Tuesday, 24 September 2024

இருப்பின் தரிசனம்! (இருப்பிலிருந்து பேரிருப்பிற்கு)


 
 
 
"இருப்பின் மலர்வு" அல்லது "சத்-சித்-ஆனந்தம்" பற்றிய
பரிணாமப் பார்வையிலமைந்த புதிய விளக்கம்

                                         <*>

உங்களிடம் உணர்வுத்துடிப்பு இல்லையெனில்
இவ்வரிகளனைத்தும் அர்த்தமற்ற வெற்றுச் சொற்களே!

                                         <*>                

இருப்பின் தரிசனம் என்பது இருப்பு தன்னைத்தானே தரிசிப்பது என்பதையும், இருப்பின் விசேடமான பகுதியான மனிதன் தனது உணர்வைக்கொண்டு இருப்பைத் தரிசிப்பது என்பதையும் குறிக்கிறது.

மனிதன் ஏன் இருப்பை தரிசிக்க வேண்டும்? ஏனெனில், மனிதனிடம் உணர்வு இருக்கிறது - இன்னும் துல்லியமாகச் சொன்னால், மனிதன் உணர்வாகவே இருக்கிறான்! ஆகவே, இருப்பை தரிசிப்பது அவனது தலையாய பரிணாமக் கடமையாகும். அவன் ஒரு தவளையைப் போல உணர்வற்ற ஜீவியாக இருந்தால் அவனுக்கு இருப்பை தரிசிக்க வேண்டிய அவசியமிராது.

மேலும், இருப்பைத் தரிசிப்பதன் வழியாக மட்டுமே மனிதன் உண்மையிலேயே மனிதனாக ஆகவும், தனது பரிணாம வாழ்க்கையின் ஒப்பற்ற இலக்கையும், முழுமையையும் அடைய முடியும்.

இருப்பை மனிதன் தரிசிப்பதும், இருப்பு தம்மைத்தாமே  தரிசிப்பதும் ஒன்றே! இருப்பு ஏன் தம்மைத்தாமே  தரிசிக்க வேண்டும்? ஏனெனில், அது இருப்பின் உள்ளார்ந்த பரிணாம வளர்ச்சி விதியின் தவிர்க்க இயலாத பரிணாம அவசியமாகும்.

இருப்பு, அதை இயற்கை, உலகம், பிரபஞ்சம் என எப்படி அழைத்தாலும் அது தன்னில் முழுமையான பூரணமானதொரு நிஜமோ, மெய்ம்மையோ அல்ல. இருப்பு என்பது ஒரு பரிணமிக்கும் மெய்ம்மையும், இயக்கமுமாகும். இருப்பும், பரிணாமமும் பிரிக்கமுடியாதவை.

ஆக, இருப்பு என்பது ஒரு பரிணாம இயக்கமாக இருப்பதால் அதற்கென ஒரு பிரத்தியேக இலக்கும் உள்ளது. அதை நோக்கியே அது பரிணமிக்கிறது. இயக்கம், அது எவ்வகை இயக்கமாயினும் இலக்கில்லாமல் இயங்க முடியாது.

பிரபஞ்ச இருப்பு முதன்முதலில் பெருவெடிப்பில் தோன்றிய  போது, வெறும் பௌதீக சட-இருப்பாக, அடிப்படை அணுத்துகள்களாக ( Fundamental Particles) மட்டுமே தமது பரிணாமப் பயணத்தைத் தொடங்கிற்று. இவ்வாறு தொடங்கிய சட-இருப்பு தொடர்ந்து அவ்வாறே தமது சடத் தன்மையிலேயே முடிவில்லாமல் நீடிக்கலாகாது. அத்தகைய இருப்பு அர்த்தமற்றது. அவ்வாறு நீடிக்க முடிந்திருந்தால் இருப்பைப் பற்றிப் பேசுவதற்கு இருப்பின் பகுதியாக இன்று நாம் இங்கிருக்க இயலாது!

இருப்பு தம்மைத்தாமே தரிசிக்கவும், உணர்வு கொள்ளவும், ஒரு வழியாக, ஒரு ஊடகமாகத்தான் அது உணர்வுடன் கூடிய ஜீவியாக, மனிதனை உருவாக்கியது. இதையே துல்லியமாகச் சொன்னால், இருப்பு தம்மைத்தாமே உணர்வு கொள்வதற்காக, மனித ஜீவியாக, அவனுள் உணர்வாக உருவாகியது.

மனித ஜீவி என்பவன் உணர்வாகிய ஜீவியாக இருப்பதால், அவனே இருப்பின் மிக விசேடமான பகுதியாகவும் (அங்கமாகவும்); மிக முக்கியமாக, இருப்பின் மிகப் பிரத்தியேகமான பிரதிநிதியாகவும்; இருப்பின் ஒரே நம்பிக்கையாகவும் விளங்குகிறான். ஏனெனில், இனி பரிணாமத்தை அதன் ஒப்பற்ற இலக்கு நோக்கி உணர்வுபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மாபெரும் பொறுப்பு அவன் கையிலேயே (உணர்விலேயே) உள்ளது.

ஆம், உணர்வுள்ள மனித ஜீவியின் வரவுடன் பழைய, இயற்கையான, நனவிலி ரீதியாக  நிகழ்ந்தேறிய நெடிய பரிணாம வழிமுறை முடிவிற்கு வந்துவிட்டது. இந்த முக்கியமான வேறுபாட்டை சரியாக நாம் புரிந்துகொள்ளாவிட்டால் பரிணாமம் எனும் நிகழ்வுமுறையை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. பரிணாமத்தைப் புரிந்துகொள்ளாமல் நாமும் நமது வாழ்க்கையின் உண்மையான இலக்கை, முழுமையை அறியவும், அடையவும் முடியாது. இனி பரிணாமம் தமது பழைய இயல்பான வழிமுறையில் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. அதாவது, எந்திரத்தனமாக, உணர்வற்ற ரீதியில் தொடரமுடியாது.

சரி, இப்போது இருப்பின் பரிணாம வளர்ச்சிக் கட்டங்களைப் பார்ப்போம். இருப்பு என்றால் என்ன? இருப்பவை அனைத்தும் இருப்பே. எனினும் இருப்பவை அனைத்தும் ஒரே படித்தானதாக, ஒரே தன்மையில் அமைந்ததாக இருக்கவில்லை!

ஒரு கல், அல்லது பாறை இருக்கிறது; அதுவும் இருப்புதான். ஆனால், அதை பண்பு ரீதியாகக் குறிப்பிடும்போது, "சட-இருப்பு" (Material Existence) என்பதாகவே வரையறுத்தாக வேண்டும்.

அடுத்து ஒரு புழு, பூச்சி, தவளை இருக்கிறது. இவையும் இருப்புதான். பண்பு ரீதியாக இவற்றை நாம் "உயிர்-இருப்பு" எனக் குறிப்பிட்டாக வேண்டும்.

அடுத்து மனிதன் இருக்கிறான். மனிதன் பரிணாம வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தை, மிகவும் திருப்புமுனையானதொரு இருப்பு நிலையைப் பிரதிநிதித்துவம் செய்பவனாக இருக்கிறான். இதற்குக் காரணம் மனிதனின் "சுய-உணர்வு" தான். ஆக பண்பு ரீதியாக மனிதனுடன் தொடங்கும் இருப்பை நாம் "உணர்வு-இருப்பு" எனக் கொள்ள வேண்டும். ஆம், (பிரபஞ்ச) இருப்பானது மனிதனின் ( = உணர்வு) வழியாக தம்மை உணர்வு கொள்கிற (தரிசிக்கிற) கட்டத்தை எட்டியுள்ளது.

விஞ்ஞானப் பரிணாமக் கோட்பாடானது, மனிதன் எவ்வாறு, எதிலிருந்து தோன்றினான் என்பதற்குரிய மேலோட்டமான ஒரு விளக்கத்தை உருவாக்கியதுடன் தனது பரிணாம ஆய்வு முடிந்துவிட்டதாகக் கருதுகிறது! ஆனால், பரிணாமம் என்பது உயிரியல் தளத்திற்கு மட்டுமே உரியது அல்ல. அது உயிர் தோன்றுவதற்கு முன்னிருந்தே பொருளியல் பரிணாமமாக, முதல் அணுக்கள் தோன்றியதிலிருந்தே தொடங்கி செயல்பட்டு வந்துள்ளது. தற்போது, அது உயிரியல் தளத்தைக் கடந்து, மனிதனின் உணர்வைக்கொண்டு உணர்வியல் தளத்திற்குள் பிரவேசித்துள்ளது.

இனி பரிணாமம் என்பது உணர்வியல் தளத்திலேயே செயல்பட்டு உணர்வின் முழுமையை அடைவதுடன் நிறைவெய்த இருக்கிறது. இந்த உணர்வியல் தளத்துப் பரிணாமம் உணர்வுள்ள, இன்னும் துல்லியமாகச் சொன்னால், "தாம் ஒரு உணர்வுதான்!" என்கிற உணர்வுக்கு வந்திட்ட ஒவ்வொரு தனிமனித ஜீவியின் உணர்வுப் பரிணாமத்தின் வழியாகச் சென்றடையக்கூடிய முழு-உணர்வில் முழுமையடையும்!

பரிணாமம் ஏற்கனவே புத்தர், இயேசு, கபீர், ரமணர், . . . போன்ற, தம் உணர்வுக்கு விழித்த, தனிமனிதர்களின் வழியாக தமது உச்சத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

இருப்பு ( இயற்கை, உலகம், பிரபஞ்சம்) என்பது உறைந்து நிற்கும் நிலக்காட்சி அல்ல. அது பாய்ந்தோடிடும் ஒரு நதியைப் போன்றது.

இருப்பு என்பது அடிப்படையில், ஒரு பரிணாம நிகழ்வு முறை அல்லது இயக்கம் ஆகும். இருப்பு முதன்முதலாக சட-இருப்பாகத்தான் (பெரு-வெடிப்பிலிருந்து) தோன்றியது எனப்பார்த்தோம். சட-இருப்பு என்பது பௌதீக இயக்கமாகும். அது உயிரற்றது, உணர்வுமற்றது. இப்பௌதீக இயக்கம் தன்னைக்கடந்து வளர்ந்திடும்போது அது தனது பௌதீகப் பண்பை சற்று இழந்து, அதாவது பௌதீகப் பண்பில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்து உயிராய்ப் பரிணமிக்கிறது. இவ்வாறு இருப்பு என்பது தொடர்ந்து தன்னைத்தானே கடந்து செல்லும், பண்பு ரீதியாகப் பரிணமிக்கும் ஒரு விசேட மெய்ம்மையின் பேரியக்கமாகும்.

சரி, பரிணாமம் என்பது பண்புரீதியிலான மாற்றம் என்றால், அடியோட்டமாக பரிணாமத்தில் பரிணமிப்பது எது? இக்கேள்வி அதிமுக்கியமானது. ஆம், பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வுதான். இருப்பின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் அதற்கு இணையாக உணர்வும் உயருகிறது.

சட-இருப்பை நாம் உணர்வற்றது என வரையறுத்தாலும் சடத்திற்கென ஒருவகை மெலிய உணர்வின் ஆரம்ப அறிகுறிக்கான அடிப்படையைக் கொண்டுள்ளதெனக் கொள்ளலாம். பெருவெடிப்பில் பிறந்த முதல் துகளுக்கும் கூட ஒரு சிறு துளியளவு உணர்வு [0.0000001 %] உண்டு! அதை நாம் "சட-உணர்வு" அல்லது "பௌதீக உணர்வு" (Material Consciousness) எனக் குறிப்பிடலாம்.

சட-உணர்வு எத்தகையதெனில், பௌதீக அணுத்துகள்களை எடுத்துக்கொண்டால், அவை தமக்குப் புறத்தேயுள்ளவற்றையும் உணராது; இன்னும் தம்மையும் அவை உணர வழியில்லை. மாறாக, குருட்டாம்போக்கில், அவை ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொள்ளும் நிகழ்வில் அவை பரஸ்பரம் சக்தி, மின்னூட்டம், நிறை, . . . . போன்ற பௌதீக அம்சங்களை பரிமாறிக்கொள்கின்றன. இப்பரிமாற்றத்தை ஒருவகை தகவல் பரிமாற்றம் எனக் கொள்வோமெனில், அணுத்துகள்களுக்குள் அது ஒருவகை தகவல்-பரிசீலனைச் (Information-Processing)செயல்பாடாக அமைகிறது என்கிற வகையில் அதை சட-உணர்வு என அங்கீகரிக்கலாம். ஏனெனில், உணர்வு என்பது அடிப்படையில் தகவல்-பரிசீலனை என்பதையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது.

சட-உணர்வைப் பற்றி நாம் பேசினாலும், சடப்பொருளை நாம் இருப்பின் ஒருவகையாகக் கணக்கில் கொள்ளலாமே தவிர, சட-உணர்வை பெரிதாக உணர்வின் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அது புறத்தேயுள்ளதையும், உணராது, தன்னையும் உணராது. ஆயினும் இருப்பு என்கிற அளவில் சடப்பொருளின் இருப்பைஅங்கீகரிப்பது தவிர்க்கவியலாதது. ஏனெனில், இந்த சட-இருப்பு தான் பின் ஏற்பட இருக்கிற உயிர்-இருப்பு மற்றும் உணர்வு-இருப்பு ஆகியவற்றின் அடிப்படை அல்லது அடித்தளம் ஆகும்.

ஆம், சடப்பொருள் இல்லையெனில், உயிரும் (விலங்கு ஜீவிகளும்) தோன்றியிருக்கவியலாது. உணர்வும் (மனித ஜீவிகளும்) தோன்றியிருக்கவியலாது. ஆனல், அதே வேளையில், சடப்பொருளின் இருப்பை நாம் பரிணாமத்தின் அடிப்படையாகக் கொள்வதால், சடப்பொருள் என்பது, பொருள் முதல்வாதிகள் கருதுவது போல, தன்னில் தானே தோன்றிய சுயம்புவான மெய்ம்மையாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், சடப்பொருள்
தன்னில் தானே தோன்றியதல்ல. மாறாக, அது வேறொரு மூல-மெய்ம்மையின் ஆகச் சுருங்கிய வடிவமும், நிலையும் ஆகும். ஆகவேதான், பௌதீகப் பொருளானது விரிந்து மீண்டும் தனது அசலான நிலையை அடைய வேண்டி பரிணமிக்கிறது.

மேலும், பரிணாமம் என்பது அடிப்படையான பௌதீகப் பொருளிலிருந்து வெவ்வேறு வகைப்பொருளை புதிது புதிதாக உருவாக்குவதல்ல. மாறாக, பொருளானது படிப்படியாக தனது பௌதீகச் சடத்தன்மையைக் கடந்து, அதாவது இழந்து பண்புரீதியாக வேறொரு அம்சமாக மாற்றமடைந்து முடிவில், அனைத்து மாற்றங்களையும் தீர்த்து முடித்த முழுமை நிலையை அடைவதே.

இவ்வாறு இருப்பானது தனது இறுதி முழுமை நிலையை - பொருளை ஒரு ஊடகமாகக் கொண்டு, அதையே ஏணியாக ஆக்கி, தனது இறுதி முழுமை நிலையை அடையும்போது அது முற்றிலுமாக தனது சடத் தன்மையைக் கடந்து விட்டிருக்கும்.

இருப்பானது படிப்படியாக உணர்வாக எழும்பொருட்டு, முதற்கட்டமாக, ஒரு மாபெரும் தாவலின் மூலமாக உயிராக, உயிருள்ள விலங்கு ஜீவிகளாகப் பரிணமித்து, அந்த ஜீவிகளின் புலன்களின் வழியாக புறத்தை உணர்வு கொள்ளும் புலன் உணர்வாக எழுந்தது. பிறகு, நீண்ட நெடிய உயிரியல் பரிணாமத்தின் உச்சமாக, விலங்கு ஜீவிகளைக் கடந்த மனித ஜீவியாக, மனிதனுள் சுய-உணர்வாக (Self-Consciousness) வெளிப்படும் பெரும் தாவலைச் செய்தது.

மனிதனின் சுய உணர்வானது ஒட்டு மொத்த பிரபஞ்சப் பரிணாம இயக்கத்தின் வரலாற்றில் மிகவும் திருப்புமுனையான ஒரு கட்டத்தை தொடங்கி வைக்கிறது. இதுவரை இயற்கையிடமிருந்த பரிணாமப் பொறுப்பு இப்போது மனிதனிடம் கை மாறுகிறது. இனி மனிதன், ஒவ்வொரு மனிதனும் தான், பரிணாமத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுத்துச் சென்று - அதாவது, உணர்வில் பெருகியுயர்ந்து - உணர்வின் உச்சமான முழு-உணர்வை அடைந்து இருப்பை முழுமைப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு இருப்பானது படிப்படியாக உணர்வு பெற்று மனிதனிடம் தனி-உணர்வாக எழுந்து மனிதனின் உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் முழு-உணர்வாக மலர்ந்திடும் நிலைதான் " சத்-சித்-ஆனந்தம்" என்பதாகும்.

சத் என்பது இருப்பையும், சித் என்பது உணர்வையும், ஆனந்தம் என்பது பேரின்பத்தையும் குறிக்கின்றது. சத் சித் ஆனந்த நிலை என்பது மூன்று வெவ்வேறு நிலைகளின் கலவையோ, தொகுப்போ அல்ல! இதை ஐயமின்றி "முழுமை" என்ற ஒரே சொல்லில் குறிப்பிட்டுவிடலாம்.

