில், விழிப்பை போதிக்க முடியாது! அதே நேரத்தில், விழிப்பில்லாமல் அறம் இல்லை; அறம் இல்லாமல் நெறிமுறைகள் யாவும் வெற்றுச் சடங்குகளே!

பற்றை விடமுடியுமா?

பற்றுகளை விட முடியுமா? "பற்றுகளை விடுவது கடினம். ஒரு பற்றை விட்டால், இன்னொரு பற்று வந்து சேர்வது இயல்பு." என்று சொல்லப்படுகிறது. ஆனால், பற்றின் தன்மை பற்றுபவனின் தன்மையைச் சார்ந்தது. ஒருவன் ஏன் சிலவற்றைப் பற்றிக்கொள்கிறான்? பொதுவாக எல்லோரும் அறிந்தவற்றை, தெரிந்தவற்றை, அனுபவித்தவற்றை மட்டுமே பற்றுகிறார்கள். காரணம் அவை அவர்களுக்கு பயனளிப்பதாயும், மகிழ்ச்சியளிப்பதாயும் அமைகின்றன. எவையெல்லாம் துய்ப்பதற்குரியவையாயும், நுகர்வதற்குரியதாயும் உள்ளனவோ அவற்றையே மக்கள் பற்றுகிறார்கள். அவை யாவும் வாழ்வின் மேற்புறத்தேவைகளுக்குரிய பொருட்களாகவே உள்ளன. தேவைகளை நாம் அடிப்படைத்தேவைகள், அத்தியாவசியத் தேவைகள், அத்தியாவசியமற்ற அலங்காரத் தேவைகள், ஆடம்பரத் தேவைகள்... என்று வகைப்படுத்திக் காணலாம். எல்லாத் தேவைகளும், பொருட்களும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைச் சேர்ந்தவையே.

மனிதர்கள் பொதுவாக, தேவைகள், தேவைகளின் நிறைவேற்றம் என்பதன் வழியாகத்தான் வாழ்க்கையை அறிகிறார்கள், வாழ்கிறார்கள். ஆண்டி முதல் அரசன் வரை அடிப்படைத் தேவைகள் என்பவை பொதுவானவை; இன்னும் முனிவனுக்கும் சில அடிப்படைத் தேவைகள் உண்டு! எவரும் தம் உடலையோ, உயிரையோ துறக்க முனைவதில்லை! ஆனால், அடிப்படைத் தேவைகள் என்பவை, அடிப்படைத் தேவைகள் மட்டுமே, அவையே மனிதவாழ்வின் ஒட்டுமொத்தத் தேவைகளையும் உள்ளடக்கியவையல்ல! இவற்றைக் கடந்த உயர்-தேவைகளும் உள்ளன. அர்த்தம், உண்மை, மெய்ம்மை ஆகியவையே அந்த உயர்-தேவைகள்! ஆனால், அரிதிலும் அரிதாக வெகு சிலரே வாழ்வின் உயர்-தேவைகளை உணர்பவர்களாகவும், தேடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமே உண்மை மனிதர்களாக, மனிதத் தரத்திற்குரிய வாழ்க்கையை வாழ்கின்றனர். மற்றவர்களெல்லோரும் அடிப்படைத் தேவைகளால் முற்றுகையிடப்பட்டு விலங்கையொத்த வாழ்க்கையையே வாழ்கின்றனர். இவர்களை நோக்கி, "பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு." என திருவள்ளுவர் கோருகிறார்! இது எவ்வளவு கடினத்திலும் கடினமானது என்பதையும் வெகு சிலரே அறிவர்!

ஏனெனில், எல்லோரும் அந்த பற்றற்றானைப் பற்றவே செய்கிறார்கள்; ஆனால், தங்களுடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக! அதாவது, எல்லாவற்றையும் இறுகப் பற்றிக் கொண்டு, பற்றற்றானையும் சேர்த்துப் பற்றுகின்றனர்! மேலும், அவர்கள் அப்பற்றற்றானை வேறு பெயர் கொண்டு, வேறு பண்புகளை ஏற்றி, அதாவது, “கடவுள்” என்று அழைக்கின்றனர்!


பற்றுக, பற்றுக, இறுதியானதைப் பற்றுக!

பற்று என்பதே மோசமானதோ, தீமையானதோ இல்லை! மாறாக, நாம் எவற்றையெல்லாம் பற்றுகிறோம், எவற்றையெல்லாம் பற்றத் தவறுகிறோம் என்பதையும்; நமது பற்றுதலின் நோக்கங்களும், பற்றப்படும் பொருட்களின் தன்மைகளையும் பொறுத்தே நன்மை, தீமைகள் உண்டாகின்றன! பொருட்களின் பயன்பாடுகளை அறிந்து அவற்றை முறையாகப் பயன் கொள்வது என்பதில் குற்றமில்லை! ஆனால், பொருட்களின் பயன்பாட்டு எல்லையைக் கடந்து அவற்றிற்கு அதீத முக்கியத்துவம் அளிப்பதும், அவற்றின் மீது உடமை மனோபாவம் கொள்ளும் மூடத்தனமே பற்று என்பதாகும்!

பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே உதவக்கூடியவை. எவ்வொரு பொருளும் மனிதனை நிரந்தரமாக நிறைவு செய்வதுமில்லை, முழுமைப்படுத்துவதும் இல்லை என்பதை அறியாதவன் முழு மூடன்! ஆசை ஆசையாக பணத்தைக்கொட்டி ஒருவன் கட்டிய வீடு, அல்லது மாளிகையானது அவன் இறந்தவுடன் அவனை ஏற்காது; அவனை தாழ்வாரத்திற்கு வெளியே கிடத்திவிடும்! அவனை வெளியே கொண்டுபோய் கிடத்துபவர்கள் உயிருக்குயிரான அவனுடைய உறவுகள்தான்! ஆனால், இறப்பிற்குப் பிறகும் உங்களை ஏற்கும், வாழவைக்கும் ஒரு வீடு உள்ளது; அதுதான், அறம், பொருள், இன்பம் என்பதையடுத்து வரும் வீடு! அவ்வீட்டை அடையும் பேற்றைப் பெறும்வகையில் ஒவ்வொருவரும் மெய்ப்பொருள் அறிந்து வாழவேண்டும்!

ஆகவே, எது நம்மைக் கரை சேர்க்குமோ, நிறைவு செய்யுமோ, முழுமைப்படுத்துமோ; எது இறுதியானதோ அப்பொருளை, அம்சத்தைப் பற்றுவதுதான் அறிவார்ந்த செயலாகும்! அப்படிப்பட்ட எப்பொருளும் இவ்வுலகில் இல்லை! ஆனால், மெய்ப்பொருள் என்ற ஒன்று உள்ளது; அதுவே வாழ்வின் உட்பொருள்; ஒட்டு மொத்தத்தின் சாரம் அதுவே! உலகிலுள்ள அனைத்துப்பொருட்களும் உடனடித் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும், அல்லது, மரணிக்கும்வரை மட்டுமே நமக்குச் சேவைபுரியக்கூடியவையாகவும் அமைந்தனவாகும்! மரணத்திற்கு அப்பாலும் உதவக்கூடிய ஒரே பொருள் வாழ்வின் உட்பொருளான மெய்ப்பொருள் மட்டுமே! பெயரற்ற அப்பொருளுக்கு பல பெயர்களைச் சூட்டி அழைப்பதால், அதை நாம் அறிந்ததாகவோ, உணர்ந்ததாகவோ ஆகிவிடாது! மாறாக, அது வெறும் சொல்லடக்கமான ஒரு குறியீடாகச் சுருக்கப்பட்டுவிடும், அவ்வளவுதான்! அல்லது அதை வாழ்த்தி வணங்குவதால், வழிபடுவதால், கும்பிட்டுக் கூத்தாடுவதால், அழுது தொழுது ஆரவாரம் செய்வதால், ஒருபோதும் அதை நாம் நம் வசப்படுத்திட முடியாது!

பிறவியும் பிறவிப்பயனும்

நீங்கள் மனிதனாய்ப் பிறந்துவிட்டீர்கள் என்றால், மனிதப் பிறவிக்குரிய வகையில், சிந்திக்கவும், செயல்படவும், வாழவும் வேண்டியது தவிர்க்க இயலாததாகும். அதிலிருந்து நீங்கள் வழுவிச் செல்லலாகாது! மனிதப்பிறவி என்பது வரமும் அல்ல, சாபமும் அல்ல; அது ஒரு சவால், அதை நீங்கள் எவ்வாறு சந்திக்கிறீர்கள் என்பதைப்பொறுத்தே அது வரமாகவோ, அல்லது சாபமாகவோ வடிவம் கொள்கிறது!

ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு விளைவு உண்டு. அவ்வாறே மனிதப் பிறவியெடுத்ததற்கு பிரத்தியேகமானதொரு பயன் உண்டு. அப்பயனை அடையும்வகையில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும். அப்பயன் தானே விளையாது! பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றாக ஆகவேண்டும்; பொறியாளராக, மருத்துவராக, பணக்காரராக, புகழ் பெற்றவராக, அல்லது ஏதோ துறையில் வல்லுனராக, ஏதோ வழியில் பிரபலஸ்தராக ஆக வேண்டும் என்று முயன்று; அவர்களுடைய துரதிருஷ்டம், அவ்வாறாக ஆகவும் செய்கிறார்கள்; அவ்வாறு ஆனதற்கான பயனையும் அறுவடை செய்கிறார்கள்! ஆனால், இதுவல்ல பிறவிப்பயன் என்பது! அவரவரது சொந்த இலட்சியங்களை அடைவதல்ல பிறவிப் பயன்! மாறாக, நம்மை பூமியின் மீது தோற்றுவித்த நிகழ்வுமுறையானது நமக்கொரு இலட்சியத்தை, இலக்கை முன்-குறித்துள்ளது! நதியின் பிறவிப் பயன் சமுத்திரத்தைச் சென்றடைவதே என்று குறிக்கப்பட்டிருப்பதைப் போல, மனிதப் பிறவிக்கான பிறவிப்பயனும் ஏற்கனவே குறிக்கப்பட்ட ஒன்றே ஆகும். அப்பயன் எல்லோருக்கும் ஒன்றே! அப்பயன் என்னவென்று கண்டுபிடிப்பதுதான் வாழ்க்கை விடுத்துள்ள சவால் ஆகும்!

