Monday, 28 August 2017

இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?




ஒரு சமயம் மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அவர்களிடம், "மனிதன் பதில் கண்டுபிடித்தாகவேண்டிய மிக முக்கியமான
கேள்வி எது?" என்று கேட்கப்பட்டபோது அவர் முன் வைத்த கேள்வி,
"இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்பது தான்.

"சூரியன் காலையில் கிழக்கே உதிக்கிறது, மாலையில் மேற்கே மறைகிறது,
இடையில் ஆயிரத்தெட்டு அலுவல்கள், பிரச்சினைகள், விவகாரங்கள்; அதில்
உலகைப்பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் ஏது இடம், நேரம்?" என்பதாக நாம்
வாழ்ந்துசெல்கிறோம்! ஆனால், அன்றாடத்தைக் கடந்து சிந்திக்கும் ஒரு சிலர்
நம்மிடையே இருக்கக்கூடும் அவர்களுக்கு இக்கட்டுரை நிச்சயம் பயன்படும்!

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முன்வைத்த அவரது கேள்விக்கு அவரே சொன்ன
பதில் :

  "இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடமில்லை என நாம் தீர்மானித்தோமெனில்,
  பிறகு நாம் நமது தொழில் நுட்பத்தையும், நமது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு
  களையும், மற்றும் நமது இயற்கை வளங்களையும் பயன்படுத்தி
  அப்பகைமையை வெளித்தள்ளும் வகையில் பெரிய சுவர்களை எழுப்பி
  நம்முடைய பாதுகாப்பு, மற்றும் வலிமையைச் சாதிப்போம். பகைமையான
  எல்லாவற்றையும் அழிக்கும் வகையில் பெரும் ஆயுதங்களை
  உருவாக்குவோம். தொழில் நுட்பத்தைப்பொறுத்தவரை நாம் அத்தகைய
  ஒரு வலிமைமிக்க நிலையை நோக்கிச் செல்கிறோம் என்பதாகவே நான்
  நம்புகிறேன். அந்த வழிமுறையில், ஒன்று நாம் நம்மை முற்றாகத்
  தனிமைப்படுத்திக்கொள்வோம் அல்லது முற்றாக நம்மை நாமே அழித்துக்
  கொண்டுவிடுவோம்!

  "அதே வேளையில், இப்பிரபஞ்சம் நட்பார்ந்ததுமில்லை, பகைமையானது
  மில்லை, அதாவது கடவுள் அடிப்படையில் 'பிரபஞ்சத்துடன் தாயக்கட்டை  
  உருட்டிக் கொண்டிருக்கிறார்' என்பதாக நாம் தீர்மானித்தோமெனில், பிறகு
  நாம் வெறும் அந்த தாயக்கட்டை உருட்டலின் குருட்டாம் போக்கான
  விளைவுகளின் பலிகடாக்களே; மேலும் நமது வாழ்க்கைக்கு உண்மையான
  யாதொரு குறிக்கோளும் அர்த்தமும் இருக்காது"

  "ஆனால், இப்பிரபஞ்சமானது ஒரு நட்பார்ந்த இடம் என்பதாகத் தீர்மானித்
  தோமெனில், பிறகு நாம் நமது தொழில் நுட்பத்தையும், நமது விஞ்ஞானக்
  கண்டுபிடிப்புகளையும், மற்றும் நமது இயற்கை வளங்களையும்
  இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதற்குரிய கருவிகளையும், மாதிரிகளையும்
  உருவாக்கிடப் பயன்படுத்துவோம். ஏனெனில், பிரபஞ்சம் எவ்வாறு
  செயல்படுகிறது என்பதையும் அதனுடைய நோக்கங்களையும் புரிந்து
  கொள்வதன் வாயிலாகவே  வலிமையும், பாதுகாப்பும் வந்து சேரும்."

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன இந்த பதில் அவ்வளவு திருப்திகரமாகவும்
இல்லை, பொருத்தமாகவும் இல்லை என்பதை சிரத்தையுடன் சிந்திக்கும்
எவரும் சொல்லிவிடக்கூடும்!

முதலிடத்தில், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முன்வைத்த அக்கேள்வி உண்மை
யிலேயே அதிமுக்கியமானது தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
ஆனால், அக்கேள்வி பெரிதும் இருத்தலியல் மற்றும் தத்துவபூர்வமானதே
தவிர, விஞ்ஞானபூர்வமானதல்ல!

அடுத்து, ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியே
என்பதிலும் நமக்கு எவ்வித சந்தேகமுமில்லை!  மேலும் பிரபஞ்சவியலைப்
பொறுத்த விஷயத்தில் அவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானி
யாவார். அதே நேரத்தில் அவர் வெறும் ஒரு வறட்டுத்தனமான இயற்பியல்
விஞ்ஞானியாக மட்டும் இருக்கவில்லை; தத்துவச் சிந்தனையிலும் பரிச்சய
முள்ள ஒருவராக இருந்தவராவார்.

எனினும், பெரிதும் அவரது சிந்தனைகள் விஞ்ஞான ரீதியான தர்க்கத்திலேயே

வேர்கொண்டிருந்தமையால் இயற்பியலுக்கு வெளியேயமைந்த கேள்விகளைப்
பொறுத்தவரை அவரது பதில்கள் முழுமையானவையாக அமையவில்லை!
குறிப்பாக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?"
என்கிற கேள்வியை அவர் ஊகத்தின் அடிப்படையிலேயே அணுகியுள்ளார்.

அதாவது, "இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடமில்லை", "இப்பிரபஞ்சம் நட்பார்ந்
ததுமில்லை, பகைமையானதுமில்லை", "இப்பிரபஞ்சமானது ஒரு நட்பார்ந்த
இடம்" என்பதான மூன்று வகைப்பட்ட ஊகங்கள், அல்லது 'தீர்மானங்களை'
அடிப்படையாகக்கொண்டு அவர் தனது பதிலை உருவாக்குகிறார்!

ஆனால், இத்தகைய அணுகுமுறை அடிப்படையிலேயே குறைபாடுடையது
ஆகும்! அதாவது, இப்பிரபஞ்சம் எத்தகையது என்பதை நமது ஊகங்களைக்
கொண்டு புரிந்து கொள்வது சரியான அணுகுமுறையாகாது! அது நமது ஊகங்
களையும், தீர்மானங்களையும் பிரபஞ்சத்தின் மீது சுமத்துவது போன்றதாகும்!
உண்மையிலேயே இப்பிரபஞ்சம் எத்தகையது என்பதற்கான தரவுகளைத்
திரட்டி, அவற்றை அடிப்படையாகக்கொண்டே நமது புரிதலை கட்டியெழுப்பிட
வேண்டும்! அதாவது, ஒரு குறிப்பிட்ட முடிவு, ஊகம், அல்லது தீர்மானத்தை

தொடங்குபுள்ளியாகக்கொண்டு அதற்கேற்ப தரவுகளைத் திரட்டுவது முறை
யாகாது!

முதலிடத்தில், மனிதஜீவிகளாகிய நாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு வளர்ச்சிநிலை,
அல்லது பகுதியே என்பது ஐன்ஸ்டீனுக்குத் தெரியாத உண்மையா என்ன!
ஒரு மரத்தின் பகுதியான கிளைகளுக்கு, பூக்கள் அல்லது பிஞ்சுகளுக்கு
அம்மரமானது பகைமையாக இருக்கமுடியுமா

ஒருவகையில், முழுமைக்கும், பகுதிகளுக்குமான உறவை நட்பு, பகைமை
எனும் சொற்களைக்கொண்டு புரிந்து கொள்வது பொருத்தமற்றதாகும்!
அப்படியானால், "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?"
எனும் கேள்வி பொருத்தமற்றதாகிறது! பிறகு எவ்வாறு இக்கேள்வி
அதிமுக்கியமானது என்று சொல்லமுடியும் எனக்கேட்கலாம். அடிப்படையில்,
"இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" எனும் கேள்வி
பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்குமான தொடர்பு பற்றிய கேள்வியே என்பதால்
அத்தொடர்பு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானதே
என்பதை மனதிற்கொண்டு எவ்விதத் தடையுமின்றி நாம் தொடர்ந்து நமது
இந்த ஆய்வை மேலெடுத்துச் செல்லலாம்!

அதே நேரத்தில் நமது ஆய்வை, இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம் எனவோ
அல்லது பகைமையான இடம் எனவோ யாதொரு முன்முடிவுமின்றி கொண்டு
செல்வது அவசியம். விஞ்ஞானிகளின் கணக்குப்படியே இப்பூமியில் உயிர்
தோன்றி வெற்றிகரமாக 400 கோடி ஆண்டுகள் தாண்டிவிட்டன! மனிதஜீவிகள்
தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன! இனி திடீரென
இப்பிரபஞ்சம் பகைமையானதாக மாறிவிடக்கூடும் என்பதற்கு எவ்விதச்
சான்றும், காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை!