இம்முழுமை நிலை எத்தகைய மெய்ம்மை என்றால், நிச்சயம் அது பொருண்மை (பௌதீகச் சடத்தன்மை) யானது அல்ல. ஏனெனில், இருப்பானது முழு-உணர்வாக மலர்ந்திட்ட அந்நிலையில் இருப்பு என்பது முற்றிலுமாக உணர்வில் ஊறிக் கரைந்து. பொருண்மையின் அற்ப சொற்ப சுவடுமின்றி தூய உணர்வாக ஆகிவிடுகிற அந்நிலையே முழுமையான இருப்பாகத் திகழ்வதாகிறது! இத்தகைய முழு உணர்வின், ஆகவே முழு(மையான) இருப்பின் தன்மை எத்தகையதெனில் அது முழுமையான ஆனந்த நிலையே, பேரின்ப நிலையே!

பேரின்ப நிலை என்பது பரிணாம இருப்பு அடையக்கூடிய முடிவும் முழுமையுமான நிலை மட்டுமல்ல. அதுவே பரிணாம இருப்பு முதன்முதலில் தோன்றுவதற்கு அடிப்படையாக, மூலவித்தாக பெருவெடிப்புக்கு முன்னிருந்த மூல முதல் மெய்ம்மையும் ஆகும்.

"பேரானந்த நிலையிலிருந்துதான் அனைத்து ஜீவிகளும் பிறக்கின்றன,
அப்பேரானந்தத்தினாலேயே அவை இருக்கின்றன, வளர்கின்றன,
அப்பேரானந்தத்திற்கே மீண்டும் அவை திரும்புகின்றன."

எனும் தைத்ரிய உபநிடத்தின் கூற்றும், " சத்-சித்-ஆனந்தம்" என்கிற கருத்தும் பழைய காலத்து ஆன்மீகவாதிகளின், கருத்துமுதல்வாதிகளின் மூடத் தனமான பிதற்றல்கள் அல்ல! மாறாக, இவை பரிணாமபூர்வமான உண்மையாகும், ஆகவே, இவை 'விஞ்ஞான' பூர்வமானது. ஆனால், இங்கு நாம் குறிப்பிடும் 'விஞ்ஞானம்', தற்போதைய, இயற்கைவாதத்தில் சிக்குண்ட, இன்னும் முதிராத, எந்திரவாத விஞ்ஞானம் அல்ல.

இந்த இடத்தில், பேரின்ப நிலை, பேரானந்த நிலை குறித்து சற்று தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. பேரின்ப நிலை, பேரானந்த நிலை ஆகிய சொற்களின் பயன்பாடானது, அன்றாட மானுட அனுபவத்திற்கு பழக்கப்பட்ட இன்பம், ஆனந்தம் ஆகிவற்றின் ஆக உயரத்திலும் உயர்ந்த நிலைகள் என்பதாகப் பொருள்படும் வகையில் குறிப்பிடப்படுபவை ஆகும். மேலும், மனித ஜீவியானவன் அடையக்கூடிய இறுதியான பரிணாம முழுமையை, இறுதி மெய்ம்மையை (Ultimate Reality) பேரின்ப நிலை, பேரானந்த நிலை எனக்குறிப்பிடுவதன் வாயிலாக, குறைத்துச் சுருக்கிவிட முடியாது. இந்த முழுமை நிலையை நாம் "பேரறிவு நிலை", "உயர் ஞான நிலை" எனவும் குறிப்பிடலாம்! இத்துடன் நில்லாமல், அதை பேரறிவு எனச் சுருக்கிவிடாமல், மூலப் படைப்புச் சக்தி எனவும், அனைத்து சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கிய அனந்த நிலை எனவும் குறிப்பிடலாம். இதையே நாம் உணர்வின் சொற்களில், "பேருணர்வு",  "முழு உணர்வு" என்று இக்கட்டுரையிலும் இன்னும் பிற கட்டுரைகளிலும் குறிப்பிடுகிறோம்.

சரி, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். அதாவது, " சத்-சித்-ஆனந்தம்", "முழு-உணர்வு" ஆகிய, முழுமை நிலை குறித்த கருத்துருவாக்கங்கள் நவீன விஞ்ஞானப் பார்வையிடமும், டார்வினிய கோட்பாட்டிலும் இல்லை. ஏனெனில், இந்த அணுகுமுறைகள் மனிதனை ஆக உயர் வளர்ச்சியடைந்த விலங்காகவே வகைப்படுத்துகின்றன. மேலும், வாழ்க்கை என்பது மாறும் புறச்சூழலுக்கேற்ப தகவமைந்து, வெறுமனே உண்டுறங்கி இனம் பெருக்கி உயிர்வாழ்வதும், முடிவில் மரணத்தில் முடிந்துபோவதும்தான் என்பதாகவே இவை காண்கின்றன.

விஞ்ஞானத்தின் இம் மட்டுப்பாட்டிற்குக் காரணம், அது சடப் பொருளையே மூல முதல் மெய்ம்மையாக, சாசுவதமான 'பரம்' பொருளாகக் காண்கிறது. உயிரையும், (மனித) உணர்வையும், அறிவையும் அது சடப் பொருளின் உயர் வளர்ச்சி நிலைகளாக மட்டுமே காண்கிறது.

***

விஞ்ஞானத்தை நாம் " இயற்கை வாதம்" என்று குறிப்பிடலாமெனில், (அசலான) ஆன்மீகத்தை நாம் "பேரியற்கைவாதம்" என்றுதான் குறிப்பிட்டாக வேண்டும். விஞ்ஞானம் மனிதனை இயற்கையின் ( = பிரபஞ்சத்தின்) முக்கியத்துவமற்ற ஒரு அங்கமாகவும், பகுதியாகவும், இயற்கையைச் சார்ந்திருக்கும் ஒரு உயர் விலங்கு என்பதாகவும்; வாழ்க்கை என்பது வெறும் உயிர்- பிழைத்திருத்தலே என்பதாகவும், மரணம் என்பது இயற்கையின் தவிர்க்கவியலாத நியதி என்பதாகவும் காண்கிறது. இயற்கை என்பது - யுரேகா! யுரேகா!  - சடப்பொருளே, பொருளாலானதே தொடக்கமும், முடிவும் இடையிலுள்ளவையும், அனைத்தும் பருப்பொருளே! பொருள் ( Matter) தான் மூல முதல் மெய்ம்மை, பிரம்மம், கடவுள் யாவும் என்கிறது விஞ்ஞானம்.

ஆனால், ஆன்மீகம் எனப்படும் பேரியற்கை வாதம் மனிதனை உணர்வாகவும், இயற்கையை மீறிச் செல்லும் பேரியற்கையைச் சேர்ந்தவனாகவும்; இயற்கை, உலகம் என்பவை பேரியற்கையின் உருவாக்கம் அல்லது மாறிய வடிவம் - அதாவது, முழு உணர்வின் உருமாறிய நிலையும், வடிவமும் என்பதாகவும்; வாழ்க்கை என்பது 'உணவு, உடை, உறையுள்' குறித்த விவகாரம் அல்ல. மாறாக, அது ஒரு அற்புதப் புதிர்; அதை விடுவிக்கும் வழிமுறையில் - இயற்கையுலகின் ஒரு பகுதியாகவும், ஒரு சிற்றுணர்வாகவும் தொடங்கிய தாம் - உணர்வில் வளர்ந்து முடிவில் பேருணர்வு அல்லது முழு உணர்வு எனும் மூலான்மாவை, பேரியற்கையைச் சேருவதே மனித இருப்பின், வாழ்க்கையின் இலக்கு என்பதாகவும் - ஏனெனில், முழு உணர்வு (Absolute Consciousness)தான் பெரு வெடிப்புக்கு முன்னிருந்த மூலவித்து, மூல முதல் மெய்ம்மை, பேரியற்கை. அதுவே, பிரபஞ்சப் பரிணாமத்தின் முடிவான முழுமையும். ஆகவே, முழு உணர்வு தான் ஆன்மா, பிரம்மம், கடவுள், பேரியற்கை, பேரிருப்பு, . . . . யாவும் என்பதாகவும் - ஆன்மீகம் எனும் பேரியற்கை வாதம் உணர்வார்ந்த அனுபூதி அனுபவத்தின் மூலம் நேரடியான தரிசனத்தின் வாயிலாகக் காண்கிறது!  

முக்கியமாக, இவ்விடத்தில் விஞ்ஞானம் எனும் இயற்கைவாதத்திடம் ( Naturalism) இருப்பு எனும் பரிணாம இயக்கத்தின் இலக்கு பற்றியும், குறிப்பாக மனித வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு பற்றியும் அதாவது, மரணமிலா முழு-உணர்வு எனும் சத்-சித்-ஆனந்த நிலை பற்றியும், யாதொரு கற்பனையும், ஏன் இல்லாமல் போய்விட்டது என்பது குறித்த விளக்கத்தைக் காண்பது அவசியமாகும்.

விஞ்ஞானமானது முற்றிலும் இயற்கையுலகைச் சார்ந்ததாக இருப்பதாலும், சடப்பொருளை மூலப் பரம்பொருளாகப் பாவிப்பதாலும், இயற்கையின் பௌதீக விதிகளை இறுதியானவை எனக்காண்பதாலும் மிகவும் மட்டுப்பாடானதொரு உலகப்பார்வையிலும், வாழ்க்கைப் பார்வையிலும் அது சிக்குண்டுவிட்டது. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரையில், 'இருப்பது இந்த இயற்கை மட்டுமே!' ஆகவே, அதனுடைய வரையறைகளுக்குள்ளேயே வலம் வருவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்பதாக அது தனது பார்வையைச் சுருக்கிக் கொண்டுவிட்டது.

இயற்கையுலகில் தோன்றிய ஜீவிகள் யாவும், மனிதர்கள் உள்பட,  இயற்கையின் மட்டுப்படுத்தும் விதிகளுக்குட்பட்டு இயற்கையைச் சார்ந்தே இருக்க முடியும், வாழமுடியும்; அதில் மரணம் என்பது தவிர்க்கவியலாத இயற்கை நியதி என விஞ்ஞானம் தீர்க்கமாக நம்புகிறது. ஆகவே, வாழ்க்கை என்பது வெறுமனே மாறும் இயற்கைச் சூழலுக்கு ஈடுகொடுத்து தகவமைந்து அல்லது விஞ்ஞானத்தொழில் நுட்பத்தைக் கொண்டு தற்காத்துக்கொண்டு - மரணம் சம்பவிக்கும்வரையிலும் - உயிர் வாழ்வது, பிறகு தவிர்க்கவியலாத மரணத்தில் முடிந்துபோவது என்பதாகவே விஞ்ஞானம் காண்கிறது, போதிக்கிறது.

ஆனால், ஆன்மீகம் எனும் பேரியற்கை வாதமானது தமது கூரிய உட்-பார்வையின் மூலமாக, 'இயற்கையானது' என்பது எவ்வகையிலும் இறுதியானது அல்ல; அதாவது, பூரணமானது அல்ல எனும் உண்மையைக் கண்டறிந்து கொண்டுள்ளது.

மேலும், இயற்கை என்பது மாற்றத்திற்குட்பட்டது, உலகம் என்பதும் அவ்வாறானதே; இயற்கையுலகம் என்பது ஒரு பரிணாம இயக்கமே; இயக்கம் என்றிருந்தால் அதற்கு நிச்சயம் ஒரு இலக்கு, அடைவிடம் என்பதும் இருந்தேயாக வேண்டும். ஆகவே, மாற்றத்திற்குட்பட்ட இயற்கையுலகை மனிதர்கள் சார்ந்திருக்கலாகாது. அதாவது, இயற்கையுலகைச் சார்ந்திருக்கும் தமது உடலையும், ஆகவே உயிர் வாழ்தலையும் மனிதர்கள் சார்ந்திருக்கலாகாது. ஏனெனில், விரைவிலோ, சற்று தாமதமாகவோ, மரணம் மனிதர்களின் கதையை முடித்துவிடும். ஆகவே, மரணமடைவதற்குள்ளேயே மனித ஜீவிகள் ஒவ்வொருவரும் இந்த இயற்கையுலகை, அதன் பகுதியாகிய உடலை, உயிர்வாழ்தலை கடந்து சென்றாக வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்த பேரியற்கைவாதிகள் இவ்வாறு கடந்து செல்வதற்கான வழியையும் கண்டுபிடிக்கத் தவறவில்லை. ஆம், "உணர்வு " தான் இயற்கையுலகை, உடலை, மரணத்தை, மரணத்தில் முடிந்துபோகக்கூடிய மேலோட்டமான வாழ்க்கையை  கடந்து செல்வதற்கான வழி; அதாவது, பேரியற்கைக்கு, பேரிருப்புக்குச் செல்லும் வழி ஆகும்!

(மனித)வாழ்க்கை பற்றிய பேரியற்கைவாதிகளின் மாபெரும் கண்டுபிடிப்பு என்னவெனில், "வாழ்க்கை அழிவற்றது; மரணம் தெரிவிற்குட்பட்டது!" (Life is Eternal; Death is Optional!) என்பதுதான்

ஆம், வாழ்க்கையை நாம் மிகச் சரியாக, பரிணாமப்பார்வையில் புரிந்துகொள்வோமெனில், வாழ்க்கை (முறையாக, முழுமையாக உணர்வுப்பூர்வமாக வாழப்படும் வாழ்க்கை) மரணத்தில் முடிந்துபோகக்கூடியதல்ல. உடல்தான் மரணிக்கிறது. உணர்வுக்கு (குறிப்பாக, முழு-உணர்வுக்கு, முழு-உணர்வை அடைந்தவர்க்கு) மரணம் கிடையாது.

உண்மையில், மனிதன் என்பவன் அவனது உடலல்ல. உணர்வுதான் மனிதன்! ( ஆனால், மனிதன் இயல்பாகப் பெற்றிருப்பது பரிணாம இயற்கை வழங்கிய "அகந்தை -உணர்வு" (Ego-Consciousness) எனப்படும் சிற்றுணர்வு அல்லது அரை-உணர்வைத்தான். ஆகவேதான், மனிதன் உணர்வில் பரிணமித்து அழிவிலா முழு- உணர்வாகிட வேண்டும் என இக்கட்டுரை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது.) அதாவது, (அரை) உணர்வாகிய மனிதன் தனது உடலையும், இயற்கையுலகையும் சார்ந்திருக்க வேண்டியிருப்பது மிகவும் தற்காலிகமானதொரு நிலைமையாகும். (இயற்கையான நிலைமையில் தனிமனிதர்கள் அதிக பட்சம் 100 ஆண்டுகள் மட்டுமே உயிரோடிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க!)

பேரியற்கைவாதிகள் உலகை, இயற்கையை மறுப்பதில்லை! மாறாக, உலகை, இயற்கையை நிரந்தரமானதொரு நிஜமெனக் கொண்டாடுவதைத்தான் "மாயை" என மறுக்கிறார்கள். ஏனெனில், உலகமானது ஒரு பரிணாம இயக்கமாக இருப்பதால், அது ஒரு இலக்கை நோக்கிச் செல்கிறது. துல்லியமாகச் சொன்னால், உலக இருப்பானது, மனித ஜீவியின் வழியாக தனது பரிணாம முழுமையை நோக்கியே செல்கிறது. இந்த நோக்கத்தை, விழைவை நிறைவேற்றிடுவதற்காகத்தான் அது மனித ஜீவியாக, குறிப்பாக மனித உணர்வாக மாறியுள்ளது.

உண்மையில், மனிதனுள் உணர்வாக மாறிய உலகமானது மீண்டும் தனது பழைய நிலையை, அதாவது, பௌதீக நிலையை திரும்பிப்பார்ப்பதில்லை. மாறாக, பரிணாமப் பார்வையும், புரிதலும் அற்ற மனிதர்கள் தான் பௌதீக உலகை (முறையான நோக்கமின்றி) ஆராய்ந்து கொண்டுள்ளனர். ஆனால், பரிணாமத்தின் மிக அசலான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பேரியற்கைவாதிகள் (அசலான ஆன்மீகவாதிகள்) முன்னோக்கி மட்டுமே பார்க்கிறார்கள். தம்முன்னேயுள்ள பரிணாம இலக்கை மட்டுமே குறிவைத்து தம்முள் ஆழ்ந்து செல்லுகிறார்கள்!

உணர்வைப் பற்றிய மாபெரும் உண்மை யாதெனில், அது ஒரு கட்டத்தில் இவ்வுலகில், இயற்கையில் தோன்றினாலும், தொடக்கத்தில் இவ்வுலைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தாலும், அது இவ்வுலக இயற்கையைச் சேர்ந்ததல்ல! மாறாக, அது "முழு-உணர்வு" எனும் பேரியற்கையின் உலகைச் சேர்ந்ததாகும். எவ்வாறு ஒரு நதியானது மலையில் உற்பத்தியாகிறதோ, அவ்வாறே உணர்வும் மனித உடலில் (குறிப்பாக மூளையின் இயக்கத்தில்) உற்பத்தியாகிறதே தவிர, உணர்வை உடலோ, மூளையோ, பௌதீக உலகமோ உற்பத்தி செய்வதில்லை! ஆம், நதியை மலை உற்பத்தி செய்வதில்லை. மாறாக, நதி உற்பத்தியாவதற்கு மலை ஏற்ற இடமாக இருக்கிறது- அவ்வளவுதான். மேலும், நதியானது மலையையும், அது நெடுக பாய்ந்து செல்கிற வழிகளையும், இடங்களையும் தற்காலிகமாகச் சார்ந்திருக்கிறதே தவிர நதியானது சமுத்திரத்தைச் சேர்ந்ததே! மனித உணர்வும் உடலில், (மூளையில்) தோன்றினாலும் அவ்வாறு தோன்றுவதற்கு அது ஏற்ற இடமாக, அமைப்பாக இருக்கிறது என்பதைத்தவிர உணர்வானது "முழு-உணர்வு" எனும் சமுத்திரத்தை மட்டுமே சேர்ந்தது!

