இது வழக்கமான மனிதர்களுக்கான வழக்கமான
ஆன்மீகம் பற்றிய கட்டுரை அல்ல! மாறாக, இது
வழக்கத்தை மீறிச் செல்லும் தேடலும், துணிவும்,
ஆர்வமும் கொண்ட வாசகர்களுக்கானது!
உண்மை உண்மையில் எதனுடனும் சமரசம் செய்து
கொள்வதில்லை! அவ்வாறு சமரசத்துக்கு உட்படுமாயின்
அதன்பிறகு அது உண்மையாக இருக்க முடியாது!
ஆன்மீகம் என்றவுடன் இங்கு (விசார மையத்தில்*) தியானம் பற்றியும், ஆன்மா பற்றியும், இன்னும் ஆன்மீகம் தொடர்பான பல சொற்களைப்பற்றியும் பேசப்படும், விளக்கப்படும்; ஆன்மீகத்திற்கே உரிய பயிற்சிகள் சொல்லித்தரப்படும் என்று எண்ணி பலர் வந்தனர். ஆனால், இங்கு அவ்வாறான எதுவும் பேசப்படவில்லை; சொல்லித்தரப்படவில்லை! ஆகவே, இங்கு பலர் வந்தனர்; சிலர் மட்டுமே நிலைத்தனர். நிலைத்தவர்களில் பலர் திடீரென சொல்லாமல் கொள்ளமல் வராமல் நின்று போயினர்! ஆனால், “விசார மையம்” ,விசார இல்லம்”, பிறகு “விசார மார்க்கம்” என்று பெயர் மாற்றம் பெற்ற இந்த அமைப்பில்லா அமைப்பு, மார்க்கமற்ற மார்க்கம் இன்னும் தொடர்ந்து இங்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது - அதன் சொற்பமான பழைய, மற்றும் அவ்வப்போது வந்து சேரும் புதிய பங்கேற்பாளர்களுடன்!
இந்த “விசார மார்க்கம்” எனப்படும் ஆன்மீக மார்க்கத்தில், அல்லது ஆன்மீக மையம் அல்லது ஆன்மீகப் பள்ளியில், நேரடியாக இதுதான் ‘ஆன்மீகம்’ என்றில்லாமல், சூரியனுக்குக் கீழாகவும், சூரியனைத்தாண்டியும் உள்ள அனைத்தையும் பற்றிப் பேசப்படுகிறது, விளக்கப்படுகிறது; விளக்கப்பட்டு அனைத்தும் விலக்கப்படுகிறது! அனைத்தும் விலக்கப்பட்டபிறகு எது எட்டப்படுகிறதோ அது தான் அனைத்தின் சாரமான ஆன்மீக உண்மை என சுட்டப்படுகிறது! இங்கு வந்தவர்களில், தொடர்ந்து வந்துகொண்டிருப்பவர்களில் எத்தனைபேர் அந்த உண்மையை கிரகித்துக்கொண்டனர், புரிந்துகொண்டனர், அதிலேயே நிலைக்கின்றனர் என்ற எண்ணிக்கை பற்றிய கேள்வி முக்கியமல்ல! ஆனால், இங்கு வருபவர்களிடம் ஏதோ ஒரு தாக்கம் தொற்றிக்கொள்கிறது! ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதில் சந்தேகமில்லை! அந்த தாக்கத்தை, மாற்றத்தைப் பற்றிச் சென்று இலக்கை அடைவது என்பது அவர்களுடன் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணியாகும்!
“இங்கு, உங்கள் மார்க்கத்தில் என்ன (பயிற்சி) செய்யச் சொல்லிக்கொடுக்கிறீர்கள்? என்று பலர் கேட்கின்றனர். “பயிற்சியாக எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை; நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - அது “விசாரம்” என்பதுதான்!” என்று தொடக்கத்திலும், திரும்பத்திரும்பவும் சொல்லப்படுகிறது. ஏனெனில், “விசாரம்” என்பது மட்டுமே எவ்வகை அறிதல், புரிதலுக்கும் - அது சாதாரண அன்றாட விவகாரமாயினும், தத்துவமாயினும், விஞ்ஞானமாயினும், இன்னும் ஆன்மீகமாயினும் யாவற்றுக்கும் அடிப்படையான அம்சமாகும்! “விசாரம்” என்பது மிகத் தொன்மையானதும், என்றும் புதிதானதும் ஆகும் - அதற்கு தொடக்கம் என்பதேயில்லை; ஆனால், தெளிவான முடிவு உண்டு! இன்னும் முடிவைத் தாண்டியும் அலுப்பு சலிப்பின்றி தொடரக்கூடியது!
“விசாரம்”தான் மூலம், மற்றும் முடிவான மெய்ம்மையின், அதாவது, கடவுள், பிரம்மம், அகண்ட உணர்வு, பேருணர்வு,,, என்றெல்லாம் சொல்லப்படுவதன் சாரம் ஆகும்! “விசாரம்” என்பதற்கு இன்னொரு பெயர் “பேரார்வம்” என்பதே!
ஆர்வத்தையிழப்பவன் அனைத்தையும் இழப்பவனாகிறான்! ஆனால், ஆர்வம் என்பது எதன் மீதான ஆர்வம், யாருடைய ஆர்வம்? உங்களிடம் உள்ளார்ந்த இயல்பான ஆன்மீக வேட்கை, தூண்டுதல் இல்லையெனில், உங்களுடைய ஆர்வம் சிறியதாக, சிற்றார்வமாக இருக்கும்! நீங்கள் ஒரு சிறிய மனிதர்! உங்களுடைய ஆர்வம் சாதாரணப் பொருட்கள் மற்றும் மதிப்பீடுகளின் மீதானதாகவே இருக்கும்! உங்களுடைய ஆன்மீகம் சுயநல மையம் கொண்டது, ஆகவே, குறைபாடுடையது!
ஆர்வம் என்பது தேங்கி நிற்கும் குட்டை போன்ற ஒன்றல்ல; மாறாக, செயலூக்கமிக்க, எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு நதி போன்றதாகும்! தூய ஆர்வத்தினால் தூண்டப்பட்ட ஒருவன் ஒருபோதும் சோம்பியிருப்பதில்லை! எவ்வொரு வார்ப்பு, ரகம், மோஸ்தர், அல்லது வகைப்பாட்டிலும் சிறைப்படுவதில்லை! ஆர்வம் என்பது என்னுடையதோ, அல்லது உங்களுடையதோ அல்ல; அவ்வாறு சொந்தமாக்குவதன் வழியே அது சிற்றார்வமாக, உங்கள் சொந்த விருப்பத்தின் கருவியாக, குறுகிய நோக்கம் கொண்டதாக குறுகிப்போகிறது! ஆர்வம் என்பது சிந்தாமல் சிதறாமல் முழுமையாக இருக்கும்பட்சத்தில் அதைப் “பேரார்வம்” என்று குறிப்பிடலாம். அது தன்னில் தனிமுழுமையானது (Absolute).
பேரார்வம் என்பதே மூல மெய்ம்மையாக, அதன் சாரமாக, அதன் கருவியாகவும் இருப்பதால், அதைப் பற்றுபவன் மெய்ம்மையைச் சென்று சேருபவனாக ஆகிறான்! ஆகவே, மெய்ம்மை நாட்டம் கொள்வது ஒன்றே மனிதனுக்கு அழகாகும்! அதற்குக்குறைவான நாட்டம், வேட்கை விருப்பம் யாவும் தனது உள்ளார்ந்த மனிதத்தை அவமதிப்பு செய்வதாகும், மனிதத் தரத்திற்குக் கீழானதாகும்!
தியானம், சுவாசப்பயிற்சி, யோகப்பயிற்சி, … போன்றவை ஆன்மீகத்திற்கு உங்களைத் தயார்படுத்துவதற்கான கருவிகள், உத்திகள் மட்டுமே! இப்பயிற்சிகளையும், இன்னும் வேறு பல பயிற்சிகளையும் மேற்கொள்வதே ஆன்மீகமாகாது! மின் சாதனங்கள் இருந்தால் மட்டும் போதாது; அவை இயங்கவேண்டுமென்றால், மின்சாரம் வேண்டும். அச்சாதனங்களுக்கு மின் -இணைப்பு தரப்படவேண்டும். அவ்வாறே, ஆன்மீகத்திற்கு மிகவும் அடிப்படையானது உணர்வு (Consciousness) ஆகும். ஆன்மீகத்திற்கு உணர்வு - இணைப்பு மிகவும் மையமானது. ஒருவர் உணர்வுக்கு வரவேண்டும் (One must become Conscious)! மேலும், தியானத்தின் உதவியின்றியே எவரும் நேரடியாக உணர்வுக்கு வர இயலும். அவ்வாறு உணர்வுக்கு வருவது என்பது ஆன்மீகத் தேவைக்காக என்றில்லாமல், ஒரு மனிதனாக தன் வாழ்க்கையை முழுமையாக வாழும் தேவைக்காகவே ஒவ்வொருவரும் உணர்வுக்கு வருவது, விழிப்போடு இருப்பது, உணர்வை உணர்வுகொள்வது, என்பது அவசியமாகும்!
