Tuesday, 24 February 2026

முகம் இருக்க முகமூடிகள் எதற்கு!

 



 
 










முகமூடிகளைத்தூக்கி எறிவதற்காக நாம், பெரிதாக தியானம் போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். நமக்கு நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தாலே போதும். நமக்கு நாம் உண்மையாக இருக்கும்போது, நாம் பொறாமை கொள்ளவோ, பேராசைப்படவோ, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படவோ, பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ மாட்டோம்! 
தெரிந்ததை தெரியும் எனவும், தெரியாததை தெரியாது எனவும் சொல்லும் துணிவு இருந்தால் போதும். எவ்வித பாசாங்கும், வேடம் போடுவதும் நமக்குத் தேவைப்படாது! எதிலும் அகலக் கால் வைப்பது ஆகாது. பணம், செல்வம், பொருள், சொத்து எல்லாவற்றையும் விட முக்கியமானது, இழப்பதற்கு அஞ்ச வேண்டியது "நிம்மதி" மட்டுமே! நிம்மதியை காசு,பணத்திற்கு வாங்க முடியாது, கடனாகவும் பெற முடியாது, ஏனெனில், அது நமது இயல்பில் உள்ளமைந்திருக்கும், நம் முகம் போன்ற ஒன்று! நமது முகத்தை இழந்து முகமூடியை அணிந்தோமெனில், நம் நிம்மதியை இழப்பது உறுதி! 
எல்லோரும் முன்னே சென்றுவிட்டார்கள்; நாம் பின் தங்கி விட்டதாக எண்ணுவது பக்குவமின்மையைக் காட்டும். நாம் பின் தங்கினாலும், நம் வயது பின் தங்காமல் முன் செல்லும்! நோய், மூப்பு அடுத்தது என்ன? நாம் தனித்து விடப்பட்டதாக உணர்வது நல்லதற்குத்தான்; நாம் தனிமையில் இருக்கும்போதுதான், நம்மை நாமே சந்திக்கும் வாய்ப்பு அமையும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்! நம்மை நாம் சந்திக்காமல், நேரே எதிர்கொள்ளாமல்,  "நாம் நாமாக", அசலாக ஒருபோதும் இருக்க முடியாது!
இவை அறிவுரைகள் அல்ல! நம்மை நாம் அசலாகக் காண்பதற்கு உதவும் கண்ணாடி! நன்றி!


 -- மா.கணேசன்/ 04-01-2026/நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

முகமூடிகளே முகங்களாய்...

 
 




 








என்னைச்சுற்றிலும் நிறைய பரிச்சயமானவர்கள் 
இருக்கிறார்கள் - ஆனால், நண்பர்கள் இல்லை!
பத்து வருடங்கள், ஏன் நாற்பது வருடங்கள் கூட பரிச்சயம்!
உள்ளே ஒன்றைப் பூட்டி, புறத்தே வேறொன்றைக் காட்டி  
பழகுகிறார்கள், செயற்கையும் போலியுமாக!
ஆனால், அவர்களைப் போன்றவர்களுக்கிடையே 
முரண்களின்றி எவ்வாறு பழகுகின்றனர் என்பது 
ஆச்சரியமளிக்கிறது!
*
பரஸ்பரம் ஒருவருடைய முகமூடியை இன்னொருவர் 
அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதும், பாராட்டுவதும்
இது என்ன வகை நட்பு என்று புரியவில்லை!
எனக்கு மட்டும் இவர்கள் எல்லோருடனும் முரண்படுவது
எளிதாக எப்படிச் சாத்தியமாகிறது?
*
பொய்மையோ, நேர்மையின்மையோ அல்ல
அவர்களிடம் எனக்கு பிடிக்காதது!
மாறாக, அவர்களுடைய சுய மட்டுப்பாடும், 
மேலோட்டமான தன்மையும் தான்!
அவர்களின் ஆன்மாவின் ஆழத்திலிருந்து வரும் 
ஒரு சொல்லுக்காக நான் காத்திருந்து 
காத்திருந்து சோர்ந்து போனதுதான் மிச்சம்!
அவர்களுக்கு 30, 40, 50, 60, 70, வயதானாலும் 
எவ்வாறு தம்முள்ளே ஆழாமல் தங்கள் சுயத்தின் 
மேலோட்டிலேயே தங்கி வாழ்கிறார்களோ!
தம்முள் ஒரு பொக்கிஷப் பெட்டகம் உள்ளதென்பதை 
அறியாத அவர்கள் "தாங்களும் மனிதர்கள்தான்!" 
என்று கூசாமல் சொல்கிறார்கள்!
தங்களது சிந்தனையற்ற மட்டுப்பாட்டில் சந்தோஷமாக 
வாழ்வதாக எண்ணுகிறார்கள்!
*
எல்லோரும் ஏதாவதொரு வாதத்தினால் 
பீடிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்!
கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், நாத்திக வாதம், 
ஆத்திகவாதம், மதவாதம், சாதிய வாதம், 
விஞ்ஞானவாதம், சோம்பல்வாதம், சந்தர்ப்பவாதம், 
பிழைப்புவாதம்....போன்ற பலவகை
வாதங்களால் பீடிக்கப்பட்டவர்களை, 
தமக்காகத் தாமே சிந்திக்காதவர்களை, 
எப்படி மனிதர்கள் எனச் சொல்லமுடியும்?

தமது உண்மை அடையாளம் அறியாததால் அவர்கள்
எதையெதையோ பற்றிக்கொண்டு கற்பனையான 
பிரச்சினைகளால் அல்லலுறுகிறார்கள்!
அவர்களிடம் எனக்கு அறவே பிடிக்காதது
கடன் வாங்கிய அறிவைக் கொண்டு தம்மை 
அலங்கரித்துக் கொள்ளும் பா[சா]ங்கு தான்!
அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள்.. என 
எல்லாமே
ஏன், அவர்களுடைய கனவுகள் கூட 
கடனாக வாங்கியவைதான்!
எங்கும் எப்போதும் எல்லாவிடத்தும் பாசாங்குத்தனம்!
காயம்பட்ட மனம் தமக்கு மட்டுமே தம் வலி தெரியும் என 
வாடி வதங்குகிறது! மேலும்
மற்றவர்கள் தமக்கு எதிராக சதி செய்வதாகக் 
கருதும் ஐயப்பிரமை நோயினால் பிறரை 
பகையாகக் காண்கிறது!
*
நான் முகமூடி என்று குறிப்பிடுவது
வலிந்து, தெரிவு செய்த, போலியாக 
அவர்கள் அணிந்து கொள்ளும்  
ஏதோவொன்றல்ல - மாறாக, 
அவர்களுடைய மட்டுப்பாடான 
தேடல், மற்றும், அனுபவங்கள், கேள்வியற்று
சேகரிக்கப்பட்ட அறிவு ஆகியவற்றினால் 
அமைந்த ஒரு பிம்பத்தையே முகமூடி என்கிறேன்! 
மனிதர்களின் மட்டுப்பாடுகள் யாவும் 
சுய மட்டுப்பாடுகளே!
அவை பிறரால், சமூகச் சூழலால், வரலாற்று ரீதியாக 
அவர்கள் மீது சுமத்தப்படுபவை அல்ல!
வரலாறு, சமூகச் சூழல், சமகாலப் போக்குகள் 
ஆகிய அனைத்தையும் மீறிச் செல்பவர்களே, 
சிந்திப்பவர்களே அசலான மனிதர்களாக எழுகிறார்கள் - 
வள்ளுவர், புத்தர், இயேசு, வள்ளலார், ரமணர்.... 
போன்றோர் இத்தகையோரே!
சமூகம், மற்றும் சமகாலப் போக்குகளுக்கு தகவமைந்து 
வாழ்பவர்கள் தனித்தன்மையற்ற மந்தை-மனிதர்கள்! 
*
என்னைச் சுற்றியுள்ள எல்லோருடனும் பழகுகிறேன் -ஆனால்
சிலரை மட்டுமே நெருங்கிச் செல்கிறேன் - அவர்களில் 
வெகு சிலரே என்னை நெருங்கி வருகிறார்கள்! 
'நட்பு' பற்றிய எனது கோட்பாடு வித்தியாசமானது, 
ஆழமானது! - அது,
வெறும் 'கொடுக்கல்-வாங்கல்' என்பதை 
அடிப்படையாகக் கொண்டதல்ல!
நான் அரட்டைக்கும், மேலோட்டமான 
உரையாடலுக்கும் ஆனவன் அல்ல!
ஆழமான நட்பு உங்களுக்கு கசக்குமெனில், 
மேலோட்டமான நட்பு எனக்கு  உவப்பானதல்ல!
*
மெய்ம்மை-நாட்டம் இல்லாதவர்கள், 
அர்த்தம் பற்றிய கேள்வியற்றவர்கள்,
எனது நட்புக்கு பாத்திரர் அல்ல! 
என்னுடன் முரண்படுவது எளிது! 
ஏனெனில், நீங்கள் உங்களை நெருங்கிக் காண்பதைவிட
நான் உங்களை அதிகம் நெருங்கிக் காண்கிறேன்!
நீங்கள் உங்கள் அகச் சுயத்தை தழுவாத வரை
நீங்கள் அரை-மனிதர்களே!
*
உங்கள் உள்ளுறையும் மனிதத்திற்கு நீங்கள் 
விழிக்காதது கண்டு நான் உங்களை இடித்து எழுப்புகிறேன்!
ஆனால், நீங்களோ மிகவும் சரியாக, முழுமையாக,
குறையற்று இருப்பதாகவும் -காரணமின்றி
நான் உங்களைச் சாடுவதாகவும் எண்ணி என்மீது 
கோபம் கொண்டு முரண்படுகிறீர்கள்! -ஆனால், 
உங்களுக்கும், உண்மையான உங்களுக்கும் உள்ள 
இடைவெளியைக் கண்டுதான் 
உண்மையில் நான் வருந்துகிறேன்!
***
குறிப்பு:
அகச் சுயம் = ஆன்மா, முழுமை, மனிதம்
ஆம், மனிதம், அன்பு, அறம் ஆகியவை மேற்புறச் சுயத்தின்
கூறுகள் அல்ல!  
******
மா.கணேசன்/03.01.2026/ நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

Wednesday, 30 July 2025

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1





 

 

 

 

 

 

 

கேள்வி - 1


நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், தந்தை போன்ற எந்த உறவுகளைச் சந்திக்க விரும்புவீர்கள்? 


மன்னிக்கவும், நான் எவரையும் சந்திக்க விரும்பமாட்டேன். ஏனென்றால், அப்படியொரு 'வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கை' என்றொன்று இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்பதாகவே எனது புரிதல் சொல்லுகிறது.  எனது தாய், தந்தை மீது  நான் அளவற்ற அன்பு கொண்டவன் என்றாலும், அவர்கள் அவர்களுடைய தொடரும் உணர்வியல் பரிணாமத் தேவைக்கேற்ப, அவர்கள் மீண்டும் எங்காவது பிறந்திருக்கலாம்! அல்லது அவர்கள் உணர்வியல் முழுமையடைந்தவர்களாக முழு-நிறைவடைந்திருக்கலாம்- அதாவது, இருப்பு, இன்மை கடந்த நிலையில் ஆழ்ந்திருக்கலாம்! ஆகவே , அவர்களை  வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில், தேடிச் சந்திக்கவோ, எவ்வகையிலும் அவர்களைத் தொந்திரவு செய்யவோ நான் விரும்பவில்லை!


