
விக்ரம் சோனி ( இயற்பியல் பேராசிரியர், இயற்கைப் பாதுகாப்பு பற்றிய
ஆராய்ச்சியாளர்) எழுதிய "இயற்கையாக" (Naturally) எனும் நூலைப்
பற்றி "இயற்கையாக வாழ முடியாதா என்ன?" என்ற தலைப்பில்,
ந.வினோத்குமார் எழுதி, 01.04.2017, தமிழ் இந்து நாளிதழில் வெளியான
கட்டுரையிலிருந்து சில முக்கியமான கருத்துக்களை எடுத்துக்கொண்டு
அவற்றின் பொருத்தப்பாடுகளை இக்கட்டுரை அலசுகிறது!
<•>
முதலில், விக்ரம் சோனியின் கருத்துக்களைக் காண்போம்:
"இதுவரையில் இந்தப்பூமியில் தோன்றிய மிகச்சிறந்த சூழலியலாளர்,
விஞ்ஞானி யார் என்று என்னைக்கேட்டால், நான் கௌதம புத்தரைத்
தான் சொல்வேன். சுயம், சமூகம், பிரபஞ்சம் எனும் மூன்று நிலைகளில்
இயற்கையோடு இணைந்து வாழப் புத்தர் நமக்கான வழியைக்
காட்டுகிறார்.
•சுயம் என்ற நிலையில், நமக்கு எது அத்தியாவசியமாகத் தேவைப்படு
கிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது,
•சமூகம் என்ற நிலையில், ஏற்றத்தாழ்வுகள் கடந்து அனைவரையும்
சமமாக நடத்துவது,
•பிரபஞ்சம் எனும் நிலையில், அனைத்து உயிர்களிலும்,தன்னைக்
காண்பது ஆகிய வழிகளைப்பின்பற்றினால் இந்தப்பூமி இன்னும் பல
காலம் தழைத்திருக்கும். சுருக்கமாக 'பூமியின் மீது மெள்ள மெள்ள
நடை பயில்வோம்!'
<<•>>
முதலில், (மனித) சுயம் பற்றி விக்ரம் சோனி அவர்கள் முன் வைத்துள்ள
கருத்தை அலசுவோம்.
"சுயம் என்ற நிலையில், நமக்கு எது அத்தியாவசியமாகத் தேவைப்படு
கிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது" - விக்ரம் சோனி.
'சுயம்' என்பது, விக்ரம் சோனியின் விளக்கத்தின்படி, அடிப்படைத் தேவை
கள், மற்றும், பல்வகைப்பட்ட , அதாவது, அத்தியாவசியமானதும், அத்தியா
வசியமற்றதுமான நுகர்வுத் தேவைகளின் மையமாகவும், பேராசை பிடித்த
ஜந்துவாகவும் இருப்பதாகவும்; புத்தரின் வழியில் சென்றால், அதாவது
"சுயம் என்ற நிலையில், நமக்கு எது அத்தியாவசியமாகத் தேவைப்படு
கிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது" என்பதன் மூலமாக இப்
பூமியை இன்னும் பல காலம் தழைத்திருக்கச்செய்யலாம் என ஆலோசனை
வழங்குகிறார்!
ஆனால், மனித சுயத்தின் (வாழ்வின் குறிக்கோள், அர்த்தம் பற்றிய) பிரச்சி
னையும், அதனால் கட்டவிழ்த்துவிடப்பட்ட எண்ணற்ற சமூகக் கேடுகளும்,
வெறுமனே எது அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறதோ அதை மட்டும் வைத்துக்கொள்வதுடன் தீர்ந்துவிடக்கூடியதா என்ன?
மனித வாழ்க்கையில் தேவைகளும் இடம் பெறுகின்றன; ஆனால், தேவை
களே வாழ்க்கையாவதில்லை! மனிதஜீவிகள் தேவைகளைப்பூர்த்தி செய்து
கொள்வதன் வழியாக நிறைவடைவதுமில்லை, முழுமையடைவதுமில்லை!
ஆக,மனிதஜீவிகளை, தேவைகளை மையமாகக்கொண்ட ஜந்துக்கள் என்ப
தாகச் சுருக்கிக் காண்பது ஆழமற்ற, ஆகவே ஆபத்தான பார்வையாகும்!
'இயற்கை மீதான பிடிப்பு', 'இயற்கையை நேசித்தல்', 'சுற்றுச்சூழலைப் பாது
காத்தல்' இவையெல்லாம் தேவையானவைதான்; ஆனால், போதுமானவை
யல்ல! இயற்கையை உண்மையில் நேசிப்பது என்பதன் அர்த்தம் அழகிய
இயற்கைக்காட்சிகள் நிறைந்த மலைப் பிரதேசத்திற்கோ, அல்லது காடு
களுக்கோ சுற்றுலா சென்று இயற்கையைத் தரிசிப்பதில் அடங்கியிருக்க
வில்லை; மாறாக, இயற்கையின், பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த பரிணாம
"விழைவை", நோக்கத்தை உணர்ந்து அதை நிறைவேற்றுவதிலேயே அடங்
கியுள்ளது!
மனிதன் இயற்கையிலிருந்து தோன்றியவன் என்பது பாலபாட அறிவாகும்!
"ஆனால், மனிதன் இயற்கையிலிருந்து தோன்றியவனே என்றாலும், அவன்
இயற்கையை மீறிச்செல்லும் இயற்கையை, பேரியற்கையைச் சேர்ந்தவனா
வான்!அதாவது, இயற்கையானது மனிதனுள் சுய-உணர்வு பெற்றிடும்போது,
அது தொடர்ந்து இயற்கையாக இருப்பதில்லை! மனிதன் என்பவன் சுய-
உணர்வு பெற்ற இயற்கையாவான்! மனிதன் சுய-உணர்வு பெறுவதுடன்
முழுமை யடைந்து விடுவதில்லை; அதாவது, முழு- மனிதனாக ஆகிவிடுவ
தில்லை!"*
"மேலும், முழுமை என்பது (பரிணாமச்)சிருஷ்டியின் ஒரு பகுதியோ, உயரிய
படி நிலையோ அல்ல! மாறாக, முழுமை என்பது சிருஷ்டியின் முடிவு ஆகும்!
மனிதன் சிருஷ்டியின்வழி தோன்றிடினும்,உண்மையில்,அவன் சிருஷ்டியை
(இயற்கையை) முழுமைப்படுத்த வந்த சிருஷ்டியாவான்! இவ்வகையில்,
மனிதன் சிருஷ்டியின் பிரதிநிதியல்ல; மாறாக, அவன் முழுமையின் பிரதி
நிதியாவான்!*
"மனிதன் தனது சுய-உணர்வை உணர்வு கொள்ளும் அக்கணத்திலேயே
சிருஷ்டியை (இயற்கையை) விட்டு வெளியேறிச் செல்லும் அவனது
உணர்வுப்பயணம் தொடங்கிவிடுகிறது! மனிதனின் அசலான வசிப்பிடம் சிருஷ்டியின்(இயற்கையின்) உலகமல்ல! ஏனெனில், மனிதன் சிருஷ்டியின் உலகைச்சேர்ந்தவனல்ல! அவன் உணர்வின் உலகைச் சேர்ந்தவன் ஆவான்-
அதிலும், முழு-உணர்வே அவனது இறுதிப் புகலிடமாகும்! முழு-உணர்வுக்குக்
குறைவான எவ்வொரு (உணர்வு) நிலையும் மனிதனுக்கு மரணம் போன்றதே
யாகும்!"*
ஆம், இயற்கையிலிருந்து வேறானவனல்ல மனிதன்; மாறாக, இயற்கையின்
ஒரு மேம்பட்ட,பண்பட்ட,உயரிய நிலை மாற்றமே மனிதன்! அதே நேரத்தில்,
இயற்கையின் உள்ளார்ந்த விழைவின், அதாவது இயற்கை எதிர் நோக்கிய
அந்த இறுதி நிஜமல்ல மனிதன்; மாறாக, அந்த இறுதி மெய்ம்மையை எட்டு
வதற்கான விசேட கருவியும், ஊடகமும் தான் மனிதன்! மனிதன் அடைந்
தாக வேண்டிய அவனது முழுமையில் தான்(அதுவே இயற்கையின் முழுமை
யும்) அந்த இறுதி மெய்ம்மை அடங்கியுள்ளது!