இங்கு, விசாரமார்க்கத்தில், ‘ஆன்மீகப் பயிற்சிகள்’ எனப்படும் எவையும் கற்றுத்தரப்படுவதில்லை, மேற்கொள்ளப்படுவதில்லை! இங்கு சிந்திப்பதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும், தனக்காக, தன் வாழ்க்கையை அறிந்து, புரிந்து வாழ்வதற்காக; வாழ்வின் ஒப்பற்ற இலக்கை தன் வாழ்காலத்திற்குள்ளாகவே அடைவதற்காகச் சிந்தித்தாக வேண்டும். இங்கு சீடர்கள், சாதகர்கள், அப்பியாசிகள் எனப்படுபவர்களுக்காக ‘குரு’ என்ற ஒருவர் சிந்திப்பார் என்பது கிடையாது! இங்கு ஒரு விசார- நடத்துனர் இருக்கிறார்; அவருடைய ஒரே ஆன்மீகப்பணி, ஆன்மீகம் குறித்த விசாரப் பங்கேற்பாளர்களின் (அப்பியாசிகளின்) தவறான கருத்தாக்கங்களைக் (Misconceptions) களைவது என்பது மட்டுமேயாகும்!
ஞானம், பக்தி, கர்மம்
இங்கு சிந்திப்பதன் அவசியம் வலியுறுத்தப்படுவதால், இது ஏதோ அறிவு-ஜீவிகளின் குழு என்று அர்த்தமல்ல. மாறாக, மூளை, இதயம், கைகால்கள், நாடி-நரம்புகள் எல்லாமும் ஒருங்கே இசைவுடன், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்ற ஆன்மீக இலக்கிற்காகச் செயல்பட வேண்டும் என்பது முக்கியமாகும். ஏனெனில், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்பதுதான் உண்மையான வாழ்தலும், ஆன்மீகமும் ஆகும்! வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாத நிலையில் வாழ்க்கையும் இல்லை, ஆன்மீகவும் இல்லை! அவ்வாறு இருக்க முடியுமெனில், அது விலங்குத்தனமான வெறும் ஜீவித்தல் என்பதாக மட்டுமே விளங்கமுடியும்.
நம் பலரிடையே, ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் பற்றிய துண்டுபட்ட, தவறான பார்வை நிலவி வருகிறது. அதாவது, ஞான மார்க்கம் என்பது கடினமானது எனவும், அது எல்லோருக்கும் ஒத்துவராது எனவும், பக்தி மார்க்கம் என்பது எளிதானது எனவும், சிலருக்கு கர்ம மார்க்கம்தான் சரியானது எனவும் ஓர்படிவார்ப்பாக (Stereotype) கருதிக்கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்கள்! இப்பார்வை தவறானது; ஏனென்றால், மனிதனை மூளை வேறாக, இதயம் வேறாக, கைகால்கள் வேறாக வெட்டிப்பிரித்தது யார்? எங்கோ, எவரோ, எப்போதோ ஏதோ காரணத்திற்காக சொல்லப்பட்ட முறையை அப்படியே கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டு வருவது பொருத்தமற்றது!
மனிதனை, மூளை வேறாக, இதயம் வேறாக, கைகால்கள் வேறாக வெட்டிப்பிரிக்க இயலாது; அவ்வாறே, ஞானம், பக்தி கர்மம் ஆகியவையும் தனித்தனியானவையல்ல; அவற்றை வெட்டிப்பிரிக்க இயலாது! அவ்வாறு வெட்டிப்பிரிக்கவும் கூடாது! ஒவ்வொருவரிடமும் ஞானம், பக்தி கர்மம் ஆகிய இம்மூன்றும் ஒருங்கே அமைந்திருப்பது அவசியம்! பொதுவாக பலர் எண்ணுவதுபோல் ஞானம் என்பது கடினமானதல்ல; அவ்வாறு கடினமாகத் தோன்றுவதற்குக் காரணம், நம்மில் அநேகருக்கு அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைத் தாண்டிய உயர்-வாழ்க்கைத் தேவைகள் குறித்த சிறு சலனமோ, உணர்வோ கிடையாது! அடுத்து, ‘பக்தி’ என்பது எல்லோரும் எண்ணுவதுபோல அப்படியொன்றும் எளிதான விஷயம் அல்ல! இன்னும் சொல்லப்போனால், பக்திதான் யாவற்றையும்விட மிகமிகக் கடினமானதாகும்! எவ்வாறெனில், சுயநல கோரிக்கைகள், வேண்டுதல்கள் எதுவும் இல்லாமல், “இறைவனுக்காகவே இறைவன்” என்பதான பக்தி மிக அரிதிலும் அரிதாகும்!
“வாழ்க்கை-விசாரம்”
இங்கு, விசாரமார்க்கத்தில், “நான் யார்?” விசாரத்திற்கு முன்பாக, “வாழ்க்கை-விசாரம்” என்பதே முதலில் முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால், எடுத்த எடுப்பிலேயே, எல்லோரும் “நான் யார்?” என்ற கேள்வியைக் கொண்டு தன்னை விசாரித்து ஒரே தாவலில், ‘ஆத்மா’ எனப்படும் உச்ச நிலை உணர்வை அடைந்துவிட முடியும் என்று சொல்வதற்கில்லை! அதற்குரிய ஒரு களம் தயார் படுத்தப்பட வேண்டும். அக்களம்தான் வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கைக்கு பிரத்தியேக அர்த்தம், குறிக்கோள், இலக்கு ஏதும் உள்ளதா? என்பன போன்ற முக்கியக் கேள்விகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் “வாழ்க்கை-விசாரம்” என்பதாகும்!
