Thursday, 22 December 2016

பழைய முகமூடிகளுக்கு புதிய முகமூடிகள் !





இக்கவிதைகளின்   ஒருவித   அதீதக்  கற்பனைக்காட்சியமைவும்,
எளிமையான   தோற்றமும்,     திடீர்த்தன்மையும் (Abruptness),
சுருக்கமான,      அவசரமான   நடையும்   படிப்பவர்களை   எளிதில்
ஏமாற்றிவிடக்கூடும்  -   மூல விஷயத்திலிருந்து  கவனத்தை வேறு
பக்கம்    திருப்பிடக்கூடும்.    இக்கவிதைகளில்    திரும்பத் திரும்ப
வருவது  "முகமூடி"  எனும் ஒரு விஷயம் தான்.   ஆனால், அது பற்றி
இக்கவிதைகளுக்கு  வெளியே  நான்  விளக்கம்   ஏதும்    கொடுக்க
இயலாது; நம்முள்ளும், நம்மைச்சுற்றியுள்ளவர்களுள்ளும் மண்டிக்
கிடக்கும்   பொய்மையின்,    போலித்தனங்களின்    ஒரு  மொத்தக்
குறியீடு     என்பதைத்தவிர.     இக்கவிதைகளைப்   படிக்கும்போது
வெளிப்படும்    நகைச்சுவைக்கும்   கீழே,  ஆழத்தில் 'முகமூடி'யின்
பலவித பரிமாணங்கள் படிந்துகள்ளன.

19.02.1989                                                               மா.கணேசன்/ நெய்வேலி
                       <•>

அவர்கள் ஏன் என்னை அப்படிப்பார்த்தார்கள்
என்பது முதலில் எனக்குப்புரியவில்லை
ஒருவேளை நிர்வாணமாய் வெளியே
வந்திட்டேனோவென்று
குனிந்து பார்த்தேன் - இன்னொரு முறை
எனது ஆடை மடிப்புகளைச்
சரி செய்துகொண்டேன்.
அவர்கள் எனது முகத்தைப்பார்த்துச்
சிரிப்பதாகத் தோன்ற
எனது முகத்தைத் தடவிப்பார்த்தேன்
ஒன்றும் இல்லை.
ஆனால், அவர்களது முகங்களை
உற்றுப்பார்த்தபிறகே தெரிந்தது
என்னிடம் முகமூடி இல்லையென்பது.



தெருவில் வியாபாரி
எதையோ கூவிச்சென்றான்
வெளியே
எட்டிப்பார்த்தேன்
"பழைய முகமூடிகளுக்கு
புதிய முகமூடிகள்"
என்று
கூவிச்சென்றான்.



சட்டையிலுள்ள
சிறு ஓட்டையைக் கண்டு
முகம் சுளிக்கும்
சமுதாயம்
மனிதரகளின்
முகமூடிகளை
அவை
எவ்வளவு தான்
கிழிந்து
தொங்கினாலும்
கண்டுகொள்வதில்லை.



எவ்வளவு தான்
பழசாகிப்போனாலும்
கிழிந்து போனாலும்
சமுதாயத்தில்
எப்போதும்
பயன்பாட்டில் இருப்பது
முகமூடிகள்
மட்டுமே.



இங்கே நான்
தேடிக்கொண்டிருக்கையில்
சற்று தள்ளி
ஒரே கூச்சலும்
குழப்பமுமாய் இருந்தது
அருகே சென்றேன்
அங்கே ஒரு கூட்டம்
சண்டையிட்டுக்
கொண்டிருந்தது
"உன்னுடையது
என்னுடையது"
என்று ஒரு முகமூடியை
வைத்துக்கொண்டு.



என் காதலி
என்னை மறுத்து விட்டாள்
எனது இம்முகம்
பிடிக்கவில்லையாம்
அவளுக்கு.



என்னிடம்
ஏராளமான
முகமூடிகள் உள்ளன
ஒவ்வொரு வேளைக்கும்
ஒவ்வொரு நபருக்கும்
என்று
கணக்கில்லாது.
இமைக்கும் நேரத்தில்
முகமூடிகளை
மாற்றிக்கொள்ளமுடியும்
என்னால்.
இருந்தும்
சில வேளைகளில் நான்
மிகவும் குழம்பிவிடுகிறேன்
இந்த வேளைக்கு எந்த
முகமூடியை
அணிவதென்று?



எனது பெரும்சோகம் :
எந்த முகமூடியும்  என்னை
எடுத்துக்காட்டுவதில்லை
என்பதுதான்!



அதிருப்தியில்
என் முகத்தை நானே
பிய்த்துக் கொள்கிறேன்
வெறும் முகமூடிகளாகக்
கழன்று விழுகின்றன
ஒன்று,
இரண்டு,
மூன்று,
. . . . .
. . . . . . .
. . . . . . . . .
முகமே இல்லாமல்
போய்விட்டால்
என்ன செய்வதென்று
அதிர்ச்சியில்
நிறுத்திக் கொண்டேன்.



நிலவெரிக்கும்
ஓரு முன்னிரவில்
எவருக்கும் தெரியாமல்
முகமூடியில்லாமல்
தெருவில்
இறங்கி நடந்தேன். . . . .
நேரம் போனது தெரியாமல்
இரவெல்லாம் சுதந்திரமாகச்
சுற்றித் திரிந்திட்டேன் -
என்பதை உணர்ந்ததும்
விடிவதற்குள்
எனது அறையை அடைந்திட
முகம் தெறிக்க
எடுத்தென்
ஓட்டம்.



ஓய்வாக
எனது
முகமூடிகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
கடந்த காலங்களில்
அவைகளால் கிடைக்கப்
பெற்ற
அனுபவங்களையும்
அனுகூலங்களையும்
அனைத்தையும்
ஒவ்வொன்றாக
அசைபோட்டவாறே -
ஆனால் எதுவும்
நிறைவளிப்பதாய் இல்லை.
இப்போது
எனது
உண்மையான முகத்தைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.



நகருக்குள்
முகமூடிக்கொள்ளையர்கள்
அலைகிறார்கள்
என்று தெரிந்ததும்
சிறிது சந்தோஷப்பட்டேன்
ஆனால்
அவர்கள்
முகமூடிகளுக்காக
வரவில்லை
என்பது தெரிந்ததும்
முகம் வாடினேன் -
முகமூடிகளை
பத்திரப்படுத்திக்
கொண்டேன்.



உலகம் அழியப் போகிறது
எனும் கூற்றை என்றும் நான்
நம்பியது கிடையாது.
இன்று காலையில்
நண்பனின் மனைவிக்கு
புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்
பார்க்கச் சென்றிருந்தேன்
மருத்துவமனைக்கு -
குழந்தை அழகாகவே இருந்தது
ஆனால், முகமூடியுடன்!
திகைத்துப்போனேன் நான்.
நம்பமுடியாமல்
பக்கத்துக் கட்டில்களிலிருந்த
மற்ற குழந்தைகளைப் பார்த்தேன்
எல்லா குழந்தைகளுமே
முகமூடிகளுடன் இருப்பதைக்
கண்டவுடன்
பயம் என்னைப் பிடித்துக்
கொண்டது!



இப்போது
எனது
பெரும் பிரச்சினை :
"முகமூடியுடன் இருப்பதா?
அல்லது முகமூடியில்லாமல்
இருப்பதா?



முகமூடிகள் கிழிக்குமிடம் :
மா.கணேசன்
222, அசோக் நகர்-II
காந்தி நகர் அஞ்சல் -607308
குறிஞ்சிப்பாடி வட்டம்
கடலூர் மாவட்டம்
கைப்பேசி : 94881 94381

----------------------------------------------------------------------------





Monday, 19 December 2016

"ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக ஏதோவொன்று இருக்கிறது?"




      "ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக
       ஏதோவொன்று (உலகம்) இருக்கிறது?"

முதலிடத்தில்  இக்கேள்வி  அடிப்படையிலேயே   தவறானது!  உலகம்  என்று
ஒன்று இருப்பதாலும்,  நாம்  அதன்  பகுதியாக  இருப்பதாலும் தான்  அதற்கு
எதிர்நிலையாக, 'ஒன்றுமில்லாத நிலை'(Nothing)என  ஒன்றைக் கற்பனை
செய்துகொண்டு,   தத்துவவாதிகள் தாங்களும் குழம்பியதோடு  நம்மையும்
குழப்பிவருகிறார்கள்!   சிலவேளைகளில் தத்துவவாதிகள் இருக்கிற பிரச்சி
னைகளை  விட்டுவிட்டு,   இல்லாத பொல்லாத  பிரச்சினைகளையெல்லாம் கற்பனைசெய்துகொண்டு  மண்டையை உடைத்துக்கொண்டிருப்பதும் ஒரு
வழக்கமாக இருந்துவந்துள்ளது!

முதலிடத்தில்,    "ஒன்றுமின்மை"   அல்லது  "சூன்யம்"  என்றெதுவும் இல்லை
என்று முடிவு செய்வதற்கு முன், "ஒன்றுமின்மை" என்பது இருக்கிறது என்றே
வைத்துக்கொள்வோம்!  அதாவது,  காட்டில்  விஷ-ஜந்துக்கள் இருக்கின்றன
என்றால், இருக்கட்டுமே;  நாம் காட்டிற்குச் செல்லாமல் இருப்போம். அல்லது
அப்படியே  காட்டிற்குச் செல்லவேண்டிய அவசியம்  எழுந்தால்,  எச்சரிக்கை
உணர்வுடன், கவனத்துடன் சென்றுவரலாமே!  அவ்வாறே, கற்பனைரீதியாக
அல்லது,தர்க்கரீதியாக "ஒன்றுமின்மை" அல்லது "சூன்யம்" என்பது சாத்திய
மாயினும், அதனால் என்ன பிரச்சினை?  அதாவது,  மெய்ம்மையை அறியும்
நம்வழியில் எவ்வகையிலேனும் "ஒன்றுமின்மை" அல்லது "சூன்யம்" என்பது
குறுக்கிடுகிறதா அல்லது தடையாக நிற்கிறதா?   இல்லாத பூதத்தை  நாமே
கற்பனை செய்துகொண்டு, அது குறித்து அஞ்சி நடுங்குவது எதற்கு?

ஆனால், உலகம் இருக்கிறது, அதில் பிற விஷயங்களோடு நாமும்  இருக்கின்
றோம்.    இந்நிலைமையில்,   எது   சரியான கேள்வியென்றால்,    உலகம் ஏன்
இருக்கிறது,    அதாவது     எந்த   நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக இருக்
கிறது? அதில் நாம் ஏன், எதற்காக இருக்கிறோம்,  நம் வாழ்க்கையின்  குறிக்
கோள்  மற்றும்  அர்த்தம்  என்ன? என்பன போன்ற கேள்விகள் மட்டும் தான்!
இவ்விடத்தில்,   " உலகம் ஏன் இருக்கிறது?"   என்ற  கேள்வியானது   உலகின்
இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலானதல்ல!  மாறாக, உலக இருப்
பின்   நோக்கம்,  குறிக்கோள்   ஆகியவற்றை  அறிந்துகொள்ளும்  பொருட்டு            
எழும்  கேள்வியாகும்!   ஏனெனில்,  நாம்  இங்கே  இருப்பு  (வாழ்க்கை)  எனும்
ஆடுகளத்தின்  நடுவே இருந்து கொண்டு,  முறையாக ஆட்டத்தை ஆடாமல்,
அதாவது வாழாமல் ஆட்டத்தையும், அதன் விதிகளையும் பழித்துக்கூறுவது,
அல்லது கேள்விக்குள்ளாக்குவது முறையாகாது!  மாறாக, ஆடுகளம் மற்றும்
ஆட்டத்தின்  விதிகளை  உய்த்துணர்ந்து  கண்டுபிடித்து  அவைகளை நிறை
வேற்றி   இருப்பை முழுமைப்படுத்தும் வகையில்  நாம் முழுமையாக வாழ்ந்
திட வேண்டும்!

பிரெஞ்சு  தத்துவ சிந்தனையாளர் ஹென்றி பெர்க்ஸன்(Henri Bergson),
தனது   "படைப்புப்பூர்வ பரிணாமம்"  (Creative Evolution,1907)எனும்
நூலில்,   "பிரபஞ்சம்  ஏன் இருக்கிறது  என்பதை நான் அறியவிரும்புகிறேன்"
என்பதாக   அறிவித்தார்.    அவரைப்பொறுத்தவரை,     இருப்புக்கு   எதிராக
இன்மையை    நிறுத்தி   எழுப்பப்படும்  கேள்வி    ஒரு  பொய்த்தோற்றத்தை
அடிப்படையாகக் கொண்டது என்றார்.   அதாவது   "ஒன்றுமின்மை"  என்பது
சாத்தியம்   என்கிற  பொய்த்தோற்றம்.   மேலும்   "முற்றான ஒன்றுமின்மை"
என்பது  வட்டவடிவ சதுரம் என்பதைப்போல சுய-முரண்பாடானது  என்றார்.
ஆக,  "ஒன்றுமின்மை"  என்பது ஒரு பொய்க்கருத்தாகையால்,   "ஏன்  இங்கே ஒன்றுமில்லாமலிருப்பதற்குப் பதிலாக  ஏதோவொன்று  இருக்கிறது?"எனும்
கேள்வியும் போலியான கேள்வியாகும் என  பெர்க்ஸன் கூறினார்.

இருப்பு  எனும்  புதிரின் சாரம்   "ஏன்  ஒன்றுமில்லாமலிருப்பதற்குப் பதிலாக
ஏதோவொன்று  இருக்கிறது?"  எனும்  கேள்வியில்  ஒன்று திரட்டப்பட்டிருப்ப
தாக,     தத்துவ சிந்தனையாளர்   ஜிம் ஹோல்ட்   (Jim Holt)  கூறுகிறார்.
ஆனால், இவரது இக்கூற்று தலைகீழானது! ஏனெனில், இருப்பின் மகத்துவம்
ஒன்றுமின்மையைச் சார்ந்திருக்கவில்லை!   அதாவது  இன்மைக்கு எதிராக,
அல்லது  இன்மையின் தயவில், இருப்பு தன்னை நிறுவ வேண்டிய அவசியம்
எதுவும் இல்லை! இருப்பு, இவ்வுலகம், பிரபஞ்சம்  இருக்கிறது!  என்பதிலேயே
அதனுடைய புதிரின் சாரம் அடங்கியுள்ளது!

மேலும், மனிதஜீவிகளாகிய நாம்,   இருப்பின்,  இம்மாபெரும் பிரபஞ்சத்தின்
பிள்ளைகளே தவிர, (ஒன்றும்)இன்மையின் பிள்ளைகள் அல்ல! ஆகவே நாம்
இருப்பைக் கொண்டாடுவோமாக!  இருப்பின் புதிரைத் தரிசித்தவர்கள் ஒரு
போதும் தம் வாழ்வில் -  என்ன நேர்ந்தாலும்  - சலிப்படைவதோ, மனக்குறை
கொள்வதோ, ஆர்வக்குறைவு அடைவதோ கிடையாது!

அதே வேளையில்,   இருப்பின் புதிரை தரிசிக்காதவர்களும், இருப்பின் இரக
சியத்தைப்  புரிந்து கொள்ளாதவர்களும் தான்   ஒன்றுமின்மை,    வெறுமை
சூன்யம், என்றெல்லாம்  'வெற்றுத் தத்துவம்' பேசிக்கொண்டிருக்கிறார்கள்!
அசலான  வாழ்க்கையின்  அர்த்தம்,  நோக்கம்  மற்றும்  இலக்குடன்  தொடர்
பில்லாத வகையில்அமைந்த சொந்த விவகாரங்கள் மற்றும் ஈடுபாடுகளில்
தம் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கை செல்லவில்லை என்பதாலும்;சமூக நடை
முறைகள்,  மதிப்புகள், பொருளாதார நிலைகள் ஆகியவற்றில்  முன்னேற்ற
மடையாததாலும்; தாழ்வு மற்றும்,தோல்வி மனப்பான்மையாலும்,வாழ்க்கை
சாரமற்றதாக,    அர்த்தமற்றதாக,   வெறுமையாக   இருப்பதாக   பாமரர்கள்
மட்டுமின்றி,    பல  தத்துவவாதிகளும்,   குறிப்பாக,    இருத்தலியல்வாதிகள்
(Existentialists) வெறுமையை,  சூன்யத்தை    சிலாகித்துப் பேசிவரு
கின்றனர்!

மேலும்,  பாராமுகம் கொண்ட  பிரமாண்டமான இப்பிரபஞ்சத்தில்  மனிதன்
என்பவன்  தூசியிலும் தூசியாக  பூமிக்கிரகத்தின் மீது  ஒட்டிக்கொண்டிருக்
கிறான்! அவனது வாழ்காலமோ மிகக்குறுகியது;  முடிவில் மரணம் அவனை
சூன்யத்தில்  கரைத்துவிடுகிறது!  அதாவது,    " ஏன்  இப்பிரபஞ்சம்  நம்மைக்
கண்டுகொள்ளாமல்  பாராமுகமாக  உள்ளது?   ஏன்    நாம்  அதனுடைய  இத்
தகைய   முக்கியத்துவமற்ற  ஒரு பகுதியாக இருக்கிறோம்? ஏன் இங்கே ஒரு
உலகம் என்பது இருக்கிறது?"  என, 1969-க்கான இலக்கியத்துக்கான நோபல்
பரிசுபெற்ற  சாமுவல் பெக்கட்(Samuel Beckett)அறிய விரும்பினார். ஒரு
வகையில், "சாவு,  நிலையாமை ஆகிய பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு
ஒப்பாரி  வைக்கிறவர்கள்தான்   இருத்தலியலாளர்கள்"  என்ற குற்றச்சாட்டு
பொருத்தமானதே!

பிரபஞ்ச இருப்பை அணுகுவதில் மூன்று வழிகள் உள்ளன; ஒன்று: நேர்மறை
யான வழி,   இது பெரிதும் நம்பிக்கை சார்ந்த  வழியாகும்;  அந்த நம்பிக்கை
'கடவுள்' எனும் மகா தீர்வாளரை, எல்லாம் அறிந்தவரை மையமாகக்கொண்
டதாகவும்  இருக்கலாம்;   அல்லது,  கடவுளை நம்புவதைவிட  இயற்கையை,
அதாவது   பிரபஞ்சத்தையே  நம்புதல்,   குறிப்பாக   பிரபஞ்சமானது   புரிந்து
கொள்ள ஏதுவாக (Comprehensible) உள்ளதாகக்கொண்டு    நம்முடைய
சொந்த   பகுத்தறிவை   நம்புதல் என்பதாகவும் இருக்கலாம்!  உண்மையில்,
இவை,  இரண்டுவித வழிகளோ,  பார்வைகளோ அல்ல; மாறாக,ஒரே அணுகு
முறையின் இரண்டு பக்கங்களைப் போன்றவையாகும்

இரண்டாவது வழி :  நம்பிக்கையின்மையைச் சார்ந்த வழியாகும்.  அதாவது
கடவுள்  இருந்தாலும்,  இல்லாவிட்டாலும்  அவரை  அறியமுடியாது;  இன்னும்
உலகம்  அல்லது பிரபஞ்சத்தையும்  முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது
எனும் எதிர்மறைவழி! பெரும்பாலான இருத்தலியலாளர்களின் வழி இதுவே!
இருத்தலியலாளர்கள்  சிறுபிள்ளைத்தனமானவர்கள், அவர்கள்,   இருப்பை, இயற்கையை,  பிரபஞ்சத்தை  அப்படியே கொடுக்கப்பட்ட ஒன்றாகக் கருது
வதால், இயற்கையே யாவற்றையும்  முன்வந்து நமக்கு வழங்கிட வேண்டும்
என   அவர்கள்    எதிர்பார்த்து    ஏமாற்றமடைந்து  போனவர்கள்!     இவர்கள்  
எத்தகையவர்கள் என்றால், தன் பெற்றோரிடம், "என்னை ஏன் பெற்றீர்கள்"?
"ஏன் என்னைப்பெரிய படிப்பு படிக்கவைக்கவில்லை?" "ஏன் அதிக சம்பளம்
தரும் உத்தியோகத்தில் அமர்த்தவில்லை?" "ஏன் எனக்கு திருமணம் செய்து
வைக்கவில்லை?"    என்றெல்லாம்   கேட்கிற   தன்  சொந்தக்காலில்  நிற்கக்
கற்றுக்கொள்ளாது  பெற்றோரைச் சார்ந்தே வாழ நினைக்கும்  சுய-முயற்சி
யற்ற   தறுதலைப்பிள்ளையைப்  போன்றவர்கள் ஆவர்!   இவர்களைப்பற்றி
மிக விரிவாக பிறகு பார்ப்போம்.

மூன்றாவது வழி :  முன்-முடிவுகள், எதிர்பார்ப்புகள், சிறுபிள்ளைத்தனமான
கோரிக்கைகள் எதுவுமில்லாமல், பிரபஞ்சத்தை, இருப்பைச் சந்திக்கும்,  தரி
சிக்கும், அதாவது  உணர்வுகொள்ளும் வழியாகும்! இம்மூன்றாவது வழியின்
விளக்கமாகத்தான் இக்கட்டுரை முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது!

இம்மூன்று   வழிகளையும் தவிர,  ஒரு நான்காம் வழி அல்லது அணுகுமுறை
யைப்பற்றியும்  இங்கு  குறிப்பிடுவது  பொருத்தமாக   இருக்கும்!  அது என்ன
வென்றால்,கண்கள் இருந்தும் குருடான,உணர்வு இருந்தும் உணர்வற்றதான
ஒரு நிலைப்பாட்டை எடுப்பது என்பதே! அதாவது இருப்பு குறித்து யாதொரு                
வியப்பும்,  உணர்வும்,  கேள்வியும்  இல்லாமலேயே  வாழ்ந்துசெல்லுகிற  இப்
போக்கு  மனிதத்தரத்துக்கு  உரியதல்ல!  இருப்பு குறித்தகேள்வியைப்  புறக்
கணிப்பது என்பது மனநலம் குன்றிய நிலையின் அறிகுறி எனலாம்!

"அறிவு  (Intellectual) வளர்ச்சியில்,  கீழான நிலையிலுள்ளவர்களைப்
பொறுத்தவரை,  அவர்களுக்கு உலகம்,  இருப்பு  என்பது  பெரிதாக   வியப்பு
அளிப்பதாகவோ,  அல்லது புதிராகவோ தெரிவதில்லை!"   என தத்துவவாதி
ஆர்தர் ஷோப்பன்ஹீர் (1788-1860) கூறியுள்ளார்! ஆனால், இதன் மறு துருவம்
போல,   மன-நோய்க்கூறுடைய   சிலரைப்பொறுத்தவரை,   இருப்பு   குறித்த
வியப்பும்,  அதனுடைய  புதிர்த்தன்மையும்  மிக அதீதமான பற்றுவெறியாக
(Obsession)அமைந்துவிடுகிறது என்று சொல்லப்படுகிறது! ஒருவகையில்,
வியப்புணர்வும், புதிர் குறித்த  உணர்வுமற்ற மனிதர்கள் விலங்கையொத்த
வர்கள் எனலாம்;   இவர்களைவிட  புதிர் குறித்து  அதீத உணர்வு பீடித்த மன
நோயாளிகள் மேல் எனலாம்!

ஆனால்,    எது   மனிதனை   பிற   பிராணிகளுக்கு    மேலாக   உயர்த்துகிறது
என்றால்   தனது  சாசுவதமற்ற  நிலையைப்பற்றிய   அவனது  உணர்வுதான்
என்பதும்,அதாவது மரணத்தின் சாத்தியம் அவனுள் 'ஒன்றுமின்மை' குறித்த
கருத்தாக்கத்தை   கொண்டுவருகிறது   என்பதும்   தவறான புரிதல்   ஆகும்!
உண்மையில், மரணம் என்பது நிச்சயம்,  ஒரு நாள் நாம் மரணத்தில் முடிந்து
போவோம்   என்பதை  அறியும்  ஒருவன்  அதிர்ச்சியடைவதில்   தவறில்லை!
ஆனால்,  அந்த  அதிர்ச்சி ஒருவனை இருளடர்ந்த சூன்யம் பற்றிய கருத்தாக்
கத்தில்    தள்ளிவிடக்கூடும்    என்று   சொல்வதற்கில்லை!     மாறாக,  தனது
சாசுவதமற்ற  நிலையை   உணரும்   ஒருவன்  அந்த   அதிர்ச்சியில்    உடனே
தனது  உணர்வற்ற தன்மையிலிருந்து  விழித்துக்கொள்ளவும்,  மரணத்தைக்
கடந்த நித்தியவாழ்வை அடைவதற்கான உணர்வார்ந்த வழியைத்தேடவும்,
உணர்வில் பெரும் மாற்றம் அடைந்து ஒரு புது மனிதனாகவும் எழலாம்!

ஏனெனில், இன்மை (சூன்யம்) யிலிருந்து தோன்றியதல்ல இருப்பு; அவ்வாறு
இருந்தால்,  இன்மை தான் நம்முடைய தாய்வீடாகும்,  ஆக,  தாய்வீடு பற்றிய
ஞாபகமும்,   அங்கு   திரும்பிச் செல்லவேண்டும்   என்ற  ஏக்கமும்   நம்மிடம்
இருக்கவேண்டும்!  ஆனால்,  விஷயங்கள் அவ்வாறில்லை!  சூன்யம் நம்முள்
பீதியையும்,    மரணபயத்தையும் தான்  ஏற்படுத்துவதாயுள்ளது!  ஏனெனில்,
நாம் ஒன்றுமின்மையிலிருந்து தோன்றியவர்களல்ல!ஆம், நாம் சூன்யத்தின்
குழந்தைகள்  அல்ல!   நாம்   இருப்பின்  குழந்தைகள்!    உலகம்,    பிரபஞ்சம்,
இயற்கை, இருப்பு என எப்படி அதை அழைத்தாலும், அது முழுமையான ஒரு
இருப்பு, அதாவது "பேரிருப்பு", அல்லது "பேரியற்கை"யின் ஒரு வெளிப்பாடே
ஆகும்!   எந்த  நதியும் சூன்யத்திலிருந்து பிறப்பதில்லை!  நேரடியாகத் தெரி
யாவிட்டாலும்,   சமுத்திரமே   நதியின் மூலம் ஆகும்!  ஆனால்,   சமுத்திரத்தி
லிருந்து  மழையாக நீரைப்பெற்று நதியாக மாற்றித் தருவதற்கு  மலை  ஒரு
ஏற்ற இடமாக அமைந்துவிடுகிறது!  ஆனால்,  நதியானது  முடிவில்  மீண்டும்
சமுத்திரத்தையே   சென்றடைகிறது!    ஒருவகையில்,    பிரபஞ்சம்    என்பது
உண்மையில்,   உணர்வைத் தோற்றுவிப்பதற்கான  ஒரு ஏற்பாடே எனலாம்!

ஆக,  இன்மை பற்றிய  (தேவையற்ற)குறிப்பு இல்லாமல்,  "ஏன் உலகம் இருக்
கிறது?"  என  அதிசயிக்கும்  உணர்வுடன்  இக்கேள்வி   எழுப்பப்படுமானால்,
உண்மையில்,  அக்கேள்வியானது,  "நான் ஏன் இருக்கிறேன்?"  எனும் கேள்வி
யின் ஒரு மாறிய வடிவமே எனலாம்! ஏனெனில், இவ்விரு கேள்விகளும் ஒரே
புதிரின் இரு பக்கங்களைப்பற்றியதேயாகும்!

ஆனால்,   நாம்   எச்சரிக்கையாக   இருக்க வேண்டியது,   இருப்பை அணுகும்
மூன்று  வழிகளில்,   முதல் இரு வழிகளான,   நம்பிக்கையின் வழி,    மற்றும்,
நம்பிக்கையின்மையின் வழிகளில்   செல்வோர்களின் கூற்றுகள் குறித்துத்
தான்! குறிப்பாக, இருப்பைப் புறக்கணித்து இன்மையைப் பெரிதாகப்பிரஸ்                  
தாபிக்கும்    இருண்ட   சிந்தனைகள்    தவிர்க்கப்பட   வேண்டியவையாகும்!
ஆர்தர் ஷோப்பன்ஹீர்  ( Arthur Schopenhauer),   பைரன்    (Byron),
ஆல்பெர் காம்யூ ( Alpert Camus),ஸியோரன் ( E.M.Cioran),பெர்ட்ரண்ட்
ரஸ்ஸல் (  Bertrand Russell),உட்டி ஆல்லன் (Woody Allen)ஆகியோர்
"இருப்பைவிட இன்மை (சூன்யம்) மேல்!" என்று சொல்லிச்சென்றவர்கள்!

"ஏன் ஒன்றுமின்மைக்குப்பதிலாக இப்பிரபஞ்சம் இருக்கிறது?"எனும் கேள்வி
அர்த்தமற்றது.   இங்கே   இம்மாபெரும்   பிரபஞ்சம்      இருக்கையில்,   ஒன்று
மின்மை பற்றிய வீண்பேச்சு எதற்கு?  பிரபஞ்சம் என்பது 1500 கோடியாண்டு
களுக்கு    முன்   தோன்றியதாயினும்,   அல்லது,  என்றென்றும்  நித்தியமாக
இருந்து  வரும் ஒன்று  என்றாலும்  எவ்வகையிலும்  அதன் புதிர் மட்டும் சிறி
தும் குறையப்போவது இல்லை!பிரபஞ்சம் இருக்கிறது!அதற்குரிய காரணம்,
நோக்கம்,  குறிக்கோள்   என்னவென்று  புரிந்துகொள்வதுதான்   நம்முடைய
பிரதான    வாழ்க்கைக் கடமையாகும்!     இதைவிடுத்து,     நாம்   விரும்புகிற
வகையில், அதாவது நமது விஞ்ஞான, தர்க்க அளவுகோல்கள்,மற்றும், விளக்
கங்களைத் திருப்திபடுத்தும் விதத்தில்  பிரபஞ்சம்  அமைய வேண்டும்  என
எதிர்பார்ப்பது மடமையே ஆகும்!

பிரபஞ்சமாயினும், எதுவாயினும், அதற்கு ஆரம்பம் என்றொன்று இருக்குமா
னால்,  முடிவு,   ஒரு இலக்கு,  முழுமையடைதல்  என்பதும் இருக்கவேண்டும்!
பிரபஞ்சம் இருக்கிறது என்பது ஒரு வெளிப்படையான உண்மை! நாம் அதன்
ஒரு பகுதியாக, மிக விசேட பகுதியாக இருக்கிறோம்; அதாவது நாம் கூழாங்
கற்களைப்போன்ற  சடமோ, அல்லது  மண்புழுக்களைப்போன்ற   சிந்தனை
யற்ற ஜந்துக்களோ அல்ல!   அதே வேளையில்,    பிரபஞ்சம் என்பது  மாறாத,
வளராத,   தேக்கமுற்ற  இருப்பு  அல்ல!   அது  ஒரு  நிகழ்வுமுறை (process)
ஆகும். ஒரு இருப்புநிலையிலிருந்து இன்னொரு இருப்புநிலை நோக்கி மேன்
மேலும்   வளர்ந்து செல்லுகிற  வழிமுறையாகும். அது இறுதியாக எத்தகைய
இருப்பு  நிலையை   எட்டுகிறது    என்பதைக் கண்டு   பிடிக்கும்போது,    அது
தோன்றியதற்கான    காரணத்தையும்,   நியாயத்தையும்   அறிந்துகொண்டு
விடுவோம்!

பிரபஞ்சம்  என்பது  ஒரு  மாபெரும்  விருட்சமெனில், அதனுடைய மூலம் எது
என்பதை,   அதனுடைய    வேர்களிலோ,   அடித்தண்டிலோ,   கிளைகளிலோ,
இலைக்கொத்துகளிலோ     தேடுவதில்  பயனில்லை!   மாறாக,  அதனுடைய
கனிகளில்  மட்டும் தான் கண்டடைய முடியும்,   கனிகள்   மட்டுமே விருட்சத்
தின்  மூலத்தையும், அனைத்தையும்  விளக்குவதாயிருக்கும்!  கனிகள்தான்
விருட்சத்தை   முழுமைப்படுத்துபவை!   ஒவ்வொரு  மனிதனும்தான் பிரபஞ்
சத்தின் கனியாக மாறவேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதனும் உணர்வில்
முற்றிக்கனிந்து முழு-உணர்வாக ஆகவேண்டும்!  ஏனெனில், முழு-உணர்வு
(Consciousness)மட்டுமே இப்பிரபஞ்சத்திற்கு ஈடாக, மாற்றாக, சமமாக,
நிகராக விளங்கமுடியுமேதவிர, ஒருபோதும் ஒன்றுமின்மை(Nothingness)
ஈடாக முடியாது! ஏனெனில், ஒன்றுமின்மையிலிருந்து  இப்பிரபஞ்சம் தோன்
றிடவில்லை!  மாறாக,  முழு-உணர்விலிருந்து தான் பிரபஞ்சம் தோன்றியது!
முழு-உணர்வு தான் பிரபஞ்சத்தின் மூலவித்து  ஆகும்!

நிறைவான  இருப்போ,  அல்லது  ஒன்றுமில்லா இன்மையோ,  எதுவும் உணர்
வைச்  சார்ந்தே   இருக்கமுடியும்!    உணர்விருந்தால்   எதுவும்      சாத்தியமே!
உணர்வாகிய  நாம்   அர்த்தமுள்ள   வகையிலும்,   அர்த்தமற்ற  வகையிலும்
எதையும்பேசலாம். உடல்ஜீவிகள் என்றவகையில்,நாம் ஒருநாள் மரணத்தில்
முடிந்து போவோம்!  ஆனால்,  "உணர்வு"  என்கிற வகையில் முடிவாக என்ன
நேரிடும்  என்பது  நமக்குத் தெரியாது!   ஒவ்வொரு   இரவும்  உறங்கும்போது
நாம் காணாமல் போகிறோம்! ஒவ்வொரு காலையும் நாம் மீண்டும் உணர்வு
பெற்று எழுந்திடுகிறோம்! நாம் பிறப்பதற்கு முன் எங்கிருந்தோமோ அங்கே
தான் மீண்டும் நாம் இறந்தபிறகு செல்கிறோம்! மிகஅசலான உண்மையான
புதிர்  என்பது  உலகம்  அல்லது பிரபஞ்சம் இருக்கிறது என்பதல்ல!  இன்னும்,
நிஜத்தில் இல்லாத 'ஒன்றுமின்மை'யும் அல்ல!மாறாக, ஒரு உணர்வாக நான்
இருக்கிறேன்,   ஒவ்வொரு   மனித ஜீவியும்  இருக்கிறான்   என்பதே    ஆகும்!
உடலுடனோ  (Embodied),  அல்லது    உடலின்றியோ  (Dis-embodied),
உணர்வு என்பது உணர்வு தான்!  

உண்மையில்,  பிரபஞ்சத்தில்,   மனித-உணர்வு   மிகவும்   மையமானதொரு
பாத்திரத்தை வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை! மிகப்பிரமாண்டமான
இப்பிரபஞ்ச   அமைப்பில்,    மனிதன்   மிக மிகச்  சிறியதொரு   பகுதியாகத்
தெரிந்தாலும்,  மனித உணர்வுதான் ஒட்டுமொத்த அளவில் பிரபஞ்சத்திற்கு
மெய்ம்மைத்  தன்மையை   வழங்குகிறது   எனலாம்!      பிரபஞ்சம்    நம்மை
உருவாக்கியது, நாம் அதை உருவாக்குகிறோம், அதாவது, அதை முழுமைப்
படுத்துகிறோம்!   பிரபஞ்சம்   தனது  இருப்பிற்கான  சாவியை  தன்னகத்தே
கொண்டிருக்கிறது எனும் கருத்து உண்மையே! மனிதஉணர்வே அந்த சாவி
(திறவுகோல்) ஆகும்.   ஆனால்,    மனித   உணர்வு   முழு-உணர்வு  நிலையை
அடையும்போதுதான் அந்த சாவி முழுமையாக உருப்பெறும்! அதுவரையில்
மனிதனால் பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவியலாது!

சில  அதி புத்திசாலிகள்  உணர்வு   என்பது  இன்றியே  பௌதீகப் பிரபஞ்சம்
சாத்தியமாகும்   என்று  சொல்கிறார்கள்.  ஒருவகையில்,  அவர்களது  கூற்று
சரியே!  அதாவது  இவ்வாறு தங்களது ஓட்டையான  கருத்துக்களைச்  சொல்
லும்    அவர்கள்  தோன்றிடும் வரை மட்டும்!  இப் பிரபஞ்சத்தின்  1,500 கோடி
ஆண்டுகள்  நெடிய பரிணாம  வரலாற்றில்,   முதல்  1,100 கோடி  ஆண்டுகள்
வரை   ஒரு சிறு அமீபாவும்,   புழு பூச்சியும்  தோன்றிடவில்லை தான்!  முதல்
உயிர்,   இன்றிலிருந்து   400 கோடி  ஆண்டுகளுக்கு முன் தான்  தோன்றியது!
அடுத்து,   தெளிவற்ற  அளவிலான  உணர்வுடன்  ஆதிமனிதன்  வெகுசமீபத்
தில்,     ஒரு  2,00,000  லட்சம்  ஆண்டுகளுக்கு  முன்னர்  தான்   தோன்றினான்!
மிகத் தெளிவான  சுய-உணர்வுடன் கூடிய   மனிதன்  வெறும்   5,000  ஆண்டு
களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம்! மிகத்தெளிவாகச் சிந்திக்கக்கூடிய
தத்துவச்   சிந்தனையாளன்  ஒரு  3,500 ஆண்டுகளுக்கு  முன் தோன்றியிருக்
கலாம்!   நவீன விஞ்ஞானி   என்பவன்  வெறும்  500 ஆண்டுகளுக்கு முன்னர்
தான் தோன்றினான்! பலசமயங்களில்,உரியகாலத்தில் பூக்காத,காய்க்காத
மரங்கள்   இருப்பதுண்டு!   ஆனால்,  நமது  பிரபஞ்சம் பூத்துக் காய்த்து,   பல
அரிய கனிகளை  (ஞானிகளை)க் கண்ட அதிசய மரமாகும்!

தற்போது வாழ்ந்துவரும் பெரிய விஞ்ஞானத்தத்துவவாதி   (philosopher
of science)எனக்குறிப்பிடப்படும்,அடால்ஃப் க்ரன்பாம்(Adolf Grünbaum)
அவர்களைப்பொறுத்தவரையில்,"ஏன் ஒன்றுமில்லாததற்குப்பதிலாக ஏதோ
வொன்று உள்ளது?"  எனும்  கேள்வி,  கடவுளையோ அல்லது  வேறெதுவொன்
றையும் நோக்கிய பாதையல்ல, ஏனெனில், இது ஒரு போலியான பிரச்சினை
யாகும்   என்கிறார்.   ஆனால்,   அவர்  ஒரு   கடவுள் நம்பிக்கைக்கு     எதிரான
இயற்கைவாதியாவார்.பிரபஞ்சத்தை என்றென்றும் இருந்துவரும் ஒரு நிஜம்
என நம்புபவர்களில் அவரும் ஒருவர்!கடவுளை மட்டுமல்லாது,இன்மையுடன்
சேர்த்து இருப்பையும் ஒதுக்கித்தள்ளிடும் அவருக்கு பிரபஞ்சமோ,இருப்போ
வியப்பூட்டும்   புதிராகத்  தெரியவில்லை!  அப்படியானால், அவர் ஒரு எந்திர
வாதியாகத்தான் இருக்க முடியும்! அதாவது,அவருக்குத் தனது இருப்பும் கூட புதிராகத்தெரியவில்லை,  "நான்  எவ்வாறு இருக்கிறேனோ அவ்வாறு ஒன்று
சேர்க்கப்பட்டுள்ளேன்   எனும் போது,  அது  குறித்து  நான்  ஏன் வியப்படைய
வேண்டும்?" என  வினவுகிறார்!

ஒருவகையில்,    பிரபஞ்சத்தின்   இருப்பையும்,   தனதிருப்பையும் அடால்ஃப்
கிரன்பாம்  அவர்கள்  வியப்போ, புதிருணர்வோ  இன்றி ஏற்றுக்கொள்கிறார்
என்பது பாராட்டுக்குரியது ஆகும்! மேலும், அவர் ஒரு சூன்யவாதி அல்ல என்
பதும் மகிழ்ச்சிக்குரியதே!  ஆனால்,  இப்பிரபஞ்சமும்,  அதில் அவரும், குறிப்
பாக,  என்ன  நோக்கத்திற்காக, எந்த இலக்கை அடைவதற்காக இருக்கிறார்
கள்?   இக்கேள்விக்கு  அவரது பதில்,  பிரத்யேகமாக  ஒரு  இலக்கும் இல்லை
என்பதாக    இருக்குமானால்,  நிச்சயம்  அவரது  நிலைப்பாடு   குறித்து  நாம்
வியப்படைவதும்,    எச்சரிக்கை  கொள்வதும்    தவிர்க்கமுடியாது!   எதற்கும்
அவர் ஒரு மன நல மருத்துவரை அணுகுவது அவருக்கு நலம் தருவதாயிருக்
கும்!   இல்லாவிட்டால்,   தொடர்ந்து   அவர்  தனது  சாரமற்ற நிலைப்பாட்டை
பிறரிடமும் தொற்றச்செய்துகொண்டிருப்பார்!   "தத்துவம்  வியப்புணர்வில்
தொடங்குகிறது!" என தத்துவ ஞானி அரிஸ்ட்டாட்டில் (Aristotle)வியந்து
கூறினார்;  ஆனால்,  அடால்ஃப் க்ரன்பாம்-உடன்  தத்துவம் மடிந்துவிடுகிறது
என்றுதான் கூறவேண்டும்!  ஏனெனில்,  கனிகொடாத எந்த விருட்சமும் தன்
னுடன் அழிந்துவிடும்!

இருப்புடன்    இன்மையை  முடிச்சுப்போட்டு   எழுப்பப்படும்   கேள்வியானது
கடவுளையோ அல்லது வேறெதுவொன்றையோ நோக்கிய பாதையல்ல என
அடால்ஃப் க்ரன்பாம்   சொன்னாலும்,  இருப்பு  என்பது ஒரு இயக்கமாதலால்,
அது ஒரு ஒப்பற்ற இலக்கு நோக்கிச்செல்வதை அவர் அறியாமலிருக்கலாம்!

அதாவது,   பிரபஞ்ச இருப்பின்   மூலம்  (Origin) குறித்த    பிரச்சினையில்
இன்மையையோ,  அல்லது கடவுளையோ உள்ளே கொண்டுவருவதை அவர்
ஆட்சேபிக்கலாம்;  ஏனெனில்,  ஆரம்பம் குறித்த விஷயம் திறந்த நிலையில்
இருப்பதால்,   அவரவர்க்குத் தோன்றியபடி   விளக்கமளிக்க  அது  இடமளிப்
பதாக உள்ளது!   ஆனால்,  இருப்பின் முடிவு நிலை (Consummation)பற்றிய
விஷயத்தில், சில வரையறைகள்,நியதிகள் உள்ளன! முதலிடத்தில்,பிரபஞ்ச
இருப்பு  என்பது ஒரு பரிணாம இயக்கமாக  இருப்பதை மறுக்கவோ, தவிர்க்
கவோ முடியாது!  அடுத்து,   "பரிணாமம்"   என்றால்  என்ன?   பரிணாமத்தில்
பரிணமிப்பது எது?   என்பதை  முறையாகப் புரிந்து கொள்வது  மிகவும் அவ
சியம்!   அடுத்து,  உலகிற்கும்,  உணர்வுக்கும் உள்ள தொடர்பையும்; பிரதான
மாக  உணர்வு  என்றால் என்ன என்பதையும் புரிந்து கொள்வதோடு,  பிரபஞ்
சத்தை விளக்கும் சமன்பாட்டில்,  உணர்வையும் ஒரு முக்கிய காரணியாகச்
சேர்த்து சமன்படுத்த வேண்டும்! அடுத்து, "உணர்வு" என்பது மனித உணர்வு
டன்  முடிந்துவிடக்கூடிய  அம்சம் அல்ல!  மனித உணர்வு என்பது உணர்வின்
ஒரு நுனி, அல்லது  தொடக்கம் மட்டுமே ஆகும்!  ஆக,  உணர்வை ஆராய்ந்து
அறிந்து  கொள்ளவேண்டுமெனில்,  அதை   ஒருவர்    ஒரு   பார்வையாளராக
(Observer Stance), அதாவது,  உணர்வுக்கு  வெளியே இருந்துகொண்டு
உணர்வை     அணுகவோ,   ஆராயவோ,    புரிந்துகொள்ளவோ     ஒருபோதும்
முடியாது! முக்கியமாக உணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ள ஒருவரது
உணர்வில் மாபெரும் மாற்றம் (Transformation) நிகழ்ந்தாக வேண்டும்!

அதாவது உணர்வின் முழுமையை ஒருவர் அடைந்தாகவேண்டும்!அப்போது
தான் உணர்வைப்புரிந்து கொள்ளமுடியும்!உண்மையில்,உணர்வைப்புரிந்து
கொள்வது தான் அனைத்தையும் புரிந்து கொள்வது என்பதாகும்!

நல்லது,  நம்முன்னே இருப்பு,   இம்மாபெரும் பிரபஞ்சமும்,   அதில் உணர்வா
கிய  நாமும்   இருக்கிறோம்!  இருப்பு  சிறிதாயினும்,  பெரிதாயினும், இருப்பி
லிருந்துதான் பிறக்கமுடியும்!  ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றும் பிறக்க முடி
யாது!  நாம்  இருக்கும் வரை   இன்மைக்கு  இங்கு இடமில்லை!  உணர்வாகிய
நான் இல்லாவிட்டாலும்,  இன்மையானது,  உணர்வின்   இடத்தை  நிரப்பமுடி
யாது! உணர்வு உறக்கத்தில் ஆழ்ந்திடலாம்; அதன் உறக்கம் நெடியதாகவும்
இருக்கலாம்!  உணர்வு  என்பது  மிகக்குறைவான,  கிட்டத்தட்ட (அமாவாசை
நிலவுபோல) உணர்வற்ற நிலையிலிருந்து சிறிது சிறிதாக வளர்ந்து பெருகி,
ஒரு கட்டத்தில்,  முழு-உணர்வாக, பௌர்ணமி நிலவு போலப் பிரகாசிக்கும்!
எப்படிப்  பார்த்தாலும்,  உணர்வானது  தேய்பிறை,  வளர்பிறை எனும் வட்டத்
தில் அமைந்ததாக மட்டுமே இருக்கும்! அவ்வட்டத்தில், இன்மைக்கு,சூன்யத்
திற்கு இடமில்லை!  உணர்வின்மையும்,  சூன்யமும்  ஒன்றல்ல! இருப்பு உறக்
கத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில், அது இன்மையாகிவிடாது!

ஆனால்,  இருப்பு  (இயற்கை, பிரபஞ்சம்) என்பது உறைந்து நிற்கும் ஒன்றோ,
முடிவானதோ அல்ல.  மாறாக,  இருப்பு என்பது தொடர்ந்து தன்னைத்தானே
கடந்து வளர்ந்துசெல்லும் ஓர் இயக்கமாகும்!அது மிகக்கீழான இருப்புநிலை
யிலிருந்து, உதாரணத்திற்கு, பௌதீகச் சடப்பொருள் நிலையிலிருந்து படிப்
படியாக,   பல்வேறு   சுய-கட்டமைப்பு  (Self-Organization) முறையின்
மூலமாக, முறையே, உயிர்-ஜீவி (புலன்-உணர்வு), மனித-ஜீவி (சுய-உணர்வு),
எனப்பரிணமித்து,   முடிவாக   ஒவ்வொரு     தனிமனிதனும்  அடையக்கூடிய
உணர்வின் உச்சகட்ட பரிணாமநிலையான, முழு-உணர்வில் முழுமையடை
கிறது!  இருப்பு,  உலகம் என்பது உணர்வுப்பரிணாமத்திற்கு வடிவம் கொடுக்
கும் ஓர் ஊடகம் போன்றதாகும்!

.......................... , முழுமையான இருப்பு அழிவற்றது;  ஏனெனில், அது கால-வெளி
கடந்த முழு-உணர்வு ஆகும்! பிரபஞ்சம் என்பது மிகக் குறைவான இருப்பிலி
ருந்து - மிகக் குறைவான உணர்விலிருந்து- மேன்மேலும் அதிகரித்து, அதிக
இருப்பு,மிக அதிக இருப்பு- அதிக உணர்வு,மிக அதிக உணர்வு என உயர்ந்து
முழுமையான இருப்பாக - முழு உணர்வாக முழுமையடைகிறது! ஆக, நமது
பிரபஞ்சம் ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்ததல்ல!  ஒன்றுமில்லாததிலிருந்து
ஒன்றும் பிறப்பதில்லை!மாறாக,ஏதோவொன்றிலிருந்துதான் எதுவும்பிறக்க
முடியும்!

ஆகவே,  இன்மை,  சூன்யம்  என்பதெதுவும்  இல்லை!  இருப்பு  (Existence)
எனும்  தன்னைத்தானே   கடந்து   வளர்ந்து   செல்லும்    மாபெரும்  இயக்கம்
இருக்கிறது;  நாம் இருப்பின் தலைப்பகுதி!  நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சப்
பரிணாமத்தை     உணர்வுப்பூர்வமாக    முன்னெடுத்துச்  சென்று     பிரபஞ்ச
இருப்பை  முழுமைப்படுத்தவேண்டிய  பிரத்யேகப்  பிரதிநிதிகள்  ஆவோம்!
இருப்பு  என்பது  இல்லாமல்,  இன்மை பற்றிக் கற்பனை செய்யவும், பேசவும்
கூடஇயலாது!   'இன்மை'   என்பது   இருப்பின் நிழல்!   நிழல் என்பதற்கு மேல்
இன்மைக்கு நிஜத்தன்மை ஏதும் கிடையாது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 14.12.2016
----------------------------------------------------------------------------


Monday, 12 December 2016

அனைத்தையும் அறிவது சாத்தியமா?




 'இறுதி விளக்கம்' சாத்தியமில்லை! என்பதை நான் ஏற்றுகொள்ளமுடியாது!
  ஏனெனில், உலகை, என்னை, வாழ்க்கையை, அரை-குறையாகப்புரிந்து
  கொண்டு, வாழ்ந்து, மாண்டுபோக நான் விரும்பவில்லை!
     -மா.கணேசன்/10.12.2016
   
மனிதவாழ்க்கை, வாழ்தல் என்பது அறிதல்,புரிதல்,தெளிதல் ஆகியவற்றை
உள்ளடக்கியதல்ல வென்றால்,   நாம்   எதையும்   அறிந்துகொள்ள,     புரிந்து
கொள்ளத்தேவையில்லாமல்,விலங்குஜீவிகளைப்போல கேள்வியேதுமின்றி
வெறுமனே  உயிர்பிழைத்துச் சென்றால் போதும்!   இதற்குமாறாக,  அறிதல்,
புரிதல் என்பது மனிதனின் பிரத்யேகஅம்சம் என்றால்,நிச்சயம் மனிதனால்
அனைத்தையும்     புரிந்து  கொள்ளமுடியும்!   அனைத்தையும்   என்பது   ஒவ்
வொரு   சிறு சிறு  விவரத்தையும்  விடாமல்  என்று அர்த்தமில்லை!  மாறாக,
விஷயங்களை அவற்றின் சாரத்தில் புரிந்துகொள்வதைக்குறிக்கிறது.

என்னைப்பொறுத்தவரை, ஒட்டுமொத்தமும் ஒரு புதிர் தான்! அதில் உலகம்
ஒரு புதிர்!   அதில்  நான் ஒரு புதிர்!   என்னையும்,  உலகையும்   உள்ளடக்கிய
வாழ்க்கைஎனும் ஒட்டுமொத்தம் ஒரு மகாபுதிர்!நான் உலகை,பிரபஞ்சத்தை
பிரதானப் படுத்துவதில்லை!    ஏனெனில்,     என்னால்   புரிந்துகொள்ளப்பட
வேண்டிய   ஒரு  அம்சத்தை  பிரமாதப்படுத்த வேண்டிய     அவசியமில்லை!
இப்பிரபஞ்சத்தை  முறையாகவும்,   சரியாகவும்   புரிந்து கொள்வது  என்பது
அதன்  உள்ளார்ந்த விழைவை (Nisus)ப் புரிந்து கொள்வதொன்றே ஆகும்!
அதாவது,     பிரபஞ்சத்தை    முழுமையாகப் புரிந்து   கொள்வதற்கு      அதில்
எத்தனை கோடி உடு மண்டலங்கள் (Galaxies), எத்தனை கோடி  நட்சத்
திரங்கள் உள்ளன, ஒவ்வொரு நட்சத்திரத்தையும்சுற்றி எத்தனை கோள்கள்
உள்ளன  என்பதையெல்லாம் துல்லியமாக எண்ணிக் கணக்கிட்டுக்கொண்
டிருக்கத் தேவையில்லை!   இவ்வழியாகவெல்லாம்  பிரபஞ்சத்தை நாம் ஒரு
போதும் புரிந்துகொள்ளமுடியாது!

அப்படியானால், வேறு எவ்வாறு நாம் இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது?
அதாவது, பிரபஞ்சமானது அதன் அடிப்படையிலும், சாரத்திலும்  என்னவாக
உள்ளது    என்பதைப் புரிந்துகொண்டாலே  போதும்!    பிரபஞ்சத்தை       ஒரு
மாபெரும்  பௌதீக அமைப்பாகவும், எந்திரமாகவும் காண்பது என்பது மிக
வும் மேலோட்டமானதொரு பார்வையாகும்! இந்தக் கோணத்தில் தான் விஞ்
ஞானிகள்     அனைவரும்    பிரபஞ்சத்தைக் காண்கிறார்கள்!       இன்னொரு
கோணத்தில்,    "இயக்கத்திலுள்ள பொருள்"  (Matter in Motion)எனவும்
காண்கிறார்கள்.    பிரபஞ்சம்   பருப்பொருளால்  ஆனது    என்பதில்   எவ்வித
சந்தேகமும்,   சிக்கலும்   இல்லை!  ஆனால்,  அது வெறும் எந்திர கதியிலான
இயக்கத்திலுள்ள  பொருள்  அல்ல!  பௌதீகப் பிரபஞ்சமானது புறத்தே ஒரு
மாபெரும்  எந்திரம்  போலத் தோற்றம் தருவதும், அத்தகைய   இயக்கத்தில்
இருப்பதும்  என்னவோ  உண்மை தான்!  ஆனால், அதுவே முழு உண்மையும்
அல்ல!    மாறாக,   அதன்  அடியோட்டமான,    அசலான   இயல்பில்  அது  ஒரு
பரிணாம இயக்கமே ஆகும்! ஆம், ஒரு அமைப்பு என்கிற வகையில் பிரபஞ்ச
மானது  ஒரு மாபெரும்  "பரிணாமக்களம்" (Evolutionary Field)ஆகும்!
ஒரு  இயக்கம்  என்கிற  வகையில்  அது ஒரு மாபெரும் "பரிணாம இயக்கம்"
ஆகும்!

பௌதீகப் பிரபஞ்சம்    என்பது    பிரபஞ்சத்தின்  ஒரு  முகம்  மட்டுமே  தவிர
அதற்கு வேறு முகங்களும் உள்ளன!  பௌதீகச் சடப்பொருள் அல்லது பருப்
பொருள்   என்பது   பிரபஞ்சத்தின்  ஒரு  அடிப்படைக்கட்டுமானப் பொருளே
தவிர,  பருப்பொருளும்   பிரபஞ்சமும்  ஒன்றல்ல! (Matter and Universe
are not synonymous!) அதாவது, அடிப்படைத்துகள்கள் (Fundamental
Particles)என  அணுக்கருவியல் பௌதீகத்தில் குறிப்பிடப்படுவது  மிகப்
பொருத்தமான   ஒன்றேயாகும்!   அவை  அடிப்படையானவையே  தவிர  எவ்
வகையிலும்  இறுதியானவையல்ல!  அதாவது,  சந்தேகத்திற்கிடமில்லாமல்,
இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும்,  ஏன்,  அனைத்துமே பருப்பொருளால்
(அணுத்துகள்களால்)  ஆனவையே!  அதாவது,  ஒரு கருங்கல்லும், உயிருள்ள
ஒரு தவளையும், உணர்வுள்ள ஒரு மனிதஜீவியும் பருப்பொருளால் ஆனவை
தான்;  ஆனால்,  இம்மூன்றும் ஒரே பண்பு கொண்டவையல்ல!  ஒரு கருங்கல்
என்பது உயிரற்ற சடப்பண்பாகும்;  ஒரு தவளை என்பது உயிருள்ள ஒரு ஜீவி
யாகும்; ஒரு மனிதஜீவி என்பவன் உயிரும் உணர்வும் உள்ள ஜீவியாவான்!

உண்மையில்,  உயிர்ஜீவிகள்  என்பவை  பௌதீகப் பிரபஞ்சத்தின் நீட்சியும்,
உயர்வளர்ச்சி நிலையும் ஆகும்!  இந்த உயிர்ப்பண்புகொண்ட உயிர்ஜீவிகள்
தான்   பிரபஞ்சத்தின்  இன்னொரு  முகம்  ஆகும்!    உண்மையில்,  உயிர்ஜீவி
களின் கோளத்தை "இரண்டாம் பிரபஞ்சம்" என்றுகூட அழைக்கலாம்!

அடுத்து, மனிதஜீவிகள் என்போர் உயிர்ஜீவிகளின் கோளமான  "இரண்டாம்
பிரபஞ்சத்தின்"  நீட்சியும்,  உயர்-வளர்ச்சிநிலையும் ஆகும்!  இந்த உணர்வுப்
பண்புகொண்ட  மனிதஜீவிகள்தான் பிரபஞ்சத்தின் மற்றொரு முகம் ஆவர்!
மனிதஜீவிகளின் கோளத்தை "மூன்றாம் பிரபஞ்சம்" எனவும்அழைக்கலாம்!

ஆனால்,   அதே நேரத்தில்,  "உயிர்"   மற்றும்  "உணர்வு"   ஆகிய  பண்புகளை
முறையே அவற்றின் தளத்தில், அவற்றின் சொற்களிலேயே புரிந்துகொள்ள
வேண்டுமே தவிர,  அவற்றைப்  பருப்பொருளின்  விசேட  பண்புகளாகவோ,
பருப்பொருளின்   சொற்களிலோ   சுருக்கிக் குறைத்துக்  காண்பது  கூடாது!
இவ்வாறு காண்பது அடிப்படையற்றதொரு வகையில்,பருப்பொருளைப் பிர தானப்படுத்துவதிலும்,   முதன்மைப்படுத்துவதிலும்  தான்  சென்றுமுடியும்!
ஏனெனில்,   பிரபஞ்சத்தின்   ஒருமையும்,   அதன்   சாரமான பண்பும்   அதன்
பொருண்மைத்    தன்மையில்   (Materiality) அடங்கியிருக்க வில்லை;
மாறாக,  பரிணாம இயக்கமான  பிரபஞ்சம் இறுதியாக எத்தகைய பண்பை
எட்டுகிறதோ அப்பண்பில்தான் அடங்கியுள்ளது!  பரிணாம வழிமுறை என்
பது (பருப்பொருள் உட்படுகிற) பண்புரீதியான மாற்றத்தைக்குறிப்பதாகும்!
"பொருண்மை" என்பது பருப்பொருளின்  தொடக்க நிலைப்பண்பு மட்டுமே!
அது   ஏற்கனவே  தனது  சடப் பண்பைக்கடந்து  உயிர்-ஜீவிகளின்  மூலமாக
உயிர்  பெற்றெழுந்துள்ளது!  தற்போதைய  அளவில்,  அது  மனிதஜீவிகளின்
முலமாக உணர்வும் பெற்றுள்ளது!அதாவது,உணர்வு எனும் பண்புநிலையை
எட்டியுள்ளது! உணர்வையடுத்து, அது இறுதியாக எப்பண்பு நிலையை எட்ட
இருக்கிறது   என்பதே   அதி முக்கியமான   கேள்வியாகும்!    பரிணாமத்தில்
பரிணமிப்பது   "உணர்வு"  (Consciousness)  எனும் அம்சமே   எனும் உட்
பார்வையின்படியும்,  அதன் தர்க்கரீதியான நீட்சியாக,  மனித  உணர்வைக்
கடந்த ஒரு முழுமையான உணர்வுதான் அந்த இறுதிப்பண்பு என்பது உணர்
வார்ந்த  தனிமனிதர்களின்  நேரடியான  அனுபூதியனுபவம்  மூலம் உணரப்
பட்ட உண்மையாகும்!

ஆம்,    இன்றைய  அளவில்,  பிரபஞ்சத்தை  நாம்  புரிந்துகொள்ள வேண்டும்
எனில்,  "சடம்",  "உயிர்",  மற்றும்  "உணர்வு"  ஆகிய இம்மூன்று அம்சங்களின்
சொற்களில் புரிந்துகொள்ளவேண்டுமே தவிர, வெறுமனே பருப்பொருளின்
சொற்களில்  மட்டுமே  புரிந்துகொள்ளமுடியாது! மேலும், பிரபஞ்சத்தை முடி
வாகவும்,    முழுமையாகவும்  புரிந்து கொள்ள வேண்டுமெனில்,  பரிணாமம்
(மனித) உணர்வையடுத்து    இறுதியாக   எட்டக்கூடிய   பண்பைக் கொண்டு
மட்டுமே  புரிந்துகொள்ளமுடியும்!  ஏனெனில், அந்த இறுதியான பண்புதான்
பிரபஞ்சத்தின் சாரமும்,பிரபஞ்சத்தை ஒருமைப்படுத்தி முழுமைப்படுத்தும்
பண்புமாகும்!

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை,  பிரபஞ்சத்தை  அவர்கள்  "இயக்கத்தில்
உள்ள பருப்பொருள்"   என்பதாகக் காண்பதால், பொருள் மற்றும் சக்தியின்
சொற்களில், பிரபஞ்சத்தின் பிறப்புக்கணத்தின், அதாவது,பெருவெடிப்பின்
போதான பௌதீகநிலைமைகளை அடிப்படை பௌதீகவிதிகளையும், சில
கண்-கவனிப்புத் தரவுகளையும் (Observational Data)கொண்டு கணக்
கிட்டு நான்கு அடிப்படை-விசைகளையும்  ஒருங்கிணத்துக்காண்பதன் வழி
யாக பிரபஞ்சம் குறித்த இறுதிக்கோட்பாட்டை சாதித்துவிடலாம் என முயற்
சித்துவருகிறார்கள்!  ஆனால், இவ்வழியாக  பிரபஞ்சத்திற்குக் காரணமான
அந்த ஒருமையை ஒரு ஒற்றைச் சமன்பாட்டிற்குள் அடைத்துவிட முடியாது!

ஒருவகையில்,  "மாபெரும்  ஒருங்கிணைப்புக்  கோட்பாடு"  (Grand Unifi
cation Theory) என்பது   பௌதீக விஞ்ஞானிகளுக்கு    மட்டுமல்லாமல்,
உணர்வுள்ள  ஒவ்வொரு  மனிதனுக்கும்  அது  மிக மிக முக்கியமானதாகும்!
ஆனால்,  அவர்கள்  தேடிக்கொண்டிருப்பது  பிரபஞ்சத்தை விளக்கும் வகை
யிலானதொரு  முடிவான இறுதிச்சமன்பாடு அல்லது  கோட்பாட்டைத்தான்!
ஆனால்,   மனிதனாய்ப் பிறந்த  ஒவ்வொருவரும்  தன்னுள்ளே   கண்டடைய
வேண்டியது, உணர்வுப்பரிணாமத்தின் உச்சமான,அனைத்தையும் தன்னில்
ஒருமைப்படுத்திடும் பேருணர்வு என்பதையே ஆகும்!

ஒருமையும்  முழுமையுமான தொரு  மெய்ம்மை  வெடித்ததில் தோன்றியது
தான்   இப்பிரபஞ்சம்!    ஆம்,    எந்த    ஒருமையின்  மறைவில்  இப்பிரபஞ்சம்
தோன்றியதோ,   அந்த   ஒருமையைக் கட்டமைப்பதே   பிரபஞ்சப் பரிணாம
இயக்கத்தின்   இலக்கு  ஆகும்!   அந்த  ஒப்பற்ற  இலக்கை   அடைவதற்கான
உணர்வுப்     பூர்வமான    பரிணாமப்   பிரதிநிதிகள் தான்      மனித ஜீவிகள்!
உண்மையில்,   பரிணாமம்  என்பது  அணுத்துகள்களின் சுய-அமைப்பாக்க
வழிமுறையின்  (Self-Organization)மூலமாக  மகத்தான ஒருங்கிணை
வை (Grand Unification)அடைவதற்கான ஒரு வழிமுறையே ஆகும்!

பரிணாமம்  என்பது, தனித்தனியே சிதறுண்ட நிலையில் தாறுமாறாக ஒன்
றோடொன்று    முட்டி மோதிக் கொண்டு  திரியும்     அணுத்துகள்களை சுய-
அமைப்பாக்கத்திற்கு  (Self-Organization)உட்படுத்துவதும்;  அவற்றை
தனி-மையப்படுத்துவதும்     (individualization), ஒருங்கிணைவிற்கு (Unification) உட்படுத்துவதுமான வழிமுறையே ஆகும்;   இவ்வழியாக,
அதாவது,   பரிணாமத்தின் இலக்காக,   இறுதியாகச் சாதிக்கப்படவிருப்பது,
ஆதியில்  தன்னைத்தானே  சுய-மறைவுக்கு (Self-Disappearance) உட்
படுத்திக்கொண்ட   அந்த  மகா-ஒருமை   எனும் பேருணர்வே யாகும்!   இந்த
இலக்கைச்   சாதிக்கும்  பொருட்டுத்தான்  அணுத்துகள்கள்  உயிர்-ஜீவியாக
அவதாரம் எடுத்தன! உயிர்ஜீவிகளின் வழியாகப் பரிணமித்து சுய-உணர்வு
கொண்ட மனிதஜீவிகளாகவும் அவதாரம் எடுத்தன!

உயிர்ஜீவி  என்பது அணுத்துகள்களின் சிக்கலான ஒருங்கிணைப்பு அல்லது
கட்டமைப்பின் உச்சியில்எழுந்த, தனி-மையப்பட்ட ஒரு தனிப்பண்பு ஆகும்!
A Living Organism is discrete particles of matter unified
and individualized!பிரபஞ்சப்பரிணாம வழிமுறையில் ஒரு கட்டத்தில்
உயிர்-ஜீவிகள் தோன்றியதும்,அதற்கடுத்தக் கட்டத்தில் உணர்வுள்ள மனித
ஜீவிகள்  தோன்றியதும்  தவிர்க்கவியலாத கட்டாய நிகழ்வுகள் ஆகும்!    பல
விஞ்ஞானிகளும்,    உயிரியலாளர்களும்,    குறிப்பாக    டார்வினிஸ்டுகளும்,
நியோ-டார்வினிஸ்டுகளும்   கருதுவது போல,    'சம்பவிக்கும் சாத்தியமற்ற'
(Improbable-Events)நிகழ்வுகளோ,விபத்துபோன்றநிகழ்வுகளோ அல்ல!

மனிதன்  என்பவன்,  உயிர் இருப்பையும்,   அணுத்துகள்களின் ஒன்றிணப்பு
மற்றும்   தனி-மையப்பட்ட தன்மையையும்   உணர்ந்த   உணர்வு     ஆவான்!
A human being is a living entity became conscious of
matter's unification and individualization in his conscious
ness!

இறுதி மெய்ம்மை, உண்மை, முழுமை, முக்தி, மோட்சம், வீடுபேறு, ஓமேகா-
புள்ளி (Omega-Point),பிரபஞ்சப் பேருணர்வு(Cosmic Consciousness),
மற்றும்,    கடவுள்   என்றேல்லாம்  பல்வேறு    பெயர்களில்   குறிப்பிடப்படும்
பரிணாமஇலக்கு என்பது,ஒவ்வொரு மனிதஜீவியும் தான் ஒரு உணர்வுதான்
என்பதையுணர்ந்து, உணர்வில் பெருகியுயர்ந்து அடையக்கூடிய, அடைந்தே
யாகவேண்டிய இறுதிப்பேருணர்வே ஆகும்!

"இறுதி மெய்ம்மை"   அல்லது   "உண்மை"    பற்றிய  ஒரு மிக முக்கிய விசேட
விபரம்  என்னவெனில்,  அனைத்தின் சாரமான உண்மை  என்பது முடிவான
ஒருமையாகும்!     அதாவது,     அனைத்தையும்   ஒருங்கிணைத்து    தன்னில்
ஒருமைப்படுத்தி   உள்ளடக்கிடும்   அந்த  மெய்ம்மை என்பது  உண்மையில்
இறுதியானதும்,  முடிவானதுமாகும்! அதாவது,  உலகம், மனிதன், வாழ்க்கை,
என  அனைத்தையும்  முடிவிற்குக் கொண்டுவந்திடும் ஒன்றாகும்! உண்மை
என்பது சற்று விபரீதமானதே எனலாம்; குறிப்பாக, இந்தக்கரையைப்பற்றிக்
கொண்டு பாதுகாப்பாக,  அற்பசொற்ப  இன்பங்களைத்  துய்த்துக்கொண்டு
வாழாமல்   வாழ விரும்புகிறவர்களுக்கு  இறுதிக்கரை  போன்ற  "உண்மை"
விபரீதமாய்த்தான் தெரியும்;   அதாவது,  இந்தக்கரையின் விபரீதப்பரிசான
மரணத்தைச் சந்திக்கும்வரை!

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை,   அவர்கள்,   இத்தகைய இறுதி உண்மை
யையோ,  அனைத்தையும்  முடிவுறச்செய்யும்    முழுமையையோ   முயன்று
தேடவில்லை;   மாறாக,  பிரபஞ்ச  இருப்பை விளக்கக்கூடிய ஒரு இறுதியான
ஒற்றைச் சமன்பாட்டையே தேடிவருகின்றனர்!

சமயபூர்வமானவர்கள் (Religious People)எனக்கருதிக்கொள்பவர்கள்,
கடவுள் நம்பிக்கையாளர்,      ஆத்திகர்    எனப்படுபவர்களும்   உண்மையை
அதாவது உண்மையான கடவுளைத் தேடுவதில்லை!  மாறாக,  வெறும் ஆறு
தலையும், சுலப -அருளையும்(Easy Grace)தான் தேடுகிறார்கள்! அவர்கள்
கடவுளுக்காகத்  தம்மை இழக்கத் தயாராயில்லை! ஆத்திகர்கள் என்பவர்க
ளும் ஒருவகை நாத்திகரக்ளே!ஆம், கடவுள் எனும் மெய்ம்மையை நேரே தம்
உணர்வின் உச்சத்திற்கு உயர்ந்து அனுபவம்கொள்ளாத,தரிசிக்காத எவரும்
நாத்திகரே!

ஆக,  நம்முடைய  உண்மையான  பிரச்சினை  அனைத்தையும்  அறிவதல்ல;
மாறாக,  அனைத்திற்கும்   சாரமான உண்மையை அறிவது மட்டுமே!  இதை
விடுத்து,   'காலம்'  என்பது  நிஜமா, மாயையா?    'வெளி' (Space)எவ்வளவு    
விரிவானது? இருப்பது இந்த ஒருபிரபஞ்சம் மட்டும்தானா அல்லது வேறு பல
பிரபஞ்சங்கள்  இருக்கின்றனவா?   காலத்தில் பின்னோக்கிச் செல்வது சாத்
தியமா? வேற்றுகிரக வாசிகள் உள்ளனரா? ஏன் ஒன்றுமில்லாத நிலையைத்
தவிர்த்து  ஏதோவொன்று(உலகம்) உள்ளது?  என்பன போன்ற கேள்விகளும்,
ஆராய்ச்சிகளும் நம் கவனத்தைச்சிதறடிக்கும்,கோளாறான ஆர்வம்சார்ந்த
மேலோட்டமான விஷயங்களேயாகும்! ஆகவே, இவை போன்ற அனைத்துக்
கேள்விகளையும், அற்ப மர்மங்களையும் கோளாறானஆர்வத்தின் விஷயங்
களையும்  வடிகட்டித் தவிர்த்து விலக்கிவிட்டு மையமான அம்சம் எதுவென
கண்டுபிடித்து  அதை மட்டுமே  நாடிடவேண்டும்!  அப்போதுதான்,   நாம் நம்
வாழ்-காலத்திற்குள் உண்மையை,  மெய்ம்மையை உணர்ந்து இறுதிக்கரை
ஏறிடமுடியும்!   ஆம்,   மிகவும்  அளவிற்குட்பட்ட,  கச்சிதமான,   நூறு ஆண்டு
களுக்கும்   குறைவான   மனித வாழ்-காலத்திற்குள்   பதில்  கண்டடைந்திட
வேண்டிய ஒரே சீரிய கேள்வி,  "உலகம்,   இருப்பு,  வாழ்க்கை,   மனிதன்  என  
அனைத்தையும்      உள்ளடக்கிய     இந்த    ஒட்டு மொத்தத்தின்     "அர்த்தம்"       என்ன?" என்பது மட்டுமே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 10.12.2016
----------------------------------------------------------------------------



Tuesday, 6 December 2016

தந்தகோபுரத்தின் உச்சியில் ஒரு சாய்வு நாற்காலி!





அந்த தந்தகோபுரத்தை கட்டியெழுப்பியவன் நான் தான்!
அதன் உச்சியில் உள்ள சாய்வு நாற்காலி என்னுடையதே!
அதில் அமர்ந்துகொண்டு சிந்திப்பவனும் நான் தான்!
என் பெயர் மா.கணேசன்! நான் தத்துவம் பற்றி பேசுகிறேன்
ஆனால், நான் தத்துவவாதியல்ல!
நான் விஞ்ஞானம் பற்றி பேசுகிறேன்,ஆனால் நான்
விஞ்ஞானி அல்ல! ஆனால், வாழ்க்கை பற்றிய ஆழமான
விசாரம்தான் தத்துவம் என்றால் நானும் ஒரு
தத்துவச் சிந்தனையாளனே!

<•>

இக்கட்டுரை தத்துவத்தைப்பற்றியும், விஞ்ஞானத்தைப்பற்றியும், அவற்றுக்
கிடையேயான  பிணக்குகள்,  வித்தியாசங்கள் பற்றியும்  பேசினாலும்,  அது
பிரதானமாக,  மனிதனைப்பற்றியதும்,  அவனது  உண்மையைப்பற்றியதும்,
அவனது     வாழ்க்கையின்     உண்மையைப் பற்றியதும்,    அவ்வுண்மையை
அடைவதன் அவசியம் பற்றியதுமே ஆகும்!

•மனிதனின் தலையாய பிரச்ச்சினை "வாழ்க்கை என்றால் என்ன, அதன்
  அர்த்தம் என்ன; வாழ்க்கையின் அசலான குறிக்கோள் அல்லது இலக்கு
  என்ன?" என்பதை அறிவதேயாகும்!

•மனிதனின் தலையாய பிரச்சினை "தான் யார் அல்லது எத்தகைய நிஜம்?"
  என்பதை அறிவதேயாகும்!

•மனிதனின் தலையாய பிரச்சினை "உலகம் அல்லது பிரபஞ்சம் என்பது
  என்ன; அதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புறவு என்ன?" என்பதை
  அறிவதேயாகும்!

•மனிதனின் தலையாய பிரச்சினை "இறுதி மெய்ம்மை அல்லது உண்மை
  எத்தகையது என்பதை உணர்ந்தறிவதே!

மேலே, மனிதனின் தலையாயபிரச்சினை என ஒன்றன்கீழ் ஒன்றாக நான்கு
பிரச்சினைகள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை முதலாவது,இரண்டாவது என
எண்கள் குறிக்கப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளன.  ஏனெனில்,  அவை உண்
மையில்,  நான்கு  தனித்தனிப் பிரச்சினைகள் அல்ல!   மாறாக,  அவை  ஒரே
பிரச்சினையின் நான்கு முகங்கள் அல்லது பக்கங்கள் ஆகும்!

தத்துவம்  என்றாலே மண்டையைப்பிளக்கும் தர்க்கமுறை என்பது தவறான
புரிதலின் கோட்பாடு ஆகும்!வாழ்க்கையைப்புரிந்துகொள்வது அதிமுக்கிய
மானது;    ஏனெனில்,  வாழ்க்கையை,   அதன்  அர்த்தம்,  உண்மை, நோக்கம்,
குறிக்கோள்,    இலக்கு      ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாமல்,   வெறுமனே
உயிர்-பிழைத்துச் செல்வது என்பது மனிதஜீவிக்கு அழகல்ல!  இதுதான் என்
னுடைய "அழகியல்" ஆகும்!

"வாழ்க்கை"  என்பதுதான்  "முழுமை"!  வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும்
அனைத்தையும் புரிந்துகொள்வது என்பதும் ஒன்றே!  வாழ்க்கை என்பது புற
உலகமான பிரபஞ்சம்,    அகஉலகமான மனிதன், மற்றும், அவனது அன்றாட
உயிர்-வாழ்தல்    என   அனைத்தையும்   உள்ளடக்கியதும்,   அனைத்தையும்
கடந்ததும் ஆகும்.

புறவுலகமான பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது அவசியமே; ஆனால், மனி
தனைப் புரிந்துகொள்ளாமல் பிரபஞ்சத்தைமட்டும் தனியே புரிந்துகொள்ள
வியலாது!   ஏனெனில்,   மனிதன்  என்பவன்  பிரபஞ்சத்தின்   உயர்-வளர்ச்சி
நிலையாவான்!     மேலும்,    மனிதனின்    அறிதலுக்கும்,    அனுபவத்திற்கும்
வெளியே,      ஆயிரமாயிரம்   பிரபஞ்சங்கள்  (Multiverse)  இருந்தாலும்  
ஒன்றுதான்;   இல்லாவிட்டாலும்  ஒன்றுதான்!  ஆம்,  மனிதன்  இல்லாமல் பிர
பஞ்சம் இல்லை!    அட,   மனித இனம்  தோன்றியது  மிகச் சமீபத்தில் தானே
எனலாம்!   ஆனால்,  என்னசெய்வது?  மரம் பெரிதாகவளர்ந்தாலும்,  உடனே
பூத்துப் பிஞ்சுகள்விட்டு,பிஞ்சுகள்காய்களாகி, காய்கள்முற்றிக்கனிகளைக்
கொடுப்பதில்லையே!      மனிதன்     இல்லையேல்    பிரபஞ்சத்திற்கு  அர்த்த
மில்லை! காய்க்காத, கனி கொடாத மலட்டுமரத்தைப்போல!

பிரபஞ்சத்தைப்புரிந்து கொண்டாலும், மனிதன் தன்னைப்புரிந்துகொள்ளா
விடில் என்னபயன்? ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும்,அதிலுள்ள எதுவொன்
றையும்விட மனிதனே முக்கியமானவன்! ஏனெனில்,பிரபஞ்ச-நோக்கத்தின்
நிறைவேற்றம்    மனிதனின்    வழியாகவே     நிகழவேண்டியுள்ளது!    இதன்
அர்த்தம்,மனிதன் இறுதியானவனோ, முழுமையானவனோ அல்ல என்பதே!
முழுமைக்கு,   கடக்க   இன்னும்  ஒரு படி உள்ளது! மனிதர்கள் பெரும்பாலும்
தம்  உணர்வில்  பிஞ்சுகளாகவே  உள்ளனர்!    கொஞ்சம் பேர்  பச்சைக் காய்
களாகவே உள்ளனர்!   ஒட்டுமொத்தத்தில்  ஓரிருவர் மட்டுமே நன்கு முற்றிக்
கனிகளாகிறார்கள்!  கனியாவது தான் முழுமை,  அதுவே மெய்ம்மை நிலை
அடைதல் என்பதும்! தத்துவம் என்பது முழுக்கமுழுக்க மெய்ம்மையை அறி
வதும், மெய்ம்மை நிலையடைவதையும் பற்றியதே!

தத்துவம்  என்பது  அடிப்படையில்    தனிமனிதனைக்  குறித்தது!    தனிமனி
தனின் உணர்வைக் களமாகக்  கொண்டது!  தத்துவச் சிந்தனை  நிகழ்த்தப்
படும்  இடம் மனிதனின் அகமே, உணர்வேயாகும்!  சிந்திக்கும் மனிதன் தன்
வாழ்தலை நிகழ்த்தக்கூடிய இடமும் அகமே! மனிதன் தன் உயிர்வாழ்தலுக்
குரிய பொருட்களை மட்டுமே புறத்தேயிருந்து பெறுகிறான்,மற்றபடி அவன்
உண்மையில் வாழ்வது தன் அகத்தில்தான்! பொதுவாக  மனிதர்கள் ஆழமா
கச்சிந்திப்பதை தேவையில்லாத, வேண்டாத வேலை எனக்கருதுகிறார்கள்!
ஆனால்,  "ஆராய்ந்தறியப்படாத வாழ்க்கை  வாழத்தகுதியற்றது" என்பதாக
2,400 ஆண்டுகளுக்கு முன்னர்   தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூறியுள்ளார்.  நாம்
அனைவருமே சிந்திக்கிறோம்;  ஆனால்,  உயிர்வாழ்தலைப்பற்றியும், பொரு
ளாதாரத்தில் எவ்வாறு முன்னேறுவது,  சமூகத்தில் எவ்வாறு பிறரை முந்திச்
செல்வது ஆகியவை பற்றியும்தான் சிந்திக்கிறோமேதவிர வாழ்க்கை பற்றி
நாம் சிந்திப்பதில்லை! அதாவது,   மையத்தை விட்டுவிட்டு,  ஓரங்களிலுள்ள
விஷயங்களையே சிந்திக்கிறோம்!

ஒருவகையில், "ஆராய்ந்தறியப்படாதவாழ்க்கை வாழத்தகுதியற்றது" என்ற
கூற்று பொருத்தமற்றது எனலாம்!  எவ்வாறெனில், விலங்கு ஜீவிகள்  எதுவும்
தம்  வாழ்க்கை குறித்து ஆராய்வதில்லை  என்பதால் அவை வாழ்வதில்லை,
அவற்றிற்கு  வாழ்க்கையே  இல்லை என்று சொல்லிவிட முடியுமா?  ஆனால்,
மனிதனைப்பொறுத்தவரை  அவன் தன் வாழ்க்கை குறித்து பிரத்யேகமாக
ஆராயவில்லை எனில், அவன் வாழ்தில்லை, அவனது வாழ்க்கை  விலங்கை
ஒத்தது என்று சொல்லிவிடலாம்! முதலிடத்தில், வாழ்க்கை குறித்து சிந்திப்ப
தென்பது, வேண்டாத வேலையோ, அதிகப்படியான விஷயமோ அல்ல. பிரத்
யேகமாக வாழ்க்கை குறித்து  நாம் சிந்திப்பதேயில்லையென்றால்,யோசித்
துப்பாருங்கள்  நாம் வேறு என்ன செய்துகொண்டிருப்போம்?  எலிகளும் தவ
ளைகளும்  என்ன செய்துகொண்டிருக்குமோ  அதைத்தான்  நாமும்  செய்து
கொண்டிருப்போம், அதிகநேர்த்தியுடன்! பொதுவாக, வாழ்க்கை குறித்த நம்
புரிதல்  என்னவெனில்,   உயிர்-வாழ்தல்  என்பது அடிப்படை;   அதில்,அதிகச் சௌகரியமாக,சொகுசாக,ஆடம்பரமாக உயிர்வாழ்தல் என்பதே வாழ்க்கை
யின்   ஒரே ஒப்பற்ற இலக்கு!    இவ்விஷயம்கூட  நாம்  தெளிவாகச் சிந்தித்து
உணர்ந்திட்ட ஒன்றல்ல! மாறாக, இது ஒருவகையில் நம்மையறியாமலேயே
முன்-தேர்வு செய்யப்பட்டதாக (Default) தானியங்கித்தனமாகக் கடைப்
பிடிக்கப்படும் கொள்கையாகும்!

ஆனால்,  அசலான  மனிதவாழ்க்கை என்பது,  "வாழ்க்கை  என்றால் என்ன?"
எனும் கேள்வியுடன்தொடரும் இடையறா விசாரத்துடன் மட்டுமே தொடங்கு
கிறது; அதற்கு முன் ஒருபோதும் இல்லை! மிகவும் முக்கியமான ஒரு  அம்சம்
என்னவெனில், இருப்பை நீங்கள் உணர்ந்ததன் அடையாளம் கேள்விகளும்,
அதைத்  தொடர்ந்து   நீங்கள்    மேற்கொள்ளும்   விசாரமும்தான்!    விசாரம்,
அல்லது சிந்தனை, சிந்தித்தல் என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்
கொள்ளும் பலவிதசெயல்பாடுகளில் ஒன்றுஅல்ல! மாறாக, சிந்தித்தல்தான்
மையமானது! அதாவது சிந்தித்தல்தான் வாழ்தல்! வாழ்க்கையின் அர்த்தம்
பற்றிய பிரத்யேக விசாரம்தான் அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம்!

வாழ்க்கை  தனிமனிதனின்  வழியாகத்தான் தன்னைப் பூரணமாக வெளிப்
படுத்துவதாயுள்ளது!   கும்பல்   வழியாக  வாழ்க்கை   வெளிப்படுவதில்லை!
கும்பலானது மிகஎளிதாக அதன் உறுப்பினர்களின் கவனத்தைச்சிதறடித்து
விடக்கூடியது. மாட்டுமந்தைக்கும்  சிந்தனைவயப்பட்ட தியான நிலைக்கும்
வெகுதூரம்!     மேலும்,    சமூகத்தில்   கவனத்தைக் கவர்ந்து   செல்லக்கூடிய
ஆயிரத்தெட்டு  விஷயங்கள், பொருட்கள்  உள்ளன! அத்தனையும் மேலோட்
டமான, மட்டுப்பாடான அம்சங்களே! வாழ்க்கை,  அசலான வாழ்க்கை, மேற்
புறத்தே   காணப்படக்கூடியதல்ல!   மேற்புறத்தில் காணப்படும்   வாழ்க்கை
உணர்வில்லாத   ஜீவிகளுக்குரியது!     உணர்வில்லாமல்    மனித வாழ்க்கை
இல்லை; ஏனெனில் உணர்வுதான் வாழ்க்கை!

தன்னையறியாத,    உணர்விருந்தும்  உணர்வுக்கு  விழிக்காத மனிதர்களின்
கூட்டம்    எதற்குப் பயன்படும்?    அதனிடம்   அறம்   எவ்வாறு     துளிர்க்கும்?
தத்துவம்என்றாலே அறவியல்பிரச்சினைகள்தான் என்பதுதவறு! ஏனெனில்,
வாழ்க்கை   என்பது  அறவியல் பிரச்சினையல்ல;  மாறாக, விழிப்படைவதற்
கான  திறந்திருக்கும்  வாய்ப்பு  ஆகும்!   மேலும்,  வாழ்க்கை  என்பது  பொது
வானது மட்டுமல்ல,  அது  பெரிதும்  தனிமனிதபூர்வமானதாகும்!   அதாவது,
அறம்   என்பது   சமூகம் சார்ந்தது,   சமூகம் தொடர்பானது   என்றால்,    அது
எனக்குப்பொருந்தாது!     ஏனெனில்,  என்னுடன்  வினைபுரிவதற்கே எனக்கு
நிறைய  விஷயங்கள்  இருக்கும்போது,    சமூகத்தினருடன்    எனக்கு  என்ன
வேலை?  ஆனால், அறம் சமூகத்தில் வாழும்போது மட்டும்தான் தேவையா?
இல்லை,   காட்டில் வாழ்ந்தாலும்   தேவையே  என்பது தான் என் கொள்கை!
ஆம்,  அறம் அல்லது விழிப்பு என்பது நாட்டில் வாழ்ந்தாலும், காட்டில் வாழ்ந்
தாலும்; அல்லது வேற்றுகிரகத்தில் வாழ்ந்தாலும் தேவையே! அறம், விழிப்பு
இரண்டும் ஒன்றே!   விழிப்புதான்  அறத்தின் சாரம்;   விழிப்பு   இல்லையேல்
அறம்  இல்லை! அறம்  என்பது விழிப்படைந்த தனிமனிதனின் வழியாகவே
சமூகத்திற்குள் வெளிப்படுகிறது!  என்னைப்பொறுத்தவரை,  சமூகம், நாடு
என்பதும் ஒருவகைக் காடே!

தத்துவம்   என்பது   உணர்வைப் பெருக்கும்,    உணர்வைக்   கட்டியெழுப்பும்
செயல்பாடாகும்.   அது   தனிமனிதனின்   உணர்வை  உயர்ந்தோங்கச் செய்
கிறது.  தத்துவம் அடிப்படையிலேயே தனிமனிதபூர்வமானது,     அது கும்பல்
தழுவிய நிகழ்வுமுறையன்று; அதற்கு கும்பலைத் தெரியாது!  இன்னும் தனி
மனிதனின்  விஷயத்திலும்கூட   அவனது   உடல்-சுயத்தை    அது  அறியாது;
மாறாக  அது மனிதனின் அகச்சுயத்துடன், உணர்வின் தளத்துடன் மட்டுமே
பொருந்தும்!

மனிதன்  என்பவன் மிகத்துல்லியமாக அவனது உடலிலிருந்து வேறானவன்!
மனித உடல்  சடப்பொருளின் சாயலைக்கொண்டது!   பௌதீக விஞ்ஞானம்
சடத்தை    மட்டுமே   விளக்கும்!   உயிரியல் விஞ்ஞானம்   வெறும் உயிருள்ள
உடல்களான விலங்குஜீவிகளை மட்டுமே விளக்கும்!

பௌதீகம் மனிதனை முழுமையாக விளக்காது, வெளிப்படுத்தாது; அதற்கு
பௌதீகம் கடந்த "மீபௌதீகம்" (Metaphysics) வேண்டும்! மனிதன் என்
பவன் பாதி பௌதீக  அம்சத்தினாலும், இன்னொரு பாதி மீபௌதீக அம்சத்
தினாலும்  ஆனவன்!   உணர்வு தான்   அந்த   மீபௌதீக   அம்சம்!    மனிதன்
அவனது  உடலிலிருந்து வேறானவன் என்றால்,  பின் எதுதான் மனிதன்? இக்
கேள்வியை எது கேட்கிறதோ அதுதான் மனிதன்!ஆம், உணர்வுதான் நீங்கள்,
உணர்வுதான் மனிதன்!

