Thursday, 30 June 2016

முன்பொரு காலத்தில் . .



முன்பொரு காலத்தில், நெய்வேலி எனும் ஊரில்
"விசாரமார்க்கம்" என்றொரு ஆன்மீக மையம்
முப்பது ஆண்டுகாலமாக இயங்கிவந்தது.

   ^^^^

விசாரமார்க்கத்தில் இணைந்திருக்கும் வரை
எவரும் வழிதவறிச் செல்லுவதில்லை!

விசாரமார்க்கத்திலிருந்து வெளியேறினாலும்
எவரும் வழிதவறிப்போகார் என நம்புகிறேன்!

   ^^^^

விசார ஆசிரியர் தனக்கு எதைப்போதித்துக்
கொள்கிறாரோ அதையே அவர் உங்களுக்கும்
போதிக்கிறார்!
விசாரத்தின் சீரிய இலக்கின் முன் விசார
ஆசிரியரும் சக்தியற்றவராகவே உள்ளார்!
ஏனெனில்,

   உண்மைக்குக் குறைவான எதையும் அவர்
   விரும்பவோ, நாடவோ, பின்பற்றவோ
   முடியாதவாறு அவர் தடுக்கப்பட்டுள்ளார்!

ஆகவே, அவர் விரும்பினாலும் உங்களுக்கு
யாதொரு சலுகையையும், விலக்கையும்,
தள்ளுபடியையும் அளிக்க முடியாது!

ஆகவேதான், விசாரமார்க்கத்தின் விதி முறைகள்
இவ்வளவு கடினமானதாகவும், கண்டிப்பு நிறைந்த
தாகவும் உள்ளன!

அவை எதுவும் விசார ஆசிரியரின் சொந்த விருப்பு-
வெறுப்பிலிருந்து பிறந்தவையோ, அவரின் சொந்த
உள்-நோக்கங்களை மறைத்து வைத்திருப்பவையோ
அல்ல!

   ^^^^

விசாரமார்க்கம் என்பது ஒரு இலாப நோக்கற்ற, மரபு
மற்றும் பயிற்சி சாராத, புரிதல் மற்றும் உணர்வின் வழி
செல்லும் ஆன்மீக இயக்கம் ஆகும்!

இது அறிதல், ஆராய்தல், கற்றல், தெளிதல், புரிதல் . . . .
ஆகியவைகளுக்கான மையம்.

இங்கு சிந்தனை, விசாரம் மட்டுமே பிரதானம். வேறு
பயிற்சிகள், அனுஷ்டானங்கள், சடங்கு முறைகள்
எதுவும் கிடையாது.

ஒவ்வொரு மனிதனும் அடைந்தாக வேண்டிய இறுதி
உண்மை, அர்த்தம், முழுமை . .  . ஆகியவையே விசார
மார்க்கத்தின் சீரிய இலக்குகளாகும்.

   ^^^^

"விசார-ஆசிரியர்"  "விசார-நடத்துனர்"  "விசார-குரு"
"விசாரத்தலைவர்" என்பது ஒரு பட்டமோ, பதவியோ
அல்ல! விசாரத்திற்கு, விசார வழிக்கு தன்னை முழுமை
யாக அர்ப்பணித்துக்கொள்ளும் எவரும் விசார-
குருவாகத் திகழலாம்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
  விசார மார்க்கத்தின் பங்கேற்பாளர்களுக்கு :
இவ்விசார மார்க்கத்தின் விதிகள் புதியவையல்ல! அவை
அவ்வப்போது உரைக்கப்பட்டவையே. அவை தற்போது
(05.12.2014 அன்று) தொகுக்கப்பட்டு, 01.01.2015 முதல் தளர்வு
நீக்கி புதிய ஒழுங்குமுறையுடன் நடைமுறைக்குவருகின்றன.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

விசாரச்செயல்பாடு என்பது வாழ்க்கை விடுக்கும் பிரதானச்
சவாலை ஏற்றுக் கொள்வதே - அது, உணர்வுள்ள மனித
ஜீவிகளுக்கானது. அதை நீங்கள் உணர்ந்து ஏற்றுக் கொண்டுள்
ளீரா? . . . . . இல்லையெனில், நீங்களும் எலிகளும் ஒன்றுதான்,
ஆகவே உங்களுக்கு விசாரம் தேவைப்படாது!

   ^^^^

விசார மார்க்கம் சமுதாய அமைப்பின் அங்கமோ, நீட்சியோ
அல்ல. ஆகவே, இது ஒரு பொது-அரங்கமோ, விவாதமேடையோ,
பொழுதுபோக்குக் கூடமோ அல்ல.

   ^^^^

இது, சுய-மேதாவிலாசத்தையும், புகழையும், சமூக
அந்தஸ்தையும் வெளியரங்கப்படுத்துவதற்கான
களம் அல்ல!
இது, சுய-மேம்பாடு காண விழைபவர்க்கும், தன்னை
முன்னிறுத்தும் தனி நபருக்குமான புகலிடமும் அல்ல!

மாறாக, இது, தொடர்ந்து தனது சுயத்தைக்கடந்து செல்லத்
தயாராக உள்ளவர்களுக்கான சிந்தனைப்பள்ளி ஆகும்.

   ^^^^

தொடர்ந்து தன்னைக்கடந்து வளராமல் தேக்கமடையும்
விசாரப்பங்கேற்பாளர்களும், விசார-அமர்வுகளை சடங்கு
போல மேற்கொள்பவர்களும், பிரமைகளுக்கு ஆட்படுபவர்
களும் அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுவர், இடித்துரைக்கப்
படுவர், திருத்தப்படுவர்.

   ^^^^

     விசாரமையம் ஒரு ஓய்வகம் அல்ல;
     ஆய்வகம் ஆகும்!

   ^^^^

விசாரமார்க்கத்தில் முழு-விருப்பத்துடன் இணபவருக்கான
அடையாளம் "விசார-பங்கேற்பாளர்"  "உண்மை-நாடுபவர்"
என்பவை மட்டுமே.

ஆகவே, பங்கேற்பாளர்களுக்கிடையே யாதொரு ஏற்றத்
தாழ்வு பாராட்டவும்; முன்னுரிமை, முதல்-மரியாதை,
முதலிடம், சிறப்புக்கவனம் அளிக்கவும் இடமில்லை!

   குறிப்பு : எனினும், நோய்க்கேற்றவாறு சிகிச்சை மாறு
                    படுவது போல, ஒவ்வொருவரது பக்குவம், தீவிரம்
                    ஆர்வம் ஆகியவற்றிற்கேற்ப பாடங்கள்
                    மாறுபடலாம்.

   ^^^^

ஒருவர், வெளியே, சமூகத்தில் 'யாராக' 'என்னவாக'
இருக்கிறார் என்பதெதுவும் விசாரவட்டத்திற்குள் ஒரு
பொருட்டல்ல! இங்கே, ஒருவரது "உட்பொதிவு" மட்டுமே
கணக்கில் கொள்ளப்படும். ஒருவருள் உறங்கும் அந்த
ஆற்றலை உலுக்கி எழுப்புவது ஒன்றே விசார-மையத்தின்
சீரிய ஆன்மீகப்பணியாகும்.

   ^^^^

விசாரத்திற்கு வரும் ஒவ்வொருவரும் தனியே(எந்தப்
படையுடனும் அல்லாமல்), ஒரு தனி நபராக மட்டுமே
வருதல் வேண்டும். அவர் தன்னை, தனது "உயர்-சுயத்தை"
மட்டுமே பிரதிநிதித்துவம் செய்பவராக இருத்தல்வேண்டும்.

அவர் சார்ந்திருக்கும் யாதொரு குழுவையோ,
வர்க்கத்தையோ, சமூகத்தையோ, கட்சியையோ,
சித்தாந்தத்தையோ, மதத்தையோ, தத்துவத்தையோ
பிரதிநிதித்துவம் செய்பவராக வருதல் கூடாது.

ஆம், விசாரத்திற்கு வரும்போது நீங்கள் யாருடைய, அல்லது
எதனுடைய பிரதிநிதியாக வருகிறீர்கள் என்பதை தெளிவு
படுத்திக்கொண்டு வருவது அழகு.

   ^^^^

நீங்கள் உங்களுக்காகப் பேசுங்கள் - உங்கள் புரிதலில்
இருந்து, நீங்கள் புரிந்துகொண்டதிலிருந்து மட்டுமே
பேசுங்கள். நீங்கள் படித்த, கேள்விப்பட்ட அறிவிலிருந்து
பேசாதீர்கள். அவற்றை மேற்கோள் காட்டாதீர்கள்.

நீங்கள் யாருக்காகவோ, யாருடைய விஷயங்களையோ
பேசாதீர்கள்.

நீங்கள் உங்களைப்பற்றி பேசுங்கள். உங்களுடைய
கருத்துகளை, பிரச்சினைகளை, கண்டுபிடிப்புகளைப்
பேசுங்கள். உங்களுடைய சீரிய உட்-பார்வைகளை
மேற்கோள் காட்டுங்கள்.

முக்கியமாக,  உங்களுடைய பிரச்சினைகளை, மட்டுப்
பாடுகளை, இயலாமையை, குறைபாடுகளை ஒருபோதும்
பொதுமைப்படுத்தாதீர்கள்.

   ^^^^

முதலிடத்தில், உங்கள் கேள்விகள் உங்களுடையதாக
இருக்கட்டும்! உங்களுடைய பதில்களும் உங்களுடைய
தாக, உங்களுக்கானவையாக இருக்கட்டும்!

   ^^^^

ஒருவருக்கு என்னென்ன தெரியும், எவ்வளவு தெரியும்
என்பதை அரங்கேற்றுவதற்கான மேடை அல்ல விசார
மையம். மாறாக, தெரிந்த அறிந்த தகவல்களிலிருந்து
என்ன அறிவைக் கறந்துள்ளோம், அந்த அறிவு உண்மை
யோடு எத்தகைய தொடர்பில் இணைந்துள்ளது என்பதை
அறிகின்ற புரிதல் மட்டுமே முக்கியமானது.

   ^^^^

நீங்கள் விசாரமையத்திற்குள் நுழையும்போது
உங்களுடன் அன்றைய அன்றாடவிஷயங்களையும்
சம்பவங்களையும், சமூக நிகழ்வுகளையும், சொந்தக்
கதைகளையும்கொண்டுவந்து இறைக்காதீர்கள்.

மாறாக, அன்று நீங்கள் சிந்தித்த பிரதான, மையமான
முக்கியமான அம்சங்கள் குறித்த புரிதல்களை,
முடிவுகளை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

   ^^^^

நீங்கள் எவையெவற்றைத் தெரிந்து கொள்ள விழை
கிறீர்கள், எத்தகைய அறிவைச் சேகரிக்கிறீர்கள் என்பது
நீங்கள் உங்களுள் எத்தகைய சுயமாக இருக்கிறீர்கள்
என்பதைப்பொறுத்தது!

"என்னால் உயரிய விஷயங்களை, உண்மைகளைப்
புரிந்து கொள்ள இயலவில்லை!" எனும் உங்களது புகார்
அர்த்தமற்றது.

ஏனெனில், ஒன்றைப்புரிந்து கொள்வதற்கான தீவிர
தாகமும், பேரார்வமும், கடின உழைப்பும் உங்களிடம்
இல்லை!  இது தான் உங்களைப்பற்றிய உண்மை நிலை
யாகும்

இந்த உண்மை நீங்கள் ஒரு 'மேலோட்டமான சுயம்'
என்று சொல்கிறது!

   ^^^^

விசார -அமர்வுகள் விசாரப் பொருளை மையமாகக்
கொண்டமைய வேண்டுமே தவிர வேறு சொந்த மற்றும்
பொது விஷயங்கள், வியாபாரப் பரிவர்த்தனைகள்,
கதைகள், தகவல் மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள்
போன்ற கவனச்சிதறலை ஏற்படுத்தும் காரணிகளுக்கு
இடமில்லை. அவை அறவே தவிர்க்கப்படவேண்டும்.

   ^^^^

விசார-அமர்வுகளின் போது பங்கேற்பாளர்கள் பரஸ்பரம்
பக்கத்தில் உள்ளவர்களிடம் குசலம் விசாரிப்பது, பிற
விஷயங்களை அலசுவது, பரிமாறிக்கொள்வது யாவும்
தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

நலம் விசாரிப்பு, மற்றும் நட்பார்ந்த வேறு விசாரிப்புகள்
யாவும் பரஸ்பரம் ஒருவர் இன்னொருவரது வீட்டிற்குச்
சென்று செய்யப்படவேண்டியவையாகும்.

ஆகவே, விசாரச் சந்திப்பின், அமர்வின் போது விசார
விஷயங்களை மட்டுமே பேசவும், பரிமாறிக்கொள்ளவும்
வேண்டும்.

நமது பேச்சு (எப்போதும்) விசாரப்பேச்சாக இல்லை
யெனில், அப்பேச்சு சராசரி வாழ்க்கையின் பாற்பட்டதே;
ஆகவே அர்த்தமற்றது!

   ^^^^

விசாரம் என்பது எவ்வகையிலேனும் அன்றாடத்தின்
நீட்சியாகவும், தொடர்ச்சியாகவும் இருக்குமானால், அது
பெரும் அசம்பாவிதமே - அதிலிருந்து நாம் விடுதலை
அடையவே இயலாது!

விசாரம் என்பது அன்றாடப் பரப்பிலிருந்து விடுபட்டு
மேலுயர்ந்து அசலான வாழ்க்கையுள் பிரவேசிக்கும்
ஒப்பீடற்ற செயல்பாடாகும்.

அன்றாடம் முடிவடைகிற போது விசாரம் (ஆன்மீகம்)
தொடங்குகிறது. விசாரம் தொடங்காமல் அன்றாடம்
ஒருபோதும் முடிவிற்கு வருவதில்லை!

   ^^^^

எல்லாவகையிலும் உங்களை, உங்களது மனம்,
எண்ணம், சொல், செயல், நீங்கள் புழங்கும் இடம்,
வீடு அல்லது படிப்பறை உட்பட யாவற்றையும்
அன்றாடத்திலிருந்து விடுவிக்காமல் விசாரத்தில்
நீங்கள் முறையாக ஈடுபட முடியாது!

ஆகவேதான் "விசார மையம்" என்பது அவசியமாகிறது,
முக்கியத்துவம் பெறுகிறது.

   ^^^^

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விசார மார்க்கம், விசார மையம், விசார அமர்வு என்பவை
நட்பு, பாசம், அன்பு, உறவுகள், அன்றாடவாழ்க்கை . . .ஆகிய
எதற்கும் அந்நியமானதல்ல. ஆனால், விசாரத்தைச் சேர்ந்த
வர்கள் என்கிற வகையில் நாம் கடைபிடிக்கவேண்டியது
விசார-நட்பு, விசார-பாசம், விசார-அன்பு, விசார-வாழ்க்கை,
. . . . . .   விசார-, விசார- என ஒவ்வொன்றுடனும், எல்லாவற்று
டனும் விசாரத்தைச் சேர்க்கும் போது நாமும், நம் வாழ்க்கை
யும், யாவும் மாறிவிடும், அர்த்தமுள்ளதாகிவிடும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"மனிதர்கள் சமமானவர்கள்", "எல்லோரும் ஒன்றுதான்"
என்பன போன்ற வாதங்கள் அடிப்படையற்றவை; ஆகவே
தவறானவை. நாமெல்லோரும் தவளைகளோ, ஓணான்
களோ அல்ல! மாறாக, நாம் மனித இனத்தைச்சேர்ந்தவர்கள்
என்கிற வகையில், "மனிதன்" என்கிற பொதுப்பெயரைச்
சமமாகப் பெற்றுள்ளோம், அவ்வளவுதான், மற்றபடி,
நாமனைவரும் புத்தர்களோ, ஞானிகளோ அல்ல! நாம்
ஒவ்வொருவரும் மனிதனாக மலர்வதற்குரிய உட்பொதிவை
சமமாகப்பெற்றுள்ளோம். ஆனால், அதைப் பயன்படுத்துவதில்
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு படி நிலையில் உள்ளோம் . . . .
இன்னமும் நாம் மனிதர்களாக ஆகவில்லை!

அதாவது, அடிப்படையில் இன்னமும்  நாம் விலங்குகள் தான்.
உச்சிப்படியை அடையும் போதுதான் ஒருவர் மனிதராக
ஆகிறார். . . . . . ஆகவே, ஒருவர் இன்னொருவருக்குச் சமமாக
இருக்கவேண்டிய அவசியமில்லை! எது முக்கியமெனில்,
ஒருவர் தனக்குத்தானே, தனது 'உயர்-சுயத்துடன்' , சமமாக
ஆகுதல் மட்டுமேயாகும்.

   ^^^^

விசார பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர்
போட்டியாளர்கள் அல்ல. மாறாக, விசாரத்தில்
இணையும் அனைவரும் தனித்துவமான விசார
சமூகத்தைச் சேர்ந்தவர்களாகிறீர்கள். ஆகவே,
உங்களுக்கிடையே "விசார-சகோதரத்துவம்"
பழகுவது இனிது!

   ^^^^

விசாரத்திற்கு விடுமுறை தினம் கிடையாது!
ஏனெனில், வாழ்வதற்கு விடுமுறை தினம்
கிடையாது!

   ^^^^

சீரிய விசாரகன் ஒவ்வொருவருக்கும் விசாரம் தான்
விழா, பண்டிகை, கொண்டாட்டம், குதூகலம் . . யாவும்
ஆகும்! ஆகவே, அனைத்து விடுமுறை நாட்களிலும்
சிறப்பு விசார அமர்வுகள் நடத்தப்படும்.

   ^^^^

விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்
என்பவை என்ன? அவை, எவ்வகையிலும் உங்களது
அன்றாடத்திலிருந்து வேறுபட்டவையா? இல்லை!
அவை, உங்களை அன்றாடத்திலிருந்து மீட்பதோ
விடுவிப்பதோ இல்லை! அவை அன்றாடச் சழக்கின்
உச்சக்கட்டம் ஆகும்! உங்களது சுய நலமானஅன்றாட
இச்சைகளை, துய்ப்புகளை, நுகர்வுகளை பன்மடங்காக
அதிகரித்து அவற்றில் மூழ்கித்திளைப்பதற்கான
சந்தர்ப்பமும், ஏற்பாடும்தான்!

விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்
உங்களை மேம்படுத்துவதோ, ஆன்மீகரீதியாக மாற்ற
முறச்செய்வதோ கிடையாது. அவை உங்களை அதிகப்
படியாகச் சந்தோஷமடையச் செய்வதும்  கிடையாது!
உங்களது களிப்பும், சந்தோஷமும் உண்மையில்
பாசாங்குத்தனமானது. ஏனெனில், ஒரு விழா, அல்லது
பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான உங்களது ஏற்பாடு
களும், தயாரிப்புகளும்  (புத்தாடைகள், இனிப்புகள்,
விருந்துணவு . .  . .போன்றவை) நீங்கள் (விஷேடமாக)
சந்தோஷமடைவதாகக் காட்டிக்கொள்ளவைக்கின்றன,
அவ்வளாவுதான்!