உணர்வாகிய மனிதன் தாம் ஒரு உணர்வு தான் என்கிற உணர்வுக்கு வராமல் (தன்னை நோக்கி விழிக்காமல்), உடலுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதால்; இதன் நீட்சியாக உலகுடனும், இயற்கையுடனும், உலகப் பொருட்களுடனும் தம்மைப் பிணைத்துக் காண்பதால், உடலின் விதியான மரணத்துடன் தாமும் (உணர்வும்) முடிந்து போவதாக தவறாகக் கருதிக் கொள்கிறான் - உடலின் மரணத்துடன் இணைந்து தானும் மாண்டுபோகிறான்.
 
ஆனால், "தான் ஒரு உணர்வுதான்!" என்கிற உணர்வுக்கு விழித்துக்கொள்பவன் முதன்முறையாக உண்மையிலேயே சுயவுணர்வு கொள்கிறான். இதைத் தொடர்ந்து தமது சுய உணர்விலேயே நிலைப்பதன் (ஆழ்வதன்) வழியே உணர்வில் பெருகி உயர்ந்து உணர்வின் உச்சமான முழு-உணர்வு எனும் என்றும் வற்றாத, அழிவிலா, உணர்வுச் சமுத்திரத்தை அடைகிறான். இதைத்தான்  பேரியற்கைவாதிகளான ஆன்மீக முன்னோடிகள் முக்தியடைதல், மரணமிலாப் பெருவாழ்வு, வீடு பேறு, நித்திய ஜீவன், நிர்வாணம், ஆத்மசாட்சாத்காரம், இறைவனடி சேருதல், தேவனின் ராஜ்ஜியம், ஒளியுலகு சேருதல், ஞானமடைதல் அதாவது, ஞான - ஒளி-விளக்கம்-பெறுதல் (Enlightenment) ஆகிய வெவ்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

***

இனி நாம், பொதுவாக, ஆன்மீகம் தொடர்பான விடயங்களையும், குறிப்பாக ஞானமடைதல், இருப்பின் தரிசனம், சத்-சித்-ஆனந்தம் ஆகியவை குறித்தும் பரவலாக நிலவுகின்ற தவறான புரிதல்களையும், கோட்பாடுகளையும் இனம் கண்டு களைவோம்.

"நமது இயல்பான தன்மையே ஆனந்த சொரூபம் தான்" என,  ஶ்ரீ ரமண மகரிஷி போன்ற மகா ஞானிகள் சொல்லும்போது, அவர்கள் குறிப்பிடுவது, மனிதன் முயன்று அடையக் கூடிய, அடைந்தாக வேண்டிய முழு- உணர்வு நிலையைத்தானே தவிர, ஏற்கனவே மனிதன் கொண்டிருக்கும் இயல்பை அல்ல! பொதுவாக, சாதாரணமாக நாம் பேசும்போது, "அடிப்படையில் நாம் அனைவரும் மனித ஜீவிகள் தானே!" எனக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், இது மிகவும் தவறானதொரு கூற்று ஆகும். ஏனெனில், மனிதர்கள் தமது அடிப்படையில் வெறும் விலங்குகளே. இறுதியாகத்தான் (உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில்தான்) மனித ஜீவிகள் உண்மையில் மனித ஜீவிகளாக ஆகிறார்கள். ஆகவே, "நமது அடிப்படை இயல்பே ஆன்மீக சொரூபம் தான்!" என்பது பரிணாம பூர்வமான கூற்றேயாகும், நமது அடிப்படையில் கீழியல்பில் நாம் ஆனந்த சொரூபிகளல்ல. நாம் அடையக்கூடிய மேலியல்பில் தான் நாம் ஆனந்த சொரூபிகளாவோம்.

சிலர் 'சத் தரிசனம்' பற்றிச் சொல்லும் போது, சத் எனப்படும் இருப்பு நிலையே 'இருப்புணர்வு' என்பதாகவும் கூறிவிடுகிறார்கள். இது தவறு. சத் என்பது இருப்பைக் குறிக்கிறது. ஆக, சத் எனும் இருப்பு பரிணமித்து உணர்வாக எழாமல், அது புறத்தேயுள்ள எதையும் அல்லது தன்னையும் தரிசிக்க இயலாது. இருப்பிற்குப் புறத்தே எதுவுமில்லை, இருப்பைத் தவிர! ஆகவேதான் அது தன்னைத்தானே தரிசிக்க வேண்டிய, தனது அசலான முகத்தைக் காண வேண்டிய, தன்னைத்தானே அறிய வேண்டிய, தனது உண்மையான தன்மையைக் கண்டுபிடித்தாக வேண்டிய அவசியம் எழுகிறது. இதே அவசியம்தான் இருப்பின் மிக விசேடமான அங்கமான, இருப்பின் உணர்வுபூர்வமான பிரதி நிதியுமான மனிதனுக்கும் உரியதாகிறது. மனிதன் என்பவன் உண்மையில் உணர்வு பெற்ற இருப்பே, இயற்கையே!

ஆனால், இவ்விடத்தில்தான் இருப்பும், பரிணாமமும், அவற்றின் பிரதான நோக்கமும் பெரும் தடையைச் சந்திப்பதாக உள்ளன. அந்தத் தடை மனிதனே! ஏனெனில், மனிதன் தன்னைத்தவிர, பிற உலக விடயங்களையும், பிரபஞ்சத்தையும், ஆராய்பவனாக, குறிக்கோளற்றவனாக, விளங்குகிறான். மனிதன் தனக்குப் புறத்தேயுள்ள இருப்பை மட்டுமே காண்கிறான், அறிகிறான். அவன் தன்னைக் காண்கிற, அறிகிற, தரிசிக்கிற பிரதான அவசியத்தை தவிர்த்துவிட்டு, தன்னைக் குறித்தவரையில் ஒரு "குருட்டுப்புள்ளி" யாகவே (Blind Spot) திரிந்து கொண்டிருக்கிறான்

ஆக, உணர்வாகிய மனிதன் உணர்வை உணர்வுகொள்ளாமல், தவறாக தமது உடலை தாம் என்று கருதத் தொடங்கி விடுகிறான். இதன் விளைவாக, அவன் "தான் உயிரோடிருக்கிறான்!" எனும் உயிர்-இருப்பை மட்டுமே உணர்கிறான். தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றை மட்டுமே செய்கிறான்.

ஆனால், "நான் உயிரோடிருக்கிறேன்!" எனும் நிலை வேறு; "நான் இருக்கிறேன்!" எனும் நிலை வேறு. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. எவ்வாறென்றால், "நான் உயிரோடிருக்கிறேன்!" என்பது ஒரு உயிரியல் நிஜம் மட்டுமே. எலியும், தவளையும் கூடத்தான் உயிரோடிக்கின்றன. எனினும் "தாம் இருக்கிறோம்!" என்பதை அவை உணருவதில்லை; உணரவும் வழியில்லை! ஆனால், "நான் இருக்கிறேன்!" என்பது எனது உயிர்-இருப்பைக் கடந்த ஒரு உணர்வுபூர்வமான நிஜமாகும். அதாவது, உணர்வு தன்னைத்தானே உணர்ந்து தன்னை உணர்வாக இனம் கண்டு அதிசயித்து, அக மகிழும் நிலையாகும்! இந்நிலை சர்வசாதாரணமானதல்ல. ஏனெனில், அது அவ்வளவு சர்வ சாதாரணமாக எல்லா மனிதர்களிடமும் நிகழ்வதில்லை, ஏற்படுவதில்லை!

இவ்வாறு ஒரு மனிதன் தனது உணர்வை உணர்வு கொள்ளும் போது, "தான் உணர்வுதான்" எனும் உணர்வைப் பெறும்போது என்ன நிகழும்? ஆம், ஒட்டுமொத்த பிரபஞ்ச வரலாற்றில், வெகு அபூர்வமாகவும், அரிதாகவும் நிகழ்ந்திட்ட "விழிப்பு" என்பது நிகழும்! யாதொரு ஓசையும், ஆரவாரமும் இன்றி, ஒருவன் "புத்த -உணர்வு",  "கிறிஸ்து-உணர்வு", "ரமண உணர்வு" எனப்படும் முழு-உணர்வைப் பெற்றிடுவான், முழுமையடைந்திடுவான்!

இந்த முழுமை நிலை (இதுவே பெரு வெடிப்புக்கு முன்னிருந்த மூல நிலை) யின் வெளிப்பாடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்றால்,

பிறவிக்குருடன் திடீரென பார்வை பெற்று ஒளியைத் தரிசிப்பது போல இருக்கும்!
இருளாகத் தெரிந்தவை அனைத்தும் ஒளியாகத் தெரியும்!

மறைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளும் வெளிப்படையாகத் தெரியும்!

இம் முழுமை நிலையின் தன்மைகள், பயன்கள் எப்படிப்பட்டதாயிருக்கும் என்றால்,

ஒருவன் எதை அறிந்துகொண்டால்
வேறு எதனையும் அறிந்திடத் தேவையில்லையோ
எதை அடைந்துவிட்டால்
வேறு எதனையும் அடைந்திட, அனுபவித்திட,
தேடிட, ஓடிட, நாடிடத் தேவையில்லையோ
அந்த அதியற்புத நிலை தான் இம்முழுமை நிலை!

இதன் பயன்கள் எவை எவையெனப் பார்த்தால், அவற்றைப் பட்டியலிட முடியாது. "முழுமை நிலை" என்பதில் உள்ள "முழுமை" எனும் ஒற்றைச் சொல்லே முழுமையாக எல்லாவற்றையும் தன்னகத்தே உள்ளடக்கிவிடுகிறது! எனினும், பேரியற்கைவாதிகளான ஆன்மீக முன்னோடிகள், "பேரானந்தம்" அல்லது "பேரின்பம்" என்கிற சொற்களைக் கொண்டு, இந்நிலையை குறிப்பிட்டிருப்பதால், அதன் பொருளை நாம் ஆழமாகவும், விரிவாகவும் புரிந்து கொள்வது அவசியமாகும்.

ஏனெனில், ஞானத்திற்கும், புரிதலுக்கும் தொடர்பில்லாத தற்கால 'ஞானி'களில் ஒருவர், தங்களுடன் சிந்தித்தறியாத ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டு, 'அடைவதற்கு ஒன்றுமில்லை!' எனவும், " 'ஆனந்தம்' என்கிற வார்த்தையே ஆன்மீகத்தை பெரும் குழப்பத்திற்குள்ளாக்குகிறது!" எனவும்; புத்தர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அரவிந்தர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது ஆன்மீகக் கருத்துக்களை மேற்கோள்காட்டி, அவற்றிற்கு தமது தாறுமாறான விளக்கங்களை அளித்தும், ஏதோ அவர்கள் அனைவரும் அஞ்ஞானிகள் என்பது போலவும் கிண்டலடித்து தூற்றிப்பேசி தம்மை உயர்த்திக் கொள்ளும் மலினமான யுக்திகளைக் கையாண்டுவருகின்றார்.

ஆனால், "ஆனந்தம்",  "பேரானந்தம்" அல்லது "பேரின்பம்" ஆகிய சொற்களை ஆன்மீக முன்னோடிகள் மிகவும் பிரத்தியேகமான அர்த்தத்தில் மட்டுமே பிரயோகித்துள்ளனர். பேரானந்தம் எனும் சொல் முற்றும் முடிவான நிலையைக் குறிப்பதாகும். அதற்கும், சாதாரணமாக பலரும் திபுதிபுவென ஆன்மீகத்திற்குள் நுழைந்து தேடிக்கொண்டிருக்கும் 'குச்சி மிட்டாய்' போன்ற 'ஆனந்த அனுபவங்கள்' எனக் குறிப்பிடப்படுவதற்கும் யாதொரு தொடர்புமில்லை. இன்னும், 'அடைவதற்கு ஒன்றுமில்லை' என அரற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் அதில் யாதொரு பங்கும் இல்லை.

மேலும், ஒருவர் வாழ்க்கையின் சாரமான உண்மையை அறிய விரும்புகிறார் என்றாலும், தூய்மையான புனிதமான இரண்டற்ற நிலையை அடையவிரும்பினாலும், அல்லது ஞானம் என்றால் என்னவென்றே தெரியாமல், பெயரற்ற பெரும் தேடலில் ஈடுபட்டிருந்தாலும்; உண்மையான ஞானிகள் குறிப்பிடுகின்ற பேரானந்தத்தை அடைய விரும்பினாலும் அதில் தவறில்லை! அதற்கான தகுதிகளை அவர் வளர்த்துக்கொள்ளட்டும். அது சாமான்ய இன்ப நாட்டமாகாது! அதே வேளையில், இன்ப நாட்டம் என்பது ஒரு அசிங்கமான விடயமோ, அருவருப்பான, தவறான விடயமோ அல்ல.

ஒருவர் இன்ப நாட்டத்தைப் பின்பற்றிச் செல்லட்டும். அவர் எங்கே போய்விடுவார்? ஏன், அவர் எங்கே வேண்டுமானாலும் போகட்டும். கோடி கோடியாகச் சம்பாதிக்கட்டும்; எல்லா சௌகரிய சம்பத்துக்களையும் அனுபவிக்கட்டும். எதுவும் அவரை நிறைவு செய்யாது! அவரது அக-வறுமையை எதுவும் போக்காது, நீக்காது. உண்மையில் இன்ப நாட்டம் அல்ல பிரச்சினை. எதை ஒருவர் நாடுகிறார், எதற்காக நாடுகிறார் என்பதில்தான் பிரச்சினையுள்ளது. எது உண்மையான இன்பம் என்பது தெரியாத வரை இன்ப நாட்டம் ஒழியாது. எல்லா நாட்டமும் இன்ப நாட்டமே, ( எல்லா பயமும் மரண பயமே என்பதைப்போல!). அதில் சாமான்யமானதும், அசாமான்யமானதும் அடக்கமே! ஒருவரிடம் இன்ப நாட்டம் இல்லையெனில், ஒன்று அவர் ஞானம் எனும் பேரின்ப நிலையை அடைந்திருக்க வேண்டும் அல்லது அவர் செத்துப்போயிருக்க வேண்டும்! ஏனெனில், இன்ப நாட்டம் தான் வாழ்க்கையின் மிக அடிப்படையான உந்து விசை, உந்து சக்தி.

ஞானி என்பவன் இன்பத்துக்கு எதிரானவன் அல்ல. அதே வேளையில், துன்பத்துக்கு நண்பனும் அல்ல! இன்பம் துன்பம் இரண்டையும் கடந்து வாழ்க்கையை, இருப்பைத் தரிசித்தவனே ஞானி!

சாதாரண சாமான்ய இன்பத்தை அறியாதவன் பேரின்பத்தை அறிய முடியாது. ஒரு ஞானி தனது காலைச் சிற்றுண்டியாக இட்லி (சூடாக), சட்னி, சாம்பார், கொஞ்சம் மிளகாய்ப்பொடி (நல்லெண்ணையுடன் தான்) சாப்பிடும்போதும், சரி, பிரபஞ்ச உண்மையைப் பற்றி சிந்திக்கும் போதும் சரி, அதே குன்றாப் பேரார்வத்துடன் தான் ஈடுபடுகிறான்! ஆனால், அவனது இன்ப நாட்டம் அசாதாரணமானது. அது எவ்வொரு குறிப்பிட்ட விடயத்துடனும், பொருளுடனும் தங்கித் தேங்கிவிடுவதில்லை!

பேருண்மை, முழுமையான ஞானம் என்பவற்றிற்கு இன்னுமொரு பெயர்தான் பேரின்பம், அல்லது பேரானந்தம் என்பது. பேரின்பம் என்பது பாலும்,தேனும் ஆறாய் ஓடும் ஒரு இடமோ, சொர்க்கமோ அல்ல! அது ஒரு உணர்வு; அது எதைப்பற்றிய உணர்வும் அல்ல! ஏனெனில், அதுவே முழு-உணர்வு. உணர்வானது (இருப்பிலிருந்து தன்னை முழுவதுமாக மீட்டுக்கொண்டு) தன்னைத்தானே உணர்வு கொண்டு தன்னை முழுமையாகக் கண்டடைந்த நிலை!

இம்முழுமை நிலையே மெய்ப்பொருள் நிலை. சிலர் சொல்வதுபோல, நம்முடைய சத் அம்சமான உயிர்-இருப்பு நிலையோ, (அல்லது நம் சித் அம்சமான சிற்றுணர்வின் இருப்பு நிலையோ), பிரம்மம் எனும் மெய்ப்பொருள் நிலை அல்ல. மாறாக, சத் அம்சம் முழுவதுமாக சித் அம்சமாக மாற்றமடைந்து, பேருணர்வு அல்லது முழு- உணர்வு நிலையை அடைவதுதான் மெய்ப்பொருள் நிலையாகும். இருப்பு என்பது உண்மையில் வேறு, அல்லது மாறு வேடத்தில் இருக்கும் உணர்வே தவிர வேறில்லை! (Existence is nothing but Consciousness in Disguise!). உணர்வின் மாறிய வடிவமும், நிலையும் தான் இருப்பு! இருப்பு, இயற்கை, பொருளாலான பிரபஞ்சம் என எதுவாயினும் இறுதியில், உணர்வின் சொற்களில்தான் (In terms of Consciousness) புரிந்துகொள்ள முடியுமே தவிர, பொருண்மையாலான இருப்பின் சொற்களில் அல்ல!