தத்துவம் என்பது முழுக்க முழுக்க மீபௌதீகம் (Metaphysics)பற்றியதே.
தத்துவத்தின் பணி, 'பிரபஞ்சம் எவ்வாறுதோன்றியது', 'எதனால் ஆனது' என
பௌதீக  ரீதியான    விபர   உண்மைகளைக்  கண்டறிவதல்ல!  இவைகளை
ஆராய்ந்து  கண்டறிவது  விஞ்ஞானத்தின் வேலையாகும்!   மாறாக,  உலகம்,
பிரபஞ்சம் ஏன்,  என்ன  நோக்கத்திற்காகத்  தோன்றியது?   அதில்  நாம்  ஏன்
தோன்றினோம்?   பிரபஞ்சத்திற்கும்   நமக்கும்   உள்ள தொடர்புறவு  என்ன?
மனித வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள், இலக்கு என்ன?  என்பன
போன்ற பௌதீகம் கடந்த கேள்விகளுக்கான பதில்களைக்கண்டுபிடிப்பது
என்பதே  தத்துவத்தின்  தலையாய பணியாகும்!  இப்பணியைச் செவ்வனே
செய்திட   பெரிய ஆய்வுக்கூடங்களோ,   துகள்-முடுக்கிகளோ  (Particle-
Accelerators),பெரிய தொலை நோக்கிகளோ, சிக்கலான பரிசோதனை
களோ,எதுவும் தேவையில்லை! மாறாக, கூருணர்வும், தெளிவான சிந்தனை
யும், சௌகரியமாக அமர்ந்து சிந்திப்பதற்கு  கை நாற்காலி அல்லது  சாய்வு
நாற்காலியே போதும்!

தத்துவத்திற்கு  எதிராக  விஞ்ஞானிகள் பலர் பேசியும், எழுதியும் வருகிறார்
கள்  அவர்களில்  குறிப்பாக பௌதீக விஞ்ஞானிகளான  ஸ்டீவென் வெய்ன்
பெர்க்(Steven Weinberg),ஸ்டீஃபென் ஹாக்கிங்க் ( Stephen Hawking),
லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss),மற்றும் உயிரியல் விஞ்ஞானியான
எட்வர்டு ஓ. வில்சன் (Edward O.Wilson) ஆகியோர்   ஆவர்.    பொதுவாக
இவர்கள்  கூறுகின்ற  குற்றச்சாட்டு என்னவெனில்,  'கைநாற்காலி -  தத்துவ
ஆராய்ச்சி'களால் ஒரு பயனும் இல்லை என்பதே! ஆனால், அதேவேளையில்,
பல  நோபல் பரிசுகள்  கோட்பாட்டியல்  பௌதீக  விஞ்ஞானிகளுக்குத்தான்
(Theoretical Physicists) வழங்கப்பட்டுள்ளன!      அவர்களது    புதிய
கோட்பாடுகள்,   பெரிதும்   ஏற்கனவே  திரட்டப்பட்ட   தரவுகளைக்கொண்டு
கணிதத்தின்     ஆற்றலைப்    பயன்படுத்தி     தங்களது    கை நாற்காலியில்
உட்கார்ந்தபடியே,   எந்தவொரு  ஆய்வுக்கூடம்   பக்கமும்  ஒதுங்காமலேயே
உருவாக்கப்பட்டவையே!   ஆக,    கண்-கவனிப்பு,  கடினமான பரிசோதனை
கள்  எதுவுமின்றி    கைநாற்காலியில்   அமர்ந்த  நிலையிலேயே விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகள்  சாத்தியமாகும்போது  தத்துவக்கண்டுபிடிப்புகள் மட்டும்
ஏன் சாத்தியமாகாது?

பௌதீகம்  எங்கு  முடிவடைகிறதோ, அங்கு  மீபௌதீகம் தொடங்குவதாகச்
சொல்லப்படுவது  தலைகீழ் பார்வையாகும்.  ஒருவேளை,  பௌதீக விஞ்ஞா
னத்தால்  முக்கியமான  அடிப்படைக் கேள்விகளுக்குப்பதில்  கண்டுபிடிக்க
முடியாமல்   போகும்  கையறு   நிலையில்,  கடைசியாக,   பௌதீகம்  கடந்த
மீபௌதீகம்,  அதாவது,  தத்துவம் தான் கைகொடுக்கும் என்ற அர்த்தத்தில்
அவ்வாறு  சொல்லியிருக்கலாம்!      ஆனால்,    உண்மை   என்ன       வெனில்,
மீபௌதீகம்  அல்லது  மெய்யியல் என்பது  பௌதீக விஞ்ஞானம் தொடங்கு
வதற்கு முன்னே தொடங்கிவிட்ட ஒன்றாகும்.   பிரபஞ்சம்,  மனிதன்,   மனம்,
அல்லது   உணர்வு,   வாழ்க்கையின்  அர்த்தம்  மற்றும்  குறிக்கோள்  பற்றிய
அனைத்து  அடிப்படையான முக்கியமான கேள்விகளையும் முதன் முதலில்
எழுப்பியது  தத்துவம்தான்!  விஞ்ஞானம்  பேசக் கற்றுக் கொள்வதற்கு முன்
னேயே, தத்துவம் வெகு சிறப்பாக  சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தது!

முதலிடத்தில், தத்துவமோ,அல்லது விஞ்ஞானமோ, நமக்கு அவை எதற்காக
வேண்டும்?கைநாற்காலியிலோ,அல்லது சாய்வுநாற்காலியிலோ சௌகரிய
மாக அமர்ந்துகொண்டு தத்துவபூர்வமாகச் சிந்தித்துதான் எதைச்சாதிக்கப்
போகிறோம்?    அல்லது,  பெரும் பணச்செலவுடன்  பெரிய  பெரிய   ஆய்வுக்
கூடங்கள்  அமைத்து,  பலவித பரிசோதனைகளைச் செய்து   முடிவில்  எதை
நாம்  புரிந்து  கொள்ளப்போகிறோம்?   இதுவரை  என்ன   பெரிதாகப் புரிந்து
கொண்டுள்ளோம்? எழுபது, எண்பது, தொன்னூறு , அதிகபட்சம் ஒரு 100 வரு
டங்களை மட்டுமே வாழ்-காலமாகக்  கொண்ட இந்த மானுட வாழ்க்கையில்
எவற்றைப்   புரிந்துகொள்வது,   எவற்றைப்  புரிந்துகொள்ளாமல்  விட்டுவிடு
வது? முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியவை எவையெவை? மிகக்
குறுகிய வாழ்-காலத்தில்,  அனைத்தையும் இல்லாவிட்டாலும், முக்கியமான
அம்சங்களை  மட்டுமேனும் முழுமையாகப்புரிந்துகொள்ள உதவும் அறிதல்
முறை எது? தத்துவமா? விஞ்ஞானமா? இவையிரண்டும்தான் நம்முன் உள்ள
பிரதான அறிதல் முறைகளாகும்!

நிச்சயம்,  தனிமனிதஅளவில், விஞ்ஞானம் உதவிடும் என்று சொல்வதற்கிட
மில்லை!   ஏனெனில்,  விஞ்ஞானத்தின் வழிமுறை  மிகவும்   நெடியது!    அது
முடிவேயில்லாமல்   நீண்டு   வளைந்து செல்லும் நிச்சயமற்ற பாதையாகும்!
நேற்றுவரை  முடிவான விஷயமாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஞ்ஞானக்
கோட்பாட்டை ,  இன்று  ஒரு விஞ்ஞானி வந்து தவறென  நிரூபித்துவிடுவார்!
அக்கோட்பாட்டிற்குப்பதிலாகவோ, அல்லது அதன் செழுமைப்படுத்தப்பட்ட
வடிவமாகவோ,இவர் முன்வைத்த புதியகோட்பாட்டை,நாளை வேறொருவர்
வந்து தவறெனச் சொல்லிடுவார்!  அப்படித்தான்   நியூட்டன்    கண்டுபிடித்த
எந்திர விதிகளை விஞ்சியதாக ஐன்ஸ்டீன் தனது சார்பியல் கோட்பாட்டைக்
கொண்டுவந்தார் -  அதை   ஒரு நூற்றாண்டுக்கும்  மேலாக  இன்னும் ஆய்வு
செய்துகொண்டே இருக்கிறார்கள்!

விஞ்ஞானத்தைப் பற்றிய  ஒரு  முக்கிய  உண்மை  என்னவென்றால்,  அதன்
வழியாகப்பெறக்கூடிய அறிவனைத்தும், தொழில் நுட்பத்தின் வழியாக பல
வித பொருட்களாக, சாதனங்களாக, கருவிகளாக மாற்றப்பட்டு மனிதனின்
நடைமுறை  வாழ்க்கைக்கு  மட்டுமே  உதவுமேதவிர,   வாழ்க்கையின்   சார
மான  உட்பொருளை  (அர்த்தத்தை)  அறிய  விஞ்ஞானம்  சிறிதும்  உதவுவது
இல்லை!    இதுவரையிலும்  அது  மனித வாழ்க்கையின் அர்த்தம் பற்றியோ,
குறிக்கோள்,  இலக்கு பற்றியோ உருப்படியாக எதையும் கண்டறிந்து சொன்
னது இல்லை!   மாறாக,  அது உலகைப்பற்றியும்,  மனிதன்  மற்றும்  அவனது
வாழ்க்கை  பற்றியும்   மிகவும்  எதிர்மறையான  முடிவுகளையே  அறிவித்து
உள்ளன.அதாவது, "பிரபஞ்சம் அர்த்தமற்றது, குறிக்கோளற்றது! பரிணாமம்
குறிக்கோளற்றது,  மற்றும்  அது ஒரு  குருட்டு நிகழ்வுமுறை!  மனிதன் என்ப
வன்  பல   விலங்கினங்களில்  ஒரு விலங்கினம்!   (மனித)  வாழ்க்கை  குறிக்
கோளற்றது, மற்றும் அர்த்தமற்றது!"   இவைதான் விஞ்ஞானம் வெளிப்படுத்
திய  பேருண்மைகள்! <இதைப்பற்றிய விரிவான விளக்கங்களுக்கு காண்க:
"அபத்தமான ஐந்து விஞ்ஞானப்பேருண்மைகள்!"
@ vicharamarg.blogspot.in

விஞ்ஞானத்தைப்   பொறுத்தவரை  ஒருபோதும்  அதனால்  எதைப்பற்றியும்
முடிவான  உண்மையைக் கண்டறிந்து சொல்ல இயலாது!  துண்டு துண்டாக
அது  பலவற்றைப்பற்றிய விபர உண்மைகளைக்(Facts)கண்டறிந்து சொல்
லக்கூடுமே தவிர, அவ்விபர உண்மைகளை ஒன்றிணைத்து ஒரு முழு -சித்தி
ரத்தை அதனால் அளிக்கஇயலாது!விஞ்ஞானத்தின் பிரதானவெற்றியானது,
இயற்கை,  அதாவது பருப்பொருளாலான உலகம், எவ்வாறு, எத்தகைய விதி
களைக் கொண்டு  செயல்படுகிறது   என்பதை  ஆராய்ந்து  அவ்விதிகளைக்
கண்டுபிடித்திடுவதில் தான் அடங்கியுள்ளது!  அந்த  இயற்கை-விதிகளைக்
கொண்டுதான் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், சாதனைகள் சாத்தியமா
கின்றன!அதேநேரத்தில், இயற்கையின், உலகின் "விதிகளை"க்கண்டுபிடித்
திடுவது  என்பது ஒரு விஷயம்;  அதாவது,  இயற்கை விதிகள்தான் உலகைச்
செலுத்துகின்றன   அல்லது   நிர்வகிக்கின்றன,   இவையெல்லாம்  சரிதான்!
ஆனால்,  அந்த விதிகள்,  ஏன்,  எதற்காக, எந்த நோக்கத்திற்காக, எத்தகைய
உன்னதமான  இலக்கை  அடைவதற்காக  முடுக்கிவிடப்பட்டுள்ளன? இங்கு
நாம் விதிகளைப்பற்றிப்பேசிக்கொண்டிருக்கிறோம்! அதாவது, "எத்தகைய
உயர்-விதிகள்,  அல்லது,  ஒரு ஒற்றைத் தலைமை விதி,  இயற்கைவிதிகளை
முடுக்கிவிட்டன அல்லது உருவாக்கி நிர்வகிக்கின்றன?"  எனும் இந்தக்கேள்
விக்கு  விஞ்ஞானத்திடம்  பதில் இல்லை! ஒருபோதும் அதனிடமிருந்து பதில்
வரப்போவதுமில்லை!

ஆகவேதான்,   முறையான  தத்துவச் சிந்தனையின்  இடத்தை   ஒருபோதும்
விஞ்ஞானத்தால்  இட்டு நிரப்பவோ,  ஈடுசெய்யவோ   இயலாது  என்கிறேன்!
அதே நேரத்தில்,  விஞ்ஞானத்தின் இடத்தை தத்துவத்தைக்கொண்டு நிரப்ப
வேண்டிய   தேவையில்லை!   ஏனெனில்,  அது  தத்துவத்தின் வேலை அல்ல!
பகுதிகளை  ஆராய்ந்தறிவது  விஞ்ஞானத்தின் பணி!    முழுமையை   அதன்
சாரமான ஒருமையில் உணர்ந்தறிவது தத்துவத்தின்பணி! ஆம்,பகுதிகளை
ஆராய்ந்தறியும்   விஞ்ஞானத்தினால்  நமக்குப்  பலப்பல  பயன்கள்  உண்டு!
ஆனால்,  தத்துவத்தினால் மட்டுமே பிறவிப்பயனை அளிக்க இயலும்!  அதே
நேரத்தில், விஞ்ஞானஉண்மைகளை நாம் விஞ்ஞானிகளிடமிருந்து தெரிந்து
கொள்ளலாம், புரிந்தும் கொள்ளலாம்;அல்லது புரிந்துகொள்ளாமலும் போக
லாம்!   ஒரு தொலைக்காட்சிப் பெட்டி  எவ்வாறு செயல்படுகிறது என்பதைப்
புரிந்து  கொள்ளாமலே    அதனுடைய   பயன்களை   நாம்  அனுபவிக்கலாம்!
அதற்கு நாம் எல்லோரும் விஞ்ஞானிகளாக ஆகவேண்டிய அவசியமில்லை!
ஆனால்,  தத்துவ உண்மைகளை நாம் தத்துவ ஞானிகளிடமிருந்து தெரிந்து
கொள்ளலாம்,  அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ளவும் முடியலாம்;  ஆனால்,
அவை நம் ஒவ்வொருவருக்கும் பெரும் ஆர்வத்தூண்டுதலாக(Inspiration)
மட்டுமே  அமைய முடியும்!   ஏனெனில்,    தத்துவ  உண்மைகள், உவமைகள்,
விளக்கங்கள்   வடிவில்   'செய்முறைக்குறிப்புகளாக'  (Recipes) மட்டுமே
வழங்கப்பட முடியும்!    நமக்கான  உண்மையை நாம் ஒவ்வொருவரும் தான்
நேரடியாகச்சிந்தித்து உணர்ந்தறிந்திடவேண்டும்!அதாவது நாம் ஒவ்வொரு
வரும் தத்துவஞானியாக ஆகவேண்டியது தவிர்க்கக்கூடாத அவசியமாகும்!

மேலும், வாழ்க்கை என்பது ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்-காலத்திற்
குள்ளேயே முழுமையாக வாழ்ந்து முடிக்கவேண்டிய ஒன்றாகும். அது எவ்வ
ளவு வருடங்கள் உயிர்-வாழ்கிறோம் எனும் மேலோட்டமான விவகாரமல்ல!
உயிர்-வாழ்தல் என்பது உடலியல்ரீதியானது;அது எல்லா விலங்குஜீவிகளுக்
கும் பொதுவானது. உண்மையான வாழ்தல் என்பது உணர்வுரீதியானது,அது
உணர்வு கொள்ளும் மனிதஜீவிக்கு மட்டுமே உரியது!

உண்மையில், தந்த கோபுரம் என்பது தந்தத்தால் கட்டியெழுப்பப்பட்டதல்ல!
அது  மனிதனின்  உணர்வைக்குறிக்கிறது.  தத்துவம்   சாய்வு நாற்காலியில்        
சௌகரியமாக    அமர்ந்து   கொண்டிருக்கும் போது மட்டுமே   நிகழக்கூடிய
தல்ல!  மனிதனின் உணர்வே  தத்துவம்  நிகழும் தளம்;  ஆக,  ஒருவர் நின்று
கொண்டிருக்கும்போதும், அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும்போதும்,
சந்தடி  நிறைந்த  சூழலிலும்,   அமைதியான  சூழலிலும்,  இன்னும் உறங்கும்
போதும்கூட  தத்துவம்  நிகழும்!  எனினும்,   அமைதியான சூழலும்,   ஆய்ந்து
சலித்தபின்  ஓய்வாக அமர்தலும் தத்துவத்திற்கு மிகவும் உகந்ததாய் அமை
யும்; அதற்கு சாய்வுநாற்காலி உதவுமெனில், தத்துவம் தடையின்றி நிகழும்!

"தந்த கோபுரம்"(IvoryTower)என்பது  ஒருவர் நிஜஉலகின் நடைமுறைகள்
மற்றும்  உண்மைகளிலிருந்து ஒதுங்கி சாதகமாகத் தனிமையை அனுபவிக்      
கும்   நிலையென  எதிர்மறையாகக் குறிக்கும்  ஒரு சொற்சேர்க்கை யாகும்!
ஆனால்,நிஜஉலகம் என்பது எவ்வளவு நிஜமானது?உலகம் என்பது உறைந்து
நிற்கும்  நிலக்காட்சி (Static Landscape)அல்ல!  அது பாய்ந்தோடும் நதி
யைப் போன்ற  இயக்கமாகும்;  அது  முடிவாக  எத்தகைய  இலக்கு நோக்கிச்
செல்கிறது என்பதை,  இதுவரை  அது  படிப்படியாக  எத்தகைய நிலை  மாற்
றங்களைக் கடந்து வந்துள்ளது என்பதிலிருந்து உய்த்துணர்ந்து கண்டுபிடிக்
காமல், இனி விஞ்ஞானம் ஓரடிகூட முன்னோக்கிச் செல்லவியலாது! உலகம்
என்பது முடிவான நிஜமோ,  ஒரு மூடுண்ட அமைப்போ அல்ல!  மாறாக,  அது
நிஜத்திலும்  நிஜமான  நிலையை  நோக்கிச் செல்லும் நிஜமாகும்!  அதாவது,
உலகம்  எனும் பரிணாம இயக்கத்தின் இலக்கை அறியாதவரை, அதை ஒரு
அரை-நிஜமாகத்தான் கொள்ளமுடியும்!

நாம்  ஒரு  மேசையைப் புரிந்து கொள்வது போல   உலகைப் புரிந்துகொள்ள
முடியாது! ஒரு மேசையைக்கூட, அது எப்பொருளினால் ஆனது, மரத்தினால்
ஆனதா,  அப்படியானால்,  எந்த மரத்தினால ஆனது;   அல்லது  இரும்பினால்
ஆனதா? அதன் நீளம், அகலம், உயரம் எவ்வளவு; அதற்கு எத்தனை கால்கள்
உள்ளன, இழுப்பறைகள் எத்தனை? எனும் விபர-உண்மைகளைக் கொண்டு
மட்டுமே புரிந்துகொள்ளமுடியாது; அதாவது, அதன் இருப்பிற்கான நியாயம்
என்ன,அதாவது அதன் நோக்கம்,பயன்பாடு என்ன, என்பவைகளைப்புரிந்து
கொள்ளாமல் ஒரு மேசையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது!

ஆனால்,    தத்துவவாதிகள்  'அர்த்தம்'  மற்றும்  'குறிக்கோள்'   பற்றிப் பேசும்
போது,  விஞ்ஞானிகளின் ஒரு விமர்சனம் என்னவெனில், 'அர்த்தம்'  மற்றும்
'குறிக்கோள்'   ஆகியவை  மானுடச்  சொல்லாடலிலிருந்து    பெறப்பட்டவை;
ஆகவே, அவற்றை இயற்கையின்மீது ஏற்றிச்சொல்லக்கூடாது, என்பதுதான்.
இதைத்தான்  நானும்   சொல்கிறேன்,   'அர்த்தம்' ,  'குறிக்கோள்'   ஆகியவை
மானுடச்  சொல்லாடலிலிருந்து   பெறப்பட்டவையாகும்;   ஆகவே, அவற்றை
இயற்கையின் மீது ஏற்றிச் சொல்லக்கூடாது  என்பதைப்போலவே, சடப்பொ
ருளின் பௌதீகப்பண்புகள் இயற்கைக்கு உரியவை,   அவற்றை மனிதஜீவி
களுக்கு பொருத்திச்சொல்வது  கூடாது!

ஆனால், மானுடச் சொல்லாடல் வழியாக அல்லாமல், மானுட நோக்கிலல்லா
மல்  எதையும்  நம்மால்  புரிந்துகொள்ளமுடியாது!  மேலும்,   மானுட  நோக்கு
என்பதும்  இறுதியானதாக இருக்கமுடியாது! ஏனெனில், மனிதன் பரிணாம
வழிமுறையில்  தோன்றியவனாதலால்,  பரிணாமத்தின்   முடிவான இலக்கு
எதுவோ அதுதான் மனிதனின்,  அதாவது அவனது வாழ்வின்  இலக்காகவும்
இருக்கமுடியும்!

அதாவது, இயற்கையை, உலகை, பருப்பொருளினுடைய பண்புகள், மற்றும்
அதன்  பௌதீக  இயக்கத்தின்  சொற்களிலேயே   புரிந்துகொள்ளமுடியாது!
ஏனெனில், பௌதீக இயக்கம் என்பது எந்திரத்தனமானது, ஆகவே, அதுவும்,
பண்பு  நிலை   மாற்றங்களைக் கொண்டு  முன்னேறிச்செல்லும்  பரிணாம
இயக்கமும்  ஒன்றல்ல!  இயற்கையானது பருப்பொருள் பண்பினைக்கடந்து
சென்று  வெகுகாலம் ஆகிவிட்டது!  உலகம், இயற்கை என்பது வெறும் பருப்
பொருள் மட்டுமல்ல;  அது  உயிர் பெற்றெழுந்து,   தற்போது  உணர்வாகவும்
எழுந்துள்ளது!   உணர்வுதான்   உலகின்  தற்போதைய புதிய முகம்! ஆனால்,
விஞ்ஞானம்   தன்னை   பருப்பொருளாலான   உலகைப்பற்றிய   ஆய்வாகச்
சுருக்கிக் கொண்டதன் விளைவாக,  அதனால்  உயிரற்ற, எந்திரத்தனமான
உலகைமட்டுமே புரிந்துகொள்ளமுடியும்!இயற்கையை,உலகை,அதனுள்ளே
இருந்தவாறே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது!  மாறாக,  உலகிற்கு
வெளியேயிருந்து அதைப்புரிந்துகொள்ளவேண்டும்!