உண்மையில், இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா இல்லையா என்பதை
விட, மனித இனம்தான் தனக்குத்தானே எதிராக நடந்து கொள்கிறது. நாடுகள்
பரஸ்பரம் ஒன்றையொன்று முற்றாக அழித்துக்கொள்ளும் வகையிலான
அபாயகரமான அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. உலக
நாடுகள் அனைத்துமே பொருளாதார நடவடிக்கைகள் என்ற பெயரில் பூமியின்
இயற்கை வளங்களைச் சுரண்டி நுகர்ந்து வருகின்றன! அளவு கடந்த மக்கள்
தொகைப் பெருக்கம் ஒருபுறம், அவர்களனைவரின் தேவைகளையும் நிறைவு
செய்வதற்கான தொழிற்சாலைகளின் பெருக்கம் இன்னொருபுறம் என பூமியின்
சுற்றுச்சூழல் பெரிதும் மாசடைந்ததோடு, புவிக்கோளம் சூடேறுதலும் சேர்ந்து
பூமியில் மனித இனம் தொடர்ந்து உயிர்வாழ்வதே பெரும் கேள்விக்குறியாகி
விட்ட ஒரு காலத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம்! மேலும், மனிதர்
களுக்கு எதிரிகள் வேற்றுக்கிரகத்திலிருந்து வரவேண்டியதில்லை; இன்னும்,
இயற்கையுலகமும் எதிரியல்ல! அதாவது, மனிதர்களுக்கு எதிரிகள் மனிதர்
களே யாவர்! மனிதர்களுக்கிடையே பெரிதாக யாதொரு இணக்கமும்,
நட்பார்ந்த உறவும் கிடையாது! பகைமை பாராட்டுவது என்பது நாடுகளுக்
கிடையே மட்டுமல்லாது தனி நபர்களுக்கிடையேயும் நிலவுகிறது!

ஆக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்று
கவலைப்படுவதற்கு முன்னர், நம்முடைய இதயங்களில் நட்புக்கான ஒரு சிறு
இடமாவது உள்ளதா என்பது பற்றியே முதலில் நாம் அக்கறைப்படவேண்டும்!

இப்பூமியிலேயே நட்பார்ந்த, அதாவது உயிரினங்களும், மனிதர்களும் வாழ்
வதற்கு உகந்த இடங்களும் உள்ளன! இதற்கு மாறான, பகைமை நிறைந்த
இடங்களும், அதாவது  உயிரினங்களும், மனிதர்களும் வாழ்வதற்குத் தகாத
இடங்களான பாலைவனங்களும், கடும்பனியால் போர்த்தப்பட்ட துருவப்
பிரதேசங்களும் உள்ளன! அவ்வாறே, இப்பிரபஞ்சத்தில், நம் பூமிக்கிரகத்திற்கு
அப்பால் செல்லச்செல்ல உயிரினங்கள் வாழ்வதற்கு சற்றும் இடம் தராத
ஆபத்தான இடங்களே அதிகம்! கிட்டத்தட்ட நம்  பூமிக்கிரகத்தைத் தவிர,
இப்பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உயிரினங்கள் வாழவே இயலாது என்று
முடிவாகச் சொல்லிவிடலாம்! ஆனால், இதன் அர்த்தம் பிரபஞ்சம் நட்பார்ந்த
இடமல்ல என்பதல்ல! மாறாக, நாம் தோன்றிய, நம்முடைய பிறந்த வீடான
பூமிக்கிரகத்தில் மட்டுமே பாதுகாப்பாக வாழமுடியும் என்பதே அர்த்தமாகும்!

மேலும், நம்முடைய சூரியமண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கையில்,
சூரியனிலிருந்து மூன்றாவது கிரகமான பூமியில் மட்டும் ஏன் உயிர் தோன்றிட
வேண்டும்? ஆம்,உயிர் தோன்றுவதற்குரிய அனைத்து உகந்த சூழல்களும்
ஒருங்கே இங்கே அமைந்திருப்பதுதான் காரணம் எனலாம்!

அடுத்து, உயிரற்ற சடப்பொருளாலான பௌதீகப்பிரபஞ்சத்தில் உயிர் ஏன்,
எதற்காகத் தோன்றிடவேண்டும்? மேலும், உயிர் தோன்றுவதற்கான அவசியம்,
நோக்கம், குறிக்கோள் என்ன? அத்துடன், அதாவது உயிர்ஜீவி தோன்றியதுடன்
நில்லாமல், உணர்வுடைய மனிதஜீவி ஏன் தோன்றிடவேண்டும்? இவ்வாறு
இப்பிரபஞ்சத்தைப் பற்றியெல்லாம் எதற்காக ஆய்வு செய்திடவேண்டும்?

அடிப்படையில் பிரபஞ்சமானது உயிர்ஜீவிகளுக்கு எதிரானதாயிருந்திருந்தால்
முதலிடத்தில் இப்பிரபஞ்சத்தில் உயிர்ஜீவி எதுவும் தோன்றியிருக்காது! உயிர்
தோன்றிட இப்பிரபஞ்சம் இடமளித்திருக்காது அல்லவா? ஆனால், இத்தகைய
விளக்கத்தைக்கொண்டு உடனே இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம் தான்
என்ற முடிவிற்கு நாம் வந்திடுவது எளிது! பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம்
என்பதைவிட, இப்பிரபஞ்சம் என்பது எத்தகைய மெய்ம்மை? அது எதற்காகத்
தோன்றியது? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? நமது வாழ்வின்
அசலான குறிக்கோள் என்ன? மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை?
சடப்பொருளாலான பிரபஞ்சத்தில் (மனித) உணர்வுக்கான பணி என்ன?
என்பவற்றையெல்லாம் புரிந்து கொள்வதே அதிமுக்கியத்துவம் வாய்ந்த
அம்சங்கள் ஆகும்!

இப்பிரபஞ்சம் பல தளங்களைக் கொண்டதாகும்; துல்லியமாகச்சொன்னால்,
பௌதீகத்தளம், உயிரியல்தளம், உணர்வியல்தளம் என மூன்று தளங்களைக்
கொண்டதாகும். இப்பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள இரு-மட்டப் பார்வை
அவசியமாகும். ஒன்று வழக்கமான "கிடைமட்டப் பார்வை", இரண்டாவது
"செங்குத்துப்பார்வை" யாகும்! "கிடைமட்டப் பார்வை" என்பது முழுக்கமுழுக்க
பொருள்வயமானது, எந்திரத்தனமானது, அதனுடைய அதீதமான பார்வையில்
அது சுருக்கல்வாதமாகச் சுருங்கிவிடுகிறது! இப்பார்வையே விஞ்ஞானத்தின்
பிரதான பார்வையும் ஆகும்! இதை நாம் "உலக-மையப்பார்வை" எனவும்
குறிப்பிடலாம்! இதுவே ஐன்ஸ்டீனின் பார்வையுமாகும்! விஞ்ஞானிகளையும்,

பொருள்முதல்வாதிகளையும், இயற்கைவாதிகளையும், பகுத்தறிவுவாதிகள்
என்று தம்மை அறிவித்துக் கொள்பவர்களையும் பொறுத்தவரை உலகமே
பிரதானம் ஆகும்! இவர்களைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் என்பது பொருளால்
ஆன பௌதீகப் பிரபஞ்சம் மட்டுமே!

ஆனால், செங்குத்துப்பார்வையைப் பொறுத்தவரை பௌதீகப்பிரபஞ்சம் என்பது
ஒரு அடிப்படையே, அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளமே தவிர அதுவே
மொத்தப் பிரபஞ்சமும் அல்ல! ஏனெனில், பிரபஞ்சமானது தனது பௌதீகத்
தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்தை எட்டியதுடன், அதையும்
கடந்து மனிதனுள் உணர்வாக உணர்வியல் தளத்தையும் எட்டி வெகு காலம்
ஆகிறது! தற்போது பிரபஞ்சம் எனும் பரிணாம இயக்கமானது பிரதானமாக
உணர்வுத்துடிப்புள்ள தனிமனிதர்களின் உணர்வில் மையம் கொண்டுள்ளது!

கிடைமட்டப் பார்வைக்கும், செங்குத்துப்பார்வைக்கும் உள்ள வித்தியாசம்
என்னவெனில், கிடைமட்டப்பார்வையானது, ஒரு மரத்தின் அடிப்பகுதியையும்,
அதன் பிரதானக்கிளைகளையும் மட்டுமே மரம் எனக் கணக்கில் கொள்கிறது!
அம்மரத்தின் பூக்களையும், பிஞ்சுகளையும், காய்களையும், கனிகளையும்
மரமாகக் கணக்கில் கொள்வதில்லை! ஆனால், செங்குத்துப்பார்வையானது,
வேர்கள், அடிமரம், கிளைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் என
அனைத்தையும் மரமாகக் கணக்கில் கொள்வதுடன், பிரதானமாக அம்மரத்தின்
கனிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஏனெனில், மரத்தின்
கனியினுள் இருக்கும் வித்தில் தான் ஒட்டுமொத்த மரமும் அடங்கியுள்ளது!
அதாவது, கனி, அல்லது வித்து தான் எவ்வொரு மரத்தின் முழுமையும்,
இலக்கும் ஆகும்! ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! வித்து தான்
விருட்சத்தின் மூலமும், முழுமையும் ஆகும்!

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் உள்பட அனைத்து விஞ்ஞானிகளின் பார்வையும்
கிடைமட்டப்பார்வையைச் சேர்ந்தவையே! அவர்களுக்கு, பிரபஞ்சத்தின்
பௌதீகத்தளம் ( மரத்தின் அடித்தண்டும் கிளைகளும் மட்டும்) தான் ஒட்டு
மொத்த பிரபஞ்சம் ஆகும்! உயிர்ஜீவிகள் மற்றும் மனிதஜீவிகள் (பிஞ்சுகள்,
காய்கள் கனிகள்) யாவும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற
மேற்சேர்க்கையான விஷயங்களே!