இருப்பு என்பது தன்னைத்தானே கடந்து வளர்ந்து செல்லும்பரிணாம இயக்கமாகும். அதன் நெடும் பயணத்தின், இடைவழியில், எவ்வொரு புள்ளியிலும், கட்டத்திலும் அது பாதி-நிஜம் மட்டுமேயாகும்! அதனுடைய பயணத்தின் முடிவான அடைவிடத்தை அடையும்போது மட்டுமே இருப்பானது "நிஜமான-நிஜமாக", மெய்ப்பொருளாக ஆகிறது! அப்போதுதான், முற்றும் முடிவான எவ்வகையிலும் வலிந்து தக்கவைக்கப்பட வேண்டுமெனும் தேவையைக் கடந்த பேரானந்த நிலை மலரும். இதுவே பிரம்மம், பேரிருப்பு, பேரியற்கை!

இந்நிலையை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நேர்முகமாகவும், நேர்மறையான அணுகுமுறையின் வாயிலாகவும் அடையவும், அனுபவம் கொள்ளவும், உணரவும் ( அதாவது 'ஐஸ்-க்ரீம்' சாப்பிடுவதைப்போல அனுபவிக்கவும்) முடியும், முடியும், முடியும்!

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! ஏனெனில், இதுதான் மனிதனின் அசலான சொரூபம்; இதுதான் அவனது சொந்த வீடும், பேறும். ஒருவனது சொந்த வீட்டிற்குச் செல்ல எவரும் வழி காட்டத் தேவையில்லை! சொந்த வீட்டிற்குச் செல்லவேண்டும் என்கிற மாபெரும் ஏக்கம் மட்டுமே வேண்டும். இதை "அடைய முடியாது" என ஒருவர் சொன்னால்தான் நாம் ஆச்சரியப்படவும், அதிர்ச்சியடையவும், அவரது 'புத்தி சுவாதீனம்' குறித்து சந்தேகப்படவும் வேண்டும்.

இவை யாவும் கற்பனையான விடயங்களோ, அல்லது சாதாரண மனித நிலையில் திருப்தியடைய இயலாத ஒரு விபரீத மனத்தின் அதீதக் கருத்தாக்கங்களோ அல்ல. இவை பரிணாம பூர்வ உண்மைகளாகும். இவை கடினமானவையாக இருப்பதாகத் தெரியலாம். ஆனால், இறுதியில் மகா சுகம் உள்ளது!

உண்மையில், பேருண்மை, ஞான-ஒளி-விளக்கம், முக்தி, மோட்சம், விடுதலை, வீடுபேறு,  எனப்படுபவை பேரானந்தமாக இல்லையெனில், அவற்றைத் தேடுவது, அடைவது பயனற்றது, தேவையற்றது. பேரானந்தம் என்பது ஒரு இன்ப உணர்வு அல்ல! அது ஒருமையும் முழுமையுமான நிலை. அதிலிருந்து பிரியாமல், சற்று விலகியிருந்து, அதை ஒரு இன்ப நிலையாகவும், அனுபவமாகவும் உணர முடியும்! பிளவற்ற முழுமை நிலையில், ஆனந்தம், ஆனந்திப்பவன், ஆனந்தம் தரும் பொருள் யாவும் தானாகவே இருக்கிறான்!

பேரானந்தம் எனும் பேருண்மையின் ஒளி எவற்றின் மீதெல்லாம் படிகின்றதோ அவை எல்லாம் அந்த ஒளியைப் பிரதிபலிப்பதால் பேரானந்தத்தின் தன்மையையே அவை பிரதிபலிக்கின்றன.

ஒரு புறம் பேரானந்தம் இன்னொரு புறம் உடம்பில் புற்று நோய்க்கட்டியின் பொறுக்கமுடியாத வலி. ரமணர் சொல்கிறார் (அவர்தான் சொல்லமுடியும்!) :

"அனைத்தும் ஆனந்தமே; துக்கம் கூட
துக்கானந்தமே"


இன்னொருவன் சொன்னான்:

"தீக்குள் விரலைவிட்டால் உன்னைத்
தீண்டும் இன்பம் தோணுதடா!"


இவன் தான் பாரதி.

பேரானந்தம் தான் பேருண்மை, பேருண்மை தான் பேரானந்தம். பேரானந்தத்திற்கு வேறு பெயர்களும் உள்ளன. அர்த்தம், புரிதல், ஞானம், அன்பு, அழகு, உயர் பேரறிவு, கடவுள் . . . . இவை எல்லாமே அந்த இறுதியான முழு-உணர்வு நிலையின் அம்சங்களாகும்.

ஞான விடுதலை என்பது இருக்கின்ற மட்டுப்பாடான (சுயத்தின்) நிலையை, முழுமைக் குறைவான நிலையை மறுப்பதோ, மாற்றுவதோ, சீரமைப்பதோ, அல்லது அப்படியே ஏற்றுக்கொள்வதோ, மறுக்காமல் இருப்பதோ அல்ல. மட்டுப்பாடு என்பது உணர்வுக்குறைவான நிலையே, உணர்வற்ற தன்மையே.

ஞானம், ஞான விடுதலை  என்பது எதிலிருந்தும் விடுபடும் நிலையல்ல! எதையும் அடையாமலிருக்கும் நிலையுமல்ல! மாறாக, எல்லாவுமாகிய நிலை, எல்லாவற்றையும் அடைந்த முழு நிறைவான நிலை!

தன்னைத் தொலைத்துவிட்டவனல்ல; முழுமையாகத்
தன்னைக் கண்டடைந்தவனே ஞானி!

சிலர் இருப்பின் அடித்தளம் (GROUND OF BEING)பற்றிப் பேசுகிறார்கள். ஆனல், இருப்பின் அடித்தளமென்பது உணர்வற்ற பௌதீகச் சடத்தன்மை தான். அதற்கும் கீழே (பெரு வெடிப்புக்கு முந்தைய மூல வித்து நிலைக்கு) நாம் செல்ல முடியாது. பரிணாமத்தில் பின்னோக்கிச் செல்வதற்கு வழியே இல்லை! மூல வித்து வெடித்து மறைந்து, முளைத்து, செடியாக வளர்ந்து, மாபெரும் பிரபஞ்ச விருட்சமாக விரிந்து, தற்போது 1500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே நாம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி அல்லது மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். ஆகவேதான், இக்கட்டுரை "இருப்பின் உச்சம்" (SUMMIT OF BEING) எனும் புதிய புரிதலின் கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசுகிறது. இறுதி மெய்ம்மையாகிய முழு-உணர்வு பற்றிப் பேசுகிறது.

ஆம், அனைத்து வகை பிரவாகங்களும் தற்போது முடிவுறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் உணர்வுப் பரிணாமம் உணர்வற்று தேங்கி நிற்கிறது. மனிதனின் முன் உள்ள இறுதிச் சவால் கடவுள் தொடங்கி வைத்ததை மனிதன் விரைவாக முழுமைப்படுத்தி முடித்து வைப்பதே! அதற்கு ஒரே ஒரு "உள்-பார்வை" (INSIGHT) மட்டுமே போதும்! அது எங்கே, எவரிடம் உள்ளது? அந்த மென்-பொருள் (திறவுகோல்) எவரிடமும் எந்தக் கடையிலும் இல்லை. அதை எந்த ஞானியும் எவருக்கும் கொடுக்க இயலாது. ஒவ்வொருவரும் தானே அதை தன்னுள்ளே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஞானத்தின் இடுக்கமான வாசல் வழியே கும்பல் கும்பலாக, கூட்டமாகச் செல்ல இயலாது

இறுதியாக, ஒவ்வொரு மானிடனும் செய்ய வேண்டியது, அனைத்துப் பிரவாகங்களிலிருந்தும் ஒரே தாவலில் வெளியேறிடுவது மட்டுமே!

ஆம், பெரு வெடிப்பிலிருந்து தொடங்கிய இருப்பின் பிரவாகம், மனித சமூகம் படைத்துச் செல்லும் ... வரலாறு எனும் பிரவாகம், தனி மனிதர்களின் அகந்தை அல்லது உணர்-மனத்தின் சொந்தப் பிரவாகம் . . . . என அனைத்து பிரவாகங்களும், இயக்கங்களும் முடிவுற்ற நிலையே ஞானமடைதல், ஞான விடுதலை, பேரானந்த நிலை, முக்தி . . . .  . ..  யாவும்!

ஆகவே வாசகர்களே, உடனே உணர்வுக்கு வந்திடுங்கள். ஆம், நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், விழிப்பைத்தவிர பிறவனைத்தும் விபத்துக்களே! விழிப்பு மட்டுமே அனைத்து மட்டுப் பாடுகளின் பிரவாகங்களிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரே வழி!


மா.கணேசன் /Conceived and completed on 06.08.2013/ Uploaded on 22-09-2024

Friday, 30 August 2024

"நான்" என்பது உங்களுக்குள்ளே எங்கேயிருக்கிறது?


 

 

 

 

 

 

 

எப்போதும் "நான்", "நான்", "நான்" என்கிறீர்களே, அந்த "நான்" உங்களுள் எங்கேயிருக்கிறது? நீங்கள் "நான்" என சொல்லும்போதும், எண்ணும் போதும், அச்சொல் உங்களில் எதைக்குறிக்கிறது? உங்கள் உடலைத்தான் "நான்" எனச் சொல்லுகிறீரா? அல்லது "நான்" எனச் சொல்வது உங்கள் மனமா? உண்மையில் மனம் என்பதுதான் நீங்களா? உங்கள் மனம் எங்கேயிருக்கிறது?  உங்கள் தலையினுள் உள்ள மூளையின் உள்ளேயிருந்து உதிக்கும் ஒரு அம்சம் தான் "நான்" என்று எண்ணுகிறதா, சொல்கிறதா?

அந்த மனிதன் ஒரு சாலை விபத்தில் சிக்கி தலையில் பலமாக அடிபட்டு நினைவிழந்து "கோமா" நிலையில் ஆழ்ந்துகிடக்கிறான். அவனால் பேச முடியவில்லை; உடலை, கை கால்களை அசைக்க முடியவில்லை. மருத்துவமனையில் உயர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறான். மருத்துவர்கள் சொல்கிறார்கள், "உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை; ஆனால் அந்த மனிதனுக்கு நினைவு எப்போது திரும்பும் என்று சொல்ல முடியாது!" என்கின்றனர். சிலரது விடயத்தில், மாதக்கணக்கில், அல்லது வருடக்கணக்கில் ஆகலாம் எனப்படுகிறது.

ஆம், நினைவு, அதாவது உணர்வு (Consciousness) திரும்பினால் தான் அந்த மனிதன் மனிதனாக எழுவான். அதுவரை, அவன் வெறும் ஒரு உடல், உயிருள்ள உடல் மட்டுமே! மனமற்ற, உணர்வற்ற, வெறும் உயிருள்ள உடல் மனிதனாகாது! ஆகவே, 'நீங்கள்' என்பது உங்கள் உடல் அல்ல! இன்னும் உங்கள் மூளையும் அல்ல! மாறாக, உங்கள் மூளையின் உள்ளே நடைபெறும் மிகவும் சிக்கல் வாய்ந்த நிகழ்வுமுறையின் விளைவாகத் தோன்றும் 'உணர்வு' என்பதுதான் உண்மையில் நீங்கள் ஆவீர்! அந்த உணர்வு தான் "நான்" என்கிறது!

அந்த உணர்வு தோன்றுவதற்கு, உதிப்பதற்கு ஒரு மூளை அமைப்பு வேண்டும், அந்த மூளை-அமைப்பைத் தாங்குவதற்கு ஒரு உடல் வேண்டும்! அந்த உடல் இருப்பதற்கு, இயங்குவதற்கு நீர், நிலம், காற்று மண்டலம் ஆகியவற்றைக்கொண்ட ஒரு பூமிக்கிரகம் வேண்டும். அந்த பூமிக்கிரகம் இயங்குவதற்கு, ஒரு சூரியனை மையமாகக் கொண்டு சுழலும் பல கிரகங்களைக்கொண்ட அமைப்பான ஒரு சூரியக்குடும்பம் வேண்டும்! அந்த சூரியக்குடும்பம் இருந்தியங்குவதற்கு, கோடானுகோடி கோடி சூரியக் குடும்பங்களால் ஆன ஒரு மாபெரும் 'கேலக்ஸி' (Galaxy) எனும் அமைப்பு வேண்டும்! நமது சூரியக் குடும்பம் அமைந்துள்ள கேலக்ஸியின் பெயர் "பால்வீதி மண்டலம்"  (Milky Way Galaxy). இந்த பால்வீதி மண்டலமானது கோடானுகோடி கோடி கேலக்ஸிகளில் ஒன்றுமட்டுமே! இந்த ஒட்டு மொத்த அமைப்பான பிரபஞ்சம் இயங்குவதற்கு எல்லையற்ற வெளி (Space) வேண்டும்! இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும், 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்,   "பெரு வெடிப்பு" (Big-Bang)எனும் ஒரு நிகழ்வில் தொடங்கியது என தற்கால விஞ்ஞானம் சொல்லுகிறது!

இந்த பெரு வெடிப்பு நிகழ்வு பிரபஞ்சத்தின் ஒரு (தொடக்க) முனை என்றால். உணர்வாகிய நீங்கள் தான் இப்பிரபஞ்சத்தின் மறுமுனையாகத் திகழ்கிறீர்கள்! இந்த மறுமுனை ஒரு முற்றுப்புள்ளி அல்ல, மாறாக, அது ஒரு அம்புக்குறியே எனலாம்! அந்த அம்புக்குறி பரிணாமம் முடிந்துவிட வில்லை மேற்கொண்டு தொடரவேண்டியுள்ளது என்பதையே குறிக்கின்றது!

உணர்வாகிய நீங்கள், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பது உங்கள் குழந்தைப் பருவத்தில் தொற்றிக்கொண்ட ஒரு தவறான பழக்கமே, பார்வையே! அதே வேளையில்,  உணர்வாகிய நீங்கள் இருந்தியங்குவதற்கு அவசியம் ஒரு உடல் வேண்டும் என்பதால், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றம் அல்ல என்றாலும், உங்களை உங்கள் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்வது என்பதுடன் மட்டும் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும்! பரிணாம ரீதியாக (Evolutionary Process), நீங்கள் உங்கள் உடலையும் தாண்டி, இப்பூமிக்கிரகம், சூரியக் குடும்பம், பால்வீதி மண்டலம், மற்ற அனைத்து கேலக்ஸிகள் என ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும் இடமுள்ளது! பிரபஞ்சத்தை ஒரு விருட்சம் (மரம்) எனக்கொண்டால், மனிதர்களை அவ்விருட்சத்தின் பிஞ்சுகள் எனக்கொள்ளலாம்!

மூளையின் உள்ளே நடைபெறும் மிகவும் சிக்கல் வாய்ந்த நிகழ்வுமுறையின் விளைவாகத் தோன்றும் 'உணர்வு' தான் உண்மையில் நீங்கள் என்றோம்! அந்த உணர்வு தான் மனம் என்பதை ஒரு கருவியாகக்கொண்டு,  "நான்" என்று சொல்கிறது! ஆனால், இந்த "நான்" உணர்வு, மனத்தின் பலவித மயக்கங்களின் விளைவாக, தன்னை தனது உடலுடனும், தன்னைச்சுற்றியுள்ள பல்வேறு உறவுகள், பொருட்கள், செல்வங்கள், பட்டங்கள், பதவிகள், சொத்துக்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் ஆகியவற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், அதனால், தனது அசலான இலக்கான, பரிணாம முழுமையை, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றையடுத்த வீடுபேற்றை அடைவதிலிருந்து தடுக்கப்பட்டு பரிணாமத் தேக்கத்திற்கு உள்ளாகி, தனது பிறவிப்பயனை அடையாமல் வீழ்ச்சியடைகிறது! இந்த வீழ்ச்சியானது அந்த உணர்வை (அதாவது உங்களை) மறுசுழற்ச்சிக்கு உள்ளாக்கி, மீண்டும் மீண்டும் பிறவி யெடுக்கும் அவலத்திற்கு உள்ளாக்குகின்றது!

ஆக, ஒவ்வொரு மனிதனும், முதலில் தான் ஒரு "உணர்வு" தான் என்ற உண்மைக்கு விழித்தாக வேண்டும்! அந்த விழிப்பு தான் முழுமையின் வாசல் ஆகும்! முதலில் விழிப்படையுங்கள், பிறகு அந்த வாசல் வழியாக உள்ளே பிரவேசித்து, அது எத்தகைய புரிதலை, பயனை, அனுபவத்தைத் தருகின்றது என்பதை நேரடியாக அறிந்து கொள்ளுங்கள்!

*

விளக்கக் குறிப்புகள்:

1) சிலர், "நான்" என்ற உணர்வு நிலை சுயநலம் கொண்டது, அது அகந்தை, ஆணவம் ஆகியவற்றுக்கு இடமளிப்பது. ஆகவே, அது நசிப்பிக்கப்பட வேண்டியது என்கின்றனர். ஆனால், இப்போக்கு தவறானது! ஏனென்றால், விழிப்படையாத "நான்" உணர்வு தான் மட்டுப்பாடானது; அகந்தை, ஆணவம் ஆகியவற்றுக்கு இரையாவது! ஆகவே, நான் என்ற உணர்வு நசிப்பிக்கப்படவேண்டியதோ, அழிக்கப்படவேண்டியதோ அல்ல! அப்படி அழிக்கப்பட்டால், மனிதன் ஒரு தவளையைப்போலத்தான் இருப்பான்! மாறாக, "நான்" உணர்வு மலர வேண்டும்! விழிப்படைய வேண்டும்!

