Friday, 3 June 2016

எப்போது நீங்கள் வாழத் தொடங்கப்போகிறீர்கள்?



உங்களைப்பற்றியும், உங்கள் வாழ்க்கையைப்
பற்றியும் நல்லவிதமாகவும்,நேர்மறையாகவும்
சொல்லவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்!
ஆம், விழித்துக்கொள்ளுங்கள்!
வாழ்க்கையைக் கண்டுபிடியுங்கள்!
அது, இந்தப்பிரபஞ்சத்தையே புரட்டிப்போடும்!
புத்துருவாக்கம் செய்திடும்!
நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியில் இருப்பீர்கள்!

     <>

ஆனால், நீங்கள் வாழ்க்கையை இன்னும்
கண்டுபிடிக்கவேயில்லை, ஆகவே,

நீங்கள் வாழ்ந்து வருகின்ற வாழ்க்கை
எத்தகையது என்பதை அதிகச்சிரமமின்றி
தெரிந்து கொள்ளுங்கள்:

நீங்கள் எவ்வளவுதான் விழுந்து புரண்டு
காரியமாற்றினாலும்,எவ்வளவு
சம்பாதித்தாலும், சொத்துக்களைச்
சேர்த்தாலும், சுகபோகத்தில் மிதந்தாலும்,
சாதனைகள் பல புரிந்தாலும், எட்டுத்திக்கும்
புகழ் பரப்பினாலும் உங்களது வாழ்க்கை
வெறும் உயிர்பிழைத்தலே! அல்லது
அதிகப்பட்சம், உயிர்-பிழைத்தலின் மிகப்
பிறழ்ச்சியானதொரு அலங்கரிக்கப்பட்ட
வடிவமே!

     <>

வேற்றுக்கிரகவாசிகளின் ஒரு ஆய்வறிக்கை:

!?@#$()*)(^^)_*_*$%&#@#?!$@@#!?))((
(*)*%^#&&%^**!@#)(*__*&^$%#&^*#$@^&
$%$&&*)(_+_))(((_(*&^%$#@!&*&>>!!!?

மொழியாக்கம்:
பூமிக்கிரக  வாசிகள்     தங்களது   உளவியலில்
மிகவும்   பின் தங்கியவர்களாகவே   உள்ளனர்!
அவர்களுடைய தலையாய பிரச்சினை தலைப்
'பொடுகு' தான்என்பதாகத் தெரிகிறது! மேலும்
அவர்கள்  எந்த   நிறுவனத்தின்  பற்பசையைப்
பயன் படுத்துவது  என்பது    குறித்து    பெரிதும்
குழப்பமுற்றிருக்கிறார்கள்!           மொத்தத்தில்,
அவர்கள்     என்னத்தை    உண்பது,     உடுப்பது,
குடிப்பது   என்கிற    கவலையில்   சதா ஆழ்ந்து
கிடப்பதாகத்தெரிகிறது!
அவர்களது     விஞ்ஞானப்   பாடப்   புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ளதற்கு   மாறாக,               அவர்கள்
வாலில்லாக்   குரங்கை      ஒத்த     உருவத்தைக்
கொண்டிருந்தாலும்,      அவர்கள்       என்னவோ
எலியிலிருந்து       வந்தவர்களாகத்தான்    தெரி
கிறார்கள்!அவர்களுடைய வாழ்க்கை விரிவாக்
கப்பட்டதும்,     பெருமைப் படுத்தப்பட்டதுமான
தொரு   எலியின்   வாழ்க்கையாகவே    உள்ளது
எனலாம்!
அவர்களுடைய   கல்விமுறை    அவர்களுடைய
வாழ்க்கைக்குச்  சிறிதும்   தொடர்பில்லாததாக
அறிவுத்தேடலைவிட     பிழைப்புத்  தேடலையே
இலக்காகக் கொண்டுள்ளது!
அவர்களுடைய     சமுதாய   அமைப்பு    பலவித
அர்த்தமற்றபேதங்களையும்,பிரிவினைகளயும்
ஏற்றத் தாழ்வு களையும்    கொண்டதாயுள்ளது!
அவர்களுடைய   அரசியல்முறையை,  அவர்கள்
'மக்களாட்சி'   என்று   குறிப்பிட்டாலும்,  மிகவும்
அபத்தமானவகையில், மக்களில்மிகவும் மோச
மானவர்களே மக்களை ஆள்பவர்களாக தேர்வு
செய்யப்படுகிறார்கள்!
விஞ்ஞானத்  தொழில் நுட்பத்தில்,      அவர்களது
தரத்திற்கும்  மேலாகவே   வளர்ச்சி   காணப்படு
கிறது!   ஆனால்,   அவை யாவும் அவர்களுடைய
மேலோட்டமான அன்றாடத்திற்குச்சேவை செய்
வதாகவே அமைந்துள்ளது!
ஆன்மீக  வளர்ச்சியைப்பொறுத்தவரை,   கோடி
யில்  ஓரிருவர் மட்டுமே    உச்சமடைந்துள்ளனர்!
மொத்தத்தில்,      மனிதர்கள்         மனிதர்களாக
இல்லை     என்பதே      இந்த ஆய்வின்   முடிவாக
உள்ளது!

     <>

"எப்போது நீங்கள் வாழத்தொடங்கப்போகிறீர்?"
என்ற இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு படு
அபத்தமாக ஒலிக்கலாம்!
"நாம் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம்!"
என  நாம் வியக்கலாம்!
ஆனால், எப்படிப்பார்த்தாலும் நாம் இன்னும்
வாழத்தொடங்கவில்லை என்பது தான் உண்மை!

நாம் ஒரு உயிருள்ள எந்திரம் போல இயங்குகிறோம்!
நமது இயக்கம் எதைக் குறிக்கோளாக இலக்காகக்
கொண்டிருக்கிறது என்பது குறித்து நாம் கேள்வி
எழுப்பியதே இல்லை!

எரிபொருள் இன்றி எந்த எந்திரமும் இயங்காது,
நாமும் அப்படித்தான்!
உணவின்றி நாம் இயங்கமுடியாது!
ஆனால், எவ்வொரு எந்திரத்தையும் ஒரு குறிப்பிட்ட
பணியைச் செய்யும் வகையில் தான் நாம்
அமைத்துள்ளோம்;
ஒரு சிறு கைக்கடிகாரம் தான் என்றாலும்
அது எதற்காக இயங்குகிறது என்பது அதற்குத்
தெரியாவிட்டாலும்;
நேரத்தைக்காட்டுவதற்குத்தான் அதிலுள்ள
முட்கள் சுற்றிவருகின்றன!

ஆனால், நாம்   எதற்காக இயங்குகிறோம்?
வேளாவேளைக்கு தவறாமல் எரிபொருளை
(உணவை) நம்முள் நிரப்புகிறோம்!
இயங்கவும் செய்கிறோம்!

ஆனால், நமது இயக்கம் எதைக் குறிக்கோளாக
இலக்காகக் கொண்டிருக்கிறது?
அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த இலக்கு
வேறெதுவுமல்ல, நமக்கான எரிபொருள் தான்
ஆம், 'உணவு' தான் நம்முடைய ஒரே குறிக்கோள்
ஒரே இலக்கு, ஒரே இலட்சியம்!

எல்லா எந்திரங்களையும், கருவிகளையும்
சாதனங்களையும் இயக்கி, பயன்படுத்தி, நாம்
நமது உணவைப் பெறுவதற்காக, உணவை
உற்பத்தி செய்வதற்காக, உணவைத்
தயாரிப்பதற்காக மட்டுமே இயங்குகிறோம்,
உழைக்கிறோம், வாழ்கிறோம்!

எப்போதாவது நாம் அந்தப் 'பேருண்மை'யைச்
சொல்லத்தான் செய்கிறோம்:
"எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தான்!"
ஆனால், இது எவ்வளவு அபத்தமானது என்பதை
நாம் ஒருபோதும் உணர்வதேயில்லை!

நாம் உண்கிறோம்! உண்ட பிறகு உழைக்கிறோம்!
'உழைக்கிறோம்' என்பதன் அர்த்தம் என்ன?
எதைப் பலனாகப்பெற  உழைக்கிறோம்?
உணவைப்பெறுவதற்காக, உண்பதற்காக
உழைக்கிறோம்!

எதற்காக உண்கிறோம்? உயிர்வாழ்வதற்காக!
எதற்காக உயிர்வாழ்கிறோம்?
இது என்ன கேள்வி,  உயிர்வாழ்வதற்காக
உயிர்வாழ்கிறோம்!

ஆம், அர்த்தமின்றி, குறிக்கோளின்றி, இலக்கின்றி
ஏன், எதற்கு என்ற கேள்வியின்றி, ஆகவே பதிலின்
தேவையின்றி,  உயிர்வாழ்வதற்காக உயிர்வாழ்
கிறோம்!

'உயிர்வாழ்தல்' என்பது எத்தகைய செயல்பாடு?
ஆம், 'உண்பது' என்பதையே செயலாகவும்,
இலக்காகவும் கொண்டு, உணவைப்பெறுவதற்காக
உழைப்பது என்பதை உள்ளடக்கிய ஒரு விபரீத
வட்டத்தில் சிக்கிய ஒரு அடிமைத்தொழில் ஆகும்!

     <>

ஆச்சரியம் ஆனால் உண்மை!
ஆம், உயிர்வாழ்தல் என்பது ஒரு அடிமைத்
தொழில்அல்லது ஒரு அடிமைப்பிழைப்பு!
அப்படி நாம் யாருக்கு அல்லது எதற்கு
அடிமையாக இருக்கிறோம்?
'உடலுக்குத்தான்' என்று சொன்னால்
உங்களால் நம்பமுடியுமா?
நீங்கள் எதுவொன்றையும் புரிந்து
கொள்ளும் பொருட்டு உண்மையிலேயே
சிந்தித்திருந்தால், நீங்களே இந்த
உண்மையைக் கண்டுபிடித்திருப்பீர்கள்!
ஆனால், நீங்களோ உங்களுடைய உடலுடன்
உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு
ஐக்கியமாகி விட்டதால், உங்களால் உடல்,
உடல்நலம், உடலின் தேவைகள், உடலின்
சௌகரியங்கள் ஆகியவைகளைத்தாண்டி
வேறெதைப்பற்றியும் உங்களால் சிந்திக்க
முடியாதிருக்கிறீர்கள்!
ஆம், உயிர்வாழ்தல் என்பது உடலின்
வாழ்க்கையே ஆகும்.
ஆம், உடலின் நலன்களை,தேவைகளை
சிரமேற்கொண்டு அவைகளை நிறைவேற்றுவதே
உங்களுடைய தலையாய கடமையாகவும்
ஒட்டுமொத்த வாழ்க்கையாகவும் உள்ளது!
ஆம், உடல் உங்கள் எஜமான், நீங்கள்
அதன் அடிமை!

     <>

ஆம், 'உயிர்வாழ்தல்' என்பது
அனைத்து  உயிரினங்களின் மீதும்
திணிக்கப்பட்டதாக  உள்ளது!

உயிர்வாழ்தல் என்பது ஒரு வரமா?
அல்லது சாபமா? உண்மையில்
மனிதஜீவிகள் உள்பட அனைத்து
ஜீவிகளும் உயிர்வாழும்படி
சபிக்கப்பட்டுள்ளோம் என்பதாகவே
தோன்றுகிறது!

உயிர்வாழ்தல் என்பது
கட்டாயமாக்கப்பட்ட கடமையாகவே
உள்ளது! அதைத் தவிர்க்க முடியாது!
என்றாலும் ஒருசில மனிதர்கள்  தற்கொலை
செய்து கொள்கிறார்கள் ஆனால், அது
தீர்வு அல்ல!

நம்முடைய விருப்பம் பற்றிக்
கேட்காமலேயே வாழ்க்கைக்குள்
தள்ளப்பட்டுள்ளோம் என்பது
அடிமைப்பிழைப்பு அல்லாமல்
வேறென்ன?

தெரிவுகளில்லா நிர்ப்பந்தம்
எவ்வாறு வரமாகும்?
உயிர்வாழ்தலுக்காக உயிர்வாழ்தல்
என்ற கட்டாய உழைப்பு முகாமுக்குப்
பெயர் 'வாழ்க்கை'யா?

அப்படியானால், 'மரணம்' என்பது
அம்முகாமிலிருந்து விடுவிப்பா?
முதலில் உயிரைக் கொடுப்பது,  சில காலம்
கழித்து உயிரை எடுப்பது என்பது
என்ன வகை விளையாட்டு?

இந்த விபரீத விளையாட்டில் வெற்றிபெறுவது
யார்? தோல்வியடைவது யார்?
இது அர்த்தமுள்ளதா? அபத்தமானதா?
இதிலிருந்து விடுபட வழியேதும் உள்ளதா?

(இக்)கேள்விகளும், அவற்றைத்தொடரும்
தீவிர விசாரமும் தான் விடுதலைக்கான
வழியாகும்!

     <>

'வாழ்க்கை என்றால் என்ன?' 'வாழ்க்கையின்
குறிக்கோள், இலக்கு, அர்த்தம், உண்மை என்ன?'
எனும் இக்கேள்விகளுடன் தொடரும் தீவிர
விசாரத்துடன் மட்டுமே அசலான மனித வாழ்க்கை
தொடங்குகிறது! அதற்கு முன் ஒருபோதும் இல்லை!

உணவை மையமாகக் கொண்ட உயிர்வாழ்தல்
என்பது உடலை மையமாகக் கொண்டது;
உடலுக்கு அடிமை ஊழியம் செய்வது ஆகும்!

உண்மையை அல்லது அர்த்தத்தை மையமாகக்
கொண்ட உண்மையான வாழ்தல் என்பது
உள்ளத்தை, மனித உணர்வை மையமாகக்
கொண்டது; ஏனெனில், மனிதன் என்பவன்
உடலல்ல, உணர்வே ஆவான்!

உண்மையை இலக்காகக்கொண்ட உண்மையான
வாழ்தல் மட்டுமே உயிர்வாழ்தலை அர்த்தப்
படுத்துவதோடு மனிதனை முழுமைப்படுத்தி
விடுதலைப்படுத்துவதுமாகும்!

      <>

ஆகாயத்தில் பறக்க வேண்டுமானால்
பூமியை விட்டுவிடத்தான்
வேண்டும்!

ஆன்மீகத்தில் சிறக்க வேண்டுமானால்
அன்றாடத்தை விட்டு (அவ்வப்போது)
அகன்றிடத்தான் வேண்டும்!

அதி உயரத்தில் பறக்கும் பருந்தும் கூட
மீண்டும் பூமிக்குத்திரும்பிடத்தான்
வேண்டும்!

ஏனெனில், எந்தப் பறவையும் அந்தரத்தில்
கூடு கட்டிக்கொண்டு வாழ முடியாது!

ஆனால், பருந்திடமிருந்து முற்றிலும்
வேறானவன் மனிதன்; அவனால் ஆன்மீக
ஆகாயத்தில் கூடு கட்டி வாழ  முடியும்!
அதுதான் அவனுடைய வாழ்வின் சிறப்பும்
இலக்கும்கூட!

அதே நேரத்தில், மனிதனும் அவ்வப்போது
பூமிக்குத் திரும்பிடத்தான் வேண்டும்!
ஏனெனில், அவனது உடல் எனும் பிறந்த கூடு
எப்போதும் இங்கே தரையில் தான்
உள்ளது!

மனிதனால் ஒரே நேரத்தில் முரண்பாடு
ஏதுமின்றி இரண்டு கூடுகளிலும் வாழ
முடியும்!

முரண்பாடு எப்போது எழுகிறதென்றால்
உணர்வின் ஆன்மீக வாழ்க்கைக்கு
உயராமல் உடலின் வாழ்க்கையிலேயே
உழன்று கொண்டிருக்கும் போதுதான்!

ஆன்மீக வெளி மனிதனின் அகத்தேயே
உள்ளதால், நினைத்த மாத்திரத்தில் அவனால்
ஆன்மீக வானில் எழும்பிப்பறக்க முடியும்!

துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான
மனிதர்களுக்கு அப்படியொரு அகவெளி
இருப்பது பற்றிய சிறு பிரக்ஞையும் இல்லை!

ஆகவே தான் அவர்கள் மனிதர்களுக்குரிய
வாழ்க்கையை இன்னும் வாழத்தொடங்கவில்லை
என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன்!

அதே நேரத்தில், ஆன்மீக வாழ்க்கையை
வாழ்வதற்கு மனிதர்கள் தங்களைத் தாண்டி
எங்கேயும் செல்லத்தேவையில்லை!
ஆன்மீகத்தைக் கற்றுத்தருவதற்கு யாதொரு
பள்ளியும், கல்லூரியும், மடமும், ஆசிரமும் இல்லை!

ஆன்மீக வாழ்க்கையின் அவசியத்தை,
முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி வலியுறுத்து
வதற்கு மேல்,  உண்மையில், உண்மையான
ஆன்மீகத்தை எவரும் எவருக்கும் கற்றுத்தர
இயலாது!

ஆன்மீகவாதிகள் என்போர் பலர் 'ஞானமடைதல்'
பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்துவதோடு
சுலபத்தவணையில் அதை விற்பனை செய்தும்
வருகிறார்கள்!

'ஞானமடைதல்' என்று ஒரு அம்சம் இருக்கத்தான்
செய்கிறது; ஆனால், மனிதன் விழிப்படைவதன்
அவசியத்தையே நான் பிரதானமாக வலியுறுத்தி
வருகிறேன்!

மனிதன் தன்னை நோக்கி விழிக்காமல்
ஞானம், முக்தி, மோட்சம், எதையும் அடைய முடியாது!
மனிதன் தன்னை முழுமையாக உணர்வு கொள்வது
தான் அசலான ஆன்மீகத்தின் முதல் அடியும்
முடிவான அடியுமாகும்!

மேலும், 'ஆன்மீகம்', 'ஞானமடைதல்' ஆகியவைபற்றி
பரவலாக மலிந்து கிடக்கும் பிரமைகளைக்
களைவதையும் என் ஆன்மீகப் பணிகளில்
ஒன்றெனச் செய்துவருகிறேன்!

     <>

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தறியாமல்
இனி  ஒரு கணம் கூட  சுய-உணர்வில்லாத  ஒரு
விலங்கைப்போல தானியங்கித்தனமாக நான் வாழ
மாட்டேன் என உறுதிபூண்டு  தீவிர அர்த்த-நாட்டம்
கொள்ளும் ஒருவனே அசலான ஆன்மீகத்திற்குத்
தகுதி பெறுகிறான்!

எவனொருவன் உணர்வுப்பூர்வமாக வாழ்வதற்கு
தன் மனதை முழுமையாகத் தயார்படுத்திக்
கொள்கிறானோ, அவன் ஏற்கனவே தனது உடலின்
இயல்பான தூண்டுதல்களை நெறிப்படுத்தி
விட்டவனாகிறான்! இனி அவற்றால் அவன்
அலைக்கழிக்கப்படுவதில்லை!

தீவிர ஆன்மீக நாட்டத்திற்கும், மேலோட்டமான
ஆர்வக்கோளாறுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது!
ஒருவன் தனது வழக்கமான பலவித நாட்டங்களுடன்
ஆன்மீக நாட்டத்தையும் சேர்த்துக்கொள்ளமுடியாது!
ஏனெனில், ஆன்மீகத்தின் திசை பிறவனைத்து
விஷயங்களுக்கும் செங்குத்தாக அமைந்துள்ளது!

ஒரு மனிதனின் பிரதான நாட்டம் எதில் உள்ளதோ
அந்தத் திசையில் தான் அவனது மனமும்,சுயமும்
இயல்பாகச் செல்வதாயிருக்கும்! ஆகவே புதிதாக
ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளும் ஒருவன் தனது
பிற நாட்டங்களின் தன்மைகளை, அவற்றின்
பாதகமான தாக்கங்களை அறியாதவனாய்
இருக்க முடியாது!

மனிதன் உடல், மனம் எனும் இரு எஜமான்களால்
எதிரெதிர்த் திசைகளில் செலுத்தப்பட்டு அலைக்
கழிக்கப்படுகிறான்! பலரது விஷயத்தில், துரதிருஷ்ட
வசமாக, மனதைவிட உடல்தான் மனதையும், ஒட்டு
மொத்த மனிதனையும் செலுத்துவதாயுள்ளது!

அதே நேரத்தில், உடலைவிட மனமே அனைத்து
விதப்பிறழ்ச்சிகளுக்கும், மட்டுப்பாடுகளுக்கும்
காரணமாக விளங்குகிறது!   உடலின் ஒரே பிரதான
நோக்கம் உயிர்-வாழ்தலும், இனவிருத்தியும் தான்!
ஆனால், தனது இருப்பிற்கான நோக்கத்தை அறியத்
தவறிய மனமானது, உடலின் வாழ்க்கையைத் தவறாக
தனது வாழ்க்கையாக வரித்துக்கொண்டுவிட்டது!

சமூகக் களத்தில்,  உயிர்வாழ்தலை பெரும் போராட்டமாக
மாற்றியதும்; செயற்கையும் போலியுமான மதிப்புகளை,
தர-நிலைகளைப் புகுத்தி வாழ்க்கையைச்
சிக்கலாக்கியதும் மனித மனமேயாகும்!

உடலைப்பொறுத்தவரை, உயிர்வாழ்தல் தான் அதன்
நோக்கம் என்றாலும், உயிர்வாழ்வதன் நோக்கத்தை
அதனால் அறிய இயலாது! உயிர்வாழ்வதன்
நோக்கத்தை அறிவதற்கும், வாழ்க்கையின் ஒப்பற்ற
இலக்கை அடைவதற்கும் தான் மனிதனுக்கு மனம்
கொடுக்கப்பட்டிருக்கிறது!

"மனிதனிடமிருந்து மனதைக் கழித்து விட்டால்,
மீதமிருப்பது 'உடல்' எனும் விலங்கு தான்!" என்று
சொன்னால், நம்மில் பலர் கோபம் கொள்கிறார்கள்!
ஆனால், 'மனம்' இருந்தும் அதற்கு அடையாளமாக
யாதொரு ஆழமான வெளிப்பாட்டையும் தம்முள்
ளிருந்து கொண்டுவரவில்லை என்பது  குறித்து சிறிதும்
அவர்கள் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை!

சிந்திக்கும் திறன் கொண்ட மனம் இருந்தும்
மனிதர்களிடம் வாழ்க்கை பற்றிய யாதொரு சிறு
புரிதலும் தெளிவான பார்வையும் இல்லை என்பது
மனித  இனத்தின் வீழ்ச்சியையே குறிப்பதாகிறது!

இந்நிலையில், என்றைக்கு மனித-மனமானது தனது
அசலான பணி மற்றும் வாழ்க்கைக்கு விழிப்பது?
உடலின் மேலோட்டமான வாழ்க்கையைக் கடந்து
மனதின் அசலான வாழ்க்கைக்குள் பிரவேசிப்பது?
பிறகு எப்போது உடல், மனம் இரண்டையும் கடந்து
ஆன்மாவை அடைவது?

மனிதன் பிறக்கும் போது ஒரு உடல்-ஜீவியாகத்தான்
தோன்றுகிறான், பிறகு ஒரு மன-ஜீவியாக எழுகிறான்.
பிரச்சினை இங்குதான் எழுகிறது; பெரும்பாலான
மனிதர்கள் மன-ஜீவியாக உருவெடுப்பதில்லை;
மாறாக, மனதின் மேலாண்மையை உடலுக்கு
விட்டுக்கொடுத்துவிடுவது ஒருபுறமிருக்க, இன்னொரு
புறம் மனதின் புனைவுலகத்திற்குள் தஞ்சம் புகுந்து
விடுகின்றனர்!

    <>

ஆன்மீகம் குறித்து அறிந்து  கொண்டவைகளைப்
பற்றி விரிவாகச் சிந்திப்பது, அவற்றுடன் தம்மை
அடையாளப்படுத்திக்கொள்வது, எதையோ
சாதித்துவிட்டதாகப் பிரமைகொள்வது,
முதிரா நிலையில் ஆன்மீகம் குறித்து
அபிப்பிராயம் கொள்வது இவை
எதுவும் ஆன்மீகமாகாது!

ஆன்மீகம் தொடர்பான தரவுகளை,செய்திகளை,
விபரங்களைக் கொண்டு மேலும் தரவுகளைக்
கண்டுபிடிக்கலாமேதவிர உண்மையைக்
கண்டுபிடிக்க இயலாது!

ஆன்மீகம் தொடர்பாக உங்களுக்கென்று ஒரு
நிலைப்பாடு கொள்வது ஆன்மீகமாகாது!
அங்கே உங்களுக்கே இடமில்லை
எனும் நிலையில் உங்களுடைய
நிலைப்பாட்டிற்கு இடமேது?

உங்களுடைய ஆன்மீக வளர்ச்சியை அறிந்திட
உங்களுடைய தன்முனைப்பு எவ்வளவு
குறைந்துள்ளது என்பதைப்
பாருங்கள்!

   <>

"வாழ்க்கை என்றால் என்ன?" என்பதைப்
புரிந்து கொள்வது தான் உண்மையான
வாழ்தல், வாழ்க்கை, யாவும் என்று நான்
சொன்னால், மருட்சியடையாதீர்!
இக்கூற்றை உங்களால் நம்பமுடியவில்லை
எனில், வேறு எதை நீங்கள்  வாழ்க்கை
என்று சொல்கிறீர்கள், வாழ்கிறீர்கள்
சொல்லுங்கள்?

காலையில் நீங்கள் எழுந்ததிலிருந்து
இரவு உறங்கப்போகும் வரை
உயிர்வாழ்வதற்காக அன்றாடம்
நீங்கள் செய்கின்ற காரியங்கள்
ஈடுபடுகின்ற விவகாரங்கள்
உங்கள் உத்தியோகம், துய்ப்புகள்,
நுகர்வுகள், கேளிக்கைகள் . . . .
இவற்றைத்தான் நீங்கள் வாழ்க்கை
என்கிறீர்களா?

தவிர்க்கவியலாத சில அடிப்படைத்
தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளக்
கூடாது; அதற்காக நீங்கள் உழைக்கக்
கூடாது என்று நான் சொல்லவில்லை!
ஆனால், "அதன் பிறகு என்ன?" என்று
தான் கேட்கிறேன்!

தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குப்
பெயர்தான் வாழ்க்கையா? எளிமையாகவும்,
கரடுமுரடாகவும், நேர்த்தியற்றவகையில்
செய்தாலும்  எலிகளும் தவளைகளும்
இவற்றைத்தானே செய்துவருகின்றன?

உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைக்
குறிக்கும் ஒற்றைச் சொல் தான் 'வாழ்க்கை'
என்பதா? அப்படியானால், நீங்கள் வாழ்வது
சரிதான்! அதை ஆழமாகப் புரிந்து கொள்ள
ஒன்றுமில்லைதான்!

     <>

மீனைச்சுற்றி எல்லாப்பக்கங்களிலும்
தண்ணீர் சூழ்ந்திருப்பதைப்போல
மனிதனைச் சுற்றி  எல்லாப்பக்கங்களிலும்
சூழ்ந்திருக்கிறது வாழ்க்கை!

மீன் தண்ணீரிலேயே இருந்தாலும் அதற்கு
தண்ணீரைப்பற்றி எதுவும்  தெரியாது!
தன்னைப்பற்றியும் தெரியாது!
அதற்குத் தெரிந்ததெல்லாம் இரையும்
தன் இணையும், தன் எதிரிகளும் மட்டுமே!

எல்லாப்பக்கங்களிலும் தண்ணீரால்
சூழப்பட்டிருந்தாலும் தான் இருப்பது குளமா
அல்லது கடலா என்பது மீனுக்குத் தெரியாது!
தன் தேவைகளைத்தாண்டி மனிதனுக்கும்
வேறெதுவும் தெரியாது!

ஒரே சமயத்தில்,  நெருக்கமாக மிகஅருகிலும்,
எட்டாத் தொலைவிலும்; மிகப்பரிச்சயமான
தாகவும், புரியாப்புதிராகவும் இருக்கிறது
வாழ்க்கை! என்பது ஈரறிவுள்ள மீனுக்குத் தெரிய
வாய்ப்பில்லை! வாய்ப்புள்ள மனிதனுக்கும்
தெரியாதென்றால் நிச்சயம் அவன் ஆறறிவுள்ள
ஒரு மீனாகத்தான் இருக்க வேண்டும்!

     <>

கடலை அளந்து ஆராய்ந்து முடித்து உலகை
ஆராய ஆர்வம் கொண்டு
கரையேறிய மீன் பல உருமாற்றங்களைக்
கடந்து மனிதனாகியது!
நிலத்தை, மலைகளை, ஆறுகளை,
பெருங்கடல்களை ஆராய்ந்த மனிதன்
நிலவில் கால்பதித்து, விண்வெளியையும்
ஆராயப்புகுந்துள்ளான்!
பேரண்டத்தை அளப்பது ஒருபுறமிருக்க
அணுவைப்பிளந்து சிற்றண்டத்தையும்
அவன் அலசிக்கொண்டிருக்கிறான்!
ஆயினும் அவன் இன்னும் புதிரின்
நுழைவாயிலைக் கண்டுபிடித்தானில்லை!
அனைத்தையும் அறியும் மனிதன்
அறிபவனாகிய தன்னை அறியாமல்
அறிவு முழுமை பெறாது என்பதை இன்னமும்
உணர்ந்தானில்லை!

     <>

உண்மையிலேயே வாழத் தொடங்குவது
என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?
நீங்கள் ஏற்கனவே உணர்வின்றி
தானியங்கித்தனமாக வாழ்ந்துவருவதை
உடனடியாக முடிவிற்குக் கொண்டுவருவதுதான்
உண்மையிலேயே வாழத் தொடங்குவது
என்பதாகும்!
உங்களை உடனடியாக உணர்வுக்கு வருமாறு
சொன்னால் அது உங்களுக்குப்புரியாது!
ஆகவே, உங்களுடைய உணர்வற்ற தன்மையை
கைவிடச் சொல்லுகிறேன்!
அதாவது, உங்களுடைய முட்டாள் தனத்தை
உடனே நிறுத்துங்கள் என்கிறேன்!
உடனே நீங்கள் என்மீது கோபம் கொள்கிறீர்கள்!
அப்போது நீங்கள் ஒரு கணம் உணர்வுக்கு
வருகிறீர்கள்!
உங்களுடைய உணர்வற்ற தன்மையைக் கைவிட
வேண்டுமானால்,
எவ்வாறேனும் நீங்கள் உணர்வுக்கு வந்தாக வேண்டும்!

      <>

மா.கணேசன்/ 26.05.2016





Wednesday, 25 May 2016

உனக்கு நீ நண்பனா? எதிரியா?


      

நான் உனக்கு நண்பனோ, இல்லையோ
அதைவிட்டுத்தள்ளு!
நீ உனக்கு நண்பனா? எதிரியா?
என்பதை முதலில் கண்டுபிடி!

     <>

உன்னுடைய எதிர்மறைக்கூறுகளை
எண்ணிக்கொண்டிராதே!
ஆயிரம் விரல்கள் போதாது!
முடிவில்லாமல் அது போய்க்
கொண்டேயிருக்கும்!
ஆகவே, உனக்கு எதிரான திசையில்
நீ பயணித்திடு!
அது தான் உனக்கு நல்லது!

    <>

உனது இருப்பை, எதையோ
அல்லது எவரையோ
எதிர்ப்பதிலிருந்து
கட்டியெழுப்பாதே!
பிறகு உனது வாழ்க்கை
எதிர்வினைகளின் சங்கிலித்
தொடராகிவிடும்!
ஆகவே, வாழ்க்கைக்கு மட்டும்
பதிலளித்திடு!
நீ வேறு எதற்கும் எவருக்கும்
பதில் சொல்லக்
கடமைப்பட்டவனல்ல!

    <>

உங்களில் அநேகருக்கு
பிழைப்புக்கும், வாழ்க்கைக்கும்
வித்தியாசம் தெரியவில்லை!
ஆகவேதான் நீங்கள்
சமுதாயத்தின் வழிகளையும்
விதிகளையும் பின்பற்றுகிறீர்கள்!

நான் வாழ்க்கையை நேசிக்கிறேன்!
ஆகவே, நான் வாழ்க்கையின்
விதிகளையே பிரதானமாகப்
பின்பற்றுகிறேன், அதையே நான்
உங்களுக்கும் சொல்லுகிறேன்!

    <>

உன்னுடைய தேக்கத்திற்கும்
வளர்ச்சியின்மைக்கும், தோல்விக்கும்,
வெளியே எவரையோ காரணமாகச்
சுட்டும் வரையில் உனக்கு
விடுதலை இல்லை!
உனது கடமையிலிருந்தும்
பொறுப்பிலிருந்தும் நழுவுவதற்கு
எவரையோ பொறுப்பாக்குகிறாய்!
யாரோ உனக்கு எதிராகச்
சதி செய்கிறார்கள், உனது
முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்
என்று பழிகூற ஒருவனைக்
கொண்டிருக்கும் வரை
நீ வளர்வதில்லை, வாழ்வதில்லை!

    <>

நீ உன்னுடைய உண்மையான
எதிரியை அடையாளம் காணும்வரை
பொய்யான எதிரிகளுடன்
சண்டையிட்டுக்கொண்டு
சச்சரவில் ஈடுபட்டுக்கொண்டு
உனது நேரத்தையும், சக்தியையும்
வாழ்வையும் வீணே விரயம்
செய்து கொண்டிருப்பாய்!

    <>

உன்னுடைய உண்மையான
எதிரிகள் அநேகர்.
அவர்கள் உனக்கு மிகவும்
நெருக்கமாக இருப்பதால் அவர்களை
அடையாளம் காண்பது சிரமம்தான்!
உனது கீழியல்புகள், இச்சைகள்,
துய்ப்புகள், பயம், சினம், பொறாமை
பேராசை, விருப்பு வெறுப்புகள்,
சோம்பல், சிந்தனையின்மை,
தந்திரபுத்தி, குறுக்குபுத்தி
சந்தேகபுத்தி, உடமை சுபாவம்,
சுய நலம், ஒட்டுண்ணித்தனம் . . . .
ஆனால், இவையெல்லாவற்றுக்கும்
மூலம் உனது உணர்வற்ற
தன்மையே, அகந்தையே, நீயே!

    <>

பயணிக்க மனமில்லாதவன்
வழியைப்பற்றிக் கேட்காதிருப்பதே
நல்லது!
வழியைக் கேட்டறிந்த பிறகு
பயணிக்காதிருப்பது அதிகக்
கேடானது!
உனக்கு வழிகாட்ட முன் வந்தவனை
உதாசீனம் செய்யும் வகையில்
வழியைச் சொல்லவிடாமல்
வீணான விவகாரங்களை
கதைகளைப் பேசி
வீண் வாதம் புரியாதே!

     <>

வழியைத் தேடுவதற்கு முன்னே
இலக்கை அடைந்தவர்கள் அநேகர்!
அடைந்தவர்களில் வழியை ஆராய்ந்து
அறிந்தவர் வெகு சிலரே!
வழியறியாது வாடியோர்க்கு
வழி காட்டியவர் அதில் சிலரே!

     <>

பயண வழியில் பராக்கு பார்க்கிறவன்
சொந்த ஊர் போய்ச்சேருவதில்லை!
கவனத்தை ஈர்த்துச் சிதறடிக்கும்
நிகழ்வுகளை எட்டிக்கூடப்பார்க்காதே!
நீங்கா-நிறைவடைய நீ விரும்பினால் எந்த
விடுதியினுள்ளும் நுழையாதே!
முழுமையை நீ நேசித்தால் எந்த
மன்றத்திலும் அங்கத்தினராயிராதே!
முழு-விடுதலையை நீ விரும்பினால் எந்த
சங்கத்திலும் உறுப்பினராயிராதே!
அன்புள்ளவன் நீ என்றால் எவருடனும்
எதனுடனும் பந்தம் கொள்ளாதே!
உண்மையை நீ நேசித்தால் வழித்துணை
தேடாது தனியே பயணித்திடு!

     <>

மனிதா,
சாக்குப்போக்குகளைச்
சொல்லி மனிதனுக்குரிய ஆன்மீகக்
கடமைகளைத்  தவிர்ப்பதின்
வழியாக நீ உன்னை மனிதத் தரத்
திலிருந்து கீழிறக்கிக்கொள்ளாதே!
"நான் குடும்பஸ்தன், ஆகவே என்னால்
ஆன்மீகத்தில் ஈடுபடவியலாது!"
"என் மனைவி அனுமதிக்கமாட்டாள்!"
என்று ஏதேதோ காரணங்களைச்
சொல்லி உன்னை நீயே ஏமாற்றிக்
கொள்ளாதே!
நீ குட்டையோ, நெட்டையோ
கறுப்போ, வெளுப்போ
மணமானவனோ, இல்லையோ
குழந்தைகுட்டிகளைப்பெற்றவனோ
அல்லது மலடனோ
இளைஞனோ,முதியவனோ
இதுவோ,அதுவோ, எதுவாயினும்
நீ மனிதன் தானே?
சித்த சுவாதீனத்தை நீ இழக்காதவரை
மனிதனுக்குரிய இலக்கை அடைந்திட
நீ முயன்றிடு!

    <>

'மனிதன்' என்றாலே
பிணைப்புகளற்றவன்,
'சுதந்திரன்' என்று அர்த்தம்!
இவ்வுலகிற்கு உன்னைக்கொண்டு
வந்த தாயுடனான தொப்புள் கொடிப்
பிணைப்பும் நீ பிறந்ததும்
அறுக்கப்பட்டு விடவில்லையா?

    <>

நிறுத்துங்கள்! உங்கள் புகார்களைக்
கூறுவதற்கு முன் உங்கள் மீதான
புகார்களை யாரிடம் கூறுவீர்கள்
என்பதை முதலில் சொல்லுங்கள்!

நல்லது! உங்களுடைய  அபிப்பிராயம்
சிறிதும் கலவாத உண்மை என்று ஏதும்
உங்களிடம் இருந்தால் முதலில்
அதைச் சொல்லுங்கள்!

பேசுங்கள்! ஆனால், பேச வேண்டும்
என்பதற்காக எதையாவது பேசாதீர்கள்!
நீங்கள் பேசாதிருந்தாலும் பொழுது
அதன் போக்கில் போகும்!