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டுச் சாதனைகள் இயற்பியல்
துறையின் எல்லைக்குள் மட்டுமே பிரமாதமானவை! ஏனெனில், அவை சடப்
பொருளாலான பிரபஞ்சத்தை, அதாவது பிரபஞ்சத்தின் ஒரு குறிப்பிட்ட
பகுதியை மட்டுமே ஆராய்பவை! அவை பிரபஞ்சத்தின் உயிரியல், மற்றும்  
அதைக்கடந்த உணர்வியல் தளங்களையும் தொடுவதில்லை, விளக்குவது
இல்லை! ஐன்ஸ்டீனின் விஞ்ஞான மேதைமை தான் அவருடைய ஆன்மீக
பேதைமையின் ஆரம்பம் ஆகும்! இல்லாவிடில், பிரபஞ்சம் எவ்வாறு செயல்
படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன் வாயிலாக பிரபஞ்சத்தைப் புரிந்து
கொண்டுவிடமுடியும் என அவர் எவ்வாறு எண்ணமுடியும்? இதிலிருந்து,
ஐன்ஸ்டீன் அவர்கள் பிரபஞ்சத்தை ஒரு எந்திரம் போல கருதி வந்திருப்பது
புலனாகிறது!

மேலும், அவருடைய இயற்பியல் துறையிலேயும் அவர் சில தவறான
முடிவுகளைக் கொண்டிருந்தார் என்பதையும் விஞ்ஞான உலகம் நன்கறியும்!
குறிப்பாக, அவரது காலத்திய பிற விஞ்ஞானிகளைப்போலவே அவருக்கும்
பிரபஞ்சம் விரிவடையும் தன்மை கொண்டது என்பது தெரியாது! ஆகவே
அவர் ஒரு நிலைத்த பிரபஞ்சத்தையே (Static Universe) உருவகித்துக்
கொண்டிருந்தார்! அந்நிலையில்,  அவர் தனது புதிய சார்பியல் கோட்பாடு
கொண்டு பிரபஞ்சத்தை விளக்கமுற்படும் வேளையில், அவருடைய
சமன்பாடுகள் நிலைத்த பிரபஞ்சத்திற்கேற்றவாறு அமையவில்லை என்பதால்
தனது சமன்பாட்டில் சமாளிப்புக்காக ஒரு மதிப்பைச் சேர்த்து(fudge factor)
சமன்பாட்டைச் சமன்படுத்தி சரி செய்துவிட்டார்! ஆனால், 1920-களில்
வானவியலாளர் எட்வின் ஹப்புள் (Edwin Hubble) அவர்களின் ஆராய்ச்சி
முடிவுகள் பிரபஞ்சம் விரிவடைகிறது எனும் உண்மையை தெளிவாக
எடுத்துக்காட்டியதை அறிந்த ஐன்ஸ்டீன், தனது சமன்பாட்டிலிருந்து சமாளிப்பு
காரணத்திற்காகத் தான் சேர்த்த அந்த மாறாத மதிப்பை ("cosmological
constant") நீக்கிவிட்டார்! பிறகு ஒருசமயம் அவர் அது குறித்துச்சொல்லும்
போது, "இதுவே தன் வாழ்க்கையில் தான் இழைத்த பெரும் தவறு!" என்றார்.
ஆனால், பிரபஞ்சவியலின் வேறொரு சிக்கலைத்தீர்க்கும் முயற்சியில்
ஈடுபட்டிருந்த சில விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன் நீக்கிய அதே "மாறாத மதிப்பை"
மீண்டும் சமன்பாட்டில் சேர்க்கவேண்டிய அவசியத்தைச் சந்தித்ததாகச்
சொல்லப் படுகிறது!

இவ்வாறு விஞ்ஞானப் பிரபஞ்சவியலானது பலவித சமாளிப்புகளையும்,
பூசிமெழுகுதல்களையும், தவறான முடிவுகளையும், அரை-உண்மைகளையும்
கொண்டதாக விளங்குகிறது!

ஐன்ஸ்டீன் அவர்கள் இயற்கையின் கணிதவியல் விதிகளில் நம்பிக்கை
கொண்டவராக இருந்தார். இயற்கை விதிகளின் துல்லியமான தன்மையை
அவர் கடவுளின் கையாகக் கண்டார்! இதன் காரணமாகவே அவர் குவாண்டம்-
எந்திரவியலின் அடிப்படைக் கோட்பாடான ஹெய்ஸன்பெர்க்கின் "நிச்சயமற்ற
விதி" யை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதாவது, அணுக்கருவின் மட்டத்தில்,
இயற்கையும், பிரபஞ்சமும் குருட்டாம் போக்கில் இயங்குகிறது, அதாவது,
நிகழ்வுகள் தற்செயலாக, விதியற்ற முறையில் நிகழ்கின்றன என்பதை
ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இவ்வகையில், அவர் தனது
கொள்கைகளில் ஒரு பழமைப்பேணியாக (Conservative)இருந்தார். இதன்
காரணமாகவே அவர், "கடவுள் பிரபஞ்சத்துடன் தாயக்கட்டை உருட்டி விளை
யாடிக் கொண்டிருக்கவில்லை!"  என்று குறிப்பிட்டார்!

ஆனால், நிறை, சக்தி, ஈர்ப்பு, (ஒளியின்) வேகம், அணுத்துகள்கள், மின்காந்த
விசை, வடிவவியல் ஆகியவை பௌதீகச் சடப் பிரபஞ்சத்தின் பொருண்மை
யான அம்சங்களே எனும் பட்சத்தில், இக்காரணிகளை, அல்லது பௌதீகப்
பண்புகளைக் கொண்டு எவ்வாறு ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும், அது ஏன்,
எதற்காகத் தோன்றியது, அதன் குறிக்கோள், இலக்கு என்னவென்றும்; மேலும்,
பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும்(உணர்வுக்கும்) உள்ள தொடர்பு என்ன? மனித
வாழ்வின் அர்த்தம், மற்றும் குறிக்கோள் என்ன? என்பவை பற்றியும் எவ்வாறு
புரிந்து கொள்ளமுடியும்? முடியாது! பௌதீகப் பிரபஞ்சத்தின் அமைப்பையும்,
அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக்கொண்டும் பிரபஞ்சத்தின் நோக்கம்
என்ன என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது! நாம் வசிக்கும் வீட்டை
(கட்டடத்தை)ப் புரிந்துகொள்வதன் மூலம் நம் வாழ்வின் அர்த்தத்தையும்,
குறிக்கோளையும் புரிந்து கொள்ள இயலாது! நாம் வசிக்கும் வீடு நம்மால்
கட்டப்பட்டது, ஆனால் பிரபஞ்சம் எனும் வீடு தானே அமைந்தது (அதாவது
ஆமையும், அதன் ஓடும் போல) என்பதுதான் இரண்டிற்குமுள்ள வித்தியாசம்!

ஆம், ஆமையும், அதன் மேலோடும் பிரிக்கவியலாதவையாகும்! ஆமைக்கு
அதன் மேலோடு பகைமையானதல்ல; மாறாக, அதுவே அதன் பாதுகாப்புக்
கவசம் ஆகும்!அவ்வாறே பிரபஞ்சம் என்பது மனிதனின் மேலோடு போன்றதே
ஆகும்! ஆனால், ஆமையின் மேலோட்டைப் பொறுத்தமட்டில்,  ஆமை
ஏன், எதற்காக இருக்கிறது, வாழ்கிறது; ஆமையினுடைய வாழ்வின் இலக்கு,
குறிக்கோள் என்ன என்பது தெரியாது! துரதிருஷ்டவசமாக ஆமைக்கும் கூட
தன் வாழ்வின் குறிக்கோள், இலக்கு என்ன என்பது தெரியாது! அதேநேரத்தில்,
ஆமையினுடைய வாழ்வின் குறிக்கோள் எதுவாயினும், அக்குறிக்கோளை
அடைவதற்கு உதவும் ஒரு கருவியாகச் செயல்படுவதே மேலோட்டின் பணி
ஆகும்!

அதேபோல், மனிதனின் மேலோடான பிரபஞ்சத்திற்கும் மனிதனுடைய
வாழ்வின் நோக்கம், குறிக்கோள், இலக்கு என்னவென்று எதுவும் தெரியாது!
ஆனால், ஆமையைப்போல் மனிதன் தனது வாழ்வின் அசலான குறிக்கோள்
என்ன, இலக்கு என்ன என்று தெரியாமல் வாழ இயலாது! மனிதன் தனது
வாழ்வின் குறிக்கோளை அறிவதற்காக முடிவேயில்லாமல் தன் மேலோடான
பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டு இருக்க வியலாது! மாறாக, மனிதன் தன்
உள்ளீடுகளை ஆராய்வது அவசியம்; ஏனெனில், ஒரு ஆரஞ்சுப்பழம் என்பது
அதன் மேல் தோல் மட்டுமல்ல; அதனுடைய சுளைகளும், முக்கியமாக அச்
சுளைகளில் அடங்கியுள்ள சாறும் ஆகும்! மனிதனே (ஒவ்வொரு மனிதனும்)
பிரபஞ்சத்தின் இதயம் போன்றவன் ஆவான்! ஆகவே, மனிதன் தன் சாரத்தை
அறிவது அவசியமாகும்!

இவ்விடத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்வது
நமது புரிதலை மேலும் ஆழப்படுத்துவதாக அமையும்! அதாவது, ஆமை
முக்கியமா? அல்லது அதன் ஓடு முக்கியமா? ஆமைக்காக அதன் மேலோடு
இருக்கிறதா? அல்லது ஓட்டிற்காக ஆமை இருக்கிறதா? அதாவது, பிரபஞ்சம்
மனிதனுக்காக இருக்கிறதா? அல்லது மனிதன் பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு
மூலையில் விபத்துபோலத் தோன்றிய வெறும் ஒரு வேடிக்கைப்பொருளா?
உண்மையில், ஆமையும், அதன் மேலோடும் வேறு வேறு அல்ல என்பதைப்
போல மனிதனும், பிரபஞ்சமும் வேறு வேறு அல்ல! ... .

முடிவாக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்ற
கேள்விக்கு நாம் இருவித பதில்கள் இணைந்த ஒரு முழுமையை வந்தடை
கிறோம் எனலாம்! அதாவது, இப்பிரபஞ்சத்தை ஒரு சாசுவதமான வசிப்பிடம்
என்பதாகக் கருதுவோமெனில், அது ஒரு பாதுகாப்பான, நட்பார்ந்த இடமல்ல!
ஏனெனில், இப்பிரபஞ்சமானது அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல்
மனிதனை உயிரோடு வைத்துக்காப்பதில்லை! மாறாக,அதை ஒரு தற்காலிகத்
தங்குமிடம் என்பதாகக் கருதுவோமெனில், அது ஒரு நட்பார்ந்த இடமே
எனலாம்!

உண்மையில், ஒரு மேலோட்டமான பார்வைக்குத்தெரிவது போல், பிரபஞ்சம்
என்பது ஒரு "இடம்" அல்ல; அது ஒரு இயக்கம் அல்லது நிகழ்வுமுறையே
ஆகும். அதை நாம் மிகப்பொருத்தமாக ஒரு பரிணாம நிகழ்வுமுறை எனலாம்!
அது தன்னைத்தானே கடந்து வளர்ந்து செல்லும் ஒரு விசித்திரமான நிகழ்வு
முறை யாகும்! பிரபஞ்ச இயக்கத்தின் அம்புத்தலை பௌதீகத்தளத்தை விட்டு
வளர்ந்து வெளியேறி வெகு காலமாகிறது! ஆனால், விஞ்ஞானிகளோ
இன்னும் பௌதீகத்தளத்தையே ஒட்டுமொத்த பிரபஞ்சம் என்பதாகக் கருதி
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்! ஒரு அமீபா என்பது உண்மையில்
பிரபஞ்சத்தின் ஒரு உயர்-வளர்ச்சி நிலையே என்பதை இயற்பியல் விஞ்ஞானி
களால் இனம் காண முடியவில்லை! இன்னும் உயிரியல் விஞ்ஞானிகளாலும்
ஒரு அமீபாவை வெறும் ஒரு ஒரு-ஸெல் உயிரியாகத்தான் பார்க்கமுடிகிறதே
தவிர அதைப் பிரபஞ்சத்தின் வித்தியாசமான ஒரு வளர்ச்சிநிலையாக, உயிர்
பெற்ற பிரபஞ்சமாகப் பார்க்க முடிவதில்லை! இந்நிலையில் எவ்வாறு
இவ்விஞ்ஞானிகளால், மனிதனே பிரபஞ்சம் எனும் நிகழ்வுமுறையின் இறுதிக்
கண்ணி, அதாவது பிரபஞ்ச விருட்சத்தின் ஒப்பற்ற கனி, அதாவது, உணர்வு
பெற்ற பிரபஞ்சம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள இயலும்?

ஒரு மரத்தில் காய்த்திருக்கும் காய்களுக்கும் அம்மரத்திற்கும் என்ன தொடர்பு
உள்ளதோ அதே தொடார்புதான் பிரபஞ்சத்திற்கும், மனிதர்களுக்கும் உள்ள
தொடர்பும் ஆகும்! காய்களைப்பொறுத்தவரை அவை அம்மரத்தில் காய்த்திருக்
கின்றன என்பதைத் தாண்டி அம்மரம் பாதுகாப்பானதா, நட்பார்ந்த இடமா
என்பது போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை! காய்களின் குறிக்கோளும்
இலக்கும் அம்மரத்திலேயே தங்கி வாழ்ந்துகொண்டிருப்பதல்ல; மாறாக,
எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முற்றிக்கனிகளாவது
ஒன்றே காய்களின் ஒரே குறிக்கோளும், இலக்கும் ஆகும்! ஏனெனில், காய்கள்
கனிகளாக ஆவதே அக்காய்களுடையது மட்டுமல்லாமல் அம்மரத்தினுடைய
அர்த்தமும், முழுமையும் ஆகும்! இவ்வாறே, மனிதர்களும் எவ்வளவு
விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தம் உணர்வில் முற்றிக்கனிந்து
முழு-உணர்வு நிலையை அடைவதொன்றே மனிதர்களை முழுமைப்படுத்தும்!
மனிதன் அடையக்கூடிய அம்முழுமையில்,வித்தினுள் அடங்கிய விருட்சமாக
இப்பிரபஞ்சம் மனிதனுள் அடங்கிவிடும்! அம்முழுமை மட்டுமே உண்மையில்
பாதுகாப்பான, நட்பார்ந்த ஒரே இடமாகும்!

                           ••

            மனிதா, உன்னைத்தவிர்த்து விட்டு
            உலகை நீ புரிந்து கொள்ள முடியாது!
            உலகைப் புரிந்து கொள்ளும் உணர்வாளன்
            உலகிடமிருந்து வேறானவனாக
            இருக்க முடியுமா?
            உலகைத்தவிர்த்து விட்டும் உன்னை நீ
            புரிந்து கொள்ள முடியாது!
            உலகின் நீட்சியும் உயர் வளர்ச்சி நிலையும்
            நீ தானே!
            மனிதா நீ உலகைச் சார்ந்திருப்பதை விட
            பெரிதும் உலகம் தான் உன்னைச்
            சார்ந்திருக்கிறது!
            உன் வழியாக உலகம் அடைய வேண்டிய
            உய்விற்காக!
            உலகின்  உயர் வளர்ச்சி நிலையே நீ எனில்
            உனது வளர்ச்சியின் உச்சப்புள்ளியே
            உலகையும் உன்னையும் கடவுளையும்
            ஒன்றிணைக்கும் ஒப்பற்ற
            ஒருமையும் முழுமையுமான உண்மை!
                          ••

மா.கணேசன்/ நெய்வேலி/ 24-08-2017
-----------------------------------/----------------------------------------

Thursday, 24 August 2017

மிகவும் நேர்மறையான ஒரு பதிவு!




வாசகர்களே, மிகவும் நேர்மறையான ஒரு பதிவிற்கு உங்களை
வரவேற்கிறேன்! வெகுகாலமாக உங்களிடம் உள்ள குறைகளைச் சொல்லியும்,
உங்களைக் குறை கூறியும்,  எனது பதிவுகளைப் பதிவேற்றம் செய்து
வந்துள்ளேன்! நீங்கள் எவ்வாறிருந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருப்பதில்
தான் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறீர்கள், திருப்தியடைகிறீர்கள்!
உங்களைப்பற்றி உங்களுக்கே எவ்வித அதிருப்தியும் இல்லாத நிலையில்
உங்களைக் குற்ற உணர்வில் ஆழ்த்துவதற்கு நான் யார்?

உங்களுக்கு நீங்கள் எவ்வளவு அற்புதமானவராக இருக்கிறீர் என்பது எனக்குத்
தெரியாமலில்லை! உங்களை ஆன்மீகத்தின் உச்சிக்குக் கொண்டு சேர்க்க
வேண்டுமெனும் எனது ஆர்வக்கோளாறினால் நான் எனது கறாரான
அளவுகோலைக்கொண்டு உங்களை அளந்து உங்களது போதாமையைச்
சுட்டிக்காட்டும் தவற்றைச் செய்து வந்துள்ளேன்! அது போகட்டும்! நீங்கள்
வாழும் அர்த்தமற்ற வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாயிருக்கும்
பட்சத்தில் உங்கள் வழியில் குறுக்கிட நான் யார்?

உங்களுடைய போதாமையிலும் நீங்கள்தான் எவ்வளவு முழுமையானவராக,
பூரணமானவராக உள்ளீர்! நீங்கள் எவ்வளவு மன்னிக்கும் குணம் உள்ளவராக
இருந்தால் உங்களுடைய அனைத்துத் தவறுகளையும், மதியீனங்களையும்
எவ்வளவு சுலபமாக மன்னித்து மறந்து விடுபவராக உள்ளீர்!

உங்களுடைய தாராள குணத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை;
உங்களுக்குத்தான் நீங்கள் எவ்வளவு தாராளமாக யாவற்றையும் அள்ளிக்
கொடுத்துவிடுகிறீர்கள்! என்ன, அதிர்ஷ்டம் உங்களைப் பெரிய கோடீஸ்வரராக
ஆக்கிடவில்லை என்பதுதான் அதிர்ஷ்டத்தின் குறை! உங்களை நன்கு அறிந்த
சிலர் உங்களை கஞ்சன், கருமி என்றெல்லாம் சொல்வது உங்கள் மீதுள்ள
காழ்ப்புணர்ச்சியினால் தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்!

பொறாமையின் மொத்த உருவமாக நீங்கள் திகழ்ந்தாலும் அழகில் நீங்கள்
குறைந்தவரல்ல என்பது நீங்கள் எவ்வாறு உங்களை அலங்கரித்து அழகு
படுத்தி உள்ளூர மகிழ்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியுமே!

உங்களுடைய பேராசையைப் பொறுத்தவரை, வானமே எல்லை என்றுதான்
சொல்லவேண்டும்! உங்களுடைய சுயநலத்தைப் பற்றிச் சொல்லத்
தேவையில்லை; இந்த உலகில் எவர் தான் சுயநலமாக இல்லை?
சுயநலமற்றிருப்பதற்கு நீங்கள் என்ன, பிழைக்கத்தெரியாத காந்தியா,
புத்தரா, அல்லது யேசுவா?

அகந்தையின் சிகரமாக நீங்கள் இருந்தாலும் கற்றறிந்தோர் சபையில் நீங்கள்
எவ்வளவு அடக்கமாக ஒன்றும் தெரியாதவர் போல நிறைகுடமாக இருக்கிறீர்
என்பது எனக்கு மட்டுமே தெரியும்!

