முகமூடிகளைத்தூக்கி எறிவதற்காக நாம், பெரிதாக தியானம் போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். நமக்கு நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தாலே போதும். நமக்கு நாம் உண்மையாக இருக்கும்போது, நாம் பொறாமை கொள்ளவோ, பேராசைப்படவோ, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படவோ, பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ மாட்டோம்!
தெரிந்ததை தெரியும் எனவும், தெரியாததை தெரியாது எனவும் சொல்லும் துணிவு இருந்தால் போதும். எவ்வித பாசாங்கும், வேடம் போடுவதும் நமக்குத் தேவைப்படாது! எதிலும் அகலக் கால் வைப்பது ஆகாது. பணம், செல்வம், பொருள், சொத்து எல்லாவற்றையும் விட முக்கியமானது, இழப்பதற்கு அஞ்ச வேண்டியது "நிம்மதி" மட்டுமே! நிம்மதியை காசு,பணத்திற்கு வாங்க முடியாது, கடனாகவும் பெற முடியாது, ஏனெனில், அது நமது இயல்பில் உள்ளமைந்திருக்கும், நம் முகம் போன்ற ஒன்று! நமது முகத்தை இழந்து முகமூடியை அணிந்தோமெனில், நம் நிம்மதியை இழப்பது உறுதி!
எல்லோரும் முன்னே சென்றுவிட்டார்கள்; நாம் பின் தங்கி விட்டதாக எண்ணுவது பக்குவமின்மையைக் காட்டும். நாம் பின் தங்கினாலும், நம் வயது பின் தங்காமல் முன் செல்லும்! நோய், மூப்பு அடுத்தது என்ன? நாம் தனித்து விடப்பட்டதாக உணர்வது நல்லதற்குத்தான்; நாம் தனிமையில் இருக்கும்போதுதான், நம்மை நாமே சந்திக்கும் வாய்ப்பு அமையும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்! நம்மை நாம் சந்திக்காமல், நேரே எதிர்கொள்ளாமல், "நாம் நாமாக", அசலாக ஒருபோதும் இருக்க முடியாது!
இவை அறிவுரைகள் அல்ல! நம்மை நாம் அசலாகக் காண்பதற்கு உதவும் கண்ணாடி! நன்றி!
-- மா.கணேசன்/ 04-01-2026/நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

No comments:
Post a Comment