    <>

அர்த்தம் தேடல், ஆன்மீக விசாரம்
உண்மை நாட்டம், மெய்ம்மை நாட்டம்
இறைக்காதல் . . .இவையெதுவும்
உங்களுக்கு  ஏற்பட வாய்ப்பேயில்லை!

ஏனென்றால், நீங்கள் அகந்தையில்
அமிழ்ந்து திளைத்திருக்கும் வரை
இவையெதுவும் உங்களுக்குத்
தேவைப்படாது!

    <>

உங்களுக்கு சொர்க்கமும் வேண்டும்
அகந்தையும் வேண்டும் என
விரும்புகிறீர்கள்!
முன்னதன் பிரமாண்டத்தையும்
பின்னதன் சிறுமையையும்
எவ்வாறேனும் ஒன்றிணைத்திட
முடியும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்!

    <>

எவ்வொரு ஆன்மீகச் செய்தியையும்
உயர் உண்மையைப் பற்றியும்
நீ கேள்விப்படும் போதெல்லாம்
அவற்றைப் புகழ்ந்து போற்றுகிறாய்!
அவ்வழியே உன் அகந்தை தந்திரமாய்
தன்னையே மெச்சிக்கொள்கிறது!
அவ்வுண்மைகளை ஒருவாறு ஏற்று
அடைக்கலமும்  அளிக்கிறாய்!
பூவுடன் சேர்ந்த நாராய் மணக்கிறாய்!
அகந்தையின் மேற்பார்வையில்
உனது ஆன்மீக வளர்ச்சியைக்
கொண்டுசெல்ல எத்தனிக்கிறாய்!
உன்னுள் உறையும் விதை முளைத்து
வேகமாக வளரத் தொடங்கியதும்
அவ்வளர்ச்சியின் ஆக்கிரமிப்பு கண்டு
அதிர்ச்சியடையும் அகந்தை அவசர
அவசரமாய் ஆன்மீகத்தைக் கைவிட்டு
ஆசுவாசமடைகிறது!
'அகந்தையின் உருமாற்றமே ஆன்மீக
வளர்ச்சி' என்பதை அறிந்ததும் நீ பெரும்
ஏமாற்றமடைகிறாய்!

      <>

தான் மேற்கொள்ளாத ஆன்மீக முயற்சிகள்
யாவும் தோற்றுப்போனதற்கு, தானே காரணம்
என்று வெட்கமில்லாமல் அவமானப்பட்டு,
இல்லாத தன்மானத்தையிழந்து,
வெளிப்படையான தன் தவறுகளை
அறிக்கையிட்டு, பிறரிடம், "பாருங்கள்! நான்
எவ்வளவு உண்மையாக இருக்கிறேன்!" என்று
பாசாங்குகாட்டி, தன் போலித்தனத்தை மறைத்து
தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் அகந்தை!

     <>

எவ்வொன்றிலும் தனக்குச் சாதகமானதைத்
தேடிடும் அகந்தையால் உண்மையை மட்டும்
அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன?
உண்மையை தனக்குத் தகுந்தவாறு வளைத்து
நெளிக்க முடியாது என்று தெரிந்ததும் விட்டு
விடும் - தன்னையல்ல,  உண்மையை!

     <>

ஆன்ம-விசாரத்தின் குறிக்கோளைத்
தோற்கடிப்பதற்கான வழிகளையும்
உபாயங்களையும் அகந்தை தொடர்ந்து
கண்டுபிடித்த வண்ணம் இருக்கும்!
அதற்காக அது ஆன்ம-விசாரத்தில்
தீவிரமாக ஈடுபடுவதுபோல நடிக்கும்!

    <>

தானதருமம், சமூக சேவை, நன்னடத்தை
நல்லொழுக்கம் . . ஆகியவை நல்ல அம்சங்களே!
ஆனால், அவை அகந்தையைச் சிறிதும்
மாற்றமுறச்செய்வதோ, உணர்வுகொள்ளச்
செய்வதோ இல்லை!
எது அகந்தையை விழிப்புறச்செய்கிறதோ
மேன்மேலும் உணர்வுகொள்ளச்செய்கிறதோ
அதுதான் எல்லாவற்றையும்விட மேலானது!
ஆனால், அப்படி யாதொரு அம்சமும்
அகந்தைக்கு வெளியே இல்லையாதலால்
அதைத்தேடுவது அர்த்தமற்றது!


    <>

எல்லாவற்றுக்கும் நடுவே மிக
வித்தியாசமாய் விளங்கும் அம்சமான
அகந்தை உண்மையில் ஒரு ஆழமான
புதிராகும்!
தன்னைச்சுற்றிலுமுள்ள எதுவும் தன்னை
விளக்குவதில்லை, வெளிப்படுத்துவதில்லை
என்பதை அறியாதவரையில் தனது
முக்கியத்துவத்தை அது
அறிவதில்லை!

    <>

நீ ஆன்மாவை அல்லது கடவுளைத்
தரிசிக்க ஆர்வம் கொள்வாயெனில்
முதலில்  உன் அகந்தையைக் கீழிறக்கி
உன் அரியணையைக்காலியாக வைத்து
அதனருகே நீ அமைதியாக அமர்ந்திரு!

    <>

எல்லாப்பிரமைகளுக்கும்
அடிப்படையாக அமைந்திருப்பது
'தான் ஒரு  சாசுவதமான' நிஜம் என
பிரமைகளுக்குப் பின்னால் பதுங்கிக்
கொண்டிருக்கும் அகந்தை எனும்
மையப்பிரமை!

    <>

தனது அறிவை, எண்ணங்களை
இப்படியும்  அப்படியுமாக இடம்மாற்றி
இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சமாக
ஒழுங்குபடுத்தி,
இங்கு கொஞ்சம் குறைத்து அங்கு கொஞ்சம்
கூட்டி, . . .
உண்மையை வசப்படுத்திடலாம் என்கிற
போக்கு ஆன்ம-விசாரமாகாது!

    <>

புத்தனின் போதனைகளும்
உன்னை விழிக்கச்செய்யாது!
இயேசுவின் அக்னி வசனங்களும்
உன்னை மனந்திரும்பச்செய்யாது!
ரமணரின் உபதேசங்களும்
உன்னை விசாரவழி செலுத்தாது!
பிரபஞ்ச உண்மைகள், மற்றும்
வாழ்க்கையின் உயர் உட்-பார்வைகள்
பற்றிய விளக்கங்களும்
உன் உணர்வை அசைக்காது!
உன்னுள் அவ்வப்போது எழும்
மரண-பயமும் உன்னை
உணர்வுக்குக் கொண்டுவராது!
என்றால், மரணத்தால் மட்டுமே
உன் அகந்தையை வலிய முடிவிற்குக்
கொண்டுவரமுடியும்!

     <>

சொகுசும் சோம்பலுமான ஜீவிதத்தில்
பரிமாறும் தட்டுஉன்னருகே வந்ததும்
உள்ளவற்றில் பெரியதை சிறந்ததை
தேர்ந்தெடுத்து உண்டுக் களித்து;
எல்லாவற்றையும் மேம்போக்காகப்
பார்த்து, ரசித்து, விமர்சித்துச் செல்லும்
வாழ்வின் போக்கில் ஞானமும்,முக்தியும்
மோட்சமும் கூட தட்டில் வைத்து
உன்முன் நீட்டப்படலாம், நீயும் எடுத்துக்
கொள்ளலாம் எனக்காத்திருக்கிறாயா?

     <>

உன்னாலேயே உன்னை ஒன்றும்
செய்ய  இயலவில்லையெனில்
வேறு எவரும், ஏன் கடவுள் கூட
உனக்கு உதவ இயலாது!

     <>

செங்குத்தான மலை தான்!
ஏறுவது கடினத்திலும் கடினம் தான்!
வாழ்வா, சாவா எனும் சவால் தான்!
வலியில்லாமல் பிரசவம் இல்லை!
உணர்வுக்கு வராமல் நீ மனிதனாவதில்லை!
அருள்,ஆசி,ஆன்மா, கடவுள், ஞானம், முக்தி
மோட்சம், மீட்சி . . . இவையெதுவும்
புறத்தே இல்லை!
மதிய உணவு கூட இலவசமாகக் கிடைக்கலாம்
இரட்சிப்பு இலவசமாகக் கிடைக்காது!
சுலபமான வழி, சுலபமான அருள்
என்பதும் இல்லை!
செங்குத்தான மலை மீது
சிரமப்பட்டு ஏறிச் சிகரம் அடைந்தால்
முக்தி நிச்சயம்!
மலையடிவாரத்திலேயே அமர்ந்து
வாளாவிருந்தால் சமாதி தான்!

    <>

வழக்கத்தை  மீறிய எதையும்
உன்னால் செய்யமுடியவில்லையா?
நல்லது, வழக்கமானவற்றை மட்டும்
ஏன் செய்கிறாய்? செய்யாதே!
அவற்றைச் செய்யச்சொல்லி எது
அல்லது யார் உன்னை வற்புறுத்துவது?
உண்பது ஒரு வழக்கம் என்றால்
வயிற்றைப் பட்டினி போடு!
தொங்கிய நாக்கை மறைத்துக்கொண்டு
நீயும் விருந்துக்குப்போக வேண்டாமே!
உறங்குவது ஒரு வழக்கம் என்றால்
உறங்காதிரு, உறங்கி எழுந்ததும் அப்படி
என்னத்தை நீ சாதிக்கப்போகிறாய்?
உறவுகொள்வது இயற்கைத் தூண்டுதல்
என்பதாகவே இருக்கட்டும்; ஆனால்
நீயே ஏன், எதற்காக இருக்கிறாய் என்பது
தெரியாத அபத்தத்துடன் மேலும்
அபத்தங்களைச் சேர்க்கும் இனவிருத்தி
அவ்வளவு அவசியமா?
உனக்கு நீயே உண்மையானவனாக,
உன்னுடன் இணக்கமாக இல்லாதபோது
நண்பர்கள் உனக்கு எதற்கு?
உன் நண்பர்களில் எத்தனை பேர் புத்தர்கள்?
சமுதாயம் ஒரு முகமூடி உற்சவம் என்பதால்
நீயும் முகமூடி தரித்துக்கொண்டாயா?
உன்னிடம் நீ கேட்டிருக்க வேண்டிய
இக்கேள்விகளுக்கான  பதில்களையாவது
உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாமல்
உன்னிடம்  நேர்மையாக  அளித்திடு!

    <>

அகந்தைக்குக் கீழான நிலையும்
அகந்தையைக் கடந்த நிலையும்
ஒன்றல்ல!

    <>

மது, மாது, மதம், சாகசம், இலட்சியம்
இவை அகந்தையைத் தற்காலிகமாக
மறந்திருக்க உதவலாம்!
இவையெதுவும்
அகந்தையைக் கடப்பதற்கான சரியான
வழியாகாது!

    <>

அகந்தையும் கடவுளும் சேர்ந்திருக்க
வியலாது!
உன்னால் கடவுளைக் கீழே உனது
மட்டத்திற்குக் கொணர்ந்திடவோ
அல்லது கடவுளின் மட்டத்திற்கு உனை
உயர்த்திக்கொள்ளவோ முடியாது!
அதே வேளையில்,
அகந்தையில்லாமலோ, அல்லது அதைச்
சுற்றிச்சென்றோ கடவுளை அடைய
முடியாது!
அகந்தையின் முழு 'நிலை-மாற்றமே'
கடவுள்!

     <>

அகந்தையின் கதை:

மகாராஜாவின் வருகையை அறிவிக்க வந்த
தூதுவன் அவரைச் சிறையிலடைத்துவிட்டு
தனக்குத்தானே முடிசூடிக்கொண்டு
மகாராஜா போல ஆட்சி செய்து
கொண்டிருக்கிறான்!

     <>

"நான்" என்ற முழக்கத்துடன் அகந்தை
உருவாகி வெளிப்பட்டாலும்;
தன்முனைப்பு, அகங்காரம், ஆணவம், கர்வம்
தாந்தோன்றித்தனம் . . .  என்றெல்லாம்
இழிசொல்லுக்கு ஆளாகியுள்ள அகந்தை
உண்மையில் தன்னை முன்னிறுத்திடவுமில்லை!
தன்னைப் பிரதிநிதித்துவம் செய்திடவும் இல்லை!
மாறாக, அது தான் பிறந்த வீடாகிய உடலைத்தான்
'தான்' என்று தவறாக அடையாளப்படுத்திக்
கொண்டுள்ளது; உடலையும் அதன்
தேவைகளையும்தான் அது பிரதிநிதித்துவம்
செய்து வருகிறது!
அகந்தையின் ஒரேபெருந்தவறு அது இன்னமும்
தன்னைப் பற்றிய உணர்வுக்கு வரவில்லை!
தனது உண்மையான அடையாளம் குறித்த
கேள்வியை அது   இன்னும் கேட்கவில்லை
என்பது மட்டும்தான்!

    <>

அகந்தை மட்டும் தவறாக உடலுடன்
தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு
உடலின் தேவைகளைப் பிரதிநிதித்துவம்
செய்யாமல்;
தனது உண்மையான அடையாளம் குறித்த
கேள்வியை அது  கேட்டிருந்தால்,
தன்னைப் பற்றிய உணர்வுக்கு வந்திருந்தால்
பூமி இந்நேரம் சொர்க்கமாகத் திகழ்ந்திருக்கும்!
நாம் எல்லோரும் கடவுளர்களாக ஆகியிருப்போம்!

    <>

அகந்தையின் நிலை எவ்வளவு
பரிதாபகரமானது என்பதைப்பாருங்கள்:
'தான் யார்?', 'எதற்காக இருக்கிறோம்?'
என்பதெதையும் அறியாத உணர்வற்ற
'உடல்' எனும் ஒரு விலங்கின் முகத்தின் முன்
'நான்' என்று எழுதப்பட்ட ஒட்டுச் சீட்டாகத்
தொங்கிக்கொண்டிருக்கிறது!

    <>

உனக்கு நீ நண்பனா அல்லது எதிரியா
என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பாய்?
நாற்பதைக் கடந்தும் இன்னும் உனது
வாழ்முறை மீது உனக்கு சிறிதும் அதிருப்தி
ஏற்படவில்லையா?
உன்னுடன் உனக்கு எவ்வித முரண்பாடும்
எழவில்லையா?
அப்படியானால் நிச்சயம் கூடவேயிருந்து
குழிபறிக்கும் எதிரியுடன் தான் நீ
வாழ்ந்துகொண்டிருக்கிறாய்!
இதற்குமாறாக, சதா உனது வழிகளை
விமர்சிப்பதும், உனது தவறுகளைச்
சுட்டிக்காட்டி எச்சரிப்பதுமான குரல்
ஒன்று உன்னுள் ஒலிக்கிறதா?
நிச்சயமாக உன் மீது அக்கறைகொண்ட
உற்ற நண்பன் உன்னுடன் இருக்கிறான்!
அவன் சொல்படி நடந்துகொள்வது
உனக்கு நல்லது!

    <>

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்:
அகந்தைக்கு தனி-இருப்பு கிடையாது!
நிரந்தரமற்றதற்கும், நிரந்தரமானதற்கும்
இடையே தொங்கிக்கொண்டிருக்கும்
ஒரு 'அரை-நிஜம்' தான் அகந்தை!
ஒன்று: அது நிரந்தரமற்ற உலகைச் சார்ந்த
மிகக் குறுகிய ஆயுளைக்கொண்ட  உடலைச்
சார்ந்திருக்கலாம் - தற்போதிருப்பதைப்போல!
அல்லது: தன்னை விஞ்சிய அழிவில்லா
ஆன்மாவைச் சென்று சேரலாம்!
அழியக்கூடிய உடலையும் உயிரையும்
சார்ந்திருப்பதா?
அல்லது, அழிவில்லா ஆன்மாவின்
பாதுகாப்பான கரையைச் சேருவதா?
தெரிவு அகந்தையின் கையில்; காலம்
கடத்தாமல் உடனே முடிவெடுப்பது முக்கியம்!

    <>

நீ சும்மா வெட்டியாக இருந்தாலும்
காலம் ஒரே சீராக நகர்ந்து கொண்டே
தான் இருக்கும்!
ஒவ்வொரு நொடியும் உன்னை
நோய், மூப்பு வழியாக மரணத்திற்கு
இட்டுச்செல்லும்!

    <>

கண்டங்களின் நகர்வு
கண்ணுக்குத் தெரியாது!
கடல் மலைத்தொடராக
மலைத்தொடர் கடலாக
மாறிப்போகும்!
நாட்களின் நகர்வும்
அப்படித்தான்!
எத்தனையோ நூற்றாண்டுகள்
எத்தனையோ சாம்ராஜ்யங்கள்
எத்தனையோ தலைமுறைகள்
காணாமலேயே போயின!

    <>

ஒவ்வொரு நொடியும்
வாழ்வை அல்லது சாவை
தேர்வு செய்வதற்கான நேரமே!
உணர்வை அல்லது உணர்வின்மையை
ஞானத்தை அல்லது அஞ்ஞானத்தை
நீ தேர்வு செய்யலாம்!
காலத்தில் பயணிப்பவன்அஞ்ஞானி!
காலத்தைக் கடப்பவன் ஞானி!
அடுத்தடுத்த நொடிகளை
தன் வழிப்படுத்திடும்
இந்த நொடி அதி முக்கியம்!

    <>

தான் உருவாக்கிய கற்பிதங்களில்
கற்பனைகளில், உறவுப்பிணைப்புகளில்
அடையாளங்களில், மட்டுப்பாடுகளில்
தானே சிறைப்பட்டு அவஸ்தைப்படும்
அகந்தையால் தனது உருவாக்கங்களைக்
கலைக்க மனமில்லாமல் கலக்கமடைகிறது!
தானே கலைத்தால் அகந்தை  மோட்சம் பெறும்!
மரணம் வந்து  கலைத்தால் மொத்தமும்
மோசம் போகும்!

    <>

தவிர்க்கவியலாதவை, அவசியமானவை
என்பதாகத் தோற்றம் தருகின்ற
மனித உருவாக்கங்களான குடும்பம்,
பந்தம், பாசம், சமுதாயம், தேசம், நகரம்
கல்வி, அரசியல், பொருளாதாரம்,
கண்டுபிடிப்புகள், சாதனைகள்,
வாழ்முறைகள், இலட்சியங்கள்,
மதிப்புகள், விழுமியங்கள் யாவும்
அகந்தையின் தவறான அடையாளப்
படுத்துதலின், மற்றும் தவறான
பிரதி நிதித்துவத்தின் விளைவுகளே
தவிர அவை எதுவும் மெய்ம்மைக்குத்
தொடர்புடையவை அல்ல!
அவையெல்லாவற்றிலிருந்தும் விடுபட
அசாதாரணமான எளிமையும்,
நுண்ணறிவும் விழிப்பு நிலையும்
வேண்டும்!

    <>

நீங்கள் நீங்களாக இருப்பது
என்பது நீங்கள் விரும்பியபடி
இருப்பது அல்ல!

மற்றவர்களிடமிருந்து நீங்கள்
வித்தியாசமாய் இருக்கிறீர்கள்
என்பதும் அல்ல!

ஊரும் உலகமும் உங்களை
மெச்சிக்கொள்வதால் நீங்கள்
நீங்களாக இருக்கிறீர்கள்
என்று அர்த்தமல்ல!

உங்களுக்கு நேர்ந்த வாழ்க்கை
விபத்துகள் சாதகமாக அமைந்ததால்
உங்களை அதிருஷ்டசாலி என நீங்கள்
கருதுவதால் நீங்கள் நீங்களாக
இருப்பதாக அர்த்தமல்ல!

உங்களைப்பற்றி யாதொரு
கற்பிதமும், கருத்தாக்கமும்,பிரமையும்
வரலாறும் இல்லாதிருக்கும் போது
இருப்பீர்கள் நீங்கள் நீங்களாக!

    <>

மரம் வேறாக, நீ வேறாக
பூமி  வேறாக,  நீ வேறாக
ஆகாயம் வேறாக, நீ வேறாக
நட்சத்திரங்கள்  வேறாக, நீ வேறாக
பிரபஞ்சம்  வேறாக, நீ வேறாக
இருக்கும்வரை நீ நீயாக
இருப்பதில்லை!

நீ வேறாக உண்மை வேறாக
நீ வேறாக முழுமை வேறாக
நீ வேறாக ஆன்மா வேறாக
நீ வேறாக கடவுள் வேறாக
இருக்கும்வரை நீ நீயாக
இருப்பதில்லை!  

     <>

உன்னை நீ எப்போது  
உண்மையாகச் சந்திக்கிறாயோ
அப்போது  நீ கடவுளைச் சந்திப்பாய்!

    <>

மா.கணேசன்/ 18.05.2016





Tuesday, 17 May 2016

இப்படிக்கு, வெட்டியான்.




            வெட்டியானின் பொன்மொழி:
            "சிவத்தை அறியாதவன் சவமே!"

        <>

      வெட்டியானின் விண்ணப்பம் :

இதன் மூலம் அரசாங்கத்திற்குத்
தெரியப்படுத்துவது என்னவெனில்,
சுடுகாட்டுக்கு வராத ஏராளமான
சவங்கள் ஊருக்குள் உலவிக்கொண்
டிருக்கின்றன!
ஆகவே, என்னுடைய பணியைச்செவ்வனே
செய்வதற்கு உதவியாக அவற்றைச்
சுடுகாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
வெட்டியான்.
    குறிப்பு: அத்தனையும் தற்கொலைச்
                     சவங்களே.

       <>


உங்கள் நல்லடக்கத்திற்கு/நற்தகனத்திற்கு
உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!

       <>

எல்லாவற்றிலும் தெரிவுகளைத்தேடித்தேடி
வாழாமல் போனவர்களே!
உங்களுடைய கடைசித் தெரிவு என்ன?
நல்லடக்கமா? நற்தகனமா?

       <>

           'ரியல் எஸ்டேட்' விளம்பரம்:

பாலைத்தெளித்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல்
வேகவேகமாகச் செல்பவர்களே!
அங்கே ஊருக்குள் சென்று
என்ன செய்யப்போகிறீர்கள்?
வந்ததுதான் வந்துவிட்டீர்கள்
இந்த 'எஸ்டேட்டில்' உங்களுக்கு
எந்த 'ப்ளாட்' வேண்டும்
என்பதையாவது முன்பதிவு
செய்துவிட்டுச் செல்லலாமே?

        <>

வேறு வழியேயில்லை!
மரணம் மட்டும்தான் உங்களை
மாற்றமுறச்செய்ய முடியும்!

        <>

வீணாக 'எதை' அல்லது 'யாரை'
எதிர்பார்த்து நீங்கள் காத்திருக்
கிறீர்கள்?
சொல்லிவிடுங்கள் இப்போதே!
உங்களை எரியூட்டவேண்டுமா?
அல்லது நல்லடக்கம் பண்ண
வேண்டுமா?

       <>

வாழும் காலங்களில் நீங்கள்
விழிக்கவில்லையெனில்,
சாவும் தருணத்தில் மட்டும்
நீங்கள் விழித்துக்கொள்வீர்களா
என்ன?

       <>

வெறுமனே மரணம் குறித்து பயப்படுவது
முட்டாள்தனமானது!
அப்படியென்னத்தை நீங்கள் பெரிதாகச்
சாதித்துவிட்டீர்கள்?
இன்னும் இருந்து அப்படி என்னத்தைச்
சாதிக்கப்போகிறீர்கள்?
'வாழ்க்கை' பற்றிய எந்த உண்மையை
நீங்கள் கண்டுபிடித்தீர்கள்?
அதை இழந்துவிடுவோமோ என மரணம்
குறித்து நீங்கள் இப்படி பயப்படுகிறீர்கள்?

       <>

நீங்கள் 'வாழ்வதாக' எண்ணுகிறீர்கள்!
ஆனால், உண்மையில் நீங்கள்
எரியூட்டப்படுவதற்கோ அல்லது
நல்லடக்கம் பண்ணப்படுவதற்கோ தான்
காத்திருக்கிறீர்கள்!

       <>

"தூங்குகிறவனை எழுப்புவது எளிது;
ஆனால், தூங்குவது போல் நடிப்பவனை
எழுப்புவது கடினம்." என்று சொன்னார்கள்!
ஆனால், விழித்திருப்பதுபோல இமைக்காமல்
இருக்கிறவனை எழுப்புவதுதான்
கடினத்திலும் கடினம்!

       <>

வாழ்க்கை பற்றிய யாதொரு சிந்தனையும்
புரிதலும், பார்வையும் இல்லாமல்;
வாழ்க்கையின் அர்த்தம், குறிக்கோள்
மற்றும் இலக்கு குறித்த யாதொரு
நேரடியான கண்டுபிடிப்பும்  இல்லாமல்
வாழ்ந்து விடலாம் என்பதான உங்களது
போக்கு எவ்வளவு அபத்தமானது என்பது
உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்!

      <>

இன்று இரவு சாப்பாட்டிற்கு எதைச்
சாப்பிடலாம்?
பையனை எந்தக்கல்லூரியில் என்ன
படிக்க வைக்கலாம்?
பெண்ணுக்கு மாப்பிள்ளையை
எங்கே தேடுவது?
ஓய்வு பெறுவதற்கு முன் வீட்டைக்
கட்டுவதா, அல்லது, . . . . .? ? ? ?
மன்னிக்கவும், இவை எதுவுமே
உண்மையில் வாழ்க்கை பற்றிய
சிந்தனை அல்ல!

      <>

வாழ்க்கையால் விழிக்கச்செய்ய முடியாத
உங்களை மரணம் வந்து விழிக்கச்செய்
திடுமோ?!

      <>

ஊரும் உலகமும் சுற்றியுள்ளவர்களும்
உன்னை என்னவேண்டுமானாலும்
சொல்லட்டும்!
அவற்றுக்கு எதிர்வினையாற்றுவதல்ல
உனது தலையாய பணியும் வாழ்க்கையும்!
உனது 'எதிர்-வினை' அவர்களது கூற்றை
உண்மையெனக்கொள்ளும் உனக்கெதிரான
ஆயுதமாகிவிடும்!
உண்மையில் அவர்களுக்கு
அவர்களைப்பற்றிய உண்மையும்
உனக்கு உன்னைப்பற்றிய உண்மையும்
தெரியாது!

      <>

உண்மையில் நீ யார்
எனும் உண்மையைக்
கண்டுபிடி!
அதிலே ஒட்டுமொத்த
பிரபஞ்சத்தின்
உண்மையும்
அடங்கியுள்ளது!

      <>

      (வெட்டியானின் ஞானம்)

என் பணியின் நிமித்தம் நான்
ஊருக்குவெளியே இந்தச்
சுடுகாட்டிலேயேதான் தங்கி
இருக்கிறேன், வாழ்கிறேன்!
ஊருக்கும், சுடுகாட்டுக்கும்
அதிக வித்தியாசம் இல்லை!
அங்கேயுள்ள  சவங்கள்
நடமாடுகின்றன!
இங்கேயுள்ள சவங்கள்
அடங்கிக் கிடக்கின்றன!
வாழ்க்கை, இடத்தைப்
பொறுத்ததல்ல!
நான் எங்கேயிருந்தாலும்
அங்கே வாழ்க்கை மையம்
கொண்டிருக்கும்!

      <>

       (வெட்டியானின் ஞானம்-2)

எரியூட்டுவது, அடக்கம் பண்ணுவது
என சவங்களுடன் தொழில் புரிவதால்
உணர்வு மறத்து, மரணத்துக்கு
பழக்கப்பட்டுவிடவுமில்லை!
வாழ்க்கையை வெறுத்து
விடவுமில்லை!
சொல்லப்போனால், மரணத்தை
எவரும் நண்பனாக்கிக்
கொள்ள முடியாது!
வாழ்க்கையும் அப்படித்தான்!
எப்போதும் புத்துணர்வோடு
இருப்பவன் வாழ்வான்
இந்தப்பக்கமும் மரணத்திற்கு
அந்தப்பக்கமும்!
 
      <>

         (வெட்டியானின் ஞானம்-3)

பயனற்றவைகளை நீங்கள் எரிக்கிறீர்கள்
அல்லது புதைக்கிறீர்கள் அல்லவா?
அதே வேலையைத்தான் இந்த
வெட்டியானும் செய்கிறேன்!
"மனிதன் ஒரு பயனற்ற இச்சை!"*
என்று சொன்னவன் ஒரு
அரை-வெட்டியானாகத்தான்
இருக்கவேண்டும்!
ஏனெனில், மனிதர்கள் முற்றிலும்
பயனற்றவர்கள்-தங்களுக்கும்
பிறருக்கும்!
எனது உணர்வு-நிலையை உங்களால்
புரிந்துகொள்ள முடியாது!
வாழ்விற்கும் மரணத்திற்கும் நடுவே
நிகழ்த்தப்படும் கத்தி-முனை சாகசம்!
ஒருவேளை யோகிகளும் தத்துவ
ஞானிகளும் இதைப் புரிந்து
கொண்டிருப்பார்கள்!

  *இருத்தலியலாளர் சார்த்தரின் கூற்று

      <>

         வெட்டியானின் வேதனை!

மக்களின் வாழ்வை நாசமாக்கிடும்
நாட்டின் பிரிவினை விதிகளை, சாதி சமய
பேதங்களை, சாவிலும்
சாவைக்கடந்தும்,இங்கே சுடுகாடு வரை
நீட்டிக்கும் முட்டாள்தனம் எந்த சாதியைச்
சேர்ந்தது?
பிடி சாம்பலாகவோ, மக்கி மண்ணோடு
மண்ணாகவோ போகிற சடலங்களுக்கு
சாதியேது ? சமயமேது ?

      <>

வெட்டியான் வேலை மோசமானதல்ல!
தொழிலில் சிறிது பெரிது என்பது சார்பானது
ஆனால், உயர்வு தாழ்வு கிடையாது!
எல்லாத்தொழிலும் ஏதோவொரு தேவைக்கு
சேவை புரியும் பிழைப்புக்கான வழியே!
விரும்பித்தேர்ந்தாலும் அல்லது
விரும்பாமலே ஏற்றாலும் எல்லாத்தொழிலும்
அடிமைத் தொழிலே!
கூலித்தொழிலாளியோ, பெரும்முதலாளியோ
ஏழையோ, பணக்காரனோ; நல்லவனோ,
கெட்டவனோ - கடைசியில்
வந்து சேருவது இங்கேதான்!
கட்டையில் ஏற்றினாலும், குழியில்
இறக்கினாலும் வெட்டியான் எனது
உதவியால் தான்!

      <>

சிறு அசௌகரியம் என்றாலும்
அங்கலாய்க்கும் சுக-போகிகளே!
நீங்கள் விரும்பியவண்ணம்
கட்டளைகளை நிறைவேற்றத்
தவறிடும் பணியாட்களை
கடிந்து கொள்ளும் எசமானர்களே!
வாழ்வினூடே அலுங்காமல்
குலுங்காமல் பயணிக்கும்
பெரிய மனிதர்களே!
எதிர்ப்பு, எதிர்பார்ப்பு, எதிர்வினை
எல்லாம் அடங்கிப்போகும்
வேளை வரும் - அப்போது
ஏற்றப்படுவீர்கள் மலர்ப்பல்லக்கில்!
அலுக்கி குலுக்கி வழியனுப்பி
வைக்கப்படும்  அந்த இறுதி
யாத்திரை குறித்து கற்பனை
கொள்வது உங்களுக்கு நல்லது!

     <>

வாழாமல் வாழ்கிறவர்களே!
இந்த வெட்டியான் சொல்லுவதைக்
கேளுங்கள்!
வாழ்க்கை ஒரு அற்புதப்பரிசு!
அதைப்பெற்றிருப்பது பெரிதல்ல!
பயன்படுத்தத் தெரியனும்!
அப்பரிசுப்பெட்டியை இன்னும்
திறந்து பார்க்காமலேயே
நீங்கள் வாழ்வதென்ன?
உங்கள் வாழ்க்கை இவ்வளவு
மகிழ்ச்சிக்குறைவாக, மந்தமாக
மேலோட்டமாக, அர்த்தமற்றதாக
இருப்பதின் காரணம் இப்போதாவது
உங்களுக்குப்புரிகிறதா?
சமூகச் சந்தைக்கடைச் சந்தடியில்
தொலைந்து போனவர்களே!
உங்கள் பரிசுப்பெட்டியை எங்கோ
வைத்துவிட்டு வாழ்க்கையை
எங்கோ தேடிக்கொண்டிருப்பதென்ன?
இன்னும் உங்களுக்குப்
புரியவில்லையா?
நீங்கள் தான் அந்தப் பரிசு, பொக்கிஷப்
பெட்டி, புதையல் யாவும்!
நீங்கள் வேறு வாழ்க்கை வேறு அல்ல!
வீட்டுக்குச் சென்றவுடன் முதலில்
உங்களைத் தோண்டத் தொடங்குங்கள்!

      <>
எவ்வளவு தன்மையாகப் பழகினாலும்
மனிதர்களை நான் நம்புவதில்லை!
எவ்வளவு விகாரமாக இருந்தாலும்
பிணங்களைப் பார்த்து நான்
பயப்படுவதில்லை!
ஏனெனில், பிணங்கள் ஒருபோதும்
உங்கள் முதுகில் குத்துவதோ;
கூடவேயிருந்து குழிபறிப்பதோ
இல்லை!
உயிருள்ள உடலின் சேவை
மகத்தானது என்பது உங்களுக்குத்
தெரியாது!
நீங்கள் பிறந்ததிலிருந்து, நீங்கள்
வளர்கிறீர்களோ இல்லையோ
உங்கள் உடல் வளர்ந்து
பல பருவக் கட்டங்களைக்கடந்து
உழைத்துத்தேய்ந்து நோயுற்று நலிந்து
முடிவில் சுடுகாட்டுக்கு வந்து சேர்கிறது!
உடலின் வளர்ச்சி நிலைகளில்
பங்கெடுத்து வாழும் நீங்கள் உங்கள்
உள்ளத்தில் வளர்வதேயில்லை!
ஆகவேதான் நீங்கள் உண்மையில்
உங்கள் (உள்ளத்தின், உணர்வின்)
வாழ்க்கையை வாழவேயில்லை
என்று சொல்கிறேன்!

     <>

விளக்கு, எண்ணெய், திரி யாவும்
ஒளியை எட்டுவதற்கான அமைப்பின்
கூறுகளே தவிர இவ்வெதையும்
ஒளி சார்ந்திருப்பதில்லை!
இவ்வெதுவும் ஒளியை
உருவாக்குவதில்லை!
ஒளி மட்டுமே ஒளியை ஏற்றும்!
விளக்கு, எண்ணெய், திரி, யாவும்
ஒளியின் வெவ்வேறு நிலைகளே!
ஒளி  இல்லாமல் உலகில் எதுவுமில்லை
உலகமும் இல்லை!

     <>

உடல் ஒரு உயிருள்ள கூடு!
மனிதன்  தன் உடலையும் உயிரையும்
கடந்த உணர்வு!
உடலும் உயிரும் பிரிக்கமுடியாதவை!
எண்ணெய் தீர்ந்ததும் விளக்கு
அணைந்துவிடுகிறது!
உடல் நலிவுற்றதும் உடலுடன்சேர்ந்து
உயிரும் அடங்கிவிடுகிறது!
உணர்வாகிய மனிதன் இறப்பதில்லை!
மனிதன் உயிரை விடுவதில்லை!
உடலும் உயிரும் தான் மனிதனை
விட்டு விடுகின்றன!!
வெட்டியானாகிய நான் உயிரற்ற
கூடுகளைத்தான் அகற்றுகிறேன்!!

     <>

நான் இருக்கிறேன், இருக்கும்போதே
இல்லாமலும் போகிறேன்!
இல்லாத போதும் இருக்கிறேன்!
வாழ்க்கைப்புதிரை விடுவித்தோர்
வெகுசிலரே!
அதை விளக்கியோர் அதிலும் சிலரே!
இதற்கு மேல் இந்த வெட்டியானால்
விளக்க இயலாது!
உணர்வின் மொழியைக் கற்றுக்
கொள்வதொன்றே நேர்வழி!
வேறு வழிகளைத் தேடாதீர்!

     <>

மா.கணேசன்/ 13.5.2016












Thursday, 12 May 2016

ஆன்மீகமா? லௌகீகமா? *



        "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய
         ஒருவனாலும் கூடாது: ஒருவனைப்பகைத்து
         மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது
         ஒருவனைப் பற்றிக்கொண்டு,  மற்றவனை
         அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்
         பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால்
         கூடாது."
                                     - இயேசு (மத்தேயு 6:24)

இந்த வசனம் சாதாரணமாக பணியிடத்தில், அலுவலகத்தில் ஒருவரது
அதிகாரி, மற்றும் மேலதிகாரிகள் குறித்த விஷயத்திற்கும் பொருந்தும்.
பிரத்யேகமாக வாழ்க்கை என்று வரும்போது மனித ஜீவிகளாகிய நாம்
யாருக்கு, எதற்கு  ஊழியம் செய்திடவேண்டும், சேவை  புரிந்திட வேண்
டும் என்பதை அறிவுறுத்தும் விஷயத்திலும் இவ்வசனம்  பொருந்தும்.

இயேசுவின்  தனிச்சிறப்புமிக்க  வாழ்க்கைப்பார்வை இந்த வசனத்தில்
மிக எளிமையாக வெளிப்படுவதாயுள்ளது.   இயேசு   உண்மையில்  ஒரு
வன் இரண்டு எஜமான்களுக்குக்கீழ்பணிபுரிவதால் எழும் நடைமுறைச்
சிக்கலைப்பற்றி  இவ்வசனத்தில்  குறிப்பிடவில்லை.   மாறாக, "இரண்டு
எஜமான்கள்" எனும் உதாரணத்தின் முலமாக அவர் மிக ஆழமான செய்
தியையே  குறிப்பிடுகிறார்.  ஆம்,   இரண்டு   எஜமான்களுக்கு    ஒருவன்
ஊழியம் செய்யமுடியாது என்பதைப்போல தேவனுக்கும், உலகப்பொரு
ளுக்கும் ஊழியம்செய்யமுடியாது என்பதையே அவர் நமக்குத்தெரிவிக்
கிறார். 'ஆன்மீகமா?' 'லௌகீகமா?' என்கிறபிரச்சினையைத்தான் இந்த
வசனத்தின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.