உங்களுடைய போலித்தனம் உங்களுடைய ஒட்டுண்ணித்தனத்தைப்போல
எவ்வளவு அசலானது! எவருமே அதை நகல் செய்யமுடியாது!
ஞானம், பக்குவம், தெளிவு, போன்று உங்களிடம் இல்லாத பண்புகளையும்,
அம்சங்களையும் உங்களிடம் இருப்பதாகக் கொள்ளும் விஷயத்தில் நீங்கள்
பிரமையின் எல்லை என்றால் அது மிகையாகாது! இன்மையின் பூரணம்
நீங்கள்! இருப்பின் சூன்யம் நீங்கள்! உங்களைப்பற்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லை என்பதால் தானே நீங்கள் ஒரு ஊமையைப்போல அவ்வளவு
அமைதியாக உள்ளீர்!

உள்ளதைக்கொண்டு திருப்தியடையும் உங்களது பா(சா)ங்கு தான் என்ன!
ஆழமற்ற உங்களுடைய கொஞ்ச அறிவில் நீங்கள் கொள்ளும் நிறைவு பசிபிக்
கடலைவிட ஆழமானது!

மொத்தத்தில் நீங்கள் அனைவருமே மனிதருள் மாணிக்கமாக விளங்குவதால்
இப்பூமிக்கிரகமே சூரியனைப்போல பிரகாசிக்கிறது! உங்களில் எவரையும்
எவருடனும் ஒப்பிடவியலாத அளவிற்கு அனைவரும் ஒரே குட்டையில்
ஊறிய அற்புத மட்டைகளாய் உள்ளீர்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 23-08-2017
----------------------------------------------------------------------------


Tuesday, 22 August 2017

நோய்பிடித்த இனம்!




பூக்களைப் பறிக்காதீர், பூக்கள் தோட்டத்திற்கு அழகு!
புல்தரையில் நடக்காதீர்! புற்கள் ஆடு, மாடுகளுக்கு உணவு!
புல்தரைகளை அமைக்காதீர்! புற்களை சுதந்திரமாக வளரவிடுங்கள்!
இயற்கையில் வெட்டித்திருத்தப்பட்ட புல்தரைகள் எங்கேயுமுண்டா?
முதலில் உமது நோய்பிடித்த அழகியலை திருத்திக் கொள்ளுங்கள்!

தோட்டத்துச் செடிகளை, காட்டுச்செடிகளை மூலிகை என்றழைக்காதீர்!
அவை உங்களுக்காக இருக்கின்றன என்றால் நீர் எவருக்காக இருக்கிறீர்?
உம்மைப்போலவே ஒவ்வொரு உயிரினமும் தமக்காகவே வாழ்கின்றன!
சுய நலம் பீடித்த விலங்குகளா! நீவிர் எதற்கான மருந்தாகிறீர்?
நோய் பிடித்த மனிதர்களே, நீங்களே பூமியைப்பீடித்த பெருநோய்க்கிருமிகள்!
உம்மால் எதற்கும், யாருக்கும் எவ்வித உதவியும் பயனும் இல்லை!
முடிவில் மரணத்தில் முடிந்துபோகும் நீவிர் உமக்கும் பயனற்றவர்களே!

இவ்வுலகமும் அதிலுள்ள யாவும் உமக்காகப் படைக்கப்பட்டதெனில்
நோக்கம் கெட்ட மனிதர்களா, நீவிர் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளீர்?
உண்டு, உறங்கி, இனம்பெருக்குவதே உம்முடைய வாழ்வுமெனில்
அதற்கு புழுக்களும், பூச்சிகளும் போதுமே, இன்னொரு விலங்கு எதற்கு?

உடல் நலம் பேணுவது அவசியமே; ஆனால், மனித ஜந்துக்களைத் தவிர
வேறு எவ்வுயிரினமும் தம் உடல்நலம் குறித்து அலட்டிக்கொள்வதில்லை!
நோயுற்ற உடலோ, நோயற்ற உடலோ இரண்டுமே மரணத்திற்குட்பட்டதே!
மரணத்தில் முடிந்துபோகும் உடலின் நலத்தைவிட ஆன்மநலமே முக்கியம்!
ஆகவே ஆரோக்கியம் பற்றியல்லாமல் ஆன்மாவைப்பற்றி அக்கறைப்படுங்கள்!
ஆன்மாவாய் மலர்வதிலேயே மரணம் கடந்த பெருவாழ்வு அடங்கியுள்ளது!

உடலைப் பீடிக்கும் நோய்களைப் பற்றி அரற்றும் அறிவிலிகளா!
"உடலே நோய்!" என்று சொல்லப்பட்டிருப்பதை நீவிர் அறியவில்லையா?
உடலிலிருந்து விடுதலை பெறும் ஞானத்தைப்பெறுவதே ஆன்மீக வாழ்க்கை!
அதற்குமுன் உமது மனத்தைப் பீடித்துள்ள நோய்களை அகற்றுங்கள்!

"உணர்வின்மை" என்பது தான் உம்மைப் பீடித்த மூலமுதல் மனநோய்!
பிற நோய்கள் யாவும் உணர்வின்மையைப் பின்பற்றி வருபவையே!
உணர்வின்மைக்கு மருந்து இல்லை; ஆனால், மருத்துவர்கள் இருக்கின்றனர்!
ஞானிகளே அந்த மருத்துவர்கள்! அவர்களது நல் உபதேசங்களே தீர்வு!
அவற்றை முறையாகப் பின்பற்றினால் உமது பிறவி நோய் தீரும்!

உணர்வின்மையை தொடர்வது சுயநலம் எனும் சுயம்-அழிக்கும் நோய்!
அடுத்தது ஆணவம், அதையடுத்து பொறாமை, பேராசை, தற்பெருமை
சுய-முக்கியத்துவம், சோம்பல், போலித்தனம் ஆகியவை தொடர்கின்றன!
பொதுவாக மன-நோயை மட்டுமே நீவிர் பைத்தியநிலை என அறிகின்றீர்!
ஆனால், சுயநலம், ஆணவம், பொறாமை, தற்பெருமை, பேராசை
போலித்தனம் போன்றவையும் மனநோய்களே, பைத்திய நிலைகளே!

எவையெல்லாம் மனித உணர்வை உயரவிடாமல், மட்டுப்படுத்துகின்றனவோ
அவையெல்லாம் மன-நோய்களுக்கான  விஷ வித்துக்களே!
சுருங்கச் சொன்னால், மெய்ம்மை நாட்டம் கொள்ளாத எவரும் பைத்தியமே!
எதற்காக வாழ்கிறோம் என்பதை அறியாத ஒருவரை வேறு என்ன சொல்ல?

மேலும், மனிதன் ஒரு விலங்கு அல்ல! ஆயின், வாழ்வின் அர்த்தமறியாது
வாழ்பவர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை!
மனிதவாழ்வின் தலையாய அம்சங்கள் இரண்டே இரண்டு மட்டுமே!
அவை, வாழ்வின் அர்த்தம் மற்றும் வாழ்வின் குறிக்கோள் பற்றியவையே!
இவ்விரண்டையும் அறிவதைத்தவிர்த்த பிறசெயல்கள் பிழைப்புக்கானவையே!
பிழைப்பு வேறு, வாழ்க்கை வேறு என்பதை எப்போது நீர் அறியப்போகிறீர்?
மூடர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மூடர்களாகவே இருப்பர்!

ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டி அங்கோரிடத்தில் ஒரு செடி உள்ளது!
அதன் மலரைத் தின்றால் இறப்பு என்பது ஒருபோதும் உங்களுக்கு நேரிடாது!
என்று யாராவது சொன்னால் உடனே அந்த அற்புதச் செடியை தேடிச்செல்வீர்!
ஆனால், இறவாமல் வாழ்வதற்கும் கூட ஒரு காரணம், இலக்கு வேண்டும்!
ஏனெனில், அர்த்தமில்லாத வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானதாகும்!
ஆயின், உண்மையில் சாகா நிலையைத்தரும் அற்புத மலர் ஒன்று உள்ளது!
அதற்கு நீர் ஏழு மலைகளையும், கடல்களையும் தாண்டவேண்டாம்!
உமது அகந்தையைத் தாண்டினால் போதும்! நீர் ஆன்மாவாய் மலர்ந்திடுவாய்!

பிரதானமாக நீர் மதிப்பது பணத்தையும்,பொன்னையும்,பொருளையும் தானே?
உடமைகளால் உம்மை ஸ்தாபிக்கும் நீர் மரணத்தின் உடமையே அல்லவா?
வாழ்வின் அசலான இலக்கை அறிய நேரமில்லாமல் நீர் வாழ்வீரெனில்
ஏற்கனவே நீர் மரணத்தை உம்முடைய இலக்காகத் தேர்ந்துவிட்டவராகிறீர்!
உண்மையை அறிவீர்! வாழ்வின் முடிவிடம் மரணமல்ல, நித்திய வாழ்வே!

இவ்வுண்மைகள் வழக்கத்திற்கு மாறானவை, ஆகவே உமக்குக் கசப்பானவை!
ஏனெனில், அசலான வாழ்க்கை உமது வழக்கத்திற்குள் அடங்குவதில்லை!
இப்பதிவுகள் எல்லோருக்குமானவையே என்றாலும் என்ன செய்வது?
சிரத்தை கொண்டு புரிந்துகொள்பவர்களுக்கே இவை முதலில் உரித்தானவை!

