Friday, 6 March 2026

எல்லாமும் ஒன்றுமில்லாததும் (Everything and Nothing)

 

















"ஏன் இங்கே ஒன்றுமில்லாததற்குப் பதிலாக ஒரு பேரண்டமே இருக்கிறது?" என்பது குறித்து தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும் பல நூற்றாண்டுகளாக தங்கள் மண்டையை உடைத்துக்கொண்டு வந்துள்ளனர்! ஆனால், இன்றுவரையிலும் தெளிவான எந்த பதிலும் கிடைத்தபாடில்லை! 

சில கேள்விகளை தெளிவாக மனதிற்குள் உருவாக்கி, அக்கேள்வியை மனதில் இருத்தி அதற்கான பதிலை சிந்தித்து கண்டுபிடிக்க முயல்வது பெரும் சிரமமானது என்பது கனமாகச் சிந்தித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆம், கேள்விகளை சரியாகவும், தெளிவாகவும் உருவாக்கக்கூடியவர்களும், அக்கேள்வியை நெடு நேரம் தங்கள் மனதிற்குள் நிறுத்தி, சிந்திக்கக்கூடியவர்களும் தான் சிந்தனையாளர்களாகவும், தத்துவ ஞானிகளாவும் ஆகிறார்கள். 'சும்மா' சிந்திக்கிறவர்கள் எல்லாம் அவ்வாறு ஆவதில்லை!     

சில சமயங்களில், "ஒன்றுமே இல்லாதிருந்தால், அதாவது, நானும் இல்லாதிருந்தால் அந்நிலை எப்படியிருக்கும்?" என்று சிந்தித்து, ஒரு கணம் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடுமோ? என்கிற அளவிற்கு மனம் பேதலித்தாற்போல் உணர்வது, அதிர்ச்சியில், அதிலிருந்து உடனடியாக விடுபடுவதுமாக அவ்வப்போது நிகழ்வதுண்டு. சில சமயம்களில் மனம் ஒரு கணம் காலியாக, வெறுமையானது போல் இருப்பதுபோன்ற அனுபவங்களும் தேவைதான் என்று நான் கருதுகிறேன்.  

ஏற்கனவே, 2016-ம் ஆண்டில், "கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" எனும் தலைப்பில் மரணம் பற்றிய எனது ஆய்வுச் சிந்தனைகளின் தொகுப்பை எழுதிக்கொண்டிருந்த போது, கீழே காணும் வரிகளை எழுதியிருந்தேன். 

இருப்பில் இன்மையையும்
இன்மையில் இருப்பையும்
காண்பது முழு-புரிதல்!


அதாவது, இருப்பது, இல்லாமல் போவது; வாழ்வது, மரணிப்பது குறித்து ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்த போது, சட்டென ஒரு கணம் நானும், இந்த உலகம் மொத்தமும் ஒன்றுமில்லாததைப் போன்ற, ஒரு சூன்ய உணர்வைப் பெற்றேன். இந்த அனுபவத்திலிருந்துதான் மேலே காணும் வரிகளை எழுதினேன். 

இந்த பிரபஞ்சத்தின் உள்ளே [அனைத்துப் பொருட்களுக்கும், விடயங்களுக்கும் நடுவே] இருந்து கொண்டு, "ஆ, அனைத்தும் ஒன்றுமில்லாதது" என்று உணர்வது எதிர்மறையானதா, நேர்மறையானதா? என்றால், என்ன சொல்வது?  இரண்டும் தான் என்றும் சொல்லலாம்; அதனால்தான் என்னவோ, "இருப்பில் இன்மையையும் இன்மையில் இருப்பையும் காண்பது முழு-புரிதல்!" என்பதாக எழுதியுள்ளேன்!