வேறு சொற்களில் சொன்னால், மனிதவாழ்வின் உண்மை, அர்த்தம், குறிக்கோள், இலக்கு யாது என்று கண்டுபிடிப்பதே அந்த சவால் ஆகும். வாழ்க்கை விடுக்கும் சவாலை ஏற்று அதற்கான பதிலைக் கண்டுபிடிப்பதே உண்மையான வாழ்தலும், அதன் இலக்கும் ஆகும்! உலகிலுள்ள வெவ்வேறு தத்துவ ஆன்மீகப் பள்ளிகள் வாழ்வின் இலக்கை அறியும் செயல்பாட்டிற்கு  வெவ்வேறு பெயர்களைச் சூட்டியுள்ளனர். ஞானமடைதல், மெய்ப்பொருள் அறிதல், தன்னையறிதல், அ(க)ண்ட - உணர்வடைதல், முக்தி, மோட்சம், இரட்சிப்பு, நிர்வாணம், வீடுபேறு,.... ஆகியவையே அவை.

மேலே குறிப்பிட்டதுபோல, மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும், மனிதப் பிறவிக்குரிய வகையில், சிந்திக்கவும், செயல்படவும், வாழவும் வேண்டும்; அதிலிருந்து வழுவிச் செல்வது இழுக்கு! அனைத்து இடர்களையும், நிலைமைகளையும், எதிர்த்து நின்று சமாளித்து முன்னேறிச் சென்று பிறவிப்பயனை, அந்த ஒப்பற்ற இலக்கை ஒவ்வொருவரும் அடைந்தாகவேண்டும். அவ்வாறு அடையாமல் போவதற்கு யாதொரு காரணமோ, தடையோ எதுவும் கிடையாது! ஏனென்றால், நீங்கள் மனித ஜீவியாகப் பிறந்திருப்பதே அந்த இலக்கை அடைவதற்காகத்தான்!

நீங்கள் கருப்போ, சிகப்போ; உயரமோ, குட்டையோ, திருமணம் ஆனவரோ, ஆகாதவரோ; குழந்தைகுட்டிகள் இருக்கின்றனவோ, இல்லையோ; ஏழையோ, பணக்காரரோ; இல்லறத்தாரோ, இல்லறம் வெறுத்து துறவறம் மேற்கொண்டவரோ; வியாதியஸ்தரோ, ஆரோக்கியவானோ; ஆனோ, பெண்ணோ, வேறு எதுவோ; இன்னும் நீங்கள் மனிதஜீவியாகவே இருக்கிறீர், தொடர்கிறீர் என்றால், எந்த சாக்குப்போக்கும் நீங்கள் சொல்ல முடியாது! உங்களுடைய ஒரே தலையாய கடமை, பொறுப்பு, பணி, ஈடுபாடு, தொழில், இலட்சியம், ….. என்பது எப்பாடுபட்டேனும் பிறவிப்பயனை அடைவது மட்டுமே!

நீங்கள் துன்பத்தில் உழலுகிறீர்! இன்பமும் துன்பமும் மாறிமாறி அமைந்து வாட்டுகின்றன! என்றால் அதற்கு ஒரேயொரு காரணம் தான் உள்ளது! வாழ்வின் அசலான குறிக்கோளை நீங்கள் அறியவில்லை; அறிந்து அதற்கேற்ப வாழவில்லை என்பதுதான் அக்காரணம்! உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தெரிகிறது! சகல சம்பத்துக்களும் இருந்தும் நிறைவில்லை; ஏதோவொன்று குறைவதைப்போல உணர்கிறீர் என்றால், அதற்குக்காரணம், வாழ்வின் அசலான இலக்கு வேறாகவும், உங்களுடைய இலட்சியங்கள் வேறாகவும் இருப்பதுதான்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 11.05.2019 - 15.05.2019

********************************************************************************************************

Thursday, 9 May 2019

சமரசமற்ற ஆன்மீகவிசாரம்


             இது வழக்கமான மனிதர்களுக்கான வழக்கமான
ஆன்மீகம் பற்றிய கட்டுரை அல்ல! மாறாக, இது
வழக்கத்தை மீறிச் செல்லும் தேடலும், துணிவும்,
ஆர்வமும் கொண்ட வாசகர்களுக்கானது!


              உண்மை உண்மையில் எதனுடனும் சமரசம் செய்து
கொள்வதில்லை! அவ்வாறு சமரசத்துக்கு உட்படுமாயின்
அதன்பிறகு அது உண்மையாக இருக்க முடியாது!


ஆன்மீகம் என்றவுடன் இங்கு (விசார மையத்தில்*) தியானம் பற்றியும், ஆன்மா பற்றியும், இன்னும் ஆன்மீகம் தொடர்பான பல சொற்களைப்பற்றியும் பேசப்படும், விளக்கப்படும்; ஆன்மீகத்திற்கே உரிய பயிற்சிகள் சொல்லித்தரப்படும் என்று எண்ணி பலர் வந்தனர். ஆனால், இங்கு அவ்வாறான எதுவும் பேசப்படவில்லை; சொல்லித்தரப்படவில்லை! ஆகவே, இங்கு பலர் வந்தனர்; சிலர் மட்டுமே நிலைத்தனர். நிலைத்தவர்களில் பலர் திடீரென சொல்லாமல் கொள்ளமல் வராமல் நின்று போயினர்! ஆனால், “விசார மையம்” ,விசார இல்லம்”, பிறகு “விசார மார்க்கம்” என்று பெயர் மாற்றம் பெற்ற இந்த அமைப்பில்லா அமைப்பு, மார்க்கமற்ற மார்க்கம் இன்னும் தொடர்ந்து இங்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது - அதன் சொற்பமான பழைய, மற்றும் அவ்வப்போது வந்து சேரும் புதிய  பங்கேற்பாளர்களுடன்!

இந்த “விசார மார்க்கம்” எனப்படும் ஆன்மீக மார்க்கத்தில், அல்லது ஆன்மீக மையம் அல்லது ஆன்மீகப் பள்ளியில், நேரடியாக இதுதான் ‘ஆன்மீகம்’ என்றில்லாமல், சூரியனுக்குக் கீழாகவும், சூரியனைத்தாண்டியும் உள்ள அனைத்தையும் பற்றிப் பேசப்படுகிறது, விளக்கப்படுகிறது; விளக்கப்பட்டு அனைத்தும் விலக்கப்படுகிறது! அனைத்தும் விலக்கப்பட்டபிறகு எது எட்டப்படுகிறதோ அது தான் அனைத்தின் சாரமான ஆன்மீக உண்மை என சுட்டப்படுகிறது! இங்கு வந்தவர்களில், தொடர்ந்து வந்துகொண்டிருப்பவர்களில் எத்தனைபேர் அந்த உண்மையை கிரகித்துக்கொண்டனர், புரிந்துகொண்டனர், அதிலேயே நிலைக்கின்றனர் என்ற எண்ணிக்கை பற்றிய கேள்வி முக்கியமல்ல! ஆனால், இங்கு வருபவர்களிடம் ஏதோ ஒரு தாக்கம் தொற்றிக்கொள்கிறது! ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதில் சந்தேகமில்லை! அந்த தாக்கத்தை, மாற்றத்தைப் பற்றிச் சென்று இலக்கை அடைவது என்பது அவர்களுடன் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணியாகும்!

“இங்கு, உங்கள் மார்க்கத்தில் என்ன (பயிற்சி) செய்யச் சொல்லிக்கொடுக்கிறீர்கள்? என்று பலர் கேட்கின்றனர். “பயிற்சியாக எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை; நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - அது “விசாரம்” என்பதுதான்!” என்று தொடக்கத்திலும், திரும்பத்திரும்பவும் சொல்லப்படுகிறது. ஏனெனில், “விசாரம்” என்பது மட்டுமே எவ்வகை அறிதல், புரிதலுக்கும் -  அது சாதாரண அன்றாட விவகாரமாயினும், தத்துவமாயினும், விஞ்ஞானமாயினும், இன்னும் ஆன்மீகமாயினும் யாவற்றுக்கும் அடிப்படையான அம்சமாகும்! “விசாரம்” என்பது மிகத் தொன்மையானதும், என்றும் புதிதானதும் ஆகும் - அதற்கு தொடக்கம் என்பதேயில்லை; ஆனால், தெளிவான முடிவு உண்டு! இன்னும் முடிவைத் தாண்டியும் அலுப்பு சலிப்பின்றி தொடரக்கூடியது!

“விசாரம்”தான் மூலம், மற்றும் முடிவான மெய்ம்மையின், அதாவது, கடவுள், பிரம்மம், அகண்ட உணர்வு, பேருணர்வு,,, என்றெல்லாம் சொல்லப்படுவதன் சாரம் ஆகும்! “விசாரம்” என்பதற்கு இன்னொரு பெயர் “பேரார்வம்” என்பதே!