எண்ணற்ற    பல    ஆன்மீக  மார்க்கங்களும்,  நவீன கால குருமார்களும்
குறிப்பாக  கிறித்துவமதப் பிரச்சாரகர்களும் இப்பிரச்சினைக்கு மிகவும்
மழுப்பலான  பதிலையே  தந்துள்ளனர்!   அதாவது   ஒரு   பறவை  பறப்ப
தற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும் என்பதைப்போல, மனிதன் வாழ்
வதற்கு  லௌகீகம்,  ஆன்மீகம் இரண்டும் வேண்டும் என்று பசப்புகின்ற
னர். ஆனால் இயேசு இப்பிரச்சினையை ஒரே வெட்டில்தீர்த்துவிடுகிறார்!

பெரும்பாலான   மனிதர்களுக்கு   குறிப்பாக     யாதொரு   சிந்தனையும்,
உணர்வும்   அற்ற   மனிதர்களுக்கு லௌகீகமே மொத்த வாழ்க்கையாக,
வாழ்வின் இலக்காக  இருக்கிறது.  இத்தகைய மனித சமூகத்திடம் உருப்
படியான  விஷயங்களை  எடுத்துச்  சொல்வதும்,   புரியவைப்பதும் மிகக்
கடினமே!    இந்த  சிந்தனையற்ற  திரளிலிருந்து   அநேகர்  ஆன்மீகத்தை
நோக்கிப்படையெடுக்கின்றனர். தங்களது அர்த்தமற்ற அன்றாடஜீவிதத்
தின்  வெறுமையிலிருந்து  தப்பித்து  சிறிது    ஓய்வெடுக்கும்விதமாகவே
இவர்களது ஆன்மீக ஈடுபாடு அமைந்துள்ளது.

இவர்களுக்கு யாதொரு மெய்ம்மை நாட்டமோ, உண்மை தேடலோ,அர்த்
தம்  பற்றிய  கேள்வியோ,   வாழ்க்கையின்  அசலான  நோக்கம்   குறித்த
விசாரமோ  எதுவும்  கிடையாது!   இவர்களது  ஆன்மீகப்  பயிற்சிகள், ஈடு
பாடுகள்  யாவும் வெறும் பாவனை ரீதியானதும், சடங்கு பூர்வமானதுமே
யாகும்!

இவர்களது ஆன்மீக நாட்டம், "உணரப்பட்ட தேவை"யின் வெளிப்பாடாக
விளைவாக   அல்லாமல்,    "சொல்லப்பட்ட தேவை"யின்    அனுஷ்டானங்
களாக   இருப்பதால்  அது மிகவும் மேம்போக்கானது,  பலனற்றது  என்று
சொல்லத்தேவையில்லை!   ஏனெனில்,  இவர்களது  இதயங்களுக்கு மிக
வும்  நெருக்கமானதும், அவர்களுடைய மாபெரும் பிடிப்பும் லௌகீகமே
என்பதில்  சிறிதும்  சந்தேகம்  வேண்டாம்!   இந்த பாசாங்குக்காரர்களுக்
கும்,  துளியும் ஆன்மீகம் பற்றி அறியாத மாபெரும் கும்பலுக்கும் பெரிய
வித்தியாசம் ஏதுமில்லை!  

ஆன்மீக நாட்டத்தைப் பொறுத்தவரை,  மனிதர்களில்  மூன்று விதமான
வர்கள் உள்ளனர். அதாவது, மிகப்பெரும்பான்மையானவர்களுக்கு ஆன்
மீக  வாசணை  என்பது  அறவே கிடையாது!    இரண்டாவது வகையினர்,
ஆன்மீகம் பற்றிக் கேள்விப் பட்டுள்ளவர்கள்;    இவர்கள்    தேன் கூட்டில்
தேன் உள்ளது என்பதை அறிந்துவைத்திருப்பவர்கள். ஆனால், மரத்தின்
மீது ஏறி தேனீக்களிடம் கொட்டுப்படாமல்,  அவைகளை  விரட்டியடித்து
பக்குவமாக தேனடையை எடுத்து வந்து அதைப்பிழிந்து தேனைஎடுத்து
உண்டு  மகிழாமல்  வெறுமனே தேனைப்பற்றிச் சிலாகித்துக் கொண்டி
ருப்பர்!

மூன்றாவது  வகையினர்,    இவர்கள்  மிகச்சிலரே,   விரல்விட்டு எண்ணி
விடக்கூடிய     எண்ணிக்கையிலான    இவர்கள்  மட்டுமே ஆன்மீகத்தின்
தேவையை  நேரடியாகத் தம்முள்ளிருந்தே உணர்ந்தவர்களாகவும், அது
குறித்து  பசி தாகம்  கொண்டவர்களாகவும், தீவிரத்தேடலில் ஈடுபடுகிற
வர்களாகவும் உள்ளவர்கள். இவர்கள் மட்டுமே,(உணர்வு எனும்)மரத்தின்
மீது  எவ்வாறு  ஏறுவது;  (ஆன்மா எனும்)  தேனை  மறைத்து  மொய்த்துக்
கொண்டிருக்கும் (எண்ணங்கள் எனும்) தேனீக்களை  எவ்வாறு விரட்டிய
டித்து  தேனை அடைவது என்பதற்குரியவழிமுறைகளைத்தாமே கண்டு
பிடித்து    அவைகளைக் கைக்கொண்டு  தேனை  உண்டு    திளைப்பவர்
களாவர்!  இவர்கள்  மட்டுமே  மாபெரும்  ஆன்மீக ஆசான்கள், ஞானிகள்
சொல்கிறவைகளை,  அவர்களுடைய   உபதேசங்களை  அப்படியே துளி
யும்   பிசகாமல்   பின்பற்றிச் செல்லும்   துணிவையும்,   ஒழுக்கத்தையும்
பெற்றவர்களாவர்!

இயேசுவின்  வாழ்க்கைப்பார்வை ஆழமானது, முழுமையானது;  ஆகவே
முற்றும் அறுதியானது! அவருடைய அதி தீர்க்கமான பார்வை இடைவழி
யிலுள்ள அனைத்து தடைகளையும், மேலோட்டமான கவர்ச்சிகளையும்
'தவிர்க்கவியலாதவைகள்'  எனத்தோற்றம்  தரும்  பல   நிர்ப்பந்த நிலை
மைகளையும்   கடந்து   வாழ்க்கையின்  சாரத்தை,      அதன்      கருவான
மையத்தைச்   சென்றடைந்துவிடுகிறது!   இயேசு சொல்கிற   வாழ்க்கை
'அன்றாட வாழ்க்கை'   எனும்  உயிர்-பிழைத்திருக்கும் விவகாரத்தினால்
மட்டுப்படுத்தப்படுகிற ஒன்றல்ல!

உலகப்பொருட்கள்  அல்லது  லௌகீகம்  என்பது   மனிதவாழ்க்கையின்
மிகச்சிறியதோர் பகுதிக்கு உரியதேதவிர அவையே மொத்த வாழ்க்கை
யும் அல்ல!  'லௌகீகம்' என்பது  உயிர்-வாழ்தல், ஜீவித்தல் எனும் அம்சத்
திற்குரிய வகையில்  அனுசரிக்கப்படும் வரை அது அடிப்படையானதாக
வும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்திடும்!அதுவே அத்தியாவசியம்எனும்
கோளத்தைக்கடந்து   அலங்காரமாகவும்,   பகட்டாகவும்  விரிவுபடுத்தப்
படும் போது,    'லௌகீகம்'  என்பது   ஜீவித்தலின்  மிகவும் பிறழ்ச்சியான
தொரு வடிவமாக மாறிவிடுகிறது!  இவ்வகையில், 'உயிர்-வாழ்தல்' என்ப
தும் 'லௌகீகம்'  என்பதும் ஒன்றல்ல என்பதை நாம்  தெளிவாகப் புரிந்து
கொள்வது மிகவும் அவசியமாகும்.   'உயிர்-வாழ்தல்'   என்பது அடிப்படை
யானதாகும்.   'லௌகீகம்'   என்பது   அத்தியாவசியம்  என்பதைக்  கடந்த
வீண் ஆடம்பரம் ஆகும்!

அதேநேரத்தில், ஒரு விஷயம் அல்லது அம்சம் அடிப்படையானது என்றால்
என்னவென்பதையும் நாம் தெளிவாகப்புரிந்துகொள்வது  அவசியமாகும்.
அடிப்படையானது  என்பது  அத்தியாவசியமானது,  அது இன்றி ஒரு குறிப்
பிட்ட  விஷயம்  அமையாது  எனக்காணலாம்.  ஆனால், அடிப்படையானது
என்பதே அனைத்துமானதோ, இறுதியானதோ அல்ல. மாறாக, அதன் மீது
எழுப்பப்படவேண்டிய  வேறு  ஏதோவொன்றிற்கான  ஒரு அடித்தளம் அது
என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதையே துல்லியமாக ஒரு
உதாரணத்தைக்கொண்டு  சொல்லவேண்டுமென்றால்,   எவ்வொரு  கட்ட
டத்திற்கும் அடித்தளம் என்பது அடிப்படை அவசியமாகும். ஆனால், அடித்
தளம்  என்பதே  கட்டடம்  ஆகாது!  மேலும்,  ஒரு கட்டடத்திற்கு அடித்தளம்
மிகவும் அவசியம் என்றபோதிலும்,  கட்டடத்திற்காகத்தான்  அடித்தளமே
தவிர  அடித்தளத்திற்காகக்  கட்டடம் இல்லை!  இதைப் போன்றதே மனித
வாழ்க்கையும்.

ஆம், 'உயிர்-வாழ்தல்' என்பது உண்மையான மனிதவாழ்க்கைக்கான ஒரு
அடிப்படையே,  அடித்தளமே  தவிர,   அதுவே   முழுமையான    வாழ்தலும்,
வாழ்க்கையும் ஆகாது. (ஏதோ) நாம் பிறந்துவிட்டோம், உயிரோடு இருக்கி
றோம்,   ஆக, தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னவெல்லாம் செய்ய
வேண்டுமோ    அவற்றையெல்லாம்    நாம்    செய்தாக  வேண்டும் என்பது
இயற்கையான, கொடுக்கப்பட்ட நிலையாகும். ஆனால்,  அத்துடன் மனித
வாழ்க்கை   முற்றுப்பெறுவதில்லை,  முழுமையடைவதில்லை!  முதலிடத்
தில்,  நாம் உயிரோடு இருப்பது அவசியம்;  அப்போதுதான் நாம் ஆன்மீகம்
பற்றியும்,   'உண்மை'  பற்றியும்,  தேவனுக்கு  ஊழியம்  செய்வது பற்றியும்
பேசவும் செயல்படுத்தவும் முடியும்.

உண்மையில்,  ஆன்மீகம் என்றால் என்ன?  உயிர்-வாழ்தல் என்பது வாழ்க்
கையின்  அடிப்படையைப்பற்றியது  என்றால்,  ஆன்மீகம்  என்பது  வாழ்க்
கையின்  இறுதிப்படியை, இலக்கைப்பற்றியது ஆகும்.வாழ்க்கை என்றால்
என்ன?   உயிர்-வாழ்தலின்  உண்மையான நோக்கம், குறிக்கோள், இலக்கு
என்ன? என்பதை  அறிந்து, உணர்ந்து,  அடைவது தான்  ஆன்மீகம்    ஆகும்.
இதற்கு மாறாக, ஒருசில பயிற்சிகளை- தியானம், யோகம், பிரணாயாமம்
போன்றவைகளை  எந்திரத்தனமாகச் செய்வது  அல்ல ஆன்மீகம் என்பது.
இன்னும்,      ஆலயங்களுக்குச் செல்லுதல்,  வழிபாடு,  பூசை,   புனஸ்காரம்,
சடங்கு, சாஸ்திரம் போன்றவைகளும் ஆன்மீகம் அல்ல.உள்ளதனைத்தின்
சாரமான உண்மையை உணர்ந்தறிதல், மெய்ம்மையைச் சேருதல், வாழ்க்
கையெனும் "புதிரை" விடுவித்தல்,  இச்செயல்பாட்டில்  "உணர்வு-மாற்றம்"
பெற்று  முழு-உணர்வை அடைதல்  ஆகியவையே உண்மையான ஆன்மீக
மாகும்.அதுவே 'தேவனுக்கு ஊழியம் செய்தல்' என்பதுமாகும்.

அதாவது, நமது ஒட்டுமொத்த உயிர்-வாழ்தலும், தேவனுக்கு ஊழியம்செய்
வதற்காக, ஆன்மீகத்திற்காகப் பயன்படுத்தப்படவேண்டும். அதாவது, நம்
வாழ்க்கையின்  இறுதிப்படியை, இலக்கை, முழுமையைஅடைவதற்காகப்
பயன்படுத்தப்பட வேண்டும்.

"இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் முடியாது" என்று
இயேசு கூறினார்.  உண்மையில்,  ஆன்மீகம்,  லௌகீகம்  என  இரண்டு எஜ
மான்கள்  கிடையாது!   நமது   உண்மையான  பிரச்சினை  'உயிர்-வாழ்தல்'
எனும்   குறுகிய  விவகாரத்தைக் கடந்து  நம்மால்  வாழ்க்கையைக்  காண
இயலவில்லை என்பதுதான்.   அந்த அளவிற்கு  நாம் விலங்குகளைப்போல
உணர்வற்ற தன்மையில் ஆழ்ந்துள்ளோம்! நம்மிடம் வாழ்க்கையைப்பற்றி
யாதொரு பார்வையும், புரிதலும் இல்லை!

"நாம் ஏன், எதற்காக உயிர்வாழ்கிறோம்?" என்ற கேள்வி நம்மிடம் இல்லாத
தால்,  உயிர்-வாழ்வதன் நோக்கத்தை இழந்துவிட்டு வாழ்ந்துகொண்டிருக்
கிறோம்! இதன்விளைவாக, உயிர்-வாழ்தலை நாம் மிக அலங்காரமாகவும்
ஆடம்பரமாகவும், மிகச்சௌகரியமாகவும் ஆக்கிடுவதை வாழ்வின் இலக்
காகக்கொண்டுவிடுகிறோம்-அப்போது 'உயிர்-வாழ்தல்' என்பதுமிக அபத்
தமானவகையில்  'லௌகீகம்'  என்றாகிவிடுகிறது!  அதாவது   'லௌகீகம்'
என்பது  மனிதவாழ்வின்  அசலான இலக்கிற்குக் புறம்பாக செயற்கையும்
போலியுமான  மதிப்புகளை   இலட்சியமாகவும்,    இலக்காகவும்   கொள்வ
தாகும்!   இந்த  லௌகீகம்  தான்  மனிதர்களை     "உலகப்பொருட்களுக்கு"
ஊழியம் செய்திடும் அடிமைகளாக ஆக்கிவிடுகிறது!

'லௌகீகம்'  எனும் தவறும், அபத்தமும், மட்டுப்பாடும் எப்போது நிகழ்கிற
தென்றால், இயல்பான தேவைகளை, அவை எழும்போது, முறையாக  அவ்
வப்போது பூர்த்திசெய்து  கொண்டு,   அசலான  மனிதவாழ்க்கை    பற்றிய
விசாரத்தில் ஈடுபடாமல், 'தேவைகள்-தேவைகளின் நிறைவேற்றம்' எனும்
விபரீதச்  சுற்றுக்குள்ளேயே   சிக்கிக் கொண்டுவிடும்  போது தான்    நிகழ்
கிறது! ஆம்,'லௌகீகம்' என்பது வாழ்க்கை பற்றிய யாதொரு  பார்வையும்
புரிதலும்  அற்ற மனித சமூகத்தின் செயற்கையான கண்டுபிடிப்பு ஆகும்!
'லௌகீகம்' என்பது,  நாகரிகமடைந்த 'விலங்கு-மனிதர்களின்'  "எஜமான்"
அல்லது "தேவன்" ஆகும்!

பொதுவாக,  வாழ்க்கை என்பது  இருவிதங்களில் மட்டுமே அணுகக்கூடிய
தாயுள்ளது எனலாம்.    ஒன்று,   உணர்வற்ற  அணுகுமுறை,   இன்னொன்று
உணர்வுப்பூர்வமான அணுகுமுறை.     உணர்வற்ற    அணுகு முறையானது
"சுய-உணர்வற்ற"  விலங்குஜீவிகளுக்கு  உரியதாகும். இந்த அணுகுமுறை
யின் வழியாக வாழப்படும் வாழ்க்கையை இயல்பான அல்லது  'இயற்கை
யான வாழ்க்கை' எனலாம்.  உயிருள்ள  ஜீவிகள்  யாவும் அவற்றின்  'இயல்
பூக்கி'களான,  பசி,  தாகம்,  பாலுணர்வு,  மற்றும்  பாதுகாப்புணர்வு ஆகிய
வற்றினால்  செலுத்தப்படுபவையாகும்.   இவ்வாறு,  இயல்பூக்கிகளினால்
செலுத்தப்படுவதனால் தான் அதை 'இயல்பான' அல்லது, 'இயற்கையான'
வாழ்க்கை எனக்குறிப்பிடுகிறோம்.

மனிதஜீவிகளும்    உடலையுடைய   ஜீவிகளாதலால்,   அவர்களுக்கும்  பசி,
தாகம், பாலுணர்வு, . . . . ஆகிய இயல்பூக்கிகள் உண்டு! ஆகவே, மனிதஜீவி
களுக்கும்,   'இயல்பான'  அல்லது,  'இயற்கையான'  வாழ்க்கை  எனும்  ஒரு
பக்கம் உண்டு! அதே நேரத்தில்,  மனிதஜீவிகள் விலங்குஜீவிகளைப்போல
வெறும்  உடலை  மட்டும்   உடைய ஜீவிகள் அல்ல!   அவர்களுக்கு   "மனம்"
அல்லது  "சுய-உணர்வு"  எனும் அம்சமும்  உள்ளது.  ஆகவே, மனிதஜீவிகள்
தாங்கள்  'ஏன், எதற்காக வாழ்கிறோம்?' என்பதையறியாமல்  பசி,  தாகம்,
பாலுணர்வு . . .   ஆகிய   இயல்பூக்கிகளால்  செலுத்தப்பட்டு    விலங்குஜீவி
களைப்போல, அறியாமை இருளில் உழல வேண்டியதில்லை!  ஆம், மனித
ஜீவிகள் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைக்கென்றே உருவானவர்கள்!இந்த
'உணர்வுப்பூர்வமான' அணுகுமுறையின் வழியாகவாழப்படும் வாழ்க்கை
இயல்பானதோ, இயற்கையானதோ அல்ல.  மாறாக, அது வேறொரு வகை
இயற்கையைச்சேர்ந்தது. சொல்லப்போனால், அது மட்டுமே ஒட்டுமொத்த
இயற்கையின்    மிக அசலான    இயற்கையாகும்!    அதுவே   அனைத்தின்,
அனைத்துப்படைப்பின் "மூலம்" ஆகும்.

வாழ்க்கையை வாழும், அல்லது அணுகும் முறையில்,  இரு வித வாழ்க்கை
மட்டுமே சாத்தியம். ஒன்று: உணர்வற்ற விலங்குஜீவிகளின்இயற்கையான
வாழ்க்கை.இன்னொன்று: உணர்வுப்பூர்வமான மனிதஜீவிகளின்இயற்கை
மீறிய வாழ்க்கை அல்லது 'ஆன்மீகவாழ்க்கை'.  ஆனால்,   இந்த   இரண்டிற்
கும் நடுவே 'லௌகீகம்' என்பது எவ்வாறு நுழைந்தது?