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஃபிராங்க் வில்செக் (Frank Wilczek) அவர்கள், "வெறுமை(சூன்யம்) என்பது நிலையற்றது" என்பதாகக்கூறினார். ஆகவேதான் சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்றார். குவாண்டம் இயற்பியல் மற்றும் அண்டவியல் சூழலில், "எதுவும் இல்லை" என்பதற்குப் பதிலாக "ஏதோ" ஏன் இருக்கிறது என்பதை விளக்க வில்செக் இந்த சொற்றொடரைப் பயன்படுத்தினார். இந்தக் கண்ணோட்டத்தின்படி, முழுமையான "எதுவும் இல்லை" (எந்தப் பொருளோ அல்லது ஆற்றலோ இல்லாத ஒரு வெற்றிடம்) என்பது உண்மையில் ஒரு நிலையற்ற நிலையாகும், இது தன்னிச்சையாக துகள்கள் மற்றும் ஆற்றலை உருவாக்க ஏற்ற இறக்கமாக அதிர்ந்து, இறுதியில் பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பதாக சொல்லப்பட்டது. 

சாக்ரடீஸுக்கு முந்தைய தத்துவஞானி ஹெராக்ளிடஸ் "எல்லாம் 'ஃப்ளக்ஸ்'; எதுவும் அசையாமல் இருப்பதில்லை" என்று பிரபலமாக வாதிட்டார். பிரபஞ்சம் நிலையான மாற்ற நிலையில் இருப்பதாகவும், நிலைத்தன்மை ஒரு மாயை என்றும் அவர் நம்பினார். இதற்கு அவரது மிகவும் பிரபலமான உருவகம் "எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை கால் வைப்பதில்லை", ஏனெனில் தண்ணீரும் மனிதனும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

புத்தர் அனிச்சா (நிலையற்ற தன்மை) கோட்பாட்டைப் போதித்து, நிபந்தனைக்குட்பட்ட உலகில் எதுவும் நிலையானது அல்லது நிரந்தரமானது அல்ல என்று வலியுறுத்தினார். எல்லாம் தோன்றி மறைந்து போகும் உலகில் நாம் நிரந்தரத்தைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதால், துக்கம் (துன்பம்) "நிம்மதியாக இல்லை" அல்லது "நிலையற்றது" என்று அவர் அடையாளம் காட்டினார். பின்னர், தத்துவஞானி நாகார்ஜுனா இதை சூன்யதா (வெறுமை) என்ற கருத்துடன் விரிவுபடுத்தினார், அனைத்து நிகழ்வுகளும் மாறிவரும் நிலைமைகளைச் சார்ந்து இருப்பதால் அவை "நிலையான" அல்லது "நிலையான" உள்ளார்ந்த தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்று வாதிட்டார்.

ஜீன்-பால் சார்த்தர் தனது "இருப்பதும் ஒன்றுமில்லாததும்" (Being and Nothing) என்ற தலைப்பில், மனித உணர்வு (Consciousness) [அதை அவர் "ஒன்றுமில்லாதது" என்று அழைக்கிறார்] எவ்வாறு இயல்பாகவே நிலையற்றது என்பதை ஆராய்ந்தார். அவர் நனவை "நிரந்தரமாக உடைந்த சமநிலை" என்று விவரிக்கிறார், ஏனெனில் அது எப்போதும் ஒரு எதிர்காலத்தை நோக்கி தன்னைத்தானே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறது, மேலும் ஒரு பொருளைப் போல ஒரு நிலையான, நிலையான "பொருளாக" ஒருபோதும் இருக்க முடியாது என்றார்.

மாயா வாதம் (Mayavada)என்பது இந்திய தத்துவத்தில், குறிப்பாக அத்வைத வேதாந்தத்தில், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் தன்மையை விளக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாடு ஆகும். கண்ணுக்குத் தெரியும் இந்த உலகம் உண்மையானது அல்ல; இது ஒரு தற்காலிகமான தோற்றம் அல்லது 'மாயை' (Illusion) ஆகும். "பிரம்மம் ஒன்றே சத்தியம், உலகம் மித்யா (பொய்)" என்பது இதன் அடிப்படை. நிலையான, மாறாத ஒன்றே (பிரம்மம்) உண்மையானது; மாறுதலுக்கு உட்படும் இந்த உலகம் உண்மையல்ல என்று இது கூறுகிறது.

இவ்வாறு, ஒன்றுமில்லாததற்கு ஒவ்வொரு தத்துவமும், பார்வையும் இவ்வளவு வெவ்வேறான விளக்கத்தை அளிக்கின்றன. ஆனால், ஒன்றுமில்லாததற்கும், நிரந்தரமற்ற தன்மைக்கும், மாறிக்கொண்டேயிருக்கும் தன்மைக்கும், 'மாயை' எனும் பொய்த்தோற்றத்திற்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு  தத்துவமும், பார்வையும் ஒவ்வொரு விதத்தில் உலக மெய்ம்மையைப் பற்றிச் சொல்கின்றன. ஆனால், 'சூன்யம்' அல்லது ஒன்றுமில்லாததன் சாரத்தை அவை தொட்டனவா? 

பௌத்தமானது, சூன்யம் என்பது "இல்லாமை" அல்ல, அது "முடிவற்ற சாத்தியம்" எனும் இக்கருத்து கிட்டத்தட்ட நவீன பௌதீகத்தின் கண்ணோட்டத்தின்படி, முழுமையான "எதுவும் இல்லை" (Nothing)  (எந்தப் பொருளோ அல்லது ஆற்றலோ இல்லாத ஒரு வெற்றிடம்) என்கிற நிலை உண்மையில் இல்லை எனும் கருத்துடன் ஒத்துப்போவதாக உள்ளது. மேலும், அந்த ஒன்றுமில்லாத நிலையை, நவீன பௌதீகமானது 'குவாண்டம் வெற்றிடம்' (Quantum Void) என்று அழைக்கின்றது, அதிலிருந்து, அடிப்படைத்துகள்கள் உருவாகி வெளிப்படுவதாகக் கூறுகின்றது.

மேலும், சூன்யம் என்பது "இல்லாமை" அல்ல, அது "முடிவற்ற சாத்தியம்" எனும் பௌத்தப் பார்வையானது, குறிப்பாக "முடிவற்ற சாத்தியம்" என்பது, மூல மெய்ம்மையான "பேருணர்வு" பற்றிய எனது கருத்துடன், அதாவது "பேருணர்வு என்பது சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை  (Super Consciousness is a State of Infinite Possibilities)" என்பதுடன் ஒத்துப்போகின்றது. மேலும், "முடிவற்ற சாத்தியம்"  எனும் கருத்து அத்வைத வேதாந்தம் கூறுகின்ற "பிரம்மம்" என்பதுடன் பொருந்திப்போகிறது எனலாம். "பிரம்மம் ஒன்றே சத்தியம், உலகம் மித்யா (பொய்)" இதையே, கீழ்க்காணும் சூத்திரத்தின் வழியாக இன்னும் விளக்கமாகக் காணலாம்.