ஆர்வத்தையிழப்பவன் அனைத்தையும் இழப்பவனாகிறான்! ஆனால், ஆர்வம் என்பது எதன் மீதான ஆர்வம், யாருடைய ஆர்வம்? உங்களிடம் உள்ளார்ந்த இயல்பான ஆன்மீக வேட்கை, தூண்டுதல் இல்லையெனில், உங்களுடைய ஆர்வம் சிறியதாக, சிற்றார்வமாக இருக்கும்! நீங்கள் ஒரு சிறிய மனிதர்! உங்களுடைய ஆர்வம் சாதாரணப் பொருட்கள் மற்றும் மதிப்பீடுகளின் மீதானதாகவே இருக்கும்! உங்களுடைய ஆன்மீகம் சுயநல மையம் கொண்டது, ஆகவே, குறைபாடுடையது!

ஆர்வம் என்பது தேங்கி நிற்கும் குட்டை போன்ற ஒன்றல்ல; மாறாக, செயலூக்கமிக்க, எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு நதி போன்றதாகும்! தூய ஆர்வத்தினால் தூண்டப்பட்ட ஒருவன் ஒருபோதும் சோம்பியிருப்பதில்லை! எவ்வொரு வார்ப்பு, ரகம், மோஸ்தர், அல்லது வகைப்பாட்டிலும் சிறைப்படுவதில்லை! ஆர்வம் என்பது என்னுடையதோ, அல்லது உங்களுடையதோ அல்ல; அவ்வாறு சொந்தமாக்குவதன் வழியே அது சிற்றார்வமாக, உங்கள் சொந்த விருப்பத்தின் கருவியாக, குறுகிய நோக்கம் கொண்டதாக குறுகிப்போகிறது! ஆர்வம் என்பது சிந்தாமல் சிதறாமல் முழுமையாக இருக்கும்பட்சத்தில் அதைப் “பேரார்வம்” என்று குறிப்பிடலாம். அது தன்னில் தனிமுழுமையானது (Absolute).    

பேரார்வம் என்பதே மூல மெய்ம்மையாக, அதன் சாரமாக, அதன் கருவியாகவும் இருப்பதால், அதைப் பற்றுபவன் மெய்ம்மையைச் சென்று சேருபவனாக ஆகிறான்! ஆகவே, மெய்ம்மை நாட்டம் கொள்வது ஒன்றே மனிதனுக்கு அழகாகும்! அதற்குக்குறைவான நாட்டம், வேட்கை விருப்பம் யாவும் தனது உள்ளார்ந்த மனிதத்தை அவமதிப்பு செய்வதாகும், மனிதத் தரத்திற்குக் கீழானதாகும்!

தியானம், சுவாசப்பயிற்சி, யோகப்பயிற்சி, … போன்றவை ஆன்மீகத்திற்கு உங்களைத் தயார்படுத்துவதற்கான கருவிகள், உத்திகள் மட்டுமே! இப்பயிற்சிகளையும், இன்னும் வேறு பல பயிற்சிகளையும் மேற்கொள்வதே ஆன்மீகமாகாது! மின் சாதனங்கள் இருந்தால் மட்டும் போதாது; அவை இயங்கவேண்டுமென்றால், மின்சாரம் வேண்டும். அச்சாதனங்களுக்கு மின் -இணைப்பு தரப்படவேண்டும். அவ்வாறே, ஆன்மீகத்திற்கு மிகவும் அடிப்படையானது உணர்வு (Consciousness) ஆகும். ஆன்மீகத்திற்கு உணர்வு - இணைப்பு மிகவும் மையமானது. ஒருவர் உணர்வுக்கு வரவேண்டும் (One must become Conscious)! மேலும், தியானத்தின் உதவியின்றியே எவரும் நேரடியாக உணர்வுக்கு வர இயலும். அவ்வாறு உணர்வுக்கு வருவது என்பது ஆன்மீகத் தேவைக்காக  என்றில்லாமல், ஒரு மனிதனாக தன் வாழ்க்கையை முழுமையாக வாழும் தேவைக்காகவே ஒவ்வொருவரும் உணர்வுக்கு வருவது, விழிப்போடு இருப்பது, உணர்வை உணர்வுகொள்வது, என்பது அவசியமாகும்!

இங்கு, விசாரமார்க்கத்தில்,  ‘ஆன்மீகப் பயிற்சிகள்’ எனப்படும் எவையும் கற்றுத்தரப்படுவதில்லை, மேற்கொள்ளப்படுவதில்லை! இங்கு சிந்திப்பதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும், தனக்காக, தன் வாழ்க்கையை அறிந்து, புரிந்து வாழ்வதற்காக; வாழ்வின் ஒப்பற்ற இலக்கை தன் வாழ்காலத்திற்குள்ளாகவே அடைவதற்காகச் சிந்தித்தாக வேண்டும். இங்கு சீடர்கள், சாதகர்கள், அப்பியாசிகள் எனப்படுபவர்களுக்காக ‘குரு’ என்ற ஒருவர் சிந்திப்பார் என்பது கிடையாது! இங்கு ஒரு விசார- நடத்துனர் இருக்கிறார்; அவருடைய ஒரே ஆன்மீகப்பணி, ஆன்மீகம் குறித்த விசாரப் பங்கேற்பாளர்களின் (அப்பியாசிகளின்) தவறான கருத்தாக்கங்களைக் (Misconceptions) களைவது என்பது மட்டுமேயாகும்!

ஞானம், பக்தி, கர்மம்

இங்கு சிந்திப்பதன் அவசியம் வலியுறுத்தப்படுவதால், இது ஏதோ அறிவு-ஜீவிகளின் குழு என்று அர்த்தமல்ல. மாறாக, மூளை, இதயம், கைகால்கள், நாடி-நரம்புகள் எல்லாமும் ஒருங்கே இசைவுடன், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்ற ஆன்மீக இலக்கிற்காகச் செயல்பட வேண்டும் என்பது முக்கியமாகும். ஏனெனில், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்பதுதான் உண்மையான வாழ்தலும், ஆன்மீகமும் ஆகும்! வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாத நிலையில் வாழ்க்கையும் இல்லை, ஆன்மீகவும் இல்லை! அவ்வாறு இருக்க முடியுமெனில், அது விலங்குத்தனமான வெறும் ஜீவித்தல் என்பதாக மட்டுமே விளங்கமுடியும்.

நம் பலரிடையே, ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் பற்றிய துண்டுபட்ட, தவறான பார்வை நிலவி வருகிறது. அதாவது, ஞான மார்க்கம் என்பது கடினமானது எனவும், அது எல்லோருக்கும் ஒத்துவராது எனவும், பக்தி மார்க்கம் என்பது எளிதானது எனவும், சிலருக்கு கர்ம மார்க்கம்தான் சரியானது எனவும் ஓர்படிவார்ப்பாக (Stereotype) கருதிக்கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்கள்! இப்பார்வை தவறானது; ஏனென்றால், மனிதனை மூளை வேறாக, இதயம் வேறாக, கைகால்கள் வேறாக வெட்டிப்பிரித்தது யார்? எங்கோ, எவரோ, எப்போதோ ஏதோ காரணத்திற்காக சொல்லப்பட்ட முறையை அப்படியே கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டு வருவது பொருத்தமற்றது!

மனிதனை, மூளை வேறாக, இதயம் வேறாக, கைகால்கள் வேறாக வெட்டிப்பிரிக்க இயலாது; அவ்வாறே, ஞானம், பக்தி கர்மம் ஆகியவையும் தனித்தனியானவையல்ல; அவற்றை வெட்டிப்பிரிக்க இயலாது! அவ்வாறு வெட்டிப்பிரிக்கவும் கூடாது! ஒவ்வொருவரிடமும் ஞானம், பக்தி கர்மம் ஆகிய இம்மூன்றும் ஒருங்கே அமைந்திருப்பது அவசியம்! பொதுவாக பலர் எண்ணுவதுபோல் ஞானம் என்பது கடினமானதல்ல; அவ்வாறு கடினமாகத் தோன்றுவதற்குக் காரணம், நம்மில் அநேகருக்கு அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைத் தாண்டிய உயர்-வாழ்க்கைத் தேவைகள் குறித்த சிறு சலனமோ, உணர்வோ கிடையாது! அடுத்து, ‘பக்தி’ என்பது எல்லோரும் எண்ணுவதுபோல அப்படியொன்றும் எளிதான விஷயம் அல்ல! இன்னும் சொல்லப்போனால், பக்திதான் யாவற்றையும்விட மிகமிகக் கடினமானதாகும்! எவ்வாறெனில், சுயநல கோரிக்கைகள், வேண்டுதல்கள் எதுவும் இல்லாமல், “இறைவனுக்காகவே இறைவன்” என்பதான பக்தி மிக அரிதிலும் அரிதாகும்!

“வாழ்க்கை-விசாரம்”

இங்கு, விசாரமார்க்கத்தில், “நான் யார்?” விசாரத்திற்கு முன்பாக,  “வாழ்க்கை-விசாரம்” என்பதே முதலில் முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால், எடுத்த எடுப்பிலேயே, எல்லோரும் “நான் யார்?” என்ற கேள்வியைக் கொண்டு தன்னை விசாரித்து ஒரே தாவலில், ‘ஆத்மா’ எனப்படும் உச்ச நிலை உணர்வை அடைந்துவிட முடியும் என்று சொல்வதற்கில்லை! அதற்குரிய ஒரு களம் தயார் படுத்தப்பட வேண்டும். அக்களம்தான் வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கைக்கு பிரத்தியேக அர்த்தம், குறிக்கோள், இலக்கு ஏதும் உள்ளதா? என்பன போன்ற முக்கியக் கேள்விகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் “வாழ்க்கை-விசாரம்” என்பதாகும்!