அப்படி வாழ்க்கைக்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது எனில், நான் எனது விசார நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தொடர்ந்து விசாரப் பாதையில் செல்லுமாறு வலியுறுத்துவேன்! 


<>
வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
மறுப்பது தான் உயரிய ஞானம்!
ஏனெனில், எல்லா உலகங்களும்
இவ்வுலகம் போலவே உனது உணர்வைச்
சார்ந்திருப்பவையே!
உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
முழு-உணர்வே!

 
-- மா.கணேசன் / 


"கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" Sunday, 24 April 2016 வலைப்பதிவிலிருந்து
http://vicharamarg.blogspot.com/2016/04/blog-post_24.html
     <>
 ■
மா.கணேசன்/25.07.2025/நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø


கேள்வி - 2

மரணத்திற்குப் பிறகு ஆன்மா எங்கே செல்கிறது?  

 
ஒரு மனிதன் இறந்தபிறகு, அவனுடைய ஆன்மா எங்கேயும் செல்வதில்லை! அம்மனிதன் உயிரோடிருக்கும் போது அவனது ஆன்மா எங்கே இருந்ததோ, அங்கேயே தான் அது இருக்கிறது, இருக்கும்! ஏனென்றால், ஆன்மா என்பது உணர்வியல் ரீதியாக(ஒவ்வொரு மனிதனும் அடைந்திடக்கூடிய )மனம் எனும் சிற்றுணர்வைக் கடந்த, விசேடமான ஒரு உயர் உணர்வு நிலையே தவிர வேறில்லை! ஆக, உணர்வின் தளம் என்பது உடலோ, அல்லது மூளையோ அல்ல! உணர்வு, மனம் என்பவை பொருண்மையான எதையும் சார்ந்திருப்பதான அம்சங்கள் அல்ல! மூளைதான் மனதின் இருப்பிடம் என்பது (நதியை மலைதான் உற்பத்தி செய்கிறது என்பது போன்ற) ஒரு பொதுவான, தவறான  புரிதல்தானே தவிர, அது உண்மையல்ல! மூளையின் வழியாக மனமும், உணர்வும் அணுகப்படுகிறதே தவிர, மனம் என்பது மூளைச் செயல்பாட்டின் போது தோன்றும் ஒரு ஒளிப்புள்ளியே; அது ஏற்கனவே 'வெளி-காலம்-பொருண்மை' -யின் கட்டமைப்பை [அதாவது பிரபஞ்சத்தைக்] கடந்த ஒரு பரிமாணம் ஆகும். 


மனம், ஆன்மா என்பவற்றை உணர்வின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளவேண்டும். மனம் என்பது சிற்றுணர்வு, அல்லது தொடக்க நிலை உணர்வு என்றால், ஆன்மா என்பது இறுதி நிலை உணர்வு அல்லது முழு உணர்வு எனலாம். ஆம், விழிப்படைந்த மனமே ஆன்மா என்பதாகும்.

மா.கணேசன்/25.07.2025/நெய்வேலி
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø


கேள்வி - 3


மறுபிறவி என்பது இருக்கிறதா?  

     
ஒருவன் இந்த பிறவியை முழுமையாக வாழ்ந்து முடிப்பானேயானால், அதாவது தனது வாழ்காலத்திற்குள்ளேயே தனது பிறவிப் பயனை அடைந்துவிட்டானெனில், அவனுக்கு ஏன் இன்னொரு பிறவி?
ஆனால், ஒருவன் தனது பிறவிப்பயனை அடையவில்லை, தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடிக்க வில்லை என்றால், அவன் மீண்டும் பிறப்பது உறுதி.  


தொடர்ந்து இக்கேள்விக்கான பதிலுக்குள் செல்வதற்கு முன், சில விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம் ஆகும்.
நாம் எலிகளைப் போலவோ, தவளைகளைப் போலவோ இருந்தால் மறுபிறவி பற்றிய கேள்வி எழுந்திருக்காது! ஏனென்றால், எலிகளும், தவளைகளும் பிறக்கின்றன, இரை தேடுகின்றன, இணைதேடி இனம் பெருக்குகின்றன, பெரு விலங்குகளுக்கு இரையாகிவிடாமல் தப்பி உயிர் பிழைக்கின்றன. பிறகு ஒரு கட்டத்தில் இறந்துவிடுகின்றன. இவ்வாறு இறந்துபோன எலிகளும், தவளைகளும் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை! ஒருவேளை பிறந்தாலும், அவை என்ன செய்யப்போகின்றன? மேலே சொன்ன அதே சுற்றுதான் -- இரை தேடுதல், இணை தேடுதல், கொன்றுண்ணி (Predators)களுக்கு இரையாகாமல் தப்பிப்பிழைத்தல் என்பதுதானே! இத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கு மறுபிறவி தேவையில்லையே; வெறும் இனப்பெருக்க முறையே போதுமே! முக்கியமாக, ஒரு எலி, அல்லது ஒரு தவளை என்பது ஒரு உருப்படி தானே தவிர அவற்றிற்கு யாதொரு மனமோ, தனித்துவமோ (Individuality) கிடையாது!
மறுபிறவி ஏற்படவேண்டுமானால், அதற்குரிய அடிப்படை இருக்கவேண்டுமல்லவா!


தனியொரு தவளைக்கு மேற்கொண்டு பரிணமிக்கும் காரணமோ, அடிப்படையோ இல்லை. ஏனென்றால், தவளைக்கு மனம் என்பதில்லை, ஆன்மாவும் இல்லை! ஆனால் மனிதனின் பிரச்சினையே வேறு. மனிதனுக்கு 'மனம்' எனும் சிற்றுணர்வு இருக்கிறது; அச்சிற்றுணர்வு மேன்மேலும் பரிணமித்து 'ஆன்மா' எனும் பேருணர்வு அல்லது முழு-உணர்வு நிலையை அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆன்மாவை அடைவதுதான் அவனது பிறவிப்பயன்!

மனிதனுக்குப் பிறகு என்ன?


மனிதனின் மனம் தான் அவனது தனித்துவத்திற்கான அடிப்படை. ஒரு மனிதன் என்பவன் வெறும் ஒரு உருப்படி(எண்ணிக்கை)அல்ல, ஒவ்வொரு தனிதனைப் பொறுத்தவரையிலும் ஒவ்வொருவருக்கும் மேன்மேலும் பரிணமித்தாக வேண்டிய கடமை உள்ளது. ஒரு மனிதனின் மனமானது முழுமையடையும் வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறவியெடுத்தாக வேண்டும்.

உலகம் தோன்றி, அதில் முதல் உயிர் தோன்றி, பிறகு மனிதன் தோன்றி...  இவ்வாறாகச் செல்லும் நெடிய பரிணாம நிகழ்வு முறையின் இறுதி இலக்கு என்னவோ, அந்த இலக்கை பரிணாமமானது ஒவ்வொரு மனிதனினுள்ளும், அவனது உணர்வுப் பரிணாமத்தின் உச்சியில் அடைய விழைகிறது. அதாவது, பரிணாமம் என்பது பொருளியல் (Material/ Inorganic ), உயிரியல்-உடலியல் (Biological/Organic ) என்கிற கட்டத்தைக் கடந்து உணர்வியல் கட்டத்திற்குள் (Psychic )பிரவேசித்துவிட்டது! ஆகவே பரிணாமத்தில் மனிதனுக்குப் பிறகு என்ன தோன்றும் என்ற கேள்வி பரிணாமத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகும்!

மீண்டும் பிறவியெடுப்பது எது?


ஒரு மனிதனின் இறப்பு என்பது அவனது உடலின் இறப்பைத்தான் குறிக்கிறது.  இறந்த அந்த உடல் மீண்டும் பிறக்க இயலாது. மனிதன் என்பவன் உடல்-உயிர், மனம் [அரையுணர்வு], ஆன்மா [முழு-உணர்வு] என மூன்று அடுக்குகளால் ஆனவன். ஆக, உடல் மரித்தாலும், ஒரு மனிதனின் மனம் மரிப்பதில்லை, மாறாக, அந்த மனம், பிறக்கும் வேறொரு புதிய மனித உடலில் தோன்றி அதன் பரிணாமத்தை தொடரவிருக்கிறது. ஒரு மனமானது ஒரு பிறவியில் எவ்வளவு உணர்வு பெற்றிருக்கிறது, உணர்வில் வளர்ந்திருக்கிறது என்கிற உணர்வின் அளவு [The Degrees/Levels of Consciousness], அதாவது தர நிலைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. உணர்வின் இந்த தர-நிலை தான் அடுத்தடுத்த பிறப்புகளுக்கு கடத்தப்படுகின்றதே தவிர, சென்ற பிறவியில் பெற்ற அனுபவங்களோ, ஞாபகக்கூறுகளோ கடத்தப்படுவதில்லை. ஆகவேதான் நமக்கு சென்ற பிறவி ஞாபகங்கள் எதுவும் இருப்பதில்லை. வெறுமனே சென்ற பிறவியின் போது வாழ்ந்த, பெற்ற அனுபவங்கள் அனைத்துக்கும் அடியோட்டமாக அமைந்த அந்த உணர்வு மட்டுமே அடுத்த பிறவியில் புதிதாக தனது வாழ்வைத் தொடங்குகிறது. 


உண்மையில், ஒருவன் எத்தனை பிறவியெடுத்தாலும் வாழ்க்கை அனுபவங்களும், உலக அனுபவங்ககும் ஒருவனது ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக யாதொரு பங்களிப்பையும் செய்வதில்லை! மாறாக, ஒருவனது மெய்ம்மை நாட்டமும், அர்த்தம் தேடுதலும், உண்மையில் தான் யார் என்பதை அறியும் பெருவிழைவும் தான் ஒருவனது ஆன்ம வளச்சிக்கும், உணர்வு வளர்ச்சிக்கும் உதவுவதாக அமைகிறது. ஆகவேதான், ஆன்மீக முன்னோடிகள் பலர் துறவு பற்றியும், ஆசைகளை அறுப்பது பற்றியும் பேசியுள்ளனர். ஆனால், ஒருவன் தீவிர ஆன்மீக நாட்டத்தில் இருந்துகொண்டே, அன்றாட இல்லற வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல உணவு, நண்பர்கள், இசை, கலை, .... என எல்லாத் தளத்திலும் தீவிரமாக அனுபவம் கொள்ளவும், பக்குவமாக வாழவும் முடியும்.

மா.கணேசன்/27.07.2025/நெய்வேலி.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

உணர்வு (Consciousness ) என்பதும் கடவுள் என்பதும் ஒன்றா?



 

 

 


 

 

 

சுருக்கமான பதில்: ஆம், அப்படியும் சொல்லலாம்; ஆனால் சொல்லக் கூடாது!

ஒருபுறம் இந்த பொருள்முதல்வாதிகளும், நாத்திக வாதிகளும் "கடவுள் இல்லை, உணர்வும் இல்லை!" என் கிறார்கள்!   இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

உணர்வின் [Consciousness] முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் முன்வைக்கும் விசயத்தைப் பொறுத்தவரை, படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] என்போரை நாம் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் சந்தடி சாக்கில், தங்கள் கிறிஸ்த்தவக் கடவுளை முன்னிறுத்துவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனென்றால், உலகில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தோரும் விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். அப்புறம் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும் தம்தம் கடவுளை முன்னிறுத்தினால் என்னாவது? அதனால்தான்!

சரி, நாம் இப்போது பிரச்சினையின் ஆழத்திற்குச் செல்வோம். உலகம் தற்செயலானதா? அல்லது கடவுளின் திட்டமிட்ட வடிவமைப்பினால் உண்டானதா? இயற்கையுலகில் ஒரு மாபெரும் ஒழுங்கு [Order]காணப்படுகிறது. இந்த ஒழுங்கு எப்படி வந்தது? இந்த ஒழுங்கு கணிதப்படி துல்லியமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் இருப்பதை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 'அறிவுக்கூர்மையின் மறுவடிவம்' எனக் குறிப்பிட்டார்.  இதை ஆத்திகர்கள் 'கடவுளின் அறிவுக்கூர்மை' என்கிறார்கள். அதோடு நில்லாமல், அறிவுக்கூர்மையுள்ள காரணகர்த்தா ஒருவர் உள்ளார் என்று நம்புவது பகுத்தறிவுக்கு முரணாய் இருக்கமுடியாது என்கிறார்கள்.

இயற்கையின் உலகில், ஒழுங்கும், வடிவமைப்புமும் உள்ளடங்கியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இயற்கையுலகில் வெளிப்பட்டுள்ள உயிர், மனம், உணர்வு போன்ற அம்சங்களைப் போலவே, ஒழுங்கு, வடிவம், அமைப்பு யாவும் பரிணாமப் [Evolutionary] பூர்வமானவையே.

பிரபஞ்சமானது ஒரு பெருவெடிப்பில் தோன்றியபோது யாதொரு ஒழுங்கும், பாங்கும், வடிவமைப்பும், எதுவுமில்லாத முற்றான ஒழுங்கின்மையே [Chaos] நிலவிற்று. சொல்லப்போனால், இயற்கையுலகில் உள்ள அனைத்தும், ஏன் இயற்கையும், யாவும், ஏன், கடவுளும் கூட பரிணாமப்பூர்வ அம்சங்களே! ஆகவே இயற்கையில் பொதிந்துள்ள அறிவுக்கூர்மையும் பரிணாமத்திற்கு உட்பட்டதே.

பிரபஞ்சம் தோன்றிய மூன்றாவது நிமிடத்தில் எத்தகைய அறிவுக்கூர்மை நிலவியது? பெரிதாகச் சொல்லும்படியாக இல்லை. ஐயத்திற்கிடமின்றி இயற்கையில் அறிவுக்கூர்மை உள்ளடங்கியுள்ளது. அதோடு, அது தொடர்ந்து பரிணமித்துக் கொண்டும் உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக அது ஆத்திகர்களிடமும், நாத்திகர்களிடமும், ஏன், விஞ்ஞானிகளிடமும் ஓரளவுக்கு மேல் பரிணமிக்கவில்லை!

இயற்கையில் காணப்படும் ஒழுங்கையும் அதி நுட்பமான வடிவமைப்பையும் கண்ட ஐன்ஸ்டீன் அதை "அறிவுக்கூர்மையின் மறுவடிவம்" எனக் குறிப்பிட்டிருக்கலாம். அதில் தவறில்லை! ஆனால், இயற்கையில் இத்தகைய ஒழுங்கு எப்படி வந்தது? எனும் கேள்விக்கான சரியான பதில் "பரிணாமத்தினால்" என்பதாகத் தான் இருக்க முடியும்.

அடுத்து, இயற்கையில் அறிவுக்கூர்மை உள்ளடங்கியுள்ளது. அதோடு அனைத்துத் துறைகளின் விஞ்ஞான அறிவும் இயற்கையிடமிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவையே என்பதை அறிந்து அங்கீகரித்திடும் மனிதனும் அறிவுக்கூர்மை உடையவனே!

அதே வேளையில், அறிவுக்கூர்மை பற்றிப் பேசும் போது, அது என்னுடையதோ, உங்களுடையதோ, வேறு எவருடையதோ அல்ல! மாறாக, அறிவுக்கூர்மை என்பது அறிவுக்கூர்மை தான்! இன்னும் அது கடவுளுடையதும் அல்ல! ஆகவே அறிவுக்கூர்மையுள்ள 'காரணகர்த்தா' ஒருவரை நாம் கற்பனையாக உருவாக்கிக்கொள்ளவோ, அவரைத் தேடிச் செல்லவோ, வணங்கி வழிபடவோ, போற்றிடவோ, அல்லது அவரைத் தூற்றிடவோ, மறுத்திடவோ, தேவையில்லை! ஏனெனில், கடவுளின்  அறிவுக்கூர்மை என்றெதுவும் இல்லை. மாறாக, அறிவுக்கூர்மை தான் கடவுள்!

ஆனால், அறிவுக்கூர்மை என்பதென்ன? அது எங்கிருந்து ஊற்றெடுக்கிறது? அதன் அடிப்படை என்ன? ஆம், அறிவுக்கூர்மையின் அடிப்படை "உணர்வு" [Consciousness] தான்! உணர்வு என்பதில்லாமல் அறிவுக்கூர்மை இல்லை! ஆகவே, உணர்வை நாம் 'கடவுள்' எனக் கொள்ளலாம். ஆனால், வழக்கமாக, மதங்கள் முன்வைக்கும் அந்தக்கடவுள் அல்ல! இவ்விடத்தில் நாம் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்!

அதாவது, மதங்களின் கடவுளை வழிபடுவது, தொழுவது, அவரை நோக்கி பிரார்த்தனை செய்வது போன்ற சடங்குபூர்வமான விசயங்கள் அறிவுக்கூர்மை எனப்படும் கடவுளிடம் எடுபடாது! ஏனென்றால், அறிவுக்கூர்மையை வழிபடவோ, வணங்கவோ, இயலாது; அப்படிச் செய்வதனால் ஒரு பயனும் விளையாது!

மாறாக, மனிதன், தன் அறிவைக் கொண்டுதான் அறிவுக்கூர்மையை அணுகவும் அறியவும், அடையவும் முடியும். 'கடவுள்' என்று குறிப்பிடத் தக்க மாபெரும் அறிவுக்கூர்மையை, அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் மாபெரும் உணர்வை மனிதன் எட்ட வேண்டுமானால், அதற்கிணையான உணர்வு நிலைக்கு ஒவ்வொரு மனிதனும் தனது உணர்வில் பரிணமித்து உயரவேண்டும்.

மேலும், இயற்கையில் ஒழுங்கும், அதி நுட்பமான வடிவமைப்பும் இருக்கிறது என்பதால், அதை வடிவமைத்த ஒரு 'மகா நபர்', கடவுள் என்று ஒருவர் இயற்கைக்குப் பின்னால், பிரபஞ்சத்திற்குப் பின்னால் இருக்க வேண்டும் எனும் சிறுபிள்ளைத் தனமான முடிவுக்கு உடனே தாவிக்குதித்திடல் வேண்டாம்! ஏனெனில், கடவுளோ, வேறு எவரோ பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தை வடிவமைக்கவில்லை!

மாறாக, முற்றான ஒழுங்கின்மை [Chaos] யிலிருந்து முழுமையான ஒழுங்கையும், மிக எளிய வடிவமைப்பில் தொடங்கி  மிகவும் சிக்கலான வடிவமைப்பையும் நோக்கிச் செல்லும் பரிணாம வழிமுறையில் மேன்மேலும் பரிணமிக்கும் ஒழுங்கும் வடிவமைப்பும் தான், கடவுளை வடிவமைக்கவும், கட்டமைக்கவும் போகின்றன.

கடவுள் என்பது இறுதியான ஒழுங்கு மற்றும் வடிவமைப்பு என்பதிலிருந்து வேறானது அல்ல! ஏதோவொரு வகையில் பிரபஞ்சத் தோற்றத்திற்கு, 'கடவுள்' அதாவது 'கடவுளையொத்த' அறிவுக்கூர்மை' காரணமாய் அமைந்திருக்கலாம். ஆனால், உலகம், பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னிருந்த கடவுளோ, அல்லது அறிவுக்கூர்மையோ முக்கியமல்ல! ஏனென்றால், அவர்/ அது 'மறைந்து' காணாமல் போய் 1500 கோடி ஆண்டுகள் ஆகின்றன! உண்மையான, உயிருள்ள கடவுள் கடந்தகாலத்தைச் சேர்ந்தவராக இருக்கவியலாது. இன்னும் அவர் நாளை, வருங்காலத்தைச் சார்ந்தவராகவும் இருக்கவியலாது. துல்லியமாகச் சொன்னால், கடவுளை ஒரு போதும் காலத்தின் உலகில் காண இயலாது! ஏனெனில், 'காலாதீதம்' அல்லது 'அனந்தம்' தான் கடவுள்!

மேலும், சில மதங்கள் எதிர்பார்ப்பது போல், உலகின் முடிவில், அல்லது அழிவில் கடவுள் தோன்றப் போவதில்லை! மாறாக, உலகின் முழுமையில் மட்டுமே கடவுள் தோன்றுவார்! உலகின் முழுமையானது ஒவ்வொரு மனிதனின் பரிணாம முழுமையைச் சார்ந்துள்ளது. ஆம், மனிதன் தன் உணர்வில் முழுமையடைகிற இடத்தில் கடவுள் தோன்றிடுவார்!

மா.கணேசன்/ 28.07.2025/நெய்வேலி.
"ஆழமான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும்" எனும் தொகுப்பிற்காக புதிதாக எழுதப்படும் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

Tuesday, 29 July 2025

'பெரு வெடிப்பு'க்கு முன் என்ன இருந்தது?

 



 

 

 

 

 

 

"பெரு வெடிப்பு" [Big Bang Theory] என்பது பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய ஒரு விஞ்ஞானக் கோட்பாடாகும். ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் பொருண்மையும் [Matter], கனபரிமாணமற்ற ஒரு புள்ளியில் அடர்ந்திருந்ததாகவும், அதன் உள்ளார்ந்த அழுத்தம் தாங்காமல் வெடித்து இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும், அவ்வெடிப்பில் தோன்றிய பிரபஞ்சம் இன்றளவும் பரந்து விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானம் கூறுகிறது.

இக்கோட்பாட்டின்படி, அவ்வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது எனப்படுகிறது. பெரு வெடிப்பின் போதுதான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், அவ்வெடிப்பிற்கு முன் எந்த 'வெளி' [Space] யில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் யாவும் இருந்தன என்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

மேலும், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்டால், அப்படிக் கேட்பது அர்த்தமற்றது என பெரு வெடிப்புக் கோட்பாட்டாளர்கள் மிரட்டுகின்றனர்.  இந்த விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் திறந்த மனதுடன் மெய்ம்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக, பருப்பொருள் அதாவது சடப்பொருள்தான் முதன்மையான, சாசுவதமான, யாவற்றுக்குமான அடிப்படையான நிஜம் அல்லது மெய்ம்மை என அடித்துச் சொல்லும் கூச்சமில்லாத பொருள்முதல்வாதிகளாகத் திகழ்கின்றனர்.  

ஆனால், இந்தப் பொருள்முதல்வாதிகளின் கூச்சலைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. கேட்க வேண்டிய கேள்விகளை தர்க்கரீதியாக நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். ஆம், பெரு வெடிப்புக்கு முன் என்ன, எத்தகைய மெய்ம்மை இருந்தது? ஒரு வெடிப்பில் தான் காலம், வெளி, பொருள் யாவும் தோன்றியது என்றால், பெருவெடிப்புக்கு முன் ஒரு பொருளல்லாத [Non-Material]  மெய்ம்மை தான் இருந்திருக்க வேண்டும்! இனி அது எத்தகைய பண்பு கொண்ட மெய்ம்மை, என்பதைக் கண்டறிவதுதான் நம்முன் உள்ள சவாலாக இருக்கமுடியும்.

இதுவரை நாம் அறிந்த அம்சங்களுள் மனம் அல்லது உணர்வு [Consciousness] என்பது தான் பொருள் தன்மை கலவாத அம்சம் ஆகும். அதையும் கூட பொருள்முதல்வாதத்தினால் பீடிக்கப்பட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதில்லை. மனம் அல்லது உணர்வு என்றோரு விசயமே இல்லை என்று சாதிக்கிறார்கள். ஆம் விஞ்ஞானத்தின் அனைத்துத் துறைகளிலும் இந்த பொருள்முதல்வாத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளைப்போல் ஊடுருவி விட்டுள்ளனர்!

அதே நேரத்தில், எவ்வித சார்பு நிலையும் கொள்ளாத, திறந்த மனதுடைய சில விஞ்ஞானிகளும் இருக்கவே செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான்
மேக்ஸ் ப்ளாங்க் [Max Planck] எனும் விஞ்ஞானி; இவர் 1963-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர்தான் குவாண்டம் எந்திரவியலின் [quantum mechanics] தந்தை எனப்படுபவர். இவரது கூற்றுப்படி, "உணர்வு [Consciousness] தான் யாவற்றுக்கும் அடிப்படையான நிஜம். பொருள் என்பது உணர்விலிருந்து பெறப்பட்ட ஒன்று. உணர்வே ஒட்டு மொத்த பொருளாலான உலகிற்கும் அடியோட்டமான ஆழமான நிஜம்" என்றாகிறது.

அடுத்து, எர்வின் ஷ்ரோடிங்கர் [Erwin Schrödinger] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது பொருளின் ஒரு தயாரிப்போ/ விளை பொருளோ அல்ல; வெறுமனே மூளைச் செயல்பாட்டின் ஒரு துணை விளைவு,அல்லது இரண்டாம் பட்ச வெளிப்பாடோ அல்ல. மாறாக, உணர்வு தான் அடிப்படையான நிஜம் - பகுக்கவியலாத ஒற்றைத் தனி நிஜம் ஆகும்" என்றார்.

அடுத்து, யூஜின் விக்னர் [Eugene Wigner] எனும் இன்னொரு விஞ்ஞானி; இவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர், "உணர்வு என்பது ஒரு பொருளல்லாத [non-physical entity ] சுயாதீன இருப்பு கொண்ட அம்சம்; அது பௌதீக உலகுடன் வினைபுரியும் ஒன்று...." என்றார்.

அடுத்து, டொனால்ட் ஹாப்மேன் [Donald Hoffman], இவர் ஒரு Cognitive Science விஞ்ஞானி ஆவார். இவரும் உணர்வுதான் பௌதீக உலகின் அடிப்படையான நிஜம் என்றார்.

அடுத்து, க்ரிஸ்டோஃப் கோச் [Christof Koch], Neuroscientist; ராபர்ட் லேன்ஸா [Robert Lanza], Stem cell and regenerative medicine ;  ரோஜர் பென்ரோஸ் [Roger Penrose], Mathematical physics, David Chalmers, [philosopher]; Philip Goff, [philosopher]; Annaka Harris, [science editor] என இத்தனை விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும் உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் எடுத்துச்சொல்லியும் பொருள்முதல்வாதக் குட்டையில் ஊறிய விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் விஞ்ஞானப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் மறுத்து வருகின்றனர். இந்த அடாவடிக் காரர்கள் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளைக் கூட மதிப்பதில்லை!

இந்த பொருள்முதல்வாதிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் படைப்பியல்வாதிகள் [Creationists], மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் [Intelligent Design Theorists] எனும் பெயர்களில் "கடவுள்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவர், வடிவமைத்தவர்; கடவுள்தான் பிரபஞ்சத்தின் பின்புலத்தில் இருந்து இயக்கிவருகிறார்...."  என்று சொல்லி தங்கள் கிறிஸ்தவக் கடவுளை முன்னிலைப் படுத்தி வருகின்றனர்!

இந்தக் குழப்பவாதிகளுக்கு மத்தியில் எவ்வாறு உணர்வின் முக்கியத்துவத்தையும், முதன்மைத்துவத்தையும் நிறுவுவது என்பது பெரும் சவாலான விசயமே!
நாம் மீண்டும் பிரதான விசயத்திற்கு வருவோம். ஆம், பொருளாலான பிரபஞ்சத்தின் பிறப்புக்கு முன்னர், அதாவது பெருவெடிப்புக்கு முன்னர் பொருளல்லாத ஒரு விசேட அம்சமான உணர்வே இருந்தது. இதை  நிறுவுவதற்கு நாம் பரிணாம வரலாற்றின் போக்கையும் அதன் அசலான இலக்கையும் புரிந்துகொள்வது அவசியமாகும். அதற்கு முன்னர் பொருள் என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பதையும் ஆராய்ந்தறிந்தாக வேண்டியது முக்கியமாகும்.

முதன்முதலில், பெரு வெடிப்பில் தோன்றியது பொருள், பருப்பொருள், சடப்பொருள் எனப்படும், உயிரற்ற, உணர்வுமற்ற பொருள்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை! ஆனால், அப்பொருள் எப்படி வந்தது? பொருள்முதல்வாதிகள் சொல்வது போல், "பொருள் சுயம்புவாக தன்னில் தானாகத் தோன்றியதாக, என்றென்றும் சாசுவதமாக இருக்கும் ஒரு பொருள்" என்பதை நம்மால் ஏற்கவியலாது. அது தர்க்கவியலின் படி தவறானதாகும். பண்பளவில் உயிரற்ற, உணர்வுமற்ற பொருள் [பொருளும், சக்தியும் ஒன்றே என்றாலும் கூட] எவ்வாறு தன்னில் தானாகத் தோன்றிட இயலும்? முக்கியமாக, பெருவெடிப்பில்தான் இப்பொருள் தோன்றியது எனும் பட்சத்தில், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வி மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் பெறுவதாகிறது.

"கடவுள்தான் உலகைப் படைத்தவர்!" என்று இறையியலாளர்களும், ஆத்திகவாதிகளும் சொல்லும் போது, "அந்தக் கடவுளைப் படைத்தது யார், எது?" என பொருள்முதல்வாதிகளும், நாத்திகவாதிகளும் கேட்டு கொக்கரிக்கின்றனரே; அதேபோல் "பொருள் எவ்வாறு எங்கிருந்து வந்தது, அதைப் படைத்தது எது, யார்?" என்று கேட்டால் பொருள்முதல்வாதிகள் என்ன சொல்வார்கள்; அவர்கள் முகங்களை எங்கே புதைத்துக் கொள்வார்கள்?!

சரி, இந்த இரண்டு அணிகளும், அவர்களுடைய கூச்சல்களும் ஒரு புறம் இருக்கட்டும். ஆம், எந்தவகையிலும் பொருள் என்பது சுயம்புவாக தானே தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை.  நிச்சயமாக, பெரு வெடிப்புக்கு முன் பொருளல்லாத ஒரு மெய்ம்மை இருந்திருக்க வேண்டும். அதை நாம் உணர்வு என்கிறோம்; ஆனால், அது மனித உணர்வோ, அல்லது கடவுளோ அல்ல! நாம் கூறும் உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது!

இதை எவ்வாறு நாம் சொல்கிறோம் என்றால், பெருவெடிப்பின் போது பொருள் மட்டும்தான் தோன்றியது. காலம், வெளி என்பவையும் கூட பொருண்மையான அம்சங்களே என்பதால், இவற்றையும் நாம் பொருண்மை [Material] என்பதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், பெருவெடிப்பில் தோன்றிய இப்பொருளானது சும்மா இருக்கவில்லை. மாறாக அது ஒரு நீண்ட நெடிய பரிணாம நிகழ்வு முறைக்கு உட்படுவதாகிறது. அதாவது பொருளானது பரிணமித்து ஒரு கட்டத்தில் உயிராக(உயிரியாக)எழுகிறது! அந்த உயிரியானது மேன்மேலும் பரிணமித்து ஒரு கட்டத்தில் உணர்வுள்ள ஜீவியாக [அதாவது மனித ஜீவியாக] எழுகிறது! இப்போது மனித ஜீவிகளாகிய நாம் நம் மனதின் உணர்வைக் கொண்டு சிந்திக்கிறோம், நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுமுள்ள பரந்த பிரபஞ்சத்தையும் ஆராய்கிறோம். அப்படியானால், இந்த உணர்வு எங்கிருந்து வந்தது? பெருவெடிப்புக்கு முன் என்ன இருந்தது என்பது தெரியவில்லை என்று வைத்துக்கொள்வேம்; ஆனால், பெருவெடிப்புக்குப் பின் மாபெரும் பிரபஞ்சம் எழுந்தது மட்டுமல்ல, அதில் ஒரு கட்டத்தில் உயிர்ப் பண்பு அதாவது உயிருள்ள ஜீவிகள் தோன்றின; பிறகு ஒரு கட்டத்தில் உணர்வுப் பண்பு அதாவது உணர்வுள்ள ஜீவிகளான நாமும் தோன்றினோம்! இந்த உயிர்ப்பண்பும், உணர்வுப்பண்பும் சடப் பிரபஞ்சத்தில், எவ்வாறு, ஏன் தோன்றியது? பொருள், உயிர், உணர்வு இம்மூன்றும் துல்லியமாக தனித்த பண்புகளைக் கொண்டவையாகும். பண்பளவில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட அம்சங்களாகும். இம்மூன்று பண்புகளும் இப்பிரபஞ்சத்தில் ஒத்திசைவுடன் இணைந்திருக்கின்றன.

மனித ஜீவிகளாகிய நாம் தவளைகளைப் போல சிந்திக்கும் மனமோ, உய்த்துணரும் உணர்வோ இல்லாதவர்களாய் இருந்தால், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியே எழுந்திருக்காதல்லவா? ஆகவேதான், இவ்வாதங்களையும் தர்க்கங்களையும் வைத்துத் தான் சொல்கிறோம், "உணர்வு என்பது அறிவார்ந்தது, படைப்புப் பூர்வமானது. ஆகவே, உயிரும், உணர்வுமற்ற சடப்பொருளைக் காட்டிலும், உணர்வானது தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றுவதற்கு பண்பினடிப்படையில் அதிக வாய்ப்பு கொண்டிருக்கிறது! ஆகவே, பெரு வெடிப்புக்கு முன் ஒரு விசேட பெரும் உணர்வு தான் இருந்தது. அந்த பேருணர்வு தான் உருமாறி பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆனது. பிறகு அப்பொருளானது பரந்து விரியும் பிரபஞ்சமுமானது!" என்கிறோம்.

அறிவு குழம்பிய பொருள்முதல்வாத விஞ்ஞானிகளும், சிந்தனாவாதிகளும் சொல்கிறார்கள், "பெரு வெடிப்புக்கு முன் என்ன இருந்தது?" என்ற கேள்வியைக் கேட்பது அர்த்தமற்றது என்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், 'பெருவெடிப்பு' என்பது ஒரு 'நிகழ்வு' மட்டுமல்ல, அதையே அவர்கள் 'கடவுள்' என்பதாக வழிபட்டு வருகிறார்கள் போல!

பொருளை முதன்மையானதாகவும், யாவற்றுக்கும் அடிப்படையானதாகவும், சாசுவத பரம்பொருளாகவும்  கருதும் பொருள்முதல் வாதிகள் எவரும் "பொருள் என்றால் என்ன?" என்பதைப்பற்றி உருப்படியாக இதுவரையிலும் எதையும், எந்த முறையான தெளிவான விளக்கத்தையும்  தரவில்லை.

ஆனால், நம்மால் சொல்ல முடியும், 'பொருள்' என்பது உயிரற்ற, உணர்வுமற்ற ஒன்று; ஆனால், அப்பொருள் தன்னகத்தே அளப்பரிய உள்ளுறையாற்றலைக் கொண்ட ஒரு பரிணமிக்கும் பொருளாகும். பொருள் என்பது தன்னில் எவ்வகையிலும் முடிவானதோ, இறுதியானதோ அல்ல. அது ஒரு பரிணாமக் கருவி, ஒரு பரிணாம் ஊடகம், அல்லது கட்டுமானப் பொருள் என்கிறவகையில் பொருளானது முதன்மையானதாக இல்லாவிட்டாலும் முக்கியத்துவமான மெய்ம்மையாகும்.

பெருவெடிப்பில் தோன்றிய பொருளானது ஏன் அப்படியே பொருளாக, வெறும் அணுத் துகள்களாகவே இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு தனிமங்களாகவும், மூலகங்களாகவும் ஆயின. ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து பெரும் வாயுக்கூட்டமாக சுற்றிச் சுழன்று 'நெபுலா' வாகவும், அதிலிருந்து கேலக்ஸிகளாகவும், பிறகு எண்ணற்ற நட்சத்திரங்களாகவும், பிறகு கிரகங்களாகவும் ஆயின. பிறகு ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சூரியனைச் சுற்றிச் சுழலும் எட்டு கிரகங்களில் ஒன்றான பூமிக் கிரகத்தின் மீது ஏன் உயிருள்ள ஒரு 'ஸெல்'லாக எழ வேண்டும்?  பிறகு ஒரு ஸெல் உயிரியானது பரிணமித்து பல ஸெல் உயிரிகளாகவும், அடுத்து ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் எனவும் உருவாக வேண்டும். அப்பாலூட்டிகளில் ஒரு இனமாக சிந்திக்கும் திறனுள்ள, உணர்வு கொண்ட மனித ஜீவிகள் ஏன் உருவாக வேண்டும்? மொத்தத்தில், பொருள் ஏன் பொருளாகவே நில்லாமல் பல்வேறு பண்புகளில் அமைந்த ஜீவிகளாக ஆக வேண்டும்? அதாவது, பொருள் ஏன் பரிணமிக்கும் பொருளாக ஆனது?

ஏனென்றால், பொருளின் பொருண்மைப் பண்பு [Materiality] என்பது அதன் அசலான பண்பு அல்ல! ஆகவேதான் அது தனது அசலான முகத்தை, பண்பைத் தேடிச் செல்லும் நெடிய பரிணாமப் பயணத்திற்கு உட்படுவதாயிற்று! அதாவது, பரிணமிக்கும் பொருளாக, பரிணாமக் கருவியாக, ஊடகமாக, கட்டுமானப் பொருளாக ஆகியது. பொருளானது அதனுடைய பொருண்மைபண்பிலேயே நிலைகொண்டு நிற்க முடியாது! பரிணமிக்கும் பொருள் என்றவகையில் பொருளையும், பரிணாமத்தையும் பிரிக்கவியலாது. பரிணாமத்திற்கு வெளியே பொருளுக்கு யாதொரு அர்த்தமும் கிடையாது!

உண்மையில், உணர்வு தான் பொருளின் அசலான முகமும், பண்பும் ஆகும். அந்த அசலான உணர்வு நிலையை நோக்கியதாகத்தான் அதன் முழு விழைவும் உள்ளது. உணர்வின் ஆகச் சுருங்கிய நிலை தான் பருப்பொருள் என்பதாகும். தன்னைத்தானே மறைத்துக்கொண்ட, சுருக்கிக்கொண்ட உணர்வின் ஒரு வடிவம் தான் பொருள் என்பதாகும்!

இப்போது நாம் விஞ்ஞான ஆதியாகமத்தை மாற்றி எழுதிடுவோம். "இருள் என்பது மிகக் குறைந்த ஒளி!" என்று குறிப்பிடுவது போல, "பொருள் என்பது மிக மிகக் குறைந்த உணர்வு!" என்று சொல்லலாம். ஆம், ஆதியில் உணர்வு, ஒரு 'பேருணர்வு' இருந்தது! அது 'வெடித்து' உருமாறி பருப்பொருளாகவும், காலம், வெளியாகவும் ஆகியது! அந்த ஆதிப் பேருணர்வு தற்போது பரந்துவிரியும் இந்த பிரபஞ்சமாகவும், அதில் எண்ணற்ற உயிரினங்களாகவும், முக்கியமாக உணர்வில் பெருகி வளரும் மானுட ஜீவிகளாகவும் இருக்கிறது! ஆனால் மானுட ஜீவிகள் பரிணாம நிகழ்வுமுறையின் இறுதிச் சொல் அல்ல. ஏனென்றால், அவர்களுடைய உணர்வு இன்னும் சிற்றுணர்வாகவே உள்ளது. மானுடர்களில் 99.9% இன்னும் விழிப்படையாமலேயே தங்களது அன்றாடத்திலேயே அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றனர்! நீண்ட நெடிய ஒப்பற்ற பரிணாமத்தின் இறுதி இலக்கு, மனிதனின் உணர்வின் உள்ளேயும், ஊடேயுமாகச் சென்றுயர்ந்து மீண்டும் பேருணர்வை எட்டுவதே ஆகும். தன்னையிழந்து பிரபஞ்சமாக மாறிய பேருணர்வு தன்னை மீள் கண்டுபிடிப்பு செய்வதொன்றே ஆகும். பரிணாமமானது இந்த ஒப்பற்ற இலக்கை ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் அடையவிருப்பதுதான் பரிணாமம் மனிதனுக்கு அளித்துள்ள முக்கியத்துவமாகும்!
 
இந்த பரிணாமப் பொறுப்பைத் தாண்டி மனிதனுக்கு வேறு யாதொரு பெருமையும், தனியொரு வாழ்க்கையும் கிடையாது. மனிதன் என்பவன் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பரிணாமக் கருவியாவான்!

மா.கணேசன்/ 28.07.2025/ நெய்வேலி.
øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

Tuesday, 3 December 2024

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .





 

 

 

 

 

அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான பேருணர்வைத் தேடிச் செல்கிறது. பயணம் இன்னும் முடியவில்லை. அணுவின் இந்த சுய அறிவுத் தேடலின் வரலாற்றைத்தான் பரிணாம வரலாறு என்கிறோம்.

சுய-அறிவு (Self-Knowledge) அல்லது தன்னையறிதல் (Self-Realisation) என்பது சாக்ரட்டீஸ் போன்ற விதி விலக்கான தத்துவ ஞானிகள் அல்லது பைத்தியக்காரர்களது ஆர்வக்கோளாறின் மிகுதியால் விளைந்த பிதற்றலோ அல்லது செயல் துறந்த சோம்பேறிகளின் சொர்க்கமோஅல்ல. மாறாக, சுய-அறிவுத் தேட்டம் என்பது அணுக் கருவினுள்ளும் அமைந்தியங்கும் அடிப்படையான படைப்புச் சக்தியாகும்.

அண்டத்துப் புதிரை விடுவிக்க விழைந்திட்ட விஞ்ஞானிகள் அப்புதிர் அணுக்கருவினுள் ஆழ்ந்து கிடப்பதாக எண்ணி அணுவைத் துளைத்து இறுதியான அந்த (ஒற்றை) அடிப்படைத் துகளைத் தேடிட, இதுதான் இறுதியானது என முடிவு செய்ய இயலாதபடிக்கு எண்ணற்ற பல துகள்கள் அணுக்கருவின் நுண் உலகில் அலைமோதிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ந்து போயினர்.

அணு என்றால் என்ன? புரோட்டான் எனும் துகளை கருவாகக்கொண்டு அதனைச் சுற்றி வலம் வரும் எலக்ட்ரான் (எனப்படும்) துகள்களும் சேர்ந்த அமைப்புதான் அணு என்பது. சில தனிமங்களின் அணுக்கருவில் புரோட்டான் துகள்களோடு நியூட்ரான் (எனப்படும்) துகள்களும் இடம் பெறுகின்றன. புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் ஆகியவைகள் விஞ்ஞானிகளால் பொதுவாக  ஃபெர்மியான்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த ஃபெர்மியான்களே பொருளின், அதாவது பொருளின் ஆகச்சிறிய அணுவின் உட்கூறுகள். ஆக ஆதியாகமத்தை இவ்வாறு நாம் மாற்றி எழுதிடலாம். அதாவது, "ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன" என்று!