இயற்கையான வாழ்க்கையில், லௌகீகம் என்கிற ஒன்றிற்கு இடமில்லை!
ஆம்,   உணர்வற்ற  விலங்குஜீவிகளின் வாழ்க்கையில்   லௌகீகம் என்பது
இல்லை. அதேபோல், உணர்வுள்ள மனிதஜீவிகளின் வாழ்க்கையிலும் அது
இடம் பெற யாதொரு அடிப்படையும் இல்லை!  அப்படியானால், லௌகீகம்
என்பது எத்தகைய வாழ்க்கை? நாம் எத்தகைய ஜீவிகள்?

வாழ்க்கை  என்றால்  என்னவென்று  புரிந்து கொள்ள   முயற்சிக்கவில்லை
வாழ்க்கையின்  குறிக்கோள்,  இலக்கு  மற்றும்  அதன்  சாரமான  உண்மை
அல்லது   அதன் அர்த்தம்  ஆகியவற்றை     அறிய  முற்படவில்லையெனில்,
ஒன்று,     நாம்   வெறுமனே   அடிப்படைத் தேவைகளைப்   பூர்த்தி    செய்து
கொண்டு உயிர்பிழைத்துச் செல்லும் உணர்வற்ற விலங்குஜீவிகளாகவோ,
அல்லது   அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய  அடிப்படையற்ற,  தேவை
யற்ற  தேவைகளை   நாடிடும்   லௌகீக -அடிமைகளாக,   நாகரீகமடைந்த
பகட்டு  விலங்குஜீவிகளாகவோ தான் விளங்குவோம்!

ஆம்,  நாம்  உண்மையான வாழ்க்கையையும் அதன் ஒப்பற்ற இலக்கையும்
அறிய வில்லையெனில்,  செயற்கையும்,  போலியுமான தொரு   இலக்கைத்
தான் நாடிச்செல்லுவோம்! அந்த போலியான தேவைகள் சுட்டுகிற "உலகப்
பொருட்கள்"  அல்லது   "லௌகீகம்"   எனும்  பொய்யான தேவனுக்குத்தான்
ஊழியம் செய்வோம்!

இதற்கு மாறாக,   இயற்கையான வாழ்க்கை   மற்றும்   மனிதஜீவியின் உள்
ளார்ந்த  பரிணாமவளர்ச்சி விதிகளின்படி , உணர்வின் அடுத்தடுத்தக்கட்ட
உயர்நிலைகளை எட்டுகிறவிதமாக உணர்வுப்பூர்வமாக வாழ்வோமெனில்
வாழ்க்கையின் மிக அசலானதும்,  ஒப்பற்றதுமான   "முழு-உணர்வு"   எனும்
இறுதி  நிலையைச் சென்றடைவோம்.  மனிதஜீவியை   முழுமைப்படுத்தும்
இந்த ஒப்பற்ற நிலைதான் நமது இலக்கு!ஆம், வாழ்க்கையின் இலக்குதான்
நாம்   ஊழியஞ்செய்யவேண்டிய   உண்மையான   எஜமானனும்,   தேவனும்
ஆகும்!

வாழ்க்கைக்கு  இலக்கு  என்று ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தால் தான்
நம்முடைய  உண்மையான எஜமான் யார் என்பதைக் கண்டடைய முடியும்!
மேலும், வாழ்க்கைக்கு முறையான இலக்கு என்று ஒன்று தான் இருக்கமுடி
யும்.    அதற்குக் கீழாகவோ,  மேலாகவோ,   அதற்குப்  புறம்பாகவோ   வேறு
இலக்கு  எதுவும்  இருக்கமுடியாது!   வாழ்க்கையின்  "முழுமை"  தான்  அந்த
இலக்கு.  வாழ்க்கையின் சாரமான உண்மையும், முழுமையும்,  தேவன் என்
பதும் ஒன்றே.

"தேவனுக்கும்  உலகப்பொருட்களுக்கும்   ஊழியஞ்செய்ய  உங்களால்  முடி
யாது" எனும் இயேசுவின் கூற்று இறுதியானது! அதுகுறித்து விவாதம்செய்ய
ஏதும்  இல்லை!  நம்மில்  அநேகர்,   உலகப்பொருட்களுக்கு   ஊழியம்செய்து
கொண்டு   தேவனுக்கும்  ஊழியம்    செய்வதாக    நம்பிக்கொண்டு   வாழ்க்
கைக்கு  விரோதமாக  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!   ஆம்,   இரண்டிற்கும்
ஊழியஞ்செய்வது என்பது முற்றிலும் சாத்தியமற்றது! ஒருவனுக்கு இரண்டு
இதயங்கள்   இருந்தால்   ஒருவேளை  அது  சாத்தியமாகலாம்!  நம்மில் பலர்,
மிகச் சாதுர்யமாக, 'தேவனுக்கும் உலகப்பொருட்களுக்கும் ஊழியஞ்செய்ய
இயலாததாகையால்'   நான்  இரண்டில்  ஒன்றைத்  தெரிவ செய்திட விரும்பு
கிறேன்;   அதாவது,    நான்      ' உலகப்பொருட்களுக்கு'    ஊழியஞ்செய்யவே
விரும்புகிறேன்  என்று சொல்லலாம்,  அது  போலவே  செய்யலாம்.   ஆனால்,
அது தற்கொலைக்குச் சமமானதாகும். ஏனெனில்,
           
                " மனுஷன் உலகம் முழுவதையும்
                  ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்
                  ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு
                  லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு
                  ஈடாக என்னத்தைக்கொடுப்பான்?"
                                            - இயேசு(மத்தேயு 16:26)

என்பதாக இயேசு கேட்கிறார்.

                <><><><><><>

* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி!"
(இயேசுவை மறு-கண்டு பிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.

மா.கணேசன்/18.07.2011 & 09.05.2016



















Monday, 9 May 2016

இறுதியான உறவை நாடுங்கள்! *






                 "ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன்
                  வீட்டாரே."
                                         (மத்தேயு 10:36)

                 "தகப்பனையாவது தாயையாவது என்னிலும்
                  அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                  அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                  அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                  அல்ல."
                                         (மத்தேயு 10:37)

                  "யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன்
                    தகப்பனையும் தாயையும் மனைவியையும்
                    பிள்ளைகளையும்  சகோதரரையும் சகோ
                    தரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்கா
                    விட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
                                        ( லூக்கா 14:26)
         
                  "அப்படியே உங்களில் எவனாகிலும்
                   தனக்கு உண்டானவைகளையெல்லாம்
                   வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச்
                   சீஷனாயிருக்கமாட்டான்."
                                       ( லூக்கா 14:33)

ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபடவிரும்பும் ஒருவனுக்கு, வாழ்க்கையை
மேலோட்டமாக வாழ்ந்து சென்றிடாமல் வாழ்க்கையின் உட்பொருளை
அர்த்தத்தை    உண்மையை   மெய்ம்மையை அறிந்திடத் தீவிர ஆர்வம்
கொண்ட  ஒருவனுக்கு  இயல்பாகவே  'குடும்பம்'  எனும் அமைப்பானது
சாதகமாக இருக்காது!    மேலும்    அதிகமானோருக்கு ஆன்மீக நாட்டம்
என்பதே    ஏற்படுவதில்லை என்பதற்கும்  குடும்ப-அமைப்பே காரணம்
எனலாம்!

இன்னும், குடும்பஅமைப்பு என்பது சமூகஅமைப்பின் ஒரு சிறுபகுதியே
ஒரு சிறு உறுப்பே  என்பதால்  அது  தனது மட்டுப்பாடான அம்சங்களை
சமூக அமைப்பிலிருந்தே  சுவீகரித்துக்கொண்டுள்ளது   எனலாம்!    இவ்
வகையில் சமூகஅமைப்பும் தனிமனிதர்களின் ஆன்மீகநாட்டத்திற்கும்
வளர்ச்சிக்கும் சாதாகமாக அமைந்திடாது!

ஏனெனில்,  குடும்ப அமைப்பும்  சமூகஅமைப்பும்    ஒரு தனிமனித ஜீவி
யைப்போன்று    வாழ்க்கையை    நேரே   அணுகக்கூடிய   உணரக்கூடிய
தன்மையைப் பெற்றிருக்கவில்லை.    வாழ்க்கையை    அதன் ஆழமான
உண்மையை   ஒவ்வொரு   தனிமனிதனாலும்  மட்டுமே  உணரமுடியும்!

சமூகஅமைப்பு  என்பது பல தனிமனிதர்களால்தான் ஆனது என்றாலும்
எல்லாரும்    சமமான   ஒரே அளவிலான    உளவியல்   மற்றும்    ஆன்மீக
வளர்ச்சியைப்  பெற்றிருப்பதில்லை!    ஆக    ஒவ்வொரு  தனிமனிதரும்
வாழ்க்கையை        ஒவ்வொரு விதமாகவே   காண்பர்   புரிந்துகொள்வர்.
அதில்   யாதொரு  ஒற்றுமையையும்   ஒத்தகருத்தையும் எட்ட முடியாது!
குடும்ப அமைப்பின்  நிலையும் இதுவே!    வாழ்க்கையின் அசலான தன்
மையை  அதன் ஆழமான அர்த்தத்தை  உண்மையை    உணர்வுத் துடிப்
புள்ள ஒவ்வொரு தனிமனிதனாலும் உணரமுடியும். ஆனாலும் அத்தனி
மனிதனின் கருத்தை  பார்வையை  சமூகத்தின்   அனைவரும்   ஏற்றுக்
கொள்வர்   என்று  சொல்லமுடியாது.   ஏனெனில்,    தாங்கள்  கண்டிராத
அனுபவம் கொள்ளாத   உணராத  ஒரு  விஷயம்  குறித்த  அறிவை புரித
லை பிற தனிமனிதர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது;  அதைப்பகிர்ந்து
கொள்ளவும் முடியாது.

அப்படி   சமூகத்திலுள்ள     குடும்பத்திலுள்ள    எல்லா உறுப்பினர்களும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக  பகிர்ந்துகொள்ளக்கூடியதாக அனைவருக்
கும் பொதுவான ஒரு வாழ்க்கை உள்ளதென்றால் அது   அடிப்படையான
அன்றாட ஜீவித்தல் மட்டுமேயாகும்!

ஆம் புத்தரின் இயேசுவின் கருத்துகளை  வாழ்க்கைப் பார்வையை   நம்
எல்லோராலும்   எளிதாகப்   புரிந்துகொள்ளவோ   பகிர்ந்துகொள்ளவோ
இயலாது!   ஆனால்  அவர்களுடைய  உணவை பொருட்களை அறையை
நாம் பகிர்ந்துகொள்ள முடியும்!

சமூகத்திற்கு வெறும் உயிர்-வாழ்தலும் அதற்குரிய தேவைகளின் நிறை
வேற்றமும் மட்டுமே தெரியும். அதற்குமேல் ஆன்மீகரீதியான வாழ்க்கை
இன்னும் மனிதவாழ்க்கையின் அசலான குறிக்கோள்  இலக்கு குறித்தும்
எதுவும் தெரியாது!  அவை குறித்த  அவசியமும்  முக்கியத்துவமும் அதற்
குப்புரியாது!

ஆனால் இயேசு,  நமக்கும்   உலகிற்கும்  சொல்ல வந்தது  நாமனைவரும்
அறிந்த  இந்த அன்றாட உயிர்வாழ்க்கையைக்கடந்த உணர்வுபூர்வமான
தொரு "உயர்-வாழ்க்கை"யைப் பற்றியே ஆகும்.

ஆம்  இயேசுவின் பார்வையில் வாழ்க்கை என்பது முற்றிலும்  சுத்தமான
தாக  சுதந்திரமானதாக கலப்படமில்லாததாகத் திகழ்கிறது. பொதுவாக
நாமெல்லோரும் வாழ்க்கையை ஒரு நெடிய பயணமாகக் கருதுகிறோம்.
ஆனால்  இயேசுவோ பயணத்தின் முடிவாகப்   போய்ச்சேருமிடத்தையே
வாழ்க்கையாகக்    காண்கிறார்!    அவ்வாறே  அவர்  அந்த  இலக்கையும்
சென்றடைந்து விட்டார். அவர் அடைந்தது  வாழ்க்கையின் "உச்ச நிலை"
யாகும்! அங்கிருந்துதான் அவர் நமக்கு உபதேசிக்கிறார்!   நாம் ஒவ்வொ
ருவரும்   அந்த    'உச்ச-நிலையை'   முழுமையை   அடையவேண்டுமென
நமக்கு நேர்வழியைக் காட்டுகிறார்!

இது   மிகவும்  முக்கியமானது!   எந்தவொரு பயணமும்  அதன் முடிவிடத்
தைக்கொண்டுதான் அர்த்தம் பெறுகிறது. வாழ்க்கையும் அப்படித்தான்.
போய்ச்  சேருமிடம்  அறியாத     முடிவிடமில்லாத  பயணம்    அர்த்தமற்ற
தாகும்!    நாம் பயணிக்கிறோம்,    அதாவது   'வாழ்கிறோம்'  என்கிறோம்!
ஆனால் நாம் எங்கே எதை நோக்கிச்செல்கிறோம் என்பது நமக்குத்தெரி
யாது!    அதைத்  தெரிந்து  கொள்ள  நாம்  பெரிதாக  ஆர்வமும்   கொள்வ
தில்லை முயற்சியும் மேற்கொள்வதில்லை.  நாம்    உண்மையில் போய்ச்
சேரவேண்டியஇடத்தை அறியாததால் "மரணம்" நம்மை வந்துசேர்கிறது!
ஆனால்  முறையாக  உண்மையாக  நாம் பயணித்தோமெனில் 'மரணம்'
நம்மை  நெருங்குவதற்குள்   நாம்   நித்தியவாழ்வை   அடைந்திடுவோம்!
ஏனெனில் உண்மையான உணர்வார்ந்த வாழ்க்கை மரணத்தில் முடிவது
இல்லை!   மாறாக  முழுமையான   அழிவில்லா   நித்திய   வாழ்க்கையில்
தான்  அது  நிறைவடையும்!   உண்மையான வாழ்க்கை ஒரு போதும் அழி
வதோ,  முடிவடைவதோ  கிடையாது!!  மாறாக  வாழ்க்கை முழுமையடை
யவே செய்கிறது!

உயிர்-பிழைத்திருத்தலைத்தவிர மனித-வாழ்க்கை பற்றி எதுவுமே தெரி
யாத ஒரு பெரும் சமூகத்திற்குள்,  அதன் பகுதியான குடும்ப-அமைப்பிற்
குள்தான் (தனி)மனிதர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கரையேறவேண்டி
யுள்ளது என்பது துரதிருஷ்டவசமானதாகும்!

மேலும்  ஆன்மீகரீதியாக வளர்ச்சியடைந்த தனி மனிதர்களுடன் ஒப்பிடு
கையில்     சமூகமும்   குடும்பமும்  மிகவும்  பின்தங்கிய    பிற்போக்கான
ஜந்துக்களின்    கோட்டையாகவே   உள்ளன எனலாம்!ஆகவே அன்றாடம்
கடந்த 'ஆன்மீகவாழ்க்கை' என்பது இந்த சமூக-ஜந்துக்களுக்கும் குடும்ப
ஜந்துக்களுக்கும் ஒரு மாபெரும் 'அச்சுறுத்தலாகவும்' 'வாழ்க்கைவிரோத'
மான விவகாரமாகவே தெரியும்!

ஆன்மீகவளர்ச்சியின் உச்சத்தையடைந்த இயேசு போன்ற ஒரு தனிமனி
தரானவர்  அன்றாட வாழ்க்கை  நடைமுறைகளையும் மட்டுப்படுத்துகிற
அதன்   சுற்றினையும்     கடந்து  செல்வதன்  அவசியத்தைப்  போதிக்கும்
போது   அவர்   ஒட்டு மொத்தமாக    இந்த    அடிப்படை வாழ்க்கையையே
தகர்ப்பவராகவே மறுப்பவராகவே தெரிவார்!   இயேசுவின் தனிச்சிறப்பு
மிக்க 'வாழ்க்கைப்பார்வை' யின் சாரம் என்னவென்றால் :
           வாழ்க்கை என்பது உணவு உடை உறைவிடம்
           மற்றும் உறவுகள் குறித்த விவகாரம் அல்ல!
என்பதே யாகும்! இவ்விவகாரங்களுக்கும்  வாழ்க்கையில் இடம் உள்ளது
என்றாலும் அதற்கான இடம் மிகமிகச் சிறியதே என்கிறார்! ஆகவேதான்
அவர்     "என்னத்தை உண்போம்   என்னத்தைக் குடிப்போம்  என்னத்தை
உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள் . . .முதலாவது தேவனின்ராஜ்
யத்தை தேடுங்கள். ." என்கிற வசனத்தின் மூலம் வாழ்க்கையை வெறும்
"சோற்றுப் பிரச்சினை"யாகவும் தேவைகளுக்குச் சேவைபுரியும்  விவகா
ரமாகவும்  காண்கிற  சுருக்கி விடுகிற மட்டுப்பாட்டிலிருந்தும் வெளிவரு
மாறு நம்மைக் கோருகிறார்!  ஆகவே தான் :
                    "ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள்
                     அவன் வீட்டாரே."          (மத்தேயு 10:36)                                          
என்றுசொல்லி நம்மை எச்சரிக்கிறார்!   ஆம்,  'ஒரு மனிதனுக்கு எதிரிகள்
அவன் குடும்பமே குடும்பத்தாரே' என்பதை நாம் அப்படியே எடுத்தஎடுப்
பிலேயே புரிந்துகொள்ளமுடியாது!

முதலில்  வீடு குடும்பம் என்பவை   எவற்றைக்குறிக்கின்றன பிரதி நிதித்
துவம்  செய்கின்றன  என்பதைக்காண்போம்.   வீடு  குடும்பம்   என்பவை
மிகவும்  பாதுகாப்பான  சௌகரியமானதொரு   கூடு  எனலாம். பெரிதும்
அடிப்படையானதும்   உடனடியானதுமான  தேவைகளை மட்டுமே மைய
மாகக்கொண்டதொரு 'வாழ்க்கை' யை மட்டுமே அவை பிரதிநிதித்துவம்
செய்கின்றன.    அடுத்து   பிராணித்தனமான   இன்பங்களையும்   இச்சை
களையும்     பாசப் பிணைப்புக்களையும்   பிரதானமாகக்   கொண்டவை.
அடுத்து  பழமை  பாரம்பரியம் பிற்போக்குத்தனம் ஆகியவற்றைப்பேணு
கிற அமைப்புமாகும்!

அடுத்து    ஒரு குடும்பத்திலுள்ள   அங்கத்தினர்களைப் பாதுகாத்துப் பரா
மரிப்பதற்கு  குடும்பத்தலைவராக  விளங்குபவர் உத்தியோகம் தொழில்
என்று வெளியேசென்று சம்பாதித்துவரவேண்டியுள்ளது. அதற்காக அவர்
தமது உழைப்பையும் சக்தியையும் நேரத்தையும்முழுமையாகச்செலவிட
வேண்டியிருப்பதால்   அவரால்    அன்றாட வாழ்க்கைக்குரிய  தேவைகள்
பொருட்கள் அலுவல்கள் விவகாரங்கள் பரிவர்த்தனைகள்ஆகியவற்றை
கடந்து  வேறு எந்த விஷயத்திலும்  ஈடுபடுவது என்பது     இயலாத காரிய
மாகும்! அதில் எந்தவித பொருட்-பயனும் இல்லாத  உயரிய ஆன்மீக விஷ
யங்களில் ஈடுபடுவது என்பது  நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரிய
மாகும்!