“வாழ்க்கை” என்பதைப் புரிந்துகொள்ள அதனுள் அடங்கியுள்ள மூன்று முக்கிய அம்சங்களை தெளிவாக அவற்றின் சாரத்தில் புரிந்துகொள்வது அவசியமாகும். அவை, பிரபஞ்சம், சமூகம், அகம் ஆகியவையே ஆகும். பிரபஞ்சம் என்பது இயற்கை, உலகம் ஆகிய புறவுலகம் பற்றியது. சமூகம் என்பது மனிதகுலம் மொத்தத்தையும் குறிக்கிறது. அகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் மனம், எண்ணம், மற்றும் அவனது ஒட்டுமொத்த உளவியல் அம்சங்களையும் பற்றியது. புறவுலகமாகிய பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்; இல்லாவிடில் அது தேவையில்லாமல் நம்முடைய கவனத்தை ஈர்த்துச் சிதறடித்தவண்ணம் இருக்கும்! ஒட்டுமொத்த இருப்பில், பிரபஞ்சத்தின் இடம், பங்கு, பாத்திரம், மற்றும் அதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு ஆகியவை குறித்து தெளிவாகப் புரிந்துகொண்டு அதை முடித்துவிட வேண்டும்!

அதேவேளையில், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் நேரடியாக விஞ்ஞான வகை வானவியலில் ( Astronomy)  ஈடுபடவேண்டும் என்பது அல்ல! மாறாக, பிரபஞ்சம் பற்றிய விஞ்ஞானத்தின் புரிதல்களையும், கோட்பாடுகளையும் அறிந்துகொள்வதுடன், அவை எவ்வாறு பிற அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன, ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைக் கொண்டு நாம் பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்துகொண்டாலே போதுமானது; அதற்கு நாம் அண்டவெளியில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள், மற்றும் பிற விண்பொருட்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு பட்டியலிட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய தேவையில்லை! ஏனெனில், விஞ்ஞான அணுகுமுறையின் வழியாக பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள இன்னும் பல நூற்றாண்டுகளும், இன்னும் பல நியூட்டன்களும்,  ஐன்ஸ்டீன்களும் தோன்றியாக வேண்டும்! ஆனால் நாம் ஒவ்வொருவரும் இப்பிரபஞ்சத்தையும், அனைத்தையும் நம் ஒவ்வொருவரின் வாழ்-காலத்திற்குள்ளாகவே புரிந்துகொண்டாக வேண்டியது அவசியமாகும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் ஐன்ஸ்டீனாகவும், புத்தனாகவும் இருப்பது அவசியம்!

ஆகவேதான், இங்கு விசாரமார்க்கத்தில், வழக்கமான ஆன்மீகச் சொல்லாடல்களையும், ஆன்மீகப் பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை! ஆம், உரிய அடிப்படைப் பாடங்களைக் கற்காமல், நமக்கு நாமே சிந்திக்காமல், நேரடியாக ஆன்மா, பிரம்மம், ஞானம், முக்தி, மோட்சம், … ஆகியவற்றை குறுக்குவழியில் அறியவோ, அடையவோ இயலாது! ஆம், சரியான தொடங்குபுள்ளிகளிலிருந்து தொடங்காத ஆன்மீகம் தன் இலக்கைச் சென்றடைவதில்லை!

விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, பலராலும் ஏற்கனவே திரட்டப்பட்ட அறிவைச் சேர்த்துக் கொண்டு நாம் நம் புரிதலைக் கட்டியெழுப்ப இயலும். “நான் பிறரைவிட அதிக தொலைவு முன்னோக்கிக் காண்கிறேன் என்றால், அதற்குக் காரணம் நான் முந்தைய ஜாம்பவான்களின் தோள்களின் மீது நின்று கொண்டு காண்கிறேன்!” என்று விஞ்ஞானி நியூட்டன் அவர்கள் கூறினார்!  ஆனால், அத்தகைய அணுகுமுறை ஆன்மீகத்தில் சாத்தியமில்லை! ஆன்மீகத்தில் நாம் எவருடைய முதுகிலும் ஏறிக்கொண்டு சவாரி செய்ய இயலாது! ஏனெனில், ஆன்மீகம் என்பது விஞ்ஞானத்தைப்போல, வெறும் அறிவு சார்ந்த துறை அல்ல! ஆன்மீகம் என்பது ஒவ்வொருவருடைய உணர்விலும் ஏற்பட வேண்டிய மாற்றத்தை, மலர்ச்சியைச் சார்ந்தது. ஒருவருடைய உணர்வோடு உணர்வாகக் கலக்காத எவ்வொரு அறிவும், அனுபவமும், புரிதலும்  ஒருவருடையதாக ஆகாது!

பலர் ஆன்மீக நூல்கள் பலவற்றை வாசித்துவிட்டு, “எல்லாம் புரிந்துவிட்டது!” என்ற பிரமையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது! இவர்களுடைய ஆன்மீகம் உணர்வில் வேர்கொள்ளாமல், இவர்களுடைய மூளையில், அறிவில்  வேர் கொண்டுள்ளது! அப்படியென்றால், ஆன்மீக நூல்களைக் கற்கக் கூடாது, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கக்கூடாது; எவ்வொரு ஆன்மீக மையத்தையும், குருவையும் நாடக்கூடாது என்பதல்ல! மாறாக, இவ்வழிகளிலெல்லாம் நாம் ஆன்மீகம் தொடர்பான சில குறிப்புக்களை மட்டுமே பெறமுடியும்! அவை நம்மை நாமே தோண்டுவதற்கான கருவிகள் போன்றவையே என்பதை தெளிவாக உணர்ந்து செயல்பட வேண்டும்!

அடுத்து, நாம் ஆன்மீக மையங்களில், ஆசிரமங்களில் சேருவது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! ஏனென்றால், ஆன்மீகம் என்பது கும்பல் நிகழ்வுமுறை (Mass Phenomenon) அல்ல! மாறாக, ஆன்மீகம் என்பது தனிமனித நிகழ்வுமுறை (Individual Phenomenon) ஆகும். அது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான ஆழமான தொடர்புறவில் நிகழும் பரிமாற்றம் ஆகும்! அங்கே மூன்றாவது ஒரு நபருக்கு இடமில்லை! ஆகவேதான், வள்ளலார் அவர்கள் “தனித்திரு!” என்று சொன்னார். உங்களுடைய மையத்தைக் கண்டடையும்வரை நீங்கள் தனித்திருப்பது அவசியம்; அதன்பிறகு, நீங்கள் மானுடம் மொத்தத்தையும் தழுவிக்கொள்ளலாம். அப்போதும் கூட,வழியில் காணும் ஒவ்வொரு மனிதனையும் கட்டித் தழுவிக்கொள்ளவேண்டும் என்பதில்லை!

ஆன்மீகம் என்பது, ‘எனது ஞானமடைதல்’, ‘எனது முக்தி’, ‘எனது மோட்சம்’ என்கிற ரீதியிலான சுயநலமான சொந்த விவகாரமும் அல்ல, அல்லது பொது நலம் விரும்பும் சமூக விவகாரமும் அல்ல! மாறாக, படைப்பில் தம்மை முழுமையாக முதலீடு செய்துள்ள அந்த மூலமெய்ம்மைக்கு நாம் ஒவ்வொருவரும் திரும்பச்செலுத்தவேண்டிய அம்சத்தைப் பற்றிய  விவகாரம் ஆகும்! ஆம், மெய்ம்மையை நாம் ஒவ்வொருவரும் கண்டடைவது ஒன்றே அதற்கு அசலாக அதைத் திருப்பித் தருவதாகும்!

உண்மையான ஒருங்கிணைந்த ஆன்மீகம்

சிலர், ஒருங்கிணைந்த ஆன்மீகம் (Integral Spirituality) என்ற பெயரில் எல்லாமும் ஆன்மீகத்தன்மை கொண்டவையே என்று கூறி எல்லாவற்றுக்கும் இடமளித்து, கொண்டாடி ஒரு கலவையான மசாலா ஆன்மீகத்தைக் கைக்கொள்வது பற்றி சிலாகித்துப் பேசி வருகின்றனர்; கடைப்பிடிக்கவும் செய்கின்றனர்! இயற்கையில் தோன்றிய அல்லது பரிணமித்த ஒவ்வொரு அம்சத்திற்கும், பண்பிற்கும் அதற்குரிய ஒரு முறையான இடமும், பங்கும், பாத்திரமும் உள்ளது. அதே நேரத்தில், எல்லாமும் ஆன்மீகத்தன்மை கொண்டவையே என்று சொல்வதற்கு இடமில்லை!

ஏனெனில், பிரபஞ்சம் என்பது பலவகைப்பட்ட பொருட்களும், அம்சங்களும், பண்புகளும் இடம்பெறும் மாபெரும் தட்டுமுட்டுச் சாமான்கள் கிடங்கு (Godown) அல்ல! அது ஒரு பரிணாம இயக்கம் ஆகும்;  அது ஒரு ஒப்பற்ற இலக்கு நோக்கி முன்னேறிச் செல்லும்  பரிணாம நிகழ்வுமுறை (Evolutionary Process) ஆகும். பரிணாம நிகழ்வுமுறை என இங்கு நாம் குறிப்பிடுவது டார்வினின் உயிரியல் பரிணாம முறை அல்ல; அது வெறுமனே உயிரினங்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து வேறொன்றாக கிளைத்தன என்பது பற்றிய அனுமானக் கோட்பாடு மட்டுமே; ஆகவே அது மிகவும் மட்டுப்பாடானது; நாம் இங்கு குறிப்பிடும் பரிணாம வழிமுறையானது டார்வினின் பரிணாமத்தை  உள்ளடக்கியும் அதைக் கடந்தும் செல்லும் ஒன்றாகும்!

ஒட்டுமொத்த பரிணாம நிகழ்வுப் போக்கையும் நாம் ஆன்மீக நிகழ்வுமுறையாகக் கொள்ளலாம்! ஆனால், பரிணாமத்தில் என்ன நிகழ்கிறது, பரிணாமம் எதை நோக்கிச் செல்கிறது, அதில், தனது பங்கு, பாத்திரம் என்ன, என்பவற்றை யெல்லாம் உணர்வுகொள்ளக்கூடிய உணர்வுள்ள மனிதஜீவியுடன்தான் ஆன்மீகம் தொடங்குகிறது! அதே நேரத்தில், எண்ணற்ற மனிதர்களின் விஷயத்தில், ஆன்மீகம் என்பது இன்னும் சற்றும் துளிர்க்கவேயில்லை!

பரிணாம வரலாற்றில் உருவான அனைத்தும், ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில்  அமைந்து பரிணாமத்தின் மிகத் தொலைவான இலக்கை அடைவதற்குச் சேவை புரியும்வகையில் தோன்றிய படிகளே!  பரிணாமத்தின் அந்த ஒப்பற்ற இலக்கை நீக்கிவிட்டால், மனிதன் உட்பட பரிணாமத்தில் தோன்றிய அனைத்திற்கும், யாதொரு அர்த்தமும் இருக்காது! ஒவ்வொன்றும், தம்தம் மட்டுப்பாட்டினால், தனக்காகவே தான் இருப்பதாக கருதிக்கொண்டிருக்கலாம் அல்லது கருதாமலும் இருக்கலாமே தவிர உண்மையில், எதுவும் தமக்காக இல்லை; இன்னும், தனித்தனியே எதற்கும் யாதொரு அர்த்தமுமில்லை! அதாவது, ‘கலை கலைக்காகவே’, ‘கத்தரிக்காய்  கத்தரிக்காய்க்காகவே’, ‘காமம் காமத்திற்காகவே’, ‘உடல் உடலுக்காகவே’, அன்றாட வாழ்க்கை அன்றாட வாழ்க்கைக்காகவே’... என்பதாக உண்மையில் எதுவும் இல்லை! ஆம், உண்மையான ஒருமை, ஒருங்கிணைவு, ஒன்று கூடுதல் என்பது கீழ்ப்படிகளில் இல்லை; மாறாக, உச்ச உயர்-படியில் மட்டுமே சாத்தியமாகும்!

ஆம், மெய்ம்மையுடன் கலப்பது ஒன்றே உண்மையான கொண்டாட்டம்! மெய்ம்மை தொடர்பில்லாத பிறவனைத்தும் வெற்றுக் கேளிக்கைகளே அன்றி வேறில்லை. இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் உணவை ருசித்து, ரசித்துச் சாப்பிடக்கூடாது என்பதல்ல! அதே நேரத்தில், நீங்கள் முடிவில்லாது உணவை ருசித்து, ரசித்துச் சாப்பிடுவது, கலை, இலக்கியம், ஆடல், பாடல், கொண்டாட்டம் என்று மூழ்கியிருப்பது என்பது முறையாகாது! உங்களுக்கு உண்மையிலேயே உண்மை, மெய்ம்மை மீது நாட்டம் உள்ளதென்றால், உங்களை எதுவும், எவரும் வழிதவறிப் போகச்செய்ய முடியாது! ஆகவே, முதலில் மெய்ம்மையைத் தேடுங்கள், தேடிக்கண்டடையுங்கள் அதன் பிறகு, முடிந்தால் விருந்து, ஆடல், பாடல், கேளிக்கை கொண்டாட்டம் என்று இருங்கள்!

புதுயுக பாவனை ஆன்மீகம்!

எண்ணற்றவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் எதையெதையோ பயிற்சிக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள்! ஆனால், அவர்களிடம் ஆன்மீக ரீதியான யாதொரு மாற்றமோ, முன்னேற்றமோ எதுவும் ஏற்படுவதில்லை! ஏனெனில், அவர்களுடைய ஆன்மீகம் வெறும் பாவனை ரீதியிலமைந்ததாகும். அவர்கள், தமது உலகியல் அல்லது லௌகீகத்திற்குள் ஆன்மீகத்தை அடக்க முயற்சிக்கின்றனர்! ஏதோ, ஆன்மீகம் என்பது அனைத்தையும் அனுமதிக்கும் உரிமம் என்பதுபோல அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள்!

நல்லெண்ணமும், தாராள மனமும் கொண்ட சிலர் ஆன்மீகத்தை பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்றனர். ஆனால், ஆன்மீகத்தை அக்கறையோடு பக்குவமாக தேக்கரண்டியால் ஊட்டவோ, அல்லது வலியத் திணிக்கவோ இயலாது! ஒவ்வொருவருக்கும் வயிற்றுப் பசியைப்போல, ஆன்மீகப் பசி என்பது ஏற்படவில்லையெனில், கொஞ்சிக்குலவி ஊட்டுவதாலோ, வலியத் திணிப்பதாலோ ஆன்மீகம் துளிர்க்காது!  ஒருவர் கடலளவு ஆன்மீக நூல்களை வாசித்தாலும்; ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் இணைந்து அம்மார்க்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றினாலும், அங்குள்ள குருவிடமே தொடர்ந்து பல வருடங்கள் பாடம் கற்றாலும், கடுகளவு ஆன்மீகம் கூட செழிக்காது!

பலருக்கு ஆன்மீகத்திற்குரிய உளப்பாங்கு என்பது துளியும் கிடையாது! ஒருவகை திமிர்த்தனமான தன்னம்பிக்கை, அல்லது, மட்டுமீறிய நம்பிக்கை, மிதப்பு (வீண்பெருமிதம்)….. இத்யாதி, இத்யாதி எல்லாம் சேர்ந்த கலவையின் விளைவாக ஆன்மீகம் என்பது வெறும் பாவனைரீதியான ஒன்றாக விளங்குகிறது! இவர்களிடம், மெய்ம்மை மீதான நாட்டம் என்பது ஒரு மாபெரும் ஏக்கமாக உருப்பெறாமல், ஒருவகை ‘ஏத்தம்’தான் மேலோங்கி நிற்கிறது!

சுற்றுவழி வேண்டாம், நேர்வழியில் செல்லுங்கள்!

அத்வைதம்,  விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், வேதாந்தம் என்பவையெல்லாம்  என்ன? உபநிடதங்கள் என்பவை வேதத்தின் பகுதியா, அல்லது வேதாந்தத்தின் பகுதியா? ஒவ்வொரு உபநிடதமும் ஒரு வேதத்துக்கு உரியதா? உதாரணமாக, எந்த உபநிடதம் எந்த வேதத்தின் உபாங்கம், அதாவது, துணைப்பகுதி? சாந்தோக்ய உபநிடதம் சாமவேதத்தின் துணைப்பகுதியா, அல்லது ரிக் வேதத்தின் துணைப்பகுதியா? என்பனபோன்ற ஆராய்ச்சிகள்,  (நீங்கள் வெறும் ஒரு பண்டிதராக ஆக விரும்பவில்லை; மாறாக, ஆன்மீகம் தான் உங்களுடைய இலக்கு எனும் பட்சத்தில்) தேவையற்றவை!

இத்தகைய ஆராய்ச்சிகள்  பெரும் கால விரயம் ஆகும். அவை உங்கள் கவனத்தை முடிவில்லாமல் சிதறடித்துக் கொண்டே செல்லும். ஏனெனில், உலகமெங்கும் எண்ணிலடங்கா ஆன்மீகத் தத்துவங்கள், கொள்கைகள் கோட்பாடுகள் உள்ளன; அவற்றையெல்லாம் வாசித்து முடிப்பதற்கே ஒரு வாழ்-காலம் போதாது! அதில், அவற்றைப் புரிந்துகொள்வது என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகும்! அதாவது ஒன்றை ஒன்று மறுக்கும் தத்துவங்களையும், கோட்பாடுகளையும்; ஒரு முரண்பாட்டை நீக்க முன்வைக்கப்பட்ட இன்னொரு முரண்பாட்டையும், இவ்வாறு சங்கிலித்தொடராக நீளும் தத்துவ விளக்கங்களின் அடர்ந்த கானகத்தில் நீங்கள் நிச்சயம் வழிதவறிக் காணாமல் போய்விடுவீர்கள்! இவ்வாறு சுற்றி வளைத்துச் செல்வதற்குப்பதிலாக நீங்களே நேரடியாக மெய்ம்மையைப் புரிந்துகொள்வது தான் உசிதமானதாகும்!

சமரசமற்ற ஆன்மீகவிசாரம்

இக்கட்டுரைக்கு தூய ஆன்மீகவிசாரம் என்று தலைப்பிட்டிருக்கலாம்; ஆனால், அது பிற வழக்கமான ஆன்மீக முறைகளை, மார்க்கங்களைப் புண்படுத்துவதாக அமையலாம் என்பதால், சமரசமற்ற ஆன்மீகவிசாரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.அதாவது, இந்த விசார மார்க்கத்தில் உதட்டளவு உபசாரம் போன்ற யாதொரு (இறை) வழிபாடும், குறியீட்டு முக்கியத்துவம்கொண்ட எவ்வகைச் சடங்கும் கிடையாது! அடுத்து, எவ்வொரு மத, வைதீகத் தரப்புடனும் சமரசம் செய்துகொள்வதுமில்லை! முக்கியமாக, எவ்வொரு ஞானமரபுடனும் இதற்குத் தொடர்பில்லை. எவ்வொரு மரபையும் இது பின்பற்றுவதுமில்லை! அதைவிட முக்கியமாக, இம்மார்க்கம் வெகுசனத்தளத்துடனும், மேட்டுக்குடித்தளத்துடனும் (Elites) சமரசம் செய்துகொள்வதில்லை! இம்மார்க்கத்தில் ஞானமும், எதுவும் விற்கப்படுவதுமில்லை, வாங்கப்படுவதுமில்லை!

அடுத்து, உண்மையானது இந்திய ஞானமரபில் உள்ளது, மேற்கத்திய ஞானமரபில் உள்ளது; வேதாந்தத்தில் உள்ளது; விவிலியத்தில் உள்ளது என்கிற கூப்பாடுகளில் இம்மார்க்கத்துக்கு நம்பிக்கையில்லை! ஏனெனில், உண்மை, எங்கே எவரால் சொல்லப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் நேரே உணர்வதும், கண்டடைவதும் மட்டுமே உண்மை! அதே நேரத்தில், உண்மை எந்தத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் அதிலுள்ள உண்மையை அங்கீகரிக்கத் தவறுவதுமில்லை! அவசியமிருப்பின், எல்லா உண்மைகளும் இங்கே ஆய்வுக்கு உட்படுத்தப்படும்!

'எளிய மக்கள்', 'வெகுஜனம்', 'சாதாரண மக்கள்', 'சராசரி மனிதன்',... என்றெல்லாம் வகைப்பாடுகள் உள்ளன என்று நம்புவதும், அவற்றை அங்கீகரிப்பதும், ஊக்குவிப்பதும்தான் எல்லாவித மட்டுப்பாடுகளையும் வளர்க்கிறது! 'மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் வழிபாடு தேவையாக
இருக்கிறது' என்பது ஒரு ஏமாற்று வேலை! ஏனெனில், அன்றாட வாழ்க்கை என்று தனியே ஏதுமில்லை! இருப்பது ஒரு வாழ்க்கைதான்; அது என்னவென்று அறியப்படாமல் உள்ளது; அறிந்தது மட்டுமே வாழ்க்கை என்று செல்வதுதான் எல்லா மட்டுப்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைகிறது! எந்தஒரு ஞானமரபும், தத்துவமும், ஆன்மீகமும் எந்த ஒரு வைதீகத் தரப்புடனும், வெகுசனத்தளத்துடனும் சமரசம் செய்துகொண்டால்தான் நடைமுறைக்கு வரமுடியும் என்ற விதி ஏதுமில்லை! ஆன்மீகத்திற்கு தன்னை முழுமையாகத் திறக்கவும், தன்னை முழுமையாகக் கொடுக்கவும் முன்வரும் ஒவ்வொரு தனிமனிதனின் வழியாக மட்டுமே ஆன்மீகம் வாழ்கிறது, நடைமுறைக்கு வருகிறது!

உலகிலுள்ள ஆன்மீக நூல்கள் அனைத்தும் அழிந்துபோயின என்றாலும், விலங்குத் தனமான அடிப்படை வாழ்க்கையைக் கடந்து வாழ்க்கையைத் தரிசிக்க விழைகிற, சிந்திக்கும் ஒரு மனிதன் இருந்தாலும் அவனுள், அவன் வழியாக ஆன்மீகம் துளிர்க்கும், வாழும்! அத்தகைய ஒரு தனிமனிதனான நீங்கள் இருப்பின், “வாழ்த்துக்கள்”!


குறிப்புகள்:

*விசாரமார்க்கம் (ஆன்மீக மையம்)
நெய்வேலி/அசோக் நகர்-2
தொடர்பு எண் : 94881 94381

‘ஏத்தம்’ : ‘ஏத்தம்’ என்பது ஏற்றம் = மேன்மை, என்பதன் பேச்சு வழக்கு
வடிவமாகும்; அதாவது, ‘ஏத்தம்’ என்பது இவ்விடத்தில் போலியான
மேன்மையுணர்வைக் குறிக்கும் ஒன்றாகும்.

மா.கணேசன்/ நெய்வேலி/ 03.05.2019 - 10.05.2019

***************************************************************************

Thursday, 2 May 2019

உண்மையிலேயே நீங்கள் யார்?





மனிதன்  இப்பிரபஞ்சம் முழுவதையும், அதிலுள்ள அனைத்தையும் அறியலாம்! ஆனால், அனைத்தையும் அறியும் மனிதன் தன்னை அறியவில்லையெனில், அதாவது அறிபவனாகிய “தான் யார்?” என்பதை அறியவில்லையெனில், அவனுடைய அறிதல் யாதொரு அடிப்படையும் அற்ற மேம்போக்கான ஒன்றே ஆகும்!
                                                           ✦ ✦ ✦

“நான் யார்?” எனும் விசாரத்தைத் தொடங்கும் உணர்வு இறுதியான உணர்வு அல்ல!
அவ்விசாரத்தின் முழுமையில் வெளிப்படும் உணர்வு ஒருவன் தொடங்கும்போதிருந்த அதே அகந்தை-உணர்வு அல்ல!
                                                           ✦ ✦ ✦


வழிதவறி ஆன்மீகத்தை வந்தடைந்த எண்ணற்ற பலரிடம், “உண்மையில் நீங்கள் யார்?” என்று கேட்டால், உடனே பளிச்சென்று, “நான் ஆன்மா!” என்றும், “நான் பிரம்மம்!” என்றும், அல்லது,
“நான் கடவுள்!” என்றும் சொல்லிடுவர்! இவர்கள் ஏட்டுச்சுரைக்காயை கறி சமைத்து உண்ணும் பிரமையில் ஆழ்ந்தவர்கள்! இவர்கள் கரை சேர்வது கடினம்!

பரிணாம வழிமுறையில் வெளிப்படும் ஒவ்வொரு அம்சமும் தம்மைத்தாமே இறுதியானது
என்பதுபோல நிறுவிக்கொள்ள முயற்சிக்கின்றது! இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல. ஆகவேதான் ஒரு புழு கடைசிவரை ஒரு புழுவாகவும், ஒரு தவளை கடைசிவரை ஒரு தவளையாகவும் நீடிக்கிறது. இவ்வாறே, ஒவ்வொரு மனிதனும் தன்னை இறுதி நிஜம் என எண்ணிக் கொள்கிறான், அகங்காரத்தில் மூழ்கி தம் அகந்தையிலேயே சுருக்கிட்டுச் சாகிறான்!

ஒருவர் சதா "நான்", "நான்", "நான்" என்று தன்னை முன்னிறுத்துவது, சுயமுக்கியத்துவம் பாராட்டுவது, தன்னைக் கொண்டாடுவது,.... ஆகியவற்றின் வழியாக எதை, அல்லது யாரை
நிறுவுகிறார்? உண்மையிலேயே, அவரது "நான்" என்பது எதைக்குறிக்கிறது? அது எத்தகைய
மெய்ம்மை?

உங்களுடைய "நான்" என்பது என்ன சுயம்புவாக தன்னில் தானே தோன்றியதா? அல்லது அதுவே
இறுதியான நிஜமா? தனது மூலம் எது முடிவு எது என்பதை ஆராய்ந்தறியாத மனிதன் எதை
அடிப்படையாகக்கொண்டு தன்னைக் கொண்டாடுகிறான்?


"நான் யார்?" எனும் விசாரம் உண்மையிலேயே எதைக் குறிக்கிறது?

உண்மையில், "நான் யார்?" எனும் விசாரம் எவ்வொரு தனி நபரையும் பற்றியதல்ல! ஏனெனில், ஒரு தனி நபர் என்பவர் யார்? அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஏதோவொரு ஊரில், நகரில், நாட்டில், ஒரு குறிப்பிட்ட தம்பதியர்க்கு மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம். அவர் ஒரு ஏழ்மையான, அல்லது பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம்; அவருடைய கல்வித்தகுதி எதுவாகவும் இருக்கலாம்; அவருடைய தனித்திறமையும் எதுவாகவும் இருக்கலாம். அவர் இருக்கும் சமூகத்தில் அவர் ஒரு பெரிய மனிதராக மதிக்கப்படலாம், அல்லது சாதாரண ஒருவராகவோ, எவராகவோ,  யாதொரு முக்கியத்துவமும் அற்றவராக இருக்கலாம்! இத்தகைய நபர்களைப் பற்றியதல்ல "நான் யார்?" எனும் விசாரம்!

எவ்வொரு மனிதருக்கும் ஒரு உள்ளூர் அடையாளமும், (Local-Identity) சுய சரிதக் குறிப்புகளும் இருக்கும். அதே போல, ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரபஞ்சமளாவிய அடையாளமும் (Universal Identity) இருக்கிறது. இவ்விரண்டில், இரண்டாவது சொல்லப்படும் விஷயம்தான்  அதிமுக்கியத்துவம் கொண்டதாகும்; ஏனெனில், அதில்தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டிய பரிணாம முழுமை அடங்கியிருக்கிறது!

ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாமலேயே பலர் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர் ஆன்மீகத்தின் வழியாக பணக்காரராக ஆக விழைகின்றனர்! சிலர் ஆன்மீகத்தின் வழியாக பெயர், புகழ், மற்றும் முக்கியத்துவம் அடைய விரும்புகின்றனர்! சிலர் தங்களது உள்ளீடற்ற சுயத்தை மறைக்கும் கவசமாக பயன்படுத்துகின்றனர்! சிலர் 'ஞானி' அல்லது 'மகான்' எனும் பட்டங்களைப் பெற விரும்புகிறார்கள். எண்ணற்ற பலர் தங்களது அர்த்தமற்ற வாழ்க்கையை அலங்கரிக்கும் அணிகலனாக அமையும் என எண்ணி ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றனர்!

உண்மையில், “நான் யார்?” என்பது ஒரு குறிப்பிட்ட மனிதனை, அதாவது ஒரு நபரை, அதாவது
உங்களைப் பற்றிய விசாரம் அல்ல! மாறாக, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில், பிரபஞ்சத்துடனான
தொடர்பில், அதாவது, பிரபஞ்சம் அளாவிய தன்மையில் மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை என்பதைப் பற்றியதாகும். அதாவது, முழுமை அல்லது இறுதி மெய்ம்மையுடன் தொடர்புபடுத்தாமல் (தொடர்பு கொள்ளாமல்), “நான்” என்பதைப்பற்றி திரட்டப்பட்ட அனைத்து அறிவும் பயனற்ற வீண் சுமையே தவிர வேறல்ல! “நான் யார்?” என்ற கேள்வி எவ்வொரு மனிதனின் சொந்த விவகாரத்தைச் ( Personal) சுட்டுவதில்லை! மாறாக, சொந்த விவகாரம் கடந்த (Trans-Personal) தன்மையை, மெய்ம்மையைச் சுட்டுகிறது

உண்மையில், உங்களுடைய “நான்” என்பதற்கு அதீதமான மதிப்பும், முக்கியத்துவமும் உள்ளது; அதை நனவிலி ரீதியாக நீங்கள் உணர்வதாலேயே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராகவும்,  நீங்களே இப்பிரபஞ்சத்தின் மையம் என்பது போலும் கருதிக்கொள்கின்றீர்; அதன் தொடர்ச்சியாக ஆணவம், செருக்கு, இறுமாப்பு யாவும் கொள்கிறீர்!
ஆனால், தன்னை உண்மையிலேயே அறிந்த ஒருவர் ஆரவாரமின்றி அமைதியாக இருக்கிறார்! ஒருவர் தனது அசலான மதிப்பையும், முக்கியத்துவத்தையும் அறிய, அவர் தனது “நான்” உணர்வை ஊடுருவி அதன் இறுதி ஆழம்வரை சென்று அறிந்தாக வேண்டும்!

தனது மூலத்தையும் அறியாத, தனது முடிவிடத்தையும் அறியாத மனிதனின் “நான்” என்பது   அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேரற்ற மரம் போன்றதாகும்! அவனது உடல் மரிக்கும்வரை அவனது “நான்” என்பதும் பிழைத்திருக்கும்! ஆனால், தன்னை அறிந்த மனிதன் மரணத்துடன் முடிந்து போவதில்லை!

அகந்தையின் முதல் சொல் “நான்” என்பதே; அதுவே அதன் முதல் பெயரும் ஆகும்! ஆனால் அதுவே அதன் இறுதிச் சொல்லாகவும், பெயராகவும் அமைந்திடின் அது பெரிதும் துரதிருஷ்டவச மானதாகும்! ஏனெனில், தன்னையறியாத “நான்” உள்ளீடற்றதாகும்!

எவ்வொரு மனிதனும் பிறக்கும்போது முதலில் வெறும் உடல்-ஜீவியாகத்தான் பிறக்கிறான்! பிறகு அவனுள் அகந்தை உணர்வு  தோன்றி “நான்” என்று சொல்லும் போதுதான் அவன் ஒரு மனிதனாக எழத் தொடங்குகிறான்! அகந்தை என்பது உணர்வின் உதயத்தைக் குறிக்கிறது; அதாவது சூழ்ந்துள்ள இருளில்  ஒரு ஒளிப்புள்ளியாக அகந்தை உதிக்கின்றது! ஒட்டுமொத்தப் பிரபஞ்சப் பரிணாம வரலாற்றில் அகந்தையின் உதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தனிச்சிறப்பான நிகழ்வாகும்! ஏனெனில், அகந்தை- உணர்வுக்கு நிகராக இப்பிரபஞ்சத்தில் அதற்குமுன்னர்வரை வேறெதுவும் இல்லை! ஆனால், அகந்தை தோன்றிய பின்னர் தொடர்ந்து வளராமல், தனது மிகவும் அசலான தன்மைக்கு விழிக்காமல், அகந்தையாகவே நீடிக்குமானால், அது போன்ற ஒரு துரதிருஷ்டமும் வேறில்லை! ஏனெனில், அகந்தையின் தேக்கம் வீழ்ச்சியும் மரணமும் ஆகும்!

உணர்வு என்பது ஒரு நதியைப் போல பெருக்கெடுத்து பாய்ந்தோடிச் சென்று அதன் முடிவிடமான  என்றும் வற்றாத சமுத்திரத்தில் கலந்திடவேண்டும்! ஆம், அகந்தை உணர்வானது பெருக்கெடுத்துப் பாய்ந்தோடி அகண்ட உணர்வாகிய பேருணர்வுச் சமுத்திரத்துடன் சங்கமித்திட வேண்டும்!

அகந்தை-உணர்வு என்பது மனிதனின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அகந்தையுள்ள ஒரு மனிதன் அரைமனிதன் மட்டுமே ஆவான். அவன் ஒரு தவளை அல்லது எவ்வொரு விலங்கைவிடவும் மேலாவனாவான்!  ஆனால், அவனது அகந்தை மலர்ந்து அகண்ட உணர்வாக, முழு உணர்வாகப் பரிமளிக்கும் போது தான் அவன் முழு-மனிதனாகிறான்; அவனது அசலான வீட்டை அடையும் பேறு பெறுகிறான்! உடல் என்பது உணர்வு தோன்றுவதற்கான ஒரு கூடு மாத்திரமே தவிர அதில் அவன் நிரந்தரமாகத் தங்கி வசிக்கமுடியாது! முழு-உணர்வு, அல்லது பேருணர்வுதான் ஒரே சாசுவதமான, பாதுகாப்பான வசிப்பிடம் ஆகும்!

ஆன்மீகம் என்பது இவ்வுலக வாழ்வில் (இம்மையில்) இலாபம் அடைவதற்கான முதலீடு அல்ல! மாறாக, இவ்வுலகம் கடந்த, காலம் நீங்கிய (மறுமை) தனது அசலான மெய்ம்மையைச் சென்று சேர்வதற்கான ஒரு கால எந்திரம் போன்றதாகும்! ஏன் ஆன்மீகத்தில் ஈடுபடும் எல்லோராலும் அதன் இலக்கை அடையமுடிவதில்லை என்பதற்கான காரணம், அவர்கள் எல்லோரும் லௌகீகம் அல்லது உலகியலுக்காக ஆன்மீகத்தை ஏய்த்துச் சூறையாடிட முயற்சிப்பது தானாகும்! பலர் தங்களது அக-வறுமையைப் போக்கவே ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றனர்! ஏழையோ அகத்திலும், புறத்திலும் வறுமையில் உழல்கிறான்; பணக்காரனோ புறத்தில் செல்வந்தனாயிருப்பினும் தன் அகத்தில் படு வறுமையில் உள்ளான்! ஏழையோ, பனக்காரனோ, உலகியல் மதிப்புக்களைச் சுமப்பவனால் ஆன்மீக மதிப்பை ஒருபோதும் அறியவோ, அடையவோ இயலாது!

தன்னை-அறிதல் (Self-Realization) என்பது தனது அசலான தன்மையை அறிய தன்னைக் கடந்து செல்லுதல் (Self-Transcending) , தன்னைத் தியாகம் செய்தல் என்பதேயாகும்! ஒரு மொட்டு தன்னை இழக்காமல், தனது மொட்டு  நிலையைக் கடக்காமல் மலராக எவ்வாறு ஆக முடியும்? எண்ணற்ற அகந்தை மனிதர்கள் ஆசைப்பட்டாலும் மலரத் துணியாத மொட்டுக்களே ஆவர்! மொட்டு மலராமல் தனது பரிமளத்தை, வசீகரத்தை எவ்வாறு பெற இயலும்?


உணர்வு தோன்றும்போது அடையாளமற்றதாக, பெயரற்றதாக, அநாமதேயமாகத்தான் தோன்றுகிறது! உணர்வு முதலில் புறம் நோக்கியே பாய்கிறது! அப்படிப்பாயும்போது அது தன்னை முதன்முதலாக அடையாளப்படுத்திக்கொள்வது, தான் தோன்றிய கூடான உடலுடன் தான்! உணர்வானது தனது உள்ளார்ந்த அடையாளத்தை உணர்வதற்குரிய முதிர்ச்சியில்லாத அந்த தொடக்க நிலையில், தனது உடலையும், அதன் மிக நச்சரிப்பான பசிகளையும், தேவைகளையும் தமதெனக் கொண்டு முழுமையாக தன் உடலைப் பிரதிநிதித்துவம் செய்யத் தொடங்கிவிடுகிறது. அதன்பிறகு (எண்ணற்ற மனிதர்களின் விஷயத்தில்) இந்த உடல்-மைய-அடையாளத்திலிருந்து உணர்வானது தன்னை விடுவித்துக்கொள்ளவே முடியாமல் போய்விடுகிறது!  ஒருவர், உணர்வாகிய தான் வேறு, தனது உடல் வேறு, என்பதை உணரத் தொடங்கும்வரை இந்த உடல்-மைய- அடையாள மயக்கம் கடைசிவரை தொடர்கிறது! இவ்வழியே, பலரது வாழ்வில் கடைசிவரை தன்னையறிதல் என்பது தொடங்குவதேயில்லை! தனது நோக்கில், சரியாக 180° பாகை சுழன்று அகம் நோக்கித் திரும்பாமல், “நான் யார்?” என்ற கேள்வியை ஒருவர் தன்னை நோக்கி கேட்க இயலாது; அப்படியே கேட்டாலும், அது ஒப்புக்கு அமைந்த வெற்றுக் கேள்வியாக பலனற்றுப்போகும்!