'உயிர்-வாழ்தல்' என்பதற்கு மேல் வேறு விஷேட
மதிப்பையும், அர்த்தத்தையும் கொண்டிராத உங்களது
அன்றாடத்தின் பயனின்மையை, மேலதிகப்பயனின்மை
யைக்கொண்டு கடக்கும் பயனற்ற முயற்சிகளே
விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் யாவும்!!

    குறிப்பு : ஆகவே, விசாரகர்கள் விருந்து, கேளிக்கை,
                      கொண்டாட்டங்கள்  போன்ற நிகழ்வுகளைத்
                      தவிர்ப்பது நல்லது!

   ^^^^

உண்மையில், உங்களது சாரத்தில்  "நீங்கள் யார்?"
என்பதையும், "வாழ்க்கை என்றால் என்ன?" என்பதையும்
அறியாத, புரிந்து கொள்ளாத,  நிலையில் நீங்கள் எதைக்
கொண்டாடுகிறீர்கள்? சொல்லுங்கள்!

   ^^^^

உண்மையில், உங்களைப்ப்புரிந்து கொள்வதையும்
வாழ்க்கையைப் புரிந்து கொள்வதையும் போல
அர்த்தமுள்ள வேறு யாதொரு கொண்டாட்டமும் இல்லை!

   ^^^^

ஒவ்வொரு விழா, பண்டிகை, கொண்டாட்டம், விருந்து
முடிந்ததும், அடுத்த நாள், நீங்கள் தவிர்க்கவியலாமல்
மீண்டும் உங்களது அன்றாடச் சழக்கிற்கு, அதே பீடை
நிறைந்த சுற்றிற்கு, பயனின்மைக்கு, சிறுமைக்கு
திரும்ப வேண்டியுள்ளது என்பது எத்தகைய அபத்தம்
என்பதை நீங்கள் என்று புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?

   ^^^^

உண்மையில், "விசாரம்" தான் கொண்டாட்டம் என்பதன்
அசலான பெயர் ஆகும். "கற்றலை"  "புரிதலை"  அடிப்படை
யாகக் கொண்ட விசார ஈடுபாடு மட்டுமே வாழ்க்கையை
தினம் தினம், கணத்திற்கு கணம் கொண்டாடும் செயல்
பாடாகும்.

ஒரு விசாரகனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும்
தினமும் விழாவே, பண்டிகையே, கொண்டாட்டமே!

அவன் அன்றாடத்தின் கைதியல்ல. மாறாக, அன்றாடம்
அவனுக்கு அடிமை -  சேவகம் புரியும் ஒரு கருவி!

   ^^^^

'விசார-வட்டம்' என்பது நண்பர்கள் குழாம் அல்ல - கூடிக்
குலவிக் கும்மாளம் போடுவதற்கு! மாறாக, உங்கள்
அனுபவித்தல், ரசனை, நகைச்சுவை, கேளிக்கை யாவும்
அடுத்த கட்டத்திற்கு பரிணமித்து உயரவேண்டும்!

   ^^^^

'விசார-வட்டத்தினுள்' நீங்கள் எதிர்கொள்ளவேண்டியது
உங்களை, உங்களை, உங்களை மட்டுமே தவிர, விசார
நடத்துனரையோ, பிற சக-பங்கேற்பாளர்களையோ அல்ல!
அதே நேரத்தில், நீங்கள் எல்லோராலும் சீண்டப்படலாம்;
இதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும் தம்மிடமுள்ள
குறைகளை விட அடுத்தவர்களிடமுள்ள குறைகள் உடனே
எளிதாகக் காணக்கூடியதாக இருப்பதே யாகும்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விசார-அமர்வின்போது நீங்கள் ஒவ்வொருவரும் மிகக் கவன
மாகவும், கூருணர்வோடும் நடந்து கொள்ளுங்கள். உங்களது
ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும், செய்கையும்,
பேச்சின் தொனியும், உங்களது மூச்சும், பெருமூச்சும், இச்சுக்
கொட்டலும், உங்களது வளவள பேச்சும், உள்ளீடற்ற மௌனமும்,
உங்களது ஒட்டுமொத்த இருப்பும் . . . . யாவும் உங்களை வெளிப்
படுத்திக்காட்டிவிடும்!

அதே நேரத்தில், நீங்கள் எதன் பின்னாலும் - யாதொரு கொள்கை,
கோட்பாடு, நபர், கருத்து, தந்திரம், சித்தாந்தம், வேதாந்தம்,
போன்ற எதன் பின்னாலும் மறைந்துகொள்ள, பாதுகாப்பு தேட
முயற்சிப்பதும் வீணே!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

விசாரம் என்பது தற்போது நீங்கள் அடைந்திருக்கும் நிலையிலேயே
உங்களை நிறுவிக்கொள்வதல்ல! மாறாக, உங்களை மேலே உச்சி
யில் நிறுவுவதற்கான பெருமுயற்சியாகும்!

   ^^^^

விசாரம் என்பது நேர்செங்குத்தான
  மலைமீது ஏறுவது போன்றது!
'உச்சம்' என்று ஒன்றுள்ளது என்பது
  தெரிந்த பிறகும் வாளாவிருப்பது
முட்டாள்தனத்தின் உச்சம்!
  மலைமீது ஏறத்தொடங்கிய பிறகு
ஓய்வு கொள்ள இடமோ, அவகாசமோ
  கிடையாது, உச்சியைத் தவிர!
மலைமீது ஏறும்போது பற்றிக்கொள்ள
 ஏதுமிராது, எவரது உதாரணமும்
வரைபடமும் உதவாது!
  ஏறுவது கடினம் எனக்கண்டு மீண்டும்
அடிவாரத்திற்குத் திரும்புவது
  அவலத்தின் அதலபாதாளம்!
உச்சியை அடையும் வரை சிகரமும்
  பார்வைக்குத் தென்படாது!
தொடர்ந்து ஏறுவதைத் தவிர வேறு
வழியேயில்லை!

   ^^^^

புத்தர் அடைந்த உச்சமும், இயேசு
ரமணர் அடைந்த உச்சமும்
ஒவ்வொருவரும் அடையவேண்டிய
உச்சமும் ஒன்றுதான்!
எனினும், புத்தர் ஏறிய மலையில்,
வழியில், நீங்கள் ஏற முடியாது!

மலையேற்றம் தொடர்பான அனைத்து
அறிவையும், குறிப்புகளையும்,
யுக்திகளையும், வழிமுறைகளையும்
வரலாற்றையும் தெரிந்து கொள்வதால்
என்ன பயன்?

உங்களது முதல் அடியை எடுத்து
வைக்காமல் யாதொரு வழித்தடமும்
தோன்றுவதில்லை; ஏற்றமும்
தொடங்குவதில்லை!
அதில், அடுத்த அடி பற்றிய கற்பனையும்
சிலாகிப்பும் படு வியர்த்தமானது!

   ^^^^

விசாரமார்க்கம் தனித்துவமானதொரு
மார்க்கமாகும். அது தனது வழிகளில்,
அணுகுமுறைகளில் நுட்பத்திலும்
நுட்பமானது. திட்பமான, தூல உலகின்
கைதிகளுக்கு அது அந்நியமானது,
சீரணிக்க இயலாதது. சிலருக்கு
மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக்
கூடும்!

   ^^^^

விசாரமார்க்கம் எவருடைய
அபிப்பிராயங்களையும்,
ஆலோசனைகளையும்,
விமர்சனங்களையும்,
கேள்விக் கணைகளையும்,
புகார்களையும், மதிப்பீட்டையும்
எதிர் நோக்கிக் காத்திருக்க
வில்லை!

ஏனெனில், அது எவரைக்கேட்டும்
தொடங்கப்படவில்லை!

   ^^^^

விசாரத்தின் முதல்படி, அன்றாட
விஷயங்களை, விவகாரங்களை
அப்படியே விட்டது விட்டபடி மறந்து
விட்டு அமைதியாக இருப்பது தான்!

   ^^^^

உங்கள் வாழ்க்கை இரண்டாகப்பிரிந்து
"விசாரத்திற்கு முன்", "விசாரத்திற்குப் பின்"
என வித்தியாசப்படவில்லையெனில்,
உங்களிடம் விசாரம் இன்னும் துளிர்க்க
வில்லை என்றுதான் அர்த்தம்!

   ^^^^

மா.கணேசன்/29.06.2016














Tuesday, 28 June 2016

விசார இல்லத்து விசனங்கள்!




உயர்ந்த மலையுச்சியிலிருந்து
வரும் தெளிந்த நன்னீர் அருவி
இங்கிருப்பது தெரிந்தும்
அவர்களுக்கு இங்கு வந்து
தண்ணீர் அருந்துவதற்கு
மனமில்லாதிருக்கிறது!
மாறாக அவர்கள்
தம்மிடத்திலேயேயுள்ள
சேற்று நீரையே
அருந்துகின்றனர்!
01.08.2011

   *

சமீப காலங்களில்
நான் தனியே என்னுடனே
பேசுவதும், புலம்புவதும்
என்னை நானே தேற்றிக்
கொள்வதுமாக இருக்கிறேன்!
சுவருடனும் காற்றுடனும்
மரங்களுடனுன் பேசுகிற
கலையை சீக்கிரமாக நான்
கற்றுக்கொண்டு விடுவேன்
போலுள்ளது!
அல்லது ஒருவேளை நான்
மௌனியாகி விடுவேனோ!
16.08.2011

   *

அடடா,
என்னுடைய உலகம்தான்
எவ்வளவு சுருங்கிப்
போய்விட்டது!
உங்கள் ஐந்தாறு பேர்களுடன்
அது முடிந்து விடுகிறது!
போகிற போக்கில் அது
இன்னும் சுருங்கி
என்னுடனேயே
முடிந்து விடுமோ!?
16.08.2011

   *

ஆகா! எவ்வளவு அருமையான
வீட்டுப்பிராணிகள் நீங்கள்!!!!!
16.08.2011

   *

ஆ! இப்பதிவுகளிலேயே
இந்தக்கருத்து, இந்த
வெளிப்பாடு
நன்றாக உள்ளது என்று
சொல்லாதீர்!
எல்லாமே ஒரே பாடலின்
தொடர்ச்சி தான்!
முற்பகுதி இல்லாமல்
இடைப்பகுதியோ
இடைப்பகுதி இல்லாமல்
பிற்பகுதியோ இல்லை!
17.08.2011

    *

நீங்கள் இங்கு வரும் போதெல்லாம்
என்னிடமுள்ளவற்றில் மிகச்
சிறந்தவற்றை எடுத்து உங்களுக்குக்
கொடுத்திருக்கிறேன்!
பதிலுக்கு நீங்கள் உங்களிடமிருந்து
எதை எனக்குக் கொடுத்தீர்கள்,
சொல்லுங்கள்?
ஒன்றே ஒன்றைச்
சொல்லுங்கள்!
குறைந்தபட்சம்
ஒரே
ஒரு
'உட்-பார்வை'?
17.08.2011

    *

முட்டாள்களா, அழைத்தால்தான்
வருவீர்களா?
17.08.2011

    *

இந்த ஆன்மீக விசார விவகாரத்தை
இத்துடன் ஊற்றி மூடிவிடலாம் என்று
எண்ணுகிறேன்!
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
17.08.2011

    *

இங்கு வந்த பிறகு
நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்றே ஒன்றுதான்!
அது, விசார விதிகளுக்கேற்ப
உங்களை நீங்கள்
மாற்றிக்கொள்வது மட்டுமே!
உங்களுக்கேற்ப
விசார விதிகளை மாற்றுவது
விசார இல்லத்தை
கேளிக்கை-விடுதியாக
ஆக்கிவிடும்!
31.08.2011

   *

நான் உங்களிடையே  இருந்தும்
இல்லாதவனைப்போல்
உணர்கிறேன்!
உங்கள் காதுகள் ஒலியை
மட்டுமே கேட்கின்றன!
என் சொற்களின் அர்த்தத்தை
அவை கிரகிப்பதில்லை!
10.12.2012

   *

இனி, விசாரம் பதிவுகளாக வலைப்பதிவில்
ஏற்றப்பட்டு ஒரு-வழிப் பேச்சாகத்தொடரும்!
உமது குறிப்புரைகள், பதிலுரைகள்,
விமர்சனங்கள், விளக்கங்கள், கேள்விகள்,
சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும்
வலைப்பதிவுகளே
பதில்களாயிருக்கும்!
23.06.2016

   *

உங்களை நான் கைவிடவில்லை!
உங்கள் கைகளில் விட்டுள்ளேன்!
23.06.2016

   *

இனி நான் உங்களுடன் அமர்ந்து
பேசப்போவதில்லை!
அதற்குரிய பொறுமையை நான்
இழந்து விட்டேன்!
என்னுடன் அமர்ந்து பேசுவதற்கான
அடிப்படையை
நீங்கள் இழந்துவிட்டீர்கள்!

அர்த்தமறியா உங்கள் வாழ்க்கைக்கு
ஊறுகாய் அல்ல நான்!
தொடங்காத உங்கள் பயணத்திற்கு
வழித்துணையும் அல்ல!
உங்கள் அபிப்பிராயங்களை அரங்கேற்ற
உடந்தை யுமல்ல!
நீங்கள் இலவசமாகப் பிரயாணிப்பதற்கு
என் முதுகில் இடமுமில்லை!

முப்பதாண்டுப் (பரி)சோதனைக்காலம்
முடிந்தது!
வெற்றி-தோல்வி இல்லாமல்!
17.06.2016

    *

எனக்கு சீடர்கள் எவருமில்லை
என்னைத்தவிர!
எனக்கு குருவும் எவருமில்லை
என்னைத்தவிர!
17.06.2016

    *
நான் ஒரு குரு அல்ல, ஆனாலும்
ஞானத்தின் அடிப்படைகளை
அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்!
ஆண்டுகள் பல சென்றன, கடைசியில் தான்
தெரிந்தது, அவர்கள் காத்திருந்தது
ஞானத்திற்காக அல்ல
தாயத்துக்களுக்காக!
17.06.2016

    *

நான் உங்களுக்காகக் காத்திருந்தேன்
என்று சொல்ல முடியாது, ஆனால்
அபரிமிதமான எனது ஓய்வு நேரத்தை
கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்!

இப்போதெல்லாம் என் ஓய்வு நேரத்தையும்
சேமிக்கத்தொடங்கிவிட்டேன்!
17.06.2016

     *

போலிச்சீடர்களுக்குக் குருவாக இருப்பவன்
போலிக் குருவாகத்தானே இருக்கமுடியும்!
ஆகவே, குருஸ்தானத்திலிருந்து நான் விலகிக்
கொண்டுவிட்டேன்!
17.06.2016

     *

முன்பின் தெரியாதவர்களாயிருந்தோம்!
முன்பின் தெரிந்து கொண்டோம், மீண்டும்
முன்பின் தெரியாதவர்களாகிவிட்டோம்!
23.06.2016

     *

ஆனால், உங்களுக்கு நான் சொல்ல
வேண்டிய எல்லாவற்றையும் சொல்லி
விட்டேன்!
எதையும் நான் உங்களிடம் மறைக்க
வில்லை!
பேச்சுவாக்கில் அனைத்து ரகசியங்களையும்
சொல்லிவிட்டேன்!
ஆனால், அவற்றை நீங்கள் புரிந்து
கொள்ளும்வரை அவை புரியாத
புதிர்களாகவே, ரகசியங்களாகவே
தொடரும்!
ரகசியங்களை மறைத்து வைக்காததின்
ரகசியம் இதுதான்!
உங்களுடைய அலாதியான அலட்சியப்
போக்கினால் அப்பொக்கிஷங்களை
நீங்கள் புரிந்துகொள்ளாமல்
இழந்து விட்டிருக்கும் வாய்ப்புகள்
அதிகம்!
25.06.2016

    *

என்னை நீங்கள் இனி எதிர்பார்க்க
மாட்டீர்கள் என நம்புகிறேன்!
ஏனெனில், நீங்கள் நிகழ்த்தும்
எந்த  அற்புதத்திற்கு சாட்சியாக
நிற்க என்னை எதிர்பார்ப்பீர்கள்?

ஆகவே என்னை அழைக்காதீர்கள்!
உங்களுக்கு நீங்களே சாட்சியாக
இருங்கள்!
25.06.2016

    *
உங்களைக் கட்டுப்படுத்தும், நெறிப்படுத்தும்
ஆசான் பொறுப்பிலிருந்து என்னை நான்
விடுவித்துக்கொண்டதால் நீங்களும்
விடுவிக்கப்பட்டீர்கள்!
ஆகவே நீங்கள் சுதந்திரமாக உங்களது
பொறுப்பில் எப்போதும் போல் இருக்கலாம்!
உங்கள் மீது எனக்கு வெறுப்பும் இல்லை
விருப்பும் இல்லை!
என்ன, உங்களுடன்  இப்போது எனக்குப்
பொறுமையில்லை!
25.06.2016

    *

என்னைப் பின்பற்றாதீர்கள், அது
ஆபத்தானது!
நான் உங்களை ஏற்கனவே செய்யச்
சொன்னவற்றை மட்டும் செய்யுங்கள்!
வாழ்க்கை-விதிகளைத்தான் நான்
சொன்னேன்!
அவை கடினமானவை என்றாலும்
அவற்றைத்தான் நிறைவேற்றச்
சொன்னேனே தவிர என்னைப்பின்
பற்றச்சொல்லவில்லை!

தவறான உங்களது வழிகளிலிருந்து
உங்களை திசைப்படுத்தினேன்!
எவரையும் நான் தவறாக
வழி நடத்தவில்லை என்பதில்
எனக்கு மகிழ்ச்சி உண்டு!

ஏனென்றால், எவரும் உங்களை உங்களது
வழக்கமான வழியிலிருந்து சிறிதும்
மாற்றமுடியாது என்பதில் எனக்கு
அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு!
26.06.2016

    *

ஆன்மீக உயரங்களை  என்னால் எட்ட
முடியாது என்பவன் தனது இயலாமையைச்
சொல்லவில்லை!
மாறாக, தான் ஏற்கனவே தெரிவுசெய்துவிட்ட
ஆழங்குறைந்த வாழ்க்கையில் தான்
அமோகமாக இருக்கிறேன்
என்கிறான்!

தனது விருப்பமின்மையை நேரடியாகச்
சொல்லாமல், ஆன்மீகமெல்லாம்
மகான்களுக்குத்தான் சாத்தியம் தமக்கல்ல
என்று பசப்புகிறான்!
ஆனால், அவன் தவிர்க்க விரும்புவது
ஆன்மீகத்தையல்ல, மாறாக தனது சொந்த
வளர்ச்சியையும் முழுமையையும் தான்!
தனது அசலான உயரத்தை அடைய
முயற்சிக்காமல், சமூக அந்தஸ்து ஏணியில்
உயர ஆசைப்படுகிறான்

தன்னையறிதலைத் தலைகீழாகப் புரிந்து
கொண்டவன் திடீர் அறிவு ஜீவியாகி தன் மனதின்
இயல்புகளைப் பகுப்பாய்வு செய்து தனது மனக்
கோணல்களையும், திரிபுகளையும் கண்டு
வியந்து தன்னை மெச்சிக்கொள்கிறான்!

