Saturday, 26 March 2016

அன்பு : மகத்தானதொரு இன்மை !



    'அன்பு'  எனும்  சொல்லே அது  சுட்டுகின்ற
     மெய்ம்மைக்கான  வித்து  அல்ல !

இணக்கமான உறவுகளுக்கான பாலம் அல்ல அன்பு ! இன்னும்
இரண்டு பேர்களுக்கிடையே பிரச்சினைகள், முரண்பாடுகள்
பிணக்குகள்,  சண்டை சச்சரவுகள் தோன்றிடும் போது
அவ்விருவருக்கிடையே விட்டுக்கொடுக்கும்மனப்பாங்கு இல்லை,
புரிதல் இல்லை, அன்பு இல்லை, அது இல்லை, இது இல்லை,இன்னும்
என்னென்னமோவெல்லாம் இல்லை என்றெல்லாம் சொல்கிறோம்,
அக்கறையுடன் கவலைப்படுகிறோம்.

ஆனால், இப்படி  யோசித்துப் பார்ப்போம் : திடீரென சமூகத்தில்,
உலகில், குடும்பத்திற்குள், குடும்பங்களுக்கிடையில், ஆணுக்கும்
பெண்ணுக்கும் இடையில், நண்பர்களுக்கிடையில், எதிரிகளுக்
கிடையில், . .  யாதொரு பிணக்கும் இல்லை, முரண்பாடும் இல்லை,
சண்டை சச்சரவும் இல்லை என்பதான நிலைமை நிலவுவதாக (!)
வைத்துக்கொள்வோம்; எங்கும் அன்பு, அமைதி, ஆனந்தமே
நிலவுகிறது (!) அப்போது சமுதாயம், உலகம், வாழ்க்கை எப்படிப்
பட்டதாயிருக்கும் ? ஆம், பூமியே சொர்க்கமாக,பொன்னுலகமாகத்
திகழும் !

இப்படியெல்லாம் நாம் கனவு காணலாம், கதைகள் எழுதலாம்,
கவிதைகள் புனையலாம். ' இப்படி ஒரு பொன்னுலகம் சாத்தியம்
தானா, இல்லையா?' என பட்டிமன்றம் நடத்தலாம் ! ஆனால்,
இத்தகைய உலகம் சாத்தியம்தான் என்றால் அது ஏன் தற்போது
நிஜமாக இல்லை? அல்லது அது எப்போது சாத்தியமாகும்? அதற்கு
எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? அது வரை நாம் எவ்வாறு
வாழ்வது?

உண்மையில் 'எதுவும் சாத்தியமே' என்பதான உலகில் தான் நாம்
வாழ்கிறோம்! ஆனால், இன்று இப்பொழுது சாத்தியமில்லாத
'பொன்னுலகம்' எப்பொழுதுமே சாத்தியமாகாது! ஏனெனில்,
மனிதர்களுடைய, நம்முடைய வாழ்க்கைப்பார்வை அப்படி!
நம்முடைய இலட்சியங்கள், இலக்குகள், மதிப்புகள், ஆசைகள்,
தெரிவுகள் அப்படி!  நம்முடைய உணர்வின் தன்மை அல்லது
உணர்வின்மையின் தன்மை அப்படி!  'எதுவும் சாத்தியமே!' எனும்
ஒரு அற்புதமான உலகில், நாம் தெரிவு செய்திட்ட சாத்தியப்பாடு
இத்தகையது! அதன் தவிர்க்கவியலாத தாறுமாறான விளைவுகளை
நாம் அனுபவித்து வாழ்ந்துதான் தீர்த்தாக வேண்டும்!

இரண்டு மனிதர்களுக்கிடையே இணக்கம் இல்லை, விட்டுக்
கொடுக்கும் மனப்பக்குவம் இல்லை, புரிதல் இல்லை, அன்பு இல்லை,
இது இல்லை,  அது இல்லை  என்றால் இருவரில் யார் விட்டுக்
கொடுப்பது? யார் முதலில் புரிந்து கொள்வது? யார் யார் மீது அன்பு
செலுத்த வேண்டும்? . . . . இவ்வாறு  இரண்டு மனிதர்கள் பரஸ்பரம்
ஒருவரிடம் இன்னொருவர் கேள்விகள் கேட்டுக்கொண்டும், வாதம்
புரிந்து கொண்டும் இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது!

'புரிதல்'  என்பது பரஸ்பரம் ஒருவர் இன்னொருவரைப் புரிந்து
கொள்வதா? அல்லது ஒவ்வொருவரும் தன்னைத்தானே புரிந்து
கொள்வதா?  'அன்பு' என்பது இருவருக்கிடையே பாலம் போல
எழுப்பப்படவேண்டிய ஒன்றா?அல்லது ஆக்சிஜன் (பிராணவாயு)
போல ஒவ்வொருவரும் அன்பைச் சுவாசித்தாக வேண்டுமா?

முதலிடத்தில், 'அன்பு'  என்பது இருக்கிறதா, இல்லையா? என்று
கேட்டால் அக்கேள்வி 'கடவுள்' இருக்கிறாரா,இல்லையா? என்பதை
ஒத்ததாகும்!

உண்மையில் நம்மிடமும், நம்மைச்சுற்றிலும் காணப்படுவது வெறும்
'உணர்ச்சிக் கனிவும்', பாசமும், பல்வேறு உணர்ச்சிவயப்பட்ட
தன்மைகளும் தானே தவிர அன்பு அல்ல! நம்மிடமுள்ள அன்பை
"கோழிப்பாசம்" என்று தான் குறிப்பிட வேண்டும்!  ஒரு பெட்டைக்
கோழி தனது குஞ்சுகளை பருந்திடமிருந்தும், நாய், பூனை
யிடமிருந்தும் போராடிப் பாதுகாப்பதைப் போன்றதே, "அன்பு" என்று
நாம் குறிப்பிடும் நம் 'மனிதப்பாச'மும் ! இப்பாசம் மிகவும் இயல்பானது, ,
இயற்கையானது இது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான
உயிர்-பிழைத்திருத்தல் எனும் கோளத்திற்கு உரிய அடிப்படையான
இயல்பூக்கி ஆகும். சொல்லப்போனால்,  'பாலுணர்வு'  இயல்பூக்கியின்
ஒரு நீட்சி தான் கோழியின் பாசமும், இன்னும் மனிதனின் பாசமும் !
இது ஒரு ஜீவி தன்னைத்தானேகாத்துக்கொள்ளுகிற  விஷயத்திலிருந்து
தொடங்குகிறது. இதை நாம்  "சுய-பாதுகாப்பு" இயல்பூக்கி
என்றழைக்கலாம். இந்த சுய-பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு
வெளிப்படுவதுதான் "சுய-பாசம்" ! சற்று உயர்-வளர்ச்சியடைந்த எல்லா
உயிரினங்களிடமும் இந்த இயல்பூக்கியின் வெளிப்பாடு, அதாவது
சுய-பாசம் சுலபமாகப்புலப்படும். சுய-பாசத்தின் ஒரு நீட்சி தான்
ஒரு ஜீவி தன் குஞ்சுகளின், குட்டிகளின் மீது கொள்கின்ற பாசமாகும்.
மனிதப்பாசமும் இவ்வகையைச் சேர்ந்ததே!

கோழிப்பாசம் ஏன் 'அன்பு' அல்ல என்றால், கோழிக்கு 'தன்னறிவு'ம்
(தன்னைப்பற்றிய அறிவும்),  இல்லை.  அதற்கு  'சுய-உணர்வு'ம்
("தாம் இருக்கிறோம்!" என்ற உணர்வும்) இல்லை என்பதால் தான்
கோழியின் பாசம் அன்பாகாது ! பல சமயங்களில், சில விலங்குகள்
தங்களது குட்டிகளின் மீது காட்டுகின்ற அதே பாசத்தை வேறு ஒரு
இனத்தின் குட்டிகளின் மீதும் காட்டிடக்கூடும்.  அதைப்பார்த்து நாம்
வியந்து போகிறோம்! ஒரு வேளை, நம்மிடம்  நம்மினத்தின் மீதே
அத்தகைய பாசம் இல்லை என்பதால் இருக்கலாம்! காகத்திற்கு
தன்னுடைய முட்டைக்கும் குயிலின் முட்டைக்கும் வித்தியாசம்
தெரியாமல் அடைகாத்து காகக்குஞ்சுகளுடன் சேர்த்து குயிலின்
குஞ்சையும் உணவு ஊட்டி வளர்க்கிறது! ஆனால், மனிதர்களிடம்
பிரித்தறியும் திறன் அமோகமாக வளர்ந்துள்ளதால் மிக சாதுர்யமாக
அடுத்த வீட்டுக் குழந்தைகளை அவர்களது வீட்டிற்கு அனுப்பிவிட்டு
நம் குழந்தைகளை வீட்டிற்குள்ளே அழைத்து வந்து உணவு
ஊட்டுவோம் !

மனிதர்கள் 'சுய- நலம்' மிக்கவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள்
தம் குழந்தைகளை, குடும்பத்தினரை மட்டுமே நேசிக்கிறார்கள்! அந்த
நேசத்தை அவர்கள் இன்னும் சற்று அதிகப்படுத்தி, விரிவுபடுத்தி பிற
சக மனிதர்களையும் எல்லோரையும் நேசிப்பார்களெனில் சமூகம், தேசம்,
உலகம் எல்லாம் ஆனந்தத்தில் திளைக்கும் என்று எண்ணுவது
சிறு பிள்ளைத்தனமானது! ஏனெனில், கோழிப்பாசத்தையொத்த
மனிதப்பாசத்தில் குறைவாக நேசிப்பது, கூடுதலாக நேசிப்பது
என்பதெதுவும் கிடையாது. முக்கியமாக, இயற்கையான இயல்பூக்கி
களின் வெளிப்பாடான விலங்குப்பாசத்தில் , 'சுய-நலமே' பிரதானமானதும்
இறுதியானதும் ஆகும்! இயல்பூக்கிகள் யாவும் உணர்வற்ற
மையங்களிலிருந்து தானியங்கி எந்திரம் போலச் செயல்படுபவை
என்பதால், மட்டுப்பாடு என்பது உள்-அமைந்த ஒன்றாகும்! மனிதர்கள்
தங்களது உணர்வுக்கு விழிக்காமல், உணர்வுக்கு வராமல் அவர்களால்
அவர்களது சொந்த-சுயங்களைக் கடப்பது என்பது ஒருபோதும் முடியாது!
மேலும், உணர்வற்ற-தன்மையும், அன்பும் சேர்ந்து செல்லாது !

கோழிக்கு தன்னறிவு கிடையாது.  மேலும்  அன்பும், அறியாமையும்  சேர்ந்து
செல்லாது ! ஆகவே கோழிப்பாசம் அன்புஆகாது  எனக்கண்டோம்.
அது போல மனிதனும் தன்னறிவு பெறாதவரையிலும் மனிதனது
பாசமும் அன்பாகாது !

இதன் அர்த்தம், கோழிப்பாசம் அல்லது மனிதப்பாசம் என்பது
தேவையற்றது, பயனற்றது என்று பொருளல்ல! ஏனெனில், நம்
அனைத்து உறவுகளுக்கும் , உறவுச்சிக்கல்களுக்கும் அடிப்படையாக
அமைந்திருப்பது இந்தக் கோழிப்பாசம் தான்! இது தான் அதன்
மட்டுப்பாடு! அதேபோல , உறவுகளும் தேவையானவையே,
பயனுள்ளவையே ! ஆனால், பாசமும் சரி, உறவுகளும் சரி எதுவும்
இறுதியானவையல்ல. இவை யாவும் உயிர்-வாழ்தலின் கோளத்திற்கு
உரியவை மட்டுமே. உயிர்-வாழ்தலைக் கடந்த உண்மையான
வாழ்தலுக்கு மெய்ம்மையுடனான உறவு மட்டுமே முக்கியமானது !
அதுவே  இறுதியானது ! முழுமையானது !

மிகத்துல்லியமாக அன்பு, அறம், தன்னையறிதல். அர்த்தம் தேடல்,
உண்மையுணர்தல், விழிப்படைதல், உணர்வுக்கு வருதல், மெய்ம்மை
நாட்டம்   இவை யாவும்  உயிர்-பிழைத்திருத்தலின் கோளத்தையோ,
மனித-உடலின் இயல்பூக்கிகளின் கோளத்தையோ சேர்ந்தவையல்ல.
இவை  'உயிர்-பிழைத்தலைக்' கடந்த அசலான மனித வாழ்தலைச்
சேர்ந்தவையாகும்.

நச்சரிப்பான இயல்பூக்கிகளின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை
விடுவித்துக்கொள்கிற,  உணர்வுக்கு வந்த , அல்லது உணர்வுக்கு
விழித்த தனிமனிதர்கள் மட்டுமே அசலான மனித வாழ்க்கையின்
கோளத்திற்குள் பிரவேசிப்பவர்களாக எழுகிறார்கள்! ஆம், உணர்வு
(பிரக்ஞை)எனும் கதவின் வழியாக மட்டுமே அன்பின் மாளிகைக்குள்
பிரவேசிக்க இயலும். அவ்வாறு பிரவேசிப்பவர்கள் வெகு சிலரே 1

நிபந்தனைகள்  ஏதுமின்றி உணர்வின் கதவுகளை தன்னுள் அகலத்
திறந்து வைத்திருப்பவனுள் அன்பு வாசம் செய்கிறது! அம்மனிதன்
வழியே அது சமூகத்திற்குள்ளும் கசிகிறது ! ஆனால் அந்த அன்பின்
மீது  அவனுக்கு  யாதொரு  ஆளுமையும்,  கட்டுப்படுத்துதலும்
கிடையாது. அன்பு எவரது கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்குவதோ,
உட்படுவதோ கிடையாது. அன்பு கையாளக்கூடியதும், உடமையாக
ஆக்கிக்கொள்ளக்கூடியதுமான விஷயம் அல்ல. ஏனெனில், அது ஒரு
உணர்ச்சியோ, பொருளோ அல்ல. அன்பை வரவேற்கவோ, தங்குமாறு
செய்யவோ முடியாது !

உணர்வின் கதவுகள் அகலத்திறந்திருக்கும் போது(மட்டுமே) அன்பு
வாசம் செய்யும். உணர்வின் கதவுகளை அகலத்திறப்பது என்பது
அதேசமயத்தில் அனைத்து உலக-விஷயங்களுக்கும் கதவுகளைச்
சாத்தி மூடுதல் என்பதை உள்ளடக்கியதாகும்!

இவ்வாறு,  உணர்வின்  கதவுகளை  அகலத்திறப்பது என்பது
உணர்வார்ந்த செயலாகும். ஆனால் அது அகந்தையின்
(தன்முனைப்பின்) உணர்வின்றி( மேற்பார்வையின்றி) செய்யப்
படவேண்டும்!

அன்பு என்பது ஒரு மகத்தான "இன்மை" யாகும். கடவுளைப்போல
அதன் 'இன்மை' அல்லது 'இல்லாமை'தான் அதை அதிமுக்கியத்துவம்
வாய்ந்ததாக ஆக்குகின்றது. "அன்பே கடவுள்", "அன்பேசிவம்" போன்ற
வாசகங்கள் வெற்று வாசகங்கள் அல்ல. அவை ஒரு மாபெரும்
உண்மையை ஆரவாரமின்றி வெகு சாதாரணமாகச் சொல்லிவிடுகின்றன!
கடவுள் தான் பிரபஞ்சப்படைப்பின் மூலமுதல் காரணம் என்பதாகவே
இருந்தாலும் கடவுளின் மூலப்பண்பு அன்பே ஆகும். அன்பின்
நிலை-மாற்றம் தான் இப்பிரபஞ்சம். அன்பு தான் உலகமாக,பிரபஞ்சமாக
மாறியுள்ளது. அன்பின் இந்த நிலை-மாற்றம் ஒரு முழுமையான
"தியாகம்" ஆகும்.

அன்பெனும் மூல மெய்ம்மை தன்னை முற்றிலுமாக இழந்து வேறொன்றாக
(உலகமாக) மாறிய பிறகு அன்பு என்பது அதனுடைய அசலான நிலையில்,
தன்மையில் இருக்க முடியாது. ஆகவேதான், அன்பு என்பது ஒரு மகத்தான
இல்லாமை என இங்கு குறிப்பிடப்படுகிறது. ஆனால், அன்பின் இல்லாமை
ஒரு பிரச்சினையோ, அல்லது இழப்போ அல்ல!   மாறாக, அன்பு தான்
படைக்கப்பட்ட இப்பிரபஞ்சத்தின், மற்றும் பிரபஞ்சத்தின் பிரதான
பிரதிநிதியான மனிதனின் ஒரே இலக்கு ஆகும். ஏனெனில் அன்பு தான்
மூலம் ஆகும். பிற யாவும், சக்தி, ஆற்றல், பொருண்மை, காலம், வெளி,
நிறை . . . .போன்றவை அன்பிலிருந்து பெறுவிக்கப்பட்டவையே,
தருவிக்கப்பட்டவையே!

விஞ்ஞானிகள் பொருண்மையான சக்தி அல்லது ஆற்றலையே
பிரபஞ்சத்தின் மூலம் எனக் காண்கிறார்கள் !  பொருள்முதல் வாதிகள்
பிரபஞ்சத்தின் ஒருமையானது அதனுடைய 'பொருண்மையில்'
(சடத்தன்மையில்)  அடங்கியுள்ளதெனக் காண்கின்றனர்.  இறை-
நம்பிக்கையாளர்கள் அனைத்தின் மூலகாரணம் 'கடவுள்'  என்று
ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடுகின்றனர். அவர்களிடம் விளக்கம்
இல்லை. விஞ்ஞானிகளிடம் நெடிய விளக்கம் உள்ளது. ஆனால்,
அவர்களது விளக்கங்கள் யாவும் முடிவில் "எல்லாம் அணுத்துகள்களின்
விளையாட்டே !", "சடப்பொருளே பிரம்மம்"  என்று சுருக்கி விடுகின்றனர்!
இவர்களது "சுருக்கல்-வாதம்" பரிணாமப்பார்வைக்கு முரணானதும்,
பரிணாமத்தைக் கொச்சைப்படுத்துவதுமாகும்!

மூலமெய்ம்மையான அன்பிற்கும் மனிதப்பாசத்திற்கும் ஏதேனும்
ஒற்றுமை, தொடர்பு, பொருத்தப்பாடு உள்ளதா? அறவே இல்லை என்று
சொல்லிவிட முடியாது. ஏனெனில், மனிதன் தன்னை உணராதிருந்தாலும்
அவன் உணர்வைக்கொண்டுள்ளவனாக இருக்கிறான். உணர்வு தான்
அன்பின் வித்து. உணர்வைக்கொண்டுள்ளவன் என்கிற நிலையிலிருந்து
உணர்வாக மேலெழுவது ஒவ்வொரு மனிதனுக்குமான சவால் ஆகும் !
தான் ஒரு உடலோ, மனமோ அல்ல;  தான் ஒரு உணர்வே என்கிற
உண்மைக்கு ஒவ்வொரு மனிதனும் விழித்தாக வேண்டும். பிறகு
உணர்வுப் பரிணாமத்தின் உச்சத்தை அவன் அடையும் போது பூரண
அன்பாக மலர்வான்! அதுவரையிலும் அவனது பாசம் அன்பாகாது.
இன்னும் அது கோழிப்பாசத்தை விட மேலானதோ, இறுதியானதோ
அல்ல !