“வாழ்க்கை” என்பதைப் புரிந்துகொள்ள அதனுள் அடங்கியுள்ள மூன்று முக்கிய அம்சங்களை தெளிவாக அவற்றின் சாரத்தில் புரிந்துகொள்வது அவசியமாகும். அவை, பிரபஞ்சம், சமூகம், அகம் ஆகியவையே ஆகும். பிரபஞ்சம் என்பது இயற்கை, உலகம் ஆகிய புறவுலகம் பற்றியது. சமூகம் என்பது மனிதகுலம் மொத்தத்தையும் குறிக்கிறது. அகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் மனம், எண்ணம், மற்றும் அவனது ஒட்டுமொத்த உளவியல் அம்சங்களையும் பற்றியது. புறவுலகமாகிய பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்; இல்லாவிடில் அது தேவையில்லாமல் நம்முடைய கவனத்தை ஈர்த்துச் சிதறடித்தவண்ணம் இருக்கும்! ஒட்டுமொத்த இருப்பில், பிரபஞ்சத்தின் இடம், பங்கு, பாத்திரம், மற்றும் அதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு ஆகியவை குறித்து தெளிவாகப் புரிந்துகொண்டு அதை முடித்துவிட வேண்டும்!
அதேவேளையில், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் நேரடியாக விஞ்ஞான வகை வானவியலில் ( Astronomy) ஈடுபடவேண்டும் என்பது அல்ல! மாறாக, பிரபஞ்சம் பற்றிய விஞ்ஞானத்தின் புரிதல்களையும், கோட்பாடுகளையும் அறிந்துகொள்வதுடன், அவை எவ்வாறு பிற அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன, ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைக் கொண்டு நாம் பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்துகொண்டாலே போதுமானது; அதற்கு நாம் அண்டவெளியில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள், மற்றும் பிற விண்பொருட்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு பட்டியலிட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய தேவையில்லை! ஏனெனில், விஞ்ஞான அணுகுமுறையின் வழியாக பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள இன்னும் பல நூற்றாண்டுகளும், இன்னும் பல நியூட்டன்களும், ஐன்ஸ்டீன்களும் தோன்றியாக வேண்டும்! ஆனால் நாம் ஒவ்வொருவரும் இப்பிரபஞ்சத்தையும், அனைத்தையும் நம் ஒவ்வொருவரின் வாழ்-காலத்திற்குள்ளாகவே புரிந்துகொண்டாக வேண்டியது அவசியமாகும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் ஐன்ஸ்டீனாகவும், புத்தனாகவும் இருப்பது அவசியம்!
ஆகவேதான், இங்கு விசாரமார்க்கத்தில், வழக்கமான ஆன்மீகச் சொல்லாடல்களையும், ஆன்மீகப் பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை! ஆம், உரிய அடிப்படைப் பாடங்களைக் கற்காமல், நமக்கு நாமே சிந்திக்காமல், நேரடியாக ஆன்மா, பிரம்மம், ஞானம், முக்தி, மோட்சம், … ஆகியவற்றை குறுக்குவழியில் அறியவோ, அடையவோ இயலாது! ஆம், சரியான தொடங்குபுள்ளிகளிலிருந்து தொடங்காத ஆன்மீகம் தன் இலக்கைச் சென்றடைவதில்லை!
விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, பலராலும் ஏற்கனவே திரட்டப்பட்ட அறிவைச் சேர்த்துக் கொண்டு நாம் நம் புரிதலைக் கட்டியெழுப்ப இயலும். “நான் பிறரைவிட அதிக தொலைவு முன்னோக்கிக் காண்கிறேன் என்றால், அதற்குக் காரணம் நான் முந்தைய ஜாம்பவான்களின் தோள்களின் மீது நின்று கொண்டு காண்கிறேன்!” என்று விஞ்ஞானி நியூட்டன் அவர்கள் கூறினார்! ஆனால், அத்தகைய அணுகுமுறை ஆன்மீகத்தில் சாத்தியமில்லை! ஆன்மீகத்தில் நாம் எவருடைய முதுகிலும் ஏறிக்கொண்டு சவாரி செய்ய இயலாது! ஏனெனில், ஆன்மீகம் என்பது விஞ்ஞானத்தைப்போல, வெறும் அறிவு சார்ந்த துறை அல்ல! ஆன்மீகம் என்பது ஒவ்வொருவருடைய உணர்விலும் ஏற்பட வேண்டிய மாற்றத்தை, மலர்ச்சியைச் சார்ந்தது. ஒருவருடைய உணர்வோடு உணர்வாகக் கலக்காத எவ்வொரு அறிவும், அனுபவமும், புரிதலும் ஒருவருடையதாக ஆகாது!