2) சிலர், "நான்" என்ற உணர்வு சுயநலம் மிக்கதாகையால், அது எல்லோரையும் அரவணைக்கும் விதமாக "நாம்" என்ற சமூக உணர்வு கொண்டு பொது நலம் கொண்டு இயங்கவேண்டும் என்பர்! இதுவும் மிகவும் மட்டுப்பாடனதொரு நிலையே! ஏனென்றால், விழிப்படையாத "நான்" களின் கூட்டு என்பது பூச்சியங்களின் கூட்டுத்தொகையைப் போன்றே, பூச்சிய மதிப்பையே தரும்! மனிதர்கள் யாவரும் சேர்ந்து ஒரு சமூகமாக இணக்கமாக வாழ்தல் அவசியம், முக்கியம் தான்! ஆனால், விழிப்படையா மனிதர்கள் தனியே தீவு போல வாழ்ந்தாலென்ன? அல்லது சேர்ந்து சமூகமாக வாழ்ந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான்!

3) "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை !" என்று சொல்லப்பட்டது. ஆனால், வரலாற்றில் இன்றுவரை நாம் சமூகமாக கூடி இயங்கி வந்துள்ளோமே தவிர, நாம் "வாழ்தல்" என்பதன் உண்மையான அர்த்தத்தில் இதுவரை வாழவேயில்லை! இதுவரை நாம் உயிர் "பிழைத்தல்" (Survival), என்பதைத்தான் "வாழ்தல்" (Living) என்பதாகச் செய்துவந்துள்ளோம்! அதிலும் அந்த உயிர் "பிழைத்தல்" என்பதையும் கூட எல்லோரும் ஒரு கௌரவமான வகையில் மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் கூட நாம் வகுக்கத் தவறியுள்ளோம்! எங்கும், எதிலும் போட்டி, பொறாமை, வெறுப்பு, வன்மம், வன்முறை நிறைந்த  உணர்வற்ற மிகவும் வினோதமான ஜந்துக்களைப்போலவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இதற்கு, நம்முடைய பொருளாயத மதிப்பீடுகளே காரணம்.

4) ஏனென்றால், நம்முடைய சுயம் குறித்த பார்வை (Self-View) நம் உடலை மையமாகக் கொண்டமைந்த காரணத்தால், உயிர்-பிழைத்தல் என்பது நமது உடலின் நச்சரிப்பு மிக்க தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே என்றாகிவிட, உணவு, உடை, உறையுள், சௌகரிய சம்பத்துக்கள் ஆகிய தேவைகளைப் பெற்றிட பணம், பணம் மட்டுமே பிரதானம் என்றாகிவிட, சமூகம், அல்லது நாடு என்பது ஒரு மாபெரும் போட்டிக் களமாக, பந்தயக்களமாக மாறிவிட, 'இருப்பவன்', 'இல்லாதவன்'; ஏழை, 'பணக்காரன்' என ஏற்றத்தாழ்வு நிலைகள்உருவாகி நிலைத்துவிட்டன! பணம் அல்லது பொருளாதார அளவீட்டிலான இந்த அவலம் (ஏற்றத்தாழ்வு நிலைகள்) ஒருபுறமிருக்க; சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இன்னொரு புறம் மனிதர்களைக் கொடூரமாக அலைக்கழித்து வருகின்றது!

5) நம்முடைய சுயம் குறித்த பார்வை (Self-View) நம் உடலை மையமாகக் கொண்டு அமையாமல் (ஏனென்றால், மனிதன் என்பவன் அவனது உடல் அல்ல!) உணர்வை மையமாகக் கொண்டதாக மாற்றமடையாத வரை, சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய வழியேயில்லை! ஆம், மனிதர்கள் தங்களது உடல்-மைய அடையாளத்தை விட்டொழித்து,  உணர்வு-மைய அடையாளத்திற்கு உயரவேண்டும்! உடல்-மைய அடையாளத்திற்கும், உணர்வு-மைய அடையாளத்திற்கும் இடையே ஒரு பெருந்தடையாக இருப்பது, ஒருவருடைய மனம் என்பதாகும். மனம் என்பது எல்லாவித மயக்கங்களுக்கும், கற்பனைகள் மற்றும் கட்டுக்கதைகளுக்கும் ஆட்படக்கூடிய ஒரு தளம் ஆகும். இந்த மன-மைய அடையாளமே உடல்-மைய அடையாளத்தை விட ஆபத்தானதாகும்!(ஏனென்றால், மனிதன் என்பவன் அவனது மனம் அல்ல!) விதிவிலக்கின்றி எல்லா மனிதர்களும் இந்த மன-மைய அடையாளத்திற்கு பலியாகின்றனர். மனிதர்களின் அனைத்துவித மட்டுப்பாடுகளுக்கும், குறைபாடுகள், தீமைகளுக்கும் காரணம்; சுருக்கமாக, மனிதர்கள் மனிதர்களாக இல்லாததற்குக் காரணம் இந்த உடல், மற்றும் "மன-மைய" அடையாளங்களில் சிக்கியிருப்பதேயாகும்.

6) உண்மையில், எந்த மனித உடலும் "நான்" என்று சொல்வதில்லை! மாறாக, மனிதனின் மனம் தான் "நான்" என்று சொல்கிறது. மேலும், ஒவ்வொரு மனிதனின் மனமும், அது சார்ந்திருக்கும் உடலை பரிதியாக, கூடாகக் கொண்டு, தன்னை மையப்படுத்திக்கொண்டு, தான் 'இப்படிப்பட்டவன்', அல்லது 'அப்படிப்பட்டவன்' என தன்னைப் பற்றிய ஒரு கட்டுக்கதையை, பிம்பத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டு புறத்தே சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மனம் இல்லையென்றால், எவ்வொரு மனிதனும் தன்னைப்பற்றிய யாதொரு அடையாளத்தையும், பிம்பத்தையும் கொண்டிருக்க மாட்டான். வெறுமனெ ஒரு தவளையைப்போலவே இரையையும், இணையையும் தேடித் திரிந்து வாழ்ந்து செல்வான். பெரும்பாலான மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து செல்கின்றனர். " எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தானே!" என்ற பரவலான கூற்றே அதற்குச் சான்றாகும். பெரும்பாலான மனிதர்களின் மனமானது உடலையும், அதனுடைய நச்சரிப்பான தேவைகளையும் பிரதிநிதித்துவம்  செய்வதிலேயே வாழ்க்கையைக் கழித்துவிடுகிறது. ஆனால், மனமானது அதன் ஆதாரமான, சாரமான உணர்வைத்தான் பிரதிநிதித்துவம் செய்வதாய் இருக்கவேண்டும். அதாவது உணர்வின் பிரதிநிதியாகத்தான் மனம் செயல்படவேண்டும். ஒவ்வொரு மனிதனும், தான் ஒரு உடல் அல்ல; மனமும் அல்ல; மாறாக "தான் ஒரு சுதந்திர உணர்வு" (A Free Spirit) என்ற புரிதலுக்கு வரவேண்டும். இதுவே விழிப்புக்கான முதல் படி ஆகும்!

7) மனிதனின் சுயம் என்பது, உடல், மனம், மற்றும் உணர்வு (Consciousness)என மூன்று பகுதிகளைக்  கொண்டது. உடல் என்பது மனிதனின் மேலோடு போன்றதாகும். மனம் என்பதைத் தாங்கும் ஒரு பாத்திரம் போன்றது. அடுத்து, மனம் (Mind) என்பதை மனிதனின் மிக முக்கியமான இடை நிலைச் சுயம் எனலாம். உணர்வு (Consciousness)என்பது மனம் என்பதற்கும்  ஆதாரமாக அமைந்துள்ள மனிதனின் உண்மையான, சாரமான சுயம் ஆகும். உடலின் முக்கியத்துவமானது மனதைத் தாங்குவதற்கான பாத்திரமாக அமைந்திருப்பது தான். மனம் என்பதன் முக்கியத்துவமானது உணர்வை எட்டக்கூடிய ஒரு பாலமாக அமைவதால் மட்டுமே. உடல், மனம், உணர்வு ஆகிய இம்மூன்றில், உணர்வு மட்டுமே அனைத்திலும் முக்கியமான அம்சம் ஆகும். "நான்" என்பதன் பிறப்பிடம் உணர்வு தான். ஆகவேதான், உணர்வுதான் மனிதன் என்கிறோம். ஆனால், மனிதர்களோ தங்களை உடலாகவும், மனமாகவும் அடையாளப்படுத்திக்கொண்டு முடக்க நிலையில், தேக்க நிலையில் ஆழ்ந்துகிடப்பதால், அவர்களால், தாம் உணர்வு என்பதை உணர இயலாத நிலையில் உள்ளனர்.  இதற்குக் காரணம், மனிதர்கள் தங்களை உடலாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டதால், கைகள், கால்கள், மனம் ஆகியவற்றைப்போல உணர்வும் அவர்களின் ஒரு பாகம் என்பது போல பாவித்துவருகிறார்கள் என்பதுதான். ஆனால் உடல், மனம் ஆகியவைதான் உணர்வின் பகுதிகளாகப் பாவிக்கப்பட வேண்டும். உண்மையில் உணர்வுக்கு பரிணாமச் சேவை செய்வதற்காகவே உடலும், மனமும் அமைந்துள்ளன.

8) உண்மையில், அரிதிலும் அரிதாக வெகு சிலரே உணர்வுக்கு வருகிறார்கள். அதாவது தாங்கள் ஒரு உணர்வு என்பதை உணர்கிறார்கள்;  உணர்வுக்கு விழிக்கிறார்கள். உணர்வாகிய மனிதன் தன்னை நோக்கி விழிப்பது என்பது அவ்வளவு இயல்பான, எளிதான ஒரு விடயமாக இல்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே! இவ்வாறு தன்னைத் தானே விழிப்புக்கு உட்படுத்திக்கொள்ளாதவரை, மனிதன் ஒருபோதும் உண்மையான, முழுமையான மனிதனாக ஆக முடியாது! ஏனெனில், விழிப்பு தான் மனிதத்தின் சாரம். விழிப்பு என்பது முதலும் இறுதியானது; ஆகவே அதுவே மனிதனின் முழுமையுமாகும்.  மனிதம் என்பது, நாம் சாதாரணமாகக் குறிப்பிடும் மனிதத் தன்மை என்பதல்ல! மனிதத் தன்மை என்பது மனிதம் என்பதன் மிகவும் மங்கலான  ஒரு பிரதிபலிப்பு (சந்திர ஒளி போன்றது) மட்டுமே. மனிதம் என்பது சூரியன் போன்றது, பிரகாசமான சுய- ஒளியைக் கொண்டது!

9) "நான்" என்ற உணர்வை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். "நான்" என்ற உணர்வு தான் மனிதன். மனிதனுக்கு, அதாவது உங்களுக்கு ஒரு உணர்வு உள்ளது என்பது தவறான புரிதல் ஆகும். ஏனென்றால், உணர்வு தான் நீங்கள்! உங்களுக்கு ஒரு உணர்வு உள்ளது எனில். நீங்கள் வேறு, உணர்வு வேறு என்றாகிவிடும். அப்போது தேவையில்லாமல் நீங்கள் யார் என்ற கேள்வி எழும். பொதுவாக, "நான்" என்பதை ஒரு ஆளாக, அல்லது ஒரு நபராக பாவிக்கிறோம். அதாவது நம்மை நாமே ஒரு ஆளாக, நபராக நாம் கருதிக் கொள்கிறோம். ஆனால், "நான்" என்பது ஒரு நபரை, ஆளைக் குறிப்பதற்கானதல்ல; அவ்வாறு குறிக்கப் பயன்படுவது துரதிருஷ்டவசமாக நிகழ்ந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. "நான்" என்பது அதன் சாரத்தில்  அவதானிப்பிற்கான ஒரு மையம் (Center of Observation) ஆகும். அது ஒரு  படைப்பாக்க விசை (Creative Force) ஆகும். "நான்" என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்ததோ, சேர்ந்ததோ; அல்லது ஒரு குறிப்பிட்ட ஆளை, நபரைக் குறித்ததோ அல்ல; மாறாக, அது பிரபஞ்சமளாவிய அம்சம், அல்லது மெய்ம்மை  ஆகும். "நான்" உணர்வு அதன் குழந்தைப்பருவத்தில் 'அகந்தை' யாகவும், அதன் முதிர்ந்த, நன்கு கனிந்த நிலையில் 'அகன்ற பேருணர்வாக' வும் திகழ்கிறது. நன்கு கனிந்த ஒரு கனியானது, மரத்திலிருந்து விடுபட்டுவிடுவதைப்போல, உணர்வானது அதன் கனிந்த நிலையில், பிரபஞ்சப்பரிணாமத்தின் முழுமையாக கால-வெளிப் பிரபஞ்சத்தைக் கடந்த மெய்ம்மையாகிறது!

10) "நான்" என்பது ஒரு நபரை, ஆளைக் குறிப்பதற்கானதல்ல; அவ்வாறு குறிக்கப் பயன்படுவது துரதிருஷ்டவசமாக நிகழ்ந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை என மேலே குறிப்பிட்டோம். பொதுவாக, சாதாரணமாக, ஒரு மனிதன் "நான்"  உணர்வு கொண்டு, மையமென தன்னைச் சுற்றி, ஒரு கற்பிதத்தை, ஒரு கட்டுக்கதையை, "தான் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன்!",  "தனது பராக்கிரமங்கள் இப்படியானது, அப்படியானது!" என்றெல்லாம் பின்னிக்கொண்டு லௌகீக, நடைமுறை  உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறான். ஆனால், ஒரு மனிதன் தன்னையறியும் பாதையில் இறங்குவானெனில், அவன் தன்னைப்பற்றிய கற்பிதங்களை கடந்து செல்வது அவசியமாகும். அக்கற்பிதங்கள் அவனுக்கு லௌகீக, நடைமுறை  உலகில் உதவக்கூடியதாகவும், தேவையானவையாகவும் இருக்கலாம்; ஆனால், அவை ஆன்மீகத்திற்கு பெரும் தடையாகவும், பாரமாகவும் மட்டுமே அமையும். மட்டுப்பாடான நான் என்பது ஒரு அடைவிடமோ, முடிவிடமோ அல்ல; அது கடக்கப்படவேண்டிய தற்காலிக நிலையே! சமூகக் களத்தில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபராக, ஆளுமையாக இருப்பது தேவைப்படலாம். ஆனால், உங்கள் உள்ளார்ந்த தன்மையில், நீங்கள் உலகம் கடந்த பெரு நிஜம் ஆவீர்! அ ந் நிலையை அடைவதில் தான் உங்கள் பிறவிப்பயன், முழுமை , முக்தி, மோட்சம், வீடுபேறு யாவும் அடங்கியுள்ளது!

மா.கணேசன்/ 03-08-2024

Saturday, 28 March 2020

மனித வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டதா கொரோனா?





மனித வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப்போட்டுவிட்டதா கொரோனா?

ஆம், மற்றும் இல்லை என்பதே இக்கேள்விக்கான பதிலாகும். இது நாள் வரை நாம் நம் விருப்பங்களைத் தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக கணக்கில் கொள்ளாமல் நம் மனம் போன போக்கில் வாழ்ந்துவந்துள்ளோம். இனியும் நாம் அவ்வாறு தொடரமுடியாது என்பது கொரோனா சுட்டும் முக்கிய பாடங்களில் ஒன்று எனலாம். உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளையும், மக்களையும், அவர்களது வாழ்க்கையையும் முற்றாக முடக்கிப்போட்டுவிட்டது கொரோனா. வரலாறு என்பது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று தெளிவாகப் பிரித்துக் காண வேண்டிய அளவிற்கு பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கொரோனா ஏன், எவ்வாறு வந்தது போன்ற கேள்விகள் குறுகிய எல்லைகளைக்கொண்டவை. கொரோனா ஏற்பட்டது ஒரு விபத்தாக இருக்கலாம். அல்லது மனிதத் தவற்றின் விளைவாக இருக்கலாம். எப்படியாயினும் அது ஏற்பட்டுவிட்டது; அது இங்கே இருக்கிறது; எவ்வாறேனும் அதை இங்கே தங்கவிடாமல் விரட்டுவது தற்போதைய தலையாய பணியாகும். ஆனால், கொரோனாவை விரட்டியடித்த பிறகு மீண்டும் நாம் நம் பழைய வாழ்-முறைகளுக்கும், அதே பழைய உள்ளீடற்ற வாழ்க்கைப்  பார்வைக்கும் திரும்பப் போவதென்பது பெருந்தவறாகவே முடியக்கூடும். கொரோனாவானது இதுவரை நாம் வாழ்ந்துவந்த நமது வாழ்க்கை முறைகளை, நாம் கொண்டிருந்த வாழ்க்கைப் பார்வைகளை (அவ்வாறான பார்வை ஏதும் நம்மிடம் இருக்குமென்றால்) மறு பரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தைச் சுட்டி நிற்கிறது எனலாம்.

எவ்வாறெல்லாம் கொரோனா தற்போது நம் வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது என்பதை மறந்துவிடாமல் ஞாபகத்தில் கொள்வது அறிவுடைமை ஆகும். முதலிடத்தில் அது நமது இயக்கத்தை, குறிப்பாக பிற மனிதர்களுடன் கூடிச் செயல்படுவதை, கூட்டியக்கத்தை முடக்கியது. ஏனென்றால், உயிர் பிழைத்திருப்பது முக்கியம் என்பதால்,  கொரோனா தொற்றிலிருந்து தப்ப வேண்டுமானால் நாம் கூட்டமாகக் கூடுதல், கூடிச் செயல்படுதல்  கூடாது. இது ஒரு அருமையான பாடம். அதாவது, உயிர் பிழைத்திருத்தலின் முக்கியத்துவத்தை நாம் அநேக நேரங்களில் மறந்துவிடுகிறோம். அதன் விளைவாக, நாம் உயிர் பிழைத்திருத்தலின் நோக்கம், குறிக்கோள், அல்லது  இலக்கு என்ன என்பவைகளையும் வாழ்வின் அர்த்தம் பற்றியும் அறிவதையும் சேர்த்தே மறந்து விடுகிறோம்.  உயிர் பிழைத்திருத்தல் எனும் அடித்தளத்தின், அல்லது அடிப்படை யின் மீதுதான் நாம் நமது அறிவார்ந்த அம்சங்களை அல்லது நமது படு முட்டாள்தனமான விஷயங்களை அரங்கேற்றி வாழ்க்கை என்ற பெயரில் வாழ்ந்து செல்கிறோம்.


கொரோனா சுட்டும் பாடங்கள்

கொரோனா நம்மை வீட்டுச் சிறையில் தனிமைப்படுத்தி வைத்துவிட்டது. அது நம்மை சமூகத்திரளிடமிருந்து தனிமைப்படுத்தியதோடு, ஒரு வகையில் அது நம்மை நம் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் தனிமைப்படுத்த வைக்கிறது. சமூகத் திரளுடன் சேர்ந்து செயல்படக்கூடாத நிலைமையில் யாதொரு பொருளாதாரச் செயல்பாடும் நிகழவியலாததால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால், இந்த நேரத்தில் சமூக விலகலைக் கட்டாயம் கடைப்பிடித்தாக வேண்டும் என்பதால் பொருளாதாரச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தாக வேண்டும். அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புக்களை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். வழக்கத்துக்கு மாறான இந்த நிகழ்வை நாம் கணக்கில் கொண்டோமெனில், பொருளாதாரம் பற்றிய நமது பழைய பார்வையின் அடித்தளத்தையே நாம் மாற்றியமைத்தாக வேண்டும் என்பது முக்கியமானதாகும். இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு துறையையும், அம்சத்தையும் நாம் மறு சிந்தனைக்கு உட்படுத்தி மாற்றியமைப்பது அவசியமாகும். அதாவது பொருளாதார அடித்தளத்தை   மாற்றியமைப்பதன் தொடர்ச்சியாக நமது மதிப்பீடுகள் அனைத்தையும், ஒவ்வொரு நடைமுறையையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அவற்றில் அவசியமான மாற்றத்தைச் செய்தாக வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாக கடைப்பிடித்தாக வேண்டிய சமூக விலகலானது நமது அனைத்து வழக்கங்களையும்,  திருமணம்,, மற்றும் பிற கொண்டாட்ட நிகழ்வுகளையும்,  சாவுச் சடங்குமுறைகளையும், நடைமுறைகளையும் பெரிதும் பாதித்துள்ளது. சமூக விலகலானது நான்கு அல்லது எட்டு நெருங்கிய உறவினர்களைக்  கொண்டு மட்டுமே ஒரு திருமண நிகழ்வை நடத்த நிர்ப்பந்திக்கிறது. திருமணங்கள் முக்கியமெனில், அவை மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சம்பந்தப்பட்ட சொந்த பந்தங்களைக் கொண்டு நிகழ்த்தப்படலாம் எனும் பட்சத்தில் ஊரைக்கூட்டி பெரும் செலவில் ஆரவாரமாகவும், ஆடம்பரமாகவும் திருமணங்களை நடத்துவது என்பது அவசியம்தானா என்பது பற்றி நாம் பொறுப்புணர்வுடன் சிந்தித்து முடிவெடுக்கவேண்டியது அவசியமாகும். திருமணத்தைப்போலவே சாவுச் சடங்கும் நெருங்கிய சம்பந்தப்பட்ட சிலரைக் கொண்டு மட்டுமே நடைபெற முடியுமெனில், இவ்வாறே பிறவனைத்து நடைமுறைகளையும் நாம் அத்தியாவசியம் என்ற எல்லைக்குள் அடக்குவது என்பது நன்மை பயப்பதாய் அமையும். அதாவது கொரோனா விளைவித்த முடக்கமானது மிகவும் அவசியமான, அத்தியாவசியமான அம்சங்களையும், நிகழ்வுகளையும் மட்டுமே அனுமதிக்கிறது. அத்தியாவசியம் என்ற எல்லையை மீறுவது, அதாவது, சமூக விலகலை மீறுவது என்பது தற்கொலைக்குச் சமமானதாகும். 

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைவிட நம்மில் பலருக்கு சமூக விலகலைக்கடைப்பிடிப்பதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது என்பது பெரும் நெருக்கடியாக உள்ளதாகத் தெரிகிறது. வழக்கம் போல் நம்மால் வெளியே தெருக்களில், பொது இடங்களில் உலவ இயலவில்லை. தேநீர்க் கடைகள், பூங்காக்கள் என்று நண்பர்களைச் சந்தித்து உரையாட அரட்டையடிக்க இயலவில்லை என்பது நம்மில் பலருக்கு பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளது. ஆனால், இந்த முற்றும் முழுதான முடக்கம் நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே செல்வதற்கான, தன்னையறியும் ஆன்மீகச் செயல்பாட்டிற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை ஒவ்வொருவரும் முறையாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

கொரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறினால் அது பெரும் எண்ணிக்கையில் மனிதர்களைக் காவு கொண்டுவிடும். இப்போதைக்கு கொரோனா அபாயம் நீங்கி மீண்டும் நாம் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிட ஏங்குகிறோம். அதாவது, கொரோனா தொற்று நீங்கியவுடன் பழைய சமூக நடைமுறைகள், சடங்குகள், மதிப்பீடுகள், வாழ்முறைகள் எனும் சமூகத் தொற்றுக்காக; அவற்றுக்குத் திரும்பிட நாம் ஏங்குகிறோம்.

கொரோனா அபாயத்தினால், உலகம் முழுவதுமே முடக்கப்பட்ட நிலைமையில், நாடுகளுக்கிடையேயான விமானப்போக்குவரத்து, மற்றும் உள் நாட்டு விமானப்போக்குவரத்தும், பிற அனைத்து வகையான வாகனப்போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதனால் காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறே, பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டதனால் நிலம் நீர் மாசடைவதும் குறைந்திருக்கக் கூடும். இது சுற்றுச்சூழலுக்கும், புவி வெப்படைதல் சற்று தணிவதற்கும் நல்லதாகும்.

உயிர் பிழைத்திருப்பதற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நம்மைச் சுருக்கிக்கொள்ளத் தயாரெனில், அதையே நாம்  ஏன் யாதொரு நெருக்கடியும் இல்லாத எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கக் கூடாது? உயிர் பிழைத்திருப்பது என்பது அவ்வளவு முக்கியமெனில், அதைவிட முக்கியமான அம்சம் என்று வேறு எதுவும் இருக்கிறதா? உயிர் பிழைத்திருப்பதற்கு பெரும் நெருக்கடி ஏதும் ஏற்படுமெனில், நாம் எல்லாவற்றையும் அப்படியே போட்டதை போட்டபடியே விட்டுவிட்டு உயிர் தப்ப ஓடுகிறோம் எனில் அவற்றிற்கு என்ன பெரிதாக முக்கியத்துவம் இருக்க முடியும்? வழக்கமான காலங்களில் மனித ஜீவிகளாகிய நாம் எண்ணற்ற பல காரியங்களிலும், அலுவல்களிலும் ஈடுபடுகிறோம்; அவற்றில் எதுவும் உயிர் பிழைத்திருப்பதற்கான நோக்கத்தை, இலக்கை, அர்த்தத்தை எட்ட உதவுகிறதா என்பது பெரும் கேள்விக்குறியே! அப்படியானால், வெறுமனே உயிர் பிழைத்திருப்பதே நோக்கமாகவும், இலக்காகவும், அர்த்தமாகவும் அமைய முடியுமா? அதாவது, உயிர் பிழைத்திருப்பதைவிட வேறு ஒரு முக்கியமான அம்சம் எதுவும் இருக்க முடியுமெனில், அது   உயிர் பிழைத்திருத்தலின் நோக்கத்தை, இலக்கை, அர்த்தத்தை அறிவது,  அடைவது என்பதாக மட்டுமே இருக்க முடியும். 

மா.கணேசன்/ நெய்வேலி / 12:02 PM 29-03-2020

Wednesday, 28 August 2019

அனைத்து வாதங்களுக்கும் அடியில் இயங்கும் வாதம்



  
      என் சக மனிதனே! பரஸ்பரம் ஒட்டுமொத்தமாகக் கூண்டோடு நம்மை நாமே அழித்துக்கொள்வதைத் தடுப்பது எது?

முன்பொரு காலத்தில் நண்பன் என்ற பெயரில் உலா வந்து இன்று பிரிந்து போன ஒருவன், நண்பன் என்ற பெயரில் இன்றும் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொருவன் வழியாக வந்து சேர்ந்த  கேள்வி, “அவர் (இக்கட்டுரையாளர்) கடைசியாக பதிவிட்ட, “தலித் பிரச்சினை தலித்துக்களின் தனிப் பிரச்சினையா” எனும் தனது கட்டுரையில், பார்ப்பனியம் பற்றி எதையும் குறிப்பிடாதது ஏன்?” என்பது தான். ஆனால், இது போன்ற எண்ணற்ற கேள்விகள் எல்லோரிடத்திலும் உள்ளன. அடுத்து ஒரு கட்டுரையிலேயே எல்லா விசயங்களையும் குறிப்பிடுவதற்கான பொருந்துமிடங்கள் அமைவதில்லை. மேலும், பார்ப்பனியத்தை ஒரு பொது எதிரியாகச் சித்தரிப்பது பெரிய காரியம் ஒன்றுமில்லை. அதே நேரத்தில், “பார்ப்பனியம் ஒழிக!”  “பார்ப்பனியம் ஒழிக!” என்று எழுபது ஆண்டுகளாக முழங்கியதனாலும் ஒன்றும் மாறிவிடவும் இல்லை! மாறாக, பார்ப்பனிய நோய் விதிவிலக்கின்றி எல்லா சமூகங்களையும், எல்லா சாதிகளையும் தொற்றிப் பீடித்ததுதான் மிச்சம்.


முதலில், பார்ப்பனியம் என்பதை பலரும் பலவிதத்தில் புரிந்துகொண்டிருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனியம் என்பது அப்பட்டமான பிழைப்புவாதச் சூழ்ச்சி என்பதே தவிர வேறல்ல. பார்ப்பனர்கள் எனப்படும் ஆரியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த உருவாக்கியதே நால்வர்ண அடுக்குமுறை. முக்கியமாக, பார்ப்பனர்கள் உருவாக்கிய ஒவ்வொன்றும் -- அவர்களது மொழியும், மதமும், சாஸ்திரங்களும், சடங்குகளும், யாவும் அவர்களுடைய மேலாதிக்கத்தை நிலைபெறச் செய்வதற்கான கருவிகளே ஆகும். அவர்களுடைய பிழைப்புவாதச் சூழ்ச்சியை செயல்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட உத்தி என்பது, இல்லாத கடவுளுக்கும் அப்பாவி மக்களுக்கும் இடையே தங்களைத் தரகர்களாக (பூசாரிகளாக) வெற்றிகரமாக நிறுவிக்கொண்டது தான்! பூசாரித்துவம் என்பதே பார்ப்பனர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக்கொண்ட வியர்வை சிந்தாமல் பிழைப்பதற்கான தொழிலாகும். 


அவர்களுடைய மொழியான சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு மொழியே அல்ல; அது தங்களுடைய வேத சாஸ்திரங்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பூட்டிவைப்பதற்காக, தங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட சங்கேதக் குறியீடுகளின் தொகுப்பே ஆகும். 


மேலும், ‘உயர்வு மனப்பான்மை’ எனும் மன நோய் பீடித்த அவர்கள் மனிதர்களின் பொதுவான அடிப்படை உளவியலை ஏய்க்கும் வழிகளையும் அறிந்திருந்தனர். தங்களை, நால்வர்ண  அடுக்கில், மேலடுக்கிற்கு உரியவர்களாக வரித்துக்கொண்டு, அடுத்த அடுக்கில் வேறு சிலரை அமர்த்தி, “நீங்களும் உயர்ந்தவர்களே!” ஏனெனில், “உங்களுக்குக்கீழே இன்னும் இரண்டு அடுக்குகள் உள்ளன; அவர்களை ஆதிக்கம் செய்வது உங்களுடைய பிறப்புரிமை!” என்றனர். ஆக, தங்களுக்கும் ஒரு உயரிய இடம் ஒதுக்கப்பட்டது குறித்து அகமகிழ்ந்து போன ஷத்திரியர்கள் தங்களுக்குக்கீழே உள்ள அடுக்குகளைச் சேர்ந்தவர்களான, வைசியர்களையும், சூத்திரர்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது தங்களது பிறவிக் கடமையாகக் கொண்டுவிட்டனர். அடுத்து, நான்கு வர்ணம் போதாதென்று, ஐந்தாவதாக வர்ணமில்லாத வர்ணமாக - பஞ்சமர்கள், சண்டாளர்கள், அவர்ணர்கள், என்று பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.  


எல்லா விலங்குயிரினங்களையும் போலவே மனித இனமும், ரிச்சர்டு டாக்கின்ஸ் குறிப்பிட்ட சுயநலம் கொண்ட மரபணுக்களைக் கொண்டவனாக அமைந்து விட்ட நிலையில், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செய்தல், ஏய்த்தல், மேய்த்தல், அடக்குதல், ஒடுக்குதல், சுரண்டுதல் என்பவை எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக ஏற்படும் குணக்கேடுகளாக அமைந்துவிட்டன எனலாம்.  இக்குணக்கேடுகளுக்கு முதன்முதலில் விழித்தவர்கள் பார்ப்பனர்களே என்ற பெருமையை அவர்களுக்கு வழங்கிவிடுவது தான் நியாயம். பிறகு படிப்படியாக, எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குக் கீழ் உள்ள சாதிகளையும்; கடைசியாக, தலித்துகளும் தமது உட்சாதிகளை, ஆதிக்கம் செய்யும் நோயினால் பீடிக்கப்பட்டுவிடுகின்றனர்.1 இந்நிலையில் பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிய ஒன்று என்று சொல்வது சற்றும் பொருத்தமற்றதாகும். 


உண்மையில், ஆதிக்கம் என்பதுதான் சாதியின் சாரமாகும். சாதி என்பது வெறும் அடையாளம் அல்ல; அது அதிகார- ஆதிக்க அடுக்குகளில் தாம் பெற்ற விட்டுக்கொடுக்க இயலாத ஒரு இடம். ஆக, ஆதிக்கத்தை அழிக்காமல் சாதியை அழிப்பது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை!  ஏனெனில், ஒருமுறை ஆதிக்க நிலையை அனுபவித்த பிறகு, எவரும் அதை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை! அவ்வாறே, ஆதிக்கத்தை சுவைத்துப் பார்க்க விரும்பாதவரும் எவருமில்லை! ஏனெனில், சுயநலம், பொறாமை, பேராசை,.... போன்ற கீழியல்புகள் எல்லோருக்குள்ளும்; வெவ்வேறு விகிதங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன! 


ஒரு வகையில் எல்லா வாதங்களும், இசங்களும், இயங்களும் - பார்ப்பனியம், மதவாதம், அடிப்படைவாதம், முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம், பொதுவுடமைவாதம், பொருள்முதல் வாதம், கருத்துமுதல் வாதம், இருத்தலியல் வாதம், தலித்தியம், பெண்ணியம், தேசியவாதம், பிராந்திய வாதம், சிற்றினவாதம், பேரினவாதம், ….ஆகிய அனைத்து வாதங்களும் அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்குமான வேட்கை கொண்டவைகளே! 


பரஸ்பரம் ஒன்றுக்கெதிராக இன்னொன்று என்கிற ரீதியில் எல்லா வாதங்களும் முட்டி மோதிக்கொள்வதின் விளைவாக  ஒரு இறுக்கம், அல்லது இழுவிசையானது நிலைமைகள் மேலும் மோசமடையா வண்ணம் தடுக்கிறது என்பதற்கு மேல், எந்த வாதமும், இயமும், இசமும் முழு வெற்றிபெறுவதில்லை. அதே நேரத்தில் எல்லா நேரங்களிலும் வெற்றி பெறுவதாயிருப்பது  மனிதர்களின் கீழியல்புகளின் வாதம் மட்டுமே. அதில் ஒருவனுடைய கீழியல்புகளை விட இன்னொருவனுடைய கீழியல்புகள் போட்டிபோட்டுக் கொண்டு மேலோங்கியதாக, ஆதிக்கம் செலுத்துவதாக அமைவதும் இயற்கையானதே. முடிவில் எந்த வாதமும், இசமும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில், வாழ்க்கை எனும் சவால் எப்போதும் போலவே ஏற்கப்படாமல் அப்படியே தான் உள்ளது. 


நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினால் போடப்படுகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். “ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கே!” என்ற கொள்கையின் பேரில் ஹிட்லர் நடத்திய யூத இன அழிப்பு, மக்கள் அரசமைப்பு எனும் பெயரில் கட்டாய உழைப்பு முகாம்கள் வழியாக ஜோசப் ஸ்டாலின் சோவியத் நாட்டில் மேற்கொண்ட மாபெரும் களையெடுப்பு. 2


எல்லா வாதங்களும், இயங்களும், கொள்கைகளும் ஏதோவொன்றுக்கான எதிர்வினையாக உருவாக்கப்படுபவையே. அடிமைத்தனத்திற்கு எதிராக சுதந்திரத்தையும், தீமைக்கெதிராக நன்மையையும், கொடுங்கோன்மைக்கு எதிராக சனநாயகத்தையும், அநியாயத்திற்கெதிராக நியாயத்தையும் முன்னிறுத்துகிறோம். உயர்ந்த இலட்சியங்களை முன்வைத்தியங்கும் நாம் விரைவில் எந்தப் பண்பை, தீமையை எதிர்க்கிறோமோ அப்பண்பையே, தீமையையே சுவீகரித்துக் கொள்கிறோம். அதாவது, குறிக்கப்பட்ட உயர்ந்த இலக்கை எப்படியாவது அடைந்தாக வேண்டும் என்ற முனைப்பில் மோசமான வழிமுறைகளை நியாயப்படுத்துவதில், கைக்கொள்வதில் வீழ்ந்து விடுகிறோம்.