அதாவது,  உலக  இருப்பிற்கான நியாயம்,  நோக்கம்,  அர்த்தம்,  குறிக்கோள்,
மற்றும்  இலக்கு  ஆகியவற்றின் நோக்கிலிருந்து மட்டுமே  உலகை முழுமை
யாகப்புரிந்துகொள்ளமுடியும்!மேலும்,பருப்பொருளாலான உலகைப்பற்றிய
விபர-உண்மைகளையும்,  அதன்  விதிகளையும் ஓரளவிற்கு முழுமையாகத்
திரட்டிப் புரிந்துகொள்வதுடன்  விஞ்ஞானம்  முடிவிற்கு வந்திடுவது  என்பது
தவிர்க்கமுடியாததாகும்!

தத்துவம்   விஞ்ஞானத்தின்  தொடர்ச்சிக்கும்,  முன்னேற்றத்திற்கும், பெரும்
அச்சுறுத்தலாக விளங்குகிறதா?  அதாவது,  விஞ்ஞானமானது  புலனறிவின்
எல்லைகளைத்தொட்டுவிட்டதா? அதாவது, பருப்பொருளினது பண்புகளின்
(Properties),அதன் நிகழ்வுமுறைகளின் (Phenomena),சாத்தியப்பாடு
களின்  எல்லைகளைத் தொட்டுவிட்டதா?   "விஞ்ஞானம்   முடிந்து  விட்டது!"
எனும் முன்னறிவிப்பு உண்மையாகிவிட்டதா? ஏனெனில்,விஞ்ஞானிகள் தற்  
போது, கண்-கவனிப்பு (Observation)மற்றும் பரிசோதனைகள் (Experi
ments)மூலம் அறிய முடியாதவகையிலான, "பல-பிரபஞ்சம்"(Multiverse)  "நாணிழைக்கோட்பாடு" (String Theory)போன்ற கற்பனைக்கோட்பாடு
களைப்புனைந்து கொண்டு தடுமாறிக்கொண்டுள்ளனரே! விஞ்ஞானத்தின்
முடிவு பற்றி விரிவாக வேறொரு தனிக்கட்டுரையில் பார்ப்போம்.

விஞ்ஞானமாகட்டும், தத்துவமாகட்டும், மனிதன் தன்னையும்,தான் வாழும்
உலகையும்,தன்னுடைய வாழ்க்கையையும்,அதன் உண்மையான நோக்கம்,
குறிக்கோள்,  அர்த்தம்,  இலக்கு  ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும்  அறிதல்
முறைகள்  என்கிற வகையில், இரண்டுமே அவற்றின் பணி முடிந்ததும், ஒவ்
வொரு  தனிமனிதனைப்பொறுத்தவரையிலும்,   முடிவிற்கு வந்துதான் ஆக
வேண்டும்! ஆயினும், மனித இனம் உள்ளவரை, இரண்டின் பணியும்,சேவை
யும் தொடர்ந்திடவே செய்யும். விஞ்ஞானம், தத்துவம், இவ்விரண்டும் மனித
வாழ்வின்  இரு வெவ்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கான கருவிகள்
ஆகும்.   விஞ்ஞானம்   உயிர்-வாழ்தலுக்குரிய   நடைமுறைத் தேவைகளைப்
பூர்த்திசெய்திடும்!    தத்துவம்    உயிர்-வாழ்தலின்   அர்த்தம்,     குறிக்கோள்,
மற்றும்   இலக்கு   ஆகியவற்றை உள்ளடக்கிய ஆன்மீகத்தேவையை  நிறை
வேற்றி மனிதவாழ்வை முழுமைப்படுத்திடும்!

முக்கியமாக,  தனிமனிதன்  தனது வாழ்-காலத்திற்குள்ளாகவே  வாழ்க்கை
யைப்புரிந்து  கொள்ளாவிடில்,    அவனது  வாழ்க்கை  அர்த்தமற்ற  ஒன்றாகி
விடும்!   இன்று புரிந்துகொள்ளாததை  நாளை,  அல்லது,  என்றாவது  புரிந்து
கொள்ளலாம்  என்கிற சாவதானமான விஞ்ஞான  அணுகுமுறை அடிப்படை
யிலேயே தவறானதாகும்!  ஏனெனில்,   வாழ்க்கையின் அர்த்தம் அறியாமல்
வாழ்ந்து செல்வதற்கு மனிதன் உணர்வற்ற விலங்கு அல்ல! மேலும், உலகம்,
மனிதன்,  வாழ்க்கை   இம்மூன்றும்  சங்கமமாகும்  புள்ளியான  ஒருமையும்
முழுமையுமான  மெய்ம்மையை  உணர்ந்தடைவது  தான் மனிதஜீவிக்கான
பிரத்யேக  வாழ்க்கைச் சவால்  என்றால்,   நிச்சயம்   ஒவ்வொருவரும்  தனது
வாழ்-காலத்திற்குள் அதைச் சாதிப்பதற்கான எளிமையான நேர்வழி ஒன்று
இருக்கவேண்டும்!
 <•>
மா.கணேசன் / நெய்வேலி/ 28.11.2016
----------------------------------------------------------------------------


Friday, 2 December 2016

அபத்தமான ஐந்து விஞ்ஞானப்பேருண்மைகள்!

 



"ஏன்   இங்கே  ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக  ஏதோவொன்று (உலகம்)
இருக்கிறது?"

ஆம்,   இக்கேள்வி    அடிப்படையிலேயே   தவறானது!    உலகம்  என்று  ஒன்று
இருப்பதனாலும், நாம் அதன் பகுதியாக இருப்பதனாலும்தான் அதற்கு எதிர்
நிலையாக     ஒன்றுமில்லாத   நிலை   பற்றிய   கேள்வியை   எழுப்புகிறோம்!
இதற்கு மாறாக,   நாம்  ஒன்றுமில்லாததின்  பகுதியாக  இருக்கும் பட்சத்தில்
ஏதோவொன்று  இருக்கவேண்டுமே? என்று கேட்போமா என்ற கேள்வியைப்
போன்றே   அக்கேள்வி   அபத்தமானது.  ஆனால்,  உலகம் இருக்கிறது, அதில்
பிற    விஷயங்களோடு   நாமும்   இருக்கின்றோம்.     இந்நிலைமையில்,   எது
சரியான   கேள்வியென்றால்,   உலகம் ஏன் இருக்கிறது, அதாவது எந்த நோக்
கத்திற்காக,     குறிக்கோளுக்காக    இருக்கிறது?   அதில் நாம் ஏன், எதற்காக
இருக்கிறோம்,    நம்  வாழ்க்கையின்  குறிக்கோள்  மற்றும்  அர்த்தம்  என்ன?
என்பன  போன்ற  கேள்விகள்  தான்.  அவற்றிலும்,  நம் வாழ்க்கை பற்றியும்,
நம்மைப்பற்றியும்,  நமது  தோற்றம்  அல்லது  தொடக்கம் பற்றியுமான கேள்
விகளே  உலகை,   பிரபஞ்சத்தைப் பற்றியதாய்  எழுப்பப்படுகின்றன.  அதே
வேளையில்,  பிரபஞ்சம் ஏன், எதற்காகத் தோன்றியது என்கிற கேள்விக்கும்,
பிற  பல  கேள்விகளுக்குமான  பதில்கள்,   பிரபஞ்சம்  என்றால்  என்ன என்ப
தைப்புரிந்து கொள்வதிலேயே அடங்கியுள்ளன!

கேள்விகள்,  அவை,  "ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக ஏதோ
வொன்று (உலகம்)  இருக்கிறது?"  என்பதைப்போன்று தவறானதாக,  அர்த்த
மற்றதாக   இருந்தாலும்;  அல்லது  உலகம்  ஏன்  இருக்கிறது,  அதாவது  எந்த
நோக்கத்திற்காக,குறிக்கோளுக்காக இருக்கிறது?அதில் நாம் ஏன்,எதற்காக
இருக்கிறோம்,   நம் வாழ்க்கையின்  குறிக்கோள்  மற்றும்   அர்த்தம்   என்ன?
என்பன போன்று அர்த்தமுள்ளவையாக இருந்தாலும்; எல்லாக்கேள்விகளும்
மனிதன்  தன்னையும்,   தனது வாழ்க்கையையும், தான் வாழும் இவ்வுலகை
யும் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான தத்துவார்த்தக்கேள்விகளேயாகும்!

தத்துவம்  என்பது  மனிதன்  முதன்முறையாக  சிந்திக்கத்  தொடங்கியதிலி
ருந்தே,  கேள்விகளைக்  கேட்கத்தொடங்கியதிலிருந்தே   தொடங்கிவிட்டது!
தத்துவம்  என்பது  பல்கலைக்கழகத் துறை  சார்ந்ததல்ல;    அது   ஒவ்வொரு
சிந்திக்கும்   மனிதனின் அடிப்படை  குணாதிசயம் ஆகும்.   ஆனால், பெரும்
பாலான  மனிதர்கள் சிந்திப்பதேயில்லை என்பதால்,  தத்துவம் என்பது அரி
திலும்அரிதான சில தனிமனிதர்களின் "அதிசய" குணம் என்பதாகிவிட்டது!

நான் இங்கு குறிப்பிடவிரும்புவது என்னவென்றால், தத்துவச்சிந்தனைதான்
முதலில் தோன்றிய அறிதல் முறையாகும். கலை, இலக்கியம், இசை, சமயம்,
விஞ்ஞானம் போன்ற யாவும் தத்துவச்சிந்தனையைப் பின்பற்றி உருவான
வையேயாகும்! முதன்முதலில், எவரும் சோதனைக்குழாயை கையிலெடுத்
துக்கொண்டு சிந்திக்கத்தொடங்கவில்லை!

சிந்தனை என்பது மனிதனின் அடிப்படைக்குணாம்சம் என்று சொன்னேன்;
ஆனால்,  சிந்தனைக்கான அடிப்படை பற்றியும் சிந்திக்கவேண்டாமா? ஆம்,
தேவைதான்   அறிவுக்கும்,  கண்டுபிடிப்புகளுக்கும்,   அனைத்திற்கும் அடிப்
படையாகும்.  அதே வேளையில், எத்தகைய தேவைகள் தத்துவ அறிவுக்கும்,
தொழில் நுட்பக்கண்டுபிடிப்புக்கும் தாயாக அமைந்தன என்பதைப்பிரித்து
அறிவதும் மிகவும் அவசியமாகும்.   ஏனெனில்,  தேவைகளுக்கிடையேயான
வித்தியாசம் தான்   தத்துவத்திற்கும்,   விஞ்ஞானத்திற்கும்   உள்ள வித்தியா
சத்தை உருவாக்குகிறது.

உடனடியானதும்,   அன்றாட,  நடைமுறைத் தேவைகளும் தான்  விஞ்ஞானத்
திற்கும், தொழில் நுட்பத்திற்கும் அடிப்படையாகும்.   இத்தேவைகளை நான்
"லௌகீகத் தேவைகள்" என்று குறிப்பிடுகிறேன். இந்த லௌகீகத் தேவைக
ளைக்கடந்த மனிதஜீவிக்கேயுரிய இன்னொரு அதிமுக்கியமானதேவையும்
உள்ளது,   அதை  நான்   "ஆன்மீகத் தேவை"  என்கிறேன்.  "ஆன்மீகம்"   என்ற
சொல்லை  நான்  ஆழமானதொரு  தனி அர்த்தத்தில்   பயன்படுத்துகிறேன்.
அதாவது,   ஒவ்வொரு மனிதனும்  தான்  அடைந்தாக   வேண்டிய   உணர்வுப்
பரிணாமத்தின்  உச்சம் குறித்த விழைவை நான்  "ஆன்மீகத் தேவை"  எனக்
குறிப்பிடுகிறேன்!   மிகத் துல்லியமாகச் சொன்னால், லௌகீகத்தேவைகள்
உயிர்-வாழ்தலுக்குரிய   பல்வேறு    பொருட்களை   இலக்காகக் கொண்டது.
ஆன்மீகத் தேவை  என்பது,    உயிர்-வாழ்தலின்   அர்த்தத்தை,      ஞானத்தை
இலக்காகக்கொண்டது.

தத்துவமாகட்டும்,   விஞ்ஞானமாகட்டும்,  அல்லது  வேறு எவ்வொரு அறிதல்
முறையாகட்டும், எல்லாவித அறிதல் முறைகளுக்கும்  சிந்தனைதான் அடிப்
படையாகும். இன்னும், மிகவும் நடைமுறைரீதியான தொழில்நுட்பத்திற்கும்
சிந்தனை, அல்லது அறிவு தான் அடிப்படையாகும்.

கற்கால  மனிதன்  கல்லைத் தேய்த்துத் தீட்டிக் கூர்மையாக்கி,   அதை    ஒரு
நீண்ட  குச்சியின்     ஒர்முனையில்  கட்டி  ஈட்டி  போன்றதொரு    ஆயுதமாக,
அல்லது   கருவியாக  உருவாக்கும்படிச்செய்தது   ஒரு குறிப்பிட்ட தேவையே
ஆகும்! ஆனால், அத்தேவையை நிறைவேற்றத் தேவையான ஒப்பற்ற கருவி
யாக அமைந்தது மனிதனின் சிந்தனையும், அதன் வழி பெறப்பட்ட அறிவும்
தானாகும்! தொழில் நுட்பத்தின் முன்னோடி கற்கால மனிதனே எனலாம்!

ஆனால்,    கடுமையான   சூழ்-நிலைமைகளில்,   உயிர்-பிழைத்தலே பெரும்
பாடாக இருந்த காலங்களில் கற்கால மனிதன், தன்னைப்பற்றியும், உலகம்
மற்றும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றியும், தனது வாழ்க்கையின் அர்த்தம்
பற்றியும்  சிந்தித்திருப்பானா என்பது சந்தேகமே!  ஏனெனில்,  இன்று,  சகல
சௌகரிய (சாதன) ங்களுக்கு   மத்தியில்,   இந்த  21-ம்  நூற்றாண்டிலும் கூட
அடிப்படையான   இவ்விஷயங்கள்  குறித்து நம்மில் பெரும்பாலான மனிதர்
கள் சிந்திப்பதாகத்தெரியவில்லை!

"தத்துவம்"   என்று  நான்  குறிப்பிடுவது,   உயிர்-வாழ்தலின்   தேவைகளைக்
கடந்து, "வாழ்க்கை" என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் மிக ஆழமான
சிந்தனைச் செயல்பாட்டையே  ஆகும்.   ஆனால்,   தத்துவமானது,      தர்க்கம்
(Logic), அறிவுத் தோற்றவியல்(Epistemology),மெய்யியல் (Metaphy
sics),அறவியல் (Ethics),அரசியல் (Politics) என்பதான  உட்பிரிவு
களைக்  கொண்டுள்ளதாகச்  சொல்லப்படும்  பிரிவினையில் எனக்குச்  சிறி
தும் உடன்பாடில்லை! ஏனெனில், வாழ்க்கையை நாம் துண்டுகளாக்கி வாழ
முடியாது; உடைந்த கண்ணாடித்துண்டுகளை ஒட்டுப்போட்டதுபோல ஒன்று
சேர்த்து  அதில்  நம் முகத்தை சிதைவின்றி முழுமையாகக் காண முடியுமா?
மேலும்,  தத்துவத்தை   தர்க்கம்,  அறிவுத் தோற்றவியல்,  மெய்யியல், அறவி
யல்,  அரசியல்  என  ஐந்து  பாகங்களாக  மட்டும்தான் பிரிக்க இயலும் என்ப
தில்லை;   மாறாக,  வாழ்க்கையின் ஒவ்வொரு  அம்சத்தையும் ஒரு தத்துவப்
பிரிவாக,  அல்லது   துறையாக   எண்ணற்ற   வகையில்    துண்டாட முடியும்!
விஷயம் என்னவெனில்,  ஒரு சௌகரியத்திற்காக உட்பிரிவுகளைக்கொண்
டதாக  தத்துவத்தைக் காணலாம்;  எனினும்,   நம்முடைய  தத்துவப்பார்வை
துண்டுபடாத  முழுமையாய் அமையவேண்டும்!

முதலில் தோன்றியது தத்துவம் தான்,   அதுவே   விஞ்ஞானத்திற்கான  அடிப்
படையாகவும் அமைந்தது.ஆரம்பக்காலக்கட்டங்களில் விஞ்ஞானம் என்பது
இயற்கைத்தத்துவம் என்றே அழைக்கப்பட்டது.   விஞ்ஞானம்  என்பது, தத்து
வச்   சிந்தனையிலிருந்து பிரிந்து  போனதொரு சிந்தனைப்போக்கு அல்லது
அறிதல்முறை ஆகும்!    குறிப்பாக, சாக்ரடீஸ்க்கு  முந்தைய கிரேக்க தத்துவ
ஞானிகளில், குறிப்பாக,கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேலீஸ் (Thales,
624-546 BCE) -ன்      சிந்தனைகளுடன்    தத்துவம்   திரிந்து     விஞ்ஞானச்
சிந்தனைக்கு  வித்திட்டது   எனலாம்!    இதே காலக்கட்டத்தில்,     கி.மு. 600 ம்
ஆண்டில்,     இந்தியாவிலும்     சார்வாகர்   தத்துவப்பள்ளியும்   பொருண்மை
வாதக் கோட்பாட்டை உருவாக்கியது!

அதாவது,    சாக்ரடீஸ்க்கு   முந்தைய   கிரேக்க  தத்துவஞானிகள்   இயற்கை
நிகழ்வுகள் குறித்த மரபான புராணிக விளக்கங்களைப் புறந்தள்ளி காரண
காரிய அடிப்படைகளைத்தேடினர். அவர்கள் "பொருட்களின் சாரம்" பற்றிய
கேள்விகளைக்கேட்டனர்.

  • எல்லாம் எங்கிருந்து வந்தன?
   • எதிலிருந்து எல்லாம் உருவாயின?

எனும் இந்த இரு விதிவசமான கேள்விகள் தான்  விஞ்ஞானச் சிந்தனையின்
தொடக்கத்திற்கான அடிப்படையை அமைத்தது எனலாம்.கிரேக்க தத்துவத்
தின் தந்தை என்றழைக்கப்படும்  தேலீஸ்,    "தண்ணீர்" தான்  அனைத்துக்கு
மான  அடிப்படை ஆதிப்பொருள் என்று அ றிவித்தார்.  அவரையடுத்து வந்த
அனாக்ஸிமேண்டர் (Anaximander, 610-546 BCE), பண்புகளேதுமற்ற
"எல்லையில்லாத்தன்மை"யே   அனைத்திற்கும்  மூலம் என்றார்.    அவருக்கு
இளையவரும்,   சமகாலத்தவருமான   அனாக்ஸிமெனெஸ்  (Anaximenes,
585-525 BCE),  "காற்று"  தான்  அனைத்திற்கும்   அடிப்படை  மூலமுதல்
பொருள் என்றார். பிறகுவந்த பித்தாகோரஸ் (Pythagoras,582-496 BCE)
எல்லாம் எண்களே என்றார்.   பிறகு, கி.மு. 5-ம் நூற்றாண்டில்,   லுசிப்பஸ் மற்
றும் அவரது மாணவரான டெமாக்ரிட்டஸ் (Democritus,460-370 BCE)-ம்
முதல் பருப்பொருள் மையக் கோட்பாடான  அணுக்கொள்கையை உருவாக்
கினர்.  அதன்படி,  சிறிய பகுக்கமுடியாத  எண்ணற்ற எண்ணிக்கையிலான
அணுக்களின் சேர்க்கையினால் பலவித பொருட்கள் உருவாயின என்றனர்.
இந்த ஆதி அணுக்கொள்கையே பின் வந்த அணுக்கொள்கைகளுக்கும், இன்
றைய நவீன-அணுத்துகள் பௌதீகத்திற்கும் முன்னோடி எனலாம்.

விஞ்ஞானச்சிந்தனைக்கு வித்திட்டவர்கள் சாக்ரடீஸ்க்கு முந்தைய கிரேக்க
தத்துவஞானிகள் மட்டுமல்ல;    சாக்ரடீஸ்க்கு பிறகு வந்தவர்களில் பிரதான
மாக, தத்துவஞானி பிளேட்டோவின் மாணவரான அரிஸ்ட்டாட்டில்-ன் தத்து
வச் சிந்தனைகளிலேயே  விஞ்ஞானம் நோக்கிய தடம்-மாறுதல் மிகத்தெளி
வாகத் தொடங்கிவிட்டது என்பதைக்காணலாம்!

நாம்  ஒன்றும்  இக்கட்டுரையில்  விஞ்ஞானத்தின்  வரலாற்றைப்பற்றி விலா
வாரியாக  அலசிக்கொண்டிருக்கவில்லை!   நாம்   கவனிக்கவேண்டிய அதி
முக்கியவிஷயம்,   எவ்வாறு பொதுவானதும்,  அடிப்படையானதுமான   தத்து
வார்த்தக்கேள்விகள் விஞ்ஞானத்திற்குரியதாகக்களவாடப்பட்டது என்பதே!
அதாவது, மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு கேள்விகளில் முதல் கேள்வியான
"எல்லாம் எங்கிருந்து வந்தன?"  என்ற  அசலான  தத்துவக்கேள்விக்கு இன்று
வரை விஞ்ஞானத்தினால் பதில் கண்டுபிடிக்கமுடியவில்லை! அதே வேளை
யில்,  இரண்டாவது கேள்வியான  "எதிலிருந்து எல்லாம் உருவாயின?"  என்ற
கேள்வியை  விஞ்ஞானம் இறுகப்பிடித்துக்கொண்டுவிட்டது எனலாம். ஏனெ
னில்,    "எல்லாம்  பொருளிலிருந்து  உருவானது!"   எனும்   எளிய      பதிலைக்
கொண்டு   விஞ்ஞானம்   தன்னை   வலுவான     அறிதல்முறையாக நிறுவிக்
கொண்டுவிட்டது!    இந்த   இரண்டாவது கேள்விக்கான பதிலைக்கொண்டே
அது முதல் கேள்வியை சமாளித்துக்கொண்டுவருகிறது!