ஆனால், ஃபெர்மியான்கள் உண்மையிலேயே நம் விஞ்ஞானிகளை விடவும் கூரறிவு கொண்டவை. அவை தம்மையறியும் ஆன்மீகத் தேட்டத்தின் பயணத்தில் வெகு தொலைவு முன்னேறிச் சென்றுவிட்டன. புரோட்டான்களும். எலக்ட்ரான்களும், நியூட்ரான்கள்களும் பல்வித அமைப்பில் இணைந்து பிரிந்து மீண்டும் பொருந்தி யுகம் யுகமாக வினைபுரிந்து நியூட்டனாகவும், ஐன்ஸ்டீனாகவும், என்றிக்கோ ஃபெர்மியாகவும், ஹெய்சன் பெர்க்காகவும், ஷ்ரோடிங்கராகவும் ஆகிவிட்டிருந்தன! ஆம், ஃபெர்மியான்கள் பரிணமித்து வேதியியல், பௌதீகவியல் விஞ்ஞானிகளாக நிலைமாறி, தற்போது அவை ஃபெர்மியான்களைப்பற்றி (அதாவது தம்மைப்பற்றி)யே ஆராய்ந்துகொண்டுள்ளன என்பது வினோதம் தான்! ஆனால், இது ஃபெர்மியான்களின் தவறு அல்ல! மாறாக, தாங்கள் ஃபெர்மியான்களே என்பதையும், அவற்றின் ஆன்மீகத் தேட்டத்தையும் மறந்துபோன விஞ்ஞானிகளின் தவறே இது!

அடிப்படை அணுத்துகள்கள் விஞ்ஞானிகளாகப் பரிணமித்து அவ்விஞ்ஞானிகளின் வழியாக, மீண்டும்  அடிப்படை அணுத்துகள்களை ஆராய்ந்து கொண்டிருப்பது என்பது ஒருவகை விபரீத வட்டத்தில் சிக்குண்டுவிட்டது போன்றதுதான். ஏனெனில், ஆதி ஃபெர்மியான்கள் தம்மை அறியும் பொருட்டு தம்மைப் பிளந்து காணும் வீண் செயலில் ஈடுபடவில்லை. மாறாக, அதற்கு எதிர்த்திசையில், தம்மை விரித்துக்காணும் நெடும் பயணத்தை தேர்ந்திட்டன! விளைவு : இம்மாபெரும் உயிர் ததும்பும் உணர்வு பொங்கும் பிரபஞ்சம்!

தமது நெடும்பயணத்தின் முடிவில் அவை தம்மை அறிந்து கொண்டனவா? ஆம், அறிந்து கொண்டன; தாம் வெறும் ஃபெர்மியான் துகள்கள் அல்ல, தாம் ஒரு பிரபஞ்சம், வெறும் பிரபஞ்சம் மட்டுமல்ல; பிரபஞ்சத்தினுள் உலவும் உயிர்கள்; வெறும் உயிர்கள் மட்டுமல்ல, யாவற்றுக்கும் மேலாக தாம் உணர்வுள்ள (Conscious Beings) மானிட ஜீவிகள்; இன்னும் மேலுயர்ந்து தாம் ஒரு மகா உணர்வு (Super Consciousness)
என்ற பேருண்மையை அவை அறிந்துகொண்டன! இப்பேருண்மையை உணர, அவை, விஞ்ஞானிகளைக் கடந்து, புத்தனாகவும், ரமணராகவும் எழ வேண்டியிருந்தது!

*

மா.கணேசன்/நெய்வேலி / கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன் எழுதியது.

øøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøøø

 

Wednesday, 27 November 2024

வாழ்க்கையின் அழைப்பு

 





 

 

 

 

 

கோடை வரும் முன்னேயே அதன் முதல் தொடக்கத்தினை அதன் மென்மையான ஸ்பரிசத்தை மிகத் தெளிவாக உணர முடிந்தது. அன்று அந்தப் பகல் சரியாக 11.30 மணிக்கு (சனவரி 1991) கோடைக்காலம் தொடங்கியதாகத் தெரிந்தது. இதமான வெயில், இனம் புரியாத மணம் ஒரு கணம் தோன்றி மறைந்ததைப் போல் தெரிந்தது. அப்போது காலம் அகன்று விட்டிருந்தது. (கோடையின் தன்மை, அதிகரிக்கும் வெப்பம் மட்டுமல்ல!) அது ஒரு மந்திரக் கணம் போல் தோன்றியது. சுற்றுப்புறம் முழுவதும் ஒரு மந்திரக் கட்டுக்குள் சிக்குண்டிருந்தாற் போலிருந்தது. கோடை தொடங்கி விட்டது.

ஆனால், இந்த அனுபவத்தைக் கடனாகக் கொடுக்க முடியாது. அதிக விலை கொடுத்தும் வாங்கிட முடியாது. வாழ்க்கையின் இனிமைகளை அனுபவிக்க எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஏனென்றால், உண்மையான மகிழ்ச்சியையும், நிறைவையும் பெற்றிட காசு-பணம் தேவையில்லை என்பதை எல்லோரும் அறியமாட்டார்கள். ஆகவேதான் எல்லோரும் பணத்தின் பின்னே அலைகின்றார்கள்.

"பிரச்சினையற்றது வாழ்க்கை!" என்றால் பலரும் நம்ப மறுக்கிறார்கள். பிரச்சினைக்கும் வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. 'பிரச்சினை' என்பது மனித சமுதாயத்தின் கண்டுபிடிப்பாகும். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் அதற்கு பலவித அர்த்தங்களை செயற்கையாகக் கற்பித்துக்கொண்டதன் விளைவே பிரச்சினைகள்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிரச்சினைகளே வாழ்க்கையாகி விடுகின்றன. பிரச்சினைகளை தோற்றுவிப்பதும் பிறகு அவைகளைத் தீர்ப்பதுவுமான விபரீத விளையாட்டே வாழ்க்கை என்றாகிவிட்டது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்வரை, பிரச்சினைகளுக்கு முடிவுமில்லை, தீர்வுமில்லை!

ஆனால், வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ வேண்டுமென தீவிர ஆர்வம் கொள்ளும்போது, ஒருவன் புதிதாக பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதைத் தவிர்த்துவிடுகிறான். புரிந்துகொண்ட பிறகு, ஏற்கனவே பிரச்சினைகளாகிவிட்ட விடயங்களை விட்டு விலகிவிடுகிறான். ஆனால், வழக்கமான, பாரம்பரியமான வாழ்க்கையை விட்டு விலகுவது என்பது எல்லோராலும் இயலாத காரியமாகவே தோன்றுகிறது.

அர்த்தமற்ற விடயங்களை உதறித் தள்ளிவிட, உருப்படியான ஒரு காரியத்தை மேற்கொண்டிட ஒருவன் அடுத்தவனுக்காகக் காத்திருப்பது என்பது முட்டாள்தனமானதாகும். முயற்சியும், ஆர்வமும், துணிவும் உடையவன் தனித்தியங்குவதே சிறந்தது.

தனித்தன்மையுடையவன், வித்தியாசமானவன் சமுதாயத்திற்கு பயப்படவோ, பதில்சொல்லிடவோ அவசியமில்லை. மேலும் சமுதாயத்தின் பாராட்டையும், ஆதரவையும் ஒருவன் தனது கருத்துக்கும், செயலுக்கும் தேடி நிற்கத் தேவையில்லை. தனியனான ஒருவனுக்கு தனித் தன்மையே வழிகாட்டி. வாழ்க்கையுடனும், உண்மையுடனும், ஆழமானதொரு தொடர்பை அளிக்கக்கூடிய சுயமான ஒரு கருத்து, ஒரு காட்சி, அல்லது ஒரு உணர்வுதான் மற்ற எல்லாவற்றையும்விட ஒருவனுக்கு மிக முக்கியமானதாகும்.

வாழ்க்கையானது அகம், புறம் என இருமுகம் கொண்டது. சுற்றில் ( Routine)அமைந்த அன்றாட வாழ்க்கை ஆழமற்றது. காலையில் விழித்தெழுதல், உடற் தேவைகளை பூர்த்தி செய்தல், உத்தியோகத்திற்குச் செல்லுதல், அரசியல் பேசுதல், பொழுதுபோக்குதல், வீடு திரும்புதல், உணவு, உறக்கம், உறவுகொள்ளுதல் ஆகிய விடயங்களைச் சரிவரச் செய்து விட்டால்மட்டும் அது வாழ்க்கையாகிடாது. இவை புற அளவிலான விடயங்கள். இவை ஒரு நாளின் 24 மணி நேரத்தை உபயோகித்துக்கொள்கிற உத்திகள், அடிப்படையான ஆனால் மேலோட்டமான சடங்குகள்.

மனித சமுதாயத்தின் வரலாறு, நாகரீகம், பண்பாடு, விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் அனைத்து சாதனைகளும் புற அளவிலானவை. புற அளவிலான விடயங்களைக் கொண்டு வாழ்க்கையை நிரப்பிடும் முயற்சிகள் வீணானவை. அவை என்றுமே நிறைவை அளிக்கவியலாது. ஆனாலும், இந்த ஒரேவிதமான வாழ்க்கையை ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்தும், இன்னமும் அதில் சலிப்பு தோன்றிடவில்லை நமது மனித சமுதாயத்திற்கு! இந்த சாதாரண, சராசரி வாழ்க்கை இன்னும் பிடிபடவில்லை. அதன் கரை காண முடியவில்லை!

ஆனால், இந்த நடைமுறை அல்லது அன்றாட வாழ்க்கை என்பதன் ஆழத்தைத் தொடாமல் அதை விரைவில் வாழ்ந்து அனுபவித்து அதை அதனுடைய தளத்தில், இடத்தில் வைத்துக் காணாமல் உண்மையான, கருவான வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்கவும் இயலாது. நடைமுறை அல்லது அன்றாட வாழ்க்கையானது அதனுடைய முறையான இடம், பங்கு, பாத்திரம்  ஆகியவைகளைக் கடந்து (மனித) வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திடும் அளவிற்கு அதை அனுமதித்தலாகாது,

நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சதவிகிதத்தினர் புற அளவிலான விடயங்களில் சிக்குண்டுவிட்டனர். அந்த 99% சதவிகிதத்தினர் புதிய கருத்துக்களை, புதிய பார்வையுடைய  ஒரு (1 %) சதவிகிதத்தினருக்கு
பெரும் தலைவலியைக் கொடுப்பவர்களாக உள்ளனர். வித்தியாசமான, விதிவிலக்கான தனிமனிதர்கள் அன்னியர்களைப் போல இப்பூமிக்கிரகத்தில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள். அந்த ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான 'அன்னியர்கள்' எனப்படுபவர்கள் தான் உண்மையில் இப்பூமிக்கிரகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள், சொந்தமானவர்கள். இவர்கள்தான் இயற்கையுடனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடனும் இசைவுடன் இயங்குபவர்கள். ஏனென்றால், இந்த 'அன்னியர்கள்' மட்டுமே சமுதாய-பொருளாதார- அரசியல் களத்தினைக் கடந்ததான ஒரு பிரதேசத்தில் இயங்குபவர்களாக இருக்கிறார்கள். உண்மையான மனிதர்கள் இப்பூமியில் அன்னியர்களைப் போல வாழவேண்டியிருக்கிறது என்பது அவலமே.

ஆனால், உண்மையான அன்னியர்களான, அதாவது வாழ்க்கைக்கும், பூமிக்கும் தொடர்பில்லாதவர்களான அரசியல்வாதிகள், மதவாதிகள், அரசாங்க அதிகாரிகள், இன்னும் பலவிதமான எத்தர்கள், ஏமாற்றுக்காரர்கள், வீணர்கள், வியாபாரிகள், சமுதாயம் என்னும் பெயரில் மனித உறவுகளை ஏய்ப்பவர்கள், இன்னும் சாமானியர்கள் சராசரி மக்கள்..... ஆகியோர்கள் இப்பூமிக்கிரகத்திற்கு  மிகவும் நெருங்கியவர்களைப்போல சொந்தக்காரர்களைப்போல உலவிவருகின்றனர். இவர்கள் வாழ்க்கையின் எதிரிகள். ஆனால், இவர்கள் மத்தியில், தான் உண்மையான மனிதர்களும் தோன்றி வாழ்ந்திடவேண்டியுள்ளது. வாழ்க்கையை பிரச்சினையாக்கும் மனிதர்கள் தான் உண்மையான மனிதனுடைய ஒரே பிரச்சினை.

உண்மையான வாழ்க்கை என்பது சமுதாய - பொருளாதார -அரசியல் உலகைக் கடந்ததொரு பிரதேசத்தில்தான் மலரவேண்டியுள்ளது. சமுதாம், பொருளாதாரம், அரசியல் ஆகிய இம்மூன்று விடயங்களும் வாழ்க்கைக்கு பாலமாக அமையாமல் பெருந்தடைகளாக அமைந்துவிட்டன. ஆனால், இவை தாமாக அமைந்துவிடவில்லை. மாறாக, மனிதர்களின் வாழ்க்கை (அணுகு) முறையே இவைகளை அமைத்தது. ஆனால், மனிதர்கள் உண்மையான வாழ்க்கை வாழ விரும்பினால் இம்மூன்று விடயங்களையும் உடைத்து (அதாவது, முறையே அவற்றுக்குரிய அளவான இடங்களைக் கொடுத்து) வெளியே வந்திடவேண்டும்.

இன்றுவரை மனிதர்களுக்கு வாழ்க்கையின் ஒரு முகம் மட்டுமே பரிச்சயமாகி இருக்கிறது. அதிலும் கூட ஒரு ஒழுங்கை, இசைவைக் காண முடியவில்லை. ஓரிருவர் தவிர்த்து வாழ்க்கையின் இன்னொரு முகத்தை மனித சமுதாயம் இன்றளவும் கண்டறியவில்லை. ஆனால், வரலாறு நீண்டு கொண்டே செல்கிறது. அது எங்கு செல்கிறது என்று எவரும் கேள்வி எழுப்பியதில்லை. வரலாற்றுக்கு முடிவு உண்டா? பல்லாயிரம் தலைமுறைகள் பூமியில் தோன்றி மறைந்துவிட்டன, பல நூற்றாண்டுகள் ஓடிச் சென்றுவிட்டன. வரலாற்றின் முடிவைக் காண்பவர் யார்? அப்போது நிகழக் காத்திருப்பது என்ன? வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் உள்ள தொடர்புதான் என்ன? எவ்விதத்தொடர்பும் இல்லை! வரலாறு, காலம் இவையுடன் தொடர்புடைய அனைத்தும் புறவயமானவைகள்.

ஆனால், வாழ்க்கை அகமயமானதும் கூட. அதற்குக் கால நிர்ணயம் ஏதுமில்லை. இந்தக் கணத்திலும் வாழ்க்கை முழுமையாகப் பொங்கி வழிகின்றது. வாழ்க்கையின் தரிசனம் காலத்தைப் போக்குவதில் இல்லை. காலத்தைக் கடப்பதில் தான் உள்ளது. வாழ்க்கையின் தரிசனத்தை காண்கையில் இந்தக்கணமும் இல்லாமல் போய்விடுவிடுகிறது. ஆனால், காலத்தைக்கடப்பதற்கு கால-எந்திரம் எதுவும் தேவையில்லை. ஒளியின் வேகமும் (3,00,000 கி.மீ/வினாடி) தேவையில்லை. உண்மையில் மனிதன் ஒரு கால -எந்திரமே. எண்ணங்கள் ஓய்ந்திடும் போது, மனம் அலைகளற்ற கடல் போல அமைதியுறுகிறது. அதற்குமேல் அல்லது கீழ் ஒன்றும் இல்லை. காலத்தைக் கடந்திட்ட நிலையில் இடம், அல்லது வெளி (Space)அல்லது உலகம் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மனிதனும் மறைந்து விடுகிறான். உண்மை (யாகிய வாழ்க்கை) மட்டுமே இருக்கிறது.

ஆகவே, நாளின் 24 மணி நேரத்தில், ஒரு மணி நேரமாவது, ஒருவன் அன்றாட வாழ்க்கை விவகாரங்களை கழற்றி வைத்துவிட்டு ஓய்வாக இருத்தல் அவசியமாகும். கூடவே, நாளைய தினத்தைப் பற்றிய ஆதங்கத்தையும், நேற்றைய தினங்களுடைய அவலங்களையும், களைந்தெறிந்து விடுவது நல்லது. மேலும் உள்ளூர் நடப்புகளையும், உலக நடப்புகளையும் மறந்திருத்தல் நல்லது.  ஏனென்றால், ஒருவனைச்சுற்றிலும் நடக்கின்ற விடயங்களனைத்தும் அப்படியொன்றும் உண்மையான வாழ்க்கையுடன் தொடர்புடையவைகள் அல்ல.

செய்தித் தாள்கள் தரும் செய்திகளில் மனிதர்களை உடனே மாற்றிவிடுகிற அம்சம் ஏதும் இல்லை. ஆகவே அவை தேவையில்லை. அனைத்து தொடர்பு ஊடகங்களும் அப்படித்தான். ஆகவே, அனைத்து உலக விடயங்களையும் எண்ணத்திலிருந்து உதறி எறிந்துவிட்டு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது அமைதியாய் இருப்பது அவசியம். ஆனால், இவ்விடயத்தை ஒரு பயிற்சியாக மேற்கொள்வதில் பயனில்லை. ஒருவன் உண்மையிலேயே உலக விடயங்களிலிருந்து சிறிது நேரமாவது விடுபட்டு இருப்பது தான் முக்கியமான விடயம். அநாவசியமாக ஒருவன் எப்போதும் உலக விடயங்களைத் தலையில் தாங்கிக் கொண்டிருப்பது அர்த்தமற்றதாகும். உலக விடயங்கள் என்றால், மனித சமுதாயத்தின் இன்றுவரையிலான கண்டுபிடிப்புகள், ஈடுபாடுகள், படைப்புகள் ஆகியவை. இவைகள் மனிதர்களது மேலோட்டமான தேவைகள் மற்றும் ஆசாபாசங்களின் தூண்டுதல்களினால் அம்மேலோட்டமான தேவைகளையும், ஆசாபாசங்களையும் திருப்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டவைகள்.

ஆனால், மனிதர்கள் தங்களுக்கு மிக மிக முக்கியமாக எது தேவை என்பதைப்பற்றி எண்ணிப்பார்த்தது கிடையாது. மேலும், வாழ்க்கையானது ஏதாவதொரு குறிக்கோளைக் கொண்டிருக்கக்கூடும் என்று சிந்தித்ததும் இல்லை. ஆனால், மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென சொந்த இலட்சியங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மனிதர்களது சொந்த இலட்சியங்களைப் பற்றி அதற்கு சிறிதும் அக்கறை கிடையாது. மேலும், அவைகளுக்கு வாழ்க்கையில் இடமும் இல்லை. ஏனென்றால், மனிதர்களது சொந்த இலட்சியங்கள்  வாழ்க்கையின் இலட்சியத்திற்கு முரணானதாகவே இருக்கும். அதாவது வாழ்க்கையின் இலட்சியத்தைத் தவிர்த்து மனிதர்கள் வேறெந்த  இலட்சியத்தையும் பிரதானமாகக் கொள்ள முடியாது.

இவ்வாறு உலக விடயங்களிலிருந்து விடுபட்டு தான் வாழ்ந்து வரும் விதத்தினை திரும்பிப்பார்த்து, அலசி, ஆராய்ந்து அவதானித்துப் பார்த்திடும் வேளையில், ஒருவன் உண்மையில் வாழ்க்கையுடன் சற்று தொடர்பு கொள்பவனாக ஆகிறான். உண்மையில், தான் வாழ்ந்து வருகின்ற வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து பார்த்தால்தான் ஒருவனுக்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது விளங்கும். இல்லாவிட்டால் தனது வழக்கமான வாழ்க்கையின் மட்டுப்படான தன்மை அறியாது ஒருவன் அதிலேயே அமிழ்ந்து வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்து போவான்.

ஒரு காலத்தில், அதாவது மனிதன் தோன்றிய போது அவனுக்கு கொஞ்சம் உணர்வு (Consciousness) உண்டான போது, அவனுக்கு இந்த பூமிக்கிரகமானது புதியதாகக் காட்சியளித்திருக்கக்கூடும். தன்னையும் புதியவனாகக் கண்டிருக்கக்கூடும். ஆனால், அந்த புதுத்தன்மையை மனிதன் மறந்தே போய்விட்டான். தான் படைப்பின் ஒரு அங்கம், அல்லது நீட்சி, அல்லது தொடர்ச்சி எனும் விடயம் இன்றைய மனிதனுக்கு அறவே தோன்றுவதில்லை. சமுதாய அமைப்புக்களை மனிதர்கள் உருவாக்கியதிலிருந்து, ஒருவித கூட்டு வாழ்க்கையைத் தொடங்கிய நாளிலிருந்து அவர்களுக்கு பூமியை ஒரு கிரகமாக, இயற்கையின் அங்கமாகக் காண்பதை அடியோடு நிறுத்திக்கொண்டுவிட்டனர். இன்று பூமியானது இயற்கையுடன் தொடர்புடையதாக, இயற்கைக்கு சொந்தமானதாக படைப்பின் விளைபொருளாக இல்லை. மாறாக, வல்லரசுகளுக்கும், இன்னும் பல பெயர்களைக்கொண்ட நாடுகளுக்கும் , அரசுகளுக்கும் சொந்தமாகவே உள்ளது. பூமியில், இன்று எந்தவொரு சிறு இடமும் இயற்கைக்குச் சொந்தமானதாக இல்லை; காடுகளும், மலைகளும், சமுத்திரங்களும், துருவப்பிரதேசங்களும்கூட - ஒவ்வொரு சதுர அடியும்- ஏதாவதொரு அரசுக்குச் சொந்தமானதாக இருக்கிறது. பூமியின் பரப்பானது நாடுகளுக்கிடையே அரசுகளுக்கிடையே பங்கு போடப்பட்டுவிட்டது. பூமியே ஒரு பெரிய மனைக்கட்டு வியாபாரம் (Real-estate)போலாகிவிட்டது. மனிதர்களுக்கு பூமியானது இன்றளவும் தட்டையாகவே தான் காட்சியளிக்கிறது! ஆனால், பூமியானது எந்தவொரு நாட்டிற்கும், அரசுக்கும் சொந்தமானதல்ல.