பலர் ஆன்மீக நூல்கள் பலவற்றை வாசித்துவிட்டு, “எல்லாம் புரிந்துவிட்டது!” என்ற பிரமையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது! இவர்களுடைய ஆன்மீகம் உணர்வில் வேர்கொள்ளாமல், இவர்களுடைய மூளையில், அறிவில் வேர் கொண்டுள்ளது! அப்படியென்றால், ஆன்மீக நூல்களைக் கற்கக் கூடாது, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கக்கூடாது; எவ்வொரு ஆன்மீக மையத்தையும், குருவையும் நாடக்கூடாது என்பதல்ல! மாறாக, இவ்வழிகளிலெல்லாம் நாம் ஆன்மீகம் தொடர்பான சில குறிப்புக்களை மட்டுமே பெறமுடியும்! அவை நம்மை நாமே தோண்டுவதற்கான கருவிகள் போன்றவையே என்பதை தெளிவாக உணர்ந்து செயல்பட வேண்டும்!
அடுத்து, நாம் ஆன்மீக மையங்களில், ஆசிரமங்களில் சேருவது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! ஏனென்றால், ஆன்மீகம் என்பது கும்பல் நிகழ்வுமுறை (Mass Phenomenon) அல்ல! மாறாக, ஆன்மீகம் என்பது தனிமனித நிகழ்வுமுறை (Individual Phenomenon) ஆகும். அது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான ஆழமான தொடர்புறவில் நிகழும் பரிமாற்றம் ஆகும்! அங்கே மூன்றாவது ஒரு நபருக்கு இடமில்லை! ஆகவேதான், வள்ளலார் அவர்கள் “தனித்திரு!” என்று சொன்னார். உங்களுடைய மையத்தைக் கண்டடையும்வரை நீங்கள் தனித்திருப்பது அவசியம்; அதன்பிறகு, நீங்கள் மானுடம் மொத்தத்தையும் தழுவிக்கொள்ளலாம். அப்போதும் கூட,வழியில் காணும் ஒவ்வொரு மனிதனையும் கட்டித் தழுவிக்கொள்ளவேண்டும் என்பதில்லை!
ஆன்மீகம் என்பது, ‘எனது ஞானமடைதல்’, ‘எனது முக்தி’, ‘எனது மோட்சம்’ என்கிற ரீதியிலான சுயநலமான சொந்த விவகாரமும் அல்ல, அல்லது பொது நலம் விரும்பும் சமூக விவகாரமும் அல்ல! மாறாக, படைப்பில் தம்மை முழுமையாக முதலீடு செய்துள்ள அந்த மூலமெய்ம்மைக்கு நாம் ஒவ்வொருவரும் திரும்பச்செலுத்தவேண்டிய அம்சத்தைப் பற்றிய விவகாரம் ஆகும்! ஆம், மெய்ம்மையை நாம் ஒவ்வொருவரும் கண்டடைவது ஒன்றே அதற்கு அசலாக அதைத் திருப்பித் தருவதாகும்!
உண்மையான ஒருங்கிணைந்த ஆன்மீகம்
சிலர், ஒருங்கிணைந்த ஆன்மீகம் (Integral Spirituality) என்ற பெயரில் எல்லாமும் ஆன்மீகத்தன்மை கொண்டவையே என்று கூறி எல்லாவற்றுக்கும் இடமளித்து, கொண்டாடி ஒரு கலவையான மசாலா ஆன்மீகத்தைக் கைக்கொள்வது பற்றி சிலாகித்துப் பேசி வருகின்றனர்; கடைப்பிடிக்கவும் செய்கின்றனர்! இயற்கையில் தோன்றிய அல்லது பரிணமித்த ஒவ்வொரு அம்சத்திற்கும், பண்பிற்கும் அதற்குரிய ஒரு முறையான இடமும், பங்கும், பாத்திரமும் உள்ளது. அதே நேரத்தில், எல்லாமும் ஆன்மீகத்தன்மை கொண்டவையே என்று சொல்வதற்கு இடமில்லை!