நதியின் இலக்கு, முடிவு, முழுமை, அர்த்தம், நிறைவு . . . .யாவும் அது
சமுத்திரத்துடன்  சங்கமிப்பதில் மட்டுமே அடங்கியுள்ளது. நதிக்கும்,
சமுத்திரத்திற்கும் உள்ள அதே ஒற்றுமையும், தொடர்பும், பொருத்தப்
பாடும், வித்தியாசமும் தான் மனிதப்பாசத்திற்கும், ஆழமான அன்பிற்கும்
ஆனதுமாகும்

மனித உணர்வு என்பது ஒரு நதியைப் போன்றது.  நதியானது
இடைவழிகளில்  எதனாலும் தடுக்கப்படவில்லை, தேக்கப்படவில்லை
என்றால் அது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைவது உறுதி.
உணர்வும் அவ்வாறே இடைவழிகளில் யாதொரு பொருளைக்கொண்டும்,
உறவைக்கொண்டும், கற்பனை அல்லது கோட்பாட்டைக் கொண்டும்
கட்டப்படவில்லை; எதனுடனும் பிணைக்கப்படவில்லை எனில் மனித
உணர்வானது  "முழு-உணர்வு" எனும் பேருணர்வு நிலையைச் சென்றடைந்து
தனது முழுமையைத் தழுவிக்கொள்ளும் !

உறவுகள், அனைத்து உறவுகளும் மட்டுப்பாடானவையே, மேலோட்ட
மானவையே. எந்த உறவும் இறுதியானதல்ல. ஆகவே எந்த உறவும் ஒரு
திறந்த வாசலாக  அமையவேண்டுமேதவிர மூடிய அறையாக,
கல்லறையாக அமைதல் கூடாது !   உறவுகள் யாவும் மிகத் தற்காலிகமான
மனிதவாழ்வில் இடம்பெறுகிற மிகத் தற்காலிகமான பிணைப்புக்களே !

அசலான வாழ்விற்கான ஒரு அடிப்படையாக அமைந்துள்ள
உயிர்-வாழ்தலின் கோளத்திற்கு மட்டுமே உரியவை உறவுகள்! ஆகவே
உறவுகள் அனைத்தும் அசலான வாழ்க்கைக்கு உதவுகிற , சேவை புரிகிற
வகையில் அமைதல் அவசியம்.  மேலும் மனிதஜீவிகளும் நிரந்தரமான
வர்களல்ல.  மாறாக, அவர்களின் "மனிதம்" அல்லது  "சாரம்" மட்டுமே
நிரந்தரமானது. ஒவ்வொரு மனிதனும் தன் மனிதத்தை, சாரத்தைக்
கண்டடைந்தாக வேண்டும்! எந்த மனிதனும் சாரத்துடன் பிறப்பதில்லை!
மாறாக, சாரத்திற்கான உட்பொதிவை (உள்ளுறையாற்றலை) க்
கொண்டவனாக மட்டுமே பிறக்கிறான். ஏனெனில், ஒரு மனிதன்
பிறக்கும் போதே பூரணனாக, முழுமையானவனாகப் பிறக்கிறானெனில்
அவன் எதைக்கொண்டு தன் முழுமையை முழுமைப்படுத்துவான்?
அது முழுமைக்கு முற்றிலும் முரணானது ! ஆகவே  சாத்தியமற்றது!

உறவுகளைக்  கொண்டாடுவதற்கானதல்ல  "வாழ்க்கை" !  வாழ்க்கையைக்
கொண்டாடுவதற்காக அமைந்த கருவிகளும், ஏற்பாடுகளும் தான்
உறவுகளும்,  இப்பிரபஞ்சம் உள்பட  பிறவனைத்தும் ! ஆனால்,
வாழ்க்கையைக் கொண்டாடுவது என்றால் என்ன ? வழக்கமாக நாம்
உயிர்-பிழைத்தலையும் அதற்காக மேற்கொள்ளப்படும் விவகாரங்களும்
தான் 'வாழ்க்கை'  என வாழ்ந்து செல்கிறோம். அதில், 'அன்புள்ளம்'
கொண்ட நாம் நம் குழந்தைகளுக்கு எத்தகைய வாழ்க்கையைக்
கற்பிக்கிறோம் ? அவர்களை எத்தகைய வாழ்க்கைக்குத் தயார்
செய்கிறோம்?   'வாழ்க்கை' என்றால் என்னவென்று அறியாமல் எந்த
வாழ்க்கையை நாம் வாழ்வது? கொண்டாடுவது?

வாழ்க்கையின் மேற்புற விஷயங்களனைத்தையும் கடந்து
வாழ்க்கையின்  "உட்-பொருளை" உணர்ந்தறிவது, வாழ்க்கையின்
உண்மையான குறிக்கோளையும், இலக்கையும் உணர்ந்தடைவது;
வாழ்க்கையை முழுமையாக வெளிப்படுத்துவது என்பது தான்
உண்மையிலேயே வாழ்க்கையைக் கொண்டாடுவது என்பதாகும்!

வாழ்க்கையின் மேற்புறப்  பொருட்களை, விஷயங்களை, அம்சங்களை
நாம் நம் மேற் புறப் புலன்களின் வாயிலாக எளிதாகப் புரிந்து கொள்ள
முடியும்.  ஆனால், வாழ்க்கையின்  "உட்-பொருளை"ப் புரிந்து கொள்ள
வேண்டுமெனில்,  நாம் உணர்வில் ஆழப்படவேண்டும். அதற்கு நாம்
வாழ்க்கையை மிகத் தீவிரமாகவும், முழுமையாகவும் நேசிக்க வேண்டும்!
எவன் ஒருவன், நிபந்தனைகள் ஏதுமின்றி வாழ்க்கைக்குத் தன்னை
முழுமையாக (கொஞ்சமும் மிச்சம் மீதம் ஒதுக்கி வைக்காமல்)
கொடுக்கிறானோ, அவன் மட்டுமே அன்பிற்குப் பாத்திரனாகிறான்!

     பகுதிகளின்-உலகின் பகுதியாக
         நீடிப்பதோ வாழ்க்கை !?
     பகுதிகள் இடைவெளிகளைக்
         கொண்டாடுகின்றன!
     இடைவெளிகள்    உறவுகளை
         உருவாக்குகின்றன!
     உறவுகள் இடை   வெளிகளைப்
         பராமரிக்கின்றன!
     தன் இடம் அறிந்து தன்னிலை
         நிற்றலே  நேர்-வழி !
     ஒன்று கூட்டுவதல்ல ஒன்றாதலே
         ஒருமை, அதுவே முழுமை !
     பெரு-வெடிப்பில் சிதறிய ஒருமையை
         மீட்டெடுத்தலே அன்பு !

     *****
மா.கணேசன் /22.03.2016.
     ******
     









Tuesday, 22 March 2016

மரண-தண்டனைக் கைதிகளே கேளுங்கள் !*



      மரண- தண்டனைக் கைதிகளே கேளுங்கள்!
      உங்களது  தண்டனையிலிருந்து விடுபடும்
      வழியை உங்களுக்குச் சொல்கிறேன் !

மரண-தண்டனைக் கைதிகளே கேளுங்கள்
உங்களது தண்டனையிலிருந்து விடுபடும்
வழியை உங்களுக்குச் சொல்கிறேன்!
உங்களை "மரண-தண்டனைக் கைதிகள்"
என்றழைப்பது குறித்து வியப்படைய
வேண்டாம்!
நீங்கள் கைதிகளுமல்ல -எந்த கொடும்
குற்றமும் நீங்கள் புரிந்திடவில்லை!
எந்த நீதி மன்றச் சட்டமும் உங்களுக்கு
யாதொரு தண்டனையையும்
வழங்கிடவில்லை என எண்ணாதீர்கள்!
ஆனால்  உண்மையில் நீங்களும் கைதிகளே!
கைகளில் விலங்கு பூட்டப்படாத கைதிகள்!
உங்கள் குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை
என்றாலும்  நீங்கள் குற்றவாளிகளே!
எந்த நீதி மன்றமும் உங்களுக்கு
மரண-தண்டனை விதிக்கவில்லை
என்றாலும் - மரணம் தான்
உங்களுக்கும் முடிவு !

குற்றம் நிரூபிக்கப்பட்ட மரண-தண்டனைக்
கைதிகளுக்கும் குற்றம் இனம் காணப்படாத
உங்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம்
அவர்களுக்குத் தெரியும்படி அவர்களுக்கு
'மரண நாள்'  குறிக்கப்பட்டுவிடுகிறது!
உங்களுக்குத் தெரியும்படி அது
குறிக்கப்படுவதில்லை -அவ்வளவு தான்!
அவர்களுக்கு மரணம் தண்டனையாக
விதிக்கப்படுகிறது!
உங்களுக்கு மரணம் இயற்கையின் நியதியாக
உங்கள் உடலில் எழுதப்பட்டுள்ளது!
எல்லாம் ஒன்றுதான் - பெரிய விதிக்குள்
சிறிய விதி அடக்கம் தான் !

அவர்களுக்கும் உங்களுக்கும் முடிவு
ஒன்றுதான் என்றாலும் உங்களுக்கு
இல்லாத ஒரு அனுகூலம் அவர்களுக்கு
உள்ளது!
அவர்களது மரண-நாள் அவர்களுக்கு
அறிவிக்கப்படுவதால் தத்துவ ஞானிகளைப்
போல அவர்களால் மரணத்திற்கு தங்களைத்
தயார் படுத்திக்கொள்ள முடியும்!
உங்களுக்கோ மரணம் எப்போது வரும்
என்பது தெரியாததால் உங்களை
நீங்கள் தயார் படுத்திக்கொள்ள முடியாது!
எதிர்பாராத நாளில் எதிர்பாராத வேளையில்
எதிர்பாராத இடத்தில் நீங்கள்
நிதானிப்பதற்குள் மரணம் உங்களை
முடித்து விடும் !

தனது அன்றாட தியானத்தில்
மரணத்தையும் சேர்த்துக்கொள்பவன்
ஞானமுள்ளவன் !

மரண-தண்டனைக் கைதிகளுக்கும்
உங்களுக்கும் அநேக வித்தியாசங்கள்
இருப்பதாக நீங்கள் நினைக்கலாம் !
அவ்வித்தியாசங்கள்  யாவும்
மேலோட்டமானவை -அவற்றில்
எவ்வொரு  வித்தியாசமும் உங்களது
முடிவு-நிலையை மாற்றுவதில்லை!
மரணம் தான் உங்கள் முடிவும்!
ஆனால் நீங்கள் விழித்துக்கொண்டால்
உங்கள் முடிவை மாற்றிவிட முடியும் !

"உண்மையில் நீங்கள் யார்?" என்பதை
உணர்ந்தால் உங்களுக்கு மரணம்
என்பது இல்லை !

ஒரு மரண-தண்டனைக் கைதியைவிட
நீங்கள் அதிக சுதந்திரமாக உலவுவதாக
எண்ணுகிறீர்கள்!
அவர்கள் தனிச் சிறைகளில் அடைக்கப்
படுகிறார்கள் - ஆனால்
உங்கள் உடலே உங்களுக்குச் சிறை !
உடல் என்பது  ஒரு சிறை மாத்திரமல்ல
தானழியும் வேளையில் உங்களையும்
உடன் சேர்த்தழிக்கும் ஒரு வினோதப்பொறி !

ஆம்  மரணம் என்பது உடலுக்குத்தான்
உங்களுக்கல்ல!
நீங்கள் வேறு உங்கள் உடல் வேறு எனும்
உண்மையைப் புரிந்துகொள்வதுதான்
மரணத்திலிருந்து விடுபடுவதற்கான முதல்
அடியாகும் !

பாவத்தின் சம்பளம் மரணம் என்று
ஏற்கனவே சொல்லப்பட்டது !
ஆனால் உணர்வுக்குறைவான வாழ்வின்
முடிவும் மரணமே !
ஆம் உணர்வற்ற தன்மையே மூல முதல்
பாவம் - பிற பாவங்கள் யாவும் அதைப்
பின்பற்றி வருபவையே !

நீங்களும் உங்களது உடலும் ஒன்றல்ல
என்றால் - பின் "எது?" நீங்கள் என்று
விசாரம் செய்யுங்கள் - உண்மையில் "எது?"
நீங்கள் என்பதைக் கண்டடையும் போது
மரணத்தை நீங்கள் கடந்துவிட்டிருப்பீர்கள்!

அதன் பிறகு  உங்களது உடல் நோயுறும் போதும்
மூப்படையும் போதும்  இறப்பைச் சந்திக்கும்
போதும் அவை குறித்து நீங்கள் அஞ்சவோ
கலவரமடையவோ  மாட்டீர்கள்!
மரணத்திலிருந்து உங்கள் உடலைக் காப்பாற்ற
முடியாது - ஆனால் உங்களை நீங்கள்
காப்பாற்றிக்கொள்ள முடியும் !

உங்களைப்பற்றிய ஓர் உண்மையை நான்
உங்களுக்குச் சொல்கிறேன் - மிகக்
கவனமாகக் கேளுங்கள் - நீங்கள்
உண்மையில் ஒரு உணர்வே !
நீங்கள் "நான்!" என்று சொல்லும்போது அப்படிச்
சொல்வது 'எது' அல்லது 'யார்' எனக் கூர்ந்து
கேளுங்கள் - ஆம்  "நான்" எனச் சொல்வது
உங்கள் உடல் அல்ல - உணர்வாகிய
நீங்கள்தான் !
உங்கள் உடல் என்பது உங்களுடைய
உடல்தானே தவிர அது நீங்கள் அல்ல !

உங்களுடைய வீடு என்பது
உங்களுடையதுதான் - நீங்களும் உங்களுடைய
வீடும் ஒன்றல்ல !
உங்களுடைய உடலும் ஒரு வீடுதான் !
அதில் எந்த வீடும் நிரந்தரமானதல்ல !

சிறகுகள் வளரும் வரைதான் பறவைக்கு
கூடு பாதுகாப்பு !
எந்தப்பறவையும் கூட்டிலேயே தங்கி
வாழ முடியாது !
கூடு சிதைவதற்குள் சிறகுகள் வளர்ந்தாக
வேண்டும் !
ஆகவேதான் தாய்ப் பறவை ஓயாமல் பறந்து
உணவு தேடிக் கொணர்ந்து குஞ்சுகளுக்கு
ஊட்டி வளர்க்கிறது !
ஆகவே உணர்வாகிய நீங்களும் உங்கள்
கூடாகிய உடல் நோயுற்று மூப்படைந்து
சிதைந்து போவதற்குள்
முழு-உணர்வாய்  மலர்ந்திடுங்கள் -உங்கள்
உடல் அழிந்தாலும் உணர்வாகிய நீங்கள்
அழிய மாட்டீர்கள் !

ஆகவே நான் ஊட்டும் இந்த ஞான- உணவை
உண்டு உங்கள் உணர்வுச் சிறகுகளை
முழுமையாக வளர்த்துக் கொள்ளுங்கள் !
ஏனென்றால் முழு-உணர்வுக்குக் குறைவான
எந்த நிலையும் மரணமே !

அகந்தை எனும் உணர்வுக் குறைவில்
அரை-உணர்வில் திருப்தியுற்று தேங்கிப்போவதே
நீங்கள் புரியும் கொலைக் குற்றமாகும் !
உங்களை நீங்கள் உணராதிருப்பது
தற்கொலையே !

     *****
    *இப்பதிவு விசார மார்க்கத்தின் உள்-வட்டப்
      பங்கேற்பாளர்களுக்காக விசேடமாக
      எழுதப்பட்டது.
      மா.கணேசன் / 25.03.2011
     ******







அந்நியர்களே வாருங்கள் !*





அந்நியர்களே வாருங்கள்! உங்களை
உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் !
"அந்நியர்கள்" என உங்களை நான்
அழைப்பது குறித்து அதிர்ச்சியடையாதீர்கள் !
நீங்கள் என்னைச்சேர்ந்தவர்கள் அல்ல
என்கிற  அர்த்தத்தில் உங்களை  நான்
அப்படிக் குறிப்பிடவில்லை !

எனக்கு நீங்கள் அந்நியர்களாய்
இருக்கிறீர்கள் என்பதைவிட உங்களுக்கு
நீங்களே அந்நியர்களாய் இருக்கிறீர்கள்
என்பது தான் பேரதிர்ச்சிக்குரிய விஷயம் !
இது குறித்து  நீங்கள் சிறிதும்
அதிர்ச்சியடையவில்லையெனில்
உங்களது உறக்கத்திற்கு ஒரு
முடிவேயில்லை !

உண்மையில் நானும் நீங்களும்
வேறு வேறு அல்ல - எனினும்
உங்களுடைய உண்மையிலிருந்து நீங்கள்
வெகு தொலைவு விலகி இருப்பதால்
நீங்களும் நானும் ஒன்றாயிருப்பதில்லை !

உங்களுக்கு நீங்கள் அந்நியர்களாய்
இருக்கிறீர்கள் என்பதோடு அல்லாமல்
என்னையும் உங்களைப்போலவே கருதுவது
என்னை மேலும் அந்நியப்படுத்துகிறது !

மேலும் உங்களை 'மாதிரி'யாகக் கொண்டே
உங்கள் குழந்தைகளையும்
நீங்கள்  வளர்க்கிறீர்கள்!
'உங்கள் குழந்தை' எனும் உடமையுணர்வு
கடந்து உங்கள் குழந்தைகளை - அவற்றின்
ஒன்றுமறியாத கண்களை  உற்றுப் பாருங்கள்!
அவர்கள் வேற்றுக்கிரகங்களிலிருந்து
வந்தவர்களைப் போலத் தெரிவர் !
அவர்கள் உங்கள் 'சாயலில்' இருக்கின்றனர்
ஆனால் அவர்கள் உங்களைப்போன்றவர்கள்
அல்ல -ஒவ்வொரு மனிதக் குழந்தையும்
வித்தியாசமானது தனித்தன்மையானது !
ஆனால் அவர்களை உங்களைப்போலவே
வளர்த்து முடமாக்கி விடுகிறீகள் !

உங்களது உறவுகள் அக்கறைகள்
பரிவர்த்தனைகள் யாவும் ஆழமற்றவை !
உங்கள் குழந்தைகள் மீது நீங்கள்
காட்டும் பாசம்  வெறும் தளையே
பிணைச் சங்கிலியே தவிர அது அன்பல்ல !
ஏனெனில் அன்பு என்பது பிணைப்பு அல்ல.
அன்பு சுதந்திரமானது ஏனெனில் அது
தெரிவுகளற்றது !

நன்றாகப்பாருங்கள் - அது எப்படி
உங்கள் குழந்தை என்றவுடன் உங்களிடம்
அன்பு பீறிட்டுக்கொண்டு வருகிறது ?
என்ன வினோதமிது !!
சமூகம் முழுவதும் நேசமிக்க பெற்றோர்கள்
தான் இருக்கிறீர்கள் !
பிறகு ஏன் சமூகமானது குரூரமிக்க
போட்டிக்களமாகத் திகழ்கிறது?
வன்முறை நிரம்பியதாயுள்ளது?
நீங்கள் உங்கள் குழந்தைகளை மட்டும்
நேசிப்பதாலா?
'உங்கள் குழந்தை' எனும் உடமையுணர்வு
இல்லாமல் உங்களிடம் அன்பு தோன்றாது
அல்லவா ?!

உங்களால் ஒரு குழந்தையை  அது
உங்களுடையது  அல்லது  பிறருடையது
என்று பாராமல் பார்க்க முடியும் போது
மட்டுமே உங்களிடம் உண்மையான அன்பு
தோன்றும் - ஏனெனில் அன்பு என்பது
"முழுமையான -பார்வை" யாகும்.
முழுமையான-பார்வை முழுமையான
உணர்விலிருந்து பிறக்கின்றது - அன்பும்
முழு-உணர்வும் ஒன்றே !

அன்பைப் பற்றிப் பேசுவதால் படிப்பதால்
உடனே உங்களிடம் அன்பு பிறந்திடாது !
"உங்களை நேசிப்பது போல் பிறரையும்
நேசியுங்கள்" என இயேசு சொன்னதைக்
கேட்டதும் அதைப் புரிந்து கொண்டு உடனே
எல்லோரையும் நீங்கல் நேசிக்கத்
தொடங்கிடுவது என்பது சற்றும்
சாத்தியமற்றது - இரண்டாயிரம் ஆண்டு
வரலாறே அதற்குச் சாட்சியம் !
மனிதன் இன்னமும் ஒரு சுய-நல
விலங்காகவே விளங்குகிறான்!

ஆம் நீங்கள் ஒரு அரை-உணார்வுள்ள
இயற்கை ஜீவியாகத் தொடரும் வரை
உங்கள் எண்ணம் சொல் செயல் யாவும்
மட்டுப்பாடாகவே விளங்கும் !
உங்களையே நீங்கள் நேசிப்பது என்பது
உணர்வற்றதொரு அனிச்சை செயல் !
உயிர்கள் தங்களைத் தக்கவைத்துக்
கொள்ளஉதவும் உள்ளமைந்த ஒரு
இயற்கையான உந்துவிசை - அது
ஒரு தானியங்கித்தனமான இயல்பூக்கி !
அதற்கு உங்களைத்தவிர வேறு எவரையும்
தெரியாது - உங்கள் இதயத்தில் தொடங்கி
உங்கள் உடலின் எல்லை வரை மட்டுமே
அதன் அக்கறை பரவிடும் !

ஆம் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
என எண்ணியோ, விரும்பியோ உங்களை
நீங்கள் நேசிப்பதில்லை !
உங்களை அறியாமலேயே நீங்கள்
உங்களை நேசிக்கிறீர்கள் என்பது தான்
உண்மை !

மேலும் எவரும் தமக்குத்தெரிந்தே
வேண்டுமென்றே  சுய- நலமியாக
இருப்பதில்லை - மாறாக
சுய-நலம் என்பது தன்னையறியாத
சுயத்தின் ஒரே நலம் ஆகும் !
சுய-நலம் அல்ல  இங்கு பிரச்சினை-அது
வெறும் விளைவு மட்டுமே - உங்களை
நீங்கள் அறியாதிருப்பதே அனைத்துப்
பிரச்சினைகளின் மையம் !

ஆக உங்களை நீங்கள் நேசிப்பது என்பது
உங்களது எண்ணத்தையோ விருப்பத்தையோ
சார்ந்ததல்ல எனும் பட்சத்தில் - நீங்கள்
எண்ணினாலும் விரும்பினாலும்
உங்களால் பிறரை நேசிக்க முடியாது !

உண்மையான பிரச்சினை நீங்கள்
உங்களை மட்டுமே நேசிக்கிறீர்கள்
என்பதோ அல்லது பிறரை நீங்கள்
நேசிக்கவில்லை என்பதோ அல்ல !
மாறாக உங்களுக்கும் பிறருக்கும்
ஆதாரமாக விளங்குகின்றதும் - உங்கள்
ஒவ்வொருவரின் வழியாக வெளிப்பட்டு
மலர்ந்திடத் துடிக்கின்றதுமான
வாழ்க்கையை
நீங்கள் உணர்வு கொள்கிறீர்களா
நேசிக்கிறீர்களா என்பது மட்டுமே
முக்கியம் !

உங்களை நீங்கள் நேசிப்பதும் பிறரை
நேசிப்பதும் இரண்டுமே மட்டுப்பாடான
விவகாரமே !
உங்களை நீங்கள் நேசிப்பது என்றால்
என்ன?
உண்டு  உறங்கி  இனம்பெருக்கி
சௌகரியமாக உயிர்-பிழைத்திருப்பதைத்
தவிர வேறெதையும் அறியாத ஒரு
அரையுணர்வுள்ள ஜீவியின் மீது
நீங்கள் கொள்ளும் பிரத்யேக அக்கறை
தானே உங்கள் நேசம் !
அந்த மட்டுப்பாடான ஜீவி நீங்கள் தானே!?

ஆக  மட்டுப்பாடான ஒரு வாழ்க்கையை
வாழ்ந்திடும் ஒரு மட்டுப்பாடான ஜீவி
தன்னைப்போன்ற பிற மட்டுப்பாடான
சக-ஜீவிகளை நேசிப்பதில்
என்ன விசேட அர்த்தம்  இருக்கிறது
அல்லது இருக்க முடியும் ??

     *****

*இப்பதிவு விசார மார்க்கத்தின் உள்-வட்டப்
பங்கேற்பாளர்களுக்காக விசேடமாக
எழுதப்பட்டது.
மா.கணேசன் / 20.03.2011
     *****

Monday, 21 March 2016

முதிர்ந்த நாற்றுக்களே கேளுங்கள் ! *

*

    உங்களை வேரறுக்க வந்தேன் என
    எண்ணாதீர்- வேருடன் பிடுங்கி
    வேறிடத்தில் ஊன்றிடவே வந்தேன்!

முதிர்ந்த நாற்றுக்களே வாருங்கள்!
நீங்கள் எந்த நிலத்தில் முளைத்து
வளர்ந்து  வாழ்ந்து வருகிறீர்களோ
அந்நிலம் சத்திழந்து,சாரமற்றுப்
போய்விட்டது - இனியும்
அந்நிலம் உங்களுடைய
வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும்
சிறிதும் உதவிடாது!

ஆகவே உங்களைப்பிடுங்கி
வேறு வளமான நிலத்தில் நட்டிட
என்னை அனுமதியுங்கள் !

இப்புதிய நிலத்தில் நீங்கள் ஆழமாக
வேரூன்றி நிலைத்திடும் வரையில்
நான் பாய்ச்சும் தெளிந்த நன்னீரை
தினமும் பருகுங்கள் !

முதிய நாற்றுக்களே !
உங்களை வேறு நல்ல நிலத்தில்
நட வேண்டுமானால் இப்போது
நீங்கள் இருக்கிற நிலத்திலிருந்து
உங்களைப் பிடுங்கியாக வேண்டும்!
ஆகவே அமைதியாக என்னுடன்
ஒத்துழையுங்கள் !

உங்களை வேரறுக்க வந்தேன் என
அஞ்சாதீர் - வேருடன் பிடுங்கி
வேறு நிலத்தில் ஊன்றிடவே வந்தேன் !

ஆகவே ஏற்கனவே நீங்கள் அறிந்த
அனுபவித்து வருகிற அந்தப் பழகிய
பழைய சூழலை வாழ்க்கையை
இழக்கப் போவது குறித்து
வருத்தமடையாதீர் - மாறாக
புதிய இடத்தில் புதிய வாழ்க்கையை
தொடங்கப் போகிறீர்கள் என்பதைக்
குறித்து உற்சாகம் கொள்ளுங்கள் !

ஆம், எந்தச் சூழ்நிலைமையிலும்
வாழ்க்கை மீதான ஆர்வத்தை மட்டும்
இழந்து விடாதீர் - ஆர்வத்தை இழப்பது
அனைத்தையும் இழப்பதாகும்!
ஏனெனில் சூழல்களை விட
நிலைமைகளைவிட வாழ்க்கையே
முக்கியம்!
வாழ்க்கை மீதான பேரார்வமே
அடிப்படை உந்துவிசை - உண்மையில்
பேரார்வமே அனைத்து இருப்பின்
வாழ்க்கையின் சாரம் !

உண்மையில் வாழ்க்கை
புறத்தே யாதொரு சூழலையும்
நிலைமையையும் சார்ந்திருப்பதில்லை !
சூழலின் விளைவே வாழ்க்கை என்பது
தலைகீழ் பார்வை !
சூழல் அல்ல வாழ்க்கையை உருவாக்கியது
வாழ்க்கை (மிக ஆழமான அர்த்தத்தில்)
தன்னைத்தானே வெளிப்படுத்திக்
கொள்ளவே சூழலையும் அதில்
ஜீவிகளையும் உருவாக்கியது !

சூழலுக்கு ஏற்ப தகவமைதல் அல்ல
வாழ்க்கை - சூழலையும் ஜீவிகளையும்
கடந்து செல்வதே வாழ்க்கை !

உங்களுக்குத் தெரியும் - காற்று
நீர் உணவு இன்றி உங்களால்
உயிர் பிழைத்திருக்க முடியாது !
அதே வேளையில் காற்று நீர் உணவு
இருந்தாலும் உங்கள் வாழ்க்கை
முழுமையடைந்து விடுவதில்லை!
ஏனெனில் உயிர்-பிழைத்திருத்தலும்
வாழ்தலும் ஒன்றல்ல !

வாழ்க்கை என்பது தன்னைத் தானே
கடந்து வளர்ந்து செல்லும்
பேரியக்கம் ஆகும்  - அது
தன் முழுமையை முழுச்சுதந்திரத்தை
நோக்கிச் செல்கிறது !
ஆகவே வாழ்க்கை
எவ்வொரு சூழலையும் ஜீவியையும்
பயன் படுத்திக்கொள்கிறது - அதன்
முன்னோக்கிய பாய்ச்சலில் இறுதியில்
அது எதையும் சார்ந்திராத
தன்னில் தானே முடிவான
முழுமையான நிலையை நோக்கிச்
செல்கிறது !

ஆனால் இறுதியானது என்பது
கடைசியில் வருவதில்ல - மாறாக
முடிவானது என்பது முழுமையானது
என்கிறஅர்த்தத்தில் இறுதியானது !
ஆம்  இறுதியானதை இன்றே இப்போதே
அடைய முடியும் !
உடனே "அது எப்படி ?" என்று கேட்காதீர் !

உங்கள் வளர்ச்சியும் பரிணாமமும்
இனியும் புறக் காரணிகளைச்
சார்ந்திருக்கவில்லை - மாறாக
நீங்கள் எவ்வளவு (முழுமையாக)
உணர்வு பூர்வமாக மாறுகிறீர்கள்
என்பதைப் பொறுத்தது !

இறுதி முழுமையை இப்போதே
அடைய முடியும் என்பது வெறும்
சாத்தியப்பாடோ அல்லது ஊகக்
கோட்பாடோ அல்ல !
இவ்விஷயத்தில் 'முடியும்'  'முடியாது'
என்கிற நிலைபாடுகள் அர்த்தமற்றவை!
மாறாக "முழுமையடைய வேண்டும்!"
என்கிற தேவையை அவ்வளவு ஆழமாக
தீவிரமாக உணர்வதொன்றே உங்களை
முழுமைக்கு இட்டுச் செல்லும் !

உங்களுக்கு ஒரு ரகசியத்தை  இங்கே
சொல்கிறேன்  - முழுமையடைவதன்
தேவையை முழுமையாக உணர்வதும்
முழுமை மீது நீங்கள் கொள்ளும்
அதீத பேரார்வமும் தான் அந்த
முழுமை நிலை யாகும் !

வாழ்க்கை என்பது எவ்வளவுஆரோக்கியமாக
எவ்வளவு சௌகரியமாக  எவ்வளவு
நீண்ட காலம் உயிர்- பிழைத்திருக்கிறீர்
என்பது பற்றியதல்ல - மாறாக
எவ்வளவு விரைவாக நீங்கள்
மலர்கிறீர்கள் என்பது பற்றியது !

நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாகவும்
சௌகரியமாகவும் வாழ்ந்தாலும்
எவ்வளவு காலம் வாழ்ந்திடப்போகிறீர்கள்?
விரைவாகவோ அல்லது ச ற் று
தா ம த மா க வோ  மரணம் வரும் வரை
மட்டும் தானே வாழ்வீர்கள்!
மரணம் வந்து யாவற்றையும்
அர்த்தமற்றதாக்கிவிடுகிறதே !

நீங்கள் தற்போது வேர் கொண்டிருக்கும்
நிலம் மரணத்தின் விதிக்குட்பட்டது !
ஆகவேதான் உடனே உங்களை
மரணம் தீண்ட வியலாத
நித்தியத்தின் நிலத்தில் ஊன்றிட
விரும்புகிறேன் !

ஆனால் நீங்களோ அப்படியொரு
நிலமோ நித்திய உலகமோ
இருக்கவியலுமா என சந்தேகிக்கிறீர்!
உங்கள் கனவிலும்கூட அதற்கான
சாத்தியம் பற்றி யோசித்திருக்க
மாட்டீர் - ஆயினும்  உங்களுக்குத்
தெரியாத புரியாத எதையும் நீங்கள்
மறுக்கவே செய்வீர்கள் !
ஏனெனில் அன்றாடத்தேவைகளாலான
வாழ்க்கையைக் கடந்து வேறு
எதைப்பற்றியும் யோசிக்கமுடியாதபடிக்கு
இந்த உலகியலில் நீங்கள் மூழ்கிக்
கிடக்கிறீர்கள் !

ஆனால் சாத்தியமற்றதைச் சிந்திப்பவனே
சாதிப்பவனே மனிதன் !
மேலும் இத்தகைய சவால் ஏதுமற்ற
ஒரு வாழ்க்கை மனித-ஜீவிகளுக்கு
உரியதாயிருக்க முடியாது - மாறாக
அது மண்புழுக்களுக்கே உரியதாயிருக்கும் !

முதிர்ந்த நாற்றுக்களே காலம்
விரைவாகக்கடந்து போய்க்கொண்டே
இருக்கிறது  -நாளுக்கு நாள்
நீங்கள் முதிர்வடைந்து கொண்டே
போகிறீர்கள் - பிறகு
உங்களைப் பிடுங்கி வேறு நல்ல நிலத்தில்
நடுவது என்பது அதி சிரமம் !
அப்படியே பிடுங்கி நட்டாலும்-அப்புதிய
நிலத்தில்  புதிதாய் வேர் பிடித்து
வளர்வது என்பது மிகக் கடினம் !
ஆகவே மேலும் காலம் காலம் கடந்து
போவதற்குள் உங்களைப் பிடுங்கி
நடுவதற்கேதுவாய்  தளர்வாய் இருங்கள்!
விடாப்பிடியாக நீங்கள் பற்றிக்
கொண்டிருக்கும் பழைய சிந்தனைகளை
கோட்பாடுகளை  கைவிட்டு  புதிய
சிந்தனைகளைக் கைக்கொள்ளுங்கள்!
பழையதின் குறிப்பும் தொடர்பும்
வாசணையும்  உள்ளவரை புதிய
உணர்வுக்குள் நீங்கள் பிரவேசிக்க
இயலாது !

புதிய-உணர்வு என்றவுடன் உடனே
அது பற்றிய கற்பனைகளில் இறங்கி
விடாதீர் - அது
கற்பனைகளுக்கு எட்டாதது - உங்கள்
கனத்த சிந்தனைகளுக்குள்ளும் அது
அகப்படாது !

முதலில் உணர்வுக்கு வாருங்கள் !
நீங்கள் ஒரு  'உணர்வு'  என்பதை
நேரே முழுமையாய் உணருங்கள் !
உடனே நீங்கள் விழித்துக்கொள்வீர்கள் !
விழிப்பு தான் அந்த புதிய
முழு-உணர்வுக்கான ஒரே பிரதான
வாயில் !

புத்தர் இயேசு ரமணர் ஆகியோர்
தாங்கள் தோன்றிய இடத்திலிருந்து
தங்களைத் தாங்களே பிடுங்கி
வேறு இடத்தில் ஊன்றிக்கொண்டு
வளர்ந்து மலர்ந்தவர்கள் !

அவர்கள் வேற்று கிரகங்களிலிருந்து
வந்தவர்களோ விசேடப் பிறவிகளோ
அவதாரப் புருஷர்களோ
விதிவிலக்கானவர்களோ விசேடமாய்
தெரிவுசெய்யப்பட்டவர்களோ அல்ல !

மாறாக அவர்கள் தங்களைத் தாங்களே
தெரிவுசெய்து கொண்டவர்கள் !
வடிவமைத்துக்கொண்டவர்கள் !
விபத்து போன்றமைந்த
சூழ் நிலைமைகளின் அடிமைத்
தனத்திலிருந்து தங்களது விழிப்பினால்
தங்களை விடுவித்துக்கொண்டவர்கள் !

மனிதன் தனது பிறப்பினால்
மனிதனாவதில்லை !
மாறாக தனது விழிப்பினால் தான்
முழுமையாக  மனிதனாகிறான் !

         *****
   
  * இப்பதிவு விசார மார்க்க உள்-வட்டப்
    பங்கேற்பாளர்களுக்காக விசேடமாக
    எழுதப்பட்டது.
    மா.கணேசன் / 13.03.2011  
         *****





Sunday, 20 March 2016

மேலோட்டத்தின் ஆழம் !

மேலோட்டத்தின் ஆழம் !


பொதுவாக நம்மைப்பற்றிய நெருடலான ஒரு அடிப்படை உண்மையைச்
சொல்ல வேண்டுமென்றால் ,  நாமனைவரும்   "ஆழம் குறைந்தவர்கள் "
அதாவது  "மேலோட்டமானவர்கள்" என்பதுதான் அது !   ஏனென்றால்
நம்முடைய சிந்தனை மேலோட்டமானது! நம்முடைய பார்வை மேலோட்ட
மானது !  நம்முடைய அன்பு மேலோட்டமானது !  இவ்வாறே நம்முடைய
அக்கறையும், பொறுப்பும் மேலோட்டமானவையே ! மொத்தத்தில் நமது
எண்ணம்,சொல், செயல், வாழ்க்கை யாவும் மேலோட்டமானவையே !
இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையான அம்சங்களான கவனமும்,
உணர்வும், விழிப்பும் மேலோட்டமானவையே !

ஏன், நமது ரசனையும்,கலை இலக்கிய ஈடுபாடுகளும், படைப்புகளும்
மேலோட்டமானவையே ! நமது நட்பும், உறவும் மேலோட்டமானவையே!

ஏனெனில், நாம் ஆழங்குறைந்த 'தட்டையான' ஜீவிகள் ! நமது தட்டைத்
தனத்தால் நாம் காண்கின்ற, ஈடுபடுகின்ற அனைத்தையும் தட்டையாக
ஆக்கிவிடுவோம் ! நமது மதிப்பிடலும், நாம் கொண்டாடுகின்ற மதிப்பு
களும் தட்டையானவையே ! ஏனெனில், நாம் மனிதர்களையும்,
எல்லாவற்றையும்  தட்டையிலும் தட்டையான  மெல்லிய  காகிதப்
பணத்தைக்கொண்டே அளக்கிறோம், மதிப்பிடுகிறோம் ! எல்லாவற்றையும்
பணத்தைக்கொண்டே வாங்கிவிடலாம் என நம்புகிறோம் ! ஆகவே,
விலைமதிப்பில்லா பிறவனைத்தையும் நாம் மிக எளிதாக எடுத்துக்
கொள்கிறோம், அல்லது, அவ்வம்சங்களை அப்படியே அலட்சியப்படுத்தி
ஓரங்கட்டி விடுகிறோம் !

நாம் ஒரு அற்புதமான ஓவியத்தைக் காண்கிறோம், அல்லது ஒரு இசையைக்
கேட்கிறோம் அல்லது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு பற்றிக் கேள்விப்
படுகிறோம். புத்தர், இயேசு, லாவோ த்சூ போன்ற ஞானிகளின்உபதேசங்களை
நூல்களின் வாயிலாக வாசிக்கிறோம்.  இவை யாவும் அப்படியே மேற்புறத்
திலேயே தயார்-நிலையில் தோன்றியவையல்ல! அவை ஒவ்வொன்றும்
மனித உள்ளங்களின் வெவ்வேறு ஆழங்களிலிருந்து உருவாகி மேற் பரப்பிற்கு
கொண்டுவரப்பட்டவையாகும் ! முறையே அவற்றின் ஆழங்களுக்கேற்ப
இணையாக நம்முள் நாம் ஆழாமல் ஒருபோதும் ஒரு மேலோட்டமான
வாசிப்பின், பார்வையின், சிந்தனையின் வழியாகப் புரிந்துகொள்ளவோ,
அனுபவம் கொள்ளவோ முடியாது !

      முத்துக்கள் கடற்கரை நெடுகிலும்
      மணற்பரப்பின் மீது  எங்கு பார்த்தாலும்
      இறைந்து கிடப்பதில்லை !

நம்மால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு போன்றதொரு கோட்பாட்டை
அல்லது, பீத்தோவானின் இசைக்கோவை போன்றதொரு இசையை ஏன்
உருவாக்கமுடிவதில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்; ஏன் அவற்றை நம்மால்
முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூட முடிவதில்லை என்பது தான் கேள்வி !
ஏனென்றால், நம்மைப்போலவே நமது ஆர்வமும், ஆச்சரிய உணர்வும்
மேலோட்டமானவை !

நாம் இயற்கையின் மேற்புற அழகை மட்டுமே ரசிக்கிறோம். ஆனால்,
ஐன்ஸ்டீனின் ஆர்வமும்,ஆச்சரிய உணர்வும் ஆழமிக்கவை; ஆகவே அவரால்
இயற்கையின் மேற்புறத் தோற்றத்திற்கும், நிகழ்வுகளுக்கும் காரணமான,
அடியோட்டமான விதிகளை  தன்னுள் ஆழமாகச் சென்று அவற்றை அறிந்து
அவை பற்றிய கோட்பாடுகளை உருவாக்கி அளிக்கிறார். அவருடைய
ஆர்வமும், ஆச்சரியமும்,  இயற்கைக்கு, இருப்புக்கு அவர் தரும் பதிலளிப்புகளும்
ஆழமானவை !

நாமும் சில வேளைகளில், சில விஷயங்களில் ஆழமாகச்செல்வதுண்டு !
அதாவது, நாம் நிலத்தை அகழ்ந்து சுரங்கம் தோண்டி பலவகை உலோகங்கள்,
நிலக்கரி, வைரம், தங்கம், எண்ணெய் போன்றவற்றை மேலே கொண்டு வந்து
நமது நுகர்வு மற்றும் பயன்பாட்டுத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம்.
அல்லது, கடலின் ஆழத்திற்குச்சென்று முத்துச்சிப்பிகளை சேகரித்து வருகிறோம்.
இவை யாவும் சார்புரீதியில் சுலபமான, எளிதில் சாத்தியமான காரியங்களே !

ஆனால், எவன் ஒருவன் தனது மனதின், உள்ளத்தின் ஆழங்களுக்கே
செல்கிறானோ அவன் பிரபஞ்சப்படைப்பின் ஆழங்களுக்கே செல்கிறவனாக
உயர் பேரறிவை, அரிய ஞானத்தை, பிரபஞ்சப் பேருண்மைகளை
கண்டடைபவனாக நம் அனைவரிலும் மேலானவனாக உயர்வடைகிறான்.
ஒருவன் தன் உள்ளத்தினுள் எவ்வளவு  ஆழம் செல்கிறானோ அதற்கிணையான
தனது உயரங்களை அடைபவனாகிறான்.

உண்மையில் நாம் காணும் கனவுகளும்கூட மேலோட்டமானவையே! சில
சமயங்களில் அடிமனத்தின் ஆழத்திலிருந்து சில செய்திகளை, சமிக்ஞைகளை
கனவுகள் மேலே கொண்டுவருவதுண்டு.  ஆனால், அவ்வகைக்கனவுகள்
மிக அரிதானவை! ஆனால், அக்கனவுகளை நாம் காண்பதில்லை -அவை
தாமே ஏற்படுகின்றன,வெளிப்படுகின்றன ! நாம் கனவுகள் காண்பதில்லை;
அப்படியே கண்டாலும் அவை மேலோட்டமானவை. ஏனென்றால், நமது
விழிப்பும் மேலோட்டமானது. விழிப்பில் மிகுந்தவனே அர்த்தமுள்ள கனவுகளைக்
காண்பவனாகிறான்! தென் அமெரிக்காவின்  'மாயன்', மற்றும்  ' இனுயிட்'
போன்ற இனத்தில், "ஷாமன்" எனப்படும் 'மருத்துவன்' அல்லது
'குணப்படுத்துபவன்' ஆகிய விசேட- ஊடகமாக அமைந்த மனிதர்களுக்குத்தான்
கனவுகள் தோன்றும். அவர்களின் வழிகாட்டுதல்கள் அல்லது ஆலோசனைகளின்
படியே அந்த இனத்தின் பிற மனிதர்கள் நடந்து கொள்வர், காரியமாற்றுவர்.

நமது கனவுகளைப்போலவே நமது நனவும் மேலோட்டமானதே ! எவ்வாறெனில்,
நமது பகற்பொழுது முழுவதும்  அன்றாடத்திற்குச் சேவை செய்வதிலேயேமுடிந்து
போகிறது ! அதாவது, அடிப்படைத்தேவைகளை அடைவதைத்தானே நாம்
வாழ்க்கை என வாழ்ந்து செல்கிறோம். 'உயிர்-வாழ்தல்', அல்லது சற்று மேலே
சென்றால், 'சௌகரியமாக உயிர்-வாழ்தல்' என்பதற்குமேல் வேறு என்ன பிரத்யேக
இலட்சியம், இலக்கு நமக்கு உள்ளது ?  "உண்பதற்காக நாம் வாழவில்லை;
வாழ்வதற்காகத்தான்  நாம் உண்கிறோம்!"  என்பதாக அழகிய மேற்கோள்
பலகைகள் சொல்கின்றன. ஆனால், 'வாழ்தல்', 'வாழ்க்கை' என்றால் தான் என்ன
என்று எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா?

அடுத்து, 'அன்பு'  பற்றியும் அழகழகான வாசகப்பலகைகள் சமூக வலைத்
தளங்களின் பக்கங்களை அலங்கரிக்கின்றன! ஆனால், நம் குழந்தைகளை
நாம் நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம் என்பது எவ்வகையில் பருந்திட
மிருந்தும், நாய் பூனைகளிடமிருந்தும் போராட்டித் தன் குஞ்சுகளைக் காப்பாற்றும்
'தன்னறிவற்ற' கோழியின் பாசத்தைவிட மேலானது? கோழிப்பாசத்தையும்,
மனிதப்(பெற்றோர்ப்) பாசத்தையும் ஒப்பிடும் வழியில் நாம் கோழியைக்
கொச்சைப்படுத்துகிறோமா அல்லது, நம்மை நாம் கொச்சைப்படுத்துகிறோமா?
இருவரையும் நாம் கொச்சைப்படுத்தவில்லை! மனிதன் "தன்னறிவை" எட்டாத
வரையிலும் இருவரது பாசமும் ஒன்று தான்!

அதாவது, கோழிப்பாசமும் மனிதப்பாசமும்  "இயல்பூக்கி" வகையைச்சேர்ந்ததே!
ஆகவே, இவ்விரண்டு வகைப்பாசமும் அன்பு அல்ல ! ஏனென்றால், அன்பு என்பது
ஒரு இயல்பூக்கி அல்ல. பாசம் என்பது உணர்வினால் உயிரூட்டப்படும் போதுதான்
அது அன்பாக மலரும்!

இந்த உலகம் 'அன்புள்ளம்' கொண்ட பெற்றோர்களால் நிரம்பி வழிகிறது ! ஆனால்,
உலகில் வன்முறை, குரூரம், கொலை, களவு, கற்பழிப்பு, போர், தீவிரவாதம்; போட்டி,
பொறாமை, ஏய்ப்பு, சுரண்டல்,  . . . .எல்லாம் தலைவிரித்தாடுகின்றன! இவை எவ்வாறு
சாத்தியம்? எல்லாப்பெற்றோர்களும் உண்மையிலேயே அன்புள்ளம் கொண்ட
வர்களாக இருந்தால் உலகில் வன்முறைகளுக்கு இடமிருக்குமா ?அல்லது எல்லாப்
பெற்றோர்களும் சுய-நலத்துடன் தம்தம் குழந்தைகளை மட்டுமே நேசிக்கிறார்களா?
அப்படியானால், சுய- நலமும், அன்பும் எவ்வாறு சேர்ந்து செல்லஇயலும்? எல்லாப்
பெற்றோர்களும் பாசத்தை அல்லது அன்பைக்கொட்டி தங்கள் குழந்தைகளை
வளர்க்கிறார்கள்!  ஆனால், பெற்றோர்கள் பாவம், முதியோர் இல்லங்களிலும்,
அனாதைகளைப்போலத்  தனிமையிலும்  வாடுகின்றனர்! அப்படியானால்,
பெற்றோர்களின் அன்பு 'ஒரு-வழிப்பாதை' போன்றதா ? பிள்ளைகள் தங்களது
பெற்றோர்களைவிட தம்தம் மனவிகளையும்,குழந்தைகளையும் தான் அதிகம்
நேசிக்கிறார்களா? அப்படியானால், இவ்வழியிலும் நம்முடைய மனிதப்பாசம்
என்பது அன்பாகாது! மாறாக, 'பாசம்' என்பது பாலுணர்வைப்போலவே ஒரு
இயல்பூக்கி தான் ! இன்னும் சொல்லப்போனால் , பாலுணர்வு எனும் இயல்பூக்கி
யின் நீட்சிதான் பாசம் எனக்காணலாம்! ஆக, பாசம் அன்பாகாது; ஏனெனில்,
அன்பு என்பது இன்னுமொரு இயல்பூக்கி அல்ல! நம்முடைய அன்பு அன்பே அல்ல!
அது வெறும் பாசம் மட்டுமே. பாசம் என்பது மிகவும் மட்டுப்பாடானது!

எவ்வாறெனில், மனித உறவுகளை எடுத்துக்கொண்டால், உறவு என்பது முதலில்
ஒருவர் தன்னைப்பாதுகாத்துக்கொள்ளும் "சுய-பாதுகாப்பு" எனும் இயல்பூக்கி
யினால் தொடங்கிவைக்கப்படுகிறது. இதை 'சுய-பாசம்' எனலாம்! தன்னைப்
பாதுகத்துக்கொள்வதன் நீட்சியாக ஒருவரிடமிருந்து அவரது பிள்ளைகள் மற்றும்
இரத்த -சொந்தங்கள் வரை விரிவடைகிறது. இதை 'குடும்ப-பாசம்' எனலாம்.
அதற்கு மேல், அது 'தன்சாதி' , 'தன் இனம்' என்கிற 'இன-பாச'த்தின் வட்டமாக
அமைகிறது! அதற்கு மேல், உறவு வட்டமோ, பாச வளையமோ ஒரு போதும்
விரிவடையாது. முற்றுப்புள்ளி.

இது தான் பாசத்தின் எல்லை, மட்டுப்பாடு ! எவ்விடத்தில் நம்முடைய உறவு
அல்லது பாசவட்டம் முடிவடைகிறதோ அவ்விடத்தில் அடுத்தவருடைய பாச
வட்டமும் முடிவடைகிறது! ஒரு போதும் இரண்டு வட்டங்களும் (மோதிக்கொள்ளுமே
தவிர) ஒன்று கலவாது! இதுதான் பாசத்தின், இயல்பூக்கியின் மட்டுப்பாடு. இது
அன்பு அல்ல. இப்போது புரியும்-  சமூகத்தில் போட்டி, பொறாமை, வன்முறை
போன்றவை மலிந்திருப்பதன் காரணம். சக-மனிதனை நேசிப்பதற்கு அன்பு
வேண்டும்; பாசம் போதாது!

மனிதர்களைப்பொறுத்தவரை பாசவட்டம் என்பதும் நிலையானதல்ல! எந்த
நேரத்தில் பாசவட்டம் சுருங்கி சுய-நலப்புள்ளியாக மாறிடும் என்று சொல்ல
முடியாது! அச்சுய-நலப் புள்ளியில் ஒருவர் மட்டுமே வாழ முடியும்! ஒரு சிறு
பிரச்சினை, முரண்பாடு, சந்தேகம், தவறான புரிதல் போதும் சகோதரர்கள்
ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக்கொள்வர்! எல்லா உறவுகளும் நிலையற்றவை!
சுய-நலம்,அல்லது சொந்த-நலம் தான், பிறர் நலம் அல்லது பொது நலம் யாவற்றுக்கும்
அடிப்படையாகும். பல வேளைகளில், பிறர் அல்லதுபொது நலம் பேணாமல்
சொந்த நலம் சாத்தியமாகாது! ஆகவே பொது நலம்போன்ற ஒன்று, ஒரு சாயல்,
சமூகத்தில் எப்போதும் இருக்கவே செய்கிறது. எல்லாம் "சுயநல-மயம்!"

இரத்த உறவுகள் உள்பட நட்பும், அனைத்து உறவுகளும் சார்ந்திருத்தல்,
கொடுக்கல்-வாங்கல் பரிவர்த்தனை,தேவைகளின் நிமித்தம் ஆகியவற்றையே
சார்ந்திருக்கின்றன. ஆகவே உறவுகளில் அன்பை ஊற்றி ஆற்றலாம் என்று
எண்ணுவது அறிவீனமாகும். அன்பிற்கும், உறவிற்கும் எவ்வித சம்பந்தமும்
கிடையாது! ஏனெனில், அன்பிற்கு உறவுகளோ, சொந்த-பந்தங்களோ கிடையாது!
'உறவு'  அல்ல, "இசைவு" தான் அன்பின் வீடு!  அது, அது, அதனதன் இடத்தில்
இருப்பதுதான் இசைவு ! நம் வீட்டை, இருப்பிடத்தை கண்டடையும் வரை
அன்பைப் பற்றிப் பேசுவது அப்பட்டமான போலித்தனம்!

விஷயம் சிறியதோ,பெரியதோ எல்லாவகையிலும், எல்லாவிஷயத்திலும்
நாம் மேலோட்டமானவர்களே! தலைக்கு மேலாக வைத்து நாம் கொண்டாடுகிற
விஷயங்களாகட்டும், நமது விருப்பங்களாகட்டும், நாம் விசுவாசம் காட்டுகிற
விஷயங்களாகட்டும்,  எல்லாமே மேலோட்டமானவையே! நாம் தேடுகிற
அனுபவங்களாகட்டும், நாம் கற்றுக்கொள்கிற விஷயங்களாகட்டும், எல்லாம்
மேலோட்டமானவையே

"உண்மையில் நாம் யார்?" என்பது நமக்குத்தெரியாது;  இந்நிலையில், யாரோ
நம் மீது சுமத்திய அடையாளங்களை நாம் சுமந்துகொண்டிருக்கிறோம்
என்பதற்கு மேல் வேறு என்ன சாட்சியம் வேண்டும், நாம் மேலோட்டமானவர்கள்
தான் என்பதற்கு ?

நாம் மேலோட்டமானவர்கள் என்பது நம்மைப் பற்றிய அடாத விமர்சனம் அல்ல.
அது தான் நம்மைப்பற்றிய நிதர்சனம் ஆகும் ! பிறரால் நம் மீது சுமத்தப்பட்ட
அடையாளங்கள் ஒருபுறமிருக்க, போதாக்குறைக்கு நமக்கு நாமே சில
அடையாளங்களைத் தேடிக்கொள்கிறோம்! நாம் செய்கிற தொழில்களுடனும்
படிப்பு , பட்டம் , பொருளாதார நிலைகள், அந்தஸ்து நிலைகள் போன்றவை
களுடனும் நம்மைப்பிணைத்துக் கொள்கிறோம்! நாம் உயரமோ, குள்ளமோ,
கருப்போ, சிகப்போ, மாநிறமோ; நமது படிப்பு சிறியதோ, பெரியதோ; நமது
உத்தியோகம், வருமானம் சிறியதோ, பெரியதோ இவை போன்ற எண்ணற்ற
பல காரணிகள் எதுவும் நமது உள்ளார்ந்த மனிதத்தை தொடுவதும் இல்லை,
வெளிப்படுத்துவதும் இல்லை!  இவை போன்றதே சாதி, மத, இன, மொழி,
மாநில, தேச அடையாளங்களும் ! இவை நம்மீது ஒட்டப்பட்ட ஒட்டுச்சீட்டு
போன்றவையே! இவை மனித ஜீவிகளுக்கான உண்மையான அடையாளங்கள்
அல்ல !இவை விபத்து போன்ற வரலாற்றுச் சூழ்நிலைகளில் நம்மீது சுமத்தப்
பட்டவை, அல்லது திணிக்கப்பட்டவையாகும். பொய்யும் செயற்கையுமான
அடையாளங்களில், உயர்ந்த அடையாளம், தாழ்ந்த அடையாளம் என்ற
பேச்சுக்கே இடமில்லை! மனிதர்களில் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும்
இல்லை;  ஒரே மனித -சாதியில், உயர் சாதியும் இல்லை, தாழ்ந்த சாதியும்
இல்லை! மாறாக, தன் அசலான தன்மையை , தனது சாரமான உண்மையை
தன்னுள் ஆழ்ந்து சென்று கண்டடையாதவன் மனிதனே அல்ல!

உண்மையில் மனித சமுதாயத்தைப் பீடித்துள்ள மட்டுப்பாடான,
மேலோட்டமான விஷயங்கள் கணக்கற்றவை; அவற்றையெல்லாம் ஒன்று
விடாமல் இங்கு திரட்டிப் பட்டியலிட்டுத் தீர்த்துவிட முடியாது! இவ்வெல்லா
மட்டுப்பாடான, மேலோட்டமான விஷயங்கள் அனைத்தும் மட்டுப்பாடான
மேலோட்டமான மனித மனங்களின் கண்டுபிடிப்புக்களே, உருவாக்கங்களே!
இவ்வுருவாக்கங்கள் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக மட்டுப்பாடான
மேலோட்டமான மனங்களையே, மனிதர்களையே உருவாக்கி வருகின்றன!

ஆனால், சிந்திக்கின்ற, உணர்வுள்ள, புத்திசுவாதீனமுள்ள மனிதர்கள்
இத்தகைய நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதை சகிக்க மாட்டார்கள்!
சந்தேகத்திற்கிடமில்லாமல், மரபு , கலாச்சாரம் , பண்பாடு , நாகரிகம் ,
பாரம்பரியம் யாவும் மட்டுப்பாடானவையே, மேலோட்டமானவையே! இவை
எதுவும் எவ்வகையிலும் இறுதியானவையல்ல !

வாழ்க்கையை வாழ்வதற்கு,  ஆழமாகப் புரிந்து  கொள்வதற்கு என்ன மரபு ,
பாரம்பரியம் உள்ளது? புத்தர், இயேசு போன்ற தனிமனிதர்கள் எந்த மரபை,
பாரம்பரியத்தைப் பின் பற்றினார்கள், அல்லது விட்டுச் சென்றார்கள் ?
புத்தரும் , இயேசுவும் தங்கள் காலத்திற்கு முன்பிருந்து தொடர்ந்துவந்த
அனைத்து மரபுகளையும் , பாரம்பரியங்களையும் உடைத்தெறிந்ததனால்
தானே அவர்களை மையமாகக் கொண்டு அவர்களின் பெயர்களிலேயே
புதிய மதங்களை நாம் ஏற்படுத்தியுள்ளோம்?!  இதிலுள்ள பெரியதொரு
முரண்பாடு என்னவெனில், அவர்கள் உண்மையில் புதிய மதங்கள் எதையும்
தோற்றுவிக்க எண்ணவும் இல்லை! மாறாக, அவர்கள் வாழ்க்கையை
அணுகுவதற்கான சரியான முறையை, வழியைத்தான் உபதேசித்தனர்!
ஆனால், நாம் அவர்கள் காட்டிய புதிய வழியை -- புதியதொரு வழிபாடாக,
சடங்காக , மரபாக, முடிவில் மதமாகவே மாற்றிவிட்டுள்ளோம் ! இதில்,
ஆச்சரியப்பட எதுவுமில்லை, ஏனென்றால், மனிதர்களின் மேலோட்டமான
மனங்கள் எல்லாவற்றையும் தமக்கு ஏற்றவாறு சுருக்கி, குறைத்து,
மலினப்படுத்தி சுலபமாக்கிவிடும் !

ஆனால், நம்மைப்பற்றிய ஆறுதலான ஒரு உண்மை என்னவெனில், நாம்
ஒவ்வொருவரும் ஆழமிக்கவரே, உயரமானவரே! நமது ஆழத்தையும்,
உயரத்தையும் எவரும் களவாடிச்செல்லவோ, மறுக்கவோ இயலாது! ஆனால்,
நம் ஆழம் இன்னும் நம்மால் இறங்கிப்பார்க்கப்படாமல் உள்ளது. ஆகவே,
நம்முடைய உயரம் நமக்கு எட்டாமலேயே போய்விடும் போலுள்ளது! ஆனால்,
இந்த ஆறுதலான உண்மை  "ஆறுதல் பரிசு" போலவே நமக்குப்பெரிதாய்ப்
பயன் தராது !

ஆனால், வாழ்க்கையை நம்முடைய முழு-பொறுப்பில் எடுத்துக்கொள்ளும்
புத்தி-சுவாதீனமிக்க , துணிவார்ந்த தொரு தீர்மானத்தை நாம் ஒவ்வொருவரும்
மேற்கொள்ளும் பட்சத்தில், மேலோட்டமானவை அனைத்தையும் நாம் நம்
வாழ்க்கையிலிருந்து அகற்றிவிடும் பட்சத்தில் முதன்முதலாக அசலான
மனித வாழ்க்கையினுள் நாம் பிரவேசிப்போம்!

    -  மா.கணேசன்/ 20.03.2016







Thursday, 17 March 2016

வியப்பு-->விசாரம்-->வியப்பு


                           !?!   

     ஞானி என்பவன் திடீரென ஒரு நாள்
     ஞானியாகிவிடுவதில்லை - அவன்
     தொடக்கத்திலிருந்தே ஞானியாகவே
     தொடங்குகிறான் !
     ஞானியின் அடிப்படை அம்சங்கள் :
     தூய கவனம், தூய வியப்பு, தூய ஐயம்
     இவை யாவும் ஒவ்வொரு குழந்தையிடமும்
     உள்ளன - பள்ளிக்குச் செல்லும் வரை !
     இவற்றைக் காப்பாற்றிக்கொள்பவன்
     முழு-ஞானியாக மலர்கிறான் !
     பிறர்:?

ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை வியப்பிலிருந்து வியப்பிற்குச்
சென்றடையும் பயணம் என்று சொல்லலாம். அதில் தொடக்க நிலை
வியப்பிற்கும் முடிவு நிலை வியப்பிற்கும் மாபெரும் வித்தியாசம்
உள்ளது. இந்த வித்தியாசம் தொடக்க-நிலை வியப்பைத் தொடர்ந்து
எழுகின்ற விசாரத்தின் விளைவாகும்.

மனித வாழ்க்கையை விளக்கும் மிகச் சுருக்கமான சூத்திரம்,
சமன்பாடு,குறியீடு, வாய்ப்பாடு எல்லாம் இதுதான் : !?!
முதலில், வாழ்க்கை (நாம் குழந்தையாகத் தொடங்கும் போது) வியப்பு
அல்லது ஆச்சரியத்துடன் ஆரம்பிக்கிறது! அடுத்து, " இது என்ன?"
" அது என்ன?" போன்ற கேள்விகளுடன் எழும் விசாரத்தினால் விளையும்
புரிதல் மீண்டும் நம்மை ஆச்சரியத்தில்,வியப்பில் ஆழ்த்துகிறது!
வாழ்க்கை  முழுமையடைகிறது !

தொடக்க-நிலை வியப்பு என்பதை  "தூய-வியப்பு" எனக் குறிப்பிடலாம்.
"தூய", ஏனெனில், ஒரு குழந்தையின் வியப்பில் எதிர்பார்ப்புகள் இல்லை,
முன்-முடிவுகள்இல்லை, அரை-வேக்காட்டுக் கோட்பாடுகளின் குறுக்கீடுகள்
இல்லை,  அறிவுச்சேகரத்தின்   அலைக்கழிப்பு  இல்லை,   யாதொரு
உள்- நோக்கமும் இல்லை , யாதொரு தேர்வும் இல்லை !

அடுத்து மனிதன் குழந்தையாகவே இருந்துவிடுவதில்லை ! குழந்தை
வளரும் போது அதன் வியப்பும் கூடவே வளர்கிறது. வியப்பு வெறும்
வியப்பாக மட்டுமே நில்லாமல் அது கேள்விகளைத் தூண்டுகிறது.

வியப்பு அல்லது ஆச்சரியம் என்பது ஆர்வத்தின் வெளிப்பாடு ஆகும்.
ஆர்வம் என்பது உள்ளார்ந்து எழும் உணர்வின் (பிரக்ஞையின்) சாரம்
ஆகும். மனித உணர்வு என்பது  " பெரு வெடிப்பு " எனப்படும் பிரபஞ்சப்
படைப்பின் ஆரம்பத்திலிருந்து உள்ளார்ந்து செயல்பட்டுவரும் பரிணாம
உந்துசக்தியானது தன்னை கால-வெளி உலகினுள் உருப்பெறச்செய்திடும்
வெற்றிகரமான முதல் பிரவேசம் ஆகும் !

ஆக, குழந்தையின் வியப்பு வெறும் வியப்பாக நிற்காமல் உலகை
நோக்கி  "இது என்ன?",  "அது என்ன?"  எனும் கேள்விகளைத் தூண்டி
புறவுலகின் பொருட்களை, நிகழ்வுகளை, விஷயங்களை தனித்தனியாக,
ஒவ்வொன்றாக   அறிந்து கொள்ளச்செய்கிறது. அடுத்தக் கட்டமாக, தனித்
தனிப் பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்பு
களையும் ; அத்தொடர்புகளினால் அமையும் உலகின் புதிய வளர்ச்சி
நிலைகளையும் அவற்றின் இயக்கங்களையும் அவை எதை இலக்காகக்
கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளுமாறு செய்கிறது.

வியப்பு  கேள்விகளைத்தூண்டி ,  கேள்விகள்  அனைத்தையும்
ஒருங்கிணைத்து , ஒட்டுமொத்த உலகையும் புரிந்து கொள்ளும்
நெடிய விசாரமாக விரிகிறது !

ஒரு அவதானிக்கும் உணர்வு என்கிற வகையில் மனிதனானவன்
முதலில் தனக்கு அருகிலுள்ள சுற்றுப்புறத்திலும், அதையடுத்தக்
கட்டத்தில் பரந்த பிரபஞ்சத்திலும் தன்னுடைய இடத்தையும்,
உலகுடனான தொடர்புறவையும், பணி மற்றும் பாத்திரத்தையும்
புரிந்து கொள்ளும்படி  உந்தப்படுகிறான். இத்தொடரின் முடிவில்,
அதாவது  தனது  இடத்தையும்,  தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள
தொடர்புறவையும் புரிந்து கொண்ட பிறகு; அதுவரையிலும் அவனது
தேடலும், ஆய்வும், விசாரமும்  பிற குடும்ப, சமூக, அன்றாட
விவகாரங்களால், மதிப்பீடுகளால் தடைப்படாமல் தக்கவைக்கப்படும்
என்றால், இறுதியானதும், அதி முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு
கட்டத்தை மனிதன் எட்டுகிறான். அதாவது, பரந்த பிரபஞ்சத்தையும்
அதிலுள்ளவற்றையும் அறிகிற இந்த  'தான்'   "யார்?" என தன்னைப்
புரிந்து கொள்ளும் கட்டம் தான் அது.

மனிதன் எல்லாவற்றையும் அறிந்தாலும் தன்னை அறியவில்லையெனில்
அவனது புரிதல் முழுமையடையாது !  இது ஏதோ ஒட்டு மொத்த புதிர்
விளையாட்டில் மனிதன் ஒரு இறுதித்துண்டு என்கிற வகையில் ,
'போனால் போகிறது!' அவனையும் சேர்த்துப் புரிந்து கொள்வோம்
என்கிற  கரிசனத்தினால்  அல்ல.  மனிதன்தான்  ஒட்டு மொத்தப்
புதிரின் மையமாவான். பிரபஞ்சம்  மற்றும்  கடவுள்  உள்பட
யாவும்மனிதனையே சார்ந்துள்ளன. மனிதனின் தலையாய ஒரே
பணி  பிரபஞ்சத்தை முழுமைப்படுத்துவதும் கடவுளைக் கரையேற்றி
விடுவதும் தான்.

இங்கு மனிதன் என்று குறிப்பிடப்படுவது இரத்தமும், சதையும், எலும்புகளும்
சேர்ந்த இயற்கை மனிதனை அல்ல! மாறாக, உணர்வாக எழுந்த மனிதனையே
இங்கு குறிப்பிடுகிறோம். உண்மையில், உணர்வு தான் மனிதன்; உணர்வு
இல்லாத வெறும் உயிருள்ள உடல் என்பது ஒரு விலங்கு தான்.  மனித உடல்
என்பது உணர்வைத் தாங்கிடுவதற்கான ஒரு அமைப்பு அல்லது பாத்திரம்
மட்டுமே. இந்த உணர்வு எனும் அம்சத்தினால் தான் மனிதனுக்கான
முக்கியத்துவம் என்பது எழுகிறது. மேலும், மனித உணர்வானது மேன்மேலும்
பரிணமிக்க(வளர)க் கூடியதாக இருப்பதனால் அவ்வுணர்வுப் பரிணாமத்தின்
உச்சமான "முழு-உணர்வு" அல்லது  "பேருணர்வு"  என்பதை எட்டுவதற்கான
உள்ளுறையாற்றலையும் உட்பொதிவையும் கொண்டிருப்பதினாலேயே
மனித உணர்வானது  அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்பட
வேண்டியதாயுள்ளது.

ஆனால், மனித உணர்வின் இந்த விசேட  முக்கியத்துவத்தை ஒருசில
தத்துவஞானிகளையும், ஆன்மீக அனுபூதியாளர்களையும் தவிர பிறர்-
குறிப்பாக  விஞ்ஞானிகள் இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை!
வெகு சமீப காலத்தில், குறிப்பாக 'குவாண்டம்' பௌதீகத்தின் அதிரடியான
சில கண்டுபிடிப்புகளின் முடிவுகள் விஞ்ஞானிகளை 'உணர்வு' பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு செய்துள்ளதாகத்தெரிகிறது.

ஆனால், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் விஷயத்தில் தனிமனிதர்கள்
விஞ்ஞானிகளையோ, பிற நிபுணர்களையோ சார்ந்திருக்கத் தேவையில்லை.
மாறாக, நாம் ஒவ்வொருவரும் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கான
அனைத்து உள்ளுறையாற்றலையும் நாம் ஒவ்வொருவரும் உட்பொதிவாகப்
பெற்றுள்ளோம்.  நாம்  செய்யவேண்டியதெல்லாம்  நமது  மேற்புறச்
சுயத்திலிருந்து மேலோட்டமாக அல்லாமல், நமது சுயத்தின் உள்ளுறை
யாற்றலின் அடியாழத்திலிருந்து இருப்புக்கு(வாழ்க்கைக்கு) பதிலளிப்பது
மட்டுமே.

வியப்பு அல்லது ஆச்சரிய உணர்வு ஏன், எதற்காக மனிதனிடம் உள்ளது?
ஆச்சரியம் கொள்ளுதல்  என்பது மனித உணர்வின் மிக அடிப்படையான
வெளிப்பாடாகும். ஆச்சரியப்படுதல் என்பது அறிதலுக்கான வழியை
ஏற்படுத்தும் முன்புறக்கதவாகும். அக்கதவின் வழியே ஒன்றை அறிந்து
கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்குமான உணர்வின் முனைப்பு
பிரவேசிக்கிறது. அம்முனைப்பு கேள்விகளின் வழியே வெளிப்படுகிறது.
ஆச்சரியம் ஏற்படாமல் கேள்வி இல்லை; கேள்விகள் இல்லாமல் அறிதலும்
புரிதலும் இராது! அறிதலும், புரிதலும் தான் உணர்வின் ஒரே தாகம் ஆகும்.

அறிதலையும், புரிதலையும் கொண்டு உணர்வு என்ன செய்யப்போகிறது ?
முழுமையான புரிதல் தான் உணர்வின் இலக்கு .  ஏனெனில், முழுமையான
புரிதல் தான் முழுமையான உணர்வு;  முழுமையான இருப்பும் அதுவே!
மனித உணர்வு எனும் சிற்றுணர்வு, அதை ஏன் 'சிற்றுணர்வு' என்கிறோம்
என்றால், உணர்வின் முதல் உதயம் என்பது முதன் முதலில் மனிதனுடன்
தான் (பரிணாமக் களமான இப்பிரபஞ்சத்தில்) தோன்றுகிறது. அதற்கு முன்
அவ்வளவு தெளிவான உணர்வு எதுவும் தோன்றிடவில்லை ! மனிதனுக்கு
முந்தைய ஜீவிகளிடம் வெளிப்பட்டது புறத்தை நோக்கிய வெறும் புலன்
உணர்வு மட்டுமே. மனிதனிடம் தான் புறம் குறித்ததும், தன்னைக்குறித்தது
மான "சுய உணர்வு" என்பது தொடங்கியது. ஆதி மனிதனிடம் முதன்
முதலாக வெளிப்பட்டது உணர்வின் உதயம் மட்டுமே. பிறகு படிப்படியாகத்
தான் மனிதன் சுய உணர்வுக்கு வந்தான்; இன்னும் சொல்லப்போனால்,
நம்மில் ஏராளமானோர் இன்னும் சுய உணர்வுக்கு வந்த பாடில்லை ! ஆக,
மனிதனிடம் வெளிப்பட்டது உணர்வின் சிறியதொரு தொடக்கம் மட்டுமே
(அதுவே உணர்வின் இறுதிச்சொல்லோ, இறுதி நிலையோ அல்ல)என்பதால்
தான் மனித உணர்வைச்  'சிற்றுணர்வு' என்கிறோம்.

ஆக, இச்சிற்றுணர்வு தன்னைப் பெருக்கிக் கொண்டு முழு-உணர்வாக
மலர்வதற்காகத்தான் அது வியக்கிறது, ஆச்சரியம் கொள்கிறது, கேள்வி
எழுப்புகிறது,கேள்விகளைக்கொண்டு நெடிய விசாரத்தில் ஈடுபடுகிறது;
விசாரத்தின் வழியே அறிதலையும், புரிதலையும் வளர்த்துக்கொள்கிறது'
புரிதலுடன் இணைந்து உணர்வும் வளர்கிறது,  பெருகுகிறது ;   இறுதியில்
முழு-உணர்வாக மலர்கிறது.

உண்மையில் மனிதன் புரிந்து கொள்ள விழைவது புறத்தேயுள்ள
பிரபஞ்சத்தையோ  அல்லது  வேறு எதையோ அல்ல.  உண்மையைச்
சொன்னால், தான் எதைப்புரிந்துகொள்ளவேண்டும் என்கிற தெளிவு
மனிதனிடம் தொடக்கத்தில் இருப்பதில்லை ! நம் பலரது விஷயத்தில் அது
கடைசிவரையிலும் இருப்பதில்லை ! ஒரு வகையில், புரிந்து கொள்ள
வேண்டும் எனும் மனித விழைவை கண்ணுக்கு முன்னே இருக்கும்
உலகம் தன் பக்கம் ஈர்த்துக்கொள்வதாயுள்ளது எனலாம். ஏனெனில்,
மனிதன் தனது அகத்தைப்பற்றிய உணர்வுக்கு வருவதற்கு முன்
புறவுலகின் மேற்புறம் மனிதனின் மேற்புறச்சுயத்தின் கவனத்தை,
உணர்வை தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறது.

புற உலகிற்கு ஒரு உட்புறம்(அகம்) இருக்குமானால் மனிதனே அதன்
அகமாக அமைகிறான் (பரிணமித்துள்ளான்). புறவுலகின் மேற்புறத்தை
மனிதனின் மேற்புறச்சுயம்தான் ஆராய்கிறது. புறவுலகின் உட்புறத்தை
ஆழமாக அறியவும்,ஆராயவும் புகும் மனிதன் தனது அகத்தை, தனது
உட்புறத்தை நோக்கித் திரும்பிடுகிறான். ஆனால், மனிதன் தன்னில்
முடிந்து போனவன் (பூரணமெய்தியவன்) அல்ல என்பதால் அவன்
உண்மையில் புரிந்து கொள்ளவேண்டிய நிஜம் என்பது உருப்பெற்ற,
மட்டுப்பாடான 'தன்னை' அல்ல ! மாறாக, இன்னும் உருப்பெறாத,
வெளிப்படாத , இறுதியாக 'தான்' என்னவாக ஆகக்கூடுமோ அந்த
இறுதி நிஜத்தை, நிலையைத்தான் ஒவ்வொரு மனிதனும் அறிந்திடவும்,
புரிந்திடவும் வேண்டும்.

"தன்னை அறிதல்", "சுயத்தை உணர்தல்" என்பது மனிதன் 'தான் என்னவாக
இருக்கிறான்' என்பதைப்பற்றியதல்ல. அறிதல், புரிதல் எனும் செயல்பாடுகள்
தன்னை ஒருவன் நிலையாக வைத்துக்கொண்டு தனக்கு வெளியே உள்ள
உலகையோ, உலகில் உள்ள பொருளையோ, எதையோ அறிவதில்லை.
மாறாக, எந்த மனிதன், "தான் யார்?" என்ற,  தன்னைப்பற்றிய கேள்வியை,
சாதாரணமாக எல்லோராலும் கேட்கத்தோன்றாத , சுலபமாக சாத்தியப்படாத,
அந்த அசாதாரணமான , அரிய கேள்வியைத் தன்னிடமே  கேட்கிறானோ,
தன்னை அறியத்தலைப்படுகிறானோ, அவன் தனது அசலான முகத்தை,
அடையாளத்தை, தனது இறுதியான நிஜத்தை, தனது முழுமையைத்தான்
குறிவைத்துள்ளான் என்றாகும். ஏனெனில், அறிதல், புரிதல் எனும் வழிமுறை
யானது மாற்றமுறச்செய்யும் ஒன்றாகும்.

மனிதன் தன் உள்ளார்ந்த தன்மையில், உணர்வில் சிறிதும் மாறாமல்
எவ்வொரு கலையையும், தொழில் நுட்பத்தையும், திறமையையும் கற்றுக்
கொள்ள முடியும். இந்தக்கற்றல், அறிதல், புரிதல் என்பது அன்றாட, உடனடித்
தேவைகளினால் தூண்டப்படும் ஒன்றாகும். இவ்வழியே மனிதன் தனது
உடனடிப்பயன்களைப் பெற்று வெறுமனே உயிர் பிழைத்திருக்கலாம்,
அவ்வளவு தான்!  இவ்வழியே மனிதன் தன் இருப்பின், வாழ்க்கையின்
அர்த்தத்தையோ, முழுமையையோ, நிறைவு மற்றும் மகிழ்வமைதியையோ
பெற முடியாது. இவை யாவும் தன்னை மாற்றமுறச்செய்திடுகிற இறுதிப்
புரிதலை அடையும் விதமாக ஒருவன் மேற்கொள்ளும் இடையறாத
விசாரத்தின் வழியாக மட்டுமே பெற முடியும்.

எவன் ஒருவன், தனது உடனடித்தேவைகளையும், பிற அன்றாடத்
தேவைகளையும் கடந்து,  இறுதிப் பயனைக்குறிக்கும்உயர்-தேவையைத்
தேடுகிறானோ அவனே முழுமனிதனாக ஆகிறான். ஆக,  அறிதல், புரிதல்
என்பது முழுமையடைதலையே இலக்காகக் கொண்டுள்ளது. இத்தகைய
உன்னத புரிதலை அடைவதற்கான வழியின் முன் வாசலாக விளங்குவது
தான்  "வியப்பு" எனும் உணர்வு. வியப்பு என்பது வெறுமனே வியந்து
நிற்பதற்காக அல்ல !

குழந்தையின் வியப்பு எவ்வளவு கள்ளங்கபடமற்றதோ, அவ்வாறே
உள்ளீடற்றதும் ஆகும். குழந்தையின் வியப்பில் தொடங்கிய அறிதலுக்கான
பயணம் முடிவில் ஞானியின் வியப்பில் முழுமையடைகிறது. ஞானியின்
வியப்பு நுண்ணறிவினால் நிரம்பி வழியும் முழுமையான புரிதலின்,
ஞானத்தின் வெளிப்பாடு ஆகும்.

அறிதலின் பயணம் புரிதலில் முடிவடைந்தாலும் வியப்பு என்பது என்னவோ
ஒரு போதும் குன்றுவதில்லை, முடிவிற்கு வருவதில்லை என்பதுதான் ஆச்சரியம்!
தொடக்க நிலை வியப்பு உள்ளீடற்றது என்பதன் அர்த்தம் முழு நிறைவான
உள்ளீட்டால் நிரப்பப்படுவதற்கான வெளியாக (காலியிடமாக) உள்ளது
என்பதே !

இறுதி நிலை வியப்பு முழுமையின் வெளிப்பாடு ஆகும். அதில் புகார்கள்
இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை, யாதொரு முடிவிற்கும் வரவேண்டுமென்ற
தேவை இல்லை, கொள்கை கோட்பாடுகள் இல்லை, அனுபவம் தேடும் வேட்கை
இல்லை, அறிவுச்சேகரத்தின் சுமை இல்லை, யாதொரு உள்-நோக்கமும் இல்லை,
வெளி-நோக்கமும் இல்லை, யாதொரு தேர்வும் இல்லை, தேடலும் இல்லை !

தொடக்கத்தில் இருப்பு, வாழ்க்கை என்பது என்னவென்று தெரியாத புரியாப்
புதிராக இருந்தது ! முடிவில் இன்னதென இனங்கண்டு கொள்ளப்பட்ட, புரிந்து
கொள்ளப்பட்ட புதிராக விளங்குகிறது !

    விடுவிக்கப்பட்டும் புதிர்
    புதிராகவே விளங்குகிறது
    என்பதுதான் ஆச்சரியம் !

17.03.2016/மா.கணேசன்.



















Saturday, 12 March 2016

மனிதன் என்பவன் யார் ?


     மனிதன் என்பவன் யார் ?


மனிதனைச் சமூக மிருகம் என்று ஒருவர் வரையறுத்தார். மனிதனின்
சமூகத்தன்மை இங்கு முதலிடம் பெற்றது.  இன்னொருவர் மனிதனைத்
தெய்வப்பிறவி  இறைத்தன்மை கொண்டவன்  என்றார்.    மூன்றாமவர்
மனிதனை அறிவுப்பூர்வமானவன் என்று வரையறுத்தார். அடுத்து
ஒருவர், மனிதனை பொருளாதார ஜீவி என்று வரையறுத்தார்.
இன்னொருவர் பாலியல் பிரானி என்றார்.
   " இவர்கள் சொன்ன எந்த ஒரு வரையறையும் மனிதனுக்குப் பொருந்தாது.
    மனிதன் வரையறையற்றவன். அவன் சுதந்திரமானவன். அவனது
    வரையறை அவன் ஓர் இன்மை என்பது. அவன் பொருளாதாரமோ,
    தெய்வமோ, பாலுணர்ச்சியோ, அறிவோ, உடலோ, அல்ல. அவன்
    எதுவுமில்லை. அவன் சுதந்திரன் ; அவன் ஒரு இன்மை "
என்பதாக சார்த்தார் கூறுகிறார்.
    "இப்படி மனிதனை எதுவுமில்லை என்பதில் தான் மனித சுதந்திரம்
    அடங்கியுள்ளது. மனிதன் ஏதாவதொன்றாக இருக்கும் வரைஅவன்
    அதனால் தீர்மானிக்கப்படுகிறான் "
என்பதாகவும்,
    "அவனது சுதந்திரம் அந்த வரையறையினால் கட்டுப்படுத்தப்படுகிறது
     ஆனால், மனிதன் என்பவன் இதுவரைக் கூறப்பட்ட வரையறைகளில்
     எதுவுமில்லை. அவன் சுதந்திரமானவன் எனும்போதுஅவன் எதுவாகவும்
     இருக்கும் சுதந்திரத்தை ஈட்டுகிறான். "
என்பதாகவும் சார்த்தர் கூறுகிறார்.
     "மனிதன் ஓர் இன்மை. அவன் தான் எதுவாக இருக்க வேண்டுமென்பதை
      அவன் தானே நிர்ணயித்துக்கொள்ளலாம். அது அவனது சொந்தத் தேர்வு.
      அதற்கான சகல பொறுப்புகளும் அவனையே சார்ந்தவை. அவன் எதுவுமே
      இல்லை என்பதால் அவன் யாராக இருக்கவிரும்புகிறானோ, அதுவாக அவன்
      ஆகிக்கொள்ளலாம். அவனேதான்  அவனை  ஆக்கிக்கொள்ள  வேண்டும்.
      சூழல்களோ, தலைவிதியோ அல்ல."
என்கிறார் சார்த்தர். இவ்வளவையும் சொன்ன சார்த்தர்,
    "மனிதன் அவனை ஆக்கிய சக்திகளினால் கைவிடப்பட்ட மிருகம்"
எனவும் குறிப்பிட்டுள்ளார்!  இவற்றுடன்,
   "மனிதன் உளச்சிக்கல்களில் மீட்பின்றி மாட்டிக்கொண்டுள்ள ஒரு மிருகம்"
எனும் ப்ராடிய கூற்றையும் சேர்த்துக்கொள்வோம்.
யானையைத்  தடவிப்பார்த்த குருடர்களைப்போல ஒவ்வொருவரும் மனிதனை
ஒவ்வொன்றாக; சமூக மிருகமாக, தெய்வீகப்பிறவியாக, அறிவுஜீவியாக,
பொருளாதார விலங்காக, பாலியல் பிராணியாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால்
    "மனிதன் என்பவன் இவையெதுவுமல்ல அவன் ஒரு இன்மை"
என்பதாக சார்த்தர் குறிப்பிடுகிறார்.
ஆனால், சார்த்தர் குறிப்பிடுகின்ற 'இன்மை' தெளிவற்றதும் உள்ளீடற்றதுமாக
உள்ளது. 'மனிதன் இதுவோ,அதுவோ, எதுவுமல்ல; அவன் சுதந்திரன்; அவன் ஒரு
'இன்மை' என்பதன் அர்த்தம் என்ன?
சார்த்தர் கூறியதற்கு மாறாக, மனிதன் என்பவன் மேற்சொன்னவற்றில்
குறிப்பாக எதுவொன்றாகவும் மட்டும்  இல்லாமல் அல்லது குறுக்கப்படாமல்
ஒரேசமயத்தில் எல்லாவுமாகவே இருக்கிறான்.
அதாவது, மனிதன் ஒரே நேரத்தில் சமூக ஜீவியாகவும், தன்னில் சொந்த
ஜீவியாகவும், பொருளாதார ஜீவியாகவும், பாலியல் ஜீவியாகவும், உடலாகவும்
மனமாகவும், அறிவாகவும் இருக்கிறான்!  இவை யாவும் மனிதனுடைய பல
பக்கங்களைக்காட்டுகின்றன. அதே நேரத்தில், மனிதன் இவற்றுடன் முடிந்து
போவதில்லை. அவனுக்கு இன்னுமொரு முக்கிய பக்கம், பரிமாணம் உள்ளது!
மனிதன் பூரணமானவனல்ல. தன்னை நிறைவு செய்கிற, பூரணப்படுத்துகிற
அந்தப்பக்கத்தை, பரிமாணத்தை மனிதன்,   ஒவ்வொரு மனிதனும்
கண்டடைந்தாக வேண்டும்.   அதை நேரே உணர்ந்தறிவதில் தான் அவனது
சுதந்திரம், விடுதலை, அர்த்தம், முழுமை, யாவும் அடங்கியுள்ளன. அவன்
எதுவாக ஆக விரும்புகிறான் என்கிற தேர்வில் அல்ல!
மனிதன் "தனது அறிவோ, உடலோ அல்ல; அவன் ஒரு இன்மை" எனும் கூற்று
"மனிதன் என்பவன் அவன் எண்ணங்களோ, மனமோ, உடலோ அல்ல; அவன்
ஒரு ஆன்மா !" என்கிற இந்திய ஆன்மீகக்கருத்தை ஒத்திருப்பதாகத் தெரிகிறது!
அதாவது, சார்த்தரின் 'இன்மை' என்பது 'ஆன்மா' என்பதை ஒத்திருப்பதாக
உள்ளது.  'இன்மை', 'ஆன்மா'  இந்த இரண்டுமே பூடகமான விஷயங்களாகவே
உள்ளன. சார்த்தரின் கூற்றுப்படி 'இன்மை' என்பது ஒன்றுமில்லாத வெறுமை
என்பதாக தொனிக்கிறது. மனிதன் ஒரு இன்மை அதாவது ஒரு காலி
இழுப்பறை போன்றவன், அதில் அவனவன் தான் விரும்பியதைக்கொண்டு
இட்டு நிரப்பிக்கொள்ளலாம் என்றாகிறது!
ஆனால், இவ்வழியில் சுதந்திரம் சாத்தியமில்லை. ஏற்கனவே வாழ்க்கையை
நாம் ஒவ்வொருவரும் நாம் விரும்பியதைச்செய்வதற்கும், அடைவதற்குமான
ஒரு  நல்வாய்ப்பு என்பதாக,  தாந்தோன்றித்தனமாக எடுத்துக்கொண்டுள்ளோம்!
அப்படியே நாம் விரும்பியதைச்செய்தாலும் அடைந்தாலும் அவற்றின்
விளைவுகளைக் கொண்டு நாம் நிறைவடைவதுமில்லை, மகிழ்வமைதி
பெறுவதுமில்லை!
சார்த்தர் சொல்கிறபடி,  ஒருவகையில் 'மனிதன் எதுவாகவும் இல்லை'
என்பது உண்மை தான். அதற்காக 'அவன் யாராக இருக்க விரும்புகிறானோ
அதுவாக அவன் ஆகிக்கொள்ளலாம்' என்பது ஏதோ மந்திரதந்திரம் போல
உள்ளது! அவன்' எதுவாகவும் ஆகிக்கொள்ளலாம்' என்பது எவ்வகையில்
அவன் 'எதுவாகவும் இல்லை' என்பதை விட மேலானதாக அல்லது விடுதலைப்
படுத்துவதாக விளங்கும்? இவ்வகையிலெல்லாம் இந்த இருத்தலியல் வாதிகள்
கூறுகிற அபத்தத்திலிருந்து நாம் தப்பவே இயலாது.
மாறாக, மனிதன் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். தான்
உண்மையில் யார்? என்பதைக் கண்டடைவது மட்டும் தான். மனிதன் என்பவன்
ஒரு கேள்விக்கான பதிலாகவோ, அல்லது ஒரு புதிருக்கான விளக்கமாகவோ
தோன்றியவனல்ல. அவன் புதிரால் பிறப்பிக்கப்பட்ட புதிராவான். மனிதன்
ஒரு புதிர்!  முள்ளை முள்ளால் எடுப்பது போல புதிரைப்புதிரால் விடுவிக்கும்
புதிர்!
மனிதன் எதுவாகவுமில்லாத  'இன்மை' என சார்த்தர் கூறியுள்ளது உண்மையில்
எதைக்குறிக்கிறது?  அவர் மிகச் சரியாகவே மனிதன் ஒரு சமூக விலங்கோ,
பொருளாதார அலகோ, பாலியல் பிராணியோ, அறிவோ, உடலோ அல்ல என்று
சொல்கிறார். இவ்வாறெல்லாம் மனிதனை வரையறுக்க முடியாது; எல்லா
வரையறைகளையும் கடந்தவன் மனிதன் என்கிற முடிவு வரை அவர்
சொல்லியது சரியே!  அதேவேளையில், எந்த வரையறையும் மனிதனுக்குப்
பொருந்தாது என்பதால் அவசரப்பட்டு , அவன் ஓர் 'இன்மை' என்கிற முடிவிற்கு
சார்த்தர்  வந்துவிட்டதாகத் தெரிகிறது. மனிதன் ஓர் 'இன்மை' என்று சொன்னதன்
மூலம் அவன் ஓர் "புதிர்" என்கிற புரிதலுக்கு வெகு அருகாமையில் வருகிறார்.
ஆனால், உண்மையை அவர் தவறவிட்டு விடுகிறார்.  என்ற போதிலும் சார்த்தர்
மூளியாக்கப்பட்ட மனிதனுக்கு தனது 'இன்மை' என்ற கருத்தின் மூலம் அழகு
சேர்த்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.
'மனிதன் எதுவாகவும் இல்லை அவன் ஒரு இன்மை'   என்பது ஒரு அற்புதமான
கண்டுபிடிப்புத்தான். அவர் எட்டிய இந்தப் புரிதல் தரும் உணர்வில் சற்று
நீடித்து நிலை கொண்டிருந்திருப்பாரெனில் 'இன்மை'யை விட இன்னும்
இனிமையான கண்டுபிடிப்பைச்செய்திருப்பார்!
இந்த இடத்தில்,  இக்கட்டுரையை  வாசிப்பவர்களும்  சற்று   நீடித்து நிலை
கொள்ளுதல்  அவசியம். ஆஹா!,  "மனிதன் எதுவாகவுமில்லாத இன்மை!"
அந்த இன்மையை எதைக்கொண்டு நிரப்பி ஈடு செய்ய இயலும் ? எதைத்
தேர்வு செய்தாலும்,  எல்லாத்தேர்வுகளும்   மனிதனை   வரையறுக்கவே
செய்திடும்! ஆகவே, அவன் தனது விருப்பத்தால்,எண்ணத்தால் எதுவாகவும்
ஆகிட முடியாது. மேலும், அவன் எதுவாகவும் இல்லாத நிலையில்தான்
அவனது சுதந்திரம் அடங்கியுள்ளது. அதில் அவன் எதைத் தேர்ந்தாலும்
எதுவாக மாறினாலும் அவனது சுதந்திரம் பறி போய்விடும். ஏற்கனவே அது
பறிபோய்தான் உள்ளது!
இக்கணம் வரையிலும் நாம் எல்லோரும் நாம் எதுவாகவும் இல்லை எனும்
இன்மையை  தவிர்ப்பதையே ,  அதிலிருந்து  தப்பிப்பதையே  செய்து
வந்துள்ளோம்.  எப்போதும்  ஏதோவொன்றாக  ஆகிடுவதையும், ஏதோ
வொன்றை தேர்ந்திடுவதையும் ,அடையாளப்படுத்திக்கொள்வதையும்
தான் செய்து வந்துள்ளோம்!  உண்மையில் சார்த்தர் கூறும்' தேர்வுச்சுதந்திரம்'
சாபக்கேடானது! மனிதன் ஏற்கனவே சுதந்திரமானவனுமல்ல அல்லது
அடிமையுமல்ல! அவன் எதையேனும் தேர்வு செய்திடுவானெனில்
அவ்வழியேதான் அவன் அடிமையாகிப்போகிறான், வரையறுக்கப்பட்டு
சிறைப்படுகிறான்.
மேலும், மனிதன் ஒரு இன்மையுமல்ல!  அவன் எதுவாகவும் இல்லை என்பது
வரை மட்டுமே அவனது இன்மை நீடிக்கிறது; அதாவது மனிதன் சுதந்திரனாக
ஆவதற்கான வாய்ப்பு திறந்திருக்கிறது. அதேவேளையில் அவன் தனது
'இன்மை'யிலேயே நீடிக்கவும் இயலாது! ஏனெனில், 'இன்மை' என்பது
மனிதனின் இறுதி நிஜமல்ல.  ஆகவே அவன் மிக விரைவாக தனது அசலான
நிலையைக் கண்டடைந்தாக வேண்டும். பிற போலியான, கற்பிதமான,
தேர்ந்துகொண்ட நிலைகள் யாவற்றையும் மறுக்கின்ற வகையில் மட்டுமே
இன்மை உணர்வு அவ்வப்போது தோன்றக்கூடும். அதேவேளையில் இன்மை
உணர்வில் ஒருவர் தரிப்பது என்பது பற்றிக்கொள்ள எதுவுமில்லாமல்
அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைப்போன்று அர்த்தமற்றதாகப்படும்.
ஆகவேதான் மனிதர்கள் தமது விருப்பத்தின்படி எதையாவது தேர்ந்தெடுப்பதன்
மூலம்  இன்மை-உணர்வை  முழுமையாகச் சந்திப்பதிலிருந்து தப்பிச்சென்று
விடுகின்றனர்.
'மனிதன், தான்   எதுவாக  இருக்க  வேண்டுமென்பதை,  அவன் தானே
நிர்ணயித்துக் கொள்ளலாம்'  என்கிற சார்த்தரின் பரிந்துரை தவறானது.
ஏனெனில், ஒரு நதியானது தான் சென்றடையவேண்டிய அடைவிடத்தை
புதிதாக அது நிர்ணயிக்கவோ, தேர்ந்தெடுக்கவோ தேவையில்லை. நதியின்
அடைவிடம் ஏற்கனவே குறிக்கப்பட்ட, நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. சமுத்திரம்
தான்  நதியின் அடைவிடம்.  நதி செய்யவேண்டியதெல்லாம் இடைவழியில்
எவ்விடத்திலும் தங்கித்தேங்கிடாமல் தனது ஒட்டத்தைப்பற்றிப்பாய்ந்து
செல்வது மட்டுமே. புவி ஈர்ப்பு விசை மட்டுமே நதிக்கு உதவி செய்திடும்.
நதியின் அடைவிடம் அல்லது முடிவிடம்  முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று
என்பதைப்போல், அதன் செல்லும் பாதை முன்-குறிக்கப்படவோ,
தீர்மானிக்கப்படவோ இல்லை. இதன் காரணமாக,  தான் செல்லக்
கூடிய பாதைகளையும், தனது அடைவிடத்தையும் நதியானது தனது
விருப்பப்படி  தீர்மானித்துக்கொள்ளவோ,தேர்வு செய்து கொள்ளவோ
முடியாது. புவி ஈர்ப்பு விசையை பின்பற்றி மட்டுமே நதி தன் முடிவிடத்தை
சென்றடைய இயலும். அது போலவே மனிதனும் முன்-குறிக்கப்பட்ட  தனது
இலக்கை, "மெய்ம்மை-நாட்டம்" எனும் விசையைப்பின் பற்றிச் சென்று
மட்டுமே அடைய இயலும்.
"மனிதன் என்பவன் இதுவரைக்கூறப்பட்ட வரையறைகளில் எதுவுமில்லை
அவன் சுதந்திரமானவன் எனும் போது அவன் எதுவாகவும் இருக்கும்
சுதந்திரத்தை ஈட்டுகிறான்." எனும் சார்த்தரின் கூற்று நம்மை வழி தவறச்
செய்திடும் ஒன்று. 'மனிதன் (உண்மையில் ) சுதந்திரமானவன் என்றால்,
அவன் எதையும் சார்ந்திருக்கவில்லை என்றாகிறது. அதில் அவன்
எதுவாகவும் ஆகிடும், அல்லது இருக்கும் சுதந்திரத்தை ஈட்டுகிறான் என்ற
பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் அத்தகைய தேர்வுக்கான  தேவையே
இல்லை!
நதியின் சுதந்திரம், தனது இலக்கை அடையும் பொருட்டு தொடர்ந்து பாய்ந்து
செல்வதற்கானது மட்டுமே தவிர தனது இலக்கைத் தேர்வுசெய்திடுவதற்கோ,
அல்லது இடைவழியில் தேங்கித்தங்கிடுவதற்கோ ஆனதல்ல! மனிதன் தனது
வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்து சென்றாக வேண்டும். இது கிட்டத்தட்ட
அவனுள் திணிக்கப்பட்ட "கட்டாயம்" எனலாம். அதை அவன் தவிர்க்க
முயல்வது என்பது தற்கொலைக்குச் சமமாகும். அர்த்தமுள்ள வாழ்க்கை
என்பது (அதன்) இலக்கைக்  குறிவைத்த  ஒன்றாகும்.   இடைவழியில்
தேங்கிடுவதும், தொடர்ந்து முடிவேயில்லாமல் பயணித்துக்கொண்டிருப்பதும்
அர்த்தமற்றதாகும். எவ்வொரு இயக்கமும் பயணமும் அதன் அடைவிடத்தைக்
கொண்டே அர்த்தம் பெறுகிறது. இலக்கற்ற இயக்கம் என்று எதுவும் இல்லை.
'மாறாத மாற்றம்' என்பதுமில்லை. மாற்றங்கள் அனைத்தையும் தீர்த்து
முடித்திடும்  நிலை ஒன்றுள்ளது!
மனிதன் சுதந்திரமானவன் என்றால் அவன் எதையும் (தன்னையும்) சார்ந்திருக்க
முடியாது; எதையும் தேர்வு செய்திடவும் முடியாது.   சார்ந்திருப்பதற்கும் தேர்வு
செய்வதற்கும் தேவை இருக்கும் வரை அவன் சுதந்திரமானவன் அல்ல!
அவன் அவனாக  இருக்கின்ற போது இன்மையும் இல்லை! எதையும் சார்ந்திராத,
தேர்வுசெய்திடாதவனே சுதந்திரன்.
12.3.2016.










Wednesday, 9 March 2016

அனுபவம், படைப்பு, வெளிப்பாடு

 அனுபவம், படைப்பு, வெளிப்பாடு

          *
     நதி செல்லும் வழி நெடுகிலும் அதற்கு
     பற்பல அனுபவங்கள் - அவற்றில்
     எதுவொன்றிலும் சிக்கித் தங்கிடாத
     நதியே சமுத்திரமடையும் !
     வற்றாத   சமுத்திரமே நதியின் முற்றான
     பாதுகாப்பும் இறுதிப் புகலிடமும்!
     இடைவழியிடங்களோ,  முடிவில்லா
     நெடும்பயணமோ அல்ல முக்கியம்!
     வெள்ளப்பெருக்கெடுத்திடும் வேகமே
     வெற்றியின் ரகசியம்!
     சமுத்திரச் சங்கமமே நதியை
     முழுமைப்படுத்திடும், நிரந்திர
     நிறைவு தந்திடும்  இணையில்லா
     இறுதி அனுபவம்.
          *

         அனுபவம் இருக்கிறது, ஏனெனில் மனிதன் இருக்கிறான். ஆனால்
அவனிடம் புரிதல் இல்லை. அதனால் மனிதன் மனிதனாக இல்லை!
வேண்டியது மனிதன் மனிதனாக ஆவதே; இதுவே அவன் செய்ய
வேண்டிய படைப்பு.
          இங்கு ஏராளமான கவிஞர்கள், கதைஞர்கள், படைப்பாளிகள்
இருக்கின்றனர். ஆனால் மனிதர்கள் இல்லை.ஏனெனில் "மனிதன்"
இருக்க வேண்டிய இடத்தை கவிஞனும், கதைஞனும், வினைஞனும்,
நிபுணனும், படைப்பாளி என்பவனும் பிடித்துக்கொண்டுவிட்டான்.
உண்மையில் அனுபவத்தைப் படைப்பாக மாற்றவேண்டிய சவால்
என்று ஏதும் உள்ளதா? அவரவரும் தமது விருப்பத்தின் மற்றும்
தேர்வின் வழியில் வழி தவறிச்செல்வதை நியாயப்படுத்தவில்லை
யெனில், "இல்லை" என்பது தான் இக்கேள்விக்கான சரியான
பதிலாகும். ஆக, அனுபவத்தை 'படைப்பாக' மாற்ற வேண்டிய சவால்
என்று எதுவும் இல்லை எனும் பட்சத்தில் 'படைப்பாளி' என்பவனும்
இல்லை!   ஆனால், எதார்த்தத்தில் (எதார்த்தம் என்பது இறுதியானது
அல்ல என்பதையும் நினைவில் கொள்வோமாக! ) ' படைப்புகள்'
என்பவைகளும் இருக்கின்றன!  'படைப்பாளிகள்' என்போரும்
இருக்கின்றனர்!
         உண்மையில் எவ்வொரு படைப்பும் ஒரு " முட்டுச் சந்து" போன்றதே.
எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான 'வாசகர்களை' ஒரு படைப்பு
ஈர்க்கிறதோ, அது பற்றி அதிகம் பேசப்படுகிறதோ - அதாவது
எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான வாசகர்கள் அந்த முட்டுச்
சந்தில் போய் முட்டிக்கொண்டுள்ளார்கள் என்பதைக் கொண்டே
ஒரு படைப்பின் 'வெற்றி' என்பது  சாதாரணமாக  தீர்மானிக்கப்
படுவதாயுள்ளது! இது வாசகர்களின் தனிப்பிரச்சினை. ஏனெனில்,
ஒரு படைப்பு வாசகர்களை எட்டுவதற்கு முன்பாகவே தானே
உருவாக்கிய முட்டுச்சந்தில் போய் முட்டிக்கொண்டிருப்பவன் தான்
'படைப்பாளி' என்பவன். ஆம், ஒரு படைப்பாளி என்பவன் தனக்குத்
தானே முட்டுச்சந்தாகவும், முட்டுக்கட்டையாகவும் விளங்குகிறான்,
அவனது சொந்த விருப்பம் மற்றும் தேர்வினால்.
        ஆனால், " சரியான வழி" என்பது எப்போதும் திறந்தேயுள்ளது.
அதாவது, நமது அனுபவத்தை படைப்பாக மாற்றுவதற்கு மேலாக
வேறொரு சவால் உள்ளது. அது என்னவெனில், அனுபவத்தை
பிரதிபலித்துப்பார்த்து புரிந்து கொள்வது என்பதே! இந்தச் செயல்
முறையின் வழியேதான் "வாழ்தல்" என்பது நிகழ்த்தப்படுகிறது.
அதாவது, வாழ்க்கை வாழப்படுகிறது. புரிதல் தான் வாழ்தல்,
வாழ்க்கை, யாவும்.  அப்புரிதலுக்கு வடிவம், உத்தி,  இன்னும்
சேர்ப்பதற்கு லவங்கம், பட்டை,அண்ணாசிப்பூ, ஏலக்காய் எதுவும்
வேண்டாம்.  அனுபவம் படைப்பாகாது.  அப்படியே படைப்பாக
ஆனாலும் அது மட்டுப்பாடானதே. ஏனெனில், அனுபவம் என்பது
எப்போதும் மட்டுப்பாடானதே! ஒரு அனுபவத்தின் சாராம்சம்
தொகுக்கப்பட்டு படைப்பாக முன்வைக்கப்படும் பட்சத்தில்
அப்படைப்பு தரும் புரிதலும் மட்டுப்பாடுடையதாகவே அமையும்.
        ஒரு அனுபவத்தை படைப்பாக மாற்றுவதைவிட  அதைச்
செரித்து பிரதிபலித்துப்பார்த்து அடைகிற புரிதலானது அந்த
அனுபவத்தைக் கடந்து  சென்றிட உதவிடும். இறுதி அனுபவம்
மட்டுமே முழுமையான புரிதலைத்தரும்.
        அனுபவம் எவ்வாறு படைப்பாகாதோ அவ்வாறே படைப்பு
என்பது புரிதலாகாது. ஏனெனில், படைப்பு என்பது மெய்ம்மைக்கு
எதிர்த்திசையில்,  புனைவிற்குள் புகுவதாகும். இதன் அர்த்தம்
எவ்வொரு இலக்கியப்படைப்பிலும் வாழ்க்கை பற்றியோ அல்லது
வேறு எதைப்பற்றியோ  யாதொரு புரிதலும் இருக்காது என்பதல்ல.
         மாறாக,பொதுவாக நாம் அறிந்த அதே வாழ்க்கை, அதே புரிதல்
எவ்வொரு படைப்பிலும் சுட்டப்படும். எவ்வளவு அதீதமாகப்
புனையப்பட்டாலும் ஒவ்வொரு நாவலும், கவிதையும், சிறுகதையும்
அதே மானிட உணர்ச்சிகளை - விருப்பு, வெறுப்பு, பகைமை ,
பொறாமை, சோகம், கோபம், தாபம், வேட்கை, துயரம், காதல்,
பாசம், இரக்கம், குரூரம், வஞ்சகம், . . . ஆகிய உணர்ச்சிகளை,
இயல்புகளைத் தூண்டி நினைவுபடுத்தாமல் எவ்வொரு இலக்கியப்
படைப்பும் படைப்பாகத் தெரியாது! ஆகவேதான், விஞ்ஞானமும்,
தத்துவமும், ஆன்மீகமும் படைப்புகளாகப் போற்றப்படுவதில்லை.
ஆனால், இவைதான் உண்மையில் வாழ்க்கையின் அர்த்தத்தை,
உட்பொருளை தமக்கேயுரிய  முறைகளில் அணுகுபவை.
         எல்லாவகை இனிப்புகளுக்கும் அடிப்படை "சர்க்கரை" என்பது
போல எல்லாவகை இலக்கியப் படைப்புகளுக்கும் மையமாகவும்
அடிப்படையாகவும் இருப்பது அதே அர்த்தமற்ற, மேலோட்டமான, கடந்துசெல்லப்படவேண்டிய, அதே வெறுமனே சவுகரியமாக உயிர்-பிழைத்திருத்தல் எனும் வாழ்க்கை தான்  . ஆகவேதான்
'படைப்பு' எனும் பெயரில் புனைவுக்கும், கற்பனைக்கும், புரியாத
எழுத்துக்கும்,  சொல்லப்படும் விதங்களுக்கும் உள்ளே தஞ்சம்
தேடுகிறோம். புனைவு,கற்பனை,புரியாத்தன்மை, பூடகம் ஆகிய
வற்றை அகற்றிடும் போது அங்கிருப்பது அதே அர்த்தமற்ற மேலோட்டமான
'வாழ்க்கை' தான். புனைவும் கற்பனையும் படைப்பாகாது. அசலான
படைப்பு என்பது கல்லிலோ,காகிதத்திலோ செதுக்கப்படுவதோ,
எழுதப்படுவதோ அல்ல.  மாறாக ஒவ்வொரு மனிதனின் உணர்வில்
(பிரக்ஞையில்) நிகழ்த்தப்படவேண்டிய உருமாற்றத்தில்
அடங்கியுள்ளது,
          படைப்பைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உள்ளன
எனலாம்.  ஒன்று:  கிடைக்கின்ற அனுபவங்களைக்கோர்த்து
பலவிதங்களில்- வடிவம், உத்தி, மொழித்திறன், சொல்லப்படும்
விதம், கற்பனை, புனைவு ஆகியவற்றைக்கொண்டு மாற்றியமைத்து
உருவாக்கப்படுபவை.இவற்றைப் பொதுவாக இலக்கியப்படைப்புகள்
எனலாம்.
         இரண்டாவது வகை,  ' இறுதி'-அனுபவத்தைக் கொண்டு, அதனால்
வெளிப்படும் படைப்பு. இதை படைப்பு என்று சொல்வதைவிட
"வெளிப்பாடு" என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
வெளிப்பாட்டிற்கு கற்பனையோ,புனைவோ, யாதொரு உத்தியோ,
மொழித்திறனோ, வேறு கூறுகளோ எதுவும் தேவைப்படாது.
         "இறுதி அனுபவம்" எனும் போது, அது  'பெரிய'   அல்லது  'அற்புத'
அனுபவம் என்று அர்த்தமாகாது.  மாறாக அனைத்து அனுபவங்களையும்
அலசி அகழ்ந்தாய்ந்து அவ்வழியே (அனைத்து) அனுபவங்களின்
மட்டுப்பாட்டைஉணர்ந்திடும் மனித உணர்வு உள்ளாகும்
உருமாற்றத்தின் விளைவே  இறுதி அனுபவம் என்பது. அனுபவங்களைச்
சிலாகித்து அவற்றில் சிறைப்படாத;  மேலும் மேலும் புதிது புதிதாக
அனுபவங்களைத் தேடாத மனமே, உணர்வே,  வெடித்து வேறொரு
உயர்-உணர்வாக எழுகிற இறுதி-அனுபவத்திற்குத் தயாராக உள்ள
மனம் அல்லது உணர்வாகும் - அதுதான் படைப்புப் பூர்வ மனமாகும்.
          பாரசீகக் கவி பரீத்தின் அட்டார் அவர்களின் "பறவைகளின் மாநாடு"
எனும்  வெளிப்பாட்டில், மூன்று வண்ணத்துப்பூச்சிகள் எரிகிற மெழுகு
வர்த்தி ஒன்றின் உண்மையை அறிந்து கொள்ளச் சென்றன. முதலாவது
வண்ணத்துப்பூச்சி மெழுகுவர்த்தியைச் சுற்றிப் பறந்து வட்டமடித்து
திரும்ப வந்து,  "அது ஒளி"  என்றது!  இரண்டாவது வண்ணத்துப்பூச்சி
மெழுகுவர்த்தியின் அருகே நெருங்கிச் சென்று தனது சிறகைச் சுட்டுக்
கொண்டு திரும்ப வந்து,  " அது எரிக்கின்றது !"  என்று சொல்லிற்று!
மூன்றாவது வண்ணத்துப்பூச்சி எரியும் மெழுகுவர்த்தியை வட்டமடித்து
நேரே அதன் பிழம்பிற்குள்ளே சென்றுவிட்டது! அது அறிந்து கொள்ள
விரும்பிய உண்மையை அறிந்து கொண்டது. ஆனால், அதனால்
திரும்ப வந்து தான் அறிந்துகொண்டதை பிற வண்ணத்துப்பூச்சிகளிடம்
சொல்ல முடியவில்லை. ஏனெனில் அது திரும்பி வரவேயில்லை !
          இப்போது நாம் கதையிலிருந்து கருத்துக்கு வருவோம். முதல் வண்ணத்
துப்பூச்சி மெழுகுவர்த்தியின் தன்மை குறித்த தனது கண்டுபிடிப்பான
"அது ஒளி" என்பதைப்பிடித்துக் கொண்டு, அதை விளக்கும் வகையில்
விரித்து நீட்டி ஒரு கவிதையாகப் படைக்கலாம்; அல்லது பல கவிதைத்
தொகுப்புகளைக்கூட வெளியிடலாம் ! இரண்டாவது வண்ணத்துப்பூச்சி
மெழுகுவர்த்தியை நெருங்கிச்சென்று  தனது சிறகுகளைச் சுட்டுக்கொண்ட
அனுபவத்தை  வடிவம், உத்தி,  கற்பனை, புனைவு, போன்ற பலவித
சரக்குகளைக்கொண்டு ஒரு பெரும் நாவலாக எழுதிவிடக்கூடும்!
மூன்றாவது வண்ணத்துப்பூச்சியைப் பொறுத்தவரையில் அது தானறிய
விரும்பிய உண்மையை அறிந்து  கொண்டுவிட்டது.  ஆனால்,
தான் பெற்ற அந்த இறுதி-அனுபவத்தைப் பற்றிச் சொல்வதற்கு அதனால்
திரும்ப வரமுடியவில்லை.
          ஆனால், மனிதஜீவிகளாகிய நம்மில் சிலர்  இறுதி-உண்மையை
தரிசிக்கிற வழிமுறையில் உள்ளாகும்  இறுதி-அனுபவத்தின் பிடியில்
தமது உணர்வு நிலையில் பெரும் மாற்றத்திற்கு உட்படுவதன் வழியே
அவர்கள் தமது பழைய மட்டுப்பாடான சுயத்திற்குத்தான் இறந்து
போகிறார்களே தவிர  அவர்கள்  புதியதொரு உணர்வாக, புதுச்சுயமாக
மீண்டு வந்துவிடுவதால் அவர்கள் மற்றவர்களிடம் தங்களுடைய
அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளமுடியாவிட்டாலும் விடுதலைப்படுத்தும்
அந்த அனுபூதி அனுபவத்தின் அவசியம் பற்றி நம்மிடம் எடுத்துச்சொல்ல
முடியும்!
         அத்தகைய வெளிப்பாடுகள் தமக்கேயுரிய வடிவம்,உருவமைதி,உத்தி,
பாணி, தனித்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அவ்வெளிப்பாடுகள்
எப்படிப்பட்ட பாத்திரத்தில் பரிமாறப்படுகிறது என்பது முற்றிலும்
முக்கியத்துவமற்றது. அவை சொற்களிலும், சொல்லப்படுகிற விதங்களிலும்
அடைபடாதவை. வெளிப்பாடுகள் என்பவை யாதொரு விசேட
பாத்திரத்தையோ, உத்தி, நடை உடை பாவனைகளையோ  உருவாக்கிக்
கொண்ட,  அல்லது தேர்ந்துகொண்ட பிறகு வெளிப்படுபவையல்ல.
வெளிப்பாட்டின் ஒரே பிரதான குறிக்கோள் அலங்காரமோ, அழகியலோ
வேறு எதுவோ அல்ல -  "குணப்படுத்துதல்" தான் அதன் ஒரே நோக்கம்.
         ஆனால்,    'படைப்பாளிகள்'  எனும் விசேடப்பிறவிகளாக, அல்லது ஒரு
தனி இனமாகத் தங்களை அறிவித்துக்கொள்ளும் சிலர்  அந்த அனுபூதி
யாளர்களின் குணப்படுத்துகிற, விடுதலைப்படுத்துகிற பேச்சு அல்லது
எழுத்தை,  "ஆன்மீகம்"  என முத்திரை குத்தி ஒதுக்கி ஓரம் கட்டி விடுவர்.
அல்லது, ஆன்மீகம் என்பது தங்களைப்போன்ற அதி மேதாவிகளுக்கு
மட்டுமே புரியக்கூடிய 'பெரிய்ய' விஷயம் என்று சொல்லி அதிலும் இறங்கி
குட்டையாகக் குழப்பும் வேலையைச்செய்வர்.
     ஏனெனில்,  பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லியவாறு,
மாமரத்தின் அடியில் நின்றுகொண்டு, மாம்பழத்தைப் பறித்துச் சாப்பிடாமல்
அம்மரத்தின் இலைகளையும், கிளைகளையும், பூக்களையும், பிஞ்சுகளையும்
எண்ணிக்கொண்டிருக்கும் அதிமேதாவிகள்தான் 'படைப்பாளிகள்'
என்போர்.
        கலை இலக்கியத்தின் சாரம் என்ன என்று கேட்டால் நம் 'படைப்பாளிகள்'
ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயத்தையே சாரம் என்பர். படைப்பாளிகளில்
பலருக்கு இக்கேள்வியைக்கேட்பதற்குக்கூட நேரமிருக்காது. அந்த அளவிற்கு
அவர்கள் படைப்புத்தொழிலில் ஈடுபட்டிருப்பர்!  சிலரைப்பொறுத்தவரை
சாதாரண மனிதனாக இருப்பதிலிருந்து மேலுயர்ந்து ஒரு படைப்பாளியாக
ஆவது தான் இலக்கியத்தின் இலக்கும் சாரமும் என்பர். சிலர்,  மனிதமனத்தின்
இருளைக்கடந்த கனிவு நன்மை, அழகு, மற்றும் ஆனந்தம் ஆகியவற்றை
வெளிப்படுத்துவது என்பர்.
        ஆனால், உண்மையில் எது கலையின், இலக்கியத்தின், விஞ்ஞானத்தின்,
தத்துவத்தின், ஆன்மீகத்தின், இன்னும் கல்வியின் இலக்காக, சாரமாக
இருக்க வேண்டும் என்றால்; எது மனிதனின் சாரமோ,எது பிரபஞ்சப்படைப்பின்