அடுத்து, விக்ரம் சோனியின் சமூகம் பற்றிய பார்வையைப் பார்ப்போம்:
"சமூகம் என்ற நிலையில், ஏற்றத்தாழ்வுகள் கடந்து அனைவரையும்
சமமாக நடத்துவது."
நிச்சயம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன; ஆனால், அவை ஒவ்வொரு
தனிமனிதனின் அகத்தே நிலவும் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியின் வெளிப்
பாடே ஆகும்! தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே சமமாக வள
ராதபோது, அவர்கள் சமூகக்களத்தில் செயற்கையானதும், பொருள்வகைப்
பட்டதுமான பல மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டு பரஸ்பரம் ஒருவருக்
கொருவர் ஒப்பிட்டுக் காண்பதும், ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதுமான
போட்டிகளில், எலிப்பந்தயத்தில் ஈடுபடுகின்றனர்; அவற்றின் விளைவுதான்
சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகும்! தற்போது நடைமுறையில்,அமலில் இருக்கும்
மதிப்பீட்டு -அமைப்பில் ஒரு அன்றாடக் கூலிக்காரனையும், ஒரு கணினி
பொறியாளரையும் இச்சமூகம் சமமாக மதிக்காது! ஏனெனில், இச்சமூகம்
மனிதர்களுடைய அக-வளர்ச்சியின் முக்கியத்துவம் அறியாது! இச்சமூகத்
திற்கு, அசலான, உண்மையான மனிதனைத்தவிர, பிற எல்லாவகையான
போலியும், பிறழ்ச்சியுமான ஆளுமைகளை, அதாவது, 'பெரிய மனிதர்கள்',
'லட்சாதிபதி', 'பிரபலஸ்தர்', 'அரசியல் பிரமுகர்', 'சினிமா-நட்சத்திரங்கள்', 'விளையாட்டு-நட்சத்திரங்கள்' போன்றவர்களை மட்டுமே தெரியும்! ஆம்,
அதற்கு அசலான மனிதனை மட்டும் தெரியாது! ஏனெனில், உண்மையில்
மனிதனாக இருப்பது என்றால் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது!
இன்னொருவகையிலும், நாம், ஒரு கூலிக்காரனையும், ஒரு கணினி பொறி
யாளரையும் சமமாக மதிக்கமுடியாது என்பது மட்டுமல்ல; அதாவது, அந்த
இருவருமே உள்ளீடு அற்ற மனிதர்களாக, உணர்வற்றவர்களாக, அல்லது
உணர்வுக் குறைவுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவரை
யுமே மனிதர்களாகக் கொள்ளவோ,மதிக்கவோ இயலாது!அதாவது, மனிதர்
கள் உண்மையில் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில் தான், சமூகம் என்பது
முறையாக சமூகமாக இருக்கும்! ஆக, விக்ரம் சோனியினுடைய சமூகம்
பற்றிய பார்வையும் மட்டுப்பாடாகவே உள்ளது! சமூக ஏற்றத்தாழ்வுகளைக்
களைவது அவசியமானதே யாகும்; ஆனால், மனிதர்களிடம் உரிய உணர்வு
வளர்ச்சி இல்லாமல் ஒருபோதும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைவது என்
பது சாத்தியமற்றதாகும்!
திரு.விக்ரம் சோனி அவர்கள் புத்தரை மேற்கோள் காட்டுவதிலும்,புத்தரின்
வழியைப்பின்பற்றும் அவரது விருப்பத்திலும் தவறில்லை! ஆனால், அதற்
காக புத்தரின் தத்துவத்தை மிகவும் நீர்க்கச்செய்வது முறையாகாது! புத்தர்
போன்ற ஒரு விழிப்படைந்த மனிதரின் பார்வையில் சூழலியம் மட்டுமல்ல
அனைத்து தத்துவங்களும் அடங்கியிருக்கும் என்று காண முடியும்! ஏனெ
னில்,"விழிப்பு", "ஞானம்" என்பவை அத்தகையது!ஆனால், புத்தரை ஒரு சூழ
லியலாளராகவோ, இயற்கை நேசிப்பாளராகவோ,இயற்கை வாதியாகவோ,
சுருக்கிவிடலாகாது!
விக்ரம் சோனி போன்ற நல்லெண்ணம் கொண்ட சிந்தனையாளர்கள் பலர்
அடிப்படையில், இயற்கை வேறு, மனிதன் வேறு எனும் பிளவுண்ட பார்வை
யிலிருந்தே இரண்டையும் இணைக்க முயற்சிக்கின்றனர்! அதாவது, அவர்
களுக்கு இரண்டைப் பற்றியுமான ஆழமான புரிதல் இல்லை என்பது தான்
அவர்களுடைய மட்டுப்பாடு ஆகும்! அவர்களுடைய ஆதங்கத்தை நாம்
புரிந்து கொள்ளலாம்; ஆனால், அவர்கள் சொல்கிற வழியில் பிரச்சினை
களை, குறிப்பாக சூழலியல் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது!அதே நேரத்
தில், ஓரிரவிற்குள்ளேயே மனிதர்கள் அனைவரும் மாறிடவோ, விழிப்படை
யவோ இயலாது என்கிறபோது, வேறு மாற்று வழியும் இல்லை எனும் நிலை
யில், புவிக்கோளம் சூடேறுதலிலிருந்தும், சீதோஷ்ண- நிலை குலைவிலிருந்
தும் புவியைக் காப்பாற்றுவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்! முக்கிய
மாக, மனிதகுலம் தனது "உற்பத்திசெய்தல்-உட்கொள்ளுதல்" (Produce-
Consume)எனும் நுகர்வை அடிப்படையாகக்கொண்ட வாழ்முறைகளையும்,
பொருளாதார நடவடிக்கைகளையும் மாற்றிக்கொள்வதற்குள் காலம்கடந்து
விடக்கூடும்! மேலும், மக்கள்தொகைப்பெருக்கத்தையும் நம்மால் குறைக்க
இயலாது! இந்நிலையில், இயற்கையை, புவிச் சூழலைக் காப்பாற்றுவது
குறித்த நேர் மறையான உரையாடல்களும், முயற்சிகளும் வீண் என்று
சொல்ல முடியாது என்றாலும், ஏற்கனவே புவிக்கு இழைக்கப்பட்ட சேதங்
களையும் தீங்குகளையும் கணக்கில் கொண்டு காணும் போது எதிர்மறைச்
சிந்தனைகளையும், வருங்காலம் இருளடர்ந்ததாகத் தோன்றும் சித்திரத்
தையும் தவிர்த்துவிட இயலாது!
முக்கியமாக, விக்ரம் சோனியின் 'இயற்கையைப் பாதுகாப்பது', 'பூமியின்
மீது மெள்ள மெள்ள நடைபயில்வது', அதாவது, இப்பூமியை இன்னும் பல
காலம் தழைத்திருக்கச் செய்வதற்கான ஆலோசனைகள் யாவும்
மனிதகுலத்தின் நலத்தை மையமாகக்கொண்டதே, அதாவது தொடர்ந்து
மனிதகுலம் இப்பூமியில் உயிர்-வாழ்வதைத் தக்கவைப்பதற்குத்தானே
தவிர, இயற்கையின் நலத்தையோ, அல்லது மனித வாழ்வின் ஒப்பற்ற
இலக்கினை மையமாகக்கொண்டதாவோ தெரியவில்லை! இயற்கையின்
நலம் என்பது, ஏற்கனவே குறிப்பிட்டபடி இயற்கையின் உள்ளார்ந்த
விழைவை உணர்ந்து நிறைவேற்றி இயற்கையை, பிரபஞ்சத்தை முழுமைப்
படுத்துவது என்பதேயாகும்! அதாவது, ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மீக
முழுமையை அடைவதே யாகும்!