பிரம்மம் உண்மையானது
உலகம் ஒரு மாயை
பிரம்மமே உலகம்


இந்த தொடர் கூற்றுகள் அத்வைத வேதாந்தத்தில் ரமண மகரிஷி போன்ற ஞானியர்களால் சுருக்கமாகக் கற்பிக்கப்பட்டு, புரிதலின் மூன்று கட்டப் பரிணாம வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
முரண்பாடாகத் தோன்றும் இந்த கூற்றுகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பது இங்கே:
பிரம்மம் உண்மையானது : இது "உண்மையானது" என்பதை நித்தியமானது, மாறாதது மற்றும் எப்போதும் இருப்பது என்று வரையறுக்கிறது. பிரபஞ்சத்திற்கு முன்பும், அதன் போதும், அதன் பின்னரும் இருப்பதால் முழுமையான உணர்வு (பிரம்மம்) மட்டுமே இந்த வரையறைக்கு பொருந்துகிறது.
உலகம் மாயை : மித்யா (பெரும்பாலும் மாயை என்று மொழிபெயர்க்கப்படுகிறது) என்ற வார்த்தையின் அர்த்தம் "உண்மையோ பொய்யோ அல்ல". உலகம் "உண்மையற்றது" ஏனெனில் அது தொடர்ந்து பாய்கிறது மற்றும் சுயாதீனமான இருப்பு இல்லை. ஒரு கனவு அல்லது ஒரு கானல் நீராக, அது இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அதன் சொந்த நிரந்தர பொருள் இல்லை.
பிரம்மமே உலகம் : இந்த மூன்றாவது நிலை முதல் இரண்டையும் விளக்குகிறது. ஒரு களிமண் பானை களிமண்ணைத் தவிர வேறில்லை, அல்லது ஒரு அலை கடலைத் தவிர வேறில்லை, உலகம் பிரம்மத்திலிருந்து "தனி" அல்ல. "மாயை" என்பது உலகம் இல்லை என்பதல்ல, ஆனால் அது அடிப்படை யதார்த்தத்திலிருந்து சுயாதீனமாக அல்லது தனியே இல்லை என்பதாகும்.
மூன்றும் ஏன் சொல்லப்படுகின்றன?
தேடுபவருக்கு: சுயத்தை/பிரம்மத்தைக் கண்டுபிடிக்க முதலில் உலகத்தை (நேதி-நேதி) மறுக்க வேண்டும்.
உணர்ந்தவருக்கு: சுயம் அறியப்பட்டவுடன், உலகம் இனி ஒரு தனி "கவனச்சிதறலாக" பார்க்கப்படுவதில்லை, மாறாக பிரம்மத்தின் நேரடி வெளிப்பாடு அல்லது தோற்றமாகவே பார்க்கப்படுகிறது.
சுருக்கமாக: "உலகம்" என்று காணப்படும் உலகம் ஒரு மாயை; "பிரம்மம்" என்று காணப்படும் உலகம் உண்மையானது.

"வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" (Form is emptiness, emptiness is form), இது, 2-ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி நாகார்ஜுனாவால் உருவாக்கப்பட்ட கோட்பாடு ஆகும். 
இவ்வாறு, இணையான பல்வேறு பார்வைகளையும், தத்துவனங்களையும் நாம் மேற்கோள் காட்டிக்கொண்டே போகலாம். ஆனால், இவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்வது முக்கியம். மேலே கடைசியாக குறிப்பிடப்பட்ட வாசகத்தைப் பார்ப்போம். அதாவது, "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் வடிவம் கொண்ட இந்த உலகத்தில் இருந்து கொண்டு, அதன் அடிப்படையை, உண்மையைப் பற்றி விசாரிக்கிறோம். அந்த விசாரத்தின் முடிவில், "வடிவம் என்பது உண்மையில் சூன்யம்" என்ற நிலையை வந்தடைகிறோம். சூன்யம் என்பது, ஒன்றுமில்லாத நிலையல்ல, மாறாக, அதை குவாண்டம் பௌதீகவியலின்படி "குவாண்டம் வெற்றிடம்" அல்லது, "குவாண்டம் புலம்" எனக் கொள்ளலாம். அந்த குவாண்டம் புலத்திலிருந்து (பொருளல்லாத நிலையிலிருந்து) அணுத்துகள்கள் உருவாகின்றன, அணுத்துகள்களின் பெரும் தொகுதி தான் இந்தப் பிரபஞ்சமும், அதில், நாமும், பல்வேறு உயிரினங்களும். 

அதாவது, சூன்யம், வெற்றிடம், குவாண்டம் புலம், என்பது பொருண்மையான அம்சங்கள் அல்ல. அவை பொருண்மை கடந்த அம்சங்கள் (Non-Physical) அல்லது நிலைகள் ஆகும். மேலும், 'உயிர்', 'மனம்', 'உணர்வு' ஆகியவையும் பொருண்மை கடந்த அம்சங்கள் அல்லது பரிமாணங்களே ஆகும். ஆகவே, அவற்றை சூன்யம், வெற்றிடம், குவாண்டம் புலம் எனக் கொள்ளலாம். மேலும், இவை யாவற்றுக்கும்,  "உணர்வு" (Consciousness)தான் அடிப்படையாகும்! ஆக, வடிவம் கொண்ட உலகத்தின் மூலம், அடிப்படை, உணர்வே ஆகும். ஆனால், மனிதனின் உணர்வு என்பது சிற்றுணர்வாகையால், அதிலிருந்து வேறுபடுத்திக் காணும் வகையில், யாவற்றுக்கும் அடிப்படையான மூல நிஜத்தை நாம் "பேருணர்வு" என்றழைப்பதே பொருத்தமாயிருக்கும். 