மேலும், நம்மில் பலரும் நம்மைப்பற்றி அறிவதெல்லாம், நம்மைச்சுற்றியுள்ளவர்கள் -  நம்முடைய பெற்றோர்கள், உறவினர்கள், அண்டைஅயலார், நண்பர்கள், மற்றும் பிறர் நம்மைப்பற்றிச் சொன்னவைகளைக் கொண்டும், மற்றும் நம்மைப்பற்றி நாமே புனைந்து கொண்டவைகளைக் கொண்டும் தான் அறிகிறோம்! நம்மில் வெகு சிலரே நேரடியாக நம்மை உணர்பவர்களாக, அறிகிறவர்களாக இருக்கிறோம்! பிரெஞ்சுத்தத்துவ ஞானி தெக்கார்த்தே, “நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்!” என்றார். நம்மில் பலரோ, “என் அண்டை வீட்டுக்காரன் இருக்கிறான், ஆகவே நான் இருக்கிறேன்!” என்கிறோம்! நம்முடைய எல்லாச் சிந்தனைகளும், பார்வைகளும், கருத்துக்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை, அதாவது, பிறரைச் சார்ந்ததாகவே; பிறரிடமிருந்து கடன் பெற்றவையாகவே உள்ளன! உங்கள் ஒவ்வொருவரிடமும், ஒரே ஒரு அசலான, உங்களுடைய சொந்தக் கருத்து, பார்வை என ஏதேனும் உள்ளதா என்று தேடிப்பாருங்கள்!

நாம் ஒவ்வொருவரும் தன்னில் தான் யார்? என்று அறிவதில்லை, சிந்திப்பதில்லை. மாறாக, சமூகத்தில் தான் யார், என்னவாக இருக்கிறோம் என்பதைப்பற்றித்தான் அதிகமாக அறிகிறோம், சிந்திக்கிறோம். இவ்வழியே, நாம் நம்முடைய கருவான மையத்தை, சாரத்தை தொடுவதோ, நெருங்குவதோ இல்லை! நாம் நம்மைப்பற்றி அறிவதில்லை, சிந்திப்பதில்லை. மாறாக, நம்மைப்பற்றி பிறர் சொல்வதைப் பற்றியே பெரிதும் அக்கறை கொள்கிறோம். அவற்றை ஒட்டியும், வெட்டியும் நம்மை இவ்வுலகிற்குக் காட்ட விரும்புகிறோம். நாம் நம்மைப்பற்றி அல்லாமல், பெரிதும் நம்முடையவற்றைப்பற்றியே - ‘என் தோற்றம்’, ‘என் புகழ்’, என் மதிப்பு, எனது மனைவி, மக்கள், குடும்பம், எனது வாழ்க்கை, எனது உத்தியோகம், வருமானம்….என எப்போதும் எண்ணுகிறோம்.

நாம் வாழும் வாழ்க்கையும் நம்மைப்போலவே ஆழமற்றது, சாரமற்றது; பிறரை, அதாவது சமூகத்தைப் பார்த்து நகல் செய்வது என்பதாகவே உள்ளது…...

பொதுவாக, எவ்வொரு மனிதனும் “நான்” எனக்குறிப்பிடும்போது அவர் உண்மையில் எதைக் குறிப்பிடுகிறார், எதை “நான்” என கருதுகிறார் என்பதைத் துல்லியமாக அறிவது அவசியமாகும். முதலில், “நான்” எனும் உணர்வு, பிறரால், நம்மைச்சுற்றியுள்ளவர்களால், குறிப்பாக, ஒருவர் குழந்தையாக இருக்கும்போது அவரது பெற்றோரால் அவருக்கு வழங்கப்படும் தனிக்கவனிப்பு, மற்றும் முக்கியத்துவம் மூலம் ஏற்படுத்தப்படும் ஒன்றாகவே தொடங்குகிறது. மேலும், பெற்றோர் அவரைப்பற்றி சொல்பவைகளைக் கொண்டே அவர் தனது அடையாளத்தை, பிம்பத்தை கட்டியெழுப்பத் தொடங்குகிறார். பிறகு, மற்றவர்கள் சொல்பவைகளைக் கொண்டும்; அதோடு தன்னைப்பற்றி தான் புனைந்து கொள்ளும் விஷயங்களைக் கொண்டும் ஒருவர் தனது அடையாளத்தை, பிம்பத்தை தொடர்ந்து கட்டியெழுப்புகிறார்!

ஆனால், பொதுவாக பிறர் நம்மைக்காண்பது என்பது நம்முடைய புறத்தோற்றத்தையும், மேற்பரப்பிலுள்ள சில அம்சங்களையும் மட்டுமே என்பதால், அவர்கள் நம்மை அடையாளப்படுத்துவதைக் கொண்டு நம்முடைய அடையாளத்தை கட்டமைப்பது என்பது மிகவும் மேம்போக்கான ஒன்றாகத்தான் அமையும். உண்மையில் இவ்வாறு அமைந்த, அல்லது, அமைத்துக்கொண்ட,  நம்மைப் பற்றிய மிகவும் மேலோட்டமான அடையாளத்தையே நாம் எனக் கருதிக்கொண்டு பொதுவாக நாமெல்லோரும் உலவிக்கொண்டுள்ளோம்! உண்மையில், நம்மை நம்முடைய உள்ளாழத்திலிருந்து அறிவதோ, உணர்வதோ இல்லை! ஆகவேதான், நம்மில் அநேகர் தன்னையறிதல் என்பதற்கு மிகவும் அந்நியமாக இருக்கிறோம்.

நம்மைப் பற்றி நாம் அறிவதெல்லாம் நம்முடைய மேற்புறத்தை மட்டுமே! ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் நாமறியாத ஆழமானதொரு உட்புறமும் உள்ளது! இந்த உட்புறத்தை, அகத்தை, நோக்கியதே “நான் யார்?” எனும் கேள்வியும், விசாரமும் ஆகும். மனிதன் தன் மேற்புறத்தை மட்டும் அறிவதனால், அலங்கரித்துக்கொள்வதனால் மனிதனாவதில்லை! மாறாக, தன் உட்புறத்தின் அடியாழத்திலிருந்து தன்னை அறிவதன் மூலமாக மட்டுமே அவன் முழு-மனிதனாக மலர்கிறான்!

நாம் எல்லோரும் “நான்”, “நான்” என்று சதா நம்மைப்பற்றியே எண்ணுகிறோம்! நம்மைப்பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம், செருக்கடைகிறோம், ஆணவம் கொள்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் நம்மைத்தவிர இப்பிரபஞ்சத்தில்முக்கியத்துவம் கொண்ட வேறெதுவும் இல்லை என்பதுபோல நடந்துகொள்கிறோம்! ஆனால், “நான்” என நாம் உணர்வது நம்மில் எதை என்பதை நாம் அவ்வளவு தெளிவாக உணர்கிறோமா என்றால், இல்லை என்பதே நாம் அறியவிரும்பாத உண்மையாகும்!

உண்மையில், “நான்” என நாம் உணர்வது  உணர்வாகிய நம்மை அல்ல! மாறாக, நம்முடைய உடலையும், நம்முடைய ஒரு சில பண்புகள், திறமைகள், நேர்மறையான அம்சங்கள் ஆகியவைகளைக் கொண்டு நாம் உருவாக்கிய ஒரு அடையாளம், அல்லது பிம்பத்தையே “நான்” என நாம் குறிப்பிடுகிறோம்!

உண்மையில் ஒரு மனிதனின் “நான்” என்பது அவனது உணர்வைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும்! ஏனெனில், தனது சாரத்தில் மனிதன் என்பவன் அவனது உடலோ, மனமோ, மனதில் தோன்றும் எண்ணங்களோ அல்ல; மாறாக, உணர்வே ஆவான்! இன்னும் சொல்லப் போனால், உணர்வு இல்லையேல், மனத்தில் நான் என்ற எண்ணம் எழ வாய்ப்பே இருந்திருக்காது! மனிதனை விலங்கிலிருந்து வித்தியாசப்படுத்தும் அம்சம் உணர்வே ஆகும். மனம் என்பது உணர்வு வெளிப்படுவதற்கான ஒரு ஊடகம் ஆகும். ஆம், மனம் என்பது உணர்வின் ஒரு கருவியே. ஆக, இவ்வாறெல்லாம், மனிதன் தன்னைப் பிரித்து அறிவது என்பதும் தன்னையறிதலின் ஒரு பகுதியே ஆகும். மேலும், பகுதி பகுதியாக தன்னைப் பிரித்து அறிவதைப்போலவே, ஒருவன் தன்னைத் தொகுத்தும் அறிவது அவசியமாகும்!

மனிதன் தன்னைத் தொகுத்து அறியும் போதுதான் அவன் தனது பிரபஞ்சமளாவிய தன்மையை, அடையாளத்தை அறிபவனாகிறான். மனிதனுடைய பிரபஞ்சமளாவிய அடையாளம் என்பது என்னவென்றால், அவனே அனைத்தும்!  இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்தும், ‘கடவுள்’, அல்லது ‘பிரம்மம்’ எனப்படும் இறுதி மெய்ம்மை உட்பட, அனைத்துமாக தன்னை உணரும் முழுமையே மனிதன்!

“நான் யார்?” எனும் விசாரம் தனி நபரான உங்களைப்பற்றியதல்ல! உங்களின் வழியாக உங்களைக் கடப்பதன் விளைவாக வெளிப்படும் இறுதி மெய்ம்மை பற்றியது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 29-04-2019
*****************************************************************************


ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...