இதன் அர்த்தம் அநீதி, அநியாயம், அடிமைத்தனம், கொடுங்கோன்மை ஆகியவற்றை எதிர்க்கக் கூடாது என்பதல்ல. மாறாக, பிரச்சினை இதுதான், ஒடுக்குபவனின் அநியாயத்தை எதிர்க்கின்ற ஒடுக்கப்பட்டவனின் நியாயம் தன்னில் எல்லா நியாயங்களையும் கொண்டிருக்கிறது என்கிற அதீத நம்பிக்கை தான். இதன் எதிர் நிலையான அநியாயம் தன்னில் அனைத்து நியாயங்களையும் கொண்டுள்ளது என்பதுமல்ல. அநியாயத்தின் பலன் அல்லது இலக்கு எல்லா நலன்களையும் சுயநலமாக தான் மட்டுமே பெறுவது, அனுபவிப்பது என்பதே. அப்படியானால், அத்தகைய அநியாயத்தை எதிர்க்கும் நியாயத்தின் இலக்கு என்ன? 


வர்க்கப் போராட்டம் முதல் எல்லாப் போராட்டங்களும் தங்களுக்குச் சேரவேண்டிய நலன்களில் நியாயமான  பங்கு கோருவதுதான். இப் போராட்டங்களுக்கு முடிவு என்பது இருக்க முடியாது. “வரலாறு என்றாலே அது வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்று சொல்லப்பட்டது எவ்வளவு நிஜமானது!  அதுமட்டுமல்ல; இனி வரலாறு முழுவதுமே போராட்டங்களின் வரலாறாகத்தான் தொடரும். வெற்றி என்பது எட்டாக்கனியாக இருந்தாலும் “வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!” என்பதில் நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை உந்தித் தள்ளுகிறது. ஆனால், வெற்றியைவிட, அதைப் பெறுவதற்கான விலை அதிகமாக இருப்பது குறித்து நாம் சிந்திப்பதில்லை.  


நாம் மனிதம் பற்றியும், மனிதாபிமானம் பற்றியும் பேசுகிறோம். இவை இரண்டும் ஒன்றல்ல என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. ஒடுக்குபவனின் அநியாயத்தை, அவனுடைய மனிதாபிமானமற்ற செயலை நாம் எதிர்க்கிறோம். நாம் நியாயம் கோருகிறோம். இதன் அர்த்தம் ஒடுக்குபவனிடம் இல்லாத மனிதத்தன்மை ஒடுக்கப்பட்டவனிடம் இயற்கையாகவே உள்ளமைந்துள்ளது என்று கொள்வதற்கில்லை. 


மனிதாபிமானம், மனிதத்தன்மை என்பது இரக்கம், அன்பு போன்றவற்றை உள்ளடக்கிய மனித இயல்பு எனப்படுகிறது. பொதுவாக மனிதர்களைப் பொறுத்தவரை இரக்கம் அன்பு ஆகியவை சுயநலத்தை மையமாகக் கொண்டவையாதலால் அவை  மிகவும் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே செயல்படக்கூடியவையாக உள்ளன. பருந்திடமிருந்து தனது குஞ்சுகளை போராடிக் காப்பாற்றும் ஒரு கோழியின் பாசம் எவ்வளவோ அதேயளவு பாசம் தான் மனிதர்களிடத்திலும் உள்ளது. அதாவது, மனிதனாய்ப் பிறந்துவிட்டாலே அவனிடம் மனிதத்தன்மை இயல்பாகவே அமைந்திருக்கும் என்ற பார்வை பிழையானது. அவ்வாறு இயல்பிலேயே அமைந்திருக்குமானால், ஒடுக்குபவன், ஒடுக்கப்படுபவன் எனும் நிலைகள் தோன்றியிராது. 


மனிதன் விலங்கினத்திலிருந்து பரிணமித்தவனாகையால் அவன் பெரிதும் விலங்குத்தன்மைக்குத் தான் நெருக்கமாக இருக்கிறான். அவன் மனிதத்தன்மையை நோக்கி உயர்ந்தெழ வேண்டும். அதற்கு அவன் உளரீதியாக வளர்ந்தாக வேண்டும். மனித இயல்பு என்பது பிறப்பால் வருவதல்ல; விழிப்பால் (உணர்வுப் பரிணாமத்தில் உயருவதால்) அடையப்பட வேண்டியதாகும். இன்னும் இரக்கம் அன்பு, ஆகிய பண்புகள்  கற்றுக்கொள்ளக் கூடியவையும் அல்ல; அவற்றை ஒருவர் இன்னொருவருக்குப் புகட்டவும் இயலாது! ஆக, ஒடுக்குபவனுக்கு அறநெறிப் பாடங்களைப் புகட்டி அவனிடத்தில் மனிதாபிமானத்தையும், மனிதத்தன்மையையும் உண்டாக்க இயலாத பட்சத்தில், ஒடுக்குபவனை ஒடுக்கும் வழிமுறையை நாம் கையிலெடுப்போமெனில், அது ஒரு விபரீத வட்டத்தில் நம்மை ஆழ்த்திவிடும்.  


எவ்வாறோ, நாம் பூமியில் சமாதானத்தையும், சமத்துவத்தையும் நிறுவிவிட்டோம்; போட்டி, பொறாமை, பேராசை இல்லாத, ஏற்றத்தாழ்வற்ற உலகை ஏற்படுத்திவிட்டோம் என்றாலும், நாம் பரஸ்பரம் துன்பங்களைக் களைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் அற்புத மானிடர்களாக மாறிடினும் நம் வாழ்வு அர்த்தம் பெறாது. ஏனெனில், இவை எதுவும் மனித வாழ்வின் இலக்குகள் அல்ல; இவை யாவும் மானிட வாழ்வின் ஒப்பற்ற இலக்கினை அடையும் வழியின் உபவிளைவுகள் மட்டுமே!


மனிதம் என்பது பரஸ்பரம் அன்பு செலுத்துவதோ, மனிதனின் மீதான மனித நேயமோ அல்ல. மாறாக, மனிதனைக்கடந்த மெய்ம்மை மீதான நேயமே மனிதம். மனிதம் என்பது இறுதியில் மனிதனைப்பற்றியதல்ல! 


*

குறிப்பு :
  1. “பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களிடம் மட்டும் இல்லை. பிற உயர் சாதியினர் தொடங்கி இன்று தலித் மக்கள் வரை ஊடுருவத் தொடங்கி இருக்கின்றன. பார்ப்பனியத்தைவிட தலித் பார்ப்பனியம் என்பது கொடியதும் மிகக் கொடூரமானதுமாகும். தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்திக் கொள்கிற நிலையை தலித் மக்கள் ஒரு போதும் இனி அனுமதிக்க மாட்டார்கள்.      - விழி.பா. இதயவேந்தன் ( நூல்:தலித் இலக்கிய அரசியல்)
  2. ஆதார நூல் : The Gulag Archipelago, (1974) By Aleksandr Solzhenitsyn




மா.கணேசன்/ நெய்வேலி/ ( 23.08.2019 -28.08.2019)
ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்

Sunday, 18 August 2019

காதல் கண்ணில்லாதது! சாதி கண்மூடித்தனமானது!



காதலிக்க மறுத்தால் காதலிப்பவன் வெட்டுகிறான்! 
ஓடிப்போய் கல்யாணம் பண்ணினால் 
அப்பன், வெட்டுகிறான்!  
ஏன்! தம்பியும், தாத்தாவும் வெட்டுகிறான்கள்!
பாசம் கொட்டி வளர்த்த மீதச்சொந்தங்கள் எங்கே?
அந்த ஒருவனுக்காக அத்தனை பேர்களின் அன்பையும் 
நேசத்தையும் வெட்டிச் செல்ல துணிந்தவள் மீது 
வேண்டாமா ஆளுக்கு ஒரு வெட்டு!

அக்காள் ஓடிப்போனால் தங்கையின் திருமணம் பாழ்!
ஓடிப்போய் மணம்புரிந்த மகளை ஏற்கும் தந்தையை 
வெட்டியே ஒதுக்கும் மொத்த சாதியும்-சனமும் 
மகளை கொல்ல மனமில்லாத தந்தை தூக்கில் 
தொங்கிவிடுகிறான்! தாயோ விஷம் குடிக்கிறாள்!
கௌரவமும் இல்லை! ஆணவமும் இல்லை!
மூடர்காள்! பாசப்போட்டியில் தோற்றதன் விலை கொலை!

பெற்றவனுக்கு பெண் வெறும் உடமையா? 
அவள் பொக்கிஷம் - தன் உடமையின் உடமை தந்தை!
கிளியைப் பெற்று வளர்த்து திருட்டுப்பூனையிடம் 
கொடுக்க எந்தத் தகப்பன் சம்மதிப்பான்? 
திருடன் திருடன்தான் அவன் எச் சாதியாயினும்
தன் சாதியான் என்பதால் சும்மா விட்டுவிடுவோமா?
தன் கண்ணும், உயிருமான மகளைத் தான் 
உயிரோடிருக்கையில் தானமாகக் கொடுப்பானா?
காதல் என்பது தனதல்லாததை ஆசை கொண்டு 
தனதாக உடமை கொள்வதல்லாமல் வேறென்ன?

காதல் தன்னில் முதலும் முடிவுமானதா? 
இயற்கையான பருவக் கிளர்ச்சி காதல்
அதற்கு இணங்கிப்போவதும் இயற்கையே!
அதில் புதுமையும் இல்லை புனிதமும் இல்லை!
இயற்கையானது எதுவும் இறுதியானதல்ல!
நெறிப்படுத்தாத இயற்கை அநாகரிமானது!
சுதந்திரக் காதல் தறிகெட்டழியச் செய்யும்!
காதலிப்பதற்கு ஒரு தகுதியும் வேண்டாம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் போதுமென்றால்
மீண்டும் நாம் வனத்திற்கே திரும்பிடலாம்!
சமுதாயம், பண்பாடு, நாகரிகம் யாவும் எதற்கு?

                               ***

பொதுவாக, கலப்பு மணங்களுக்கும் சாதி மறுப்பு மணங்களுக்கும், குறிப்பாக காதல் திருமணங்களுக்கும், தடையாக நிற்பது வெறும் சாதி மட்டுமே அல்ல. பல்வேறு தகுதிகள் - கல்வித் தகுதி, உத்தியோக நிலை, சமூக அந்தஸ்து, சொத்து மற்றும் பொருளாதார நிலை போன்றவையும் அரிவாள்களுடன் வழி மறித்து குறுக்கே நிற்கின்றன. ஒரே சாதிக்குள்ளேயே என்றாலும் காதல் திருமணங்கள் மேற்சொன்ன தகுதி நிலைகளை வெற்றி கொள்ளாமல் சாத்தியமில்லை. 

பொதுவாக காதலுக்கும், காதல் திருமணங்களுக்கும் சாதிச் சமூகங்கள் மட்டுமல்ல, உலகளாவிய எல்லா சமூகங்களும் எதிர்ப்பு தெரிவித்தே வந்திருக்கின்றன. காதல்ஜோடிகள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் கடுமையான எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அதுவே, வெவ்வேறு சாதிகளாக இருப்பின், ஒருவேளை, அவர்களின் பெற்றோர்கள் அனுமதிக்கத் தயாராக இருந்தாலும் உறவினர்கள், சொந்த பந்தங்கள் அனுமதிப்பதில்லை. பெரும்பாலான காதல் திருமணங்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல், அவர்களின் அனுமதியில்லாமல்தான் நடந்தேறுகின்றன. அதில், சாதி மாறித் திருமணம் செய்துகொள்வதென்பது முற்றிலுமாக தடுக்கப்பட்ட, தகாத விவகாராமாகவே கருதப்படுகின்றது. 

சில அறிவுஜீவிகள், கவிதை நேசர்கள், விடலைத் தனமான முற்போக்குச் சிந்தனயாளர்கள் "காதல் வலியது... சாதி கொடூரமானது!" என்றெல்லாம் பேசித் திரிகின்றனர். இவர்கள் சமூகத்தின் எதார்த்த நிலைகளையும், சாதி மாறி மணம்புரிவதனால் ஏற்படும் கொலை பாதாகமான பின்விளைவுகளையும் அறியாமல், அறிந்தும் கணக்கில் கொள்ளாமல், சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைப்பதாக எண்ணி காதல் திருமணங்களை ஆதரித்து மேடைகளில் முழங்கிவிட்டு இறங்கிப் போய்விடுகின்றனர். 

காதல் என்ற பெயரில் சாதி மீறி நிகழும் திருமணங்கள் சாதியின் பெயரால் எதிர்க்கப்படுவதும், சொந்த மகளே கொல்லப்படுவதும்; மகள் தேடிக்கொண்ட மணாளன் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதும் பெரும் சோக நிகழ்வுகளே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்நிகழ்வுகள் இரண்டு மரபுகளுக்கும் இடையே  நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தீராப் போரின் விளைவுகளே. ஒன்று சாதி மரபைக் காப்பாறும் மரபு. இன்னொன்று அம்மரபை மீறத் துடிக்கும் காதல் மரபு. இப்போர்களில், என்றுமே சமாதானத்திற்கு இடமில்லை என்ற நிலையே தொடர்வதாக உள்ளது. இவ்விரு மரபுகளும் எப்போதுமே எவ்வகைச் சட்டங்களையும், விதிமுறைகளையும், நியதிகளையும், கட்டுப்பாடுகளையும்  மதிப்பதில்லை. சாதி என்பது தன்னளவில் தானே விதியாக (A LAW UNTO ITSELF) உள்ளதாகும். சாதி எனும் விதி எப்போதும் தனி நபர்களை குழுவின் உறுப்புக்களாக மட்டுமே பாவிக்கும் தன்மை கொண்டது. அது தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, தனது பக்கத்திலிருந்து, அவ்வப்போது சில தனி நபர்களை போர்ப்பலியாக இழக்கத் தயங்குவதில்லை. சில சமயங்களில், அது தனது எதிரணியின் ஒரு ஊரையே எவ்வித உறுத்தலுமின்றி தீக்கிரையாக்கி விடுகிறது. இவை யாவும் போரின் இயல்பான நிகழ்வுகளாகக் கொள்ளப்படுகின்றன. 

மேலும், இவ்விசயத்தில், ஒரு சாரார் காதலின் பக்கம் நிற்பதாகவும், இன்னொரு சாரார் சாதியின் பக்கம் நிற்பதாகவும் தெரிந்தாலும், காதலின் பக்கம் நிற்பவர்கள் உண்மையில் அவர்களுடைய சாதியை முன்வைத்துத் தான் நிற்கிறார்கள். சாதியை ஒழிக்கவேண்டும் என்று தீவிரமாகப் போராடுபவர்கள் உண்மையில் தங்களுடைய சாதியின் (மற்றும் அதனுடைய உட்சாதிகளின்) பிரதிநிதிகளாகத்தான் செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களை ‘சாதியற்றவர்கள்’ என்று அறிவித்துக்கொண்டாலும் தங்கள் சாதியின் பக்கமே நிற்கிறார்கள். காதலை அவர்கள் சாதி ஒழிப்புக்கான ஒரு ஆயுதமாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. ‘சாதி ஒழிப்பு’ என்பது வரலாற்றில் மறுக்கப்பட்ட அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் கைப்பற்று வதற்கான ஒரு போர் முழக்கமே. இந்த அதிகார-ஆதிக்கச் சமநிலையை அடைவதைத் தான் அவர்கள் ‘சமத்துவம்’ என்றழைக்கிறார்கள். இதைத்தான் அவர்கள் சாதி ஒழிப்புப் போராட்டம் என்கிறர்கள்.

உண்மையிலேயே இது ஒரு போர்தான். ஒருதரப்பு தங்களுடையதை “சாதி ஒழிப்புப் போராட்டம்” என்கிறது. இன்னொரு தரப்பு தங்களுடையதை “சாதி காப்பாற்றும் போராட்டம்” எனக் காண்கிறது. இது ஒரு முடிவேயில்லா போராகவே தெரிகிறது!

ஆகவே, காதல் என்பது  எப்போதும் ஒரு தனி நிகழ்வாக, ஏதோ கல் மீது கால் தடுக்கி கீழே விழுவதைப்போன்ற சாதாரண நிகழ்வாகப் பார்க்கப்படாமல், அது எங்கே எவ்விடத்தில் எவர் எவருக்கிடையே நிகழ்கிறது என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. சாதியானது மேலோட்டமான பரஸ்பர பரிவர்த்தனைகளுக்கும், பரிமாற்றங்களுக்கும், நட்புக்கும் இடையெ குறுக்கிடுவதில்லை. மாறாக, திருமணம் போன்ற ஒன்றுகலக்கும் விசயத்தை மட்டுமே அது தீவிரமாக எதிர்க்கிறது. ஏனெனில், சாதியை இழப்பது என்பது தற்கொலைக்குச் சமமானதாகக் கொள்ளப்படுகிறது. ஆகவேதான் கொலைகள் இங்கு தற்கொலைக்கு மாற்றாக, சாதியைக் காப்பாற்றுவதற்கான காவுகொடுக்கும் சடங்காக மேற்கொள்ளப்படுகின்றன. இக்கொலைகளை ஆணவக்கொலைகள், கௌரவக்கொலைகள் என்றழைப்பது சாதியப் பார்வையில் பொருத்தமற்ற பெயர்களாகும்.  

காதல் திருமணங்கள், கலப்பு மற்றும் சாதிமறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றை ஏற்கும் முதிர்ச்சியும், மனப்பக்குவமும் சாதியில் ஊறிய இந்திய மற்றும் தமிழகச் சமூகங்களுக்கு உள்ளனவா என்பவற்றையெல்லாம் ஆராயாமல், கவனத்தில் கொள்ளாமல், அத்தகைய திருமணங்களை ஆதரித்துப் பேசுவதும், ஊக்குவிப்பதும் ஆபத்தான விவகாரம் என்பதை சாதி மறுப்பாளர்கள் அறிந்தும் அறியாதவர்களாக நடந்துகொள்வது சமூகப் பொறுப்பற்ற செயலாகும். சமூக மாற்றம், புரட்சி எல்லாம் பேசுவதற்கும், கேட்பதற்கும் வேண்டுமானால் இனிமையாக இருக்கும். ஆம், காதலும் அப்படித்தான்; கவிதைகளிலும், கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டுமே கொண்டாடப்படும். நிஜ வாழ்க்கையில், சமூகக் களத்தில் காதல் என்பது விலக்கப்பட்ட விஷக்கனியாகவே இன்றும் பார்க்கப்படுகின்றது! அதற்கான காரணங்களும் இல்லாமலில்லை.

காதல் புனிதமானது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அத்தகைய காதல் கவிதைக்கும், கதைக்கும், காவியத்துக்கும் மட்டுமே சொந்தமாகும். காதல் என்பது எல்லோரையும் அசைவிக்கும் ஒரு ரகசிய உணர்ச்சி (Secret Feeling) ஆகும். ஆகவேதான், என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததுமாக காதல் கதைகள் விளங்குகின்றன. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. ஆனால், அக்காதலை கதைக் களத்திலிருந்து சமூகக் களத்திற்கு கொண்டுவருவது என்பது ஆபத்தானது.

ஏனெனில், எல்லா வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் கதைகளும் சுபமாக முடிவடைந்தவை அல்ல. பெரும்பாலான காதல் கதைகள் சோகத்தில் முடிவடைந்தவையே; அதனால்தான் என்னவோ, காதல் என்பது எப்போதும் - வெற்றி, தோல்வி  என்பதைக் கடந்த - ஈர்ப்புமிக்க ஒரு சொல்லாகவும், தீவிர உணர்ச்சியாகவும் விளங்குகிறது. 

காதல் மலினமானது. ‘கண்டவுடன் காதல்!’ என்றொரு வகை உள்ளது; அதாவது, கண் உள்ள எவருக்கும் காதல் வரும் எனும் வகை இது! அடுத்து, வெளித்தோற்றத்தை வைத்து  வரும் காதல்! அடுத்து, ‘இந்த வயதில் மட்டும் தான் காதல் வரும் என்பதில்லை!’ எனும் வகை! அடுத்து, ‘எந்த நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும் காதல்!’ அதாவது, ஷாஜஹானுக்கு ஏற்பட்டதுபோல அடுத்தவனின் மனைவி மீது கொள்ளும் காதல்! இவை யாவும் மலினத்தின் வகைப்பட்டவையே. 

நமது ஊர்த் தெருக்கள் ரோமியோக்களாலும், ஜூலியட்களாலும் நிரம்பி வழிகிறது! இதற்கு நாம், காதலைப் போதிக்கின்ற திரைப்படங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். மேலோட்டமான பார்வையில், காதலுக்கு யாதொரு அடிப்படையும், தகுதியும்  தேவைப்படுவதில்லை என்பதாகத் தெரியும். ஆனால், அது உண்மையல்ல! பொதுவாக, காதல் என்பது மனம் சார்ந்தது என்று சொல்வர். அது எத்தகைய மனம், அதாவது அந்த மனம் எதைச் சார்ந்து, அல்லது தழுவி நிற்கிறது என்பதை எல்லோரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. மனம் என்பது ஒரு புதிர் என்று சொல்லலாம்; ஆனால், விடுவிக்கமுடியாத புதிர் அல்ல. மனம் இருவகை நிலைகளில் இயங்குகிறது. முதலாவது வகை விழிப்படையாத, அதாவது, முழுமையாக உருப்பெறாத மனம். இரண்டாவது, விழிப்படைந்த மனம். 

‘விழிப்படையாத மனம்’ பெரிதும் உடலை (உடலின் இயல்பூக்கிகளை, இச்சைகளைத்) தழுவி நிற்பதாகும். இதற்கு மாறாக, ‘விழிப்படைந்த மனம்’ என்பது உடலையோ, உலகையோ, உலகப் பொருட்களையோ சார்ந்திராமல், அதாவது அவற்றுடன் ( அல்லது எவற்றுடனும்) தன்னை 
அடையாளப்படுத்திக் கொள்ளாமல், தனது சொந்த, அசலான தன்மையை உணர்ந்தறியும் வழியைத் தழுவிக்கொள்வதும், அவ்வழியே மெய்ம்மையை அடைவதுமே ஆகும். மெய்ம்மைக்குக் குறைவான எதுவும் மனித வாழ்வை முழுமைப் படுத்தாது, மனிதனை விடுதலைப் படுத்தாது!

விழிப்படையாத மனத்தைக் கொண்டவனும், மனமற்ற எலியும் ஒன்றுதான்! எலிக்குக் காதல் ஏற்படுகிறது என்பதில் எவ்வொரு விசேடமும் இல்லை, அது வழக்கமானது, இயல்பானது, படு சாதாரணமானது, ஆகவே, மலினமானது! ஆக, இவ்வகைக் காதலைப் போற்றுவதும், கொண்டாடுவதும் அர்த்தமற்றது! 

காதல் குருடானது, காதலுக்குக் கண்ணில்லை என்பதை நிஜமாக்கிடும் வகையில், காதலிப்பவர்களும் தங்கள் குடும்ப நிலவரங்களையும், பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களையும், சுற்றியுள்ள சமூகத்தின் மரபார்ந்த பிற்போக்குத் தனங்களையும் மறந்து, அல்லது மதியாது (பெற்றோர்கள், மற்றும் உறவினர்களின் பார்வையில்)  காதல்வயப்பட்டு விளக்கில் வீழ்ந்த விட்டில் பூச்சிகளாக உயிரை விட்டுவிடத் துணிகின்றனர். 

காதல் நிதானமற்றது. காதல் வயப்பட்ட அந்த தருணத்தில், ஒரு பெண்ணிற்கு ஒரு கரடியின் மீது கூட காதல் பிறந்துவிடும், அது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்பது உளவியலாளர் கூற்று. இலக்கியத்தில் போற்றப்படக்கூடிய காதல் நிஜத்தில் பின்பற்றப்படுவதாக அமைவதில்லை. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதற்கு காதல் மட்டுமே வழி என்பதில்லை; அவ்வாறே சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கும் சாதி மறுக்கும் காதல் திருமணங்கள் மட்டுமே வழி என்பதுமில்லை.  காதலுடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தொடக்கத்தில் இனிக்கும் காதல், திருமணத்தில் முடிந்த பிறகு வழக்கமான குடும்ப வாழ்க்கையில் மறைந்து போகிறது. “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” ஆக மொத்தம் (60+30=) 90 நாட்களுக்குப்பிறகு காதல் மோதலாகிக் கசந்து போகக்கூடும்! 

காதல் குறுகிய நோக்கம் கொண்டது. “பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்” என்பது பழமொழி. ஆனால், காதல் வந்தால், தாய் தந்தை, சாதி, மதம், குடும்ப நிலைமை,  எல்லாமே பறந்துவிடும் என்பது விபரீதமானது! காதல் சாதி பார்த்துவருவதில்லை, மதம் பார்த்து வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் காதலுக்கு ஒரே ஒரு ஒற்றை நோக்கம் மட்டுமேயுள்ளது; அது காமம் என்பதே! ஆகவேதான் காதல் குருடானது, கண்ணில்லாதது என்கிற உண்மையையும் நினைவில் கொள்ளவேண்டியதாகிறது. மேலும், காதலுக்கு சாதியும் கிடையாது, மதமும் கிடையாது, கலாச்சாரமும், பண்பாடும் கிடையாது; அது எவ்வொரு கட்டுப்பாட்டையும் மதியாது என்பதற்கான பிரதான காரணம், அது ஒரு அடிப்படையான பாலியல் இயல்பூக்கி (INSTINCT) என்பதே. இந்த இயல்பூக்கியை நாம் பண்படுத்தவில்லை, கட்டுப்படுத்தவில்லை எனில் மீண்டும் நாம் விலங்கு நிலைக்குத் திரும்பிவிடுவோம்.

தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விசயத்தில், 18 வயதை எட்டிய ஒரு பெண்ணும், 21 வயதை எட்டிய ஒரு ஆணும் தாமே முடிவு செய்துகொள்ளலாம்; அதற்கு சட்டம் இடமளிக்கிறது  என்பதே போதுமானது என்று கொள்வதற்கு அந்த ஆணும், பெண்ணும் தான்தோன்றியாக, அதாவது தாமாகவே உருவாகியிருக்கும் பட்சத்தில் மட்டுமே சரியாக இருக்கும்! ஆனால், எங்கேயும் குழந்தைகள் மரங்களில் காய்ப்பதில்லை; அல்லது எங்கிருந்தோ கொக்குகள் தூக்கிவந்து போடுவதுமில்லை! மாறாக, எங்கும் குழந்தைகள் பெற்றோர்கள் வழியாகவே பிறக்கிறார்கள். பெற்றோர்களும் தனியே எங்கோ எவருமில்லாத தீவினில் வாழ்வதில்லை; அவர்கள் எப்போதுமே ஒரு சமூகக் குழுவில், ஒரு இனக்குழுவின் பகுதியாகவே இருக்கிறார்கள். ஆக, குழந்தைகள்,  வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் விசயங்களிலும், பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் (விருப்பத்தின்படி அல்ல) எதையும் மேற்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக விளங்குகிறது. மணவாழ்க்கை தொடர்பான விசயத்திலும் அதே நியதியைத்தான் பின்பற்றியாக வேண்டும். 

காதல் என்பது தன்னளவிலேயே எல்லாத் தகுதிகளையும் கொண்டதல்ல. அதில் யாதொரு உன்னதமும் இல்லை! அது பருவத்தே தோன்றி கடந்துபோகும் இயற்கையான கிளர்ச்சி. அவ்வளவே. அதற்கு உள்ளாகாதவர் எவருமில்லை. மேலும், காதல் என்பது எல்லா மரபுகளையும், முறைமைகளையும், வழக்கங்களையும் தகர்த்தெறிவதற்கான உரிமம் (LICENCE) பெற்றதல்ல! ஆக, கடந்து போகக்கூடிய உணர்ச்சியில் தங்கி நிலைப்பது தேக்கம்.  கடந்து போக விடுவது பக்குவம், வளர்ச்சி!  

காதல் வயப்படுபவர்களை காதலானது தானாகவே (AUTOMATICALLY) புனிதப்படுத்தி விடுவதில்லை. ஒரு முட்டாளை காதல் ஓரிரவிற்குள் அறிவாளியாக்கிவிடுவதில்லை. காதல் நோய்க்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்துவிட்ட "மஜ்னூன்" என்றழைக்கப்பட்ட கைஸ் இப்னுல் முலவ்வா, கடைசியில் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப்  போல் ஆகிவிட்டான். மக்கள் அவனை "மஜ்னூன்" என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகி விடுகிறது. ஜுனூன் என்னும் அரபிச் சொல் "வெறி கொண்ட பித்து நிலை"யைக் குறிக்கும். மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். 

மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்துவிடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான். இராக் நாட்டிற்குத் தன் கணவனுடன் அனுப்பப்பட்ட லைலா அவனுடன் இணைய மறுத்துவிடுகிறாள். மஜ்னூனின் நினைவில் நோய்ப்பட்டு இறந்துபோகிறாள். இந்தச் செய்தியை அறிந்த மஜ்னூன் பாலைவனத்தில் உயிர் துறக்கிறான். உண்மையில், ஒரு பெண் மீது கொண்ட காதலுக்காக மகத்துவம் வாய்ந்த தனது மனிதப் பிறவியை உணராமலேயே இழந்துபோனவன் மஜ்னூன்.

எவ்வொரு உரிமையும், சுதந்திரமும் முறையான முழுமையான வாழ்க்கைக்கு, முக்கியமாக வாழ்க்கையின் ஒப்பற்ற இலக்கினை அடைவதற்குச் சேவை புரியும் வகையில் அமைந்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒருவன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கான சுதந்திரமும், உரிமையும் தனக்கிருப்பதாக வாதிடலாம். ஆனால், சமூகம் அவனை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க பலவழிகளிலும் முயற்சித்து வருகிறது. ஒரு வகையில், காதலும் ஒரு போதைதான். ஏன், சாதியும் ஒருவகைப் போதைப் பழக்கம் போன்றதே. அதாவது , சாதி என்பது ஒவ்வொரு இனக்குழுவுக்குமான மரபான அடையாளம் என்ற வகையில் தீங்கற்றதாக கடைப்பிடிக்கப்படும் வரை அனுமதிக்கப்படலாம். 

ஆனால், ஒரு இனக்குழு தனது சாதி அடையாளத்தை முன்வைத்து ஆதிக்க போதையில் பிற குழுக்களை, சமூகங்களை, சாதிகளை அடக்குவது, ஒடுக்குவது, சுரண்டுவது என்பதாக ஆட்டம் போடுவதை அடக்கித்தான் ஆகவேண்டும். அதே நேரத்தில், சாதிய ஆதிக்கத்தை அழிப்பது, அடக்குவது என்பது வேறு; சாதியை அழிப்பது என்பது வேறு. வானளாவிய அதிகாரம், கட்டற்ற சுதந்திரம் என்பது இலக்கற்றது. கடமைகளும், பொறுப்புக்களும் இல்லாமல் சுதந்திரம் என்பது அர்த்தம் பெறுவதில்லை! அதேவேளையில், வாழ்க்கை விதிகளை முழுமையாக நிறைவேற்றும் வழியில் அடையக்கூடிய எல்லையில்லா சுதந்திரம், ஆன்ம சுதந்திரம் என்று ஒன்று உள்ளது. ஆனால், மனிதர்களில் வெகு அரிதாக, வெகுசிலரே மெய்ம்மை மீது காதல் கொண்டு அந்நிலையை எட்டுகின்றனர்.

பலர், உலகெங்கும் ஆணாதிக்கமே நிலவுகிறது. பெண்ணுக்கு சுதந்திரமே இல்லை என்று முழங்கி போராடி வருகின்றனர். உலகில் ஆணாதிக்கம் இல்லையென்றால், பெண்ணாதிக்கம் நிலவும். பெண்ணாதிக்கம் என்ற எதிரிணை (COUNTERPART) இல்லாமல் ஆணாதிக்கம் இருக்கமுடியாது. பெண்ணாதிக்கத்துக்கான எதிர்வினையே (REACTION) ஆணாதிக்கம். ஏதாவதொரு ஆதிக்கம் எப்போதும் இருக்கும். ஆதிக்கம், அதிகாரம் அவற்றுக்கெதிரான போராட்டம் வாயிலாக ஒரு சமநிலை உருவாக்கப்படுவது அவசியம். இல்லாவிடில் வளர்ச்சிக்கான உந்துதல் இல்லாமல் தேக்கம் நிரந்தரமாகத் தங்கிவிடும். தேக்கம் வாழ்வை சுவாரசியமற்றதாக்கிடும். ‘எல்லாப் பிரச்சினைகளையும் ஒழித்துவிட்டு மக்கள் இனிதே வாழ்கின்றனர்’ என்ற நிலை விரும்பத் தக்கதாக இருக்காது! ஆதிக்கம், அதிகாரம் போலவே சுதந்திரம் என்பதும் தம்மளவிலேயே இலக்காக இருக்கவியலாது. சுதந்திரத்திற்காக சுதந்திரம் என்பது மொண்ணையானது! 

குறிப்பு :

இக்கட்டுரை நிலவுகின்ற சமூக எதார்த்தத்தை, அதன் உளவியலை அப்படியே பிரதிபலிக்கிறது. அதில் கட்டுரையாளரின் தனி  நியாயம் எதுவும் முன்வைக்கப்பட்டவில்லை! ஏனெனில், இப்பெரும் தேசத்தில் உள்ள எல்லா சமூகங்களின், அல்லது சாதிகளின் எல்லா தரப்பு நியாயங்களும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். வரலாற்றில் விளைந்த சமூகப் பிரச்சினைகளை, குறைகளை, அநியாயங்களை, அநீதிகளை, நோய்களை வரலாற்றின் போக்கிலேயே தான் களையமுடியும். அதிரடியான, புரட்சிகரமான, சாகச (‘ரொமாண்டிக்’) பூர்வமான தீர்வுகள் மோசமான பின்னீட்டில் (BACKLASH) முடியக்கூடும். 

இக்கட்டுரை, தொடரும் ஆய்வுப்பூர்வமான கண்டுபிடிப்புகளின் ஒரு சிறு பகுதியாகும். அதேநேரத்தில், இக்கட்டுரை யாதொரு சார்புநிலையிலிருந்தும் எழுதப்படவில்லை; இதில் சொல்லப்பட்ட எதுவும் முடிந்த முடிவானவை என்று கருதக்கூடியதும் இல்லை. இது நம்முள்ளே கனன்று கொண்டிருக்கின்ற ஒரு தீராப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சரியான வழிகளைக் கண்டடைவதற்கான ஒரு உரையாடலின் சிறு தொடக்கமே.

*

மா.கணேசன்/ நெய்வேலி/ 15-08-2019 - 18.08.2019
<.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.><.>< .><.><.>

நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...