ஒருவன் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், மனிதர்களின் கட்டுக்கதையினின்றும் விடுபடவேண்டும் என்பதே. மனிதர்களின் இட்டுக்கட்டியதோர் உலகிலிருந்து ஒருவன் விடுபட்டு இயற்கையின், படைப்பின் உலகில் வாழ்ந்திடவேண்டும். இவ்வாறு மனிதர்களையும், சுற்றுப்புறத்தையும் மறந்து இருக்கும் வேளையில் ஒருவன் இயற்கையினுடைய பூமியின் மீது வாழ்பவனாக தன்னைக் காண்பான். தான் வேறு, பூமி, இயற்கை, பிரபஞ்சம் வேறு என்றில்லாமல் எல்லாவற்றுடனும் ஒன்றிப்போவான். இந்த அனுபவம் மிகவும் அடிப்படையானது, முக்கியமானது, இறுதியானது.

ஆனால், மனிதன்  இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்விற்கு சமுதாயத்தின் வாழ்க்கை (அணுகு) முறைகளில், அன்றாட கால அட்டவணையில் இடம் இல்லை. இயற்கையுடன் தனித்திருப்பதற்கு அவகாசமேயில்லாத வகையில் சமுதாய அலுவல்கள் மனிதனை சிதறடித்து விடுகிறது. ஆனால், மனிதன் வாழ்க்கையின் அழைப்பை கேட்பதற்கு இயற்கையுடன் தனித்திருக்க வேண்டும். இதற்கு முக்கியமாக ஒருவன் கூட்டத்திலிருந்து, அதன் கூச்சலிலிருந்து சிறிது நேரமாவது விலகியிருத்தல் அவசியம். இல்லாவிடில், ஒருவனைச்சுற்றியுள்ள கூட்டமானது அதனுடைய முட்டாள்தனமான கருத்துகளால் அவனை மூழ்கடித்துவிடும்.

* * *
உண்மையான முழுமையான வாழ்க்கையை எந்தவொரு பல்கலைக்கழகமோ, மத நிறுவனமோ, சமுதாய அமைப்போ, அரசோ ஒருவனுக்குப் போதிப்பதில்லை, போதிக்கவும் இயலாது. தனிமனிதன் ஒவ்வொருவனும் தானே, நேரே வாழ்க்கையுடன் தொடர்புகொண்டிடவேண்டும். உண்மையான வாழ்க்கையின் மீது ஆர்வம் ஏற்பட வேண்டுமானால், காலம் காலமாக தொடர்ந்திடுகிற, வரலாற்றின் வழி செல்கிற வாழ்க்கையின் மீது ஒவ்வொருவனும் சலிப்படைந்திருத்தல் வேண்டும். அதன் வெறுமையையும், அர்த்தமற்ற தன்மையையும் சகித்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருத்தல் வேண்டும். அதன் ஒரே விதமான மேலோட்டமான இன்பங்களுடன் திருப்தியடைந்து தேங்கிவிடாமல் இருத்தல் வேண்டும்.

முக்கியமாக ஒருவன் சமுதாயத்தின் வழிகளிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால், வரலாறு என்பது வாழ்க்கையின் பாதையிலிருந்து விலகிச் சென்றுவிட்டதொரு வழியாகும்.  வாழ்க்கையினை முழுமையாக அணுக இயலாமையினால் வாழ்க்கையின் நேர் பாதையில் மேலே செல்ல முடியாமல் தேங்கிப்போன மனிதக் கூட்டத்தின் வெளிப்பாடே வரலாறு. மனித சமுதாயம் தோற்றுவித்த தவறே வரலாறு. அது இன்றளவும் தொடருகிறது. ஆம், தவறுகளுக்கு மேல் தவறுகள், இவையே வரலாற்றை வழி நடத்திச் செல்கின்றன. ஆனால், வரலாறானது தவிர்க்க இய்லாத கதியில் அவ்வப்போது அதனுடைய இலக்கான போருக்கும், அழிவிற்குமே மனித சமுதயத்தை இட்டுச் செல்லும். உண்மையில் போர்கள் வரலாற்றை முடிவிற்கு கொண்டுவரவே முயற்சிக்கின்றன. வரலாற்றிற்கு இறுதி முடிவு என ஒன்றிருந்தால் அது மனித குலத்தின் ஒட்டுமொத்தமான இறுதியான அழிவாகவே அமையும்.

வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்யாமல் அதை மேலோட்டமாக வரையறை செய்தது சமுதாயத்தின் முதல் பெருந்தவறு. மேன்மேலும் செயற்கையான மதிப்பீடுகளை உருவாக்கியது முதல் தவற்றின் தொடர்ச்சி. . . . . ஆனால், வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து வாழ்ந்திடும் போது சமுதாயத்தினால் உருவாக்கப்பட்ட செயற்கையான மதிப்பீடுகளுக்கு இடமில்லாமல் போய்விடும். செயற்கையும், போலியுமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், முரண்பாடுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல் போய்விடும்.

உண்மையான, முழுமையான வாழ்க்கையில் எவ்வித போட்டிக்கும், இடமிருக்காது. போட்டிகள் இல்லையென்றால், வரலாறும் இல்லை. உண்மையான வாழ்க்கை காலமற்றது. ஆகவே என்றென்றும் அது ஒன்றானது. காலம் அற்ற நிலையில் வரலாற்றுக்கு இடமில்லை. வாழ்க்கை மட்டுமே இயங்கும். வாழ்க்கையானது அனாதியில் தொடங்கி அனாதியில் முடிகிறது.

உயிருடன் இருப்பதென்பதே ஒரு அதியற்புதமான விடயம்! வாழ்க்கையில், அதற்கு மேல் என்ன வேண்டும்? ஆனால், இந்த அதியற்புத அனுபவம் எத்தனை பேருக்குக் கிட்டுகிறது? ஒருவனைச் சுற்றி படைப்பு பொங்கி வழிகின்றது! சாலையில் செல்லும் போது இன்னொரு மனிதனைச் சந்திப்பது இன்னும் அற்புதமானது! ஆனால், நாம் சாலையில் சென்று கொண்டிருக்கையில் இன்னொரு அற்புதத்தைச் சந்திப்பதில்லை! மாறாக, நமது எதிரியை, உத்தியோகத்தில், வியாபாரத்தில், பொருளாதாரத்தில், அந்தஸ்தில் நம்முடன் போட்டியிடுகின்ற ஒரு எதிரியைத்தான் நாம் சாலையில் எதிர்கொள்கிறோம்! வாழ்க்கையிலிருந்து நாம் வெகுதொலைவு விலகிச் சென்றுவிட்டோம்! நாம் கண்டுபிடித்த மதிப்பீடுகள் நம்மை எங்கோ இழுத்துச்செல்கின்றன! நம்மிடையே பகைமையை, வெறுப்பை, பொறாமையை உருவாக்கி, நம்மைச் சிதறடித்து விட்டன நமது மதிப்பீடுகள்! நாம் அதியற்புதமான வாழ்க்கையை நழுவ விட்டுவிட்டு, வெற்று மதிப்பீடுகளைத் தழுவிக்கொண்டிருக்கிறோம்!

சீவித்தல் (உயிர்பிழைத்தல்), வாழ்தல் ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இன்னும் நாம் சீவித்தலைக் கடந்து வாழ்க்கை எனும் பிரதேசத்தில் நுழைந்திடவேயில்லை. இன்றுவரை நாம் உண்மையில் வாழ்ந்திடவேயில்லை என்பதே இதன் அர்த்தம். வெறுமனே சீவித்தல், அதாவது உடல், உயிர் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது மட்டுமே வாழ்க்கை ஆகிடாது. சீவித்தல் என்பது அனைத்துவிதமான உயிர்களுக்கும் பொதுவானது. மனிதனைத் தவிர்த்து மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் சீவித்தல் மட்டுமே முழு வாழ்க்கையாக இருக்கின்றது. மனிதன் மட்டுமே சீவித்தலைக் கடந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்திட பரிணாம ரீதியாக விதிக்கப்பட்டுள்ளான். உண்மையில் வெறும் சீவித்தலுடன் மனிதர்கள் திருப்தியடைந்திட இயலாது, நிறைவு பெற்றிட இயலாது. ஏனென்றால், மனிதன் என்பவன் ஒரு விலங்கைப்போன்றவனல்ல; மேலோட்டமான வகையில் உடல் பசிகளை தீர்த்துக்கொண்டு திருப்தியடைவதற்கு!

மனிதர்கள் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதுடன் நிற்பதில்லை. அதற்கு மேலாக அவர்கள் பலவித விளையாட்டுக்களில், போட்டிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். பெயர், புகழ், பணம், பலம், பட்டம், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகிய விளையாட்டுகள், போட்டிகள். மனிதர்கள் வெறுமனே சீவித்தலில் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் காண இயலாது. அதனால் அவர்கள் மேற்கூறிய விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி-தோல்வி முடிவுகளின் வழியே தங்களுக்கு அர்த்தம் தேடிக்கொள்ள முயல்கின்றனர். இவ்வழியே மனிதர்கள் முற்றிலும் தவறானதொரு திசையில் சென்றுவிட்டனர். ஏனென்றால், சீவித்தலைக் கடந்த வாழ்க்கையை - புறத்தே, சமுதாயத்தின் விளையாட்டுக்களத்தில், போட்டிக்களத்தில், மதிப்பீடுகளின் களத்தில் ஒருபோதும் காண இயலாது. பின்னர் வாழ்க்கையை எங்கே காண்பது? மனிதர்களுடைய அளவீடுகள், மதிப்பீடுகள் இல்லாத இடத்தில், இயற்கையின் அழகில், படைப்பின் உலகில், வாழ்க்கை மீதான மனிதனின் தீவிர காதலில் வாழ்க்கையைக் காணலாம். அப்போது சீவித்தலானது வாழ்தலின் அங்கமாக அமையும், அர்த்தம் பெறும். நாம் வாழ்வதற்காக சீவிக்கிறோம்; வெறுமனே சீவிப்பதற்காக ( = உயிர் வாழ்வதற்குகாக) அல்ல மனிதப் பிறப்பும், வாழ்க்கையும்.

உண்மையான வாழ்க்கையின் தரிசனத்தைப் பெறும்போது மனிதன் நிறைவு பெற்றவனாக வாழ்க்கையைத் தொடங்குகிறான். நிறைவு என்பது வாழ்க்கையின் முடிவில் வருவதல்ல! தொடக்கத்திலிருந்தே நிறைவு என்பது இருக்கின்றது! மனிதன் மட்டும் தன் இதயத்தை அகலத் திறந்தானெனில் வாழ்க்கை அவனுள் பொங்கி வழியும். வாழ்க்கையைத் தவிர வேறெதுவும் மனிதனை நிறைவு செய்திடாது. ஆனால், மனிதன் தன் இதயத்தை அகலத் திறந்திடும் வரையில் அவன் வாழ்க்கைக்கு அன்னியனாகவே இருப்பான்!

மேலும், சீவித்தலுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதுடன் நில்லாமல், மேற்கொண்டு சமுதாயத்தின் முட்டாள்தனமான பெயர், புகழ், பணம், பலம், பட்டம், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகிய போட்டிகளில் ஈடுபடாமல், இனியாவது இவற்றைக்கடந்து மனிதர்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பார்களாக!
*
மா.கணேசன்/ 02.02.1991/நெய்வேலி

<<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>><<•>>

நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...