சாரமோ, எது இறுதி மெய்ம்மையோ, எதை நோக்கி ஒட்டு மொத்த பரிணாமமும்
செல்கின்றதோ, சுட்டுகின்றதோ அந்த ஒருமைதான் இலக்கியத்தின் சாரமாக
இருக்க முடியும், இருக்க வேண்டும்.
        ஆம், மனிதன், ஒவ்வொரு மனிதனும் மனிதனாக, முழு மனிதனாக ஆவதுதான்
அந்த ஒப்பற்ற சாரமும் இலக்கும். மனிதன் அடைந்தாக வேண்டிய உணர்வின்
பரிணாம உச்சமே தெய்வீகம்; அந்த உச்சத்தில் மட்டுமே கடவுள் தோன்றுகிறார்.
வேறு வகைகளில், வேறு வழிகளில், வேறு இடங்களில் கடவுள் எனும் மெய்ம்மை
இல்லை.
         நம் 'படைப்பாளிகளை'ப் பொறுத்தவரை அவர்கள் மேற்குறிப்பிட்ட சாரத்திற்கு,
இலக்கிற்கு, மெய்ம்மைக்கு, வெகு தொலைவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தத்தளித்துக்கொண்டிருப்பவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில், அவர்களில்
சிலராவது சரியான வழியைக் கண்டுபிடித்திடக்கூடும். மாறாக தமது சொந்த
கலையிலக்கியக் கோட்பாடுகளில் படிந்து விட்டவர்கள், ஏற்கனவே தமது  
பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டவர்களாவர்.
        நமது நவீனயுகப் படைப்பாளிகள், தமது புனைவுத்திறமையைக் காட்டி
வாசகர்களை பிரமிப்பூட்டுவதையும் யாவற்றுக்கும் மேலாக கனிவாய்க் கசிந்து
உருகிக் கண்ணீர் வடிக்கச் செய்வதையும் செய்து வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியின்
உளவியலைப்பற்றி சற்று விரிவாக நாம் இங்கு அலசியாக வேண்டும்.
         நெகிழ்வது, கரைந்து போவது, கண்ணீர் விடுவது எல்லாமும் நம் எல்லோரிடமும்
நிகழவே செய்கின்றது. ஆனால், அவை மிக மிக தற்காலிகமானவை. ஒரு கணத்தில்
கோடியில் ஒரு பாகம் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டவை. அதற்கு மேல்
நெகிழ்வுணர்வும் நிலைப்பதில்லை, நாமும் அதிலேயே தங்குவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விஷயங்களுக்கு நாம் மிக எளிதாகப் பழகிப்
போய்விடுகிறோம்  என்பதுதான்  மிகக்குரூரமான  உண்மை.  இப்போது  நாம்
நெகிழ்கிறோம், கண்ணீர் விடுகிறோம்; இப்போது(உடனே) வேறு விவகாரங்களுக்கு
திரும்பி விடுகிறோம். நாம் பெரிதும் அன்றாடத்தின் ஜந்துக்கள்!
          பழம் பேரிலக்கியங்களும், நவீன இலக்கியங்களும் மட்டுமல்ல; சாதாரண
தொலைக்காட்சித்தொடர்களும், மூன்றாம்- தரத் திரைப்படங்களும் கண்ணீர்
விடுமளவிற்கு நம் நெஞ்சைத்தொடுவதாய் உள்ளன. ஒரு புறம் நெகிழ்ச்சி,    
இன்னொரு  புறம் வீரம், காதல்,உயர் இலட்சியங்கள், சமூக முன்னேற்றம், தீவிர
செயலாற்றுதல் . . .  ஆகியவையும்  இலக்கியத்தின் கருப்பொருட்களாக
நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. இவைகளில்லாமல் யாதொரு கலை
இலக்கியப்படைப்பும் படைப்பாக முடியாது. இவற்றைக்கடந்து கலை இலக்கியம்
செல்ல முடியாது. இதுதான் கலை இலக்கியத்தின் மட்டுப்பாடு. மட்டுப்பாடு.
ஏனெனில், இவை யாவும் "உயிர்-வாழ்தலின்"  தளத்தைச் சேர்ந்தவை. அதாவது,
உயிர்-வாழ்தலின் உண்மையான குறிக்கோளை, இலக்கை, உயிர்-வாழ்தலைக்
கடந்த உண்மையான  வாழ்க்கையை  மறுப்பவை.
         கலை இலக்கியம் அதன் வழக்கமான கருப்பொருட்களுடன் உண்மையான
வாழ்க்கையை, வாழ்வின் அர்த்தத்தை, உண்மையை, இலக்கை,தன்னையறிதலை
கருப்பொருளாகக் கொள்ள முடியாது ! அவ்வாறு கொள்ள முனைவது  கலை
இலக்கியத்தின் முடிவை அறிவிப்பதாக அமைந்துவிடும்.
        இன்னும் நாம் புதியதொரு இலக்கியத்திற்குத் தயாராகவில்லை என்றே
சொல்லலாம். இலக்கியம் என்றவுடன் வழக்கம் போல 'கதை சொல்வது' அல்ல.
கதை என்கிற பெயரில்  கற்பனையான கதைமாந்தர்களை உருவாக்குவது,
அவர்களது குணாம்சங்களை சித்தரிப்பது, கதைச் சூழல்களையும்
சம்பவங்களையும், திருப்பங்களையும் கதையோட்டத்தையும்,முடிவையும்
கதைக்கு கதை வித்தியாசமாக அமைப்பது, இவையெல்லாம் இனி செல்லாது!
கற்பனையான கதை மாந்தர்கள் மட்டுமல்ல, நிஜ உலகில் உள்ள மனிதர்களும்
உண்மையில் மனிதர்கள் அல்ல!  மனிதன் மனிதனாக இல்லை என்பதன்
விளைவாகத்தானே  பல வகைப்பட்ட வரலாறும்  கதைகளும் தோன்றுகின்றன!
         முதலில் "தான் உண்மையில் யார் ?" என்பதை அறியாத இலக்கியப்படைப்பாளி
எவ்வளவு மகத்தான கதா பாத்திரங்களை உருவாக்கினாலும் அவற்றின் வழியாக
ஒருபோதும் நாம் 'மனிதன்' என்பவன் எத்தகைய மெய்ம்மை என்பதையோ,
அசலான மனித'வாழ்க்கை' பற்றியோ புரிந்துகொள்ள முடியாது. ஆம்,
தன்னையறிந்த ஒருவன் 'கதை எழுதப்போகிறேன் பேர்வழி' என்று கிளம்ப
மாட்டான். ஏனென்றால், கதை எழுதுவதைவிட தான் தொடங்கிய, தன்னையே
மறுபடைப்பு செய்து கொள்ளும் படைப்புபூர்வமான செயலை முழுமையாகச்          
செய்து முடிக்கும் தலையாய பணிஅவனுக்கு உள்ளது. உணர்வுபூர்வமாக
தன்னைத்தானே மறுபடைப்பு செய்து கொள்பவன் தான் உண்மையான
படைப்பாளி யாவான். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய படைப்பாளியாக
ஆவது அவசியம்.
          கதைச் சம்பவங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், எவ்வொரு
சிறு சம்பவமும் மனிதர்களை, குறைந்தபட்சம் ஒரு மனிதனையாவது
தொடர்பு படுத்தாமல்,மையப்படுத்தாமல் சம்பவிப்பதில்லை. கதையின்
ஓட்டத்தில், "அப்புறம் என்ன நிகழப்போகிறது?"  "அடுத்தது என்ன?"  என்பன
போன்ற எதிர்பார்ப்புக்களினால் ஒரு பயனும் விளையாது.  "அடடா அந்த
கதை நாயகிக்கு அப்படி ஒரு முடிவு நேர்ந்திருக்கக்கூடாது !" என நாம்
கண்ணீர் வடிக்கலாம். கதையாயினும், நிஜமாயினும் நமக்கு 'மரணம்'தான்
பெரிய, உச்சமான, மிக மோசமான சம்பவமாக இருக்கமுடியும் ! நம்மைப்
பொறுத்தவரை  மரணத்தை எப்படியேனும் (அந்தவொரு குறிப்பிட்ட
இக்கட்டான கணத்தில்) தவிர்ப்பதுதான் வாழ்க்கை! வில்லன் கையில்
கதை-நாயகி சிக்கக்கூடாது!  இவ்வளவுதான்  இலக்கியம்! ஆனால்,மரணத்தை
தவிர்ப்பதோ, தள்ளிப்போடுவதோ, அல்லது மரணத்தை எண்ணி எண்ணி    
செத்து செத்து பிழைப்பதோ அல்ல வாழ்க்கை! கதையிலும்,நிஜத்திலும்
சம்பவங்களும்,நிகழ்வுகளும்தான் முக்கியத்துவம் பெறுகின்றனவே தவிர
வழ்க்கை என்னவோ எப்போதும் விடுபட்டுப்போகிறது! காரணம்
வாழ்க்கையை நாம் தொடக்கத்திலேயே தவற விட்டுவிடுகிறோம்.
         ஆம், ஒவ்வொருவருக்கும் "தாம் இருக்கிறோம்!" என்கிற தரிசனம் தான்
சதா நிகழ்ந்துகொண்டேயிருக்கும் மூல-சம்பவம் ! அம் மூல-சம்பவத்திற்கு
முழுமையாகப் பதிலலிப்பதே வாழ்தல், வாழ்க்கை, யாவும்! முக்கியமாக
மனிதன் தன்னையும்  தனது இருப்பையும் புரிந்துகொள்வதற்கு கதைகள்
தேவையா ? மனிதனும், ஒட்டுமொத்த பிரபஞ்ச இருப்பில் அவனது இருப்பும்
ஒரு மாபெரும் மந்திரக்கதை தானல்லவா!  நம்மை உள்ளடக்கிய இம்-
மாபெரும் பிரபஞ்சம் உண்மையில் ஒரு மகத்தான படைப்பல்லவா!
         நாம் நம் பக்கத்து வீட்டு கந்தசாமியை புரிந்துகொள்ள ரங்கசாமியின் மகன்
ர.கந்தசாமியையும், தங்கராசு மகன் த.கந்தசாமியையும், இன்னும்
கு.கந்தசாமி , ச.கந்தசாமி போல எத்தனை கந்தசாமிகளைத் தேடிப்பிடித்து
ஒப்பிட்டுப்பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும் ? இவ்வழியே நம் கந்தசாமியை
புரிந்துகொள்ளத்தான் முடியுமா ? ஆனால், இதேபோன்ற ஒரு கதையைத்தான்
பிரபஞ்சவியலில் சில விஞ்ஞானிகள் கட்டிவிட்டுள்ளார்கள்! அதுதான்
"பல-பிரபஞ்சங்கள்" அல்லது  "இணை-பிரபஞ்சங்கள்" எனும் கோட்பாடு.
உள்ள ஒரு பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள , இல்லாத பொல்லாத,
பரிசோதிக்கவே வழியில்லாத,  கற்பனைப் பிரபஞ்சங்களைப் பற்றி சில
விஞ்ஞானிகள் பிதற்றிக்கொண்டுள்ளனர்.
          உண்மையில் புராணங்கள், தொல்கதைகள், இதிகாசங்கள், காப்பியங்கள்
யாவும் மனித இனத்தின் குழந்தைப்பருவத்திற்குரியவை எனலாம்.
அவைகளின் காலங்கள் முடிந்து விட்டன. ஒரு வேளை அவை இன்னும் நம்
குழந்தைகளுக்குத் தேவைப்படலாம் -  சிந்தனைக்கு உதவும் வகையிலான
கற்பனாசக்தியை தூண்டுவதற்காக,  உத்வேகமளிப்பதற்காக! இன்றைய
நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல், புனைகதை போன்றவை
கதை சொல்லலின் ஒரு வகை பரிணாம முயற்சிகள் எனலாம். கிட்டத்தட்ட
அவைகளின் காலமும் முடிவிற்கு வந்துகொண்டிருக்கிறது எனலாம்.
இனி கதை சொல்லல் என்பது அடுத்த கட்ட, முதிர்ந்த நிலைக்கு தாவிச்
செல்லுதல் வேண்டும். படைப்பாளிகள் என்போர் புதுப்புது கற்பனை
உலகங்களையும்,கதா பாத்திரங்களையும் படைப்பதை (கதை விடுவதை)
விடுத்து, உள்ள படைப்பான பிரபஞ்சத்தையும், அதில் குழம்பித்தவிக்கும்
மனிதனையும், அவனது அசலான வாழ்க்கையையும் புரிந்து கொள்ளும்
வழிமுறையில் வெளிப்படும் கதையைச் சொல்ல வேண்டும்.
         மனிதக்கற்பனைகள் அனைத்தையும், அனைத்துப் புனைவுகளையும்
திரட்டிச்சேர்த்தாலும் அனைத்தையும் விஞ்சிய பிரபஞ்சப் படைப்பின் கதையை,
அதில் நம் அசலான கதையை, மலினமான நம் கற்பனைகளையும்,
புனைவுகளையும் சேர்க்காமல் பிரபஞ்சத்துடன் ஒன்றிப்பெறும் தரிசனத்தையும்
புரிதலையும் கொண்டு கட்டமைத்தல் வேண்டும். அக்கட்டமைத்தலில்
விஞ்ஞான,தத்துவ, ஆன்மீக அனுபூதியணுகுமுறைகளும்
ஒருங்கிணைந்ததாக அமைதல் வேண்டும். ஒப்புவமையற்ற, உன்னதமான
அந்த ஒரே கதையைத்தான் ஒவ்வொரு காலத்திலும் செம்மைப்படுத்தி
மேன்மேலும்புரிதலைச் சேர்த்து சொல்லிச் செல்லவேண்டும்.
     உள்ளது பிரபஞ்சம் எனும் ஒரே படைப்புத்தான், அந்த ஒரே நெடுங்கதை தான்!
அக்கதையின்  பாத்திரங்களும் பிரதிநிதிகளும் தான் நாம். பிரபஞ்சத்தின்
தொடக்கம் தான் நம்முடைய தொடக்கமும். பிரபஞ்சம் என்பது சொல்லி
முடிக்கப்பட்டுவிட்ட கதையல்ல !  தொடர்ந்து வளர்ந்து செல்லும்
"பரிணாமக் கதை"!  இக்கதையில், என்னுடைய தனிக்கதை என்றும்
இன்னொருவனது  தனிக்கதை அல்லது சொந்தக்கதை என்றும் பிரிவுகள்
ஏதும் கிடையாது. எல்லோருடைய இருப்பின் இலக்கும், அடைவிடமும் ஒன்று
தான். எல்லா நதிகளும் ஒரே சமுத்திரத்தையே சென்றடைந்தாக வேண்டும்.
    ' படைப்பாளி' என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவனும்  பிரபஞ்சக்
கதையிலிருந்து சில கூறுகளைக் களவாடித்தான் கதையை எழுதுகிறான்.
உண்மையில் ஒவ்வொரு படைப்பாளனும் தான் உருவாக்கிடும் கதாபாத்திரத்தின்
கதையை எழுதுவதாகவே எண்ணிக்கொள்கிறான். ஆனால், அவன் தன்
கதையை, விதியைத்தான் தாறுமாறாக  எழுதிச்செல்கிறான்!  கதை
கேட்பவர்களாகிய நாமோ ஒவ்வொரு கதையின்,நாவலின் முடிவும் எப்படிப்
பட்டதாக இருக்கும் என பெரும் ஆவலுடனும் பதற்றத்துடனும் கதையோட்டத்துடன்
செல்கிறோம். ஆனால், தம்தம் கதையின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்க
வேண்டும் என்பது குறித்து நாம் சிறிதும் அக்கறைப்படுவதில்லை.
இலக்கியப்படைப்பாளிகளும் வாசகர்களும் தாங்கள் சாதாரண மனிதர்களைப்
போலல்லாமல் பெரிதாக இலக்கியத்தில் ஈடுபட்டுள்ளதாக கர்வம் கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களது இலக்கிய ஈடுபாடுகள் அவர்களை எங்கும் கொண்டு
சேர்ப்பதில்லை.
     ஒவ்வொரு மனிதனும் இப்பிரபஞ்சம் எனும் நெடுங்கதையில் தனது இடம், பங்கு,
பணி, பாத்திரம் என்னவென்று கண்டுபிடித்து நிறைவு செய்வதன் வழியேதான்
ஒவ்வொரு மனிதனின் மற்றும் பிரபஞ்சத்தின் நிறைவும், முழுமையும் எய்தப்படுகிறது.
பிரபஞ்சப்படைப்பின் கடைசி அத்தியாயமாக வெளிப்பட்டுள்ள மனிதன் அதை
முழுமைப்படுத்தி முடித்து வைத்திட வேண்டும்!
    ஆனால், 'படைப்பாளிகள்' என்போர் தங்களது படைப்புகளைக்கொண்டு
வாசகர்களின் சிந்தையைச் சிதறடித்து தவறான திசைகளில் செலுத்தி, தமது
கதைக்களன்களில் சிறைப்படுத்திவிடுகின்றனர். 'படைப்பாளிகளாக' அவதாரம்
எடுக்க விரும்பி தாங்கள் செய்யவேண்டியதை விட்டுவிட்டு பிரமனைப்போல்
படைப்புத்தொழிலில் இறங்குவதன் மூலம் 'படைப்பாளிகள்'  தற்கொலைசெய்து
கொள்பவர்களாகிறார்கள்!  தங்கள் படைப்புகளின் வழியே அவர்கள் வாசகர்களைக்
கொலை செய்பவர்களாக ஆகிறார்கள்!
     ஆம், மெய்ம்மையிலிருந்து தப்பியோடி கற்பனைகளிலும், புனைவுகளிலும்
புகுவது தற்கொலையல்லாமல் வேறென்ன? இத்தகைய தற்கொலைக்குத்
தூண்டுவது என்பது கொலையல்லாமல் வேறென்ன ?
   (9.3.2016)


ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...