ஆக, தத்துவஞானி நாகார்ஜுனாவின் வாசகமான  "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம்" என்பதை, வடிவம் என்பது உண்மையில் சூன்யம்தான். அதாவது, சூன்யத்திலிருந்து தான் வடிவம் (வடிவம் கொண்ட உலகம்) தோன்றியது என்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்! இதை விடுத்து,  "வடிவம் என்பது சூன்யம், சூன்யம் என்பது வடிவம், ஆகவே, வடிவம் என்பது சூன்யம், அதாவது சூன்யம் என்பது வடிவம்" என வட்டமடித்துக் கொண்டே போனால், அர்த்தம் மிஞ்சாது, குழப்பம்தான் மிஞ்சும்!  

மேலும், நமது புரிதல், அறிவு, ஞானம் ஆகியவற்றை உணர்வின் வழியாகத்தான் பெறுகிறோம். நமது உடல் பருப்பொருளால் (அணுத்துகள்களால்) ஆனதாயிருக்கலாம். ஆனால், நமது உயிரும், மனமும், உணர்வும், புரிதலும், அறிவும், ஞானமும் பருப்பொருளால் ஆனதல்ல! இதைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம்!

முடிவுரையாக, நாம் மீண்டும் இப்பதிவின் தலைப்புக்கு வருவோம். "எல்லாமும் ஒன்றுமில்லாததும் (Everything and Nothing )" என்பதுதான் தலைப்பு. ஏற்கனவே நாம், குவாண்டம் பௌதீகவியலின்படி, சூன்யத்திலிருந்து தான் இப்பிரபஞ்சம் தோன்றியது எனக் கண்டோம். ஆனால், 'சூன்யம்' என்பது ஒன்றுமில்லாத வெற்றிடம் அல்ல எனவும் கண்டோம்.  'சூன்யம்' என்பது ஒன்றுமில்லாததைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டிருக்கிறதே தவிர, அது அளப்பரிய ஒரு உள்ளுறையாற்றல் செறிந்த நிலை (Pleroma) ஆகும். ஆகவே, அந்நிலையை, இனி நாம் 'சூன்யம்' என்றழைப்பதற்குப் பதிலாக, 'பூரணம்' என்றழைப்பதுதான் பொருத்தமாயிருக்கும். ஏனென்றால், 'பூரணம்' என்பது எல்லாற்றையும் உள்ளடக்கிய முழுமையைக் குறிக்கின்றது. அதாவது, சூன்யம், வெற்றிடம், ஒன்றுமில்லாதது என்பவற்றையும் அது உள்ளடக்கியது. அது பௌதீகப் பொருளை உருவாக்கக்கூடியது, ஆனால், அது பௌதீகத் தன்மையைக் கடந்தது. 

ஆம், பூரணம், பூரணத்துவம் என்பது ஒருமையும், முழுமையுமான பேருணர்வு ஆகும். இப்பேருணர்வு நிலையை ஒரு கணமேனும் நம்முள் உணர்வது தான் நமது பிறவிப் பயன், முக்தி, மோட்சம், வீடுபேறு, ஞானம் இறுதி மெய்ம்மை, யாவும்! இவ்வாறு உணர்வதுதான் இறுதிப் புரிதல்! ஆனால், புரிதல் என்பது கருப்பும் இல்லை, வெள்ளையும் இல்லை. அது திடமாகவும் இல்லை, திரவமாகவும், இல்லை, புகை போலவும் இல்லை! அதே நேரத்தில், அப்புரிதல், முடிவில்லா நிறைவையும், பேரானந்தத்தையும் தருவதாயுள்ளது!  

மா.கணேசன்/ 25-02-2026, அசோக் நகர், நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><> 


No comments:

Post a Comment

எல்லாமும் ஒன்றுமில்லாததும் (Everything and Nothing)

  "ஏன் இங்கே ஒன்றுமில்லாததற்குப் பதிலாக ஒரு பேரண்டமே இருக்கிறது?" என்பது குறித்து தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும் பல நூற்றாண்டுகளாக...