இன்னும்    பலரது குடும்பங்களில்      பொருளாதாரக் காரணங்களுக்காக
குடும்பத்  'தலைவரும்'   'தலைவியும்' வெளியேசென்று பணி புரியவேண்
டியுள்ளது!   குழந்தைகளுக்கோ பள்ளி கல்லூரி செல்வது பிழைப்புக்கான
கல்வியையும்   திறமைகளையும் கற்பது   போன்ற  ஈடுபாடுகள் உள்ளன.
இவ்வாறு குடும்பத்திலுள்ள அனைத்துஅங்கத்தினர்களும் - சிறியவர்கள்
பெரியவர்கள்   என எல்லோருமே  அன்றாட உயிர்வாழ்த்லுக்கான  பொரு
ளியல்    சம்பந்தமான   விவகாரங்களில்  மட்டுமே    முழுவதுமாக  மூழ்கி
யிருக்க   வேண்டியுள்ளது!    இதனால்   மனிதஜீவிகள்   என்கிற வகையில்
மனிதஜீவிக்குரிய    உயரிய-ஆன்மீக வாழ்க்கைத்  தொடர்பான விஷயங்
களில்  ஈடுபட இயலாமல்  எப்போதும் புறத்தே பொருட்கள் மற்றும் சமூக
நிகழ்வுகளின்  உலகத்தைச் சார்ந்திருக்குமாறு  ஆகிவிடுகிறது! அதாவது
வீடு  குடும்பம்  குடும்பத்தார் என்றாலே உடலின் நலம் உள்ளிட்ட உடலின்
வாழ்க்கையை   மட்டுமே    பிரதிநிதித்துவம் செய்வதாயுள்ளது. ஆக ஆன்
மீகம் சேராத  வெறும்  உடலின்-வாழ்க்கை  என்பது  பிராணித்தனமானது
அதாவது   மனிதத்தரத்திற்குக் குறைவானது    என்பதை பிரத்யேகமாகக்
குறிப்பிடத் தேவையில்லை!

வீடு குடும்பம் எனும் சூழலில் லௌகீகம் மட்டுமே பெருகிவளரும்! அதில்
ஆன்மீகம்  என்கிற  பேச்சுக்கே இடமில்லை   என்பது தான் அப்பட்டமான
உண்மை நிலையாகும்!   இத்தகைய  சூழலில் ஒருசில மனிதஜீவிகளுக்கு
எவ்வாறேனும்   ஆன்மீக-நாட்டம் தோன்றிவிடுகிறது   என்றாலும் குடும்ப
அங்கத்தினர்களின்   எதிர்ப்புகளையும்   தடைகளையும் தாண்டி  அவர்க
ளால்  ஆன்மீகத்தில் முன்னேறுவது முழுமையடைவது என்பது சாதாரண
விஷயமல்ல!    ஆகவே தான்,    "ஒரு   மனுஷனுக்கு    சத்துருக்கள்    அவன்
வீட்டாரே" என்று இயேசு குறிப்பிடுகிறார். மேலும்,

                  "தகப்பனையாவது தாயையாவது என்னிலும்
                   அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                   அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                   அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                   அல்ல."                                         (மத்தேயு 10:37)
                                       
எனவும் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் தனது தகப்பனையோ, தாயையோ        
மகனையோ   மகளையோ  அதிகமாய் நேசிப்பதில்  பெரிய தவறு எதுவும்
இல்லை!   ஆனால்  இவ்வாறு  தனது குடும்பத்தாரை அதிகமாய் நேசிப்பது
என்பது  வெறும் 'நேசிப்போடு'  நின்றுவிடக்கூடிய விஷயமல்ல!  நாம் யார்
யாரையெல்லாம்     அதிகமாய்  நேசிக்கிறோமோ  அவர்களுடைய    நலன்
களையும்   தேவைகளையும்   ஆசைகளையும் விருப்பங்களையும்   நிறை
வேற்றுவதும் அதில் அடங்கியுள்ளது - சில சமயங்களில் அவர்களது விருப்
பம்  நியாயமற்றதாகவும்   பிறர்க்குத்  தீங்குவிளைவிப்பதாகவும் தவறான
தாகவும்   அர்த்தமற்றதாகவும் கூட அமைந்து விடலாம்!    ஒருவன்     தனது
மனைவியின்    விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக   கொலை   களவு
போன்ற தீய காரியங்களையும்  செய்திடத் துணியலாம்!  ஆக நாம் அதிக
மாய்   நேசிப்பவர்களை    மகிழ்விக்கும் பொருட்டு அவர்களது விருப்பங்க
ளுக்கும்  வழிமுறைகளுக்கும்  இணங்கிச்செல்வதும் அவர்களுக்குச் சேவ
கம்   புரிவதும்   தவிர்க்க இயலாத தாகிவிடும்!    இவ்வகையில்   உறவுகள்
யாவும் பினைக்கும் தளைகளே சங்கிலிகளே எனலாம்!
ஆக,            " தகப்பனையாவது   தாயையாவது   என்னிலும்
                       அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                       அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                       அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல."                        
என்று   இயேசு சொல்லிடும் போது   அவர்  தன்னை முன்னிலைப்படுத்துவ
தாகவும் பிரதானப்படுத்துவதாகவும் தெரியலாம்!  ஆனால் அவர் ஓர் உயர்
ஆன்மீகவாழ்க்கையைப் பிரதிநிதித்துவம்செய்வதால் மேலும் அத்தகைய
உயரிய வாழ்க்கையையே அவரும் வாழ்ந்து கொண்டிருந்ததால் அதையே
அவர்    நமக்கும்   உபதேசிப்பதால்    பிற  சாதாரண மனித உறவுகளையும்
பொருட்களையும்   விஷயங்களையும்விட அதிகமாய் நாம் இயேசுவையும்
அவர்  உபதேசிக்கும் உயரிய ஆன்மீக வாழ்க்கையையும் நேசிப்பது பிரதா
னமாகிறது!

உயரிய   ஆன்மீக வாழ்க்கை என்பது    "கடவுளுடனான"   உறவைப்பற்றிய
தாகையால்  நாம்   குடும்பம்  மற்றும்   பிற உறவுகளில்  சிறைப்பட்டிராமல்
அவற்றைக்கடந்து  செல்வது அவசியமாகிறது!   ஏனெனில் குடும்ப உறவுக
ளைப்போல   வேறு   எந்த உறவும்   நம்மைப்  பெரிதாகச்   சிறைப்பிடிப்பது
இல்லை! மேலும் குடும்ப உறவுகள்   யாவும்   குறுகியவையும்   சுயநலமான
வையும்   ஆகும்! ஆகவே அனைத்திற்கும் மூலமாகவும் முடிவாகவும் விளங்
குகிற கடவுளைத்தேடுகிற,   கடவுளுடனான உறவு  மட்டுமே   முக்கியமான
தாகும்.    ஏனெனில்  அது மட்டுமே   மனிதனை   நிறைவுசெய்து  முழுமைப்
படுத்தி "விடுதலை" செய்வதாகும்!

ஆனால்   கடவுளை ஏன் மனிதன் முதலில் தேடிடவும் நாடிடவும் வேண்டும்?
சாதாரணமாக  பொதுவாக எல்லோரும் எண்ணுவது போல கடவுள் என்பது
படைப்புக்கு  மூலகாரணமாக  அமைந்திட்ட  ஒன்று  மட்டுமல்ல!  அதாவது
கடவுள்  உலகைப்படைத்துவிட்டு  பொறுப்பில்லாமல்   எங்கோ காணாமல்
போய்விடவில்லை! அல்லது அவர் மேலே சொர்க்கத்தில்அமர்ந்துகொண்டு
கீழே      உலகில்   நிகழ்பவைகளை    கண்காணித்துக்கொண்டும்   இருக்க
வில்லை!   மாறாக   கடவுள்  படைப்பினுள்  உள்ளடங்கியுள்ளார்!   அதாவது
கடவுள்  உலகைப் படைக்கவில்லை;   மாறாக  அவரே  உலகமாக உருமாறி
யுள்ளார்!   உலகமாக உருமாறிய கடவுளைத்தான் நாம் 'படைப்பு' 'சிருஷ்டி'
'உலகம்' என்றெல்லாம் அழைக்கிறோம்!

உலகமாக   உருமாறிய கடவுள்  மனிதஜீவியின் வழியாக  மனிதனின்  உள்
ளேயும் ஊடேயுமாக எழுந்து (வெளிப்பட்டு) மீண்டும் தனது அசலானநிலை
யை அடையும்விதமாகத்  திட்டம் கொண்டுள்ளார்!

                  "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்
                    சிருஷ்டித்தார்,அவனைத் தேவசாயலாகவே
                    சிருஷ்டித்தார்.ஆணும் பெண்ணுமாக
                    அவர்களைச்  சிருஷ்டித்தார்."
                                     (ஆதியாகமம் 1 :27) / பழைய ஏற்பாடு

என்ற    வசனத்தின்   உள்ளார்ந்த  அர்த்தம்  இதுதான். சிருஷ்டியாக மாறிய
கடவுள் சிருஷ்டியின் நிலையிலிருந்து மீண்டும் தனது அசலானநிலைக்குத்
திரும்பிடும்  வழிமுறையைத்தான் நாம்  "பரிணாமம்"  என்றழைக்கிறோம்.
அதில் கடவுள் தனது  அசலான நிலைக்குத் திரும்புவது என்பதும்   மனிதன்
கடவுளின்  மீது நேசம்  (தேவ அன்பு)  கொண்டு  அவரைத் தேடிக்  கண்டடை
வது என்பதும் ஒன்றேயாகும்.

கடவுளின் மீது நேசம் கொள்வது,   'தேவஅன்பு'  கொள்வது என்பது  ஞானத்
தாகம் கொண்டு      உண்மையைத் தேடுவது,    மெய்ம்மையைத்  தேடுவது
தன்னையறிவது, வாழ்வின் அர்த்தத்தைத் தேடுவது,  மூலத்தைத்தேடுவது
முழுமையைத் தேடுவது என்பவற்றையே குறிக்கின்றது.   ஆம்   மனிதஜீவி
யானவன் ஒரு எலியைப் போன்றவனோ,  அல்லது    தவளையைப் போன்ற
வனோ    அல்லவெனில்,     அவன்  தனது  உணவைத்தேடுவதற்கு முன்பாக
உண்மையைத் தேடுபவனாக இருக்கவேண்டும்!அவன் தனது 'இரை'யைத்
தேடுவதற்கு  முன்பாக,   "இறை"யைத் தேட வேண்டும்!  ஏனெனில்  கடவுள்
என்பது நமது "உயிரின் உயிர்,"  "ஆன்மாவின் ஆன்மா" ஆகும். அனைத்தின்
சாரம்  ஆகும்.     'மெய்ம்மையின் மெய்ம்மையாக'   விளங்குவது   கடவுளே!
ஆகவேதான் எல்லா உறவுகளையும் கடந்து நாம் கடவுளைத்  தேடிக்கண்ட
டைவது அவசியமாகும்!

இயேசு நம்மிடம் நமது தாய் தந்தையை நம் குழந்தைகளை நேசிக்கவேண்
டாம் என்று சொல்லவில்லை!   மாறாக  நமது  "நேசிப்பின்"  இலக்கு  எதைக்
குறிவைத்ததாக  உள்ளது என்பது குறித்து கவனம் கொள்ளச்  சொல்கிறார்.
அதாவது  நாம் நமது தாய் தந்தையை குழந்தைகளை நேசிப்பதன் வழியே
நாம் அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறோம்?   அல்லது    நமது     தாயும்
தந்தையும்   அவர்களது    நேசத்தினால்  நம்மை எங்கு கொண்டு  சேர்த்துள்
ளார்கள்?   மேலும்   நம்முடைய   'சுய-நேசம் '  (ஒருவன் தன்மீது கொள்ளும்
நேசம்) என்பது நம்மை எங்கு கொண்டுசேர்க்கிறது? இவைகுறித்தெல்லாம்
என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா? நம்முடைய   'சுய-நேசம்'  நம்மை
உண்மையில் கரை சேர்க்கிறதா?   நம்மை  நாம்  அவ்வளவு  அதிகமாகவும்
முழுமையாகவும் நேசிக்கிறோம்!   ஆனால்  முடிவில்  மரணத்தில் அல்லவா
நாம் முடிந்து போகிறோம்?  அப்படியானால் நேசம் அன்பு என்பது பயனற்ற
விஷயமா?  அன்பைவிட  மரணம்  வலியதா?   அப்படியானால்  எது அல்லது
எதனுடனான  நேசம்  அல்லது  உறவு  நம்மை  பாதுகாப்பான இறுதிக் கரை
யில் கொண்டு சேர்க்கும்?

நம்    பெற்றோர்கள்  நம்மை அன்பைக் கொட்டி  சீராட்டிப் பாராட்டி வளர்க்
கிறார்கள்!    ஆனால்   அவர்கள்  நம்மை  எதற்குத் தயார்படுத்துகிறார்கள்?
நாமும் நம் குழந்தைகளை அன்பைப்பொழிந்து வளர்த்து அவர்களை எதற்
குத்  தயார்படுத்துகிறோம்?    நமது  அன்பு  நேசம்  யாவும்   நம்மையும்  நம்
சொந்தங்களையும் வாழ்க்கையிலிருந்து அழிவிலா நித்தியவாழ்க்கைக்கு
கொண்டு சேர்ப்பதாகவுள்ளதா?  அதாவது 'நித்திய-ஜீவனை' அடைவதற்கு
நம்மைத்  தயார்படுத்துவதாகவுள்ளதா?  அல்லது   மரணத்திடம் கொண்டு
சேர்ப்பிக்கிறதாகவுள்ளதா?   அப்படியானால்   அதாவது மரணம் தான் முடி
வான முடிவு என்றால் நம்முடைய அன்பு நேசம் பாசம்  யாவும் பயனற்றதே!
அர்த்தமற்றதே! மிகவும் மட்டுப்பாடானதே! ஆம் நம்முடையஅன்பில் ஏதோ
பெருங்குற்றம் உள்ளது.

அன்பு   என்பது   மிகவும் மையமானது! அன்பு இல்லாமல் ,  நாம் மட்டுமல்ல
புழு பூச்சிகள் பறவைகள் விலங்குகள்  எதுவும் வாழ முடியாது! "வாழவேண்
டும்"  எனும் விருப்பம்,    "தம்மைப்  பாதுகாத்துக் கொள்ளவேண்டும்"  எனும்
உந்துதல் இன்றி எவரும் எதுவும் உயிர்வாழ முடியாது! மானிட ஜீவிகளாகிய
நாம்  தற்போது   வாழ்ந்துகொண்டிருக்கிற  அர்த்தமற்ற  உணர்வற்ற   இலக்
கற்ற  மேலோட்டமான இந்த அரைகுறையான வாழ்க்கையும்கூட மிகஅடிப்
படையான, சுய-நலம் மிகுந்த 'சுய-அன்பினால்' தான் சாத்தியமாகிறது!

'வாழவேண்டும் எனும் விருப்பமும்' மற்றும் 'தம்மைப்பாதுகாத்துக்கொள்ள
வேண்டும்  எனும்  உந்துதலும்'   தான்       அன்பிற்கான     அடிப்படையாகும்!
ஆனால்    நம்முடைய   அன்பைக்கொண்டு  நம்மால்  உயிர்-பிழைத்திருக்க
மட்டும் முடிகிறதேயொழிய முழுமையாக வாழவும் முழுமையாக நம்மைப்
பாதுகாத்துக்கொள்ளவும் முடிகிறதா?  'மரணம்' சம்பவிக்கும் வரை மட்டும்
வாழமுடியும்! மரணம்வந்ததும் நம் கதை முடிந்துவிடும்! அதாவது முழுமை
குறைவான  முதிராத 'பிஞ்சு' அன்பைக்கொண்டு நாம் ஏதோ வாழ்கிறோம்!
ஆனால்  அதைக்கொண்டு  நம்மை   முழுமையாகக்   காப்பாற்றிக்கொள்ள
முடிவதில்லை! அப்படியானால் முழுமையான அன்பு நம்மிடமிருந்தால்  நம்
மால்   முழுமையாக    வாழவும்   முழுமையாக மரணத்திடமிருந்து நம்மைக்
காப்பாற்றிக்கொள்ளவும் முடியும்!

ஆகவேதான்  இயேசு "தேவனின் ராஜ்யம்" பற்றியும்,  "இரட்சிப்பு"  பற்றியும்,
"நித்தியஜீவன்"  மற்றும்,  "தேவஅன்பு"   பற்றியும்    உபதேசிக்கிறார்!    ஆம்
இவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாகும்!  இரட்சிப்பு என்பது
பாவத்திலிருந்தும்  அதன் விளைவுகளிலிருந்தும்  ஆன்மா  காப்பாற்றப்படு
தலைக்குறிக்கிறது.   "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23).  அதாவது
மரணத்திலிருந்து      காப்பாற்றப்படும்   ஆன்மா   அழிவற்ற "நித்தியஜீவன்"
எனும் நிலையை அடைகிறது; அதாவது "தேவனின் ராஜ்யத்தினுள்"அடைக்
கலம் புகுகிறது! ஆம் மரணத்திற்குமாற்றாக இயேசு முன்வைக்கும் அம்சம்
தான்  "இரட்சிப்பு"  என்பதாகும்!    ஆனால்,      இயேசுவின்  உபதேச வசனங்
களின்படி   'இரட்சிப்பு'   என்பது   'இலவசமாக'வோ,   அல்லது  'பரிசாக'வோ
கிடைக்கவழியில்லை!!

