Thursday, 23 February 2017

நான் யார்?






நான் யார், எத்தகையவன், என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டுமா?
அப்படித் துல்லியமாகத் தெரிந்தால் தான் என்னுடன் உரையாடவும்
உறவாடவும் இயலுமா?
அப்படியானால், அதற்கு முன், உங்களை நீங்கள் யார், எத்தகையவர்
என்பதைத் தெரிந்துகொள்வது முக்கிய முன்-தேவையாகிறது!

இரண்டு வகைகளில் நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்ளலாம் :

முதல் வகை : ஒப்பீட்டு ரீதியில் அமைவது- பிறருடன் ஒப்பிட்டுப்பார்ப்பதன்
                            வழியாக!   இந்த  வழிமுறை  துல்லியமற்றது,  சராசரி அளவில்
                            அமைவது, நிச்சயமற்றது. . . .
இரண்டாவது வகை : நேரடியானது - ஒருவர் நேரே தனது ஒப்பிடவியலாத
                            உள்ளார்ந்த தன்மையை, மதிப்பை, உண்மையை உணர்ந்தறி
                            வது, இவ்வழிமுறையே சரியானது. . . . .

முதலில் உங்களை நீங்கள் முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்
ளாமல்  பிறரைப்  புரிந்து கொள்வது  என்பது  இயலாது!   உங்களை  நீங்கள்
புரிந்து  கொள்வது   என்பது தான்   அனைத்திற்குமான   அடிப்படை யாகும்!

இப்பிரபஞ்சத்தையும்,  அதிலுள்ள  அனைத்தையும்  நீங்கள்  புரிந்து கொண்
டாலும்,  உங்களை  நீங்கள் புரிந்து கொள்ளாவிடில்  உங்களது இருப்பிற்கும்,
வாழ்க்கைக்கும் யாதொரு அர்த்தமுமில்லை! ஏனெனில், நீங்கள் ஒவ்வொரு
வரும்தான் இப்பிரபஞ்சத்தின் மையம் ஆவீர்கள்!இந்த உண்மையை நீங்கள்
உணராத வரை,     இப் பிரபஞ்சத்தின்   பலவகைப்பட்ட   உள்ளடக்கங்களில்
நீங்களும் ஒருவகைப்  பொருளே, அல்லது ஒரு ஜந்துவே!

உங்களுடைய "முக்கியத்துவம்" என்பது யாரோ உங்களுக்கு வழங்குவதோ,
அல்லது  நீங்களே  உங்களுக்கு வழங்கிக்கொள்ளும் பட்டமோ அல்ல! உங்க
ளுடைய ஆழத்தில் நீங்கள் கண்டடையாத முக்கியத்துவம் எதையும் எவரும்
உங்களுக்கு வழங்கிட முடியாது!  உங்களுடைய  உண்மையான முக்கியத்து
வம் என்பது நீங்கள் ஒரு உணர்வு என்கிற உண்மையை உணரும் போது சுய
-சாட்சியமாக  உணர்ந்தறியப்படுகிற  ஒன்றாகும்!  அவ்வாறு  உணர்வதற்கு
இப் பிரபஞ்சத்திலுள்ள  எதையும்  குறிப்பாகக்  (Reference) கொள்ளவிய
லாது! ஏனெனில், உணர்வு மட்டுமே உணர்வுக்கான குறிப்பும், யாவும்!

இதற்குமாறாக, உங்களைப்பற்றி நீங்கள் அறிந்ததெல்லாம் மேலோட்டமான
விபரங்கள் மட்டுமே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட குலம், கோத்திரத்தைச் சேர்ந்த
இன்னாருடைய மகன்,  இந்த ஊரில் பிறந்தவர், உங்களுடைய கல்வித் தகுதி,
உத்தியோகம்,  இன்ன பிற விபரங்கள்  யாவும்  உங்களுடைய அசலான,  கரு
வான, சுயத்தைச் சுட்டுவதோ, வெளிப்படுத்துவதோ கிடையாது! இவ்விபரங்
கள் யாவும், தனது மையத்தில் தான் யார் என்பதை அறியாத ஒரு நிஜத்தைச்
சுற்றித் தொகுக்கப்பட்ட ஒரு அடையாளம் என்பதற்கு மேல் வேறெதுவுமல்ல!
இந்த  விபரங்களனைத்தையும்  நீங்கள்  அறிவதற்கு  முன்  உங்களைச்சுற்றி
யுள்ள பலர் அறிவர்!ஆனால்,உண்மையான உங்களை உண்மையில் அறியக்
கூடியவர் நீங்கள் ஒருவர் மட்டுமே! அல்லது தன்னையறிந்த இன்னொருவர்
மட்டுமே!

இன்னும்  நீங்கள்  என்னை யார்  என்று அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
இது வரை, நீங்கள் என்னைப் பார்த்தவரை, என்னைப்பற்றி பிறரிடம் கேட்டு
அறிந்தவரை, அல்லது என் பேச்சைக்கேட்டும், எனது எழுத்துக்களை வாசித்
தும் புரிந்து கொண்டவரை,  என்னுடன்  பழகிய வரை, ஓரளவிற்கு என்னைப்
புரிந்து  கொண்டதாக  நீங்கள்  நினைக்கலாம்!    மேலும்,   உங்களது தேவை
மற்றும்  குறிக்கோளுக்கு  உரிய  அளவிற்குமேல்  என்னை அறிந்து கொள்ள
உங்களுக்கு நேரமோ, சக்தியோ, பெரிய விழைவோ இருக்க வாய்ப்பில்லை!
அப்படி  வாய்ப்பு  இருந்திருந்தால்   எப்போதோ  நீங்கள்  உங்களை  அறிந்து
கொண்டிருப்பீர்களே!  உண்மையில், உங்களது தேவைகளின் தரம்  மற்றும்
தன்மைக் கேற்பவே   நீங்கள்   ஒரு விலங்காகவோ,   அரை-மனிதனாகவோ,
அல்லது  முழு-மனிதனாகவோ  அமைகிறீர்கள்,  அல்லது  ஆகிறீர்கள்!   ஆம்,
உங்களது  தேவைகள்  மற்றும்  ஆசைகளைக் கொண்டு  நீங்கள் எத்தகைய
ஜீவியாக  தற்போது  இருக்கிறீர்கள்  என்பதை  நீங்களேகூட கண்டுபிடித்திட
லாம்!  ஒரு மனித ஜீவியாக  இருப்பது  என்பது  முன்-கொடுக்கப்பட்ட தல்ல!
மாறாக, ஒரு மனித ஜீவியாக ஆவதற்கான உட்பொதிவு மட்டுமே ஒவ்வொரு
வருக்கும் குறைவில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது!

உண்மையில், நீங்கள் உங்களைப்புரிந்து கொள்ளவேண்டுமெனில், அதற்கு
பிரத்தியேக விழைவு வேண்டும்! அதற்கு,  முதலில் உங்களை உங்களுக்குத்
தெரியும்  எனும் பிரமையிலிருந்து நீங்கள் வெளியே வரவேண்டும்!  ஆனால்,
உங்கள்  கனவிலும் சரி,  நனவிலும் சரி,  உங்களை நீங்கள் அறிந்து கொள்ள
வேண்டுமென்ற   எண்ணமோ, ஆர்வமோ உங்களிடம் தோன்றியிருக்க சாத்
தியமேயில்லை! ஏனென்றால்,  நீங்கள் தான் உங்களை அப்படியே பூரணமா
கக்  கொடுக்கப் பட்டவராக,   ஒரு   அறுபொருளாக   (Absolute) எடுத்துக்
கொண்டு விட்டீரே!   பிறகு எவ்வாறு  உங்களைத் திரும்பிப் பார்த்து அறிந்து
கொள்ளும் எண்ணமோ, ஆர்வமோ உங்களுக்குத் தோன்றும்? ஆனால்,அதே
நேரத்தில்,உங்களுக்கு உங்களைப்பற்றி யாதொரு நிச்சயத்துவமும், ஸ்திரத்
தன்மையும் கிடையாது!    ஏனெனில்,    உங்களை  நீங்கள்  சிறிதும் அறியாம
லேயே அறிந்துள்ளதாக எடுத்துக்கொண்டது தான் உங்களுடைய பிரதானப்
பிரச்சினையும், மூலப் பிரமையும் ஆகும்!

அடுத்து, உங்களை நீங்கள் மிகத் தவறாக, உடலுடன் அடையாளப்படுத்திக்
கொண்டு  விட்டது  (Mis-Identification) தான்  உங்களது    அனைத்து
மட்டுப்பாடுகளுக்கும் காரணமாகும்! உங்களைப்பற்றிய உண்மை இதுவே :
ஆம்,  உங்களை  ஒரு 'உடல்' எனப் பாவித்துக்கொள்ளும் ஒரு 'மன(-வளர்ச்சி
யற்ற-) ஜீவி'  நீங்கள்!

ஆம்,நீங்கள் எப்போதும் உங்களை மையமாகக்கொண்டு,பிறருடன் எவ்வாறு
பழகுவது,சேர்ந்து செல்வது,இயங்குவது,வாழ்வது என்பதில் மட்டுமே கவனம்
செலுத்துபவராக  உள்ளீர்!  அதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?  அதில்
எந்தத் தவறும், பிரச்சினையும், சிக்கலும் இருக்காது, முதலில், நீங்கள் உங்க
ளுடன் எவ்வாறு இயங்குகிறீர்,செயல்படுகிறீர், சேர்ந்து செல்கிறீர்,வாழ்கிறீர்
என்பதைக் கவனித்துக் கணக்கில் கொண்டிருந்தீரெனில்!ஏனெனில்,நீங்கள்
ஒவ்வொருவரும்தான் அனைத்தின் (பிரபஞ்சத்தின்) மையம் என்று குறிப்பிட்
டோம்! ஆனால்,  அந்த மையத்தை நீங்கள் ஒரு போதும் திரும்பிப் பார்த்ததே
யில்லை! அது எத்தகைய நிஜம்,மெய்ம்மை என்பதை நீங்கள் அறியவில்லை!
அதாவது,   உங்களைப்   பொறுத்தவரை   நீங்கள்  ஒரு  குருட்டுப்  புள்ளியாக
இருந்து கொண்டு பிற யாவரையும், யாவற்றையும், இந்தப் பிரபஞ்சம் மொத்
தத்தையும் அலசி ஆராய்கிறீர், அறிகிறீர்!

ஆனால்,  தினமும்  அவ்வப்போது உங்கள் முகத்தை மட்டும் திரும்பத் திரும்
பப்  பார்த்துக் கொள்கிறீர்! அதை ஒப்பனை செய்து அலங்கரிக்கிறீர்! ஏதோ,
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"    என்று   சொல்லப்பட்டதால்    அல்ல!
மாறாக, 'எண் சாண் உடலுக்கு முகமே பிரதானம்!' என நீங்கள் தலைகீழாகப்
புரிந்துகொண்டதால்! அதாவது, உங்களுக்கு அகம் என்பது இருந்தால் தானே
அதன் அழகு முகத்தில் தெரிய?   உங்களை   நீங்கள்  அறியாதபோது "அகம்"
என்பது எவ்வாறு அங்கேயிருக்க முடியும்?  அகத்திற்கான அடிப்படைகளும்,
உட்பொதிவும்  இருக்கின்றன; அதை நீங்கள் அறியாததினால் அது இன்னும்
உருப்பெறவில்லை! "அகம்" என்பது தயார்நிலையில் கொடுக்கப்பட்ட ஒன்று
அல்ல! அது ஒவ்வொருவரும் கண்டுபிடித்திட வேண்டிய, தம்முள் எழுப்பப்பட
வேண்டிய மெய்ம்மையாகும்! நீங்கள் எப்போது உணர்வுக்கு வருகிறீர்களோ
(உணர்வுக்கு விழிக்கிறீர்களோ) அப்போதுதான் உங்களது அகம் உருப்பெறத்
தொடங்குகிறது!  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மையே!
இன்னும், அகம்  இல்லாவிட்டாலும் கூட,  அதன் இல்லாமையின் லட்சணமும்
(அதாவது, விகாரம்) முகத்தில் தெரியும்!    எல்லாவற்றையும்   தலை கீழாகப்
புரிந்து கொள்ளும் நாம், முகத்தை ஒப்பனை செய்துகொள்வதன்,அலங்கரித்
துக் கொள்வதன் வழியாக, நம்முடைய அகத்தின் அழகை நாம் அதிகப்படுத்
திக்கொள்வதாக எண்ணிக்கொள்கிறோம்!அகத்தின் அழகு வேறு;முகத்தின்
அழகு வேறு!

நீங்கள் உங்களைத் திரும்பிப் பார்க்காமல்,   உங்களை உள்ளே பார்க்காமல்,
அம் மையம் உருவாவதேயில்லை! உள்ளே பார்க்கவேண்டும் எனும் விழைவு
தன்னெழுச்சியாக    யாதொரு    புறத்தூண்டுதல்  எதுவுமின்றி,    எவருடைய
ஆலோசனையும், கட்டளையும் இன்றி ஏற்படவேண்டும்!   அதே வேளையில்,
நீங்கள் உணர்வுக்கு வருவதன்,விழிப்படைவதன், உங்களுக்குள் அம்மையம்
உருவாவதன்  அவசியத்தை,   உங்களது  வாழ்க்கைத் தேவைகளில் எதுவும்;
புற நிகழ்வுகள்  எதுவும்  ஒரு போதும்  உணர்த்தப்போவதுமில்லை,  தூண்டப்
போவதுமில்லை!மாறாக,உங்கள் இருப்புக்கு அல்லது வாழ்க்கைக்கு நீங்கள்
எவ்வளவு   தீவிரமாகவும்,   முழுமையாகவும்  பதிலளிக்கிறீர்கள் என்பதைப்
பொறுத்தே அவை நிகழ்கிறது!

உங்களது வாழ்க்கைத் தேவைகள் யாவும் உயிர்-வாழ்தலுக்கான தேவைகள்
மட்டுமே தவிர,   அவை   எதுவும்   அசலான   வாழ்க்கையின்    அர்த்தத்துடன்
தொடர்பு  கொண்டவையோ,  அந்த அர்த்தத்தின்  அவசியத்தை எவ்வகையி
லேனும்  உணர்த்துவதோ,  சுட்டுவதோ கூட  கிடையாது!  நீங்கள் எல்லோரும்
எவ்வாறு  உங்களை  அறியாமலேயே  வாழ்ந்து செல்கிறீர்களோ,  அவ்வாறே
"வாழ்க்கை" என்றால் என்ன  என்று அறியாமலேயே வாழ்ந்து  செல்கிறீர்கள்!
எல்லாவற்றையும்  நீங்கள்  சர்வ சாதாரணமாகவும்,  சுலபமாகவும் எடுத்துக்
கொண்டு விடுகிறீரகள்! இவ்வழியே,அதாவது உங்களுடைய படு மேலோட்ட
மான இருப்பைக் கொண்டு,   நீங்கள் உங்களை மட்டுமல்லாமல், வாழ்க்கை
யையும், அனைத்தையுமே கொச்சைப்படுத்தி விடுகிறீர்கள்!

ஆகவே, வாழ்க்கைத்தேவைகள் என்று நீங்கள் உணர்ந்த அனைத்து தேவை
களையும் கடந்து வாழ்க்கையைக் காண்கிற, அறிகிற, அதன் அர்த்தத்தைப்
புரிந்து கொள்கிற உன்னதத் தேவையை உணர்ந்து பற்றுங்கள்! உங்களைச்
சுற்றிலும் நிகழ்கிற சம்பவங்கள், நிகழ்வுகள், விபத்துகள் ஆகியவற்றினால்
கவனச் சிதறலடையாதீர்கள்;அவற்றில் சிக்கிக்கொள்ளாதீர்கள்! ஏனெனில்,
வாழ்க்கை   என்பது   ஒருபோதும்  உங்களை  உட்படுத்தாமல்  உங்களுக்குப்
புறத்தே  நிகழ்வதில்லை!   உங்கள்  வாழ்க்கையின்    மையம்    எப்போதுமே
நீங்கள் தான்; ஆனால், நீங்கள் தான் உங்களுள் மையம் கொள்வதில்லை!

நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது என்பது தான் முக்கியம்; அது செல்லும் வழி
நெடுகிலும், அது எவை யெவற்றையெல்லாம் சந்திக்கிறது, எத்தகைய தடை
களை  எதிர்கொள்கிறது  என்பது போன்ற  விஷயங்கள், அனுபவங்கள், அறி
வுச்சேகரங்கள்,  எவையும்  முக்கியமல்ல!  ஏனெனில்,  அவை  எதுவும்  இறுதி
யானவையல்ல!  மாறாக,  அவை யாவும்,  இறுதி  அர்த்தத்தை நோக்கிய  நதி
யின்  பயணவழிச் சாட்சியங்கள்,  வேடிக்கைக்காட்சிகள்,  அவ்வளவே!   நதி
தன் ஒப்பற்ற இலக்கை நோக்கிச்செல்கிறது என்பது மட்டும்தான் நதிக்கான
உந்துசக்தி, உற்சாகத் தூண்டுதல், இளைப்பாறுதல் யாவுமாகும்! நதியானது
முன்னோக்கிச்   செல்லச்  செல்ல,  தான்   கடந்து  வந்த  பாதையில்  ஏற்பட்ட
அனுபவங்களை மறந்துவிடுகிறது! முடிவில் தன் இலக்கை அடையும்போது
தன்னையும்  அது முற்றிலுமாக மறந்து சுமை நீங்கியதாகி விடுகிறது!

ஆகவே,   நீங்கள்   என்னைப் புரிந்து கொள்ளும்  முயற்சியை   விட்டு விட்டு,
உடனடியாக   உங்களைப் புரிந்து கொள்ளும்    முயற்சியில்     இறங்குங்கள்!
என்னை வேறு எவருடனாவது ஒப்பிட்டுக் காண்பது, எடை போடுவது,என்னி
டம்   குற்றம்  குறை  எதையாவது  கண்டுபிடிக்க  முயல்வது போன்ற யாவும்
வீண் வேலையாகும்!  உங்களுக்குக் கீழானவர்கள் என்று நீங்கள் கருதுபவர்
களை விட நீங்கள் உயர்வானவர் என்று மகிழ்வதும், உங்களுக்கும் மேலான
வர்கள்  என்று  நீங்கள்  கருதுபவர்களை  எண்ணிப்   பொறாமைப்படுவதும்,
அவர்களுடன்  ஒப்பிட்டு  உங்களைத்  தாழ்வாக எண்ணுவதும் பயனற்றவை
யாகும்! ஏனெனில், பிறரது குற்றங்குறைகள் உங்களைத் தூய்மைப்படுத்தப்
போவதோ, அல்லது பிறரது தூய்மை உங்களைக் கறைப்படுத்தப்போவதோ
கிடையாது! மாறாக, உங்களைப் புரிந்து கொள்ளாதிருப்பதே பெருங்குற்றம்
ஆகும்! இந்நிலையில் பிறரைப் பற்றி ஆராய்வது என்பது அளவுகோல் இன்றி
அளப்பதற்கு ஒப்பான அடிப்படையற்ற செயலாகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 21.02.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...