அவன் என்ன செய்வான், உள்ளதைத்தானே
அவன் கொண்டாட முடியும்!

பகட்டும் கவர்ச்சியுமான உலக விஷயங்களுக்கும்
பொருட்களுக்கும், மதிப்புகளுக்கும் தன்னைக்
கொடுத்துவிட்டவனுக்கு ஆன்மீகம் வெறும்
ரசனைக்குரியது மாத்திரமே தவிர அது
அவனுக்கு ஒரு ஆத்மார்த்தத்
தேவையல்ல!
26.06.2016

    *
நான் ஒரு ஆன்மீகவாதி அல்ல!
எனது ஆன்மீகம் முற்றிலும் வேறானது!
நான் ஒரு ஆன்மீககுருவும் அல்ல!
ஆனால் ஒரு குருவுக்கான தகுதிகள்
என்னிடம் இல்லாமலில்லை!
ஒரு உண்மையான சீடனுக்குரிய
தகுதிகளைக்கொண்ட ஒருவனுக்காகக்
காத்திருந்ததுதான் மிச்சம்!
முப்பதாண்டு குரு-பயிற்சியில் ஒரு
தேர்ந்த குருவாக உருவானதும்
எனது பயிற்சிகளை முடித்துவிட்டு
தற்போது ஓய்வெடுத்துக்கொண்டு
விட்டேன்!
26.06.2016

    *

முப்பதாண்டு காலம்
காதுகேளாதோருக்கான
பள்ளியை நடத்தி வந்ததின்
விளைவு : முடிவில் நான்
ஊமையாகிப் போனேன்!
26.06.2016

    *
ஒளியை விழுங்கும் கருந்துளைகளைப்போல
அவர்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு
எதுவுமே சொல்லப்படாதது போல நடந்து
கொண்டதுதான் அதிக விசனத்திற்குரியது!
26.06.2016

    *

விசார மையத்தை நான் இழுத்து
மூடிவிடவில்லை!
பங்கேற்பாளர்கள் நீங்கள்
ஒவ்வொருவரும் தான்
மூடுவிழாவிற்கான பங்களிப்பைச்
செய்தீர்கள்!
இது சீர்தூக்கிப்பார்க்காது எடுத்த
திடீர் முடிவல்ல
பலவருடங்களாக ஆறப்போட்டு
நிகழ்ந்தேறிய ஒன்று!
வாய்ப்பு திறந்திருந்தபோது பயன்
படுத்தாதது உங்கள் தவறு!
மையத்தை மூடியது குற்றமல்ல, திறந்த
குற்றத்திற்குப் பரிகாரம்!
26.06.2016

    *

இனி, மறுபரிசீலனை செய்யவேண்டியது
நீங்கள் உங்களைத்தான்!
27.06.2016

    *
அனைத்து பிரமைகளுக்கும்
பின்னால் உள்ள பிரமை!
அனைத்து மட்டுப்பாடுகளுக்கும்
ஆதாரமான மட்டுப்பாடு!
அனைத்துக் கற்பிதங்களுக்கும்
ஆணி வேரான கற்பிதம்!
அனைத்து பிறழ்ச்சிகளுக்கும்
மூலகாரணமான பிறழ்ச்சி!
அனைத்துத் தடைகளுக்கும்
அடியிலுள்ள பெருந்தடை!
அனைத்துப்பிரச்சினைகளுக்கும்
அடிப்படையான அந்த ஒன்றை
மாற்ற உங்களால் முடியாது!
ஏனென்றால் உங்களால் மிகவும்
நேசிக்கப்படும் அகந்தையாகிய
நீங்கள் தான் அந்த ஒன்று!
27.06.2016

    *

உங்கள் கடந்த காலத்தை
தற்காலிகமாக மறந்திருப்பதற்குப்
பெயர் தான் தியானம் என்றால்,
அதை நிரந்தரமாக உங்கள் உனர்வில்
குறுக்கிடாமல்செய்வதற்குப்
பெயர் தான் ஞானம்!
ஆனால், தியானம் உங்களுக்குச்
சாத்தியமில்லை!
ஏனென்றால், உங்களால் உங்கள்
கடந்த காலத்தை ஒரு நிமிடம் கூட
மறந்திருக்கமுடியாது!
ஏனென்றால், கடந்தகால ஞாபகங்களின்
தொகுப்புதானே நீங்கள்!
ஞானமும் உங்களுக்குச்
சாத்தியமில்லை!
ஏனென்றால், உங்களால் உங்கள்
அறிவீனத்தின் குறுக்கீட்டை
நிறுத்தமுடியாது!
ஆனால், கடந்தகாலத்தை மறப்பது,
தியானம், ஞானம், . . . .இவை
எதுவும் ஆன்மீகம் அல்ல!
உங்களிடம் உணர்வுத்துடிப்பு உள்ளதா
என்பதை மட்டும் உணருங்கள்!
27.06.2016

   *

வாழ்க்கையின் மேற்புறமே இவ்வளவு
இனிமையையும், அழகையும், ஆனந்தத்தையும்
அற்புதங்களையும் கொண்டுள்ளதென்றால்

வாழ்க்கையின் உட்புறமும், ஆழமும்
எவ்வளவு இனிமையையும், அழகையும்,
ஆனந்தத்தையும் அற்புதங்களையும்
கொண்டிருக்கும்!

ஆனால், இனிமை, அழகு, ஆனந்தம், அற்புதங்கள்
இவை யாவும் ஆழத்தில் உறையும் அர்த்தத்தின்
மேலோட்டமான வெளிப்பாடுகளே!

வாழ்க்கையின் சாரமான அர்த்தம் தரும் நிறைவை
முழுமையை மேற்புறத்திலுள்ள எதுவும்
அளிக்கமுடியாது!
27.06.2016

   *

மனிதர்களில் சிந்திக்கும் மனிதன்
சிந்திக்காத மனிதன் என இரண்டு
வகை கிடையாது!
சிந்திப்பவன் தான் மனிதன்
சிந்திக்காதவன் ஒரு விலங்கு!
சிந்திக்க இயலாதவனாக எவரும்
பிறப்பதில்லை!
சிந்திக்கத்தவறுபவர்கள்
ஏராளம், ஏராளம்!
வாழ்க்கையின் மிக மையமான
மகா கேள்விகள்:

* பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும்
  (தனக்கும்) உள்ள தொடர்பு யாது?
* வாழ்க்கையின் அர்த்தம், இலக்கு
   யாவை?
* உண்மையில் 'தான்' யார்?
* மெய்ம்மை என்பது யாது?
* மெய்ம்மைக்கும் தனக்கும்
   உள்ளதொடர்பு யாது?
* நான் ஏன் இருக்கிறேன்?

இக்கேள்விகளுக்கு தானே நேரடியாக
பதில்களைக் கண்டடையாதவன் ஒரு
மனிதனாக வாழ்ந்ததற்கான
அடையாளம் அற்றவனாவான்!
27.06.2016

    *
"சகமனிதன்" என்பது வெறும் ஒரு கோட்பாடு!

நான் விதைக்கும் போது என்னுடன் சேர்ந்து
விதைத்தது யார்?
நான் நடும்போது உடன் இணைந்து நட்டது யார்?
நான் தண்ணீர் பாய்ச்சும் போது உடன் நின்று
வாய்க்கால் பறித்தது யார்?
நான் அறுக்கும்போது உடன் சேர்ந்து அறுத்தது யார்?
எவருமில்லையே!

என்னுடன் பயணிக்காதவன் எனக்கு நண்பன்
என்று சொல்லாதிருப்பானாக, அதற்கு அவன்
தகுதியில்லாதவன்!


எனக்கு நானே நண்பன், சகமனிதன்,  எல்லாமும்!
28.06.2016

    *

வண்ணத்துப்பூச்சி ஒரு காலத்தில்
கம்பளிப்புழுவாக இருந்தது தான்!

வண்ணத்துப்பூச்சியாக  மாறுவதற்காகவே
கம்பளிப்புழு இருக்கிறது!

இரண்டின் வாழ்க்கையும் வேறுவேறாயினும்
கம்பளிப்புழுவும் வண்ணத்துப்பூச்சியும்
சந்தித்துக்கொள்ளவும், உரையாடவும்
செய்யலாம்!

அவற்றின் சந்திப்பும், உரையாடலும்
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழவிருக்கும் வாழ்க்கையைப்
பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில்
அர்த்தமுள்ளதாக அமையும்!

வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து முடித்த
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
இருக்கும் பட்சத்தில் யாவும்
அனர்த்தமாகிவிடும்!

     *

மா.கணேசன்/28.06.2016












Friday, 24 June 2016

சீரிய விசாரகனுக்கு சில குறிப்புகள்



 



உனக்கு ஆன்மீகம் பற்றியோ
ஆன்மீகப்பயிற்சிகள் பற்றியோ
தியானம் பற்றியோ, அல்லது ஆன்மா
பற்றியோ, மறுபிறப்பு பற்றியோ
பல்வேறு ஆன்மீக நூல்கள் பற்றியோ
எதுவும் தெரிந்திருக்க வேண்டும்
என்பதில்லை!

        /

ஏனெனில், வாழ்க்கையைத்தவிர்த்து
வாழ்க்கைக்கு வெளியே, வாழ்க்கைக்கு
அப்பால், ஆன்மீகம் என்று எதுவும் இல்லை!
அப்படியானால், 'வாழ்க்கை' தான் ஆன்மீகமா
என்றால், ஒருவகையில் "இல்லை" என்பதும்,
இன்னொரு வகையில்"ஆம்" என்பதும்
தான் அதற்கான பதில்!

    \

முதலில், ஏன் 'இல்லை!' என்பதைப்பார்ப்போம்!
ஏனெனில், 'வாழ்க்கை' என்ற சொல்லே
அதற்கான அர்த்தமோ, விளக்கமோ அல்ல!
பலர் நினைப்பது போல  'வாழ்க்கை' என்பது
அவ்வளவு எளிமையானதுமல்ல, அல்லது
சிலர் எண்ணுவது போல அதிகச்
சிக்கலானதுமல்ல!

     /

மாறாக,  'வாழ்க்கை' என்பது, பொதுவாக நாம்
அறிந்துள்ளதைவிட அதிகம் ஆழமானது!

     \

எதை நாம்  'வாழ்க்கை' எனக் கூறுகிறோம்?
எதை நாம்  'வாழ்க்கை' என வாழ்ந்து
செல்கிறோம்?
எதை நாம்  'வாழ்க்கை' எனக் கருதுகிறோம்?
நம்மிடம் "வாழ்க்கைப்பார்வை" என்று
ஏதுமுள்ளதா?
'இது' தான்  'வாழ்க்கை' என்று தீர்மானித்துக்
கொண்டுதான் நாம் வாழ்கிறோமா?

      /

இல்லை! "வாழ்க்கை என்றால் என்ன?" என்ற
கேள்வியைக் கேட்பதற்கு முன்னே நாம்
வாழத் தொடங்கி நெடிய வரலாறும்
படைத்துள்ளோம், இன்னும் படைத்துக்
கொண்டும் உள்ளோம்!

      \

ஒருவகையில், எப்போது, மேற்குறிப்பிட்ட
கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோமோ
அப்போதே நம்முடைய ஆன்மீகமும்
தொடங்கி விட்டது எனலாம்!

      /

இதுதான் அசலான, உண்மையான ஆன்மீகம்!
"வாழ்க்கை என்றால் என்ன?"  என்ற
கேள்வியுடன் தொடரும் ஆழமான விசாரத்துடன்
தான் அசலான, ஆழமான வாழ்க்கை, அதாவது
"மானிட வாழ்க்கை" தொடங்குகிறது-
அதற்கு முன் ஒரு போதும் இல்லை!

      \

வாழ்க்கையின் உள்ளார்ந்த நோக்கம்,
குறிக்கோள், இலக்கு, அர்த்தம், உண்மை
ஆகியவற்றை உணர்ந்தறிவதும், அவற்றை
நிறைவேற்றுவதும் தான் அசலான ஆன்மீகமும்
உண்மையான, ஆழமான, மானிட-வாழ்க்கையும்
ஆகும்!

      /

இதற்கு மாறாக,
வாழ்வின் குறிக்கோள், இலக்கு, அர்த்தம்
ஆகியவற்றை அறியாமல் வாழ்வதற்குப் பெயர்
தான் லௌகீகம், உலகியல் என்பதும், விலங்கு
வாழ்க்கை என்பதும் ஆகும்!

       \

ஆனால், " வாழ்க்கையை , அதன் குறிக்கோளை
இலக்கை, அர்த்தத்தை எவ்வாறு, எதைக்கொண்டு
அணுகுவது, அறிவது?  எவ்வாறு, எதைக்கொண்டு
அவற்றை அடைவது?"  என்கிறீர்களா?

       /

நல்லது! இவ்விடத்தில் நாம் வாழ்க்கையைவிட
அதிமுக்கியமான, வாழ்க்கையின் ஆதாரமான
அம்சம் பற்றி விசாரிக்கிறோம்!

       \

ஆம், " வாழ்க்கையை , அதன் குறிக்கோளை,
இலக்கை, அர்த்தத்தை, முழுமையை
எவ்வாறு, எதைக்கொண்டு
அணுகுவது, அறிவது?"

        /

அருமை விசாரகனே, உன்னுடைய உணர்வைக்
கொண்டுதான்! உன்னைச் சுற்றியுள்ள இருப்பையும்
உலகையும், இன்னும் உன்னையும் நீ உணர்வது,
அறிவது,  உணர்வைக்கொண்டுதான்!

        \

(நீ உணர்வற்றவனாய் இருந்தால், நீயும் ஒரு
தவளையைப்போலத்தான் இருப்பாய்!)

        /

"உணர்வு" தான் இப்பிரபஞ்சத்திலுள்ள
அனைத்தையும், ஏன், இப்பிரபஞ்சத்தையும்
வாழ்க்கையையும் விட அதிமுக்கியமானது,
மையமானது!
ஏனெனில், "உணர்வு" தான் " வாழ்க்கை"!

        \

இப்போது, வாழ்க்கையை , அதன் குறிக்கோளை
இலக்கை, அர்த்தத்தை, முழுமையை எவ்வாறு,
எதைக்கொண்டு அடைவது என்பதைப்
பார்ப்போம்!

        /

ஆம், மீண்டும், உணர்வைக்கொண்டுதான் அவற்றை
நீ அடைந்தாக வேண்டும்!

        \

நீ உயிர்த்துடிப்புடன் இருக்கிறாய், ஆனால் அது
போதாது!
உணர்வுத்துடிப்புடன் இருக்கவேண்டும்!

        /

அதாவது, வாழ்க்கையை , அதன் குறிக்கோளை
இலக்கை, அர்த்தத்தை, முழுமையை அடைவது
என்றால் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:

        \

"உணர்வு" தான் " வாழ்க்கை!" என்று சொன்னோம்!
அப்படியானால், இந்தச் சமன்பாட்டின் அடுத்தக்
கட்ட வளர்ச்சியாகக் காணும்போது
"முழு- உணர்வு" தான் "முழு-வாழ்க்கை!" என்று
சொல்லியாக வேண்டும்!

         /

அதாவது, வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு,
அர்த்தம், முழுமை, உண்மை எனும் இவை யாவும்
ஒரே ஒரு அம்சத்தைத்தான் குறிக்கின்றன, அது
என்னவென்றால் : "முழு- உணர்வு" அல்லது
"பேருணர்வு" என்பதே!

         \

"வாழ்க்கை என்றால் என்ன?" என்றும்,
வாழ்க்கையின் குறிக்கோள், அர்த்தம், இலக்கு
பற்றியும் தன்னுள் விசாரிக்கும் ஒரு விசாரகனுக்கு,
அவனது உணர்வுக்கு, என்ன நிகழ்கிறது என்றால்,
இக்கேள்விகளால் கிளறப்பட்டு பெரும்
உறுத்தலுக்குள்ளான அவனது உணர்வு
அக்கேள்விகளுக்கான பதில்களைத் தன்னுள்
கொள்ளும்வகையில், விரிவடையவும்
அதிகரிக்கவும் செய்கிறது!

          /

சாதாரணமாக, நம்முடைய அன்றாடநடைமுறை
சார்ந்த கேள்விகளுக்குப் பதில் கண்டறியும்
வழிமுறையில், நம் உணர்வு பெரிதாக யாதொரு
மாற்றத்திற்கும் உள்ளாவாதில்லை,
விரிவடைவதுமில்லை,
உணர்வு அதிகரிப்பதுமில்லை!

          \

ஆனால், வாழ்க்கை பற்றிய ஆழமான
அடிப்படையான கேள்விகள் என்று வரும்போது,
அதிலும் முக்கியமாக, ஒருவன் அக்கேள்விகளின்
முக்கியத்துவம் அறிந்தவனாய், பேரார்வத்துடன்,
தீவிரமாய் தனது விசாரத்தை மேற்கொள்ளும் போது
அவனது உணர்வு ஒரு மாபெரும் மாற்றத்திற்கு
உள்ளாகும் அற்புதம்  உடன் நிகழ்வாக நடந்திடும்!

          /

உண்மையான, ஆழமான அறிவு, ஞானம் என்பது
ஒருவனது உணர்வினுடய அதிகரிப்பின், விரிவின்,
ஆழத்தின் விளைவே, வெளிப்பாடே தவிர வேறல்ல!

          \

ஆம், "முழு- உணர்வு" அல்லது
"பேருணர்வு" தான்
வாழ்க்கையின் குறிக்கோள்,
அதுவே வாழ்க்கையின் இலக்கு,
அதுவே வாழ்க்கையின் அர்த்தம்,
அதுவே வாழ்க்கையின் முழுமை,
அதுவே வாழ்க்கையின் உண்மை,
அதுவே முழுமையான வாழ்க்கையும்!
          /
உண்மையான, உணர்வுப்பூர்வமான வாழ்க்கை,
உனது பிறப்பிலிருந்து தொடங்குவதில்லை!
மாறாக,  எப்போது, "நான்" என்று, நீ உச்சரிக்கிறாயோ
அப்போதிலிருந்துதான் தொடங்குகிறது!
"நான்" என்பது உனது மூளையில் உற்பத்தியாகும்
சிற்றுணர்விலிருந்து தோன்றுகிறது!
ஏனெனில், நீ (அல்லது மனிதன்) என்பது அந்த
சிற்றுணர்வு தான் - உனது உடலல்ல நீ!
உணர்வாகிய மனிதன் உற்பத்தியாவதற்கு
நன்கு வளர்ந்த மூளை-அமைப்பைக்கொண்ட
உயிருள்ள உடல்-அமைப்பு தேவைப்படுகிறது!

         \

ஏற்கனவே சொல்லப்பட்ட சமன்பாடுகளான:

    உணர்வு = வாழ்க்கை  
    முழு-உணர்வு = முழு-வாழ்க்கை

இவற்றுடன் இப்போது,

     உணர்வு = மனிதன்

என்பதும் சேர்ந்து கொள்கிறது!

          /

இப்போது, நாம், ஆன்மீகத்தை அதன் சாரத்தில்
விளக்கும் சமன்பாட்டைக் காண்போம் :
   அதாவது, வாழ்க்கையை, அதன் குறிக்கோள்,
   இலக்கு, அர்த்தம், உண்மை, முழுமை ஆகிய
   வற்றைப் புரிந்துகொள்வதும், அவற்றை
   அடைவதும் தான் அசலான ஆன்மீகம், மற்றும்
   ஆழமான மானிட-வாழ்க்கை எனக்கண்டோம்!

   அதில், வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு
   உணர்வின் தேவை மையமானது எனக்கண்டோம்!

   அடுத்து, வாழ்வின் குறிக்கோள், இலக்கு, அர்த்தம்
   முழுமை என்பது 'முழு-உணர்வு' எனக்கண்டோம்!
   அப்படியானால், 'உணர்வார்ந்த செயல்பாடு'தான்
   உண்மையான ஆன்மீகம்! 'முழு-உணர்வு' தான்
   ஆன்மீக இலக்கு! என்பது தெளிவான முடிவாகிறது!
   இதோ சமன்பாடு :

        உணர்வார்ந்த செயல்பாடு = ஆன்மீகம்
        முழு-உணர்வு = ஆன்மீக இலக்கு = மானிட
        வாழ்வின் இலக்கு

             \

உணர்வோடிருத்தல், உணர்வில் மேன்மேலும்
பெருகுதல், வளர்ந்துயருதல், முழு-உணர்வு
அடைதல் என்பது தான் ஆன்மீகம்!

             /

உணர்வு               ?       
               |              _!
        ^     |           _/
        |      |      _/
               |   _/
               |_/_________
                             இருப்பு --->


இருப்பு நிலை வளர வளர உணர்வு நிலை உயருகிறது!
இதுதான் பரிணாம வழிமுறையின் அடிப்படை விதி!
பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வே!

விஞ்ஞானம் உயிரியல் பரிணாமத்தைப் பற்றி மட்டுமே
ஆராய்கிறது, அதன் அடியோட்டமாக அமைந்துள்ள
உணர்வுப்பரிணாமத்தை அது கணக்கில் கொள்ள
வில்லை! ஆனால், ஆன்மீகம் எனும் 'மெய்ஞானம்'
முழுமையான விஞ்ஞானம் ஆகும், அது எல்லா
வற்றையும் கணக்கில் கொள்ளத்
தவறுவதில்லை!

             \


சிறிதாகத் தொடங்கி மிகப்பெரிதாக வளர்தல்,
முழுமைக்குறைவானதாகத் தொடங்கி முழுமையடைதல்,
பூரணமற்றதாகத் தொடங்கி பூரணமாதல் என்பதுதான்
பரிணாமப்படைப்பின் அடிப்படை நியதி!

எல்லையில்லா இப் பௌதீகப்பிரபஞ்சம், ஒரு
பெரு-வெடிப்பில் ஒரு சிறுஅணுவாகத்தான் தோன்றியது!

உயிர்த் தோற்றம் முதன்முதலில் ஒரு நுண்ணிய ஒற்றைச்
'செல்'லாகத்தான் உருவானது!

மாபெரும் விருட்சம் சிறு விதையிலிருந்துதான் முளைத்து
எழுகிறது!

             /

மீண்டும் சொல்கிறேன்,உனக்கு ஆன்மீகம் பற்றியோ
ஆன்மீகப்பயிற்சிகள் பற்றியோ, தியானம் பற்றியோ,
அல்லது ஆன்மா பற்றியோ, மறுபிறப்பு பற்றியோ
பல்வேறு ஆன்மீக நூல்கள் பற்றியோ எதுவும்
தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை!

ஏனெனில், வாழ்க்கையை நேசிக்கும் விசாரகனே,
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற
உனது குன்றாப் பேரார்வம் தான் உனது வழிகாட்டி!

அலைகள் தவழும் மேற்புறம் மட்டுமல்ல சமுத்திரம்!
முத்துக்களைத் தேடி மூழ்கும் வீரனே அறிவான்
அதன் ஆழம்!

சமுத்திரம் என்ன, இப்பிரபஞ்சத்தையும் தன்னுள்
கொண்டது வாழ்க்கையின் ஆழம்!

அர்த்தம் தேடி தன்னுள் மூழ்கும் விசாரகனே
அடைவான் ஞானம்!

          /

அருமை விசாரகனே, நீ உன் உடலின்
விலங்கியல்புகளை வெற்றி கொள்வது
அவ்வளவு எளிதல்ல!

அதை நீ வெற்றி கொண்டாலும், மிக
எளிதாக பிரமைகளுக்கு ஆட்படும் உன்
மனதின் மட்டுப்பாடுகளை வெற்றி
கொள்வது இன்னும் கடினமானது!

வெகு அரிதான சிலரே அசலான
ஆன்மீகத்திற்குள் பிரவேசிக்கிறார்கள்!

வெகுபலர் ஆன்மீகக் கோட்பாடுகளைத்
தெரிந்துகொள்வதிலேயே மிதப்படையும்
போலிகளாகத் தேங்கிவிடுகின்றனர்!
           
          /

அருமை விசாரகனே, நீ உன் அகந்தையின்
மேற்பார்வையில் உன் விசாரத்தை நடத்திச்
செல்லும்வரை உண்மை ஆன்மீகம்
தொடங்குவதில்லை!

ஆகவே, சிறு மாற்றம் செய்திடு!
உயர்-விசாரத்தின் மேற்பார்வையில்
உன் அகந்தையை வழி நடத்திச் சென்றிடு!
மாபெரும் மாற்றம் நிகழ்ந்திடும்!


          /

அருமை விசாரகனே, நீ உனது அன்றாடத்
துன்பங்களிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும்,
கடன் தொல்லைகளிலிருந்தும், உனது தவறுகளால்
நீ சிக்கிக்கொண்ட தளைகளிலிருந்தும் விடுபடுவதை
விடுதலை என எண்ணுவாயெனில் உனது பார்வை
தவறானது!

துன்பங்கள், பிரச்சினைகள்,  தொல்லைகள், மற்றும்
தளைகளிலிருந்தும் விடுபடுவது அவசியம் தான்!
ஆனால், அதற்கும் உண்மையான விடுதலை மற்றும்
ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

வாழ்க்கையின் அர்த்தம், இறுதி உண்மை, மற்றும்
மெய்ம்மை பற்றிய கேள்வியும், நாட்டமும் உன்னிடம்
இல்லையெனில், உனக்கும் ஆன்மீகத்திற்கும் யாதொரு
சம்பந்தமும் இல்லை!

          /

உனது ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும்
உணர்ச்சியும், அசைவும் உனது  சொந்த-சுயத்துடன்
அல்லது அகந்தையுடன்  சம்பந்தப்பட்டதே!

உனது சொந்த-சுயத்துடன், அல்லது அகந்தையுடன்
தொடர்பில் அமையாத, சம்பந்தப்படாத
எவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும்,
உணர்ச்சியும் உன்னிடமிருந்து வெளிப்படுமானால்
உண்மையில் நீ ஆன்மீகத்தில் வளர்ந்துள்ளாய்
என நீயே அறிந்து கொள்ளலாம்!

         /

ஒட்டடையின் பண்பு தூசு மாசுகளைச்
சேர்த்துக்கொள்வதுதான்!
தினம்தினம் உன் ஆயுள் முழுவதும் நீ ஒட்டடை
நீக்கி உனது அறையைச் சுத்தம் செய்து
கொண்டேயிருக்கலாம்!
ஆனால், ஒட்டடைக்குக் காரணமான
சிலந்தியைக் கண்டுபிடித்து அறையைவிட்டு
அகற்றாமல் தூசு மாசுகளை
ஒழிக்க முடியாது!
கற்பனை, பிரமை, மாயை ஆகிய இழைகளைக்
கொண்டு பின்னிய வலையில், சுய நலம்
எனும் மையத்தில் அமர்ந்து
ஆட்சி செய்யும் அகந்தைச் சிலந்தியை
மனதைவிட்டு அகற்றாமல்
ஆன்மாவை மறைக்கும் மன மாசுக்களைக்
களையமுடியாது!

          /

அகந்தையின் இருப்பை முற்றிலுமாக மறுப்பது
அதன் இருப்பிற்கு அதிமுக்கியத்துவமும்
நிரந்தரமும் அளிப்பதைப்போன்றே தவறானது!

உணர்வின் தொடக்கப்புள்ளியான அகந்தைக்கு
உரிய இடமும்,  முக்கியத்துவமும் உள்ளது!
ஒரு ஓவியத்தின் தொடக்கப்புள்ளிக்குரிய
இடமும், முக்கியத்துவமும் மறுக்கவியலாது!

ஒற்றைப் புள்ளி ஒருபோதும் ஓவியமாகாது!
முழுமையடைந்த ஓவியத்தில் தொடக்கப்புள்ளி
முடிவுப்புள்ளி இரண்டும் தெரியாது!

எவ்வொரு தொடக்கமும் வளர்ந்து முழுமையில்
முடிவடைவது பரிணாம நியதி!
தொடக்கப்புள்ளி தன்னை முற்றுப்புள்ளியாகக்
கொண்டாடுவது தற்கொலைவிதி!

அகந்தை அகந்தையாகவே தேங்குவது அதன் வீழ்ச்சி!
வளர்ச்சி அழிவென்றும், மாற்றம் மரணமென்றும்  அஞ்சி            
தன்னைக் காத்திடும் அகந்தை அழிவது உறுதி!

          /

எவர் சொல்வதையும் கேட்காதீர்கள்!
அவசரப்பட்டு உங்கள் அகந்தையை
அழித்துவிடாதீர்கள்!

தானே முதலும் முடிவும் சாசுவதமும்
என இறுமாந்திருக்கும் அகந்தையின்
பேச்சையும் கேட்காதீர்கள்!

அகந்தையின் பிரச்சினை இதுதான்:
உணர்வின் வகையினத்தில் அதுதான்
முதலாவதானது!

அகந்தைக்கு மாற்றாக அதனிடத்தை
நிரப்புவதற்குப் பொருத்தமான எதுவும்
இப்பிரபஞ்சத்தில் இல்லை!

சக -அகந்தைகள் உள்ளனவென்றாலும்
ஒரு அகந்தை இன்னொரு அகந்தையைவிட
மேலானதல்ல!

ஆகவேதான் சமமான அகந்தைகள்
தம் தம் மேலான்மையை நிறுவிட
சதா சண்டையிட்டுக்கொண்டுள்ளன!

ஒரு அகந்தையால் இன்னொரு அகந்தையைச்
சகிக்கமுடியாதென்பது உண்மையானால்
தன்னையும் சகிக்கமுடியாது என்பதும்
உண்மையே!

அகந்தையின் அசலான பணி பிற அகந்தைகளுடன்
போட்டியிட்டுக்கொண்டிருப்பதல்ல!
இன்னும் அநித்தியமான தன்னைப் போற்றிப்போர்த்தி
பாதுகாப்பதுமல்ல!

தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பிரயத்தனங்களில்
மூழ்கிப்போன அகந்தை, தன்னைக்கடந்து வளர்ந்து
தான் ஒரு உயர்-உணர்வாக மலர முடியும் என்பதை
அது ஒருபோதும்  யோசிப்பதில்லை!

அகந்தை  தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவிரும்புவதில்
அணுவளவும் தவறேதுமில்லை!
ஏனெனில், அழிவதற்காகத் தோன்றியதல்ல அகந்தை!
அல்லலுற்றாலும் அழியா நிலை அடையும் வரை
மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் வினோத விந்தை!

கடவுளின் சாயலில் பிறந்ததாலேயே தன்னைக்
கடவுளாகப்பாவிப்பது தான் அகந்தையின் பெருந்தவறு!
சாயல் போதாது அசலாக மாறுவதொன்றே தன்னைப்
பாதுகாத்துக் கொள்ளும் நிச்சயமான வழி!

அகந்தையின் அழிவில் தோன்றுவதில்லை ஆன்மா!
அகந்தை கடவுள் அல்ல! அகந்தையில்லாமலும்
கடவுள் இல்லை!
அகந்தையின் மலர்வே கடவுள்!

                    /

மா.கணேசன்/ 19.06.2016







Wednesday, 22 June 2016

தற்கொலை மனிதர்கள்!



 
தற்கொலைச் செய்திகளைப் படிக்காதீர்கள்
பேசாதீர்கள்!
முதலில், உங்களுடைய தற்கொலையைத்
தவிர்த்திடுங்கள்!

தன்னையறியாமல்,  அர்த்தமறியாமல்
வாழ்வதென்பது  தற்கொலையல்லாமல்
வேறென்ன?

நிகழ்ந்து போன தற்கொலைகளுக்கான
காரணங்களைத் தேடாதீர்கள்!
நிகழ்ந்துகொண்டிருக்கும் தற்கொலைகளை
தள்ளிப்போடாமல் தவிர்த்திடுங்கள்!

இத் தற்கொலைச் சமுதாயத்தில், 'தற்கொலை'(யா)?
அட! வாழ்முறை எவ்வாறு 'செய்தி'யாகும்?
அபத்தத்திலும் அபத்தம் இது தானோ!

வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காதது தான்
தற்கொலைகளுக்கான ஒரே காரணம்!
பிற யாவும் நொண்டிச் சமாதானங்களே!

பொய்யானதை, பகட்டானதை, போலியானதை
மட்டுப்பாடானதை, தற்காலிகமானதை, முழுமை
யற்றதைத் தவிர்ப்பதே வாழ்க்கையைத்
தேர்ந்தெடுப்பது என்பதாகும்!

வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காத சமுதாயத்தில்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை,
அநீதி, அக்கிரமம், ஏற்றத்தாழ்வு மலிந்து விளங்கும்!
இவை தற்கொலையின் பன்முக வெளிப்பாடுகள்!

தலைகீழ் மதிப்பீடுகளைத் தழுவிக்கொண்ட
சமுதாயத்தில், வீடென்ன, நாடென்ன? வீட்டைவிட்டு
குழந்தைகள் ஓடிப்போனாலென்ன? மதிப்பெண்கள்
குறைந்த மாணவர்கள் செத்தாலென்ன?
வீணே கவலைப்படுவானேன்?

கவலைக்கிடமான உங்கள் வாழ்க்கை முறையில்
கவலைகளுக்கேது அர்த்தம்? ஐயத்திற்கிடமான உங்கள்
அக்கறைகள், தவறான லட்சியங்களின் தூண்டில்களில்
உங்கள் குழந்தைகளை சரியாக மாட்டுவது
குறித்தது தானே!

அசலான வாழ்க்கை அடுத்த நாள் தடித்த எழுத்துக்களில்
தலைப்புச்செய்தியாக வருவதில்லை!
அது அன்றாட நாட்டு நடப்புகளிலும் வெளிப்படுவதில்லை!
ஏனெனில், அது நிகழ்வுகள், சம்பவங்களின் தொடரால்
எட்டப்படுவதில்லை!

மாறாக, உங்கள் பொறாமை, போட்டி-மனப்பான்மை
பேராசை, துவேஷம், வஞ்சகம், ஏமாற்றுத்தனம்,
சுய- நலம் எல்லாவற்றையும் நீங்கள் கொன்று
விடும் போது அகத்தே தோன்றும்
முழுமை-உணர்வே அது!

    ^^^^

இதுதான் உங்கள் பிரச்சினை!
வாழ்க்கையை நீங்கள் எப்போதும்
மேற்புறத்திலேயே வாழ்ந்து திளைக்கிறீர்!
ஒருபோதும் ஆழத்திற்குச் செல்வதில்லை!

பெரிதாக  அசம்பாவிதமோ, துன்பமோ,
விபத்தோ, தோல்வியோ நேரும் வரையில்
ஆழங்குறைந்த குட்டை வாழ்க்கை ஆனந்தம்
தருவதாயுள்ளது!

சகமனிதர்கள் உங்களைப் பின் தள்ளி
முன் செல்லும் போது, சமூகம் உங்களைக்
கண்டுகொள்ளாது போகும் போது, உடலும்
உங்களுக்கு ஒத்துழைக்காத போது
உங்களுக்குள்ளே சுருங்குகிறீர்!

உள்ளே போதிய இடத்தை ஆயத்தம் செய்யத்
தவறியதால் சுருங்க இடமில்லாமல் சுக்கு
நூறாக உடைந்து போகிறீர்!

    ^^^^

நீர் விரும்பியவாறு வாழ்வதைச்
சுதந்திரம் எனக்கருதுகிறீர்!
ஆனால் உமது விருப்பங்களின்
அடிமையாக நீர் இருப்பது
உமக்குத் தெரிவதில்லை!
துய்ப்பு, நுகர்ச்சி, இச்சை நிறைவு,
மனக்கிளர்ச்சியூட்டும் விஷயங்கள்,
பொருட்கள், கேளிக்கைகள் . . .
இவைதானே உமது விருப்பங்கள்!
எவ்வளவு மேலோட்டமானது
உமது ரசனை!
பிழைப்புக்கும் வாழ்க்கைக்கும்
வித்தியாசம் அறியாத நீர்
உடனடிப்பயன்களைத்தேடியலைந்து
பிறவிப்பயனைத் தொலைத்து
விடுகிறீர்!

உமது விருப்பத்தின் வழி செல்வது
தற்கொலைத்தனமானது!
ஏனெனில், வாழ்க்கையின் விருப்பம்
என ஒன்று உள்ளது!
அது உமக்கு ஒரு ஒப்பற்ற
இலக்கை நிர்ணயித்துள்ளது!
அந்த இலக்கை அடைபவர்
அரிதிலும் அரிதான சிலரே!
ஏனெனில், தம் விருப்பங்களைத்
தள்ளி வைத்து வாழ்வின் விருப்பத்தை
முதன்மையாகக் கொள்பவர் சிலரே!

மனிதா, உனது விருப்பத்திற்கும்
வாழ்வின் விருப்பத்திற்கும்  உள்ள
வித்தியாசம் நீ அறிவாயா?

மனிதா, மகிழ்ச்சி, நிறைவு, அமைதி
பாதுகாப்பு இவையே உனது
விருப்பங்களின் இலக்குகள்!
ஆனால், இவற்றை நீ,  நிரந்தரமற்ற
விஷயங்களிலும், பொருட்களிலும்,
உறவுகளிலும் தேடுகிறாய்
ஆகவே,இவற்றின் மூலம் நீ அடையும்
மகிழ்ச்சி, நிறைவு, அமைதி, பாதுகாப்பு
எதுவும் நீடித்து நிலைப்பதில்லை!
ஆகவே நீ மேன்மேலும் அவற்றை வேறு
புதியபுதிய விஷயங்களிலும்,
பொருட்களிலும், உறவுகளிலும்
தேடித் தோற்று விரக்தியுறுகிறாய்!
உனது நோக்கம் சரியானதே!
ஆனால், உனது தேடலின் திசைகளும்
இடங்களும் பொருட்களும் தவறானவை!

மனிதா, மகிழ்ச்சி, நிறைவு, அமைதி
பாதுகாப்பு இவையே வாழ்க்கையின்
விருப்பமும்!

இவை மட்டுமா, இன்னும்
அர்த்தம், ஆனந்தம், முக்தி, மோட்சம்
முழுமை, மரணம்-கடந்த -பெருவாழ்வு
ஆகியவை அடங்கிய அரிய
ஆன்மீகப் புதையலையல்லவா
கொண்டுள்ளது!

ஆனால், வாழ்க்கை இவற்றை உனக்கு
முழுமையாகவும், நிரந்தரமாகவும்
அளிப்பதற்காகக் காத்திருக்கிறது!

அந்த அரிய, பொக்கிஷப் புதையலை
உன்னுள்ளே ஆழத்தில் மறைத்து
வைத்துள்ளது!

அதை நீ கண்டடைய வேண்டும் என்பதே
வாழ்க்கை உனக்கு நிர்ணயித்துள்ள
இலக்கு!

அதற்கான திறவுகோலையும் வாழ்க்கை
உன்னிடம் தான் கொடுத்து
வைத்துள்ளது!

உனது "உணர்வு" தான் அந்தத்
திறவுகோல்!

உண்மையில் நீ தான் அந்தப்
புதையல் பேழை!

உன்னை நீயே உணர்வு கொண்டு
திறந்து உன்னுள் ஆழ்ந்து சென்று அந்த
ஆன்மீகப் பொக்கிஷத்தை
அள்ளிக்கொள்ள வேண்டும்!

ஆனால், நீயோ அனைத்துப்
பொக்கிஷங்களையும் உனக்குள்ளே
வைத்துக்கொண்டு
பணத்தையும், பொன்னையும்,
பொருட்களையும் பெரிதெனத் தேடி
அலைந்து கொண்டிருக்கிறாய்!

மனிதா, நீ ஒன்றை தெளிவாகப் புரிந்து
கொள்வாயாக :

உனக்கு வெளியே மனதைக்கவரும்
ஆயிரம் விஷயங்கள், பொருட்கள்,
தங்கம், வைரம், வைடூரியம்,
இரத்தினங்கள் எல்லாம்
இருக்கலாம்!

ஆனால், நீ உண்ணும் உணவு உன்னுள்,
உனது உடலில், இரத்தத்தில் கலப்பதுபோல
உனது உணர்வில் கலக்காத எதுவும்
உனக்குப்பயன் தராது!

உண்மை, மெய்ம்மை, வாழ்க்கை, அர்த்தம்
ஞானம், முழுமை எதுவாயினும் உன்னுள்
உன்னால், உனது உணர்வால்
கண்டுபிடிக்கப்படாத, தழுவப்படாத
எதுவும் உனக்குரியதாகாது!!

    ^^^^

தயவுசெய்து வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்!
உங்களது விருப்பப்படி நீங்கள் எதையும்
தேர்ந்தெடுக்காதபோது
வாழ்க்கை உங்களைத் தேர்ந்தெடுக்கும்!
முக்தியையும் தரும்!
வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுக்காவிடில்
மரணம் உங்களைத் தேர்ந்தெடுத்து விடும்!

    ^^^^

மா.கணேசன்/21.01.2016







Sunday, 19 June 2016

சிந்திக்கத் துணிபவர்களுக்கு மட்டும்!



 
கடவுளின் 'சாயலில்' படைக்கப்பட்ட மனிதனே!
சாயலுக்கே இத்தனை ஆரவாரம், அகங்காரம்
ஆணவம் என்றால்,

அசலான நிலைக்கு நீ உயர்ந்தால் என்னாவது?

நப்பாசை கொள்ளாதே -  ஒன்றுமாகாது!

ஏனென்றால், உன் அகந்தையின் உருமாற்றமே
அசலான நிலையை அடைவதற்கான ஒரே வழிமுறை!

உருமாற்றும் உலைத்தீயில் புடமிடப்படுகையில்
சாயலின் பண்புகள் யாவும் உதிர்ந்துவிட
அவ்விடத்தை அசலின் பண்புகள் நிரப்பிடும்!

மனிதா! நீ முட்டாள்தனமாக யோசிக்காதே!
நீ கடவுளாகிடும் போது, அற்பமான மனித ஆசைகள்
உன்னிடம் இருக்காது!

எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல நிலை உனக்கு
வாய்த்தால் நீ நினைக்கும் எதையும் சாதித்துக்
கொள்ளலாம் என கனவு காணாதே!

ஞானியின் ரகசியத்தை உனக்குச் சொல்லுகிறேன்:
எல்லாம் அறிந்த அந்த முழுமை நிலையில் உனக்கு
எந்த எண்ணமும், விருப்பமும், தேவையும் எழாது!

அப்படியே நீ ஒன்றை  விரும்பினாலும்
எல்லாம் வல்ல  நிறைவு நிலையில் நினைத்த
மாத்திரத்தில் எல்லாவற்றையும் நீ செய்துமுடித்துவிட
மேற்கொண்டு செய்ய, சாதிக்க மீதம் எதுவுமிராது!

கடவுளின் சாயலில் படைக்கப்பட்டதின் நோக்கம்
கடவுளின் அசலான நிலைக்கு நீ உயரவேண்டும்
என்பதற்காகத்தான்!

    ><

எனக்கு சீடர்கள் எவருமில்லை
என்னைத்தவிர!
எனக்கு குருவும் எவருமில்லை
என்னைத்தவிர!

    ><

நான் ஒரு குரு அல்ல, ஆனாலும்
ஞானத்தின் அடிப்படைகளை
அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்!
ஆண்டுகள் பல சென்றன, கடைசியில் தான்
தெரிந்தது, அவர்கள் காத்திருந்தது
ஞானத்திற்காக அல்ல
தாயத்துக்களுக்காக!

    ><

நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்
என்று சொல்ல முடியாது, ஆனால்
அபரிமிதமான எனது ஓய்வு நேரத்தை
கொஞ்சம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்!

அவர்கள் என்னிடமிருந்து சில சொற்களைத்தவிர
வேறெதையும் கற்றுக்கொள்ளவில்லை!
இக்கூற்று தவறென அவர்களது அகநிலை மாற்றம்
சாட்சிகூறுமெனில் அவர்கள் மேன்மேலும் வளர்க!

அவர்களைக்கொண்டு நான் மிகக் கடினமான
தத்துவங்களை விளக்கும் கலையைக் கற்றுக்
கொண்டேன், உறங்கிக்கிடந்த வெளிப்பாடுகளை
வெளிக்கொணர்ந்தேன்!

என்ன, அவர்கள் என்னை முறையாகப்பயன்படுத்திக்
கொள்ளவும் இல்லை, முழுமையாக அவர்களுக்கு
உதவிட அவர்கள் எனக்கு உதவிடவும் இல்லை
என்பது தான் ஒரு வருத்தமளிக்கும் விஷயம்!

இப்போதெல்லாம் என் ஓய்வு நேரத்தையும் நான்
சேமிக்கத்தொடங்கிவிட்டேன்!


     ><

மனிதன் ஏற்கனவே அரைக்கடவுள் தான்!
உணர்வுள்ள எவ்வொரு மனிதனும் கடவுளே!
இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் மனிதனைத்தவிர
வேறெதற்கும், பிரபஞ்சத்திற்கும் கூட உணர்வு கிடையாது!
ஆனால், உணர்வின் மையத்துவத்தை முக்கியத்துவத்தை
மனிதர்கள் உணராததால் உணர்வின் முழுமையான
கடவுளாக மலரும் வாய்ப்புரிமையைப் பயன்படுத்த
அவர்கள் தொடர்ந்து தவறி வருகின்றனர்!
இதன்விளைவாக, மனிதர்கள் மனிதர்களாக
அதாவது மனதின் ஜீவிகளாகவும் எழாமல்
உடலின் ஜீவிகளாக, அதாவது
விலங்குகளாகவே உழன்று
கொண்டுள்ளனர்!

     ><

பிளேட்டோவின் அகாதமி வாயிலில் :
 "ஜியோமிதி அறிந்தவர்கள் மட்டும் உள்ளே நுழைக!"

வள்ளலார் ஞானசபை வாயிலில் :
  "கொலை, புலை தவிர்த்தோர் உள்ளே வருக!"

விசார மார்க்கம் புதிர்-ஞானப்பள்ளி வாயிலில் :
  "சாதி, மதச் சழக்கைக் கடந்தோர் மட்டும்  உள்ளே நுழைக!"

     ><

அது வெறும் வதந்தி அல்ல, உண்மைதான்!
ஆம், என்னுடன் சேர்ந்தீர்களென்றால்
உங்கள் வாழ்க்கையின் அற்ப-சொற்ப
இனிமையையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்!!

அற்பமானது, சிறுமையானது, மட்டுப்பாடானது
போலியானது, அன்றாடம் சேர்ந்தது, பிரமை
வயப்பட்டது, உண்மைக்குக் குறைவானது எதையும்
நான் சிறிதும் அனுமதிப்பதில்லை!!



    ><

எண்ணங்களைக் விரட்டிக் காலிசெய்யச்
சொல்வது எதற்கு?
எண்ணங்கள், விளைவுமிக்கவகையில்
பயன்படுத்தப்பட வேண்டிய கருவிகள்!
அவற்றை முறையாகப் பயன் படுத்தாமல்
அவசரப்பட்டுத் தூக்கி எறிந்துவிடாதீர்!

மனதைக் கடந்து செல்லச் சொல்வது
எதற்கு?
மனமில்லையேல், நீங்களும் தவளை
களைப்போல்தான் இருப்பீர்கள்!
முழுமையாக மன-வளர்ச்சி அடையாமல்
மனதைக் கடக்க முடியாது - அதற்கு முன்
மனதைப் பயன்படுத்துங்கள், முதலில்
மனம் எதற்கு? சிந்தனை எதற்கு? எனச்
சிந்தியுங்கள்!

மூச்சைக் கவனித்து ஒன்றும் நடக்கப்
போவதில்லை! அதை உடல் கவனித்துக்
கொள்ளும்!
ஒன்றைத் தவிர்க்கப் பிறிதொன்றை எடுத்தால்,
பிறகு அதைத் தவிர்க்க வேறொன்று வேண்டும்!
எது தேவையோ அதை நேரடியாக எடுத்துக்
கொள்ளுங்கள் - உணர்வோடிருங்கள்,
உணர்வாய் இருங்கள் போதும்!

கால்களை மடக்கிப்போட்டுக்கொண்டு
கண்களை மூடிக்கொண்டு அமர்வதை தியானம்
என்று எவர் சொன்னது?
இரவுத்தூக்கம் போதும், விழித்துக்கொள்ளுங்கள்!
அனைத்தையும் உணர்வு கொள்ளும் உணர்வை
உணர்வு கொள்ளுங்கள்!

     ><

"நீங்கள் எதைப்பற்றியும் உருப்படியாகச்
சிந்திப்பதில்லை!"
என்று நான் சொன்னவுடன் உடனே நீங்கள்
சிந்திக்கத் தொடங்கிவிடப்போவதில்லை!
அது உங்களால் முற்றிலும் முடியாது என்பது
எனக்குத் தெரியாத விஷயமல்ல!

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய
விஷயம் என்னவெனில், நீங்கள் எவற்றைப்
பற்றியெல்லாம் அதிகப்பிடிப்புடன்
சிந்திக்கிறீர்களோ, அவற்றையெல்லாம்
நீங்கள் கடந்தாக வேண்டும், ஏனென்றால்
உங்களுக்குப்பிடித்த விஷயங்களைத்தாண்டி
வேறெதைப்பற்றியும் உங்களால் ஒருபோதும்
சிந்திக்கவே இயலாது!

அதில், உருப்படியாகச் சிந்திப்பது என்கிற
பேச்சுக்கு இடமேது?

    ><

கேள்விப்பட்டும் ஆன்மீகம் என்று எதுவும்
இல்லாதது போல கண்டும் காணாதது போல
தன் போக்கில் வாழ்ந்து செல்பவன் மூடன்!

வழக்கமான போக்கில் வாழ்ந்து கொண்டு
ஆன்மீகம் தனக்குக் கடினமாக உள்ளது என
தனது இயலாமையை அறிக்கையிடுபவன்
பசப்புக்காரன்!

காலத்துக்கேற்ற புதுப்புதுப்பாணிகளில்
ஒன்றாக ஆன்மீகத்தையும் சேர்த்துக்
கொள்ளுபவன் பகட்டுக்காரன்!

ஆன்மீக நூல்களில், தடைகள் எனக் கூறப்பட்ட
விஷயங்களையும், கீழியல்புகளையும்
ஒவ்வொன்றாகவோ, அல்லது ஒரேடியாகவோ
விட்டால்தான் ஆன்மீகம் சாத்தியமாகும்
என்பவன் பாசாங்குக்காரன்!

தனக்கு வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள்
கடமைகள், பொறுப்புகள் உள்ளன; ஆகவே
ஆன்மீகத்திற்கு நேரமேயில்லை என்று
அப்பிராணியைப்போல் நடிப்பவன் பொய்யன்!

அட, ஆன்மீகத்தை விட்டுத்தள்ளுங்கள்!
இத்தகைய  மூடர்கள், பசப்புக்காரர்கள், பகட்டுக்
காரர்கள், பாசாங்குக்காரர்கள், பொய்யர்கள்
நிறைந்த சமுதாயம் எப்படிப்பட்டதாக விளங்கும்?

    ><

உண்மையில், அசலான ஆழமான அர்த்தமுள்ள
வாழ்க்கைக்கு வெளியே ஆன்மீகம் என்று
தனியே ஏதுமில்லை!

அனுஷ்டானம், அப்பியாசம், யாகம், பூசை, சடங்கு,
வழிபாடு, ஆராதனை இவை எதுவும் ஆன்மீகமல்ல!

மனித வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு
அர்த்தம், உண்மை, முழுமை ஆகியவற்றை ஆழ்ந்து
உணர்ந்தறிந்து அடைதல்  மட்டுமே உண்மையான
ஆன்மீகம்!

    ><

ஆமாம், குறிக்கோள், இலக்கு, அர்த்தம், உண்மை
எதுவும் தேவைப்படாத வாழ்க்கையும் உள்ளது,
அது எலிகளுக்கும், தவளைகளுக்கும் உரியது!

    ><

போலிச்சீடர்களுக்குக் குருவாக இருப்பவன்
போலிக் குருவாகத்தானே இருக்கமுடியும்!
ஆகவே, குருஸ்தானத்திலிருந்து நான் விலகிக்
கொண்டுவிட்டேன்!

    ><

நான் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்த
ஆன்மீகம் ஒன்று!

அதிலிருந்து அவர்கள் புரிந்து கொண்ட
ஆன்மீகம் வேறொன்று!

அரைகுறையாக, தப்பும் தவறுமாகப் புரிந்து
கொள்ளப்பட்ட ஒன்றிலிருந்து அவர்கள்
பயன்பெறுவதாகக் கருதுகையில்,

முறையாக முழுமையாகப் புரிந்து கொள்ளப்
படும் ஆன்மீகம்  அவர்களுக்கு எவ்வளவு
பயனுள்ளதாக, விடுதலைப்படுத்துவதாக
அமையும்!!

    ><

ஆட்டை அடித்து உண்ணும் சிங்கத்தின்
தோலைப்  போர்த்திக்கொண்ட ஆடு
தன்னை மிடுக்காக உணரலாம்!
மற்ற ஆடுகளும் அதைக்கண்டு மிரண்டு
போகலாம்!
சிங்கத்தின் தோலைப் போர்த்திக்
கொண்டாலும், ஆடு வழக்கம்போல
மேய்வது என்னவோ பசும்புற்களையே!

    ><

வாழ்க்கை என்பது பிரபஞ்சம் தழுவியதோர்
அற்புதப்புதிர்!
அது உள்ளூர் நிகழ்வோ, சொந்த விவகாரமோ
அல்ல!
அது உயிர்-வாழ்தலைச் சுற்றிச்சுழலும் குறுகிய
வட்டமல்ல!
உங்களை நட்சத்திரங்களுடனும், ஒட்டு மொத்த
பிரபஞ்சத்துடனும் தொடர்பு படுத்த
முடியவில்லையெனில்
உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை!
நீங்களும் மனித-ஜீவிகள் இல்லை!

     ><

உன் வீட்டில் தான் எத்தனை அறைகள்!
ஒரு நாளில் நீ எந்தெந்த அறைக்குள்
எத்தனையெத்தனை முறை சென்று புழங்கி
வருகிறாய்  என்பது உனக்குத்தெரியுமா?
படுக்கையறையில் உனது நாள்
தொடங்குகிறது!
குளியலறையில் பல்தேய்த்து உடலைச்
சுத்தம் செய்கிறாய்!
கழிப்பறையில் உனது குடலைக்
காலிசெய்கிறாய்!
சமையல் அறையில் உன் மனைவி
சிற்றுண்டி செய்கிறாள்!
உணவு-அறைக்குச்சென்று சாப்பிடுகிறாய்!
அந்தந்த அறைக்கு உரியதை தவறாமல்
அன்றாடம் செய்கிறாய், அவற்றையே உன்
ஆயுட்காலம் முழுவதும் செய்வாய்!

(இதைத்தானே நீ வாழ்க்கை என்கிறாய்?)

ஒரு நாளுக்கு உரியவற்றையெல்லாம்
செய்து முடித்துவிட்டு மீண்டும் படுக்கை
அறைக்கு  உறங்கச்செல்கிறாய்!

(உண்மையில் நீ ஒரு நாளுக்கு உரிய
எல்லாவற்றையும்- எதுவுமே விடுபடாமல்-
செய்து முடித்துவிட்டதாக நம்புகிறாயா?)

உனது ஒவ்வொரு நாளும் படுக்கை அறையில்
தொடங்கி  படுக்கை அறையில் முடிவடை
கிறதையாவது நீ கவனித்திருக்கிறாயா?

கடைசியில் கதவுகள், சன்னல்கள் இல்லாத
காற்றோட்டமில்லாத அறைக்குள் கொண்டு
வைக்கப்படுகிறாய்!

     ><

நன்றாகக் கூர்ந்து கவனித்துப் பார்!

உனது எண்ணம், மனம், சிந்தனை, அறிவு,
திறமைகள், உழைப்பு, வாழ்க்கை யாவற்றையும்
சுரண்டி ஏய்த்துப் பயன்படுத்திக்கொண்டு

உன்னை மேய்த்து வாழ்வது எது என்று கண்டுபிடி!


     ><

இன்னும் 'அந்தப் பாடல்' என் காதுகளில்
ஒலிக்கிறது!
பேசத்தெரிந்த அக்கிளி நன்றாகப் பாடக்கூடும்
என்று அற்புதமான பாடல்களை அதற்குக்
கற்றுக் கொடுத்தேன்!
"எவ்வளவு முயன்றாலும் தன்னால் சரியாகப்
பாட இயலவில்லை!" என வெவ்வேறு தொனியில்
இந்த ஒரே பாடலையே அக்கிளி ரசித்துப் பாடியது!
பிறகு தான் தெரிந்தது, அது பாடக் கற்றுக்
கொள்ளவில்லை; பாடுவது போல நடிக்கக்
கற்றுக்கொண்டது!
ஆகவே கூண்டைத் திறந்து விட்டுவிட்டு
நான் தப்பி வந்து விட்டேன்!
அதுவும் இந்நேரம் தப்பியிருக்கும்!

   ><

"என்னங்க இது, சிந்திக்க எதற்கு துணிவு
அது, இது, எல்லாம் வேண்டும் என்று சொல்றீங்க?"
என்று கேட்கிறீர்களா?
உண்மையிலேயே நீங்கள் சிந்தித்திருந்தால்
இந்நேரம் நீங்கள் மனிதஜீவிக்குரிய
உயர்- வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்!
வெறும் உயிர்-வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்க மாட்டீர்கள்!
சிந்திக்காத போதுதான் உங்களால் இவ்வாறு
எலிகளைப்போல வாழ்வின் குறிக்கோள்
இலக்கு, அர்த்தம் எதையும் அறியாமல்
வாழ இயலும்!

    ><


நீங்கள் உண்மையில் சிந்திக்கிறீர்கள் என்பதற்கு
அடையாளமாக உங்களுடைய வெளிப்பாட்டை
ஒரு நான்கு வரிகளில் இங்கே எழுதி வையுங்கள்,
தவறில்லை!

*
*
*
*

    ><

மா.கணேசன்/ 17.06.2016









Thursday, 16 June 2016

மனித ஜீவிகளுக்கு மட்டும்!




                              'உங்கள் வாழ்க்கையை'
அப்படியே ஒரு ஓரமாக
ஒதுக்கி வைத்துவிட்டு
வாழ்க்கையைப் பாருங்கள்!

    <>

(படிக்கட்டைப் பயன் படுத்துங்கள்!)


                                                                       தற்கொலையே!
                                                              இலக்கைத்தவறவிடுவது
                                                        வழியைப்ப்பற்றிக்கொண்டு
                                                 அவை "வாழ்க்கை"யல்ல!
                                           ஏற்பாடுகளே, படிக்கட்டுகளே தவிர
                                  "வாழ்க்கை"யை எட்டுவதற்கான
                            உள்ளவையனைத்தும்
                    தனியம்சம் உள்ளது!
           "வாழ்க்கை" என்றொரு
  உண்மையில்

    <>

உண்மையில் நீங்கள் சிந்திப்பீரெனில்
வாழ்க்கை பற்றிய உங்கள் சிந்தனையைக்
கட்டமைக்க, கட்டுப்படுத்த, தீர்மானிக்க
எதற்கும், எவருக்கும், ஏன், உங்களுக்குமே
அதிகாரமில்லை!
எந்த அடைப்புக்குறிகளுக்குள்ளும் அடங்காது
வாழ்க்கை!

     <>


வாழ்-காலம் வாழ்க்கையல்ல!
வாழ்க்கையில் தேவைகள் உள்ளன
ஆனால், தேவைகளே வாழ்க்கையல்ல!
வாழ்க்கையில்  நிலைமைகள், சந்தர்ப்ப
சூழ் நிலைகள், நிகழ்வுகள், சம்பவங்கள்
விபத்துகள் பேரிடர்கள் இடம்பெறத்தான்
செய்கின்றன!
அவை வாழ்வின் உட்-கூறுகளை இடம்
மாற்றியும் புரட்டியும் போடுகின்றன!
உள்ளவற்றில் நம்மையும் ஒரு உருப்படியாகக்
காணும்வரை நாமும் பாதிக்கப்படுவோம்!
ஆனால், அவை வாழ்க்கையைத் தொடுவதில்லை!
ஏனெனில் வாழ்வின் உட்-கூறுகள் வாழ்க்கையல்ல!
வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டும் உள்ளன!
ஆனால், அவையும் வாழ்க்கையல்ல!
இவையே வாழ்க்கையென வாழ்ந்திடும் வரை
உண்மையில் நாம் வாழ்வதில்லை!

ஏனெனில், எதையும் சார்ந்திருப்பதில்லை
வாழ்க்கை!

     <>

வாழ்க்கை : தொடர்ந்து தன்னைத்தானே
கடந்து செல்லும் பேரியக்கம்!

    <>

"வாழ்க்கைப் பிரச்சினைகள்" என்பது
முரண்பாடான சொற்களின்
சேர்க்கையாகும்!
வாழ்க்கையும் பிரச்சினைகளும்
சேர்ந்து செல்லாது!
வாழ்க்கையைத் தரிசிக்கத்
தவறியவர்கள் பிரச்சினைகளை
வாழ்ந்து கொண்டுள்ளனர்!

    <><>

(துன்பம், துயரம், மற்றும் மரணத்தின்)
கலப்படமேயில்லாத தூய வாழ்க்கை
ஒன்றுள்ளது என நான் சொன்னால்
அது வெறும் கற்பனை என்கிறீர்கள்!
அதைக் கண்டுபிடிக்காதவரை நீங்கள்
சொல்வது உண்மையே! ஆனால்,
அவ்வாழ்க்கை குறித்த கற்பனைகூட
இல்லாத உங்கள் வாழ்க்கை எவ்வளவு
பொய்யானது!

    <>

சமூகம் : பிழைப்புக்கான பயன்களைத்தேடி
பிறவிப்பயனைத் தொலைத்திட்ட
பெருங்கூட்டம்!

    <>

வாழ்க்கையை ஒரு புதிராகக் கண்டு
நீங்கள் அதிசயிக்கவில்லையெனில்
அதை வெறும் நடைமுறை விவகாரமாகச்
சுருக்கிவிடுவீர்கள் தற்போது நீங்கள்
வாழ்ந்து செல்வது போல!

வாழ்க்கையை,  வரப்புச்சண்டையாக
எல்லைப்பிரச்சினையாக, சாதிச்சண்டையாக
சோற்றுப்பிரச்சினையாக, வர்க்கப்போராட்டமாக
எலிப்பந்தயமாக, சாக்கடை அரசியலாக
மாற்றியது  வாழ்க்கையல்ல!

    <>

உண்மையில் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
என்பதைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின்
குறிக்கோள் ஆகும்!

    <>

வாழ்க்கை என்பது
விடுவிக்கப்படவேண்டிய
அற்புதப்புதிர்!
அது வாழ்ந்து தீர்க்கப்படவேண்டிய
பிரச்சினைகளின் தொகுப்பு அல்ல!

    <>

உணவு, உடை, உறையுள், உறவுகள்
இவைகளச் சுற்றி வாழ்பவன்
விலங்குமனிதன்!

உலகம், உணர்வு, கடவுள், உண்மை
இவைகளைச்சுற்றி வாழ்பவன்
அசல் மனிதன்!

    <>

இன்னும் எத்தனைகாலம் நீ
கட்டடத்தின் அடித்தளத்தை
அமைத்துக் கொண்டிருப்பாய்?
எப்போது அதன்மீது பக்கச்சுவர்களை
எழுப்பப்போகிறாய்?
எப்போது அதன்மீது மேற்கூரையை
அமைக்கப்போகிறாய்?
பிறகு எப்போது நீ அதனுள் பிரவேசித்து
வாழப்போகிறாய்?

    <>

இன்னும் எத்தனை காலம் நீ
உன் வீட்டின் கீழ்த்தளத்திலேயே
வசித்துக்கொண்டிருப்பாய்?
உன் வீட்டிற்கு ஒரு மேற்தளம்
உள்ளதை நீ அறியாயோ?
உடனே மேலேறிச்சென்று பார்!
அங்கிருந்து நீ அதிகமான
காட்சிகளையும்
புதிய காட்சிகளையும்
விஷயங்களையும் காணலாம்!
உனது புரிதல் விரிவடையும்!
நீ உயர் வாழ்க்கையை வாழ்வாய்!
ஒரு முறை நீ மேற்தளத்திற்குச்
சென்று பார்த்தால், அதன் பிறகு
நீ கீழ்த்தளத்து வாழ்க்கைக்குத்
திரும்பி வர விரும்ப மாட்டாய்!

உண்மையில் நீ மேற்தளத்திற்குச்
சொந்தமானவன்!

    <>

எந்த பரிணாம வழிமுறையானது இப்போதிருக்கும்
இந்த இடத்தில் மனிதனைச்  சேர்த்ததோ அதுவே
அவனை முன்னேற்றி இன்னும் உயரிய இடத்தில்
கொண்டு சேர்க்கும் என்றால் அது மிகவும்
விரும்பத்தக்க நல்ல விஷயம்தான்!

ஆனால், அவ்வாறு நிகழ வாய்ப்பேயில்லை!
ஏனெனில், மனிதனைக் கொண்டுவரும் வரை
செயல்பட்ட நெடிய பரிணாம வழிமுறை முற்றிலும்
உணர்வற்றது!
உணர்வுபெறுவதற்கான அடிப்படையைக்கொண்ட
மனிதனின் வரவுடன் அவ்வழிமுறை முடிவிற்கு
வந்துவிட்டது!
இனி மனிதனின் உணர்வார்ந்த ஒத்துழைப்பின்றி
பரிணாமம் ஓரடிகூட முன்னோக்கி நகரமுடியாது!
உணர்வின் உதயமாக மனிதனை உதிக்கச்
செய்ததுடன் இயற்கையின் பரிணாமக்கடமை
முடிந்துவிட்டது!
இனி பரிணாமம் என்பது இயற்கையினுடையதோ
அல்லது பிரபஞ்சத்தினுடையதோ அல்ல!
மாறாக, ஒவ்வொரு தனிமனிதனுடைய தனிப்பட்ட
சவாலாகும்!
ஏனெனில், பிரபஞ்சமானது பரிணாம மாற்றத்தின்
மூலமாக தனிமனிதனாக அவதாரமெடுத்துள்ளது!
இனி ஒவ்வொரு தனிமனிதனும் உணர்வில் வளர்ந்து
உணர்வின் உச்சத்தை அடைவதன் வழியாக
பிரபஞ்சமளாவியவனாக ஆகிடுவது மட்டுமே
எஞ்சியுள்ளது!

அந்த உச்சத்தில் மனிதனுடன் பிரபஞ்சமும் முழுமை
பெறுகின்றது!

     <>

உங்களில் சிலரைப்  'பாவிகள்' என்று கூட
குறிப்பிட முடியாது!
ஏனெனில், 'பாவிகள்' என்போர் மனந்திருந்த
வாய்ப்புள்ளது!

ஆனால், நீங்களோ உயிர் இருந்தும்
செத்தவர்களாயுள்ளீர்!
உங்களை உணர்வுக்குக் கொண்டுவருவது
சற்றும் சாத்தியமற்றது!

நீங்கள் "பூர்ஷுவா-மனப்பான்மை" மற்றும்
அன்றாடத்தனத்தினால் மரத்துப்
போயுள்ளீர்!

உயர்பேரறிவின் உன்னதங்களை உங்களிடம்
எடுத்துசொன்னால் அவற்றுக்கு என்ன
உத்தரவாதம் என்கிறீர்!

உங்களுடைய ஆன்மாவை முயன்றடைவதன்
அவசியத்தை உங்களுக்குச் சொன்னால்
உமது அகந்தையின் இயலாமையையும்
கீழியல்புகளின் மேலாண்மையையும் வியந்து
போற்றி பாடிக்கொண்டிருக்கிறீர்!

     <>

நான் வியக்கிறேன்!
உங்களில் எவரிடமாவது
அசலான ஒரு எண்ணமாவது
ஒரு கருத்தாவது, ஒரு புரிதலாவது
ஒரே ஒரு  உட்-பார்வையாவது
உள்ளதா?

உங்களுக்கு உங்களுடைய
உயர்-சுயம் பற்றி யாதொரு சிறு
நேரடிப்புரிதலும் இல்லை!
உமது தாழ்வு-மனப்பான்மையின்
எதிர்-வினை வெளிப்பாடான போலி
'உயர்வு-மனப்பானமை'யைத்தவிர!

ஆகவே முயன்றடைய  யாதொரு
இலக்கும் உம்மிடம் இல்லை!

தயவுசெய்து  'மனிதன்' எனும்
பட்டத்தை இயற்கையிடமே
திரும்ப ஒப்படைத்து விடுங்கள்!
குறைந்தபட்சம் அது உங்கள்
'நேர்மை'யின் அடையாளமாக
இருக்குமல்லவா?!

     <>

நான் உங்களை அளவுக்கதிகமாய்
குறைத்து மதிப்பிடுவதாக
உங்களுக்குத் தோன்றினால் அது
உங்களை நீங்கள் அளவுக்கதிகமாய்
உயர்த்தி மதிப்பிட்டுள்ளதன்
பிழையால்  இருக்கலாம்!
பிரச்சினை என்னவென்றால்
இதற்கு மேல் உங்களைக் குறைத்து
மதிப்பிட உங்களிடம் என்ன
இருக்கிறது?

     <>

சிலர் அமைப்பை மாற்றுவதன் மூலம்
மட்டுமே மனிதர்களை மாற்றமுடியும்
என்கிறார்கள்!

சிலர் மனிதர்களை மாற்றுவதன் மூலம்
மட்டுமே அமைப்பை மாற்றமுடியும்
என்கிறார்கள்!

ஆனால், எந்த அமைப்பையும் மாற்ற
முடியாது, ஏனெனில் மனிதர்கள்
மாற மாட்டார்கள்!

ஆகவே, எந்த அமைப்பினாலும் சக்தி
யினாலும் மனிதர்களை மாற்றவும்
முடியாது!

     <>

தங்களது அன்றாட வாழ்க்கைச் சுற்றைத்
தாண்டி எவ்வொரு உயரிய குறிக்கோள்
அர்த்தம், செயல்பாடு குறித்தும் சிறிதும்
ஆர்வமில்லாதவர்கள் ஆன்மீகம் கோரும்
உயர்  உணர்வு  அற்றவர்கள்; அவர்களை
நிந்திப்பது தேவையற்றது!
ஏனெனில், எலிகளையும், தவளைகளையும்
நெறிப்படுத்த முயற்சிப்பது முற்றிலும்
பயனற்றது!

    <>

சில ஆன்மீகச் சிந்தனையாளர்கள்
ஆன்மீகத்தையும் லௌகீகத்தையும்
சம நிலையில் பராமரிப்பது பற்றி
கரிசனத்துடன் பேசுகிறார்கள்!
ஆன்மீகம் சிறிதும் துளிர்க்காது
மனித மனங்கள் தரிசாகக் கிடக்கையில்
லௌகீகம் அழிந்து விடுமோ என்கிற
அவர்களது அச்சம் அடிப்படையற்றது!
லௌகீகம் என்பதென்ன?
உலகியல் பொருட்கள் மீதான பற்று,
சௌகரிய சம்பத்துக்கள், சொத்து,
சுகம், செல்வம், பகட்டு, ஆடம்பரம்,
துய்ப்பு, நுகர்வு, இச்சை நிறைவேற்றம்
இவைதானே! சுருங்கச்சொன்னால்
உயிர்-வாழ்தலின் உண்மையான அர்த்தம்,
குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை அறிந்து
அதற்கேற்ப வாழ்வதைத் தவிர்த்துவிட்டு
வெறுமனே (விலங்குகளைப்போல)
உயிர்-வாழ்வதை நியாயப்படுத்தும்
ஒரு கேடயச்சொல் தானே 'லௌகீகம்'?
அருமை லௌகீகிகளே! அஞ்சாதீர்!
கூண்டோடு மனித இனத்தை
அழிக்கும்வரை லௌகீகம்
அழிந்துவிடாது!

குறிப்பு :
பூமியின் மீது தொடர்ந்து உயிர்வாழும்
ஆசை இருந்தால், 'சீதோஷ்ண நிலை மாற்றம்'
மற்றும் 'புவிக்கோளம் சூடேறுதல்'
என்றால் என்ன என்று இணையம் வழியே
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் முதலில்!

     <>

வாழ்க்கையின் அர்த்தம் குறித்த பிரத்யேக
தேடல் இல்லாதவனின் வாழ்க்கை
அர்த்தமற்றது!

     <>

அகந்தையின் அனைத்து இடறுகுழிகளின்
அபாயங்களும் எடுத்துச் சொல்லியாயிற்று!

உயர்-சிந்தனையற்ற மேலோட்டமான அன்றாட
உயிர்வாழ்தலின் அர்த்தமற்ற தன்மைகளும்
சொல்லப்பட்டாயிற்று!
   
பிரபஞ்ச ரகசியங்கள், உயர்- உண்மைகளின்
உன்னதங்களும் வெளிப்படுத்தியாயிற்று!

வாழ்வின் இனிமைகளைச் சொல்லி
உற்சாகமூட்டியும்
மரணத்தின் உணர்த்துதல்களைச் சொல்லி
உலுக்கியும்  பார்த்தாயிற்று!

திட்டியும் அதட்டியும் அதிர்ச்சியூட்டியும்
அச்சமூட்டியும்  எச்சரிக்கைகள் விடுத்தும்
பார்த்தாயிற்று!

ஐந்து, பத்து, இருபது, முப்பது ஆண்டுகளாக
ஆர்வமுட்டும், ஊக்கப்படுத்தும் அனைத்து வித
முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாயிற்று!

எதுவும் உங்களை அசைக்கவில்லை, சிந்திக்கச்
செய்யவில்லை, உணர்வுக்குக் கொண்டு
வரவில்லை, விழிக்கச் செய்யவில்லை!

ஆகவே, இனியும்  நாம் சேர்ந்து பயணிப்பதில்
அர்த்தமில்லை!

    <>

மா.கணேசன்/06.06.2016









Sunday, 12 June 2016

அகந்தையின் இடறுகுழிகள்





எதுவொன்றையும் சிறிய விஷயம் தானே
என்று அனுமதித்துவிடாதே!
அது உனது ஆன்மீக வளர்ச்சியில்
பெருந்தடையாக நிற்கக்கூடும்!

எதுவொன்றையும் சிறிய விஷயம் தானே
என்று புறக்கணித்துவிடாதே!
அது உனது ஆன்மீக வளர்ச்சியில்
பெருங்குறையாகிவிடக்கூடும்!

    ^^^
    *|*
     _

எவ்வொரு கூற்றும் ஒரு முடிவை
   முன்மொழிகிறது, அல்லது தன்னுள்
   மறைத்து வைத்துள்ளது, அல்லது
   அதுவே ஒரு முடிவாக உள்ளது!
முன்முடிவுகளுடன் செய்யப்படும்
   சிந்தனை, ஆராய்ச்சி உண்மையான
   (ஆன்மீக) விசாரமல்ல!
முடிவான உண்மைகள் புரிந்துகொள்ளப்
   படவேண்டியவை; அவற்றுடன் சர்ச்சை
   செய்துக்கொண்டிருப்பவன்  மூடன்,
   அப்படியே ஏற்றுக்கொள்பவனும் மூடன்!
உண்மைகளை ஆராயாமல் சந்தேகிப்
   பவன் (சிந்தனைச்)சோம்பேறி, தனது
   சந்தேகங்களை உண்மைகளாகப்
   பாவிப்பவன் புரட்டன்,
   இருவரும் நல்முடிவு சேருவதில்லை!

     *

நீ சரியான வழியில்தான் செல்கிறாயா
இல்லையா என்பதை
நீ பிரபஞ்ச-மனதின் விருப்பத்தை நிறைவேற்ற
முயல்கிறாயா அல்லது
உனது சொந்த-மனதின் விருப்பங்களைப் பூர்த்தி
செய்யமுனைகிறாயா என்பதிலிருந்து
அறிந்து கொள்வாயாக!

     *
உயரிய ஆன்மீக இலக்கு என்பது
எதையோ பயிற்சி செய்தோ, அல்லது
எவ்வாறோ எட்டிப்பறித்திடக்கூடியதோ அல்ல!
அல்லது ஒரு குருவின் கருணைப் பரிசாகப்
பெற்றிடக்கூடியதோ அல்ல!
ஒவ்வொரு மனிதனும் தன்னில், தனது
உணர்வில் வளர்ந்து அடையப்படவேண்டிய
உச்சமாகும்!
ஒவ்வொருவரின் ஆர்வம், உத்வேகம்,விவேகம்
வேகம், வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து
இலக்கை அடையும் காலம்
தீர்மானிக்கப்படுகிறது!

     *

'உணர்வின்மை' என்பது தான் உனது நோய்!
அதற்கு எங்கேயும், எந்த குருவிடமும்,
யாதொரு மருந்தும் இல்லை!
மருந்து உன்னிடமே உள்ளது!
உணர்வுக்கு வருவது, விழித்துக்கொள்வது
தான் அதற்கு மருந்து!

     *

தன்னைவிஞ்சிய தன்னைவிட பன்மடங்கு
பெரிதாக வளர்ந்து அடையவேண்டிய
உயர் நிலையை அடையாமலேயே
அதை அடைந்துவிட்டதான பிரமையில்
ஆழ்ந்திருப்பதுதான் அகந்தை!

     *
ஆன்மாவாய் மலர வேண்டியதும்
அகந்தைதான்!
ஆன்மதரிசனம் கிட்டவில்லை
என அங்கலாய்ப்பதும்
அதே அகந்தைதான்!

    *

"தாம் இருக்கிறோம்!" என்பதை அறியாத
தவளைக்கு இரை, இணை, இனப்பெருக்கம்
இம்மூன்றும் தான் பிரதானம்!

"தாம் இருக்கிறோம்!" என்பதை அறிந்தும்
"தாம் ஏன், எதற்காக  இருக்கிறோம்?"
என்பதை அறியாத

மனிதனுக்கும்
இரை, இணை, இனப்பெருக்கம்
இம்மூன்றும் தான் பிரதானம்!

    *
அஞ்ஞானி, ஞானி இருவரும்
சுயத்தின் முக்கியத்துவத்தைத்தான்
கொண்டாடுகிறார்கள்!

ஆனால்,
அஞ்ஞானியின் சுயம், ஞானியின் சுயம்
இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம்
உள்ளது!

அஞ்ஞானி தனது சொந்த சுயத்தைப்
போற்றுகிறான்!
ஞானி தனது சொந்த சுயத்தைக்கடந்து
அனைவருக்கும் சொந்தமான,
அனைத்திற்கும்
மூலமும் முடிவுமான ஆன்மாவைப்
போற்றுகிறான்!

     *

பிறவனைத்து இடறுகுழிகளையும் விட
அதிக ஆபத்தானது, மீண்டுவர முடியாதது
அகந்தையின் 'சுய-முக்கியத்துவம்' எனும்
அதலபாதாளம் தான்!

அதில் வீழ்ந்தவனை எவரும், கடவுளும்கூட
மீட்கவியலாது!
ஏனெனில், அது ஒன்றுமில்லாத, உள்ளீடு
ஏதுமற்ற மாபெரும் பிரமையாகும்!

அகந்தை தன்னைக்குறித்துப் பெருமிதம்
கொள்வதற்கு அது எதுவாகவும் இல்லை,
பிரமைகளுக்கு ஆட்படும் ஒரு உணர்வு
என்பதைத்தவிர!

அகந்தையின் பெருந்தவறு அது
தன்னைப்பற்றிய உணர்வுக்கு வராததும்,
தனது அசலான முக்கியத்துவத்தை
அறிந்து அதை முன் நிறுத்தாததும்,
தானல்லாத உடலை முன் நிறுத்துவதும்,
உடலின் தேவைகளை பிரதி நிதித்துவம்
செய்வதும் தனது உடமைகளாகச் சேர்த்துக்
கொண்ட பொருட்களையும் விஷயங்களையும்
கொண்டு தனது முக்கியத்துவத்தைக்
கட்டியெழுப்புவதும், அவை குறித்துப்
பெருமிதம் கொள்வதும் தான்!

     *

மையம் தொலைந்ததால் எழுந்த
பிரபஞ்சத்தின் மையம் மனிதன்!
தனது மையத்தில் தான் எத்தகைய
மெய்ம்மை என்பதை அவன்
உணர்ந்தறியுங்கால்!

பிரபஞ்சத்திலுள்ள யாவற்றிலும்
அதிமுக்கியமானவன் மனிதன்!
உள்ளவற்றில் அவனும் ஓர் உருப்படி
அல்ல!

ஆனால், மனிதனின் முக்கியத்துவம்
கொடுக்கப்பட்ட ஒன்றல்ல!
அவனது ஆன்மீக இலக்கை அடைவதன்
மூலம் ஈட்டப்படவேண்டிய ஒன்று!

     *

மனிதா! உண்மையான ஆன்மீகம் என்பது
உன்னை நீ எவ்வாறு அணுகுகிறாய்,அறிகிறாய்
ஆராய்கிறாய்,என்பதிலிருந்து தொடங்குகிறது!

உன்னை அறியும் வழியில் நீ ஒரு தத்துவவாதி
யாவது தவிர்க்கவியலாது நிகழலாம்!
ஆனால், எத்தனை தத்துவப்பிரச்சினைகளை
கோட்பாடுகளை அறிந்துவைத்திருக்கிறாய்,
அவற்றை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறாய்
உனக்கு ஏற்றாற்போல் வளைக்கிறாய்
என்பதெதுவும் முக்கியமல்ல!

மாறாக, உன்னை எவ்வாறு புரட்டிப்போடுகிறாய்
உன்னை நீயே எவ்வாறு பிரித்து அடுக்கி
புத்துருவாக்கம் செய்கிறாய் என்பதே முக்கியம்!

     *

அளவுக்கதிகமாய் சுய-பச்சாதாபம், சுய-பரிவு
சுய-காதல் கொள்வதன் வழியே தன்னைப்
பாதுகாத்துக்கொள்ளவிழைபவன் ஏற்கனவே
தன்னால் கைவிடப்பட்டவனாயுள்ளான்!
அவனை வேறு எவரும் காப்பாற்ற இயலாது!

அளவுக்கதிகமாய் சுய-வெறுப்பு, சுய-கசப்பு
சுய-அதிருப்தி கொண்டு குமைபவன் புதியதொரு
பிறப்பெடுத்து புதிதாய்த் தொடங்குவதொன்றே
கரையேற வழி - உடனடியாகவோ, அல்லது
இன்னொரு  பிறவியிலோ!

     *

ஆன்மீகத்திற்கு -
இன்றைவிட நாளை அதிகம் சாதகமாய்
இருக்கப்போவதில்லை!
இப்பிறவியைவிட அடுத்த பிறவி அதிகம்
சுலபமாய் இருக்கப்போவதில்லை!
நேற்று தள்ளி, இன்று வந்தது, இன்று தள்ளி
நாளை வரும், . . . .இப்படி தள்ளிப்போடப்பட்ட
பிறவிகள் எத்தனையோ?
இன்று எட்டாதது நாளையும் எட்டாது!
இன்று இயலாதது நாளையும் இயலாது!
காலம் ஒரு செக்குமாடு அதன் மீதேறி
காலாதீதம் சேர முடியாது!
மறுபிறப்பு மீது நம்பிக்கை கொள்வது
தப்பித்தல்வாதம்!

     *

அகந்தை மிக எளிதாக விழக்கூடியதொரு
இடறுகுழி :  'பொறாமை'!

உம்மிடம் பொறாமையுணர்வு எவ்வாறு
தோன்றுகிறது?
பிறருடன் ஒப்பிடும் போதுதான் பொறாமை
தோன்றுகிறது!
உம்மிடம் அதிகம் பணம், அல்லது பொருள்
இல்லாததினால் நீ பாதிக்கப்படுவதில்லை
வருந்துவதில்லை!
மாறாக, பிறரிடம் அவை அதிகமாய்
இருக்கிறது என்பதே உனை உறுத்துகிறது
வருத்துகிறது!
பொறாமை கொண்ட சுயம் போலிச்சுயம்!

அகந்தை மிக எளிதாக விழக்கூடிய
இன்னொரு இடறுகுழி :  'பேராசை'!

பேராசை என்பது பெரிய ஆசை அல்ல!
மாறாக அது தவறானதும் தகுதியற்றதுமான
ஆசை; உனது நிறைவான நல்வாழ்வு எதைச்
சார்ந்துள்ளது என்பது தெரியாமல் புறத்தே
பலவிதமான பொருட்களில் அடங்கியிருப்பதாகக்
காணும் தலை-கீழ்ப்பார்வையே பேராசை!
பேராசை பிடித்த சுயம் மேலோட்டமான சுயம்!

அடுத்து, இந்த இடறுகுழியில் அகந்தையானது
பிரத்யேகமாய் விழவேண்டியதில்லை, ஏனெனில்
அகந்தை பிறந்ததே இந்த இடறுகுழியில்தான்!
'சுய-நலம்' என்பது அதன் பெயர்!

ஆம், எவரும் தமக்குத்தெரிந்தே சுய நலமாய்
இருப்பதில்லை!
தன்னை அறியாத அகந்தையின் ஒரே நலம்
சுய நலம்!
சுய நலம் மனிதனை தன்னறிவற்ற விலங்காக
நீடிக்கச்செய்கிறது!

     *

எவனொருவன் தனது வழியில் உள்ள
தடைகளைப்பற்றியே எண்ணிக்
கொண்டிருக்கிறானோ
அவன் ஒருபோதும் தனது  இலக்கைச்
சென்றடைவதில்லை!

எவனொருவன் தனது ஆன்மீக
வளர்ச்சியை அளந்து பார்த்துக்கொண்டும்
தனது ஒவ்வொரு அடியையும் கணக்கிட்டுக்
கொண்டும், தன்னைத்தானே வியந்து
பாராட்டிக்கொண்டும் இருக்கிறானோ
அவன் அபாயகரமான வகையில்
அகந்தையின் மீது
காதல்வயப்பட்டவனாவான்!

'ஆன்மீகம்' எனும் பெயரில் அவன்
மூழ்கியிருப்பது அகந்தையின் 'தன்மீகம்'!

      *

ஆன்மீகம் என்பது
ஆன்மாவைச் சார்ந்திருப்பது,
ஆன்மாவைச் சேருவது
ஆன்மாவாய் மலர்வது
என்பதைத் தவிர வேறெதுவுமல்ல!

'தன்மீகம்' என்பது
அகந்தையைச் சார்ந்திருப்பது,
அகந்தையில் மூழ்கியிருப்பது,
அகந்தை ஊதிப் பெருப்பது
என்பதல்லாமல் வேறென்ன?

    *

நீ மிகவும் சிரமப்பட்டு
தொடர்ந்து எதிர்வாதங்களை
முன் வைத்து உனது நிலைப்பாட்டை
நிறுவ முயல்வதன் நோக்கம் என்ன?

நீ  பிரமைகளின்றி முறையாக
ஆன்மீக வழியில் செல்கிறாயெனில்
எவரது பாராட்டும்  அங்கீகாரமும்
ஊக்குவிப்பும் உனக்கு அதிகப்படியாக
உதவப்போவதில்லை!

உனக்கு நீயே உதவிக்கொண்டு
உனது தவறுகளை நீயே திருத்திக்கொண்டு
பின்னிட்டுப்பார்க்காமல் முன்னோக்கிச்
செல்வாயெனில் எவரது விமர்சனமும்
ஊக்கங்கெடுப்பும் உனை ஒன்றும்
செய்யவியலாது!

உனது ஆன்மீக வெற்றியின்
உண்மையான அடையாளம் நிரூபணம்
இறுதியான அங்கீகாரம் பாராட்டு யாவும்
உனக்கும் உனது ஆன்மாவுக்கும் இடைவெளி
இல்லாமல் போவதில் மட்டுமே
அடங்கியுள்ளது!

நீ இன்னும் அகந்தையாய் நீடிக்கிறாயா
அல்லது  ஆன்மாவாய் மலர்ந்து விட்டாயா
என்பதைக்கண்டறிந்து சலுகை காட்டாமல்
விலக்கு அளிக்காமல் உனது தீர்ப்பை எழுத
வேண்டியவன் நீயே!

      *

மா.கணேசன்/ 08.06.2016







Monday, 6 June 2016

பாதையற்ற பயணம்

                                                                                                                                                     

                                                                           

                                       
ஞானமடைவதற்காக யாதொரு
நெடுஞ்சாலையும்
தயார்-நிலையிலமைந்த பாதையும்
கிடையாது!
எல்லோருக்கும் பொதுவான பாதை
என்று எதுவும் இல்லை!
மேலும், ஒவ்வொருவருக்குமான பாதை
எனவும் எதுவும் இல்லை!
ஒவ்வொருவரும் பாதையைப்
பயணிப்பதன்,அதாவது வாழ்க்கையைப்                                                                                                                  
புரிந்து வாழ்வதன் மூலம் கண்டு
கொண்டேசென்றிடவேண்டும்!
எது முக்கியமானது என்றால்
பாதையல்ல, பயணத்தைத்                                                                                                        
தொடங்கிவிடுவது தான்!                                                                                                                                                  

                       
      *

உண்மையிலேயே ஆன்மீகத்திற்குத்
தயாராகாத அகந்தையின் தெரிவுதான்
நெடும்பாதை!

      *

தனது ஆன்மீகக் கடமைகளையும்
பொறுப்புகளையும் ஏற்க விரும்பாதவனின்
சாக்குப்போக்குத் தான் நெடும்பாதை!

      *

நெடும்பாதை எத்தனை பிறவிகளுக்கு
நீளும் என்பதை எவராலும் சொல்ல
இயலாது!

      *

நீங்கள் உமது பயணத்தை நிறுத்திவிடும்
இடத்தில் உங்களது பாதையும் நின்று விடுகிறது!
அப்போது நீங்கள் தேக்கமடையத்தொடங்கி
விடுகிறீர்!
பிறகு மீண்டும் பயணத்தைத்தொடர்வது என்பது
கடினமாகி விடுகிறது!

ஆகவேதான் நீங்கள் சுலபமான சிரமமில்லாத
நிச்சயம்வாய்ந்த பாதையைத் தெரிவுசெய்திட
அதிக ஆர்வம் காட்டுகிறீர்!
இவ்வாறு பாதையைத் தேடிக்கொண்டே
யிருப்பதால் நீங்கள் உமது பயணத்தை ஒருபோதும்
தொடங்குவதேயில்லை!

ஆனால்,  நீங்கள் ஒரு முடிவோடு தீர்மானகரமாய்
பயணத்தைத்தொடங்கிடும்போது பாதை
புலப்படத் தொடங்கிவிடுகிறது!
அதுவரையிலும் பாதை அங்கிருப்பதில்லை!
உமது பயணத்தைத்தொடங்கியவுடன்
உமது ஒவ்வொரு அடியும் பாதையைத் தோன்றச்
செய்திடுகிறது!

ஆனால், நீங்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும்
பாதுகாப்பாகவும் பயணிக்க விரும்பும்வரையில்
உமது பயணம் உண்மையில்
தொடங்குவதேயில்லை!

எல்லா (சாகசப்) பயணங்களைப்போலவே
ஆன்மீகப்பயணமும் அதற்கேயுரிய
அபாயங்களைக் கொண்டிருக்கிறது!

சில வேளைகளில், உமது பயணம் பரவசமூட்டும்
உற்சாகத்தின் உச்சத்தைத் தரும்!
சில வேளைகளில், திகிலூட்டித் திடுக்கிடச்
செய்யும்!

எல்லாவேளைகளிலும், நிலைமைகளிலும்
உமது ஆன்மீகப்பாடங்களை நீங்கள் கற்றுத்தான்
ஆகவேண்டும்!

உண்மையில் உமது பயணத்தின் தன்மைக்
கேற்பவே பாதையும் அமைகிறது!

உமது அன்றாட வாழ்க்கையில் தேவை
என்று நீங்கள் உணரும் இலக்குகளுக்கேற்பவே
உமது பாதைகளை அமைத்துக்கொள்கிறீர்
ஒற்றையடிப்பாதையாகவோ, அல்லது அகல
நெடுஞ்சாலையாகவோ!

முழுமையாதலின் தேவையை நீங்கள்
உணர்ந்து அதையே இலக்காகக் கொள்ளும்வரை
உமது ஆன்மீகப்பயணம் தொடங்குவதில்லை!

அவசியம் மேற்கொள்ளவேண்டிய பயணத்தைத்
தவிர்த்துவிட்டு, கோயில்கள் புண்ணியத்தலங்கள்
புனித யாத்திரை என்று எங்கெங்கெல்லாமோ
பிரயாணம் செய்கிறீர்!

சாகசம் அல்லது ஆராய்ச்சி என்கிற பெயரில்
சமுத்திரங்களின் எட்டாத ஆழங்களுக்கும்
துருவப்பிரதேசங்களுக்கும் செல்கிறீர்!
சந்திரமண்டலத்துக்கும் சென்று வருகிறீர்!

ஆனால்,  நீங்கள் பயணிக்கவேண்டிய பிரதேசம்
உங்களுக்குப் புறத்தே வெளியே எங்கும் இல்லை!
நீங்கள் சென்று சேர்ந்திடவேண்டிய இறுதிப்
புகலிடமும் உங்களுக்கு  வெளியே இல்லை!

அதேவேளையில், உங்களுக்கும், உண்மையான
உங்களுக்கும் இடையே கடக்க முடியாத
அளவிற்கான பெருந்தூரம் உள்ளது!

பாதையின் தன்மை பயணத்தின் தன்மையைப்
பொறுத்தது!
பயணத்தின் தன்மை பயணிப்பவனின்
தன்மையைப்  பொறுத்தது!
இறுதியில், பயணி, பயணம், பாதை, போய்ச்
சேருமிடம் யாவும்
ஒன்றாகி விடுகின்றன!

      *

உன்னுடைய  ஆன்மீக முழுமையை அடைவதற்கு
நெடும்பாதை எனவும், குறும்பாதை எனவும்
எதுவும் இல்லை!
உனது மந்தபுத்தியும், ஆர்வக்குறைவும் உன்னை
நெடும்பாதையில் செலுத்துகிறது!
உனது ஆயத்த நிலையும் ஆர்வமிகுதியும் உன்னை
குறும் பாதையில்  சேர்க்கிறது!
உன்னிடம் தீவிரமும் பேரார்வமும் இருப்பின்
உடனடியாக நீ இலக்கை அடைந்து விடுவாய்!

      *

நெடும்பாதை என்பது ஒரு பாதையே அல்ல!
அது நோக்கமிழந்தவர்களின் ஒரு மாபெரும்
அகதிகள் முகாம்!
ஒட்டு மொத்த மனிதகுலமும் நெடும்பாதையில்
தான் பயணிக்கிறது!
மனிதகுலம் என்பது ஒரு ஆன்மீக சேமப்படை!
ஆனால், அதற்கு யாதொரு ஆன்மீகத்தாகமும்
தேடலும் ஏற்படுவதில்லை!
பலர் உலகியல் நெருக்கடிகளால் துரத்தப்பட்டு
நெடும்பாதையில் தஞ்சம்புகுகின்றனர்!
முதல் முயற்சியாக ஆன்மீக வளர்ச்சிக்குத்
தடைகளாக விளங்கும் விஷயங்களை
இனம்காண்பதும், இரண்டாவதாக
அத்தடைகளைக் களைவதும் தான்
நெடும்பாதையின் பிரதான கடமைகள்!
ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கு
காலவரம்பு ஏதுமில்லை என்பதுதான்
நெடும்பாதையின் கவர்ச்சியும், சலுகையும்!

      *

உண்மையை அறிய விடாமல் மனதைத்
தடுப்பது மனதின் குற்றங்களும்,
குறைபாடுகளும், மட்டுப்பாடுகளும்;
மற்றும் மனம் வரித்துக்கொண்ட
இச்சைகளும், தன்-மையப்பாங்கும்,
உடமை- சுபாவமும் தான்!

ஆகவே,ஒருவன் தன் கீழியல்புகளிடமிருந்து
விலகி நிற்கவும், தன்பெரும்பகுதி
குற்றங்குறைகளைக் கழுவிக்களையவும்
நெடிய வழிமுறையினூடாகச் சென்றாக
வேண்டும்!

ஒளியின் கிரணங்கள் எவ்வொரு
மனிதனின் அகத்துள்ளும்  இப்போதும்
கூடப் பாயும்!
அவனது கவனம் புற-நோக்கால்
சிதறடிக்கப்படாதிருந்தால்;
அவனது உணர்ச்சிகள்
கொந்தளிக்காதிருந்தால்;
அவனது தர்க்க அறிவு குறுகிய
வழியில் சிந்திக்காதிருந்தால்;
அவனது அகந்தை
பிணைப்புகளில் சிக்காதிருந்தால்!

ஆனால், இம்மாசுக்களை நெடும்பாதை
நீக்கிவிடுமா?

    *

வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்துவதற்கு
பயிற்சிகள் ஏதுமில்லை!
அது ஆழ்ந்தவிசாரத்தாலும், உட்-பார்வையினாலும்
மட்டுமே வெளிப்படுத்தப்படும்!

    *

உண்மையை உணர்ந்தறிவதற்கான
ஆன்மீகவிசாரத்தில்,
கசப்பு
எதிர்ப்பு
வெறுப்பு
மிதப்பு
தாபம்
கோபம்
வஞ்சகம்
பாரபட்சம்
கயமை
சிறுமை
பொறாமை
தற்பெருமை
பேராசை
போலித்தனம்
கஞ்சத்தனம்
ஒட்டுண்ணித்தனம்
ஆகியவற்றால் விகாரப்பட்ட மனம்
வெற்றியடையுமா?

     *

"உங்கள் அகந்தையை
சொந்த அடையாளத்தை
பிரபஞ்ச-சுயத்தினுள் கரைந்து
போகும்படி இழந்துவிடுங்கள்!" என்று
ஒரு சில சொற்களில் ஞானிகள் சொன்னதை
செயல்படுத்த உங்கள்  வாழ்காலம்
மொத்தமும் அல்லது அதற்கு மேலும்
எடுத்துக் கொள்ளப்படலாம்!

     *

நெடும்
பாதையில்
செல்லும்
சீரிய சாதகனுக்கு
வாழ்க்கை என்பது
தனக்கும்
தனது அகந்தைக்கும்
தனது இச்சைகளுக்கும்
தனதுஆசைகளுக்கும்
தனது புறப்போக்குக்கும்
விருப்புவெறுப்புகளுக்கும்
எதிராகத்  திரும்பத்திரும்ப
நிகழும்போரட்டமாகத்தான் இருக்கும்!
அதன்விளைவாக அவனது வாழ்க்கை
சுலபமானதாகவும் இருக்காது!
சுமுகமானதாகவும் இருக்காது!

     *

உயர்-சுயம் குறித்த விசாரமானது
கீழ்-சுயத்தினை நெறிப்படுத்துவதில்
தொடங்குகிறது!

ஆன்மீக விசாரகனின் முதல் கடும்பணி
தன்னைத்தோண்டி  உள்ளே ஆழத்தில்
மறைந்திருக்கும் தனது நடத்தையின்,
முக்கியமாக, தனது பற்றுக்களின்
தனது பலவீனங்களின் வேர்களைப்
பறித்தெடுப்பதே!

     *

ஆன்மீக விசாரகன் தனது பொறுப்புகளை
தன் தோள்களின் மீது ஏற்றிக்கொண்டு
தனது துணிவை, அறிவை,
தானே வளர்த்துக்கொண்டு
சவால்களைச் சந்திக்கவேண்டுமே தவிர
'சரணாகதி' என்ற பெயரில்
தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பது
தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும்!
ஏனெனில், ஆன்மீகம் என்பது
ஒருவன் தன்னைத்தானே கண்டடைவதே!
தன்னைத் தானே உடைத்து தனது
அசலான அகச்சுயத்தை அடைவதே தவிர
வேறல்ல!

     *
சாதகன் ஒருவன் மன-மாசுக்களும்
கீழியல்புகளும் கொண்ட தனது
அசிங்கம்-பிடித்த சுயத்தை
'சரணாகதி' என்ற பெயரில்
கடவுளிடமோ, அல்லது குருவிடமோ
ஒப்படைக்க முடியாது!
உள்ளத்தூய்மையற்றவன் கடவுளை
நெருங்கவும் இயலாது!
குரு என்பவர் கழிவு நீர்த்தொட்டியல்ல!

தன்னைத்தானே சுத்திகரித்துத்
தூய்மைப்படுத்தத் தவறியவனை
நெருப்பிலிடாமல் நரகமும் ஏற்காது!

குரு என்பவர் புனிதக் கழுதையல்ல!
அவர் மீது உப்பு-மூட்டை ஏறிப்பயணிக்க!

மற்றவர்களைச் சார்ந்து பயனடைந்து
மற்றவர்களுக்கு உதவாதவன் ஒட்டுண்ணி!
தனக்குத்தானே உதவாதவன்
தற்கொலைவாதி!

     *

நிச்சயம், ஒளிவிளக்கம்பெறுதல் என்பது
ஆனந்தமயமானது தான்!
ஆனால், அதற்கான வழியில் கடும் ஒழுக்க
முறைகளுக்கு உட்படவும்
சில வேளைகளில், பெருந்தியாகங்களைச்
செய்யவும் வேண்டியுள்ளது!

     *

ஆன்மீக வளர்ச்சி சில தியாகங்களைக்
கோருகிறது:
உமது
அறியாமை, மந்தபுத்தி, மந்தைபுத்தி,
சிறுமை, கயமை,
பொறாமை, வெறுப்பு, பேராசை, தற்பெருமை
சுய-முக்கியத்துவம்,
சோம்பல், சொகுசு-வாழ்க்கை, ருசி நாடும் நாக்கு
ஆகியவை!
இவை சற்று அதிகப்படியாகத் தோன்றினால்,
ஒன்று செய்யுங்கள்: உமது
போலித்தனத்தை விட்டுவிடுங்கள் போதும்!!!

     *

உங்களால் முடிந்தால்,

உமது இயல்பூக்கிகளை
ஒழுங்குமுறைப்படுத்துங்கள்!
உமது இச்சைகளை மடைமாற்றி
படைப்புப்பூர்வமாகச் செயல்பட வையுங்கள்!
உமது உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்துங்கள்!
உமது எண்ணங்களை இலக்கு நோக்கித்
திசைப்படுத்துங்கள்!

முடியாவிட்டால், கொச்சைப்படுத்தாமல்
விட்டுவிடுங்கள் ஆன்மீகத்தை!

     *

ஞானம், முக்தி, மோட்சம், முழுமை
இரட்சிப்பு, விடுதலை, வீடுபேறு
மரணம் கடந்த பெருவாழ்வு,
நித்திய ஜீவன், இறைவனடி
அடைவது மிக மிக எளிது!
இவற்றை மட்டுமே ஒருவன்
எண்ணும் போது, விரும்பும் போது!

     *

நெடுங்காலமாக ஒருவன்
நெடும்பாதையிலேயே பயணிக்கும்வரை
அகந்தையைப் பற்றிக்கொண்டிருக்கும்
தன்பிடியை அவன் விடுவதேயில்லை!
தன்னைத்தூய்மைப்படுத்திக்கொள்ளும்
பயிற்சிகளின் வழியாக அகந்தை தன்னை
காப்பாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணியே
அவற்றில் ஈடுபடுகிறது!
ஆனால், தூய்மையான அகந்தை இன்னும்
அகந்தையே!
அகந்தையில் சுத்தமான அகந்தை
அசுத்தமான அகந்தை என்பதில்லை!
சுத்தம், தூய்மை அல்ல முக்கியம்!
அகந்தையின் உருமாற்றம் மட்டுமே!

     *

அட!  போதுமான காலம் எப்போதும்
இருக்கிறது!
வருங்காலம் முழுவதும் உள்ளது!
ஆன்மீக விசாரத்தை அப்போது
பார்த்துக்கொள்ளலாம் என்று
சௌகரியமாக ஒத்திப்போடும்
அகந்தைக்கு,
அன்றாட வாழ்க்கைதான்
எவ்வளவு அவசரமானதாகவும்
உடனடிக் கவனிப்பிற்குரியதாகவும்
உள்ளது!

      *

பிழைப்புக்கான வழிகளைத்
தேடிப்பெறவும், மேம்படுத்தவும்;
இடையே எதிர்ப்படும் தடைகளைச் சந்திக்கவும்
தாண்டிச்செல்லவும் நாம் எவ்வளவு தயாராக,
உடனடியாக நம் எண்ணத்தையும், நேரத்தையும்
சக்தியையும், உழைப்பையும் அளிக்கிறோம்!

ஆனால், அசலான வாழ்க்கைக்கான
ஆன்மீக வழியில் செல்லும் போது எதிர்ப்படும்
தடைகளைச் சந்திக்கும் விஷயத்தில் நாம்
எவ்வளவு படு மோசமான தோல்வியாளராகி
விடுகிறோம்!

       *

வழி பற்றிய தேடலற்றவர்களே!
தம் சொந்த வழிகளில் வழிதவறிப்
போனவர்களே!
வழி சொல்லியும் தடுமாறுபவர்களே!
உங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறேன்
வழியற்ற என் வழியை!
பிழைக்க வழி கண்டவர்களுக்கு
வாழ வழி தெரியவில்லையா?
வழியைத்தேடாதீர்கள் - வாழுங்கள்!
வாழ்வதெப்படி என்று கேட்காதீர்கள்
வாழ்க்கையை நேசியுங்கள்!
முதலில் வாழ்க்கையைப் புரிந்து
கொள்ளுங்கள்!
அதைவிட வேறு முக்கிய வேலை
எதுவுமிருக்க முடியாது!

      *

தங்கள் பாதங்களுக்குக் கீழேயுள்ள தரை
அப்படியே நழுவிச் செல்வது போன்ற உணர்வு
நிஜமானதுதான்!
அது ஏற்படுத்தும் பீதி சிலரை ஆன்மீகத்திலிருந்து
பின் வாங்கச்செய்திடுகிறது!
ஏனெனில், தாங்கள் சார்ந்திருக்கும் பாதுகாப்பு
மற்றும் மதிப்புகளுக்கு ஆபத்து வந்துவிட்டதாக
அவர்கள் உணர்கிறார்கள்!
ஆனால், அவர்கள் உடனடிப்பாதுகாப்பு மற்றும்
பயன்களுக்காக உண்மையான பாதுகாப்பையும்
இறுதிப்பயனையும் பரிமாற்றம்
செய்துகொள்கிறார்கள்!

     *

ஒருவன் தனது பலவீனங்களைப் பற்றியும்
தனது இயலாமைகளப் பற்றியும்
அளவுகடந்து வருந்துவது
அலட்டிக்கொள்வது
கலவரப்படுவது
ஆன்மீகச்
செயல்பாடோ
அக்கறையோ
அல்ல!

அது மிதமிஞ்சிய சுய-முக்கியத்துவ
நோயால் பீடிக்கப்பட்ட
தற்பெருமைகொண்ட
அகந்தையின்
முதலைக்
கண்ணீர்!

    *

ஆன்மீகத்தேடல் அதிகச் சிக்கலானதாகவோ
ஆன்மீகப்பயிற்சிகள் மிக விரிவாகவோ
ஆன்மீகக் கோட்பாடுகள் மறைபொருளாகவோ
இருக்கவேண்டியதில்லை!
அவ்வாறிருப்பின் அது மிகச்
செயற்கையாகவும்
அதன் முடிவான விளைபலன்கள்
இட்டுக்கட்டியதாகவும் ஆகிவிடும்!
உண்மையான ஆன்மீகத்தேடல் நேரடியானது!
பயிற்சிகளும், முயற்சிகளும் தேவைப்படாதது!
ஏனெனில், விழிப்பைப் பயிற்சி செய்யமுடியாது,
ஏனெனில், படிப்படியாக விழிப்பது என்பது
கிடையாது!
கோட்பாடுகள் திரைகள், அவை உண்மையை
வெளிப்படுத்தாது!

    *
மனிதன் விழிப்படையாதது அவனது
தோல்வி மட்டுமல்ல - அது
அவனுள் இன்னும் விழித்திருக்கும்
விலங்கின் வெற்றியுமாகும் !

     *

ஆன்மீக நோக்கத்திற்காக என்றாலும்
அகந்தையானது விருப்பத்துடன் முன்வந்து
தன்னுடைய  'அழிவு'க்குத் தானே இறங்கிப்
பாடுபடும் என எண்ணிப் பார்க்கமுடியுமா?
முடியாது!
ஆனால், நெடும்பாதையில் பயணிக்கும்
அனைவரும் அகந்தையின் நடிப்பை
ஏமாற்றுத்தனத்தை உண்மையென்றே
நம்பிக்கொண்டு பயணிக்கின்றனர்!

ஆனால், அகந்தையின் 'அழிவைத்'
தவிர்க்க
ஒரு உபாயம் உள்ளது!

அதாவது, 'அழிவு' என்ற கரடுமுரடான
சொல்லுக்குப்பதிலாக, 'உருமாற்றம்'
எனும் நுட்பமான சொல்லைப் புரிதலுடன்
பதிலீடு செய்வதுதான் அது!

வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம்
பெறும் வழிமுறையில் தாம்
அழிந்துபோய்விடுவோம் என்பதை
கம்பளிப்புழு முன்னமே அறியுமானால்
அத்தகைய திட்டத்தை ஏற்காது!
மாறாக, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள
தனது ஆற்றல் முழுவதையும் திரட்டிப்
போராடும்!

நல்லவேளையாக, கம்பளிப்புழுக்களுக்கு
இந்த உண்மை தெரியாததால் அவை
உருமாற்றத்தை எதிர்ப்பதில்லை!

ஆனால், மனிதப்புழுக்கள் எவ்வாறோ
'உருமாற்ற வழிமுறையில் அழிவும்
உள்ளடங்கியுள்ளது' என்பதை
ஊகித்தறிந்துகொள்வதால் அவை
பீதியுற்று உருமாற்றத்திற்கு உட்பட
மறுக்கின்றன!

மனித அகந்தை எப்போதும்
அரை-உண்மைகளை மட்டுமே உண்டு
அரை-வாழ்க்கையையே வாழ்ந்து
அரை-உணர்வுடன் அரைகுறையாகச்செத்து
மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அல்லல்
படுகிறது!

'உருமாற்றம்' என்பதில் 'அழிவு' மட்டுமல்ல
'ஆக்கம்' என்பதும் உள்ளது எனும்
இன்னொருபாதி உண்மையை அது
எப்போது புரிந்து கொள்ளும்?

     *

சமுத்திரம் செல்ல வழிகேட்கும்
நதியும் உண்டோ?

சமுத்திரம் சென்றடைய நதிக்கு
வழி சொல்பவன் மூடன்!

தனது நோக்கத்தை இழந்த நதி
நதியல்ல, தேங்கிய குட்டை!

சேற்றுக்குட்டைக்கு சமுத்திரம்
சேரும் எண்ணம் தோன்றுமா?

வெள்ளப்பெருக்கெடுக்காத நதி
ஒருபோதும் சமுத்திரம் சேராது!

தன்னிலிருந்தே உத்வேகம்,விவேகம்
வேகம் மூன்றையும் நதி பெறுகிறது!

தன்னுள் வெள்ளம் கொண்ட நதிக்கு
தடைகள் ஒரு பொருட்டல்ல!

நதிமூலம் ஆராய்வதில்லை நதி
தன் இலக்கு மறப்பதில்லை
தவறுவதுமில்லை!

      *
தான் தோன்றிய கணத்திலிருந்து
இடைவழியில் என்ன நேர்ந்தாலும்
நேராவிட்டாலும் தங்காமல், தேங்காமல்
தடைகளைக்கண்டு தயங்காமல், மயங்காமல்
தன் போக்கில் போய்க்கொண்டேயிருக்கும்
நதியின் எண்ணம், குறிக்கோள், இலட்சியம்,
இலக்கு யாவும் சமுத்திரச் சங்கமம் மட்டுமே!

       *

நதி செல்லும் வழி நெடுகிலும் அதற்கு
பற்பல அனுபவங்கள்!
எதிலும் சிக்கித் தேங்கிடாத நதியே
சமுத்திரம் அடையும்!
வற்றாத சமுத்திரமே நதியின் முற்றான
பாதுகாப்பும் இறுதிப் புகலிடமும்!
இடைவழியிடங்களோ இன்னும்
நெடும் பயணமோ அல்ல முக்கியம்!
வெள்ளப் பெருக்கெடுத்திடும் வேகமே
வெற்றியின் ரகசியம் !
சமுத்திரச் சங்கமமே நதியினை
முழுமைப்படுத்திடும் , நிரந்திர
நிறைவு தந்திடும் இணையிலா
இறுதி அனுபவம்!

      *
 இங்கு பறக்கக் கற்றுத் தரப்படுகிறது !
 முன்-அனுபவம் எதுவும் தேவையில்லை !
 ஊர்தல் நடத்தல் குதித்தல் ஓடுதல்
 போன்ற உங்களது அனுபவங்கள் உதவிடாது !
 பறக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம்
 மட்டும் இருந்தால் போதும்.

      *

வாழ்வின் நோக்கத்தை அறியாத மனிதன்
மனிதனல்ல, இன்னுமொரு விலங்கு!

சொந்த நோக்கம் கொண்ட மனிதன்
வழி தவறிப்போனவன்!

வழி கேட்டு அலைந்துகொண்டிருப்பவன்
ஊர் போய்ச் சேருவதில்லை!

உணர்வுப்பெருக்கு கொள்ளாத மனிதன்
உண்மையை ஒருபோதும் அறியமுடியாது!

உயிர்த்துடிப்புள்ளவன் வெறுமனே
உயிர்பிழைத்திருக்கிறான்!

உணர்வுத்துடிப்புள்ளவன் மட்டுமே
உண்மையில் வாழ்கிறான்!

நோக்கம் உணர்ந்தவன் தானே வழியும்
இலக்குமானவன்!

     *

நதியைப்போல் வாழுங்கள்!

      *

மா.கணேசன்/ 02.06.2016





ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...