ஆனால்,   'பதிமூன்றாம் அப்போஸ்தலர்' என்று சொல்லப்படும் பவுல் என்ப
வருடைய   திரிக்கப்பட்ட பிரச்சாரத்தில்,   "இயேசு நம்முடைய பாவங்களுக்
காக மரித்தார்!"  எனவும், "இயேசு மனித குலத்திற்காக தன்னைத் தியாகம்
செய்தார்!" எனவும் சொல்லப்படுவது இயேசுவின் உபதேசங்களுக்கு விரோ
தமானதாகும்!    மேலும், அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய முதலாம்
நிருபத்தில்(கடிதத்தில்) ,
          "  நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற
             கிருபாதாரபலி அவரே(இயேசுவே); நம்முடைய
             பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின்
             பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியா
             யிருக்கிறார்"        (1யோவான்2:2)
என்று எழுதப்பட்டிருக்கிறது! ஆனால், இவ்வசனம்,  இயேசுவின் மையமான
போதனைக்கு முற்றிலும் முரணானதாகும்! எவ்வாறென்றால்,

            "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்
             என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால்,
             குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த
             மாட்டீர்கள்"  
                                              (மத்தேயு 12:7)
என்பதாக    இயேசு  சொல்லியிருக்கிறார்! அதாவது "பலியையல்ல இரக்கத்
தையே    விரும்புகிறேன்"   என்று  சொன்ன  இயேசுவை;    குற்றமில்லாதவர்
களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்"   என்று   அறிவுறுத்திய  'குற்றமில்
லாத'  இயேசுவை,  'நம்முடைய குற்றங்களுக்காகவும்,பாவங்களுக்காகவும்'
"பலிகடாவாக"   ஆக்கிடுவது   அப்பட்டமான   சுய நலமும்    கயமைத்தனமு
மாகும். மேலும், இயேசு சொல்லியிருக்கிறார் :
            "ஒருவன் என் வார்த்தையைக்  கைக்கொண்டால்,
              அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்ப
              தில்லை என்று மெய்யாகவே  மெய்யாகவே
              உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."
                                            (யோவான்8:51)
"ஒருவன் என் வார்த்தையைக்  கைக்கொண்டால்,"  என்பதன் அர்த்தம் 'என்
உபதேசங்களைக்   கடைப்பிடித்தால்'    என்பதே தவிர வெறுமனே என்னை
'நம்பினால்',   'விசுவாசித்தால்'  போதும்   உங்களுக்கு   'இரட்சிப்பு'   பரிசாக
அல்லது    இலவசமாகக் கிடைத்துவிடும்    என்று    எந்த இடத்திலும் இயேசு
சொன்னதில்லை!   மேலும்,
            "அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி:
              ஆண்டவரே,இரட்சிக்கப்படுகிறவர்கள்
              சிலபேர்தானோ என்று கேட்டான்;
              அதற்கு அவர்:"                (லூக்கா 13:23)
         
              "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப்
               பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க
               வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்
               என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
                                                            (லூக்கா 13:24)

              "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
               சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக
               ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
               என்னை நோக்கி : கர்த்தாவே!  கர்த்தாவே!
               என்றுசொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை."
                                                           (மத்தேயு 7 :21)
இவ்வாறு,  இயேசுவின் அனைத்து உபதேச வசனங்களும், விசுவாசத்துடன்
நில்லாமல்,   நாம் செய்யவேண்டிய  கிரியைகளையும், நாம் கடைப்பிடிக்க
வேண்டிய கற்பனைகளையும்(கட்டளைகளையும்), நிறைவேற்றவேண்டிய
நிபந்தனைகளையும் வலியுறுத்துவதாயிருக்கையில்,   'இரட்சிப்பு   இலவச
மாய்க் கிடைக்கும்'   என்று   சொல்வது   படு அபத்தமாகும்!  இப்போது நாம்
மேலே சொல்லப்பட்ட வசனத்தைப் பற்றிச்செல்வோம். "பரலோகத்திலிருக்
கிற என்பிதாவின் சித்தத்தின்படி" செய்தல் என்றால் என்ன? 'பிதா' என்பது
தேவனை, கடவுளைக் குறிக்கிறது. ஆனால், பிதாவின் சித்தத்தை எவ்வாறு
அறிவது?  ஒவ்வொரு மனிதனும் பிதாவின் 'உயர்-உணர்வு'க்கு  உயருவதன்
மூலம்  அறிந்து  கொள்ளலாம்!   உண்மையில்,  'பிதா',  'கடவுள்'  என்பது ஒரு
பேருணர்வே தவிர வேறல்ல!
               "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத்
                தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும்
                உண்மையோடும் அவரைத்தொழுது
                கொள்ளவேண்டும் என்றார்."
                                             (யோவான் 4:24)
'ஆவி'  என்பது உணர்வையே (பிரக்ஞையையே) குறிக்கிறது. ஆக, மனிதன்
தனது  'அகந்தை' எனும் சிற்றுணர்வைக்கடந்து வளர்ந்திடும் போது அவன்
உணர்வின்   உச்சமான   பேருணர்வை,   கடவுளை  அடைகிறான். அதாவது
கடவுளுடன் ஒன்றாகிறான்! இயேசு அறிவித்தது போல,

              "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்"
               என்றார்.                         (யோவான்10:30)

இவ்வாறு மனிதனும் கடவுளும் ஒன்றாயிருக்க இயலாது;அது இயேசுவைப்
போன்ற விதிவிலக்கான ஓரிருவருக்கு மட்டுமே சாத்தியமாகும் என்று எவ
ரேனும்  சொன்னால்,   அவர் பைபிளை முறையாக, முழுமையாக வாசிக்க
வில்லை,  புரிந்து  கொள்ளவில்லை என்றுதான்  சொல்ல வேண்டும்.   ஏனெ
னில், இத்தகைய சாத்தியத்தை இயேசு   தன்னில் அடைந்ததோடல்லாமல்
எல்லோராலும் அடையமுடியும் என்று அறிவிக்கிறார். இதோ வசனம் :

           "ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள்
             பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல;
             நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்."
                                                          (மத்தேயு5:48)

இவ்வசனத்தில், அவர் வெறும் சாத்தியப்பாட்டைப்பற்றி மட்டும் அறிவிக்க
வில்லை; நீங்கள் ஒவ்வொருவரும்அவ்வாறு இருக்கவேண்டும் என ஊக்கப்
படுத்துகிறார்.  ஆனால், ஒவ்வொரு  மனிதனும் உணர்வுக்கு வராமல், மேன்
மேலும் உணர்வில் பெருகி உயராமல், கடவுளின் சித்தத்தைஅறிந்துகொள்
ளவோ,படைப்பின்(பரிணாமத்தின்) திட்டத்தையும்,மானிடவாழ்க்கையின்
இலக்கையும்  உணர்ந்தடையவோ இயலாது!  இவை வெறும் அறிவு சார்ந்த
அணுகுமுறையின்  மூலமாக  அடையக்கூடியவையல்ல!   மாறாக, பிரதான
மாக உணர்வு சார்ந்த அணுகுமுறையைக்கோருபவையாகும்! ஆகவேதான்
யோவான்ஸ் நானனும்,  இயேசுவும்  " மனந்திரும்புங்கள்" பரலோகராஜ்யம்
சமீபித்திருக்கிறது   என்று   உபதேசித்தார்கள்!    இவ்வசனம்     மனிதனின்
உணர்வில்  ஏற்பட வேண்டிய பெரும் மாற்றத்தைப் பற்றியதாகும். உணர்வு
மாற்றத்திற்கு "தேவ அன்பு" வேண்டும்!  "தேவ அன்பு" என்பது இடை-நிலை
மெய்ம்மைகளைத் தாண்டிய    "இறுதி-மெய்ம்மை"    மீதான   நாட்டத்தைக்
குறிப்பதாகும்!

ஏற்கனவே,  நாம்  'முழுமைக்குறைவான' அன்பு பற்றியும்,    'முழுமையான'
அன்பு பற்றியும் பார்த்தோம். அதாவது நம்முடைய அன்பு 'முழுமைக்குறை
வாக  இருப்பதற்குக் காரணம்,   நாம் விரும்புகிற,    நேசிக்கிற விஷயங்கள்
யாவும்  நம்மைச் சுற்றியுள்ள மேலோட்டமான விஷயங்களும், உறவுகளும்,
பொருட்களுமாகத்தான் உள்ளன!   அந்தப்பட்டியலில்    மெய்ம்மை     இடம்
பெறுவதில்லை!அதாவது நாம் மேலோட்டமான  விஷயங்களையும், , உறவு
களையும்,  பொருட்களையும்  தேடுகிற விரும்புகிற,  நேசிக்கிற  பட்சத்தில்,
நமது உணர்வும்  அவைகளைத்தழுவி, அவைகளுக்கேற்ப மேலோட்டமான
தாகச் சுருங்கி  விடுகிறது!  ஆனால்,  நாம் மெய்ம்மையைத் தேடுகிற, நாடு
கிற, நேசிக்கிற பட்சத்தில் நமது உணர்வானது மெய்ம்மைக்கேற்ப விரிந்து
பரந்து முழுமையைத்தழுவி ஒன்றுபடுகிறது! "எண்ணம் போல் வாழ்வு"என
சாதாரணமாகச் சொல்வதுண்டு. ஆனால், "உணர்வு போல் வாழ்வு" என்பது
தான் மிகச் சரியானது.  ஏனெனில், எண்ணம், மனம் யாவற்றுக்கும் அடிப்ப
டையானது  உணர்வு.  அதாவது,  உணர்வு  மாறினால்  வாழ்க்கையின் தரம்
தன்மை யாவும் மாறிவிடும்! ஆம், உணர்வு மாற்றத்தினால் (பெற்றதினால்)
தான் குரங்கு மனிதனாயிற்று! தன்உணர்வின் 'மையத்துவத்தையும்,'  'முக்
கியத்துவத்தையும்  உணரும் மனிதன் கடவுளாகிறான்!     ஆம்   அஞ்ஞானி
ஞானியாவதும்,   கெட்டவன்  நல்லவனாவதும்,  'மரணம்'  நித்தியவாழ்வாக
மாறுவதும்,    யாவும்   உணர்வு- மாற்றத்தையே   சார்ந்துள்ளன!  ஏனெனில்,
முழுமையான உணர்வு தான் கடவுள் ('தேவன் ஆவியாயிருக்கிறார்')!

ஆம்,  பொருட்களுக்கும், உறவுகளுக்கும்  வாழ்க்கையில்   உரிய இடம்  உள்
ளது.  ஆனால்  கடவுளைத்தவிர   வேறு  எந்த உறவும்  இறுதியானதோ  முழு
மையானதோ அல்ல! ஆகவேதான், இயேசு இவ்வாறு

                   " யாதொருவன் என்னிடத்தில் வந்து,
                     தன் தகப்பனையும் தாயையும் மனைவியை
                     யும் பிள்ளைகளையும் சகோதரரையும்
                     சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்கா
                     விட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்"
                                                            (லூக்கா14:26)

என்று பிறிதொரு இடத்தில் சொல்லுகிறார். இவ்வசனத்தில், "எவனொருவன்
தனது 'குடும்பத்தாரை' வெறுக்காவிட்டால்"  என்று,    'குடும்பத்தாரை' எனும்
ஒற்றைச் சொல்லைக்கொண்டு குறிப்பிடாமல்,    ஒவ்வொரு உறவாக பட்டிய
லிட்டுச் சொல்லுகிறார்!    அப்பட்டியலில்   கடைசியாக       "தன் ஜீவனையும்"
வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் என்று மிகத் துல்லிய
மாகவும்     தெளிவாகவும்   விதிவிலக்கின்றி     அனைவரையும்     அடியோடு
துடைத்துத்தள்ளுவதாகவும் குறிப்பிடுகிறார்.

ஒருவகையில்,   பிற உறவுகளனைத்தையும்  'வெறுக்கவேண்டும்'  என்பதை
நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்று வைத்துக்கொள்வோம்! ஆனால்,
ஒருவன் தனது சொந்தஜீவனையும் வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்
வதன் அர்த்தம் என்ன?

ஒருவன் தனது சொந்த ஜீவனுக்காக வாழ்வது என்பது 'சுய-அன்பை'க் குறிப்
பதாகவும்,   உடலின் தேவைகளையும்  இச்சைகளையும்  இன்னும்  லௌகீக
சுக போகங்களையும்  பூர்த்தி செய்துகொள்வதற்காக வாழ்வது  என்பதைக்
குறிப்பதாகவுமே  உள்ளது!    மேலும்,  பிறவனைத்து   உறவுகளும்,     ஒருவன்
தனது சொந்த ஜீவனுக்காக வாழ்தல் என்பதையே அடிப்படையாகக்கொண்
டுள்ளது!    இது  மிகவும்  மட்டுப்பாடான,  மனிதத்தரத்திற்குக்  கீழானதொரு
வாழ்க்கையாகும்!     இத்தகைய      வாழ்க்கையில்    மூழ்கியிருக்கும்   வரை,
மெய்ம்மை,  உண்மை, கடவுள் குறித்த தேடலுக்கு இடமிராது என்பதாலேயே
பிற உறவுகளோடு, ஒருவன் தன் 'சொந்த-ஜீவனுடன்' கொண்டுள்ள சுய-உற
வையும்  வெறுக்கவேண்டும்;  அதாவது,  தனது ஜீவனையும் வெறுக்கவேண்
டும், கடந்து செல்லவேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார்.

இந்த வசனம் இயேசுவினுடைய சீடர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல.
அப்படி   அவர்   தனது  சீடர்களுக்கு மட்டும்தான் சொன்னார் என்றால், இந்த
வசனத்தையும்,  மொத்த பைபிளையும்  நாம்   வாசிக்கவோ புரிந்துகொள்ள
வோ,   அவை  குறித்து   சிந்திக்கவோ,  தியானிக்கவோ   தேவையில்லையே!
"யாதொருவன் என்னிடத்தில் வந்து . .   " என  இயேசு சொல்லும்போது எவரெ
லாம் இயேசு விடம் செல்கிறார்களோ   அவர்களுக்கு மட்டுமே  இந்த வசனம்
பொருந்துகிறது என்று அர்த்தமல்ல!மாறாக,  'இயேசுவிடம் செல்வது' என்பது
எவரெலாம்   'அசலான,   உண்மையான,   அர்த்தமுள்ள வாழ்க்கையை  வாழ
விரும்புகிறார்களோ;'  அன்றாட  ஜீவிதத்திற்குத்  தேவையான  புறப் பொருட்
களை  நாடித்தேடாமல், முதலில் வாழ்க்கையின் உட்பொருளைத்தேடுவதில்
நாட்டம் கொள்கிறார்களோ அவர்களெல்லோருக்கும்  இந்த வசனம் பொருந்
தும்.   'இயேசுவின் சீடனாயிருப்பது'  என்பது,    'அசலான  ஆன்மீகபூர்வமான
வாழ்க்கைக்குத் தகுதியுள்ளவனாயிருப்பது' என்பதையே குறிக்கிறது!

மேலும்,      ஒவ்வொரு  மனிதனும்   தமது  நெருக்கமான குடும்ப  உறவுகளின்
மையமாக விளங்குவதாகத்தெரிந்தாலும் , ஒருவன் தனது மையத்தில் "தான்
யார்?"   எனத் தெரியாத  ஒரு ஜந்துவாகவே விளங்குகிறான்.   அந்த ஜந்துவின்
தேவைகளையும்   இச்சைகளையும்   விருப்பங்களையும்    சிரமேற்கொண்டு
நிறைவேற்றிடும்  ஒரு  ஊழியக்காரனாகவே  அவன்   திகழ்கிறான்   என்பதா
லேயே   ஒருவன் தனது ஜீவனையும் வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்
கிறார்.

அடுத்ததாக, இயேசு சொல்கிறார்:

                 "அப்படியே உங்களில் எவனாகிலும்
                  தனக்கு உண்டானவைகளையெல்லாம்
                  வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச்
                  சீஷனாயிருக்கமாட்டான்."
                                                  (லூக்கா 14:33)

எவ்வெவ்விஷயங்கள் ஆன்மீகப்பூர்வமான வாழ்க்கைக்கு,அதாவது உண்மை
யான அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் தடைகளாகவிளங்குகின்றனவோ அவற்
றையெல்லாம்      இனம்கண்டு  விலக்கிக்  கடந்து   முன்னேறிச்   செல்லுமாறு
இயேசு  அறிவுறுத்துகிறார்.  இந்த  வசனத்தின் மூலம்  இன்னும் விலக்கவேண்
டிய,  கடந்து செல்லப்படவேண்டிய  தடைகளாக   ஒருவனுக்கு  "உண்டானவை
கள்"   எல்லாவற்றையும்   வெறுக்கவேண்டும்  என இயேசு அறிவுறுத்துகிறார்.
ஒருவனுக்கு   'உண்டானவைகள்'   எவையெவையென  இயேசு  பட்டியலிட்டுச்
சொல்லவில்லை  என்பதிலிருந்து  அவற்றில்  'விதிவிலக்கு'  எதற்கும்  இல்லை
என்பதையே  குறிக்கிறது!  ஆம், நமக்கு  'உண்டானவைகள்' என்பவை  யாவும்
புறம்சார்ந்த, புறத்தேயுள்ள விஷயங்களும் பொருட்களும்தான். அவை பணம்
பொன்,  நிலம், சொத்து, சுகம், மற்றும் பிறபொருட்கள்; அடுத்து சமூகரீதியான
புகழ், நற்பெயர், செல்வாக்கு, அந்தஸ்து;    அரசியல்ரீதியான பதவி, அதிகாரம்,
ஆள்பலம் ஆகியவையும்; ஆளுமைசார்ந்த தனிப்பட்ட தோற்றம், அழகு, நிறம்,
பாணி, விசேடதிறமைகள், மனப்பான்மைகள், விருப்பங்கள், ஆசைகள், இலட்
சியங்கள் . . . ஆகிய எல்லாவற்றையும் ஒருவன் வெறுக்கவேண்டும். அப்போது
தான்,  இயேசு சொல்கிற  உண்மையான  வாழ்க்கையின் விதிகளை முழுமை
யாகப்  பின்பற்றி, நிறைவேற்றி வாழ்ந்திட இயலும்.

ஒருவனுக்கு  'உண்டானவைகள்' என்பவை யாவும் ஒருவனை புறத்தே கட்டிப்
போடுகிற பிணைப்புக்களே, தளைகளே என்பதால் அவை ஒருவனை அகரீதி
யான   ஆன்மீக   வாழ்க்கைக்குள்  விரவேசிக்க விடாது. மாறாக, அவனை புற
வாழ்க்கை எனும் மேலோட்டமான    அன்றாட விவகாரங்களில்     மூழ்கடித்து
விடும். மேலும், அகரீதியான  ஆன்மீக   வாழ்க்கைக்கு   சிதறாத,   முழு-கவன
நிலை மிகவும் அவசியமாகும்.  ஆகவேதான்  இயேசு   ஒருவனுக்கு உண்டான
வைகளையெல்லாம்  வெறுக்கவேண்டும்,  அதாவது  கடந்து சென்றிட வேண்
டும் என்று வலியுறுத்துகிறார்.

மேலும், ஒருவனுக்கு உண்டானவைகள் என்பவை யாவும் மட்டுப்பாடானவை
சாதாரணமானவை;  அவை பயன்பாட்டுக்குரியவை  என்றாலும்  இறுதியான
முழுமையான பயனை,   "பிறவிப்பயனை"ப்  பெற்றுத்தருபவையல்ல.  அவை
எதுவும்     முக்கியமானவையோ,  மனிதனை  நிறைவுசெய்யக்கூடியவையோ
முழுமைப்படுத்தக்கூடியவையோ அல்ல. ஆகவே, ஒருவனுக்கு உண்டானவை
களையெல்லாம் வெறுப்பது, கடந்து செல்வது முன்தேவையாகிறது.   இவைக
ளையெல்லாம்  ஒட்டுமொத்தமாக வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்வ
தற்கான மிகமுக்கியமான காரணம், இன்னும் ஒருவனுக்கு "உண்டாகாதவை"
களை கைப்பற்றிடவே யாகும்!

இன்னும்  "உண்டாகாதவை"  என்பவை  அர்த்தம், உண்மை, ஆனந்தம், முக்தி,
மோட்சம்,  நித்தியஜீவன், தேவனின்ராஜ்யம்,  இரட்சிப்பு,  விடுதலை,  மரணம்
கடந்த பெருவாழ்வு, . . . . .ஆகியவையே!

               <><><><><><>
* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி!"
(இயேசுவை மறு-கண்டு பிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.

மா.கணேசன்/ 02.08.2011 & 02.05.2016



நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...