ஏனெனில், பிரபஞ்சம் என்பது பலவகைப்பட்ட பொருட்களும், அம்சங்களும், பண்புகளும் இடம்பெறும் மாபெரும் தட்டுமுட்டுச் சாமான்கள் கிடங்கு (Godown) அல்ல! அது ஒரு பரிணாம இயக்கம் ஆகும்; அது ஒரு ஒப்பற்ற இலக்கு நோக்கி முன்னேறிச் செல்லும் பரிணாம நிகழ்வுமுறை (Evolutionary Process) ஆகும். பரிணாம நிகழ்வுமுறை என இங்கு நாம் குறிப்பிடுவது டார்வினின் உயிரியல் பரிணாம முறை அல்ல; அது வெறுமனே உயிரினங்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து வேறொன்றாக கிளைத்தன என்பது பற்றிய அனுமானக் கோட்பாடு மட்டுமே; ஆகவே அது மிகவும் மட்டுப்பாடானது; நாம் இங்கு குறிப்பிடும் பரிணாம வழிமுறையானது டார்வினின் பரிணாமத்தை உள்ளடக்கியும் அதைக் கடந்தும் செல்லும் ஒன்றாகும்!
ஒட்டுமொத்த பரிணாம நிகழ்வுப் போக்கையும் நாம் ஆன்மீக நிகழ்வுமுறையாகக் கொள்ளலாம்! ஆனால், பரிணாமத்தில் என்ன நிகழ்கிறது, பரிணாமம் எதை நோக்கிச் செல்கிறது, அதில், தனது பங்கு, பாத்திரம் என்ன, என்பவற்றை யெல்லாம் உணர்வுகொள்ளக்கூடிய உணர்வுள்ள மனிதஜீவியுடன்தான் ஆன்மீகம் தொடங்குகிறது! அதே நேரத்தில், எண்ணற்ற மனிதர்களின் விஷயத்தில், ஆன்மீகம் என்பது இன்னும் சற்றும் துளிர்க்கவேயில்லை!
பரிணாம வரலாற்றில் உருவான அனைத்தும், ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் அமைந்து பரிணாமத்தின் மிகத் தொலைவான இலக்கை அடைவதற்குச் சேவை புரியும்வகையில் தோன்றிய படிகளே! பரிணாமத்தின் அந்த ஒப்பற்ற இலக்கை நீக்கிவிட்டால், மனிதன் உட்பட பரிணாமத்தில் தோன்றிய அனைத்திற்கும், யாதொரு அர்த்தமும் இருக்காது! ஒவ்வொன்றும், தம்தம் மட்டுப்பாட்டினால், தனக்காகவே தான் இருப்பதாக கருதிக்கொண்டிருக்கலாம் அல்லது கருதாமலும் இருக்கலாமே தவிர உண்மையில், எதுவும் தமக்காக இல்லை; இன்னும், தனித்தனியே எதற்கும் யாதொரு அர்த்தமுமில்லை! அதாவது, ‘கலை கலைக்காகவே’, ‘கத்தரிக்காய் கத்தரிக்காய்க்காகவே’, ‘காமம் காமத்திற்காகவே’, ‘உடல் உடலுக்காகவே’, அன்றாட வாழ்க்கை அன்றாட வாழ்க்கைக்காகவே’... என்பதாக உண்மையில் எதுவும் இல்லை! ஆம், உண்மையான ஒருமை, ஒருங்கிணைவு, ஒன்று கூடுதல் என்பது கீழ்ப்படிகளில் இல்லை; மாறாக, உச்ச உயர்-படியில் மட்டுமே சாத்தியமாகும்!
ஆம், மெய்ம்மையுடன் கலப்பது ஒன்றே உண்மையான கொண்டாட்டம்! மெய்ம்மை தொடர்பில்லாத பிறவனைத்தும் வெற்றுக் கேளிக்கைகளே அன்றி வேறில்லை. இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் உணவை ருசித்து, ரசித்துச் சாப்பிடக்கூடாது என்பதல்ல! அதே நேரத்தில், நீங்கள் முடிவில்லாது உணவை ருசித்து, ரசித்துச் சாப்பிடுவது, கலை, இலக்கியம், ஆடல், பாடல், கொண்டாட்டம் என்று மூழ்கியிருப்பது என்பது முறையாகாது! உங்களுக்கு உண்மையிலேயே உண்மை, மெய்ம்மை மீது நாட்டம் உள்ளதென்றால், உங்களை எதுவும், எவரும் வழிதவறிப் போகச்செய்ய முடியாது! ஆகவே, முதலில் மெய்ம்மையைத் தேடுங்கள், தேடிக்கண்டடையுங்கள் அதன் பிறகு, முடிந்தால் விருந்து, ஆடல், பாடல், கேளிக்கை கொண்டாட்டம் என்று இருங்கள்!
புதுயுக பாவனை ஆன்மீகம்!
எண்ணற்றவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் எதையெதையோ பயிற்சிக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள்! ஆனால், அவர்களிடம் ஆன்மீக ரீதியான யாதொரு மாற்றமோ, முன்னேற்றமோ எதுவும் ஏற்படுவதில்லை! ஏனெனில், அவர்களுடைய ஆன்மீகம் வெறும் பாவனை ரீதியிலமைந்ததாகும். அவர்கள், தமது உலகியல் அல்லது லௌகீகத்திற்குள் ஆன்மீகத்தை அடக்க முயற்சிக்கின்றனர்! ஏதோ, ஆன்மீகம் என்பது அனைத்தையும் அனுமதிக்கும் உரிமம் என்பதுபோல அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள்!
நல்லெண்ணமும், தாராள மனமும் கொண்ட சிலர் ஆன்மீகத்தை பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்றனர். ஆனால், ஆன்மீகத்தை அக்கறையோடு பக்குவமாக தேக்கரண்டியால் ஊட்டவோ, அல்லது வலியத் திணிக்கவோ இயலாது! ஒவ்வொருவருக்கும் வயிற்றுப் பசியைப்போல, ஆன்மீகப் பசி என்பது ஏற்படவில்லையெனில், கொஞ்சிக்குலவி ஊட்டுவதாலோ, வலியத் திணிப்பதாலோ ஆன்மீகம் துளிர்க்காது! ஒருவர் கடலளவு ஆன்மீக நூல்களை வாசித்தாலும்; ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் இணைந்து அம்மார்க்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றினாலும், அங்குள்ள குருவிடமே தொடர்ந்து பல வருடங்கள் பாடம் கற்றாலும், கடுகளவு ஆன்மீகம் கூட செழிக்காது!
பலருக்கு ஆன்மீகத்திற்குரிய உளப்பாங்கு என்பது துளியும் கிடையாது! ஒருவகை திமிர்த்தனமான தன்னம்பிக்கை, அல்லது, மட்டுமீறிய நம்பிக்கை, மிதப்பு (வீண்பெருமிதம்)….. இத்யாதி, இத்யாதி எல்லாம் சேர்ந்த கலவையின் விளைவாக ஆன்மீகம் என்பது வெறும் பாவனைரீதியான ஒன்றாக விளங்குகிறது! இவர்களிடம், மெய்ம்மை மீதான நாட்டம் என்பது ஒரு மாபெரும் ஏக்கமாக உருப்பெறாமல், ஒருவகை ‘ஏத்தம்’தான் மேலோங்கி நிற்கிறது!
சுற்றுவழி வேண்டாம், நேர்வழியில் செல்லுங்கள்!
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், வேதாந்தம் என்பவையெல்லாம் என்ன? உபநிடதங்கள் என்பவை வேதத்தின் பகுதியா, அல்லது வேதாந்தத்தின் பகுதியா? ஒவ்வொரு உபநிடதமும் ஒரு வேதத்துக்கு உரியதா? உதாரணமாக, எந்த உபநிடதம் எந்த வேதத்தின் உபாங்கம், அதாவது, துணைப்பகுதி? சாந்தோக்ய உபநிடதம் சாமவேதத்தின் துணைப்பகுதியா, அல்லது ரிக் வேதத்தின் துணைப்பகுதியா? என்பனபோன்ற ஆராய்ச்சிகள், (நீங்கள் வெறும் ஒரு பண்டிதராக ஆக விரும்பவில்லை; மாறாக, ஆன்மீகம் தான் உங்களுடைய இலக்கு எனும் பட்சத்தில்) தேவையற்றவை!
இத்தகைய ஆராய்ச்சிகள் பெரும் கால விரயம் ஆகும். அவை உங்கள் கவனத்தை முடிவில்லாமல் சிதறடித்துக் கொண்டே செல்லும். ஏனெனில், உலகமெங்கும் எண்ணிலடங்கா ஆன்மீகத் தத்துவங்கள், கொள்கைகள் கோட்பாடுகள் உள்ளன; அவற்றையெல்லாம் வாசித்து முடிப்பதற்கே ஒரு வாழ்-காலம் போதாது! அதில், அவற்றைப் புரிந்துகொள்வது என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகும்! அதாவது ஒன்றை ஒன்று மறுக்கும் தத்துவங்களையும், கோட்பாடுகளையும்; ஒரு முரண்பாட்டை நீக்க முன்வைக்கப்பட்ட இன்னொரு முரண்பாட்டையும், இவ்வாறு சங்கிலித்தொடராக நீளும் தத்துவ விளக்கங்களின் அடர்ந்த கானகத்தில் நீங்கள் நிச்சயம் வழிதவறிக் காணாமல் போய்விடுவீர்கள்! இவ்வாறு சுற்றி வளைத்துச் செல்வதற்குப்பதிலாக நீங்களே நேரடியாக மெய்ம்மையைப் புரிந்துகொள்வது தான் உசிதமானதாகும்!
சமரசமற்ற ஆன்மீகவிசாரம்
இக்கட்டுரைக்கு தூய ஆன்மீகவிசாரம் என்று தலைப்பிட்டிருக்கலாம்; ஆனால், அது பிற வழக்கமான ஆன்மீக முறைகளை, மார்க்கங்களைப் புண்படுத்துவதாக அமையலாம் என்பதால், சமரசமற்ற ஆன்மீகவிசாரம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.அதாவது, இந்த விசார மார்க்கத்தில் உதட்டளவு உபசாரம் போன்ற யாதொரு (இறை) வழிபாடும், குறியீட்டு முக்கியத்துவம்கொண்ட எவ்வகைச் சடங்கும் கிடையாது! அடுத்து, எவ்வொரு மத, வைதீகத் தரப்புடனும் சமரசம் செய்துகொள்வதுமில்லை! முக்கியமாக, எவ்வொரு ஞானமரபுடனும் இதற்குத் தொடர்பில்லை. எவ்வொரு மரபையும் இது பின்பற்றுவதுமில்லை! அதைவிட முக்கியமாக, இம்மார்க்கம் வெகுசனத்தளத்துடனும், மேட்டுக்குடித்தளத்துடனும் (Elites) சமரசம் செய்துகொள்வதில்லை! இம்மார்க்கத்தில் ஞானமும், எதுவும் விற்கப்படுவதுமில்லை, வாங்கப்படுவதுமில்லை!
அடுத்து, உண்மையானது இந்திய ஞானமரபில் உள்ளது, மேற்கத்திய ஞானமரபில் உள்ளது; வேதாந்தத்தில் உள்ளது; விவிலியத்தில் உள்ளது என்கிற கூப்பாடுகளில் இம்மார்க்கத்துக்கு நம்பிக்கையில்லை! ஏனெனில், உண்மை, எங்கே எவரால் சொல்லப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் நேரே உணர்வதும், கண்டடைவதும் மட்டுமே உண்மை! அதே நேரத்தில், உண்மை எந்தத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் அதிலுள்ள உண்மையை அங்கீகரிக்கத் தவறுவதுமில்லை! அவசியமிருப்பின், எல்லா உண்மைகளும் இங்கே ஆய்வுக்கு உட்படுத்தப்படும்!
'எளிய மக்கள்', 'வெகுஜனம்', 'சாதாரண மக்கள்', 'சராசரி மனிதன்',... என்றெல்லாம் வகைப்பாடுகள் உள்ளன என்று நம்புவதும், அவற்றை அங்கீகரிப்பதும், ஊக்குவிப்பதும்தான் எல்லாவித மட்டுப்பாடுகளையும் வளர்க்கிறது! 'மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் வழிபாடு தேவையாக
இருக்கிறது' என்பது ஒரு ஏமாற்று வேலை! ஏனெனில், அன்றாட வாழ்க்கை என்று தனியே ஏதுமில்லை! இருப்பது ஒரு வாழ்க்கைதான்; அது என்னவென்று அறியப்படாமல் உள்ளது; அறிந்தது மட்டுமே வாழ்க்கை என்று செல்வதுதான் எல்லா மட்டுப்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைகிறது! எந்தஒரு ஞானமரபும், தத்துவமும், ஆன்மீகமும் எந்த ஒரு வைதீகத் தரப்புடனும், வெகுசனத்தளத்துடனும் சமரசம் செய்துகொண்டால்தான் நடைமுறைக்கு வரமுடியும் என்ற விதி ஏதுமில்லை! ஆன்மீகத்திற்கு தன்னை முழுமையாகத் திறக்கவும், தன்னை முழுமையாகக் கொடுக்கவும் முன்வரும் ஒவ்வொரு தனிமனிதனின் வழியாக மட்டுமே ஆன்மீகம் வாழ்கிறது, நடைமுறைக்கு வருகிறது!
உலகிலுள்ள ஆன்மீக நூல்கள் அனைத்தும் அழிந்துபோயின என்றாலும், விலங்குத் தனமான அடிப்படை வாழ்க்கையைக் கடந்து வாழ்க்கையைத் தரிசிக்க விழைகிற, சிந்திக்கும் ஒரு மனிதன் இருந்தாலும் அவனுள், அவன் வழியாக ஆன்மீகம் துளிர்க்கும், வாழும்! அத்தகைய ஒரு தனிமனிதனான நீங்கள் இருப்பின், “வாழ்த்துக்கள்”!
✦
குறிப்புகள்:
*விசாரமார்க்கம் (ஆன்மீக மையம்)
நெய்வேலி/அசோக் நகர்-2
தொடர்பு எண் : 94881 94381
‘ஏத்தம்’ : ‘ஏத்தம்’ என்பது ஏற்றம் = மேன்மை, என்பதன் பேச்சு வழக்கு
வடிவமாகும்; அதாவது, ‘ஏத்தம்’ என்பது இவ்விடத்தில் போலியான
மேன்மையுணர்வைக் குறிக்கும் ஒன்றாகும்.
மா.கணேசன்/ நெய்வேலி/ 03.05.2019 - 10.05.2019
***************************************************************************
No comments:
Post a Comment