Wednesday, 25 January 2017

நீங்கள் இருக்கிறீர்கள்!






இருப்பின் இரகசியம்
முடிவில்லாது அதிசயிக்கும்
உணர்வில் உள்ளது!

   \•/

நீங்கள் இருக்கிறீர்கள்
என்பது முதல் அற்புதம்!
அதை அறிவது
இரண்டாவது அற்புதம்!
நீங்கள் இருக்கிறீர்கள்
என்பதை
முழுமையாக உணர்வு
கொள்வது
இறுதி அற்புதம்!
அதுவே விழிப்பு.

  \•/

நீங்கள் இருக்கிறீர்கள்
என்பது ஒரு உணர்வல்ல;
அந்த உணர்வே தான்
நீங்கள்!

  \•/

தனது இருப்பே மனிதனது
முழு கவனிப்பிற்கும்
அக்கறைக்கும்
உரிய
ஒரே அற்புதம் ஆகும்!
மனிதன் எனும் புதிருக்கு
தன்னை முழுவதுமாகத்
திறந்திருப்பதொன்றே
மனிதனின் சிறந்த
முயற்சியாக
இருக்க முடியும்!

  \•/

நீங்கள் இருக்கிறீர்கள்
என்பது ஒரு அற்புதம்!
அதற்கு மேல் நீங்கள்
எப்படி என்னவாக
எங்கே இருக்கிறீர்கள்
என்ன செய்கிறீர்கள்
என்பதெதுவும் அந்த
அற்புதத்தைச் சிறிதும்
கூட்டுவதுமில்லை!
குறைப்பதுமில்லை!

  \•/

எவ்வொரு குறிப்பிட்ட
நிலையிலும்
இடத்திலும்
நேரத்திலும்
இருப்பிற்கு
தீவிரமாகவும்
முழுமையாகவும்
பதிலளிப்பதொன்றே
முக்கியம்!

  \•/

"நீங்கள் இருக்கிறீர்கள்!"
என்பதை
ஓரு அற்புதமாக நீங்கள்
உணரவில்லையெனில்
மிகவும் முக்கியமான ஒன்றை
இழந்து விட்டீர்கள் என்றுதான்
சொல்லவேண்டும்!
வேறு எதைக்கொண்டும்
இன்னும் எல்லாவற்றையும்
கொண்டும் ஈடுசெய்ய முடியாத
அரிய பொக்கிஷத்தை
உங்கள் கவனக்குறைவினால்
கண்டும் காணாமல்
கடந்து சென்று விட்டீர்கள்.

நீங்கள் இழந்தது எதை
என்பதைக் கண்டுபிடிப்பதற்குள்
உங்கள் ஆயுட்காலம்
முடிந்தேவிடும்!
மேலும் எவரும் அதுபற்றி
எடுத்துச் சொன்னாலும்
உங்களால் ஒருபோதும்
அதைக்கண்டு பிடிக்க
இயலாது!

  \•/

"நீங்கள் இருக்கிறீர்கள்!"
என்பது உங்களுக்குத்தெரியும்.
"ஆனால், அதிலென்ன அதிசயம்?"
என்கிறீர்கள்.
அதனால்தான் சொல்கிறேன்
"நீங்கள் இருக்கிறீர்கள்!"
என்பதை  இன்னும் நீங்கள்
கண்டுபிடிக்கவேயில்லை
என்கிறேன்!
கண்டுபிடித்திருந்தால்
இப்படி அலட்சியமாகப்
பேச மாட்டீர்கள்.

  \•/

மனிதனின் ஒரே சீரிய தொழில்
"தான் யார்?" எனும் உண்மையைக்
கண்டுபிடிப்பது தான்!
இதுவொன்றே (யாவற்றிற்கும்)
அர்த்தம் தரும் செயல்பாடாகும்.

  \•/

"நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்"
என்பதற்கும்
"நீங்கள்  இருக்கிறீர்கள்!"
என்பதற்கும்
மாபெரும் வித்தியாசம் உள்ளது!
உயிரோடு இருப்பது என்பது
ஒரு உயிரியல் நிஜம்
எலிகளும் தவளைகளும் கூடத்தான்
உயிரோடிருக்கின்றன!
எனினும்  "தாம் இருக்கிறோம்!"
என்பதை அவை உணர்வதில்லை
உணரவும் வழியில்லை!
உயிரோடிருந்தென்ன?
உணரப்படாத இருப்பு குறையிருப்பே!
ஆனால், "நீங்கள்  இருக்கிறீர்கள்!"
என்பது  உமது உயிர்-இருப்பைக்
கடந்த ஒரு உணர்வுபூர்வ நிஜம்!
ஆனால், அதில் நீங்கள்
பங்கு பெறுவதில்லை - ஏனெனில்
நீங்கள் இன்னும் உணர்வுக்கு
வரவேயில்லை!

  \•/

நீர் "உயிரோடிருக்கிறீர் !"
என்பதை மட்டுமே அறிகிறீர்
ஆகவே தொடர்ந்து உயிரோடிருக்க
என்னவெல்லாம் செய்யவேண்டுமோ
அவற்றையெல்லாம் செய்கிறீர்!
விரைவாகவோ சற்று தாமதமாகவோ
மரணம் வந்தே தீரும் என்பதறிந்தும்
தொடர்ந்து உயிர்-இருப்பை விடாது
பற்றிக்கொள்கிறீர்!
அதிலேயே உம்மை முற்றாக
முதலீடு செய்திடுகிறீர்!
இதுதான் உமது மாபெரும்
மட்டுப்பாடு!

  \•/

நீங்கள் போகும் பாதையில்
பேராபத்து காத்திருக்கிறது
என்பது தெரிந்தும்
இன்னும் நீங்கள்
உணர்வுக்கு வராதது
பேராச்சரியம் தான்!

  \•/

பரிணாம இயற்கையின்
பரிசான உயிர்-இருப்பு
என்பது வெறும் கையிருப்பு
போலத்தான்!
அதன்  வீச்சு உச்சம்
மாற்று-மதிப்பு
என்னவென்று பாருங்கள்
உடனே!
காலம் கடந்துபோவதற்குள்
உணர்வு கொள்ளுங்கள்
இருப்பை வாழ்க்கையாக
மாற்றுங்கள்
இப்போதே!

  \•/

நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள்!

வளமுடனோ அல்லது
வறுமையிலோ இருக்கிறீர்கள்!

நோயுற்றோ அல்லது
நோயற்றோ இருக்கிறீர்கள்!

சிலர் மிகவும் சொகுசாக
ஆடம்பரமாக இருக்கிறீர்கள்!

நீங்கள் நல்லவராகவோ
அல்லது கெட்டவராகவோ
இருக்கிறீகள்!

ஆம், இருக்கிறீர்கள் - ஆனால்
என்ன துரதிருஷ்டம்!

நீங்கள் எவருமே வாழவில்லை!

  \•/

ஆம், வெறுமனே உயிரோடு
இருக்காதீர்கள்!
உணர்வோடிருங்கள்!
உணர்வோடிருப்பதும் போதாது!
முழு-உணர்வை அடையுங்கள்!
அதற்குக் குறைவான எதுவும்
மரணமே!

  \•/

இருப்பு முற்றிலும்
உயிரோடிருத்தலைச்
சார்ந்ததல்ல - என்பதால் தான்
நீங்கள் இறந்தாலும்
மீண்டும் மீண்டும் பிறப்பது
சாத்தியமாகிறது!

  \•/

முதலில் உணர்வுக்கு வாருங்கள்!
பிறகு என்னவேண்டுமானாலும்
செய்யுங்கள்
எப்படி வேண்டுமானாலும்
வாழுங்கள்!!

  \•/

விரைவாகவோ சற்று தாமதமாகவோ
முடிவிற்கு வந்துவிடும் உமது உயிர்-இருப்பில்
அதிகம் முதலீடு செய்யாதீர்!
மாறாக, உணர்வில், உணர்வின்- இருப்பில்
முழுமையாக முதலீடு செய்யுங்கள்
அதனால் அதிகமாகத் திரும்பப்பெறுவீர்
ஆம், மரணம்-கடந்த-பேரிருப்பை அடைவீர்!

  \•/

உமது மரணத்திற்கு முன்னேயே
பேரிருப்பைச் சுவைக்காவிடில்
நீங்கள் இருந்தாலும் இறந்தாலும்
இரண்டுமே  ஒன்றுதான்!

  \•/

"உணர்வோடிருப்பது
என்றால் என்ன?"
என்று உங்களையே கேட்டுப்
பாருங்கள் - எந்தப்
பதிலும் வரவில்லை, ஒரு
சிந்தனையும் எழவில்லையா?!
அது தான் உணர்வு
அதனுடன் இருங்கள்!

  \•/

"நீங்கள்  இருக்கிறீர்கள்!"
ஆனால், அரையும் குறையுமாக!
முழுமையடைவதற்காகவும்
பூரணமடைவதற்காகவும் தான்
நீங்கள் இங்கு இருக்கிறீகள்!
முழுமையாகவும் பூரணமாகவும்
நீங்கள் இருந்தால்  இங்கு
தோன்றியிருக்க மாட்டீரகள்!
          •
"நீங்கள்  இருக்கிறீர்கள்!"
அதுவே பெரும் துன்பத்திற்கும்
பேரின்பத்திற்கும் அடிப்படை!
இயற்கையளித்த இருப்பை
உணர்வின்றி அப்படியே தழுவிக்
கொள்வதற்கும்
உணர்வு கொண்டு இருப்பின்
உண்மையை உய்த்துணர்வதற்கும்
உள்ள வித்தியாசம்
மரணத்திற்கும் நித்தியவாழ்விற்கும்
உள்ளதாகும்!
           •
உண்மையான தொடக்கம்
நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை
உணர்ந்திடும் போது தான்
தொடங்குகிறது!
அதற்கு முன் இருப்பவை யாவும்
இதற்கான வெறும் முன்-தயாரிப்பே!
தன்னைக் கண்டடைதல்
முழுமையடையும்  அக்கணம்
அதுவே அனைத்தின் முடிவும்!
அதற்கு முன்  இருந்தவை
முக்கியமல்ல!
அதற்குப்பின் எதுவுமில்லை!

  \•/    \•/
   /\    /\
 
மா.கணேசன்/நெய்வேலி/ (18.06.2011) & 24.01.2017
----------------------------------------------------------------------------

Tuesday, 24 January 2017

நீங்கள் உண்மையிலேயே இருக்கிறீர்களா? (Liberation Unleashed DEBUNKED!)






      " நீங்கள் உண்மையிலேயே இருக்கிறீர்களா? நான் என்பது
        இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகளை நாம் அதிகம்
        கேட்டுக்கொள்வதில்லை. 'நான்' என்ற தனியான சுயம்
        ஒன்று இல்லை என்பதைத்திட்டவட்டமாக மறுக்கிறது
        'லிபரேஷன் அன்லீஷ்ட்' இணையதளம். 2011-ம் ஆண்டு
        செப்டம்பர் 17-ம் தேதி  அன்று இலோனா சிவுநைட் மற்றும்
        எலினா நெலின்ஸ்கி ஆகியோரால் தொடங்கப்பட்ட  இந்த
        இணையதளம், தனிமனம் மற்றும் தனிச்சுயம் என்ற
        மாயைகளிலிருந்துவிடுபடும் வழிகளை தன்னார்வலர்கள்
        வழியாகவும், இணையக்குழுக்களின் உரையாடல்கள்,
        முகநூல் குழுக்கள், வலைப்பூக்கள் வழியாகவும், செய்து
        கொண்டிருக்கிறது. நாம் நமக்குள் பார்க்கும் தைரியமும்,
        ஆர்வமுமிருந்தால் அதற்கான வழிகாட்டுதல்கள் இதில்
        உள்ளன . . . . . . .  "
           
            - தி இந்து தமிழ் நாளிதழ், வியாழன், ஜனவரி 19, 2017
             
                   <<•>>

"கட்டவிழ்க்கப்பட்ட விடுதலை" அல்லது "விடுதலை கட்டவிழ்க்கப்பட்டது"
(Liberation Unleashed) என்ற பெயரிலான இந்த இணையதளத்தின்
நிறுவனர் இலோனா சிவுநைட் (Ilona Ciunaite) எனும் (இங்கிலாந்து)
பெண்மனி ஆவார்.

     "இந்த  உலகத்தின் இயற்கையிலிருந்து நாம் தனித்தவர்கள் என்ற
      மாயையிலிருந்து விடுபட்ட அனுபவத்தைப்பெற்ற மக்களுக்கான
      உலகளாவிய வலைப்பின்னல் இது. இந்த விழிப்புணர்வை அடைந்த
      வர்கள் பிறரோடு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்
      தளம் இது."              - லிபரேஷன் அன்லீஷ்ட்

என்று சொல்லப்படுகிறது.  ஒரு முதல்  பார்வையில்,  உடனடியாகச் சொல்ல
வேண்டும் என்றால்,  இவரது தத்துவம் (அல்லது அதன் அடிப்படை) புதிதல்ல;
ஆனால்,  அவரது  விளக்கம் புதியது.  அதே நேரத்தில்,  அவரது தத்துவ முடிவு
கள் தலைகீழானவை, ஏனெனில், அவை எதிர்மறையானவை!

"இந்த  உலகத்தின்  இயற்கையிலிருந்து  நாம்  தனித்தவர்கள்  என்ற  மாயை
யிலிருந்து  விடுபட்ட  அனுபவத்தைப் பெறுவது"   என்பது வேறு;   அதற்காக,
"தனிச்சுயம்"  என்பது  இல்லை;  "நான்"  என்று  எதுவுமில்லை  என்றெல்லாம்
சொல்வது தவறு!  இந்த உலகம் இருக்கிறது,   இயற்கை  இருக்கிறது,  அதில்,
நீங்கள்  இருக்கிறீர்கள்;    நானும்  இருக்கிறேன்,     எல்லாம்     இருக்கின்றன!
ஆனால்,   உலகம்,  இயற்கை  என்பதென்ன?  நான்  எத்தகைய   மெய்ம்மை?
நான் ஏன் எதற்காக,எத்தகைய குறிக்கோளுக்காக இருக்கிறேன்?வாழ்க்கை
என்றால்  என்ன?  வாழ்க்கையின் குறிக்கோள்,  அர்த்தம்,  உண்மை,  இலக்கு
யாவை? போன்ற இந்த அடிப்படைக்கேள்விகளுக்கான பதில்களைக்கண்டு
பிடிப்பது முக்கியமாகும்!

உண்மையில் தான்  'யார்'  அல்லது  'என்ன'  என்பதை ஒவ்வொரு மனிதனும் கண்டுபிடித்தாக வேண்டியது  மிகவும்  தலையாய  விஷயம்  ஆகும்!  இல்லா
விடில்,  ஒருவனது  "நான்"  என்பது வெறும் ஒரு புகைமூட்டமான கோட்பாடே;
ஒருவனது "சுயம்" என்பது வெறும் ஒரு சொந்தப் புனைவே யாகும்! அதாவது,
"நான்" என்பதும், "சுயம்" என்பதும் இருக்கவே செய்கின்றன; ஆனால், அவை
எவ்வகையிலும்  முழுமையானவையோ,  இறுதியானவையோ  அல்ல! இந்த
மட்டுப்பாடுதான் பிரச்சினையே தவிர; அம்மட்டுப்பாட்டைக் களைவதற்குப்
பதிலாக,  "நான்" என்பதை, "சுயம்" என்பதை மறுப்பதும், அல்லது  அவற்றை
விளக்கிக் காலிசெய்வதும் தீர்வாகிடாது!
                   
                   <•>
 
    "நேரடியாகத் துல்லியமாகப் பார்க்கவைப்பதற்குப் பதில், ஞானத்தை
     நோக்கிய ஒருவரின் பயணம்,அடர்த்தியான எதிர்பார்ப்புகளாலும்,
     கதைகளாலும் பின்னப்பப்பட்டதுதான் அந்தப்பாதைக்குத்தடையாகிப்
     போகிறது. இந்த எதிர்பார்ப்பு அனைத்தையும் அடுக்கி அவையெதுவும்
     இல்லையென்பதை உணரச்செய்வதே இதன் முதல்படி.

      இது அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கான வழியல்ல.
      கூடுதலாக எதையும் பெறுவதோ சிறப்பானவராக ஆவதோ இதன்
      நோக்கம் அல்ல. மேலான, அதி உன்னதமான பிரக்ஞை நிலையையும்
      இதனால் எட்டிவிட முடியாது.

      சில குறிப்பிட்ட கருத்தோட்டங்களை நம்புவதற்கு மனதைப்பழக்கும்
      தந்திரமும் இதில் கிடையாது. குறிப்பிட்ட அறிவை இதன் மூலம் பெற
      முடியாது. இதன் மூலம் புனிதமாகவோ, அருமையானவராகவோ,
      ஒழுக்கமானவராகவோ, நல்ல மனிதராகவோ மாறிவிட முடியாது.
      இது நம்பிக்கையோ, சமயமோ, தத்துவமோ, மாயாவாதமோ
      கிடையாது. பணமோ, பொருளோ இதனால் சேராது. இது சுய
      முன்னேற்றத்திட்டமும் அல்ல."  -லிபரேஷன் அன்லீஷ்ட்

நேரடியாகத்  துல்லியமாகப்  பார்ப்பது  என்பது மிகச்சரியான அணுகுமுறை
தான் என்பதில்  ஐயமில்லை!  மேலும், ஞானத்தை நேரடியாகத்தேடுவது என்
பது சரியானதல்ல என்பதும் சரியே!ஏனெனில்,முதலில் கவனிக்கவேண்டிய
விஷயங்களை  முதலில் கவனிக்காமல் ஞானத்தையோ, உண்மையையோ
தேடுவது என்பது அடித்தளம் இல்லாமல் கட்டடம்  கட்டுவதற்குச் சமமாகும்!

"இது   அன்றாட  வாழ்க்கையிலிருந்து   தப்பிப்பதற்கான  வழியல்ல."   என்ற
குறிப்பு     சற்று   பொருத்தமற்றதாக   ஒலிக்கிறது!      ஏனெனில்,     அன்றாட
வாழ்க்கை   என்பது  ஒட்டுமொத்த  வாழ்க்கையில்  எவ்விடத்தில்  பொருந்து
கிறது;  அதன் பங்கு, பணி, பாத்திரம், அளவு எத்தகையது என்பதைப் புரிந்து
கொள்ளாமல்,  வெறுமனே  அன்றாட வாழ்க்கையை மேன்மைப்படுத்த முடி
யாது!  அதே வேளையில்,   அன்றாட வாழ்க்கை  என்பது பெரும் அசம்பாவித
மாக  வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்வதாயிருக்கும் பட்சத்
தில்  அதனிடமிருந்து  தப்பிப்பது என்பது ஒவ்வொருவரும் உடனடியாக மேற்
கொள்ள வேண்டிய  அவசர அவசியம் ஆகும்!  மேலும்,  அன்றாட வாழ்க்கை
என்று  தனியேயும்,  ஆன்மீக வாழ்க்கை என்று தனியேயும்  ஏதுமில்லை! ஒரு
வகையில், உயிர்வாழ்தலைப்பற்றியதுதான் அன்றாடவாழ்க்கையென்றால்,
அது   தவிர்க்கவியலாததும்   தப்பிக்கமுடியாததுமாகும்!    அவ்வாறு   தப்பிச்
செல்பவர்கள்    போதைப் பழக்கத்திற்கு  ஆளானவர்களும்,   மன-நோயால்
பாதிக்கப்பட்டவர்களும்,     உழைப்புச்   சோம்பேறிகளுமாகத்தான்   இருக்க
முடியும்!

      "கூடுதலாக எதையும் பெறுவதோ சிறப்பானவராக ஆவதோ இதன்
       நோக்கம் அல்ல. மேலான, அதி உன்னதமான பிரக்ஞை நிலையையும்
       இதனால் எட்டிவிட முடியாது."  -லிபரேஷன் அன்லீஷ்ட்

ஆன்மீகத்தின் இலக்கு எதையேனும் பெறுவதையோ, சிறப்பானவராக ஆவ
தையோ பற்றியதல்ல என்பது சரியே!  ஆனால்,  எவ்வொரு  பயணத்திற்கும்
போய்ச் சேரும் இடம், ஒரு இலக்கு என்று ஒன்று உண்டென்பதால், ஆன்மீகத்
திற்கும்  அத்தகைய  ஒரு  இலக்கு  உண்டு!   அதை   நாம் முழுமையடைதல்,
ஞானமடைதல், விழிப்படைதல்,  முக்தி அல்லது  வீடுபேறு அடைதல் . . . .என்
றெல்லாம் குறிப்பிடலாம்! ஆனால், இலோனா சிவுநைட்-ன் "விடுதலை  கட்ட
விழ்க்கப்பட்டது"   எனும் இயக்கம்  தனது  மட்டுப்பாடுகளை  நன்கு  உணர்ந்
துள்ளதாகத் தெரிகிறது.   ஆகவே தான் அது,   "மேலான,   அதி உன்னதமான
பிரக்ஞை  நிலையையும்  இதனால்  எட்டிவிட  முடியாது."  என்று   கூறுகிறது!
போலியான வாக்குறுதிகளை அளிப்பதைவிட இது ஒரு நல்ல, நேர்மையான
விஷயமாகும்!  அதே நேரத்தில்,  உள்ளது மனித-உணர்வு மாத்திரமே;  மனித
உணர்வைக்கடந்த வேறு எவ்வித உயர்-உணர்வு நிலைகளும்  இல்லை என்ப
தாக அது சொல்லுமெனில், அவ்வழியைப்பின்பற்றுவது பயனற்றதாகும்!

மேலே  மேற்கோள் காட்டப்பட்டுள்ள மூன்று பத்தியில், மூன்றாம் பத்தியில்
சொல்லப்பட்ட  விஷயங்களில் பெரிதாக முரண்பாடுகள் இல்லை எனலாம்!

                     <•>

    "நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறைபாட்டை
     உணர்பவர்களாக இருக்கிறோம். ஆனால் அது சரியான உணர்வல்ல.
     இந்த உணர்விலிருந்து வெளியேறுவதற்கு வெவ்வேறு பாதைகளைத்
     தேடுகிறோம். நாம் முழுமையடைய முடியும் என்று நம்புகிறோம்

     இந்தப்பாதையில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 'நான் யார்' என்ற
     கேள்வி வரும். அது தெளிவானவுடன் இந்த  உலகில், உறவுகளில்,
     உடைமைகளில் , அனுபவங்களில் எதிலும் இந்த முழுமையில்லை
     என்று தெரிகிறது. அப்போது தேடல் உள்ளே திரும்புகிறது.
                                                           -  லிபரேஷன் அன்லீஷ்ட்

'வாழ்க்கையில் ஏதோவொன்று குறைகிறது, ஏதோவொன்று முற்றிலுமாகச்
சரியில்லை'  என்ற  உணர்வு எதைக்குறிக்கிறது என்பது தெரியாமல், ஏதாவ
தொரு  வழியைத் தேடித்  தேர்வுசெய்து  அவ்வழியில்  பயணிப்பது  என்பது,
ஒருபோதும் மனிதனைப் பூர்த்தி செய்திடாது என்பது சரியான  பார்வையே!
ஆனால்,   தமது தேடலில்,   அதிர்ஷ்டமுள்ள   ஒருவனுக்கு,  'நான் யார்'  என்ற
கேள்வி  வரும்  என்பதும்,  அது  தெளிவானவுடன்  இந்த   உலகில்,  உறவுகள்,
உடமைகள், அனுபவங்கள்  எதுவும் ஒருவனைப் பூர்த்தி செய்திடாது என்பது
தெரிய வரும் என்பதும்,  அப்போது   தேடல்  உள்ளே  திரும்புகிறது  என்பதும்
வெறும் (போதைக் குழாய்க்)கனவே (Pipe-dream)ஆகும்!

முதலிடத்தில்,   வாழ்க்கை  பற்றிய  புரிதல்  இல்லையெனில்,  ஒட்டுமொத்த
வாழ்க்கையையும்  ஒருவன்  இழந்து விட்டான்  என்றுதான்  அர்த்தம்;  ஏதோ
வாழ்க்கையில்  ஒரு குறை,  அல்லது  இரண்டு குறைகள்தான் என்பதில்லை!
அடுத்து,  'தமது  தேடலில்,  அதிர்ஷ்டமுள்ள   ஒருவனுக்கு,  'நான் யார்'  என்ற
கேள்வி வரும்'  என்பது, "வாழ்க்கையே  ஒரு பெரும் சூதாட்டம்" என்று சொல்
வதாகத் தெரிகிறது! இப்பார்வை அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்
ஆகும்! பரவலாக,  பெரும்பாலான ஆன்மீக மார்க்கங்கள் தோற்றுப்போகும்
பிரதான அம்சம்  இதுதான்.  அதாவது,  'நான் யார்'  என்ற  கேள்வி,  அதிர்ஷ்ட
முள்ள  ஓரிரு  சாதகனுக்கு  மட்டுமே வாய்க்கும் என்பது அபத்தமான கூற்று
ஆகும்!  ஏனெனில்,  ஒருவன்   தன்னை  நோக்கி விழிப்பது,  தன்னைக் கண்ட
டைவது,  உணர்வை  உணர்வுகொள்வது, உணர்வுக்கு வருவது  என்பதுதான்
ஆன்மீகத்தின்  முதற்படியும்  முடிவான படியும் ஆகும்!  அதாவது,  விழிப்பை
யும்,   உணர்வுக்கு  வருவதையும்    ஒருவர்  இன்னொருவருக்குக்   கற்றுத்தர
இயலாது! இது புதிரிலும் புதிரான அம்சமாகும்! அதாவது, விழிப்பதும் உணர்
வுக்கு வருவதும் ஒருவரது அதிர்ஷ்டத்தைப்பொறுத்த விஷயம் அல்ல!

                       <•>

         "அப்போது (தேடல் உள்ளே திரும்பும் போது) தான் சுயம் என்பது
         பற்றிய கேள்வி வருகிறது. யார் அல்லது எது இந்த முழுமையையும்,
         விடுதலையையும் தேடுகிறது?  இங்கே தான் 'லிபரேஷன் அன்லீஷ்ட்'
         தலையிடுகிறது. ஒரேயொரு கணம் உங்கள் மனதைத் தொந்தரவு
         செய்பவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் சுயம் என்று
         நினைத்திருக்கும் அம்சத்தை உற்றுப்பாருங்கள். அந்தக் கற்பனை
         செய்யப்பட்ட மனசுயத்தை நீங்கள் நேரடியாகவும் நேர்மையுடனும்
         பார்த்தால் , சுயம் என்பதே இல்லை என்பதோடு அப்படி ஒன்று
         இருந்ததே இல்லை என்பதும் தெரியவரும். அதை ஒரு கோட்பாட்டு
         சாத்தியமாக மட்டும் ஏற்றுக்கொள்ளாமல், அப்பட்டமாகப் பார்க்கும்
         போது 'தனியான மனச்சுயம்' என்பதின் மீதான நம்பிக்கை
         படிப்படியாக விழத்தொடங்கிவிடும். நமது இயற்கையான இருப்பு
         நிலையை உணரமுடியும்.

         இந்த  மனச்சுயம் சார்ந்த மாயையிலிருந்து விடுபடுவதைத் தான்
         நாங்கள் விடுதலை என் கிறோம்."     -லிபரேஷன் அன்லீஷ்ட்

மேலே   சொல்லப்பட்டிருக்கும்  விஷயங்கள்   யாவும்  பெரிதும்  முன்னுக்குப்
பின் முரணானவைகளாகும்.  விஷயங்கள் ஒன்றும் அவ்வளவு எளிதானவை
யல்ல! சொற்களை இப்படியும் அப்படியுமாக மாற்றிப்போடுவதன் வழியாக
மாற்றங்களைச்  செய்து விட  முடியாது.   முதலில்,   அவர்களின்  கூற்றுப்படி
தேடல் உள்ளே திரும்புவதற்கு  ஒருவனுக்கு அதிர்ஷ்டம் வேண்டும்!  மேலும்,
தேடலும்   தேடுபவனும்   ஒன்றாயிருக்கும்  பட்சத்தில்   அவன்    ஒருபோதும்
தன்னை  இழக்கும்  பாதையில்  செல்லமாட்டான்;   அப்படியே  சென்றாலும்,
எல்லா வகைகளிலும்    தன்னைக்   காப்பாற்றிக்   கொள்ளவே    செய்வான்!
ஆகவே ஒருவன் ஒருபோதும் உள்முகமாகத் திரும்பவே மாட்டான்! அதாவது
ஒவ்வொரு  கணமும்  விழிப்பதற்கான  கணமாகவே உள்ளதாகையால்,  ஒரு
வன் அதை மிகச்சாதுர்யமாகத் தவிர்த்துவிடுவான்!ஒருவனுள் சுயம் பற்றிய
கேள்வி  எழவேண்டுமானால்,  எவ்வாறேனும்  அவன் 'தான்  இதுதான்!' எனத்
தாமே புனைந்துகொண்ட சுயத்தைக் கடந்து சென்றிட வேண்டும், அதாவது
அவன்  உணர்வுக்கு  வந்தாக  வேண்டும்!  அப்போதுதான் அவனுக்குச் சுயம்
பற்றிய கேள்வி தோன்றும்!

அடுத்து,  ' ஒரேயொரு  கணம்  உங்கள்  மனதைத் தொந்தரவு செய்பவற்றை
யெல்லாம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் சுயம் என்று நினைத்திருக்கும் அம்சத்தை
உற்றுப்பாருங்கள்.'  எனும்  வேண்டுகோள்  மிகக்கடினமான,  சாத்தியமற்ற
கோரிக்கை (Tall order)ஆகும்!  மேலும், 'அந்தக் கற்பனை செய்யப்பட்ட
மனசுயத்தை நீங்கள் நேரடியாகவும் நேர்மையுடனும் பார்த்தால், சுயம்   என்
பதே இல்லை  என்பதோடு அப்படி ஒன்று இருந்ததே இல்லை என்பதும் தெரி
யவரும்.'  எனும் கூற்று சாத்தியமற்றதும், தன்னகத்தே நீக்கமுடியாத  குறை களைக்  கொண்டதுமாகும்.  அதாவது,  'சுயம்  என்று  ஒன்று  உள்ளது!  எனும்
தவறைச்  சுட்டிக்காட்டி  அதைப் போக்க  முயன்று தானும் அதே பொறியில்
வீழ்ந்த்துவிட்டது என்பதையே அது குறிக்கிறது! முதலில்,எவ்வொரு விஷயத்
தையும்    நேரடியாகவும்  நேர்மையுடனும்   பார்த்தல்   என்பது   விழிப்பின்றி
சாத்தியமில்லை!     அடுத்து,   ஒருவேளை   அப்படிப்  பார்க்கமுடியும்  போது,
'சுயம்  என்பதே இல்லை என்பதோடு அப்படி ஒன்று  இருந்ததே இல்லை  என்
பதும்  தெரியவரும்'   என்றால்,  அது  யாருக்கு,  அல்லது,  எந்த   சுயத்திற்குத்
தெரியவரும்?  என்ற  கேள்வி  அங்கே தொக்கி நிற்கிறது!   'லிபரேஷன்  அன்
லீஷ்ட்' குழுவினர்  "சுயமற்ற சுயம்" அல்லது, "இயற்கையான இருப்பு நிலை"
போன்ற கற்பனையான எதையேனும் மனதிற்கொண்டிருக்கலாம்!

ஆனால், உணர்வு என்பது இருந்தால்,அதைச்சுற்றி சுயம் என்பது உருவாவது
தவிர்க்கவியலாமல் நிகழ்ந்தேறும்! மிகத்தெளிவான (சுய)உணர்வு இல்லாத
எலிகளுக்கும்,தவளைகளுக்கும் தான் 'சுயம்' என்பதிருக்க முடியாது!  உணர்
வுள்ள  மனிதனால்  சுயமில்லாமல் இருக்கமுடியாது!  சுயம்  என்பது தொடக்
கத்தில்    ஒரு  புராணிகப்  புனைவாகத்தான்  உருவாகிறது.  பிறகு   உணர்வு
வளர்ச்சிக்கேற்ப  சுயமும்  புதுப்புது வார்ப்பில் இடப்பட்டு  வளர்த்தெடுக்கப்
படுகிறது!  'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினரின் நிகழ்ச்சிநிரலில் (Agenda)
உணர்வுப் பரிணாமத்திற்கு (Evolution of Consciousness)இடமில்லா
தது   வருத்தத்திற்குரியதாகும்!  மேலும்,  அவர்களிடம்   பரிணாமப் பார்வை
இருப்பதற்கான அடையாளம்  எதுவும் தென்படவில்லை; அதுவே அவர்களது
புரிதலில் உள்ள பெரும் ஓட்டைக்குக் காரணமாகும்!

மேற் குறிப்பிட்ட     அதே பத்தியில்,   அவர்கள்  மனிதனின்    'இயற்கையான
இருப்பு நிலை'  பற்றிப்பேசுகிறார்கள்.  ஆனால், சுயமற்ற நிலை தான் மனித
னின்  'இயற்கையான இருப்புநிலை' என்றால்,  மனிதனுக்கும், தவளைக்கும்
வித்தியாசம்   இல்லையென்றாகிவிடும்!     உயிரற்ற  கூழாங்கல் சட-இருப்பு
நிலையைச் சேர்ந்தது;  உயிருள்ள  தவளை உயிர்-இருப்புநிலையைச்  சேர்ந்
தது; உணர்வுள்ள  மனிதன் உணர்வு-இருப்பு நிலையைச் சேர்ந்தவனாவான்.
அதாவது, உணர்வு நிலையைப்பற்றிக் குறிப்பிடாமல், வெறும் இருப்புநிலை
பற்றிப்பேச முடியாது. உணர்வு இருந்தால், அதைச்சுற்றி சுயம் என்பது அமை
யவே  செய்யும்!  அதே வேளையில்,  மெய்ம்மைக்குத்   தொடர்பு  இல்லாமல்,
அல்லது தொடர்பு படுத்தாமல், தான் தோன்றித்தனமாக சுயம் என்பது கட்ட
மைக்கப்படுமானால்,   அது  மிகவும்   அர்த்தமற்றதாகவும்,    மட்டுப்பாடான
வகையிலும் தான் அமையும்.

சுயத்தின் இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியாகச் சொல்லப்பட்டது
தான் "சுயத்தை அறிதல்",அல்லது "தன்னைஅறிதல்" (Self-Realization)
என்பது! இதற்கு மாறாக, "சுயத்தை அழிப்பது" (Self-Demolition)என்பது
சரியான வழியாகாது! ஆக, சுயத்தை பின்-நவீனத்துவ பாணியில்(`a la Post-Modernism) கட்டுடைத்து,  'சுயம்  என்று  அப்படி  எதுவும்  இல்லை,  அப்படி
ஒன்று இருந்ததே இல்லை!'   என்று  அறிவிப்பது  சுயத்தின் பிரச்சினையைத்
தீர்க்க உதவாது! ஏனெனில், மனம்,சுயம்,நான் என்பவை பெரும் மட்டுப்பாடு
களேதவிர அவை மாயையல்ல! 'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர் சுயத்தை
அழித்துவிட்டு,  "மனச்சுயம் சார்ந்த மாயையிலிருந்து  விடுபடுவதைத் தான்
நாங்கள் விடுதலை என்கிறோம்." என்கிறார்கள்! மனச்சுயம் என்பதிலிருந்து
கீழிறங்கிப் பின்னோக்கிச் செல்வது விடுதலையாகாது;  அது சுயத்தை எட்டி
டாத  ஆதி மனிதன்  அல்லது  அதற்கும் முந்தைய விலங்குஜீவிகளின்  நிலை
யாகும். மாறாக, மனச்சுயத்தைக் கடந்து மேலேறி முன்னோக்கிச் செல்வதே
உண்மை விடுதலையாகும்!

சுயத்தை எட்டிய,  தனது  தனித்தன்மையை ஓரளவிற்கேனும் உணர்ந்த ஒரு
மனிதனால்,    இன்னும்   சுயத்தை எட்டாத  ஆதி மனிதர்களின்   சமூகத்தில்
அதிக காலம் தங்கி வாழ இயலாது என்பதை,  அமெரிக்க மானுடவியலாளர்
டோபியாஸ்  ஷ்னீபாம்  (Tobias Schneebaum)  என்பவரது     பீதியூட்டும்
அனுபவம் சொல்கிறது.  ஷ்னீபாம் அவர்கள் பெரு நாட்டின் வனப்பகுதியில்
வாழ்ந்து வரும்  "அகாரமாஸ்"  (Akaramas) எனும் தொல்குடி இனத்து மக்க
ளுடன்   வாழும் வாய்ப்பு கிடைத்தது.  அதுவரை  ஒரு  வெள்ளை  மனிதனை
யும்  பார்த்திராத  அவர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். அவரும், அவர்க
ளுடைய  மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொண்டார். அவர்களு
டைய  வாழ்முறையில்  "தனிமனிதன்"  என்பதற்கு சிறிதும் இடமில்லை என்
பதை  அவர்  அறிந்து கொண்டார்;  அக்கோட்பாடு  அவர்களுக்கு முற்றிலும்
அந்நியமாகவும்,    அறியப்படாததாகவும்    இருந்தது.    அவர்கள்    எதையும்
தனியே செய்வதில்லை - வேலை, விளையாட்டு, வேட்டையாடுதல், உண்ணு
தல் என எல்லாவற்றையும் சிறு சிறு குழுவாகச்சேர்ந்தே செய்தனர்.

அவர்கள் அவ்வளவு நெருக்கமாகவும்,தோழமைப்பினைப்பில் இருந்தாலும்,
அவர்களில்  எவரது  இறப்பும்,  இழப்பும்  குறிப்பிடப்படாமலும், கண்டுகொள்
ளப்படாமலும்  போகின்றன.   ஷ்னீபாம்  அவர்கள்    "அகாரமாஸ்"  மக்களை
விட்டு, தம் சொந்த நாட்டிற்க்குச் செல்லத் தீர்மானித்தபோது, அவரது இல்லா
மையோ,  அவர்களை விட்டு  அவர் சென்று விட்டார்  என்பதோ  அவர்களால்
பெரிதாக  உணரப்படாது   என்பதை  அவரால்  தீர்க்கமாக   உணர முடிந்தது.
'அகாரமாஸ்' மக்களிடம் தனிப்பட்ட நபர்கள் என்பது அங்கீகரிப்பிற்குள் வர
வேயில்லை.   ஒவ்வொரு   உறுப்பினரும்,   முற்றிலுமாக  குழுவின்  பகுதியே,
வெறும்   பகுதி மட்டுமே.   குழுத்தன்மை தான்  அவர்களின் முதன்மையான
அகவயநிலை.   அவர்களிடம்,  பேசப்படும் வகையிலான  தனி-மையப்பட்ட (Individualized) சுயங்கள்  என்பதேயில்லை!  இவ்விடத்தில்தான் ஷ்னீ
பாம்-ன்  பிரச்சினை  வெளிப்படுகிறது.   ஷ்னீபாம்  அவர்கள்  அக்காட்டிற்கு
வரும்போது எத்தகைய  'சுயமாக'  வந்தாரோ,  அச்சுயமானது  "அகாரமாஸ்"
மக்களுடன்  வாழ்ந்து  செல்லுகையில்,  சமூகரீதியாக கரைக்கப்பட்டு விட்ட
தோடு,  ஷ்னீபாம்-ன் துல்லியமான  'நான்' உணர்வுதவிர பிற யாவும் துடைத்
தழிக்கப்பட்டது. கடைசியில் அது அவரை பீதியில் ஆழ்த்தியது. ஆக, "அகார
மாஸ்"  வகை  அகவயத்தை,  தொடர்ந்து  அனுஷ்டித்துச் செல்வது  மிகமிகக்
கடினம்  என்பதை உணர்ந்த ஷ்னீபாம், "அகாரமாஸ்"  வாழ்க்கையை உதறி
உடனே  காட்டைவிட்டு வெளியேறிச்சென்றார்.  மீண்டும்  அவர்  தனது மேற்
கத்திய தனிமனிதத்தன்மையைத் திரும்பப் பெற்றார்.(Source:"The Self
We Live By",2000 by James A.Holstein and Jaber F.Gubrium)

                       <•>

       "நமக்குள் பார்ப்பது அத்தனை சிரமமா? ஆம், இல்லை. இரண்டும்
        தான். ஏன் சிரமம் என்றால், அது மிகவும் எளிமையானது என்பதுதான்.
        ஏனெனில் நமது மனம், சிக்கலை விரும்புகிறது. அது நம்மை
        எண்ணற்ற புதிர் விளையாட்டுகளுக்குள் செலுத்தி அலைக்கழிக்க
        வைக்கக் கூடியது. உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு
        உண்மையான ஆசையும், நேரடி அனுபவத்தை அப்பட்டமாகப்
        பார்க்கும் உந்துதலும் இருந்தால், சுயத்தின் இன்மையைப் பார்ப்பது
        மிகவும் எளிதானது."             - -லிபரேஷன் அன்லீஷ்ட்

'நமக்குள் பார்ப்பது அத்தனை  சிரமமா?'  எனும்  கேள்வி   சிறுபிள்ளைத்தன
மானது.   உண்மையை அறிதல்,  தன்னை அறிதல்,  ஞானமடைதல்,  போன்ற
விஷயங்கள்  சிரமம்,  சுலபம்  என்ற  பிரச்சினைக்கு  அப்பாற்பட்ட   கட்டாய
அவசியமாகும்!   அவை  சுலபம்  என்றால்,   இங்கு  எல்லோரும் ஞானிகளாக
ஆகியிருக்கவேண்டும்;   அவை கடினம்   என்றால்,   ஒருவரும்   ஞானமடைந்
திருக்க முடியாது!   உலகில்  எல்லாப் பகுதிகளிலும்  மிகக் கணிசமான எண்
ணிக்கையில் ஞானிகள் இருந்துள்ளனர்; இன்றும் இருக்கின்றனர்!

அடுத்து, 'நமது மனம் சிக்கலை விரும்புகிறது' என்பது பொருந்தாதக் கூற்று
ஆகும். மனம் சிக்கலை விரும்பவில்லை, மாறாக, அது தொடும் அனைத்தை
யும் சிக்கலாக ஆக்கிவிடுகிறது!   மேலும்,  மனம் மேலோட்டமானதை, அற்ப
மானதை,சௌகரியமானதை,துய்ப்புக்குரியதை,இச்சைகளுக்குரியதையே
விரும்புகிறது, நாடித்தேடுகிறது! அது வாழ்க்கையெனும் நூல்கண்டின் நுனி
யைக்  கண்டு  பிடித்துப்   பிரிக்க  முயற்சிக்காமல்   கன்னாபின்னாவென்று
பிரித்து  சிக்கலாக்கிவிட்டு வாழ்க்கை மிகவும் சிக்கலானது, அபத்தமானது,
துன்பமயமானது . . . .  என்றெல்லாம் புகார்களைக் கூறிவருகிறது

அடுத்து, "மனம் நம்மை  எண்ணற்ற புதிர் விளையாட்டுகளுக்குள் செலுத்தி
அலைக்கழிக்க வைக்கக் கூடியது." என்ற கூற்றும் தவறானதாகும்! முதலில்,
மனம்  வேறு  மனிதன் வேறு அல்ல;  மனம் தான் மனிதன்!  அதாவது,  மனம்
நம்மை  எண்ணற்ற புதிர் விளையாட்டுகளுக்குள் செலுத்தி அலைக்கழிக்க
வைக்கவில்லை. மாறாக,மனம், அல்லது நாம் தான் நம்மைநாமே ஏமாற்றிக்
கொள்ளும் ஒளிந்து கண்டுபிடிக்கும் விளையாட்டில் (Hide and Seek)ஈடு
பட்டிருக்கிறோம்!  விழிப்படையாத  மனம்தான்  சிலந்தியைப் போல பிரச்சி
னைக்குரிய சுயம் எனும் வலையைப் பின்னி அதன் நடுவே  அமர்ந்துகொள்
கிறது!  விழிப்படைந்த மனம்  அனைத்தையும்  தன்னுள் கொண்டதும், அதே
நேரத்தில் அனைத்தையும் கடந்ததுமான ஒருமையும்  முழுமையான, "மகா
சுயமாக"ப் பரிமளிக்கிறது!
       
அடுத்து,  உண்மையைத்  தெரிந்து  கொள்வதற்கு உண்மையான ஆசையும்,
நேரடி  அனுபவத்தை  அப்பட்டமாகப் பார்க்கும் உந்துதலும் ஒவ்வொருவரிட
மும்  இருக்க  வேண்டும்  என்பது  பெரிதும் விரும்பத்தக்கதும்  அவசியமான
தும் ஆகும்!ஆனால்,அவ்வாறு இருக்கும்பட்சத்தில், "சுயத்தின் இன்மையைப்
பார்ப்பது   மிகவும்  எளிதானது"   என்பது   தலைகீழ்ப் பாடமாகும்!    மாறாக,
சுயத்தின் அசலான தன்மையைப்பார்ப்பது சாத்தியமாகும்! ஏனெனில்,  இல்
லாத சுயத்தின் இன்மையைப் பார்ப்பது எதற்கு?

"சுயம்"  என்பது  அருவருக்கத்தக்க ஒரு அசிங்கமோ,  தீமையோ அல்ல. அது
பெரிதும்    மட்டுப்பாடானது   என்பது    மட்டுமே  அதன்   பிரச்சினை  ஆகும்!
மற்றபடி  மனமில்லாமல்,  எண்ணம்  இல்லாமல்,  'நான்'  உணர்வு இல்லாமல்,
சுயம்   என்பதில்லாமல்  மனிதன்   இல்லை!    அதே நேரத்தில், சுயம் என்பது
இறுதியானது  அல்ல;  அது ஒரு  அடிப்படை ( ஏனெனில்  ஆன்மீகம்,  விழிப்பு,
ஞானம்,  விடுதலை,  இவையெதுவும்  வெற்றிடத்தில்  நிகழவியலாது!) ;  அது
ஒரு தொடக்கநிலை, அது முழுமையான இறுதிச்சுயமாக மாற்றமுறும்வரை
அது   மட்டுப்பாடானதே!   அதாவது,  உணர்வின்  வளர்ச்சிக்கேற்ப,   சுயமும்
வளரவேண்டும்! உணர்வு முழுமையடையும் போது சுயமும் முழுமையடைய
வேண்டும்.  அப்போது  அது  தனது  மட்டுப்பாடுகளனைத்தையும் கடந்துவிட்
டிருக்கும்!
                          <•>

      "சுயம் என்பதின்றி என்னால் செயல்பட முடியுமா, வாழ்க்கைக்கான
       உந்துதலை நான் இழந்துவிட மாட்டேனா, என்ற கேள்வி   நமக்குள்
       வரலாம்.                  
     
       மனச்சுயத்தின் தலையீடு அற்று எல்லாமே சரியாகத்தான் நடந்து
       கொண்டிருக்கிறது. அதனால், விழிப்புணர்வு அடைந்த பிறகு எந்தப்
       பெரிய மாற்றமும் ஏற்படுவதில்லை."
                                                        - லிபரேஷன் அன்லீஷ்ட்

"சுயம்  என்பதின்றி  என்னால்  செயல்பட  முடியுமா?"  எனும் இக்கேள்வி படு
அபத்தமானது!    ஏனெனில்,  உருப்படியான,  முறையான,  தன்னை  அறிந்த
சுயமாக    எழாத  மனிதர்களால்  தான்    இந்த   உலகம்   நிரம்பி   வழிகிறது!
உலகில்   பெரும்பாலான  மனிதர்களுக்குச்  "சுயம்'  என்பதே இல்லை என்று
தான்  சொல்லவேண்டும்!  மனமற்ற,  "தாம் இருக்கிறோம்!"  என்ற உணர்வே
இல்லாத,  'நான்'  எனும் உணர்வற்ற,   ஆகவே சுயமற்ற விலங்கு ஜீவிகள் இப்
பூமியில்   செயல்படாமலா  உள்ளன?   அவை யாவும்  தம்  வாழ்க்கைக்கான
உந்துதலை இழந்தாவிட்டன? இல்லையே! அவை குன்றா  உற்சாகத்துடனும்
செயலூக்கத்துடனும் தான் உயிர்-பிழைத்துவருகின்றன!

மேலும், பொதுவாக மனிதர்கள்  எதை 'வாழ்க்கை' எனக்கருதி வாழ்ந்து  வரு
கின்றனரோ, அதற்கு மாறான ஒன்றாக உள்ளது அசலான மனித வாழ்க்கை
என்பது!அதாவது, சுயம் என்பதின்றி வாழ்க்கைக்கான உந்துதலை மனிதன்
இழந்து விடுவானோ,  என்ற  அச்சம் அடிப்படையற்றது!  பரிணாம இயற்கை
யினால்,  பொதுவாக  உயிர்-ஜீவிகளுக்கென்று   முன்-திட்டமிடப்பட்ட  அந்த
உயிர்-ஜீவித்தல்  என்கிற  அடிப்படை வாழ்க்கையைத்தான், எலிகள் உள்பட
அனைத்து  விலங்கு ஜீவிகளும்,  மனிதஜீவிகளும்  காலம்காலமாக வாழ்ந்து
வருகின்றனர்!   அந்த   வாழ்க்கைக்கு  "சுயம்"   என்பது   தேவையே இல்லை!
ஆகவே,  சுயம்  என்பதின்றி வாழ்க்கைக்கான உந்துதலை மனிதன் இழந்து
விடுவானோ, என்று எவரும் அஞ்சத்  தேவையில்லை!

விலங்கு ஜீவிகளாயினும், மனித ஜீவிகளாயினும்,மிகுந்த செயலூக்கத்துடன்,
ஆர்வமிழக்காமல்,வெறுமனே உயிர்-பிழைத்திருப்பதற்கு மனமோ, சுயமோ,
'நான்' உணர்வோ, எதுவும் தேவையில்லை! எனும் உண்மையை,  'லிபரேஷன்
அன்லீஷ்ட்'   குழுவினர்  அறிந்திருப்பதாகத் தெரியவில்லை! பெரும்பாலான
மனிதர்களுக்கு,   நேரடியாகத்    "தாம் இருக்கிறோம்!"    என்பது    தெரியாது;
மாறாக, "அண்டைவீட்டுக்காரன்  இருக்கிறான், ஆகவே நான் இருக்கிறேன்!"
என்கிற அளவில் தான் அவர்களுக்குத் தங்களைத் தெரியும்!

அடுத்து,  "மனச்சுயத்தின் தலையீடு அற்று எல்லாமே சரியாகத்தான் நடந்து
கொண்டிருக்கிறது. அதனால், விழிப்புணர்வு அடைந்த பிறகு எந்தப் பெரிய
மாற்றமும்  ஏற்படுவதில்லை."   என்ற கூற்றும்  தவறானதாகும்.   ஏனெனில்,
மட்டுப்பாடான மனச்சுயத்தின்  தலையீட்டினால், எல்லாமே  தாறுமாறாகத்
தான்  நடந்து  கொண்டிருக்கிறது;  எதுவும்  சரியாக  நடக்கவில்லை  என்பது
தான் உண்மை நிலையாகும்!' எல்லாமே சரியாக நடந்திருந்தால், வாழ்க்கை
யில் ஏதோவொன்று குறைகிறது,ஏதோவொன்று முற்றிலுமாகச் சரியில்லை'
என்ற  உணர்வு   எழுவதற்கான  வாய்ப்பே   இல்லாமல்  போயிருக்கும்!    இக்
குறைபாடு உண்மையில் ஒருவரிடம் விலையுயர்ந்த பொருட்கள் இல்லாமை
யையோ,  அல்லது,  செல்வச் சுபிட்சம்  இல்லாமையையோ குறிக்கவில்லை!
மாறாக,  அது   "தன்னறிவு"  (Self-Knowledge) இல்லாமையையே குறிக்
கிறது!

அடுத்து,  "விழிப்புணர்வு அடைந்த பிறகு எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படுவ
தில்லை" என்பது அப்பட்டமான தோல்வியின் வெளிப்பாடாகும்! சுயத்தைக்
காலி பண்ணுவது  குறித்து  அவ்வளவு   சந்தோஷம் கொள்ளும்  'லிபரேஷன்
அன்லீஷ்ட்'  குழுவினர், விழிப்புணர்வு பற்றிப்பேசுவது ஆச்சரியமளிக்கிறது!
அதோடு,  "விழிப்புணர்வு  அடைந்த பிறகு  எந்தப் பெரிய மாற்றமும்  ஏற்படு
வதில்லை." எனும் அவர்களுடைய கூற்று, அவர்களுடைய போலித்தனமான
மேதாவிலாசத்தையே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது! ஏனெனில், "விழிப்
புணர்வு" தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டிய ஆகப்பெரிய இறுதி
யான   மாற்றமாகும்!   அதற்குப் பிறகு சாதிக்க எதுவுமில்லை!
                      <•>
   
    "இறந்தகாலம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கவலைப்பட்டுக்
      கொண்டும் கனவுகண்டும் கொண்டிருக்கும் நமது மனதைத்தான்
     'நான்' என்று கருதிக்கொண்டிருக்கிறோம். மனம் என்பதற்கும்
     'நான்' என்ற உயிர்-இருப்புக்கும் தொடர்பு கிடையாது. மனம் என்பது
      நினைவுகள், பழக்கங்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பு
      என்பதை இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகள் உணர்த்து
      கின்றன. மனதிலிருந்து விடுபடத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டு
      களாக சித்தர்களும் ஞானிகளும் முயன்று வருகிறார்கள். அதற்கு
      இந்த இணையதளமும் நமக்குப் பயன்படலாம்."

என  'லிபரேஷன் அன்லீஷ்ட்'  எனும் இணையதளம் பற்றிய தனது அறிமுகக்
கட்டுரை   ( காண்க:  தமிழ் இந்து நாளிதழ்,  வியாழன், ஜனவரி 19, 2017)   யை
திரு.ஷங்கர்  அவர்கள் முடித்திருக்கிறார்.  சிந்தனையைத் தூண்டும்  இக்கட்
டுரையை வழங்கிய அவருக்கு நன்றிகள்.

"மனம் என்பது என்ன?"  என்று  தலைப்பிடப்பட்ட  அவரது கட்டுரையில் 'லிப
ரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர்,  மனம்  என்று  ஒன்று இல்லை என்று அறிவிக்
கிறார்கள்!ஆனால்,"இறந்தகாலம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கவலைப்
பட்டுக்கொண்டும்   கனவுகண்டும்   கொண்டிருக்கும்  நமது  மனதைத்தான்
'நான்'  என்று  கருதிக்கொண்டிருக்கிறோம்"   என   அவர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில்,   அந்த  மனம்  இல்லாவிடில்,  நாம்   இறந்தகாலம் குறித்தும்,
எதிர்காலம் குறித்தும் கவலைப் படாதிருக்கும் தவளைகளைப்போலத்தான்
இருப்போம்!  'லிபரேஷன் அன்லீஷ்ட்'  குழுவினர்,  எவ்வாறேனும்  மனம்  அல்
லது உணர்வு எனும்அம்சத்தைக் கழித்துக்கட்டிவிடத்துடிக்கும் பொருண்மை
வாதிகளைப் போலவும்;   உணர்வை  இயற்கைப்படுத்திடத்  (Naturalize)
துடிக்கும் இயற்கையின் உண்மையான 'இயற்கை' என்னவென்று  அறியாத
மொண்ணையான இயற்கைவாதிகளைப்போலவும் தான் பேசுகிறார்கள்!

அடுத்து,   "மனம்   என்பதற்கும்   'நான்'  என்ற  உயிர்-இருப்புக்கும்  தொடர்பு
கிடையாது.   மனம்  என்பது   நினைவுகள்,  பழக்கங்கள்  மற்றும்   அனுபவங்
களின் தொகுப்பு (தான்)"   எனும்  அவர்களது கூற்று மிகவும் மேலோட்டமான
தாகும்.  அதாவது  மனம்  என்று ஒன்று  இல்லை என ஒரே வீச்சில் அப்படியே
பெருக்கித்தள்ளிவிடும் பட்சத்தில்,  மிச்சமிருப்பது  மனத்தின்  உதவியின்றி
தாமே   சுவாசிக்கும்  நுரையீரலைக் கொண்ட,   தானியங்கி  எந்திரம் போல்
சீரணிக்கும்  வயிற்றைக் கொண்ட தவளை மட்டுமே யாகும். மனிதன் என்ப
வனும்    ஒருவகை   தவளை தான்  என  டார்வினிய  பரிணாமவாதிகளுடன்
சேர்ந்து கொண்டு இவர்களும் கூறுவதாகத்தெரிகிறது!

அடுத்து,  "மனதிலிருந்து  விடுபடத்தான்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
சித்தர்களும்  ஞானிகளும்  முயன்று வருகிறார்கள்.  அதற்கு  இந்த இணைய
தளமும் நமக்குப்பயன்படலாம்." என கட்டுரையாளர் திரு. ஷங்கர் அவர்கள்
சிபாரிசு செய்வது பொருத்தமற்றதாகும்.  ஏனெனில்,  சித்தர்கள்,  ஞானிகள்
சொன்ன முடிவான உண்மையும்,  'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர் கூறும்
உண்மையும்  ஒன்று அல்ல!  சித்தர்களும்,  ஞானிகளும்  மனதிலிருந்து, விடு
படுவது    அல்லது  மனதைக்கடந்து  செல்வதன்  அவசியம்  பற்றிச் சொல்லி
யிருக்கலாம்; ஆனால்,அதற்கான வழியாக, மனதை ஆயிரம் இதழ் தாமரை
போல  மலரச் செய்யச் சொன்னார்களே தவிர,  மனம் எனும் அடிப்படையை
யே மறுக்கச் சொல்லவில்லை!

முடிவுரையாக, உண்மையில்,  நம்முன்னே  மூன்று கேள்விகள் அல்லது பிரச்
சினைகள் அல்லது தெரிவுகள் உள்ளன. இம்மூன்றில் நீங்கள் எதுவொன்றை
யும்  தெரிவு செய்துகொண்டு,  அது உண்மை  என்று  நீங்கள் கண்டுபிடித்தீர்
களெனில்   அதை    அப்படியே  தழுவிக் கொள்ளலாம்;  பிரச்சினை  அல்லது
சவால் என்று இனம் கண்டால், அதைத் தீர்ப்பதை உங்கள் வாழ்க்கையாகக்
கொள்ளலாம்

1. நமது 'சுயம்' -  நம்மைப்பற்றி  நாமே புனைந்துகொண்ட பிம்பம், அடையா
   ளம், இன்னபிற விஷயங்களைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட சுயம்.

2. 'சுயம்' என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லப்படும் நிலைப்பாடு.

3.  எனக்கு நானே ஒரு வடிவம், அடையாளம், பிம்பம் கொடுத்துக்கொள்ளும்
     கற்பிதத்திற்கும், சுயம் என்பது இல்லவேயில்லை என்பதற்கும், இடையே,
     அல்லது இவ்விரண்டையும் கடந்ததாக, மூன்றாவதாக உள்ள ஒரு கேள்வி/
     பிரச்சினை :  சுயத்தின் உண்மையான தன்மை என்ன? அல்லது  சுயத்திற்
     குப் பின்னால் உள்ள உண்மைதான் என்ன?      

மா.கணேசன்/ நெய்வேலி/ 20.01.2017
----------------------------------------------------------------------------

Friday, 20 January 2017

முன்-தெரிவுசெய்யப்பட்டதொரு வாழ்க்கை! (A LIFE OF DEFAULT!)





உங்களுடைய  ஒவ்வொரு  அசைவையும்,  பேச்சையும்,  சொல்லையும், செய்
கையையும்   நான்   விமர்சிப்பது  குறித்து  தயவுசெய்து   ஆச்சரியப்படவோ,
அதிர்ச்சியடையவோ,  வருத்தப்படவோ  செய்யாதீர்!  ஏனெனில், நான் உங்க
ளிடம் காண்பது உங்களுடைய உணர்வுத் தளத்தைத்தான் -எந்த வார்ப்பில்,
எத்தகைய   சிந்தனைக்குழியில்   நீங்கள்   சிறைப்பட்டிருக்கிறீர்  என்பதைத்
தான்!   எவ்வாறேனும்   உங்களது   உணர்வை  நீங்கள் மாற்றமுறச் செய்யாத
வரை எனது விமர்சனம் தொடரும்!!

எனது விமர்சனச் சொற்களை உங்களைப்பற்றிய சொந்த விஷயமாக எடுத்
துக்கொள்ளாதீர்!   ஏனெனில்,  உண்மையான உங்களது சுயம் என்பது அப்ப
ழுக்கற்றது,   பழியற்றது!  ஆனால், நீங்களோ உங்களுடைய அசலான  சுயத்
திற்கு   வெகுதொலைவில்  இருக்கிறீர்!  ஆகவே,   உங்களுடைய பிரச்சினை
குறித்து  ஆக்கபூர்வமாக  நீங்கள் ஏதாகிலும்  செய்தாக வேண்டும்,  அதுவும்
உடனடியாக!  அதாவது, உண்மையான  உங்களைக் கண்டுபிடிக்கும்  வகை
யில், உணர்வில் மாற்றம் ஏற்படும் வகையில் கடிதே நீங்கள் செயல்பட்டாக
வேண்டும்!

உங்களது  பிரச்சினை என்னவென்றால், வாழ்க்கையில் உங்களுக்குத் தெரி
வுச்சுதந்திரம் உள்ளது என நீங்கள் எண்ணுவது தான்!  நீங்கள் பல்வேறுபட்ட
கதம்பமான   விஷயங்களின்  பின்னே செல்கிறீர்,   அவ்வழியே  நீங்கள் மிக
எளிதாக உங்களைத் தொலைத்து விடுகிறீர்! அதாவது உங்கள் கவனம் முடி
வில்லாமல்   சிதறடிக்கப்பட்டு  நீங்கள்  சென்றடைய வேண்டிய  இலக்கிற்கு
செல்லவியலாமல் போய்விடுகிறது!

உங்களுடைய   பிரதான  பிரச்சினை  என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட கார
ணத்திற்காக,  இயற்கையால் 'முன்-தெரிவுசெய்யப்பட்ட', (Pre-selected
or Default condition) அல்லது   பரிணாம இயற்கையால்,  'முன்-நிரல
மைப்பு செய்யப்பட்ட'(Pre-Programmed),ஒரு 'அடிப்படை'  வாழ்க்கையை
வாழ்ந்து   வருகிறீர்  என்பது தான்!    பரிணாம ரீதியாக,   வாழ்க்கை என்பது
ஒப்பற்றதொரு    இலக்கைக்  குறியாகக்கொண்டு  பல்வேறு   இடை நிலைக்
கட்டங்களைக் கடந்துசெல்லும் ஒரு நெடிய வழிமுறையாகும்! ஆனால், நாம்
அந்த ஆதித் தொடக்க நிலைக்கட்டத்திலேயே ஏனோ தங்கி விட்டோம்!!

அதே நேரத்தில், பரிணாம இயற்கையால் முன்-தெரிவுசெய்யப்பட்ட  வாழ்க்
கையில்  அடங்கியுள்ள குறைபாடு  அல்லது   மட்டுப்பாடு  என்னவென்றால்,
அது    வாழ்க்கைக்கான   ஒரு   அடிப்படை மாத்திரமே தவிர   அதுவே    முழு
வாழ்க்கையும் அல்ல!

உண்மையில்,  "வாழ்க்கை"  என்பது,  விலங்கு-ஜீவியோ, மனித-ஜீவியோ எவ்
வொரு தனிப்பட்ட ஜீவியின் சொந்தப்பிரச்சினை 'மாத்திரம்'அல்ல! மாறாக,
மனிதன்  உட்பட  அனைத்து  உயிரினங்களும்,  வாழ்வு-விருட்சத்தின்(Tree
of Life)பகுதிகளே ஆகும்;  அதில்  மனிதன் என்பவன் விசேடமானதொரு
பகுதியாவான்!  ஏனெனில், அவனது பரிணாமப் பாத்திரம் (Evolutionary
Role) அத்தகையதாகும்!    ஒவ்வொரு  உயிரினமும்   வாழ்வு-விருட்சத்தின்
ஒவ்வொருபகுதியின் பிரத்யேக வாழ்க்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும்
வகையில்,   பரிணாமப் படிமுறையில் அமைந்துள்ளன!   ஆக, அதனதன் படி
நிலையில்  இருந்துகொண்டு உயிரினங்கள் ஒட்டு மொத்த வாழ்வு-விருட்சத்
தின் ஒப்பற்ற இலக்கை அடையும்விதமாக,சிறிதோ, பெரிதோ,  தத்தம் பணி
யையும், பங்கையும் ஆற்றிடவும், தமக்குரிய பரிணாமப் பாத்திரத்தை வகிக்
கவும்   செய்கின்றன!   இவ்வகையில்  வெவ்வேறு   படிநிலையில்   இருக்கும்
உயிர்-ஜீவிகளின் வாழ்க்கையும்  வெவ்வேறாக மாறுபடுவதாயுள்ளன!

ஆனால்,  ஒட்டு மொத்த  வாழ்வு-விருட்சத்தின்   அந்த ஒப்பற்ற இலக்குதான்
என்ன? எவ்வொரு விருட்சத்தின் இலக்கு என்னவோ அதுதான் வாழ்வு விருட்
சத்தின்  இலக்கும்  ஆகும்!  ஆம்,  கனி கொடுப்பது தான் விருட்சத்தின் அந்த
ஒப்பற்ற இலக்காகும்!   கனி  என்பது   ஒரு விருட்சத்தின் முக்கியத்துவமற்ற
ஏதோவொரு பகுதி அல்ல! அதுவே அவ்விருட்சத்தினை முழுமைப்படுத்தும்
பகுதியாகும்!   இன்னும்,   அதுவே  அவ்விருட்சத்தின் முழுமையும், உச்சமும்,
அதன் முடிவும் ஆகும்! இந்த இறுதியான அம்சத்தினால், கனி என்பது விருட்
சத்தின் பகுதியல்ல!  ஏனெனில், கனியினுள் இருக்கும் வித்தினுள் விருட்சம்
அடங்கியுள்ளது!  ஆம், மனிதனே (ஒவ்வொரு மனிதனுமே) பிரபஞ்சம் எனும்
வாழ்வு-விருட்சத்தின் கனியாவான்!   கனியாக   மாறக்கூடிய பரிணாம உட்
பொதிவைத் தன்னுள் கொண்டவனாவான்!

ஆனால்,மனிதன் தன் உட்பொதிவின் ஆழத்திலிருந்து தன்னை உணராமல்,
வாழ்க்கைக்கு பதிலளிக்காமல், தன் மேலோட்டிலிருந்து, வெறும் ஒரு உயிர்-
ஜீவியாகத்   தன்னைக் கருதிக்கொண்டு   வெறுமனே   உயிர்-வாழ்ந்து செல்
லும்  ஒரு  பிராணியாகச் சுருங்கிப்போகிறான்!   அதாவது,   தன் பரிணாமப்
பொறுப்பை  உணராமல்;  முழுமை   அல்லது,  வாழ்வு- விருட்சத்தின், சாதார
ணப்  பகுதியாக,  சாதாரண  வாழ்க்கையை   வாழ்ந்து  உதிர்ந்து  (மாண்டு)  
போகிறான்!ஆனால், தான் அடையக்கூடிய பரிணாமமுழுமையில் மீண்டும்
மீண்டும்  விருட்சத்தை உயிர்ப்பிக்கிறவனாகிறான்!

உங்களுடைய பிரச்சினையை உங்களிடமே நான் எடுத்துச்சொல்லியபோது,
அதாவது,    உங்களைப்பற்றி  உங்களிடமே   புகார் கூறிய போது,   உங்களிட
மிருந்து நேர்மறையான யாதொரு பிரதிவினையும்,ஏன்,எவ்வித எதிர்வினை
யும்,  எவ்வித  கலக்கமும்,  அல்லது ஆச்சரியமும்,  அதிர்ச்சியும்,  வருத்தமும்
வெளிப்படவில்லை;    வெறும்   எதிர்மறையான   எதிர்வினையும்,  அதாவது,
ஏதோ    நான்   உங்களைத் தவறாகவும்,   தாறுமாறாகவும்     பேசிவிட்டதாக,
காயப்பட்டமனத்தின் அடையாளமான கலக்கமும்,வருத்தமும்,எதிர்ப்புணர்
வும் வெளிப்படுவது தவிர!

ஒருவகையில், நீங்கள் எல்லோருமே அடிப்படைவாதிகளாகவே(Fundament
alists)இருக்கிறீர்!  அதாவது,  உயிர்-பிழைத்தல் (Survival)எனும் அடிப்
படை- வாழ்க்கையே  முழு வாழ்க்கையும் என்பதாக வாழ்ந்து செல்லும் மிக
வும் மட்டுப்பாடானதொரு போக்கில்,பழக்கதோஷத்தில் கட்டுண்டுள்ளீர்!

முன்-தெரிவுசெய்யப்பட்டதொரு   வாழ்க்கை (A LIFE OF DEFAULT)என்ப
தென்ன?   பெரிதும் பசி,  தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய  இயல்
பூக்கிகளால்  ( Instincts) செலுத்தப்படும்  விலங்கு ஜீவிகளைப் போன்ற
எந்திரத்தனமானதும்,    தானியங்கித்தனமானதுமான தொரு  ஜீவிதத்திற்கு
மேல்  வேறு  யாதொரு குறிக்கோளும்,  இலக்குமற்றதொரு  வாழ்க்கைக்குப்
பெயர்தான்  "முன்-தெரிவுசெய்யப்பட்ட" (Options by Default,அல்லது,
"முன்-நிரலமைப்பு செய்யப்பட்ட" (Pre-Programmed)தொரு வாழ்க்கை!

ஆனால்,இத்தகையவாழ்க்கை எதனால்,அல்லது எவரால் முன்-நிரலமைப்பு
செய்யப்பட்டது, முன்-தெரிவுசெய்யப்பட்டது? ஆம்,பரிணாம இயற்கையால்
முன்-தயாரிக்கப்பட்டது (Pre-Fabricated)தான்   இத்தகைய  வாழ்க்கை!
ஒரு  "உயிர்-ஜீவி"  அல்லது, "உடல்-ஜீவி"   என்கிற வகையில், நாமும் விலங்கு ஜீவிகளைப்போன்றவர்களே!ஒரு உயிருள்ள,உடலுள்ளஜீவி என்றவகையில்,
பசி, தாகம், பாலுணர்வு ஆகியவற்றுக்கு உட்பட்டவர்களே நாமும்!   ஆனால்,
நாம்  விலங்கு ஜீவிகளல்ல!   இயல்பூக்கிகளின்     நச்சரிப்பான    கோரிக்கை
களை   நிறைவேற்றி,  மிக  இயல்பானதொரு    வாழ்க்கையை  வாழ்வதற்கு!
ஏனெனில், நாம் வெறும் உயிருள்ள உடல்-ஜீவிகளல்ல! மாறாக,நாம் "மனம்"
எனும் அற்புத அம்சத்தையுடைய சிந்திக்கும் திறன்  கொண்ட,   உணர்வுள்ள
ஜீவிகள் ஆவோம்!   இன்னும்   துல்லியமாகச்சொன்னால், உடலல்ல, உணர்வு
தான் நாம்!

அதே நேரத்தில், பரிணாம இயற்கையால் முன்-தெரிவுசெய்யப்பட்ட  வாழ்க்
கையில்  அடங்கியுள்ள குறைபாடு  அல்லது   மட்டுப்பாடு  என்னவென்றால்,
அது    வாழ்க்கைக்கான   ஒரு   அடிப்படை மாத்திரமே தவிர   அதுவே    முழு
வாழ்க்கையும் அல்ல! உயிரற்ற சடப்பொருளிலிருந்து  பண்புரீதியாக வேறா
னதாக    எழுந்த   உயிர்-ஜீவிகள்   உள்-அமைந்த  (Built-in) சில   இயல்பு
களைக்கொண்டதாக உருவாவது தவிர்க்கமுடியாததும் மிகவும்  அடிப்படை
யானதுமாகும்!   உயிரற்ற சடப்பொருளுக்கு யாதொரு  உள்ளமைந்த தேவை
யும்,  நோக்கமும்  எதுவும் கிடையாது!  ஆனால், உயிருள்ள ஜீவிகள்  உயிர்ப்பு
டன் இயங்குவதற்கு சக்தி (Energy)தேவைப்படுகிறது! ஆகவே, பசி, தாகம்
ஆகிய இயல்பூக்கிகள் உருவாயின! அடுத்து, மிகத்தொலைவான பரிணாம
இலக்கை  அடையும் விதத்தில்  நிலைத்திருக்கும் பொருட்டு  உயிர்-ஜீவிகள்
தம்மைத்தாமே  பிரதியெடுத்துக் கொள்வதற்காக  இனவிருத்தியை  ஊக்கு
விக்கும் பாலுணர்வு (Sex) எனும் இயல்பூக்கி (Instinct)உருவாயிற்று!

ஆனால்,  உயிர்-ஜீவிகள்   வெறுமனே  உயிர்-ஜீவித்திருக்கும்  பொருட்டு உரு
வானவையல்ல!  அதே நேரத்தில்,  உயிர்-இருப்பைக்கடந்த மேலான இருப்பு
நிலைகளையும், இன்னும், இறுதியான முழு- இருப்பு நிலை எனும் பரிணாம
இலக்கையும்   அடையவேண்டுமானால்,  அவை உயிர்ப்புடன் இருப்பது  அவ
சியமாகும்! ஆகவேதான், மனிதஜீவி உட்பட அனைத்து உயிர்-ஜீவிகளுக்கும் 'உயிர்-பிழைத்திருப்பது'  என்பது  பொதுவான ஒரு  அடிப்படையாக  அமைந்
திருக்கிறது! ஆனால்,  அது எதற்கான, எத்தகைய இலக்கை எட்டுவதற்கான
அடிப்படை  என்பதை  உய்த்துணர்வது  என்பது தான் மனிதவாழ்க்கையின்
குறிக்கோளும்,  அக்குறிக்கோளை நிறைவேற்றுவது தான் இலக்கும்  ஆகும்!
இவ்வாறு 'உயிர்-பிழைத்திருப்பது'  என்பது எதற்கான அடிப்படை என்பதை
உணர்ந்தறியாமல்   வெறுமனே   உயிர்-வாழ்வதுதான்   விலங்கு ஜீவிகளின்
மட்டுப்பாடு ஆகும்!

ஆனால்,  சிந்தனையின்றி, எவ்வாறு நாம் இந்த அடிப்படை வாழ்க்கையுடன்
நம்மைப் பிணைத்துக்கொண்டு, அதிலே  மூழ்கிக் காணாமல்  போகிறோம்?
பசியை   நாம்  படைக்கவில்லை,    தாகத்தையும்  நாம்   உருவாக்கவில்லை,
பாலுணர்வையும்   நாம் தோற்றுவிக்கவில்லை!  ஆனால்,  அவ்வப்போது, பசி
யையும்,   தாகத்தையும்  போக்கிக்கொள்வதை,  பாலுணர்வைத்  தணித்துக்
கொள்வதை   எவ்வாறு  நாம்  வாழ்க்கையெனத் தொடர்கிறோம்?  உடல் என்
பது  ஒரு   ஊர்தியைப்போன்றது தான்;  எரிபொருள்  இன்றி  எந்த  ஊர்தியும்
ஓடாது! அவ்வாறே உடல் எனும் ஊர்தியும் உணவின்றி இயங்காது!

ஆனால்,  ஒரு  ஊர்தியின்  பயன்  மற்றும் நோக்கம்  வெறுமனே எரிபொருள்
நிரப்பி ஓடவிடுவதற்காகவா?  இல்லை! நாம் ஒரு ஊர்தியை அல்லது ஒரு எந்
திரத்தை பல்வேறு நோக்கங்களை,காரியங்களை நிறைவேற்றுவதற்காகப்
பயன் படுத்துகிறோம்!  ஆனால்,  உடல்  எனும்  ஊர்தியை,  எந்திரத்தை ஒரே
ஒரு  நோக்கத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துகிறோம்;  அது என்னவென்
றால்,  உடலுக்கு   எரிபொருள்  (உணவு)  நிரப்புகிறோம்;   மீண்டும்   மீண்டும்
வயிற்றுக்கு  எரிபொருள் (உணவு) நிரப்புவதற்காக உழைக்கிறோம்! உணவு
என்பது ஒரு நிர்ப்பந்தமாக, முதன்மையான விதியாக உள்ளது;அதே வேளை
யில், மிகவும் அடியோட்டமாக இனவிருத்தி (பாலுணர்வு) எனும் ஒரே ஒற்றை
இலக்குத்தான்   உயிர்-ஜீவிகளின்  மறைமுகமான,  மையமான  குறிக்கோள்
என்பதாகவும் உள்ளது!

மானுட வாழ்க்கை  என்பது  உழைப்பது,  அதாவது,  பொருட்களை  உற்பத்தி
செய்தல் ( Produce), உட்கொள்ளுதல் (Consume) என்ற  சுற்றுக்கு  மேல்
வேறெதுவுமல்ல  என ஐயமின்றி கூறிவிடலாம்! அந்த அளவிற்கு மனிதகுலம்
மனிதத்தரத்திற்குக் குறைவானதொரு வாழ்க்கையை  வாழ்ந்து செல்கிறது!
உணவின்றி   நாம் உயிர்-வாழ முடியாது  என்பது ஒரு உண்மையே;  ஆனால்,
எதற்காக,   எந்த  குறிக்கோளை  அடைய   நாம் உயிர்-வாழ்கிறோம் என்கிற
உண்மையை அறியாமல் எவ்வாறு நாம் அர்த்தமின்றி,இலக்கின்றி வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்?   இவ்விஷயம்  குறித்து,    எனது   நண்பர்களிடம்   பல
வருடங்களாகப்பேசிவருகிறேன்!என்ன அருமையான,அற்புதமான விஷயம்
என வியந்து கூறிவிட்டு, விடைபெற்றுச் சென்று, மீண்டும் அதே அசம்பாவித
மான அன்றாடத்தின் சுழலில் சிக்கிக்கொண்டுவிடுகின்றனர்!

சிலர், மிகச்சாதுரியமாக, தங்கள் சொந்த விருப்பங்களை,இலட்சியங்களை,
அல்லது  சமூகத்தினால்  பெரிதாகக் கருதப்படும் மதிப்பீடுகளைத் துரத்திச்
செல்வதை    வாழ்க்கையாகக் கொண்டுள்ளனர்!    இம்மதிப்பீடுகள்  யாவும்
செயற்கையானவை,   அல்லது   கற்பிதமானவை;     அவற்றுக்கும்   அசலான
வாழ்க்கைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை!

சிலர்,  'இதற்குமேல் என்ன செய்யச்சொல்லுகிறீர்கள்?'  'நீங்களும் தான்  ஒரு
அலுவலகத்தில் பணிபுரிகிறீர்கள்';  'நீங்களும் அதே வாழ்க்கையைத்தானே
வாழ்ந்து   கொண்டிருக்கிறீர்கள்?'    'மனிதத்  தரத்திற்குரிய   வாழ்க்கையை
வாழ்வது எப்படி, அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்கின்
றனர்!ஆனால், என்ன செய்யவேண்டுமென அவர்கள் தங்களையே கேட்டுக்
கொள்ளும் பட்சத்தில்,  அவர்களுடைய கேள்விகள்  நியாயமானவையாயும்,
அர்த்தமுள்ளவையாயும் அமையும்!

"மனிதத்தரத்திற்குரிய  வாழ்க்கையை வாழ ஒவ்வொருவரும் என்னசெய்ய
வேண்டும்? "    ஆம்,    இக்கேள்வியை    ஒவ்வொருவரும்    தம்முள்    கேட்டுக்
கொண்டு  அதற்கான  பதிலைக் கண்டுபிடிக்கவேண்டும்!  இந்த யோசனை
அப்படியொன்றும்      சுவாரசியமான   விஷயமாகத் தெரிய   வாய்ப்பில்லை
தான்!     ஏனெனில்,   வாழ்க்கை  என்றாலே விழுந்துபுரண்டு காரியமாற்றும்
விவகாரமாகத்தான் நாம் பழகியுள்ளோம்!

அதே நேரத்தில்,   வாழ்க்கை  பற்றிய  கேள்வி     மேற்குறிப்பிட்ட  வடிவத்தில்
தான்   இருக்கவேண்டும்  என்பதில்லை!   மிக எளிமையாக,  "வாழ்க்கை என்
றால் என்ன?"  என்ற வடிவத்திலும் கேட்கலாம்;அல்லது, "ஒரு மனிதஜீவியாக
இருப்பதென்றால் என்ன?"   எனவும்   கேட்கலாம்!   அல்லது,  "வாழ்க்கையின்
அர்த்தம் என்ன?"   அல்லது,  "வாழ்க்கையின் அசலான குறிக்கோள் என்ன?",
"வாழ்க்கைக்கு பிரத்யேக இலக்கு ஏதும் உள்ளதா?"  எனவும் கேட்கலாம்!

ஆனால், உங்களுடையதுமட்டுமல்லாமல்,பெரும்பாலான மனிதர்களுடைய
பிரச்சினை என்னவென்றால்,   வாழ்க்கை  பற்றிய  அடிப்படையான   எந்தக்
கேள்வியும்  உம்முள்   எழுவதேயில்லை என்பதுதான்!   நீங்கள்  சிந்திக்கிறீர்,
ஆனால்,    பெரிதும்    வாழ்வின்     மிக மேலோட்டமான    தேவைகளுக்குரிய
பொருட்களையும்,   விஷயங்களையும்  பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்;   நீங்கள்
ஒருபோதும் வாழ்வின் உட்பொருளான அர்த்தம் பற்றிச்சிந்திப்பதேயில்லை!
ஆகவேதான்,    "ஆராய்ந்தறியப்படாத   வாழ்க்கை    வாழ்வதற்கு  அருகதை
யற்றது."    என சாக்ரடீஸ் கூறினார்!  சிந்தனையின் மகத்துவம்  யாதெனில்,
சிந்தனை மட்டுமே இயற்கையால் முன்-நிரலமைப்பு செய்யப்பட்ட,அல்லது,
முன்-திட்டமிடப்பட்ட, முன்-தெரிவு செய்யப்பட்ட பிராணித்தனமான உடல்-
மைய வாழ்க்கையிலிருந்து உங்களை விடுவித்து, வாழ்வின் உண்மையான
இலக்கு நோக்கிச்செலுத்த உதவிடும்!

சிந்தனை  அல்லது  சிந்திக்கும் மனத்திற்கும் அடிப்படையாக அமைந்திருப்
பது  "உணர்வு" (Consciousness)ஆகும்!   தன்னைச்சுற்றியுள்ள  எல்லாவற்
றைப் பற்றியும் சிந்திக்கும், அறிய விரும்பும் மனிதன்,  தான்  முக்கியமாகச்
சிந்திக்கவேண்டிய, தனது அடிப்படையைப்பற்றி, உணர்வைப்பற்றி மட்டும்
சிந்திப்பதில்லை!உண்மையில், 'தான்'எத்தகைய மெய்ம்மை என்பதை அறி
யாமல்,  மனிதன்  மனிதனாகவும் முடியாது;  மனித ஜீவிக்குரிய   வாழ்க்கை
யையும் வாழ முடியாது!

நீங்கள் முக்கியம் எனக் கருதும்  ஒரு செயலை,  அல்லது   ஒரு விஷயத்தைச்
செய்ய இறங்கும்போது,    தற்காலிகமாக,  பிறவிஷயங்கள்  அனைத்தையும்
ஒதுக்கி வைத்துவிடுகிறீர்களல்லவா?    ஆனால்,     அனைத்தையும்விட  அதி
முக்கியமான   வாழ்க்கை  பற்றிய  புரிதல்,  அர்த்தம்,  குறிக்கோள்,  இலக்கு,
உண்மை    ஆகியவற்றை   அறியும்  விஷயம் வரும்போது,  பிற விஷயங்கள்
அனைத்தையும்   நீங்கள்    ஒதுக்கி வைத்துவிட்டு    முழுமூச்சாக    இறங்கிச்
செயல்படத்தயங்குவதும்,வாளாவிருப்பதும் ஏன்? வெறுமனே உணவு, உடை,
உடை,  உறையுள்,  உறவுகள்  ஆகியவற்றால் குறுக்கப்பட்ட  குறுகிய  வட்டத்
திற்குள் வளையவருவது என்பது எவ்வாறு மனிதத்தரத்துக்குரிய வாழ்க்கை
யாக முடியும்?

உண்மையில்,    நீங்கள்   வாழ்ந்து வருவது    சற்றே  மாறுபட்ட   ஒரு எலியின்
வாழ்க்கையைத்தான்!   மேலும்,  எவ்வகையிலும்,  உங்களது  வாழ்க்கை ஒரு
எலியின்  வாழ்க்கையைவிட  மேலானதோ, சிறப்பானதோ அல்ல! அதாவது,
அடிப்படையில்,   எலிகளும் உயிர்-பிழைத்துச் செல்கின்றன;  மனிதர்களும்
உயிர்-பிழைத்துச்  செல்கின்றனர்!    எலிகள்   தமது     உயிர்-பிழைத்தலைச்
சாதாரணமாகவும்,    மிக எளிமையாகவும்   நடத்திச் செல்கின்றன;  மனிதர்
களோ, அதே  உயிர்-பிழைத்தலை மிகச்சிக்கலான வகையிலும், செயற்கை
யான   அலங்கார - ஆடம்பரங்களைப் புகுத்தியும்    நடத்திச் செல்கின்றனர்
என்பது மட்டுமே ஒரு வித்தியாசம்!

இன்னும் சொல்லப்போனால்,  எலிகள்,   மனிதர்களைப்போல,   தமது உயிர்-
பிழைத்தல்   குறித்து   எவ்வித பிரமைகளையும்,   பிறழ்ச்சியான  கற்பிதங்க
ளையும்,    வீண்- மதிப்பீடுகளையும்     கொண்டிருப்பதில்லை!    பொதுவாக
விலங்கு ஜீவிகள் யாதொரு மதிப்பீட்டையும்,  போலியான உன்னதத்தையும்
கற்பிக்காமலேயே  உன்னதமாக உயிர்-பிழைத்துச் செல்கின்றன!   ஆனால்,
மனிதர்களோ,  தமக்குரிய  வாழ்க்கையை  ஆராய்ந்தறிந்து உன்னதத்திற்கு
உயராமல், தமக்களிக்கப்பட்ட அடிப்படையை துஷ்பிரயோகம் செய்து தமக்
கும்,  பிற உயிரினங்களுக்கும்,   ஒட்டு மொத்த  பூமிக்கிரகத்திற்கும் கேட்டை
யும், அழிவையும் பரிசாகத் தந்துவருகின்றனர்!

உயிர்-பிழைத்தலின் உன்னதம்,  உயிர்-பிழைத்தலின்  உண்மையான குறிக்
கோளை அறிந்து நிறைவேற்றுவதிலேயே அடங்கியுள்ளது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 14.01.2017
----------------------------------------------------------------------------

Monday, 9 January 2017

தன்னைக் கண்டடைதல்




எவ்வொரு மனிதன் (தன்) இருப்பைச் சாதாரணமாக
  எடுத்துக்கொள்ளாமல், புறவுலகின்  பல்வேறு  விஷயங்களால்
      கவனச் சிதறலடையாமல், ஆழமாகவும், முழுமையாகவும் தன்னை
        உணர்வு கொள்கிறானோ, அம்மனிதனே
        தன்னைக்  கண்டடைந்தவனாகிறான்!
     தன்னைக் கண்டடைந்தவனே மனிதன் ஆவான்!
  பொதுவாக, விலங்குஜீவிகள் தம்மை அறிவதோ, "தாம் இருக்கிறோம்!"
என்பதை, அதாவது, தனது இருப்பை உணர்வதோ இல்லை!

<•>

தன்னைக்கண்டடைதல் என்றால் என்ன?ஒருவன் தனதுஇருப்பை அவ்வளவு
நேரடியாகவும்,  முழுமையாகவும்,  தீர்க்கமாகவும் உணரும் பட்சத்தில், பகல்
வெளிச்சத்தில்   தன்னைக்  காண்பதைவிட   ஆயிரம்    மடங்கு     தெளிவாக
உணர்வின் உள்ளொளியில் தன்னைக்காண்பவனாகிறான்;அதாவது அவன்
புதிய   கண்களைப் பெற்றவனைப்போல,   தன்னைப்  புதியவனாகக்  காண்
கிறான்!   தன்னைக் கண்டடைதல்  என்பது பொங்கி வழிவது போன்றதொரு
பரவசஅனுபவம் ஆகும்!அவ்வனுபவம் அம்மனிதனின் உணர்வைஅடியோடு
மாற்றமுறச்  செய்துவிடுகிறது!   அதன்பிறகு  அவன்  ஏற்கனவே இருந்த ஒரு
வன் அல்ல! அவனது பார்வை பிற மனிதர்களிடமிருந்து முற்றிலும் வித்தியா
சமாகத் திகழ்கிறது!

மேலும்,அவன் தன்னை மட்டும் புதியவனாகக் காண்பதில்லை; உலகையும்
புதியதாகக்   காண்கிறான்,  சொல்லப்போனால்,  அவன்  மட்டுமே உலகைக்
காண்கிறான், அதாவது,  நிஜ உலகைக் காண்கிறான்!  பிற யாவரும் உலகை
வெறும் பொருட்களின் உலகமாக, பல்வேறு நுகர்வுகளுக்கான வளங்களின்
மாபெரும் கிடங்காக மட்டுமே காண்கின்றனர்!

ஆனால்,  எவ்வாறு தன்னைக் கண்டடைவது?   எவ்வாறு  ஒரு மனிதன் தனது
மேற் புறச்சுயத்தின்  தூண்டுதல்களுக்கு  (தேவைகளுக்கு)ப்  பதிலளிக்கிறா
னோ அவ்வாறே அவன் தன் சுயத்தின் ஆழத்திற்கும் பதிலளிக்கக் கடமைப்
பட்டவனாவான்!    அது குறித்து   அவனுக்கு   எவரும்    எடுத்துச் சொல்லவும்,
நினைவூட்டவும்,  போதிக்கவும்   வேண்டுமா?   ஒவ்வொரு  மனிதனும் தனது
சுயத்தின்   கனபரிமாணத்தை,   நீள-அகல-உயரங்களை     உணர்ந்தறிவது
அவசியமல்லவா? இவ்வாறு தனது கனபரிமாணத்தை அறியாமல் வாழ்வது
என்பது  ஒருவன்  தன்னுடைய  மாளிகையில்  உள்ளே  சென்று பார்க்காமல்,
அம்மாளிகையின்   தாழ்வாரத்தில்  தங்கி  வசிப்பது  போலவே முட்டாள்தன
மானதாகும்!

ஆகவே,  "எவ்வாறு தன்னைக்கண்டடைவது?"  எனும் கேள்வி அர்த்தமற்றதா
கும்!  தன் வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன என்பதையறியாமல் எவரும்
உளரோ?   "எவ்வாறு  எனது வீட்டின்  அறைகளைக் கண்டுபிடிப்பது?"   என்று
ஒருவன்  கேட்பானேயானால்,  அவனுக்கு  என்ன பதில் சொல்வது,  எவ்வாறு
வழி காட்டி உதவுவது?ஆம், வீட்டின் முன்-கதவின் வழியாக உள்ளே சென்று
ஒவ்வொரு அறையிலும் நுழைந்து பாருங்கள் என்று சொல்லலாம்! இன்னும்
ஒருபடி சென்று அம்மனிதனை அவனது வீட்டிற்குள் அழைத்துச்சென்று ஒவ்
வொரு அறையாக காணச்செய்யலாம்!ஆனால், ஒருவனது சுயத்திற்குள் எவ்
வாறு இன்னொருவன் அழைத்துச்செல்வது?நேரடியாக அழைத்துச்செல்வது
சாத்தியமில்லை!

ஆனால்,  மறைமுகச்சாத்தியம் ஒன்று உள்ளது!  அதாவது, தன்னுடைய சுயத்
தின்   ஆழத்தை,  கனபரிமாணத்தை   உணர்ந்தறிந்தவன்  எப்போதும்   தன்
ஆழத்திலிருந்து தான் பேசுகிறான், உரையாடுகிறான்;  குணப்படுத்தும் அவ
னது பேச்சை,  உரையைக்  கவனமாகக் கேட்கும் ஒருவனது  ஆழம்  தூண்டப்
படுகிறது!  அத்தகைய  ஒருவனது  பேச்சுக்கு முழுமையாக செவிசாய்க்காத
வர்களை  வேறு எந்தச்சக்தியாலும் உலுக்கி விழிக்கச்செய்யவியலாது!  தன்
சுயத்தின் ஆழத்திற்கு விழித்த  ஒருவனுடைய  ஆழமான பேச்சைக்கேட்கும்
இன்னொருவனுடைய  சுயம்    அதற்கேற்ப    ஆழத்திலிருந்து    அதிர்வடைய
வில்லை யெனில், உயர்-உணர்வுத்தளங்களைப்பொறுத்த விஷயத்தில் அவ
னது  சுயம்  மூடுண்டதாகவுள்ளது  என்றுதான்  சொல்லவேண்டும்! அதாவது
தன் ஆன்மாவின் இசைக்கு அவன் அந்நியனாயிருக்கிறான்!அந்தஅளவிற்கு
அவன்  தன் ஆழங்குறைந்த  மேற்புறச்சுயத்தின்  விருப்பங்களாலும், இச்சை
களாலும் கட்டுப்படுத்தப்பட்டவனாக, அடிமையாக இருக்கிறான்!

ஒருவன் தன்னைக் கண்டடைதல் என்பது  பெரும் சுமையாக, இயலாத காரி
யமாக இருக்கமுடியும் எனும் கருத்து அடிப்படையற்றது, ஆகவே தவறானது!
ஏனெனில்,  தன்னைக் கண்டடைதல்  என்பது தன்னை  முழுமைப்படுத்தும்,
தனது  சொந்த உயர்-சுயத்தை உணர்ந்தறிவதையும்,  தனது முழு -ஆகிருதி,
மற்றும்   முழு-ஆற்றலையும்  அறிவதையும் குறிப்பதாகும்!  வாழ்க்கையின்
உண்மையான சந்தோஷம்,  நிறைவு, மனஅமைதி ஆகியன மட்டுமல்லாமல்
முடிவான,  நிரந்தரமான பிறவிப் பயன்களும் ஒருவன் தன்னைக் கண்டடை
தலிலேயே அடங்கியுள்ளன!

தன்னைக் கண்டடைதல் என்பது அரிய பொக்கிஷங்களைக்கொண்ட புதை
யலைக்    கண்டடைந்ததற்குச்  சமமானது      என்பதைவிட  அனைத்தையும்
ஒருங்கே கண்டடைந்ததற்குச்சமமானதாகும்!தன்னைக்கண்டடைதலுக்கும்,
கண்டடையாதிருப்பதற்குமான  வித்தியாசம்  நித்திய வாழ்விற்கும், மரணத்
திற்கும் உள்ள வித்தியாசமே ஆகும்!

தன்னைக் கண்டடையாதவன்   பல்வேறு  உலகக்கவர்ச்சிகள்,  பொருட்கள்,
விஷயங்கள்  மீதான  விருப்பங்களாலும்,  ஆசைகளாலும்   அலைக்கழிக்கப்
படுகிறான்!  அதோடு, ஆன்மீகச்செல்வங்களான ஞானமடைதல், முழுமைய
டைதல்,முக்தி,மோட்சம்,வீடுபேறு, உயர்-உணர்வடைதல் ஆகியவை எதுவும்
தமக்கு   வாய்க்கவில்லையே   எனவும்  துன்பமுறுகிறான்!  ஒரு நேரம்  இந்த
உலகியல் வாழ்க்கை,  உறவுகள்,  உலகம்  இனிமையாகவும்,  இன்பமாகவும்
நிறைவளிப்பதாகவும் தெரிகின்றது! ஒரு நேரம் இவை கசப்பாகவும், அர்த்த
மற்றதாகவும், வெறுமையாகவும் தெரிகின்றது! இத்தருணங்களில்,ஒருவன்
எல்லாச் சழக்குகளையும், மட்டுப்பாடுகளையும், மேலோட்டமானவைகளை
யும் விட்டுவிலகி ஆன்மீகக்கரையில் ஒதுங்கிவிடலாம் எனத் தோன்றுகிறது!

ஆனால், அடுத்த திருப்பத்தில் மீண்டும் உலகியல் இனிக்கிறது! இத்தகைய
ஊசலாட்டம் எதைக்குறிக்கிறது?  பிரச்சினை இதுதான்;  உலகியலில் ஆன்மீ
கத்திற்கு இடமில்லை! உலகியல் என்பது உலகியல் தான்! அதேவேளையில்,
ஆன்மீகம் உலகியலை மறுப்பதில்லை;    அசலான வாழ்வில்  உலகியலுக்கு
உரிய,முறையானஇடத்தை அனுமதிக்க ஆன்மீகம் தவறுவதில்லை!ஆனால்,
உலகியலுக்கு உரிய இடத்திற்கு மேல் அது அதிகமாக கோர ஆன்மீகம் அனு
மதிப்பதில்லை! அதாவது, அடிப்படையான உயிர்-வாழ்தல்  என்பதற்குமேல்
உலகியல்  நீட்டிக்கப்படும் பட்சத்தில், அது ஆன்மீகத்தை நிராகரித்துவிடுவ
தாகிறது!  அதோடு அது உயிர்-வாழ்தலின் அர்த்தத்தையும் குலைத்துவிடுவ
தாகிறது!

உண்மையில் தான் யார் என்பது குறித்த சிறு வியப்பும், கேள்வியும், அதைத்
தொடரும் விசாரமும் இல்லாமல் தன் வழக்கமான அன்றாட வாழ்க்கையில்
மூழ்கித்திளைக்கும், அல்லது தடுமாறும் ஒருவனால்  ஒருபோதும்  தன்னைக்
கண்டடைதல்  என்பது  இயலாது!   மேலும்,  தன்னை  இன்னார் எனவும்,  இது
வெனவும்,அதுவெனவும் அடையாளப்படுத்திக்கொள்வதென்பது தன்னைக்
கண்டடைதலுக்கான  வழியை  நிரந்தரமாக  மூடிவிடுவதாகும்! மேலும், ஒரு
வன் எத்தகைய சுயமாகத் தன்னைக் காண்கிறானோ, வரித்துக்கொள்கிறா
னோ,  அதற்கேற்பவே  அவனது  வாழ்க்கையும்  ஆழமற்றதாகவோ, அல்லது
ஆழமிக்கதாகவோ அமைகிறது!  சுயத்தின்  தன்மைக்கேற்பவே  வாழ்க்கை
யும்  அமைகிறது!  புழுவிற்கு  புழுவின் வாழ்க்கையும்,   பூச்சிக்கு   பூச்சியின்
வாழ்க்கையும், எலிக்கு எலியின் வாழ்க்கையும் அமைகிறது! மேலும், வாழ்க்
கை  பற்றிய  கற்பிதங்களும்  ஒரு போதும் அசலான வாழ்க்கையைத் தொடு
வதில்லை!

மனிதஜீவியைப் பொறுத்தவரை,  தனது  பிறப்பின்  பரிசாகப் பெற்ற சுயமே
அவனது இறுதிச் சுயமோ, முழுச்சுயமோ அல்ல!  மேலும், அவன் தன் பிறப்பி
னால் மனிதனாவதில்லை; மாறாக, தன் விழிப்பினால் மட்டுமே மனிதனாகி
றான்!    ஏனெனில்,   மனிதன்   என்பவன்  வெறும்  உயிர்-ஜீவி  மாத்திரமல்ல!
பிரதானமாக  அவன்  ஒரு  உணர்வு- ஜீவியாவான்;  அதற்கெனவே உருவான
வன் அவன்!  ஒரு  உயிர்-ஜீவியாகப்  பிறக்கும்  அவன்  உணர்வின்- ஜீவியாக
விழித்தாக  வேண்டும்,  அதாவது   அவன்  தன்னைக் கண்டடைந்தாகவேண்
டும்!    வெறும்   உயிர்-ஜீவியாகத்  தொடரும்வரை   அவன்  மனிதன்  அல்ல;
இன்னுமொரு விலங்கே!

பொதுவாக,  விலங்குஜீவிகள் தம்மை அறிவதோ,  "தாம் இருக்கிறோம்!"  என்
பதை, தனது இருப்பை  உணர்வதோ  இல்லை!  அவை  உணர்வற்ற  வெறும்
உயிர்-இருப்பின்   ஜீவிகளே!  ஆனால்,  மனிதனோ  தனது இருப்பை உணர்வு
கொள்வதன் வழியாக,  உயிர்-இருப்பிலிருந்து,   உணர்வு-இருப்பிற்கு  உயர்ப
வனாகிறான்!   ஆனால்,   பெரும்பாலான   மனிதர்கள்  தம்  வாழ்-காலத்தில்
உணர்வு-இருப்பிற்கு   உயர்வதேயில்லை!  அதற்கான விழைவு அவர்களிடம்
துளிர்க்கவில்லை!  தன்னைக்கண்டடையும் உள்ளமைந்த உன்னத நோக்கத்
துடனும்,    அனைத்து   உட்பொதிவுகளுடனும்   பிறக்கும்   மனிதஜீவிகள் தம்
மைக்  கண்டடையாதிருப்பது இப்பிரபஞ்சத்தின் பெரும் சோகமே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 08.01.2017
----------------------------------------------------------

Saturday, 7 January 2017

சிற்றார்வம் X பேரார்வம்





கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனே, பேரார்வம் கொள்! வெறும்
சாயலிலேயே எவ்வளவு காலம் தான் தங்கியிருப்பாய்?

சாயலைக் கடந்து வளர்ந்து அசலான நிலையை அடைந்திடு! அதற்காக நீ
பெரிதாகச் செய்திட வேண்டியது எதுவுமில்லை!

மீண்டும் சொல்கிறேன், பேரார்வம் கொள்! வேறேதற்கும் உன்னைப்
பங்கிடாத, தீவிரம் குன்றாத எல்லையற்ற பேரார்வம்!

ஏனெனில், பேரார்வம் தான் கடவுள் அல்லது மூலான்மாவின் சாரம்! எனவே
நீ எதுவாகவும் இல்லாமல் பேரார்வத் தீயாகவே மாறிவிடு!

அப்போது நீ ஆகிடுவாய் சாயல் நீங்கி அசலாக!

<•>

பேரார்வம்  என்பது மிச்சம் மீதமின்றி உன்னை முழுவதுமாகக் கொடுப்பது!
பேரார்வத்திற்கு இன்னொரு பெயர் : அன்பு!   ஆம்,  கடவுள்  தன்னை மிச்சம்
மீதமின்றி முழுவதுமாக இழந்ததால் தானே சிருஷ்டி எழுந்தது -அதில் நீயும்
எழுந்தாய்! நண்பனே, இப்போது, நீ உன்னை முழுவதுமாக இழந்து கடவுளை
எழச் செய்திடு! ஏனெனில், இவ்வழியாக உன்னுள் எழுப்பப்படும் கடவுளைத்
தவிர வேறு கடவுள் எதுவும் இப்பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை!

உன்னுள்   நீ   எழுப்பும்   கடவுள் தான்    நீ  அடைய வேண்டிய  பாதுகாப்பான
இறுதிக் கரையும்,   நிரந்தர  நன்மையும்,   முழு நிறைவும்,     மரணம்   கடந்த
நித்திய வாழ்வும்!

நண்பனே,  நீ அடையவேண்டிய உணர்வின் உச்ச நிலையே கடவுள்! ஆகவே
தான்,  "நீயே உனது சொந்தக்கடவுள்!" என நான் திரும்பத்திரும்பச் சொல்லி
வருகிறேன்!

ஆனால்,நண்பனே,உன்னிடம் பேரார்வம் உள்ளதா?ஆர்வத்தில் சிற்றார்வம்,
பேரார்வம்  என இருவகை உள்ளதா என நீ வியக்கிறாயா?   உயிரற்ற   அடிப்
படை  அணுத்துகள்களுக்கும்;    அமீபாவிலிருந்து     மனிதன்   வரையிலான
அனைத்து உயிருள்ள ஜீவிகளுக்கும் ஆர்வம் என்பது பொதுவானது! அதுவே
பிரபஞ்சப்  பரிணாமத்தின்   அடிப்படை  உந்துவிசை!    ஆனால்,  பேரார்வம்
என்பது மனிதனுக்கு மட்டுமே பிரத்யேகமானது! அதிலும்,  அது உணர்வுக்கு
வந்திட்ட மனிதனுக்கு மட்டுமே உரித்தானது!

உணர்வுக்கு வருவதும் பேரார்வம் செயல்படுவதும் ஒருங்கே நிகழ்வதாகும்!
பேரார்வம்  இன்றி  உணர்வுக்கு  வருதலும்,  உணர்வுக்கு வராமல் பேரார்வம்
செயல்படுவதும் இயலாது!

எல்லோரும்   தங்களிடம்   பேரார்வம்  உள்ளதென  நம்புகிறார்கள்,  ஆனால்,
பேரார்வம்  ஒருவரிடம்  இருந்தால்,   அது  அவரை எங்கு கொண்டு சேர்க்கும்
என்பது தெரியாது!  மேலும்,  அது  பேரச்சத்தைத்   தருவதாகவும்   இருக்கும்!
ஆகவே, அநேகர் அக்கதவின் வழியே செல்லத்துணிவதில்லை! தெரியாமல்
அதை   நெருங்கிடும்   பலரும்   நெருப்பைத் தொட்டுவிட்டது போல   வெடுக்
கென உடனே பின் வாங்கி விடுகின்றனர்!

எல்லோரிடமும்   இயல்பாய்   இருப்பது,  செயல்படுவது   சிற்றார்வமே!  ஆம்,
உணர்வுக்கு  வராத,    விழிப்படையாத    மனிதஜீவியினுள்    விழித்திருப்பது
பிராணிய ஆர்வமே!

ஆர்வம் இருவித இயக்கங்களைக் கொண்டதாயுள்ளது! முதலாவது, உடலை
மையமாகக்  கொண்டு  உடலின்  பசிகளை,  இச்சைகளை, உடனடித்தேவை
களை   நிறைவு  செய்யும் பொருட்டு  புறத்தே  பொருட்களைத்தேடி  நுகரும்
சிற்றார்வம்!

இரண்டாவது,    உணர்வை  மையமாகக் கொண்டு   இறுதித்  தேவைகளான
மெய்ம்மையை,  நிரந்தர  நிஜத்தை,  ஒருமையும்  முழுமையுமான  உண்மை
யைத்தேடி அகத்தின் வழி செல்லும் அழியாப் பேரார்வம்!

சிற்றார்வம் உணர்வற்றது, எல்லைகளுடையது! பேரார்வம் உணர்வுடையது,
எல்லைகளற்றது!   சிற்றார்வம்  கொடுக்கப்பட்ட சுயத்தைத் தக்க வைத்துப்
பேணிக்காத்திடும் மட்டுப்பாடான இயக்கமாகும்!

பேரார்வம்  இருக்கின்ற சுயத்தைக் கடந்து  மேன்மேலும் வளர்ந்துயரச்செய்
திடும் பேரியக்கமாகும்!

ஆகவே,  நண்பனே!  உன்னிடம்  எவ்வகை ஆர்வம் உள்ளது? எப்போது உனது
ஆர்வம்     நீ  அறிந்த,   அனுபவித்த,   ஆயிரம்    அன்றாட   விஷயங்களையும்
பொருட்களையும்   கடந்து   மெய்ம்மை  நோக்கிச் செல்கிறதோ  அப்போதே
உன்னுள் பேரார்வம் துளிர்த்திடும்!

நண்பனே,    இந்த  உலகமும்,   அதிலுள்ள  பொருட்களும்,   அனைத்து  உறவு
களும்,   மிக  நெருக்கமான  உனது  சொந்தங்களும்  இன்னும்  உனதருமைச்
சுயமும்  உட்பட  அனைத்தும்  தற்காலிகமானவையே, நிரந்தரமற்றவையே!
விரைவிலோ சற்று தாமதமாகவோ அழியக்கூடியவையே!

அழியக்கூடியவற்றை,  நிரந்தரமற்றவைகளை,  தற்காலிகமானவைகளைத்
தேடுவது, சார்ந்திருப்பது சிற்றார்வம்!

அழிவற்றதை, நிரந்தரமானதை, நித்தியமானதைத் தேடுவது, சேருவது
பேரார்வம்!

ஆகவே, நண்பனே!  உன்னிடம் எவ்வகை ஆர்வம் உள்ளது?
                     
                    •<•>•    
இப்பகுதி, 2013-ல் வெளியிடப்பட்ட, "மனிதனின் சொல்" எனும் எனது
இரண்டாவது  நூலின்  மூன்றாம் பாகத்திலிருந்து எடுக்கப்பட்டு,
விசேடமாகத் தலைப்பிடப்பட்டு இங்கு தரப்படுகிறது
                    •<•>•

மா.கணேசன்/ நெய்வேலி/ 07.01.2017
----------------------------------------------------------------------------

Friday, 6 January 2017

வாழ்-கால வரையறை விதி!





இந்த விதி, இதுவரை சொல்லப்படாத ஒன்று!
இந்தவிதி உங்கள் தெரிவுகளை நெறிப்படுத்தும்!
கால விரயம், அது வாழ்க்கை விரயம் என எச்சரிக்கும்!
காலம் கடத்தாமல் காலத்தைக் கடக்கும்படிச் சொல்லும்!
உங்கள் மதிப்பீடுகளை மறு மதிப்பீடு செய்யப் பணிக்கும்!
அர்த்தம், உண்மை, மெய்ம்மையை முதலில் தேடச் சொல்லும்!
உயிர்-வாழ்தலல்ல, உயர்-வாழ்தலே உன்னதம் என போதிக்கும்!
மொத்தத்தில் முக்தி எனும் முழுமைக்கு உங்களைத் தயார் செய்யும்!

<•>

இந்த   "வாழ்-கால வரையறை விதி"  யின்  பிரதான  உணர்த்துகோல்  என்ன
வென்றால், இந்தவிதி நம்மை முழுமையாக நம் வாழ்க்கையை வாழ்ந்திடச்
சொல்வதோடு,  அதற்குரிய   முயற்சிகள்,  செயல்பாடுகள்   அனைத்தையும்
உடனடியாகவும், விரைவாகவும், துரிதமாகவும், தீவிரமாகவும்  மேற்கொளச்
சொல்கிறது!   ஏனெனில், நாம் பெற்றுள்ள   "வாழ்க்கை"  எனும்  இந்த அரிய
வாய்ப்பை முறையாக,முழுமையாகப்பயன்படுத்தி, ஒவ்வொருவரும் அவரு
டைய வாழ்-காலத்திற்குள்ளாகவே  முழுமை எனும் பிறவிப்பயனை அடையு
மாறு  சொல்கிறது!  ஏனெனில்,  இவ்விதி மறுபிறவி மீது நம்பிக்கை கொள்வ
தில்லை!    மனிதன்   எத்தனை  பிறவிகள்  எடுத்தாலும், எவ்வளவு தான் சூழ்
நிலைமைகள் மாறியமைந்தாலும், அவனது உளப்பான்மை அப்படியேதான்
தொடரும்; அது  இயல்பாகவோ, தாமாகவோ,  கடவுள் அல்லது வேறு  எவரது
அருளாலோ    மாறிட   வழியேது மில்லை!     இப்பிறவியினால்    ஒருவனுக்கு
அர்த்தம், உண்மை, மெய்ம்மை ஆகியவற்றின்  மீது  ஆர்வம் பிறக்கச்செய்ய
முடியவில்லையெனில்,  அடுத்தடுத்த  பிறவிகளால்   மட்டும்   என்ன செய்ய
முடியும்?   இப்பிறவியில்    உணர்வு    நிலை  மாற்றம்    பெறமுடியாதவனால்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் முடியாது! இவ்விதியின் குறியீட்டுச்சொல் :
"இப்போதில்லையெனில், வேறெப்போதுமில்லை!"

<•>

இந்த விதி உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழச்சொல்கிறது!அதற்கு
வாழ்க்கை  என்றால்  என்ன  என்று விரைந்து புரிந்து கொள்ளச் சொல்கிறது!
ஏனெனில்,   அறிதல்,    தெளிதல்,   புரிதல் தான்   வாழ்தலும்,  வாழ்க்கையும்,
இலக்கும்   என்று   அது போதிக்கிறது!   அது சரி,   ஆனால்,   வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும்  விஷயத்தில்  விரைவும் அவசரமும் ஏன் என்று கேட்கிறீர்
களா?   ஏனென்றால்,  வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை
ஒருவர்  மிக அரிதாகவே  தேர்வு செய்கிறார்;  மேலும், அவ்வாறு தேர்வு செய்
கிறவர்களின்   விகிதமும்   ஒரு   சதவீதத்திற்கும்  குறைவே  என்பதால்தான்
அவசரத்தின்  அவசியம் வலியுறுத்தப்படுகிறது!  வாழ்க்கை என்றால் என்ன
என்று  புரிந்து கொள்ளும்  விஷயத்திற்கு,  99 %  பேர்கள்  அந்நியர்களாகவே
இருக்கிறார்கள்!

வாழ்க்கையைப் புரிந்துகொள்வதன் அவசர-அவசியத்தை ஒருவர் தன்னுள்
உணர்ந்து  அதை  சிரமேற்கொள்ளத்தொடங்கிவிட்டால்,  அதன்பிறகு  அவர்
மிக நிதானமாகவும்,பரபரப்பின்றியும்,அமைதியாகவும் தன் வாழ்க்கையை
வாழும் கலையைத் தானே கற்றுக் கொள்வார்!  ஏனெனில், அசலான வாழ்க்
கைக்குப்  புறம்பான  மதிப்பீடுகள்,  நடைமுறைகள்,  விவகாரங்கள், செயல்
பாடுகள்,  ஈடுபாடுகள் ஆகியவற்றின் மட்டுப்பாடுகளையும்,  பொருத்தமின்
மையையும் அவராகவே புரிந்துகொண்டு, அவசியமான,மிகவும் அத்தியாவ
சியமான, அர்த்தமுள்ள தேவைகளை, விஷயங்களை மட்டுமே நாடித்தேடிப்
பெற்று தேவையற்ற அலைக்கழிப்பின்றி நிறைவுடன் வாழ்வார்!

ஆனால், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல்தான் வாழ்கிறோமா? அப்படி
பிரத்யேகமாகப்  புரிந்துகொள்ள வாழ்க்கையில்  என்ன இருக்கிறது?  என்று
நம்மில் பலர் கருதலாம்,  கேட்கலாம்!  ஆம், வாழ்க்கையைப்பற்றி பிரத்யேக
மாகப்  புரிந்துகொள்ள ஒரு பிரதான அம்சம் உள்ளது! அது, "வாழ்க்கை"  என்
பது தான்! அதாவது,மனிதஜீவிகளாக நாம் பிறக்கும்போது, "உயிர்-வாழ்தல்"
(Survival)எனும் தளத்திற்குத்தான் அறிமுகப்படுத்தப்படுகிறோமேதவிர;
அதோடு,  அக்களத்தில்  எவ்வாறு  நம்மைத் தக்கவைத்துக் கொள்வது, அதா
வது, உயிர்-பிழைத்திருப்பது என்பது மட்டுமே கற்றுத்தரப்படுகிறதே  தவிர,
வாழ்க்கைக்கு     நம்மை   எவரும்  அறிமுகப்படுத்துவதுமில்லை,    அசலான
வாழ்க்கைக்கு  எவரும் நம்மைத் தயார்படுத்துவதுமில்லை!   மேலும், வாழ்க்
கையைக்  கற்றுத்தர  யாதொரு  பள்ளியும்,   பல்கலைக்கழகமும்   இல்லை!
ஆம், வாழ்க்கை என்பது நம் ஒவ்வொருவராலும் கண்டடையப்படவேண்டிய      
ஒன்றாகும்!

வாழ்க்கையைப் புரிந்துகொள்வது என்றால் என்ன?நிச்சயமாக அது உணவு,
உடை,   உறையுள்,   மற்றும்    உறவுகள்   குறித்த   குறுகிய விவகாரம் அல்ல!
இவை உயிர்-பிழைத்தல் கோளத்தின் விவகாரங்கள் ஆகும்!மாறாக,உலகம்
அல்லது பிரபஞ்சம் ஏன்,எந்த நோக்கத்திற்காகத் தோன்றியது? அதில், உயிர்
ஜீவிகளும், சிந்திக்கும் திறனுள்ள, உணர்வுடைய மனிதஜீவிகளும் ஏன், எதற்
காகத் தோன்றியுள்ளோம்?பிரதானமாக பிரபஞ்சத்திற்கும் மனிதஜீவிக்கும்
இடையேயான தொடர்புறவு என்ன?  என்பவற்றையெல்லாம்  புரிந்து கொள்
வதே வாழ்க்கையைப்புரிந்து கொள்வது என்பதாகும்!

முக்கியமாக,  பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான தொடர்புறவைப் புரிந்து
கொள்வதென்பது பிரபஞ்சத்தைத் தனியே புரிந்து கொண்டு,  பிறகு,  அதில்
மனிதனைப் பொருத்திக் காண்பது அல்ல!   ஏனெனில்,  இவ்வழியே  பிரபஞ்
சத்தையும்  புரிந்து கொள்ள இயலாது,   மனிதனையும் புரிந்து கொள்ள  இய
லாது!    அதாவது,    மனிதனைத்  தொடர்பு படுத்தாமல்     பிரபஞ்சத்தையும்;
பிரபஞ்சத்துடன்   தொடர்பு  படுத்தாமல்    மனிதனையும்   புரிந்து   கொள்ள
இயலாது!   பிரபஞ்சம் என்பது பருப்பொருளாலானதொரு,   அதாவது, கேலக்
ஸிகள்,  நட்சத்திரங்கள், கிரகங்கள்,மற்றும் பல வினோத பொருட்களையும்
நிகழ்வுகளையும்   உள்ளடக்கமாகக் கொண்ட, மாபெரும்  அமைப்பு மட்டும்
அல்ல!   இது   பிரபஞ்சத்தைப் பற்றிய  மிக மேலோட்டமானதொரு சித்திரம்
ஆகும்!  அதாவது,  மனிதன்  என்பவன்  இதயம்,  நுரையீரல்கள்,  இரைப்பை,
குடல்கள், சிறுநீரகங்கள்  போன்ற  உள்ளுறுப்புகளைக் கொண்ட, ஒரு உயிர்
ஜீவி என்று குறிப்பிடுவதுபோலவே மேலோட்டமானதாகும்!ஆம், மனிதனின்
உள்ளுறுப்புகள்    அவனை   முழுமையாக   வெளிப்படுத்து வதில்லை!   அவ்
வாறே,  பிரபஞ்சத்தின் உள்ளடக்கமும்  அதனை முழுமையாக வெளிப்படுத்
துவதில்லை!

ஆனால்,   பொதுவாக விஞ்ஞானமும் ,  பொருண்மைவாதத்  தத்துவமும்  இத்
தகைய எந்திரத்தனமான அணுகுமுறையைக் கொண்டே பிரபஞ்சத்தையும்
மனிதனையும்,   அவனது   வாழ்க்கையையும்   புரிந்து கொள்ள  முயற்சித்து
தொடர்ந்து     தோல்வியைத்   தழுவிக்   கொண்டிருக்கின்றன!     இத்தகைய
அறிதல் முறையின்  வாயிலாக   இன்னும்  நூறு  நூற்றாண்டுகள்  ஆனாலும்
விஞ்ஞானிகளால் பிரபஞ்சத்தையும்,மனிதனையும்,அவனது உண்மையான
வாழ்க்கையையும்    புரிந்து  கொள்ள இயலாது!   இன்று   அறியப்படாத  ஒரு
விஷயத்தை,    நாளை  அறிந்து கொள்ளலாம்  எனும்   சாவதானப் போக்கும்,
நாளை நிச்சயம் விஞ்ஞானம் கண்டுபிடித்துச்சொல்லிடும் எனும் அதிகப்படி
யான   நம்பிக்கையும்   அறியாமையின்  வழிப்பட்டதாகும்!  ஏனெனில், விஞ்
ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்லும் வரையில், வாழ்க்கை காத்திருக்காது!
"வாழ்-கால வரையறை விதி"  சொல்வதென்னவென்றால், ஒவ்வொருவனும்
தன் (ஒரு) வாழ்-காலத்திற்குள்ளாகவே வாழ்க்கையைப் புரிந்துகொள்வதை
யும்,  முழுமையாக  வாழ்வதையும்  சாதித்தாகவேண்டும்  என்கிறது!  இதன்
உணர்த்துகோல் என்னவென்றால்,  இவ்வாறு  அனைத்தையும் ஒருவன் தன்
வாழ்-காலத்திலேயே  புரிந்து கொள்வது  என்பது சாத்தியம் என்பதேயாகும்!
அதற்கு,   முக்கியமாக,  ஓருவன்  மிகச்சரியான,  முறையான  அணுகு முறை
யினைக் கைக்கொள்வது அவசியமாகும்!

ஆம்,உலகம் என்பது நாம் விழுந்துபுரண்டு காரியமாற்றுவதற்கான களமும்
அல்ல!   வாழ்க்கை  என்பது   உணவு,  உடை, உறையுள், உறவுகள் ஆகியவற்
றைச் சுற்றிச் சுழலும் உயிர்பிழைத்தல் விவகாரமும் அல்ல! இதன் அர்த்தம்,
உணவு  வேண்டாம்,  உடை வேண்டாம், எதுவும் வேண்டாம்,   இன்னும் உயிர்
வாழவும் வேண்டாம் என்பதல்ல! அதாவது,எவ்வொரு கட்டடத்திற்கும் அடித்
தளம் அவசியம் என்பதை எவரும் மறுக்கமுடியாது! அதேவேளையில், அடித்
தளம் மட்டுமே  கட்டடம் ஆகிடாது!  எவ்வாறு  ஒரு கட்டடத்திற்கு அடித்தளம்
என்பது அவசியமோ,   அவ்வாறே,   'உயிர்-வாழ்தல்'  என்பது  உண்மையான
வாழ்க்கைக்கான ஒரு அடிப்படையே,  அடித்தளம் மாத்திரமே தவிர அதுவே
முழு-வாழ்க்கையாகவும் ஆகிடாது!

ஆனால்,   மனிதகுலம்   காலம்காலமாக, உயிர்-பிழைத்தலையே வாழ்க்கை
யென   வாழ்ந்து  நெடிய வரலாறும் படைத்து வந்துள்ளது! இத்தகைய அவல
நிலையைக் கண்ட ஞானி இயேசு,
     
       "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
        என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்."
       "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்  அவருடைய
        நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம்
        உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்."
                         (புதிய ஏற்பாடு, மத்தேயு 6 : 33)

என்று கூறினார்! ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் இவ்வாக்கின்
உண்மையை  எவரும்  புரிந்து கொண்டதாகவோ,  அசலான வாழ்க்கையை
எவரும்   நாடியதாகவோ  தெரியவில்லை!  மாறாக,  மனிதகுலம் எப்போதும்
போலவே  பிழைப்பு நடத்திச் செல்கிறது!  உண்மையான  மனித வாழ்க்கை
என்பது   உயிர்-வாழ்தலைக்   கடந்தது   எனும்  உண்மையை  எப்போது நாம்
புரிந்து கொள்ளப்போகிறோம்?  ஏன்  நாம்  எப்போதும்  வாழ்க்கையின் மேற்
புறத்  தேவைகளுக்குரிய  பொருட்களை    மட்டுமே   நாடித்    தேடுகிறோம்?
எப்போது  நாம் வாழ்க்கையின் உட்பொருளான அர்த்தத்தைத் தேடுவோம்?
என்பதே நம்முன்னே நிற்கும் கேள்வியாகும்!

உயிர்-வாழ்தல்  என்பது  அனைத்து உயிர்-ஜீவிகளுக்கும் பொதுவானதொரு
செயல்பாடாகும்.   ஆனால்,   மனித ஜீவிக்கும்,    பிற   விலங்கு ஜீவிகளுக்கும்
உள்ள   வித்தியாசம்  என்ன?   அல்லது,   டார்வின்  முதல்   டாக்கின்ஸ்   வரை
பரிணாம  வாதிகள்   சொல்வது போல,   மனிதன்   என்பவன்   இன்னுமொரு
விலங்கினம் தானா?   விலங்குஜீவிகளும்  உயிர்வாழ்கின்றன,  நாமும் உயிர்
வாழ்கிறோம்! ஆனால், உயிர்-வாழ்தல் என்றால் என்ன? ஒரு சில குறிப்பிட்ட
இயல்பூக்கிகளின்  -  பசி,  தாகம்,  பாலுணர்வு,  பாதுகாப்புணர்வு   ஆகியவற்
றின்-  தூண்டுதல்களுக்குப்  பதிலளிப்பது  என்பதுதானே!  மனிதன் உள்பட
அனைத்து    உயிர்-ஜீவிகளும்  உயிருள்ள  எந்திரம்  போல  இயங்குகிறோம்!
நமது  இயக்கம்  எதைக் குறிக்கோளாக இலக்காகக் கொண்டிருக்கிறது என்
பது குறித்து நாம் கேள்வி எழுப்பியதுண்டா? ஒருவகையில்,  'உயிர்வாழ்தல்'
என்பது அனைத்து  உயிரினங்களின் மீதும் திணிக்கப்பட்டதாக  உள்ளது!

உயிர்வாழ்தல்  என்பது  ஒரு  வரமா?  அல்லது  சாபமா? உண்மையில் மனித
ஜீவிகள்  உள்பட   அனைத்து  ஜீவிகளும்   உயிர்வாழும்படிச் சபிக்கப்பட்டுள்
ளோம் என்பதாகவே தோன்றுகிறது! தெரிவுகளில்லா நிர்ப்பந்தம் எவ்வாறு
வரமாகும்?   உயிர்வாழ்தலுக்காக  உயிர்வாழ்தல்   என்ற  கட்டாய உழைப்பு
முகாமுக்குப் பெயர்தான்  'வாழ்க்கை'யா?    "எதற்காக உயிர்வாழ்கிறோம்?"
"இது என்ன கேள்வி,   உயிர்வாழ்வதற்காக உயிர்வாழ்கிறோம்!" ஆக, அர்த்த
மின்றி,   குறிக்கோளின்றி,   இலக்கின்றி;   ஏன், எதற்கு என்ற கேள்வியின்றி,
ஆகவே பதிலின் தேவையின்றி,  உயிர்வாழ்வதற்காக உயிர்வாழ்கிறோமா?
இவ்வனைத்துக்  கேள்விகளுக்குமான  சரியான,  முறையான பதில்களைக்
கண்டறிவதில்  சிரத்தையுடன்  ஈடுபடும்  போது  மட்டுமே  அசலான  மனித
வாழ்க்கை  என்பது தொடங்குகிறது!  அதற்கு முன்னர் ஒருபோதும் இல்லை!

ஆனால்,  கேள்விகளுக்கும்,  மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஆம்,   தொடர்பு  இருக்கிறது!   கேள்விகள் தான்   மனித-உணர்வைக்  கிளறி
மனிதனை  உணர்வுக்குக் கொண்டுவருகின்றன!  இவ்விடத்தில்,  உணர்வுக்
கும்,  வாழ்க்கைக்குமான  தொடர்பைப் புரிந்துகொள்வது  முக்கியம்!   ஏனெ
னில்,   உணர்வில்லாமல்,  வாழ்க்கை,  குறிப்பாக,  மனிதவாழ்க்கை  என்பது
சாத்தியமில்லை!   பிரத்யேகமாக  வாழ்க்கை என்றால்  என்ன என்று புரிந்து
கொள்ளத் துவங்கும் போது தான்   நாம்  அசலான  (மனித) வாழ்க்கைக்குள்
பிரவேசிக்கிறோம்;  அதற்கு முன்னர்  ஒருபோதும் இல்லை!  சற்று எண்ணிப்
பார்ப்போம்,  நாம்  எதை  வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்
பதை சற்று திரும்பிப்பார்ப்போம்!   ஆம்,  எலிகள்  தம்  வாழ்க்கைக்கு என்ன
வெல்லாம்    செய்கின்றனவோ,   அவற்றையே தான்   நாமும்   செய்கிறோம்;
ஆனால், மிக நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் செய்கிறோம்! ஆனால், எலி
களின் சமூகத்தில், அந்தஸ்து,வீண்ஆடம்பரம்,போன்ற போலியானமதிப்பீடு
களும்;   ஏழை, பணக்காரன் எனும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாகத்தெரிய
வில்லை!

அதாவது,   அசலான  வாழ்க்கை  பற்றியும்,  வாழ்க்கையின்  அர்த்தம்,  குறிக்
கோள்,   இலக்கு  பற்றியுமான  தேடல் நம்மிடம் இல்லாததால்,  வெறும் உயிர்
பிழைத்தலையே ஆடம்பரமாக அலங்கரித்துக் காண்பதன் வழியாக வாழ்க்
கையை  அர்த்தமுள்ளதாக  ஆக்கிவிட்டதான  மாயையில்  மயங்குகிறோம்!

மேலும்,  பொய்யும்  போலியுமான  மதிப்பீடுகளை  உருவாக்கி சமூகத்தைப்
போட்டிக் களமாக  மாற்றி,  இத்தகைய  எலிப்பந்தயத்தில்  (Rat-Race)ஒரு
வரை   ஒருவர்  முந்திச் செல்வதை  வாழ்க்கையில்  முன்னேற்றம் அடைதல்,
வெற்றி  பெறுதல்  என்றெல்லாம்  வாழ்க்கைக்கு போலியான இலக்கு நிலை
களைக்  கற்பித்துக்கொண்டு வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி  வாழ்ந்து
செல்கிறோம்! ஏதோ வாழ்க்கைக்கு தனியே பிரத்யேகமாக அர்த்தம் இல்லா
தது போல, அதற்கு நாம் எதைக்கற்பிக்கிறோமோ அதுதான் அர்த்தம் என்று
காணும் சார்த்தரிய (Jean-Paul Sartre)வகை  இருத்தலியல் கொள்கை அடிமுட்டாள்தனமானதாகும்!  அதாவது,  வாழ்க்கைக்கு நாம் தான் அர்த்தம்
வழங்கிடவேண்டும் என்பதைப்போன்ற அர்த்தமற்றசிந்தனை வேறெதுவும்
இருக்கமுடியாது!

மாறாக, வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது;அதைக்கண்டடைவதே ஒவ்வொரு
மனித  ஜீவியின்   தலையாய  கடமையும்,  வாழ்க்கைப்பணியும்,  வாழ்க்கை
யும்  ஆகும்.   மேலும்,   வாழ்க்கையின் அர்த்தத்தை, உண்மையைக் கண்டறி
வதற்கு    மாற்றாக,   வேறு  எவ்வகையான     சொந்த   இலட்சியங்களையும்,
இலக்குகளையும், ஈடுபாடுகளையும் ஒருவர்  மேற்கொள்ளல் ஆகாது!

அடுத்து,   வாழ்க்கையின்   அர்த்தத்தைக்  கண்டடைதலில்  ஒவ்வொரு  தனி
மனிதனும்  நேரடியாக ஈடுபட்டாக வேண்டும்!   ஒருவருடைய  வயிற்றுப் பசி
யைப்போக்கிட   இன்னொருவர்  உண்ண முடியாது  என்பதைப் போன்றதே,
அர்த்தத்திற்கான பசியும்!  அர்த்தத்தை  ஒவ்வொருவரும் நேரடியாகத்தான்
அறிந்தாகவேண்டும்;  உணவைப்  பகிர்ந்துகொள்வது போல,  அர்த்தத்தைப்
பகிர்ந்து  கொள்ளமுடியாது!  வேண்டுமானால்,  அர்த்தத்தை  அறிவதற்கான
வழிமுறைகளை ஞானிகளிடமிருந்து அறிந்துகொள்ளலாம்!

ஆனால்,  முதலில் ஒவ்வொருவரிடமும் அர்த்தத்திற்கான பசி இருக்கவேண்
டும்!  அதாவது, சாதாரண பசியை உணர்ந்து உணவின் தேவையை உணர்த்
துவதற்கு ஒரு மையம் இருப்பதுபோல, தண்ணீரின் தேவையைத் தாகம் ஏற்
பட்டு  உணர்த்துவது போல,  அர்த்தத்தின்  தேவையை உணர்த்துவதற்கான
ஒரு மையம்  (அத்தகைய தோர் மையம் மனிதனினுள் இயற்கையாக இருப்
பதில்லை என்ற போதிலும்)   ஒவ்வொரு மனிதனினுள்ளும் புதிதாய்த் திறந்
தாக  வேண்டும்!  அத்தகைய தோர்  மையம்  ஒவ்வொரு  மனிதனினுள்ளும்
திறக்காதவரை,   தோன்றாதவரை;   ஆன்மீகப்பயிற்சிகளாகட்டும்,  தத்துவ
ஆராய்ச்சிகளாகட்டும்,  அவற்றினால் ஒரு பயனும் விளைய வாய்ப்பில்லை!
எப்போது,  ஒரு  மனிதனுள்  அர்த்தத்தின்  தேவையை  உணர்த்தும்   மையம்
திறக்கிறதோ,  உருவாகிறதோ,  அப்போதுதான் அவன் உண்மையில் மனித
னாக எழுகிறான்!  ஆனால்,  அம் மையம்  தானாகவோ,  இயற்கையாகவோ,
அல்லது,  ஒருவரது விருப்பத்தினாலோ,  பெருமுயற்சியினாலோ தோன்றுவ
தில்லை! அம்மையம் தோன்றும் கணத்தை நாம் "உணர்வுக்குவரும் கணம்"
அல்லது "விழிப்பின் கணம்" என்றும் சொல்லலாம்!

எவ்வொரு மனிதன் (தன்) இருப்பைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல்,
(பெரிதாகப் புறக்கவர்ச்சிகளுக்கு ஆட்படாமல்)  ஆழமாகவும், முழுமையாக
வும்  உணர்வு கொள்கிறானோ, அம்மனிதனே தன்னைக்கண்டடைந்தவனா
கிறான்!தன்னைக்கண்டடைந்தவனே மனிதன் ஆவான்!பொதுவாக,விலங்கு
ஜீவிகள் தம்மை அறிவதோ,"தாம் இருக்கிறோம்!" என்பதை, தனது இருப்பை
உணர்வதோ   இல்லை!   அவை  உணர்வற்ற  வெறும்  உயிர்-இருப்பின்   ஜீவி
களே!  ஆனால்,  மனிதனோ தனது இருப்பை உணர்வுகொள்வதன் வழியாக,
உயிர்-இருப்பிலிருந்து,  உணர்வு-இருப்பிற்கு  உயர்பவனாகிறான்!   ஆனால்,
பெரும்பாலான   மனிதர்கள் தம் காலத்தில் உணர்வு-இருப்பிற்கு  உயர்வதே
யில்லை!   ஏனெனில்,   இத்தகைய உயர்வு,  அல்லது,   மாற்றம்   தாமாகவோ,
இயற்கையாகவோ நிகழ்வதில்லை! மாறாக, அது  ஒருவன்  எந்த  அளவிற்கு
உணர்வு கொள்கிறான்,  அதாவது,   உணர்வுப் பூர்வமாக  மாறுகிறான் என்ப
தைச் சார்ந்ததாகும்!  அதாவது இம்மாற்றம், காரணம்-விளைவு எனும் சங்கி
லித் தொடரில் இன்னொரு நிகழ்வு அல்ல!   மாறாக,  அச்சங்கிலித்தொடரை முடிவிற்குக்கொண்டுவந்திடும் இயற்கை  மீறியதொரு நிகழ்வாகும்!

ஆம்,   உணர்வுக்கு வருதல் (Becoming Conscious),விழிப்படைதல்  (இது
இரவு  உறங்கி காலையில் விழித்தெழுந்து சூரிய ஒளியில் உலகைக்காணும்
அந்த வழக்கமான விழிப்பு அல்ல! மாறாக, காலையில் விழித்தெழுந்தபிறகு
இன்னொரு முறை,  உணர்வின்  உள்ளொளியில்  தன்னையும்,  அனைத்தை
யும்  காணும்  "இரண்டாவது விழிப்பு" (Second Awakening) ஆகும்!   இந்த
விழிப்பு,   "தான் ஒரு உணர்வுதான்!"   எனும்  உண்மைக்கு  விழிக்கும்  "ஞான
விழிப்பு" ஆகும்! இவ்விழிப்பு மனிதஉணர்வினை கால-வெளியின் பிணைப்
பிலிருந்து விடுவித்துவிடுகிறது!  இதன் உணர்த்துதல்கள் (Implications)
மிகவும் ஆழமானவை!   அதாவது,   ஒருவர் உடலளவில் இவ்வுலகில் இயங்கி
னாலும்,   உணர்வின் அளவில்  அவர்  இவ்வுலகைக்  கடந்தவராக  இருப்பார்!
'உணர்வுக்கு வருதல்', 'விழிப்படைதல்' பற்றிய இக்குறிப்புகளைத் தம் உணர்
வில்  கிரகித்துக்கொள்ளும்  எவ்வொரு  வாசகரும்  அதனால் நிச்சயம் உரிய
பலனை அடைவார்!

உணர்வு  இல்லாமல் "இருப்பு"(Existence)என்பது இருக்கமுடியும்! ஆனால்,
"வாழ்க்கை" (Life) என்பது   இருக்கமுடியாது!    உதாரணம் :    கூழாங்கல்,
அதற்கு இருப்பு உள்ளது; ஆனால் வாழ்க்கை இல்லை!  இருப்பு என்பதை மிக
எளிமையாக விளக்க முடியும் :  ஆம்,  இருப்பதெல்லாம்  இருப்பு தான்,  இருப்
பின் வகைகள்தான்.  அதாவது,  இருப்பவை அனைத்தும் ஒரு படித்தானவை
அல்ல! கூழாங்கல், தவளை, மனிதன் இவை ஒவ்வொன்றும் இருப்பின் வெவ்
வேறு வகைகளைச் சேர்ந்தவை ஆகும்.    கூழாங்கல்    என்பது     சட-இருப்பு
ஆகும்; தவளை என்பது 'உயிர்-இருப்பு' வகையைச் சேர்ந்ததாகும் -  ஒரு தவ
ளைக்கு இருப்பும் உண்டு, வாழ்க்கையும் உண்டு! மனிதன் 'உணர்வு-இருப்பு'
வகையைச்   சேர்ந்தவன் -  மனிதனுக்கு    இருப்பும்  உண்டு,   வாழ்க்கையும்
உண்டு,  இவற்றுக்கும்  மேலாக,  அனைத்தையும்  பற்றிய  புரிதலும்  உண்டு!

வாழ்க்கை என்பதைச்சுருக்கமாக விளக்கவேண்டுமெனில், ஒரு கூழாங்கல்
லுக்கு  இருப்பு உண்டு ஆனால்,  வாழ்க்கை இல்லை என்று கண்டோம்! அதா
வது, அதற்கு உள்-அமைந்த தேவைகள் எதுவும் கிடையாது;  மேலும், அதற்கு
சொந்த இயக்கமோ, உணர்ச்சியோ, உணர்வோ கிடையாது! ஒரு கூழாங்கல்
தன்னையும் அறியாது புறத்தையும் அறியாது!மேலும், அதற்கு தனி-மையம்
ஏதும் இல்லை!  ஆனால்,  ஒரு தவளைக்கு இருப்பும், வாழ்க்கையும் உள்ளன.
அதற்கென குறிப்பான தேவைகள் உள்ளன;  ஆகவே  அதற்கு சொந்த  இயக்
கம் உண்டு.    அதற்குத்  தனது   இருப்பை   உணரும்  அளவிற்குப்  பெரிதாக
"சுய-உணர்வு"  என்பது  இல்லையென்றாலும், புறத்தை அறியக்கூடிய வகை
யிலான "புலன்-உணர்வு" உண்டு!அப்புலன்-உணர்வு வழியாகப்பெறும் அனு
பவமும், அறிவும் உண்டு! ஒரு தவளை என்பது ஒரு தனி மையத்தைச் சுற்றி
ஒருங்கிணக்கப்பட்ட தொரு மிகச் சிக்கலான அமைப்பு ஆகும்! ஒரு தவளை
சட-இருப்பைக்கடந்த  மேலான  உயிர்-இருப்பைச்  சேர்ந்ததாகும்!   ஆனால்,
ஒரு தவளைக்கு தன் இருப்பை உணர்வுபூர்வமாக அறியும் வாய்ப்பு இல்லை!
ஆகவே தான், அத்தவளை மனிதஜீவியாக பரிணமித்து எழுந்தது!

மனிதனைப்பொறுத்தவரை, அவனுக்கு இருப்பும், வாழ்க்கையும்; தன் இருப்
பையும்,  வாழ்க்கையையும்,  உலகையும்  பற்றிய  தெளிவான  அறிவையும்,
புரிதலையும் பெறும் வாய்ப்பும் உண்டு!  அவன் சட-இருப்பைக்கடந்த உயிர்
இருப்பின்  தளத்தில்   தோன்றியவனாயினும்,    அவன்   உயிர்-இருப்பையும்
கடந்த,  உணர்வு-இருப்பைச் சேர்ந்தவன்  மட்டுமல்லாமல்,  உணர்வின் உச்ச
மான "முழு-உணர்வு"  எனும்  "முழு-இருப்பு" நிலையை,  "இறுதி மெய்ம்மை"
நிலையையும்  அடையக்கூடிய  ஒப்பில்லா வாய்ப்பு பெற்றவனாகவும் திகழ்
பவனாவான்!  அதே நேரத்தில்,  மனிதர்கள் எல்லோரும் தமக்கு வழங்கப்பட்
டுள்ள இந்த அரிய வாய்ப்புகளைப்பயன் படுத்திக்கொள்வதில்லை என்பது
துரதிருஷ்டவசமானதாகும்! அதாவது, பெரும்பாலான மனிதர்கள் எலிகளை
யும்,  தவளைகளையும்  போலவே  உணர்வு-இருப்பிற்குள்  பிரவேசிக்காமல்
வெறுமனே உயிர்-பிழைத்துச் செல்கின்றனர்!

பலர் கவிதைப்பூர்வமாக, வாழ்க்கையை பயணத்திற்கு ஒப்பிட்டுச் சொல்வ
துண்டு!  ஆனால், போய்ச்சேரும் இடம் அறியாத பயணம் அர்த்தமற்றது என்
பதை  ஏனோ அவர்கள் சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள்! மேலும், பலர்
கருதுவது போல வாழ்க்கை என்பது ஒரு கடிகார இயக்கம் போன்றதுமல்ல!
மாறாக, வாழ்க்கை என்பது ஒரு நதியின் இயக்கத்தை ஒத்தது ஆகும்; சமுத்
திரத்தை   சென்றடைவதே  நதியின் ஒரே  குறிக்கோளும்  இலக்கும் ஆகும்!

அதேவேளையில்,ஒரு நதியானது தனது இலக்கை அடையவேண்டுமெனில்,
அதன்    இயக்கம்     தொடக்கத்திலிருந்தே    சமுத்திரத்தை    நோக்கியதாக
அமைந்திருப்பது  அவசியமாகும்!  அதாவது,  நதியானது  காடு  மேடு  என்று
சுற்றித் திரிந்துவிட்டு,   திடீரென,   சமுத்திரத்தை  நோக்கிப்பாய்ந்து செல்ல
முடியாது!  மேலும்,  நதியிடம்  யாதொரு  வரைபடமும் இல்லை  என்றபோதி
லும், அது, புவி ஈர்ப்பை  தனது  வழிகாட்டியாகக் கொண்டு பாய்ந்து சென்று
முடிவில் சமுத்திரத்தை அடைந்துவிடுகிறது! அது போலவே, மனிதன் தனது
வாழ்க்கையின்   இலக்கை,  முழுமையை  அடைவதற்கு வரைபடம்  எதுவும்
தேவையில்லை!   நதிக்கு புவி-ஈர்ப்பு போல,   மனிதனுக்கு "உணர்வு-ஈர்ப்பு"
தான்  வழிகாட்டியாகும்!    நதியானது  மேட்டிலிருந்து  பள்ளத்திற்குப்பாயும்;
(மனித) உணர்வு  பள்ளத்திலிருந்து  மேட்டிற்கு உயரும்!   இந்த அம்சம் தான்
பெரும்பாலான  மனிதர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது!  அதாவது மேட்டி
லிருந்து   பள்ளத்திற்கு   இறங்குவது எளிது;   பள்ளத்திலிலிருந்து   மேட்டிற்கு
உயருவது மிக்கக் கடினம்!

எவ்வாறு,   நதியின் இயக்கமானது  தொடக்கத்திலிருந்தே தனது இலக்கான
சமுத்திரத்தை    நோக்கியதாக  அமைந்துள்ளதோ,   அவ்வாறே  மனிதனின்
வாழ்வியக்கமும்  தனது வாழ்வின் இலக்கான அர்த்தம்,  உண்மை,  முழுமை
ஆகியவற்றை நோக்கியதாக அமைவது அவசியம்! நதியானது அது தொடங்
கிய  இடத்திலிருந்து  தன் அடைவிடம் சேரும்வரை  ஓய்வில்லாமல்  பாய்ந்து
சென்று கொண்டேயிருக்கிறது;அது தன் பாதைநெடுகிலும் தான் சந்திக்கும்
எதனுடனும்  தங்கிவிடுவதுமில்லை,  பிணைத்துக் கொள்வதுமில்லை, அடை
யாளப்  படுத்திக்கொள்வதுமில்லை!  நதியானது  எத்தகைய  நிலப்பரப்பின்
மீது பாய்ந்து சென்றாலும்,அதன் உய்வும், முழுமையும் சமுத்திரத்தை அடை
வதிலேயே உள்ளது!  நதிக்கும் அது பாய்ந்து செல்லும்  நிலப்பரப்புகளுக்கும்
இடையேயான உறவு என்பது மிகத் தற்காலிகமானது!   நதியின்  ஒரே உறவு
சமுத்திரம் மட்டுமே!  தன்  இலக்கை அடையும் குறிக்கோளிலிருந்து வழுவா
மல்,சிந்தாமல் சிதறாமல் செல்லும்பொருட்டு நதி தனது கரைகளை, கட்டுப்
பாடுகளைத் தானே உருவாக்கிக்கொள்கிறது!

ஆம்,  நதியைப்போலவே மனிதனுக்கும் கரைகள்,  சுய-கட்டுப்பாடுகள் அவ
சியமாகும்! அவற்றைவிட,  இலக்கு குறித்த ஒற்றை மனம்கொண்ட தன்மை
(Single-Mindedness)மிகமிக அவசியமாகும்! இலக்கு குறித்த தீவிரமான
உணர்வு இல்லாமல் வெறும் கட்டுப்பாடுகளால் ஒரு பயனுமில்லை! மேலும்,
மனிதனுக்கு உண்மை குறித்த இடையறாத (ஓய்வில்லாத) விசாரமும் அவசி
யமாகும்! நதியைப்போலவே, மனிதனுக்கும் இவ்வுலகில் எதனுடனும் உறவு
என்பது இருக்கமுடியாது! எல்லா உறவுகளும் தற்காலிகமானவையே!  ஏனெ
னில்,  உண்மை  மட்டுமே  மனிதனின்  ஒரே நிரந்தர உறவாகும்!  ஏனெனில்,
உண்மைதான்  மனிதனது சாரம் அல்லது ஆன்மா ஆகும்!  உண்மை என்பது
பூடகமானதொரு   கருத்தோ,  கோட்பாடோ, புரியாத   நுட்பச்  சொற்களைக்
கொண்டமைந்த தத்துவ விளக்கமோ அல்ல!  மாறாக, உண்மை என்பது ஒவ்
வொரு  மனிதனும்  அடையக்கூடிய  உச்ச நிலை உணர்வாகும்! அனைத்தும்
- இப்பிரபஞ்சம் முழுவதும்   -   ஒரு     ஒற்றைப் புள்ளியில்        குவிக்கப்பட்டு
அடையப்படும்  ஒருமையும்  முழுமையுமான  உணர்வுமயமான  மெய்ம்மை
தான் உண்மையாகும்!  இது   வித்திலிருந்து  தோன்றிய மாபெரும் விருட்சம்
மீண்டும் வித்தினுள் அடங்குவதை ஒத்ததாகும்!

பொதுவாக, நாம், வாழ்க்கை என்பதை உணவு,  உடை,  உறையுள், உறவுகள்
எனும் மிகவும்  குறுகிய வட்டத்தினுள் அடைபட்ட,  உயிர்-பிழைப்பு  விவகார
மாகவே   காண்கிறோம்!   உயிர்-வாழ்தல்  என்பது,   எவ்வளவு    சௌகரியக்
குறைச்சலாக   இருந்தாலும்,  அல்லது எவ்வளவு  சௌகரியமிக்கதாக, ஆடம்
பரமாக அமைத்துக்கொண்டாலும்,அது வெறும் உயிர்-பிழைத்தல் மட்டுமே!
அர்த்தம்  அறியப்படாத வாழ்க்கை   மனிதத் தரத்துக்குக் கீழானதே  ஆகும்!

மனித வாழ்-காலம்  வரையறைக்குட்பட்டது  என்பது  உண்மையே; ஆனால்,
அது  பலரும்  எண்ணுவதுபோல,  மிகவும் குறுகியதல்ல! மாறாக, போதுமான
தற்கும் மிக அதிகமாகவே மனிதர்க்கு வாழ்-காலம் வழங்கப்பட்டிருக்கிறது!
அதாவது, வாழ்க்கையின் தரம் அல்லது சிறப்பு, எவ்வளவு அதிகஆண்டுகள்
ஒருவர்  உயிர்-வாழ்கிறார்  என்பதைப் பொறுத்ததல்ல!  மாறாக,   எவ்வளவு
உணர்வுபூர்வமாக  வாழ்க்கையை உணர்கிறார், எவ்வளவு அர்த்தபூர்வமாக
வாழ்க்கையை அறிகிறார் என்பதைப் பொறுத்ததாகும்!  ஆகவே, வாழ்க்கை
யைப்புரிந்து கொள்ளவேண்டும் எனும் நோக்கத்திற்குப் புறம்பான காரியங்
களிலும்,ஈடுபாடுகளிலும் காலத்தை விரயம்செய்துவிட்டு,"ஐயோ,எவ்வளவு
குறுகியது மனிதவாழ்க்கை!" எனப் புலம்புவது அறிவீனமாகும்!

ஆக, வாழ்க்கையை நாம் உணவு,உடை, உறையுள், உறவுகள் எனும் மிகவும்
குறுகிய   வட்டத்தினுள்  அமைந்த,  உயிர்-பிழைப்பு  விவகாரமாகச்   சுருக்க
வில்லையெனில்,  அது  ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் தழுவிய ஒன்றாகத்
தன்னை இனம் காட்டிடும் அற்புதம் நிகழ்ந்திடும்!  பிரபஞ்சத்திற்கும்  மனித
னுக்கும்  உள்ள  தொடர்பு  சூட்சுமமானது!   மனிதன் (=உணர்வு)   இல்லாமல்
பிரபஞ்சத்திற்கு அர்த்தம் கிடைக்காது!   அதேபோல, பரந்த  பிரபஞ்சத்துடன்
தொடர்பு  படுத்தாமல்    மனிதவாழ்க்கையும்    முழுமை பெறாது!   அதாவது
உணர்வு எனும் விசேட அம்சமாக மனிதன் விளங்குவதால், உணர்வுள்ள ஒவ்
வொரு மனிதனும் பிரபஞ்சத்தின் தற்காலிக மையமாகத்(Virtual Center)
திகழ்கிறான்   எனலாம்!   ஏனெனில்,   மேன்மேலும்   ஒருமைப்படும்    மனித
உணர்வின்  வழியாகத்தான் பிரபஞ்சமானது  தனது  இறுதி ஒருமையையும்,
முழுமையையும் அடையவிருக்கிறது!    இது   வெறும் கற்பனையான கூற்று
அல்ல!   எவ்வாறு  ஒரு  மரமானது  தனது  ஒவ்வொரு  கனியின் வழியாகவும்
தன்னைக் கடந்து   சென்று   தனது   முழுமையை  அடைகிறதோ  அவ்வாறே
பிரபஞ்சமும் ஒவ்வொரு மனிதனின் (முற்றிக்கனியும்) உணர்வின் வழியாக
தன்னைக்கடந்து  சென்று தனது முழுமையை அடைய எத்தனிக்கிறது!  இது
(டார்வினியம் அறியாத) பரிணாமபூர்வமான உண்மையாகும்

இவ்விடத்தில்,நாம் புரிந்துகொள்ளவேண்டிய இன்னுமொரு உண்மை என்ன
வெனில், மரமானது வெறுமனே ஒதுங்கியிருந்து காய்களையும்,  கனிகளை
யும்  விளைவிப்பதில்லை!  மாறாக, மரமே   தனது  சாரத்தைத் திரட்டிக் காய்
களாக  மாறுகின்றது;  பிறகு,  ஒவ்வொரு  காயும் முற்றிக் கனியானதும், ஒவ்
வொரு  கனியின்  வழியாகவும்  மரம்  தன்னைக்கடந்து  சென்று  விடுகிறது!
அவ்வாறே  பிரபஞ்சமும்  தனது  சாரத்தைத் திரட்டி  மனிதனாக, மனிதனுள்
உணர்வாக  மாறுகின்றது;  உணர்வாகிய  மனிதன்  மேன்மேலும் உணர்வில்
வளர்ந்து  (கனிந்து) உணர்வின் முழுமையை அடையும் போது  பிரபஞ்சமும்,
மனிதனும்    ஒருங்கே   "முழு -உணர்வு"   எனும்   இறுதி மெய்ம்மையில்   தம்
முழுமையைத் தழுவிக் கொள்கின்றனர்!

மனித வாழ்காலம்  மிகவும்  குறுகியதாகத் தெரிவதற்குக்  காரணம்,  மனித
ஜீவிகள்  நெடிய ஆயுளையும்,   ஆரோக்கியமாகத் திகழ்வதையும்  இலட்சிய
நிலைகளாகக்  கருதுவதே யாகும்!    ஆனால்,   மனித-உடலானது    ஒரு நூறு
ஆண்டுகளுக்கும்  மேலாக   நீடிக்கும்வகையில்  உருவாக்கப்பட்டிருக்கவில்
லை! ஏனெனில், "வாழ்க்கை" என்பது நீடித்து உயிர்-பிழைத்திருப்பது அல்ல!
மேலும்,  உயிர்த்தோற்றமும்,  உயிரியல் பரிணாமமும்,  மிகத்தொலைவான
தொரு ஒப்பற்ற இலக்கு நோக்கியதாக முடுக்கிவிடப்பட்டுள்ளன!

மனிதஜீவிகளைப்  பொறுத்தவரை,  தாம்  எதற்காக  இங்கிருக்கிறோம், தம்
வாழ்வின் மிகஅசலான குறிக்கோள்,இலக்கு என்ன என்பவைகளைக்கண்டு
பிடித்துச் செயல்படுத்தியாகவேண்டும் எனும் சவாலை ஏற்காமல்,எலிகளை
யும்,   தவளைகளையும்  போல   யாதொரு    சிந்தனையும்,   கேள்வியுமின்றி
வெறுமனே   உயிர்-பிழைத்தலை   வாழ்க்கையாக  மேற்கொள்வது  என்பது
மனிதஜீவிகளுக்குப் பொருத்தமானதல்ல! மேலும்,  மனிதவாழ்காலம் மிகக்
குறுகியது  என்பது  எதை  உணர்த்தி  நிற்கிறது  என்பதை நாம் கண்டுபிடித்
தாகவேண்டும்! முதல் உணர்த்துகோல், நாம் நம் வாழ்-காலத்தை வீண் விவ
காரங்களிலும்,ஈடுபாடுகளிலும் விரயம்செய்யக்கூடாது என்று சொல்கிறது!
இரண்டாவது   உணர்த்துகோல்,   "வாழ்க்கை  என்பது  ஒரு  அரிய  வாய்ப்பு!"
அவ்வாய்ப்பு  முடிவடைவதற்குள்  முறையாக அதைப்பயன்படுத்திக்கொள்
வது முக்கியம் என்று சொல்கிறது!

நல்லது,  "வாழ்க்கை என்பது ஒரு அரிய வாய்ப்பு!"   என்றால்,  அது எதற்கான
வாய்ப்பு  என்பதைத் துல்லியமாக அறிவதுதான் நமது அடுத்த பணியாகும்!
நிச்சயமாக, 'வாழ்க்கை' என்பதை நாம் விரும்பியவற்றைச் செய்வதற்கான,
அல்லது,   அனுபவிப்பதற்கான   வாய்ப்பாகக் கொள்ளமுடியாது!  ஏனெனில்,
நம்முடைய   விருப்பம்   என்பதென்ன?  அதனுடைய அடிப்படை என்ன?  எவ்
வகையில்   அவ்விருப்பம்   மெய்ம்மையுடன்  தொடர்புடையது?  நம்முடைய
விருப்பங்கள்  என்பவை  நம்மால்,  நேரடியாக  உணரப்பட்ட  உடலின்  அடிப்
படைத் தேவைகளைத்தழுவியவை என்பதற்குமேல் வேறெவையுமல்ல! இத்
தேவைகள்    உயிர்-பிழைத்தலுக்கு    அடிப்படையானவை     என்ற  அளவில்
அவசியமானவையே   என்பதில்    எவ்வித   சந்தேகமும்   இல்லை!    ஆனால்,
உயிர்-பிழைத்தலுக்கு  உதவும்   தேவைகள்,     அதாவது   பொருட்களும் சரி,
உயிர்-பிழைத்தல் என்பதும் சரி, எவ்வகையிலும் அவை இறுதியான அம்சங்
களாகவோ,விஷயங்களாகவோ இருக்கமுடியாது! ஏனெனில், உயிர்-பிழைத்
திருப்பதற்கான நோக்கம், குறிக்கோள்,  இலக்கு ஆகியவை அறியப்பட்டாக
வேண்டும்!

இதையே வேறுசொற்களில் சொன்னால்,வாழ்க்கை என்பது மெய்ம்மையை
அறிவதற்கான தொரு வாய்ப்பே தவிர வேறு எதற்குமான வாய்ப்பும்  அல்ல!
ஏனெனில்,பேருணர்வாகிய மெய்ம்மை தான், தன்னைச்சுருக்கிக்கொண்டு,
பரிணாம  இருப்பாகவும், இருப்பினூடே பரிணமிக்கும் உணர்வாகவும் மாறி
யுள்ளது! பேருணர்வு எனும் மெய்ம்மையின் சாரம் ஆனந்தமே தவிர வேறில்
லை!  இருப்பு என்பது எவ்வளவு சிறிதாயினும்,  அதாவது அணுத்துகள்களை
மட்டுமே உள்ளடக்கிய, சட- இருப்பாயினும், அதுவும் ஆனந்தத்தின் வெளிப்
பாடேயாகும்!  இன்னும்,   புழு, பூச்சிகளின் மட்டத்து  தொடக்க நிலை உயிர்-
இருப்பாயினும், அதுவும் ஆனந்தத்தின் வெளிப்பாடேயாகும்! இன்னும் பெரி
தாக "சுய-உணர்வை" எட்டாத ஆதி-மனிதனின், அரைகுறையான உணர்வு-
இருப்பாயினும்,அதுவும் ஆனந்தத்தின் வெளிப்பாடேயாகும்!

ஆனால்,   மனித ஜீவியானவன்    மேன்மேலும்    உணர்வில்   அதிகரிப்பதும்,
உணர்வின்  உச்ச நிலையை  எட்டுவதும் அவனது பரிணாம உரிமையாகும்!
மனிதன் மட்டும் தனது தற்போதைய அரை-விலங்கும் அரை-மனிதனுமான
நிலையினைக் கடந்து  வளர்வானெனில்,    எதையும் சார்ந்திராத,   அகலாத
தூய பேரானந்தம் அவனுடையதேயாகும்! இன்னும்,அனைத்தின் இதயத்தை
யும்   ஊடுருவிக்காணும்  ஞானமும் அவனுடையதேயாகும்!  இன்னும், உணர்
வின்   உச்சத்தில்   காலத்தின் கட்டுகள்  உதிர்ந்திட  மரணம்  கடந்த நித்திய
வாழ்வும் அவனுடையதேயாகும்!

உண்மையில்,    மரணம்-கடந்த  நித்திய வாழ்வை  ஒருவன்  தனது  உடலின்
மரணத்திற்கு முன்னேயே, அதாவது,  தன் வாழ்-காலத்திற்குள்ளேயே, தான்
உயிரோடிருக்கும்  காலத்திலேயே,  சாதித்தாக வேண்டும்!  சிலர், மரணமில்
லாப் பெருவாழ்வு பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்!   அதாவது,   ஒருவர்   தனது
உடலையும்  மரணத்திடமிருந்து  காப்பாற்றிக்கொள்ளமுடியும் எனும் சாத்தி
யப்பாட்டைப்பற்றிப் பேசியுள்ளனர்!  கோட்பாட்டுரீதியாக, அது சாத்தியமே
என்றாலும், உடலை (உடலின் ஒவ்வொரு செல்லையும்) முழுமையாக உணர்
வுப்படுத்துவது என்பது மிகமிகக்கடினமாகும்!வேறொரு கோணத்திலிருந்து
காணும்   போது,     உடலையும்   உணர்வுப் படுத்திக்கரை  சேர்ப்பது  என்பது
அதிகப்படியான சுமையாகும்! இன்னும், உடலையடுத்து, உலகை உணர்வுப்
படுத்துவதுபற்றியும்  நாம்  பேசலாம்! ஏனெனில், உலகம்,பிரபஞ்சம், மற்றும்
அதிலுள்ள   அனைத்தும்    உணர்விலிருந்து   உருவானவையே,    உணர்வின்
வெவ்வேறு நிலைகளும் வெளிப்பாடுகளுமேயாகும்!ஆனால்,இவை அதிகப்
படியானவை, ஆகவே அவசியமற்றவை எனலாம்!

மேலும்,  இன்னும் உணர்வின் நுனியைக்கூட எட்டிப்பிடிக்காத,  உணர்வுக்கு
வராத; புசிப்பும்,குடிப்பும், மற்றும் பிற இச்சைகளின் நிறைவேற்றங்களிலும்
மூழ்கிக்கிடக்கும் சராசரி மானிடர்களுக்கு, மரணமில்லாப்பெருவாழ்வு  என்
பது,  எவ்வகையிலும் எட்டக்கூடிய  விஷயமாகத்தெரியவில்லை! அதற்காக,
உணர்வுப்   பூர்வமாக   அணுகவேண்டிய    ஆன்மீகத்தை,    அனைவருக்கும்
கொண்டு சேர்க்கும்  விதத்தில்  எளிமைப்படுத்தவியலாது  என்றபோதிலும்,
அதி-தீவிர  ஆன்மீகக்கோட்பாடுகளை நாம் கட்டுடைத்துத்  தெளிவுபடுத்தி
தேவையற்ற சுமைகளைத் தவிர்க்கலாமல்லவா!

ஆம்,   மனிதன்  என்பவன்  மிகத் துல்லியமாக  உணர்வேயாவான்!   உடலும்
உயிரும்,   உணர்வாகிய  மனிதனைத் தாங்கும்  பாத்திரம்  மட்டுமே யாகும்!
ஆம்,  "தான் ஒரு உணர்வுதான்!"  என்பதை உணர்ந்தறிவதே ஒவ்வொரு மனி
தனுக்குமான ஒரே வாழ்-காலச்சவால் ஆகும்! "தான் ஒரு உணர்வுதான்!" என்
கிற உண்மைக்கு விழித்திடும் மனிதன் தொடர்ந்து மேன்மேலும் உணர்வில்
பெருகுவதற்கு தடையேதும் இருப்பதில்லை!ஏனெனில்,உடலைத் 'தான்' என
அடையாளப்படுத்திக்  கொள்ளும்   மனித மனம்தான்  ஒருவன்  உணர்வாக
எழுவதற்குப்   பெருந்தடையாக   விளங்கும் பிரதான விஷயமாகும்!  மேலும்,
விழிப்படையாத மனிதமனமே அனைத்துப் பிரமைகளுக்கும்,புனைவுகளுக்
கும் ஊற்றுக்கண் ஆகும்! மனமானது உடலை மட்டுமல்லாது, பணம், பொன்,
பொருள், வீடு, நிலம், சொத்து, புகழ், பட்டம், பதவி, வெற்றி,  சிலரது விஷயத்
தில்,மிகவும் பிறழ்ச்சியாக தோல்வி,இழிநிலை அல்லது தாழ்நிலை,போன்ற
எண்ணற்ற  பல விஷயங்களுடனும்  தன்னை  அடையாளப்படுத்திக் கொள்
ளக்கூடியதாகும்! அதாவது, தனது உண்மையான அடையாளத்தை அகழ்ந்த
றிவதைத் தவிர்த்து, மிகச் சுலபமாக அது எதனுடனும் தன்னை அடையாளப்
படுத்திக்கொண்டுவிடும்!

பொதுவாக,   மனிதஜீவிகள்   எல்லோரும்  மிகச்சரியாக சந்தோஷத்தையும்,
மன நிறைவையும்,     மற்றும்   மன அமைதியையும்  தான்   தேடுகிறார்கள்!
ஆனால்,  மிகவும் தவறாக,   அவற்றை  அவர்கள்  தவறான பொருட்களிலும்,
விஷயங்களிலும்;   தவறான   இடங்களிலும்   தேடித்  தோற்றுக்   களைத்துப்
போவதுடன் தங்களது உள்ளார்ந்த மன அமைதியையும் இழந்துதவிக்கிறார்
கள்! பலரது ஆசைகளுக்கு அளவும் எல்லையும் கிடையாது!

சந்தோஷம்,  மன நிறைவு  ஆகியவை  புறத்தேயிருந்து  ஒருவன்  தன்னுடன்
சேர்த்துக் கொள்ளக்கூடியவையல்ல!  அவ்வாறு   சேர்த்துக் கொள்ளக்கூடிய
பொருட்களிலும், விஷயங்களிலும் அடங்கியிருக்கவில்லை! மாறாக, அவை
ஒருவன்  தன்னைத் தோண்டி  தனது சுயத்தின்  முழுமையில்  கண்டடையக்
கூடிய அற்புதப்பொக்கிஷங்கள் ஆகும்! "மனிதன் தன்னில்தானே முடிவான
வன், (அதாவது  முழுமையானவன்)!"  என்ற  உண்மையை  ஒவ்வொருவனும்
உணர்ந்தறியக் கடமைப்பட்டவனாவான்.  ஒவ்வொரு மனிதனும் ஏற்கனவே
சந்தோஷம்,மனநிறைவு,மற்றும் மனஅமைதி ஆகியவற்றின் விதையாகவே
இருக்கிறான்!    எவனும்   புதிதாக  விதைகளைத் தேடவோ,    விதைக்கவோ
தேவையில்லை!  ஒருவன் செய்யவேண்டியதெல்லாம்,  மேன்மேலும்  உணர்
வில் வளர்வது மட்டுமே; உயரும் உணர்வின் மட்டத்திற்கேற்ப தன் சுயத்தை
வார்த்துக் கொள்வது  மட்டுமே!    ஒருவன்   மிக்கக் கவனத்துடன்   பார்த்துக்
கொள்ள வேண்டியது  பிரமைகள்  எனும்  களைகளை    அண்டவிடக்கூடாது
என்பதை மட்டுமே! அவை சந்தோஷத்தின் பயிர்களை அழித்துவிடும்!

தன் சொந்த  விருப்பங்களைப்  பிரதானமாகப்  பின்பற்றிச் செல்பவன்  தன்
வழியைத் தவறவிட்டவனாவான்! அவன் விரும்பினாலும், உண்மையை அவ
னால்  அறியமுடியாது,   மெய்ம்மையை  நெருங்கவும்  முடியாது!  ஏனெனில்,
விருப்பங்களும்,  மெய்ம்மையும்  சேர்ந்து  செல்லாது!    இதற்கு   ஒரே    தீர்வு,
மெய்ம்மையை  தன்  ஒரே  பெருவிருப்பமாகக்  கொள்வது  மட்டுமேயாகும்!
பெரும்பாலான மனிதர்கள் தம் சொந்தவிருப்பங்களை மட்டுமே கணக்கில்
கொள்கிறார்களே தவிர,    "வாழ்க்கையின் விருப்பம்"  குறித்துக்  கருதுவதே
யில்லை!   மனிதஜீவிகளாகிய   நாம்  முழுமையின்  எத்தகைய    பகுதிகள்?
மேலும்,   முழுமைக்கும்,   பகுதிகளான   நமக்கும்   உள்ள  தொடர்பு அல்லது
உறவு எத்தகையது?

பிரபஞ்சம்  என்பது  ஒரு பெரிய விருட்சமெனில்,   நாம்   அவ்விருட்சம் எனும்
முழுமையின்  எத்தகைய  பகுதிகள்?  முழுமையின்  வாழ்க்கைக்கும்,  பகுதி
களின் வாழ்க்கைக்கும்  இடையே வித்தியாசம் அல்லது முரண்பாடு  இருக்க
முடியுமா? முழுமையின் விருப்பமும்,பகுதிகளின் விருப்பமும் வெவ்வேறாக
அமையமுடியுமா?  நிச்சயம் வெவ்வேறாக அமைய முடியாது! மாறாக, விருட்
சத்தின் இலக்கு என்னவோ, அதை நிறைவேற்றும் வகையிலான கருவிகளா
கத்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் பங்காற்றமுடியும்! ஆனால், மனிதஜீவி
கள்  மட்டும்தான் தம்தம் விருப்பத்தின்படி மனம்போன போக்கில் முழுமை
யின் வாழ்க்கைக்கும், விருப்பத்திற்கும் புறம்பானவழிகளில் செல்கிறோம்!

நாம்   நம்  விருப்பத்தின்படி  சொந்தவழிகளில்  செல்வதால், முழுமையிடம்
இருந்து  பிரிந்து  வேரற்றவர்களாகிப்போகிறோம்! மேலும், நாம் நம் சொந்த
இலட்சியங்களைப்பின்பற்றிச்செல்வதால்,நம்முடைய அசலான இலக்கைக்
கைவிட்டு,    நாம்   அடையவேண்டிய  முழுமையிலிருந்தும்   துண்டிக்கப்படு
கிறோம்!

நம்மில் சிலர்,  தாம் அடைந்த அற்பசொற்ப உலகியல்வெற்றிகளிலும்,  அனு
கூலங்களிலும்;  அறிமுக  ஆன்மீகப்  பரிச்சயத்திலும்   அகமகிழ்ந்து     ஏதோ
பெருஞ்சாதனை    படைத்துவிட்டாற்போலவும்,   பிறவிப்பயனை    அடைந்து
விட்டாற்போலவும் போலித் தன்னிறைவில் (Complacency) திருப்தியுற்று
வாளாவிருக்கிறோம்!   வாழ்வில்  விரக்தியில்  குமைவது  என்பது  ஒரு  எதிர்
மறைத் துருவம் என்றால்,   போலித்தன்னிறைவில்  திருப்தியுறுவது என்பது
இன்னொரு எதிர்மறைத்துருவம் எனலாம்!   இவ்விரு  எதிர்மறைத்துருவங்க
ளுக்கிடையே ஒருவன் அசலான வாழ்க்கையைக்கண்டடைதல் என்பது அரி
திலும் அரிதானதாகும்!

ஆக,ஒருவன் அசலானவாழ்க்கையின் இலக்கிற்குப்புறம்பாகத் தன் சொந்த
விருப்பத்தின்  வழி  செல்வதிலும்,   அல்லது   சமூக நடை முறைகள், மற்றும்
மதிப்பீடுகளைப்  பின் பற்றிச் செல்வதிலும்,   தன்  வாழ்-காலத்தை  விரயம்
செய்துவிட்டு,வாழ்க்கையைத் தவறவிட்டுவிட்டதாக,  குருவின் சொற்களை
மதிக்காமல் போய்விட்டதாக, நீலிக்கண்ணீர் வடிப்பதில் ஒருபயனுமில்லை!
ஒருவன் தன் ஐம்பதாவது வயதைக்கடந்துவிட்ட போதிலும்,  தன் வழிகளை
மாற்றிக்கொண்டு,   தன்னை   நிலைநிறுத்திக் கொள்ளமுடியும்,   ஆன்மீகத்
திற்கு,அதாவது அசலானவாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஒருபோதும்காலம்
கடந்து விட்டதாகச்சொல்லமுடியாது! காலம் கடந்து மனம் திரும்பும் மைந்த
னுக்கு  வாழ்க்கை  தனது பொக்கிஷங்களைக்  குறைவாக அளிப்பதில்லை!
எனினும்,    ஒருவன்  தன்னைப்   புதுப்பித்துக்  கொள்ளவியலாத   அளவிற்கு
சிந்தை  தடுமாறிய நிலையில்,   இடுகாட்டை  நோக்கியிருக்கும்  பட்சத்தில்,
ஒன்றும் செய்யவியலாது!

வாழ்-காலம்  என்பது  அசலான வாழ்க்கையை  வாழ்வதற்கு அளிக்கப்பட்ட
காலம்  மட்டுமே தவிர,  வேறு  எதற்குமான  காலம்  அல்ல!  ஆகவே, ஒருவன்
வீணேசோம்பியிருக்காமல்,பிரமைகளுக்கு ஆட்படாமல், தன்சொந்த விருப்
பங்களைத்   துரத்திச் செல்லாமல்,   வாழ்க்கையின்   விருப்பத்தை   அறிந்து
நிறைவேற்றி வாழ்வானாக!

மா.கணேசன்/ நெய்வேலி/ 20.12.2016
----------------------------------------------------------------------------


ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...