அசலான வாழ்க்கையைப் பொறுத்தவரை நீவிர் அனைவரும் அந்நியர்களே!
அடிப்படைத்தேவைகளை வாழ்க்கையாகக் கொண்ட நீர் அடிப்படைவாதிகளே!
வீண் பகட்டுக்களையும் ஆடம்பரங்களையும் மோகிக்கும் நீர் வீணர்களே!

உம்முடைய அற்ப சந்தோஷங்களையும், சொந்த சோகங்களையும் விடவும்
அதிமுக்கியமான அம்சங்கள் இப்பிரபஞ்சத்தின் உச்சியில் உள்ளன!
தமது சொந்த விருப்பங்களையும் உணர்வுகளையும் கருத்துகளையும் கடந்து
மெய்ம்மையை நேசிப்பவனே உணர்வின் உச்சத்தை அடைகிறான்!
இன்பம் துன்பம் இரண்டையும் கடந்து மெய்ம்மையை நாடுபவனுக்கே
ஞானப்பொக்கிஷங்கள் அடங்கிய மாளிகையின் கதவுகள் திறக்கின்றன!


மா.கணேசன்/ நெய்வேலி/ 18-08-2017
----------------------------------------------------------------------------

Friday, 18 August 2017

மனிதனின் அசலான வீடு




மனிதர்களே! உங்கள் பார்வைகளை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!
ஏனெனில்,  உண்மையை நீங்கள் அறியும் வேளை வந்துவிட்டது!
உண்மையை அறிவதற்கு முன்பு மலைகள் மலைகளாக இருந்தன!
ஆறுகள் ஆறுகளாக இருந்தன; உண்மையை அறியும் போது
மலைகள் மலைகளாகவும், ஆறுகள் ஆறுகளாகவும் இருப்பதில்லை!
உண்மையை அறிந்த பிறகு  திரும்பவும் மலைகள் மலைகளாகவும்,
ஆறுகள் ஆறுகளாகவும் ஒருபோதும் இருக்கப்போவதில்லை!

இவ்வாறில்லாவிடில், பின் உண்மையை அறிந்ததன் அர்த்தம் என்ன?
ஞானிகள் பைத்தியக்காரர்களா என்ன, அவர்கள் ஏன் இவ்வுலகிற்கு
முதுகைக்காட்டிக்கொண்டு, கண்களை மூடி அகமுகமாகி அமர்ந்துள்ளனர்?
உலகை அறிந்த பிறகு உலகம் நம் அறிதலின் பகுதியாகி விடுகிறது!
அதனுடைய முந்தைய முதன்மைத்தானத்திலிருந்து விலக்கப்பட்டுவிடுகிறது!
அந்த இடம் இப்போது இறுதி மெய்ம்மைக்கு ஒதுக்கப்பட்டுவிடுகிறது!

உலகம், உயிர்ஜீவி, மனிதன் பற்றிய உண்மை
-----------------------------------------------------------
படிப்படியான படைப்பைக் குறிக்கும் ஒற்றைச் சொல்லே பரிணாமம்!
உயிர் தோன்றியது என்னவோ உலகின் பகுதியான இப்பூமியில் தான்!
ஆயின், இவ்வுலகம் ஒரு வளர்ப்பு வீடே தவிர நம் சொந்த வீடு அல்ல!
உயிர்ஜீவி என்பதென்ன, உலகின் ஒரு சிறு துண்டு இவ்வுலகிலிருந்து
தனியே தன்னைப் பிய்த்துக்கொண்டு உருவானது தானே!
உலகம் தன் சடத்தன்மை உதிர்த்து உயிராக ஏன் எழவேண்டும்?
அத்துடன் நிற்காமல் மனிதனுள் உணர்வாக ஏன் உதிக்கவேண்டும்?
உலகம் என்பது தன்னைத்தானே கடந்து செல்லும் ஒரு பரிணாமப்பொருள்!
அதில் உயிர்ஜீவி என்பது வேறொரு உலகிற்கான வாசல் அல்லவா!
அதன்வழி பிரவேசிப்பது உணர்வாக எழுந்த மனிதன் அல்லவா!
அகந்தை என்பது பேருணர்வு மாளிகைக்கான இன்னொரு வாசல்!
அவ்வாசற்படியில் தங்கி விடுபவன் தன் காலம் முடிந்ததும் சாகிறான்!
அதன் வழியாகச் செல்பவன் மரணம் கடந்த பெருவாழ்வு பெறுகிறான்!

உயிர்ஜீவி உலகைச் சார்ந்துள்ளதா, உலகம் உயிர்ஜீவியைச் சார்ந்துள்ளதா?
உயிர்ஜீவி, உலகம் இரண்டும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்துள்ளன!
ஏனெனில், வெவ்வேறு நிலைகளில் உள்ள இவை வெவ்வேறு அல்ல!
மனிதனுக்கும் உலகிற்கும் உள்ள சார்பும் பிணைப்பும் இத்தகையதே!
ஆயினும் இப்பரஸ்பரச் சார்பு  நிரந்தரமானதோ, இறுதியானதோ அல்ல!
மனிதன் தன் உயிர்-இருப்பின் தேவைகளுக்காக உலகைச் சார்ந்திருக்கிறான்!
உலகமோ தனது உய்விற்காக, முழுமைக்காக மனிதனைச் சார்ந்துள்ளது!
உலகின், மற்றும் மனிதனின் பொதுவான இலக்கைப் பொறுத்தவரை
இவ்விரு மெய்ம்மைகளும் வேறொரு உயர்-மெய்ம்மையைச் சார்ந்துள்ளன!
அவ்வகையில் மனிதன் உலகைச் சார்ந்திருப்பதைவிட உலகம் தான்
மனிதனைப் பெரிதும் சார்ந்துள்ளது! ஏனெனில், மனிதனின் வழியே தான்
உலகம் தன் இலக்கை, உய்வை, முழுமையை எய்தவுள்ளது!

கடவுள், சொர்க்கம், நரகம் பற்றிய உண்மை
-----------------------------------------------------------
கடவுள், சொர்க்கம், நரகம் பற்றிய பேச்சுக்கான குறிப்பு எங்கிருந்து வந்தது?
அவை சும்மா பேச்சுக்களா என்ன? அவை வெறும் கற்பனைகள் தானா?
இல்லாத விஷயங்களை உருவகித்து அவற்றுக்குப் பெயரிட்டது யார்?
இவை அர்த்தமற்ற சொற்களென்றால் அகராதியில் இடம்பெற்றது எப்படி?
கடவுள் என்ன, மேலே சொர்க்கத்தில் வசிக்கும் எல்லாம்வல்ல ஒரு நபரா?
சொர்க்கம் என்பது பாலும் தேனும் ஆறாய் ஓடும் ஒரு பிரதேசமா?
நரகம் என்பது கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரைகள் நிறைந்த ஒரு இடமா?
யாவுமாய் ஆகிய யாவற்றையும் கடந்த ஒருமை தான் கடவுள்!
தெளிவும், விழிப்புற்ற மனமும், உயர்பேரறிவும் தான் சொர்க்கம்!
குழப்பமும், விழிப்படையா மனமும், அரைகுறை அறிவும் தான் நரகம்!

அர்த்தம், உண்மை, மெய்ம்மை பற்றிய உண்மை
-----------------------------------------------------------
உங்களைப்போலவே உங்களுடைய அறிதலும் மேலோட்டமானதே!
வாழ்வின் மேற்புறத்திலேயே விழுந்து புரண்டு உழலும் உங்களுக்கு
ஆழம் பற்றிய உணர்வில்லை, ஆகவே அர்த்தம் பற்றிய தேடல் இல்லை!
உங்களைப்பொறுத்தவரை தேவைகளைத் தாண்டிய உண்மை எதுவுமில்லை!
ஆகவே உங்களது தேவைகளின் பட்டியலில் உண்மை இடம்பெறுவதில்லை!
உயிர்-பிழைத்தலின் விவகாரங்களில் கழுத்தளவு நீங்கள் மூழ்கியுள்ளீர்!
ஆதலால் அசலான வாழ்க்கை பற்றிய அளவளாவுதல் உங்களிடமில்லை!
ஆகவேதான் சண்டை, சச்சரவுகளே உங்களுடைய வாழ்க்கையாகவுள்ளது!
உலகம் மட்டுமே ஒரே மெய்ம்மை என்று காண்பது உங்களது துரதிருஷ்டம்!
அனைத்து உலகங்களுக்கும் உயிர் கொடுப்பது உணர்வு எனும் மெய்ம்மையே!
மனித-உணர்வு ஒரு நதி என்றால் 'கடவுள்' எனும் பேருணர்வு மகாசமுத்திரம்!

குறிக்கோள், நோக்கம், இலக்கு பற்றிய உண்மை
-----------------------------------------------------------
எலிகளைப்போலவே உங்களுக்கும் பிரத்யேகக் குறிக்கோள் எதுவுமில்லை!
குறிக்கோள் இல்லையென்றால் இலக்கு பற்றிய பேச்சுக்கு இடமேது?
ஆயுள் முழுவதும் அன்றாடச்சுற்று எனும் சுழலில் சிக்கி உழலும் உங்களுக்கு
இப்பதிவுகள் ஒரே பல்லவியைப் பாடுவதாகத்தெரிவது ஆச்சரியமே!

அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய உண்மை
-----------------------------------------------------------
அறம் என்பது சுமுகமான சமூக இயக்கத்திற்கான மசகு எண்ணெய் அல்ல!
பொருளும், இன்பமும் நீ உயிரோடிருக்கும்வரை மட்டுமே உதவக்கூடும்!
மனிதா! வீடுபேறு மட்டுமே இம்மையிலும், மறுமையிலும் தரும் மகாசுகம்!
அஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும் இம்மையை மட்டுமே வாழ்கிறார்கள்
ஞானிகளோ மும்மைகளைக் கடந்த உண்மையை இப்போதே வாழ்கிறார்கள்!

தியானம், பயிற்சி, முயற்சி பற்றிய உண்மை
-----------------------------------------------------------
கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டே உறங்குவதல்ல தியானம்!
கண்களுக்குப்புலப்படாத மெய்ம்மைகளைத் தரிசிக்கும் ஆழ்நிலை சஞ்சாரம்!
ஞானிக்கு காலம் ஏது? ஏனெனில், இப்போதில் காலம் என்பதில்லை!
"இப்போது" என்பதே ஞானியின் வீடு! காலம் அவன் காலாற உலவும் வீதி!
மனிதன் தன்னை முழுமையாக வந்தடையும் வரை உலகம் தேவை!
உலகம் என்பது தன்னைத்தானே ஏறிக்கடந்திடும் ஒரு பரிணாம ஏணி!
மனிதன் தன்னைத்தானே கடக்க வேண்டிய அந்த ஏணியின் உச்சிப்படி!
தினமும் செக்கிழுப்பதனால் மாட்டிற்கு சொர்க்கத்தின் கதவுகள் திறக்குமெனில்
மனிதா நீயும் அறிந்தவற்றைப் பயிற்சி செய்து அறியாததை அடையலாம்!
உன் ஆழ்மனத்தின் விருப்பங்கள் உலகப்பொருட்களைப் பற்றியதாயிருப்பின்
உன் மேல்மனத்தின் விருப்பங்களும் முயற்சிகளும் விழிப்பதற்கு உதவுமா?
வட்டம் வரையும் உங்களது முயற்சிகள் எப்போதும் சதுரத்திலேயே முடியும்!

வாழ்வு, மரணம், பெருவாழ்வு பற்றிய உண்மை
-----------------------------------------------------------
இவ்வுலகம் மரணத்தின் வீடு, இங்கே நிரந்தரமாக வாழ்ந்தவர் எவருமில்லை!
இவ்வுலக வாழ்க்கை என்பது நித்திய வாழ்வுக்கான ஒரு பயணவழி மட்டுமே!
இவ்வுலகுடன் மனிதனுக்குள்ள தொடர்பு அவன் ஒரு வழிப்போக்கன் என்பதே!
மனிதவாழ்க்கை எனும் பயணம் புதுமையானது, உண்மையை அறிவதே அது!
உண்மையே மரணமிலா பெருவாழ்வின் வீடு, அதுவே அவனது அசலான வீடு!

மா.கணேசன்/ நெய்வேலி/ 14-08-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 15 August 2017

முற்றுப்புள்ளியாகிப்போன தொடக்கப்புள்ளி!




எவ்வளவு தெளிவாக எடுத்துச்சொன்னாலும்
எத்தனை முறை சொன்னாலும் தவளைக்கு
சீவிதம் கடந்த வாழ்க்கை புரிபடுவதேயில்லை!
எவ்வளவு முயன்றாலும் ஓணான்களையும்
அரணைகளையும் திசைப்படுத்தவோ
நெறிப்படுத்தவோ முடிவதில்லை!

மனித நிலை எத்தகையதென குரங்குகளுக்குச்
சொல்லிப் புரிய வைக்க முடியுமெனில்
ஒரு வேளை, புத்த நிலையை மனிதனுக்குச்
சொல்லிப்புரிய வைத்திட முடியலாம்!

கிளிப்பிள்ளைகள், அர்த்தம் தெரியாவிட்டாலும்
சொல்லிக்கொடுத்தவைகளை அப்படியே திரும்பச்
சொல்லும்! அவைகளுக்கு ஞாபகசக்தி இருந்தால்
மனிதர்களைப்போல் திருக்குறள் முழுவதையும்
அப்படியே ஒப்பிக்கும்! ஆனால் என்ன, அவைகளுக்கு
மனிதர்களைப்போல மேற்கோள் காட்டத் தெரியாது!

மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வித்தியாசப்பட
விரும்புகின்றனர்! ஆனால், எவரும் அசலாக
ஆகவேண்டுமென விரும்புவதில்லை!
அசலுக்கும் மேலோட்டமான வித்தியாசத்திற்கும்
உள்ள வித்தியாசம் ஏனோ அவர்களுக்குப் புரிவதில்லை!
கேவலம், பணம், சொத்து, இவற்றின் அளவு மனிதர்களை
வித்தியாசப்படுத்திடுமா? அப்படியானால், மனிதர்களின்
உள்ளார்ந்த மதிப்பு தான் என்ன?

நகல் செய்யும் குரங்கு புத்தி உள்ளவரை மனிதர்களுக்கு
தம் அசலான (தனித்) தன்மையை அறியும் வாய்ப்பில்லை!
புறக்கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டுள்ளவரை அற்பனின் கண்களுக்கு
அகத்தின் ஆழத்திலுள்ள பொக்கிஷங்கள் தெரிவதில்லை!

மேலும், மனிதர்களுக்கு பொருட்களின், சாதனங்களின் தரத்திற்கும்
வாழ்க்கையின் தரத்திற்கும் உள்ள வித்தியாசமும் தெரிவதில்லை!
வீட்டின் உள்-அலங்காரம் மனிதனின் நேர்த்தியைக் கூட்டுவதில்லை!
மனிதர்களின் மனங்கள் உலகியல் குப்பைகளால் நிரம்பிவழிகின்றன!
உணவு, உணவுக்காக உத்தியோகம், அர்த்தமின்மை மறக்க உல்லாசம்!
இவ்வளவு தானே மனிதா உனது அன்றாடமும் மொத்த வாழ்க்கையும்?

சோறில்லாதவன் சோற்றுக்கும், வறியவன் செல்வத்திற்கும்
சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டவன் ஒப்புதலுக்கும் ஏங்குகிறான்!
சமூகப் பொருளாதார மேம்பாடு அடைந்ததும் தேங்கிப்போகிறான்!
எவரும் விடுதலைப்படுத்தும் உயர்பேரறிவைத் தேடுவதில்லை!

கழுத்துவரை உலகியலில் மூழ்கியுள்ளவனின் ஆன்மீக ஈடுபாடு வீண்!
உலகியல் என்பதென்ன, அது உடல் எனும் விலங்கியலின் நீட்சி தானே!
ஆன்மீகம் என்பதென்ன, அது ஆன்மாவின் உயர்-உணர்வியல் தானே!
"மனிதன் உடலா? ஆன்மாவா?" என்பது பட்டிமன்றத் தலைப்பு அல்ல!

தன்னைக் கணக்கில் கொண்டுள்ள வரை ஒருவன் பூஜ்ஜியமே!
மனிதன் ஒரு உருப்படியல்ல, அவன் அனைத்துமான அனந்தன்!
ஒப்பீட்டளவில் சிறப்பானவன் ஒப்பிடவியலா சிறப்புக்கு அந்நியன்!
ஒப்பிட எவருமில்லையேல், மனிதா! உமது உண்மை நிலை என்ன?

அகந்தையற்றிருப்பது ஆசைகளற்றிருப்பது பற்றுக்களற்றிருப்பது
எண்ணங்களற்றிருப்பது என்பன பற்றியெல்லாம் அரற்றிக்
கொண்டிருப்பவனுக்கு உண்மையைப் பற்றுவதற்கு நேரமிருக்காது!
தன்னில் லயிக்கும் பயனற்ற பகுப்பாய்வு முடிவுறும்போது
உண்மையான தன்னையறிதல் தொடங்குகிறது!

உண்மையான மையம் பற்றிய விசாரம் தோன்றிடின்
அகந்தை-மைய-நோக்கு தாமே சுவடற்றுப்போகும்!
அகந்தை தோன்றாத நிலை விலங்கிற்குரியது!
அகந்தை இல்லையேல் மனிதன் இன்னொரு தவளையே!
அகந்தையில் தேங்கிடுபவன் அரை மனிதன்!
அகந்தையைக் கடந்திடுபவன் முழு மனிதன்!

உணர்வின் தொடக்கப்புள்ளிக்கு அகந்தை நிகரில்லா அழகு!
தொடக்கப்புள்ளி முற்றுப்புள்ளியாவதே பிரச்சினைக்குரியது!
அகந்தையற்றிருப்பது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்!
அற்றிருப்பது, விடுவது, விலக்குவது, துறப்பது பற்றி வீணே பேசாதீர்!
மெய்ம்மை நாட்டம் கொள்ளுங்கள்! இறை நேசம் கொள்ளுங்கள்!

இறை, மெய்ம்மை, உண்மை இவை உமது துய்ப்புக்கான பண்டமல்ல!
இறையனுபவம் என்பது இறைக்கு இரையாவதன் அனுபவம் ஆகும்!
நதி கடலைக்கொள்ளாது, உமது சிற்றுணர்வு பேருணர்வைக் கொள்ளாது!
உமது சிற்றறிவுடன் பேரறிவு சேராது! ஆகவே பேரறிவை நாடிச் சேர்ந்திடு!
உண்மையை உடமை கொள்ளமுடியாது, உண்மையின் உடமையாகிவிடு!
மெய்ம்மையை வசப்படுத்தவியலாது, மெய்ம்மைக்கு உனை அர்ப்பணித்திடு!


மா.கணேசன்/ நெய்வேலி/ 11-08-2017
----------------------------------------------------------------------------

Friday, 11 August 2017

உலகின் மறுபக்கம்!



                      

                                           எச்சரிக்கை!
          திறந்து பார்க்கக்கூடாத பொக்கிஷப்பேழை இது!
          திறந்து பார்த்தபின் வாளாவிருப்பது ஆபத்து!
          இவ்வரிகளை அடியொற்றி வாசிப்பதாயிருப்பின்
          வாசித்ததை சிந்தித்துப் புரிந்துகொள்வதாயிருப்பின்
          அப்புரிதலை கவனத்துடன் கையாள்வதாயிருப்பின்
          மட்டுமே வாசிக்கவும்! ஏனெனில், புரிதலுக்கு இட்டுச்
          செல்லாத சிந்தனையும், சிந்தனைக்கு இட்டுச்செல்லாத
          வாசிப்பும் பயனற்றது! வழியறியாதிருப்பது அறியாமை;
          வழி தெரிந்தும் பயணிக்காமல் இருப்பது கயமை!
          இலக்கறியாத வாழ்வு அர்த்தமற்ற வீண் சுமை!


ஒவ்வொரு பொருளுக்கும் மறுபக்கம் ஒன்றும் உள்ளது!
ஒரு தாளுக்கு, ஒரு வீட்டிற்கு, ஒரு மனிதனுக்கு!
வானத்தின், அல்லது இவ்வுலகின் மறுபக்கம் எது?
ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் என்ன உள்ளது?
என்பதை அறியாமல் இவ்வுலகைப் புரிந்து கொள்வதியலாது!

இவை வெறும் கவிதை வரிகளோ, தகவல் துணுக்குகளோ அல்ல!
ஒவ்வொரு வரியின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றாமல்
அது ஒரு கேள்வியாயின் அதற்கான பதிலைக் கண்டுபிடிக்காமல்;
அது ஒரு பதிலாயின் அதன் உணர்த்துதலைச் செயல்படுத்தாமல்;
அது ஒரு பாதையைச் சுட்டுவதாயின் அதில் இறங்கிப்பயணிக்காமல்;
அது ஒரு விதியாயின் அதை பூரணமாகக் கடைப்பிடிக்காமல்
அடுத்தடுத்த வரிகளுக்குச் செல்வது முறையான வாசிப்பு ஆகாது!

உலகின் இந்தப் பக்கத்தைப் பற்றிய அறிவு அவசியம்!
ஆயின் அதன் மறுபக்கம் பற்றிய அறிவே இறுதியானது!
ஏனெனில், மறுபக்கம் இல்லாமல் இப்பக்கம் இல்லை!
மறுபக்கம் பற்றி ஆர்வம் கொள்பவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்!
அவன் ஏற்கனவே விலங்கு நிலையைக் கடந்திட்டவன்!

உலகின் இருப்பை அறிவது அறிவின் ஆரம்பம்!
உலகின் மறுபக்கத்தையும் அறிவது அறிவின் முழுமை!
இப்பிரபஞ்சத்தைப் பற்றிய அனைத்துக்கேள்விகளுக்குமான
விடைகளும், அனைத்துச் சிக்கல்களுக்குமான தீர்வுகளும்
பிரபஞ்சத்தின் மறுபக்கத்திலேயே உள்ளன!

பிரபஞ்சத்தின் ஒரே விழைவு தன் மறுபக்கத்தைத் தரிசிப்பதே!
ஆகவே, அது தன்னைத்தானே திரும்பிப் பார்க்கும் முயற்சியில்
சுழன்று சுழன்று வெளி-உள்ளாகத் திரும்பி மனிதனாகியுள்ளது!

பிரபஞ்சத்தின் மறுபக்கத்திற்கான வாசல் எது? அது எங்குள்ளது?
மனிதனிடமே உள்ளது, மனித உணர்வே அந்த வாசல்!
மனித உணர்வின் நோக்கம் உலகின் மறுபக்கத்தை அடைதலே!
அதற்கு மனிதன் தன்னுணர்வின் மறுமுனையை அடையவேண்டும்!
இதற்கு மாறாக, உலகியலில் உழன்று முடிவில் மாண்டுபோவது அல்ல!
வாழ்வின் உன்னதம் பிரபஞ்சப் புதிரை விடுவிப்பதில் உள்ளது!
மாறாக, இங்கே குந்தித்தின்று குப்பை கொட்டுவதில் இல்லை!

பிரபஞ்சத்தின் மறுபக்கம் முற்றிலும் இப்பக்கத்திலிருந்து வேறானது!
இப்பக்கம் பன்மையின் உலகம் எனில் அப்பக்கம் ஒருமையினுடையது!
அதில் சிறிதும் இப்பிரபஞ்சத்தின் சாயலை நீங்கள் காண முடியாது!
விருட்சத்தின் சாயலை நீங்கள் வித்தினுள் காண முடியுமா என்ன?
ஏனெனில் சாரத்தில் உட்கூறுகளுக்கும், பகுதிகளுக்கும் இடம் ஏது?
விருட்சத்தின் மறுபக்கம் வித்து எனில் பிரபஞ்சத்தின் மறுபக்கம் கடவுள்!

வித்து என்பது விருட்சத்தைக் கட்டமைக்கும் அறிவல்லாமல் வேறென்ன?
வித்து விருட்சமாவதெதற்கு, எண்ணற்ற வித்துக்களை விளைவிக்கத்தானே!
வித்து இல்லாமல் விருட்சமில்லை, கடவுள் இல்லாமல் பிரபஞ்சமில்லை!
வித்துடைய கனியே விருட்சத்தின் மூலத்திற்கான அத்தாட்சியாகும்!
ஞானமடைந்தவனே பிரபஞ்சத்தின் மூலத்திற்கான சாட்சியும் நிரூபணமும்!

தீவுபோல் தனித்தனியாக இருப்பதால் நீங்கள் தனிமனிதர்கள் அல்ல!
பிரபஞ்சத்தின் ஒருமையாய் எழுபவன் மட்டுமே (தனி)மனிதனாகிறான்!
பிறர் யாவரும் உள்பொதிவு செத்த மானிடப் பதர்களே யாவர்!
உணர்வின் தொடக்க முனையில் உங்களுக்குப் பெயர் மனிதன்!
அதே உணர்வின் இறுதி முனையில் உங்களுக்குப் பெயர் இறைவன்!
ஆகவேதான் நீங்கள் "கடவுளின் சாயல்" என்றழைக்கப்படுகிறீர்கள்!
சாயலிலிருந்து அசலாக நீங்கள் மாறும்வரை கடவுள் கடவுளாவதில்லை!
கடவுளைக் கடவுளாக்கும் வரை நீங்களும் முழுமையடைவதில்லை!

'மனிதன்' என்பது கடவுளைப்போலவே உள்ளீடற்ற ஒரு சொல் மட்டுமே!
அவனது புற வடிவமோ, பேசும் திறனோ, பகுத்தறிவோ அல்ல மனிதன்!
மனிதன் என்பவன் உலகின் சாரத்தை பிரித்தெடுக்கும் ஒரு அபூர்வப் புனல்!
அப்புனல் வழியே அவன் தன்னையும் வடிகட்டி தன் சாரத்தை அடைகிறான்!
உலகம், மனிதன், பிரபஞ்சம் மொத்தத்தின் ஒருமை தான் கடவுள்!

மனிதனை மனிதஜீவி என்றழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!
"மனிதஜீவி" என்பதிலுள்ள ஜீவியைக் கடந்திடுபவனே மனிதனாகிறான்!
ஜீவி என்பது வெறுமனே உயிர்ஜீவிக்கும் ஒரு விலங்கைக் குறிக்கிறது!
உடலுக்கு உணவிட்டு, தான் அறிவை உண்டு வாழ்பவனே மனிதன்!
உலகையும், தன்னையும், அனைத்தையும் பற்றிய இறுதி அறிவே கடவுள்!

உலகிற்கும் உலகைப்பற்றிய அறிவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உலகைவிட உலகைப்பற்றிய அறிவே அடிப்படையானது, சாசுவதமானது!
உலகம் என்பது பேரறிவின் விசேட உருமாற்றம் அல்லாமல் வேறென்ன?
உலகிலுள்ள அனைத்தும், ஒட்டு மொத்த உலகமும் அழிந்துபோகலாம்!
ஆனால், பேரறிவு மீண்டும் எண்ணற்ற உலகங்களாக எழுந்திடக்கூடும்!

உலகை அறிந்து அதன் சாரத்தைக் கிரகித்தபின் உலகம் வெறும் சக்கையே!
அறிதல், தெளிதல், புரிதல் என்றால் என்னவென்று எண்ணுகிறீர்கள்?
அறியப்படும் பொருளை உணர்வில் கரைத்துச் செரித்து தன்வயமாக்குதலே!
தன்னையறிதலில் தானும் கரைந்து முடிவில் மிஞ்சுவது பேரறிவு மட்டுமே!
மலை, பள்ளத்தாக்கு, சமவெளி, காடு, நாடு, நகரம் யாவற்றையும் கடந்து
கடைசியாகத் தன்னையும் கடக்கும் நதி சேர்வது சமுத்திரமே!

மனிதா!  உன் வாழ்க்கையின் லட்சியத்தை இவ்வுலகில் தேடாதே!
உன் ஆன்மாவைத் திருப்தி செய்கிற பொருள் எவ்வுலகிலும் கிடையாது!
மனிதா! நீ தேனும் அடையுமாக, சாரும் சக்கையுமாக இருக்கிறாய்!
ஆகவே நீ உன்னிலிருந்து உனது சாரத்தைப் பிரித்து அறிந்திடுவாயாக!
உயிர் உன்னைக் கைவிடுவதற்குள் உடலிலிருந்து உன்னைப் பிரித்திடு!
மனிதா! உணர்வாகிய நீ உடலின் அடிமைச் சேவகனாக வாழ்கிறாயே!
சக்கையின் வாழ்வை விட்டு சாரத்தின் வாழ்வை நீ வாழ்வதெப்போது?

தயவுசெய்து மறுபக்கம் பார்க்கவும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 30-07-2017
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...