அதாவது,  "எதிலிருந்து எல்லாம் உருவாயின?" என்பதற்கு விஞ்ஞானம் தந்த
பதில்  "எல்லாம் பொருளிலிருந்து உருவானது!" என்பதே. முதல் கேள்வியான
"எல்லாம் எங்கிருந்து வந்தன?"   என்பதற்கு விஞ்ஞானம் தந்த பதில் மிகவும்
அலாதியானது:  "எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை, ஏனெனில் உலகமானது
என்றென்றுமாய் இங்கேதான் இருக்கிறது! அதற்கு ஆரம்பமும் இல்லை,முடி
வும் இல்லை!  அது,  இயற்கையாக,  யாதொரு   படைப்பாளி அல்லது கடவுள்
எதுவும் தேவைப்படாது தானேதோன்றியதாய் இருக்கிறது!"   என்று சொல்லி
வருகிறது.   மிகவும்   சமீபத்தில்,    2012-ல் வெளியான     பௌதீக விஞ்ஞானி
லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss)தனது "ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு
பிரபஞ்சம்" (A UNIVERSE FROM NOTHING) எனும் நூலில், பிரபஞ்சமானது
ஒன்றுமில்லாத  நிலையிலிருந்து   தோன்றியது  என்று அறிவித்த கையோடு,
ஒன்றுமில்லாதது   என்பது உண்மையில் ஒன்றுமில்லாததல்ல,  மாறாக, அது
சக்தியும்  பொருண்மையானதுமாகும்  என்று சொல்லி  தானும் ஒரு பொருள்
முதல்வாதி தான் என்பதை இனம் காட்டியுள்ளார்!

அடிப்படையான தத்துவச்சிந்தனையிலிருந்து தடம் மாறிப்போன சிந்தனை
தான் விஞ்ஞானச்சிந்தனை என்று சொன்னோம். அதாவது வாழ்க்கை எனும்
முழுமையின்   ஒரு  பகுதியான   உலகின்  மீது   தனது  கவனிப்பு,   சிந்தனை
மொத்தத்தையும்   தாரைவார்த்துத்தந்துவிட்ட ஒரு அறிதல்முறைதான் விஞ்
ஞானம்!  அதாவது,  மிகத்துல்லியமாக,   விஞ்ஞானம் என்பது பருப்பொருளா
லான   உலகைப்பற்றிய ஆய்வு என்பதற்கு மேல் வேறில்லை!  ஆனால், பருப்
பொருளாலான  உலகைப் பற்றிய ஆய்வுமுடிவுகளின் வழியாக பெறப்படும்
பௌதீக உலகைப்பற்றிய புரிதலைக்கொண்டு மனித வாழ்க்கை மொத்தத்
தையும் அளவிடுவதும்,மதிப்பிடுவதும்,கணிப்பதும் முறையாகாது என்பதை
நாம் கவனத்திற்கொள்வது அவசியமாகும்

ஏனெனில்,  மெய்ம்மை (Reality)என்பது,  விஞ்ஞானிகள் கருதுவது போல
பருப்பொருளாலான உலகமோ,அதன் விசேடமானதொரு பண்போ, அல்லது
அதன்  சாரமான பண்போ,  அல்லது   எவ்வகையிலேனும்  உலகைச்  சார்ந்த
ஒன்றோ அல்ல!   மாறாக,  மெய்ம்மை  என்பது பருப்பொருளாலான உலகை
உள்ளடக்கியதும்,  அதனைக்கடந்ததும் ஆகும்!

ஒருவகையில்,  அடிப்படையான  தத்துவச்சிந்தனையிலிருந்து  தடம் மாறிப்
போனது தான் விஞ்ஞானம் என்றாலும்,  இவ்வாறு  தடம் மாறிப்போவது  என்
பதும்  தவிர்க்கவியலாத  ஒன்றே  ஆகும்!    ஏனெனில்,    பருப்பொருளாலான
உலகையும்,   அதற்கும்  மனித ஜீவிகளாகிய நமக்கும் உள்ள தொடர்புறவை
யும்  புரிந்துகொள்வதும் அவசியமே!  அதே நேரத்தில்,  வாழ்க்கையில், நமது
புரிதலில், விஞ்ஞானத்தின் முறையான இடம், பங்கு, பணி, பாத்திரம் ஆகிய
வற்றை மிகத்துல்லியமாக வரையறுத்து, அதற்கேற்ப அதைப்  பயன்கொள்
வது என்பது மிகமிக அவசியமாகும். இல்லாவிடில், விஞ்ஞானம் விளைவித்த
கனிகளைக்காட்டி     தத்துவத்தைப்  பின்தள்ளி    தன்னை    முன்னிறுத்திக்
கொண்டுவிடும் அபாயம் நேர்ந்துவிடக்கூடும்! அதற்கான அறிகுறிகள் ஏற்க
னவே பல விஞ்ஞானிகளின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்டுள்ளன.

குறிப்பாக,

• விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெயின்மேன் (Richard Feynman) 'தத்து
வம் ஒரு போதை' என்று குறிப்பிட்டுள்ளார்.

• விஞ்ஞானி ஸ்டீவென் வெயின்பெர்க் (Steven Weinberg) தனது
இறுதிக்கோட்பாடு பற்றிய கனவுகள் (“Dreams of a Final Theory”
1993) எனும் நூலில் "தத்துவத்திற்கு எதிராக" என்ற தலைப்பில் ஒரு அத்தியா
யத்தையே எழுதியுள்ளார்.

• விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்க் (Stephen Hawking)"தத்துவம் செத்து
விட்டது"  என,  2010-ல் வெளியான, தனது "மகத்தான வடிவமைப்பு" எனும்
நூலில் அறிவித்தார்.

• விஞ்ஞானி  நீல் டெகிராஸி டைஸன் (Neil deGrasse Tyson)
"தத்துவம் ஒரு நேர வீணடிப்பு, இயற்கையுலகைப் புரிந்துகொள்வதற்கு அது
யாதொரு உருப்படியான பங்களிப்பையும் செய்திட வில்லை" என்றார்.

• விஞ்ஞானி லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss),2012-ல் வெளியான
தனது "ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு பிரபஞ்சம்" எனும் நூலில், "விஞ்ஞானம்
முன்னேறிச்செல்லுகிறது ஆனால் தத்துவம் இரண்டாயிரம் வருடங்களில்
எவ்வித முன்னேற்றமும் காணவில்லை" என்கிறார்.

இவ்விஞ்ஞானிகளின்  கூற்றுக்களிலிருந்து  தெரியவருவது   என்னவெனில்,
இவர்களுக்கு   உண்மையில்   விஞ்ஞானத்தின்  தத்துவமும் தெரியவில்லை,
தத்துவத்தின்   விஞ்ஞானமும்   புரியவில்லை!   ஏற்கனவே      குறிப்பிட்டபடி,
விஞ்ஞானச் சிந்தனைக்கான வித்துக்களை,   2,500  ஆண்டுகளுக்கு முன்னர்
தூவியவர்கள் தத்துவவாதிகளே!இன்று பெருமிதத்துடன் அனுசரிக்கப்படும்
நவீனவிஞ்ஞானம்  மிஞ்சிப்போனால்,  வெறும்  400 வருடங்களுக்கு  முன்னர்
17-ம் நூற்றாண்டில்  தொடங்கிய ''விஞ்ஞானப்புரட்சி" யின் தொடர்ச்சி தான்
என்பதை விஞ்ஞானிகள் மறந்துவிடக்கூடாது! மேலும்,   ''விஞ்ஞானப்புரட்சி"
என்பது    திடீரென 17-ம்  நூற்றாண்டில்,   ஓரிரவில்   ஏற்பட்டதல்ல!    மாறாக,
அதற்கு   முன்னர்  பல நூற்றாண்டுகளாக  அடைகாக்கப்பட்டு  வெளிப்பட்ட
தாகும்.   2,000  ஆண்டுகளாக  தத்துவம்  முன்னேறவேயில்லை,   என்பதாகக்
குறை கூறும் விஞ்ஞானிகள்; 17-ம்  நூற்றாண்டிற்கு முன்புவரை விஞ்ஞானம்
ஏன் பெரிய அளவில் துளிர்க்கக்கூட இல்லை என்பதை உணரவேண்டும்!

தத்துவச்சிந்தனைக்கும் விஞ்ஞானச்சிந்தனைக்கும், வித்தியாசம் தெரியாத
விஞ்ஞானிகளுக்கு  விஞ்ஞானத்தின் அடிப்படைகள்  கூடத்தெரியாது என்று
சொல்லலாம். இதற்குக்காரணம், இன்று ஒருவர் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானப்
பிரிவு,  அல்லது  துறையின் பாடங்களை (சிறிது சிறிதாக சேர்த்து தொகுத்து
வைக்கப்பட்ட  அறிவை)   சிலவருடங்களில்  பயின்று,   பிறகு     அவ்வறிவை
நடைமுறைப்படுத்தும்  வழிகளில்,  விஞ்ஞானியாகிவிட முடியும்!  இவ்வகை
யில்  விஞ்ஞானிகளாக  ஆனவர்கள்தான் தத்துவத்தின் மகத்துவமறியாமல்
தத்துவத்தை  இகழ்ந்து பேசி மலினப்புகழ் தேடிக்கொள்கின்றனர்!    இவர்க
ளுக்கு நிச்சயம் விஞ்ஞானத்தின் தத்துவம் தெரியவாய்ப்பில்லை!  இவ்வாறு
ஒரு குறிப்பிட்டவிஞ்ஞானத்துறையில் தேர்ந்த ஒருவரை ஒரு முழுவிஞ்ஞானி
எனக்குறிப்பிடவியலாது;  வேண்டுமானால், அவரை அத்துறையின் நிபுணர்,
அல்லது வல்லுனர் என்றழைக்கலாம்! விஞ்ஞானி என்ற பெயரில், பட்டத்தில்
பலர் இருக்கலாம்; ஆனால், எல்லோரும் நியூட்டன்களோ,அல்லது ஐன்ஸ்டீன்
களோ அல்ல!இவ்வாறே,ஒருவர் பல தத்துவப்பாடங்களைப்பயின்று உடனே தத்துவஞானியாகிவிட முடியாது! தத்துவம் பயிலும் அனைவரும், சாக்ரடீஸ்
ஆகவோ,     பிளேட்டோவாகவோ,   அரிஸ்ட்டாட்டில்-ஆகவோ,   இம்மானுவல்
காண்ட் ஆகவோ ஆகிவிடுவது கிடையாது!

ஆகவே,   "தத்துவம்   இரண்டாயிரம்  வருடங்களில் எவ்வித முன்னேற்றமும்
காணவில்லை" எனும் 'விஞ்ஞானி' லாரன்ஸ் க்ராஸ் -ன் குற்றச்சாட்டு அர்த்த
மற்றதாகும்.   அவருக்குத்  தத்துவம் பற்றி  எதுவும்  தெரியாது  என்பதைவிட
அவருக்கு  விஞ்ஞானம் பற்றிய அடிப்படையும் தெரியவில்லை என்பதுதான்
அவருடைய மட்டுப்பாடு! அவருடைய துறையில் அவர் விற்பன்னராக இருக்
கலாம் அவ்வளவுதான்!

அடுத்து,    17-ம் நூற்றாண்டில்   தொடங்கிய ''விஞ்ஞானப்புரட்சி" தொடர்ந்து
அவ்வாறே  வரலாறு படைத்துச்செல்லும், அதாவது தொடர்ந்து இன்னும் பல
நூற்றாண்டுகளுக்கு,   அதே  பாய்ச்சலுடன்  முடிவேயில்லாமல்  முன்னேறிக்
கொண்டேசெல்லும் என்று சொல்வதற்கு இடமில்லை! ஏனெனில்,ஏற்கனவே
"விஞ்ஞானத்தின் முடிவு" (THE END OF SCIENCE)பற்றிய முன்னறிவிப்பும்,
அதன்மீதான விவாதங்களும், 1996-லேயே தொடங்கிவிட்டன! இதுபற்றி பிறி
தொரு கட்டுரையில் காண்போம். எனினும், எல்லைகாணமுடியாத அளவில்
உலகம்   பரந்ததாக   இருப்பினும் பருப்பொருளின் பண்புகளும்,  விதிகளும்
அளவிற்குட்பட்டவையே,       ஆகவே,  பருப்பொருளாலான  உலகைப்பற்றிய
ஆய்வான விஞ்ஞானம் ஒரு கட்டத்தில் (முழுமைபெற்று) முடிவடைந்து தான்
ஆகவேண்டும்!ஆக, எவரும், ஐயோ! விஞ்ஞானம் முடிந்துவிட்டதே என அஞ்ச
வேண்டாம்;  ஏனெனில்,  'விஞ்ஞானத்தின் முடிவு'  என்பது உலகின் முடிவோ,
அல்லது, வாழ்வின் முடிவோ அல்ல!

விஞ்ஞானம் என்பது, நம்மைச்சுற்றியுள்ள உலகையும், பரந்த பிரபஞ்சத்தை
யும் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி மாத்திரமே! உலகைப்புரிந்துகொள்
வதென்பது அதன்விதிகளைப்புரிந்துகொள்வதே;அவ்விதிகளைக்கொண்டு
நாம் நம் நடைமுறைவாழ்க்கைக்கான கருவிகளை, உபகரணங்களை, சாத
னங்களை, உருவாக்கிப்பயன்கொண்டு சௌகரியமாக உயிர்வாழ்கிறோம்!
ஆம்,   விஞ்ஞானம்   மனிதவாழ்க்கையின்   ஒரு பாதி  தேவையை   மட்டுமே
நிறைவு செய்யக்கூடியதாகும்   என்பதை நாம் மனதிற்கொள்வது அவசியம்
ஆகும்!வாழ்க்கையின் இன்னொருபாதி தேவையை தத்துவத்தால் மட்டுமே
நிறைவு செய்ய  இயலும்!

விஞ்ஞானத்தின் வளர்ச்ச்சி,  முன்னேற்றம் என்பது அறிவுச்சேகரத்தின் மூல
மாக  நிகழ்வதாகும்!   ஒரு  குறிப்பிட்ட துறையில்   அறிவுச்சேகரமானது  ஒரு
குறிப்பிட்ட திரும்புகட்ட-மதிப்பை(Critical-Value)எட்டியதும்  அத்துறை
யில் பாய்ச்சல்-மிகுந்த திடீர் வளர்ச்சி சம்பவிப்பதாகிறது.மேலும்,விஞ்ஞான                  
அறிவு என்பது, குறிப்பாக, உலகைப்பற்றிய மிக ஆழமானதொரு  விதியைக்
கண்டுபிடிப்பது  எவ்வாறு நிகழ்கிறது என்பது, இன்னும் "விஞ்ஞானம்-மீறிய"
நிகழ்வாகவேயுள்ளது!     ஆகவே,     சர்வசாதாரணமாக    எதற்கெடுத்தாலும்
'விஞ்ஞானம்',   'விஞ்ஞான-ரீதியான', 'விஞ்ஞான-பூர்வமான' என்று அளப்பது
அறிவீனமாகும்!   ஏனெனில்,  விஞ்ஞான-அறிவின்  உதயம்    விஞ்ஞானபூர்வ
மானது அல்ல!!  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  எவ்வாறு சார்பியல் கோட்பாட்டை உரு
வாக்கினார் அல்லது கண்டுபிடித்தார் என்பது எவருக்கும்  தெரியாது!    நாம்
சொல்லலாம், சார்பியல் கோட்பாட்டிற்கான அடிப்படைகள் ஏற்கனவே கண்
டறியப்பட்ட பிற கோட்பாடுகளில் அடங்கியிருந்தன எனலாம். ஆனால்,  ஏன்
அதே  சார்பியல்கோட்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-ன் அண்டைவீட்டுக்கார
ரான ராபர்ட் ஹாரிஸன் கண்டுபிடிக்கவில்லை?

ஆம்,விஞ்ஞானவகைப்பட்ட அறிவு, தத்துவவகைப்பட்ட அறிவு, இன்னும் எவ்
வகைப்பட்ட அறிவாயினும்,  "அறிவு"  என்பது உள்ளதிலிருந்து உண்மையை
உய்த்துணரும்  தனிமனிதனின்  உணர்வார்ந்த  ஈடுபாட்டின் வெளிப்பாடே!
வெறும் கண்-கவனிப்பு(Observation),பரிசோதனைகள்(Experiments),
தரவுகள்(Data)இவை மட்டுமே விஞ்ஞானக்கோட்பாடுகளாகவும், அறிவாக
வும் ஆகிவிடுவதில்லை! மாறாக, காரணகாரிய ஆராய்ச்சிகளையும் கடந்து
மனத்தின் அடித்தளத்திலிருந்து பீரிடும், உள்ளுணர்வு(Intuition) மற்றும்
உட்பார்வை(Insight)யின் வெளிப்பாடுகளே அறிவாகும்!

மேலும்,  விஞ்ஞானம்  என்பது தொடர்ந்து சேகரித்துத்தொகுக்கப்படும்  அறி
வைக்கொண்டு எழுப்பப்படும் மாளிகையாகும்! விஞ்ஞானம் முழுமையைத்
துண்டுபடுத்தி,  அத்தனித்தனித்துண்டுகளைப்பற்றிய அறிவை இணைத்து
ஒரு ஒட்டுப்போட்டச் சித்திரத்தை(புரிதலை) உருவாக்கி அதையே உண்மை
என்று அறிவிக்கிறது!  மேலும்,  விஞ்ஞானம்   பௌதீக  உலகையே  முழுமை
எனக் கருதுகிறது!  இதுவே  விஞ்ஞானத்தின் அடிப்படைக்கோளாறும், முதல்
கோணலும் ஆகும். ஆனால், தத்துவம், உலகை முழுமையின் ஒரு பகுதியாக
மட்டுமே   காண்கிறது.    அதாவது,    மனிதன்  தன்  உணர்வை   மையமாகக்
கொண்டு    உலகையும்  பிற அம்சங்களையும் புரிந்துகொள்ளும் வழிமுறை
தான்  தத்துவம்  என்பதாகும்!  ஏனெனில்,   மனிதன் தான்  உலகின் மையம்!
மையத்தை (அதாவது தன்னை)அறிந்துகொள்ளும் விழைவின் ஒரு தொடக்
கம்  தான் உலகையும் ,  பிற அம்சங்களையும்  அறிந்து கொள்ளும்   முயற்சி
யாகும்!

உண்மையில், முறையே விஞ்ஞானம் காண்கிற உலகமும், தத்துவம், சமயம்,
மற்றும் சாமானியமக்கள் காண்கிற உலகமும் ஒன்றல்ல! இவை ஒவ்வொன்
றும்  ஒரு  குறிப்பிட்ட  அம்சத்தை  மையமாகக் கொண்டே  அல்லது சார்ந்தே
உலகைக்காண்கின்றன.   சாமானிய  மக்கள் பொருளாதாரத்தை (அன்றாட
வாழ்க்கை,விலைவாசி)மையமாகக்கொண்டே உலகையும் அனைத்தையும்
காண்கின்றனர்.   சமயப்பார்வை,  படைப்பாளியான கடவுளை மையமாகக்
கொண்டதாகும்.  தத்துவம்  மட்டுமே புறத்தே எதையும்  மையப்படுத்தாமல்,
மனிதன்   எனும்  மையத்திலிருந்து,  உலகையும்,  பிறவனைத்தையும், குறிப்
பாக    எதையும்   விலக்கி   ஒதுக்காமல்   கணக்கில்   கொண்டு  காண்கிறது.
இத்தகைய தத்துவத்தை நான் "முறையான தத்துவம்" (Pure or Proper
Philosophy)என்று குறிப்பிடுகிறேன். ஏனெனில், தத்துவங்கள் பலவகைப்
பட்டவையாக உள்ளன.   ஒவ்வொன்றும்  ஒரு அம்சத்தை அல்லது  ஒரு குறிப்
பிட்ட    சித்தாந்தத்தை  (Ideology) மையமாகக்கொண்டுள்ளது,  அல்லது
சார்ந்ததாக உள்ளது.  இவ்வகைப்பட்டவை முறையான தத்துவங்கள் அல்ல!

குறிப்பாக,   பொருண்மைவாதம்  அல்லது   பொருள்முதல்வாதம்    என்பதை
முறையான   தத்துவமாகக் கொள்ளமுடியாது.  ஏனெனில், முன்-முடிவுகளை
வைத்துக்கொண்டு  தத்துவ விசாரத்தில்  இறங்கமுடியாது.    "பொருள் தான்
முதன்மையான நிஜம்"    என பொருளை மையமாகக் கொள்ளும்பட்சத்தில்,
யாவற்றையும்  அப்பொருளின் சொற்களிலேயே காண்பதும்,  விளக்கமளிப்
பதும் தவிர்க்கவியலாத தவறான அணுகுமுறையாக ஆகிவிடும்! ஏனெனில்,
"பொருள் தான்   முதன்மையான    நிஜம்"   என   முடிவு   செய்துவிடும்போது,
எல்லாம்  பருப்பொருளின்  வெவ்வேறு வடிவங்கள்,  நிலைகள்,   பண்புகளே
என     உயிர்,   மனம்,   உணர்வு,  மனிதன்   யாவற்றையும்,    பருப்பொருளின்
ஆகச்சிறிய   கூறான அடிப்படை  அணுத்துகள்களுக்குச் சுருக்கிக்காண்பது
என்பது மிக எளிதான விஷயமாகிவிடும்!

இவ்வாறே,   விஞ்ஞானம்  காண்கிற  உலகம், பிரபஞ்சம், இயற்கை என்பதும்
நிஜமான  உலகமோ,   இயற்கையோ   அல்ல!      அவை     முழுமையிலிருந்து
தனியே    பிரித்தெடுக்கப்பட்ட (Abstracted) வையே ஆகும்! விஞ்ஞானம்
விளக்கிக்காட்டுகிற உலகம் என்பது ஒரு கருத்துச்சித்திரம் என்பதற்குமேல்
வேறெதுவுமல்ல!அதைஒரு கருத்துச்சித்திரம் என்பதைவிட கேலிச்சித்திரம்
என்று  குறிப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்!  அதாவது, ஒருவரது
அல்லது   ஒன்றினுடைய  தனி இயல்புகளை  மிகைப்படுத்திக்காட்டும் படம்
அல்லது  வருணனைதான் கேலிச்சித்திரம் என்பதாகும்.  இவ்விடத்தில், விஞ்
ஞானமானது,     உலகம்    பொருளாலானது    என்கிற   அதன்  தனி இயல்பை
மிகைப்படுத்தி,   அதையே, அப்பௌதீகச்சடப்பண்பையே "மெய்ம்மை" என
அறிவிக்கிறது!

இவ்விடத்தில்,  தத்துவத்திற்கும், விஞ்ஞானத்திற்கும்  உள்ள அடிப்படை வித்
தியா சத்தைப்புரிந்துகொள்வது அவசியமாகும், இல்லாவிடில், இரண்டிற்கும்
இடையே   முரண்பாட்டைக்  கற்பித்துக்கொண்டு    தடுமாறிக் கொண்டிருப்
போம்! தத்துவம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதானத்தேவையை நிறை
வேற்றுகின்ற,  மனிதவாழ்க்கையைப் பற்றிய முழுமையான, சாரமான பார்
வையை, புரிதலைக்குறிக்கிறது!  மனிதவாழ்க்கை  என்பது,  மனிதனையும்,
பொதுவாக  'வாழ்க்கை' என்று தவறாகக் குறிப்பிடப்படும் அவனது குறுகிய
அன்றாட  உயிர்-பிழைப்பு  விவகாரத்தையும்,  உலகையும்,  அதாவது   ஒட்டு
மொத்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியதாகும்.

தத்துவம்  உலகை வாழ்க்கை எனும் முழுமையின் ஒரு பகுதியாகக் காண்கி
றது;   விஞ்ஞானம்   உலகம்  எனும்  பகுதியை  முழுமையாக்க    முயல்கிறது!
அதோடு   அது  மனிதனையும்,  அவனது  வாழ்க்கையையும்,  உலகம்  எனும்
பகுதியின்  முக்கியத்துவம்  ஏதுமற்ற  ஒரு ஓரப்பகுதியாக மாற்றிவிட முயல்
கிறது! சாக்ரடீஸ்க்கு முந்தைய கிரேக்க தத்துவஞானிகள் இயற்கை நிகழ்வு
கள்  குறித்த மரபான புராணிக விளக்கங்களைப்  புறந்தள்ளி காரணகாரிய
அடிப்படைகளைத்தேடினர் எனக்கண்டோம். ஆனால், நவீன விஞ்ஞானமோ
உலகையே  மெய்ம்மை(Reality)யாகவும், பொருண்மை(Materiality)ப்
பண்பை  மெய்ம்மையின்  சாரமாகவும் காண்கிறது.  இவ்வாறு, சட-உலகை
முதன்மைப்படுத்தும் பான்மையை நான் விஞ்ஞானவகை புராணிகம் என்று
குறிப்பிடுகிறேன்.

அதாவது,  பழம்புராணிக காலங்களில்,  உலகம்   பலவகைப்பட்ட கடவுளர்க
ளாலும்,ஆவிகளாலும் நிறைந்திருப்பதாகவும்,வழக்கத்திற்கு மாறான நிகழ்
வுகள்  சம்பவங்கள் கோபங்கொண்ட கடவுளர்களின் செயல்களென நம்பப்
பட்டன!    இன்றைய   நவீன  விஞ்ஞானக் காலத்தில், "எல்லாம்  பன்னிரண்டு
அணுக்கருத்துகள்கள்  மற்றும்  நான்கு  அடிப்படைவிசைகளின்"  ஜாலங்கள்
என நம்பப்படுகிறது!  எல்லாம் ஆவிகளின் (Spirits)ஜாலங்கள்  என்பதற்
கும்,    எல்லாம்   அணுக்கருத்துகள்களின்   ஜாலங்கள்    என்பதற்கும்  என்ன
பெரிய வித்தியாசம் உள்ளது?  உள்ளது!  ஆவிகளின்  ஜாலங்கள் என்பது அப்
பாவித்தனமான  நம்பிக்கையாகும்.  அணுத்துகள்களின் ஜாலங்கள் என்பது
நெடிய ஆராய்ச்சிகளின் விளைவாகப்பெறப்பட்ட புரியாத(அல்லது ஒரு சில
ருக்கு  மட்டுமே  புரியக்கூடிய )   கணிதக் குறியீடுகளாலான   சமன்பாடுகள்
மற்றும்   சூத்திரங்களைக் கொண்டு    நிறுவப்படும்  விஞ்ஞான - நம்பிக்கை
(Educated Belief)யாகும்!

விஞ்ஞானத்தின்  தகிடுதத்தத்தை,   இன்னும் சற்று ஆழமாகச்சென்று பார்ப்
போம்!  அதாவது 17-ம் நூற்றாண்டில், கலிலியோ(Galileo)வும், நியூட்டனும்
(Newton) பொருட்களின்  இயக்கம்பற்றிய  விதிகளை அறிமுகப்படுத்திய
தற்குப்பிறகு,   (இயற்கை) தத்துவமும்,  (விஞ்ஞான)பௌதீகமும்  தனித்தனி
துறைகளாகப் பிரிந்து   சென்றன.  கெப்ளர் (Kepler)கண்டுபிடித்த  கோள்
களின் இயக்கம் தொடர்பான சில ஆரம்ப விதிகளிலிருந்து நியூட்டன் தனது
இயக்க  விதிகளைத்  தருவித்துக்கொண்டார்.    அவ்விதிகளைக்   கொண்டு,
ஹேலிஸ்  வால் நட்சத்திரத்தின்  மறுவருகை 1759-ல் நிகழும் என்ற கணிப்பு
நிறைவேறியது புதியவிஞ்ஞானத்தின் மகத்தான ஆற்றலை, நாமனைவரும்
காணும் வண்ணம் நிகழ்த்திக்காட்டியது!   ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இத்
தகைய விஷயங்கள், கண்டுபிடிப்புகள் பிரமாதமானவையே. ஆனால், அந்த
எல்லைக்கு வெளியே இவை ஒன்றுக்கும் பயன்படாது!

ஏனெனில்,  பொருள்களின் இயக்கமும் அவைபற்றிய விதிகளும், அவற்றை
ஒட்டிய  கண்டுபிடிப்புகளும்  பலவித நடைமுறைப் பயன்களைத் தந்தாலும்
பொருட்களின்  பௌதீக இயக்கத்திற்கும் மெய்ம்மைக்கும் உள்ள தொடர்பு
என்ன?  பொருள், பொருளின் பௌதீக இயக்கம் இவைகள்  மெய்ம்மையின்
(Reality) வெறும் பகுதிகள் தானே!  இவை  எவ்வகையிலும்  இறுதியான
வையல்ல! (There is nothing ultimate about physical motion!)
அதாவது  பௌதீக  இயக்கத்தை  நாம்  முழுமையாகப் புரிந்து  கொள்வதில்
தவறில்லை; ஆனால்,அப்புரிதல் எவ்வகையிலும் மெய்ம்மை என்றாலென்ன
என்று  ஒருபோதும்   விளக்கப்போவதில்லை!  ஆக,  பௌதீக உலகம் பற்றிய
முழுமையான  புரிதல்  பௌதீக உலகின்  உண்மையை மட்டுமே விளக்குவ
தாயிருக்குமே தவிர,   மனிதனைப் பற்றிய   உண்மையை,   அனைத்தையும்
 உள்ளடக்கிய   "வாழ்க்கை"  எனும் முழுமையின் உண்மையை  ஒருபோதும்
அது வெளிப்படுத்திடாது!!

நியூட்டனின் பௌதீகம் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே வெற்றிகரமாகச்
செயல்படக்கூடியது    என்பதை   சௌகரியமாக   மறந்துவிடுபவர்கள் தான்
விஞ்ஞானத்தை   உயர்த்தியும்   தத்துவத்தைத் தாழ்த்தியும்  பேசிவருகிறார்
கள்.   அதாவது,   "பொருளின்   இயக்கவிதிகளே   பௌதீக  உலகில்  நிகழும்
எல்லா   விஷயங்களையும்,   சம்பவங்களையும்  தீர்மானிக்கின்றன;  அதில்,
கடவுளுக்கு   யாதொரு   செயலூக்கமிக்க  பாத்திரமும்  கிடையாது!"    என்று
சொல்லுகிற    விஞ்ஞான-மூளைகளுக்கு,   "அனைத்தையும்   தீர்மானிக்கிற
இயக்கவிதிகளை  தீர்மானித்தது  எந்தவிதிகள்?" எனும் கேள்வி மட்டும் ஏன்
உதிக்காமல் போகிறது என்பது வினோதமே!

மேலும் ,  "எல்லா விஷயங்களையும், சம்பவங்களையும் பொருளின் இயக்க
விதிகளே தீர்மானிக்கின்றன;அதில்,கடவுளுக்கு யாதொரு செயலூக்கமிக்க
பாத்திரமும்  கிடையாது!"  என்றால்,  கடவுளின் இடத்தை   'இயக்க- விதிகள்'
எடுத்துக்கொண்டனவா?அடுத்து, அனைத்தயும் தீர்மானிக்கும்  இயக்கவிதி
களைத் தீர்மானிக்க 'கடவுள்' தான் வேண்டுமா?   இயக்கவிதிகளை இயக்கு
கின்ற   (இன்னும்  விஞ்ஞானம்  அறியாத)  உயர்-விதிகள்  இருக்கக்கூடாதா?
அவ்விதிகள்  ஏன் பொருண்மையல்லாத (Non-Material) ஒருஅம்சத்தின்
கருவிகளாக இருக்கக்கூடாது?

விஞ்ஞானி   ஹாக்கிங்க், மற்றும்  நீல் டெகிராஸி டைஸன்,  லாரன்ஸ் க்ராஸ்
ஆகியோரால்  விஞ்ஞானத்திற்கும்,    தத்துவத்திற்கும்   இடையே  தொடங்கி
வைக்கப்பட்ட சர்ச்சை  தற்போது  கொழுந்துவிட்டு  எரிந்து கொண்டு  இருக்
கிறது. அது ஒரு சர்ச்சைதான் என்றாலும்,  அதில் எவ்வொரு பக்கம் வென்றா
லும் அது நம் அனைவருக்கும்  தோல்விதான் என்று சிலர் கவலை  தெரிவித்
துள்ளனர். அவர்களது கவலை அக்கறைக்குரியதுதான்; ஆனால், அவர்களது
புரிதல்தான்,பாவம்,மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது!அதாவது
மேற்குறிப்பிட்ட சர்ச்சையில்,  விஞ்ஞானம் வெல்லக்கூடுமெனில்,  அதுதான்
நம்  அனைவருக்கும் மிகவும்  அழிவுகரமான தோல்வியாக அமையும்!  ஏற்க
னவே  மனித இனம் அழிவின் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது!
தற்போது முன்னனியில் இருப்பது விஞ்ஞானமே, விஞ்ஞான-உலகப்பார்வை
தான் மனித  இனத்தை வழி நடத்திச்செல்கிறது.

ஒருபுறம், அன்றாடத்தைக்கடந்து வேறுஎதைப்பற்றியும் சிந்திக்காத பெரும்
மக்கள் திரள்;   இன்னொருபுறம்,   தவறாகச் சிந்திப்பதையே    தொழிலாகக்
கொண்ட  கனிசமான எண்ணிக்கையிலான அடிப்படைவாத, பொருண்மை
வாத,  சுருக்கல்வாத, நாத்திக  'விஞ்ஞானிகள்"! இவ்விரண்டுக்கும் இடையே
உருப்படியாகச் சிந்திக்கும்   சில விஞ்ஞானிகள்,  மற்றும் தத்துவச்சிந்தனை
யாளர்களின்  குரல்   எடுபடுவதற்குரிய    வாய்ப்புகள் மிக  மிகக்  குறைவே!
விஞ்ஞானத்தின்   (பெரிதும்   தொழில் நுட்பரீதியான)   ஆரவாரமான கண்டு
பிடிப்புகள்   மற்றும்  முன்னேற்றங்கள்  தத்துவம்  உள்ளிட்ட ,   மானுடவியல்,
கலாச்சாரம்,  வரலாறு,  கலை,  இலக்கியம்   ஆகிய பிறதுறைகளையும் ஓரங்
கட்டி பின்னுக்குத்தள்ளிவிட்டன!   நம்மில்    பெரும்பாலானவர்களுக்கு  விஞ்
ஞானம்  கண்டறிந்து சொல்லும்  "உண்மைகள்" வேறு;  விஞ்ஞானம் நமக்குக்
கொடுக்கும் பொருட்கள்(கருவிகள்,சாதனங்கள், உபகரணங்கள்) வேறு என்
பது தெரிவதில்லை!இவ்விரண்டு அம்சங்களிலும் அனுகூலங்களும் உள்ளன;
ஆபத்துகளும் அடங்கியுள்ளன!

விஞ்ஞான  உண்மைகள் ('இயற்கை விதிகள்' எனும் வடிவத்தில் ) இல்லாமல்,
யாதொரு தொழில்நுட்பச் சாதனமும் இல்லை. ஆம், விஞ்ஞானம் இல்லாமல்
அணுகுண்டுகளும் இல்லை, ஹைட்ரஜன்குண்டுகளும்  இல்லை!   ஆக,  விஞ்
ஞான  உண்மைகள்   சமன்பாடுகள் வடிவில்  கரும்பலகையில் எழுதப்படும்
போது  அவை சாதுவாக தோற்றம் தருகின்றன!  ஆனால்,  அவைகளை  நாம்
ஆய்வுக்கூடங்களில் செயல்படவைக்கும்போது அபாயகரமான அணுகுண்டு
களாக மாறிவிடுகின்றன! 1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பிரத்யேக சார்
பியல் கோட்பாட்டின் ஒருபகுதியாக, மிகக்குறைந்த அளவு பொருளிலிருந்து
பெருமளவு சக்தியை வெளிக்கொணரமுடியும் என்கிற, மறைந்துகிடந்தஒரு
பௌதீகஉண்மையை E=mc2 எனும் சமன்பாட்டின் மூலம் வெளிப்படுத்திட,
அது 40 வருடங்களில், @0530 ஜூலை,1945-ல், அணுகுண்டாக வளர்ந்து முதல்
பரிசோதனையிலேயே வெற்றிகரமாக வெடித்து தன் ஆற்றலை நிரூபித்துக்
காட்டியது!

நம்மைப் பொறுத்தவரை,   இக்கட்டுரையில்,    இப்போதைக்கு,  விஞ்ஞானம்
கண்டறிந்து  சொல்லும்   உண்மைகளில்   மறைந்திருக்கும்  ஆபத்துக்களை
மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம்;  தொழில் நுட்பத்தின் வழியாக
விஞ்ஞானம்  கொடுக்கின்ற  பொருட்களில்  அடங்கியுள்ள  சம்பத்துக்களை
யும், ஆபத்துக்களையும் பிறிதொருசமயத்தில் காண்போம்! சரி,விஞ்ஞானம்
கடந்த  400 ஆண்டுகளின் ஆராய்ச்சி முடிவுகளாக  அப்படி எத்தகைய அரிய
"பேருண்மைகளை" எடுத்துச் சொல்லிவிட்டன?

 பேருண்மை : 1
•  உலகம், பிரபஞ்சம் என்பது என்றென்றுமாய் இருக்கிறது!  அது மட்டுமே
        நிஜம், அடுத்து  பௌதீகச்சடப்பொருளே அனைத்திற்கும் அடித்தளம்,
        அதுவே மூல-மெய்ம்மை!

பேருண்மை : 2
•  உலகம், பிரபஞ்சம் அர்த்தமற்றது, குறிக்கோளற்றது!

பேருண்மை : 3
•  பரிணாமம் குறிக்கோளற்றது, மற்றும் அது ஒரு குருட்டு நிகழ்வுமுறை!

பேருண்மை : 4
•  மனிதன் என்பவன் பல விலங்கினங்களில் ஒரு விலங்கினம்!

பேருண்மை :5
•  (மனித)வாழ்க்கை  குறிக்கோளற்றது, மற்றும் அர்த்தமற்றது!

இவைதான், 400 ஆண்டுகளின்,   விஞ்ஞான-ஆராய்ச்சி முடிவுகளாக, உலகப்
புகழ்பெற்ற, நோபல் பரிசுபெற்ற பெரிய,பெரிய விஞ்ஞானிகள் கண்டறிந்து
விளம்பிய அரிய விஞ்ஞானப் பேருண்மைகள்! எவ்வளவு அற்புதமான அரும்
பெரும் வெளிப்பாடுகள்!

முதலிடத்தில்,   உலகம்,   பிரபஞ்சம் என்பது இருக்கிறது! அதை நாம் மறுக்க
வில்லை!   ஆனால்,  அது மட்டுமே நிஜம், அதாவது  பௌதீகச்சடப்பொருளே
மூல-மெய்ம்மை!   என்பது  'விஞ்ஞானிகள்'  என்று    சொல்லிக்கொள்கிறவர்
களின்   ஒரு  அக-வயமான கருத்தே,     விஞ்ஞானவகை மூட-நம்பிக்கையே!
இந்தத்  தவறான  தொடங்கு-புள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்களது ஆய்வு
கள் அபத்தமான முடிவுகளுக்குத்தான் இட்டுச்செல்லும்!

உலகம்,பிரபஞ்சம் மட்டுமே நிஜம்!பௌதீகச்சடப்பொருளே அனைத்திற்கும்
அடித்தளம்,  அதுவே  மூல-மெய்ம்மை!   உலகம்,   பிரபஞ்சம்   அர்த்தமற்றது,
குறிக்கோளற்றது!   பரிணாமம் குறிக்கோளற்றது,  மற்றும் அது ஒரு குருட்டு
நிகழ்வுமுறை! மனிதன் என்பவன் பல விலங்கினங்களில் ஒரு விலங்கினம்!
(மனித)வாழ்க்கை குறிக்கோளற்றது,மற்றும் அர்த்தமற்றது! இத்தகைய படு
அபத்தமான உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கு விஞ்ஞானிகள்
எதற்கு? விஞ்ஞானம் எதற்கு? இருத்தலியல்வாதிகளே (Existentialists)
போதுமே?ஆய்வுக்கூடங்கள்,நெடும் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், அதற்
கான ஒதுக்கு நிதிகள் (Funds) ஆகியவையெல்லாம் எதற்கு?

மேலே பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஐந்து அபத்தமான கூற்றுக்கள்,உண்மை
யில்  விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகளாக  இருக்க வாய்ப்பில்லை!  மாறாக,
ஆராய்ச்சிகளின் வழியாக திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து, சித்தாந்தச்சார்பு
கொண்ட   விஞ்ஞானிகளால்  தவறாகத்  திரித்துக்கூறப்பட்ட முடிவுகளாகத்
தான் இருக்கமுடியும்! இந்தலட்சணத்தில் இவ்விஞ்ஞானிகள் தத்துவத்தைக்
குறைகூறிக்கிளம்பிவிட்டார்கள்! 2,000 வருடங்களில் தத்துவம் முன்னேறவே
இல்லை; விஞ்ஞானம் மட்டும்தான் வளர்ந்துள்ளது, முன்னேறியுள்ளது என்று
சிறுபிள்ளைத்தனமாக புகார்சொல்லுகிறார்கள்!

ஒருவகையில்,  தத்துவச் சிந்தனையானது தொய்வடைந்து  காணப்படுவது
உண்மையே!   அதே நேரத்தில்,  "தத்துவம் செத்துவிட்டது!"  எனும்  ஸ்டீபென்
ஹாக்கிங்க்-ன் கூற்று அடிப்படையற்றது, அபத்தமானது. ஏனெனில்,விஞ்ஞா
னத்தைப்போல வழிவழியாகச் சேகரித்துத் திரட்டப்பட்ட அறிவுத்தொகுப்பி
லிருந்து கடன்வாங்கிய அறிவைக்கொண்டு தத்துவச்சிந்தனை  வளர்வதோ
முன்னேறுவதோ  இல்லை! ஏனெனில், தத்துவம் தொடர்ச்சியற்றது,  அதற்கு
வாரிசுகள்  கிடையாது!  அது சுயமாக சிந்திக்கும் தனிமனிதர்களின் அர்ப்ப
ணிக்கப்பட்ட  உணர்வில் மட்டுமே உயிர்வாழவும், வளரவும், வளர்ந்து,   கனி
கொடுக்கவும் கூடியது!  அது பல்கலைக்கழகங்களில்   பயிலக்கூடிய  பாடத்
துறையன்று!

இறுதி  உண்மை  (The Ultimate Truth) யைக்கண்டறிவதே   தத்துவம்
மற்றும் விஞ்ஞானம் இவ்விரண்டின் பொதுவான இலக்காக இருப்பதாக பல
காலமாக     பலராலும்  நம்பப்பட்டுவந்தது;   நானும்    அவ்வாறே   எண்ணிக்
கொண்டிருந்தேன்!   ஆனால்,  அது ஒரு தவறான புரிதல் என்பதை இப்போது
நான்  மிகத்தெளிவாகப்புரிந்துகொண்டேன்!   உண்மையில்  இவ்விரண்டின்
குறிக்கோளும்,  இலக்கும் வேறு வேறானவை யாகும்! இரண்டும் மனிதனின்
இரண்டு  வெவ்வேறு  தேவைகளை  நிறைவுசெய்யும் பொருட்டு, தோன்றிய
வையாகும்!

தத்துவம்   மனிதனின் அகத்தேவையான ஆன்மீகத்தேவையை நிறைவேற்
றும்   பொருட்டு   அறியாமையின் கரையிலிருந்து   "ஞானம்"  எனும் இறுதிக்
கரைக்கு  இட்டுச்செல்லும்  வழிகாட்டியாகும்!   பிரபஞ்சம்  எனும் புறவுலகம்,
மனிதன்   எனும்   அகவுலகம்  இவ்விரண்டையும் உள்ளடக்கிய  "வாழ்க்கை"
எனும்   முழுமையின்  உண்மையை  அறிவதே    தத்துவத்தின்   இலக்காகும்!
ஆனால்,    முழுமையின்   பகுதியான புறவுலகின்    உண்மையை      அறிவது
மட்டுமே   விஞ்ஞானத்தின்   இலக்காகும்!   எவ்வொரு   விஞ்ஞானமும்  அடிப்
படைக்கேள்விகளை   எழுப்பி,   அதாவது    தத்துவமாகத்தொடங்கி,    விபர-
உண்மைகளைத் (Facts)திரட்டி,  அவற்றைக்கொண்டு  கோட்பாடுகளைப்
பின்னி,   முடிவில்    தொழில் நுட்பத்தில் (Technology) முடிந்துவிடுகிறது!
விஞ்ஞானம்    மனிதனின் புறத்தேவைகளான    நடைமுறைத்தேவைகளை,
அதாவது  லௌகீகத்தேவைகளை   நிறைவேற்றும் விசுவாசமிக்க சேவகன்
ஆகும்!

தத்துவம்      புறவுலகையும்,   லௌகீக வாழ்க்கையையும்     மறுப்பதில்லை.
மாறாக,   அவற்றைக்கடந்து செல்கிறது. விஞ்ஞானம் அறிந்த,  கண்ணுக்குத்
தெரிகிற  உலக-விருட்சத்தின்   வேர்களில்   உண்மையைத்தேடிக்கொண்டு
இருக்கிறது!   தத்துவமோ   உலக-விருட்சத்தின்  உச்சியில்   அதன்  கனியில்
உண்மையைக் கண்டடைகிறது!

உண்மை என்பது உள்ளதை,   உலகை,  உய்த்துணர்ந்து அறியப்படுவதாகும்!
அவ்வாறு  உய்த்துணரப்பட்ட  உண்மை,  உய்த்துணரும்  (மனித) உணர்வின்
(மையமான) பகுதியாக  உருப்பெறுகிறதே தவிர,  அவ்வுண்மை ஒருபோதும்
பரு-உலகின்  பகுதியாக  இருப்பதில்லை!   ஆம்,   உலகைப்பற்றிய உண்மை
உலகைச்சேர்ந்தது அல்ல!

     •இக்கட்டுரைக்குத் தொடர்பான பிற கட்டுரைகளுக்கு காண்க எனது
                வலைத்தளம்   vicharamarg.blogspot.in

மா.கணேசன்/ நெய்வேலி/ 23.11.2016
----------------------------------------------------------------------------



ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...