ஆகவே, இன்னும் நாம் தேவைகளின் சொற்களிலேயே வாழ்க்கையைக்
காண்கிற,வாழ்கிற மட்டுப்பாடான போக்கைக் கடந்து சென்றாகவேண்டும்!
மனிதசுயத்தின் தேவைகள் எனச்சொல்லப்படுபவை யாவும் மனிதஉடலின் அடிப்படைத்தேவைகளே; அதாவது அவை அடிப்படையானவை மட்டுமே
தவிர எவ்வகையிலும் அவை இறுதியானவையல்ல! ஆகவே, மனிதகுலம்
தனது உடல்-மைய அடையாளத்தையும், உடல்-மைய வாழ்க்கையையும்
கடந்து வளர்ந்தாக வேண்டியது அவசர அவசியமாகும்! ஏனெனில், எஞ்சி
யிருக்கும் காலத்தில் மனிதகுலம் ஆன்மீகரீதியாக வாழ்வதில் ஈடுபடும்
எனில், அதனால் நிறைவான அர்த்தம் நிறைந்ததொரு வாழ்க்கையை வாழ
முடியும்! ஆம், நெடுங்காலம் விழுந்து புரண்டு காரியமாற்றி, குந்தித்தின்று
வெறுமனே உயிர்-வாழ்வதைக் காட்டிலும், ஆன்மீக ரீதியாக, அதாவது,
உணர்வார்ந்த வகையில் கொஞ்சகாலம் வாழ்வது மேல்!
அதாவது, மனிதகுலத்திற்கு இப்பூமியில் தொடர்ந்து உயிர்-வாழ்வதற்கு
இன்னும் கொஞ்ச எதிர்காலமே உள்ளது என்று சொல்லும் அளவிற்கு பூமியின்
சூழலைக் குலைத்துக் கெடுத்துவிட்டு, "பூமி அழகானது!" என்றும், "இயற்கை
புனிதமானது!" என்றும், "சித்தாந்தத்தில் அடங்காதது இயற்கை!" என்றும்
கவிதை பாடிக்கொண்டிருக்கிறோம்!
"இனியும் நாம் இயற்கையாக வாழ்வதில் அர்த்தமில்லை!" என்பதன்
அர்த்தம் 'இனி நாம் செயற்கையாக வாழலாம்!' என்பதல்ல. ஏனெனில், இது
வரை நாம் ஒரு பிராணியைப்போல இயற்கையாகவும், அதன் இயற்கை
யான தேவைகளை மிகப்பிறழ்ச்சியான வகையிலும் செயற்கையாகப்
பெருக்கியும் தான் வாழ்ந்து வந்துள்ளோமே தவிர, ஒரு போதும் நாம் மனித
னுக்கே உரிய இயற்கையைப் பின்பற்றி, அதாவது உணர்வு கொண்டு,
உணர்வில் பெருகியுயர்ந்து வாழவில்லை! ஆக, இதுவரை இயற்கையாக
வாழ்ந்தது போதும், இனியாவது மனிதனாக வாழ்வோம் என்பதே இக்
கட்டுரை சொல்லும் செய்தியாகும்!
* இக்குறியிடப்பட்ட பகுதிகள் இக்கட்டுரையாளரின் 2013-ல் வெளியான
"மனிதனின் சொல்" எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டு இக்கட்டுரைக்கு
உரிய வகையில் சற்று மாற்றம்செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மா.கணேசன்/நெய்வேலி/03-04-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment