Thursday, 29 June 2017

என் நேரத்தை வீணாக்காதீர்கள்!




   குறிப்பு :  இவை  குறிப்பிட்ட  சிலரை  மனதிற்கொண்டு அவர்களுக்காக
             எழுதப்பட்டவை யல்ல!  வகை தெரியாமல்  ஆன்மீகத்திற்குள்
             நுழைந்துவிட்டு  முன்னுக்கும் போக முடியாமல்,  பின்னுக்குப்
             பழைய வாழ்க்கைக்கும்  போக முடியாமல் தடுமாறிக்கொண்டு
             இருக்கும்  சாதகர்களிடம் பொதுவாகக் காணப்படும் குணக்கேடு
             களையும்,மன-நோய்க்கூறுகளையும் இனம்கண்டு அவைகளைக்
             களைவதன்  அவசியத்தை இக்குறிப்புகள் கூறுகின்றன. ஆகவே
             எவரிடமெல்லாம் இக்கூறுகள் உள்ளதோ அவர்கள் அனைவருக்
             கும் இவை பொருந்தும்.



*
என்னுடைய வழியில் உங்களுடைய நேரத்தைப்
பயனுள்ளதாக்க விரும்பினால் என்னிடம்
வாருங்கள்!
இங்கே வந்து, உங்களுடைய வழிகளில் உங்களுடைய
நேரத்தைப் போக்க விரும்பினால் என்னிடம்
வராதீர்கள்!
ஏனெனில், உங்களுடைய குறிக்கோள்களின்
அதிகபட்ச உயரம் என்னவென்பதை நான்
நன்கறிவேன்!

*
தயவுசெய்து என் நேரத்தை வீணாக்காதீர்!
உங்களுடைய அற்ப பிரச்சினைகளையும்
அசௌகரியங்களையும், மனக்குறைகளையும்
என்னிடம் கொண்டுவராதீர்!
உங்களுடைய மேலோட்டமான
சந்தோஷங்களை தனியே உங்களுடனேயே
கொண்டாடி மகிழுங்கள்!

*
வாழ்வின் அர்த்தம் பற்றிய அக்கறை
உள்ளவர்கள்,
உண்மை மீது பசி தாகம் கொண்டவர்கள்,
உண்மையிலேயே ஆன்மீகத்தில் ஆர்வம்
கொண்டவர்கள் மட்டுமே
என்னிடம் வாருங்கள்!
அப்படி வரும்போது, உங்கள் முகமூடிகளை
வீட்டிலேயே கழற்றிவைத்துவிட்டு வாருங்கள்!
உங்கள் பாசாங்குகளையும், போலித்தனங்களையும்
களைந்துவிட்டு வாருங்கள்!

இங்கு வரும்போது
சிரத்தையையும், சிதறாத கவனத்தையும்
காணிக்கைகளாகச் செலுத்தத் தவறாதீர்கள்!

*
என் நேரத்தை வீணாக்குவது என்பதும்
என்னை அவமதிப்பது என்பதும் ஒன்றுதான்!
இன்னும், என்னை அவமதிப்பது என்பதும்
வாழ்க்கையை அவமதிப்பது என்பதும் ஒன்றுதான்!
ஏனெனில், என்னிடம் வாழ்க்கை பற்றிய
விசேடச் செய்தி உள்ளது!
அது 'அன்றாடம் - கடந்த' அரிய செய்தியாகும்!
நான் வாழ்க்கையின் தூதுவன்!

உண்மையில், வாழ்க்கை தன்னை முன்னிறுத்தி
வலியுறுத்துவதோ, பிரகடனம்செய்வதோ இல்லை!
நீங்கள் மனநலம் தவறாதவராக இருக்கும்பட்சத்தில்
உயிர்-வாழ்தலை உங்களால் தவிர்க்கவோ,
தள்ளிப்போடவோ இயலாது!
ஆனால், உயிர்-வாழ்தலைக்கடந்த "உயர்" வாழ்தலைப்
பொறுத்தவரை, உணர்வார்ந்த தீவிர ஈடுபாடு
தேவைப்படுவதால், அது உங்களுக்கு பிடிபடாத
ஒன்றாக, கண்களுக்குப்புலப்படாததாக
மறைவாக இருக்கிறது!

ஆகவேதான், என்னைப்போன்ற வாழ்க்கைத்
தூதுவர்கள் உங்களிடையே உருவாகி
உங்களை உணர்வுக்குக் கொண்டுவரும்
ஆன்மீகப்பணியாற்றுவது அவசியமாகிறது!

*
மாபெரும் அவமதிப்பு எதுவென்றால்,
வாழ்க்கை பற்றிய விசேடச் செய்தியைக்
கொண்டுவரும் தூதுவனை மதியாதிருப்பது தான்!
ஆம், என்னை அவமதிப்பது என்பதும்
வாழ்க்கையை அவமதிப்பது என்பதும் ஒன்றுதான்!

பகிர்ந்து கொள்ள உங்கள் எல்லோரிடமும்
ஏதாவதொரு செய்தி, தகவல் எப்போதும் இருக்கும்!
அச்செய்திகள், தகவல்கள் அவற்றின்
தன்மைக்கேற்ப உங்களை
மகிழச்செய்யலாம், அல்லது துயரப்படச் செய்யலாம்!
ஆனால், அவை எதுவும் உங்களை, உங்கள் வாழ்க்கையை
மாற்றமுறச் செய்யாது! கடைத்தேற்றாது!

*
என்னுடன் அமர்ந்திருக்கும் போது
உங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளையும்
உங்கள் மனைவியுடன், அல்லது சக பணியாளருடன்
ஏற்பட்ட மனத்தாங்கல்களையும் சொல்லி உங்கள் தரப்பு
நியாயங்களை அடுக்கிக்கொண்டிருக்காதீர்!

உங்களுக்கு எவ்விதப்பிரச்சினையும், தொல்லைகளும்
இல்லாதிருந்தால் நீங்கள் ஆன்மீகத்தில்
சிறந்துவிளங்குவீர்கள் என்பதாகக் கனவு காணாதீர்!
மனைவியோ, மக்களோ, அண்டை அயலாரோ,
நண்பனோ, பகைவனோ, சகபாடியோ
உங்களுக்கு வாய்த்த ஒவ்வொரு உறவின் வழியாகவும்
நீங்கள் கற்றுத் தெளிய வேண்டிய பாடம் உள்ளது!

உறவுகள் தான் உங்களுடைய உளவியலை,
உங்களுடைய குணாதிசயங்களை, கோணல்களை
உங்களுக்குக் காட்டும் கண்ணாடியாகும்!
நீங்கள் எதிர்கொள்ளவேண்டியது பிறரையல்ல
உங்களைத்தான், உங்களை மட்டும் தான்
என்பதை மறந்துவிடாதீர்கள்!

*
என்னைத் தெரியாதவர்களை நான்
சந்திக்கையில், அவர்களுடன் உரையாடுகையில்
என் நேரம் வீணாகக் கழிவது எனக்கு
வருத்தமளிக்கவே செய்கிறது!

எவ்வாறேனும் எனது செய்தியை அவர்களுக்குள்
விதைத்திடவும், அவர்களுடைய இதயத்திற்குள் புகவும்,
அவர்களுடைய கவனத்தை அசலான
வாழ்க்கையின் பக்கம் திருப்பவும்
நான் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும்
வீணாகிப்போகின்றன!
அந்த அளவிற்கு அவர்கள் முற்றிலுமாக
அன்றாடத்தின் விஷயங்களாலும், விவகாரங்களாலும்,
அலுவல்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு
நிரம்பி வழிகிறார்கள்!

*
ஆனால், என்னைத் தெரிந்தவர்களைச்
சந்திக்கையில், தெரிந்தே அவர்கள்
என் நேரத்தை வீணாக்குகிறார்கள் என்பது
உயிருடன் என்னை எரிப்பதைப்போல
உணரச்செய்கிறது!
இதனால், பல நேரங்களில்
நான் உங்களிடையே இருந்தும்
இல்லாதவனைப்போல உணர்கிறேன்!

என்னை அறிந்தவர்கள் என்னை
முறையாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை
என்பது குறித்து எனக்கு மிகுந்த வருத்தம்
எப்போதும் உண்டு!
அதே வேளையில், எல்லோரும் என்னை
அவரவர் விருப்பம் போல பயன்படுத்திக்கொள்ள
விழைவது தான் எனக்கு மிகுந்த சோகத்தைத்தரும்
அவமதிப்பாகும்!

*
இவற்றையெல்லாம், ஏதோ நான்,
வானத்திலிருந்து வந்தவனைப்போலவும்,
விசேடப்பிறவி என்பதாகவும்,
விதிவிலக்கானவன் என்பதாகவும்,
ஆகவே, எல்லோரும் என்னைத் தொழவேண்டும்
என்றெண்ணிச் சொல்லவில்லை!
மாறாக, என்னுடைய ஆன்மீகப்பணியின்
நிமித்தம்தான் சொல்கிறேன்!

எனது இந்த ஆன்மீகப்பணியும், நானே விரும்பியோ
வலிந்தோ தேர்ந்துகொண்டதல்ல!
இன்னும் இது எவராலும் என்மீது சுமத்தப்பட்டதுமல்ல!
மாறாக, வாழ்க்கை தான் என்னைத் தேர்ந்துகொண்டது!

இப்பணி மட்டும் இல்லையென்றால், நானும்
உங்களில் ஒருவன் தான்!
இப்போதும் நான் உங்களில் ஒருவன் தான்!
நீங்கள் வாழும் அதே அன்றாடத் தளத்தில் நானும்
அவ்வப்போது பங்குபெறுவதால்!

உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்
நீங்கள் அன்றாடத்திலேயே மூழ்கித் தொலைந்து
போகிறீர்கள்! நானோ உணவிற்கு ஊறுகாய் போல
அன்றாடத்தைத் தொட்டுக்கொள்ள மட்டுமே செய்கிறேன்!

நான் வாழ்க்கையை கிடைமட்டத்திலிருந்து
செங்குத்தாக வாழ்கிறேன்!
நீங்களோ கிடைமட்டத்திலேயே வாழ்கிறீர்கள்!

*
ஒரு உவமையின் மூலம் சொன்னால்,
தொடக்கத்தில், நானும் உங்களைப்போலவே
ஒரு கம்பளிப்புழுவாகத்தான் இருந்தேன்!
இடையில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக
மாற்றமடைந்தேன்! எனது வாழ்க்கையே மாறிவிட்டது!
ஆனால் நீங்கள் இன்னமும் கம்பளிப்புழுக்களாகவே
இருக்கிறீர்கள், வாழ்கிறீர்கள்!

ஏற்கனவே நான் என் ஆன்மீகப்பணி பற்றியும்,
விசேட- வாழ்க்கைச்செய்தி பற்றியும்
சொன்னேன் அல்லவா, அது என்னவென்றால் உண்மையில்
நீங்கள் கம்பளிப்புழுக்கள் அல்ல; வண்ணத்துப்பூச்சிகளே!
நீங்களும் வண்ணத்துப்பூச்சிகளாக மாற்றம் பெறமுடியும்
என்பதுதான்!

அதாவது, கம்பளிப்புழு, வண்ணத்துப்பூச்சி
இவ்விரண்டின் வாழ்க்கையும் வேறுவேறாயினும்
இரண்டும் சந்தித்துக்கொள்ளவும், உரையாடவும் முடியும்!
ஆனால், அவற்றின் சந்திப்பும், உரையாடலும்
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழவிருக்கும் வாழ்க்கையைப்
பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில் அர்த்தமுள்ளதாக
அமையும்!

இதற்கு மாறாக,
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து கடந்த வாழ்க்கையைப்
பற்றியதாயும், கம்பளிப்புழு வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில் யாவும்
அனர்த்தமாகிவிடும்!

*
ஆகவே, உங்கள் மனத்தை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கும் விஷயம் எவையெவை என்பதை
நீங்கள் அவ்வப்போது அறிவது அவசியம்!
அதற்குப்பெயர் தான் "தியானம்" என்பதாகும்!

உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ
உங்கள் அடி-மனத்திலிருந்தும், புற-உலகிருந்தும்
எழுகின்ற பலவித எண்ணங்களாலும், உணர்ச்சிகளாலும்,
பிம்பங்களாலும் எப்போதும் உங்கள் மனம்
முற்றுகையிடப்படுகிறது, ஆக்கிரமிக்கப்படுகிறது!
அவற்றில் எத்தகைய அம்சங்கள் உங்கள் மனத்தை
ஆக்கிரமிக்க நீங்கள் அறிந்தோ, அறியாமலோ
அனுமதிக்கிறீர்கள் என்பதுதான்
உங்களது தன்மையை, நீங்கள் எத்தகைய மனிதர்
என்பதைத் தீர்மானிப்பதாகிறது!

இவையல்லாமல், இயல்பாக உங்கள் மனமானது
கற்பனைகளுக்கும், புனைவுகளுக்கும் மிக எளிதாக
ஆட்படுவதுமாயுள்ளது என்பது குறித்தும் நீங்கள்
எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்!

*
நீங்கள் என்னிடம் வருவதற்கு முன்,
அன்றைய தினத்தில் நீங்கள் சந்தித்த விஷயங்களையும்
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்;
நீங்கள் கண்ட, கேட்ட செய்திகளையும், தகவல்களையும்
அவை குறித்த உங்களுடைய எதிர்-வினைகளையும்
அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும்;
அவை உங்களுக்குள் ஏற்படுத்திய சந்தோஷங்களையும்,
சோகங்களையும், பிற தாக்கங்களையும்
உங்கள் மனத்திலிருந்து அழித்துவிட்டு, அதாவது
உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு பிறகு
இங்கு வாருங்கள்!

ஏனெனில், வாழ்க்கை பற்றி நான் சொல்லவிருக்கும்
புதிய உண்மைகளை, உட்பார்வைகளை ஏற்பதற்கு
உங்கள் மனத்திலும்,
இதயத்திலும் இடம் இருக்கவேண்டும்!
வெறும் இடம் மட்டும் இருந்தால் போதாது;
இதுவரை நீங்கள் அறிந்திராத, வாழ்க்கையின் புதிய
பக்கங்களை, பரிமாணங்களை
அறிந்து கொள்ளும், ஆழமாகப் புரிந்துகொள்ளும்
தீவிர ஆர்வமும் உங்களிடம் இருக்க வேண்டும்!
புதிய அறிவை பழைய அறிவுடன் கலப்பதும்
அறிவிலியாக இருப்பதும் ஒன்றுதான்!

குறிப்பாக, இங்கு வரும் போது உங்களைப்பற்றிய
எவ்வித பிம்பங்களுடனும் வராதீர்கள்!
இங்கு வந்த பிறகு, என்னைப்பற்றிய எவ்வித
பிம்பங்களையும் உருவாக்கிக்கொள்ளாதீர்கள்!

இங்கு வந்தபிறகு, சிம்மாசனம் எதையும் தேடாமல்
உங்களுக்குரிய ஆசனத்தில் அமருங்கள்!
ஆம், உங்களுடைய ஆன்மீகத் தகுதிநிலை
குறித்த யாதொரு பிரமையும் இல்லாதிருங்கள்!

இங்கு என்னிடம் வருவதற்கு எவருக்கும் எந்த
விசேடத்தகுதியும் தேவையில்லை!
உண்மையில் உங்களுடைய தகுதிகள் என்று
நீங்கள் கருதிக்கொண்டிருக்கும் எதையும்
நான் கணக்கில் கொள்வதில்லை!
மாறாக, இன்னும் உங்களால் தொடப்படாத
உங்களுடைய உட்பொதிவை மட்டுமே நான்
தகுதியாகக் காண்கிறேன்!
ஏனெனில், உங்கள் உட்பொதிவில்தான் நீங்கள்
அடையவேண்டிய ஆன்மீக உயரங்களும்,
ஞானப்பொக்கிஷங்களும் அடங்கியுள்ளன!

ஆகவே, இங்கு வந்தபிறகு, ஆன்மீக விசாரம்
என்ற போர்வையில், உங்கள் மேதாவிலாசத்தை
வெளிக்காட்டுவதற்காக கண்டதையும் அலப்பாதீர்!
மாறாக, என் நேரத்தை வீணாக்காமல்
நேரடியாக மையமான, சாரமான விஷயத்திற்கு
உடனடியாக வந்துவிடுங்கள்!
என்னுடன் செலவிடும் ஒவ்வொரு வினாடியையும்
தரமான நேரமாக, உண்மையில் நீங்கள்
வாழ்ந்ததற்கான சாட்சியமாக மாற்றிடுங்கள்!      

எனது நேரத்தை வீணாக்காதீர்கள் என்று
நான் சொல்வது என்னுடைய நேரத்தைப்பற்றியது
மட்டுமல்ல; உங்களது
நேரத்தையும் நீங்கள் வீணாக்காதீர்கள் என்பதையும்
உள்ளடக்கியதே ஆகும்!
ஏனெனில், நேரம் என்பது வாழ்க்கை யாகும்!
       
எனது கவலையெல்லாம் என் நேரம் வீணாவது
பற்றியல்ல!
"வாழ்க்கை" வாழப்படாமல் வீணாக்கப்படுகிறதே
என்பது பற்றித்தான்!
வாழ்க்கையை வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்ட
அரிய மானிடப்பிறவி வீணாக்கப்படுகிறதே
என்பது பற்றித்தான்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 25.11.2016
----------------------------------------------------------------------------

Tuesday, 27 June 2017

மன்னிக்கவும், நாம் ஒரே படகில் இல்லை!





மன்னிக்கவும்!
உங்களுடன் சண்டையிட எனக்கு நேரமில்லை!
எவருடனும் என்னை ஒப்பிட்டுப் பார்க்கவும்
பிறகு எவர் குறித்தும் பொறாமை கொள்வதற்கும்
எனக்கு நேரமில்லை!
என்னைத் தோண்டி எனது ஆழங்களை
அறிவதற்கே எனக்கு நேரம் போதுமானதாக
இல்லை!

மன்னிக்கவும்!
நான் உங்களைக் கண்டுகொள்ளவில்லை
என நீங்கள் வருந்தவேண்டாம்!
என்னைக் கண்டு கொள்ளவே எனக்குப்
போதுமான நேரம் இல்லை!
என்னை நான் கண்டடைந்தாலும்
என்னுடனான என் பணியில்
நான் முழுவதுமாக மூழ்கியுள்ளேன்!

மன்னிக்கவும்!
உங்களுடனான உங்கள் பணியை
நீங்கள் முறையாக மேற்கொள்ளவில்லை;
அல்லது இன்னும் தொடங்கவேயில்லை
என்றாலும் அதை மேற்பார்வையிடும் சுமை
எனக்கு வேண்டாம்!

மன்னிக்கவும்!
உங்களுக்கு நான் ஆசானாக இருக்க முடியாது!
உங்களுக்கு அறிவுரை சொல்லவும்
வழி நடத்திச் செல்லவும்
உங்கள் வழிகளில் குறுக்கிடவும்
நான் யார்?

மன்னிக்கவும்!
உங்களுக்கு நான் குருவாக இருக்க முடியாது!
ஏனெனில், உங்களுக்குப் பேச்சுத்துணையாக,
விதூடகனாக இருக்க என்னால்  முடியாது!
மேலும், செவிடர்களுடனும் ஊமைகளுடனும்
கலந்துரையாடுவது சாத்தியமற்றது!

மன்னிக்கவும்!
நான் உங்களை செவிடர்கள் என்றழைப்பதற்கு!
நீங்கள் உங்களுடைய மேதைமையில்
மூழ்கியிருப்பதால், பிறருடைய பேச்சுகள்
உங்கள் காதுகளுக்குக் கேட்பதில்லை!

மன்னிக்கவும்!
நான் உங்களை ஊமைகள் என்றழைப்பதற்கு!
அர்த்தமுள்ள என்னுடைய பேச்சு உங்களை
வாயடைத்துப் போகச் செய்யவில்லை!
என்னைக் கவிழ்ப்பதற்கான உபாயம் எதுவும்
அகப்படாததும்; உங்களுடைய எதிர்ப்பையும்,
மறுப்பையும் தெரிவிக்க இயலாததும் உங்களை
ஊமைகளாக்கிவிடுகின்றன!

மன்னிக்கவும்!
என்னை வெற்றிகொள்ள நினைப்பனுக்கும்
என்னைக் கவிழ்க்க கனவுகாண்பவனுக்கும் இடையே
பெரும் வித்தியாசம் உள்ளது!
ஒருவனுக்கு நினைப்பு பிழைப்பைக் கெடுக்கிறது
என்றால், இன்னொருவனுக்குக் கனவு உறக்கத்தைக்
கெடுக்கிறது!
நானல்ல உண்மையான பிரச்சினை
என்பது ஏனோ இருவருக்கும் புரிவதில்லை!

மன்னிக்கவும்!
சுய-உணர்வுள்ள மனிதன்
சுய-நலம் கொண்டவனாக இருக்கவியலாது!
உணர்வற்ற ஜீவிகளின் தலைமைப்பண்பு
சுயநலம்!
தன்னையறியாத ஜந்துக்களின் ஒரே நலம்
சுய-நலம்!

மன்னிக்கவும்!
நான் சுய-நலமற்றவன்!
ஏனெனில், கொடுக்கப்பட்ட சுயத்தின் நலத்தைப்
பேணுபவன் மூடன் மட்டுமல்ல அவன் ஒரு
விலங்கு!
கொடுக்கப்பட்ட சுயத்தினை முழுமைப்
படுத்துபவனே மனிதன்!
சதா என்னை நான் கடந்துசெல்லும்
வழிமுறையில் எனது எந்த சுயத்தின் நலத்தை
நான் பேணுவது?

மன்னிக்கவும்!
நான் உங்களுடைய சுதந்திரப்போக்கில்
தலையிட விரும்பவில்லை!
ஏனெனில், என்னுடைய சுதந்திரத்தை
மோப்பம் பிடிக்கக் கூட எவரையும்
நான் என்னருகே அனுமதிப்பதில்லை!

மன்னிக்கவும்!
உங்களைப்பற்றி எனக்குத் துளியும்
அக்கறையில்லை!
ஏனெனில், உங்களைப்பற்றி உங்களுக்கே
அக்கறை இல்லாதபோது நான் என்ன
செய்ய முடியும்?

மன்னிக்கவும்!
எவரையும் நான் வணங்குவதில்லை!
எவருடைய வணக்கத்தையும் ஏற்பதில்லை!
ஏனெனில், மதிப்பு, மரியாதை, வணக்கம்,
கௌரவம் ஆகியவை பரிவர்த்தனை மூலம்
பரஸ்பரம் வழங்கிப்பெற முடிகிறவைகளல்ல!

மன்னிக்கவும்!
உங்களுடன் வாதம்புரிய என்னால் முடியாது!
ஏனெனில், உங்களுக்குக் கைவந்த அந்தக்
குருட்டுத் தைரியம் என்னிடமில்லை!

மன்னிக்கவும்!
உங்களுடன் போட்டியிட நான் விரும்பவில்லை!
காரணம், என்னால் உங்களை வெற்றிகொள்ள
முடியாது! ஏனெனில், உங்களாலேயே
உங்களை வெற்றிகொள்ள முடியவில்லையே!

மன்னிக்கவும்!
உங்களுடன் உரையாட நான் விரும்பவில்லை!
ஏனெனில், ஓய்வாக இல்லாதவனுடன்
என்னால் உரையாட இயலாது!
உங்களது வேகம் தலைகீழானது
உங்களது வாழ்க்கையைப் போலவே!
ஓய்வாக இருக்கமுடிந்தவன்
ஆசீர்வதிக்கப்பட்டவன் - ஓய்வினால்!

மன்னிக்கவும்!
எனது வேகத்திற்கு உங்களால்
ஈடுகொடுக்க இயலாது!
ஓய்வாக இருப்பவனே அதிவிரைவாகப்
பயணிக்கிறவன்!

மன்னிக்கவும்!
உங்களுடன் உறவாட நான் விரும்பவில்லை!
ஏனெனில், அலைகளைப்போல ஆர்ப்பரிப்பவன்
மேலோட்டமானவன்; அவனுடன்
என்னால் உறவாட இயலாது!
அமைதியாக இருப்பவனே ஆழமானவன்
அவனே தன்னுள் ஆழமாகச் செல்பவன்!

மன்னிக்கவும்!
தன்னுள் ஆழமாகச் சென்றவன், பிறருள்ளும்
அதே ஆழத்தைத் தேடவே செய்வான்!
ஆம், ஆழமற்றவர்களுடன் அவனால்
பழக முடியாது!

மன்னிக்கவும்!
உங்களுடன் நட்புகொள்ள என்னால் இயலாது!
ஏனெனில், என்னிடம் சகிப்புத்தன்மை
சிறிதும் இல்லை!
நீங்கள் எக்கேடு கெட்டாலும்
உங்களை நீங்கள் சகித்துக்கொள்வதுபோல
என்னால் முடிவது சந்தேகமே!
இன்னும், என்னிடம் பொறுமையும்
இல்லை!

மன்னிக்கவும்!
நான் விபத்துக்களைக் கொண்டாடுவதில்லை!
நட்பு, வழித்துணை, உடன்-பயணிப்பவர்
இவை யாவும் விபத்துக்களின் விளைவுகளே!
முன்-பின் தெரியாதவர்களாக இருந்த நாம்
ஏதோவொரு வெட்டுப்புள்ளியில் சந்தித்துக்
கொண்டதால் நட்பு அல்லது
வேறொரு உறவின் பெயரில் பரஸ்பரம் நாம்
ஒருவருக்கொருவர் சுமையாகக் கனக்க
வேண்டுமா என்ன?

மன்னிக்கவும்!
இவ்வுலகில் நமக்குத் தெரிந்தவர்களைவிட
முன்-பின் தெரியாதவர்கள், பரிச்சயமற்றவர்கள் தான்
அதிகத்திலும் அதிகம்!
அவர்களெல்லாம் ஒருவருக்கு எதிரிகளுமல்ல!
நண்பர்களுமல்ல! சுமையுமல்ல, சுகமுமல்ல!

மன்னிக்கவும்!
நமக்குத் தெரிந்தவர்களைவிட, முன்-பின்
தெரியாதவர்கள்தான் இனியவர்கள்!
அவர்களுக்கும் நமக்கும் எவ்வித பிணைப்பும்,
பிணக்கும், முரண்பாடும், சண்டையும், சச்சரவும்
ஏற்பட வாய்ப்பில்லை!
அவர்களுக்கும் நமக்குமிடையே எவ்வித
பொறுப்பும் இல்லை, பொறுப்பின்மையும் இல்லை!
கடமையும் இல்லை, கடமை தவறுதலும் இல்லை!

மன்னிக்கவும்!
உங்களை என்னால் நேசிக்க இயலாது!  
உண்மையை நேசிக்கும் என்னால்
என்னைப் பெரிதாக நேசிக்க முடியாதபோது;
எப்போதும் உங்களைப்பற்றிய எண்ணங்களால்
நிரம்பியிருக்கும் உங்களைவிட
என்னால் உங்களை அதிகமாக நேசிப்பது
என்பது சாத்தியமேயில்லை!

மன்னிக்கவும்!
உங்களைப் போலவேதான் நானும் என்பதாக
நீங்கள் எண்ணுகிறீர்!
உங்களை நீங்கள் கொச்சைப்படுத்திக்
கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை!
ஆனால், நான் உங்களுடன் ஒரே
படகில் இல்லை!

மன்னிக்கவும்!
என்னைப் போலவேதான் நீங்களும் என நம்பி
உங்களிடமிருந்து அதிகம் எதிர் பார்த்தேன்!
அது எவ்வளவு தவறு என்பதை
இப்போது நான் உணர்ந்து விட்டேன்!

மன்னிக்கவும்!
மனிதர்கள் புறத்தோற்றத்தில் மட்டுமே
ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்!
ஆனால், முன்-மாதிரியாக விளங்குபவர்
வெகு சிலரே, அவர்களே மனிதகுலத்தின்
விதி போன்றவர்!
மனிதர்களில் விதி-விலக்கான சிலரும்
இருக்கிறார்கள்!
அவர்களை மன்னித்துவிடலாம்!
ஆனால், அநேகநேகர் (ஏதோ) இருக்கிறார்கள்!
எதற்காக என்று அவர்களுக்கே தெரியாது!

மன்னிக்கவும்!
எனது பேச்சுக்கள் வெறும் புலம்பலாகவும்,
எதிர்மறையாகவும், ஊக்கங்கெடுப்பதாகவும்
தொனிப்பதாக நீங்கள் நினைக்கலாம்!
ஆனால், இது வெள்ளைத்தாளில் கறுப்பு மையால்
தீட்டப்பட்ட ஓவியம் - கருமையைக் கடந்து
ஓவியம் உணர்த்தும் செய்தியைப் பாருங்கள்!
அதே வேளையில், உங்களது களிப்பு,
நேர்மறைத்தன்மை, ஊக்கமிகுபோக்கு ஆகியவற்றினால்
நீங்கள் எட்டிய ஆன்மீக உயரம் எவ்வளவு
என்பதையும் அளந்து பாருங்கள்!

மன்னிக்கவும்!
அச்சாணி இல்லாமல் சக்கரம் சுழலாது!
கிரியா-ஊக்கி இல்லாமல் ரசாயண மாற்றம் நிகழாது!
உங்களால் என்னை நேராகவோ அல்லது
எனக்குத்தெரியாமல் பதுங்கிப் பக்கவாட்டில் சென்றும்
முந்திச்செல்ல முடியாது!
எனக்குத்தெரியாமல், நீங்கள் ஒரு இம்மியளவும்
இடம்பெயர இயலாது!

மன்னிக்கவும்!
ஆகவேதான் சொல்லுகிறேன்:
நீங்களும் நானும் சேர்ந்து பயணிக்க முடியாது!
ஏனெனில், நாம் ஒரே படகில் இல்லை!

     *   *   *
மா.கணேசன்/ நெய்வேலி/ 25-06-2017
----------------------------------------------------------------------------


Sunday, 18 June 2017

'சுய-நேசம்' எனும் விபரீதம்






               வேரற்ற மரத்திற்கு நீர் பாய்ச்சுவது போலவே
               தன்னை ஒருவன் நேசிப்பது வீணே!
                   - மா.கணேசன் / விசார சாரம்.
                        <•>
  "மனிதனைப் பொறுத்தவரை திருப்புமுனையான கேள்வி என்னவென்றால்,
  அவன் அனந்தமான ஒன்றுடனான தொடர்பில் இருக்கிறானா, இல்லையா
  என்பது தான். அதுதான் அவனுடைய வாழ்வின் மிக முக்கியமான கேள்வி
  யாகும்.  உண்மையில் பொருட்படுத்தக்கூடிய அம்சம் அனந்தமே என்பதை
  நாம் அறிந்தால் மட்டுமே நம்மால் பயனற்றவைகளின் மீதான ஆர்வங்களை
  யும், மேலும், உண்மையான முக்கியத்துவம் அற்ற பலவகைப்பட்ட இலக்கு
  களையும் தவிர்க்க இயலும். நம்முடைய திறமை,அழகு ஆகிய பண்புகளை
  நாம் நம் சொந்த உடமைகளாகக் கருதுகிறோம்; அவைகளுக்காக உலகம்
  நம்மை மதிக்கவேண்டும் எனக்கோருகிறோம். எவ்வளவு அதிகமாக ஒருவன்
  போலியான உடமைகள் மீது நாட்டம்கொள்கிறானோ, அவ்வளவிற்கு முக்கிய
  மான அம்சத்தின் மீதான அவனது நாட்டம் குறைந்துபோகும். அதனால்
  அவனது வாழ்க்கை மிகக்குறைவாகவே திருப்தியளிப்பதாயிருக்கும். ஆகவே,
  அவன் தன்னை மட்டுப்பாடானவனாக உணர்கிறான், ஏனெனில், அவனது
  குறிக்கோள்கள் மட்டுப்பாடானவை; விளைவு பொறாமையும்,பொச்செரிப்புமே
  ஆகும். ஆனால், இங்கு இந்த வாழ்க்கையில் ஏற்கனவே அனந்தத்துடன்
  நமக்குத் தொடர்பு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளவும் உணரவும்
  செய்வோமெனில், நம்முடைய ஆசைகளும், மனப்பான்மைகளும் மாறும்."
                    - C.G.யூங்
                       <<•>>

உண்மையில் "தான்"  யார்,  எத்தகைய மெய்ம்மை  என்பதை  அறியாதவன்
வேரற்றவன்!  "தன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி!"  என்று சொல்லப்
பட்டது என்னவோ உண்மைதான்; ஆனால்,அதன் அர்த்தம் 'தன்னை நேசிப்பது'
அல்லது  "சுய-நேசம்" என்பது அன்பிற்கான அடிப்படை அலகு என்பது அல்ல!
மாறாக, "சுய-நேசம்" என்பது அதனளவில் முழுமையானதோ, அல்லது இறுதி
யானதோ அல்ல;  மேலும்,  சுய-நேசம் என்பது பெரிதும் குருடானது,  மட்டுப்
பாடானது  என்பதாலேயே அவ்வாறு சொல்லப்பட்டது! ஆம் சுய-நேசம் என்பது
வெறும் ஒரு தொடக்கம் மட்டுமேயாகும்! தொடங்கவேண்டிய புள்ளியிலிருந்து
ஒருவன்  சிறிதும்  நகராதிருப்பது  தேக்க நிலையாகும்!  தேக்கநிலை என்பது
வெறும்  மட்டுப்பாடு மட்டுமல்ல;  மாறாக, வளர்ச்சிக்கான அனைத்துக் கதவு
களையும் மூடிவிட்ட "சுய-திருப்தி" எனும் கல்லறையாகும்! சுய-நேசம் என்பது
ஏற்கனவே  தனது  இலக்கைத் தொட்டு  ஓய்ந்துவிட்ட  தேக்க நிலையாகும்!
அறியாமையைப் புகலிடமாகக் கொண்டுவிட்ட ஒருவனது சொந்தச்சுயம் தான்
அந்த  இலக்கு!  அதாவது,  ஒருவனது  ஆன்மீக வளர்ச்சி,  அல்லது பயணம்
தொடங்கவேண்டிய புள்ளியே முற்றுப்புள்ளியாகிவிட்ட பரிதாபம்!
                          •
"சுய-நேசம்  என்பது பெரிதும் குருடானது!"  என்று  இங்கு சொல்லப்படுவதன்
அர்த்தம் என்ன?  தனது  மையத்தில்  உண்மையில்  "தான் யார்?"  என்பதை
அறியாத  ஒருவன்  தொடர்ந்து தன்னையே நேசித்துக்கொண்டிருப்பது என்பது
மேன்மேலும்  தன்னுள்ளேயே  சுருங்கிப்போகும் அபாயத்தைக்கொண்டதாகும்!
அன்பின்  தன்மை சுருங்குதல் அல்ல விரிவடைதலே ஆகும்!  விரிந்து பரவி
அனைத்தையும்  தழுவி,  பன்மையை  தன்னுள் கொள்ளும் ஒருமையாதலே
அன்பு ஆகும்!  அதில், 'தான்', 'பிறர்'; 'அகம்', 'புறம்' (அதாவது, 'உலகம்' ) எனும்
பிளவுகள் கிடையாது!
                          •
சுய-நேசம்  என்பது  ஒருவன்  தன்னை,  தனது சுயத்தை  நேசிப்பது  ஆகும்.
ஆனால்,  ஒருவன் தன்னைத்தானே நேசிப்பதற்கான அந்த அலாதியான, மகத்
துவம்  மிக்க அடிப்படை, அல்லது காரணம் என்ன? முதலிடத்தில், ஒருவனது
சுயம் என்பது என்ன? எத்தகைய மெய்ம்மை, அல்லது நிஜம்? ஒருவனது சுயம்
என்பது  ஒருவனுடைய  சொந்த "உடமை" என்பதால் அது இனிமையானதாக
வும்,  நேசிக்கத்தக்கதாகவும் உள்ளது  என்றே வைத்துக்கொண்டாலும், அதன்
தோற்றுவாய், அல்லது மூலம் எது? அது என்ன, தன்னில்தானே சுயம்புவாகத்
தோன்றியதொரு நிஜமா?  அல்லது,  தன்னளவிலே அது முழுமையானதொரு
மெய்ம்மையா?
                          •
முதலிடத்தில், தன்னை, தனது சுயத்தை நேசிப்பது என்றால் என்ன? அதாவது,
சுயம்  என்பது ஒருவனது சொந்த உடமையா?  சுயம் என்பது ஒருவனுடைய
உடமையானால், உடையவன் யார்?  எவ்வாறு, எப்போது ஒரு மனிதன் தனக்
குத்தானே சொந்தமானவனாக ஆனான்?
                          •
சுய-நேசம்  என்பது  சுய-பாதுகாப்பை  இலக்காகக்கொண்டதொரு இயல்பூக்கி
(Instinct)ஆகும்.  இந்த இயல்பூக்கி இல்லாமல், எவ்வொரு உயிர்ஜீவியும்
பூமியின் மீது உயிர்வாழ முடியாது!  சுய-நேசம் என்பது ஒரு ஆற்றல் ஆகும்;
அதை ஒருவன் முறையாக, சரியான இடத்தில் முதலீடு செய்திட வேண்டும்!
சரியான இடம் என்பது,  நிச்சயம் குன்றாத ஆற்றலின் மையமாக, ஆற்றலின்
ஊற்றாக அது இருக்கவேண்டும்! அப்போதுதான் முதலீட்டுக்குரிய பிரதிபலன்
முழுமையாகக் கிடைக்கும்!  எது  ஒருவனை  முழுமையாகக் காப்பாற்றிடக்
கூடுமோ, அதில் தனது நேசத்தை முதலீடு செய்வதுதான் அறிவார்ந்த செயல்
ஆகும்! அத்தகைய ஆற்றலின் ஊற்று எது? அது எங்கிருக்கிறது?
                           •
ஒருவனது  சுய-நேசம்   அவனை  முழுமைப்படுத்தி  நிறைவு செய்யுமெனில்,
முழுமையாகக் கடைத்தேற்றுமெனில்,மரணத்திடமிருந்து அவனைக் காப்பாற்று
மெனில்,  சுய-நேசம் போன்றதொரு பிறவிப்பிணி நீக்கும் அருமருந்து வேறெது
வும்  இருக்கமுடியாது! ஆனால், சுய-நேசம் முடிவில் சுய-வெறுப்பாகவும், சுய-
முக்கியத்துவம்  முடிவில்  தாழ்வுணர்ச்சியாகவும்,  சுய-திருப்தி முடிவில் சுய-
அதிருப்தியாகவும்,    அதாவது   பெரும்   மனக்குறையாகவும்  மாறிவிடுவது
தவிர்க்கவியலாது   நிகழ்ந்துவிடுகிறது!  ஏனெனில்,  ஒருவனது சுயம் என்பது
மெய்ம்மைக்குச்  செல்வதற்கான  நுழைவாயில் தானே தவிர, அதுவே மெய்ம்
மையின் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அல்ல!
                           •
சுய-நேசத்தின் மையம் சுயநலமே ஆகும். தன்னையும் தனது நலன்களையும்
மையப்படுத்தி அவற்றில் முனைப்பாக இருத்தல் என்பதே சுயநலம், அல்லது
தன்னலம்  எனப்படுவது! ஆனால், சுய-நேசத்தின் மையம் சுயநலம் என்றால்,
"சுய-முக்கியத்துவம்", "தற்பெருமை","சுய-திருப்தி" ஆகியவை அதன் ஆரக்கால்
களாகத் திகழ்பவையாகும்!
                           •
ஒருவனது சுய-நேசமானது முழுமையாக இருக்கும் பட்சத்தில் வேறு எவரும்,
எதுவும்  ஒருவனுக்கு முக்கியமாகப் படுவதில்லை! மேலும், சுய-நேசத்துடன்
தற்பெருமையும், அதாவது, தன்னையும், தன்னைச்சார்ந்தவர்களையும் பற்றிப்
பெருமை கொள்ளுதலும்,  உயர்வாக எண்ணுதலும் சேர்ந்து கொள்ளும்போது
சுய-நேசம் விஷமாகிவிடுகிறது!  எலியின் வளை கூட தப்பிச்செல்வதற்குரிய
வகையில் பல கிளைவழிகளைக் கொண்டிருக்கும்!  ஆனால், மனிதனது  சுய-
நேசமானது  ஒரு முட்டுச்சந்து போன்றதாகும்;  அதில் சிக்கிக்கொள்பவனுக்கு
போசனம் கிடைக்கலாம் ஆனால் விமோசனம் கிடைக்காது!
                           •
சுய-நேசம் தானியங்கித்தனமானது அதாவது நனவிலிரீதியானது (Unconscious)
ஒரு  இயல்பூக்கி  என்கிற வகையில்  அது இயற்கையானதும் கூட! ஆனால்,
உணர்வுள்ள மனிதஜீவிகளாகிய நாம் சுய-நேசத்தை மறுக்கத் தேவையில்லை;
மாறாக, அதை மிதமிஞ்சிப்போகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்! ஏனெனில்,
அளவுளடன் கூடிய  சுய-நேசம்  அமிர்தம்  போன்றது;  அளவுக்கு மிஞ்சினால்
சுய-நேசம் சுய-நாசத்திற்கு இட்டுச்சென்றுவிடும்!
                           •

சுயநலமியாக  இருப்பதால் தனக்கு பெரும் ஆதாயம் என்று ஒருவன் எண்ண
லாம்!  ஆனால்,  அந்த ஆதாயங்கள் மிகவும் மேலோட்டமானவை! அப்படியா
னால், இறுதியான ஆதாயம் எது?
                           •
ஆனால், சுயநலத்திற்கு மாற்று பொதுநலம் அல்ல; அதாவது, சுய-நேசத்திற்கு
மாற்று பிறரை நேசித்தல் என்பதல்ல! ஏனெனில், தன்னை நேசித்தல் என்பது
தன்னை உறுதிப்படுத்துவதாக, நிலைநாட்டுவதாக அமைகிறது;  பிறரைநேசித்
தல் என்பது பிறரை உறுதிப்படுத்துவதாக அமைகிறது! அதாவது, சுய-நேசமும்,
பிறர்-நேசமும்  சேர்ந்து பரஸ்பரம் நம் ஒவ்வொருவரையும் உறுதி செய்வதாக
அமையும் என்பதில் சந்தேகமில்லை! இந்த பரஸ்பர நேசம் உயிர்-வாழ்தலுக்கு,
சுமுகமான  சமூக-உறவுகளுக்கு  மட்டுமே உதவிடும்!  அதாவது,  இத்தகைய
மனிதநேயம் (Humanism) தேவையானதே என்றாலும் எவ்வகையிலும் அது
இறுதியானதல்ல!  ஏனெனில்,  அமைதியும்,  வளமும் நிறைந்ததொரு பொது-
வாழ்க்கை  அல்ல  மனிதவாழ்க்கையின்  ஒப்பற்ற  இலக்கு! ஆக, சுய-நேசம்,
பிறர்-நேசம் இவ்விரண்டுமே மட்டுப்பாடானவை; அப்படியானால், எது முக்கிய
மானது எனில்,  "மெய்ம்மை-நேசம்"  மட்டுமே ஆகும்! ஏனெனில்,  மெய்ம்மை,
முழுமையும்  இறுதியுமான  மெய்ம்மை மட்டுமே மனிதனை நிறைவுசெய்து,
முழுமைப்படுத்தி விடுதலை செய்யக்கூடியதாகும்!
                           •
உண்மையில்,  தன்னை  ஒருவன் அவ்வளவு அதிகமாக நேசிக்கிறான் எனில்,
எவ்வாறேனும்  தன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறான் எனில், அவன்
மிகவும்  மேலோட்டமான  தன்னை  நேசிப்பதை விட்டு, தன்னுள் ஆழமாகச்
சென்று (தன் உணர்வில் ஆழ்ந்து) தனது சாரத்தைக் கண்டடைவானாக! தனது
மையத்தில்  "தான்"  உண்மையில்  எத்தகைய  மெய்ம்மை  என்பதை அறிய
பெரு விருப்பம்  கொள்வானாக!   தன்னை நேசிப்பது என்பது பெரிய சாதனை
அல்ல;  தன்-உணர்வற்ற  ஒவ்வொரு  புழுவும்,  பூச்சியும்,  புல்லும், பூண்டும்
அதைத்தானே செய்கின்றது!  தனக்கும்,  இப்பிரபஞ்சத்தி/ற்கும், அனைத்திற்கும்
ஆதாரமான  மூல-காரணமாகவும், முடிவான விளைவாகவும் விளங்கும் அந்த
மெய்ம்மையை நேசித்து அவன் உய்வடைவானாக!

மா.கணேசன்/ நெய்வேலி/ 13-06-2017
----------------------------------------------------------------------------





Wednesday, 14 June 2017

அழகின் ஊற்று!





அழகும் அவலட்சணமும் பரஸ்பர அலட்சியத்துடன்
உடன் வசிக்கும் உலகம் எனக்கு வேண்டாம்!
இரவும் பகலும் ஒன்றையொன்று பின்தொடராத
பூமி வேண்டும்!
நன்மையில் தீமை, தீமையில் நன்மை என
கலப்பில்லாத பிரபஞ்சம் எங்குள்ளது?
அதுவே எனது வீடு!
      -  மா.கணேசன் / 'தலைக்கு மேல் வெள்ளம்'


   எவ்வொரு அழகும் ஓரு மூடிய கதவாகவும், திறந்த கதவாகவும்,
   இரண்டாகவும், வேறு சொற்களில் சொன்னால், ஒரு தடையாகவும்
   அல்லது ஒரு ஊர்தியாகவும் இருக்கிறது எனலாம்: ஒன்று அழகு நம்மை
   கடவுளிடமிருந்து பிரிக்கிறது, ஏனெனில், அது நம் மனத்தில் முற்றிலுமாக
   அதன் பூமி சார்ந்த ஆதாரத்துடன் அடையாளப் படுத்தப்படுகிறது, பிறகு
   அது ஒரு வடிவத்தின் (idol)பாத்திரத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது
   அழகு நம்மை கடவுளுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கிறது, ஏனெனில்
   நாம் அதில் ஆசிர்வாதம் மற்றும் அனந்தத்தின் அதிர்வுகளை உணர்கிறோம்.
   . . . நல்லறம் கடவுளிடமிருந்து துண்டிக்கப்பட்டால் அது ஆணவமாக
   ஆகிறது; அழகு கடவுளிடமிருந்து துண்டிக்கப்பட்டால் அது வெறும்
   வடிவமாக (idol) ஆகிறது; ஆனால், நல்லறம் கடவுளுடன் இணைக்கப்
   படுமெனில் அது அருளுடைமையாகிறது, அழகு கடவுளுடன் இணைக்கப்
   படுமெனில் அது புனிதச்சின்னமாக ஆகிறது.
              -  ஃப்ரிஜ்ஜோஸ் ஷ்க்வான் (Frithjof Schuon)

'அழகு என்பது இருபுறமும் கூர்கொண்ட வாளைப்போன்ற தன்மை கொண்டது!
அழகின் அனுபவம் மனிதர்களை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது, அதாவது
அழகை உணர்வது என்பது ஒரு மனிதனின் நுண்ணுணர்வையும், உள்ளத்தின்
மேன்மையையும், அவனது ஆன்மீக முதிர்ச்சியையும் சார்ந்தது' என ஷ்க்வான்
கூறுகிறார்

அழகு என்பது காணும் பொருட்களில் உள்ளதா,  அல்லது, காண்பவனின் கண்
களில்  உள்ளதா  என்று கேட்டால்  அதற்கு நேரடியான சுலபமான பதிலைச்
சொல்வது கடினம்!  ஏனெனில்,  அழகு காணும் பொருட்களிலும் இருக்கிறது;
ஆனால்,அழகு காண்பவனின் கண்களில் இருக்கிறது என்று சொல்லமுடியாது!
அதே நேரத்தில், அழகைக்காண கண்களும் வேண்டும்! ஏனெனில், கண்களின்
வழியாகத் தான் காட்சிகள் மனத்திற்குள் செல்லுகின்றன.ஏன் அழகு காண்பவ
னின்  கண்களில்  இருக்கிறது என்று சொல்லமுடியாது என்றால்,  ஒருவனது
கண்களுக்கு  அழகெனத் தெரிவது  இன்னொருவனது கண்களுக்கு அழகெனத்
தெரிவதில்லை!  பெரும்பாலான  உயிரினங்களுக்கு  கண்கள்  இருக்கின்றன,
ஆனால்,பன்றிகளும்,சேற்றுத்தவளைகளும் அழகை ரசிப்பதாகத்தெரிவதில்லை!
ஏன்,மனிதர்களில் சிலரும் அழகை ரசிப்பதாகத் தெரிவதில்லை! சிலர் எவ்வித
இசையையும் கேட்பதில்லை!

ஆக, அழகு என்பது, காணும் பொருட்களிலும் இருக்கிறது; மேலும், அழகைக்
காண கண்களும் வேண்டும்; ஆனால்,கண்கள் மட்டும் போதாது; பிரதானமாக,
அழகை அழகென இனம்காணக்கூடிய உணர்வு வேண்டும்! ஆக,அழகு என்பது
காண்பவனின் உணர்வில்தான் உள்ளது!  ஆனால், இதுவே  இறுதியான பதில்
என்று சொல்லிவிடமுடியாது! ஏனெனில்,உணர்வு என்பது ஒருபடித்தானதல்ல!
அதில் பல படிநிலைகள் உள்ளன! மிகத் தாழ்நிலை உணர்விலிருந்து மிக அதி
உயர் நிலை உணர்வு வரை உள்ளன!

அடுத்து, அழகு என்பது மிகத் தற்காலிகமானது, நிலையற்றது! ஒரு மலரானது
மிகவும்  அழகான வடிவத்துடனும், வண்ணங்களுடனும் திகழ்கிறது; ஆனால்,
ஒரு நாள் மட்டுமே நிலைக்கக்கூடியதாயுள்ளது! இந்த பூமியும்,சூரியனும், ஏன்
ஒட்டு  மொத்தப் பிரபஞ்சமும் ஒரு நாள் அழியக்கூடியதே! அதனால்தான் என்
னவோ  இப்பூமி  எவ்வொரு  மனிதனையும் ஒரு நூறு வருடங்களுக்கு மேல்
உயிருடன் வைத்துப்பேணுவதில்லை போலும்!

அடுத்து,  அழகு என்பது மேலோட்டமானது, அது எவ்வகையிலும் இறுதியான
தல்ல! அதாவது, அது எவ்வொரு இறுதியான குறிக்கோளுக்கும் சேவை புரிவ
தாய் இருப்பதில்லை! தாஜ்மகால் மிக அழகான ஒரு கட்டடம்!அதை அன்பின்
சின்னம் என்று சொல்வர்! மிகஆழமான உணர்வின் மிக மேலோட்டமான ஒரு
வெளிப்பாடு!  ஒரு கூட்டு-உழைப்பின் சாதனை!  தாஜ்மகாலை  வடிவமைத்த
கட்டடக் கலைஞனுடைய கற்பனையின் அழகைச் சொல்வதா? பிற கலைஞர்
களின், வினைஞர்களின் நுணுக்கமான கை-வேலைப்பாட்டின் அழகைச் சொல்
வதா? ஒரு குறியீடு என்றவகையில் மட்டுமே அது அழகானது! அதாவது ஒரு
தாஜ்மகாலோ  அல்லது  ஆயிரம்  அழகிய தாஜ்மகால்களோ, அவை அழகின்
ஊற்றை இறைத்துத் தீர்க்கவியலாது! ஏனெனில், அழகான ஒரு பொருளானது
அதனளவிலேயே ஒரு முடிவு அல்ல! அழகு நம்மை முடக்கிப்போடவியலாது!
மாறாக,  அழகானது ஒரு கணமேனும் காலத்தை அகற்றிடச் செய்யுமானால்,
அது தன் பணியைச் செவ்வனே செய்துவிட்டது எனலாம்!

இந்த உலகமும்,  மொத்தப்பிரபஞ்சமும்  நிலையானதல்ல  எனும் பட்சத்தில்,
அதன்  அழகு  எத்தகையதாயிருக்கும்?  ஆனால், மறுக்கமுடியாத வகையில்
அழகு என்பது இருக்கிறது - எதற்காக என்றால்,  அனைத்தையும்  கடந்த ஒரு
இறுதியான நித்திய மெய்ம்மையைச் சுட்டுவதற்காக, நினைவூட்டுவதற்காக!

அடுத்து, அழகு, குறிப்பாக உலகின்,படைப்பின் அழகு என்பது மட்டுப்பாடானது.
அழகு என்பது தன்னைக்கடந்த ஒரு அதீதமெய்ம்மையின் குறியீடு மாத்திரமே!  
ஒரு  மலரின் அழகைக் கண்டு  வியக்காதவன்  உணர்வற்ற  விலங்காவான்!  
அதன் அழகை வழிபடுபவன் உள்ளீடற்றவன்! ஒருமலரைக்கண்டதும் தன்னில்
மலர்பவன் மட்டுமே உண்மை மனிதன்! இப்பூமியிலுள்ள தாவரங்கள், காட்டுச்
செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாமே பூக்கின்றன, மனிதனைத்தவிர!

இயற்கை  அழகானது!  ஆனால்,  இப்பூமியின்  அழகைக் கண்டு,  உணர்ந்து,
ஆனந்திப்பது எது, அல்லது யார்?  இயற்கையால், அழகைக் காண முடியாது!  
ஒரு மலருக்கு அதன் அழகு தெரியாது! ஏனெனில்,  அதற்கு "உணர்வு" கிடை
யாது. உணர்வுள்ள மனித ஜீவியால் தான்  புறத்தேயுள்ள  அழகை  உணர்வு
கொண்டு ஆனந்திக்க முடியும்.  ஆக, அழகைக் கண்டு ஆனந்திக்கும் " மனித-
உணர்வு " அழகிலிருந்து வேறானதாய் இருக்கமுடியுமா?

அழகு புறத்தேயுள்ளதா?  அல்லது காண்பவனின் அகத்தேயுள்ளதா? பிரபஞ்சம்
அழகானதே,  அதிலுள்ள  யாவும்  அழகானவையே!  அழகு எங்கும், எதிலும்
உள்ளது.  எல்லாம்  அழகின் வெவ்வேறு வடிவங்களே, நிலைகளே!  ஆனால்,
"அனைத்து-அழகின்" (All Beauty)உறைவிடம் எங்குள்ளது? அதன் ஊற்றுக்
கண் எது?

பூமி,  இயற்கை,  பிரபஞ்சம்  மொத்தத்தையும்  "இக்கரை" என்ற சொல்லைக்
கொண்டு குறிப்பிடுவோமெனில், புறத்தேயுள்ள அழகு அகத்தின் அடியாழத்தில்
"மறுகரை" யில் உறையும்   "அனைத்து-அழகை"   நினைவூட்டும்  மங்கலான
பிரதிபலிப்பு  மாத்திரமே!  சூரியனின்  ஒளியைப்  பிரதிபலிக்கும்  சந்திரனைப்
போன்றது  "இக்கரை".  ஆம்,  உண்மையில்  அழகு  என்பது  "மறுகரை"யைச்
சேர்ந்தது!  ஆனால்,  "மறுகரை"  என்பது என்ன? அது எங்குள்ளது? "மறுகரை"
என்பது   மனிதனின்  சாரத்திலிருந்து வேறானதல்ல!  அதுவே மனிதனுடைய
உங்களுடைய  உண்மையான  "சுயம்"! "மறுகரை" என்பது உங்களது "ஆன்மா"
வே  தான்! ஆனால், உங்களுடைய ஆன்மா உங்களுக்குள்ளோ, அல்லது, புறத்
தேயுள்ள  உலகிலோ எங்கும் இல்லை!  அதே நேரத்தில்,   உங்கள் அகத்தின்
வழியாகத்தான்  அந்த மறுகரையைச் சென்றடைந்தாக வேண்டும்!  அவ்வாறு
சென்றடைந்திடும் போது,  அதை  உங்களது  ஆன்மா என நீங்கள் அழைத்துக்
கொள்ளலாம்!

ஆக, பூமியைச்சார்ந்த அழகையும், பிறவம்சங்களையும், ஒட்டுமொத்த பிரபஞ்
சத்தையும், தன்னையும், தன் வாழ்க்கையையும், அனைத்தையும் இறுதியான
மெய்ம்மையை அடைவதற்கான பாதையாக, பாலமாகக் கொள்பவனே ஞானி!
மாறாக, அவற்றை அடைவிடமாகக் கொள்பவன் மூடன்!

அழகு என்பது  இயற்கையில் மட்டுமல்லாமல்,  மனிதனின்  படைப்புகளிலும்
உள்ளது! ஓவியம், கலை, இலக்கியம், கவிதை, இசை இவை யாவும் அழகின்
வெவ்வேறு   முகங்களே!   இயற்கையின்   படைப்புகளாகட்டும்,  மனிதனின்
படைப்புகளாகட்டும்,  அனைத்துப் படைப்புகளுக்கும் அடிப்படை படைப்புப்பூர்வ
மான சக்தியே ஆகும்;  அதை  நாம்  "இறைவன்" என்று அழைக்கலாம்!  ஆக,
படைப்புகளிலிருந்து படைத்தவனுக்கு,படைப்பின் ஊற்றுக்குச் செல்வதொன்றே
மனிதனை முழுமைப்படுத்தும்!

உண்மையில்,  ஒட்டு மொத்த பிரபஞ்சமும்,  அதிலுள்ள யாவும்  "இறைவன்"
எனும் படைப்புச்சக்தி தன்னை உட்படுத்திக்கொண்டு உருமாறி எழுந்தவையே!
அப்படைப்புகளில்  உயிர்பெற்று எழுந்தது மட்டுமல்லாமல், உணர்வும் பெற்று
எழுந்த ஒரு படைப்புதான் மனிதன்! படைப்பின் வழியே படைத்தவன் தன்னை
நோக்குவதே படைப்பின் நோக்கம்! கடவுள் தன்னைக்காண்பதற்கான ஒரு ஆடி
(Mirror)தான் படைப்பு!  அதாவது,  படைப்பின்  அழகைக் காணும் மனிதன்
அவ்வழகில் மயங்கி படைப்பினுள் சிறைப்பட்டுவிடாமல், படைப்பின், அழகின்
ஊற்றைச்  சென்றடைந்தாக  வேண்டும்!  ஏனெனில்,   படைப்பின்  சிகரமான
மனிதனின் வழியாகத் தன்னைக்காண்பதே கடவுளின் திட்டம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 06-06-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 6 June 2017

நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்!





   அவர்கள் எதுவாக ஆக விரும்பினார்களோ அதுவாகவே
   இருக்கிறார்கள்!      
                      - இப்னு அராபி



நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள், நீங்கள் விரும்பியவாறே இருக்கிறீர்கள்!
பிறகு ஏன் இந்தப் பொருமல், பெருமூச்சு? உங்கள் போக்கில் வாழ்க்கையை
நீங்கள் அனுபவித்து வாழவில்லையா? அதில், கழுத்துவரை திருப்தியடைய
வில்லையா, என்ன? பிறகு ஏன் இவ்வளவு அதிருப்தியும், விரக்தியும்?

நீங்கள் விதைத்ததை அறுவடை செய்கிறீர்கள்! உங்கள் உழைப்புக்குரிய
பலனுக்கு மேல் நீங்கள் எதிர்பார்ப்பது ஏன்? பிறருடைய நிலைகளைப் பார்த்து
பொறாமைப்படுவதினால், இம்மியளவும் நீங்கள் வளரவோ, உயரவோ முடி
யுமா, சொல்லுங்கள்?

நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்;  அதுதான் உங்கள் பிரச்சினை! அதாவது,
உண்மையிலேயே நீங்கள் நீங்களாக ஆவதற்காகக் கொடுக்கப்பட்ட அனைத்து
அடிப்படைகளையும், கட்டுமானப்பொருட்களையும் பயன்படுத்தி உங்களுக்குச்
சௌகரியமானதொரு அமைப்பில் உங்களை அமைத்துக்கொண்டுவிட்டீர்கள்!

அதாவது மெய்ம்மை உங்களுக்குள் வந்து வாசம்செய்யும்வகையில் உங்களை
அமைக்காதவரை அதிருப்தி, மற்றும் அர்த்தமின்மையையே நீங்கள் அனுபவிப்
பீர்கள்! ஏனெனில், மனிதன் என்பவன் தன்னை நிலைநாட்டுவதற்காகத் தோன்
றியவனல்ல;  மாறாக,  தன் வழியே மெய்ம்மையை நிலை நாட்டுவதற்காகத்
தோன்றியவனாவான்!

தன்னை அறியாத மனிதன் தன்னில் எதைப் பெரிதெனக் கண்டு  நிலைநாட்டு
வான்? உங்களிடம் எத்தகைய மகத்துவமான பண்பை நீங்கள் கண்டு விட்டீர்?
சுயநலம், பொறாமை,  பேராசை, தற்பெருமை, கயமை, சிறுமை, கஞ்சத்தனம்,
போலித்தனம், வஞ்சகம், பாரபட்சம், ஒட்டுண்ணித்தனம், அகங்காரம்,ஆணவம்
இவற்றில் எதை நீங்கள் கொண்டாடுவீர்?  இவை யாவும் எவ்வாறு உங்களுக்
குள் முளைத்தன என வியக்கிறீர்களா?  "உணர்வின்மை" தான் இவை எல்லா
வற்றுக்குமான விளை நிலம்!

அட, உங்களுடைய சுதந்திர-சித்தம் எவற்றைத் தெரிவுசெய்ததோ அவற்றைத்
தானே  உங்களுடைய  உள்ளடக்கங்களாகக்  நீங்கள் கொண்டிருக்கமுடியும்?
நீங்கள் உங்கள் நிலத்தைப் பண்படுத்தி நல் வித்துக்களை விதைக்காமல் கரம்
பாக விட்டுவைத்தால், களைகளும், புல்பூண்டுகளும் தானே மண்டிக்கிடக்கும்!

நீங்கள் விழிப்பாக இல்லாவிட்டால்,  இரண்டு வழிகளில் தீமைகள் உங்களை
வந்தடையும்! நீங்கள் எவற்றையெல்லாம் விரும்பிச் செய்கிறீர்களோ அவ்வழி
யாகவும், எவற்றையெல்லாம் நீங்கள் செய்யத் தவறுகிறீர்களோ அவ்வழியாக
வும்! இவ்விரண்டுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு!

பெரும்பாலான  உங்கள் கவலைகள் அர்த்தமற்றவை! உங்களுடைய உண்மை
யான  சந்தோஷமும்,  நிறைவும்,  உங்கள்  உணர்வு  எட்டும்  தூரத்திலேயே
இருக்க, நீங்களோ சமூகம் கொண்டாடும் டாம்பீகமான மதிப்புக்களைத்துரத்திச்
சென்று அவற்றை அடையமுடியாத நிலையில் தோல்வியில் துவண்டு போய்
துன்பப் படுகிறீர்கள்! உங்களில் சிலர் தோல்வியைத்தாங்க முடியாமல் தம்மை
மாய்த்துக்  கொள்வதுமுண்டு!  அவர்களுக்காக  நாம்  வருத்தப்பட  முடியாது!
ஏனெனில்,  வாழ்க்கையின்  அசலான மதிப்புக்களை விட்டுவிட்டு போலியான
மதிப்புக்களைத் தேடும் போதே நீங்கள் தற்கொலை செய்து கொண்டவர்களாக
ஆகிவிடுகிறீர்கள்! ஆகவே, உங்களுக்காகவும் நான் வருத்தப்படுவதில்லை!

எவரும்  வருத்தப்பட்டு பாரம் சுமக்கத் தேவையில்லை!  விருப்பப்பட்டு பாரம்
சுமப்பவர்களுக்கு என்னிடம் எவ்வொரு நற்செய்தியும் இல்லை! நரகத்திற்கான
பாதை உங்களது விருப்பங்களைக்கொண்டே போடப்படுகிறது! வரங்களை சாப
மாகவும்,  சாபங்களை வரங்களாகவும் மாற்றுவது,  இவ்விரண்டுமே  மனிதர்
களால் சாத்தியமாகக்கூடியதே!  பூமியில் நரகத்தை ஏற்படுத்துவதும், அல்லது,
சொர்க்கத்தைப் படைப்பதும்  உலக மக்கள்  பின்பற்றுகிற  வாழ்க்கை-மதிப்புக்
களைப் பொறுத்ததாகும்!

நீங்கள்  சிறப்பாகவும் வசதியாகவும் வாழவிரும்பி மேற்கொள்ளும் செயல்கள்
உடன்-விளைவுகளாக  பிரச்சினைகளையும்  உருவாக்கி விடுகின்றன!  அவை
உங்களுடைய  மன அமைதியையும்,  நிம்மதியையும் குலைத்துவிடுகின்றன!
நீங்கள் செல்லவேண்டிய ஊர் ஒன்றாகவும்,  சென்று சேர்ந்த ஊர் வேறாகவும்
இருப்பது  குறித்து  நீங்கள் எதுவும் செய்வதில்லை!  ஆனால், பிரச்சினைகள்
தீர்ந்து மன அமைதியையும்,  நிம்மதியையும் திரும்பப்பெற விரும்பும் நீங்கள்
மெய்ம்மை குறித்து சிறிதும் அக்கறை கொள்வதில்லை!  ஆனால், மெய்யூரில்
மட்டுமே கிடைக்கக்கூடிய அம்சங்கள் பொய்யூரில் கிடைக்குமா என்ன?

எப்போதும் உங்கள் நலம், உங்கள் நிம்மதி, உங்கள் சந்தோஷம், உங்கள் சௌ
கரியம், உங்கள் லாபம், உங்கள் வியாதி, உங்கள் பிரச்சினை என உங்கள் இத்
யாதிகள்  மட்டுமே பெரிதென  எண்ணிக்கொண்டிருக்கும்  நீங்கள் மெய்ம்மை
யிலிருந்து  எவ்வளவு தொலைவு  விலகியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத்
தெரியுமா? அல்லது, மெய்ம்மை எதற்குப்பயன்படும் என்று கேட்கிறீர்களா?

நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்,  நீங்கள்  விரும்பியவாறே இருக்கிறீர்கள்
என்பது இருக்கட்டும்!  ஆனால், எந்த அடிப்படையில் நீங்கள் நீங்களாக இருக்
கிறீர்கள்? உங்களுக்கான அடிப்படை, அளவீடு எது? அடுத்து, உங்கள் விருப்பத்
தின்  அடிப்படை எது? உண்மையில்  நீங்கள்  நீங்களாக  இருக்கும்பட்சத்தில்
உங்களுக்கு  விருப்பம்  என்று எதுவும் இருக்கமுடியாது!  உண்மையில், ஒரு
கூழாங்கல்லைவிட நீங்கள் அதிகம் முழுமையாக இருப்பதில்லை! ஏனெனில்,
ஒரு கூழாங்கல்  எவ்வித  விருப்பமும், எதிர்பார்ப்பும்,  வெறுப்பும், எதிர்ப்பும்,
எதுவும்  இல்லாமல்  முழுமையாக, பூரணமாக இருக்கிறது! ஆனால், நீங்கள்
ஒரு கூழாங்கல்லைப் போன்று உயிரற்ற சடம் அல்ல என்கிறீர்களா?  நல்லது,
ஒரு  உயிர்-ஜீவிக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டபிறகும் நீங்கள்
நிறைவடையாதிருப்பது ஏன்? அடிப்படைத் தேவைகள் மட்டுமல்லாமல், அடிப்
படையற்ற  தேவைகளை அடைந்தும் கூட  நீங்கள் நிறைவடைவதில்லையே
ஏன்?  ஏனெனில்,  இன்னும் நீங்கள்  முழுமையாக நீங்களாக இல்லை! ஏதோ
வொன்று குறைகிறது! அது என்ன?

"முழுமை"  என்பது  சிலவற்றை, அல்லது பலவற்றை உங்களுடன் சேர்த்துக்
கொள்வதால் அடையப்படுவதல்ல!  மாறாக, அது  உங்கள் உணர்வில் ஏற்பட
வேண்டிய மாற்றத்தில் அடங்கியுள்ளது! சிலர், "எண்ணம் போல் வாழ்வு" என
வும், "நீங்கள் என்னவாக ஆக எண்ணுகிறீர்களோ அதுவாகவே ஆவீர்" எனவும்
சொல்வர்.  ஆனால்,  விஷயம் அவ்வளவு எளிதானல்ல! தினமும் எண்ணற்ற
எண்ணங்களை நீங்கள் எண்ணுகிறீர்கள்; ஆனால்,  உங்களுள் ஒரு மாற்றமும்
நிகழ்வதில்லை! உங்களில் சிலர், ஒரு ஆன்மீக நூலை வாசித்துமுடித்தவுடன்
ஞானமடைந்து விட்டதாக எண்ணிக்கொள்கிறீர்கள்! இந்த  எண்ணம்  வெறும்
ஒரு பிரமையே தவிர, நிஜமல்ல! ஒரு நூலை வாசித்துப் புரிந்து கொள்ளுதல்
என்பது வேறு;  ஞானமடைதல் என்பது வேறு. ஒரு நூலில் காணப்படும் வாச
கங்களின்  சொற்களுக்கான  அர்த்தத்தை  அறிந்துகொள்ளுதலும், ஞானமடை
தலும் ஒன்றாகாது! ஆன்மீகக் களத்திற்குரிய சொல்லாடல்களையும், வாய்பாடு
போன்ற  ஒருசில கோட்பாடுகளையும்,  சூத்திரங்களையும்  ஒருவர்  தெரிந்து
கொண்டு விபரமறியாதவர்களிடம் சென்று சொற்பொழிவாற்றுவதும், வியாக்கி
யானம் செய்வதும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்! அறிவுச்
சேகரமும், அறிவை வெளிக்காட்டுதலும் ஞானம் அல்ல!

நீங்கள்  நீங்களாகவே இருப்பதில் ஒரு தவறுமில்லை!  ஆனால், நீங்கள் ஒரு
போதும் எண்ணிப்பார்க்காத, எட்ட முயற்சிக்காத உங்களைக்கடந்த உயர்நிலை
கொண்டிருக்கும்  அனுகூலங்கள் மீது ஆசைகொள்வதுதான் சிறிதும் பொருத்த
மற்றது, அடிப்படையற்றது ஆகும்!  நீங்கள்  விரும்பிய  வகையிலான தொரு
நிலையை  உங்களுக்குத் தெரிவுசெய்துகொண்டபிறகு அதனுடைய பலாபலன்
களை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

மனிதஜீவிகளாகிய நமக்கு சுதந்திர-சித்தம் உள்ளது; தேர்வுச்சுதந்திரம் உள்ளது!
ஆகவே நாம் நம் மனம் போன போக்கில் வாழ்கிறோம்,  நாம் விரும்பியவாறு
நம்மையும்,   நம் வாழ்க்கையையும்  அமைத்துக்கொள்கிறோம்!  அதில், நாம்
சின்னச்சின்ன  ஆசைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம்;  சின்னச்சின்ன சுகங்
களை,  சந்தோஷங்களை அடையவும் அனுபவிக்கவும் செய்கிறோம்! ஆனால்,
ஏனோ நாம்  மகிழ்ச்சியாக இருப்பதில்லை!  பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு,
கவலைகளைச்சுமந்துகொண்டு, நிம்மதியற்று அல்லாடுகிறோம்! யாவற்றுக்கும்
மேலாக வாழ்க்கை அர்த்தமற்றதாக, வெறுமையாகக் கனக்கிறது! இந்த அர்த்த
மற்ற வாழ்விலிருந்து தப்பிக்க நம்மில் சிலர் ஆன்மீகத்தை நாடுகிறோம்; ஏதா
வதொரு ஆன்மீக மார்க்கத்தில், ஆசிரமத்தில் சேர்ந்து கொள்கிறோம்!

ஆனால், ஆன்மீகம் என்பது வாழ்க்கையை முறையாக வாழாமல் தவிர்த்தவர்
களுக்கான புகலிடம் அல்ல! மாறாக, வாழ்க்கையை உக்கிரமாகவும், உண்மை
யாகவும்,  முழுமையாகவும்  நேசிப்பவர்கள்  வாழ்க்கைக்கு  அளிக்கும் தங்கு
தடையற்ற  பதிலளிப்பு ஆகும்!  நீங்கள்  உங்கள்  மேலோட்டமான விருப்பங்
களைக்கொண்டு வாழ்க்கையை முற்றிலுமாக ஆக்கிரமிக்காமல்,வாழ்க்கையின்
விருப்பத்திற்கும்  சிறிது இடம் விட்டிருப்பீர்களெனில்,  வாழ்க்கை  உங்களுள்
வினைபுரிந்து உங்களை மாற்றமுறச் செய்து முழுமைப்படுத்திடும்!

வாழ்க்கை  என்பது  உணவு,  உடை,  உறையுள்,  மற்றும்  உறவுகள் எனும்
மேலோட்டமான  விவகாரமோ, அன்றாடச் சுற்றோ;  சொந்த விருப்பு-வெறுப்பு
களினால் கட்டுப்படுத்தப்பட்ட,அல்லது மட்டுப்படுத்தப்பட்ட இயக்கமோ அல்ல!
அல்லது,  அது,  உடல்  எனும்  உணர்வற்ற பிராணிக்கு ஊழியம் செய்வதோ,
அல்லது  எளிதாக   பிரமைகளுக்கு  ஆட்படும்  மனத்தின் புனைவோ அல்ல!
மாறாக,  வாழ்க்கை என்பது  ஒட்டுமொத்தப் பிரபஞ்ச இருப்பின்  உள்ளார்ந்த
விழைவிற்குப்   பதிலளிப்பதும்,   அவ்விழைவை   நிறைவேற்றுவதும் தான்
வாழ்க்கை!

மொத்தத்தில்,வாழ்க்கை உங்களுடைய சொந்த விவகாரமல்ல! வாழ்க்கையில்
உங்களுடைய விருப்பத்தேர்வுக்கும் இடமுள்ளது; ஆனால்,அது மிகக் குறுகிய
எல்லைக்குட்பட்டது! பிரபஞ்சம் எனும் இந்தமாபெரும் பரிசோதனை யாருடை
யது, அல்லது, எத்தகைய மெய்ம்மையினுடையது என்பதைக் கண்டுபிடிப்பது
தான் வாழ்க்கை! உங்களுடைய விருப்பம்,வாழ்க்கையின் விருப்பத்திடமிருந்து
அதிகம் விலகிச்செல்வது "அர்த்தமிழப்பு" எனும் ஆபத்தை உள்ளடக்கியதாகும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 03-06-2017
----------------------------------------------------------------------------

Thursday, 1 June 2017

குதிரைப்பயிற்சியாளனும் சில சண்டிக்குதிரைகளும்!




[ஏன் எல்லோராலும் ஆன்மீகத்தில் முன்னேறமுடிவதில்லை?]

   ஒரு சண்டிக்குதிரை (இன்னொரு சண்டிக்குதிரையிடம்): அட, இந்தப்
   பயிற்சியாளன் என்ன எதற்கெடுத்தாலும் வசை பாடுகிறான், இல்லை
   யென்றால் சாட்டையைச் சொடுக்குகிறான்!


சில ஆன்மீகப் பள்ளிகள், "எல்லா மனிதர்களாலும் ஆன்மீக உயரங்களை எட்ட
முடியாது!"  என்று கூறுகின்றன.  ஆனால்,  இக்கூற்றை  நான்  முற்றிலுமாக
மறுக்கிறேன்! ஏனெனில், எல்லா மனிதர்களாலும் ஆன்மீக உச்சத்தை அடைய
முடியாது என்றால், பலர் மானிடப்பிறப்பு எடுத்ததே வீண் என்றாகிவிடும்!

இவ்விஷயம் குறித்து,  தத்துவ ஞானி பிளாட்டினஸ்(Plotinus)கூறுகையில்,
"எல்லா மனிதர்களுக்கும் உயர் உணர்வுத்தளங்கள் எட்டும்வகையில் இல்லை
என்றாலும், ஆன்மீகம் மற்றும் தத்துவப்பயிற்சி மூலமாக அவற்றை எட்டவிய
லும்; அதாவது புலன்வழி-தரவுகளை விட்டுவிட்டு உள்முகமாகத் திரும்புவதன்
மூலம் உயர்-பேரறிவை அடைய இயலும்" என்கிறார்.

பொதுவாக  ஸென் குருமார்களும்,  குறிப்பாக போதிதருமரும், தம் சீடர்களது
விஷயத்தில் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாகவும், கடுமையான கட்டுப்
பாடுகளைக்  கொண்டு  வழி நடத்தியதாகவும்  சொல்லப்படுவதுண்டு!  இதில்
கவனிக்கப்படவேண்டிய  ஒரு அம்சம் என்னவெனில், மனிதர்கள் எவ்விதமான
கட்டுப்பாடுகளும், கட்டளைகளும், மேலாதிக்கமும், புற அழுத்தமும் இல்லாத
சுதந்திரமான நிலையில்  தாமாகவே  ஆன்மீகத்தை  தேர்வுசெய்வதுமில்லை,
அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதும், தொடர்ந்து அதில் முன்னேறுவதுமில்லை!

அதாவது, "இல்லாத ஊருக்கு"ச் செல்லவேண்டுமென, பெரும் ஏக்கம்கொண்டு
"பாதையற்ற பாதை"யில், பயணிப்பதென்பது பலரைப்பொறுத்தவரை எண்ணிப்
பார்க்கவியலாத, சாத்தியமற்ற விஷயமே! ஆக,மனிதர்கள் எவ்வித கட்டுப்பாடு
களும்,  கட்டளைகளும்,  மேற்பார்வையும்  இல்லாத தமது சுதந்திரமான சூழ்
நிலையில் ஆன்மீகத்தைத் தெரிவுசெய்து, அதில் ஈடுபடுவதில்லை, அதாவது,
தங்களுக்குள்  ஆழமாகச் செல்லுவதில்லை எனும்பட்சத்தில்,  ஒரு குருவின்
மேற்பார்வையும்,  வழிகாட்டுதலும்,  கண்டிப்பு மிக்கதாகவும்,  கட்டுப்பாடுகள்
நிறைந்ததாகவும் அமைவது தவிர்க்கவியலாததாகும்!

குதிரைகள் தாமாக விரும்பி வண்டிஇழுப்பதோ, வேறு பணிகளை மேற்கொள்
வதோ கிடையாது! குதிரைகளைப் பழக்குவது கடினமானசெயல்தான்; ஆனால்
பழக்க முடியும்! அதே நேரத்தில், ஓணான்களையும், அரணைகளையும் பழக்கு
வது,  நெறிப்படுத்துவது  என்பது இயலாத காரியமாகும்!  மனிதர்களில் சிலர்
குதிரைகளைப்போலவும்,  பலர்   ஓணான்களைப் போலவும்  இருக்கின்றனர்!
குதிரைகள் தமது இயல்பான, சுதந்திரமான நிலையை விட்டுவிட்டு எதையும்
புதிதாகக் கற்றுக்கொள்ள முயற்சிப்பதில்லை! ஆகவே, குதிரைகளைப் பயிற்று
விப்பவன்,  அவற்றை  இயல்பான நிலையில் தொடரவிடாமல் கட்டுப்படுத்தி
யும்,உணவைக் குறைத்தும், சாட்டைகொண்டு விலாசியும் பயிற்றுவிக்கிறான்!

மனிதர்கள்  தாமாகவே  தம்முள் உணர்ந்து மேற்கொள்ளவேண்டிய தம் வாழ்
வின் மிகமுக்கியமான கடைத்தேற்றம் அளிக்கும் ஆன்மீகத்தை தம் உணர்வுக்
குறைவால் தவறவிட்டதால், ஒரு குருவின் வழியாகக் கற்றுக்கொள்ள வேண்
டிய நிலையில் அவருடைய கட்டளைகளையும், அவர் விதிக்கும் கட்டுப்பாடு
களையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவது அவசியமாகும்!

குதிரைப்  பயிற்சியாளனைப்  பொறுத்தவரை,  குதிரைகளுக்கென்று  தனியே,
சொந்த விருப்பமோ,   நோக்கமோ,   வாழ்க்கையோ,  இலக்குகளோ  எதுவும்
இருக்கமுடியாது!  அவை  தமது  இயல்பான போக்கில், எந்நேரமும் புற்களை
மேய்ந்துகொண்டிருக்க விரும்பலாம்;அல்லது பெட்டைக்குதிரைகளை விரட்டிக்
கொண்டு செல்லலாம்; அல்லது, காட்டில் சுதந்திரமாக ஓடியாடித்திரிய விரும்
பலாம்! அவ்வாறே,சீடர்களுக்கும் தங்களுக்கென்று தனியே, சொந்தவிருப்பமோ,  
நோக்கமோ,   வாழ்க்கையோ,  இலக்குகளோ  எதுவும் இருக்கமுடியாது!

குதிரைகளைப்பொறுத்தவரை, பயிற்சியாளன் விதிக்கும் கட்டுப்பாடுகள் நியாய
மற்றவைதான்; ஏனெனில், வண்டிகளை இழுத்துச்செல்வதோ, அல்லது வேறு
பல்வேறு  பணிகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவதோ அநீதியானதே!
அப்பணிகளைச் செய்வதன்  வழியே  குதிரைகள்  முக்தியடையப் போவதோ,
ஞானமடையப் போவதோ கிடையாது! ஆனால், மனிதர்களைப்பொறுத்தவரை
ஆன்மீக உச்சத்தை அடைவதொன்றே அவர்களுடைய முக்திக்கான ஒரே வழி
யாகும்!

குதிரைகள், பயிற்சியாளனுடன் முரண்படவோ, வாதம்புரியவோ, தம் உரிமை
களுக்காகப் போராடவோ முடியாது! அவ்வாறே, சீடர்களும் குருவுடன் முரண்
படவோ,  வாதம் புரியவோ,  தம் உரிமைகளுக்காகப்  போராடவோ முடியாது!
அதற்கான  யாதொரு அடிப்படையும், தகுதியும் சீடர்களிடம் கிடையாது! அதா
வது,  சீடர்கள் தமது வழக்கமான சுயத்தின் வாழ்க்கையைத் தொடர்வதற்காக
வும்,  தமது வழக்கமான வழிகளில் செல்வதற்கான சுதந்திரத்தைத் தக்கவைத்
துக்கொள்வதற்காகவும்  உரிமைக்குரல் எழுப்புகிறார்கள்! குருவோ, ஒவ்வொரு
சீடனும்  தன்  உயர்-சுயத்தை  எட்டுவதன் வழியாக மட்டுமே  உண்மையான
சுதந்திரத்தை  அடையமுடியும் என்பதை வலியுறுத்துகிறார்!

குதிரைகளைப் பொறுத்தவரை, அவற்றின் இயல்பு நிலை என்பது ஆசீர்வாதம்
ஆகும்!  ஆனால்,  மனிதர்களைப் பொறுத்தவரை,  அவர்களது இயல்பு நிலை
என்பது சாபம் போன்றதாகும்!  ஏன் மனிதர்கள்  எல்லோராலும் ஆன்மீகத்தில்
முன்னேற முடிவதில்லை என்பதற்கான ஒரே காரணம்,  அவர்கள் அவர்களது
இயல்பான  சுயத்தையும்,  அதன் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டாடிக்
கொண்டு இருப்பதேயாகும்! மனிதனை நாம் ஒரு "பழக்கவழக்கத்தின் பிராணி"
(A Creature of Habit)எனலாம்! மனிதர்கள் தாங்கள் பழகிப்போன வாழ்க்
கையை  வாழ்வதிலேயே  திருப்தியடைந்திடும் பட்சத்தில்,  அல்லது தாங்கள்
விரும்பிய விஷயங்களையும், நிலைகளையும் அடைவதில், மும்முரமாக ஈடு
பட்டிருக்கும் வரையிலும்,ஒருபோதும் அவர்களால் வேறுவகை வாழ்க்கையை
எண்ணிப்பார்க்கவும், மேற்கொள்ளவும் இயலாது!

மொழி வழியாகக்  குதிரைகளுக்குக் கட்டளையிட்டு பழக்கமுடியாது! சாட்டை
யின்  மொழிதான் குதிரைகளுக்குப் புரியும்!  அவ்வாறே, மானுடச் சீடர்களும்;
எத்தனை முறை அவர்களுடைய தாய்மொழியிலேயெ அவர்களுக்குப் போதித்
தாலும் அவர்களால் புரிந்து கொள்ளமுடியாது!  ஆகவே தான் ஸென் குருமார்
கள்   பிரம்பைக் கையில் எடுக்கவேண்டியதாயிற்று!  ஆன்மீகத்தைப் பயிற்று
விக்கும்  குருவானவர்  மொழியையும்,  சொற்களையும் பயன் படுத்தினாலும்,
சொற்களின் வழியே அவர் கடத்தவிரும்புவது சொற்களுக்குரிய அர்த்தங்களை
யல்ல;  மாறாக, அவற்றையும் கடந்து தாம் இருக்கும் உணர்வு நிலையையே
அவர் கடத்த விரும்புகிறார்! ஆனால், சீடர்கள் அவ்வுணர்வு நிலையைப் பற்று
வதைவிட்டுவிட்டு குருவின் சொற்களைப்பற்றிக்கொண்டு அவரதுசொற்களைக்
கொண்டே அவரிடம் வாதம்புரிவது நகைப்புக்குரிய மடமையாகும்!

குதிரைப் பயிற்சியாளன்  குதிரைகளுடன் நண்பனாகவும் பழகிக்கொண்டு, ஒரு
குருவாகவும் போதிக்க முடியாது! ஏனெனில், மனிதர்கள் தங்களுக்குச் சமமான
சகமனிதர்களிடமிருந்து   ஆன்மீகத்தைக் கற்றுக் கொள்ளமுடியாது! ஆம், ஒரு
குதிரை இன்னொரு குதிரையைப் பழக்கமுடியாது! குதிரைகளுக்குப் பயிற்சியா
ளன்  அவசியம் தேவை! அவ்வாறே, மனிதர்களுக்கும் குரு என்பவர் அவசியம்
தேவை! குரு என்பவர் சீடர்களுடன் ஒரே படகில் இல்லை! சொல்லப்போனால்
அவர் எந்தப்படகிலும் இல்லை;  சீடர்களை அவர் நடுக்கடலில் குதிக்கச் சொல்
கிறார்;  ஏனெனில்  அவர் ஏற்கனவே நடுக்கடலில் தான் நிற்கிறார்; அவருக்குத்
தெரிந்த, ஆனால்,  நீங்கள் நம்பவிரும்பாத ரகசியம் நீங்கள் பயணிக்கும் கப்பல்
ஓட்டை என்பதுதான்!

ஆன்மீக சாதகர்கள் சிலர்,  தாங்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்
வதாகக் கூறுகிறார்கள்;  அதில்  அவர்கள்  திருப்தியடையவும் செய்கிறார்கள்!
ஆனால்,  அவர்களது  உழைப்புக்கேற்ற பலன்கள் தான் கிடைப்பதில்லை என
அங்கலாய்த்துக் கொள்கின்றனர்!  இதுதான்  அவர்களிடம்  உள்ள முரண்பாடு!
ஆன்மீகம் என்பது அவர்களது பிறப்புரிமை எனக் கருதுகின்றனர்; ஆனால் அது
தவறு. மாறாக, ஆன்மீகம் என்பது "விழிப்பு" எனும் கடமையாகும்!

சிலர்  ஆர்வத்துடன் ஆன்மீகத்தில் ஈடுபடுவதாகவும், ஆனால், போதிய நேரம்
தான்  கிடைப்பதில்லை என்று பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்கள்!  சிலர்,
தாம் மேற்கொள்ளும் எவ்வொரு சிறு முயற்சியையும்,  (உதாரணத்திற்கு ஒரு
ஆன்மீக நூலைப் பிரித்து அதில் சில பக்கங்களை வாசித்ததை) பெரிய விஷய
மாகக் கருதுகிறார்கள்! இவர்களது தற்பெருமைக்கு எல்லைகளே கிடையாது!

உண்மையில், தீவிர ஆன்மீக ஈடுபாடு மன-நோய்களிலிருந்து ஒருவரை விடு
விக்கும்  தன்மை கொண்டது என்பது பலருக்குத் தெரியாது!  ஆனால்,  சிலர்,
தாங்கள் எவ்வாறிருக்கிறோம், என்னசெய்கிறோம் என்பதே தெரியாமல் உணர்
வற்று இயங்குகின்றனர்; ஆனால்,வெகுஎளிதாக இவர்கள் பிறருக்கு அறிவுரை
கூறவும், போதிக்கவும் தொடங்கிவிடுகின்றனர்! பொதுவாக, ஆன்மீக சாதகர்கள்
ஆன்மீகத்திற்குள் நுழைவதற்கு முன்னர், மிகப்பரவலான ஒருவகை மனநோய்
கொண்டவர்களாக இருக்கின்றனர்!  ஆன்மீகத்தில் ஈடுபட்டவுடன் வேறு வகை
மன-நோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்!

அகந்தை-உணர்வு  என்பது  மனிதஜீவிகள்  மட்டுமே  பெற்றுள்ள அரிய வரம்
ஆகும்! ஆனால், அகந்தை-உணர்விலேயே தரித்திருப்பது,  தேங்கி நிற்பது என்
பது மன-நோய்க்கு ஒப்பானதாகும்! நம்மில் பலர், மன-நோய் என்பது பைத்திய
நிலை  என்பதாக மட்டுமே அறிகின்றனர்.  ஆனால், பொறாமை, தற்பெருமை,
சுய நலம், பேராசை, சுய-முக்கியத்துவம், போலித்தனம், ஆகியவைகளும் மன
நோய்களே பைத்திய நிலைகளேயாகும்! எவையெல்லாம் மனிதர்களை உணர்
வில் வளரவிடாமல், மட்டுப்படுத்துகின்றனவோ அவையெல்லாம் மன-நோய்க்
கான  வித்துக்களே!  மேலும்,  பொறாமை, தற்பெருமை,  சுயநலம், பேராசை
இவை தனித்தனி அம்சங்கள் அல்ல; மாறாக, இவையாவும் ஒன்றோடு ஒன்று

தொடர்புடையவையாகும்! இவற்றில் ஒன்று ஒருவனிடத்தில் இருக்குமானால்,
மற்ற அம்சங்களும் உடன் இருக்கவே செய்யும்!

ஆன்மீகம் என்பதை எளிதாக விளக்கவேண்டுமென்றால்,"சுய- நிர்வாகம்", அதா
வது தன்னைத்தானே நிர்வாகம் செய்துகொள்வதுதான் ஆன்மீகம் என்று சொல்
லலாம்! தங்களை முறையாக நிர்வாகம் செய்ய இயலாதவர்களால் ஆன்மீகத்
தில் முன்னேறமுடியாது! உண்மையான ஆன்மீகம் என்பது ஒருவன் தன்னை
எவ்வாறு அணுகுகிறான், அறிகிறான் ஆராய்கிறான், என்பதிலிருந்து தொடங்கு
கிறது! 'சுய-நிர்வாகம்' என்பது, ஒருவன் தன்சுயத்தை நிர்வகிப்பதாகும்! ஆனால்,
அகந்தையை  மையமாகக் கொண்ட  சுயத்தால்  எவ்வாறு  தன்னைத் தானே
நிர்வகிக்க இயலும்?  இயலும், ஆம்,  அகந்தையை மிகச்சுலபமாகக் கடப்பதற்
கான ஒரே வழி, அகந்தைக்கு தன்னைக் கண்டுபிடிக்கும் பணியை வழங்குவது,
அதாவது,  மனிதன்  தன்னை மையமாகக் கொண்டு  தனக்குப்  புறத்தேயுள்ள
அனைத்தையும் காண்கிறான், ஆராய்கிறான், மதிப்பிடுகிறான்; ஆனால், அவன்
ஒருபோதும் தன்னைக் காண்பதேயில்லை! தான் உண்மையில் யார்? என்பதை
அறிவதேயில்லை!

எப்போது ஒரு மனிதன் உண்மையிலேயே தன்னைக்காண்கிறானோ, அப்போது
பிறவனைத்தும்,  உலகம், உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும் முக்கியத்துவ
மற்றவை  என்கிற  உண்மை புரியத் தொடங்கும்!  மனிதன் தன்னையறியாத
போது   தன்னை  மையமாகக்  கொண்டிருந்ததற்கும்,  தன்னையறிந்த  பிறகு
தன்னை  மையமாகக் காண்பதற்கும் வித்தியாசம் உள்ளது! அதாவது தன்னை
அறிந்த  பிறகுதான் அவன் உண்மையில் மையம் உள்ளவனாகத் திகழ்கிறான்!
அதாவது, மனிதனின் அகந்தை அல்ல உலகின், அனைத்தின் மையம்! மாறாக,
மனிதனின் அகந்தை-உணர்வைக் கடந்த ஒரு பேருணர்வுதான் அசல் மையம்!
அம் மையத்தை அடைவதற்கான ஒரு தற்காலிக மையம் தான் மனிதன்; இது
தான் மனிதனின் உண்மையான முக்கியத்துவம் ஆகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 30.05.2017
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...