அதன் "இல்லாமை" சதா காலமும், நம்மை நனவிலும்
கனவிலும் நெருடிக்கொண்டேயுள்ளது, அனைத்தின்
இருப்பையும் விட, அதன் "இல்லாமை" ஓங்கி ஒலிக்கிறது.
ஆனால், நமது மனம், மற்றும் அன்றாடத்தின் இரைச்சலில்,
அது நம் எல்லோருக்கும் கேட்பதில்லை. இல்லாத, அறியாத
பொருளைவிட இருக்கின்ற, அறிந்த பொருட்களை
சிந்திப்பதும், தேடியடைவதும்தான் உசிதம் என்கிறது
இச்சைகளின் வழி செல்லும் நமது சுயம்... அனைத்திற்கும்
ஆதாரமான, மூலமானதொரு மெய்ம்மை உள்ளது. அதன்
நிழல்தான், இம்மாபெரும் பிரபஞ்சமும், அதிலுள்ள யாவும்,
நாமும்! அனைத்தும் மறைமுகமாக அதையேச் சுட்டுகின்றன;
தத்தம் நிலை மற்றும் அமைப்புக்கேற்ப, அதையே
நோக்கியுள்ளன, நாடுகின்றன. அதை எவ்வாறேனும்
அடையாமல் நமது இருப்பும், வாழ்வும் ஒருபோதும் அர்த்தம்
பெறாது, நிறைவடையாது, முழுமை பெறாது. ஆனால், அது
குறித்து நாம் இன்பத்திலும், துன்பத்திலும், சாதாரண
தருணத்திலும்; தாமாகவும் அல்லது எவர் சொல்லியும்கூட
சிந்திப்பதில்லை. அது இல்லாதது போலத் தோன்றினாலும்,
அது மட்டுமே நிஜத்திலும் நிஜமானது, நிரந்தரமாய்,
நித்தியமாய் உள்ளது. அதுதான் உண்மை, சத்தியம்,
மெய்ப்பொருள். அதுவே அனைத்தின் சாரம்; ஆதியும்,
அந்தமும், அனந்தமும் அதுவே! தன்னையேத் தியாகம்
செய்து, சிருஷ்டியாக உருமாறி, தன்னையே தேடி, இறுதி
விளைவாக எழ எத்தனிக்கும் மூல முதல் காரணமான
'கடவுள்' எனும் புதிர்!
<<<<•>>>>
இப்பதிவு, 2014-ல் வெளியான எனது "கடவுள்புதிர்" நூலிலிருந்து "அது" என்ற
பகுதி அப்படியே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மா.கணேசன்/நெய்வேலி/ 29-04-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment